pakirndu unnum kaakai

பகிர்ந்து உண்ணும் காக்கை

காக்கைகள் அழகாக இல்லை. அவற்றால் குயில் போல இனிமையாக பாட முடியாது, மயில் போல ஒயிலாக ஆட முடியாது. ஆனால் அவற்றிடமிருந்து நாமெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய சிறப்பான பாடம் ஒன்று உண்டு. அது என்ன என்று இந்த புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

காலைப்பொழுது. காகே தன்னுடைய கூட்டில் கண் விழித்து, பொழுது போகாமல் சுற்றும் முற்றும் பார்த்தது.

காகே என்பது ஒரு காக்கை! தன்னுடைய தொண்டையை சரி செய்து கொண்டு, கா, கா என்று சில முறை கரைந்தது. திடீரென்று காதுகளை தீட்டிக் கொண்டு கேட்டது எங்கோ அருகாமையில் ஒரு குயில் இனிமையாகப் பாடுவது அதற்குக் கேட்டது.

கொஞ்ச நேரம் பாடலை காகே ரசித்தது. பிறகு அதற்குக் கோபமாக வந்தது. இது நியாயமில்லை! அந்தக் குயில் முட்டையாக இருந்த போது, அடைகாத்து குஞ்சு பொரித்தது இந்தக் காக்கைதான். ஆனால் குயிலுக்கு காகேயை விட எத்தனை இனிமையான குரல்! “நான் பொறாமை படக் கூடாது” தனக்குத்தானே சொல்லிக் கொண்டது காகே! குயிலிடமிருந்து பாடுவது எப்படி என்று கற்றுக் கொள்வதே சரியான வழி என முடிவு செய்தது.

காகே குயிலைத் தேடி சென்றது. கண்டு பிடித்தது. குயில் காக்கையை சந்தேகத்துடன் பார்த்தது. ஆனால் காகே குயிலை கௌரவத்துடன் பார்த்து, “எனக்கு பாடச் சொல்லித் தருகிறாயா? என்று விநயமாகக் கேட்டது.

காகேக்குத் தூங்குவதென்றால் மிகவும் பிடிக்கும். சூரிய உதயத்திற்கு முன் விழித்ததில்லை. ஆனாலும் அடுத்த நாள் பொழுது புலரும் நேரம் பாட்டுப் பயிற்சி இருக்கிறதே! அதனால் படுக்கப் போகும் முன், மறுநாள் எழுவதற்கு கடிகாரத்தில் சரியான நேரத்திற்கு அலாரம் வைத்தது. குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடித்ததும், காகே படுக்கையிலிருந்து துள்ளிக்குதித்து எழுந்து, கண்களிலிருந்து தூக்கத்தைத் துடைத்து எறிந்து விட்டு, பாட்டு வகுப்புக்குக் கிளம்பியது.

குயில் பொறுமையிழந்து காத்துக் கொண்டிருந்தது. காகே அடுத்த கிளைக்கு வந்து அமர்ந்த உடனேயே, பாடல் பயிற்சியைத் தொடங்கியது.

“சரி! முதலில் இதைப் பாடுங்கள்” என்று கூறி, “கூ... .. கூ.. ..” என்று குயில் பாடியது. ஆர்வத்துடன் காகேயும் பாட முயற்சி செய்தது. ஆனால் என்ன முயற்சி செய்தாலும், அதனால் ‘கா.. ..கா... ..கா’ என்றுதான் பாட முடிந்தது. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த குயிலுக்கு, போதுமென்று ஆகிவிட்டது.

“உங்களால் முடியாது” என்று சொல்லி, “நீங்கள் வேறு ஆசிரியரைத் தேடிக்கொள்ளுங்கள்” என்ற அறிவுரையோடு பறந்து சென்று விட்டது.

காகேவுக்கு பெருத்த ஏமாற்றம். பொங்கி வந்த துக்கத்துடன், தன் கூட்டிற்குத் திரும்பி வந்தது.

