Pon vilanku

பொன் விலங்கு

மனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும் எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும் முன்கூட்டியே தெரியாமலிருப்பதுதான். ஆள விரும்புகிற அன்பைக் காட்டிலும் ஆட்படுகிற அன்பு மிகவும் பக்குவமானது. ஆள விரும்புகிற அன்பில் சுயநலமும் அகங்காரமும் உண்டு. ஆட்பட விரும்புகிற அன்பிலோ தியாகத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை.

- நா. பார்த்தசாரதி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

ஆசிரியர் முன்னுரை

கல்கி பத்திரிகையில் இந்தப் 'பொன் விலங்கு' நாவல் நிறைவெய்திய போது இந்நாவல் நம் தேசியக் கவி பாரதியின் லட்சியங்களையும், தேசிய ஒருமைப்பாட்டையும், கல்வி நலத்தையும் சித்தரிப்பது பற்றிப் பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் மனமுருகிப் பாராட்டி எழுதினார்கள். அவர்களில் சிலருடைய அபிப்பிராயங்களையே இங்கு இந்த நாவலுக்கு முன்னுரையாகத் தொகுத்தளித்திருக்கிறேன். இது குடியரசுக் காலம். தரமான வாசகப் பெருமக்களின் அபிப்பிராயமே எதிர்கால முடிவும் நிகழ்காலத் துணிவுமாகும். எனவே ஏதாவதொரு இலக்கியப் பேராசிரியரிடம் முன்னுரை வாங்குவதைவிட அல்லது நானே பெரியதொரு முன்னுரை எழுதுவதைவிட, வாசகப் பெருமக்களிடமிருந்து வந்த கருத்துரைகளில் சிலவற்றையே இங்கு முன்னுரையாகத் தொகுத்து அளிப்பதில் பெருமைப்படுகிறேன்.

வாசகர் முன்னுரை

சமுதாயத்தில் நடைபெறும் அன்றன்றைய நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுவது போல் கதையை அழகுற இணைத்து எழுதி நேயர்களின் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டார் ஆசிரியர்.

மு. அந்நாலன், கள்ளக்குறிச்சி, தெ.ஆ.

பொன் விலங்குக் கதையை ஒரு கற்பனை என்றே என்னால் எண்ண முடியவில்லை. கதைகள் காலப்போக்கில் மறையும் தன்மையன. ஆனால் பொன் விலங்கு காவியங்களைப் போல் நூறு ஆண்டுகள் கழிந்தாலும் காலப் போராட்டத்தை எதிர் நீச்சலிட்டு நிற்கும்.

வெ. சீனிவாசன், கொச்சி-4.

கதையில் அவர் சிருஷ்டித்துள்ள மோகினி, சத்தியமூர்த்தி கதாபாத்திரங்கள் உயிர்த்துடிப்புள்ள ஜீவன்கள்.

S. சீனிச்சாமி, சங்கனாச்சேரி.

இதுவரை நான் படித்த நாவல்களில் முதல் தரமானதும் மிகச் சிறந்ததுமானது 'பொன் விலங்கு'. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வர்ணித்திருக்கும் முறையும், உவமைகள் காட்டியிருக்கும் அழகும், "பொன் மொழிகள்" மூலம் அளித்திருக்கும் அருமையும், கவிதைகளும் அவற்றின் நயங்களும் விளக்கப்பட்டிருக்கும் சிறப்பும், வாழ்வில் அன்றாடம் நாம் காணும் நிகழ்ச்சிகளுக்குக் கருவாக விளங்கும் காரணங்களை அலசிக் காட்டும் திறனும், பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் இன்றைய சமூகத்தில் நலிந்திருக்கும் ஊழல்களை உள்ளது உள்ளபடியே எடுத்துக் காட்டியிருக்கும் தைரியமும் வெறும் புரட்சியல்ல. இந்நாவலின் மூலம் ஆசிரியர் தம் லட்சியக் கனவுக்குப் பெருவாழ்வளித்துச் சமுதாயத்திற்குப் பெரும் சேவை செய்துவிட்டார் என்பதில் ஐயமில்லை. திரு. மணிவண்ணன் அவர்களுக்கு, இது ஒரு முழு வெற்றி.

கிருஷ்ணமூர்த்தி, லீட்ஸ் - 6, இங்கிலாந்து.

உண்மை, குறிக்கோள், ஒழுக்கம் இவற்றிலிருந்து வழுவாமல் இறுதி வரை போராடிய சத்தியமூர்த்தியின் பாத்திரம் உள்ளத்தில் அழியா ஓவியம். சமுதாயத்திற்கு இத்தகைய மக்களே தேவை. எழுத்தாணியின் வன்மை உலகறிந்ததொன்று. எனவே சமுதாயத்தினைத் திருத்த இது போன்ற கதைகளே விரும்பப்படுகின்றன. சத்தியமூர்த்தியின் பாத்திரத்தைப் பற்றி நான் எண்ணும் பொழுதெல்லாம் Dr. A.J. Gronin படைத்த 'The Keys of The Kingdom' என்னும் நூலில் வரும் பிரான்ஸிஸ் சிஷோமைத்தான் நினைவு கூர்கிறேன்.

வே.பா. சந்திரன், பி.எஸ்ஸி. ஹைதராபாத்.

இந்த மறுமலர்ச்சி யுகத்தில் காவியங்கள் ஏற்படாவிடினும், பொன் விலங்கைப் போல, சமுதாய வழிகாட்டியான நாவல்களே அழகிய காவியங்களின் இடத்தைப் பெற்றன. 'பொன் விலங்கு' பல யுகங்கள் வாழும், வாழ்விக்கும்.

இரா. நரசிம்மன், பெங்களூர் - 17.

இப்படிப்பட்ட சிறந்த ஒரு காவியத்தைப் படைப்பித்துத் தமிழ் மக்களின் எண்ணங்களில் நீங்காத இடம் பெற்றுவிட்ட மணிவண்ணன் அவர்களை நான் புகழப்போவதில்லை. ஏனென்றால் அவர் ஒரு பூரணியையும் ஒரு அரவிந்தனையும் படைப்பித்து வாசகர்களுக்கு மத்தியில் நடமாட விட்டதின் மூலம் புகழக்கூடிய நிலையிலிருந்து மேலே போய்விட்டார்.

இரா. சேஷன், சென்னை - 2.

அருமையான இரு பெண் படைப்பு. அதில் ஒருத்தி "இன்பம்" என்னவென்று அறியும் முன்னே இறந்துவிட்டாள். மற்றொருத்தியை இன்பத்தை அனுபவிக்க முடியாமலே செய்துவிட்டார் மணிவண்ணன்.

ச. சுபாஸ் சந்திரன், நெல்லை.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகச் சிறந்த முறையில் உருவாக்கியிருக்கிறார் மணிவண்ணன். தூய்மையான காதலைத் தியாகம் செய்த பாரதி, அறிவுத்திறன் படைத்த பூபதி, உயர்ந்த கொள்கையுடைய உண்மை நண்பன் குமரப்பன் ஆகிய ஒவ்வொரு சிருஷ்டியும் ஆசிரியரின் கற்பனை வளத்தைச் சிறப்பாகக் காட்டுகின்றன.

பி.ஆர். கிருஷ்ணன், சென்னை - 12.

தெளிந்த நீரோடை போன்ற சரளமான நடையில், தமிழ் மணம் கமழ நவயுகக் கருத்துக்களை முன் வைத்து நல்லதோர் இலக்கியத்தைப் (பொன் விலங்கை) படைத்துத் தந்த ஆசிரியர் மணிவண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

ஏரல், எஸ்.ஏ. சலாம், தனுஷ்கோடி

தென்னாட்டிலே மனித குலத்தில் இறுதி முடிவு வரை அரவிந்தன்களும் சத்தியமூர்த்திகளும் ஆசிரியர் மணிவண்ணனின் உருவிலே மூலைக்கு மூலை தமிழ் மொழியின் புகழை மேன்மேலும் பரப்ப உதவுவார்கள் என்பதிலே ஐயமில்லை.

பெரிய பெரிய பண்டிதர்களால் கூடக் கூற முடியாத அரும் பெரும் தத்துவங்களையும், கலையுணர்ச்சிகளையும் மிக மிக எளிதாகப் பாமரரும் அறியும் வண்ணம் அழகுத் தமிழிலே இந்த நாவல் வடிவிலே அளித்து விட்டார் மணிவண்ணன்.

டி.டி. துரைராசன், மேற்கு மாம்பலம்.

அத்தியாயம் - 1

"நாடாயிருந்தால் என்ன? காடாயிருந்தால் என்ன? மேடாயிருந்தால் என்ன? பள்ளமாயிருந்தால் என்ன? எங்கு உன் மேல் நடக்கும் மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ, அங்கு நீயும் நன்றாக வாழ்கிறாய் மண்ணே!"

வாழ்க்கையின் எல்லாவிதமான அழகுகளும் இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பமாகின்றன என்பது போல் அந்த மலைச் சிகரங்கள் அத்தனை அழகாக இருந்தன. அழகாயிருக்கிற எல்லாவற்றையும் உங்களால் இரசிக்க முடியுமானால் மல்லிகைப் பந்தல் என்ற பெயரின் அழகைக் கூட நீங்கள் நன்றாக இரசித்து அனுபவிக்க முடியும்தான். சாயங்காலம் ஆறு ஆறரை மணி சுமாருக்குச் சூட்கேஸும் கையுமாக 'மல்லிகைப் பந்தல் ரோடு' இரயில் நிலையத்தில் இறங்கிய முதல் விநாடியிலிருந்து இந்த விநாடி வரை சத்தியமூர்த்தி அந்தப் பெயரின் அழகைத்தான் இரசித்துக் கொண்டிருந்தான்.

மேலே மலைக்குப் போகிற கடைசிப் பஸ்ஸையும் கோட்டை விட்டு விட்டு இப்படி அந்தப் பெயரின் அழகையும் அந்த அழகின் தொலைதூரத்துச் சாட்சிகளாய்ச் சாயங்கால வானத்திலே மெல்லிய ஓவியக் கோடுகள் போல ஏறி இறங்கித் தெரியும் மலைகளையும் இரசிப்பதில் தனக்கென்ன இலாபம் என்று அவன் நினைக்கவில்லை. இன்னொன்றின் நலத்தைப் புரிந்து கொள்ள முயலும்போதோ, உணரும் போதோ சுயநலத்தை அளவுகோலாக வைத்து, இலாப நஷ்டம் பார்க்கும் வழக்கம் அவனிடம் என்றுமே இருந்ததில்லை.

இலாபகரமாகவோ செழிப்பாகவோ வாழ்ந்தும் அவனுக்குப் பழக்கமில்லை. தன்னுடைய கஷ்டங்களைச் சகித்துக் கொண்டே பிறருடைய இலாபங்களுக்காக நிறையச் சந்தோஷப்பட்டிருக்கிறான் அவன். முள் படுக்கையின் மேல் கால் நீட்டிப் படுத்துக் கொண்டே முகம் மலரச் சிரிக்கும் சில அபூர்வ யோகிகளைப் போல் வாழ்க்கையின் கவலைகளைச் சுகமாக ஏற்றுக் கொண்டு வளர்வது அவனுக்குப் புதுமையில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் அப்படித்தான் வளர்ந்திருக்கிறான். இன்னும் நன்றாகச் சொல்லப் புகுந்தால் கல்லூரி நாட்களிலிருந்தே அவன் அப்படித்தான். அவனது படிப்பும் சிந்தனையும் வெறும் புத்தகங்களால் மட்டுமே வளர்ந்ததில்லை. அவற்றின் வளர்ச்சிக்கு வாழ்வில் அவன் அடைந்த கவலைகளும் கஷ்டங்களும் பெரும்பாலும் உதவி செய்திருக்கின்றன.

மலையடிவாரத்து இரயில் நிலையமாகையினால் மெல்ல மெல்லக் குளிர் உறைக்கத் தொடங்கியிருந்தது. புகை படர்வது போல் கண்ணெதிரே தெரியும் தோற்றங்களைப் பனி மூடியிருந்தது. இரயில் சக்கரங்கள் உரசி உரசித் தேய்ந்த இருப்புப் பாதைகள் அந்த இருட்டிலும் வெள்ளிக் கோடுகளாய் நெடுந்தூரத்துக்கு மின்னிக் கொண்டிருந்தன. அந்த இடத்திலிருந்து அறுபது மைல் தொலைவு பயணம் செய்து மல்லிகைப் பந்தலுக்குப் போக வேண்டும். இரயிலிலிருந்து இறங்கியவுடன் சாயங்காலம் மேலே மலைக்குப் போகிற கடைசிப் பஸ்ஸிலேயே அவன் போயிருக்க வேண்டும். தற்செயலாய்ச் சந்திக்க நேர்ந்த நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்ததில் பஸ் தவறி விட்டது. இரயில் நிலையத்திலிருந்து வெளியேறிப் படி இறங்கினால் எதிரே பஸ் ஸ்டாண்டு தான். அவ்வளவு அருகில் இருந்தும் மிகச் சில விநாடிகளில் பஸ்ஸைத் தவற விட்டுவிட்டான் அவன். நண்பனைத் தவறவிட்டிருந்தால் பஸ் தவறியிருக்காது. பழகிய நண்பனைத் தவறவிட முடியாத காரணத்தால் பஸ் தவறிவிட்டது.

"சத்யம்! எங்கே இந்தப் பக்கம் இப்படி அபூர்வமாக..." என்று கேட்டுக் கொண்டே முகத்தில் ஆச்சரியமும் மலர்ச்சியும் தோன்ற எதிரே வந்துவிட்ட நண்பனை எப்படிப் பார்க்காதது போல் போய்விட முடியும்? நண்பனோடு பேசி அனுப்பிவிட்டு இரயில் நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்று பார்த்தபோது, பஸ் போயிருந்தது. அவனுடைய வாழ்க்கையில் எத்தனையோ பல நல்ல சந்தர்ப்பங்கள் இப்படிக் கடைசி விநாடியில் தான் தவறியிருக்கின்றன. இன்றைக்கு இந்தப் பயணமும் அப்படித்தான் தவறிப் போய்விட்டது.

நாளைக்குப் பொழுது விடிந்தால் சரியாகப் பத்து மணிக்கு மல்லிகைப் பந்தல் கல்லூரி இண்டர்வியூவுக்குப் போய் நிற்க வேண்டும் அவன். காலையில் முதல் பஸ் ஏழு மணிக்கோ ஏழே கால் மணிக்கோ இருப்பதாகச் சொன்னார்கள். அதில் இடம் கிடைத்துப் புறப்பட்டுப் போனால் பத்து மணிக்கு மேல்தான் மல்லிகைப் பந்தலுக்கே போய்ச் சேர முடியும். இண்டர்வியூவுக்குப் போகுமுன் குளித்து உடைமாற்றிக் கொள்ளக்கூட நேரமிருக்காது.

மலைநாட்டு நகரமான மல்லிகைப் பந்தலைத் தேர்ந்தெடுத்து அங்கு ஓர் இலட்சியக் கலைக் கல்லூரி நடத்திவரும் தொழிலதிபர் பூபதியைப் பற்றிச் சத்தியமூர்த்தி நிறைய கேள்விப்பட்டிருந்தான். கண்டிப்பும் கண்ணியமும் உள்ளவராகச் சொல்லப்படும் அந்தப் பெரிய மனிதர் இண்டர்வியூவுக்குத் தாமதமாக வந்து நிற்கும் ஒரு விரிவுரையாளனைப் பற்றி என்ன நினைப்பார்? இதை நினைத்துப் பார்க்கும் போதே மனம் வேதனைப்பட்டது அவனுக்கு.

நான்கு புறமும் பச்சை வெல்வெட் பதித்த நகைப்பெட்டிக்குள் கிடக்கும் முத்தாரத்தைப் போல் ஏலமும், காப்பியும், தேயிலையும், கொக்கோவும், தேக்கும், ரப்பரும் விளையக்கூடிய வளமான மேற்கு மலைத் தொடரின் சரிவில் பள்ளத்தாக்கினிடையே அமைந்திருக்கும் அந்த அழகிய ஊரில் வேலை செய்யும் வாய்ப்பைப் பெற முடியாமல் இழந்து விட நேருமோ என்று எண்ணியபோது அந்த இழப்பை வெறும் நினைப்பளவில் ஏற்றுக் கொள்ளக்கூடத் தயங்கியது அவன் மனம்.

தன் இலட்சியத்துக்கும் மனப்பான்மைகளுக்கும் ஒத்து வராது என்ற காரணத்தினால் எத்தனையோ பல நல்ல வேலைகளுக்கு அவனே முயற்சி செய்யாமல் விட்டுவிட்டிருக்கிறான். திருமணமாகாத தங்கைகள் இருவரும் மூத்துத் தளர்ந்த பெற்றோரும் தன் கையை எதிர்பார்த்துக் குடும்பத்தின் தேவைகளை முன் வைத்துக் காத்துக் கொண்டிருப்பதும் வயிற்றைப் பணயம் வைத்து வாழ வேண்டிய அவசியமும் ஒருபுறம் இருந்தாலும், மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையை அவனே மனம் விரும்பி அடைய முயன்றான். அவனுக்கே அதில் ஓர் ஆசை இருந்தது.

முக்கியமான ஊர்களில் பெரிய ஓட்டல்கள் இருப்பது போலத்தான் கல்லூரிகளும் இருக்கின்றன. மேற்கு நாடுகளில் இருப்பது போல் அமைதியான நாட்டுப்புறங்களிலும் வனப்பு வாய்ந்த மலை நகரங்களிலும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் ஏற்படுகிறவரை இந்த நாட்டில் சர்வகலாசாலைப் படிப்பு ஒரு புதிய மறுமலர்ச்சியை அடையப் போவதில்லை. ஒழுங்கு, மரியாதை, கட்டுப்பாடுகளோடு மாணவர்களை உருவாக்கி ஆசிரியர்கள் பெருமதிப்பை அடையும் கல்லூரிகள் அத்தி பூத்தாற் போல் இருக்கின்றன. 'தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள் தேவை' என்ற கல்லூரிகள் ஆசிரியரைத் தேடி விளம்பரம் செய்கிறாற் போல - "இலட்சியவாதியான சிறந்த ஆசிரியர் ஒருவர் வேலை செய்யத் தகுதி வாய்ந்த கல்லூரி ஒன்று தேவை என்பதற்காக நானே பத்திரிகையில் விளம்பரம் செய்யலாம் என்று பார்க்கிறேன்" என்று விதண்டாவாதம் பேசி நண்பர்களிடம் விவாதம் செய்கிற சத்தியமூர்த்தியே மனம் ஒப்பி ஒரு கல்லூரி வேலையைத் தேடிக் கொண்டு புறப்பட்டதைக் கண்டுஅவனோடு பழகியவர்கள் ஆச்சரியம் தான் அடைந்தார்கள். சத்தியமூர்த்தி அந்தக் கல்லூரியின் விரிவுரையாளனாக விரும்பியதற்கு இரண்டு சரியான காரணங்களிருந்தன. ஒரு காரணம்; அந்த ஊரின் இயற்கை வனப்பு; மற்றொரு காரணம்; அந்தக் கல்லூரியின் வனப்பு.

தமிழ்நாட்டின் செழிப்பான ஆற்றங்கரைகளிலும் சாலைகள் செல்லாத மூலை முடுக்குகளிலும் இப்படி எத்தனையோ அழகான ஊர்கள் இருக்கலாம். ஆனால் மல்லிகைப் பந்தலின் அழகும் இயற்கை எழிலும் அவை எல்லாவற்றிலிருந்தும் தனியாகப் பிரித்துச் சிறப்பாகச் சொல்லத் தகுந்த ஒன்றே தவிர அவற்றோடு சேர்த்து அவற்றில் ஏதோ ஒன்றாக வைத்து எண்ணத்தகுந்தது அல்ல. அப்படிச் சிறப்பித்துச் சொல்லுவதற்குத் தனியாக ஒரே காரணம் மட்டுமில்லை. சிறப்பாகப் பல காரணங்கள் இருந்தன.

கிராமத்தின் அழகுகளும், நகரத்தின் சௌகர்யங்களும் நிறைந்த ஊர்? கவர்ச்சிமிக்கதாக இருப்பதற்குக் கேட்பானேன்? மண்ணின் பெருமை - அதன் மேலே வாழும் மனிதர்களின் குணங்களை வைத்துக் கணிக்கப்படுகிறது என்பது சரியானால் மல்லிகைப் பந்தலில் அப்படிக் குணங்களை உடைய பெருந்தன்மையாளர் சிலர் எப்போதும் இருந்தார்கள்; இப்போதும் இருக்கிறார்கள்.

"நாடாயிருந்தால் என்ன? காடாயிருந்தால் என்ன? மேடாயிருந்தால் என்ன? பள்ளமாயிருந்தால் என்ன? எங்கு உன்மேல் நடக்கும் மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்கு நீயும் நன்றாக வாழ்கிறாய் மண்ணே!"

- என்று மண்ணை வாழ்த்திப் பாடியிருக்கிறாளே, தமிழ் மூதாட்டி - அந்த வாழ்த்து மல்லிகைப் பந்தலுக்கு முற்றிலும் பொருந்தும். காடாரம்பமான அந்த மலை நாட்டு நகரம் ஆரவார வேகங்களிலிருந்தும் பரபரப்பான ஆடம்பரங்களிலிருந்தும் விலகி ஒதுங்கியிருந்தாலும் நாகரிகத்துக்கும் பண்பாட்டுக்கும் இருப்பிடமாக விளங்கியது!

நாகரிகம் பெரிய பெரிய நகரங்களிலிருந்து பிறந்து வளர்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது இன்றைய நகரங்களின் நெருக்கடியில் இருப்பதற்கு இடமில்லாமல் புறக்கணிக்கப்பட்டு மல்லிகைப் பந்தலைப் போன்ற சிறிய அமைதியான ஊர்களில் ஒதுங்கிப் புகழிடம் பெற்றிருந்தது.

மல்லிகைப் பந்தலில் வாழ்க்கை இயந்திரமாக ஓடிக் கொண்டிருக்காது. நிதானமாக நடந்து கொண்டிருக்கும். தார் ரோடுகளும் சிமெண்டுப் பூச்சுக்களும் தரையை மூடி மண்ணின் ஈர வாசனையைத் தடை செய்யமாட்டா. எல்லா இடங்களிலும் ஈர மண்ணின் மணம் தன் சகலவிதமான வளங்களோடும் எக்காலமும் மணந்து கொண்டிருக்கும். காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளும் தாகத்தோடு அங்கு மனிதர் தேவைகளுக்கு மீறிய பரபரப்புக் கொண்டு திரிய மாட்டார்கள். காரியங்கள் நியாயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையோடும், நாணயத்தோடும் நிதானமாக உழைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த ஊர் மக்களைப் போலவே எவரையும், எப்போதும் வாட்டவோ, காயவோ விரும்பாதது போல் ஆண்டு முழுவதும் ஒரேவிதமான குளிர்ந்த சூழ்நிலை அங்கு நிலவிக் கொண்டிருக்கும். இத்தகைய அழகிய ஊரை இன்னும் அழகுபடுத்துவது போல் தொழிலதிபர் பூபதி ஒரு சிறந்த கலைக் கல்லூரியை அங்கு நிறுவி வளர்த்திருந்தார். எங்கோ ஒதுக்குப்புறமான மலைகளுக்கு நடுவே உள்ள ஊரில் அமைந்திருந்தாலும் படிப்பின் தரத்தினாலும் கல்வியைப் பரப்பும் உயர்ந்த இலட்சியத்தினாலும் மாணவர்கள் தங்கிப் பயிலும் விடுதிக் கட்டுப்பாடுகளாலும் தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் புகழ் பெறத் தொடங்கியிருந்தது அந்தக் கலைக் கல்லூரி. மிகப் பெரிய நகரங்களில் உள்ளவர்களும் கூட அந்தச் சிறிய மலை நகரத்தைத் தேடிப் போய்த் தங்கள் பிள்ளைகளையோ, பெண்களையோ சேர்க்கத் தவிப்பதும் சிபாரிசு தேடுவதும் வழக்கமாயிருந்தது. அங்கு சேர்ந்து கல்வி கற்பதையே ஒரு பாக்கியமாகக் கருதினார்கள் பலர்.

சத்தியமூர்த்தி மனம் ஈடுபட்டு ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் போது இலகுவாகத் தேர்ந்தெடுக்கத் துணிந்து விட மாட்டான்.

"நல்ல வேலையாகத் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது கிடைக்கிறவரை உண்மையே மேலெழுந்து நிற்பது போல் உயர்ந்து தோன்றும் மதுரையின் இந்தக் கோபுரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதையே நான் ஒரு வேலையாகச் செய்து கொண்டுதான் இருக்கிறேன்" என்று தத்துவம் பேசிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியே இண்டர்வியூவுக்குப் புறப்பட்டதைக் கண்டபின் மல்லிகைப் பந்தல் என்ற அந்த ஊரும் அதன் பெருமைக்கு ஒரு காரணமான பூபதி கலைக் கல்லூரியும் ஏதோ ஒரு விதத்தில் நிச்சயமான தகுதி வாய்ந்தவையாயிருக்கும் என்பது மேலும் உறுதியாகி விட்டது.

மாணவனாயிருக்கும் போதே சத்தியமூர்த்திக்கு நெஞ்சு உரம் அதிகம். எவ்வளவு வெம்மையான அனுபவமானாலும் தாங்கிக் கொண்டு அந்த வெம்மையையே உண்டு வலிமை பெறுவது அவன் வழக்கம். கல்லூரி நாட்களில் சகமாணவர்கள் அவனுக்கு நெருப்புக் கோழி என்று கூடச் சூடாக ஒரு பெயர் வைத்திருந்தார்கள். கல்லூரியில் மாணவர்களின் யூனியன் தலைவனாக இருந்து அவன் சாதித்த சாதனைகளும் சமாளித்த எதிர்ப்புக்களும் என்றும் மறக்க முடியாதவை. மாணவனாய் இருந்த காலத்தில் தன்னுடைய ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்திலும் கல்லூரியில் தான் தங்கிப் படித்த விடுதி அறையிலும் கீழ்க்கண்ட வாக்கியத்தைக் கொட்டை எழுத்துக்களில் பெரிதாக எழுதி வைத்துக் கொள்வது அவன் வழக்கம்.

"இது இப்படித்தான் நடக்கும் - இப்படித்தான் நடக்க முடியும் - என்று எந்த முயற்சியும் நீ ஆசைப்படுகிறபடியே முடிய வேண்டும் என்பதாகச் செயலை மறந்து விளைவை மட்டும் எண்ணிக் கற்பனைகளை வளர்க்காதே. அது வேறு விதமாக நடந்தாலும் தாங்கிக் கொள்ளத் தயாராக இரு. கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே" - என்று பலரிடம் பேசியும் பலமுறை பேசியும் திரும்பத் திரும்ப எழுதியும் இந்த வாக்கியங்களின் பொருள் அவன் மனத்தில் பதிந்து ஊறிப் போயிருந்தது. 'கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே' என்ற வாக்கியத்தை விவேகானந்தர் தம்முடைய தலைமுறையில் அடிமைத் தளையில் சிக்கிக் கீழே விழுந்து கிடந்த பாரத நாட்டை நினைத்துக் கூறினாரா, தனி மனிதனை நினைத்துக் கூறினாரா என்று சத்தியமூர்த்தி தனக்குள் பலமுறை ஆழ்ந்து சிந்தித்திருக்கிறான்.

பஸ்ஸைத் தவறவிட்டுவிட்டு, மல்லிகைப் பந்தல் ரோடு இரயில் நிலையத்தின் பிரயாணிகள் தங்கும் அறையில் உட்கார்ந்து நிதானமாக அந்த ஊரின் பெயரழகை இரசித்துக் கொண்டிருந்த போதிலும் இந்த வாக்கியத்தைத்தான் நினைத்துக் கொண்டிருந்தான் அவன். அவனுடைய வறுமைமயமான இளமைப் பருவத்தில் இந்த வாக்கியத்தை அடிக்கடி நினைத்தாக வேண்டிய பல சந்தர்ப்பங்கள் அடுக்கடுக்காக அவனுக்கு ஏற்பட்டிருக்கின்றன. கீழே விழுகிற போதெல்லாம் வேகமாக எழ வேண்டும் என்ற முனைப்பையும் தன்னம்பிக்கையையும் அவன் அடைந்திருக்கிறான். ஒவ்வொரு முறை கீழே விழ நேரிடும் போதும் முன்னால் விழுந்த போது எழுந்ததை விட இப்போது இன்னும் வேகமாக எழவேண்டும் என்ற துடிப்பை அவன் உணர்ந்திருக்கிறான். தன்னுடைய பலம், தான் அடைகிற வெற்றிகளால் ஞாபகப்படுத்தப் பெறுவதாக அவன் ஒரு போதும் நினைத்ததுமில்லை; நம்பியதுமில்லை; தன்னுடைய பலமும் வலிமைகளும் தான் அடைகிற ஒவ்வொரு தோல்வியின் போதும் தனக்கு ஞாபகப்படுத்தப் பெறுவதாகத்தான் அவன் உணர்ந்திருக்கிறான் - நம்பியிருக்கிறான் - வாழ்ந்திருக்கிறான்.

கல்லூரிப் புத்தகங்களும், பல்கலைக் கழகத்தார் கொடுத்திருந்த எம்.ஏ. டிகிரியும் செய்ததை விட அதிகமாகக் கவலைகளும், வறுமைகளும், ஏமாற்றங்களும், தோல்விகளுமே அவனைப் பெரிய சிந்தனையாளனாகச் செய்திருந்தன. நியாயமான கவலைகளில் பிறக்கிற சிந்தனையே தத்துவமாக மாறுகின்றதென்று கல்லூரி விவாத மேடையில் பலமுறை பேசியிருக்கிறான் சத்தியமூர்த்தி. ஒரு மனிதனின் நேர்மையான சமுதாயத் தேவைகள் கூட வாழ்க்கையில் அவன் நினைத்தவுடனேயோ, ஆசைப்பட்ட உடனேயோ கிடைத்து விடாதென்று சத்தியமூர்த்தி மிக இளமையிலிருந்தே உணர்ந்திருந்தான். அவனுடைய ஒரே வலிமை இந்த உணர்ச்சிதான். நல்ல மனிதன் வாழ்க்கையில் தன்னுடைய ஒவ்வொரு தேவைக்காகவும் மட்டுமே போராட முடியாது. தன்னுடைய தேவைக்காகவும் நியாயத்துக்காகவும் சேர்த்துப் போராட வேண்டியிருக்கும். சிந்தனையினாலோ, செயலினாலோ போராடித்தான் எதையும் அடையமுடியும். மனத்தினால் போராடப் பொறுமையும் பக்குவமும் இல்லாதவர்கள் தான் அவசரப்பட்டுக் கைகளால் போராடி விடுகிறார்கள்.

வாதாம் பழத்தில் பருப்பு மாதிரி உரித்துத் தட்டித் தேடிச் சுவையைக் கண்டுபிடித்து எடுக்க வேண்டியிருக்கிறது - வாழ்க்கையில். வாழ்க்கையின் மிகப்பெரிய தேவை செலவமும் செழிப்பும் அல்ல; இன்றுள்ள சூழ்நிலையில் நல்ல மனிதர்களும் நல்ல எண்ணங்களும் தான் சமுதாயத்தின் மிகப்பெரிய பற்றாக்குறையாய், மிகப்பெரிய தேவையாய் எதிர்பார்க்கப்பட்டு நிற்கிறது.

மல்லிகைப் பந்தல் ரோடு இரயில் நிலையத்து 'வெயிட்டிங் ரூமி'ல் அமர்ந்து இரவுச் சாப்பாட்டையும் பசியையும் மறந்து இப்படி ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. குளிர் அதிகமாகவே பெட்டியைத் திறந்து சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டான். சாயங்காலம் கிடைக்காமல் தவறிப்போன கடைசி பஸ்ஸையும், நாளைக்குப் பொழுது விடிந்தால் அறுபது மைலுக்கு அப்பால் சரியாகப் பத்து மணிக்குக் காத்திருக்கும் 'இண்டர்வியூ'வையும் நினைத்தபோது மட்டும் சம்பந்தா சம்பந்தமின்றிப் போய்க் கொண்டிருந்த அவனது சிந்தனை ஒரு கணம் தடைப்பட்டு நின்றது. பின்பு மேலே வளர்ந்து தொடர்ந்தது.

இரயில் நிலையத்தில் பிரயாணிகள் தங்கியிருக்கும் அறைக்கு 'வெயிட்டிங் ரூம்' என்று பெயர் வைத்தவர்கள் எத்தனைப் பொருத்தமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். வெயிட்டிங ரூமில் காத்துக் கொண்டிருக்கும் போதும் அப்படிக் காத்திருப்பவர்கள் இரயிலுக்காக மட்டும் காத்திருக்கவில்லை. சுகமும், துக்கமும், இலாபமும், நஷ்டமும், திருப்தியும், அதிருப்தியும் கலந்த, பல்லாயிரம் காரியங்களை நோக்கிப் புறப்பட்டுச் செல்வதற்குக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசைகளும் நிறைவேற வேண்டியவைகளும் வரிசை வரிசையாகக் காத்துக் கொண்டிருப்பதால் மனிதனுடைய மனம் தான் மிகப்பெரிய 'வெயிட்டிங் ரூம்' என்று பாதி வேடிக்கையாகவும் பாதி துயரமாகவும் நினைத்தான் சத்தியமூர்த்தி. அந்த வேளையில் அப்படிச் சிந்திப்பதில் ஒரு சுகம் இருந்தது.

மிகப் பல சமயங்களில் மனிதனுடைய மனம் தான் உடம்பைக் காட்டிலும் அதிகப் பரபரப்போடு காத்துக் கொண்டிருக்கிறது. இரயில் நிலையத்து 'வெயிட்டிங் ரூமி'லும் அப்படித்தான். முகத்தில் புன்னகை மலர அந்த வெயிட்டிங் ரூமில் தன்னைச் சுற்றிலும் இருந்தவர்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு கண் பார்வையைச் சுழலவிட்டான் சத்தியமூர்த்தி. அவனைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் இழுத்துப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் மனத்திலும் ஏதாவதொரு காரியம் காத்திருக்க வேண்டும். ஆனால் அது மற்றவருக்குத் தெரியவும் தெரியாது; புரியவும் புரியாது. ஏனென்றால் அந்த மற்றவர் மனத்திலும் எந்தக் காரியமோ காத்துக் கொண்டிருக்கிறது.

'அதோ அந்தக் கிழவர் மூலையில் சுருண்டு படுத்திருக்கிறாரே, அவருடைய தலைமாட்டில் இருக்கும் சிறு துணிப்பையையும், நெஞ்சுக்கும் சட்டைப் பையிலிருக்கும் பணத்துக்கும் பாதுகாப்பாகத் தூக்கத்திலும் அந்த இடத்தைத் தழுவியிருக்கும் அவர் கையையும் பார்த்தால், ஆறாவது பெண்ணுக்கோ, ஏழாவது பெண்ணுக்கோ வரன் தேடிப் புறப்படுகிற அப்பாவித் தந்தையாகத் தோன்றுகிறது. இதோ கழுத்தில் டையையும், மூக்குக் கண்ணாடியையும் கூடக் கழற்றாமல் உட்கார்ந்தபடியே பாதித் தூக்கம் தூங்கும் இந்த மனிதர் ஏதோ ஒரு கம்பெனியின் ஊர் சுற்றும் பிரதிநிதியாக இருக்க வேண்டும். இதோ இங்கே ரப்பர் தலையணையை ஊதி உப்ப வைத்துக் கொண்டிருக்கிற இந்தப் பையன் ஒரு கல்லூரி மாணவனாக இருக்க வேண்டும்.'

'எல்லாரும் காத்திருக்கிறார்கள். எதற்காக? இரயிலுக்காக மட்டும் அல்ல; வேறு எதற்காகவுமோ சேர்த்துத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று எண்ணியபோது வாழ்க்கையையே ஒரு பெரிய வெயிட்டிங் ரூம் ஆகக் கற்பனை செய்யலாம் போலத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. அடுத்த கணமே அப்படிக் கற்பனை செய்வது தன் வயதுக்கு அதிகப் பிரசங்கித்தனமோ என்ற தயக்கமும் ஏற்பட்டது அவனுக்கு. புத்திக் கூர்மையாலும், துறுதுறுவென்று எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கும் சிந்தனை அனுபவத்தாலும் அவன் மனத்துக்கு வயது அதிகமாயிருந்தாலும் உலகம் அவனுடைய தோற்றத்தையும், உடலையும் இளமை மலர்ந்த வசீகரமான முகத்தையும் கொண்டு அவனை இளைஞனாகத்தானே சொல்லும். மூத்துத் தளர்ந்து தலை நரைத்த பின்பே சில உண்மைகளைச் சொல்லும் உரிமையை மனிதன் அடைய முடிகிறது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக மூத்துத் தளர்ந்து தலை நரைத்த பின்போ உண்மைகளைப் பேசும் சுபாவமே சிலரிடமிருந்து போய்விடுகிறது. சிந்தனைச் சுதந்திரம் உள்ள நாடுகளில் உண்மையைப் பேச வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பது சத்தியமூர்த்தியின் கருத்து.

வெடவெடக்கும் குளிரில் இன்று இரவு இந்த மலையடிவாரத்து இரயில் நிலைய வெயிட்டிங் ரூமில் விழித்துக் கொண்டிருப்பது போலவே வாழ்க்கை முழுவதும் மற்றவர்கள் சோர்ந்து தளர்ந்தாலும் தான் ஒரு சீராக விழித்திருக்க வேண்டுமென்று விநோதமானதொரு விருப்பம் உண்டாயிற்று அவனுக்கு. அந்த நல்ல விருப்பத்தை உடனே வைராக்கியமாக மாற்றிக் கொண்டது அவன் மனம்.

ஏதோ சாப்பிட்டோம் என்று பெயர் செய்து முறையைக் கழிப்பதற்காக ரயில் நிலையத்துப் பழக்கடையில் நாலு மலைப்பழம் வாங்கிச் சாப்பிட்ட பின் 'வெயிட்டிங் ரூமி'ல் காலியாக இருந்த கட்டில் ஒன்றில் தலைக்கு அணைவாகச் சூட்கேஸை வைத்துக் கொண்டு படுத்தான் சத்தியமூர்த்தி. தூக்கம் வரவில்லை. கட்டிலில் புரண்டுகொண்டே விடியப் போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். 'பொழுது விடிந்ததும் பஸ் நிலையத்துக்குப் போய் மல்லிகைப் பந்தலுக்குச் செல்கிற முதல் பஸ்ஸைப் பிடித்துப் புறப்பட வேண்டும். அப்படிப் போனாலும் 'இண்டர்வியூ'வுக்காகக் குறிப்பிட்டிருக்கும் நேரத்துக்கு மேலே அரைமணி நேரம் தாமதமாகிவிடும். ஆனால் பரவாயில்லை. எவ்வளவு கண்டிப்பான மனிதர்களாக இருந்தாலும் உண்மைக்கு ஒரு நிமிஷம் நெகிழ்ந்துதான் ஆக வேண்டும். எனக்குப் பஸ் கிடைக்கவில்லை என்பது உண்மை. தாமதமாக இண்டர்வியூவுக்கு வர நேர்ந்ததற்கு அதையே நான் காரணமாகச் சொல்லலாம். தவிரவும் பூபதி அவர்களைப் போல் கண்டிப்பிலும் கட்டுப்பாட்டிலும் அக்கறை உள்ளவர்கள் உண்மையை மதிப்பதிலும் அக்கறை உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள்' என்று எண்ணிக்கொண்டே படுத்திருந்த சத்தியமூர்த்தி சூட்கேஸின் மேல் வைத்திருந்த தன் தலை பட்டென்று கட்டிலில் மோதும்படி இருட்டில் ஒரு கை சூட்கேஸை உருவிவிட்டு நழுவியதை அவசரமாக உணர்ந்து அப்படியே தாவி எழுந்து அந்தக் கையையும் சூட்கேஸுடன் சேர்த்துப் பிடித்து விட்டான். அவன் படுத்துக் கொண்ட சிறிது நேரத்துக்கெல்லாம் வெளிச்சத்தில் தூக்கம் வராத யாரோ ஒரு பிரயாணி விளக்கை அணைத்திருந்தார். இருட்டில் சத்தியமூர்த்தி விழித்துக் கொண்டிருக்கிறானா, தூங்குகிறானா என்பதைப் புரிந்து கொள்ள முடியாததால் திருட வந்தவன் கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டான். வேறு யாராகவாவது இருந்தால் விளக்கைப் போட்டு 'வெயிட்டிங் ரூமி'ல் தூங்கியும் தூங்காமலும் இருந்த அத்தனை பேரையும் எழுப்பிப் பெரிய கலவரம் உண்டாக்கியிருப்பார்கள். சத்தியமூர்த்தி ஓசைப்படாமல் பிடிபட்ட கையையும் சூட்கேஸையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஸ்டேஷன் பிளாட்பாரத்துக்கு வந்தான். சூட்கேஸை உருவிக் கொண்டு ஓட முயன்றவன் பதினைந்து பதினாறு வயது மதிக்கத்தக்க பையனாக இருந்ததைக் கண்டபோது கோபமும் கொதிப்பும் அடைவதற்குப் பதில் சத்தியமூர்த்தியின் மனத்தில் கருணையும் பரிவுமே ஏற்பட்டன. நெருப்புப் போல் செம்பட்டை படர்ந்திருந்த அந்தப் பரட்டைத் தலையும், இளமையின் மலர்ச்சியில்லாமல் பஞ்சடைத்த கண்களும் 'என்னை விட்டுவிடுங்கள்' என்று கெஞ்சுகின்ற முகமுமாக நின்ற அந்தப் பையனைப் பார்த்துச் சிரித்தான் சத்தியமூர்த்தி. பின்பு அந்த சிறுவனை நோக்கி நிதானமாகப் பேசினான்:

"பார்த்தாயா தம்பீ; காரும் பங்களாவும் டெலிபோனும் வைத்துக் கொண்டு உலகறிய நல்லவர்களாகவும் மனமறியப் பொய்யர்களாகவும் வாழ்ந்து மிகவும் கௌரவமாகத் திருடிக் கொண்டிருக்கிற பலர் சமூகத்தில் பிடிபட மாட்டார்கள். உன்னைப் போல் வயிறு பசித்துப் போய்த் திருடுகிற அப்பாவிகள் தான் பிடிபட்டுத் திருட்டுப் பட்டமும் கட்டிக் கொள்வார்கள். இதோ இப்படி என்னோடு வா. நீ திருடிக் கொண்டு போவதற்கிருந்த இந்தச் சூட்கேஸில் என்ன இருக்கிறதென்று நான் உனக்குக் காண்பிக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே மின்சார விளக்குக் கம்பத்தினடியில் பிளாட்பாரத்தில் இருந்த சிமெண்டு பெஞ்சுக்கு அந்தப் பையனை இழுத்துக் கொண்டு போய் வற்புறுத்தி உட்கார வைத்துத் தன்னுடைய சூட்கேஸைத் திறந்தான் சத்தியமூர்த்தி. பிடிபட்டு விட்ட அதிர்ச்சியிலும் கம்பீரமாக ஆறடி உயரத்திற்கு வாட்டசாட்டமாக நிற்கும் அந்தச் சூட்கேஸின் சொந்தக்காரர் தன்னை என்ன செய்யப் போகிறாரோ என்ற பயத்திலும் அந்தச் சிறுவனின் உடம்பு வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய குழிந்த கண்கள் மருண்டு நோக்கின.

"இதோ பார்? இது பல்கலைக்கழகப் பட்டம். இதைப் பெறுவதற்காக உழைத்துப் படித்துப் பெற்றுக் கொண்டவனே சில சமயங்களில் இதை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது. அப்படி இருக்கும் போது இதைத் திருடிக் கொண்டு போய் நீ என்ன செய்ய முடியும்? இந்தப் பட்டத்தைத் தவிர வேறு நாலைந்து சர்ட்டிபிகேட்டுகளும் நன்னடத்தைச் சான்றிதழ்களும் இண்டர்வியூகார்டும் ஒருநாள் பயணத்திற்கான துணிமணிகளும் சோப்பும் சீப்பும் தான் இந்தச் சூட்கேஸில் இருக்கின்றன. பிறருடைய பணத்தைத் திருடினால் அதை நீ உன்னுடையதைப் போல் வைத்துக் கொண்டு செலவழிக்க முடியும். பிறருடைய படிப்பையோ பட்டத்தையோ திருடினால் ரூபாய் நோட்டைப் போல் அவற்றைச் செலவழித்து நீ ஒரு பயனும் பெற முடியாது. வயிற்றுக்கு இல்லாமல் ஏழையாகி விடலாம். ஆனால் பண்பினால் ஏழையாகிவிடக் கூடாது" என்று சட்டைப் பைக்குள் கையை விட்டு அங்கு நாணயங்களாகக் கிடந்த அத்தனை காசுகளையும் அரை ரூபாய் கால் ரூபாய்களையும் அந்தப் பையனின் கைகளில் அள்ளித் திணித்தான் சத்தியமூர்த்தி. பையன் ஒன்றும் புரியாமல் மலைத்துப் போய் நின்றான்.

தன்னுடைய சூட்கேஸை மூடிக் கொண்டு சத்தியமூர்த்தி மறுபடியும் 'வெயிட்டிங் ரூமு'க்குத் திரும்பி வந்தபோது அது இருளில் ஆழ்ந்து கிடந்தது. தூங்குகிறவர்களின் குறட்டை ஒலியும் தூங்காதவர்கள் புரண்டு படுக்கும் ஓசையுமாக இரவு பதினோரு மணிக்கு மேல் ஒரு மலையடிவாரத்து இரயில் நிலையத்துச் சூழ்நிலை எப்படி எப்படிச் சோர்ந்து போயிருக்க முடியுமோ, அப்படிச் சோர்ந்து போயிருந்தது அது. அவன் திரும்பி வருவதற்குள் முன்பு அவன் படுத்திருந்த கட்டிலை வேறொருவர் ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததன் காரணமாகப் படுக்க வழியின்றி அவன் நாற்காலியிலேயே உட்கார வேண்டியதாயிற்று.

'படிக்க வேண்டிய வயதில் படிப்புக்கும் வழியின்றி, பசிக்கும் வழியின்றி, இப்படித் திருட்டுத் தொழிலுக்குத் தயாராகும் சிறுவர்கள் பெருகப் பெருக இந்தத் தேசத்தின் சமுதாய வாழ்வில் எதனாலும் தீர்க்க முடியாத நோய் பெருகுகிறது. பத்தியமில்லாமல் மருந்து சாப்பிடுவதுபோல் இத்தகைய அடிப்படை நோய்களைத் தீர்க்காமல் வேறு வளர்ச்சிகளுக்குத் திட்டமிடுவதில் பயனென்ன?' - என்று எண்ணத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. 'இந்தத் தேசம் முன்னேற ஒரே வழிதான் உண்டு. பிறருடைய உணவைப் பங்கிட்டுக் கொள்ளும் மனிதர்களைப் போல் பிறருடைய பசியைப் பங்கிட்டுக் கொள்ளும் மனிதர்களும் பெருக வேண்டும். ஆனால் இந்தத் தேசத்தின் துர்பாக்கியமோ என்னவோ, இங்கு மற்றவர்களுடைய உணவைப் பங்கிட்டுக் கொள்ளும் மனிதர்களே அதிகமாக இருக்கிறார்கள். மற்றவர்களுடைய பசியைப் பங்கிட்டுக் கொள்ளும் மனிதர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள்' என்று நினைத்து நினைத்து மனம் தவித்தான் அவன். 'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாரதி பாடியிருப்பது ஞாபகம் வந்தது. இப்படியே எத்தனை எத்தனையோ விதமான சிந்தனைகளில் நீந்தியே இரவைக் கழித்துவிட்டான்.

அங்கே அந்த மலையடிவாரத்து இரயில் நிலையத்தில் சூரியோதயம் மிகமிக அழகாயிருந்தது. ஒரு காரியத்தை ஆவலோடு எதிர்பார்த்துத் தூங்காமல் விழித்திருந்து தவித்த பின் விடிகிற விடியற்காலைக்குக் கவர்ச்சியும் அழகும் அதிகம். மனித இதயத்தைப் பலவிதமான சிந்தனைகளால் தவிக்கத் தவிக்கப் படுத்தியபின் மெல்ல மலர்கிற காலை விலைமதிப்பற்றதாக இருப்பதைச் சத்தியமூர்த்தி பலமுறை உணர்ந்திருக்கிறான். இரயில் நிலையத்து வெயிட்டிங் ரூமிலேயே அவசர அவசரமாக நீராடி உடை மாற்றிக் கொண்டு அவன் பஸ்ஸுக்குப் புறப்பட்ட போது காலை ஆறரை மணிக்கு மேலாகியிருந்தது. காலைச் சிற்றுண்டியைப் போகிற வழியிலிருந்த ஓர் ஓட்டலில் முடித்துக் கொண்டு அவன் பஸ் நிலையத்தில் நுழைந்த போது மலைமேல் உள்ள மல்லிகைப் பந்தலுக்குப் போகிற முதல் பஸ் தயாராக நின்று கொண்டிருந்தது. பஸ்ஸில் இரண்டு பேருக்கு மட்டுமே இடம் இருந்தது. சத்தியமூர்த்தி இரண்டாவது ஆளாக அந்தப் பஸ்ஸில் ஏறிக்கொண்டான். அவனுக்கு முன்பே ஒரு வெள்ளைக்காரர் ஏறிக் கொண்டு விட்டதனால் அந்தப் பஸ்ஸில் இடம் பிடித்த கடைசிப் பிரயாணி சத்தியமூர்த்தியாக இருந்தான். இன்னும் இரண்டு விநாடிகள் தாமதித்து வந்திருந்தால் அதுவும் தவறித்தான் போயிருக்கும். நல்ல வேளையாக அப்படி நேரவில்லை.

பஸ் புறப்பட்டது. அந்த அதிகாலை நேரத்தில் முகத்தில் சில்லென்று வந்து வீசும் குளிர்ந்த காற்றில் சிலிர்த்துக் கொண்டே பயணம் செய்வது சுகமாக இருந்தது. இருபுறமும் அடர்ந்து செழித்த பசுமையினிடையே வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதையில் போகும் போது சத்தியமூர்த்தியின் மனத்தில் அந்தப் பயணமே பெருமிதத்துக்குரியதோர் அனுபவமாகத் தோன்றியது. சாலையின் இருபுறமும் எங்கெங்கிருந்தோ பறவைகளின் இனிய ஒலிகளும் நீர் சலசலத்து ஓடும் ஓசைகளும் தந்தியிலிருந்து பிரிந்த நாதத்தைப் போல் விடுபட்டு அந்த இனிமையாய்ப் பிறந்த இடத்துச் சுவடு இல்லாமல் வந்து பரவிக் கொண்டிருந்தன. சௌந்தரியம் இறைபட்டுக் கிடக்கும் அந்த மலைகளின் வழியே பயணம் செய்து மல்லிகைப் பந்தலை அடைந்த போது பத்தேகால் மணிக்கு மேல் ஆகிவிட்டது. பள்ளத்தாக்கில் இறங்கி ஊருக்குள் புகுந்து நிலையத்தில் பஸ் நின்றவுடன் சத்தியமூர்த்தி அவசரமாகப் புறப்பட்டான். நான்கு புறமும் மலைகளுக்கு நடுவில் இப்படி அமைந்திருப்பதை விட வேறெந்த விதமாக அமைந்திருந்தாலும் அழகாயிராதென்பது போல் அவ்வளவு கச்சிதனமான அழகுடன் அமைந்திருந்தது மல்லிகைப் பந்தல். ஊரிலிருந்து சற்றே விலகி மலைச்சரிவில் கட்டப்பட்டிருந்த பூபதிக் கலைக் கல்லூரிக்குச் ச்த்தியமூர்த்தி போய்ச் சேர்ந்த போது பத்தரை மணிக்கு மேலும் மூன்று நான்கு நிமிடங்கள் ஆகிவிட்டன. அங்கே கல்லூரி அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் சத்தியமூர்த்தியை எதிர்பார்த்துத் தயாராகக் காத்திருந்தார்.

"கல்லூரி அதிபர் பூபதி அவர்களுக்கு உடல் நலக்குறைவாக இருப்பதால் இண்டர்வியூவை அவரது பங்களாவிலேயே நடத்திவிட ஏற்பாடாகியிருக்கிறது. பிரின்ஸிபாலும் அங்கேயே போய்க் காத்துக் கொண்டிருக்கிறார். உங்களை எதிர்பார்த்துத் தான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன் நான். நீங்கள் வந்தவுடன் அங்கே அழைத்துக் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்கள். புறப்படலாமா?" என்று சத்தியமூர்த்தியை எதிர்கொண்டார் அவர்.

அவன் கல்லூரிக் கட்டிடத்துக்குள் நுழைந்ததுமே அவனை இன்னாரென்று விசாரித்துத் தெரிந்து கொண்டவுடனேயே அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார் அவர். தாமதமாக வர நேர்ந்ததற்காகக் கல்லூரி அதிபரிடமும் முதல்வரிடமும் காரணம் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கும் என்று தான் எதிர்பார்த்ததற்கு மாறாகப் பண்புடனும், பெருந்தன்மையுடனும் தன்னை அழைத்துப் போக ஒரு மனிதர் காத்திருப்பதைப் பார்த்தவுடன் சத்தியமூர்த்தி வியப்படைந்தான்.

கல்லூரி காம்பவுண்டுக்கு மிக அருகிலேயே தனியாக மேடு போலிருந்த பகுதியில் அடர்ந்த தோட்டத்தினிடையே தொழிலதிபர் பூபதியின் பங்களா அமைந்திருந்தது. வீட்டுக்கு முன் நீண்ட பாதையில் இருபுறமும் குண்டு குண்டாகப் பூத்திருந்த மல்லிகைப் பூக்களின் நறுமணத்தை நுகர்ந்து கொண்டே நடந்தான் சத்தியமூர்த்தி.

அந்தப் பங்களாவின் முன்புறத்து அறை வாயிலுக்கு வந்ததும் சத்தியமூர்த்தியை உள்ளே செல்லுமாறு அறைப் பக்கம் கையைக் காண்பித்து விட்டு உடன் வந்தவர் வெளியிலேயே நின்று கொண்டார். அறைக்குள் நுழைந்ததுமே இலட்சிய ஆர்வமும், செல்வச் செழிப்பின் பெருந்தன்மையும் தெளிவாகத் தெரியும்படி வீற்றிருந்த அந்த முதியவரைத் தான் சத்தியமூர்த்தியின் கண்கள் முதன் முதலாகச் சந்தித்தன. பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் தான் கல்லூரியின் பிரின்ஸிபாலாக இருக்க வேண்டுமென்றும் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. சத்தியமூர்த்தி இருவருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு நின்றான்.

"இப்படி உட்காருங்கள்!" என்று தமக்கு எதிரேயிருந்த நாற்காலியைச் சுட்டிக் காண்பித்தார் பூபதி. சத்தியமூர்த்தி அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்தான். பிரின்ஸிபால் தம் கையிலிருந்த பைல் கட்டை அவிழ்த்து ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் அதிலிருந்து உருவி எடுத்துப் பூபதிக்கு முன்னால் வைத்துவிட்டு, "கே. சத்தியமூர்த்தி ஃபார் டமில் லெக்சரர் போஸ்ட்..." என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போய்ப் பழையபடி தம் நாற்காலியில் அமர்ந்தார். இருக்கிற நிலைமையைக் கூர்ந்து நோக்கி அநுமானம் செய்ததில் முழு இண்டர்வியூவையும் கல்லூரி அதிபரே நடத்திவிடுவார் போலத் தோன்றியது.

அந்த அறையையும், அதை நிரப்பியிருந்த பிரம்மாண்டமான புத்தக அலமாரிகளையும், அறைக்குள்ளிருந்தே வீட்டுக்குள் போவதற்காக உட்பக்கமாய் அமைந்திருந்த வாயிலில் தொங்கிய கிளிகள் எழுதிய துணித் திரைச்சீலையையும் சலவைக் கல் பதித்த தரையையும் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அதே நேரத்தில் அநுபவமும் படிப்பும் முதுமையும் நிறைந்த பூபதி அவர்களின் கண்கள் தன்னைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருப்பதையும் அவன் கண்டான். யாரோ நெருங்கிய விருந்தாளியை விசாரிப்பது போல் கேள்வி ஆரம்பமாயிற்று.

"ஹவ் டூ யூ ஃபைண்ட் திஸ் பிளேஸ்?" (இந்த ஊர் எப்படி இருக்கிறது?)

"வெரி நைஸ்... ஸோ பியூட்டிஃபுல்" (மிக நேர்த்தியாக இருக்கிறது... நிரம்ப அழகாயிருக்கிறது) என்று சிறிதும் இடைவெளி விடாமல் சுபாவமாகப் பதில் சொன்னான் சத்தியமூர்த்தி. மீண்டும் சில கணங்கள் மௌனமாக அவன் முகத்தைப் பார்த்தார் அவர். அப்படிப் பார்த்தபின் சிரித்துக் கொண்டே மேலும் சொன்னார்:

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! நீங்கள் என்னுடைய கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக வேலைப் பார்ப்பதற்கு விண்ணப்பம் போட்டிருக்கிறீர்கள். உங்களிடம் நான் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு 'இண்டர்வியூ' செய்வது முறையில்லை. இனிமேல் எல்லாம் தமிழிலேயே கேட்கப் போகிறேன்..."

"அதனாலென்ன சார்? எந்த மொழியில் பேசினாலும் பேச நினைக்குமுன் உருவாகிய மனத்தின் கருத்து ஒன்றாகத்தான் இருக்கும்" என்று சத்தியமூர்த்தி பதில் சொன்னான். அவர் இந்தப் பதிலைக் கேட்டு அயர்ந்து போயிருக்க வேண்டும். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மேலும் அவனைக் கேட்டார் அவர்.

