menggin thaagam

மெங்கின் தாகம்

மனிதக்குரங்கு மெங்குக்கு தாகமாக இருந்தது. அவள் தண்ணீரைத் தேடி சிங்கப்பூர் முழுவதும் அலைகிறாள். ஆனால் மெங்கால் குடி நீரைக் கண்டுபிடிக்கமுடிந்ததா? எல்லாத் தண்ணீரும் எங்கு மறைந்தது? இக்கதை தண்ணீர்ச் சேமிப்பு மாதம் மற்றும் உலக தண்ணீர் தினத்தை (22 மார்ச்) கொண்டாட எழுதப்பட்டது. இக்கதையின் எழுத்தாளர் அபி க்ரிஷ், வரைப்பட ஆசிரியர் விபா சூர்யநாராயணன்.

- Abhi Krish

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மெங் வேதனையில் எச்சில் விழுங்கினாள்.

சாலையின் வெப்பத்தில் அவள் பாதங்கள் எரிந்தன.

அடுப்பாக மாறிய தன் உடல் மென்மயிருக்குள் அவள் வெந்துகொண்டிருந்தாள்.

வறண்ட அவள் கண்களால் கண்ணீரைக் கூடச் சிந்த முடியவில்லை.

இருப்பினும் மெங் தொடர்ந்து நடந்தாள்.தன் தாகத்தைப் போக்க தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டிருந்தாள்.

மெங் ஒரு சுரங்கத்தில் வந்து நின்றாள்.

தன் பாதத்தால் தரையைத் தட்டினாள்.

முன்பு அது ஓர் அழகிய கால்வாய்.  பறவைகளும் நீர்நாய்களும் அங்கு விளையாடி மகிழ்ந்தன.

ஆனால் இப்போது இல்லை.

மெங்குக்குத் தாகமாய் இருந்தது.

மெங் தன் கைகளால்

கற்சுவர்களைத் தீண்டிப்பார்த்தாள்.

முன்பு அங்கு ஓர் நீர்த்தேக்கம் இருந்தது.

கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பச்சை பசுமரங்களும்

செடிகொடிகளும் சுற்றிலும் வளர்ந்தன.

ஆனால் இப்போது இல்லை.

மெங்குக்குத் தாகமாய் இருந்தது.

வெப்பத்தில் வற்றிச் சிதைந்திருந்த நிலத்தின் மேல் மெங் சோர்ந்து அமர்ந்தாள்.

முன்பு அங்கு ஓர் ஏரி இருந்தது.

துள்ளும் மீன்கள், கருப்பு அன்னங்கள், மஞ்சள் வாத்துக்கள் என கூட்டமாக வசித்தன.

ஆனால் இப்போது இல்லை.

மெங்குக்குத் தாகமாய் இருந்தது.

மெங் புழுதி படிந்த பாதையில் வெகுதூரம் நடந்தாள்.

முன்பு பெரும் ஆறு ஒன்று அங்கு ஓடியது.

அதன் தூய்மையான நீர் இரவொளியில் கூட பளபளக்கும்.

ஆனால் இப்போது இல்லை.

மெங்குக்குத் தாகமாய் இருந்தது.

மெங் மரக்கிளைகளைப் பற்றித் தாவி

கடற்கரைக்கு வந்தாள்.

முன்பு கடலின் நீல அலைகள் பட்டுப்போன்ற மணலை அங்கு கொஞ்சி விளையாடின.

ஆனால் இப்போது இல்லை.

எல்லாத் தண்ணீரும் எங்குதான் மறைந்தது?

மக்கள் தண்ணீர் முழுவதையும் தீர்த்துவிட்டனரா?

உலகின் பிற உயிரினங்களைப் பற்றி கவலையின்றி

தண்ணீரை வீணாக்கிவிட்டனரா?

மெங் மனம் உடைந்து சாய்ந்தாள். தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். குடி நீர் நிறைந்த உலகம் ஒரு காலத்தில் எவ்வளவு அழகாகக் காட்சியளித்தது என்று நினைத்துப் பார்த்தாள்.

திப். திப். திப்.

இருண்ட வானத்திலிருந்து மழைத் துளிகள் சொட்டு சொட்டாக விழுந்தன. மெங் தன் உள்ளங்கையைக் குவித்தாள். அதில் நீர்த்துளிகளுடன் கண்ணீர்த் துளிகளும் மெல்ல நிறைவதைக் கண்டாள்.

மெங்குக்குத்

தாகமாய் இருந்தது.

பாத்திரங்கள் கழுவும் பொழுது தண்ணீரை குழாயிலிருந்து ஓட விடாதீர்கள். ஒரு வாளியில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டப் பின் அலச ஆரம்பிக்கவும். பாத்திரம் கழுவும் இயந்திரக்கருவி தண்ணீர் வீணாகுவதைப் பெரிதும் குறைக்கும்.

நீங்களும் தண்ணீரைச் சேமிக்க உதவலாம்!

தரையைத் துடைப்பதற்கு முன் வாளியில் போதுமான தண்ணீரைப் பிடித்துக்கொள்ளவும். அவ்வாறு செய்தால் ஒவ்வொரு முறையும் குழாயைத் திறந்து துடைப்பானை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. தண்ணீர் மிச்சமாகும். காலணிகளை கழற்றி பாதங்களைக் கழுவி வீட்டிற்குள் நுழைந்தால் தரையில் அழுக்கு படிவது குறையும். தரையில் ஏதேனும் சிந்திவிட்டால் உடனே துடைத்து சுத்தம் செய்துவிடவும். கரை படிந்தால் அதை நீக்க அதிக தண்ணீர் தேவைப்படும்.

குளியல் தொட்டிலில் தண்ணீர் பிடித்து குளிப்பதைத் தவிர்க்கலாம். ஐந்து நிமிடங்களுக்குள் குளித்து முடித்துவிடலாம். குழாயை மூடிவிட்டு நம் ஆசைப்படி ஆடிப் பாடி மகிழலாம்!

தண்ணீரைச் சேமிக்க உங்களுக்கு

வேறு என்னென்ன யோசனைகள் தோன்றுகின்றன?

அரிசி மற்றும் காய்கறிகளைக் கழுவும் நீரைக் கொண்டு செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றலாம்.

மழை நீரை வாளிகளில் சேகரித்துக்கூட தண்ணீர் விடலாம்!