“மயிலே! மயிலே! எனக்கு நாட்டியமாட சொல்லித் தருவாயா?” என்று மயிலை காகே கேட்டது.

“நிச்சயமாக! நான் செய்வதைப் பார்த்து அதே போலச் செய்” என்றது மயில். காகே தன் வால்பக்க சிறகுகளை விரித்தது. தாளத்திற்கேற்ப குதித்தது.

“மயிலே! மயிலே! எனக்கு நாட்டியமாட சொல்லித் தருவாயா?” என்று மயிலை காகே கேட்டது.

“நிச்சயமாக! நான் செய்வதைப் பார்த்து அதே போலச் செய்” என்றது மயில். காகே தன் வால்பக்க சிறகுகளை விரித்தது. தாளத்திற்கேற்ப குதித்தது.

“இது சரியாக இல்லை” என்றது மயில். “நான் செய்வதை கவனமாகப் பார்” எனச் சொன்னது மயில்.

காகே மீண்டும் மீண்டும் முயற்சி செய்தது. ஆனால் சரியாக மயில் போல் ஆட முடியவில்லை. மயிலுக்கோ ஒரே கோபம்.

“உனக்கு நாட்டியமாடவே வராது போ” என்று கடிந்து பேசிவிட்டு, பறந்து போனது.

காகே மிகுந்த வருத்தம் அடைந்தது. அதற்குப் பாட வரவில்லை, ஆட முடியவில்லை! சரி, ஒரு நல்ல கூடு கட்டவாவது தெரிந்து கொள்வோமென்று எண்ணி ஒரு குருவியிடம் சென்றது. ஆனால் குருவி காகேயின் விருப்பத்தைக் கேட்டதும், “நீயா? உனக்கு ஒரு நாளும் என்னைப்போல கூடுகட்ட முடியாது” என்று கர்வத்துடன் கூறி, காகேவைத் திருப்பி அனுப்பிவிட்டது.

காகேவுக்கு மிக வருத்தமாக இருந்தது. ஏதேனும் ஒன்றில் சிறப்பு பெறுவது எப்படி? தனது கூட்டிலிருந்து கீழே பார்த்தது. கீழே இருந்த வீட்டின் பின்புறம் ஒரு அரிசிக்குவியல் தெரிந்தது. உடனே சத்தமாக ‘கா! கா!’ எனக் கரைந்து, தன் குடும்பத்தினரையும், நண்பர்களையும் அழைக்கத் தொடங்கியது. எல்லோரும் வந்து வயிறு புடைக்க சாப்பிட்டார்கள்.

அப்பொழுதுதான் அதற்கு ஒரு உண்மை புரிந்தது. தன்னால் நன்றாகப் பாட முடியாது, அழகாக ஆடமுடியாது, சிறப்பாகக் கூடுகட்ட முடியாதுதான். ஆனால் வேறு எந்த பறவை உணவைக் கண்டதும் காக்கைகளைப்போல எல்லோருடனும் பகிர்ந்து உண்கின்றன? குயில் இல்லை, மயில் இல்லை, குருவி நிச்சயமாக இல்லை. தன்னையும், தன் இனத்தவரையும் தவிர யாருமே இல்லை.

தன்னைப்பற்றிய இந்த விஷயத்தைத் தானே தெரிந்து கொண்டதில் காகேவுக்கு மிகுந்த ஆனந்தம். இப்படிப்பட்ட தாராள மனம் கொண்ட குடும்பத்தில் தானும் இருக்கிறோம் என்பது அதற்குப் பெருமையாக இருந்தது. மற்ற காக்கைகள், காகே மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதைப் பார்த்து, “என்ன காகே! கல்யாணம் ஆகப்போகுதா கொஞ்ச நாளிலே?” என்று கிண்டல் செய்தன. காகே வெட்கப்பட்டது.

உங்களுக்குப் பிடித்த வகையில் வண்ணம் தீட்டுங்கள்.