"நீங்கள் இப்போதுதான் பஸ்ஸிலிருந்து இறங்கி நேரே இங்கு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்..."

"ஆமாம்! நேற்று மாலை கடைசி பஸ் தவறி விட்டது."

"இன்று காலை சரியாகப் பத்து மணிக்கு இங்கே இருக்க வேண்டும் என்று இண்டர்வியூ கார்டில் உங்களுக்கு எழுதியிருந்ததாக ஞாபகம்."

"எழுதியிருந்தபடியே வந்துவிடத்தான் முயன்றேன். ஆனால் பஸ் தவறி விட்டது."

"பஸ் தவறவில்லை. பஸ்ஸை நீங்கள் தவறவிட்டு விட்டீர்கள்..."

"....."

இந்த இடத்தில் அவருக்குப் பதில் சொல்வதற்குப் பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காமல் எதிரே தொங்கிய பச்சைக் கிளிகள் பறக்கும் திரையைப் பார்த்தான் சத்தியமூர்த்தி. அந்தத் திரை சற்றே விலகி நிஜமாகவே ஒரு கிளிக்குஞ்சு தெரிந்தது. விலகி மறைந்த திரையில் இருக்கும் பச்சைக்கிளி ஓர் இளம் பெண்ணாகி ஆனந்தம் பூத்துக் கொண்டிருக்கும் தன் அழகிய கண்களால் இங்கே அறைக்குள் நடந்து கொண்டிருப்பதைக் கண்டு கொண்டிருப்பது புரிந்தது. வெள்ளைச் சலவைக்கல் தரையில் ரோஜா நிறம் பளீரென்று தெரியும்படி முன் நகர்த்தி ஊன்றிக் கொண்டிருந்த தன் சிவப்புப் பாதங்களை அந்தப் பச்சைக்கிளியின் கண்கள் இமையாமல் பார்ப்பது கண்டு கூச்சத்தோடு பின்னுக்கு நகர்த்தி வேஷ்டியின் விளிம்பில் அந்தப் பாதங்கள் மறையும்படி செய்து கொண்டான் சத்தியமூர்த்தி. திரை விழுந்தது. பறக்க முடியாத ஓவியக் கிளிகள் மறுபடி தெரிந்தன. உண்மைக் கிளி திரைக்குப் பின் மறைந்தது. அப்பால் பூபதி அவர்களின் பேச்சு மீண்டும் அவனோடு தொடர்ந்தது.

"மன்னிக்க வேண்டும், மிஸ்டர் சத்தியமூர்த்தி! இண்டர்வ்யூக்கள் கல்லூரி அலுவலகத்தில் வைத்தே நடத்தப் படுவது வழக்கம். இன்று என் உடல்நிலை காரணமாக இங்கே மாற்றினேன். அதனால் தான் நீங்கள் நேரம் தவறி வந்ததற்கும் சேர்த்து மன்னிக்கப்படுகிறீர்கள். இந்த இண்டர்வியூ கல்லூரியிலேயே நடந்து நானும் பத்து மணிக்குச் சரியாக அங்கு வந்திருந்தேனானால் பத்தடித்து ஐந்து நிமிஷம் வரை பார்த்துவிட்டு இண்டர்வியூவைக் கான்சல் செய்திருப்பேன்."

"சார்... வந்து..." என்று ஏதோ சொல்வதற்காக நிமிர்ந்தான் சத்தியமூர்த்தி. இப்போதும் திரைக்கு அப்பாலிருந்து ஆனந்தம் பூத்து மலரும் அந்தக் கண்கள் வெளியே தெரியத் தொடங்கியிருந்த அவனுடைய அழகிய நீண்ட நளினமான ரோஜா நிறப் பாதங்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. சத்தியமூர்த்தியின் பார்வை சென்ற பக்கமாகவே பூபதி அவர்களுடைய பார்வையும் திரும்பிச் சென்றது. சத்தியமூர்த்தி தலையைக் குனிந்து கொண்டான்.

"பாரதி! இப்படி வா... அம்மா..." என்று அவர் உட்புறமாகத் திரும்பி மெல்ல அழைப்பதைக் கேட்டுத் தலை நிமிர்ந்த சத்தியமூர்த்தி. மீண்டும் ஆனந்தம் பூக்கும் அந்தக் கண்களைச் சந்தித்தபோது இன்னும் அவை அவனது நீண்ட அழகிய சிவப்புப் பாதங்களையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அத்தியாயம் - 2

பெண்களோடு அகம்பாவத்தையும் சேர்த்துப் பார்ப்பது தண்ணென்று குவித்த மணமிக்க மலர்க் குவியலில் நெருப்புப் பிடிப்பதைப் பார்ப்பது போல் சிறிதும் பொருத்தமில்லாத சேர்க்கையாகத் தோன்றுகிறது.

பரிபூரணமாக இரண்டு கண்களிலும் ஒத்திக் கொண்டு வணங்குவதற்கும் அதிகமான மரியாதை எதையாவது செய்ய முடியுமானால் அதையும் செய்யலாம் போல அத்தனை அழகிய பாதங்கள் தாம் அவை. வெளேரென்று சுத்தமான நகங்களுக்குக் கீழே பவழ மொட்டுப் போல நுனிகளோடு வரிசையாய் முடியும் விரல்கள். அதன் அடிப்புறம் கீழ்ப்பாதத்தில் சிவப்பு நிறம் குன்றிப் பளீரென்று தெரியும் வெண் பளிங்கு நிறம் தொடங்குகிறது. எதிரே அமர்ந்திருந்த சத்தியமூர்த்தியின் பாதங்களைப் பார்த்துக் கொண்டே திரையை நன்றாக விலக்கிவிட்டு வெளியில் வந்த அந்தப் பெண் திரையில் எழுதியிருந்த ஏராளமான கிளிகளுக்கு நடுவேயிருந்து விடுபட்டுத் தனியே பறந்து வந்த ஒற்றைப் பச்சைப் பசுங்கிளியாய்த் தோன்றினாள்.

இன்னும் நன்றாகச் சொல்ல வேண்டுமானால் வைகறையில் ஒலிக்கும் பூபாளத்தைப் போல அந்த நேரத்தின் ஒரே அழகு தானேயாய், அந்த இடத்தின் ஒரே அழகு தானேயாய் அங்கு வந்து நின்றாள் அந்தப் பெண்.

"என் மகள் பாரதி..." என்று சத்தியமூர்த்தியிடம் சொல்லிவிட்டுப் பெண்ணின் பக்கமாய்த் திரும்பி, "இவர் நம்முடைய கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராவதற்காக விண்ணப்பம் போட்டிருக்கிறார். பெயர் சத்தியமூர்த்தி" என்று ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தார் பூபதி. முதற் பார்வையின் முதற்கணத்திலேயே தன்னியல்பாக நேர்ந்து முடிந்துவிடுகிற பல அறிமுகங்கள் பெயரும் ஊரும் சொல்லாமலே கவனிக்க வேண்டுமென்ற கவர்ச்சியிலோ, ஆர்வத்திலோ, தற்செயலாக நேர்ந்தாலும் நடுவில் ஒருவர் இருந்து பேசியோ, புனைந்துரைத்தோ, செய்து வைக்காது இயற்கையாக நேரும் அந்த அறிமுகமே முதன்மையானதாயிருக்கிறது. அவளுடைய கண்கள் தாமாகவே முன்சென்று தரையில் பூத்துக் கிடக்கும் செந்தாமரைகளாய்த் தெரிந்த அந்தப் பாதங்களை முதன் முதலில் தனக்கு அறிமுகம் செய்து கொண்டன. அவனுடைய கண்களோ கிளிகள் பறக்கும் திரையின் நடுவே வண்டுகள் பறப்பது போல் துறுதுறுவென்ற கண்களோடு தெரிந்த அந்தக் கவர்ச்சிகரமான முகத்தை அறிமுகம் செய்து கொண்டன. அதற்குப் பிறகு இரண்டாவதாக யார் இன்னாரென்று நடுவில் வேறொருவர் சொல்லி விளக்கிச் செய்து வைத்த அறிமுகம் தான் செயற்கையாயிருந்தது.

பெண்ணிடம் ஏதோ சொல்லி அவளை உள்ளே அனுப்பிய பின் மறுபடியும் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி இண்டர்வ்யூவைத் தொடர்ந்தார் பூபதி. கண்டிப்பாகப் பேசுவது போல் அவருடைய பேச்சு இருந்தாலும், அவர் அவனுடனே உரையாடும் நேரத்தை வளர்த்துக் கொண்டு போக விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! எங்கோ ஒதுக்குப் புறமாக இருக்கும் இந்த மலைநாட்டு நகரத்தில் ஒரு கல்லூரியை நான் எதற்காக நடத்திக் கொண்டிருக்கிறேன் தெரியுமா? கல்வியை வளர்ப்பதைவிட அதிகமாக ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் நான். என்னுடைய கல்லூரியில் 'இண்டர்வ்யூ'வுக்கு வருகிற முதல் நாளிலேயே தாமதமாக வருகிற ஒருவரைப் பற்றி நான் என்ன அபிப்பிராயம் கொள்ள முடியும்?"

"மன்னிக்க வேண்டும்! என் முயற்சியையும் மீறி நடந்த தவறு இது. நான் வேண்டுமென்றே இப்படித் தாமதமாக வரவில்லை."

பூபதி அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கிச் சிரித்தார். பின்பு அவருடைய கேள்விகள் வேறு விதமாகத் திரும்பின. சத்தியமூர்த்தியின் கல்வித் திறனையும், தகுதிகளையும் அறிந்து கொள்ள முயலும் கேள்விகள் அவரிடமிருந்து ஒவ்வொன்றாகப் பிறந்தன. அவற்றில் சில கேள்விகள் அவனை ஆழம் பார்ப்பவையாகவும் இருந்தன.

"இதோ, என் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாரே, எங்கள் கல்லூரியின் பிரின்ஸிபால் - இவருக்குத் தமிழ் ஆசிரியர்களைப் பற்றி எப்போதும் ஒருவிதமான பயமும் சந்தேகமும் உண்டு" என்று சொல்லிவிட்டுத் தம்முடைய அந்தக் கேள்வி சத்தியமூர்த்தியின் முகத்தில் எந்த உணர்ச்சியைப் பரவ விடுகிறதென்று கவனித்தார் பூபதி.

சத்தியமூர்த்தியின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது. "பயத்துக்கும் சந்தேகத்துக்கும் உரியவர்களாயிருப்பதற்கு அப்படி நாங்கள் என்ன செய்கிறோம்?"

"ஒன்று மாணவர்கள் மனங்களை எல்லாம் முற்றிலும் உங்கள் வசமாக்கிக் கொண்டு நீங்கள் சொல்லியபடி ஆட்டிப் படைக்கிறீர்கள். இரண்டு, பிடிவாதமும் முரட்டுக் குணமும் உள்ளவர்களாயிருக்கிறீர்கள். மூன்று, உங்கள் மொழியைத் தவிர மற்ற மொழிகளை மதிக்க மறுக்கிறீர்கள். உண்டா இல்லையா...?

"மாணவர்களை எங்கள் வசமாக்கிக் கொள்ள முடிவது எங்களது சாமர்த்தியம் தானே தவிரக் குற்றமாகாது. பிடிவாதமும், முரட்டுக்குணமும், மனிதர்களில் பலரிடம் உண்டு. அது எங்களிடம் மட்டுமே இருப்பதாகச் சொல்வதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. ஓர் ஆசிரியனுக்குத் தான் எந்த மொழியைக் கற்பிக்கிறானோ அந்த மொழியின் மேல் மதிப்பு இருப்பது எப்படிக் குற்றமாகும்? ஒரு குறிப்பிட்ட இனத்தாரைப் பற்றி எப்போதோ, எதற்காகவோ ஏற்பட்ட ஓர் அபிப்பிராயத்தை அந்த இனம் மாறி வளர்ந்துவிட்ட பின்பும் நிரந்தர வழக்கமாக்கிக் கொள்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் என் தாய்மொழியை மதித்து வணங்குகிறேன். மற்ற மொழிகளை மதிக்கிறேன்."

தன் முகத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் ஒளிர இந்த வார்த்தைகளைச் சத்தியமூர்த்தி கூறிய போது கல்லூரி முதல்வரும் அதிபர் பூபதியும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து மெல்லச் சிரித்துக் கொண்டார்கள். ஒளி படைத்த கண்களில் உணர்ச்சியின் சாயல்கள் நன்கு தெரியும்படி தான் வாதிடுகிற விஷயம் எதுவோ அதில் சிரத்தையும், கவனமும், அழுத்தமும், கொண்டு சத்தியமூர்த்தி விவாதிக்கும் நயத்தை அந்தரங்கமாகத் தமக்குள் இரசித்துக் கொண்டிருந்தார் பூபதி. இப்படித் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், தெளிவாக விவாதிக்கவும் முடிந்த இளைஞர் பலர் இந்த நாட்டுக்கு இன்று தேவை என்று நினைக்கிறவர் பூபதி. அதனால் தான் சத்தியமூர்த்தியின் பேச்சு அவரைக் கவர்ந்தது. அப்படிக் கவர்ந்தாலும் அந்தக் கவர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடுமையாக இருப்பவர் போல் அவனிடம் மேலும் மேலும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர்.

பேச்சுக்கு நடுவே அவரது மகள் பாரதி ட்ரேயில் தேநீர் கொணர்ந்து மூவருக்கும் அளித்தாள். வளையாடும் அந்தப் பட்டுக்கை தேநீர்க் கோப்பையைப் பீங்கான் தட்டுடன் எடுத்து நீட்டிய போது ஒரு கணம் தனக்கு மிக அருகில் தெரிந்த அந்தத் தோற்றத்தின் அழகைக் கவனித்தான் சத்தியமூர்த்தி.

மகிழ்ச்சி பூத்து மலரும் குறுகுறுப்பான விழிகள். அந்த விழிகளே இதழ்களின் செயலைச் செய்து சிரிக்கும் நயம். இரசம் தளும்பி நிற்க ஈரச்சாயல் தெரியும் சிவப்புத் திராட்சைக் கனி போல் இதழ்கள். அந்த இதழ்களின் செம்மை மினுமினுப்பில் ஒரு மயக்கும் தன்மை. மொத்தத்தில் இருளை அள்ளிப் பூசிக்கொண்டு எதிரே வந்து நிற்கும் மின்னலைப் போல் இவள் அந்தக் கருநீலப் புடவையை உடுத்திய கோலத்தில் தோற்றமளித்துக் கொண்டிருந்தாள். கண் முடிகிற கோடி நுனியில் காதோரமாக இமைகளின் பூமயிர் மேல் நோக்கி ஏறி இறங்கி ஒரு சுழிப்புச் சுழித்திருந்த அழகையும், 'இந்த இடம் தான் நீங்கள் மயக்கப்படுகிற இடம்' என்று அந்த இடத்தில் கோடு கீறிக் காட்டினாற் போன்ற புருவங்களின் வனப்பையும் பார்த்த சத்தியமூர்த்தி அந்த அழகை எவ்வளவுக் கெவ்வளவு அருகில் நெருங்கிக் கண்டானோ, அவ்வளவுக்கவ்வளவு தனக்கும், அதற்கும் நடுவில் உள்ள தொலைவை அவனால் உணர முடிந்தது.

ட்ரேயைக் கொண்டு போய் வைத்துவிட்டு மறுபடி அந்த அறைக்குள் வந்து புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் ஒதுங்கி நின்று கொண்டாள் அந்தப் பெண். மூன்று ஆண்பிள்ளைகள் உட்கார்ந்திருக்கிற இடத்தில் உள்ளே நுழைந்தவுடன் நான்காவது நாற்காலியில் தானும் உட்கார்ந்து விடாமல் சற்றே நாணத்தோடு அவள் ஒதுங்கி நின்றது சத்தியமூர்த்திக்கு மிகவும் பிடித்தது. செழிப்பும் பணவசதியும் உள்ள பல வீடுகளில் பெண்கள் ஆண்களாக நடந்து கொள்வதைச் சத்தியமூர்த்தி கவனித்திருக்கிறான்; வெறுத்திருக்கிறான்.

"பணக்கார வீட்டுப் பெண்களிடம், சிறிதும் இல்லாதது நாணம்; அதிகமாக இருப்பது அகம்பாவம். பெண்ணோடு அகம்பாவத்தையும் சேர்த்துப் பார்ப்பது தண்ணென்று குவித்த மணமிக்க மலர்க் குவியலில் நெருப்புப் பிடிப்பதைப் பார்ப்பது போல் பொருத்தமில்லாத சேர்க்கையாகத் தோன்றுகிறது. பெண் என்றால் அமைதி என்று அர்த்தம். இன்றோ அது பெண்ணைத் தவிர எல்லாரிடமும் இருக்கிறது" என்று நண்பர்களிடம் பல சமயங்களில் பேசியிருக்கிறான் அவன். பூபதியின் மகள் பாரதி அவன் சந்தித்த செல்வக்குடும்பத்துப் பெண்களில் முற்றிலும் புதுமையானவளாக இருந்தாள்.

பாரதியைப் பற்றிய அவன் சிந்தனைகளும் கவனமும் கலைந்து போகும்படி பூபதியின் கேள்விகள் மீண்டும் அவனை நோக்கி ஒலித்தன.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்பதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. நீங்கள் படித்துப் பட்டம் பெற்ற கல்லூரி அரசியல் குழப்பங்களுக்கும் மாணவர்களின் அடிதடி வம்புகளுக்கும் கால் நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டில் பெயர் பெற்ற கல்லூரியாயிற்றே! முதல் வகுப்பில் தேறியிருந்தாலும், நிறைய நற்சான்றிதழ்களும், பதக்கங்களும் பரிசுகளும் பெற்றிருந்தாலும் நீங்கள் படித்த கல்லூரியைப் பற்றி நினைக்கும் போது நான் பயப்படுவது நியாயம் தானே?"

"இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட கல்லூரி ஒன்றில் படித்து உருவாகி வளர்ந்ததினால் தான் உங்கள் கல்லூரியைப் போல் ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ள இலட்சியக் கல்லூரி ஒன்றில் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமே எனக்கு உண்டாகியிருக்கிறது. அந்தக் கல்லூரியில் படிப்பைத்தான் நான் கற்றுக் கொண்டேனே ஒழியக் குழப்பங்களையும் அடிதடியையும் தேடிக் கற்றுக் கொள்ளவில்லை."

என்று சத்தியமூர்த்தி தலைநிமிர்ந்து மறுமொழி கூறிய போது எதிரே ஓர் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்த பாரதியின் இதழ்களில் சிரிப்பு இழையோடியது. அவனுடைய மறுமொழியை அவள் இரசித்து மகிழ்கிறாள் என்பதற்கு அந்தச் சிரிப்பு ஓர் அடையாளமாக இருந்தது.

"உங்கள் வார்த்தைகளை நான் அப்படியே நம்புகிறேன் சத்தியமூர்த்தி! ஆனால் நீங்களே உங்களோடு எடுத்துக் கொண்டு வந்திருக்கும் சாட்சியங்கள் என் நம்பிக்கைக்கு நேர்மாறாக இருக்கின்றனவே? கல்லூரி மாணவர் யூனியனின் தலைவராக இரண்டு முறைகள் தொடர்ந்து நீங்களே இருந்திருக்கிறீர்கள். தவிர இதோ இந்தச் 'சர்டிபிகேட்' கல்லூரி நாட்களில் நீங்கள் மேடைப் பேச்சிலும், விவாதம் செய்வதிலும் இணையற்றவர் என்று வேறு சொல்கிறது. இவ்வளவும் உள்ள ஒருவர் அரசியல் குழப்பங்களிலிருந்து எப்படித் தப்பியிருக்க முடியும் என்று தான் சந்தேகப்படுகிறேன்..."

"சந்தேகப்படுவதற்கு எவ்வளவு உரிமை உங்களுக்கு உண்டோ அவ்வளவு உரிமை அதை மறுப்பதற்கு எனக்கும் உண்டு. ஒவ்வொரு சந்தேகத்துக்கும் அதை மறுப்பவனுடைய தெளிவிலிருந்துதான் ஆயுள் கணிக்கப்படுகிறது. மேடைப் பேச்சும், விவாதத் திறமையும் என் சாமர்த்தியங்கள். அவற்றை நான் படித்த கல்லூரியின் குழப்பங்களுக்கு இடையேயும் நான் தேடி அலைந்திருக்கிறேன் என்பதற்காக நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும்" - இப்போதும் கூடத் தன்னுடைய பதிலின் நயத்தையும் அழுத்தத்தையும் பாராட்டி மகிழ்வது போல் அந்தப் பெண்ணின் கண்களும் இதழ்களும் சிரித்ததைச் சத்தியமூர்த்தி கவனித்தான்.

சத்தியமூர்த்தியின் மறுமொழிகளைக் கேட்கக் கேட்கக் கல்லூரி அதிபர் பூபதிக்கு ஒரு தகுதி வாய்ந்த மனிதனைச் சந்தித்துக் கண்டுபிடித்து விட்டோம் என்று அந்தரங்கமாகப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதை மறைத்துக் கொண்டே அவர் மேலும் வழக்கமான கேள்விகளைக் கேட்கலானார்.

"எம்.ஏ., பி.ஓ.எல். போன்ற பட்டங்களைப் பெறுகிறவர்களை விடப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் ஒரே ஆசிரியரிடம் நிகண்டு முதல் தொல்காப்பியம் வரை பாடம் கேட்டுத் தேர்ந்த தமிழ்ச் சங்கப் பண்டிதர்களும், புலவர்களும், வித்துவான்களும் தமிழை ஆழமாகப் படித்தவர்களாயிருக்கிறார்களே? கல்லூரிப் பாடங்களோடு தமிழையும் சேர்த்துப் படிக்கிறவர்கள் தமிழிலும் தேறுவதில்லை; ஆங்கிலத்திலும் சுமாராயிருக்கிறார்கள். பல்கலைக் கழக விதிகள் மட்டும் கண்டிப்பாயிராத பட்சத்தில் நான் என்ன செய்வேன் தெரியுமா? உங்களை 'இண்டர்வியூ'வுக்கு அழைத்திருக்கும் இதே வேலைக்குப் பழைய முறைப்படி ஆழமாகக் கற்ற ஒரு புலவரை அழைத்து நியமனம் செய்து விடுவேன்."

"இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. அப்படிச் செய்ய இடமிருந்தால் - அப்படித்தான் செய்ய வேண்டுமென்று நீங்கள் கருதினால் எனக்கு இந்த வேலையைத் தர வேண்டாம். ஆனால் நீங்கள் சொல்லியதில் ஒன்றை மட்டும் நான் ஒப்புக் கொள்ள முடியாது. பெரும்பாலோரை வைத்து தீர்மானம் செய்யப்படுகிற முடிவுகளையே நீங்கள் எல்லோரோடும் சார்த்திப் பேச விடமாட்டேன். பெரும்பான்மை முடிவுகள் சிறுபான்மையினரின் தகுதியைப் பாதிக்கும். என்னைப் பொறுத்தவரை கல்லூரிப் பாடங்களுக்கு மேலும் அதிகமான தமிழ் நூல்களையும் ஆங்கில நூல்களையும் தேடிக் கற்று என் படிப்பை நான் ஆழமாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை நன்றாக நிரூபிக்க முடியும்."

சத்தியமூர்த்தி உணர்ச்சி பொங்கப் பொங்கப் பேசியதைக் கேட்டுப் பூபதி மெல்லச் சிரித்தார். "நீ உணர்ச்சி பொங்கப் பொங்கப் பேசும் அழகைக் கேட்பதற்காகவே இப்படி ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டேன்" என்று சொல்வது போலிருந்தது அந்தச் சிரிப்பு. சிரித்துக் கொண்டே தன் மகள் பாரதி நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பி, "அம்மா! அந்தப் புத்தக அலமாரியின் மேல் தட்டில் மேற்குக் கோடியில் ஹட்ஸனின் 'இண்ட்ரொடக்ஷன் - டு - ஸ்டடி ஆஃப் லிட்ரேச்சரும்', ரிச்சர்ட்ஸின் 'லிட்டரரி கிரிடிஸிஸ'மும் இருக்கும். ஸ்டூலைப் போட்டுக் கொண்டு மேலே ஏறி அவைகளை எடு அம்மா..." என்றார் பூபதி.

பாரதி ஸ்டூலை நகர்த்தி, மேலே ஏறி நின்று அலமாரியிலிருந்து புத்தகங்களைத் தேடி எடுப்பதையே ஓர் அழகிய அபிநயம் போல் செய்யத் தொடங்கினாள். நிலவின் கதிர்களை உருக்கிப் படைத்தாற் போன்ற அந்த நளின விரல்கள் புத்தகத்தைத் தேடி எடுக்கும் காட்சியைச் சத்தியமூர்த்தி இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தான். புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்து தந்தையின் முன்பாக மேஜையில் வைத்துவிட்டுப் பழையபடி ஒதுங்கி நின்று கொண்டாள் அந்தப் பெண். புத்தகங்களை வைப்பதற்காக ஒரே ஒரு கணம் தந்தையின் மேஜையருகே வந்த போது மறுபடியும் அவனுடைய அந்தச் சிவந்த பாதங்களைப் பார்க்கும் வாய்ப்பு அவள் கண்களுக்குக் கிடைத்தது. ஹட்ஸனையும், ரிச்சர்ட்ஸையும், தோன்றிய இடத்தில் பிரித்து அந்தப் பக்கங்களில் இருந்தவற்றைக் கொண்டு ஏதோ சில கேள்விகளைச் சத்தியமூர்த்தியிடம் கேட்டார் பூபதி. அவருடைய கேள்விகளுக்குத் தெளிவாகவும், அழகாவும், உடனுக்குடன் பதில் வந்தது சத்தியமூர்த்தியிடமிருந்து. இந்தக் கேள்விகளைத் தனக்கு நேரும் சோதனைகளாகவோ, சிரமங்களாகவோ அவன் கருதவில்லை. தன் திறமையை நிரூபிக்க நேரும் சந்தர்ப்பங்களாக இவற்றை வரவேற்று மகிழ்ச்சியோடு மறுமொழி கூறினான் அவன்.

திருப்தியோடு அந்தப் புத்தகங்களை மூடி வைத்தார் பூபதி. பின்பு அவன் முகத்தை நன்றாக நிமிர்ந்து பார்த்துக் கொண்டே, "நீங்கள் கல்லூரியில் இலக்கிய வகுப்பு நடத்தும் போது, 'வாட் ஈஸ் லிட்டரேச்சர்?' (இலக்கியம் என்பது என்ன?) என்று ஒரு மாணவன் உங்களைக் கேட்பதாக வைத்துக் கொள்ளலாம். அப்போது நீங்கள் என்ன மறுமொழி சொல்லி அதை அவனுக்கு விளக்குவீர்கள்?" என்று அவனுடைய திறமையை இன்னும் பரிசோதிக்க முயலும் குறும்புச் சிரிப்போடு நிமிர்ந்து பார்த்துக் கேட்டார் பூபதி.

"லிட்டரேச்சர் ஈஸ் ஏ ரிகார்ட் ஆஃப் பெஸ்ட் தாட்ஸ்" (இலக்கியம் என்பது சிறந்த எண்ணங்களைப் பதித்து வைத்துக் கொண்டிருப்பது) என்ற எமர்சனின் கருத்தோடு தன் விளக்கத்தைத் தொடங்கிய சத்தியமூர்த்தி அரைமணி நேரம் வெண்கலமணியை அளவாக விட்டுவிட்டு ஒலிப்பது போல் கணீரென்ற குரலில் உணர்ச்சி நெகிழத் தானே அனுபவித்து இரசிக்கும் ஆர்வத்தோடு பேசிய பின்னே ஓய்ந்தான். 'இலக்கியம் இன்னதென்பதை இலக்கியத்தை ஆழ்ந்து கற்பதால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்' என்ற டி.எஸ். எலியட்டின் மேற்கோளுடன் கேட்பவர்களைக் கவர்ந்து மயக்கும் சிறியதொரு சொற்பொழிவாக நிறைந்து முடிந்தது அவன் பேச்சு. பிரின்ஸிபல் ஒன்றும் பேசத் தோன்றாமல் மூக்கில் விரலை வைத்தார். பூபதியின் மனத்தில் அந்தரங்கமான மகிழ்ச்சி அதிகமாயிற்று. சுவரில் சாய்ந்தாற்போல் நின்று கேட்டுக் கொண்டிருந்த பாரதியின் கண்களில் ஆனந்தம் இன்னும் அதிகமாகப் பூக்கத் தொடங்கியிருந்தது. சத்தியமூர்த்தி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு 'இன்னும் ஏதாவது உண்டா?' என்பது போல அவரைப் பார்த்தான்.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! மற்ற இடங்களில் நடக்கும் 'இண்டர்வ்யூ'வுக்கும் இங்கு நடைபெறும் 'இண்டர்வ்யூ'வுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை இதற்குள் நீங்களே தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஏதோ முறையைக் கழிப்பதற்கான ஒரு வழக்கமாகவோ, ஃபார்மாலிடியாகவோ 'இண்டர்வ்யூ'வை நாங்கள் இங்கே நடத்துவதில்லை. நாங்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அவரைப் பலவிதங்களிலும் சோதனை செய்து தெரிந்து கொண்டாலொழியத் தேர்ந்தெடுக்க மாட்டோம். ஆகவே இப்போது உங்களிடம் கேட்கப்படும் எந்தக் கேள்வியையும் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளைக் கேள்வி கேட்பது போல் இப்படியெல்லாம் கேட்கிறேனே யென்றும் நினைத்துக் கொள்ளாதீர்கள்..."

"நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்! எதை வேண்டுமானாலும் கேட்கலாம். கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குத் தயக்கமோ, பயமோ உள்ளவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு முன் வருவதற்கே தகுதியற்றவர்கள். என்னிடம் உள்ள திறமைகளை நானாகவே உங்களிடம் எடுத்துச் சொல்லிக் கொள்ள முடியாது. உங்களுடைய கேள்விகள் என் தகுதிகளை நியாயமாகவும் சுயநலமில்லாமலும் நான் உங்களிடம் வெளியிட்டுக் கொள்வதற்கு நீங்களே எனக்குச் செய்து தரும் வசதிகளாயிருக்கும்போது அவற்றை நான் ஏன் இழக்க வேண்டும்? நன்றாகக் கேளுங்கள். கேட்கலாமோ, கேட்கக் கூடாதோ என்ற தயக்கமின்றி எல்லாவற்றையும் கேளுங்கள்..." என்று சத்தியமூர்த்தியிடமிருந்து பதில் வந்த போது அவனுடைய துணிவைக் கண்டு பூபதி அவர்களும், கல்லூரி முதல்வரும் வியப்படைந்தார்கள்.

சத்தியமூர்த்தியோ தன்னுடைய உண்மை ஒளிரும் அந்தக் கண்களால் அவர்களையும், அவர்கள் மனத்தில் ஓடும் எண்ணங்களையும் அளந்து கொண்டிருந்தான். எப்போதும் வலது காலை முன் வைத்து 'இதோ வாழ்வில் இன்னும் ஓர் அடி முன்னால் நடந்து செல்லப் போகிறேன் நான்' என்பது போல் வலது பாதம் முன்னால் இருக்கும்படி வழக்கமாக உட்காரும் சத்தியமூர்த்தியின் இலட்சணமான கால்களைத் தன் அழகிய கண்களால் அளந்து கொண்டிருந்தாள் பாரதி.

"ஹட்ஸனையும், ரிச்சர்ட்ஸையும் பற்றி மட்டுமே உங்களிடம் கேட்டுப் பயனில்லை சத்தியமூர்த்தி! நீங்கள் இந்தக் கல்லூரிக்குத் தமிழ் விரிவுரையாளராகத் தானே வரப் போகிறீர்கள்? தமிழில் நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டும். சங்க இலக்கியத்திலிருந்து ஏதாவது ஒரு பாட்டுச் சொல்லி விளக்குங்களேன் பார்க்கலாம்."

பூபதியின் இந்த வேண்டுகோளைச் சத்தியமூர்த்தி ஆவலோடு வரவேற்று ஒப்புக் கொண்டான். இந்த வேண்டுகோளை அவர் விடுத்திராத பட்சத்தில் தான் அவன் வருந்த நேரிட்டிருக்கும். ஆங்கில நூல்களையும், ஆங்கிலத்தையும் பற்றித் தன்னிடம் கேட்டுவிட்டுத் தமிழ் இலக்கியத்தைப் பற்றியோ, தமிழைப் பற்றியோ தன்னிடம் அவர் ஒன்றும் கேட்காமல் விட்டிருந்தால் தான் அவன் மிகவும் ஏமாறியிருப்பான். குறுந்தொகை என்னும் சங்கத்தொகை நூலிலிருந்து அழகிய பாடல் ஒன்றைக் கூறி அதன் பொருளை விளக்கி விவரித்தான் சத்தியமூர்த்தி.

"யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே?"

"முன்பின் பழக்கமில்லாத அழகிய இளைஞன் ஒருவனும் எழிலரசியாகிய பெண்ணொருத்தியும் ஒரு மலைச் சாரலில் சந்தித்து மனம் ஒன்றுபடுகிறார்கள். அவன் அப்படியே தனக்கு முன்னால் தன்னுடனே தான் காணும்படி எப்போதும் நின்று கொண்டே இருக்க வேண்டும் போல் அவளுக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் அவனோ 'இதோ இன்னும் சிறிது நேரத்தில் நான் பிரிந்து போய் விடுவேன்' என்ற முகக்குறிப்புடனும் காரிய அவசரத்துடனும் அவள் முன் நின்றுக் கொண்டிருக்கிறான். அவன் பிரியப் போகிறான் என்பதை உணர்ந்ததும் அவள் தன் முகத்தில் மனத்தின் துயரம் தெரிய வாடி நிற்கிறாள். அந்த வாட்டத்தைப் பார்த்து அவன் சிரித்துக் கொண்டே அவளிடம் சொல்கிறான்.

"எதற்காக இப்படி மனம் கலங்குகிறாய் பெண்ணே? உன்னைப் பெற்றவள் யாரோ? என்னைப் பெற்றவள் யாரோ? அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்திருக்கக் கூட மாட்டார்கள். என் தந்தையும் உன் தந்தையும் எந்த விதத்திலேனும் நண்பர்களுமில்லை. நீயும் நானும் இன்று இப்போது இங்கே சந்தித்துக் கொண்ட விநாடிக்கு முன்பாக என்றும் எப்போதும் எங்கும் நம்முள் ஒருவரை ஒருவர் சந்தித்து அறிந்து கொண்டதுமில்லை. இருந்தும் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அந்த நிலத்தோடு கலந்து அதன் வண்ணமாகி விடுவது போல் நம்முடைய அன்பு நெஞ்சங்கள் இன்று இப்படிச் சந்தித்த கணத்திலேயே ஒன்று கலந்து விட்டனவே! இது எவ்வளவு பெரிய அதிசயம்?"

"உலகத்தில் தற்செயலாய்ச் சந்தித்து மனம் ஒன்றுபட்ட முதல் காதலர்களிலிருந்து பரம்பரை பரம்பரையாய் அதிசயமாயிருந்து வரும் ஓர் அழகிய தத்துவத்தை இந்தப் பாடலில் வரும் காதலன் பேசுகிறான். உள்ளங்கையையும் புறங்கையையும் போலக் காதலையும் வீரத்தையும் ஒரே பொருளின் இரண்டு பக்கங்களாக வைத்துத் தமிழ்ப் புலவர்கள் ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் காதல் என்ற தத்துவத்தை மிக நுணுக்கமாகச் சொல்கிற பாட்டு இதைப் போல் வேறொன்றும் இருக்க முடியாது. மனத்தோடு மனம் கலந்து சார்ந்ததன் வண்ணமாக மாறுவதற்குச் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீரை உவமையாகக் கூறும் அழகு ஒன்றை மட்டும் வைத்துப் பார்த்தாலும் இந்தப் பாட்டு அட்சர லட்சம் பெறும். 'இப்போது இந்தச் சிறிது காலம் சந்தித்துப் பழகியதிலேயே யுகம் யுகமாக இப்படி வாழ்ந்து விட்டுப் பிரிய முடியாமல் தவிப்பதுபோல் நாம் தவிக்கிறோமே? இது என்ன ஆச்சரியம்?' என்று அவன் அவளிடம் கேட்பது போல் ஒரு தொனி நயமும் இந்தப் பாடலில் பொருந்தியிருக்கிறது. தாயும், தந்தையும் முன் நின்று முயலாமல், கொடுப்பாரும் அடுப்பாரும் இல்லாமல், தம்முள் தாமே, எதிர்ப்பட்டு மனம் ஒன்றுபடுகிற தெய்வீகக் காதலில் 'இது எப்படி நாம் இவ்விதம் ஆனோம்?' - என்று இதயம் கலந்த இருவருமே அதிசயப்பட்டு வியந்து கொள்ளும் ஒரு நிலை உண்டு தான். அந்த நிலையை இந்தப் பாடல் சித்திரித்திரிக்கிற விதம் ஈடு இணையற்றது. அந்தப் பாடலில் அவ்வளவு அழகும் நுணுக்கமும் பொருந்திய ஓர் உவமையைச் சொல்லிய திறமையால் இதைப் பாடியவருடைய இயற்பெயர் மறைந்து 'செம்புலப் பெயல் நீரார்' - என்றே அவருக்குப் பெயர் ஏற்பட்டு நிலைத்துவிட்டது."

சத்தியமூர்த்தி இந்தக் குறுந்தொகைப் பாடலை விளக்கி விவரித்த போது பூபதி மனநிறைவோடு புன்முறுவல் பூத்தார். பின்பு பிரின்ஸிபல் உட்கார்ந்திருந்த பக்கமாகத் திரும்பி அவர் முகத்தைப் பார்த்தார். அந்த முகத்தில் அப்போது எந்த விதமான அதிருப்தியும் இல்லை என்பதைப் பூபதி அவர்கள் புரிந்து கொள்ள முடிந்தது. பூபதியும் கல்லூரி முதல்வரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் குறிப்பினால் பேசிக் கொண்டிருந்த அந்தச் சில கணங்களில் சத்தியமூர்த்தி எதிர்ப்புறம் நின்று கொண்டிருந்த பாரதியைப் பார்த்தான். அவளும் அப்போது அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு சிறிது நேரம் கழித்து உள்ளே போய் அவுன்ஸ் கிளாஸில் ஏதோ மருந்துடன் தந்தைக்கு அருகில் வந்து, "அப்பா! மருந்து சாப்பிடுகிற நேரமாயிற்று" என்று கையில் கொண்டு வந்திருந்த மருந்தைத் தந்தைக்கு முன் மேஜையில் வைத்தாள் அந்தப் பெண்.

அவுன்ஸ் கிளாஸை எடுத்து மருந்தைக் குடித்து விட்டு அந்த மருந்தின் சுவை விளைவித்த உணர்ச்சிகளினால் முகத்தைச் சிலிர்த்துக் கொண்டு கண்களில் நீரரும்பிடச் சில கணங்கள் மோட்டு வளைவை வெறித்துப் பார்த்தார் பூபதி.

ஒரு கனைப்புக் கனைத்துத் தொண்டையைச் சரிசெய்து கொண்டு மறுபடியும் அவர் சத்தியமூர்த்தியிடம் பேசத் தொடங்கியபோது, சுவர்க் கடிகாரத்தில் பன்னிரண்டு மணி அடித்தது. அந்த மணியோசையைக் கேட்டுத் தம் மணிக்கட்டிலிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டுப் பூபதியின் முகத்தையும் பார்த்தார் கல்லூரி முதல்வர். பூபதியும் அந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டவர் போல், "ஓ! உங்களுக்கு நேரமாகி விட்டதல்லவா? நீங்கள் புறப்படலாம். இதோ இவருடைய விண்ணப்பம். இதைக் கொண்டு போய் மேலே ஆக வேண்டியதைச் செய்யுங்கள். நான் இவரோடு இன்னும் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் அனுப்புகிறேன்" என்று சொல்லிக் கொண்டே அந்த விண்ணப்பத்தின் பின்பக்கமாக ஏதோ குறிப்பு எழுதி அதை முதல்வரிடம் கொடுத்தார் பூபதி. பிரின்ஸிபல் அதைக் கையில் வாங்கிக் கொண்டு அவரிடமும் சத்தியமூர்த்தியிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

பிரின்ஸிபல் புறப்பட்டுப் போன சிறிது நேரத்திற்கெல்லாம் பூபதியின் மகள் பாரதியும் வீட்டின் உட்புறமாகச் சென்றுவிட்டாள். முன் பக்கத்து அறையில் சத்தியமூர்த்தியும், பூபதியும் தனியாக இருந்தார்கள். ஏதோ டெலிபோன் வந்தது. பூபதி பத்து நிமிடங்கள் டெலிபோனில் பேசிவிட்டு நாற்காலியிலிருந்து எழுந்தார்.

"மன்னியுங்கள். உடல்நலம் மிகவும் கெட்டுப் போயிருப்பதால் எனக்கு அதிகத் தளர்ச்சியாக இருக்கிறது. இப்படிச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டே நான் உங்களோடு பேசலாமல்லவா?" என்று ஈஸி சேரில் சாய்ந்து கொண்டார் அவர்.

"நீங்கள் மல்லிகைப் பந்தலில் எங்கே தங்கியிருக்கிறீர்கள் மிஸ்டர் சத்தியமூர்த்தி?"

"எங்கும் தங்கவில்லை சார்! பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நேரே இங்கே தான் வருகிறேன். 'இண்டர்வியூ' முடிந்ததும் மாலையில் ஊருக்குப் புறப்படுவதாக இருக்கிறேன்."

"இந்த ஊருக்கு வருகிறவர்கள், இதன் இயற்கை அழகையும், சூழ்நிலைகளையும் பார்த்தபின் உடனே திரும்பிச் செல்ல நினைக்கலாமா?"

"நான் தான் இங்கேயே வந்துவிடப் போகிறேனே?"

"நீங்கள் வரவேண்டுமென்று இன்னும் அதிகாரப் பூர்வமாக நாங்கள் தெரிவிக்கவில்லையே?" என்று கேட்டு விட்டுச் சிரித்தார் அவர். சிறிது நேரம் அவர்கள் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது. தாம் அடுத்தாற் போல் அவனைக் கேட்க விரும்பிய கேள்வியை அவ்வளவு நேரம் இடைவெளி கொடுத்த பின் கேட்பது தான் நியாயமென்று கருதியவர் போல் நிதானமாகக் கேட்டார் பூபதி.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று நினைக்கிறேன். நான் நினைப்பது சரி தானே?"

"இன்னும் இல்லை" என்று சுருக்கமாகப் பதில் சொன்னான் சத்தியமூர்த்தி. கேள்வி விடாமல் தொடர்ந்தது.

"என்ன காரணமோ?"

"காரணம் எத்தனையோ இருக்கலாம். அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் முக்கியமான ஒரு காரணத்தை மட்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன். எனக்கு இரண்டு தங்கைகள் திருமணமாக வேண்டிய வயதில் இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் முதலில் திருமணமாக வேண்டுமென்பது தான் எங்கள் குடும்பத்துக்கு இப்போது பெரிய பிரச்சினை."

"உங்கள் பொறுப்புணர்ச்சியைப் பாராட்டுகிறேன். ஆனால் அதே சமயத்தில் நான் உங்களுக்குக் கூறவேண்டிய அறிவுரை ஒன்றும் உண்டு."

"என்ன?"

"நான் சொல்லுகிறேன். அப்படிச் சொல்வதை உங்கள் மேல் அவநம்பிக்கைப்பட்டுச் சொல்வதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். பொதுவாக வயதில் மூத்தவன் என்ற உரிமையோடு வயதில் இளைஞராகிய உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் நான்."

"..."

"இது ஒரு கோ-எஜுகேஷன் கல்லூரி. இங்கு ஆண்களோடு பெண்களும் சேர்ந்து படிக்கிறார்கள். இந்தக் கல்லூரிக்கு இன்று வரை பேராசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் வந்திருக்கிற அத்தனை பேரிலும் நீங்கள் ஒருவர் தான் மிக இளம்பருவத்தினராக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது."

"..."

"இத்தனை ஆண்டுகளாகப் பல்கலைக்கழகத்தாரிடம் வாங்கியிருக்கும் பெரிய பெரிய கிராண்ட் தொகைகளுக்காகவோ முதல் தரக் கல்லூரி என்ற பெயருக்காகவோ நான் பெருமைப்படவில்லை. 'ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ள தரமான கல்லூரி' என்று இந்த மாகாணத்துக்கு அப்பால் வெளி மாகாணங்களில் உள்ளவர்களும் போற்றும்படி ஒரு நல்ல பெயரை இந்தக் கல்லூரி எடுத்திருக்கிறது என்பதற்காகவே நான் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்."

"அந்த நல்ல பெயர் என்னால் ஒரு சிறிதும் கெட்டு விடாது சார்."

"இத்தகைய கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடம் நெருப்புக் காய்வது போல் அதிகம் விலகிவிடாமலும், அதிகம் நெருங்கிவிடாமலும் பழக வேண்டும்."

"புரிகிறது சார்..."

"மனம் விட்டு உண்மையைச் சொல்கிறேன், மிஸ்டர் சத்தியமூர்த்தி! உங்களைப் பல விதங்களில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சிறிது நாழிகைப் பேச்சிலேயே என்னை நீங்கள் அதிகமாகக் கவர்ந்து விட்டீர்கள். உங்களைப் போல் இதை ஓர் இலட்சியமாக நினைத்து இந்தப் பணிக்கு வருகிறவர்கள் தான் நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்கிப் பல்கலைக் கழகத்தின் படிகளில் இறங்கிச் செல்லுமாறு அனுப்ப முடியும். ஆனால்?"

- என்று மீண்டும் அவர் எதையோ சொல்லத் தயங்கி நிறுத்திய போது சத்தியமூர்த்தி எவ்வளவோ நிதானமாயிருந்தும் சற்றே பொறுமையிழந்து விட்டான்.

"என் வயதும் இளமையும் எனக்கு ஒரு தகுதிக் குறை என்று நீங்கள் நினைப்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை சார்! இளைஞர்களாயிருக்கிற அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்று நினைக்கும் மனப்பான்மையை வயது மூத்தவர்கள் இனியாவது இந்தத் தேசத்தில் விட்டு விட வேண்டும். வயது மூத்தவர்களில் ஒழுக்கம் தவறுகிறவர்களும், வ்ரன் முறையின்றி வாழ்கின்றவர்களும் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க ஆரம்பித்தால் இளைஞர்களை விட அவர்கள் தொகைதான் அதிகமாக இருக்கும்" - என்று சத்தியமூர்த்தி அவரிடம் சிறிது உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டபடியே திரை ஓரமாக வந்த பாரதி, 'வெண்ணெய் திரண்டு வருகிற சமயத்தில், தாழியை உடைக்கிறார் போல் அப்பாவின் மனத்தில் நல்ல அபிப்பிராயத்தை வளர்த்துக் கொண்டு விட்டபின் இப்படி இவர் நிதானமிழந்து பேசாமலிருக்கக் கூடாதோ?' என்று தனக்குள் எண்ணித் தயங்கி நின்றாள். திரை மறைவில் இருந்தபடியே தலையை நீட்டி அப்பாவின் முகம் இந்தப் பேச்சைக் கேட்ட பின்பு எப்படி இருக்கிறது என்பதைக் கவனித்த போதும் அது நிச்சயமாகச் சரியாயில்லை என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.

அத்தியாயம் - 3

ஏதாவது ஒன்றில் அளவு மீறி ஆசைப்படுகிற எல்லாரும் அந்த ஒன்றைத் தவிர மற்றவற்றில் உள்ள சாத்திய அசாத்தியங்களைச் சிந்திக்க மறந்து விடுகிறார்கள். அதற்காகச் சில சமயங்களில் அவர்களை நாம் மன்னிக்கவும் வேண்டியிருக்கிறது.

சில விநாடிகள் தன் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதற்குக் கூசினாற் போல் பூபதி அவர்கள் கீழே குனிந்து சாய்வு நாற்காலியிலிருந்தே கைக்கு எட்டும்படியாக மேஜை மேல் இருந்த காகிதக் கட்டு ஒன்றை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்ததைச் சத்தியமூர்த்தியும் கவனித்தான். 'ஒழுக்கம் குன்றியும், வரன்முறை இன்றியும் தவறு செய்யும் இளைஞர்களின் தொகையைக் காட்டிலும் அதே விதமான தவறுகளைச் செய்யும் வயதானவர்களின் தொகைதான் அதிகமாயிருக்கும் போல் தோன்றுகிறது' என்று சற்று முன்பு தான் துணிவாகக் கூறிய உண்மை எந்த விதத்தில் அவருடைய மனத்தைப் புண்படுத்தியிருக்க முடியும் என்று சிந்திக்கத் தொடங்கினான் அவன்.

போலி நாகரிகத்துக்காகவோ, எதிரே இருந்து கேட்பவர்களின் மனத்தைப் புண்படுத்திவிடுமே என்பதற்காகவோ நாவின் நுனியில் வந்து நிற்கும் எந்த உண்மையையும் இரண்டு உதடுகளுக்குள்ளேயும் அடக்கி வைத்துப் பழக்கமில்லை அவனுக்கு.

பொது வாழ்க்கையில் அதிக நன்மையைத் தரமுடியாத இந்தச் சுபாவத்தினால் பலருடைய நட்பையும் உதவிகளையும் அவன் இழந்திருக்கிறான். குறைவோ, நிறைவோ, தாழ்வோ, ஏற்றமோ, மனிதர்களோடு ஒத்துப் போவதற்கான குணம் அவனிடம் இல்லை என்று மாணவப் பருவத்துச் சக நண்பர்கள் பலர் எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவனிடம் நேருக்கு நேர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். அவனைக் கடிந்து கொண்டுமிருக்கிறார்கள்.

"ஒத்துப் போவதும் மற்றவர்களைத் தேவைக்கு அதிகமாக மன்னிப்பதும், பிறருடைய பலவீனங்களுக்கு அநுசரணையாக நம்முடைய பலங்களையும், திறமைகளையும் ஒடுக்கிக் கொள்வதும், சமூகத்தில் ஒரே விதமான மனிதர்கள் தொடர்ந்து செழிப்பாய் வாழவும், கொழுத்துத் திரியவும் துணை செய்யுமே அல்லாமல் எல்லாருடைய நன்மைகளையும் பாராட்டுவதற்குத் துணை செய்யாது" என்று இந்தச் சுபாவத்துக்காகத் தன்னைக் கடிந்து கொள்ள வரும் நண்பர்களிடமெல்லாம் எடுத்தெறிந்து பதில் சொல்லியிருக்கிறான் சத்தியமூர்த்தி. மாணவ பருவத்திலிருந்தே படிப்படியாய் வளர்ந்திருந்த அஞ்சாமையும் துணிவும் எதிரே இருப்பவரைப் பாதிக்கும் என்பதற்காகவோ, எதிரே இருப்பவருக்குத் தன் மேல் கோபம் வரும் என்பதற்காகவோ எதையும் பேசத் தயங்காத நாவன்மையை அவனுக்களித்திருந்தன. இதன் காரணமாகப் பலவீனங்களும், குறைபாடுகளும் உள்ள பலருக்கு நடுவே தான் இருப்பதே அவர்களுக்கு ஒரு பயமுறுத்தலாய், தன்னைப் பார்ப்பதே அவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு சட்டமாய் அவன் தோன்றியிருக்கிறான்.

இப்போதும் ஏதோ ஒரு விதத்தில் தனக்கு எதிரே இருக்கிற பூபதி அவர்களைத் தன்னுடைய வார்த்தைகள் பாதித்திருகின்றன என்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. பெருந்தன்மையும் கொடைப் பண்பும் உள்ளவராகப் பலரால் புகழப்படும் இந்தக் கோடீஸ்வரரிடம் இப்படிப் பேசியிருக்க வேண்டாமோ என்று அவனுக்குச் சிறிது தயக்கமும் ஏற்பட்டது. அதே சமயத்தில் யாரையும் குறிப்பிட்டோ எவரோடும் சார்த்தியோ சொல்லாமல் தான் பொதுவாகச் சொல்லிய ஓர் உண்மையைக் கேட்டு அவர் ஏன் அப்படிக் கூசித் தலைகுனிய வேண்டும் என்ற நுணுக்கமான சந்தேகமும் அவனுள் ஏற்பட்டது. அவர் இன்னும் தலை நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்கவில்லை. அந்த மௌனம் அவன் மனத்தை ஓரளவிற்கு வருத்தவும் செய்தது. அவசியம் இல்லாததாகவும் விரும்பத்தகாததாகவும் நிலவத் தொடங்கியிருந்த அந்த மௌனம் கலைவதற்குத் துணை செய்தாள் அவருடைய மகள் பாரதி. அந்தச் சூழ்நிலையில் அங்கு நுழைவதற்குத் தயங்கியவாறே நுழைபவள் போல் மெல்ல நுழைந்து தந்தையின் சாய்வு நாற்காலியருகே சென்று, "சாப்பாட்டுக்கு இலை போட்டாயிற்று" என்றாள் அவள். தாம் மூழ்கியிருந்த உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டுத் தலைநிமிர்ந்த பூபதி எதுவும் நடக்காதது போல் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி, "நீங்களும் இங்கேயே சாப்பிடலாம் அல்லவா?" என்று சுபாவமாகக் கேட்டார். தந்தையே அவரையும் அழைக்க வேண்டும் என்றும், ஆசைப்பட்டு அழைப்பார் என்றும் எதிர்பார்த்துக் கொண்டு வந்திருந்த பாரதி தான் எதிர்பார்த்தபடியே அது நடந்ததைக் கண்டு மகிழும் மனத்தின் ஆவலோடு சத்தியமூர்த்தியின் முகத்தைப் பார்த்தாள். அவளுடைய அந்த ஆவல் வீண் போகவில்லை. எதிர்பாராத அந்த அழைப்புக்கு என்ன மறுமொழி கூறுவதென்று ஓரிரு கணங்கள் தயங்கியபின் சம்மதத்துக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் சத்தியமூர்த்தி.

அவன் சாப்பிட வருவதற்குச் சம்மதித்த அந்த உற்சாகத்தைத் தனிமையில் கொண்டாட விரும்பியவளைப் போல் அவர்களை முந்திக் கொண்டு உள்ளே சென்றாள் அவள். போகும்போது அவளுடைய இதழ்கள் மனத்துக்குப் பிடித்தமான பாடலின் ஆரம்பம் ஒன்றை இனிய குரலில் முணுமுணுத்துக் கொண்டே செல்வதையும் சத்தியமூர்த்தி கேட்டான். அவளைச் சந்தித்த சில நாழிகை நேரத்திலேயே அவளுடைய இதயத்தின் குரலை அவன் கேட்க முடிந்திருந்தது. இப்போதோ அவளுடைய நாவில் ஒலிக்கும் குரல் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்பதையும் அவன் கேட்டுத் தெரிந்து கொண்டு விட்டான்.

சாப்பிடுவதற்காக அவனை வீட்டுக்குள்ளே அழைத்துக் கொண்டு சென்ற போது பூபதி அவனிடம் உள்ளடங்கிய தொனியில் மெல்ல இதைச் சொன்னார்: "உங்களிடம் இளமைக்கே உரிய துடிதுடிப்பும் உணர்ச்சி வசப்படும் இயல்பும் அதிகமாக இருக்கின்றன. விநயமாக நடந்து கொள்ளும் தன்மை குறைவாயிருக்கிறது. உங்களிடம் நான் காணும் படிப்பின் ஆழத்தையும், புத்தியின் கூர்மையையும் எடுத்தெறிந்து பேசிவிடுகிற இந்த இளமைக்குணம் பாழாக்கி விடும். நீங்கள் உங்களைக் காட்டிலும் வயது மூத்தவர்களிடம் இன்னும் நிதானமாகவும், விநயமாகவும் பேசுவதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும்."

"..."

இதற்குச் சத்தியமூர்த்தி பதில் ஒன்றும் சொல்லவில்லை. மௌனமாக அவரோடு உள்ளே நடந்து சென்று கொண்டிருந்தான். பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து அவர்,

"கல்வி வெறும் மலரைப் போன்றது. விநயமும் பணிவும்தான் அதை மணக்கச் செய்கின்றன. இதை நீங்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது மிஸ்டர் சத்தியமூர்த்தி."

'தவறான முடிவுகளையும் பொய்யான சித்தாந்தங்களளயும் மறுக்கத் துணியாமல் வாயை மூடிக் கொண்டு ஊமையாக இருந்துவிடுவதுதான் விநயமென்று நீங்கள் நினைப்பதாயிருந்தால் அப்புறம் நான் என்ன சொல்ல முடியும்?' என்று கேட்டுவிடுவதற்குச் சொற்கள் நாவின் நுனியில் துடித்துக் கொண்டிருந்தும், பூபதி அவர்களின் மனம் எதனாலோ பொறுமையிழந்து போயிருப்பதைப் புரிந்து கொண்டு சத்தியமூர்த்தி அவரிடம் ஒன்றும் பேசாமலிருந்து விட்டான். ஏதேதோ பேசியபடியே அவனை உணவுக் கூடத்துக்கு அழைத்துப் போயிருந்தார் பூபதி.

உள்ளே நடந்து செல்லச் செல்ல இடமும் அறைகளும் கூடங்களும் முடிவற்று வளர்ந்து கொண்டேயிருப்பது போல் பிரமை தட்டுமளவுக்குப் பெரிதாயிருந்தது அந்த வீடு. உணவுக் கூடத்துச் சுவர்களில் கொத்துக் கொத்தாகப் பழங்களையும் மலர்களையும் வரைந்த மேலை நாட்டு வண்ண ஓவியங்கள் வரிசை வரிசையாக மாட்டப் பெற்றிருந்தன. மென்மையான இளநீல வண்ணம் பூசப்பெற்றுச் சுவர்கள் கண்ணாடிப் போல் சுத்தமாகவும் பளீரென்றும் இருந்தன. நடுவாக வெளேரென்று தூய விரிப்புடன் நீண்டு கிடந்த சாப்பாட்டு மேஜையில் அலங்காரமான கண்ணாடிக் குடுவைகளில் மலர்க் கொத்துக்கள் சொருகப் பெற்றிருந்தன. ஆனால், மொத்தத்தில் அத்தனை அழகும் அத்தனை ஆடம்பரமும் அவற்றுக்குச் சிறிதும் பொருத்தமில்லாததோர் மாபெரும் அமைதியில் மூழ்கிக் கிடந்தன.

அவ்வளவு பெரிய உணவுக்கூடத்தில் ஓர் ஓரமாகத் தரையில் மூன்றே மூன்று மனைப் பலகைகளை இட்டு இலை போட்டிருந்ததைக் காண என்னவோ போலிருந்தது. சத்தியமூர்த்தியும் பூபதியும் மனையில் உட்கார்ந்து கொண்டார்கள்.

சமையற்காரரோடு சேர்ந்து அந்தப் பெண்ணும் பரிமாறினாள்!

"நீ எதற்காகச் சிரமப்படுகிறாய், அம்மா? நீயும் உட்கார்ந்து கொள்ளேன்" என்றார் பூபதி. அவள் அதைக் கேட்கவில்லை. உற்சாக மிகுதி சிறிதும் குறையாமல் வண்டு போல் பறந்து பரிமாறினாள் அந்தப் பெண். குளிர் பிரதேசமாகையினால் விழுதாக உறைந்து கிடந்த நெய் வெள்ளி ஸ்பூனிலிருந்து இலையில் விழாமல் போகவே அவள் ஓங்கி உதறியபோது நெய்யோடு ஸ்பூனும் சேர்ந்து சத்தியமூர்த்தியின் இலையில் விழுந்து வைத்தது.

"நன்றாக இருக்கிறதம்மா நீ பரிமாறுகிற அழகு! இவரை நெய்யை மட்டும் சாப்பிடச் சொல்கிறாயா? ஸ்பூனையும் சேர்த்து விழுங்கச் சொல்கிறாயா?" என்று சொல்லிச் சிரித்தார் பூபதி.

"மன்னியுங்கள்! நெய் இளகவில்லை" என்று சொல்லிவிட்டு வேறு ஸ்பூன் எடுத்து வருவதற்காக அவள் உள்ளே சென்ற போது நெய் இளகாததற்காக வருத்தப்படுகிறவளுடைய மனம் தனக்காக இளகியிருப்பதைப் புரிந்து கொண்டு அந்தரங்கமாக மகிழ்ந்தான் சத்தியமூர்த்தி. நெய் விழுது இலையில் விழுவதறகாக ஸ்பூனை ஓங்கியபோது, அப்படி ஓங்கிய கையில் கலீரென்று குலுங்கி ஓய்ந்த வளையல்களின் ஒலி இன்னும் அவன் செவிகளில் இனியதோர் பண்ணாக இசைத்துக் கொண்டிருந்தது. உடல்நலக் குறைவினால் பூபதி சரியாகச் சாப்பிடவேயில்லை. இலையில் உட்கார்ந்ததற்காக ஏதோ சாப்பிட்டோம் என்று பெயர் செய்து முறையைக் கழித்தார். ஆனாலும் சத்தியமூர்த்தி சாப்பிட்டு முடிகிற வரையில் அவனோடு உடன் அமர்ந்திருந்தார் அவர்.

சாப்பாட்டுக்குப் பின்பும் பூபதி அவர்களோடு முன்பக்கத்து அறைக்குள் வந்து சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. மலைப் பிரதேசமாகையால் திடீரென்று அந்த நடுப்பகல் வேளையிலும் மழை தூறத் தொடங்கியிருந்தது. நீலமும் கருமையும் கலந்து கண்களைக் கவர்ந்து மயக்கும் அந்த மலைச் சிகரங்களில் மேகம் குவியல் குவியலாகச் சரிந்து தொங்கும் காட்சியை அறையின் பலகணி வழியாகப் பார்த்தான் சத்தியமூர்த்தி. இனிமேல் தான் அந்த அழகிய ஊருக்கு வந்துவிடப் போகிறோம் என்ற நம்பிக்கையே அப்போது அவனுக்குப் பெருமையளிப்பதாக இருந்தது.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! நீங்கள் கல்லூரிக்குப் போய்ப் பிரின்ஸிபலைப் பார்த்து விடைபெற்றுக் கொண்டபின் ஊருக்குப் புறப்படலாம். பிரின்ஸிபல் உங்களுக்கு எல்லா விவரமும் சொல்வார்" என்று சொல்லிக் கொண்டே வந்த பூபதி சிறிது தயங்கிய பின், "மழையாக இருக்கிறதே, ஐந்து நிமிஷம் பொறுத்துப் போகலாம். நான் உங்களைக் கொண்டு போய்விட ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறியபடி உள் பக்கமாகத் திரும்பினார். அவருடைய மகள் பாரதி தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு தந்தையிடம் கொடுப்பதற்காக நீலமும் சிகப்புமாக ஏதோ மாத்திரைகள் அடங்கிய மருந்துப் பாட்டில்களோடு அப்போதுதான் அந்த அறைக்குள் வந்து கொண்டிருந்தாள்.

"டிரைவர் யாராவது இருக்கிறானா பார் அம்மா" என்று மகளை நோக்கிக் கூறினார் அவர்.

கையோடு கொண்டு வந்திருந்த மருந்துப் பாட்டில்களை மேஜையின் மேல் வைத்துவிட்டு, "இதோ பார்க்கிறேன் அப்பா!" என்று விரைவாக முன் வராந்தாவுக்குச் சென்றாள் அவள்.

சிறிது நேரம் கழித்து, "டிரைவர் யாரையும் காணவில்லை அப்பா!" என்ற பதிலோடு வந்து தயங்கி நின்றாள் அந்தப் பெண். இதற்குள் மழை பேரோசையிட்டு வலுத்திருந்தது. "மழையாயிருக்கிறது. இவரைக் கல்லூரியில் கொண்டு போய் விட்டுவிட்டு வரவேண்டும்" என்று பேச்சைத் தயக்கத்தோடு இழுத்து நிறுத்தினார் பூபதி.

தனக்காக அவர்கள் சிரமப்படுவதை விரும்பாத சத்தியமூர்த்தி, "பரவாயில்லை! ஒரு குடையிருந்தால் போதும், நான் போய்க் கொள்வேன்" என்றான்.

"நானே கொண்டு போய் விட்டுவிட்டு வருகிறேனே..." என்ற வார்த்தைகள் பாரதியின் உதடு வரை வந்து வெளியே ஒலிக்கத் தயங்கிக் கொண்டிருந்தன. அந்தத் தயக்கத்தோடு தந்தையின் முகத்தைப் பார்த்தாள் அவள். தந்தையாக முந்திக் கொண்டு அந்தக் கட்டளையைத் தனக்கு இடமாட்டாரா என்று தவித்தது அவள் மனம். தானே அதைச் சொல்லிவிடலாம் போல பரபரப்பாயிருந்தாலும், அப்படிச் சொல்லிவிடாமல் அந்த வேளையில் வெட்கமும், பயமும் கலந்து வந்து அவளைத் தடுத்தன.

'கையில் சூட்கேஸையும் எடுத்துக் கொண்டு இந்த மழையில் இவரால் எப்படிக் குடையில் போக முடியும்?' என்று அந்தரங்கமாகக் கவலைப்பட்டாள் அவள். நாலைந்து நிமிடம் மகளைத் தவிக்கச் செய்தபின் அந்தக் கேள்வியை மெல்ல அவளிடமே கேட்டார் பூபதி.

"நீயே கொண்டு போய் விட்டு விட்டு வருகிறாயா அம்மா?..."

- இந்த வார்த்தைகளைத் தந்தையிடமிருந்து எதிர்பார்த்தே அந்த விநாடி வரை தவித்துத் தவமிருந்தவளைப் போல, "அவசியம் செய்கிறேன் அப்பா" என்று பதில் சொல்லிக் கொண்டே ஷெட்டிலிருந்து காரை வெளியே எடுத்து வர விரைந்தாள் அவள்.

மிக அதிகமாய் நெகிழும் இந்த அன்பை மறுத்துவிட நினைத்தும் அப்படி மறுக்க முடியாமல் வாளாவிருந்தான் சத்தியமூர்த்தி. பூபதி இருக்கையிலிருந்து எழுந்து அவனுக்கு விடை கொடுத்து அனுப்புகிற பாவனையில் அவனோடு முன் பக்கமாகச் சிறிது தொலைவு நடந்து உடன் வந்தார்.

"உங்களைப் போல் ஆர்வம் மிக்க இளைஞர் ஒருவரைச் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பிரின்ஸிபாலிடம் உங்கள் சர்டிபிகேட்டுகளின் ஒரிஜனல்களையெல்லாம் கொடுத்து விட்டுச் செலுங்கள். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திறப்பதற்குள் உங்களுக்கு விவரம் தெரிவிக்கிறோம்" என்று அவர் கூறிய போது அவரிடம் விடைபெற்றுப் புறப்படுவதற்கு அடையாளமாய் நிமிர்ந்து நின்று கை கூப்பினான் சத்தியமூர்த்தி. பதிலுக்கு அவரும் கை கூப்பிப் புன்முறுவல் பூத்தார்.

முன்னாலிருந்து அவனுக்காக இறங்கி வந்து காரின் பின் பக்கத்துக் கதவைத் திறந்து விட்டபின் மறுபடி முன்புறம் போய் ஏறிக் கொண்டாள் பாரதி. நான்கு பக்கமும் மஞ்சு படிந்து மழை மூடியிருந்ததால் சுற்றிலும் ஒன்றுமே தெரியவில்லை. மழை நீர் இறங்காமல் இருப்பதற்காகக் கார் கண்ணாடிகளையெல்லாம் மேலே தூக்கிவிட்டு அடைத்திருந்தது. உள்ளே கம்மென்று மல்லிகைப் பூமணம். அவள் கூந்தலில் சூடிக்கொண்டிருந்த மல்லிகைப் பூக்களின் நறுமணத்தை உணர்ந்து கிறங்கிய போது அந்த ஊருக்கு அப்படிப் பெயர் வைத்த புண்ணியவானை மனமார வாழ்த்தினான் சத்தியமூர்த்தி. கார் போய்க் கொண்டிருக்கும் போதே இடையிடையே, அவள் கைகளில் வளையல்கள் விளையாடிக் குலுங்கி ஒலித்த போது தன் மனம் பேசத் தவிக்கும் வார்த்தைகளை வாய் பேச முடியாமல் போன குறையால் அந்த வளைகள் ஒலிப்பதையே ஒரு பேச்சக்கி அவள் அவனிடம் நளின மொழியில் பேசுவது போல் இருந்தது. எதற்கோ பயப்படுவது போல் இருவரும் அப்படிப் பேசிக் கொள்ளாமலே போவதில் பொறுமை இழந்த சத்தியமூர்த்தி தானாகவே அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

"உங்கள் ஊர் மல்லிகைப் பூக்களின் வாசனையை எப்படிப் புகழ்வதென்றே எனக்குத் தெரியவில்லை. எங்கள் மதுரைக்குப் பக்கத்தில் தெற்கே கப்பலூர் என்று ஒரு செம்மண் பிரதேசம் உண்டு. அந்த ஊர் மல்லிகைப் பூக்கள் தாம் உலகத்திலேயே வாசனை அதிகமான மல்லிகைப் பூக்கள் என்று நான் நேற்று வரை பிடிவாதமாக நினைத்துக் கொண்டிருந்தேன். எந்தவிதமான நீர்வளமும் இல்லாத அந்தச் செம்மண் காட்டை 'ஜாஸ்மின் ஃபீல்ட்ஸ்' (மல்லிகைப் பண்ணை) என்று நான் என் நண்பர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன். என்னுடைய பிடிவாதமான அபிப்பிராயத்தை உங்களூர் மல்லிகைப் பூக்கள் இன்று மாற்றிவிட்டன."

"தனக்குத் தெரிந்ததை மட்டும் முதலாக வைத்தே ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்வதில் எவ்வளவு முரண்பாடு இருக்கிறது பார்த்தீர்களா" - என்று சொல்லிவிட்டுக் கைகளில் வளைகளும் இதழ்களில் நகைப்பும் ஒலிக்க கலீரெனச் சிரித்தாள் அவள்.

"வீட்டுக்குத் திரும்பிச் சென்றதும் ஞாபகமாக இந்த அழகிய வாக்கியத்தை உங்கள் அப்பாவிடம் சொல்லுங்கள். பல விஷயங்களில் அவருடைய அபிப்பிராயங்கள் அவரால் சிந்திக்க முடிந்த எல்லையை மையமாக வைத்தே உருவாகியிருக்கின்றன. அந்த எல்லைக்கு மேல் உண்மை இருந்தாலும் அதைச் சிந்திக்க மறுக்கிறார் அவர்."

"மல்லிகைப் பந்தலுக்கு இந்தப் பூக்களின் மணத்தினால் இருக்கிற புகழைவிடத் தாம் நிறுவியிருக்கிற கல்லூரியின் பெருமையால் வருகிற புகழ் அதிகமாயிருக்க வேண்டும் என்ற ஆசை."

"இருக்க வேண்டியதுதான்! ஆனால் ஏதாவது ஒன்றில் அளவு மீறி ஆசைப்படுகிற எல்லாரும் அந்த ஒன்றைத் தவிர மற்றவற்றில் உள்ள சாத்திய அசாத்தியங்களைச் சிந்திக்க மறந்துவிடுகிறார்கள். அதற்காகச் சில சமயங்களில் அவர்களை நாம் மன்னிக்கவும் வேண்டியிருக்கிறது."

இதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல் சிரித்தாள் அவள். அந்தச் சிரிப்பு அவன் சொல்வதை அப்படியே 'ஒப்புக் கொள்கிறேன்' என்ற பாவனையில் இருந்ததா, 'மறுக்க விரும்பவில்லை' என்ற பாவனையில் இருந்ததா என்பதைப் புரிந்து கொள்ள முயன்றான் சத்தியமூர்த்தி. இதற்குள் கார் கல்லூரிக் காம்பவுண்டிற்குள் நுழைந்துவிட்டது. வகுப்பு அறைகளும் விரிவுரைக் கூடங்களும் விடுதிக் கட்டிடங்களுமாக மலைச்சரிவில் கல்விக்காக ஏற்பட்ட ஒரு தனி நகரம் போலத் தோன்றுகிறது அந்த இடம். ஒரே வரிசையில் ஒரே விதமான பலகணிகளோடு நெடுந்தூரத்துக்கு நீண்டு தெரியும் அந்த இரண்டு மாடிக் கட்டிடங்களை மழையோடு கூடிய மலைகளின் பின்னணியில் பார்ப்பது மிக அழகாயிருந்தது.

"உங்களுக்கு அநாவசியமான சிரமத்தைக் கொடுத்து விட்டேன். இதற்காக என்னை மன்னிக்க வேண்டும். நான் பிரின்ஸிபலைப் பார்த்து விட்டு ஊருக்குப் போய் வருகிறேன். உங்கள் தந்தையிடம் சொல்லுங்கள்" என்று காரிலிருந்து இறங்கிக் கொண்டு அவளிடம் விடை பெறத் தொடங்கினான் சத்தியமூர்த்தி. அவளோ அவனுக்கு அவ்வளவு விரைவில் விடைகொடுத்து அனுப்பிவிட விரும்பாதவளைப் போல், "பிரின்ஸிபலைப் பார்த்துவிட்டு வாருங்கள். இந்த மழையில் இங்கிருந்து பஸ் ஸ்டாண்டிற்கு எப்படிப் போவீர்கள்? உங்களைப் பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய்விட்ட பின்பு நான் போய்க் கொள்வேன்" என்றாள்.

"எனக்காக நீங்கள் காத்திருக்க வேண்டுமென்பதில்லை. மழை நிற்கிறவரை நான் காத்திருந்து அப்புறம் போய்க் கொள்கிறேன்" என்று சத்தியமூர்த்தி மறுத்ததை அவள் ஒப்புக் கொள்ளவில்லை. 'பிடிவாதமாக இருந்துதான் தீருவேன்' என்பது போலிருந்து விட்டாள்.

உள்ளே சென்று பிரின்ஸிபலைச் சந்திப்பதற்காகக் கல்லூரி முகப்பின் படிகளில் அவன் ஏறிக் கொண்டிருந்த போது நனைந்து வெளுத்து வெண் தாமரைகளாய்த் தெரிந்த அவனுடைய அந்தப் பாதங்களின் அடிப்புறங்களைக் காரினுள் இருந்தபடியே இரசித்துக் கொண்டிருந்தாள் பாரதி. என்ன காரணத்தினாலோ அவனைச் சந்தித்த முதல் விநாடியிலிருந்து அந்தப் பாதங்கள் தாம் அவளைக் கவர்ந்து அவள் மனத்தில் வந்து பதிந்து கொண்டு விட்டன. விரைந்து ஓடிப்போய் அந்தப் பாதங்களைக் கண்களில் ஒத்திக் கொள்ள நினைத்து அப்படிச் செய்ய முடியாதென்ற பயத்தினாலும் வெட்கத்தினாலும் மானசீகமாக அந்தத் திருப்தியை அடைந்தாள் அவள். பார்க்கிறவர்களைப் பைத்தியமாக்கும் ஏதோ ஒரு கவர்ச்சி அந்தப் பாதங்களில் எப்படியோ எதனாலோ இருந்ததை அவள் உணர முடிந்தது. பத்தே நிமிஷங்களில் பிரின்ஸிபலிடம் பேசி முடித்துக் கொண்டு திரும்பிவிட்டான் சத்தியமூர்த்தி. அவன் உள்ளேயிருந்து திரும்பவும் படிகளில் இறங்கிக் கீழே வரும்போதும் அவளுடைய கண்கள் அந்தப் பாத கமலங்களை நன்றாகப் பார்க்க முடிந்தது.

"பஸ் ஸ்டாண்டிற்குப் புறப்படுவதற்கு முன்பு ஒரு வேண்டுகோள். மழையாயிருந்தாலும் பரவாயில்லை. காரில் இருந்தபடியே ஒரு 'டிரைவ்' சுற்றி வந்தால் எங்கள் கல்லூரியை நன்றாகப் பார்த்துவிடலாம் நீங்கள்..." என்றாள் அவள். சத்தியமூர்த்தியும் அதற்கு இணங்கினான்.

சுற்றிப் பார்க்கும் போது மிகுந்த அழகுணர்ச்சியோடும் இரசிகத் தன்மையோடும் அந்தக் கட்டிட வேலைகளைப் பூபதி செய்திருக்கிறார் என்பதை அவனால் உணர முடிந்தது. மலைச்சரிவில் மேடும் பள்ளமுமாக மாறி மாறி இருந்த இடங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. எங்கும் மழைநீர் தேங்கிவிடாமல் மழை பெய்த மறுகணமே இயற்கையாகவே நீர் வடிந்து இடங்கள் கண்ணாடியாய்ச் சுத்தமாகி விடுகிறார் போல் எல்லாக் கட்டிடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

"இந்தக் கட்டிடங்களை இவ்வளவு அழகாய்க் கட்டுவதற்காக அப்பா எடுத்துக் கொண்ட சிரத்தைக் கொஞ்ச நஞ்சமில்லை. கல்கத்தாவிலிருந்து ஒரு பெரிய இஞ்சினியர் ஐந்து ஆண்டுகள் இங்கேயே வந்து தங்கியிருந்தார். இது முடிகிறவரை அப்பாவுக்கு இராப்பகல் தூக்கமில்லையாம்."

"அதோ தோட்டத்துக்குள் நீண்டு தெரிகிற மாடிக் கட்டிடம் பெண்கள் தங்கியிருக்கும் விடுதி. இதோ இந்தக் கோடியில் அசோக மரங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கிற பாதை ஒன்று போகிறதே; இதன் வழியாகப் போனால் ஆண்கள் தங்கியிருக்கும் விடுதி. ஹாஸ்டல் ஏற்பாடுகள் எல்லாம் இங்கு மிகவும் கண்டிப்பானவை. அதோ நட்ட நடுவில் பிரம்மாண்டமான வாயிலோடு தெரிகிறதே அதுதான் காலேஜ் லைப்ரரி. அதற்கு அடுத்த கட்டிடம் கல்லூரி விழாக்கள் எல்லாம் நடைபெறுகிற ஆடிட்டோரியம். பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் இந்த மாதம் முதல் தேதி வெளியாகிற புதுப்புத்தகம் இந்த மாதக் கடைசி வாரத்துக்குள் இங்கே நூல் நிலையத்தில் படிக்கக் கிடைக்கும். தமிழிலும், பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் வடமொழியிலுமாக ஏறக்குறைய இரண்டு இலட்சம் முக்கியமான நூல்கள் இந்த நூல் நிலையத்தில் உண்டு!"

"கல்லூரி என்று தான் இதைச் சொல்கிறீர்கள்! ஆனால் ஒரு மாபெரும் பல்கலைக்கழகத்திற்குரிய அத்தனை வசதிகளும் இங்கே இருப்பதாகத் தெரிகிறது" - என்று சத்தியமூர்த்தி மிகவும் சுருக்கமாக ஆனால் வலுவுள்ள நல்ல வார்த்தைகளில் அவளிடம் அதைப் பற்றிப் புகழ்ந்தான்.

"பிற்காலத்தில் இது ஒரு பல்கலைக் கழகமாக வளர வேண்டும் என்று அப்பாவுக்கே அந்தரங்கமான ஓர் ஆசை உண்டு."

"இரண்டு கோடியாக இருக்கிற பாங்குக் கணக்கை மூன்று கோடியாக வளர்ப்பதற்கு என்ன வழி என்று மேலும் மேலும் சொத்துக் குவிக்க ஆசைப்படுகிற பணக்காரர்களைத்தான் பொதுவாழ்வில் அதிகமாகப் பார்க்கிறோம். உங்கள் தந்தை பணக்காரர்களில் ஓர் அபூர்வமான மனிதராயிருக்கிறார்."

இதைக் கேட்டுப் பதில் சொல்லாமல் சிரித்தாள் அவள். அந்தக் கல்லூரியின் பலவகைச் சிறப்புக்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்து முடித்த போது தான் எப்படியும் அங்கு வந்து விடவேண்டுமென்ற எண்ணமே சத்தியமூர்த்தியின் மனத்தில் நிச்சயிக்கப்பட்டது.

பஸ் ஸ்டாண்டில் ஏறுவதற்கு முன் மல்லிகைப் பந்தலைப் பற்றிய எல்லா ஞாபகங்களையும் ஒன்று சேர்த்து எண்ணி அவற்றில் மிக முக்கியமான ஒன்றை மனத்தின் ஆழத்தில் பதித்துக் கொள்ள விரும்பினான் சத்தியமூர்த்தி. தான் உறுதியாய் அங்கே வந்துவிடவேண்டுமென்ற ஞாபகம் தான் முதல் ஞாபகமாக அவனுடைய மனத்தின் ஆழத்தில் பதிந்தது. மகிழ்ச்சி பூத்து மலரும் அந்தப் பெண்ணின் கண்கள் இரண்டாவது ஞாபகமாக வந்து பதிந்தன.

பஸ்ஸில் ஏறிக் கொள்ளுமுன் அந்தப் பெண்ணிடம் நிறையச் சொல்லி விடைபெற்றுக் கொண்டான் அவன். அப்போது அவன் வியப்படையும்படியான ஒரு பேச்சை இருந்தாற்போலிருந்து அவள் அவனிடமே தொடங்கினாள். பேச்சு திடீரென்று ஆரம்பமான காரணத்தால் அவள் தன்னிடம் ஞாபகப்படுத்த விரும்புவது என்னவென்பதைப் புரிந்து கொள்ளவே அவனுக்குச் சில விநாடிகள் ஆயின.

"நீங்கள் கூறிய பாடலில் வந்த உவமையின் அழகு இப்போதுதான் நன்றாகப் புரிகிறது சார்! இதோ இந்தச் செம்மண் பூமியில் மழை பெய்து நீரும் நிலமும் ஒரு நிறமாய்க் கலந்து போயிருப்பதைப் பார்த்தவுடன் இண்டர்வ்யூவின் போது அப்பாவிடம் நீங்கள் கூறிய பாட்டு நினைவு வருகிறது எனக்கு" என்று இளமுறுவலும் நாணமும் கனிந்து கீழ்நோக்கித் தாழும் முகத்தோடு தரையைப் பார்த்தபடி அவள் சொல்லிக் கொண்டே வந்தபோது சத்தியமூர்த்தி இன்னதென்று விவரித்துச் சொல்ல முடியாததொரு களிப்பில் திளைத்தான். ஈரத்தில் சொத சொதவென்றாகியிருந்த அந்த இடத்தின் செம்மண் பூமியைப் பார்த்தான் அவன். பின்பு அர்த்தமில்லாமல் ஆனால் எதிர்பார்க்கப்படுகிற ஓர் அர்த்தத்தோடு அவள் முகத்தையும் பார்த்தான். மழைக்கு நெகிழ்ந்து கனிது போயிருந்த அந்தச் செம்மண் நிலத்தைப் போல் அவள் முகத்திலும் கண்களிலும் இதழ்களிலும் கூட ஏதோ ஓர் உணர்வு கலந்து கனிந்திருந்தது. அப்படிக் கனிந்திருந்த உணர்வு நாணம் ஒன்று மட்டுமில்லை. நாணமில்லாத வேறொன்றும் தனியாயில்லை. அப்படியிருப்பதே அதைப் புரிந்து கொள்ளும் ஒரே சாதனமாவதைத் தவிர அதைப் புரிந்து கொள்ள வேறு கருவி காரணங்களில்லாத உணர்ச்சிப் புதுமையாயிருந்தது அந்த இனிய அனுபவம். அதை அப்படியே மனதில் ஏற்றுக் கொண்டு பஸ்ஸை நோக்கி நடந்தான் அவன். மழைக்காகப் பஸ்ஸுக்குள் பிரயாணிகள் ஏறிச்செல்லும் வழியில் திரையிட்டிருந்தது. சூட்கேஸும் கையுமாகப் பஸ்ஸுக்குள் ஏறிவிட்டவனை முழங்கால் வரை திரை மறைத்துவிட்ட காரணத்தால் அதற்குக் கீழே திருமணத்தில் நலுங்கு இட்டாற்போல் செம்மண் பூசிய கால்களோடு பார்த்தாள் பாரதி. அதைப் பார்த்துவிட்டுப் போவதற்காகத்தான் அவ்வளவு நேரம் காரை நிறுத்திக் காத்துக் கொண்டிருந்தாள் அவள்.

பஸ் புறப்பட்டுப் போய்விட்டது. வீட்டுக்குத் திரும்புவதற்காகக் காரை ஸ்டார்ட் செய்து திரும்பினாள் அந்தப் பெண். எதிரே மேடாயிருந்த செம்மண் சாலை கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏதோ மங்கலானதொரு காரியத்துக்காக ஆரத்தி எடுத்துக் கொட்டிய செந்நிறப் பெருக்காய்த் தெரிந்து கொண்டிருந்தது. எதையோ நினைத்துச் சிரிக்கிறவள் போல் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள் பாரதி. பின்பு காரில் தலைக்கு நேரேயிருந்த சிறிய கண்ணாடியைத் திருப்பி அதில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். ஆரம்ப வரிக்கு மேலே என்னவென்று தெரியாததும் ஆரம்பத்தை மட்டுமே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருந்தால் கூட மகிழ்ச்சி தரக் கூடியதுமான பாட்டு ஒன்று அவள் இதழ்களில் இழைந்து இசைத்து ஒலித்தது. அந்த ஒலி அவள் நாவில் பிறந்து அவள் இதழ்களில் ஒலித்தாலும் அவளே விரும்பி அநுபவிக்கும் இனிமையை அதிலிருந்து தனியே பிரித்து உணர முடிந்தது. காரணம்...? அந்த ஒலிதான் அவளுக்குச் சொந்தம். அதிலிருந்து பிரிந்த இனிமை என்னவோ, இன்னொருவருடைய ஞாபகத்தால் விளைந்ததுதான். ஓர் ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு மழையில் இறங்கி நனையலாம் போலக் குறும்புத்தனமான ஆசை ஒன்றும் அப்போது அவள் மனத்தில் ஊறியது. நனைந்த கோலத்தில் போனால் அப்பாவின் கேள்விக்கு என்ன பதில் கூற முடியும் என்ற பயம் தடுத்திராவிட்டால் சிறிது நேரம் நனைந்து விட்டு அப்புறம் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டிருப்பாள் அவள். தலையில் மல்லிகைப்பூ புதிதாக மணப்பது போலவும் கைகளில் வளைகள் முன்பு ஒலித்த வழக்கமான ஒலியைத் தவிர இன்னும் எதையோ புதிதாகச் சொல்லி ஒலிப்பது போலவும், கண்ணாடி எப்போதும் காண்பிக்கிற முகத்தை மட்டுமே காண்பிக்காமல், அந்த முகத்தோடு இன்னும் எதையோ சேர்த்துக் காண்பிப்பது போலவும் புதியனவும் இனியனவும் ஆகிய பிரமைகள் சிலவற்றை அவள் இன்று அடைந்தாள். வீட்டுக்குள் நுழைந்து காரை ஷெட்டில் விட்டுவிட்டுத் தந்தையின் அறைக்குள் சென்ற போது அவரோடு இன்னொருவர் பேசிக் கொண்டிருக்கிற ஒலி கேட்டுப் பாரதி அறை வாயிலில் வராந்தாவிலேயே தயங்கி நின்றாள். உள்ளேயிருந்து காதில் அரைகுறையாக ஒலித்த உரையாடலைக் கேட்டவள் என்ன காரணத்தாலோ அப்படியே அதிர்ந்து போய் நின்றாள். பத்தே முக்கால் மணிக்கு எந்தப் பதவிக்காகச் சத்தியமூர்த்தி 'இண்டர்வ்யூ' செய்யப்பட்டாரோ அதே வேலைக்காக மூன்று மணிக்கு இன்னொருவரை வரச்சொல்லித் தன் தந்தை இண்டர்வ்யூ செய்வானேன் என்று எண்ணிச் சந்தேகப்பட்டுத் திகைத்தாள் அவள்.

அத்தியாயம் - 4

நாம் தேடிக் கண்டுபிடிக்க முடியாத அல்லது விரும்பாத பல இடங்களில் வாழ்க்கையின் மிக மென்மையான குணங்கள் அமைந்திருந்து அவை பிறருக்குத் தெரியாமலே போய் விடுகிற சமுதாய நஷ்டத்தை என்னென்பது?

தூபகலசத்திலிருந்து சுருள் சுருளாக மேலெழும் இளம் புகை அலைகளைப் போல் மேகங்கள் சரிந்து சேரும் மலைகளினிடையே பஸ்ஸில் பயணம் செய்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. பள்ளத்தாக்கை விட்டு மலைமேல் ஏறிவிட்ட பஸ்ஸிலிருந்து திரையை விலக்கிக் கிழே பின்னால் திரும்பிப் பார்த்தபோது, 'இந்த அரிய பொருளைக் கொண்டு வந்து வைப்பதற்கு ஏற்ற இடம் இதுதான்' என்று அந்த இடத்தைத் தேடிக் கொண்டு வந்து வைத்தாற் போன்று அருமையாய் மல்லிகைப்பந்தல் ஊர் மழையில் மங்கித் தெரிவதைச் சத்தியமூர்த்தி கண்டான். வடிவமாகப் பின் தங்கிவிட்டாலும் எண்ணமாக மனத்தில் நிலைத்து விடுகிற சில அழகிய ஞாபகங்களைப் போல் மல்லிகைப் பந்தல் என்ற அழகு சத்தியமூர்த்தியின் கண்களிலிருந்து மறைந்து கருத்தில் தெரியத் தொடங்கியது. அந்த ஊரிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து செல்லும் போது தான் மறுபடியும் அங்கு வந்துவிட வேண்டுமென்ற ஞாபகம் அவனுடைய மனத்தில் ஆழமாகப் பதிந்தது. வாழ்வின் நிலையான பாசங்கள் எல்லாம் அவற்றை விட்டுப் பிரிந்து செல்லும் போதே அவற்றின் நெருக்கமும் உறவும் புலப்படும்படி இருக்கும். தன் மனத்துக்கு மல்லிகைப் பந்தல் என்ற மலைநாட்டு நகரத்தின் மேல் எவ்வளவு மோகம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அங்கிருந்து பிரிந்து செல்லும் போதுதான் சத்தியமூர்த்தியால உணர முடிந்தது. மனத்தில் நிலைக்கும் படியான நிரந்தரமான சந்திப்புகள் எல்லாம் மகிழ்ச்சியில் தொடங்கி ஏக்கத்தில் முடிவதை அநுபவத்தில் பலமுறை உணர்ந்திருக்கிறான் அவன். பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்த போது மல்லிகைப் பந்தலில் அந்தச் சில மணி நேரங்களுக்குள் நடந்தவற்றை அவன் ஒவ்வொன்றாக நினைக்கத் தொடங்கினான். அப்படித் தொடங்கிய நினைப்பு வளர்ந்து பெருகி மிக நளினமானதொரு பகுதியில் வந்து நிறைந்தது.

மல்லிகைப் பந்தலில் இருந்து புறப்படுவதற்கு முன் பாரதி சுட்டிக் காட்டிய ஈரச் செம்மண் நிலமும் அதைச் சுட்டிக் காண்பித்த போது புதிய உணர்வோடு தெரிந்த முகமும் சத்தியமூர்த்தியின் நினைவில் சுற்றிச் சுற்றி வந்தன. வாய் திறந்து சொற்களால் பேச முடிவதை விட அதிகமான நயமும் பொருளும் தந்து பேசுவதைப்போல் ஒலித்த அவள் கைகளின் வளை ஒலி இன்னும் அவன் செவிகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது. கம்மென்று நறுமணம் பரப்பி நாசியையும் இதயத்தையும் நிறைத்த அந்த மல்லிகைப் பூக்களின் வாசனையை இன்னும் அவனால் மறக்க முடியவில்லை. அவனுக்கு இருபுறமும் பஸ்ஸில் உட்கார்ந்தவர்கள் யாரோ தேயிலைத் தோட்டத்துக் கங்காணிகள் போல் தோன்றினார்கள். 'சதக் சதக்' என்று வெட்டப்படும் கொலைச் செய்திகளும் சினிமா நட்சத்திரங்களைப் பற்றிய பரபரப்பூட்டக் கூடிய விவரங்களும் அடங்கிய தினப்பத்திரிகை ஒன்றைப் படித்து ஒரு கங்காணி இன்னொரு கங்காணிக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். அந்தச் செய்தித்தாளின் பக்கங்களில் நடந்திருந்த கொலைகளை விட அதைப் படித்துக் கொண்டிருந்தவன் செய்கிற கொலைக்காக மிகுந்த வேதனைப்பட்டான் சத்தியமூர்த்தி. திரு.வி.க.வும் திலகரும் பத்திரிகை நடத்திய நாட்டில் மெய்யை மெழுகிக் காகிதம் விற்பார் சிலரும், பொய்யை மெழுகிக் காகிதம் விற்பார் சிலருமாகப் புனிதமானதொரு பணியைச் சர்வசாதாரணமாக வியாபாரமாக நடத்துகிறவர்கள் பெருகியிருப்பதை எண்ணியபோது மிகவும் வருந்தினான் அவன்.

அன்று மாலையில் பஸ்ஸிலிருந்து இறங்கி ஊர் திரும்பும் இரயிலுக்காக அவன் மல்லிகைப் பந்தல் ரோடு ரயில் நிலையத்துக்குள் நுழைந்த போது நன்றாக இருட்டத் தொடங்கிவிட்டது. ஒன்பதரை மணிக்கோ, பத்து மணிக்கோ எல்லா நிலையங்களிலும் நின்று நின்று போகிற பிரயாணிகள் வண்டி ஒன்று உண்டு. அதில் புறப்பட்டால் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் எப்போதாவது மதுரை போய்ச் சேரலாம். புறப்படுகிற நேரமும் உறுதியில்லாமல், போய்ச் சேருகிற நேரமும் உறுதியில்லாமல், இந்தத் தேசத்துச் சராசரி மனிதர்களின் வாழ்க்கை இலட்சியத்தைப் போல் நிச்சயமில்லாத இரயில் அது. அதை எதிர்பார்த்து அந்தக் குளிரிலும் இருட்டிலும் அங்கே காத்திருந்த பலரோடு இப்போது சத்தியமூர்த்தியும் சேர்ந்து கொண்டான். தனியே எதிர்பார்த்துக் காத்திராமல் பலரோடு சேர்ந்து அந்தப் பலரில் ஒருவனாக ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் இரண்டு விதமான சுவாரஸ்யங்கள் உண்டு. தன்னுடைய ஆவல் ஒன்று, தன்னைப் போன்ற பலருடைய மொத்தமான ஆவல் மற்றொன்று. தன்னுடைய ஆவலைத் தானே உணர்ந்து கொண்டு, மற்றவர்களுடைய ஆவலைப் புரிந்து அனுபவிப்பதில் சுவாரஸ்யம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?

முதல் நாள் மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிட்டு இன்று அங்கிருந்து திரும்பும் இந்த இரண்டு நாட்களுக்குள்ளேயே நீண்டகாலமாகத் தான் அலைந்து பயணம் செய்தே தன் நாட்களையெல்லாம் கழித்து விட்டது போல ஒரு பிரமை எப்படித் தனக்கு ஏற்பட்டதென்று சத்தியமூர்த்திக்கே புரியவில்லை. பயணம் செய்துவிட்டுத் திரும்பும் ஒவ்வொரு முறையும் இந்த அநுபவத்தை அவன் அடைந்திருக்கிறான். வேலை கிடைத்து மல்லிகைப் பந்தலுக்கே வந்துவிட்டால் போவதும் வருவதுமாக இப்படிப் பலமுறை அந்த இரயில் நிலையத்தில் தான் காத்திருக்க நேரிடும் என்ற நினைப்பும் ஏற்பட்டது அவனுக்கு. அதே சமயத்தில் கல்லூரி அதிபர் பூபதி அந்த வேலையைத் தனக்குத் தருவாரா என்ற சிறிய சந்தேகமும் வந்தது. கடைசியாக அவர் தன்னிடம் பேசிய பேச்சிலிருந்தும், தனக்கு விடை கொடுக்கும் போது மனம்விட்டு எதுவும் பேசாமல் அழுத்தமாக விடை கொடுத்ததிலிருந்தும், தன் பருவத்தின் இளமையை எண்ணி அவர் தயங்குகிறாரா என்று தோன்றியது சத்தியமூர்த்திக்கு.

வீட்டை விட்டு ஊரைவிட்டு வெளியேறி வந்ததனால் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பிரச்சினைகளும், வீட்டுக் கவலைகளும் மனத்தின் அடி மூலையில் முறிந்த முள்ளைப் போல் உடனடியாக வலியில்லாமல் தங்கிப் போயிருப்பதை அவன் உணர்ந்தான். 'எந்தவிதமான சௌகரியங்களும் இல்லாத மத்தியதரக் குடும்பத்தில் இரண்டு தங்கைகளுக்கு மூத்தவனாகப் பிறந்துவிடுகிற ஆண்பிள்ளை தன் பொறுப்புகளையும் தான் வாழவேண்டிய வழியையும் வாழ்வில் மிக விரைவில் தீர்மானம் செய்கிறவனாக இருக்க வேண்டும். பின்னால் யாரோ கன வேகமாகத் துரத்திக் கொண்டிருப்பது போல் ஓடி ஓடி முயன்று வாழ வேண்டும் அவன். இப்படிப்பட்ட குடும்பத்தில் மூத்தவனாகப் பிறந்து விடுகிறவனுக்கு ஒவ்வொரு நாளும் அவன் கைகளை எதிர்பார்த்து நிற்கிற பல தேவைகளும், வறுமைகளும் காத்திருக்கும். இதை எண்ணியபோது, தான் படித்திருந்த திருக்குறள் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது சத்தியமூர்த்திக்கு.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு?

வறுமையால் நாள் தவறாமல் துன்புற்றுக் கொண்டிருக்கிற ஒருவன் தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் விடிகிற போது, "நேற்று என்னைக் கொன்று வாட்டினாற் போன்ற வறுமை இன்றும் வருமோ?" என்று கவலையோடு விடிவதாகப் பாவித்துக் கேட்பதாய் இந்தக் குறளைப் பாடியிருக்கிறார் வள்ளுவர். நாளைக்குப் பொழுது விடிகிற போது தன்னுடைய இதயத்திலும் இப்படி ஒரு கேள்வி பூதாகரமாக எழும் என்பது சத்தியமூர்த்திக்குப் புரிந்துதான் இருந்தது. கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்ட ஒரு தந்தை தன் குடும்பத்துக்குத் தேவைகளையும், வறுமைகளையும் தவிர வேறு எதை அதிகமாகச் சேர்த்து வைத்திருக்க முடியும்? அத்தனை வறுமைக்கும் நடுவே சத்தியமூர்த்தி கல்லூரிப் படிப்புப் படித்து மீண்டதே, அந்தக் குடும்பத்தின் மிகப்பெரிய சாதனைதான். பலருடைய உதவிகளும், கல்லூரியில் கிடைத்த 'ஸ்காலர்ஷிப்' வசதிகளும் தான் அவன் தன்னுடைய கல்லூரிப் படிப்பை நடுவில் நிறுத்த நேரிடாமல் தொடர்ந்து கற்று முடிக்கத் துணையாயிருந்தன. மத்திய தரக் குடும்பத்துப் பெற்றோர் பலர் சாதாரணமாக எதிர்பார்ப்பது போல் அவன் பி.காம். படித்துச் சார்ட்டர்ட் அக்கௌண்ட், காஸ்ட் அக்கௌண்டன்ஸி போன்ற துறைகளில் தேர்ந்து பெரிய ஆடிட்டராகிப் பணம் குவிக்க வேண்டும் என்றுதான் அவன் தந்தையும் எதிர்பார்த்தார். அவன் தமிழில் மோகமுற்றுத் தமிழ் ஆனர்ஸ் தேறி எம்.ஏ. ஆகி இப்படி கல்லூரி விரிவுரையாளனாகப் போக நேரிடும் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. அதில் அவருக்கு ஏற்பட்ட வருத்தமும் ஏமாற்றமும் அதிகம் தான். ஆயினும் உடம்பாலும், மனத்தாலும், தன்னை மீறி வளர்ந்துவிட்ட பிள்ளையை என்ன சொல்லி எப்படித் தடுப்பதென்று தோன்றாமல் 'அவன் போக்குப்படியே போகட்டும்' என்று விட்டுவிட்டார். ஆசிரியர் தொழிலில் தான் இருந்து பட்ட துன்பங்களை எண்ணித் தன் பிள்ளையாவது அந்தத் தொழில் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இருக்க வேண்டும் என்று அந்த ஏழைத் தந்தை கவலைப்பட்டதெல்லாம் வீணாகப் போயிற்று.

"சத்யம்? நீயாவது 'டானா' உத்தியோகத்துக்கு வந்து சேராமல் நல்ல உத்தியோகமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏணியைப் போல் நீ சாத்திய இடத்திலேயே சார்த்திக் கிடக்க உன்னைக் கற்பிப்பவனாகக் கொண்டு பலர் மேலே ஏறிப் போவதைப் பார்க்கும் வயிறெரிகிற தொழில் இது" என்று தந்தை ஏமாற்றத்தோடு கூறிய பல வேளைகளில் அதைப் பொறுமையோடு கேட்டுக் கொண்டு சிரித்து விட்டுப் பதில் பேசாமல் போயிருக்கிறான் சத்தியமூர்த்தி. அப்படி எல்லாம் அவர் அந்தத் தொழிலை வெறுத்துப் பேசியிருந்தும் கூட நேற்று அவன் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு முன்பு, "சத்யம்! குடும்பத்தை இன்னும் உன்னை எதிர்பாத்துத் தவிக்கவிடாதே அப்பா! உத்தியோகத்தைத் தேர்ந்தெடுப்பதில்தான் பிடிவாதமாக இருந்துவிட்டாய். உத்தியோகத்துக்குப் போவதற்கு இன்னும் நீ தாமதம் செய்தால் தண்ணீரில் ஓட்டைப் படகைப் போல் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பம் நிச்சயமாகத் தாங்காது. இண்டர்வ்யூவை வெற்றிகரமாக முடித்துவிட்டு 'ஆர்டரை'க் கையில் வாங்கிக் கொண்டு வந்து சேர்வதற்கு முயற்சி செய்" என்று பாதி ஆர்வமும் பாதி நப்பாசையுமாக அவனிடம் சொல்லியனுப்பியிருந்தார்.

இரயிலிலிருந்து இறங்கி நேரே வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினால் அந்த அகால நேரத்துக்கும் விழித்திருந்து எழுந்து வந்து கதவைத் திறக்கக்கூடியவர் அப்பாதான். கதவைத் திறந்துவிட்டுத் தன்னை எதிரே பார்த்தவுடன், "ஏண்டா, இண்டர்வ்யூ என்ன ஆயிற்று?" என்று ஆவலோடு கேட்கப் போகிற அவருக்கு நம்பிக்கை அளிக்கும்படியாக அப்போது தான் என்ன பதிலைச் சொல்ல முடியும் என்பதைச் சத்தியமூர்த்தி சிந்தித்தான். உடனடியாக நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தரப் போகிற செய்தியைத் தன்னிடமிருந்து தந்தை எதிர்பார்த்தது தவறில்லை என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். அப்பாவைப் போல் வாழ்வில் ஏமாற்றங்களையும், துயரங்களையும் அதிகமாகச் சந்தித்தவர் இப்படித்தான் எதிர்பார்த்துத் தவிக்க முடியும் என்பதும் அவனுக்குத் தெரியும். வாழ்க்கையில் ஏமாற்றமடைகிறவர்கள் நிறைய இருப்பார்கள். ஆனால் அப்பாவைப் போல் வாழ்க்கையையே ஏமாற்றமாக அடைந்தவர்களின் துன்பம் மிகவும் பெரியது. சத்தியமூர்த்திக்கு நினைவு தெரிந்து தந்தை கிழிசல் இல்லாத சட்டையும், வேட்டியும் அணிந்து அவன் பார்த்ததில்லை. ஆசிரியர் தொழிலின் மேலேயே அவர் கசப்பையும் வெறுப்பையும் வளர்த்துவிட்டுக் கொண்டதற்கு அவரே ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்து அடைந்த துன்பங்கள் தான் காரணம் என்பதும் சத்தியமூர்த்திக்குத் தெரியும். தன்னைப் பற்றிய அப்பாவின் கற்பனைகளையும், ஆசைகளையும் அவன் பொறுத்துக் கொண்டான். காரணம் அவருடைய உத்தியோக வாழ்வில் அவர் அதிகமாக அதிருப்தியும் துன்பமும் அடைந்தவர் என்பதுதான்.

ஊருக்குப் போய் இறங்கியவுடன் தன் தந்தை தன்னைக் கேட்கப் போகிற கேள்வியையும், 'இண்டர்வ்யூ' முடிகிற நேரத்தில் திடீரென்று புதிராக மாறிவிட்ட பூபதி தன்னைப் பற்றி என்ன முடிவுக்கு வந்திருப்பார் என்ற கேள்வியையும் மனத்தினுள்ளே எதிரெதிராக நிறுத்திப் பார்த்தான் சத்தியமூர்த்தி. இரண்டு கேள்விகளுமே விரோதிகள் எதிரெதிரே சந்தித்து கொண்டாற் போல் ஒரு விளைவும் இன்றி அப்படி அப்படியே திகைத்து நின்றன. முதல் நாள் அவனுடைய சூட்கேசில் துணிமணிகளை எடுத்து நிரப்பிக் கொண்டே, "என் கைராசி வீணாகிவிடாது அண்ணா! திரும்பி வரும் போது கையில் ஆர்டரோடு வரப்போகிறாய். பார்த்துக் கொண்டே இரு..." என்று உற்சாகத் துள்ளலோடு தன் தங்கை ஆண்டாள் கூறியிருந்ததையும் இப்போது நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. சிறிய தங்கை கல்யாணியைவிட ஆண்டாள் விவரம் தெரிந்தவள். குடும்பக் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொண்டவள். சிறிய தங்கையின் உலகம் துப்பறியும் நாவல்களை ஒரே மூச்சில் படிப்பதோடு ஆரம்பமாகி 'எம்பிராய்டரி' வேலைகளோடு முடிந்துவிடும். மூத்தவள் ஆண்டாள் மேல்தான் சத்தியமூர்த்திக்குப் பாசம் அதிகம். 'இந்த வீட்டின் வைகறைப் போது என்னிடமிருந்துதான் விடிகிறது' என்பது போல் விடிகாலையில் எழுந்து வாசல் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து இரவு ஒன்பது மணிக்கு மேல் 'அண்ணா உன் பாயையும் தலையணையையும் திண்ணையில் கொண்டு போய் வைத்துவிட்டேன்' என்று சொல்ல வருவது வரை தன் தங்கை ஆண்டாள் அந்த வீட்டில் பம்பரமாகச் சுழன்று உழைப்பது சத்தியமூர்த்திக்கு நன்றாகத் தெரியும். ஓடியாடி உழைக்க முடியாமல் தளர்ந்து போன அம்மாவின் வாயினாலேயே தங்கை ஆண்டாள் புகழப்படுவதைக் கேட்டு சத்தியமூர்த்தி பூரித்துப் போயிருக்கிறான். கல்லூரிப் படிப்பு முடிகிற வரை அவன் ஊரோடு வீட்டில் அதிகம் தங்கியதே இல்லை. விடுமுறைகளுக்கு வருவது போவது தவிர, அவனுக்குத் தொடர்ந்து வீட்டில் தங்க வாய்த்ததில்லை. அவன் விடுமுறைக்காக ஊர் வரும் ஒவ்வொரு முறையும் அம்மா ஆண்டாளைச் சுட்டிக்காட்டி, -

"சத்தியம்! இந்த வீட்டின் ஒரே சுறுசுறுப்பு இவள்தானடா அப்பா...!" என்ற வாக்கியத்தை நாலைந்து தடவையாவது சொல்லத் தவறமாட்டாள். அம்மாவுக்கும் சத்தியமூர்த்திக்கும் ஆண்டாளின் மேல் பிரியமென்றால் கல்யாணி அப்பாவுக்குச் செல்லம். சத்தியமூர்த்தியோ, அம்மாவோ அப்பா காது கேட்கக் கல்யாணியைக் கடிந்து கொள்ளவும், கோபித்துக் கொள்ளவும் கூடத் தயங்குவார்கள். அப்படியே தப்பித் தவறிக் காது கேட்கும்படி அவர்கள் அவளைக் கடிந்து கொள்ள நேரிட்டாலோ, "அவளுக்கென்ன தெரியும்? அவள் குழந்தை! அவளைக் கோபித்துக் கொள்ளாதீர்கள்..." என்பார் அப்பா.

"இந்தப் பிறவி மட்டும் கடைத்தேறுவதற்கு நீ குறைந்தபட்சம் ஒரு கோடி துப்பறியும் நாவல்களாவது படிக்க வேண்டும், கல்யாணீ!" என்று சத்தியமூர்த்தி எப்போதாவது கல்யாணியை வம்புக்கு இழுப்பான்.

"நிச்சயமாக நம் கல்யாணிகள் பிறவி கடைத்தேற ஒரு கோடி துப்பறியும் நாவல்கள் போதாது அண்ணா!" என்று அந்த நேரம் பார்த்து ஆண்டாளும் சத்தியமூர்த்தியோடு சேர்ந்து கொள்வாள். இதைக் கேட்டுக் கல்யாணிக்குக் கோபம் கோபமாக வரும்.

"பார் அப்பா, இவர்களை! கட்சி கட்டிக்கொண்டு இரண்டு பேருமாக என்னிடம் வம்புக்கு வருகிறார்கள்" என்று அப்பாவிடம் போய்ப் புகார் செய்வாள் கல்யாணி.

"அவளுக்கென்ன தெரியும்? அவள் குழந்தை?" என்று வழக்கமான வாக்கியத்தோடு செல்லப் பெண்ணுக்குப் பரிந்து கொண்டு வருவார் அப்பா. அந்த வீட்டின் வசதிகளற்ற வறுமை வாழ்விலும் இப்படி ஒரு செல்லம், பரிவு எல்லாம் உண்டு.

மதுரையில் தன் வீட்டைப் பற்றியும் அதன் பலங்களையும் பலவீனங்களையும் பற்றியும் ஒவ்வொன்றாகச் சிந்தித்தான் சத்தியமூர்த்தி. அப்பாவிலிருந்து தங்கை ஆண்டாள் வரை தன்னுடைய மல்லிகைப் பந்தல் இண்டர்வ்யூ சாதகமாக முடிந்து தான் ஆர்டருடனோ, அல்லது ஆர்டர் நிச்சயமாகக் கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையுடனோ திரும்புவதாகத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று அவன் அறிந்திருந்தான். ஆனால் நிச்சயமான எந்த விடையுடனும் இப்போது அவன் ஊர் திரும்பவில்லை. கல்லூரி அதிபர் பூபதியும் உறுதி கூறாமல் விடை கொடுத்திருந்தார். கல்லூரி முதல்வரும் உறுதி கூறாமல் தான் அவனுக்கு விடை கொடுத்து அனுப்பியிருந்தார்.

"பிரின்ஸிபலைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள். அவர் எல்லா விவரமும் சொல்லுவார்" என்று கல்லூரி முதல்வரிடம் அவனை அனுப்பியிருந்தார் பூபதி. கல்லூரி முதல்வரோ அவனுடைய சர்டிபிகேட்களின் ஒரிஜனல்களை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு, "நீங்கள் போகலாம். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திறப்பதற்கு முன் உங்களுக்கு விவரம் தெரிவிக்கிறோம்" என்று மறுமொழி கொடுத்திருந்தார். இரண்டு பேருடைய விடைகளும் ஏறக்குறைய ஒரே விதமானவைதாம். அவற்றுக்கு ஆழமான அர்த்தமான விளைவோ எதுவும் எதிர்பார்ப்பதற்கில்லை. வழக்கமான, எல்லாருக்கும் எல்லா இடத்திலும் சொல்லுகிற விடைதான் அது. தன்னுடைய பேச்சின் இறுதிப் பகுதியில் பூபதியோடு தான் முரண்பட்டதை அவர் விரும்பவில்லை என்ற உண்மை சத்தியமூர்த்திக்குப் புலப்பட்டிருந்தாலும் அவ்வளவு பெருந்தன்மையான மனிதர் அந்தச் சிறிய கருத்து முரண்பாட்டை ஒரு தகுதிக்குறைவாக எடுத்துக் கொண்டு தன்னை வெறுக்க முடியும் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஆனபடி ஆகட்டும் என்று அந்தச் சிந்தனையையே மறக்க முயன்றான் சத்தியமூர்த்தி.

இரயில் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கோடை நாட்களில் அந்த நிலையத்துக்கு "ரிட்டன் டிக்கட்" வசதி உண்டாகையால் சத்தியமூர்த்தியிடம் திரும்புவதற்கும் டிக்கட் இருந்தது. அந்த இரயில் மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்துக்கு வரவேண்டிய நேரத்தைக் கடந்து இரண்டு - இரண்டரை மணி நேரம் தாமதமாக வந்திருந்ததனால் மதுரைக்குப் போய் இறங்கும் போது ஏறக்குறைய விடிகிற நேரமாகி விடுமென்று தோன்றியது. வண்டியில் கூட்டமே இல்லை. நிலையத்தில் அந்த இரயிலுக்காகக் காத்திருந்தவர்கள் தொகையும் அதிகமில்லை. பிளாட்பாரத்தில் இரயில் வந்து நிற்கும் வேளைகளில் இந்த நிலையத்தில் வழக்கமாகக் கேட்கும் மலைப்பழம் விற்பவர்களின் கூக்குரல் கூட அப்போது ஏறக்குறைய இல்லாமல் ஓய்ந்து ஒடுங்கிப் போயிருந்தது. தான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு நேராக உள்ள ஒரு மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறி மேலே சாமான்கள் வைக்கும் பலகையில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டு விட்டான் சத்தியமூர்த்தி. முதல்நாள் உறக்கமிழந்து போயிருந்ததால் அதிகச் சோர்வின் காரணமாகப் படுத்தவுடன் தூக்கம் கண்களில் வந்து கெஞ்சிற்று. அந்த நிலையத்தில் அந்த நேரத்துக்குத் தெற்கேயிருந்து வருகிற இரயில் ஒன்று வடக்கேயிருந்து தெற்கே போய்க் கொண்டிருக்கும் இந்த இரயிலை 'கிராஸ்' செய்ய வேண்டியதாயிருந்தது. அதனால் தெற்கே போகிற இரயில் அரைமணி நேரம் கழித்துத்தான் புறப்பட்டது. இரயில் அங்கிருந்து புறப்பட்டது கூடச் சத்தியமூர்த்திக்குத் தெரியாது. அவன் நன்றாக உறங்கிப் போயிருந்தான். நாள் தங்கின விருந்தாளியைப் போல் அந்த இரவு நேரத்துப் பிரயாணிகள் இரயில் சுவாரஸ்யமோ, சுறுசுறுப்போ இல்லாமல் மெல்ல நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. 'மெயில் கௌரவமோ' 'எக்ஸ்பிரஸ் அந்தஸ்தோ' இல்லாத அந்த ஏழை பாசஞ்சர் வண்டி, ஏனோதானோ என்று வாழும் விறுவிறுப்பில்லாத மக்களைச் சுமந்தபடி ஏனோ தானோ என்று இயங்கியது.

அப்போது எந்தவிதமான நினைவோ கனவோ உறுத்தாத மனத்தோடு அடித்துப் போட்டமாதிரி நன்றாக உறங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. முக்கால்மணி நேரத்துக்கு மேல் அவனுடைய ஆழ்ந்த உறக்கம் இடையூறின்றித் தொடர்ந்தது. அவன் ஏறியிருந்த பெட்டியில் அவனைத் தவிர வேறு மனித சஞ்சாரமேயில்லை.

ஏதோ ஒரு சிறிய நிலையத்தில் இரயில் நின்று புறப்பட்ட போதுதான் அவன் படுத்திருந்த பெட்டியின் கீழே உள்ள இருக்கையிலிருந்து அந்தக் குரல் ஒலிகள் வலுத்து அவனை எழுப்பின. கண் விழித்துப் பார்த்தபோது வண்டிக்குள் புதிதாக யாரோ பிரயாணிகள் ஏறி இருப்பதாய்த் தெரிந்தது. பலகையில் எழுந்து உட்கார்ந்து கீழ்ப்புறமாகக் குனிந்து வார்த்தைகளாலேயே ஒருவருக்கொருவர் சாடிக்கொள்ளும் அந்த விநோதப் பிரயாணிகள் யாரென்று பார்க்க வேண்டும் போல ஆவலாயிருந்தும் அப்படிச் செய்யாமல் படுத்திருந்தபடியே அவர்களுடைய உரையாடலை உற்றுக் கேட்டான் சத்தியமூர்த்தி. நடுநடுவே ஏதோ நாட்டிய மேடையில் கேட்கிறாற் போலச் சலங்கை ஒலிகளும் கண்ணாடி வளைகளின் ஒலிகளும் வேறு கேட்டன. சத்தியமூர்த்தியின் தூக்கம் நிச்சயமாகக் கலைந்தே போய்விட்டது. வாக்குவாதம் வலுத்துச் சண்டை போடுகிற தொனியில் பேசிய குரல்கள் இரண்டும் பெண்களுடையவையாயிருந்தன. அவர்கள் அந்த நிலையத்தில்தான் ஏறியிருக்க வேண்டும் என்று அவன் அநுமானம் செய்ய முடிந்தது. இரண்டு பெண் குரல்களில் சற்றே வயது மூத்து முதிர்ந்ததாக ஒலித்த குரல் கண்டிப்பும் அதிகார மிடுக்கும் பொருந்தியதாக இருந்தது.

"வெட்கங்கெட்ட மூளி! நீ இப்படிச் செய்யலாமா? இதே மாதிரிப் போய்க்கிட்டிருந்தா நீ பிழைச்சு உருப்பட்டாப்போலத்தான் போ..."

இதற்குப் பதிலுரைத்த இளையகுரல் வீணையின் தந்தியை மெதுவாக வருடினாற்போல் இனிமையும் நளினமும் இங்கிதமும் மென்மையும் இழைத்து மெல்லச் சீறியது.

"இப்படி மானங்கெட்டுப் பிழைக்கிறதுக்கு எங்கேயாவது ஆற்றிலே குளத்திலே விழுந்து செத்தா நல்லது. நீயா என்னைக் கொல்லப் போகிறதில்லே; நானாகச் சாகவிடவும் போகிறதில்லே. இப்படியே தான் தொடர்ந்து நீ என்னைச் சித்திரவதை செய்துகிட்டிருக்கப் போறே..."

இப்படி ஒலித்த இந்தச் சொற்களின் தொடர்ச்சியாகவே வளைகளும் சலங்கைகளும் குலுங்கி ஒலித்ததனால் அவைகளை இந்தச் சொற்களுக்குரியவள் தான் அணிந்திருக்க வேண்டும் என்பதையும் அவன் புரிந்து கொள்ள முடிந்தது. இரயில் பெட்டி நிறைய முகப்பௌடரும், சந்தனமும், சாதிப் பூக்களும் கம்மென்று மணக்கத் தொடங்கியிருந்தன. சத்தியமூர்த்தி மேலும் அந்த உரையாடலைத் தொடர்ந்து கவனித்தான்.

"உன் மனசிலே நீ என்ன தான் நினைச்சுக்கிட்டிருக்கியோ? தெரியலை... சின்னஞ் சிறு கிராமத்திலே அம்மன் கோவில் திருவிழாவுக்கு நாலுவிதமான மனுசாளும் தான் வந்திருப்பாங்க. ஒருத்தருக்குப் பாம்பாட்டி நடனம் பிடிச்சிருந்தா இன்னொருத்தருக்கு 'மயில் டான்ஸு' தான் பிடிக்கும். யார் மனசும் குறைப்படாமே தான் நடந்துக்கணும்... கால்லே சலங்கையைக் கட்டிக்கிட்டு இதுக்குன்னு பெறந்து வளர்ந்தப்புறம்... அதெல்லாம் பார்த்தா முடியுமா?"

"அதெல்லாம்னா... எதெல்லாம்?"

"உன் திமிர் பிடிச்ச கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல நான் ஆள் இல்லேடிம்மா."

"அம்மன் கோவில் திருவிழா நடத்தற மனுசங்களா இவங்க...? நிஜமா அம்மனைக் கும்பிட்டுத் திருவிழா எடுக்கிறவங்களா இருந்தால் பெண்களைத் துச்சமா மதிக்கிற சின்ன நினைப்புத் தோணுமா இவங்களுக்கு? ஒருத்தன் உதடு ரெண்டையும் குவிச்சு 'ஹுய்'னு சீட்டியடிக்கிறான். இன்னொருத்தன் கண்ணைச் சாய்க்கிறான். அந்தக் கண்ணிலே கொள்ளியைத் தான் வைக்கணும்."

"இப்படி வாய்த் துடுக்கு இருக்கப்படாதுடீ உனக்கு."

"ஏன்?... இருந்தா என்னவாம்?"

"சீக்கிரமா அழிஞ்சி இருந்த எடம் தெரியாமப் போயிடுவே!"

"அப்படிப் போயிட்டா உனக்கு சந்தோஷம் தானே...?"

"இருந்து இப்படி என் கழுத்தை அறுக்கிறதுக்குப் பதில் அதையாவது செய்யலாம் நீ..."

- எதிர்த்தரப்பிலிருந்து இதற்குப் பதில் இல்லை. வளைகளும் சலங்கைகளும் மெல்லக் குலுங்கிய பின் சிறிது நேரம் கழித்து விசும்பியழுகிற இளங்குரல் எழுந்தது. அந்தக் குரல் விசும்பியழுவது கூட மிகவும் நயமானதோர் இன்னிசையாக உருவாகி ஒலித்தது.

"பேசறதையும் பேசிப்பிட்டு எதுக்குடீ இந்தச் சாகஸம்?"

இந்தக் கேள்விக்கும் எதிர்த்தரப்பிலிருந்து பதில் இல்லை. அழுகைக்குரல் பெரிதாகியது.

"பெரிசா அழுதுட்டாப்பிலே ஆச்சா? நீ பெறந்த பெறப்புக்கு ரோஷம் என்னா வேண்டிக் கெடக்கு? பேசின தொகைக்கு ஒழுங்கா ஆடிப்பிட்டு வரணுமா, இல்லையா?"

"அப்படி ஆடறதுக்கு நா ஒண்ணும் தெருக்கூத்துப் படிச்சுக்கலை. 'இது சரசுவதியோட இலட்சணம்'னு சொல்லியிருக்காரு வாத்தியாரு..." என்று அழுகையோடு குமுறிக் கொண்டு பதில் பேசியது இளங்குரல்.

திடீரென்று முதியவளிடமிருந்து சத்தியமூர்த்தியே இரண்டாவது முறை நினைக்கக் கூசும்படி துச்சமான வார்த்தை ஒன்று வெடித்தது. மேலே ஒருவன் படுத்திருப்பதை மறந்து தாங்கள் மட்டுமே அந்தப் பெட்டியில் இருப்பதாகப் பாவித்துக் கொண்டு வார்த்தைகளைத் தடிக்க விட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். முதியவள் நெருப்பாய் விட்டெறிந்த அந்த ஒரு வார்த்தை இளையவளிடம் விளைவித்த ஆத்திரம் அடக்க முடியாததாக இருந்தது. இப்போது சத்தியமூர்த்தி எழுந்து உட்கார்ந்து கீழே தலையை நீட்டிப் பார்க்க வேண்டியதாயிற்று. பார்த்த கண்களுக்கு விருந்தாகத் தாமரை பூத்தாற் போன்ற அந்த முகம் தான் முதன் முதலாக அவனுக்குத் தோன்றியது. வானவில்லைப் போல் நிறங்களின் அழகிய பக்குவமெல்லாம் இணைந்த அற்புதமாய்த் தெரிந்தாள் அந்தப் பெண். காலில் நாட்டியத்துக்காகக் கட்டிக் கொண்டிருந்த சலங்கைக் கொத்துக்களை அறுத்தெறிந்துவிட்டு, "நான் விழுந்து செத்தால் தான் உனக்கு என்னைப் புரியும்..." என்று இரயில் கதவைத் திறந்து கொண்டு பாயத் தயாராகிவிட்டாள் அந்த இளம்பெண். இனியும் தான் மேலேயிருந்து சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனிதத் தன்மையில்லை என்று படவே சத்தியமூர்த்தி கீழே இறங்கி அவர்களுக்குள் சமரசம் செய்ய முயன்றான். அவனைக் கண்டவுடன் தங்கள் இருவரைத் தவிர மூன்றாவதாக ஆண்பிள்ளை ஒருவன் அந்த வண்டியில் இருக்கிறான் என்பதை அறிந்ததே அவர்களுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவனைக் கண்டு அந்த இளம் பெண் தான் அதிகக் கூச்சமடைந்தாள். அவளை அரட்டி மிரட்டிக் கொண்டிருந்த முதியவள் அதிக வெட்கமோ கூச்சமோ கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் அவளுக்கும் சேர்த்துக் கூச்சப்படுவது போல் அத்தனை அதிகமான வெட்கத்தோடு தலையைக் கவிழ்த்துக் கொண்டு நாணி நின்றாள் அந்த இளம்பெண். நாட்டிய கோலத்தில் அந்த இளம்பெண் மருண்டு நின்றதே ஓர் அழகிய அபிநயமாயிருந்தது. முன்னங்காலைத் தூக்கிக் கொண்டு பாய்வதற்குத் திமிறி நிற்கும் அழகு, அவளிடம் தென்பட்டது. அந்த அழகில் அடக்கமும் இருந்தது. அப்போது அவள் முகத்தில் தெரிந்த மடப்பமும், பயிர்ப்பும், கூச்சமும், நாணமும் மிக உயர்ந்த குடும்பத்துப் பெண்களிடம் கூடக் காண அருமையானவைகளாயிருப்பதைப் பார்த்துச் சத்தியமூர்த்தி ஆச்சரியப்பட்டான். தேடிக் கண்டுபிடிக்க முடியாத அல்லது விரும்பாத பல இடங்களில் வாழ்க்கையில் மிக மென்மையான குணங்கள் அமைந்திருந்து அவை பிறருக்குத் தெரியாமலே போய்விடுகிற சமுதாய நஷ்டத்துக்காகச் சத்தியமூர்த்தி தனக்குள் பலமுறை வருந்தியிருக்கிறான். இன்றும் அப்படி அவன் வருந்த நேரிட்டது.

"அம்மா! நீங்கள் உங்கள் பெண்ணிடம் இன்னும் சிறிது நாகரிகமாகப் பேசலாமே? அப்படிப் பேசினாள் இரயிலில் உடன் வருகிற மற்ற பிரயாணிகளும் உங்களை அநாகரிகமாய் நினைத்துக் கொள்ளக் காரணமாயிராது" என்று சத்தியமூர்த்தி கூறியதைக் கேட்டு முகத்தைச் சுளித்தாள் அந்த முதிய அம்மாள்.

"எங்கள் அம்மாவுக்கு நாகரிகத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. 'நாகரிகத்தை' எவ்வளவு 'அட்வான்ஸ்' வாங்கிக் கொண்டு விற்கலாமென்று அவள் நினைப்பாள்..." என்று கீழே தலையைக் கவிழ்த்துக் கொண்டே, குமுறலோடு அவனிடம் பதில் பேசியது அந்த இனிய குரல்.

'இன்னொருத்தனுக்கு முன் சந்தி சிரித்து விடும்போல் இருக்கிறதே' என்ற பயத்தினாலோ என்னவோ அம்மாக்காரி பதில் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டாள். சண்டை ஒருவிதமாக ஓய்ந்து அமைதியடைந்த நிலைக்கு வந்தது. சத்தியமூர்த்தி மறுபடியும் மேலே ஏறிப்படுத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் கீழ்ப்புறமிருந்து அந்தப் பெரிய அம்மாள் குறட்டை விடும் ஓசை கிளம்பிற்று. அந்த அம்மாளின் குறட்டை கூட மிடுக்குடனே மிரட்டுவதுபோல் இருந்தது. சத்தியமூர்த்திக்குத் தூக்கம் மறுபடியும் வரவில்லை. படுத்தபடியே புரண்டு கொண்டிருந்தான். கண்கள் மட்டும் தூங்குவது போல் சும்மா மூடியிருந்தன. கீழே இருந்து பரவும் நறுமணங்கள் அவற்றைச் சுமந்து கொண்டிருப்பவளின் சோகமான வேதனைகளை அவனுடைய ஞாபகத்தில் படரச் செய்தன. அவன் ஏதேதோ தொடர்பு உள்ளனவும், தொடர்பு அற்றவனுமாகிய சிந்தனைகளைத் தனக்குள் சிந்திக்கத் தொடங்கினான்.

அதிகாலை மூன்றரை மணி இருக்கும். இரயில் மதுரைப் பாலம் நிலையத்தைக் கடந்து வைகைப் பாலத்தில் 'தடதட'வென்று ஓசையிட்டு ஓடத் தொடங்கியிருந்தது. அப்போதுதான் அந்தப் பெண் தன்னுடைய உணர்ச்சியின் மானத்தை இரண்டாம் முறையாக அவனுக்கு நிரூபிக்கும் காரியத்தைச் செய்யலானாள். அவளுடைய கைவளைகள் ஓசைப்பட்டுக் கண்ணை மூடிக் கொண்டிருந்த அவனை எழுப்பிவிட்டன. கண்களைத் திறந்து விழித்ததும் இரயில் கதவைத் திறந்து கொண்டு வைகையில் பாய்ந்து விடத் துணிவும் நிலையில் அவளைப் பார்த்தான் சத்தியமூர்த்தி. பார்த்ததும் திடுக்கிட்டான். அவள் நினைத்ததைச் செய்துவிட அந்த நிலையில் அவளுக்கு அரைகணமே போதும். மேல் பலகையிலிருந்து கீழே குதித்துத் தாவி அவளைக் காப்பாற்றவோ குறைந்த பட்சம் அவனுக்கு இரண்டு கணமாவது வேண்டுமே?

அத்தியாயம் - 5

உலகத்துக்கு அழகாகத் தோன்றுகிற பலர் உள்ளத்தால் வெந்து அழிந்து கொண்டிருப்பது வெளியே தெரிவதில்லை. அவர்களுடைய அழகு ஒரு தடையாக இருந்து அந்தரங்கத்தில் அவர்கள் படுகிற கவலைகளைப் பிறர் காண முடியாமல் மறைத்து விடுகிறது.

'அந்த நிலையில் தான் என்ன செய்வது?' என்பதை சத்தியமூர்த்தி இன்னும் ஒரு கணம் சிந்தித்திருந்தானானால் அவள் வைகையாற்றில் பாய்ந்திருப்பாள். சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருப்பதை விடச் செயல்பட்டுக் காப்பாற்ற வேண்டிய அவசரத்தையும், அவசியத்தையும் உணர்ந்தவனாக கீழே தாவி இறங்கி கைக்கு இசைவாக இருந்த அவள் வலது கையைப் பற்றிப் பின்னுக்கு இழுத்தான் சத்தியமூர்த்தி. அவன் அவசரமாகப் பாய்ந்து பற்றிய வேகத்தில் அந்தப் பூப்போன்ற கையை அழகு செய்து கொண்டிருந்த கண்ணாடி வளையல்களில் சில நொறுங்கின. பூக்களின் மென்மையை விட அதிகமான மென்மையும் சந்தனத்தின் குளிர்ச்சியை விட அதிகமான குளிர்ச்சியும் பொருந்திய அந்தக் கையில் உடைந்த வளைச் சில்லுகள் அழுத்தப்பெற்ற இடங்களில் கோடு கீறினாற் போலக் குருதி கொப்பளித்தது.

வாழ்க்கையின் எல்லாவிதமான தொல்லைகளிலிருந்தும் விடுபட்டுப் போவதற்குத் துணிந்துவிட்ட அந்தப் பெண் கடைசி விநாடியில் தன் துணிவையும் விருப்பத்தையும் பாழாக்கிவிட்ட அவனைத் திரும்பி நிமிர்ந்து பார்த்தாள். பிரத்யட்ச உலகில் ஓர் அபூர்வமாய்க் கவிகளின் கனவுகளிலே மிதக்கும் எல்லாவிதமான எழில்களும் ஒன்று சேர்ந்து இல்லாப் பேரழகைப் போன்ற அவளுடைய அந்தக் கண்களில் நீர் மல்கிற்று. புயல்காற்றில் அறுந்து விழுவதற்கு இருந்த பூக்கொடி தற்செயலாய்ப் பக்கத்துக் கிளையில் படரவிட்டிருந்த ஏதோ ஒரு சிறிய நுனியின் பிணைப்பால் தப்பி இருப்பதைப் போல் அவள் அவன் பிடியில் இருந்தாள். உலகத்திலுள்ள நறுமணங்களில் மனத்தை மயக்கும் சக்திவாய்ந்த மணங்கள் எவை எவை எல்லாம் உண்டோ அவை அவை எல்லாம் ஒன்றாகி மணப்பது போல் மணங்களின் உருவமாகத் தன் பிடியில் சிக்கி நிற்கும் அவள் காதருகே குனிந்து சொன்னான் சத்தியமூர்த்தி.

"நல்ல வேளையாக நீங்கள் காப்பாற்றப்பட்டு விட்டீர்கள்! இனி இப்படி நினைப்பு உங்களுக்கு வரக்கூடாது."

"வாழ விரும்பாத அபலைகளையும் அநாதைகளையும் வலிந்து காப்பாற்றுகிறவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை" என்று வெறுப்போடு பதில் சொல்லிய போது எந்தவிதமான ஆசைகளின் சாயலும் இல்லாமல் வறட்சியாகச் சிரித்தாள் அவள். அந்தச் சிரிப்பைப் பார்த்த மறுகணமே அதன் உடனிகழ்ச்சியாகத் 'தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற பற்கள்' என்று கவியரசர் பாரதி ஞானரதத்தில் எங்கோ எழுதியிருக்கும் ஓர் அழகிய வாக்கியம் சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. வெறுப்பிலும் நிராசையிலும் தோய்ந்து மரணவாயிலுக்கு அருகே அடியெடுத்து வைத்துவிட்டுத் திரும்புகிற போதே இவள் சிரிப்பு இவ்வளவு அழகாயிருக்குமானால் தானே சிரிக்க விரும்பி இவள் சிரிப்பது இன்னும் எவ்வளவு அழகாயிருக்கும் என்று கற்பனை செய்ய முயன்றான் சத்தியமூர்த்தி.

இதற்குள் இரயில் வைகைப் பாலத்தைக் கடந்து பொன்னகரம் என்ற உழைப்பாளிகளின் சுவர்க்கத்தையும், பிரம்மாண்டமான பஞ்சாலைக் கட்டிடங்களையும் ஊடுருவிக் கொண்டு மதுரை நகருக்குள் செல்லத் தொடங்கியிருந்தது.

"ஊர் வந்துவிட்டது. இரயிலிலிருந்து இறங்கும்போது இனி எப்போதும் இப்படி அசட்டுக் காரியம் செய்யலாகாது என்ற திடமான நம்பிக்கையோடு மதுரை மண்ணில் இறங்கி நடக்க வேண்டும் நீங்கள்" என்றான் சத்தியமூர்த்தி.

"என்னைப் போன்றவர்கள் வாழ்வதும் வாழ நினைப்பதும் தான் அசட்டுக் காரியம். சாவுதான் எனக்குப் புகழிடம். சாமர்த்தியசாலிகளும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களும் வாழவேண்டிய உலகம் இது. பேதைகளும் அப்பாவிகளும் என் போன்ற அபலைகளும் வாழ்வதற்கு இங்கு இடமில்லை."

"நம்பிக்கைகளை அடைய வேண்டிய வயதில் இப்படி விரக்திகளை நினைக்கவோ பேசவோ கூடாது."

"என்ன செய்யலாம்? என் நிலையில் இதைத் தவிர வேறு எதையும் பேச வலிமையற்றவளாயிருக்கிறேன் நான்."

இந்தப் பெண்ணுக்கு ஆறுதலாக இன்னும் ஏதேதோ சொல்ல வேண்டும் என்று நினைத்தான் சத்தியமூர்த்தி. ஆனால் அதற்குள் இரயில் பிளாட்பாரத்தில் புகுந்து நின்றுவிட்டது. அந்தப் பெண்ணின் தாயும் விழித்துக் கொண்டு விட்டாள். கூட்டமோ, பரபரப்போ இல்லாமல் பிளாட்பாரம் அழுது வடிந்தது. அந்த இரண்டுக்கெட்ட நேரத்தில் கவனிப்பாரற்று நுழையும் சாதாரணமான பிரயாணிகள் இரயிலின் பக்கமாய்ப் போர்ட்டர்கள் கூட அதிகமாக வந்து எட்டிப் பார்க்கவில்லை.

"ஊர் வந்து விட்டாற் போல் இருக்கிறதே?..." என்று அந்த அம்மாள் தூக்கம் கலைந்த விழிப்பும், ஊர் வந்த விழிப்பும் போட்டிபோட இரட்டை விழிப்புடனே எழுந்த போது அவளிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்து அந்தக் கடுமையான முகத்தைப் பார்த்த பின் ஒன்றுமே சொல்லத் தோன்றாமல் தயங்கினான் சத்தியமூர்த்தி. அந்த அம்மாள் முகத்தைப் பார்த்தால் அப்போது அவளிடம் தான் ஒன்றும் பேசாமல் விடைபெற்றுக் கொண்டு போய் விடுவதே நல்லது என்று தோன்றியது அவனுக்கு.

"உங்கள் பெண்ணிடம் நீங்கள் இன்னும் அதிகமான பாசத்தோடும், கருணையோடும் நடந்து கொள்ள வேண்டும் அம்மா! இப்படிக் கொடுமையாகவும் பரிவு இல்லாமலும் நடந்து கொள்வீர்களானால் என்றாவது ஒருநாள் உங்கள் பெண்ணை நீங்களே உயிரோடு பார்க்க முடியாமல் போய்விடும்..." என்று தொடங்கிக் கண்டிப்பாகவும் அந்த நேரத்தில் அதற்காகவே எடுத்துக் கொண்டாற் போன்ற ஒரு விதமான உரிமையுடனும் பேச எண்ணியிருந்தும் பேசப்பட வேண்டியவளுடைய முகத்தைப் பார்த்ததும் அவன் அதைச் செய்ய இயலாமல் போயிற்று. கண்ணீர் பெருகும் விழிகளால் சூட்கேஸைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்படத் தயாராகிவிட்ட அவனையே இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். பச்சையும் சிவப்புமாக நிறங்கள் கோடுகோடாகச் சிதறிக் கிடப்பது போல் உடைந்த வளைச் சில்லுகள் காலில் இடறின. போகும் போது இருவரில் யாரிடம் சொல்லி கொள்வதென்று ஒரு கணம் சிந்தித்த பின் இருவருக்கும் பொதுவாக 'வருகிறேன்' என்ற ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி. அந்த ஒரு வார்த்தையைக் கூடச் சொல்லியிருக்க வேண்டாமோ என்றும் தோன்றியது. ஆனால் 'வருகிறேன்' என்ற அந்த ஒரு வார்த்தைக்குப் பதிலும் சொல்ல முடியாமல், பதில் சொல்லாமலும் இருக்க முடியாமல் கண்ணில் பெருகும் நீரே தன் அந்தரங்கத்துக்குச் சாட்சியாக மெல்லத் தலையை அசைந்து விடை கொடுத்தாளே, அந்த ஒருத்திக்காக அதைச் செய்தது சரிதான் என்ற திருப்தியோடு பிளாட்பாரத்தில் இறங்கி நடந்தான் சத்தியமூர்த்தி.

இரயில் சந்திப்புகளுக்கு வரவேற்பு கிடையாது, விடைபெறுதலும் கிடையாது - இருக்கவும் கூடாது. ஆனால் சில சந்திப்புகள் மனத்தில் பதிந்து கொள்கின்றனவே! அப்படிப் பதிவாகிய சந்திப்புக்கள் நம்மையும் அறியாமலே நாம் ஏதோ ஓர் உறவைக் கற்பித்துக் கொள்ளும்படி செய்துவிடுகின்றன. தன்னைப் பொறுத்தவரை தானும் இன்று அப்படி யார் மேலேயோ ஏதோ ஓர் உறவைக் கற்பித்துக் கொண்டு விட்டதைச் சத்தியமூர்த்தி உணர்ந்தான்.

அவன் பிளாட்பாரத்தில் இறங்கிச் சிறிது தொலைவு தான் நடந்திருப்பான். அதற்குள் இவன் முற்றிலும் எதிர்பாராத கேள்வியோடு எதிர்பாராத மனிதர் ஒருவர் அவனைச் சந்தித்தார். அந்தக் கேள்வியைக் கேட்ட விதமும் கேட்டுவிட்டு அவர் அவனைப் பார்த்த பார்வையும் சிரித்த சிரிப்பும் சத்தியமூர்த்தியை என்னவோ செய்தன!

"என்னடா சத்தியம்? இவர்களை உனக்கு எவ்வளவு நாட்களாகத் தெரியும்? ரொம்ப நாட்களாகப் பழக்கம் போலிருக்கிறது...?"

"இவர்களை என்றால் எவர்களை?"

"அதுதான் ரயிலில் உன் கூட வந்தார்களே, அவர்களைத் தான் சொல்கிறேன். இரயில் பிளாட்பாரத்தில் நுழையும்போதே உன்னை நான் பார்த்தேன். நான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு நேராகச் சொல்லி வைத்தாற் போல் உங்கள் வண்டி வந்தது... அது சரி... பாதி ராத்திரிக்கு மேல் இப்படி எங்கேயிருந்து பயணம் புறப்பட்டு வருகிறாய் இவர்களோடு?"

இதைக் கேட்டு சத்தியமூர்த்திக்குச் சினமும் திகைப்பும் மாறிமாறி ஏற்பட்டன. அந்த மனிதரை எரித்து விடுவது போல் பார்த்தான் அவன். 'மூன் லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸீஸ்' என்று சொன்னால் அதன் உரிமையாளர் கண்ணாயிரத்தை எல்லோருமே தயங்காமல் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு நாலாவது வீட்டிலோ ஐந்தாவது வீட்டிலோ குடியிருந்தார் அவர். வெற்றிலை பாக்கை மென்று அசை போடுவதற்கும் அடுத்தபடி வம்புகளையும் வதந்திகளையும் அசை போடுவதில் மன்னன். சத்தியமூர்த்தி சாதாரண நாட்களில் இந்த மனிதரைத் தெருவில் எங்காவது சந்திப்பதற்கு நேர்ந்தால் கூட "பக்கத்தில் வராதே - விலகிப் போய்விடு..." என்ற பாவனையில் நீளமாக ஒரு கும்பிடு போட்டு அனுப்பிய பின்பே நிம்மதியாக மூச்சு விடுவான். திருவாளர் கண்ணாயிரம் 'பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கி' வாழ்கிறவர். நெப்போலியனுடைய அகராதியில் 'முடியாது' என்ற வார்த்தை இல்லாதது போலத் திருவாளர் கண்ணாயிரம் அவர்களுடைய அகராதியில் பல நல்ல வார்த்தைகளுக்கு இடமே இல்லை. நியாயம், தர்மம், ஈவு, இரக்கம்... இப்படி எத்தனையோ வார்த்தைகள் அவருடைய அகராதியில் இருக்க முடியாது. இந்த வகையில் நெப்போலியனை விடப் பெரியவர் அவர். கர்ணன் பிறக்கும் போதே காதில் மகர குண்டலங்களோடு பிறந்த மாதிரி அற்பத்தனத்தையும், வஞ்சத்தையுமே பிறவி அணிகலன்களாகக் கொண்டு பிறந்தவர் கண்ணாயிரம். அவர் இந்த உலகில் பிறக்கும் போதே மேற்படி 'கல்யாண (?) குணங்களும்' அவரோடு உடன் பிறந்து விட்டன. இதெல்லாம் சத்தியமூர்த்திக்கு நன்றாகத் தெரிந்திருந்த காரணத்தினால் தான் திருவாளர் கண்ணாயிரத்தையும் அவருடைய அற்பத்தனத்தையும் அந்த அகாலத்தில் இரயில் நிலையத்துப் பிளாட்பாரத்தில் சந்தித்த போது அவன் மிகவும் வருந்தினான். பாமரர்களும், சராசரி மனிதர்களும் இந்த உலகத்துக்குத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற பெரிய தியாகம் தங்களைவிடப் பாமரர்களாகவும், சராசரியானவர்களாகவும் இருக்கிறவர்களைப் பிரமுகர்களாக இருக்கும்படி அனுமதித்து அவர்களைத் தொடர்ந்து மன்னித்துக் கொண்டிருப்பதுதான். மீனாட்சிப் பட்டணத்துப் பெருமக்களால் இப்படி நிரந்தரமாக மன்னிக்கப்பட்டுவிட்ட பிரமுகர்தான் திருவாளர் கண்ணாயிரம். 'மூன் லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸீஸ்' என்ற மாபெரும் விளம்பர ஏற்பாட்டுக் கம்பெனி ஒரு சிறிய மூன்றே முக்காலடி அறைக்குள் இரு நாற்காலிகளிலும் ஒரு மேஜையிலும் அடங்கிப் போய்விட்டாலும் அந்தப் பேரை வைத்துக் கண்ணாயிரம் பிரமாதப்படுத்திக் கொண்டிருந்தார். அவருக்காக நல்லவர்கள் பயப்பட்டார்கள்; விட்டுக் கொடுத்தார்கள் - பொல்லாதவர்கள் துணையிருந்தார்கள், ஒத்துழைத்தார்கள். பிரமுகராக வாழ்வதற்கு இந்த இரண்டு வசதிகளை விட வேறு என்ன வேண்டும்? ஆகவே அவர் சகலவிதமான ஆதரவும் உள்ள நகரப் பிரமுகர்களில் ஒருவராக இருந்தார்.

"என்னப்பா, திருட்டு விழி விழிக்கிறாய்? என்னிடம் பதில் சொல்வதற்கு என்ன கூச்சம்? சும்மா... சொல் அப்பனே?" என்று மீண்டும் கண்ணாயிரம் சத்தியமூர்த்தியை மடக்கிக் கேள்வி கேட்கவே அவன் ஆத்திரமடைந்தான்.

"திருவாளர் கண்ணாயிரம் அவர்களே! இரயில்வேக்காரர்கள் இந்த இரயிலை நான் பயணம் செய்வதற்காக மட்டும் விட்டிருந்தால் என்னோடு கூட யாரும் ஏறிக் கொண்டு வரவிடாமல் நானே தடுத்திருப்பேன். அது முடியாமல் போனதற்காகத் தயை கூர்ந்து என்னை மன்னித்துவிடுங்கள்..." என்று சொல்லிவிட்டுக் கண்ணாயிரத்தைக் கடந்து வேகமாக விலகி முன்னால் நடந்தான் சத்தியமூர்த்தி.

"கோபித்துக் கொள்ளாதே, அப்பனே! நாட்டியக்காரி மோகினியை உனக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும் என்று எனக்கு ஆச்சரியமாயிருந்தது. அதனால் தான் கேட்டேன்" என்று சொல்லிச் சிரித்தார் கண்ணாயிரம். இந்த வார்த்தைகளை அவர் சொல்லி முடிப்பதற்குள் சத்தியமூர்த்தி முன்னால் சிறிது தொலைவு நடந்து போயிருந்தாலும் 'நாட்டியக்காரி மோகினி' என்ற சொற்கள் அவனுக்குத் தெளிவாகக் கேட்டிருந்தன. அந்தப் பெயர் அவனால் காப்பாற்றப் பட்டவளுடையதாயிருந்தால் அதைவிடப் பொருத்தமான வேறு பெயரை அவளுக்கு வைத்திருக்க முடியாது என்று தோன்றியது அவனுக்கு. உலகத்துக்கு அழகாகத் தோன்றுகிற பலர் உள்ளத்தால் வெந்து அழிந்து கொண்டிருப்பது வெளியே தெரிவதில்லை. அவர்களுடைய அழகு ஒரு தடையாக இருந்து அந்தரங்கத்தில் அவர்கள் படுகிற கவலைகளைப் பிறர் காணமுடியாமல் மறைத்து விடுகிறது. ஒரு சீராய் முத்துக்கோவைப் போல் மின்னிய அந்தக் கட்டழகுப் பல் வரிசையையும் சிரிப்பையும் ஞாபகத்தில் கொண்டு வர முயன்று தோற்றான் சத்தியமூர்த்தி. தாங்கள் எந்தக் கலைகளை நம்பி வாழமுடியுமோ, அந்தக் கலைகளாலும் முழுமையாகக் காப்பாற்றப்படாமல், மனிதர்களாலும் தூய்மையாகக் காப்பாற்றப்படாமல் இரண்டுங்கெட்ட நிலைக்கு வந்து விட்ட இத்தகைய கலைக் குடும்பங்களைப் பற்றி நினைத்தான் சத்தியமூர்த்தி. அப்படி நினைத்தபோது எந்தக் காலத்திலும் நிச்சயமான தீர்மானத்துடன் பரிகாரம் காண முடியாதபடி சில பிரச்சினைகளை இந்த நாட்டில் நிரந்தரமாகவே அரைகுறையாய் இருந்து வருவதை அவனால் உணர முடிந்தது.

இரயில் நிலையத்துக்கு வெளியே வந்ததும் வலது பக்கம் ஓரமாக நிறுத்தியிருந்த ரிக்ஷாக்காரர்கள் ஓடி வந்து அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். விடிவதற்கு இன்னும் சில நாழிகை நேரமே இருந்தது. அந்த அமைதியான நேரத்தில் மதுரையின் வீதிகளில் நடப்பதே ஓர் இன்பகரமான அநுபவமாயிருக்கும். ரிக்ஷாக்காரர்களிடமிருந்து விடுபட்டு சூட்கேஸும் கையுமாக நடந்தான் அவன். பயனை எதிர்பாராமல் பழைய காலத்து மனிதர்கள் செய்து வைத்துவிட்டுப் போகும் பல தருமங்களுக்கு ஒரு ஞாபகம் போல் எதிரே மங்கம்மாள் சத்திரம் தெரிந்தது. தருமம், தானம் போன்ற பல பெரிய காரியங்கள் இந்த நூற்றாண்டில் ஒரு நல்ல ஞாபகம் என்ற அளவிலாவது நிலைத்திருக்கின்றன என்று எண்ணியபோது அந்த எண்ணத்தை அடுத்து கண்ணாயிரம் சேர்ந்து ஞாபகத்துக்கு வரவே சத்தியமூர்த்தி தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். வீடு நெருங்க நெருங்கத் தன்னை எதிர்கொள்ளப் போகிற தந்தைக்குத் தான் சொல்லியாக வேண்டிய மறுமொழியைப் பற்றிச் சிந்திக்கலானான் அவன்.

'வெளியூருக்குப் போய்விட்டு திரும்புகிறேன். வீட்டில் இரண்டு தங்கைகளும், வயதான பெற்றோரும் இருக்கிறார்களே; அவர்களுக்காக நான் என்ன வாங்கிக் கொண்டு போகிறேன்?' என்று எண்ணியபோது தான் வெறும் கையோடு ஊர் திரும்புவதை அவன் தானாகவே உணர்ந்து வருந்த வேண்டியிருந்தது. எப்போதுமே அவன் அப்படித்தான்! அநுபவபூர்வமாக உலகத்துக்கேற்ப வாழும் சில பழக்கங்கள் அவனிடம் படியாமலே போய்விட்டது. அப்பாவும் அம்மாவும் பல முறை அவனிடமுள்ள இந்தக் குறையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். கல்லூரி நாட்களில் அவன் விடுமுறைக்கு ஊர் திரும்பும்போது, "ஊரிலிருந்து வீடு தேடி வருகிறவனுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வரவேண்டுமென்று தோன்றாதா? உலகத்து வழக்கமே பிடிபடாத பிள்ளையாக இருக்கிறாயே அப்பா!" என்று அம்மா வழக்கமாகக் குறைப்பட்டுக் கொள்வது உண்டு. இன்றும் அப்படிக் குறைபட்டுக் கொள்வதற்கேற்ற சூழ்நிலையில் தான் வீடு திரும்புவது அவனுக்கே புரிந்தது.

'பசையைப் போல் அநுபவத்தில் ஒட்டிக் கொண்டு விடவேண்டிய சிலவிதமான வாழ்க்கை ஆர்வங்கள் என்னிடம் இல்லை. உறவினர்களைக் கண்டால் நான் அதிகமாகக் கலந்து பேசிப் பழகுவதில்லை என்று அப்பா குறைபடுகிறார். தங்கைகளுக்கு அடிக்கடி ஏதாவது வாங்கிக் கொடுத்து வெளிப்படையான பிரியத்தை என்னால் காண்பிக்க முடியவில்லையே என்று அம்மா என்மேல் வருத்தப்படுகிறாள். 'தெருவில் சந்தித்தால் நின்று பேசிக் கலகலப்பாகப் பழகத் தெரிவதில்லை. முரட்டு ஆளாக இருக்கிறான்' என்று கண்ணாயிரத்தைப் போல் உள்ளவர்கள் என்னைப்பற்றிக் குறை சொல்கிறார்கள். மொத்தத்தில் பலர் எதிர்பார்க்கிற சில குணங்கள் என்னிடம் இல்லை. இதில் மாறுதல் விளைய வேண்டியது என்னிடமா, மற்றவர்களிடமா என்பதுதான் முடிவாகத் தீர்மானமாக வேண்டிய காரியம்.'

'நீங்கள் உங்களைக் காட்டிலும் வயது மூத்தவர்களிடம் இன்னும் நிதானமாகவும் விநயமாகவும் பேசுவதற்குப் பழகிக் கொள்ள வேண்டும்' என்று வேறொரு விதமாக அவனிடம் குறைபட்டுக் கொண்டிருக்கிறார் மல்லிகைப் பந்தல் கல்லூரி அதிபர் பூபதி. அதையும் இப்போது நினைத்தான் அவன்.

எல்லாவற்றையும் மொத்தமான அபிப்பிராயத் தொகுப்பாக ஒன்று சேர்த்துப் பார்த்தால் எப்படி எப்படியோ மாறவேண்டுமென்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் எதிர்பார்ப்பது அவனுக்குப் புரிந்தது. ஆனால் என்ன விளைவை எதிர்பார்த்து அப்படி மாற வேண்டும் என்றுதான் புரியவில்லை. பிறருடைய சௌகரியங்களை உத்தேசித்துத் தானே தன்னை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் கோழையாக வாழப் பழகவில்லை அவன். பிறரை மாற்றுகிற தீரர்களில் ஒருவனாக வாழ ஆசைப்படுகிறவனின் ஆரம்பம் இப்படித்தான் இருக்க முடியும் என்பது போல இருந்தன அவனுடைய அநுபவங்கள். அவன் படித்திருந்த புத்தகங்களும் பழகியிருந்த நல்லவர்களும் ஒவ்வொரு துறையிலும் இங்கு இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பது போல திடமான அபிப்பிராயங்களை ஆழமாக எண்ணித் தீர்மானம் செய்ய அவனுக்குக் கற்பித்திருந்தாலும் சராசரி உலகில் பல இடங்களில் அவன் தயங்கி நிற்க நேர்ந்தது. பிறர் தன்னை எப்படி எதிர்பார்க்கிறார்களோ, அப்படித் தான் வாழமுடியாமலிருப்பது தனக்கு ஒரு குறையானால் சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தக் குறை ஏதாவது ஒரு வகையில் இருந்தே தீருமென்று சத்தியமூர்த்தி நினைத்தான்.

'ஏனென்றால் அடுத்தவன் தன்னிடம் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற தன்மை இல்லாத அப்பட்டமான தியாகிகள் உலகில் எந்த மூலையிலும் இல்லை. அன்பின் மிகுதியாலும் அப்படி எதிர்பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். வெறுப்பின் மிகுதியாலும் அப்படி எதிர்பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்படி எதிர்பார்ப்பதுதான் வாழ்க்கை போலிருக்கிறது' என்று இப்படிப் பலவிதமான சிந்தனைகளின் வேகத்தோடு நடந்து சென்றதில் நடையே தெரியவில்லை. எதிரே வருகிற சந்தில் திரும்பி அடுத்த வீதிக்குள் சிறிது தொலைவு நடந்தால் வீடுதான். எங்கோ கோவிலில் திருவனந்தல் வழிபாட்டுக்கு முன்பாக வைகறையில் வாசிக்கப்படும் மேளமும் நாதஸ்வரமும் அதிகாலையின் இனிய ஞாபகமாய் ஒலித்துக் கொண்டிருந்தன. சில வீடுகளில் அப்போதே வாசல் தெளிக்கத் தொடங்கியிருந்தார்கள். கிழக்கு வெளுக்க இன்னும் சிறிது நேரமே இருந்தது.

வாயில் படியேறிக் கதவைத் தட்டினான் சத்தியமூர்த்தி. இருமிக் கொண்டே அப்பா எழுந்து வந்து கதவைத் திறந்தார்.

"சாயங்கால இரயிலேயே உன்னை எதிர்பார்த்தேன்" என்றார் அப்பா.

"முடியவில்லை! முதல் நாள் மல்லிகைப் பந்தலுக்குப் போகிற பஸ் தவறிவிட்டது. மறுநாள் இண்டர்வ்யூவுக்குத் தாமதமாகி விட்டது" என்று சொல்லிக் கொண்டே சூட்கேஸுடன் உள்ளே நுழைந்து கூடத்துப் பெஞ்சில் உட்கார்ந்தான் சத்தியமூர்த்தி. அப்பா ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து கொண்டார். கிணற்றடியிலிருந்து வந்த அம்மா "இராத்திரி இரயிலில் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு எதற்காக வருகிறாய்? சாயங்கால வண்டியிலேயே வந்திருக்கலாமே?" என்று விசாரித்துக் கொண்டே வந்து அவனுக்கு எதிர்ப்புறம் ஆவலோடு நின்று கொண்டாள். கூடத்தை மெழுகுவதற்கு வாளி நிறைய நீரோடு வந்த ஆண்டாள் அண்ணனின் வரவினால் ஏற்பட்ட ஆர்வத்தைக் காட்டும் முகத்தோடும் அப்பாவுக்கு அருகே வந்து ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு நின்றாள். படுக்கையிலிருந்து அப்போதுதான் கண்ணைக் கசக்கிக் கொண்டே பாதித் தூக்கமும் பாதி விழிப்புமாக எழுந்திருந்து வந்த கல்யாணியும் இன்னொரு பக்கமாக நின்று கொண்டாள். 'இண்டர்வ்யூ'வின் முடிவு என்ன ஆயிற்று என்பதை அவனாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களைப் போல் எல்லாரும் ஆவலடங்கிய நிலையில் மௌனமாயிருந்தார்கள். வீட்டுக்குள் நுழைந்ததும் இப்படி ஒரு காட்சியை அல்லது நிகழ்ச்சியைச் சத்தியமூர்த்தியும் எதிர்பார்த்திருந்தான். எல்லாருடைய கண்களின் பார்வையும் தன் முகத்தையே நோக்கியிருப்பது அவனுக்குப் புரிந்தது. ஒரு கணம் எல்லா வேதனைகளையும் மறந்தவனாக நன்றாய் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலவும் தோன்றியது. அடுத்த கணம் அப்படிச் செய்வதால் 'குடும்பப் பொறுப்புத் தெரியாத பிள்ளை' என்று கெட்ட பெயரைத் தாங்க நேரிடுமோ என்ற தயக்கமும் ஏற்பட்டது.

"என்ன ஆண்டாள் உன் வலது கண் வீங்கினாற் போல் தெரிகிறதே? உள்ளே ஏதாவது வெடித்திருக்கிறதா?" என்று அப்போது அந்த நிலையில் அதிகச் சிரத்தை எடுத்துக் கொண்டு விசாரிக்கத் தேவையில்லாத ஒன்றைத் தங்கையிடம் விசாரித்தான் சத்தியமூர்த்தி.

"ஒன்றுமில்லையே அண்ணா!" என்று ஆண்டாள் சிரித்தாள். அப்புறமும் சிறிது நேரம் அவன் ஏதோ சொல்லப் போகிறான் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க அவன் ஒன்றும் சொல்லாமலே நேரம் மௌனத்தில் கழிந்தது. அப்பா பொறுமையிழந்தார்.

"நீ போன காரியம் என்ன ஆயிற்று?"

"இண்டர்வ்யூ ஆயிற்று. முடிவு ஒன்றும் சொல்லவில்லை. விவரம் தெரிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்."

"இண்டர்வ்யூவின் போது நீ சரியாக நடந்து கொண்டாயோ இல்லையோ?" - தந்தையின் இந்தக் கேள்விக்குச் சத்தியமூர்த்தி பதில் ஒன்றும் சொல்லவில்லை. கடந்த சில மாதங்களில் தொடர்ந்து நாலைந்து இண்டர்வ்யூவுக்குப் போய்விட்டு ஒரு விளைவும் இல்லாமல், திரும்பி வந்ததிலிருந்து அப்பாவுக்கு தன் மேல் இப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருப்பது அவனுக்குத் தெரியும். போகிற இடங்களில் தான் அகம்பாவத்துடனோ, அலட்சியமாகவோ நடந்து கொள்வதனால் தான் வேலைகள் கிடைக்காமல் தட்டிப் போய்க் கொண்டிருக்கின்றனவோ என்று அவர் சந்தேகப்படுவதைக் கண்டு அவனுக்கு அவர் மேல் கோபமோ, மனத்தாங்கலோ உண்டாகவில்லை. அவரைப் போல் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு நைந்தவர்கள் அப்படித்தான் நினைக்க முடியும் என்பதை உணர்ந்து பொறுமையாயிருந்தான் அவன்.

"நான் அப்போதே படித்துப் படித்துச் சொன்னேன். நீ கேட்டால்தானே? தமிழ் ஆனர்ஸைத் தவிர வேறு எந்தப் பிரிவில் சேர்ந்திருந்தாலும் இதற்குள் நல்ல உத்தியோகத்தைத் தேடிக் கொண்டு போயிருக்கலாம். இந்த வீட்டு நிலைமை நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை. மாடியிலும் கீழே முன்பக்கத்து அறையிலுமாக ஒண்டுக் குடித்தனம் இருக்கிற இரண்டு பேருமாக நூறு ரூபாய் வாடகை தருகிறார்கள். இந்தத் தள்ளாத வயதிலும் நான் 'டியூஷன்' சொல்லிக் கொடுப்பதற்கு அலைந்து நூறு ரூபாய்க்குத் தேற்றுகிறேன். மாடியில் மழைக்கு ஒழுகுகிறது. இப்போது இருக்கிறவர் காலி செய்துவிட்டால் மறுபடியும் காலியாகிவிடும். மாடியில் கொஞ்சம் இடித்துக் கட்டினாலொழியத் தொடர்ந்து யாரையும் குடியிருப்புக்கு வைக்க முடியாது. எல்லாவற்றுக்கும் பணம் வேணும்டா; பணம். சும்மா வறட்டு இலட்சியம் பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை. திருமணத்துக்கு நிற்கிற இந்தப் பெண்களையும் வீட்டுக் கவலைகளையும் நினைத்து இராப்பகலாக நான் தூக்கமின்றி மாய்வது உனக்குத் தெரியுமோ? எத்தனை நாட்களுக்கு இப்படி இருக்கப் போகிறாய் நீ?"

அப்பா இப்படி ஆத்திரப்பட்டுப் பேசியதையும் சத்தியமூர்த்தி பொறுமையாகக் கேட்டுக் கொண்டான். நினைப்புக்களாலும், பாவனைகளாலும் ஒரு தலைமுறைக்கு முந்திய மனப்பான்மை கொண்டவர் அவர். அவரிடம் எதிர்த்துப் பேச விரும்பவில்லை அவன். பதில் பேசாமல் பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டு வருவதற்காகப் பின்பக்கம் எழுந்து சென்றான். அவனுடன் கூடவே பின்புறம் நடந்து வந்த தங்கை ஆண்டாள், "அப்பா பேசியதை ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ளாதே அண்ணா. ஏதோ கவலையில் ஆத்திரமாகச் சொல்லிவிட்டார்..." என்று ஆறுதலாகக் கூறிய வார்த்தைகளுக்கும் அவன் மறுமொழி கூறவில்லை; அப்போது தன் மேலேயே வெறுப்பாக இருந்தது அவனுக்கு.

முகம் கழுவிக் கொண்டு வாசல் பக்கம் வந்தால் மாடியில் குடியிருக்கிற பத்திரிகை நிருபர் பரமசிவம் கீழே இறங்கி வருகிறபோது எதிர்ப்பட்டார்.

"என்ன மிஸ்டர் சத்தியமூர்த்தி? மல்லிகைப் பந்தலில் 'இண்டர்வ்யூ' என்ன ஆயிற்று? முதல் வகுப்பில் தேறியிருக்கிறீர்கள். போட்டி ஒன்றும் இருக்காது... தானே கிடைத்து விடும்..." என்று பரமசிவமும் அதே பேச்சை ஆரம்பித்தார். எந்தப் பேச்சை எதிராளி நம்மிடம் பேசாமலிருந்தால் மனம் நிம்மதியாயிருக்குமென்று சில சமயங்களில் நமக்குத் தோன்றுகிறதோ அந்தப் பேச்சைத்தான் அந்தச் சமயங்களில் திரும்பத் திரும்ப நாம் கேட்கும்படி நேரிடுவது வழக்கம். ஒரு மனிதனுடைய பிரச்சினைகளை - சுகமோ துக்கமோ அவனைச் சுற்றியிருக்கிற எல்லாரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிக் கவனித்துக் கொண்டிருப்பதையும் அதன் விளைவுகளையும் அதற்கு ஆளானவனே வெறுப்போடு பார்க்கும் சந்தர்ப்பங்களும் வருகின்றன. அப்போது மற்றவர்கள் அதை மறுப்பதில்லை.

அப்போது மற்றவர்களின் கேள்வியே அழையா விருந்தாக வாய்த்துத் தொல்லைத் தருவதுண்டு. இதை நினைக்கும் போது மனத்துக்குள் சிரிக்கத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. நினைப்புக்களில் அந்தரங்கமாக இருப்பவற்றைத் தவிர வேறு எவற்றாலும் மனிதன் இரகசியமாக வாழ முடியாது போலிருக்கிறதே என்று நினைத்த போது பரமசிவத்துக்கும், பரமசிவத்தைத் தவிர இன்னும் தன்னை எதிரே பார்த்து மல்லிககப் பந்தல் இண்டர்வ்யூவைப் பற்றித் தன்னிடம் விசாரிக்கப் போகிற ஒவ்வொருவருக்கும் தான் எதற்காகவோ பயந்து வாழ வேண்டும் போல் பிரமையாயிருந்தது அவனுக்கு.

ஏதோ பதில் பேசிப் பரமசிவத்துக்கு விடை கொடுத்து அனுப்பினான். அவரை மாடிக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குள்ளே போவதற்காகத் திரும்பியவன், "மிஸ்டர் சத்தியமூர்த்தி இருக்கிறாரா?" என்று கீழே தெருவிலிருந்து அட்டகாசமாக ஒலித்த குரலைக் கேட்டு ஆச்சரியமடைந்தான். திருவாளர் கண்ணாயிரத்தின் குரல் அல்லவா அது? 'அவர் எதற்காக இப்போது இங்கே தன்னைத் தேடி வந்தார்?' என்று சந்தேகத்தோடு தெருக்கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கி வந்த சத்தியமூர்த்திக்குத் தெருவில் இன்னும் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. தெருவில் நின்றிருந்த கண்ணாயிரத்தின் காரிலிருந்து அந்தப் பெண் கீழே இறங்கி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கண்ணாயிரம் அப்போது அவளைத் தன் வீட்டுக்கு எதற்காக அழைத்து வந்தார் என்று புரியாமல் சத்தியமூர்த்தி திகைத்துக் கொண்டிருந்தபோது அவள் தன் நறுமணங்கள் புடைசூழ அவனுக்கு மிக அருகே வந்து தயங்கி நின்றாள்.

அத்தியாயம் - 6

மிக அந்தரங்கமான விருப்பங்களில் பிரியமுற்று அழுந்தி நிற்கும் போதுகளில் அப்படி அழுந்தி நிற்கிற மனமும் அந்த மனத்துக்குச் சொந்தமானவரும் இந்த உலகில் அநாதையாகவும் நிர்க்கதியாகவும் தன்னந்தனியே கைவிடப் பெறுகிறார்கள்.

தங்கக் கூண்டில் வளர்த்த தமனியப் பசுங்கிளியாய் அந்த வீட்டின் தனிமையில் ஏங்கி ஏங்கி வளர்ந்தவள் பாரதி. அவள் மனம் ஒப்பி ஆசைப்பட்டு நிறைவேறாமற் போன விருப்பங்கள் என்று எவையும் அந்த வீட்டில் அன்று வரை இருந்ததில்லை. அவள் நினைத்தது எதுவாயினும் அது அப்போதே நடக்க முடிந்த அளவுக்குச் செல்லமாகவும் சீராகவும் வளர்ந்திருகிறாள் அவள். 'இது நான் நினைப்பது போல் நடக்க முடியாதோ?' என்று எதை நினைத்தும் நேற்று வரை அவள் கவலைப்பட நேர்ந்ததில்லை. அவள் நினைத்ததை நிறைவேற்றப் பணியாட்கள் பலர் காத்திருந்தனர். அவளுடைய விருப்பங்கள் உடனே நிறைவேட்டப்பட்டனவா இல்லையா என்று கவலைப்பட்டு அக்கறை செலுத்தவும், அவை உடனே நிறைவேற்றப் பட்டிருந்தால் நிறைவேற்றியவர்களைப் பாராட்டவும், நிறைவேற்றாமல் தாமதம் செய்யப்பட்டிருந்தால், அப்படித் தாமதம் செய்தவர்களைக் கண்டிக்கவும் கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன அங்கே. ஆனாலும் எதற்காக ஏங்குகிறோம் என்று தெரியாத ஏதோ ஒன்றுக்காக அவள் ஏங்கி ஏங்கித்தான் வளர்ந்திருக்கிறாள். படிப்பதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் புத்தகங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருந்தன. அந்த வீட்டுக்குள் வராத பத்திரிகைகளும் செய்தித்தாள்களும் இல்லை. தோட்டத்தின் ஒரு பகுதியில் அவளுடைய அறைக்குள்ளேயிருந்து அவளே படியிறங்கிப் போய்ப் பறித்துக் கொள்வதற்கு வசதியாகச் சகலவிதமான மலர்ச் செடிகளும், கொடிகளும் பயிரடப்பட்டிருந்தன. அப்பா அவளை அரசகுமாரியாகத்தான் பேணி வளர்த்தார்.

அவளோ பிச்சைக்காரியைப் போல் எதற்கோ ஏங்கிக் கொண்டே வளர்ந்தாள். சிறு வயதில் தாயை இழந்து விட்ட எந்தப் பெண்ணும் எத்தனை வசதிகளுக்கு இடையேயும் இப்படித்தான் வளர முடியும். தன் அழகில் நிரம்பிக் கிடக்கும் அந்தரங்கங்களும் தன் அந்தரங்கத்தில் நிரம்பிக் கிடக்கும் அழகுகளும் பிறருக்குத் தெரியாமலே வளர்ந்து விட்ட காட்டுமான் கன்று போல் மல்லிகைப் பந்தலின் தனிமையில் செல்வக் குடும்பம் என்ற உயரத்திலிருந்து வெறும் மண்ணில் கீழ் இறங்கி நடக்காமலே வளர்ந்து விட்டாள் அவள். நேற்றுவரை தன் மனத்தைப் பாதிக்கும் படியான எந்த எண்ணத்தையும் அவள் எண்ணியதில்லை. இன்று அவளைப் பாதித்திருக்கும் இந்த எண்ணமோ மற்றொருவரிடம் சொல்லி ஆதரவு தேட முடியாத ஒன்று. மிக அந்தரங்கமான விருப்பங்களில் பிரியமுற்று அழுந்தி நிற்கும் போதுகளில் அப்படி அழுந்தி நிற்கிற மனமும் அந்த மனத்துக்குச் சொந்தமானவரும் இந்த உலகில் அநாதையாகவும் நிர்க்கதியாகவும் தன்னந்தனியே கைவிடப் பெறுகிறார்கள். அதைப் பங்கிட்டுக் கொள்ளவோ அதற்கு ஆதரவு தேடவோ சரியான துணை அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த வேளையில் பாரதியும் அப்படித் துணையற்றவளாகத் தான் இருந்தாள். அப்போது அவளுடைய அந்தரங்கத்தில் என்ன இருந்ததோ அதை அவள் இன்னொருவரிடம் சொல்ல முடியாது.

சத்தியமூர்த்தியை 'இண்டர்வ்யூ' செய்த அதே பதவிக்காக விண்ணப்பம் போட்டிருந்த மற்றொருவரையும் 'இண்டர்வ்யூ' செய்து கொண்டிருந்த பூபதி அவர்களோ அப்போது தாம் செய்யும் காரியம் தமக்கு மிக அருகேயுள்ள மென்மையான மனம் ஒன்றைப் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள நியாயமில்லை. முறையாகவும், ஆர்வம் குன்றாமலும் வழக்கம் போல அந்தப் பதவிக்காக வந்திருந்த இரண்டாவது விண்ணப்பத்தாரரையும் விசாரித்துக் கொண்டிருந்தார் அவர். நிர்வாகத்துறையில் அது ஒரு முக்கியமான அம்சம். ஒரு பதவிக்கு மனுச் செய்திருக்கிறவர்கள் பலராக இருந்தால் அப்படிப் பலர் மனுச் செய்திருக்கிறார்கள் என்பதே தெரியாமல் ஒவ்வொருவரையும் வெவ்வேறு நேரங்களில் வரச்சொல்லி எல்லாரிடமும் ஒரே விதமான ஆர்வத்தோடு பேசி எல்லாரிடமும் ஒரே விதமான ஆர்வத்தோடு விசாரித்து, வந்து செல்கிற ஒவ்வொருவரும் அந்தப் பதவி தங்களுக்கே கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு போகும்படி செய்துவிட்டு இறுதியில் காதும் காதும் வைத்தாற் போல் இரகசியமாக உண்மைத் தகுதியைக் கண்டு பிடித்து நியமனம் செய்வார்கள். தொழிலதிபர் பூபதியே நிர்வாகத் துறையில் நிபுணர். சில வேளைகளில் அவருடைய சாமர்த்தியங்கள் சிலர் அநுமானம் செய்ய முடிந்த எல்லைக்கு அப்பாலும் உயர்ந்திருக்கும். தங்கம் நிறுப்பது போல் எதிராளியை மாற்றுக் குறையாமல் கூடாமல் கச்சிதமாக எடை போட்டு அளந்து நிறுத்துத் தெரிந்து கொண்டு விட்டதை நிறுத்தப்பட்ட எதிராளியைப் புரிந்து கொள்ள விடாமல் பாமரர் போல் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார் அவர். மல்லிகைப் பந்தல் ரோட்டரி கிளப்பின் தலைவராக இருந்து பின்பு கவர்னராக அவர் கௌரவப் பதவி பெற்ற போது அவருடைய ரோட்டரி கவர்னர் பதவிக் காலத்தில் ரோட்டரி இன்டர்நேஷனல் கன்வென்ஷன் ஒன்று மல்லிகைப் பந்தலில் நடைபெற்றது. அதற்காக மல்லிகைப் பந்தலுக்கு விருந்தினராய் வந்திருந்த கனடா நாட்டுத் தொழில் அதிபர் ஒருவர் பூபதியோடு நாலைந்து நாட்கள் பழகிவிட்டுப் பிரிந்து செல்லும்போது நிகழ்ந்த விருந்து ஒன்றில் அவரை இந்தியாவின் 'கமர்ஷியல் மாக்னேட்' (தொழில் மன்னர்கள் அல்லது வாணிக வித்தகர்கள்)களில் தலைசிறந்த ஒருவராக வருணித்தார். இந்தப் பெருமையெல்லாம் தந்தைக்கு குறைவின்றி இருப்பது பாரதிக்கும் நன்றாகத் தெரியும்.

ஆனால் அப்போது அவர் சத்தியமூர்த்தி விண்ணப்பம் செய்திருந்த அதே பதவிக்கு மனுச் செய்திருக்கும் இன்னொருவரையும் தனக்கு எதிரே நீண்ட நேரமாக உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருப்பது அவளுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. சத்தியமூர்த்திக்குப் போட்டியாக வந்திருக்கும் மனிதனிடம் தந்தை பேசிக் கொண்டிருக்கிற நேரம் வளர வளரக் காரணமில்லாததொரு வெறுப்பையும் கோபத்தையும் அவள் அடைந்து கொண்டிருந்தாள். அதன் காரணமாகவே பொறுமையிழந்து ஒரு நிலை கொள்ளாமல் பரபரப்புக் கொண்டு தவித்தாள் அவள். இன்னும் அப்பாவின் அறைக்கு வெளியில் வராந்தாவில் நின்று கேட்டுக் கொண்டிருந்தால் அப்பாவே எழுந்து வந்து தன்னைப் பார்க்க நேரிட்டுவிடுமோ என்ற பயமும் தயக்கமும் அவள் மனத்தில் மெல்ல மெல்ல ஏற்பட்டன. அப்பாவின் அறை வழியே வீட்டுக்குள் செல்லுவது போல் சென்றால் வந்திருப்பவர் யார் என்பதையும் பார்த்து விடலாமே என்று அவள் மனத்துக்குள் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது கல்லூரிக் கார் வாயிலில் வந்து நின்றது. அதிலிருந்து பிரின்ஸ்பலும் ஹெட்கிளார்க்கும் இறங்கி வந்தார்கள். அவர்கள் இருவரும் தந்தையின் அறையை நோக்கி வருவதாகத் தென்படவே அந்த வேளையில் தான் அங்கே வராந்தாவில் தயங்கி நிற்பது நன்றாயிராது என்று எண்ணியவளாக உள்ளே செல்வதற்காக விரைந்தாள் பாரதி.

சத்தியமூர்த்திக்கு எதிராக எல்லாருமாகச் சேர்ந்து ஏதோ சதி செய்வது போல் அவர்கள் மேல் ஒரே வெறுப்பாக இருந்தது அவளுக்கு. காலையில் தன் பட்டுப் பாதங்கள் பதிய அந்தக் காம்பவுண்டுக்குள் நடந்து வந்து தந்தைக்கு முன் கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்து ஒவ்வொரு கேள்விக்கும் கணீரென்று மறுமொழி சொல்லிவிட்டுப் போன அந்தத் தைரியசாலியின் முகத்தை மீண்டும் நினைவு கூர முயன்றாள் அவள். நினைத்து தவிக்கிறவர்களுக்கு அதிகம் சோதனை செய்யாமல் அருள் செய்து விடுகிற சில நல்ல தெய்வங்களைப் போல் அவள் நினைத்தவுடன் ஞாபகத்துக்கு வந்தது அந்த எழில் முகம். அளவாகவும் அழகாகவும் பேசும் அந்தக் குரல், சத்திய வேட்கை நிறைந்த அந்த முகம் 'சுகதுக்கங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையின் முடிவற்ற பாதையில் இன்னும் ஓர் அடி முன்னால் எடுத்த வைக்க எப்போதும் நான் தயார்' என்பது போல் வலது பாதம் முன் இருக்க நிமிர்ந்து உட்காரும் அவனுடைய வனப்பு எல்லாம் நினைவு வந்தன அவளுக்கு. அவள் நெட்டுயிர்த்தாள். தன் நினைவு இதுவரை அடைந்திருந்த இனிய ஞாபகங்களையும் இனி அடைவதற்கிருந்த இனிய ஞாபகங்களையும் அந்த வீட்டின் முன் அறையில் அப்போது உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் தந்தையும், கல்லூரி முதல்வரும் சேர்ந்து பறித்துக் கொண்டு விடுவார்களோ என்று எண்ணி மனம் நலிந்தாள் அவள். போதாத குறைக்கு இப்போது ஹெட்கிளார்க் வேறு கூட வந்திருக்கிறார். 'எல்லோருமாகச் சேர்ந்து என்ன முடிவுக்கு வரப்போகிறார்களோ? ஒருவேளை இப்போது இரண்டாவதாக வந்திருக்கும் இந்த மனிதரே தமிழ் விரிவுரையாளராவதற்குத் தகுதியானவர் என்று இவர்கள் எல்லோரும் ஒரு மனமாகத் தீர்மானம் செய்துவிட்டால்...?'

இப்படி நினைத்தபோது அவள் சிந்தனை மேலே ஒன்றும் எண்ணத் தோன்றாதபடி இருண்டது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவும் என்னப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்கவும், விருப்பம் கொண்ட அவள் ஒரு காரியமும் இல்லாமலே தந்தையின் அறைக்கு அடிக்கடி போய்விட்டு வந்தாள். கடுவன்பூனை மாதிரி முகம், கொலைக்களத்து வெட்டரிவாளைப் போன்ற பெரிய மீசையும் முரட்டுப் பார்வையுமாக வீற்றிருந்த மனிதர் தான் சத்தியமூர்த்தியின் பதவிக்குப் போட்டியாக வந்தவராக இருக்க வேண்டும் என்று அவளால் அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. அந்த மனிதருக்கு ஐம்பது வயதுக்கு இரண்டொன்று குறைவாகவோ, கூடவோ இருக்கலாம் என்று தோன்றியது. 'பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறுவதற்குச் சில ஆண்டுகளே இருக்கும்போது ஏற்கனவே வேலை பார்க்கிற இடத்திலேயே தொடராமல் இந்த மனிதர் சத்தியமூர்த்திக்குப் போட்டியாக இங்கு ஏன் வரவேண்டும்?' என்று நினைத்து ஒரு பாவமும் அறியாத அந்த மூன்றாம் மனிதர் மேல் கோபப்பட்டாள் அவள். வயதானவராகவும், முன் அநுபவம் உள்ளவராகவும், இருக்கிறார் என்ற காரணங்களால் தன் தந்தையே இந்த மனிதரைத் தேர்ந்தெடுத்து விடுவாரோ என்ற பயமும் அவள் மனத்தில் பற்றியிருந்தது. எது நடக்கும், எது நடக்காது என்று முடிவாகத் தெரிந்து கொள்ள இயலாத அந்த நிலையில் பொறுமையிழந்து போய்த் தவித்தாள் பாரதி. ஞாபகத்தின் எல்லாப் பக்கங்களும் ஒரே நினைவில் ஆரம்பமாகி ஒரே நினைவில் முடிந்தாற் போல் அந்த ஒரே ஒரு நாளில் தான் அவ்வளவு பெரிய பைத்தியமாக ஆனது எப்படி என்று எண்ணித் தன்னைத்தானே வியந்து கொண்டாள் அவள்.

சத்தியமூர்த்தியை 'இண்டர்வ்யூ' செய்தபோது தன் தந்தையும் கல்லூரி முதல்வருமே இருந்தது போல் அல்லாமல் இப்போது 'ஹெட்கிளார்க்' வேறு புதிதாக வந்திருப்பது அவளுடைய சந்தேகத்தை வளர்த்தது. 'ஒரு வேளை ஹெட்கிளார்க்கிடம் சொல்லி இந்த மனிதருக்கு நேரிலேயே கொடுத்து விடுவதற்காக ஆர்டர் டைப் செய்ய ஏற்பாடாகிறதோ?' என்று பயப்படுவதற்குரிய சந்தேகம் ஒன்றைத் தானாகவே நினைவிற் கற்பித்துக் கொண்டது அவள் மனம். எதை எதையோ எண்ணி மனம் குழம்பினாள் அவள். காலையில் தன் தந்தையும் சத்தியமூர்த்தியும் பேசிக் கொண்டிருந்த பேச்சின் முடிவில் 'இந்தக் கல்லூரிக்கு இதுவரை பேராசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் வந்திருக்கிற அத்தனை பேரிலும், நீங்கள் ஒருவர்தான் மிக இளமை பருவத்தினராக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது' என்ற வார்த்தைகளைச் சத்தியமூர்த்தியிடம் தன் தந்தை சொல்லிவிட்டுத் தயங்கியதையும் இந்தத் தயக்கத்தை அடுத்து இதன் காரணமாகவே வளர்ந்த உரையாடலில் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதையும் இப்போது தன் மனத்தில் ஞாபகப்படுத்திக் கொண்டு பயந்தாள் பாரதி.

அவரும் தான் அப்படித் துடுக்குத்தனமாகப் பேசி அதுவரை தன்னைப் பற்றி அப்பாவின் மனத்தில் வளர்த்துக் கொண்டிருந்த நல்ல அபிப்பிராயத்தை அந்த ஒரு விநாடிப் பேச்சில் கெடுத்துக் கொண்டிருக்க வேண்டாம். அவர் தான் ஏதோ பேசிவிட்டார் என்றால் அப்பாவாவது அந்தச் சிறிய காரியத்தை மறந்து பெருந்தன்மையாக நடந்து கொள்ளக் கூடாதா? வயதில் இளைஞர் என்ற ஒரே காரணத்துக்காகச் சத்தியமூர்த்தியைப் புறக்கணித்துவிட்டு இப்போது வந்திருக்கும் இந்த முதியவருக்கு இந்த வேலையைக் கொடுப்பார்கள் என்று எண்ண முயலும் போதே அந்த எண்ணத்திலுள்ள ஏமாற்றத்தின் மிகுதியைத் தாங்கமுடியாமல் மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது பாரதிக்கு.

அப்பா இருந்தாற் போல் இருந்து திடீரென்று அப்படி ஓர் அநியாயத்தைச் செய்வார் என்பதையும் அவள் மனமார எதிர்பார்த்து நம்பி ஒப்புக் கொண்டு விடத் தயாராக இல்லை. அப்படிச் செய்கிறவராக இருந்தால், 'உங்களைப் பலவிதங்களில் எனக்குப் பிடித்திருக்கிறது' என்றும் 'உங்களைப் போல் ஆர்வம் மிக்க இளைஞர் ஒருவரைச் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி' என்றும் சத்தியமூர்த்தியோடு பேசிக் கொண்டிருந்த போதும் ஊருக்குச் செல்ல விடைபெறும்போதும் அவரிடம் அப்பா சொல்லியிருக்க மாட்டார். சத்தியமூர்த்தியும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தவற்றையும், பேசிக் கொண்டிருந்த போது நடந்தவற்றையும் ஒவ்வொன்றாக நினைவு கூர முயன்றாள் அவள். அவ்வாறு நினைத்துப் பார்த்தபோது, சத்தியமூர்த்தி தன் பேச்சாலும் தான் நடந்து கொண்ட முறையாலும் தன் தந்தையைக் கவர்ந்த இடங்களே அதிகமாகவும் கவரத் தவறிய இடம் குறைவாகவுமே அவளுக்குத் தோன்றியது. அந்த இளைஞருடைய சாமர்த்தியமான உரையாடலைக் கேட்டுத் தந்தையின் முகம் வியந்து மலர்ந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஞாபகம் கொண்டு மகிழ்ச்சி பெற முயன்றாள் அவள். மகிழ்ச்சிக்குரிய பல சந்தர்ப்பங்களாகத் தேடி ஒன்று சேர்த்து அவள் நினைக்க முயலும் போது சிறிதும் மகிழ்ச்சியைத் தர முடியாத ஏதோ ஒரு சந்தர்ப்பம் மட்டும் நினைவில் முந்திக் கொண்டு பாய்ந்து வந்தது. மனம் அதற்கு உடைமைக்காரர்களோடு ஒத்துழைக்காத நேரங்களில் இதுவும் ஒன்று. நினைக்க விரும்புவது எதுவோ அது நினைவில் வந்து பதியாமல் நினைக்க விரும்பாததும் நினைக்கக் கூடாததும் நினைவு வந்தால் வேதனை தரக்கூடியதுதான். ஏதோ ஒன்று மட்டும் நினைவு வந்து சந்தோஷகரமான மற்றவற்றின் வரவை வழியடைத்துக் கொள்கிற நுணுக்கமான துயரத்தை மீற முடியாது தவித்தாள் அவள்.

அன்று காலையில் இண்டர்வியூ முடிந்த பின் தன் தந்தையும் அவரும் வேறு எதையோ பற்றி உரையாடிக் கொண்டிருக்கையில், 'நான் தான் இனிமேல் இந்த ஊருக்கே வந்துவிடப் போகிறேனே' - என்று அவர் புன்முறுவலோடு கூறிய போது "நீங்கள் இங்கே வரவேண்டுமென்றே இன்னும் அதிகார பூர்வமாக நாங்கள் தெரிவிக்கவில்லையே?" என்று தந்தை சிரித்தபடியே மறுத்த சம்பவம் நினைவில் வந்தது அவளுக்கு. இரண்டு பேருமே வேடிக்கையாகப் பேசிக் கொண்டார்கள் என்று அந்தச் சம்பவத்தைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முயன்றாலும் அதுவே திரும்பத் திரும்ப அவள் நினைவில் வந்து அதற்கு அப்பால் வரக் காத்திருந்த மற்ற நம்பிக்கைகளின் பாதையை மறிக்கலாயிற்று. மனத்தின் பலவீனமான வேளைகளில் இதுவும் ஒன்று. ஓர் அவ நம்பிக்கை பத்து நம்பிக்கைகளை மறைத்து விட முடிகிறது; அல்லது மறக்கச் செய்ய முடிகிறது. பத்து நம்பிக்கைகள் சேர்ந்து ஓர் அவநம்பிக்கையை மறைத்து விட அல்லது மறக்கச் செய்துவிட முடிவதில்லை. அந்த நேரத்து இதயத்தின் தவிப்பில் அவள் இதை நன்றாக உணர முடிந்தது. சத்தியமூர்த்தியே அந்தப் பதவிக்கு உரியவனாக நியமிக்கப் பெற்று மறுபடி மல்லிகைப் பந்தலின் மண்ணில் அவனைக் கண்டாலொழிய அந்த ஊரே பொலிவில்லாமல் போய் விடும்போல் அவள் உருகித் தவித்தாள். இப்படி எதற்காகவும் அவளுடைய வாழ்க்கையில் அவள் இதுவரை தவிக்க நேர்ந்ததில்லை. இந்த அநுபவம் அவளுக்கு ஏற்படுவது இதுவே முதல் தடவை.

"இவர்களுக்கு எல்லாம் தேநீர் கொண்டுவா அம்மா!" என்று தந்தை குரல் கொடுத்த போது, 'நான் எதற்காக என் கைகளால் இவர்களுக்குத் தேநீர் கொடுக்க வேண்டும்' - என்ற வெறுப்போடு வேலைக்காரர்களைக் கூப்பிட்டுக் கொடுத்தனுப்பினாள் பாரதி.

"முன் அறையில் கொண்டு போய்க் கொடு. காலேஜ் ஆட்கள் யாரோ வந்திருக்காங்களாம்..." என்று வார்த்தைகளையும், ட்ரேயையும் வேண்டா வெறுப்பாக வேலைக்காரனிடம் கொடுத்தவளுக்கு அந்தத் தேநீரைக் குடிக்க இருப்பவர்கள் மேலெல்லாம் எதற்காகவோ கோபப்பட வேண்டும் போல் இருந்தது. வேலைக்காரனை முன் அறைக்கு அனுப்பிவிட்டு ஒரு வேலையும் ஓடாத போது எந்த வேலையை எதற்காகச் செய்து கொண்டிருக்கிறோம் என்ற ஞாபகமே இன்றிச் செய்யப்படும் பரவசமான காரியமாய்த் தோட்டத்தின் பக்கமாக இறங்கிச் சென்றாள் அவள். நல்ல சிவப்புமில்லாமல் நல்ல வெளுப்பு மில்லாமல் எப்படியிருந்தால் கண்களில் உறுத்தாமல் மென்மையாகத் தோன்ற முடியுமோ அப்படி நளினமாகச் சிவப்பு நிறத்தில் ரோஜாப் பூக்கள் ஆடிச் சிரித்துக் கொண்டிருந்தன. ரோஸ் என்ற நிறத்துக்கே இந்தப் பூவைப் பார்த்த பிறகு தான் இலட்சணமும் பெயரும் கிடைத்திருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அதுவரை பெய்து கொண்டிருந்த மழை அப்போதுதான் நின்று போயிருந்ததனால் இலைகளிலும் பூக்களிலும் நீர் சிலிர்த்து நின்றது. பன்னீரில் குளித்துவிட்டு நிற்கும் கந்தர்வலோகத்துக் குழந்தைகளின் முகங்களைப் போல் தோட்டத்துப் பூக்கள் அப்போது பொலிந்து கொண்டிருந்தன. பளீரென்ற வெளுப்புமில்லாமல் கண்ணைக் குத்தும் கருஞ்சிவப்புமில்லாமல் சாயங்கால வானத்தில் ரோஜாக் குவியலாய்க் கொட்டிக் கிடக்கும் சில நிறங்களைப் போல ஒரு நிறத்தையே தனக்குப் பெயராகப் படைத்துக் கொண்டு தன் நிறத்தால் ஒரு பூவுக்கு அழகாகி நிற்கும் அவற்றைப் புதிய கண்களுடன் அன்று தான் அப்படி முதன் முதலாகப் பார்க்கிறவள் போல் பார்த்தாள் பாரதி. அந்தப் பூக்களின் இளஞ்சிவப்பு நிறமும் சாயங்கால வானத்தில் தவழும் ரோஸ் மேகங்களும் நினைவு வந்தபோது அவற்றின் தொடர்ச்சியாகச் சத்தியமூர்த்தியின் அழகிற் சிறந்த பாதங்களையும் நினைத்தாள் அவள். நினைத்தாள் என்று சொல்வதை விடப் பொருத்தமாக வேறு விதத்தில் அதைச் சொல்வதனால் அந்த நிலையில் அவளால் அவற்றை நினைக்காமல் இருக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

'பாதங்கள் மட்டுமென்ன? முகம், உதடுகள், உள்ளங்கைகள், எல்லாமே ரோஜாப் பூக்களாகத்தான் அவருக்கு வாய்த்திருக்கின்றன. அவருக்கென்றே வாய்த்த நிறமா அது?' என்று எண்ணி அந்த எண்ணத்தின் விளைவாகத் தனக்குத்தானே கூச்சமுற்று நாணினாள் அவள்.

காரில் தன்னுடன் வரும்போது, 'உங்கள் ஊரில் மல்லிகைப் பூக்களின் வாசனையை எப்படிப் புகழ்வதென்றே தெரியவில்லை' என்று சத்தியமூர்த்தி கூறியிருந்த சொற்கள் இப்போது ஞாபகம் வந்தன. அதைக் கருத்தில் கொண்டு அப்போது தான் நின்றுக் கொண்டிருந்த இடத்துக்கு மிக அருகில் உள்ள குடை மல்லிகைச் செடியிலிருந்து இரண்டு பூக்களைப் பறித்துக் கூந்தலில் சொருகிக் கொண்டாள் பாரதி. அந்தப் பூக்கள் இரண்டும் அவற்றைச் சார்ந்த நினைவுமாக இணைந்து அதிகமாய் மணப்பது போல் இருந்தது. இலைகளே இல்லாமல் செடி முழுவதுமே பூக்களே நிறைந்த ஒரு ரோஜாச் செடியைக் கற்பனை செய்து கொண்டு பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் சத்தியமூர்த்தியின் பொன்மேனியையும் கற்பனை செய்யத் தோன்றியது அவளுக்கு. மல்லிகைப் பந்தல் என்ற மலைநாட்டு நகரத்தின் செம்மண் நிலம் மழை பெய்ததன் காரணமாக அன்று எப்படி நெகிழ்ந்து போயிருந்ததோ அப்படியே சத்தியமூர்த்தியைப் பற்றிய நினைவுகளால் அவள் மனமும் நெகிழ்ந்து போயிருந்தது. சுருக்கமாகச் சொன்னால் அவள் பைத்தியமாகியிருந்தாள். தோட்டத்திலிருந்து வீட்டுக்குள்ளே போய் மறுபடியும் அவள் தன் தந்தையின் அறையருகே சென்றபோது இண்டர்வ்யூவுக்கு வந்திருந்த மீசைக்காரர் விடைபெற்றுக் கொண்டிருந்தார். அவரை அனுப்பிவிட்டுத் தந்தையும், முதல்வரும், ஹெட்கிளார்க்குமாக ஏதோ பேசி விவாதிக்கத் தொடங்கவே அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்பதற்காகப் பாரதி திரை ஓரமாக நாற்கலியை எடுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். நிச்சயமாக அவர்கள் அப்போது ஆலோசனை செய்து விவாதிக்கிற விஷயம் 'தமிழ் விரிவுரையாளராக யாரை நியமிப்பது?' என்பதைப் பற்றியதாகவே இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு. முதலில் கல்லூரி முதல்வர் தான் பேச்சை ஆரம்பித்தார்.

"ஐந்தாறு ஆண்டுகளாவது, 'செர்வீஸ்' உள்ளவராக இருந்தால் தான் ஒருவர் நமக்குப் பயன்படுகிற நல்ல விரிவுரையாளராக அமைய முடியும். இப்போது வந்துவிட்டுப் போகிற இந்த முதியவர் நிறைய ஆண்டுகள் முன் அநுபவம் உள்ளவராக இருக்கிறார். இன்னொரு தகுதி - வயதானவராகவும் இருக்கிறார்..."

"அப்படியெல்லாம் தகுதிகளிலிருந்தும் இப்போது தாம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற கல்லூரியை விட்டுவிட்டு அவர் இங்கே எதற்காக வரவேண்டும்!"

- சிரித்தபடியே இப்படி வினாவிய குரல் தன் தந்தையினுடையதாக இருக்கவே பாரதிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தன் தந்தை இப்படி வினாவியதைப் பாராட்டி இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து 'அப்ளாஸ்' கொடுப்பது போல் தட்டிவிட இருந்தவள் தான் உட்கார்ந்திருந்த இடம், சூழ்நிலை ஆகியவற்றால் எச்சரிக்கை பெற்று இரண்டு கைகளையும் சேர்த்து ஓசைப்படாமல் பிரித்தாள். பிரின்ஸிபலும் தந்தையுமே விவாதித்தார்கள். ஹெட்கிளார்க் பயபக்தியோடு அடக்கமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். பிரின்ஸிபலின் வலுவற்ற மறுமொழிகளையும் தந்தையின் வலுவான வினாக்களையும் பாரதி மிக அருகிலிருந்து மறைவாகக் கேட்க முடிந்தது.

"ஒரு வேளை நம் கல்லூரியில் விரிவுரையாளர்களுக்குச் 'சம்பள ஸ்கேல்' அதிகம் என்று வருகிறார் போலிருக்கிறது...?" என்று வார்த்தைகளை இழுத்து இழுத்து நிறுத்தித் தயங்கியபடியே மெல்லச் சொன்னார் கல்லூரி முதல்வர்.

"இப்போது அவர் இருக்கிற இடத்தை விட்டு இங்கே சம்பளம் அதிகம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் வருகிறவராயிருந்தால் நாளைக்கு இதைவிட அதிகமாகச் சம்பளம் கிடைக்கிற ஓர் இடம் தெரிந்தால் இங்கே விட்டுவிட்டு அங்கே போகமாட்டார் என்பது என்ன நிச்சயம்?"

- கல்லூரி முதல்வரால் இந்தக் கேள்விக்கு ஒரு மறுமொழியும் கூற முடியவில்லை. மௌனம் நிலவியது. பின்பு அவள் தந்தை தான் முதலில் பேசினார். "பிர்ன்ஸிபல் சார்! காலையில் வந்திருந்த பையனை எனக்கு எல்லா விதங்களிலும் பிடித்திருக்கிறது. எதையெடுத்தாலும் விவாதம் செய்து எதிர்த்துப் பேசுகிறான் என்ற துடுக்குத்தனம் ஒன்றைத் தவிர அவனுடைய தோற்றம் படிப்பு எல்லாம் திருப்திகரமாயிருந்தன... வயது கொஞ்சம் குறைவு... மற்றபடி..."

"எனக்கென்னவோ அவனைப் பார்த்தால் பயமாயிருக்கிறது. எடுத்தெறிந்து பேசுகிறான். அவனுடைய மொழி வெறியைப் பார்த்தால் ஏதாவது அரசியல் கட்சியில் பங்கு கொண்டிருப்பானோ என்று கூடச் சந்தேகப்படுகிறேன். அவன் படித்த கல்லூரியும் அப்படிப்பட்டது. இப்படிப்பட்ட குறும்புத்தனமான திறமைசாலி ஒருவன் நம் கல்லூரியில் புகுந்து கொண்டு மாணவர்களை யெல்லாம் தனக்குத் தலையாட்டுகிறவர்களாக மாற்றிக் கவர்ந்து விட்டால் பிறகு கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்துவது எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சினையாயிருக்கும். இளம் பருவமும் தோற்றப் பொலிவும் கேட்பவர்களை மயக்கி விடுகிற பேச்சுக் கவர்ச்சியும் உள்ள இத்தகைய இளைஞனால் மாணவர்கள் மனங்களை விரைவில் கெடுக்க முடியும்."

"மொத்தத்தில் நீங்கள் பயப்படுகிறீர்கள்! இல்லையா?" என்று பிரின்ஸிபலைப் பார்த்துக் கேட்டு விட்டு நகைத்தார் பூபதி. எந்த அர்த்தத்தில் நகைத்தார் என்று புரிந்து கொள்ள முடியாத நகைப்பாயிருந்தது அது. சாமர்த்தியசாலிகளை எதிரே சந்திக்கப் பயப்படுகிற அந்த 'அப்பாவி பிரின்ஸிபலை' எண்ணி நகைக்கிறாரா, சத்தியமூர்த்தியின் துடுக்குத்தனத்தை இகழ்கிற பாவனையில் நகைக்கிறாரா... என்று எதிராளி விளங்கிக் கொள்ள முடியாமலிருந்தது அந்தச் சாதுரியமான சிரிப்பு.

அவர்களுடைய உரையாடலின் கடைசிப் பகுதியைக் கேட்டுக் கொண்டிருந்த பாரதிக்கு நெஞ்சு 'திக் திக்' என்று வேகமாக அடித்துக் கொண்டது. பிரின்ஸிபல் பேசிய அநியாயத்தை நினைத்து ஆத்திரத்தோடு கைகளைச் சொடுக்கினாள் அவள். நல்ல வேளையாக அவளுடைய நம்பிக்கை முற்றிலும் வாடிக் கருகிவிடாமல் அவள் தந்தையின் பேச்சு சிறிது ஆறுதல் அளிப்பதாக இருந்தது. சத்தியமூர்த்தி துடுக்குத்தனமாக எதிர்த்துப் பேசியது தன் தந்தையின் மனத்தைப் பாதித்திருந்தாலும் அவருடைய திறமைகளைத் தந்தை ஓரளவு புரிந்து கொண்டு மதிப்பதை அவள் இப்போது தெரிந்து கொண்டு விட்டாள். 'பிரின்ஸிபல் பிடிவாதமாக இருந்து காரியத்தைக் கெடுத்து விட்டால்?' என்ற கேள்வி எழுந்த போது அவளுக்கு ஒரே மலைப்பாயிருந்தது. இந்த நிலையில் சத்தியமூர்த்திக்காக ஏங்கும் அவள் மனம் சுறுசுறுப்பாகச் சிந்தனை செய்தது. தந்தையின் மனத்தில் இப்போதே சத்தியமூர்த்தியின் தகுதியைப் பற்றி முக்கால்வாசி நல்ல அபிப்பிராயம் நிறைந்திருக்கிறது. நிறையாமல் இருக்கிற மீதிக் கால் பகுதியையும் எப்படியாவது நிறையும்படி செய்துவிட்டால் கவலை இல்லை. யாருக்கு ஆர்டர் கொடுப்பது என்பதைப் பற்றி அவர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. 'அவர்கள் இனி என்ன முடிவு செய்யப் போகிறார்களோ?' என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் இந்த வினாடி வரை அவர்கள் ஒரு முடிவும் செய்யவில்லை என்பதே ஒரு திருப்தியாயிருந்தது அவளுக்கு.

அந்தக் கல்லூரியிலும் அதன் இலட்சியங்களிலும் பரிபூரணமான ஆர்வமுள்ளவர்களும், நம்பிக்கை உள்ளவர்களுமே அங்கு வேலைக்கு வரவேண்டுமென்று தாம் எதிர்பார்ப்பதாகக் கல்லூரி விழாக்களில் தலைமையுரையாற்றும் சந்தர்ப்பங்களில் பலமுறை தன் தந்தை பேசியிருப்பதை அவளே கேட்டிருக்கிறாள். தனக்கு அங்கு வரவேண்டுமென்ற ஆர்வம் மெய்யாகவே இருப்பதாகக் கல்லூரியைச் சுற்றிப் பார்த்துவிட்டு விடைபெறும்போது சத்தியமூர்த்தி தன்னிடம் கூறியதை நினைத்துக் கொண்டாள் பாரதி. தானே அவருக்கு ஒரு கடிதம் எழுதி 'நீங்கள் மெய்யான ஆர்வமும் இலட்சியமும் கொண்டுதான் இந்தக் கல்லூரிக்குப் பணியாற்ற வர விரும்புவதாகவும், என் தந்தையின் கல்விப்பணியில் உள்ள புனித இலட்சியங்களைப் பாராட்டுவதாகவும் அவருக்கு நேரடியாக ஒரு கடிதம் எழுதுங்கள்! நான் இங்கிருந்து தூண்டி எழுதச் சொல்லியதாகத் தெரிய வேண்டாம். நீங்களாகவே ஊர் திரும்பியதும் அவருக்கு எழுதுவது போல் உடனே எழுதுங்கள். இது மிகவும் அவசியம்' என்பதைத் தெரிவிக்கலாமா என்று எண்ணினாள். முன்பின் தெரியாது ஒரே ஒரு நாள் பழகிய ஆண்மகன் ஒருவனுக்கு அப்படித் திடீரென்று தான் கடிதம் எழுதலாமா என்ற தயக்கமும் பயமும் சூழ்ந்து கொண்டு அவளைத் தடுத்தன. சத்தியமூர்த்தியே அந்தக் கடித்தத்தைப் படித்துத் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டால் என்ன செய்வதென்றும் அவளுக்குப் பயமாக இருந்தது. தந்தையின் மனத்தை முற்றிலும் மாற்றுவதற்கு இதைத் தவிர வேறு வழி இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. தான் இதைச் செய்யலாமா கூடாதா என்று சிந்தித்துத் தவித்தபோது அவள் உடலில் குப்பென்று வியர்த்துக் கொட்டியது. அவளுடைய மனமும் எண்ணங்களும் போராடின. அவள் மனம் யார் மேல் எந்த விநாடியில் சத்தியத்தின் ஆழம் நிறைந்த அன்பை செலுத்தத் தொடங்கியதோ அந்த அன்புதான் வென்றது. அவள் பைத்தியமானாள். ஏதோ நான்கு வாக்கியங்கள் எழுத வேண்டுமென்று ஆரம்பித்த கடிதம் முழுமையாக இரண்டு தாள்களில், நான்கு பக்கங்களுக்கு வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு வாக்கியத்தின் வார்த்தைகளையும் எழுதிக் கொண்டிருக்கிற போதே 'தான் எவ்வாறு இப்படித் துணிந்தோம்? இப்படி ஓர் இளைஞனுக்குக் கடிதம் எழுதும் துணிவு தனக்கு எப்படி வந்தது?' என்ற வியப்பு அவளுள்ளே விசுவரூபம் எடுத்து அவளுள்ளேயே ஒடுங்கிக் கொண்டிருந்தது. அன்பின் ஆழத்திலிருந்து துணிவு பிறந்ததா, துணிவு பிறந்ததனால் அந்த அன்பு ஆழமாகிறதா என்று காரண காரியங்களைப் புரிந்து கொள்ள முடியாமலே விநோதமானதொரு தைரியத்தை அவள் அப்போது ஆண்டு கொண்டிருந்தாள். வெறி பிடித்தவள் போல் முனைந்து அந்தக் கடிதத்தை எழுதி முடித்த பின் ஏதோ மனத்தில் தோன்றவே நாணமும் புன்னகையும் சாயலிடும் முகபாவத்தோடு சற்று முன்பு தான் தனது கூந்தலின் உள் முடியில் சொருகிக் கொண்டிருந்த அந்த இரண்டு குடை மல்லிகைப் பூக்களையும் அவசரமாகவும் பரபரப்புடனும் எடுத்துக் கடிதத்தாள்களின் மடிப்புக்குள் வைத்து உறையிலிட்டு ஒட்டினாள். 'எந்த முகவரிக்கு இதை அனுப்புவது' என்ற முக்கியமான பிரச்சினை - எல்லா முக்கியமான பிரச்சினைகளும் - வழக்கமாக ஞாபகம் வருவதைப் போல் கடைசியில் ஞாபகம் வந்து அவளைத் திணறச் செய்தது. அப்பாவின் அறைக்குள் அவரது மேஜை மேல் அந்த ஆண்டு கல்லூரியின் எல்லாப் பதவிகளுக்கும் விண்ணப்பம் அனுப்பியவர்களின் முகவரி டைப் செய்யப்பட்டு இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், 'அதை எப்படி எடுப்பது?' என்ற தயக்கத்தோடு அவள் திரையை விலக்கி முன்பக்கத்து அறைக்குள் எட்டிப் பார்க்கவும் பிரின்ஸிபலோடும் ஹெட்கிளார்க்கோடும் பேசிக்கொண்டே அப்பா வெளிப்புற வராந்தாவுக்குச் செல்லவும் சரியாயிருந்தது. பதறும் கால்களால் பூனை போல் அடியெடுத்து வைத்து அப்பாவின் மேஜையருகே சென்று டைப் செய்த காகிதங்களை மெதுவாகப் புரட்டினாள் அவள். அந்த முகவரிகள் மேலாகவே இருந்தன. மூன்றே மூன்று வரிகளில் பெயர் ஊர் என்ற வரிசைப்படி இருந்த சத்தியமூர்த்தியின் முகவரியை நன்றாக ஞாபகத்தில் பதித்துக் கொண்டு உள்ளே ஓடிப்போய் உறையில் அதை அவசர அவசரமாக எழுதினாள். அப்படி எழுதும்போதே அந்த முகவரி அவள் மனத்தில் நிரந்தர ஞாபகமாகப் பதிந்து கொண்டது. பங்களா வாசலில் எதிர்ப்புறம் மரத்தடியில் தபால்பெட்டி உண்டு. வேறு யாரிடமும் கொடுப்பதற்கில்லை என்பதால் அப்பாவுக்குத் தெரியாதபடி தானே நேரில் போய்த் தபாலில் சேர்த்துவிட்டு வர எண்ணி அப்பா எங்கே இருக்கிறார் என்று பார்த்தாள் பாரதி. வராந்தாவின் மேலக்கோடியில் பிரின்ஸிபலோடும் ஹெட்கிளார்க்கோடும் பேசிக் கொண்டிருந்தார் அப்பா. செடிகளின் மறைவில் பதுங்கிப் பதுங்கி வெளியேறித் தெருவுக்கு வந்தாள் அவள். அப்போதுதான் தபால் பெட்டியைத் திறந்து மஞ்சள் பையில் கடிதங்களை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான் தபால் இலாகா ஊழியன். விரைந்து ஓடிப்போய் அவள் அந்த உறையைப் பெட்டியில் போட்டாள். தபால் ஊழியன் அதையும் சேர்த்துத் தபால் பையில் போடுவதைத் தன் கண்களாலேயே அவள் பார்த்துத் திருப்தியும் கொண்டுவிட்டாள். அப்போது தற்செயலாகத் தனக்குப் பின்னால் யாரோ வந்து நிற்பது போலவும் தன்னையே கவனிப்பது போலவும் தோன்றவே அவள் திரும்பினாள், திகைத்தாள்.

அத்தியாயம் - 7

வாழ்க்கையாகிய பந்தயத்தில் இந்த விநாடி வரை பொய்யையும் வஞ்சகத்தையும் முதலாக வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறவர்கள் தான் மிக வேகமாக முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

சத்தியமூர்த்தியின் உள்ளே வருத்திக் கொண்டிருந்த அந்த நேரத்து மனத்தின் கவலைகளும் வேதனைகளும் அப்போது ஏற்பட்ட இந்தத் திகைப்பினால் சற்றே விலகின. எதிர்பாராத வேளையில் எதிர்பாராத சூழ்நிலையில் எதிர்பாராத மனிதரோடு வந்து நிற்கும் அந்தப் பெண்ணின் மேல் அவனுக்கு முதலில் அடக்க முடியாத கோபம் தான் ஏற்பட்டது. அவளை ஏறிட்டுப் பார்த்தாலோ கோபப்படுவதற்கும் கடிந்து கொள்ளுவதற்கும் அவள் பாத்திரமில்லை என்று தோன்றியது.

அழுது அழுது சிவந்து போன கண்களும், சோர்ந்து வாடிய முகமுமாக, அந்தச் சோர்விலும், வாட்டத்திலும் கூடத் தான் இருப்பதைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிற அழகும் கவர்ச்சியும் மறையாதபடி காட்சியளித்தாள் அவள். பிரபஞ்சமாகிய பெரிய மலர் தன் உயிர் இதழ்களை ஒவ்வொன்றாக விரித்து மலர்கின்ற அந்த வைகறை வேளையில் நட்சத்திரங்களோடு கூடிய நீல வானத்தின் நெடும் பெரும்பரப்பில் அழகானதொரு பகுதியை அப்படியே கிழித்தெடுத்துச் சுற்றிக் கொண்டு கீழிறங்கி வந்த மின்னலைப் போல் கண்ணில் பதிந்து கொண்டு போக மறுக்கும் கட்டழகாய் எதிரே வந்து நின்றாள் மோகினி. குலை குலையாகத் தொங்கும் கருப்புத் திராட்சைக் கொத்துக்களின் தொகுதியைப் போல் சுருண்டு நெளியும் கருங்கூந்தல். அதில் சிற்றலையோடி மின்னும் கருமையில் ஓர் அழகு. செவிகளின் ஓரங்களில் குணடலங்களாய்ச் சுருண்டு சுழன்று கொண்டிருக்கும் கேசச் சுழற்சியில் ஓர் அழகு. சவுக்குத் தோப்பில் நீளும் ஒற்றையடிப் பாதையினைப் போல் நடுவே வெள்ளிக் கோடாய் மினுக்கும் நேர்வகிட்டில் ஓர் அழகு - என்று இப்படி ஒவ்வொன்றாய் விரல் விட்டு எண்ணுகிற பல அழகுகளுக்கும் இடமாயிருக்கும் ஒரே ஓர் அழகாக அவள் நிற்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் அவனுடைய மனத்தின் கோபம் முழுமையாக அடங்கவில்லை. "இப்போது என்ன காரியமாக என்னைத் தேடி வந்தீர்கள் இங்கே?" என்று சத்தியமூர்த்தி அவளைக் கேட்ட கேள்வியில் இப்படி இந்த நிலையில் இங்கே என்னைத் தேடி வந்திருக்க வேண்டாம் என்றோ வந்திருக்கக் கூடாது என்றோ தான் அபிப்பிராயப்படுகிற கடுமை கேட்கப் படுகிறவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படி தொனித்தது. "ஒன்றுமில்லை! இதை உங்களிடம் கொடுத்து விட்டுப் போக வந்தேன், இரயிலில் தவற விட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள்" என்று அவனுடைய பேனாவை எடுத்து நீட்டினாள் அவள். அப்போது அவள் எதற்காக அங்கே வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டு பேனாவை அவள் கையிலிருந்து வாங்கிக் கொண்ட போது சற்று முன்பு தான் அவளைக் கேட்டிருந்த கேள்வியின் கடுமைக்காக நாணினான் சத்தியமூர்த்தி. கண்ணாயிரம் காரின் அருகிலேயே நின்று கொண்டு விட்டார். அந்த முதிய அம்மாள் காருக்குள்ளேயிருந்து கீழே இறங்கவேயில்லை. வீட்டு வாசலில் சத்தியமூர்த்தியும் அந்தப் பெண்ணும் தான் தனியே நின்று கொண்டிருந்தார்கள். அவன் அவளுடைய உதவிக்காக நன்றி கூறினான். "பேனாவை இரயிலில் தவற விட்டு விட்டு எப்படி ஞாபகக் குறைவாக வீடு வந்து சேர்ந்தேனென்று எனக்கே தெரியவில்லை. நல்ல வேளையாகக் காப்பாற்றிக் கொண்டு வந்து கொடுத்து விட்டீர்கள்... நிரம்ப நன்றி..."

"வெறும் பேனாவைக் காப்பாற்றிக் கொடுத்ததற்கே இவ்வளவு நன்றியானால் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்தவர்களுக்கு எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்" என்று சொல்லிச் சிரித்தாள் அவள். இப்படி இந்த வாக்கியத்தைச் சொல்லுவதற்குரிய சாமர்த்தியம் அவளிடம் இருந்ததை இரசித்தான் சத்தியமூர்த்தி. அழகிய இதயத்திலிருந்து தான் அழகிய வாக்கியங்கள் பிறக்க இயலுமென்று சில சமயங்களில் அநுமானம் செய்ய முடியும். முகம் அழகாயிருப்பவர்களுக்குச் சித்தமும் அழகாயிருப்பதைப் புரிந்து கொண்டால் எத்தனை பூரிப்பு அடைய முடியுமோ அத்தனை பூரிப்பைச் சத்தியமூர்த்தியும் அப்போது அடைந்தான். 'சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை' என்ற மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஞாபகத்தின் மெல்லிய சாயலாக மனத்தில் தோன்றியது அவனுக்கு. உடம்பு மட்டுமில்லாமல் மனமும் அழகாக இருந்தாலொழிய இவ்வளவு அழகான வாக்கியத்துக்குச் சொற்கள் அவளுக்குக் கிடைத்திருக்க முடியாதென்று சத்தியமூர்த்தி நினைத்தான். 'சித்தம் அழகியார்' என்ற அர்த்த நிறைவுள்ள கவிச்சொற்றொடர் மீண்டும் மீண்டும் அவன் இதயத்தில் புரண்டு எதிரொலிக்கலாயிற்று.

தெருவில் காருக்குள் உட்கார்ந்த அந்த அம்மாளும் கண்ணாயிரமும் வெறுப்போடு தன் பக்கமாகப் பார்ப்பதைக் கண்டு சத்தியமூர்த்தி அந்தச் சந்திப்பை விரைவில் முடித்துக் கொள்ள எண்ணினான். அவர்கள் பார்வை அவனை வேதனைப்படுத்துவதாக இருந்தது.

"அவர்கள் உங்களை அவசரமாக எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது. நீங்களானால் என்னோடு பேசிக் கொண்டு நின்றே நேரத்தைக் கழிக்கிறீர்கள்" என்று அவர்களைச் சுட்டிக் காட்டி அவளிடம் சொன்னான் சத்தியமூர்த்தி.

"இருக்கட்டும்! பரவாயில்லை. அம்மாவுக்குத் தலைகால் பிடிபடாது. வாயெல்லாம் பல்லாகிவிடும். ஏதோ கூந்தல் தைலம் தயாரிக்கும் கம்பெனியாம். அதன் விளம்பரத்துக்காக நான் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு போட்டோவுக்கு உட்காரணுமாம்! எல்லாம் நான் பண்ணின பாவம், என் தலையெழுத்து..."

"போட்டோவை எடுத்த பின் அதற்குக் கீழே 'எங்கள் கூந்தல் தைலத்தை உபயோகித்ததனால் நாட்டிய நட்சத்திரம் மோகினியின் கூந்தல் செழித்திருப்பதைப் பாருங்கள்' என்று விளம்பரம் வேறு செய்வார்கள். இப்போதே நீங்கள் இப்படி நொந்து கொண்டால் என்ன செய்வது?"

"அப்படிச் செய்தால் அவர்கள் மூஞ்சியில் காரித் துப்பிவிட்டு வருவேன். அம்மா கையால் வெறும் தேங்காயெண்ணையைக் குழப்பித் தடவி வாரிவிட்டு வளர்ந்த தலை இது. 'மயில் தோகை மார்க் கூந்தல் தைலக்காரன்' இதைக் காட்டிப் பெருமை கொண்டாடுவதற்கு ஒன்றுமே இல்லை."

"இப்படி ஒன்றைக் காட்டி மற்றொன்றுக்குப் பெருமை சேர்ப்பதுதான் விளம்பரம்" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே வீட்டுக்குள் படியேறிப் போவதற்காகத் திரும்பினான் சத்தியமூர்த்தி. கண்ணாயிரமும் அவர் காரில் கொலு வீற்றிருக்கும் முதிய அம்மாளும் கணத்துக்குக் கணம் பொறுமை இழந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டே அவன் தன் உரையாடலை அவ்வளவு அவசரமாக முடித்துக் கொண்டு உள்ளே போக முந்தினான். அந்தப் பெண்ணோ போய்க் காரில் ஏறிக் கொள்ளவே மனமில்லாதவளாய்த் தயங்கித் தயங்கி ஏதோ இன்னும் சொல்ல வேண்டும் என்றோ, சொல்ல மீதமிருப்பதாகவோ நினைத்து நிற்பது போல நின்றாள். 'நீங்கள் புறப்படுங்கள் நேரமாகிறது' என்று நேருக்கு நேர் அவளிடம் சொல்லக் கூசியவனாக அதைச் சொல்வதற்குப் பதில் புலப்படுத்தும் நோக்குடனேயே வீட்டுக்குள் போவதற்குத் திரும்புகிறவனைப் போல் திரும்பியிருந்தான் சத்தியமூர்த்தி.

"என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வருகிறேன்" என்று சித்திரம் போல் அடக்கமாக நின்று தெருவில் அவள் கைகூப்பிய காட்சி மிகவும் அழகாயிருந்தது. தான் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை எதுவோ அது தன் நினைப்பில் இல்லாமல், தன் நினைப்பிலிருக்கும் வாழ்க்கை எதுவோ அதைத் தான் வாழ முடியாமல் வேதனைப்படுகிற அந்த அபலைப் பெண் விடைபெறுகிற போது இன்னதென்று உறுதியிட்டுச் சொல்ல முடியாததோர் அவல உணர்வு சத்தியமூர்த்தியின் நெஞ்சைப் பிசைந்தது. நெஞ்சுக்கு நேரே சட்டையில் சொருகிக் கொள்வதற்காகப் பேனாவைக் கை மேலே உயர்த்திய போது அதிலிருந்து ஒரு நறுமணம் அலையாகப் பரவி அவன் நாசியை நிறைத்தது. அந்தப் பெண் மோகினியைப் பற்றிய அநுதாப நினைவை நெஞ்சின் உள்ளேயும், அவள் காப்பாற்றிக் கொடுத்த பேனாவை நெஞ்சின் வெளியேயும் வைத்துக் கொண்டு வீட்டுப் படிகளில் ஏறி உள்ளே சென்றான் சத்தியமூர்த்தி. அப்பா ஊஞ்சலில் உட்கார்ந்தது உட்கார்ந்தபடி மலைத்துப் போயிருந்தார். ஆண்டாள் கூடத்தை மெழுகிக் கொண்டிருந்தாள். கல்யாணியும் அம்மாவும் கிணற்றடியில் இருந்தார்கள். அப்போது தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதற்கே தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது அவனுக்கு. வெளியில் எங்கேயும் போகப் பிடிக்காமல் வீட்டுக்குள் இருப்பதும் வேதனையாக, மறுபடியும் தன் மேலேயே வெறுப்புப் பிறந்தது அவனுக்கு. எப்படியெப்படியோ உயர்ந்த இலட்சியங்களோடு வாழ வேண்டும் என்ற ஆசையும் அப்படியெல்லாம் வாழ முடியாத வறுமையையும் சேர்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் இந்த நாட்டு மத்தியத் தரக் குடும்பத்து இளைஞர்கள் பலர் இயல்பாக அடையும் மனவாட்டத்தை அப்போது அவனும் அடைந்தான். வாழ்க்கையும் அதன் நீதி நியாயங்களும் ஏதோ ஒரு காரணத்தால் வெறுப்புக்குரியனவாக அமைந்து விட்டாற் போல் எண்ணி எண்ணிப் புழுங்கினான் சத்தியமூர்த்தி.

அப்பாவைப் போல் கால் நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாகப் பள்ளி ஆசிரியராக இருந்து வறுமையால் மனமும் உடலும் தேய்ந்தவர்களைப் பற்றி ஒரு புறமும், கண்ணாயிரத்தைப் போல் குறுக்கு வழியில் தாவி ஓடி முன்னுக்கு வந்து பிரமுகராகி விட்டவர்களைப் பற்றி ஒரு புறமுமாகச் சத்தியமூர்த்தியின் மனத்தில் எண்ணங்கள் மோதின. வாழ்க்கையாகிய பந்தயத்தில் பொய்யையும் வஞ்சகத்தையும் முதலாக வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறவர்கள் முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளவும் பொறுத்துக் கொள்ளவும் முடியாமல் இதயம் கொதித்தது அவனுக்கு. இப்படி மனம் தவிக்கும் வேளைகளில் சக்தி வாய்ந்த கருத்துக்களைச் சொல்லும் நூல்கள் எவற்றையாவது எடுத்துப் படிக்க வேண்டுமென்று தோன்றுவது சத்தியமூர்த்தியின் வழக்கம். இன்றும் அவனுக்கு அப்படியே தோன்றியது. அப்பாவுக்கும் அவனுக்கும் காப்பியை எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள் கல்யாணி. காப்பியைக் குடித்துவிட்டுப் புத்தக அலமாரியிலிருந்து சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் உபதேச மொழிகளும் அடங்கிய தொகுதி ஒன்றை எடுத்தான் சத்தியமூர்த்தி. எடுத்த எடுப்பில் அவன் கைகள் அந்தப் புத்தகத்தின் எந்தப் பக்கத்தைப் பிரித்தனவோ அந்தப் பக்கத்திலேயே சற்று முன் அவன் மனம் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை விளக்கப்பட்டிருந்தது.

"உனது வறுமையைப் பற்றிய நினைவுகளை நீ ஒரு பக்கம் விட்டுவிடுக. எந்த எந்த வகையில் நீ ஏழை? இரண்டு குதிரைகளும் ஒரு வண்டியும் இல்லையென்றா, அழைத்ததும் ஓடிவந்து முன் நிற்கும் ஏவலாட்களும், பரிவாரமும் உனக்கு இல்லை என்றோ நீ வருந்துகின்றாய். அதனால் என்ன? உனது நெஞ்சின் இரத்தம் சொட்டச் சொட்டப் பிறர்க்காக அல்லும் பகலும் உழைப்பாயாயின் நீ செய்ய முடியாமல் போவது எதுவுமில்லை என்பதை நீயே உணர்வாய்."

எவ்வளவு சக்தி வாய்ந்த கருத்துள்ள வாக்கியங்கள் இவை! சத்தியமூர்த்தி நினைக்கலானான்: 'நானும் தான் இந்த வீட்டின் துன்பங்கள் விடிவதற்காக நெஞ்சின் இரத்தம் சொட்டச் சொட்ட உழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்! ஆனால் எங்கு உழைப்பது? எங்காவது எப்படியாவது உழைத்துத்தான் ஆகவேண்டுமென்கிறார் அப்பா. இந்த விதமான இடத்தில் இப்படித்தான் உழைக்க வேண்டும் என்று நானாகவே மனத்தில் ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படி நினைப்பதும் எதிர்பார்ப்பதும் தான் என்னுடைய அகம்பாவம் என்று அப்பா அபிப்பிராயப்படுகிறார். இனிமேலும் தொடர்ந்து இந்த வீட்டில் அப்பாவோ மற்றவர்களோ என்னைப் பற்றி இப்படி நினைக்க இடமளித்துக் கொண்டு நான் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடாது. மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையாவது எனக்குக் கிடைத்து நான் அங்கே போய்ச் சேர்ந்து விட வேண்டும். அந்த ஊரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்தக் கல்லூரியையும் அதன் அமைப்பு முறைகளையும் நான் விரும்புகிறேன். ஆனால் அந்தக் கல்லூரி அதிபருக்கும் முதல்வருக்கும் என்னைப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பதைத்தான் நான் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை' - என்று சத்தியமூர்த்தி தனக்குத் தானே மூழ்கிச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, "சத்யம்! இப்படி வந்து விட்டுப் போயேன்" என்று உள்புறமிருந்து அம்மா குரல் கொடுத்தாள். புத்தகத்தை மூடி வைத்து விட்டு, "இதோ வந்துவிட்டேன் அம்மா..." என்று உள்ளே எழுந்து சென்றான் சத்தியமூர்த்தி.

அவன் போய்விட்டு வந்த மல்லிகைப் பந்தல் ஊரைப் பற்றியும் அந்த ஊர்க் கல்லூரி வேலையைப் பற்றியும் பெண்களுக்கு இயல்பாகக் கேட்கத் தோன்றும் சில கேள்விகளால் அம்மாவும், அவனை விசாரித்தாள். "மல்லிகைப் பந்தல் கல்லூரியில் எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள்? எவ்வெப்போதெல்லாம் விடுமுறைக்கு மதுரைக்கு வரலாம்? அந்த வேலையில் மேற்கொண்டு முன்னேற்றத்துக்கு ஏதாவது வழி உண்டா?" என்பனவற்றைப் போல் சாரமில்லாதனவும், அந்த வேலை நிச்சயமாகக் கிடைத்து விடும்போல் பாவித்துக் கொண்டு கேட்கப்பட்டனவுமாகிய பேதைத் தன்மை நிறைந்த அம்மாவின் கேள்விகளுக்கு ஆத்திரப்படாமல் நிதானமாக மறுமொழிகளைச் சொன்னான் சத்தியமூர்த்தி.

"என்ன பதில் பேசாமல் இருக்கிறாய்?" என்று இரண்டாம் தடவையாகவும் அம்மா அழுத்திக் கேட்ட போது, "கிடைத்து விடும் என்று தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் அம்மா!" என்று பதில் வந்தது சத்தியமூர்த்தியிடமிருந்து. அதற்குப் பின்பு அம்மா அடுப்புக் காரியங்களைக் கவனிக்கப் போய்விட்டாள். மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையைப் பற்றி எல்லாரும் விசாரிக்கிற அக்கறையைப் பார்த்தால் அது தனக்குக் கிடைக்க வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பதும் நம்புவதும் அவனுக்குத் தெரிந்தது. ஏமாற்றத்தை ஏற்கவும் தாங்கிக் கொள்ளவும் அதற்கு ஆளாகிறவன் தயாராக இருந்தாலும் அவனைச் சுற்றியிருக்கிறவர்கள் தயாராயிருக்க விரும்பாத சில சந்தர்ப்பங்கள் உண்டு. தான் இப்போது இருக்கிற சூழ்நிலை அப்படிப்பட்டதென்று சத்தியமூர்த்தி மிக நன்றாக உணர்ந்திருந்தான். அப்போது இன்னோர் எண்ணமும் அவனுக்குத் தோன்றியது. 'தான் நலமாக ஊர் திரும்பி வந்து சேர்ந்ததைப் பற்றியும், 'இண்டர்வ்யூ'வின் போது அன்பாகவும், பரிவுடனும் நடந்து கொண்டதற்கு நன்றி சொல்லியும் பூபதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினால் என்ன?' என்று நினைத்தான். அடுத்த கணமே 'அப்படி எதற்காக எழுதவேண்டும்?' என்ற தயக்கமும் ஏற்பட்டது. நன்றி சொல்வதைச் சிலர் வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொள்வார்கள். இந்த நன்றியைச் சொல்வதனால் இன்னும் வேறு எந்த உதவியை எதிர்பார்க்கிறார்களோ என்று பயந்து நன்றியை ஏற்றுக் கொள்ளவே தயங்குகிறவர்களும் இருப்பது சத்தியமூர்த்திக்குத் தெரியும். நன்றி என்ற குணத்தின் மானத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் இப்படிப்பட்டவர்களுக்கு நன்றி சொல்வதை நிறுத்திவிட வேண்டும். இதில் பூபதி அவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்று அந்த ஒரு நாள் பழக்கத்தில் அவனால் தீர்மானம் செய்ய முடியவில்லை.

காலை பத்து மணிக்குக் கிணற்றடியில் குளிக்கப் போனவன் - அப்போதும் பூபதிக்குக் கடிதம் எழுதுவதா வேண்டாமா என்ற இதே சிந்தனையில் தான் இருந்தான். அப்பா டியூஷன் வீடுகளுக்குச் சென்று வர வெளியே போயிருந்தார். அவர் திரும்பி வந்து மறுபடியும் இதைப் பற்றிப் பேச்சைத் தொடங்கினால் என்ன செய்வதென்று திகைப்பாகவும் இருந்தது அவனுக்கு. அந்த நிலையில் நண்பர்கள் யாராவது தேடி வர நேர்ந்து அவர்களிடம் மனம் விட்டுப் பேசினால் கூட நல்லதென்று நினைத்தான் அவன். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி நண்பர்கள் எவரும் அப்போது அவனைத் தேடி வரவில்லை. வெளியூரிலிருந்த நண்பர்கள் இருவரிடமிருந்து கடிதங்கள் வந்திருந்தன. அவன் குளித்துக் கொண்டிருந்த போதே முதல் தபாலில் அந்தக் கடிதங்கள் வந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. தங்கை ஆண்டாள் தபால்காரனிடமிருந்து அவற்றை வாங்கிக் கொண்டு வந்து வைத்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டு ஈர உடையைக் களையாமலே கடிதங்களை ஆவலோடு பிரித்தான் சத்தியமூர்த்தி. அவனைப் பொறுத்தவரை அப்போதிருந்த மனநிலையில் இரண்டு கடிதங்களிலுமே சுவையில்லாத செய்திகள் தான் நிரம்பியிருந்தன. 'ஏதாவதொரு கல்லூரியின் விரிவுரையாளராயிருந்து கொண்டே ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்து எழுதினால் உனக்கு இருக்கிற பொது அறிவுக்கும் புத்திக் கூர்மைக்கும் நிச்சயமாகத் தேறிவிடுவாய்' என்று சத்தியமூர்த்திக்குப் பிழைக்கும் வழியை உபதேசம் செய்திருந்தான் ஒரு நண்பன். பணக்கார வீட்டில் ஒற்றைக்கொரு பிள்ளையாகப் பிறந்து, அந்த வீட்டின் முடிசூடா இளவரசனாக இருந்து வரும் இன்னொரு நண்பனோ காஷ்மீருக்கு உல்லாசப் பிரயாணம் புறப்பட இருப்பதாகவும் சத்தியமூர்த்தியும் உடன் வந்தால் தன் செலவில் அழைத்துப் போகத் தயாராயிருப்பதாகவும் எழுதியிருந்தான். படித்துக் கடிதங்களை வைக்கும் போது சத்தியமூர்த்திக்குச் சிரிப்புதான் வந்தது.

'ஒரு நண்பன் வாழ வ்ழி சொல்லிக் கொடுத்திருக்கிறான். இன்னொரு நண்பனோ வாழ்க்கையை அனுபவிக்க ஆயிரம் மைல் பயணம் செய்து போய் வரலாம் என்று அழைக்கிறான்! எனக்கென்ன குறை?' என்று பாதி வேதனையாகவும் பாதி வேடிக்கையாகவும் முணுமுணுத்தபடி உடைமாற்றிக் கொண்டு வர உள்ளே சென்றான் அவன்.

திரும்பி வந்து பன்னிரண்டு பன்னிரண்டரை மணி வரை புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். புத்தகத்தை மூடி வைத்து விட்டுப் படித்ததை அசை போட்டுச் சிந்திப்பதில் சிறிது நேரம் கழிந்தது. அதற்குள் அப்பா வெளியிலிருந்து திரும்பி வந்தார். பகல் உணவுக்கு இரண்டு பேரும் சேர்ந்து தான் உட்கார்ந்தார்கள். சாப்பிடும் போது தந்தை தன்னிடம் ஏதாவது பேசத் தொடங்குவார் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை. சாப்பிட்டு முடித்துக் கை கழுவுகின்ற வரை இருவரும் எதைப் பற்றியும் பேசிக் கொள்ளவே நேரவில்லை. வாயிலில் இரண்டாவது மெயில் தபால்காரன் சத்தியமூர்த்தியின் பெயரைச் சொல்லி ஓர் உறையை உள்ளே எறிந்து விட்டுப் போனான். இப்போதும் ஆண்டாள் தான் போய் எடுத்து வந்தாள்.

"இதென்ன அண்ணா? மல்லிகைப் பந்தல் ஊரிலிருந்து வருகிற கடிதம் கூட மல்லிகைப் பூமணம் மணக்கும் போலிருக்கிறதே?" என்று தங்கை அந்தக் கடித உறையைக் கொடுத்த போது சத்தியமூர்த்தி அதைக் கையில் வாங்கியதுமே அந்த வாசனையை உணர்ந்தான். 'ஒருவேளை ஆர்டராக இருக்குமோ?...' என்ற பாவனையில் அப்பா அவன் முகத்தை ஆவலோடு நிமிர்ந்து பார்த்துத் தயங்கினார். உறையும் கிழியாமல் உள்ளே இருப்பதும் கிழியாமல் இரண்டு நூலிழை அளவுக்கு ஓர் ஓரமாக உறையைக் கிழித்து உள்ளே இருந்ததை எடுத்தான் சத்தியமூர்த்தி. கடித மடிப்பினிடையே மலர்ந்த புதுமையோடும் இல்லாமல் நன்றாக வாடியும் இல்லாமல் நசுங்கி வதங்கி மணக்கும் குடைமல்லிகைப் பூக்கள் இரண்டு இருந்தன. சத்தியமூர்த்தி ஆச்சரியமடைந்தான். உறையில் குண்டு குண்டாக எழுதியிருந்த முகவரி எழுத்துக்களைப் பார்த்த போதே அது கல்லூரி ஆர்டராக இருக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. இப்போது அது ஆர்டர் இல்லை என்பதும் நிச்சயமாகிவிட்டது. 'ஆச்சரியம்' என்ற வார்த்தையோடுதான் அந்தக் கடிதமும் ஆரம்பமாகி இருந்தது. எழுத்துக்கள் குண்டு குண்டாக வரி பிறழாமல் தேர்ந்து பழகின கை பூத்தொடுத்த மாதிரி இருந்தன.

"...உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் துணிந்து எழுதுவதே ஆச்சரியமாயிருக்கலாம். இதை எப்படித் தொடங்குவதென்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே எப்படி முடிப்பதென்றும், எந்த இடத்தில் முடிப்பதென்றும் கூடத் தெரியாமல் போகலாம். உங்களை எப்படி அழைத்து இந்தக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று சிந்தித்துத் தயங்குவதிலேயே அதிக நேரம் வீணாகக் கழிந்துவிட்டது. அன்பின் பரிபூரணமான தன்மை கனிந்து நிற்கிறாற் போல் ஓர் அழகிய அழைப்பைத் தேடினேன். அப்படிப் பல அழைப்புக்கள் அடுக்கடுக்காகத் தேடினேன். எந்தச் சொல் அதிக அழகாயிருக்கும், எதை எழுதினால் உங்கள் மனம் கவரப்படும் என்றெல்லாம் நினைத்து நினைத்துத் தயங்கிய பின் எதையும் எழுதாமல் அழைக்கப்பட வேண்டிய அந்த இடத்தை புள்ளிகளால் மட்டும் நிரப்பினேன். பிரியமுள்ள மனிதரை மனப்பூர்வமாகக் கூவி அழைப்பதில் மிகவும் ஆற்றல் வாய்ந்த பதச்சேர்க்கை எதுவோ அது அந்த இடத்தில் உங்களுக்குத் தோன்றட்டும். செய்யலாமா, கூடாதா என்று தயங்கிவிட்டு முடிவில் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் தான் இதை எழுதுகிறேன். இதை எழுத எண்ணிய போதும், எழுதிக் கொண்டு இருக்கும் போதும், நான் அடைந்து கொண்டிருக்கிற உற்சாகத்தை இதற்கு முன்பு எப்போதும் அடைந்ததில்லை. வாழ்க்கையில் இப்படி முன்பின் சொல்லிக் கொள்ளாமல் வருகிற மகிழ்ச்சியை என்னென்பது? இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதத் துணிந்ததைப் பற்றியோ, எழுதியதைப் பற்றியோ நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று எண்ணும்போது எனக்கு பயமாகவும் தயக்கமாகவும் தான் இருக்கிறது. ஆனாலும் இதை நான் உங்களுக்கு எழுதித்தான் ஆகவேண்டும். நீங்கள் ஒரு பாடல்... அப்பாவிடம் இண்டர்வியூவின் போது சொல்லிக் கொண்டிருந்தீர்களே... அந்தப் பாடல் தான் எனக்கு இப்போது என் மனநிலையை உங்களிடம் சொல்வதற்குத் துணையாயிருந்தது. நான் உங்களிடம் எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லுவதற்குச் சரியான வார்த்தைகள் அந்தப் பாடலிலிருந்துதான் எனக்குக் கிடைக்கின்றன. செம்மண் நிலத்தில் மழை பெய்தாற் போல் தான் நானும் இப்போது உங்கள் ஞாபகத்தில் இணைந்து உங்களைச் சார்ந்ததன் வண்ணமாக இருக்கிறேன். உங்கள் செந்தாமரைப் பாதங்களைத் தான் நான் முதல் முதலாக என் கண்களால் பார்த்தேன். அந்தப் பாதங்களைப் பார்த்தபின் முகத்தைப் பார்க்கும் துணிவு எனக்கு வரவில்லை என்பதா, அல்லது அந்தப் பாதங்களிலேயே மேலே எதையும் பார்த்துத் தவிக்கும் அதிக நோக்கமில்லாமல் என் உணர்வுகள் யாவும் ஐக்கியமாகிவிட்டன என்பதா... எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என் மனநிலையில் இருந்தால் இதை இன்னும் அழகாகச் சொல்லுவீர்கள்; எனக்கும் சொல்லிக் கொடுப்பீர்கள். வேடிக்கையாகவோ, பிரமையாகவோ உங்கள் பாதங்களைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு கற்பனை தோன்றியது. அற்புதக் காட்சியாக என் கண்களுக்கு மட்டுமே தோன்றிய அந்தக் கற்பனை பைத்தியக்காரத்தனமாகவும் இருக்கலாம். ஆனாலும் பொய்யோ புனைவோ வெறும் பிரமையோ எதுவாயிருந்தாலும் என் மனத்தில் தோன்றிய அழகை நான் சொல்வதற்கு எனக்கு உரிமை உண்டு. உங்கள் கால்கள் மிதித்துக் கொண்டு போகிற இடமெல்லாம் அப்படி நடந்து முடித்து மறுகணமே ரோஜாப்பூ பூத்துக் கொட்டுவது போல் பிரமையாயிருந்தது. இன்று மாலை தோட்டத்தில் போய் நின்று ரோஜாப் பூக்களைப் பார்த்த போதும் இதையே நினைத்தேன். இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுத நினைத்ததற்குக் காரணம் வேறு. பெண்களால் சுற்றி வளைக்காமல் நேரடியாக எதையும் சொல்லிவிட முடியாது. எதையோ அவசரமாகவும் அவசியமாகவும் உங்களுக்குச் சொல்லிவிட நினைத்து வேறு எதை எதையோ வீணுக்கு வளர்த்து எழுதிக் கொண்டு போகிறேன். அதற்காகவும் என்னை மன்னித்து விடுங்கள்.
'இண்டர்வ்யூ' முடிந்ததும் சாப்பிட்டு நீங்கள் விடை பெற்றுப் புறப்படுகிற நேரத்துக்கு மழை வந்து என்னைப் பாக்கியசாலியாக்கியது. மழை வந்திராவிட்டால் உங்களைக் கல்லூரிக்கும் பஸ் நிலையத்துக்கும் கொண்டு போய் விடுகிற வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்காது. மழை வந்திராவிட்டால் 'செம்புலப் பெயல் நீர்போல' என்ற உங்கள் உவமையை உங்களுக்கு முன்னாலேயே பிரத்யட்சமாக நான் புரிந்து கொண்டிருக்க முடியாது. உங்களைப் பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் நான் திகைப்பு அடையும்படியான காட்சி ஒன்றை இங்கே கண்டேன். அதனால் தான் இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுத நேரிட்டது. நீங்கள் விண்ணப்பம் அனுப்பியிருந்த அதே தமிழ் விரிவுரையாளர் பதவிக்கு இரண்டாவதாக விண்ணப்பம் செய்திருந்த முதியவர் ஒருவரையும் வரவழைத்துப் பேசிக் கொண்டிருந்தார் அப்பா. இதைப் பார்த்ததும் அப்பாவின் மேல் கோபம் கோபமாக வந்தது எனக்கு. நீங்கள் பேசிய சில வார்த்தைகளால் அப்பாவுக்கு உங்கள் மேல் கோபம் இருந்தாலும் உங்கள் தகுதிகளையும் திறமைகளையும் ஆர்வத்தையும் அவர் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார். ஆனால், எங்கள் கல்லூரி முதல்வருக்கு என்ன காரணத்தாலோ உங்கள் மேல் ஒரு விதமான வெறுப்புப் பதிந்து போயிருக்கிறது. இந்த வேலைக்கு உங்களை நியமிக்கக் கூடாதென்பதை அவர் அப்பாவிடம் பிடிவாதமாக வற்புறுத்திக் கொண்டிருக்கிறார். இரண்டாவதாக மனுச் செய்துவிட்டு வந்திருக்கும் முதியவருக்கு முன் அனுபவமும் வயதும் இருப்பதனால் அவரையே தமிழ் விரிவுரையாளராக நியமித்து விடலாமென்று முதல்வரின் அபிப்பிராயமாக இருக்கிறது. அந்தரங்கமாக அப்பாவுக்கு அந்த முதியவரைப் பிடிக்கவில்லை. மல்லிகைப் பந்தல் கல்லூரியின் இலட்சியங்களைப் புரிந்து கொள்ளாமல், 'சம்பளம் அதிகம்' என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் ஏற்கனவே தாம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற கல்லூரியை விட்டு விட்டு அவர் மல்லிகைப் பந்தலுக்கு வருகிறாரோ என்று அப்பா சந்தேகப்பட்டுத் தயங்குகிறார். இந்த நிலையில் நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். இந்தக் கணமே அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். அதில் உங்கள் இலட்சிய ஆர்வங்களைப் பற்றியும் அப்பாவின் கல்விப் பணியைப் பற்றியும் குறிப்பிடுங்கள். இப்படி உங்களை வற்புறுத்துவதற்கோ, தூண்டுவதர்கோ எனக்கு உரிமை இல்லல. ஆனால் உங்களுடைய பட்டுப் பாதங்கள் மறுபடியும் மல்லிகைப் பந்தலில் செம்மண் நிலத்தில் நடக்கவில்லையானால் எனக்குப் பைத்தியம் பிடித்தாற் போல் ஆகிவிடும். இப்போதே பைத்தியக்காரியாக மாறித்தான் இந்தக் கடிதத்தை எழுதத் துணிந்திருக்கிறேன். என்னால் உங்களை மறக்க முடியாது. கேட்பவர் மனத்தை வசீகரிக்கும் உங்கள் உரையாடல், தொழுவதற்கு ஆசைப்பட்டு ஏங்கச் செய்யும் உங்கள் பாதங்கள், இவையெல்லாம் என் ஞாபகத்தில் பதிந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் மறுபடி மல்லிகைப் பந்தலுக்கு வந்து கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டு இங்கேயே தங்கிவிட வேண்டும். என்னுடைய நினைவுகளால் இதற்காகத் தவம் செய்து கொண்டிருக்கிறேன் நான். நீங்கள் வருவது எங்கள் கல்லூரியின் அதிர்ஷ்டம். கல்லூரி முதல்வர் கூட உங்களுடைய தோற்றத்தினாலும் பேச்சுத் திறத்தினாலும் நீங்கள் மாணவர்களை அதிகம் கவர்ந்து விடுவீர்களோ என்று நினைத்துத்தான் பயப்படுகிறார். பிறருடைய சாமர்த்தியங்களை நினைத்து அவர்களை அருகில் நெருங்க விடாமல் பயந்து ஒதுக்குகிறவர்களில் மல்லிகைப் பந்தல் கல்லூரி முதல்வரும் ஒருவர். இதையெல்லாம் எண்ணி நீங்கள் அச்சமோ, தயக்கமோ அடைய வேண்டியதில்லை. எனக்காகத் தயவு செய்து அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். முக்கால்வாசி உங்களைப் பற்றி அவருக்கே நல்ல எண்ணம் இருக்கிறது. உங்கள் கடிதம் கிடைத்தால் அவர் முடிவு உங்களுக்குச் சாதகமாக மாறும். பரபரப்போடு எழுதிய இந்தக் கடிதத்தை யாருக்கும் தெரியாமல் நானே இரகசியமாக எடுத்துக் கொண்டு சென்று தபால் பெட்டியில் போடப் போகிறேன். நான் இப்படி ஒரு கடிதம் உங்களுக்கு எழுதியது தவறானால் என்னை மன்னிக்கவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. உங்களைத் தவிர வேறொருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்ற எண்ணத்தைக் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. மல்லிகைப் பந்தல் ஊரையும் கல்லூரியையும் உங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கல்லூரியைச் சுற்றிப் பார்க்கும் போது நீங்கள் என்னிடம் கூறினீர்கள். அவ்வாறு உங்கள் மனத்தைக் கவர்ந்த ஓர் ஊருக்கு வருவதை நீங்கள் விரும்பத்தானே செய்வீர்கள்? ஆகவே அவசியம் நீங்கள் இங்கே தான் விரிவுரையாளராக வரவேண்டும். என்னை ஏமாற்றி விடாதீர்கள் சார்!... உங்களை அவசியம் இங்கே எதிர்பார்க்கிறேன்."

உங்கள்,
"பாரதி"

- என்று கடிதம் முடிந்திருந்தது. "என்னை ஏமாற்றி விடாதீர்கள் சார்" - என்ற வாக்கியம் ஒன்று மட்டும் அந்தப் பெண் அப்படியே எதிரே வந்து நின்றுகொண்டு அழகிய விழிகள் இரண்டையும் சுழற்றி வாய் திறந்து நேருக்கு நேர் பேசுவது போலவே இருந்தது. கம்மென்று நான்கு தாள்களிலும் குடை மல்லிகை மணம் கமழ்ந்தது. மெல்லிய ரோஸ் நிறக் கடிதத்தாள்களை மடித்து மீண்டும் உறையிலிட்டான் சத்தியமூர்த்தி. எதிரே நின்று கொண்டிருந்த அப்பா நம்பிக்கையோடு அவனைக் கேட்டார்: "யார் எழுதியிருக்கிறார்கள் இதை? பிரின்ஸிபலா? கல்லூரி நிர்வாகியா? கடிதத்துக்குள்ளே பூக்கள் வேறு வைத்திருக்கிறார்களே...?"

ஒரு கணம் சத்தியமூர்த்தி ஒன்றும் சொல்லத் தோன்றாது தன் தந்தையின் முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூச்சப்பட்டுத் தயங்கி நின்றான்.

அத்தியாயம் - 8

ஒரு பெண்ணுக்குத் தான் அழகாயிருக்க வேண்டுமென்ற ஞாபகமே, தன் இதயம் அழகனாக ஒப்புக் கொண்டு அங்கீகரிக்கிற ஒருவனுக்கு முன்பு தான், நிச்சயமாகவும் தவிர்க்க முடியாமலும் ஏற்படுகிறது.

மல்லிகைப் பந்தலின் அழகும் அமைதியும் இணைந்த வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு பரிபூரணமான முழுநாள் ஓடி மறைந்து விட்டது. குளிர்ச்சி நிறைந்த அந்த மலைநாட்டு நகரத்தில் ஒவ்வொரு நாளும் பொழுது புலர்வதே ஒரு சுவையான அநுபவம். பாலாவி போல் பனிமூடிய மலைத் தொடர்களிடையே ஒவ்வொரு நாள் காலை நேரமும் விடிவதற்குச் சோம்பல்பட்டுக் கொண்டே மெல்ல விடிவது போலிருக்கும். காற்றில், ஆடி அலைக்கழிக்கப்பட்டு மெல்ல உதிரும் பூவைப் போல அப்படி மந்தமாக விடிவதிலும் ஓர் அழகு இருக்கும். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பறப்பதற்குச் சிலிர்த்துக் கொள்ளும் கருவண்டுகளாய்க் கண்களைத் திறந்து பார்த்தாள் பாரதி. பச்சை மரகதப் பரப்பாக வளர்ந்து கிடந்த தோட்டத்துப் புல்வெளியில் வைரம் சிதறினாற் போல் பனித்துளிகள் மின்னின. ஓரிரு கணங்கள் தான் அந்தப் பனித்துளிகளும் பசும்புல் வெளியும் தம்முடைய அந்த நேரத்து அழகால் அவளைக் கவர முடிந்தது. ஏதோ ஒரு நினைவால் சிறப்பாகவும் நிரந்தரமாகவும் கவரப்பட்டுவிட்ட ஒரு மனம் அவ்வப்போது சாதாரணமாய்க் கவரப்படும் பல நினைவுகளாலும் கூடத்தான் ஆண்டு அநுபவிக்க விரும்புகிற அந்த ஒரு நினைவே ஞாபகப்படுத்தப் பெறும். முதல் நாள் மாலை அவசரம் அவசரமாக அந்தக் கடிதத்தை எழுதி எடுத்துக் கொண்டு போய்த் தானே தபாலில் சேர்த்ததையும், அந்தக் கடிதத்தைப் பதறும் கையினால் தபால் பெட்டியில் போட்டு விட்டுப் பின்னால் யாரோ வந்து நின்று தன்னைக் கவனிப்பது போல் தோன்றவே திரும்பிப் பார்த்தபோது, "என்னைக் கூப்பிட்டுக் கொடுத்திருந்தால் நானே தபாலில் சேர்த்திருப்பேனே? நீங்கள் எதற்காகச் சிரமப்படுகிறீர்கள்?" என்ற கேள்வியோடும் தபாலில் சேர்ப்பதற்காக வைத்திருந்த வேறு கடிதங்களோடும் கல்லூரி ஹெட்கிளார்க் நின்று கொண்டிருந்ததையும் இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தாள் பாரதி. முகவரி எழுதியிருந்த பக்கம் வெளியே தெரியும்படி தான் கடிதத்தை தபால் பெட்டிக்குள் போட்டதையும், திறந்திருந்த பெட்டியின் கீழ்ப்பக்கமாக அது வந்து விழுந்ததையும், ஹெட்கிளார்க் பின்புறம் நின்றபடியே படித்துப் பார்த்திருப்பாரோ என்ற பயமும் திகைப்பும் நேற்று இரவே வெகுநேரம் வரை அவள் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தன. இன்று காலை இப்போது இரண்டாவது முறையாக அந்த நினைவு வந்த போதும் "ஹெட்கிளார்க்" தபாலில் சேர்ப்பதற்காகக் கொண்டு வந்திருந்த கடிதங்களில் சத்தியமூர்த்திக்குப் போட்டியாக வந்த அந்த முதியவருக்கு அனுப்பப்படும் ஆர்டரும் இருக்குமோ என்ற அநாவசியமான பீதி வேறு அவளுக்கு ஏற்பட்டிருந்தது. மல்லிகைப் பந்தல் கல்லூரி ஹெட்கிளார்க் சிதம்பரம் ஏறக்குறைய கல்லூரி முதல்வரின் வார்த்தைக்குத் தலையாட்டுகிறவர் என்பதும் அவளுக்குத் தெரியும். தான் தபால் பெட்டியில் போட்ட கடிதத்தில் சத்தியமூர்த்தியின் முகவரி எழுதப்பட்டிருந்ததை ஹெட்கிளார்க் படித்திருந்தால் அதை நிச்சயமாகக் கல்லூரி முதல்வரிடம் சொல்லுவார் என்பதையும் அவளால் அனுமானம் செய்ய முடிந்தது.

"நிரம்ப வேண்டிய சிநேகிதி ஒருத்திக்குத் தபாலில் எழுத வேண்டியிருந்தது. எப்படியும் இன்றைக்கு அவசரமாகச் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக நானே எழுதி எடுத்துக் கொண்டு ஓடி வந்தேன்" என்று நேற்று மாலை ஹெட்கிளார்க்கினிடம் பதில் சொல்லியிருந்தாள் அவள்.

அதற்கு அப்புறமும், "ஏதோ கடிதத்தைத் தபாலில் சேர்ப்பதற்காக நீயே இந்த மழை ஈரத்தில் நடந்து வெளியே போயிருந்தாயாமே அம்மா? இந்த மழை ஈரத்தில் நீயே எதற்காக வெளியே போகிறாய்? உடம்புக்கு இழுத்து விட்டுக் கொண்டால் என்ன ஆவது? யாரிடமாவது கொடுத்து அனுப்பியிருக்கக் கூடாதோ?" என்று இரவு சாப்பிடும்போது அப்பாவும் அவளைக் கேட்டிருந்தார். 'ஹெட்கிளார்க்தான் அப்பாவிடம் அதைச் சொல்லியிருக்க வேண்டும்' என்று அவள் தெரிந்து கொண்டாள். இந்தக் கேள்வியை நேற்றிரவு தந்தை தன்னிடம் கேட்டபோது தன்னுடைய சௌகரியங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விநாடியும் கவனித்துக் கொண்டிருப்பதையும், விசாரிப்பதையுமே துன்பமாக உணர்ந்தாள் அவள். காலையில் உறக்கம் விழித்துப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு முதல் நாள் நினைவுகளில் மூழ்கியிருந்தவள், கண்கள் சென்ற திசையில் தெரிந்த தோட்டத்துப் புல்வெளியையும் அதில் வைரக் கற்களாக மினுக்கும் பனித்துளிகளையும் அதற்கப்பால் இயற்கையின் ஏதோ ஒரு விதமான சந்தோஷத்தை வெளியிடும் சின்னங்களாகப் பூத்துக் குலுங்குகிற பலவகைச் செடிகொடிகளையும் இரண்டாவது தடவையாகப் பார்த்தாள். தோட்டமும் வீடுமாக பன்னிரண்டு ஏக்கர் பரப்புள்ள அந்தப் பங்களாவின் காம்பவுண்டு அமைப்புப் பெரிதாக இருந்த காரணத்தினாலும், மலைப்பகுதியாக இருந்ததனாலும் உள்ளே பெரும்பகுதிகள் வெள்ளைக்காரர்களின் வீடுகளைப் போல் கண்ணாடிகளால் தடுக்கப்பட்டிருந்தன. பெரிய கண்ணாடி பலகணிக்கு மறுபுறம் மங்கித் தெரிந்த தோட்டம் யாரோ தயாராக எடுத்து நிறுத்திக் கண்ணாடிப் போட்ட புகைப்படம் போல் வனப்பின் நிறைவாகத் தெரிந்து கொண்டிருந்தது.

பல் விளக்குவதற்காக வாஷ்பேஸினுக்கு முன்னால் போய் நின்றபோது மேலேயிருந்து கண்ணாடியில் தான் தினசரி பார்த்துப் பார்த்துப் பழக்கமான தன்னுடைய முகத்தையே புதுமையாகப் பார்த்தாள் பாரதி. சத்தியமூர்த்தியிடம் நேற்றுப் பேசிக் கொண்டிருந்த போதும் இந்த முகம் இப்படித்தானே அழகாயிருந்திருக்கும் என்ற மகிழ்ச்சிகரமான சந்தேகம் அவள் மனதில் இப்போது ஏற்பட்டது. 'சத்தியமூர்த்தியின் கண்களுக்குத் தான் எவ்வெப்போது எந்தெந்த விதங்களில் அழகாகத் தோன்றியிருக்க முடியும்?' என்ற எண்ணத்தோடு சிறிது நேரம் தன் கண்களை மறந்து அவனுடைய கண்களாகவே தன்னுடையவற்றைப் பாவித்துக் கொண்டு கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்து மகிழ முயன்றாள் அவள். 'நேற்று அவருக்கு முன் மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் போய் நாணி நின்ற போதும் என்னுடைய இந்தக் கண்கள் இப்படித்தானே அழகாயிருந்திருக்கும்? ஊதுவத்தியிலிருந்து எழுந்து சுழலும் புகைச் சுருள்களைப் போல் இந்தக் கூந்தலும் இப்படித்தானே சுருண்டு சுழன்று கருமை மின்னியிருக்கும்?' என்று ஒவ்வொன்றாக நினைக்கத் தொடங்கினாள் அவள். தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஞாபகம் ஒரு பெண்ணுக்குத் தன் இதயம் அழகனாக ஒப்புக்கொண்டு அங்கீகரிக்கிற ஒருவனுக்கு முன்புதான் நிச்சயமாகவும், தவிர்க்க முடியாமலும் ஏற்படுகிறது. வார்த்தைகளால் அப்படி அப்படியே சொல்லி விளக்கிவிட முடியாததொரு நுணுக்கமான அனுபவம் இது. ஒவ்வொரு பெண்ணும் இத்தகைய அநுபவங்களின் போதுதான் தன்னுடைய நினைப்பும் பாவனைகளும் மலர்ந்து மணக்கிறாள். தன்னை விட அழகான பொருளை எதிரே சந்திக்கும் போதிலேயே தான் அழகாயிருக்க வேண்டும் என்ற ஞாபகமும் தவிப்பும் ஏற்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் உணர்ச்சிகளாலும், பாவனைகளாலும் தவிக்கிற தவிப்பே ஓர் அழகாகிவிடுகிறது. அந்தத் தவிப்பில் நேரம் போவதே தெரிவதில்லை. அப்படித் தவிப்பதே ஓர் இன்பமாக - ஓர் அழகாகத் தோன்றுகிறது.

குளியல் அறையில் பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டு வெளியே வந்து நேரத்தைப் பார்த்த போது தான் குளிப்பதற்குச் செலவிட வேண்டிய அவ்வளவு அதிகமான நேரத்தைத் தான் பல் விளக்குவதற்குச் செலவழித்திருப்பது பாரதிக்கே தெரிந்தது. மனம் இலயித்து ஈடுபடுகிற ஒன்றில் நேரமே தெரியாது என்பதைப் புரிந்து கொண்டவளாகக் கூடத்துக்குப் போனாள் அவள். கூடத்தின் நடுவேயிருந்த தேநீர் மேஜையில் எல்லாம் தயாராயிருந்தன. அப்பா காலையில் வெளிவந்த செய்தித் தாள்களில் மூழ்கியிருந்தார். செய்தித்தாள் முழுமையும் ஒரே எண்கள் மயமாக அச்சாகியிருந்தது. ஏதோ பரீட்சை ரிஸல்ட் வந்திருந்தது போலும். அருகே போய் உட்கார்ந்து தந்தையின் உடல்நிலையை விசாரித்துக் கொண்டே இருவருக்குமாகத் தேநீரைக் கலக்கத் தொடங்கினாள் பாரதி. அன்று விடிந்ததிலிருந்து தந்தை மிகவும் உற்சாகமாக இருப்பதை அவருடைய பேச்சிலிருந்து அவள் தெரிந்து கொள்ள முடிந்தது.

"இப்போதெல்லாம் நீ மிகவும் நேரம் கழித்து எழுந்திருக்கிறாய் போல் இருக்கிறதம்மா! நானும் ஆறேகால் மணியிலிருந்து இந்த நாற்காலியில் பழியாய்க் காத்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு செய்தித்தாளையும் இரண்டு தடவை எடுத்துப் படித்தாயிற்று. பழகிவிட்ட காரணத்தால் நீ கலந்து கொடுக்காமல் தேநீர் குடிக்கவும் மனம் வரவில்லை. இன்று என் உடல் நிலையும் ஓரளவு தேறியிருக்கிறது. 'மயிலாடும் பாறை எஸ்டேட்' வரை போய்வரலாம் என்று நினைத்தேன். உன் அபிப்பிராயம் எப்படி? எஸ்டேட் வேலை கொஞ்சம் இருக்கிறது. அதோடு உன்னையும் அழைத்துப் போய்ப் புதிதாக வாங்கிய பகுதிகளைச் சுற்றிக் காண்பிக்க ஆசை. ஒரு நாளோ, இரண்டு நாளோ, அங்கே தங்கியிருந்து வரலாம். கல்லூரி இன்டர்வ்யூக்களும் ஏறக்குறைய முடிந்து விட்டன. சர்வகலாசாலை செனட் மீட்டிங் ஏதோ இருக்கிறதாம். பிரின்ஸிபல் இன்று மாலை சென்னைக்குப் போகிறார். திரும்பி வர ஒரு வாரமாகும். அதுவரை கல்லூரி நிர்வாக வேலைகளைப் பொறுத்த மட்டும் எனக்கு ஓய்வுதான்."

"இந்த வருடம் புதிதாக நியமனம் செய்து அனுப்ப வேண்டிய ஆர்டர்கள் எல்லாம் பிரின்ஸிபல் ஊர் திரும்பிய பின்புதானே அப்பா?" என்று தேநீர்க் கோப்பையை அவரிடம் நீட்டிக் கொண்டே மெல்லக் கேட்டாள் பாரதி.

"ஏன்? ஆர்டரைப் பற்றி உனக்கென்ன வந்தது. எல்லாரும் என்னைக் கழுத்தறுக்கிற மாதிரி நீயும் யாருக்காவது சிபாரிசு செய்யப் போகிறாயா? இந்தச் சிபாரிசு உபத்திரவத்துக்குப் பயந்து தான் நானே இரண்டு மூன்று நாட்கள் எங்காவது தலைமறைவாக எஸ்டேட் பக்கம் போய் இருந்துவிட்டு வரவேண்டும் என்று நினைக்கிறேனம்மா. தரக்குறைவான ஆட்களுக்குச் சிபாரிசு சொல்லிக்கொண்டு மிகவும் வேண்டிய மனிதர்கள் நேரில் வந்து சேர்கிறார்கள். இந்தக் கல்லூரி நீண்ட நாட்கள் நல்ல பெயரோடு நடப்பதற்குப் பணம் சேர்த்து வைத்து விட்டுப் போவதை விட முக்கியமானது நல்ல ஆசிரியர்களைச் சேர்த்து வைப்பதுதான். மூன்றாவது வகுப்பில் மூன்றாந்தரமாகப் பாஸ் செய்திருக்கிற கழிசடைகளுக்குச் சிபாரிசு சொல்லிக் கொண்டு 'முதல் தர'மான வேண்டியவர்கள் வந்தால் தட்டிக் கழிக்கவும் முடியாமல் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் திணற வேண்டியிருக்கிறது" என்று சிரித்தபடியே மறுமொழி கூறினார் பூபதி. 'அப்பாவிடமிருந்து தான் தெரிந்து கொள்ள விரும்புகிற எந்தச் செய்தியையும் இப்போது தெரிந்து கொள்ள முடியாது. அவர் அதிக விழிப்புடன் இருக்கிறார்' என்பது புரிந்தவுடன் பேச்சை நகைச்சுவையாக வேறு வழியில் மாற்றிவிட்டுத் தப்பித்துக் கொண்டாள் பாரதி.

"நானும் ஒரு சிபாரிசு செய்யப் போகிறேன் அப்பா! ஆனால் அது நீங்கள் நினைக்கிறார் போல் உங்களுக்குத் தொல்லை தருகிற சிபாரிசு இல்லை. என்றைக்கும் இதே போலத் தகுதியையும், திறமையையும், தெரிந்து கொண்டு நல்லவர்களையே தேர்ந்தெடுக்கும் என் அருமைத் தந்தைகு நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளைத் தரவேண்டும் என்று கடவுளிடம் சிபாரிசு செய்கிறேனப்பா! கடவுள் என்னுடைய சிபாரிசுக்குச் செவி சாய்த்துத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் எல்லாத் தகுதிகளும் உள்ள முதல் தரமான மனிதருக்காக இந்தச் சிபாரிசைச் செய்கிறேன் நான்" என்று மழலை மாறாத குழந்தைக் குரலில் சொல்லிவிட்டு அவள் கைகொட்டிச் சிரித்த போது அந்தப் பேச்சைக் கேட்டு அப்பாவே அயர்ந்து போனார். தமிழ் விரிவுரையாளர் பதவிக்காக அனுப்பப்படுவதற்கு இருக்கும் ஆர்டர் சத்தியமூர்த்திக்கா, அல்லது வேறு ஒருவருக்கா என்பதை மிகவும் நாசூக்காக அப்பாவிடத்திலிருந்து தெரிந்து கொண்டு விடுவதற்காகத்தான் அவள் அப்போது அந்தப் பேச்சையே தொடங்கினாள். தந்தையின் பதில் சிறிதும் நெகிழ்ச்சியின்றி வெளிப்பட்டதைக் கண்டபின்பே அவள் தன் பேச்சை மாற்றிக் கொண்டாள். அவரோ எஸ்டேட்டுக்குப் புறப்பட்டுப் போவதைப் பற்றியே அவளிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

"என்னம்மா இது? நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் வேறு ஏதோ சொல்கிறாயே? எஸ்டேட் பக்கம் போய் வரலாமா என்று கேட்டேனே?" என்று மீண்டும் மகளைக் கேட்டார் பூபதி. வீடு வாசலை மறந்து மாதக் கணக்கில் எஸ்டேட்டில் இருக்கலாம் என்றாலும் உற்சாகமாக ஒப்புக் கொள்கிற பெண் இன்று மௌனமாயிருந்ததைக் கண்டு தந்தையும் வியப்படைந்தார். மல்லிகைப் பந்தலிலிருந்து நாற்பது - நாற்பத்தைந்து மைல் தொலைவில் இன்னும் உயரமான இடத்தில் இன்னும் அழகான மலைப் பகுதியில் பூபதிக்குச் சொந்தமான மயிலாடும் பாறை எஸ்டேட் அமைந்திருந்தது. நானூறு ஏக்கரோ நானூற்றைம்பது ஏக்கரோ ஒரு தனி மலையே அந்த இடத்தில் அவருக்குச் சொந்தமாக இருந்தது. எஸ்டேட்டின் நடுவே தேயிலையைப் பதனிட்டுத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் இருந்தது. மயிலாடும் பாறை மலையின் இயற்கையழகு மிகுந்த பகுதி ஒன்றில் சிறியதோர் அருவியை ஒட்டி ஓய்வு கொள்வதற்கு ஏற்ற வசதி நிறைந்த விடுதி ஒன்றையும் அமைத்திருந்தார் பூபதி. பதினைந்து இருபது நாட்களுக்கு ஒருமுறை அல்லது சில சமயங்களில் இரண்டொரு மாதங்களுக்கு ஒருமுறை தந்தையும் மகளுமாக இந்த விடுதிக்கு மகிழ்ச்சி உலாப் புறப்பட்டு வருவதுண்டு. அப்படி வந்தால் ஒரு வாரமோ, பத்து நாளோ ஓய்வாகத் தங்காமல் திரும்புவது வழக்கமில்லை. மல்லிகைப் பந்தலுக்கும் மயிலாடும் பாறை எஸ்டேட்டுக்கும் நடுவிலுள்ள நாற்பது மைல் மலைச் சாலையிலேயே பூபதிக்கு உடைமையான வேறு சில பெரிய தொழில் நிறுவனங்களும் இருந்தன.

அவருடைய எஸ்டேட்டில் விளையும் கோகோ காய்களைப் பயன்படுத்திச் சாக்லேட் முதல் பல பண்டங்கள் செய்யும் இனிப்பு மிட்டாய்த் தொழிற்சாலையான 'கன்பெக்ஷனரி' ஒன்றும், தேக்கு கருங்காலி மரங்களை அறுத்து மிக அழகிய தரமான நாற்காலி மேஜைகள் நிலை கண்ணாடி பதித்த பீரோக்கள் ஆகியவற்றைச் செய்யும் மரத்தொழிற்சாலை ஒன்றும், ரப்பர்த் தோட்டம், ஏலக்காய்த் தோட்டம் ஆகியவற்றை ஒட்டி அவற்றுக்காக அமைந்த சில தொழிற்சாலைகளுமாக இருந்தன. பூபதி தம்முடைய சிந்தனையாலும், வியாபாரத் திறமையாலும் அந்த மலைகளில் அற்புதமான பல சாதனைகளைச் சாதித்திருந்தார். ஆனால் இந்தத் தொழில் நிறுவனங்களையெல்லாம் ஆக்கிப் படைத்து ஆளுவதைவிட மல்லிகைப் பந்தல் கலைக் கல்லூரியை நிறுவியவரகவும், நிர்வாகியாகவும், இருப்பதற்காகவே அவர் அதிகமாகப் பெருமைப்பட்டார். நாளடைவில் அந்தக் கல்லூரியை ஒரு மலைநாட்டுப் பல்கலைக் கழகமாக்கி விட வேண்டும் என்பதையே தன் வாழ்வில் இனிமேல் சாதிக்க வேண்டிய பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டிருந்தார் அவர். மல்லிகைப் பந்தலுக்கு மிக அருகேயுள்ள அமைதியான இடமாகிய மயிலாடும் பாறைக்குப் போனாலும் சரி, பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள வேறோர் இடத்துக்குப் போனாலும் சரி, அப்பாவின் நினைவும் திட்டங்களும் கல்லூரியைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கும் என்பது பாரதிக்குத் தெரியும். உடல் நலம் குன்றியிருந்த போது கல்லூரிக்கான இண்டர்வ்யூக்களைத் தேதி மாற்றவோ, தள்ளிப்போடவோ விரும்பாமல் குறித்த தேதியில் குறித்தபடியே நடத்தி முடித்த தந்தையின் பிடிவாதத்தை அவளும் பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்! நோயுற்றுத் தளர்ந்து போயிருக்கிற பல வேளைகளில் காரியங்களைத் தள்ளிப் போடாமல் குறித்த வேளையில் செய்து முடிக்கும் திருப்தியே அவருடைய நோய்க்கு மருந்தாகியிருப்பதை அவள் அறிவாள். காரியங்களைத் திட்டமிட்டபடி திட்டமிட்ட வேளையில் செய்து முடித்து விட்டோம் என்ற மனநிறைவையே ஓர் ஆரோக்கியமாக ஏற்றுக் கொண்டு அதனாலேயே எல்லாத் தளர்ச்சிகளும், எல்லாச் சோர்வுகளும் நீங்கி எழுந்து நடமாடத் தொடங்கியிருக்கிறார் அவள் தந்தை. கடந்த நாலைந்து நாட்களாக உடல்நலக் குறையோடு குறைவாக எழுந்து உட்கார்ந்து இண்டர்வ்யூக்களை நடத்தி முடித்த திருப்தியினால் தான் இன்று விடிந்ததும் விடியாததுமாய் எஸ்டேட்டுக்குப் புறப்பட்டுப் போகிற தைரியத்தை அப்பா அடைந்திருக்கிறார் என்பதை எண்ணித் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள் பாரதி.

"என்னம்மா? நீயாகவே சிரித்துக் கொள்கிறாயே?" என்று அவள் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த தந்தை அவளைக் கேட்டார். பெண் தன்னோடு பலமுறை மயிலாடும் பாறை எஸ்டேட்டுக்கு வந்திருந்தாலும் சென்ற மாதம் அந்த எஸ்டேட் இருக்கும் மலையில் மேற்குச் சரிவில் இன்னொருவரிடமிருந்து புதிதாக விலைக்கு வாங்கிச் சேர்த்த பகுதியை அவளுக்கு இந்தப் பயணத்தின் போது சுற்றிக் காட்டிவிட வேண்டுமென்று நினைத்திருந்தார் அவர்.

தந்தைக்கு ஏதோ மறுமொழி கூறும் பாவனையில் அவள் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் பேசுவதற்கு இருந்த போது வாசல்பக்கமிருந்து யாரோ 'காலிங் பெல்'லை அழுத்தி அமுக்கினார்கள். அந்த மணி ஓசையைக் கேட்டு அப்பாவின் பேச்சு அளவற்ற உற்சாகத்தோடும் நகைச்சுவையோடும் வெளிப்பட்டது.

"மனுநீதிச் சோழனுடைய அரண்மனை வாசல் கெட்டது போ! நியாயம் தேடி வருகிறவர்கள் தன்னைக் கூப்பிட்டு அழைப்பதற்காக இப்படி ஒரு 'காலிங் பெல்' அந்த சோழனுடைய அரண்மனை வாசலில் இருந்ததாமே?... அதெல்லாம் கதையிலே படித்திருப்பாயே அம்மா. இந்த மல்லிகைப் பந்தல் அரண்மனை வாசலில் வந்து யாராவது நமது 'காலிங் பெல்'லை அமுக்கினால் ஒன்று சிபாரிசு தேடி வருகிறவர்களாக இருக்கிறார்கள். அல்லது ஏதாவதொரு நிதிக்கு நன்கொடை கேட்டு வருகிறவர்களாக இருக்கிறார்கள்" என்று சொல்லிக் கொண்டே வாசல் பக்கமாகப் போவதற்காக எழுந்து நடந்தார் பூபதி. பாரதி தந்தையின் நகைச்சுவையைச் சிரித்து அநுபவித்துக் கொண்டே அவரோடு பின் தொடர்ந்து சென்றாள். உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதோ, கூடத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதோ, முன்புறத்து வாசலிலிருந்து இந்த மணி ஒலித்து விட்டால் இதை மனுநீதிச் சோழனுடைய அரண்மனை வாசல் மணிக்கு ஒப்பிட்டு வாய்நிறையச் சிரிக்காவிட்டால் அப்பாவுக்குப் போது போகாது.

பலதொல்லைகளை இப்படி நுணுக்கமான நகைச்சுவையினாலேயே சமாளித்து விட்டுத் தயங்காமல் மேலே நடந்து போய்க் கொண்டிருப்பார் பூபதி. அப்பாவின் குணங்களில் இந்த நகைச்சுவை குணத்தைப் பாரதி மிகவும் ஈடுபட்டு இரசிப்பாள். ஆனால் முன்புறத்து வாயில் வராந்தாவில் போய்ப் பார்த்தபோது தந்தையின் முகத்திலும் சிரிப்பு மறைந்தது; அவள் முகத்திலும் சிரிப்பு மறைந்துவிட்டது. முற்றிலும் வேறான காட்சி ஒன்று அவர்களுக்காக அங்கே காத்திருந்தது. ஓரிரு வினாடிகள் ஒன்றுமே புரியாமல் அவர்கள் இருவரும் அஞ்சி மருண்டு போயினர். விடிந்ததும் விடியாததுமாக இப்படி ஒரு காட்சியா?

பை ஓரமாக நெஞ்சின் மேல் ஓர் அரசிலை அளவுக்கு மாறிய நிறத்தில் பூ வேலை செய்த 'ஸ்லாக்' சட்டையும் பைஜாமாவும் அணிந்த இளைஞன் ஒருவன் வாராமல் கலைந்த தலையுடனும் வெறியுமிழும் சிவந்த கண்களுடன் வலது கையில் பிச்சுவாக் கத்தியை ஓங்கிக் கொண்டு பாயத் திமிறியபடி கூர்க்கா - காவற்காரர்களால் பிடித்துக் கொள்ளப்பட்டு நின்றான். பக்கத்தில் கல்லூரி 'ஹெட்கிளார்க்' பதறி நடுங்கிக் கொண்டு நின்றார். அவர் முகம் பேயறைபட்டது போல் இருந்தது.

"சார்! இன்றைக்கு மாலையில் தாம் சென்னைக்குப் புறப்படவேண்டும் என்பதற்காகப் பிரின்ஸிபல் கல்லூரியில் சில முக்கியமான கடிதங்களை டைப் செய்வதற்காகவும் வேறு காரியங்களுக்காகவும் இன்று அதிகாலையிலேயே என்னை வரச் சொல்லியிருந்தார். அவரும் வந்திருந்தார். இருவரும் பிரின்ஸிபல் ரூமில் உட்கார்ந்து இன்று காலை செய்தித்தாள்களில் வெளியாகியிருக்கும் பி.எஸ்ஸி. ரிசல்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். திடுதிப்பென்று இந்தப் பையன் கத்தியும் கையுமாகப் பிரின்ஸிபல் அறைக் கதவைத் தள்ளிக் கொண்டு பாய்ந்து ஓடி வந்தான். இவன் பரீட்சையில் தேறவில்லையாம். அதற்குப் பிரின்ஸிபல் தான் காரணம் என்று இவனாக நினைத்துக் கொண்டு..."

"கதை சொல்லாதீர்... மேலே என்ன நடந்தது?..." - பூபதியின் குரல் ஹெட்கிளார்க்கிடம் இதைக் கேட்கும் போது இடிமுழக்கமாயிருந்தது.

கத்தியோடு வந்து மிரட்டிய பையனுக்காக நடுங்கிய நடுக்கத்தைத் தவிர பூபதி அவர்களின் அதிகார மிடுக்குடன் கூடிய கம்பீரமான சிங்கநாதக் குரலுக்காகவும் வேறு நடுங்கினார் ஹெட்கிளார்க்.

"நானும் என்னால் ஆன மட்டும்... குறுக்கே பாய்ந்து தடுத்துப் பார்த்தேன் சார்... இந்தப் படுபாவி, பிரின்ஸிபல் மேலே பாய்ந்து விட்டான். வலது தோளிலே ஒரு விரற்கட்டை ஆழத்துக்குக் கத்திகுத்து அவருக்கு. ஆம்புலன்சுக்கு ஃபோன் செய்து அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பியாச்சு... எல்லாம் போதாத வேளை... கூர்க்காக்கள் ஓடிவந்து பிடித்திருக்காவிட்டால்... இந்தப் பையன் என்னையும் என்ன செய்திருப்பானோ...?"

உணர்வு வசப்பட்டுப் பேசும் போதே பயத்தினால் ஹெட்கிளார்க் வாய் குழறினார். அப்போது அப்பாவின் முகம் சிவந்து கண்கள் ஒளி மின்னுவதைப் பார்த்துப் பாரதிக்கே பயமாக இருந்தது. அவளோடு மேலே வராந்தா மேடையின் மீது நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தவர் ஒவ்வொரு படியாக இறங்கி, அழுத்திக் கால்களை ஊன்றிக் கொண்டிருந்த அந்தப் பையனுக்கு முன் மிக அருகே போய் இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு நிமிர்ந்து நின்றார். அந்த நிலையில் அப்பாவைப் பார்ப்பதற்கே பயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது பாரதிக்கு. 'நீங்கள் இருவரும் இந்தப் பையனைப் பிடித்திருக்க வேண்டாம்! விட்டுவிடுங்கள்...' என்ற பாவனையில் கூர்க்காக்களிருவருக்கும் ஜாடை காட்டினார் பூபதி. அவர்கள் அப்படிச் செய்யத் தயங்கினார்கள். அவனை விட்டு விட்டால் அவன் பூபதி அவர்கள் மேலோ ஹெட்கிளார்க் மேலோ கத்தியை ஓங்கிக் கொண்டு பாயக்கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. ஹெட்கிளார்க்கும் அப்படியே பயந்தார். அந்தப் பையன் வெறியோடு நின்ற நிலையைப் பார்த்துப் பாரதியும் பயந்தாள். 'ஐயோ! அப்பா இப்படிப் பயப்படாமல் இந்தக் கொலைபாதகனுக்கு அருகில் போய் நிற்கிறாரே?' என்று உள்ளூர நடுங்கிக் கொண்டே தான் பாரதி நின்றாள். பூபதியோ ஒருவிதமான சலனமும் இல்லாமல் மிகவும் திடமாக அந்தப் பையனுக்கு அருகே நிமிர்ந்து நின்று கொண்டு கேள்விகளைத் தொடுத்தார்.

"உன் பெயர்...?"

"ராஜாராமன்..."

"நீ எழுதிய பரீட்சை...?"

"பி.எஸ்ஸி..."

"நீ அதில் தேறாமல் போனதற்குக் காரணம்?"

"பிரின்ஸிபல். காலேஜ் நாளிலிருந்து நான் வீழ்ச்சியடைய வேண்டுமென்று சதி செய்தார் அவர்..."

இதைச் செவியுற்றதும் கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டு அந்தப் பையனின் முகத்தையே துளைத்தெடுக்கும் பார்வையால் இமையாது பார்த்துக் கொண்டே நின்றார் பூபதி. அமைதியாகவும் உள்ளடங்கிய குரலுடனும் அந்த விநாடி வரை தமிழில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பூபதியின் குரல் திடீரென்று சிறிது நேர அமைதிக்குப் பின் கோப வெறியோடு ஆங்கிலத்தில் சிங்க முழக்கம் செய்யலாயிற்று. "ஆர் யூ நாட் அஷேம்டு டு பி ஏ ஸ்டூடெண்ட்?" (நீ ஒரு மாணவனாக இருப்பதற்கு வெட்கமாக இல்லை உனக்கு?) என்று கேட்டுவிட்டு அந்தப் பையனே வெலவெலத்துப் போய் அவன் கையிலிருந்த கத்தி நழுவி விழுமாறு ஓங்கி ஓர் அறைவிட்டார். பையன் கல்லூரி முதல்வரிடம் முரண்பட்டுத் திமிறினாற் போல் பூபதியை எதிர்த்துக் கொண்டு பாயவில்லை. அப்படியே மருண்டு நின்று விட்டான். அவருடைய கம்பீரமான தோற்றமும் எதிராளியைக் கட்டுப்படுத்தி நிறுத்தும் வார்த்தைகளும் அவனை நலிந்து நிற்கச் செய்திருந்தன.

"உன்னைப் போன்றவர்கள் பேனாவும் புத்தகமும் எடுத்துக் கொண்டு படிப்பதற்கு வரக்கூடாது அப்பனே! அரிவாளை எடுத்துக் கொண்டு கசாப்புக் கடைக்கு ஆடு வெட்டப் போயிருக்க வேண்டும்! இதோ கீழே விழுந்து கிடக்கிறதே, இந்தக் கத்தியைக் கையில் மறுபடியும் எடுத்துக் கொள். உன் போன்றவர்கள் படிப்பதற்குப் பணம் செலவழித்துக் காலேஜ் கட்டி வைத்திருக்கிற என்னைக் குத்து. அப்புறம் உன் போன்றவர்கள் படிப்பதற்குப் புத்தகமெழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்களே, அந்த மேதைகளை எல்லாம் அவர்கள் உயிரோடு இருந்தால் கொலை செய்துவிட்டு வா... கடைசியாக உன்னை நீயே குத்திக் கொள்ளலாம்..." என்று கூறிக்கொண்டே இரண்டாம் முறையாக அவனை அறைவதற்காக உணர்ச்சி வெறியோடு கையை ஓங்கினவர், அவன் தன் கண்களில் நீர் நெகிழ்ந்து அழத் தொடங்கியிருப்பதைப் பார்த்துக் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு பேச்சை நிறுத்தினார். அவன் முகத்தைப் பார்த்தார். 'கோ' வென்று பெரிதாகக் கதறி அழத் தொடங்கிய அந்தப் பையன் நெடுஞ்சாண்கிடையாக அவர் கால்களில் விழுந்துவிட்டான். எப்படி வெறி கொண்டு நின்றவனை அப்பா எப்படி அழச் செய்துவிட்டார் என்பதைக் கண்ணெதிரே பார்த்த பாரதிக்கு வியப்புத் தாங்கவில்லை. கம்பெனிகளையும் தொழில் நிறுவனங்களையும் நிர்வாகம் பண்ணுகிற சாமர்த்தியத்தை விட மனித உணர்ச்சிகளை ஏற்ற இடத்தில் ஏற்ற விதமாக நிர்வாகம் பண்ணுகிற சாமர்த்தியம் அப்பாவிடம் அதிகமாக இருப்பதைக் கண்டு பெருமையாக இருந்தது அவளுக்கு. கேம்பிரிட்ஜ் மாணவராயிருந்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் டாக்டர் ஆப் லிட்ரேசர் பட்டமும் பெற்று ஒரு டஜன் ஆண்டுகளுக்கு மேல், கல்லூரி முதல்வராயிருக்கிற ஒருவரால் சமாளிக்க முடியாத முரடனை அப்பா நான்கே நிமிடப் பேச்சில் அழச் செய்து காலில் விழ வைத்த சாமர்த்தியத்தைக் கண்டு அவள் பிரமித்தாள். கல்லூரி முதல்வர் இந்த முரடனிடம் கத்திக் குத்துப்பட்டு ஆஸ்பத்திரியில் விழுந்து கிடக்கிறார். அப்பாவோ உணர்ச்சிமிக்க வார்த்தைகளாலேயே இந்த முரடனின் இதயத்தை மிக ஆழமான பகுதியில் குத்தி வீழ்த்தி விட்டார். பிரின்ஸிபலாயிருந்து தலைகனத்துத் திரிந்து அசட்டுக் கௌரவமும், பதவித் திமிரும் கொண்டாடிப் பயனில்லை. மனித உணர்ச்சிகளை எதிர்கொண்டு நிர்வாகம் செய்து ஆளவும் அடக்கவும் தெரிய வேண்டும். அது தெரிந்தவன் தான் தலை சிறந்த பேராசிரியன். அப்பாவுக்கு அது தெரிந்திருந்ததற்காக அவள் அவருடைய மகளென்ற முறையில் பெருமைப்பட்டாள்.

"போலீசில் 'கம்ப்ளெயிண்ட்' செய்ய வேண்டாமா?" என்று ஏதோ ஆரம்பித்தார் ஹெட்கிளார்க்.

"வேண்டியதில்லை! நல்ல பெயர் பெற்றிருக்கும் என் கல்லூரியைப் பற்றிப் பத்திரிகைகளில் தாறுமாறான செய்தி வரக்கூடாது. நான் பிரின்ஸிபலை உடனே பார்க்கப் போக வேண்டும். ஆஸ்பத்திரியைத் தேடிக் கொண்டு யாராவது போலீஸ்காரர்கள் போக நேர்ந்து, இவர் அவர்களிடம் ஏதாவது ஸ்டேட்மெண்ட் கொடுக்காமல் தடுக்க வேண்டும். இதெல்லாம் சகஜம். சிறுபிள்ளைகளை அதிகம் மன்னித்துத்தான் திருத்த முடியும்" என்று ஹெட்கிளார்க்கிடம் சொல்லியபடியே மகள் நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பி "பாரதி! காரை எடு அம்மா! ஆஸ்பத்திரி வரை போய்ப் பிரின்ஸிபலைப் பார்த்துவிட்டு வருவோம். இன்றைக்கு எஸ்டேட்டுக்குப் போக வேண்டாம். இப்படி எல்லாம் ஆகிவிட்டதே? என்ன செய்வது! ஒரு வாரம் கழித்துப் போகலாம்..." என்றார் பூபதி. பாரதி காரை எடுப்பதற்காக நடந்தாள். அப்போது அவளுக்கென்னவோ தோன்றியது. சத்தியமூர்த்தியைப் போல் அழகிய முகமும், அழகிய மனமும் அழகிய பேச்சும் உள்ள ஓர் ஆசிரியர் தங்கள் கல்லூரிக்கு வந்து சேர்ந்துவிட்டால் இப்படிப் பட்ட முரட்டு இளைஞர்களைக் கூடச் சதா தன்னைச் சுற்றிக் கை கூப்பிக் கொண்டு திரிகிற பைத்தியங்களாகச் செய்துவிட அவரால் முடியும் என்று நினைத்தாள் பாரதி. அப்படிப்பட்ட அழகும் தகுதியும் உள்ளவரைப் பற்றி வெறும் இளைஞர் என்று அப்பாவிடம் குறை சொல்லித் தள்ளிவிடப் பார்த்த இந்தப் பிரின்ஸிபலுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்' என்று சிறு குழந்தை கோபப்படுவது போல் கோபித்துக் கொண்டே காரை எடுத்தாள் பாரதி.

அத்தியாயம் - 9

தன்னையும் தன்னுடைய தேவைகளையும் தவிர மற்றவர்களும், மற்றவர்களுடைய தேவைகளும் உலகத்துக்கு அநாவசியம் என்று ஒவ்வொருவருமே தங்களைத் தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு திருப்தியடைந்து விட்டால் அப்புறம் வாழ்க்கையே காட்டுமிராண்டித்தனமாகப் போய் விடாதா?

அங்கையற்கண் அம்மை தன்னோடு ஆலவாய் நகரமாகிய மதுரை மாநகரத்தில் கோயில் கொண்டருளியிருக்கும் மதிப்பிற்குரிய சொக்கநாதப் பெருமாள் பல தலைமுறைகளுக்கும் முன் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் புரிந்து புகழ்பெற்றார் என்பார்கள். இன்றைய மதுரையில் 'மூன்லைட் அட்வர்டைஸிங்' ஏஜன்ஸியோடும் அதன் விளம்பரப் பிரதாபங்களோடும் கோவில் கொண்டருளியிருக்கும் திருவாளர் கண்ணாயிரம் அவர்களோ தம்முடைய ஒவ்வொரு நாளிலும் எண்ணத் தொலையாத பல திருவிளையாடல்களைப் புரிந்து புகழ் பெற்றுக் கொண்டிருந்தார். கண்ணாயிரம் அவர்களுடைய ஒவ்வொரு விநாடியும் ஒரு திருவிளையாடலே. சொக்கநாதப் பெருமானுக்கு இந்த நூற்றாண்டில் அவதாரம் செய்து திருவிளையாடல் புரியும் உத்தேசம் ஏதாவது இருக்குமானால் அவர் அநாவசியமாக நம்முடைய கண்ணாயிரம் அவர்களிடம் தோற்றுப் போய்விட நேரிடும். தெரிந்துதான் முன்பே பெற்றோர்கள் அவருக்கு இப்படிப் பெயர் வைத்தார்களோ என்னவோ, கண்ணாயிரத்துக்கு ஆயிரம் கண்கள், ஆயிரம் மனம், ஆயிரம் திட்டங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாத வியாபார மனம் அவருடையது. இந்த விநாடியில் பார்த்த பார்வை அடுத்த விநாடி வரை அப்படியே இருக்காது. இந்த விநாடியில் நினைத்த மனம் அடுத்த விநாடி வரை அப்படியே நினைக்காது. அவருடைய ஒரு திட்டத்தில் நூறு திட்டங்கள் அடங்கியிருக்கும். "கண்ணாயிரம் நீங்கள் பெரிய காரியவாதி" என்றோ, "நீர் பெரிய காரியவாதி ஐயா" - என்றோ நண்பர்கள் தங்கள் தங்கள் பழக்கத்தின் தரத்துக்கேற்றபடி எப்போதாவது கண்ணாயிரத்தைக் குத்திக் காட்டினால் அதற்குக் கண்ணாயிரம் சொல்கிற மறுமொழி மிகவும் பிரமாதமாயிருக்கும்.

"நீங்கள் என்னைக் காரியவாதி என்று ஒப்புக் கொள்வதற்காக நான் பெருமைப்படுகிறேன். நாம் நம்முடைய அவசியத்துக்காகத்தான் வாழ வேண்டுமேயொழிய அநாவசியமாக ஒரு விநாடி கூட வாழக்கூடாது. நமக்கு நாமும் நம்முடைய தேவைகளும் தான் அவசியம். அதற்கு அப்பால் மற்றவையெல்லாம் அநாவசியம்" என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொல்வார் கண்ணாயிரம். "தன்னையும் தன்னுடைய தேவைகளையும் தவிர மற்றவர்களும், மற்றவர்களுடைய தேவைகளையும் உலகத்துக்கு அநாவசியம் என்று ஒவ்வொருவருமே தங்களைத் தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு திருப்தியடைந்து விட்டால் வாழ்க்கையே காட்டுமிராண்டித்தனமாகப் போய்விடாதா?" என்று யாராவது விவரம் தெரிந்தவர்களோ, விவகாரம் தெரிந்தவர்களோ எதிர்த்துக் கேட்டுவிட்டால் கண்ணாயிரத்துக்குக் கோபம் வந்துவிடும். வாணக் குழாய் போன்ற பெரிய மூக்குக்குக் கீழே பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு வண்டுகள் ஒட்டிக் கொண்டிருப்பது போல் ஒட்டிக் கொண்டு தெரியும் இட்லர் மீசையும் அந்த மீசையோடு சேர்ந்து கோபமுமாகத் தெரியும் போது கண்ணாயிரம் கண்ணாயிரம்தான். தான் எதையும் எதற்காகவும் கண்டிக்கலாம், கோபிக்கலாம்; ஆனால் தன்னை எதற்காகவும், யாரும் கண்டிக்கக் கூடாது, கோபிக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறவர் கண்ணாயிரம். ஆத்திசூடி இளம்பிறை அணிந்து மோனத்திருக்கும் முழு வெண்மேனியோடு சொக்கநாதப் பெருமான் எதிரே வந்து நின்றால் கூட, "உம்முடைய திருவிளையாடல் பிரதாபங்களைப் பற்றி ஆறுக்கு - நாலு - இரண்டு பத்தி மூன்று கலர் விளம்பரம் ஒன்று கொடுக்கிறீரா?" என்று கேட்பதற்குக் கண்ணாயிரம் தயார். ஒவ்வொரு விநாடியையும் பணமாக்கி விடவேண்டும் என்று தவித்துக் கொண்டு துறுதுறுவெனத் திரிபவர் கண்ணாயிரம். மூன்லைட் அட்வர்ட்டைஸிங் ஏஜன்ஸி காரியாலயத்தின் நிலைப்படிக்கு மேலே, "உங்கள் வரவு நல்வரவாகுக" என்று எழுதியிருக்கும் வரவேற்பு வாசகத்தில் வரவு என்ற பதம் உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் இரண்டு இடங்களிலும் அதற்கு 'வருமானம்' என்று தான் பொருள்படும். 'மூன்லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸி' காரியாலயத்தில் நல்வரவு அதிகமாயிருக்கலாம். ஆனால் செலவு என்னவோ வெறும் வார்த்தைகள் தான். கண்ணாயிரம் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்குச் செய்கிற அதிகபட்ச மரியாதை ஒரு கப் காபி அல்லது வெற்றிலை + சீவல் + சுண்ணாம்பு (தேவையானால்) + பன்னீர்ப் புகையிலை. மிகவும் அதிகபட்சமாகச் செய்கிற மரியாதை போர்ன்விடா அல்லது ஓவல் என்று இப்படி ஏதாவது இருக்கும். வருகிறவர்களுக்குச் செய்கிற அதிக பட்ச அவமரியாதை என்னவென்று வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். மரியாதை, அவமரியாதைகளுக்கு அங்கே தனித்தனி இலட்சணங்கள் கிடையாது. அங்கே செய்யப்படுகிற மரியாதைகளிலும் அவமரியாதை இருக்கலாம். அதேபோல் அவமரியாதைகளிலும் மரியாதை இருக்கலாம். வருகிறவன் புத்திசாலியாயிருந்தால் அவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும். புத்திசாலிகள் வகையாக வந்து சிக்கிக் கொண்டாலோ கண்ணாயிரம் அவர்களைச் சீக்கிரமே முட்டாள்களாக மாற்றிவிடுவதில் சமர்த்தர். கண்ணாயிரத்தினிடம் முட்டாள்களைப் புத்திசாலிகளாக மாற்றும் உலகத்துக்குத் தேவையான திறமை இல்லாவிட்டாலும் புத்திசாலிகளை முட்டாள்களாக மாற்றும் உலகத்துக்குத் தேவையில்லாத திறமை ஏராளமாக இருந்து தொலைத்தது.

கண்ணாயிரத்தின் வாழ்க்கையில் வேகம் அதிகம். அவரிடம் அநியாயமான சுறுசுறுப்பு இருந்தது. மதுரைச் சீமையில் சுற்றுவட்டாரத்துப் பட்டி தொட்டிகளைச் சேர்ந்த ஜமீந்தாரோ, மிட்டாதாரோ, மிராசுதாரோ, சமஸ்தானாதிபதியோ மதுரைக்கு வருகிறார் என்றால் அவர் தங்குவதற்கு இடம் முதல், அவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் வரை எல்லாம் கண்ணாயிரத்தின் கையில், கண்ணாயிரத்தின் பொறூப்பில் தயாராயிருக்கும். இப்படிப் பல பிரமுகர்களைக் கட்டிக் காக்கிற ஒரு பெரும் பிரமுகராயிருந்தார் கண்ணாயிரம். பிரமுகர்களை வரவேற்பதற்கும், வழியனுப்புவதற்குமாக முக்கால்வாசி நேரம் ரயில்வே பிளாட்பாரத்திலேயே நாட்களைக் கழிக்கிறவர் அவர். ஒரு காரியம் முடிகிற இடத்தில் இன்னொரு காரியம் ஆரம்பமாகிறாற் போல அவ்வளவு விரைந்த சுறுசுறுப்பான வாழ்க்கையை உடையவர் அவர். முடிந்த காரியத்துக்குப் பக்கத்தில், முடிய வேண்டிய காரியம் வந்து காத்துக் கொண்டிருப்பது அவருடைய வழக்கம். அன்று அதிகாலையில் யாரையோ இரயிலேற்றி விட வந்தவர் அதே இரயிலில் மோகினியும் அவள் தாயும் அவர்களோடு அவர் முற்றிலும் எதிர்பாராத ஆளாகச் சத்தியமூர்த்தியும் வந்து இறங்கக் கண்டார். கூந்தல் தைல விளம்பரப் படத்துக்காக மோகினியின் தாயிடம் முன்பணம் கொடுத்துத் தேதி குறித்திருப்பது ஞாபகம் வந்தது அவருக்கு. உடனே 'இன்று காலையிலேயே அந்தப் புகைப்படத்தை எடுத்து முடித்து விட்டால் என்ன?' என்று கண்ணாயிரத்தின் வியாபார மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது. 'இந்தப் பையன் சத்தியமூர்த்தி எப்படி மோகினியோடும் அவள் தாயோடும் இரயிலில் சேர்ந்து வர நேரிட்டது?' என்ற சந்தேகம் அவருடைய மனத்தில் வந்து அலைமோதவே சத்தியமூர்த்தியிடமே நேரில் அதைக் கேட்டுவிட்டு அவன் ஆத்திரப்பட நேர்ந்ததால், இரயில் பிளாட்பாரத்தில் அவனிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

அப்புறம் அவர் இரயிலிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த மோகினியை அவள் தாயோடு சந்தித்ததும், அவளிடம் கூந்தல் தைல விளம்பரத்தை ஞாபகப்படுத்தியதும், தன் காரிலேயே அவர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டதும் மிகவும் வேகமாக நிகழ்ந்தேறிய நிகழ்ச்சிகள். புற்ப்படுவதற்கு முன், "இரயிலில் எங்களோடு இதே வண்டியில் வந்தவர் பேனாவைத் தவறவிட்டுப் போயிருக்கிறார். அதை அவரிடம் கொடுத்துவிட வேண்டும். அவர் பிளாட்பாரத்திலேயே எங்காவது இருக்கிறாரா என்று பார்க்கிறேன்" - என்று மோகினி பிளாட்பாரத்தின் மறுகோடிக்குப் போக முந்திய போது, "யார்? அந்தப் பயல் சத்தியமூர்த்தியைக் கேட்கிறாயா? அவனை நானும் வழியில் எதிரே பார்த்தேன். அவன் இதற்குள் போயிருப்பானே? பையன் அவசரக் குடுக்கை. உங்கள் வண்டியில் அவனும் கூட வந்ததை நானே பார்த்தேன். எங்கள் தெருவில் இருக்கிற பையன் தான். உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இந்தப் பேனாவை நானே அவனிடம் கொடுத்து விடுகிறேன் மோகினி. நீ எதற்கு வீணாகச் சிரமப்பட வேண்டும்?" என்று அவளைத் தடுத்தார் கண்ணாயிரம். தன்னிடம் அவர் பதில் சொல்லிய விதமே மோகினிக்குப் பிடிக்கவில்லை. ஆள் இல்லாதபோது மற்றவர்களைப் பற்றிப் பயல், பரட்டை என்றெல்லாம் பேசுவது கண்ணாயிரத்துக்கு வழக்கம். அப்படிப் பேசிப் பேசியே பெரிய மனிதரானவர் அவர்.

"நானே நேரில் சந்தித்து இந்தப் பேனாவை அவரிடம் கொடுக்க வேண்டும்" என்று மோகினி உறுதியாகக் கூறியபோது, அவளுடைய தாய் அவளை உறுத்துப் பார்த்தாள்.

"பைத்தியம் பிடித்துப் போய் அலையாதே..." என்று கடுமையான குரலில் மிரட்டினாள். காரியவாதியான கண்ணாயிரம் இந்த நிலையில் தமக்குச் சாதகமாக எல்லாம் முடிவதற்கு அப்போது தாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டார். தாய்க்கும் மகளுக்கும் சண்டை வந்து ஒருவருக்கொருவர் முகத்தைத் தூக்கிக் கொண்டு நின்றால், "மயில் தோகை மார்க் கூந்தல் தைலத்து'க்காக எடுக்க வேண்டிய புகைப்படம் பாழாகி விடுமோ என்ற பயத்தில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு சமாளித்தார் அவர். கௌரவத்தை விடக் காரியம் முக்கியமாயிற்றே அவருக்கு.

"புகைப்படம் எடுக்கிற இடத்துக்குப் போவதற்கு முன் அந்தப் பையனுடைய வீட்டு வாயிலில் காரை நிறுத்தி அவனை வெளியே கூப்பிடுகிறேன். நீயே பேனாவை அவனிடம் கொடுத்துவிடலாம். பாவம்! உன் ஆசையைத் தான் நாங்கள் கொடுப்பானேன்?" என்று மோகினியைப் பார்த்து அசட்டுச் சிரிப்பைப் சிரித்தார் கண்ணாயிரம். நாகரிகமில்லாத அந்தச் சிரிப்பை எரித்து விடுவது போன்ற பார்வையால் எதிர் கொண்டாள் மோகினி. கண்ணாயிரத்தின் காரில் அவர் உடன் இருந்து ஓட்டிக் கொண்டு வர அமர்ந்து செல்வதை நினைத்த போது ஏதோ நரகத்தில் உட்கார்ந்திருப்பதைப் போல் அருவருப்பாகவும் வேதனையாகவும் உணர்ந்தாள் மோகினி. 'அம்மாவுக்கு இப்படியெல்லாம் இது நரகமாகத் தோன்றாது'. ஏனென்றால் இந்த விதமான நரகங்களில் உழன்று உழன்று பணம் சேர்த்துக் கொண்டு வாழ ஆசைப்படுவதுதான் அம்மாவின் வாழ்க்கை இலட்சியம். எனக்காகவே இந்த மாதிரி நரகங்களைப் படைத்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறாளே அம்மா? நான் கண்ணாயிரத்திடம் சிரிக்கச் சிரிக்கப் பேசினால் அம்மாவுக்குத் திருப்தியாயிருக்கும். கண்ணாயிரம் அறிமுகப் படுத்துகிற மஞ்சள்பட்டி ஜமீந்தாருக்கு என் கைகளால் சிற்றுண்டி கொடுத்தால் 'பெண் பிழைக்கத் தெரிந்தவளாக இருக்கிறாளே' என்று அம்மா மகிழ்ச்சி அடைவாள்.

'பணமும் பகட்டும் உள்ளவர்களுக்கு முன் எல்லாம் நீ தாராளமாகச் சிரித்து முகம் மலரப் பேச வேண்டும்டீ பெண்ணே! உன்னுடைய சிரிப்புக்கு முன்னால் எந்தக் கொம்பனாக இருந்தாலும் மயங்கியே ஆகவேண்டும்' என்று பச்சையாகவே வாய் கூசாமல் என்னிடம் சொல்கிற அம்மா முன் நான் நியாயம் பேசி என்ன பயன்? நானாக 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்று எந்த விதமாகவும் வாழ்க்கையைப் பற்றி நினைக்கக் கூடாதாம். நான் எப்படி வாழவேண்டும் என்று அம்மா நினைக்கிறாளோ அப்படித்தான் நான் வாழ வேண்டுமாம். 'இன்னொருவர் நினைக்கிறபடி - சொல்கிறபடி - கட்டளையிடுகிறபடி அடிமைகள் தான் வாழ்வதாகச் சொல்வார்கள்.' அம்மா என்னைப் பெண்ணாகப் பெறவில்லை. பெண்ணாக வளர்க்கவும் இல்லை. அடிமையாகப் பெற்றாள். அடிமையாகத் தான் வளர்க்கவும் ஆசைப்படுகிறாள்.

தனக்கு மட்டுமல்ல; தனக்கும், தான் கையைச் சுட்டிக் காண்பிக்கிறவர்களுக்கும், அவர்களுடைய கீழ்த்தரமான விருப்பங்களுக்கும், எல்லாமாகச் சேர்ந்து ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் அடிமையாக இருக்க வேண்டுமென்று அம்மா ஆசைப்படுகிறாள். கைகளிலும் கால்களிலும் கனமான இரும்பு விலங்குகளைப் பூட்டிக் கொண்டு முரட்டி அடிமையாக இருப்பதையும் விடக் கேவலமானது இப்படிப் பூவும், பொன்னும், பட்டும், பணமும், பகட்டுமாக அலங்கரித்துக் கொண்டு யார் யாருடைய விருப்பங்களுக்கோ, எப்படி எப்படியோ மிகவும் மென்மையான அடிமையாக இருப்பதுதான். இதை எப்படி நான் என் அம்மாவுக்குப் புரியவைப்பேன்? அவளுக்குப் புரிய வைப்பதை விடப் பட்டப்பகலில் எல்லோரும் காணும்படி மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்திலே எறிக் கீழே குதித்து என் உயிரை மாய்த்துக் கொள்வது என்னால் சுலபமாக முடிகிற காரியம். என்னுடைய இந்த அழகே எனக்குப் பெரிய பகை. நான் ஏன் இப்படி அழகாகப் பிறந்து தொலைத்தேன்? பார்த்தவர்கள் அருவருப்பு அடையும் படியான அவலட்சணமாகப் பிறந்திருந்தோமானால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்? அப்போது நான் யார் கண்ணிலும் படமாட்டேன். என்னைப் பார்க்கிறவர்கள் மனமும் கலங்கித் தவிக்காது. 'பார்க்கிற கண்ணில் இலட்சணமாகத் தெரிய வேணும்டீ, பெண்ணே' என்று கூச்சமில்லாமல் உபதேசம் செய்கிறாள் அம்மா. அழகை முதலாக வைத்தும் ஒரு வியாபாரமா? சீ! சீ! என்ன வாழ்க்கையோ? என்ன பிழைப்போ? போன மார்கழியிலே டான்ஸுக்காக மனப்பாடம் பண்ணின ஆண்டாள் பாசுரத்திலே, 'மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கில்லேன்' என்று ஒரு வரி வந்ததே, - அந்த வரியை நெட்டுருப் போடுகிற ஒவ்வொரு தடவையும் எனக்கு அழுகையே வந்திருக்கு. அம்மாவோ 'மானிடருக்காகவே பேச்சுப்பட்டு, ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவருக்குப் பேச்சுப்பட்டு வாழவேண்டும்' என்கிறாள்.

இப்படி மனத்தை அரித்தெடுக்கும் பல நினைவுகளோடு கண்ணாயிரத்தின் காரில் போய்க் கொண்டிருந்தாள் மோகினி.

போன மார்கழியில் இந்த ஆண்டாள் பாசுரத்துக்குத் தானே ஆண்டாள் வேடமிட்டுக் கொண்டு பக்தி சிரத்தையோடு அபிநயம் பிடித்த ஞாபகம் வந்தது அவளுக்கு. அதற்கும் முந்திய மற்றொரு ஞாபகமாக ஸ்ரீவில்லிப்புத்தூர்க் கோவில் திருவாடிப் பூரத் திருவிழாவில் தேர் அன்றைக்கு இரவு இதே பாசுரத்தைப் பாடி ஆண்டாளின் கால்கள் மிதித்து நடந்த புண்ணிய பூமியிலே ஆண்டாளுக்கு முன்பாகவே ஆண்டாள் வேடமிட்டு ஆடிய நினைவும் அவளுக்கு இப்போது உண்டாயிற்று. 'மனிதனுக்குப் பயன்படுவதற்காக என் வாழ்வைப் பேரம் பேசினால் நான் வாழவே மாட்டேன்' என்று பொருள்படும் அந்த அழகிய பாசுரைத்தை இரைந்து பாடிக் கொண்டே உயிரை விட்டுவிட வேண்டும் போல் மோகினி தன் வாழ்க்கையை ஒரு சுமையாகவும், கனமாகவும் தனக்குத்தானே பலமுறை உணர்ந்திருக்கிறாள். 'மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வாழ்கில்லேன்' என்ற பாசுரத்துக்கு அபிநயம் பிடித்துக் கொண்டே மானிடர்களைக் கவர்ந்து காசு சேர்க்க வேண்டும் என்ற அம்மாவின் ஆசைக்கும், தன் அந்தரங்கத்துக்கும் எட்டு ஏணி வைத்தாலும் எட்டாது என்று அவள் உணர்ந்துதான் இருந்தாள். வாழ்வதற்கு ஏதோ ஓர் உயர்ந்த நோக்கமும் அர்த்தமும் இருக்க வேண்டுமென்று அவள் எண்ணி எண்ணிப் புழுங்கிக் கொண்டிருக்கிறாள். வாழ்வதற்கு ஒரே நோக்கமும் ஒரே அர்த்தமும் பொருள் சேர்ப்பதுதான் என்று அவளுடைய பேராசை பிடித்த அம்மா அவளிடம் வற்புறுத்துகிறாள். 'என்னுடைய இதயத்தின் இருட்டு - என்றைக்கு விடியப் போகிறதோ' என்று அவள் ஈரம் கசிந்திருந்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டு பெருமூச்சு விடவும், "இதுதான் அந்தப் பையன் சத்தியமூர்த்தியின் வீடு! இறங்கி வா... அவனைக் கூப்பிட்டுப் பேனாவைக் கொடுத்துவிட்டுப் போகலாம்" என்று கண்ணாயிரம் காரை நிறுத்திக் கீழே இறங்கி மோகினி இறங்குவதற்காகப் பின்புறம் வந்து கதவைத் திறந்து விடவும் சரியாக இருந்தது. பயல், அவன், இவன் என்று ஆளில்லாத போது பேசிவிட்டாலும் சத்தியமூர்த்தியிடம் கண்ணாயிரத்துக்கு ஏதோ ஒரு பயம் இருக்கிறது என்பதை "மிஸ்டர் சத்தியமூர்த்தி இருக்கிறாரா?" என்று அவர் மரியாதையாக விசாரித்ததிலிருந்து தெரிந்து கொண்டாள் மோகினி. சத்தியமூர்த்தியிடம் பேனாவைக் கொடுத்து விட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின், "என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி விடைபெற்ற போது சத்திய வேட்கை நிறைந்த அந்த அழகிய கண்களின் பார்வையிலிருந்து விடுபட்டு பிரிந்து போகிறோமே என்ற ஏக்கம் தான் அவளிடம் மீதமிருந்தது.

உலகத்தில் சாதரணமாக எல்லாருடைய கண்களும் தன்னைப் பார்க்கிறாற் போல் பார்க்காமல் சத்தியமூர்த்தியின் கண்கள் தன்னைப் பார்க்கும் போது அவற்றில் ஓர் ஆழ்ந்த அநுதாபம் இருப்பதை அவள் உணர்ந்தாள். இப்படி ஓர் அநுதாபத்துக்காகத்தான் அவள் பிறந்ததிலிருந்து தவித்துக் கொண்டிருந்தாள். பேனாவைக் கொடுத்த பின் சத்தியமூர்த்தியின் வீட்டு வாசலிலிருந்து கார் புறப்பட்ட போது, "பையன் தமிழ் எம்.ஏ. தேறிவிட்டு வீட்டோட வறட்டு வேதாந்தம் பேசிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். திமிருக்கு ஒன்றும் குறைவில்லை. இந்தத் திமிர் பிடித்தவனுக்கு வேலை பார்த்துக் கொடுக்கச் சொல்லி இவனுடைய தந்தை என்னிடம் சிபாரிசுக்கு வேறு வருகிறார்" என்று அலட்சியமாகச் சொல்லத் தொடங்கினார் கண்ணாயிரம். மோகினி முகத்தைச் சுளித்தாள். அவளுடைய அருமை அம்மாவோ கண்ணாயிரத்துக்குத் தலையாட்டிக் கொண்டு அதை உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். கண்ணாயிரத்திடமிருந்து அற்பத்தனமான புறம் பேசும் குணத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மோகினி மனம் நொந்தாள்.

அதே வீதியில் நாலைந்து வீடு தள்ளிச் சென்ற பின் கார் மறுபடியும் நின்றது. அதுதான் கண்ணாயிரத்தின் வீடு என்று அம்மா காதருகே முணுமுணுத்தாள். மோகினி பதிலே சொல்லவில்லை. கேட்டுக் கொள்ளாதது போல் இருந்து விட்டாள்.

"முத்தழகு அம்மா! நம் வீட்டுக் காப்பி இந்த ஊரிலேயே தரமான காப்பி என்று பெயர் பெற்றதாகும். குடித்த பின் மோகினியே 'சர்டிபிகேட்' கொடுக்கப் போகிறாள், பாருங்கள்! இறங்கி வந்து பல் விளக்கிக் காப்பி குடியுங்கள். அதற்குள் நான் ஸ்டூடியோவுக்குப் ஃபோன் செய்து நாம் படம் பிடிக்க வரப்போவதை அவர்களுக்குச் சொல்லி விடுகிறேன்" என்று கண்ணாயிரம் உற்சாகமாக அரட்டைச் சொற்களில் அவர்களை அழைத்த போது, "ஆகா! அதற்கென்ன? உங்கள் வீட்டுக் காப்பியைப் பற்றிச் சொல்லியா தெரிய வேணும்! மனுஷாளைப் போலத் தானே பண்டமும் இருக்கும்!" என்று ஒத்துப் பாடிப் புகழ்ந்து கொண்டே காரிலிருந்து கண்ணாயிரத்தோடு சேர்ந்து இறங்கிவிட்டாள் அம்மா; கிழே இறங்கி நின்று கொண்டு அம்மா, மோகினியையும் இறங்கும்படி கையசைத்துக் கூப்பிட்டாள். மோகினி காரிலிருந்து இறங்கவே இல்லை. "நீ போய்விட்டு வா, அம்மா! எனக்குக் காப்பியும் வேண்டாம்; டீயும் வேண்டாம்; சீக்கிரமாகப் படத்தைப் பிடித்துக் கொள்ளச் சொல். காலா காலத்தில் வீட்டுக்குப் போய்க் குளித்துவிட்டுக் கோயிலுக்குப் போகணும்..." என்று கடுமையாகவும் கண்டிப்பாகவும் அம்மாவுக்குப் பதில் கூறினாள் மோகினி.

"இப்போ நீ இறங்கி வரப் போகிறாயா இல்லையா? என்னடீது மரியாதை தெரியாமே...!" என்று அம்மா மிரட்டினாள். பெண் அசைந்து கொடுக்கவே இல்லை. "பரவாயில்லை! சிரமப்படுத்த வேண்டாம். பாவம்! அவளுக்கு நம் வீட்டுக் காப்பி கொடுத்து வைக்கவில்லை போல் இருக்கிறது. மஞ்சள்பட்டி ஜமீந்தார் ரயில்லேருந்து இறங்கறப்பவே, "கண்ணாயிரம்! பிளாஸ்க்கிலே உங்க வீட்டுக் காப்பி கொண்டாந்திருக்கியா இல்லியா? அதை முதல்லே சொல்லு. நீ காப்பி கொண்டாரலையின்னா இப்படியே ஊருக்குத் திரும்பிடறேன். நாளைக்கு மறுபடி ரயிலேறி வந்து காப்பியோட உன்னை எதிர்பார்க்கிறேன்பாரு" என்று பேச்சுக்குப் பேச்சு 'முத்தழகம்மா' என்ற பேரைக் குழைவோடு சொல்லி விளித்து நாசூக்காகக் குழைந்தார் கண்ணாயிரம். இப்படி நாலுதரம் யாராவது பேரைச் சொல்லிப் போலியாகக் கூப்பிட்டால் கூட அம்மாவுக்கு உச்சி குளிர்ந்து போய்விடும் என்று மோகினிக்கு நன்றாகத் தெரியும். இப்போது கண்ணாயிரம் அம்மாவிடம் குழைந்த குழைவினால் அம்மா தன்னைக் கோபத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதையும் அவள் புரிந்து கொண்டாள்.

"சொன்னால் கேள்! எனக்குக் காப்பி வேண்டாம். நீ மட்டும் போய்விட்டு வாம்மா..." என்று இரண்டாம் தடவையாகவும் அழுத்திச் சொன்னாள் மோகினி. அவள் பிடித்தால் பிடித்த முரண்டுதான் என்று அம்மாவுக்குத் தெரியும்.

"நீ ஒரு நாளைக்கும் உருப்படவே போறதில்லை..." என்று வயிற்றெரிச்சலோடு மகளைப் பார்த்துக் கைகளைச் சேர்த்துச் சொடுக்கி முறித்துவிட்டுக் கண்ணாயிரத்தோடு படியேறி உள்ளே போனாள் அம்மா.

"காரியத்தைக் கெடுத்துவிடுவிங்க போல் இருக்கே. அது போக்குப்படியே விட்டுப் பிடியுங்க முத்தழகம்மா! முதலில் போட்டோவுக்கு உட்கார்ந்து காரியம் முடியட்டும். அது முக்கியம். அப்புறம் மத்ததைப் பார்த்துக்கலாம்" என்று அம்மாவை உள்ளே அழைத்துப் போகும் போது கண்ணாயிரம் சொல்லிக் கொண்டு சென்றதைக் காரில் உட்கார்ந்தபடியே மோகினியும் கேட்க முடிந்தது. 'என்ன நரக வாழ்க்கை இது? போட்டோ முடிந்து வீட்டுக்குப் போனதும் முதல் வேலையாக அம்மாவிடம் கண்டித்துச் சொல்லிவிட வேண்டும். எண்ணெய் விளம்பரம், சீயக்காய்ப் பொடி விளம்பரமென்று இனிமேல் என் உயிரை வாங்கப்படாது அம்மா! மானமாக ஏதாவது செய்து சம்பாதித்துப் போடுகிறேன். கோவில் திருவிழா, நல்லவர்கள் நடத்துகிற சபை ஆண்டு விழா என்று கௌரவமாக நாலு இடங்களில் நான் படித்திருக்கிற நடனத்தைக் கலையாக ஆடுகிறேன். அதில் கிடைக்கிற சம்பாத்தியம் நமக்குப் போதும். இந்த அல்ப ஆசைகளையெல்லாம் விட்டுவிடு. இனிமேலாவது என்னைப் புரிந்து கொள். மஞ்சள்பட்டி ஜமீந்தாரும், மயில்தோகை மார்க் கூந்தல் தைலக்காரனும் அவர்களைக் கட்டிக் கொண்டு அழுகிற கண்ணாயிரமும் எக்கேடு கெட்டு வேண்டுமானால் போகட்டும். நீ என்னை அநியாயமாகக் கொல்லாதே. நான் இதற்கெல்லாம் ஆளில்லை...' என்று அம்மாவிடம் எப்படி எப்படிச் சீற்றத்தோடு பேச வேண்டும் என்பதை நினைத்த போது அந்த நினைப்பே துணிவாகவும் சுறுசுறுப்பாகவும் ஓடியது அவள் மனத்தில். இரண்டு மாதங்களுக்கு முன் முதன்முதலாக இந்த மஞ்சள்பட்டி ஜமீந்தார் என்ற பெருங்குடி மகனைக் (நிறையக் குடிப்பவரை) கண்ணாயிரம் தன் வீட்டுக்கு அழைத்து வந்து அம்மாவுக்கு அறிமுகப்படுத்தியதையும், அம்மா தனக்கு அவரை அறிமுகப்படுத்திய போது தான் கனன்று சீறி விழுந்ததையும் இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தாள் மோகின். 'அன்றைக்கு எங்கிருந்துதான் தனக்கு அவ்வளவு கோபம் வந்ததோ?' என்பதை இப்போது எண்ணுகிற வேளையில் அவளுக்கே வியப்பாயிருந்தது. அம்மாவும் சுற்றியிருந்தவர்களும் கீழ்த்தரமாக நடந்து கொள்ள முயன்ற பல வேளைகளில் தான் முரண்டு பிடித்து நெருப்பாக இருந்து அவர்களைச் சுட்டிருந்த சம்பவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தன அவளுக்கு. இப்ப்டி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் மிகச் சிரமப்பட்டுத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்த காரணத்தால் தான் நடுநடுவே வாழ்க்கையை முடித்துக் கொண்டு ஒரேயடியாகப் போய்ச் சேர்ந்துவிடலாமா என்ற அலுப்பும், சோர்வும், விரக்தியும் அவளுக்கு ஏற்பட்டன. சில நாட்களில் உயிர் வாழ்வதற்கே அலுப்பாகவும் சோர்வாகவும் இருந்திருக்கிறது அவளுக்கு.

"மோகினி!... உனக்கு நானே காப்பிக் கொண்டு வந்து விட்டேன்."

-கையில் டவரா டம்ளருடனும் வாய் நிறைய விஷமச் சிரிப்புடனும் கண்ணாயிரம் காரருகே நின்று கொண்டிருந்தார். ஏதேதோ யோசனைகளில் மூழ்கியிருந்த மோகினி அவர் வந்து நின்றதைக் கவனித்துப் புரிந்து கொள்வதற்கே சில விநாடிகள் ஆயின.

"எனக்குக் காப்பி வேண்டாம் சார்! சீக்கிரமாக வந்து ஸ்டூடியோவுக்கு அழைத்துப் போய்ப் படத்தைப் பிடித்துக் கொண்டு அனுப்புங்கள். வீட்டுக்குப் போய்த் தலை முழுக வேண்டும்" என்று அவள் சுடச்சுடப் பதில் கூறிய விதமும் பதிலின் முடிவில் இரட்டுற மொழிதலாக இரட்டைப் பொருளில் 'தலை முழுக வேண்டும்' என்று கூறிய வாசகமும் கண்ணாயிரத்தைப் பொசுக்கின. அவர் முகத்தில் ஈயாடவில்லை. காப்பியோடும் ஏமாற்றத்தோடும் வீட்டுக்குள் திரும்பிப் போனார் அவர். கால்மணி நேரத்தில் அவரும் முத்தழகம்மாளும் மறுபடியும் வெளியே வந்தார்கள்.

கண்ணாயிரம் அமைதியாக ஆனால் உள்ளே நீறு பூத்து அடங்கிய கோபத்தோடு காரை ஓட்டினார். அம்மா மோகினையை எரித்து விடுவது போல் பார்த்தாள். "தள்ளி உட்கார்ந்து தொலை. இப்படி இடிச்சிட்டு உட்கார்ந்தால் தான் நீ என் வயிற்றிலே பொறந்த அருமை தெரியுமாக்கும்?" என்று திரும்பி வந்து காரில் அமர்ந்ததும் காரணமின்றி அம்மா தன்னிடம் கொதித்துப் பேசியதிலிருந்தே அவள் மனநிலையை மோகினி புரிந்து கொள்ள முடிந்தது. தான் சொல்லியபடி பிறர் கேட்காத போது வருகிற இந்த ஆற்றாமைக் கோபம் அம்மாவிடம் அதிகமாக உண்டு என்பது மோகினிக்குத் தெரியும். 'தான் கண்ணாயிரத்தின் வீட்டுக்குள் வரவில்லை' என்பதுதான், அம்மாவின் இந்தக் கோபத்துக்குக் காரணம் என்றும் மோகினி புரிந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் கார் வெளி வீதியிலிருந்து பிரபலமான பெரிய ஸ்டூடியோ ஒன்றின் வாயிலில் போய் நின்றது. கண்ணாயிரம் தன்னோடு அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஸ்டூடியோவுக்கு உள்ளே சென்றார். சுற்றிலும் மலைப் பின்னணியோடு மயில் ஒன்று தோகை விரித்தாடுகிற ஸீன் கட்டி விட்டு எதிரே காமிராவை நிறுத்தி மோகினியைப் புகைப்படம் எடுக்க ஏற்பாடு ஆகியிருந்தது. பெரிய அழகிய தோகையை விரித்துக் கொண்டு நிற்கும் மயில் போல் கட்டுக் கடங்காத கருங்குழல் அலை அலையாக அவிழ்ந்து தொங்கி, கூந்தலும் முகமும் சேர்த்துப் படத்தில் விழுகிறாற் போல் காமிராவுக்கெதிரே அமர்ந்தாள் மோகினி. கண்ணாயிரம் ஏதோ சொல்ல அவள் அருகில் வந்தார். பதுங்கிப் பதுங்கி அவர் அருகில் வந்த விதத்திலேயே வியாபாரத் தந்திரம் தெரிந்தது. ஆனாலும் பயந்து கொண்டே தான் வந்தார்.

"இதோ ஒரு நிமிஷம்! படம் பிடிக்கிறதுக்கு முன்னாடி இந்தச் சேலையைக் கட்டிக்கிடணும். அப்பத்தான் எடுப்பாக இருக்கும்" என்று கரைகளில் பளபளவென்று தங்கச் சரிகையிட்டு மஸ்லினை விட மிக இலேசாக இருக்கும் புடவை ஒன்றைப் பிரித்து மோகினியிடம் நீட்டினார் கண்ணாயிரம்.

"கண்ணாயிரம் சார்! எனக்கு ஒரு சந்தேகம்! உங்கள் மயில் தோகை மார்க் கூந்தல் தைலத்தைப் பெண்கள் தலைக்குத் தடவிக் கொள்வதற்காக விற்கப் போகிறீர்களா? அல்லது புடவைக்குத் தடவிக் கொள்வதற்காக விற்கப் போகிறீர்களா? முதலில் அதைச் சொல்லி விடுங்கள். அப்புறம் நீங்கள் என்னைப் போட்டோ பிடிக்கலாம்!" என்று ஆணியடித்தாற் போல் அழுத்தமாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அந்த வெங்காயச் சருகுச் சேலையை அவர் கையிலிருந்து வலிந்து பறிந்து ஒரு மூலையில் ஆத்திரத்தோடு வீசி எறிந்தாள் மோகினி.

அத்தியாயம் - 10

நாம் எப்படி எங்கே வாழ விரும்புகிறோம் என்பதும் உலகம் நம்மை எங்கே எப்படி வாழ வேண்டுமென்று எதிர்பார்க்கிறது என்பதும் தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் இரண்டு எல்லைகள்.

தனக்கு வந்திருக்கிற கடிதம் கல்லூரி முதல்வரிடமிருந்தோ நிர்வாகியிடமிருந்தோ தான் வந்திருக்க வேண்டுமென்று தன் தந்தை ஆவலோடு எதிர்பார்த்துத் தவிப்பது சத்தியமூர்த்திக்குத் தெரிந்தது. அப்பா மட்டுமல்ல. அம்மாவும் இப்படி எதிர்பார்த்துத்தான் தவிக்கிறாள். பிறரை எதிர்பார்த்துத் தவிக்க வைத்துவிட்டு வாழ்வதிலுள்ள வேதனையை அந்த விநாடியில் சத்தியமூர்த்தி மிக நன்றாக உணர்ந்தான். இதைக் காட்டிலும் அதிகமாக அவன் மனத்தை வேதனைப்படுத்தக் கூடிய வேறு செய்தி ஒன்றைத் தந்தை அப்போது அவனிடம் கூறினார்.

"முடிந்தால் இன்றைக்குச் சாயங்காலமாவது நாளைக்குக் காலையிலாவது கண்ணாயிரத்தைப் போய்ப் பார். நான் அவரிடம் நேற்றுப் பேசிக் கொண்டிருந்த போது உன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்தச் சுற்று வட்டாரத்தில் கண்ணாயிரம் மனம் வைத்தால் சாதிக்க முடியாத காரியமில்லை. மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையைப் பற்றி உனக்கே நம்பிக்கையில்லை என்று தோன்றுகிறது. கண்ணாயிரம் யாரிடமாவது வேண்டியவர்கள் மூலம் சொல்லி உனக்கு ஒரு வேலை பார்த்துத் தர முடியும். ஞாபகத்தில் வைத்துக் கொள். கண்ணாயிரத்தைப் போன்றவர்களின் தயவு நமக்கு என்றைக்கும் வேண்டும்."

யாருடைய சமூக வாழ்க்கையைப் பற்றி மிகவும் போலியானதென்றும் பொய்யானதென்றும் எண்ணியெண்ணி அவன் வருத்தப்பட்டிருக்கிறானோ அவரிடமே அவனைப் போய் நிற்கச் சொல்கிறார் தந்தை. பொய்யாகவும் வஞ்சகமாகவும் வாழ்ந்தாலும், பணமும், காரியங்களைச் சாதிக்கிற திறமையும் உள்ளவர்கள் சமூகத்தை எவ்வளவிற்கு மயக்கி விடுகிறார்கள் என்று எண்ணி வியந்தான் சத்தியமூர்த்தி. தன் தந்தையே கண்ணாயிரத்தைப் பெரிய மனிதராக மதிக்கும் அளவிற்குக் கண்ணாயிரம் மயக்கும் தன்மை உள்ளவராக இருக்கிறார் என்பதை அறிந்த போது வேதனையும் ஏமாற்றமும் அவனுக்கு ஒருங்கே ஏற்பட்டன. மீண்டும் அந்த வாக்கியங்களைத் தான் நினைத்தான் அவன். "நல்ல மனித வாழ்க்கையில் தன்னுடைய ஒவ்வொரு தேவைக்காகவும் மட்டுமே போராட முடியாது. தன்னுடைய தேவைக்காகவும் நியாயத்துக்காகவும் சேர்ந்தே போராட வேண்டியிருக்கிறது."

நேர்மையான உணர்ச்சிகளில் ஆழ்ந்து வாழத் தெரியாமல் ஏனோ தானோ என்று மிதந்து கொண்டு வாழும் கண்ணாயிரத்தைப் போன்றவர்களைச் சத்தியமூர்த்தி வெறுத்தான். அவனுடைய தந்தையோ கண்ணாயிரத்தைப் போன்றவர்களின் தயவு என்றைக்கும் வேண்டும் என்கிறார்.

"என்ன? நான் சொல்லியது ஞாபகத்தில் இருக்கட்டும்! சாயங்காலம் கண்ணாயிரத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வா..." என்று மறுபடியும் அவன் தந்தை அவனை வற்புறுத்தினார். தன் கையிலிருந்த அந்தக் கடிதத்தை - அதைச் சூழ்ந்து கொண்டு மணக்கும் மல்லிகைப்பு மணத்தோடு சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் சத்தியமூர்த்தி. "கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் நான் கண்ணாயிரத்துக்கு முன்னால் போய்க் கையைக் கட்டிக் கொண்டு நிற்க மாட்டேன் அப்பா!" என்று சொல்லிவிடுவதற்கு நாக்குத் துடித்தது. தான் அப்படி எதிர்த்துப் பேசினால் வாழ்க்கையில் பல காரணங்களால் ஏற்கெனவே நொந்து போயிருக்கிற தந்தையின் மனம் இன்னும் வேதனை கொள்ளும் என்று தன்னை அடக்கிக் கட்டுப்படுத்திக் கொண்டான் சத்தியமூர்த்தி.

கண்ணாயிரம் என்னும் பொய்ம்மைக்கு முன்னால் போய் நிற்கிற துர்ப்பாக்கியம் தனக்கு நேராமலிருப்பதற்காகவாவது உடனே பூபதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி விடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் அவன். 'அன்பின் பரிபூரணமான தன்மையைக் கனிந்து நிற்கிறாற் போல ஓர் அழகிய சொல்லால் உங்களை அழைக்க விரும்பினேன்' - என்று பூபதியின் மகள் தனக்கு எழுதியிருந்ததை அப்போது நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. இன்னொருவரால் விரும்பப்படுகிறோம் என்றோ அன்பு செலுத்தப்படுகிறோம் என்றோ தெரியவரும் போது இயல்பாக உண்டாகிற உற்சாகம் அப்போது அவன் மனத்திலும் ஓரளவு ஏற்பட்டிருந்தது. சர்க்கஸில் ஓர் ஆளை ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு முகத்தையும் உடலையும் தவிரச் சுற்றிலும் போய்ப் பதிந்து கொள்கிறாற் போல் நெருப்புடன் கூடிய கத்திகளை வீசி எறிவார்களோ, அப்படிச் சிந்தனைகளாலும் சூழ்நிலைகளாலும், துன்பங்களே தன்னைக் குறி வைத்து வீசப்பெறுவதாக உணர்ந்து தவிக்கும் வேளையில் நடுவே ஒரு பூச்செண்டும் வந்து விழுந்ததென இந்தக் கடிதம் மல்லிகைப் பந்தலிலிருந்து வந்திருப்பதாக அவன் எண்ணினான். நண்பகல் நேரத்தின் ஒடுங்கி ஓய்ந்த அமைதி வீட்டில் சூழ்ந்திருந்தது. அப்பா ஊஞ்சல் பலகையில் படுத்துத் தூங்கத் தொடங்கியிருந்தார். 'கல்யாணீ! கல்யாணீ!' என்று கிணற்றடியிலிருந்து ஏழெட்டு முறை இளைய பெண்ணைப் பெயர் சொல்லி அழைத்து அலுத்துப் போன அம்மா மூத்த பெண் ஆண்டாளைக் கூப்பிட்டு, "இந்தக் கல்யாணி எங்கே தான் இருக்கிறாள் என்று பார்த்துத் தொலையேன்" என்று கேட்டதையும் அதற்கு மறுமொழியாக அம்மாவிடம் ஆண்டாள். "கல்யாணியைக் கேட்கிறாயா அம்மா! அவள் இருக்கிற இடம் எனக்குத் தெரியும். வடுவூர் பரமசிவம் எழுதிய 'பரிமள விலாஸ் படுகொலை'யில் ஏழாவது அத்தியாயத்தில் இருக்கிறாளம்மா அவள். இருபது தடவை என்ன? எழுநூறு தடவை நீ தொண்டை கிழியக் கத்தினாலும் இப்போது அவள் காதில் விழாது..." என்று பதில் சொல்லியதையும் அத்தனை துயரமான மனநிலையிலும் இரசித்தான் சத்தியமூர்த்தி. 'இவ்வளவு வறுமையினிடையிலும் இந்த வீட்டில் சிரிப்பும் நகைச்சுவையும் கூட மீதம் இருக்கின்றனவே" என்று எண்ணி வியந்து கொண்டான். அவன் குடும்பத்தை எதிர்நோக்கியிருக்கிற துன்பங்களும் பொருளாதாரத் தொல்லைகளும் தெரிந்தால் கல்யாணியால் நிம்மதியாகத் துப்பறியும் நாவல் படிக்க முடியாது. ஆண்டாளால் சிறிது வேடிக்கையாகப் பேச முடியாது. பிள்ளையின் மலர்ச்சியான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வெள்ளிக்கிழமை சாயங்காலங்களில் தான் பேச்சியம்மன் கோவிலில் போடுகிற நெய் விளக்கும் திங்கள்கிழமை மாலை வேலைகளில் பழைய சொக்கநாதர் கோவிலைச் சுற்றுகிற சுற்றுகளுமே போதுமென்று நினைக்க மாட்டாள் அம்மா. அப்பா, அம்மா, தங்கைகள் எல்லாருமே தான் சம்பாதித்துப் போடத் தொடங்கிய பின்புதான் குடும்பத்துக்கு விடியப் போகிறதென்று காத்திருப்பது அவனுக்குத் தெரியும். நெஞ்சின் இரத்தம் சொட்டச் சொட்ட அந்த வீட்டுக்கு உழைக்க வேண்டுமென்று தான் ஒரு தீர்மானமான முடிவு செய்து கொண்ட மனநிலையோடு பூபதி அவர்களுக்குக் கடிதம் எழுத உட்கார்ந்தான் அவன்.

பகல் மூன்றரை மணிக்கு அந்தக் கடிதத்தை எழுதத் தொடங்கியவன், நாலரை மணி வரை - சரியாக ஒரு மணி நேரம் எழுதியிருக்கிறான். கடிதம் வரிக்கு வரி, வாக்கியத்துக்கு வாக்கியம் யாருக்கு எழுதப்பட்டதோ அவருடைய மனத்தைக் கவ்வுகிறாற் போல் வாய்த்திருந்தது. பூபதி அவர்களின் மனத்தில் அந்தக் கடிதம் தன்னைப் பற்றி நிச்சயமாக ஒரு நல்ல முடிவுக்கு வரத் துணை செய்யும் என்ற முழு நம்பிக்கையோடுதான் சத்தியமூர்த்தி அந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்ப்பதற்குப் புறப்பட்டான். அதை எழுதி முடித்த போது அவன் மனம் குழப்பமின்றி நிம்மதியாயிருந்தது. ஆனாலும் ஒன்றை நினைக்கும் போது அவன் மனம் திரும்பத் திரும்பக் குமுறத்தான் செய்தது. 'பதவியையும் செல்வத்தையும் செல்வாக்கையும் தேடுவதற்குத் தகுதியும் நேர்மையான திறமையும் மட்டுமே இன்றைய வாழ்க்கையில் போதுமானவையாக இருப்பதில்லை. சிந்திப்பதற்குத் தேவையான திறமை வேறாக இருக்கிறது. வாழ்வதற்குத் தேவையான திறமை வேறாக இருக்கிறது. என்னைப் போல் எம்.ஏ. முதல் வகுப்புத் தேர்ச்சியும் வாழ்க்கையைப் பற்றிய நல்ல இலட்சியங்களும் உள்ளவர்கள் ஓர் உத்தியோகத்துக்காக, வயிற்றை நிரப்பிக் கொள்ள வழி செய்யும் ஒரு வெறும் உத்தியோகத்துக்காக இப்படி நாயாக அலைகிறோம். கண்ணாயிரத்தைப் போல் அறிவையும் முதலீடு செய்யாமல், பணத்தையும் முதலீடு செய்யாமல், வெறும் சாமர்த்தியத்தையும், சூழ்ச்சியையுமே முதலீடு செய்து வாழ்க்கையில் மேலும் மேலும் வென்று கொண்டு போகிறவர்களும் இதே உலகில் தான் இருக்கிறார்கள். அவர்களுடைய சாமர்த்தியம் அப்பாவைப் போன்ற நல்லவர்களைக் கூட மயக்கிக் கவர்ந்து விடுகிறதே!' என்று மனம் புழுங்கியபடி தபாலாபீஸின் கல் கட்டிடத்திற்குள் நுழைந்து கடிதத்தை தபாலில் சேர்த்துவிட்டு அவன் வெளியேறிய போது, "இந்த ஊரில் தான் இருக்கிறாயா சத்தியம்? பார்த்து வெகு நாட்களாயிற்றே?" என்று குமரப்பன் எதிர் கொண்டான்.

தனக்கு மிகவும் நெருங்கிய தோழனாகக் கல்லூரி நாட்களிலிருந்தே பழகியிருக்கும் அந்த நண்பனை மனத்தின் தவிப்பு நிறைந்த இந்த வேளையில் சந்தித்தது சத்தியமூர்த்திக்கு மிகவும் ஆறுதலாயிருந்தது. குமரப்பனுடைய கைத்திறன் விந்தையானது. எந்தச் சித்திரக் கலாசாலையிலும் கற்காமலே அவன் கைகள் இழுக்கும் கோடுகளிலே சிரிப்பும் அழுகையும், சீற்றமும் வேட்கையும் தெரியும்படி விதம் விதமான மனித உருவங்கள் பிறந்தன. பொழுது போக்காகவும் விளையாட்டாகவும் தொடங்கிய இந்தக் கலை, கல்லூரி நாட்களிலேயே அவனைச் சிறந்த வல்லுநனாக்கியிருந்தது. நகைச்சுவைச் சித்திரங்களையும் கேலிச் சித்திரங்களையும் அவனுடைய சுறுசுறுப்பான கைகள் நொடிப்பொழுதில் பக்குவமாக வரைந்து முடித்தன. அவன் கரங்கள் காகிதத்தில் வேகமாகவும், சாமர்த்தியமாகவும் விளையாடின. சத்தியமூர்த்தியோடு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஏதோ ஒரு பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட் ஆகப் போய் விட்டான் குமரப்பன். அந்த வேலையும் அவனாகத் தேடிப் போய் அடைந்ததல்ல. தானாகவே அவனைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தது அந்த வேலை. கல்லூரி பொருட்காட்சியில் அவன் வரைந்து வைத்திருந்த சுவையான கேலிச் சித்திரங்கள் சிலவற்றைக் கண்டு வியந்த அந்தப் பத்திரிகையாசிரியர் அவனிடம் அமைந்திருந்த இந்த நுணுக்கமான திறமையைக் கண்டுபிடித்து அவனைத் தேர்ந்தெடுத்தார். குமரப்பன் வெறும் தொழில் நோக்குடனோ பணத்துக்கு ஆசைப்பட்டுத் தவிக்கும் மனநிலையுடனோ கார்ட்டூனிஸ்ட் ஆகவில்லை. இயற்கையாகவே அவனுடைய கண்களும், மனமும் இந்த உலகத்தையும் இதன் நிகழ்ச்சிகளையும் குறும்புத்தனமான சுறுசுறுப்போடு பார்க்கும் தன்மை வாய்ந்தவை. புத்திக் கூர்மையும் அவனுக்கு அதிகம். "பூகோள நூலின்படி உருண்டை வடிவமான இந்த உலகம் சுற்றிக் கொண்டிருப்பதாக ஒரு காட்சியை வரைந்துவிட்டு அதைப் பார்த்துக் கொண்டு நிற்கும் போதே அதைப் பார்த்த படைப்புக் கடவுளின் தலை சுற்றுவதாகவும் ஒரு கார்ட்டூன் எழுதித் தேவர்கள் எல்லாம் படிக்கிற பத்திரிகை ஏதாவது ஒன்று இருந்தால் அதற்கு அனுப்பிப் பிரசுரம் செய்யச் சொல்ல வேண்டும்டா சத்தியம்?" என்று அடிக்கடி சொல்வான் குமரப்பன். இப்படி ஏதாவது குறும்புத்தனமாகச் சொல்லாமல் சும்மா இருக்க முடியாது அவனால்.

"மனிதருடைய நெஞ்சம் சதாகாலமும் பணம் காசு பற்றித்தான் எண்ணித் தவித்துக் கொண்டிருக்கும் என்று நெஞ்சின் மேல் பணப்பைக்கு இடம் விட்டுச் சட்டை தைக்கத் தொடங்கிய முதல் தையல்காரன் தெரிந்து கொண்டிருக்கிறான் பார்த்தாயா?" என்று இப்படி ஏதாவது ஆழமான குறும்புத்தனமுள்ள வாக்கியத்தை முன்னும் பின்னும் தொடர்பில்லாமல் இருந்தாற் போலிருந்து திடீரென்று சொல்வான் அவன். குமரப்பனோடு பழகுவதே ஒரு சுவாரஸ்யமான அனுபவம். அவனைச் சந்தித்துப் பேசத் தொடங்கினால் அந்தச் சந்திப்பையும் பேச்சையும் முடிக்க வேண்டுமென்று தோன்றாது. இந்த உலகமே தன்னுடைய கேலிக்கும் அலட்சியத்துக்கும் குறும்புப் பேச்சுக்குமாக - மிகவும் சுதந்திரமாய் விமரிசனம் செய்வதற்கென்றே படைக்கப்பட்டிருப்பது போலப் பாவித்துக் கொண்டு பேசும் கலைத்திமிர் குமரப்பனிடம் உண்டு. இந்தக் கலைத்திமிரும் கூட விரும்பத்தக்க விதத்தில் இருக்குமே ஒழிய வெறுக்கத்தக்க விதத்தில் இருக்காது. எப்போதும் போலக் குமரப்பனைப் பார்த்ததும் அவனுடைய விசித்திரமான குணங்கள் எல்லாம் சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தன.

"என்னடா இது? ஏதோ சந்திக்கக்கூடாத ஆளை எதிரே சந்தித்து விட்டாற் போல் அப்படியே மலைத்துப் போய் நின்றுவிட்டாய்? தபாலாபீசுக்கே நேரில் தேடி வந்து சிரத்தையாகப் பெட்டியில் போட வேண்டிய ஏதோ ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு இந்த வெய்யிலில் நீயே வந்திருக்கிறாய்...!" என்று சிரிப்பும் குத்தலுமாகப் பேச்சை ஆரம்பித்தான் குமரப்பன்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை குமரப்பன்! திடீரென்று உன்னை எதிரே பார்த்ததும் ஒரு பெரிய சர்வகலாசாலையையே நேருக்கு நேர் சந்தித்தாற் போலாகிவிட்டது. கடிதத்தைத் தபாலில் சேர்த்து விட்டு அப்படியே இரயில்வே மேற்பாலம் வழியாக எங்காவது உலாவப் போகலாமென்று வந்தேன். நல்ல நேரத்தில்தான் நீயும் வந்து சேர்ந்திருக்கிறாய்" என்று சத்தியமூர்த்தி பதில் சொல்லிக் கொண்டு வந்த போது பாதியிலேயே அவன் பேச்சைத் தடுத்து நிறுத்திவிட்டு, "அதுசரி நீ என்னை ஒரு சர்வகலாசாலையோடு ஒப்பிடுவதை ஒரே ஒரு காரணத்துக்காக நான் மறுக்கிறேன். நான் தெரிந்து கொண்டிருக்கிற பல விஷயங்களை உலகத்தின் எந்தச் சர்வகலாசாலையிலும் சொல்லிக் கொடுப்பதற்குத் தயாராயிருக்க மாட்டார்கள்" எனச் சொல்லிச் சிரித்தான் குமரப்பன். அவனுடைய அந்தக் கர்வத்தைப் பார்த்துச் சத்தியமூர்த்தியாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே எதிரில் சந்திக்கிற ஒவ்வொருவரது பார்வையையும், முகத்தையும், நடையையும் கூட விமர்சனம் செய்து சிரித்துப் பேசிக் கொண்டே நடப்பான் குமரப்பன். எதையாவது தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற குறும்புத்தனமான ஆர்வத்தோடு அவன் கண்கள் சதா அலைந்து கொண்டிருக்கும். அப்போது அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த பாதையில் எதிர்ப்பக்கமிருந்து 'ஆன் டெஸ்ட்' என்று போர்டு மாட்டியபடி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

"லாரி - கார்களுக்குப் போடுகிற மாதிரி சில ஆட்களுக்கும் இந்த 'போர்டு' மாட்ட வேண்டுமடா சத்தியம்! சரியாக வாழ்வதற்குப் பழகாமல் தாறுமாறாக வாழ்கிற சிலருடைய வாழ்க்கையும் 'ஆன் டெஸ்ட்' ஆகத்தான் இருக்கும். முழுப்பக்குவமும் பெறாமல் வாழ்வதற்கும், பிறரிடம் பழகுவதற்கும் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிற சில மனிதர்கள் கூட மார்பில் 'எல்' போர்டு மாட்டிக் கொள்ள வேண்டும். 'போர்டாக' மாட்டிக்கொள்ள முடியாவிட்டால் சட்டைப் பித்தானிலாவது எனாமலில் 'எல்' பதித்துக் கொள்ளலாம்" என்று அரட்டையைத் தொடங்கினான் குமரப்பன்.

"குத்துவிளக்கு எப்படி இருக்கிறது குமரப்பன்?" என்று அவன் வேலை பார்க்கிற பத்திரிகையைப் பற்றி விசாரிக்கலானான் சத்தியமூர்த்தி.

"ஆஹா! கேட்க வேண்டுமா? சுடர்விட்டுப் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது. அச்சு இயந்திரங்களும் மனிதர்களும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் போன வாரம் தான் பெர்லினிலிருந்து திரும்பினார். இந்த வாரம் ஜப்பானுக்குப் போவார் போலிருக்கிறது. இதுவரை வாரம் ஒன்றிற்கு மொத்தம் - நாலு பக்கம் எட்டுக் கார்ட்டூன்கள் போட்டுக் கொண்டிருந்தேன். கார்ட்டூன்கள் மிகவும் நன்றாக இருப்பதால் அடுத்த வாரத்திலிருந்து ஆறு பக்கத்துக்கு பன்னிரண்டு கார்ட்டூன்கள் போட வேண்டும் என்று ஏற்பாடாகியிருக்கிறது. எங்கள் பத்திரிகைக்கு என்னடா குறை? போதும் போதும் என்று சொன்னாலும் கேட்காதபடி கண்ணாயிரம் விளம்பரங்களைத் தேடிக் கொண்டு வந்து குவிக்கிறர். விளம்பரங்கள் பணத்தைத் தேடிக் கொண்டு வந்து குவிக்கின்றன. பணம் சௌகரியங்களைத் தேடிக் கொண்டு வந்து குவிக்கிறது."

"இவ்வளவு தானா? இன்னும் ஏதாவது உண்டா?"

"உண்டு! தாராளமாக உண்டு. விற்பனையைப் பெருக்குவதற்காக ராசி பலன் போடலாமென்று ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. சினிமா நட்சத்திரங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக வந்தால் நல்லதென்று ஏஜண்டுகள் ஆசைப்படுகிறார்கள். துவையல் அரைப்பதைப் பற்றி வாரம் ஒரு பக்கம் வந்தால் பெண்களுக்குத் திருப்தியாயிருக்குமாம்."

"போதும்! போதும்... நான் ஏதோ ஒரு வார்த்தைக்குக் கேட்டால் நீ என்னென்னவோ வம்பு வளர்த்துக் கொண்டு போகிறாயே? உன் குறும்புப் பேச்செல்லாம் என்றைக்குத் தான் ஒடுங்கப் போகிறதோ?"

இதைக் கேட்டுக் குமரப்பன் சத்தியமூர்த்தியின் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு சிரித்தான். சிரித்துக் கொண்டே சொன்னான்.

"இந்தக் குறும்புத்தனம் தான் என்னுடைய தொழிலுக்கு மூலதனம் அப்பனே! இதை விட்டுவிட்டு அப்புறம் நான் எங்கே போவது?"

"பால் டபோரி என்று ஓர் மேற்கு நாட்டு ஆசிரியன் முட்டாள்தனத்தையே ஒரு கலையாக (தி ஆர்ட் ஆஃப் ஃபாலி) வருணித்துப் புத்தகம் எழுதியிருக்கிறான், தெரியுமா குமரப்பன்?"

"ஒரு தடவை மட்டுமல்ல; இரண்டு மூன்று தடவை அந்தப் புத்தகத்தை நான் படித்திருக்கிறேனடா சத்தியம். 'பைத்தியக்காரத்தனம், நவநாகரிகம், முட்டாள்தனம், இந்த மூன்று அம்சங்களுக்குள்ளேயே மனித வர்க்கத்தின் முழுச் சரித்திரத்தையும் நான் சொல்லி முடித்து விடுவேன்' - என்று அந்தப் புத்தகத்தைப் 'பால் டபோரி' ஆரம்பித்திருப்பான்."

"எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால் 'பால் டபோரி' அந்தப் புத்தகத்தில் மனித வாழ்க்கையை எந்தக் கோணத்திலிருந்து பார்த்திருக்கிறானோ அதே கோணத்திலிருந்து மட்டும்தான் நீயும் நம்மைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறாய் குமரப்பன்?"

"மகிழ்ச்சியோடு ஒப்புக் கொள்கிறேனடா, சத்தியம். எனக்கு வாழ்க்கையை அந்தக் கோணத்திலிருந்து தான் பார்க்கத் தெரியும். கண்ணாயிரத்தைப் போல் மற்றவர்களை முட்டாள்களாக்கிக் கொண்டு வாழ்கிற போலிப் புத்திசாலிகள் உள்ள உலகத்தில் வாழ்க்கையை நீயும் நானும் வேறு விதமான கோணத்திலிருந்து பார்த்துப் பயனில்லை அப்பனே, பயனில்லை."

"எனக்கு உத்தியோகம் தேடிக் கொள்வதற்காக நான் இன்று மாலைக்குள் கண்ணாயிரத்தைப் போய்ச் சந்திக்க வேண்டுமென்று என் தந்தையே சொல்லியிருக்கிறார் குமரப்பன்! நான் என்னடாவென்றால் என் தந்தையின் கட்டளையையும், கண்ணாயிரத்தையும், உத்தியோகத்தையும், அறவே மறந்து விட்டு உன்னோடு உலாவப் புறப்பட்டிருக்கிறேன். இந்தக் கண்ணாயிரம் மாதிரி மனிதர்களைத் தேடிக் கொண்டு போய் எதிரே நிற்க வேண்டுமென்று நினைக்கும் போதே எனக்கென்னவோ மிகவும் அருவருப்பாக இருக்கிறது, குமரப்பன்..."

"நீ இவர்களைப் போன்றவர்களைப் பார்த்து அருவருப்புத் தான் அடைகிறாய்! நானும் 'பால் டபோரி'யும் இவர்களைப் போன்றவர்களையும் பார்த்து இரசிக்கிறோம். உனக்கும் எனக்குமுள்ள வேறுபாடு இதுதான் சத்தியம்!"

அப்பால் இரயில் நிலையத்துக்கும் - இப்பால் பஸ் நிலையத்துக்கும் நடுவே அமைந்திருந்த அந்த மேற்பாலத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் அவர்கள். வழக்கமாக மாலை வேளைகளில் அந்த இடத்தில் பாய்ந்து வீசும் காற்று இன்றும் சுகமாக வீசிக் கொண்டிருந்தது. அந்த இடத்திலிருந்து பார்த்தால் வழக்கமாகத் தெரிகிற நகரின் பெரிய கட்டிடங்களும் கோபுரங்களும் இன்று ஏதோ ஒரு விதமான புதுமாறுதலோடு அழகாகத் தெரிவன போலிருந்தன. சென்னைக்குச் செல்வதற்காக ஒவ்வொன்றாகத் தெற்கேயிருந்து வரப்போகும் எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கான கூட்டமும், கலகலப்பும் அப்போதே மதுரை நிலையத்தைத் திருவிழாக் கோலம் கொள்ளச் செய்திருந்தன. இரயில் நிலையத்தின் பல நிற விளக்கு ஒளிகளும், என்ஜின்கள் அங்குமிங்குமாகப் போய் வரும் ஓசைகளும், மற்றொரு பக்கம் தெற்கே தென்னை மரங்களும் வயல்களும், குடிசைகளும் அவற்றினூடே யாரோ வகுத்த கடினமான நியதிகளைப் போல் ஆரம்பமாகித் தெற்கே போகப் போக வேறு வேறு திசைகளில் விலகும் இரயில் தண்டவாளங்களுமாக அந்த இடம் அந்த வேளையில் தனிப்பட்டதோர் அழகுடனே காட்சியளித்துக் கொண்டிருந்தது.

பாலத்தின் மேற்குப் புறத்து இறக்கத்தின் கனமான இரும்பு வேலியில் சாய்ந்தபடி இரயில் நிலையத்துக்கு எதிர்ப்பக்கம் பார்த்தவாறே சத்தியமூர்த்தியும் குமரப்பனும் பேசிக் கொண்டிருந்தார்கள். விரிவுரையாளர் பதவிக்காக மல்லிகைப் பந்தலுக்குத் தான் போய்விட்டு வந்ததையும், மல்லிகைப் பந்தல் கல்லூரி அதிபர் பூபதி அவர்களைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததையும் நெருங்கிய நண்பன் என்ற முறையில் குமரப்பனிடம் கூறினான் சத்தியமூர்த்தி. மல்லிகைப் பந்தல் ஊரையும், கல்லூரியையும் தனக்குப் பிடித்திருக்கிறது என்பதையும் சத்தியமூர்த்தி தன் நண்பனிடம் கூறினான்.

"கல்லூரி விரிவுரையாளராகத்தான் வேலை பார்க்க வேண்டும் என்று நீ நினைக்கிற பட்சத்தில் அதை உள்ளூரிலுள்ள கல்லூரிகளில் ஏதாவதொன்றில் தேடிக் கொள்வேன். செலவு சிக்கனமாக இருக்க முடியும் என்பதற்காகவே இந்த யோசனையை உனக்கு நான் சொல்கிறேன். மல்லிகைப் பந்தலைப் போல் வாழ்க்கைச் செலவுகளும், வாழ்க்கைத் தரமும் உயர்ந்த மலைநாட்டு நகரமொன்றில் வேலை பார்க்கச் சென்றால் அங்கே நீ தங்கிக் கொள்வதற்கும், சாப்பிடுவதற்குமே உன்னுடைய வருமானத்தில் பெரும்பகுதி செலவாகி விடும். ஊரில் இங்கு உன்னை நம்பிக் காத்திருக்கும் பெற்றோர்களுக்கு நீ அதிகமாக ஒன்றும் அனுப்ப முடியாமல் போனாலும் போகலாம். உன் வீட்டு நிலைமை எனக்கு தெரியுமாதலால் இதை நான் உன்னிடம் சொல்ல வேண்டியதாயிற்று. மற்றக் கல்லூரிகளை விட மல்லிகைப் பந்தல் கல்லூரியில் சம்பள விகிதங்கள் நிச்சயமாக அதிகமாக இருக்கும் என்று எல்லாரும் சொல்கிறார்கள். இருந்தாலும் நீ வெளியூரிலும், உன் வீட்டில் மற்றவர்கள் இங்குமாக வசிப்பதனால் இரட்டைச் செலவுதான் ஆகும்! செலவையோ, வருமானத்தையோ, காரணமாக முன் நிறுத்திச் சொல்லுகிற யோசனைகளை நீ விரும்ப மாட்டாய் என்று நான் அறிவேன். ஆனாலும் இதைச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டு சத்தியம்!" என்றான் குமரப்பன்.

"உள்ளூரிலுள்ள கல்லூரிகளையெல்லாம் பற்றி என்னுடைய அபிப்பிராயம் என்னவென்று உனக்குத்தான் தெரியுமே குமரப்பன்? வாழ்க்கையிலுள்ள பெரிய வேதனை இந்த இடம் தான். நாம் எப்படி எங்கே வாழ விரும்புகிறோம் என்பதும் உலகம் எங்கே எப்படி வாழ வேண்டுமென்று நம்மை எதிர்பார்க்கிறது என்பதும் தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் இரண்டு எல்லைகள்."

"இப்படிச் சொல்வதால் என்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொள்ளாதே சத்தியம்! உன்னுடைய குடும்பத்தின் வசதிக் குறைவுகளை நினைத்தே நான் இந்த யோசனையைச் சொன்னேன். நீ மல்லிகைப் பந்தல் கல்லூரிக்குப் போவதைப் பற்றி எனக்கு எந்தவிதமான ம்றுப்புமில்லை. நானும் அப்படி ஒரு நல்ல கல்லூரியில் நீ பணிபுரிவதைத் தான் எதிர்பார்க்கிறேன். வரவேற்கிறேன். அதே சமயத்தில் நடைமுறை உலகிலுள்ள துன்பங்களையும் நீ மறந்து போய்விடக்கூடாது. மனிதனுடைய உயர்ந்த இலட்சியம் என்பது சில மலைகளின் பசுமையைப் போலத் தொலைவிலிருந்து பார்ப்பதற்குக் கவர்ச்சியாய்த் தோன்றி அருகில் நெருங்கியதும் ஒன்றுமில்லாததாய்ப் போய்விடுகிறது. உன்னைப் போன்ற சிந்தனை வளமோ, படிப்பின் ஆழமோ எனக்கு இல்லை. ஆனாலும் உலக அனுபவத்தை முன் வைத்து நான் சில யோசனைகளை உனக்குச் சொல்லுகிறேன். அவற்றை நீ அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை" என்று குமரப்பன் சொல்லியபோது அவனுடைய குரலில் எந்த விதமான செயற்கை குறும்பும் இல்லை. உண்மையான அனுதாபமும் இரக்கமுமே அந்தக் குரலில் ஒலித்தன. இதன் பின்பும் அதே இடத்தில் நின்று நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கல்லூரி நாட்களில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளைப் பற்றி, உள்ளூர் அரசியல் நிலவரம் பற்றி, நிகழ்காலத் தமிழ் இலக்கியத்தின் நிலைபற்றி, விவாதமும் பேச்சுமாக நேரம் போவது தெரியாமல் வளர்ந்தது உரையாடல். இரயில் நிலையத்து மேற்பாலத்திலிருந்து புறப்பட்டுக் குமரப்பனும், சத்தியமூர்த்தியும் டவுன் ஹால் ரோடு வழியாகத் திரும்பிக் கொண்டிருந்த போது எதிரே கண்ணாயிரத்தின் கார் எங்கோ வேகமாகப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தது. கண்ணாயிரமும், கண்ணாயிரத்தின் காரும், அந்தக் கார் நிறைய வேறு யாராவது மனிதர்களும் போய்க் கொண்டிருந்தால் சத்தியமூர்த்தியோ குமரப்பனோ அப்போது கவலைப்பட்டிருக்கப் போவதில்லை. கண்ணாயிரத்தின் கார் மதுரை மாநகரத்தில் உள்ள மிகமிகப் புராதனமான பொருள்களில் ஒன்று. நான்கு டயர்களின் நடுவிலும் குச்சி குச்சியாகக் கம்பிகள் சிலிர்த்துக் கொண்டு பார்ப்பதற்குக் காச நோயாளி போல் காட்சியளிக்கும். அந்தக் காரை இலட்சம் கார்களுக்கு நடுவிலும் தனியாகக் கண்டுபிடித்துவிடலாம். வேறு சௌகரியமான கார் வைத்துக் கொள்ள வசதியோ, வளமோ இல்லாததால் கண்ணாயிரம் இதை வைத்துக் கொண்டிருந்தார் என்று சொல்லிவிடுவதற்கு இல்லை. அவருக்கு ஒரு பிரமை உண்டு. இந்தக் காருக்கும் தமக்கும் ஏதோ ஓர் இராசி இருப்பதாகவும் இதில் புறப்பட்டுப் போனால்தான் தம்முடைய காரியங்கள் வெற்றிகரமாக முடியும் என்று நம்பி இந்தப் பழைய காரிலேயே பணத்தைக் கொட்டிச் செலவு செய்து புதுப்புது வசதிகளைச் செய்து கொண்டிருந்தார் அவர். இந்த விதமான திருக்கோலத்தோடு கண்ணாயிரத்தின் கார் டவுன் ஹால் சாலையில் அவர்களுக்கு எதிரே வந்த போது அதைப் பார்க்க வேண்டும் என்ற முயற்சியில்லாமல் தானாகவே அவர்கள் கண்களில் தனக்கேயுரிய முக்கியத்துவத்தோடு அது தென்பட்டு வைத்தது. கண்ணாயிரம் தான் காரை ஓட்டிக்கொண்டு சென்றார். அவருக்கருகே முன்ஸீட்டில் தன் தந்தை அமர்ந்திருந்ததைக் கண்டுதான் சத்தியமூர்த்தி அப்போது வியப்படைந்தான்.

"கண்ணாயிரத்தோடு முன்னால் உட்கார்ந்து போகிறவர் உன் தந்தை மாதிரி இல்லை? நீ அந்தக் காரைக் கவனித்தாயா, சத்தியம்?" என்று குமரப்பன் வேறு அவனைக் கேட்டு விட்டான்.

"பார்த்தேன், அப்பா மாதிரித்தான் இருக்கிறது" என்று அந்த உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாத வேதனையோடு ஏற்றுக் கொண்டு நலிந்த குரலில் குமரப்பனுக்கு மறுமொழி கூறினான் சத்தியமூர்த்தி. 'என்ன காரியத்துக்காக அப்போது கண்ணாயிரத்தோடு அப்பா புறப்பட்டுப் போகிறார்?' என்று சிந்தித்தது அவன் மனம். 'தன்னைக் கலந்து கொள்ளாமல் கண்ணாயிரத்தின் மூலம் தன்னுடைய வேலைக்குத் தந்தை தாறுமாறாக ஏதேனும் ஏற்பாடு செய்துவிடப் போகிறாரா' என்று எண்ணியபோது அவன் மிகவும் மனம் கலங்கினான். மேலமாசி வீதியில் குமரப்பனுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டுத் தனியே தன் வீட்டை நோக்கி நடந்த போதும் இதே கலக்கம் தான் அவனுள் வளர்ந்து கொண்டிருந்தது.

அத்தியாயம் - 11

ஆதரவற்றதெல்லாம் ஏழைதான். அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை.

'கண்ணாயிரத்தைப் போல் கெட்டவர்கள் நன்றாக வாழ்வதற்கும் அப்பாவைப் போல் நல்லவர்கள் - எப்போதுமே மாறாத நல்லவர்கள் - இப்படி வாழமுடியாமற் போவதற்கும் சமூகக் காரணம் ஏதாவது இருக்க முடியுமா?' என்று சிந்தித்தபடியே வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. திருவள்ளுவரைப் போன்ற பேரறிஞர்களுக்கே இந்தச் சிந்தனை விடை காணமுடியாத புதிராகத்தான் இருக்குமென்று அவனுக்குத் தோன்றியது. இல்லையென்றால்,

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

என்ற திருக்குறளை அவர் பாடியிருக்க முடியாது. கண்ணாயிரத்தைப் போன்றவர்களின் வாழ்க்கையை இரசித்து மகிழ்வதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டதாகக் குமரப்பன் சொல்கிறான். சற்றுமுன் தெருத் திருப்பத்தில் விடைபெற்றுக் கொண்டு செல்லும் போது கூடக் குமரப்பன் இதே வார்த்தைகளைத்தான் சொல்லிவிட்டுப் போகிறான். என்னால் கண்ணாயிரத்தைப் போல் தீய சக்திகளை இரசிக்க முடியவில்லை. இந்த விதமான தீய சக்திகள் என் இதயத்தையும் எண்ணங்களையும் குமுறச் செய்து விடுகின்றன; தீமைகளையும், பொய்களையும் எதிரே காணும் போது கைகள் துடித்து மனம் கொதிக்கிறேன் நான். இப்படி உணர்ச்சி வசப்படுவது குமரப்பனுக்குப் பிடிக்கவில்லை.

ஆனால் இன்றையச் சமூக வாழ்வுக்குச் 'சிறுமை கண்டு பொங்குகிற' இந்த நியாய மனப்பான்மை அவசியம் வேண்டும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. எத்தனையோ நல்ல குணங்களை உடையவராகிய பூபதி அவர்கள், 'இளமை அதை உடையவனுக்கு ஒரு தகுதிக் குறைவு' என்று பொருள் படுகிறாற் போல் கூறியதைக் கூட என்னால் பொறுத்துக் கொண்டு பதில் பேசாமல் சும்மா இருக்க முடியவில்லை. வயிற்றைக் கழுவி வாழவும், பிழைக்கவும் வேண்டுமானால் குமுறவும் கொதிக்கவும் வேண்டிய பல இடங்களிலும் கூட உணர்ச்சியே இல்லாமல் மரத்துப் போய் இருந்துவிட வேண்டியது தான் போலும். பலர் அப்படித்தான் வாழ்கிறார்கள். 'துடிப்புடனும், கொதிப்புடனும் வாழ்கிற சிலரும் கூட நாளடைவில் மெல்ல மெல்ல மரத்துப் போய் விடுகிறார்களே' என்று எண்ணிய போது வாழ்க்கையே பெரிய ஏமாற்றமாகத் தோன்றியது அவனுக்கு. இவ்வாறு கலக்கமும் குழப்பமும் நிறைந்த மனத்தோடு மேலமாசிவீதியும் வடக்கு மாசிவீதியும் சந்திக்கிற திருப்பத்தில் அவன் சென்று கொண்டிருந்த போது கலவரமும் கூப்பாடுமாக அங்கே கூடியிருந்த ஒரு கூட்டத்தினால் கவரப்பட்டான். கீழே மரத்தடியைத் தேடி வந்து கோயில் கொண்டுவிட்ட ஒரு பிள்ளையாருக்கும் அந்த இடத்தில் நிறுத்தப்படுகிற பல ஜட்கா வண்டிகளுக்கும், ஆதரவாக அங்கே பெரிய ஆலமரம் ஒன்று உண்டு. மனிதர்கள் நெருங்கி வாழ்கிற பெரிய நகரங்களில் திடீர் என்று ஓரிடத்தில் கூட்டம் கூடுவதும் கலைவதும் சர்வ சாதாரணம். ஆனால் அன்று அங்கே அந்த முன்னிரவில் சத்தியமூர்த்தி சந்தித்த கூட்டம் அப்படிக் கூடிய கூட்டமில்லை. சிரிப்பையும், வேதனையையும் ஒருங்கே உண்டாக்கக் கூடியதொரு சம்பவத்தை முன்னிட்டுக் கூடிய கூட்டமாயிருந்தது அது. கூடியிருந்தவர்கள் அந்தச் சம்பவத்தைச் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள். 'இப்படிக் கூட நடக்குமா?' என்று நினைத்து நினைத்து வியப்படையக் கூடியதாயிருந்தது அந்தச் சம்பவம்.

கூடியிருந்த கூட்டத்தின் நடுவே கிழிந்த சேலையும் பயந்து கலவரமடைந்த முகத் தோற்றமுமாக இளம் வயதுப் பிச்சைக்காரப் பெண் ஒருத்தி கூசிப் போய்க் கூனிக் குறுகி நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு மிக அருகே தரையில் ஒரு புது மண் பானை சில்லுச் சில்லாக உடைந்து கிடந்தது. அந்த ஆலமரத்தடியைக் கடந்து நாலைந்து முறை நடந்து போகிற எவருடைய பார்வையிலிருந்தும் அந்தப் பிச்சைக்காரப் பெண் தப்பியிருக்க மாட்டாள். சத்தியமூர்த்தியே அவளை அந்த இடத்தில் பலமுறை பார்த்திருக்கிறான். "ஐயா பிள்ளைத்தாச்சிக்கு உபகாரம் பண்ணிக் காப்பாத்துங்க ஐயா... உங்க தலைமுறைக்கு நீங்க நல்லா இருப்பீங்க" என்று கனத்து முன்னால் துருத்திக் கொண்டிருக்கும் தாய்மை கனிந்த வயிற்றோடு அவள் அந்தத் திருப்பத்தில் வெயிலென்றும், மழையென்றும் பாராமல் பிச்சைக்கு நிற்பதைப் பார்த்துச் சத்தியமூர்த்தி பரிதாபப்பட்டிருக்கிறான். 'வயிறும் பிள்ளையுமாகக் கர்ப்பிணியாயிருக்கிற இவளைப் போன்ற அநாதைகளுக்கு வயிறு காயும் இந்த வேளையில் இதே தெருவில் பாயசமும் வடையும் சமைத்துச் சாப்பிடுகிறவர்களும் இருப்பார்களே? சமுதாய வாழ்க்கையில் உள்ள சுகதுக்கங்களில் எத்தனை முரண்பாடுகள்? இந்த நாட்டில் இப்படி அநாதைகள் நம்மிடையில் இருக்கிறவரையில் பாயசம் வைத்துப் பண்டிகைகள் கொண்டாடுவதற்குக் கூச வேண்டும். இவர்களுக்குத் தலைசாய்க்க இடமில்லாதவரை மற்றவர்கள் கட்டிலும் மெத்தையும் இட்டுப் படுப்பது பாவம்' என்று இத்தகைய பிச்சைக்காரர்களைப் பார்க்கும் போதெல்லாம் மனம் வேதனைப்பட்டிருக்கிறான் அவன். ஆனால் இன்று அவனே இந்த ஆலமரத்தடியில் கேள்விப்பட்ட உண்மை - பார்த்த உண்மை முற்றிலும் புதியதாயிருந்தது. கண்களில் ஏழ்மையின் ஏக்கம் தெரிய வழிமேல் நின்று கொண்டு போவோர் வருவோரிடமெல்லாம், "பிள்ளைத் தாய்ச்சிக்கு உபகாரம் பண்ணிக் காப்பாத்துங்க ஐயா..." என்று கதறிக் கொண்டிருந்த அந்தப் பெண், வயிற்றில் மண்பானையை வைத்துக் கட்டிக் கொண்டு பிறரை மனம் இரங்கச் செய்வதற்காக நடித்திருக்கிறாள். அவளுடைய போதாத காலமோ அல்லது உண்மை வெளிப்பட்டுத் தெரிய வேண்டிய காலமோ கிழிந்து நைந்து இற்றுப் போன பழைய சேலை தாங்காமல் பானை கீழே விழுந்து உடைந்து அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது. இப்படி ஒரு காட்சியைச் சினிமாவிலோ, நாடகத்திலோ பார்த்திருந்தால் அந்த நடிப்புத் திறமையை மக்கள் புகழ்ந்திருப்பார்கள். வாழ்க்கையில் கண்ணெதிரே வயிற்றுக் கொடுமை தாங்காமல் ஓர் ஏழைப் பெண் இப்படி நடித்ததையும் மன்னிக்கலாம் தான். ஆனால் மன்னிப்பதற்கு அங்கு யாரும் தயாராயில்லை.

"வயித்திலே பானையைக் கட்டிக்கிட்டு இத்தினி நாளா இந்த மரத்தடியிலே டிராமாவா ஆடிக்கிட்டிருந்தே. மானங்கெட்ட கழுதை..." என்று திட்டிக் கொண்டே காறித் துப்பினான் ஒருவன். தெரு ஒரமாகச் சாலை போடுவதற்காகக் குவித்திருந்த சரளைக் கற்குவியலிலிருந்து கல்லை எடுத்து வீசினான் ஒரு சிறுவன். அது அவள் முன் நெற்றியில் பட்டு இரத்தம் கசிந்தது. தன் வீட்டுக் கவலைகளும், தனக்காக தான் பட வேண்டிய வேதனைகளும் ஆயிரம் இருந்தாலும் சத்தியமூர்த்தி இப்போது அந்த ஆலமரத்தடியில் கூடியிருந்த கூட்டத்தோடு தயங்கி நின்றான். சும்மா நின்று கொண்டு, பிச்சைப்போடும் படி கைகளை முன்னால் நீட்டினால் இவளுக்கு யாரும் இரங்க மாட்டார்கள். வயிற்றின் கொடுமை இவளை இவ்வளவு தந்திரமாக யோசிக்கச் செய்து பானையைக் கொண்டு கர்ப்பிணியாக நடிக்கச் செய்திருக்கிறது. குமரப்பன் இப்போது அருகிலிருந்தால் இந்தத் தந்திரத்தைக் கண்டு செயலாக்கியதற்காக இவளைப் பாராட்ட வேண்டும் என்பான். இங்கோ சொல்லால் அடிக்கிறவர்களும், கல்லால் அடிக்கிறவர்களுமாக இவள் மேல் ஆத்திரப் படுகிறவர்களே கூடியிருக்கிறார்கள். இவள் இப்படிச் செய்ததற்காக இவள் மேல் மட்டும் கோபப்பட்டு என்ன பயன்? இவளைப் பசிக் கொடுமையால் இப்படிச் செய்ய விட்ட சமூகத்துக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு உண்டு என்றுதான் சத்தியமூர்த்தியால் நினைக்க முடிந்தது. பக்கத்தில் நின்ற ஒருவர் அவனிடம் சொல்லலானார்.

"என்ன அநியாயம் சார்! கலிகாலம் என்கிறது சரியாயிருக்குப் பாருங்க. வயிற்றிலே வெறும் பானையக் கட்டிக் கொண்டு இத்தனை நாட்களாக இந்தப் பாதையில் வந்து போய்க் கொண்டிருக்கிற அத்தனை பேரையும் முட்டாள்களாக்கியிருக்கிறாளே சார். அப்படியே அசல் வயிற்றுப் பிள்ளைக்காரி மாதிரி எல்லாரையும் நம்ப வைச்சிப் பிழைப்பை நடத்தியிருக்கா..."

"அவளைக் குற்றம் சொல்லிக் கலிகாலத்தின் தலையில் பழியைப் போட்டுவிட்டால் மட்டும் போதாது சார்! உலகம் அவளை அநாதையாய்ப் பிழைக்க வழியில்லாமல் முட்டாளாக்கியிருக்கிறது. அவள் வேறு வழியில்லாத காரணத்தால் பதிலுக்கு உலகத்தை முட்டாளாக்கத் தொடங்கியிருக்கிறாள்" என்று அவருக்குப் பதில் கூறினான் சத்தியமூர்த்தி. இந்தப் பதிலை அவனிடமிருந்து எதிர்பாராத அந்த மனிதர் அவனை முறைத்துப் பார்த்தார். உலகத்தைப் பார்த்து அதைப் படைத்த கடவுளுக்கே தலைசுற்றுவதாக ஒரு கார்ட்டூன் வரைய வேண்டுமென்று குமரப்பன் அடிக்கடி சொல்லுகிற வாக்கியத்தை இப்போது நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. தன்னுடைய துன்பங்கள் பலவாக இருந்தும் இப்படித் தெருவில் சந்திக்கிற சுகதுக்கப் பிரச்சினைகளும் தன் இதயத்தைப் பாதிப்பதையோ, உள்ளே புகுந்து எண்ணங்களாக உருவெடுப்பதையோ, தவிர்க்க முடியாமல் தவித்தான் அவன். அந்த அப்பாவிப் பிச்சைக்காரப் பெண்ணைக் கூட்டம் கல்லாலடித்தே கொன்று விடாமல் மிகவும் சிரமப்பட்டுப் பேசித் தடுக்க வேண்டியிருந்தது.

"இவரு பெரிசா நியாயத்தைக் கண்டுட்டாரு... இந்தக் காலத்திலே பெண் பிள்ளையின்னா... இப்படிப் பரிஞ்சுக்கிட்டு வர்ரவங்க அதிகமாத்தான் இருப்பாங்க" என்று சத்தியமூர்த்தியை வம்புக்கு இழுத்தான் ஒரு காலி. நிதானமாகப் பதில் சொல்ல வேண்டியவர்களுக்கு நிதானமாகப் பதில் சொல்லியும் கொதிப்போடு பதில் சொல்லியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அந்தப் பிச்சைக்காரியை அங்கிருந்து தப்பிச் செல்ல வைப்பதற்குச் சத்தியமூர்த்தி மிகவும் பாடுபட்டான். 'நமக்கு ஏன் வம்பு? இப்படித் தெருவில் ஆயிரம் நடக்கும். ஒன்றையும் கண்டு கொள்ளாதது போல் போவது தான் நாகரிகம்' என்று எல்லாரும் சாதாரணமாக நினைப்பது போல் நினைத்துக் கொண்டு அவனும் வீட்டுக்குப் போயிருந்தானானால் அந்தப் பிச்சைக்காரி குற்றுயிரும் குலையுயிருமாக அங்கேயே அடிபட்டு விழுந்து கிடக்கும்படி நேரிட்டிருக்கும். அப்படி நேரிடும்படி விடுவதற்கு நிச்சயமாக அவன் தயாராக இல்லை. அந்த ஊர் வம்பைத் தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடித்து விட்டு அவன் வீட்டுக்குத் திரும்பிய போது இரவு ஒன்பது மணிக்கு மேலாகியிருந்தது. அவன் வீட்டுக்குள் நுழைந்து சட்டையைக் கழற்றிவிட்டுக் கிணற்றடிக்குப் போய்க் கைகால் கழுவிச் சுத்தம் செய்து கொண்டு திரும்பிய போது வாயிலில் கார் வந்து நிற்கிற ஓசையும் அதையடுத்து மிதியடி ஓசை சரசரக்க அப்பா நடையேறி வருகிற ஓசையும் கேட்டது.

"பையனை நாளைக்கு என்னை அவசியம் வந்து பார்க்கச் சொல்லுங்கள்..." என்று கார் வாசலிலிருந்து கிளம்புவதற்கு முன் காருக்குள் இருந்தபடியே கண்ணாயிரம் தன் தந்தையிடம் கூறிவிட்டுச் சென்ற சொற்களும் வீட்டுக்குள்ளேயிருந்து வந்து கொண்டிருந்த சத்தியமூர்த்திக்குக் கேட்டன.

"ஏண்டா! நீ சாயங்காலம் கண்ணாயிரத்தைப் போய்ப் பார்க்கவில்லையா?" என்ற கேள்வியோடும் கோபத்தோடும் அவனை எதிர்கொண்டார் தந்தை. சிறிது நேரம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தயங்கினான் சத்தியமூர்த்தி. மிகவும் நிதானமாகவும் பொறுமையிழந்து விடாமலும் அவருக்குப் பதில் சொல்ல விரும்பினான் அவன். அந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்ல அவன் அவ்வளவு நேரம் தயங்குவதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத தந்தை இரண்டாவது தடவையாகவும் கடுமையான குரலில் அதே கேள்வியை அவனிடம் கேட்டார்.

"இன்றைக்குப் பார்க்க முடியவில்லை அப்பா! முடிந்தால் நாளைக்குப் பார்க்கிறேன்!"

"அந்த வெட்டிப்பயல் வாயரட்டைக் குமரப்பனோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் நாளைக்கு நீ கண்ணாயிரத்தைப் பார்க்க முடியாமல் போகும். நான் உன்னை டவுன் ஹால் ரோடில் போகும் போது பார்த்தேன். நீ மட்டும் தனியாயிருந்தால் அங்கேயே காரை நிறுத்தச் சொல்லியாவது பார்த்திருக்கலாம். தவிரவும் நமக்குக் காரியம் ஆகவேண்டுமானால் நாம் தான் தேடிக் கொண்டு போய்ப் பார்க்கணும். இப்படி மனிதர்களை மதிக்காமல் விலகிப் போனால் ஒரு காரியமும் ஆகாது."

சத்தியமூர்த்தி மௌனமாக நின்று கொண்டிருந்தான். "தயவு செய்து கண்ணாயிரத்தை மதிக்கச் சொல்லி என்னை வற்புறுத்தாதீர்கள், அப்பா" என்று தந்தைக்குப் பதில் சொல்லி விட அவன் நாக்குத் துடித்தது. மிகவும் சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் அவன். தந்தை அவன் மேல் கோபத்தோடு ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றார். உள்ளே அம்மா சாப்பிடுவதற்கு இலை போட்டுக் கொண்டிருந்தாள்.

ஏதோ சொல்லித் தீர்க்க முடியாத ஊமை வேதனை மனத்தை அரிப்பது போலிருந்தது. அப்படியே சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு மறுபடியும் தெருவில் இறங்கி நடந்து விட்டான் அவன். யாரிடமும் சொல்லிக் கொள்ளவும் இல்லை. அம்மா சாப்பிடுவதற்குத் தேடுவாளே என்றும் கவலைப்படவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டுக்குள் தங்கினால் தந்தையோடு பேச்சு வளரும் என்று நினைத்தே அவன் புறப்பட்டிருந்தான். வடக்கு மாசி வீதியில் கிருஷ்ணன் கோயிலுக்கு எதிர்ப்பக்கத்திலிருந்த பேச்சியம்மன் படித்துறைக்குப் போகிற சாலையில் அவனுடைய வீடு அமைந்திருந்தது. அங்கிருந்து புறப்பட்டு கிருஷ்ணன் கோயில் சந்து வழியாக நடந்தான் அவன். மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போய் விட்டுத் திரும்புவதே அப்போது அவன் நோக்கமாக இருந்தது. கோயில் அந்த நேரத்தில் மிகவும் அமைதியாக இருக்கும். அத்தகைய அமைதி நிறைந்த சூழ்நிலையில் நான்கு ஆடி வீதிகளையும் ஒரு முறை சுற்றிவிட்டு வந்தாலே மனம் நிம்மதியடைந்துவிடும். சத்தியமூர்த்தி இந்த அனுபவத்தைப் பலமுறை உணர்ந்திருக்கிறான். கம்பீரமான அந்த கோபுரங்களைக் கால் நாழிகைப் போது இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தாலே ஓர் உற்சாகம் உண்டாகும். மதுரையின் அந்தக் கோபுரங்களுக்கும் அவற்றையுடைய ஆலயத்துக்கும் அப்படி ஒரு சக்தி உண்டு. கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்த போது வித்துவான் பொன்னுசாமிப் பிள்ளை தெருத்திருப்பத்தில் அவனுக்கு எப்போதோ அறிமுகமாகியிருந்த பாட்டு வாத்தியார் ஒருவர் சந்தித்துப் பேசப் பிடித்துக் கொண்டுவிட்டார். தெரு முனையில் வெற்றிலைப் பாக்குக் கடையில் நின்று கொண்டிருந்தவர் சத்தியமூர்த்தியைப் பார்த்ததுமே கூடவே நடந்து பேசிக்கொண்டு புறப்பட்டு விட்டார். ஒருவிதமான குறைவுமில்லாமல் பெயரில் மட்டும் குறைவுபட்டு மொட்டைக் கோபுரம் என்ற பெயரோடு மொட்டையில்லாமல் பூரணமாய் நிமிர்ந்து நிற்கும் வடக்குக் கோபுரம் எதிரே தெரிந்தது. கோபுர வாசல்வரை பேசிக் கொண்டே வந்த பாட்டு வாத்தியார் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார். மொட்டைக் கோபுரத்து முனியாண்டிக்குச் சிதறு தேங்காய் போடுவதைப் பொறுக்குவதற்கு அடித்துப் பிடித்துக் கொண்டிருக்கும் விடலைக் கும்பலின் கூப்பாடு கூட அப்போது அங்கே அடங்கிப் போயிருந்தது. கோவிலுக்குள்ளேயும் கூட்டம் இல்லை. அவ்வளவு அமைதியை அதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்று சொல்லும்படி கோவிலின் எல்லாப் பகுதிகளும் இயல்பை மீறின அமைதியோடு இலங்கின. அம்மன் சந்நிதிக்கு முன்புறம் கிளிக்கூட்டு மண்டபத்தினருகே எதிர்பாராத விதமாக மோகினியைச் சந்தித்தான் அவன். கையில் தேங்காய்ப் பழக்கூடையோடு சந்நிதிக்குள் போவதற்காக அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள். அவளுக்காக அவளோடு வந்திருந்த சிறுபையன் அர்ச்சனைச் சீட்டு வாங்கிக் கொண்டிருந்தான். அப்போதிருந்த மனநிலையில் அந்த எதிர்பாராத சந்திப்புக்காக ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கவோ, அவளோடு நின்று பேசவோ தோன்றாமல் நேரே சந்நிதிக்குள் நடந்து போய் விட்டான் சத்தியமூர்த்தி. மோகினியும் அவனைப் பின் தொடர்ந்து தான் சந்நிதிக்குள்ளே சென்றாள். யாரையும் எதிரே சந்திக்கவோ, பேசவோ விருப்பமில்லாமல் நைந்து போயிருந்த அந்த மனநிலையிலும் கூடச் சத்தியமூர்த்தியின் கண்களில் அவள் அழகு தனித்தன்மையோடு தெரிந்து கவர்ந்தது. அம்மன் சந்நிதி முகப்பில் பாதரஸம் உருகுவது போல் ஒளி ஒழுகிக் கொண்டிருந்த நீலக் குழல் விளக்குகளின் கீழே நிறங்களே தமக்குள் ஒன்றுபட்டு முயன்று படைத்த அபூர்வ ஓவியமாய்த் தோன்றினாள் மோகினி. அவளுடைய இதழ்கள் தன்னோடு பேசிவிடத் துடித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் புரிந்தது. ஆனாலும் ஒன்றும் பேசாமல் அவளைப் பார்க்காதது போலவே முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தான் அவன். கருநாகமாய் நீண்டு பின்னிக் கொண்டு தொங்கும் சடைக் குஞ்சலங்கள் ஆட, ஓசைப்படும் வளைகளும், ஓசைப்படாமல் மணக்கும் பூக்களின் மணமுமாக அவள் தன் பின்னால் தனக்கு மிக அருகே நடந்து வந்து கொண்டிருப்பது புரிந்தும் புரியாதது போல் முன்னால் சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. சந்நிதி முகப்பில் பித்தளைக் கிராதியின் இருபுறமும் நின்று எதிரெதிரே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள நேர்ந்த போதும் ஒன்றும் பேசாமல் மெல்லப் புன்னகை மட்டும் செய்தான் அவன். கவனித்ததில் அப்போது அவளுடைய உதடுகள் தன்னோடு பேசத் துடித்துக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. உடன் வந்திருந்த சிறுவன் அவளோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவன் கேள்விகளுக்குச் சுவாரசியமில்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் அவள். அர்ச்சனை முடிந்து அவள் புறப்படுவதற்குள் அம்மன் சந்நிதிக்குப் போய்விட நினைத்தான் அவன். ஆனால் அவன் நினைத்தபடி நடைபெறவில்லை. அவளை முந்திக்கொண்டு போய் விட நினைத்த அவன் நினைப்பு வீணாயிற்று. அம்மன் சந்நிதியின் இரண்டாவது திருச்சுற்றில் கொலுமண்டபத்தை நெருங்கிக் கொண்டிருந்த போதே அவனைப் பின் தொடர்ந்தாற் போல அவள் மிக அருகே வந்து சேர்ந்தாள்.

"இவ்வளவு நாழிகைக்கு அப்புறம் கோவிலுக்கு வந்திருக்கிறீர்களே?" - வேறு எதையோ பேச நினைத்து அதைப் பேசுவதற்குச் சொற்களும், துணிவும் கிடைக்காத பதற்றத்தினால் அன்பின் மிகுதியால் பிறந்த ஒருவிதமான பயத்தோடு அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாள் அவள்.

"இதே கேள்வியை உங்களிடம் திருப்பிக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்லுவீர்கள்?" என்று சத்தியமூர்த்தி அவளைத் திரும்பிப் பார்த்து வினாவிய போது அவள் சிரித்தாள். முகமும் இதழ்களும் கனிந்து சிவந்தன. இந்த நாணத்தின் சுவடு முகத்திலிருந்து மறைவதற்கு முன்பாகவே, அவள் தன்னை நேருக்கு நேர் பார்க்கக் கூசியபடி வேறு எங்கோ பார்த்துக் கொண்டே சொல்லிய மற்றொரு வாக்கியம் சத்தியமூர்த்தியின் இதயத்தைத் தொட்டு உணர்வு நெகிழும்படி செய்தது. "உயிரைக் கொடுத்த தெய்வத்தைத் தரிசிக்க வந்தேன். அப்படி வந்த இடத்தில் உயிரைக் காப்பாற்றிய தெய்வத்தின் தரிசனமும் கிடைத்திருக்கிறது...!" என்று சொல்லிவிட்டு மேலே நடக்கத் தோன்றாமல் நின்றாள் அவள்.

சத்தியமூர்த்தி தன்னைத்தானே வெறுத்துக் கொள்கிற குரலில் அவளுக்கு மறுமொழி கூறினான்:

"என்னையா தெய்வமென்று சொல்கிறீர்கள்? நான் துயரங்களும் தேவைகளும் நிறைந்த வெறும் மனிதன். பலவீனங்களும் தோல்விகளும் நிறைந்த ஏழை. ஏமாற்றங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆட்பட்டுத் தவிக்கிற பாமரன். சாண் ஏறினால் முழம் சறுக்கித் தொல்லைப் படுகிறவன். கண்ணாயிரத்தைப் போல் எல்லாவிதமான வசதிகளும் உள்ளவர்கள் தாம் இன்றைய சமூகத்துக்குத் தெய்வமாகிய தகுதி உடையவர்கள். நானும் என்னைப் போன்றவர்களும் கூட அவர்களிடம் வேலைக்குச் சிபாரிசு தேடிக் கொண்டு போய் நிற்க வேண்டிய அளவு வசதியற்றவர்கள்..."

"அந்தப் பாவியின் பெயரை இப்போது எதற்கு எடுக்கிறீர்கள்? காலையில் கூந்தல் தைல விளம்பரத்துக்காகப் புகைப்படம் எடுக்கிறபோதே அந்தப் பாவிக்கும் எனக்கும் தகராறு வந்தது. அவன் ஏதோ ஒரு சேலையைக் கொண்டு வந்து கொடுத்து, 'இதைக் கட்டிக் கொண்டால்தான் படம் எடுக்க நன்றாயிருக்கும்' என்றான். நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன். கடைசியில் நான் சொல்லியபடிதான் அவன் படம் பிடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இதனால் அம்மாவுக்கு என் மேல் ஒரே ஆத்திரம். நான் அந்தப் பாவி சொல்கிறபடி தான் கேட்க வேண்டுமென்கிறாள் அம்மா..."

"வயிறு நிரம்ப வேண்டுமானால் யார் சொல்கிற படியாவது கேட்டுத்தான் ஆகவேண்டும்... ஏற்றுக் கொள்வதற்குக் கடுமையாகவும் வேதனையளிப்பதாகவும் இருந்தாலும் கூட இதுதான் வாழ்க்கையைப் பற்றிய உண்மை..."

"அப்படிச் சொல்லாதீர்கள். என் வாழ்க்கையில் நான் பார்த்த - பார்த்துக் கொண்டிருக்கிற ஒரே உண்மை நீங்கள் தான்..."

"இருக்கலாம்! ஆனால் 'இந்த உண்மை' மிகவும் ஏழையாயிருக்கிறதே!"

"ஆதரவற்றதெல்லாம் ஏழைதான். அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே சுற்றுமுற்றும் யாராவது வருகிறார்களா என்று பார்த்துவிட்டுச் சத்தியமூர்த்தியே எதிர்பார்த்திருக்க முடியாதபடி கீழே குனிந்து தேங்காய் பழத்தட்டை வைத்துவிட்டு அவசரம் அவசரமாக அவன் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒத்துக் கொண்டு எழுந்தாள் மோகினி. சத்தியமூர்த்திக்கு மெய் சிலிர்த்தது. பிரகாரத் திருப்பத்தில் இது நிகழ்ந்தது. மோகினியோடு வந்திருந்த சிறுவன் முன்னால் நடந்து போயிருந்தான். அவர்களும் அவன் பின்னால் மெல்ல நடந்து சென்றார்கள்.

"இரயிலில் நீங்கள் வந்த பெட்டியில் நானும் சேர்ந்து வந்ததைப் பார்த்துவிட்டே பொறுமையிழந்து போய் என்னிடம் கேள்விகளைக் கேட்டார் கண்ணாயிரம். இப்போது இந்தக் கோயில் பிரகாரத்தில் நாமிருவரும் சேர்ந்து நடப்பதை அவர் பார்த்தால் என்னைக் கொலையே பண்ணிவிடுவார்."

"திரும்பத் திரும்ப அந்தப் பாவியைப் பற்றியே பேசிக் கோவிலைக் களங்கப்படுத்தாதீர்கள். அந்தக் கொடியவனைப் பற்றிப் பேசுவதற்குக் கோவிலைப் போல புனிதமான இடம் தகுதியானதில்லை."

இப்படிக் கண்ணாயிரத்தைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவள் குரலும் முகமும் சீற்றமடைவதையும் கண்கள் சினம் கனலுவதையும் பார்த்துச் சத்தியமூர்த்தியே மருண்டான். வாழ்க்கையின் தீய சக்திகளை எதிரே சந்திக்கவும் பொறுத்துக் கொள்ளவும் முடியாமல் குமுறுகிற இவளையும், தீய சக்திகளையும் பொறுத்துக் கொண்டாவது காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கு இவள் தாயையும் தன் மனத்துக்குள் சத்தியமூர்த்தி ஒப்பிட்டுச் சிந்தித்தான். எப்போது பேசினாலும் அவள் பேசுகிற வாக்கியங்களில் தனி முத்திரையும் பேசப்படுகிறவரை மயக்கி விடுந்தன்மையும் வாய்ப்பதையும் கூட அவன் தொடர்ந்து கவனித்துக் கொண்டு வந்தான்.

'என்ன மயக்கம் வேண்டிக் கிடக்கிறது?' அழகில்லாமல் முகத்தில் அரிதாரமும் பூசிக் கொள்ளாமல் மாசி வீதி ஆலமரத்தில் சந்தித்த பிச்சைக்காரியைப் போல் பசிக் கொடுமைக்காக வயிற்றில் பானையைக் கட்டிக் கொண்டு கர்ப்பிணியாகத் தோன்றிப் பிறரை மயக்க முயல்கிறவர்கள் அகப்பட்டுக் கொண்டால் கல்லெறிப்படுகிறார்கள்.

'இந்த உலகமும் வசதி உள்ளவர்கள் பொய்யாக மயக்குவதைத்தான் மன்னிக்கத் தயாராக இருக்கிறது. வசதி அற்றவர்கள் அதே காரியத்தைச் செய்யும் போது அகப்பட்டுக் கொள்கிறார்களே...' என்று வெறுப்பான வழியிலும் அவன் சிந்தனை சிதறி ஓடியது. ஒன்றும் பேசிக் கொள்ளாமல் பிரகாரத்தில் போய்க் கொண்டிருந்தார்கள் அவர்கள். மோகினியோடு சேர்ந்து இணையாக நடக்காமல் அவளுக்குப் பத்தடி முன்பாகவோ, பின்பாகவோ விலகி நடந்து போக வேண்டுமென்று தன்னால் ஆனமட்டும் சத்தியமூர்த்தி முயன்று பார்த்தான். அவன் வேகமாக நடந்தால் அவள் நடையும் வேகமாகியது. அவன் மெதுவாக நடந்தால் அவள் நடையும் மெதுவாகியது. இலட்சணமான தேர் அலங்கரிக்கப்பட்டு வீதியில் வருவது போல் அவள் நடப்பது மிக நன்றாயிருந்தது.

அம்மன் சந்நிதியிலிருந்து சுவாமி சந்நிதிக்குள் போகிற வழியில் நகர முடியாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டமான முக்குறுணியரிசிப் பிள்ளையாரைக் கடந்து வலது பக்கத்தில் தொடங்கும் பெரிய பிரகாரத்தில் இப்போது போய்க் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

"நீங்கள் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வரவேண்டும். அப்போது உங்கள் முன்னிலையில் நீங்கள் மட்டுமே காணும்படி ஆண்டாள் பாசுரத்துக்கு அபிநயம் பிடித்து ஆடிக் காட்டுவேன் நான்."

கெஞ்சுவது போன்ற குரலில் அவள் அவனிடம் இந்த வேண்டுகோளைச் சொல்லும்போது அவர்கள் சங்கத்தார் கோவிலைக் கடந்து வடக்குப் பிரகாரத்தில் புகுந்திருந்தார்கள். பிரகாரம் அதன் அடுத்த நுனி வரையில் வேற மனித சஞ்சாரமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. சத்தியமூர்த்தி அவளைக் கேட்டான்:

"உங்கள் வீடு எங்கே இருக்கிறது?"

"சங்கீத விநாயகர் கோவில் தெரு என்று வடக்கு மாசி வீதியிலிருந்து இந்தக் கோவிலுக்கு வருகிற வழியில் ஒரு சிறிய சந்து இருக்கிறதே! தெரியுமா?" இந்த வினாவுக்கு சத்தியமூர்த்தியிடமிருந்து பதில் இல்லாமற் போகவே அவளே மீண்டும் பேசினாள்.

"வித்துவான் பொன்னுசாமிப் பிள்ளை சந்துக்கு மேற்குப் பக்கமாக மறுபுறம், தானப்ப முதலித் தெருவில் போய் முடிகிற மாதிரி ஒரு தெரு இருக்கிறதே, ஞாபகமில்லையா உங்களுக்கு?..."

"ஞாபகம் இருக்கிறது. ஆனால் அதுதான் நீங்கள் சொல்கிற தெருவா என்பதுதான் நினைவில்லை! நான் உங்கள் வீட்டையோ, தெருவையோ விசாரித்து வைத்துக் கொண்டும் பயனில்லை. காரணம், இன்று வரை நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற நளின கலைகளைச் சிறிதும் இரசிக்கத் தெரியாமல் வாழ்க்கையின் கஷ்டங்களையே இரசித்து வளர்ந்துவிட்ட ஒருவனிடம் வந்து நீங்கள் உங்களுடைய ஆண்டாள் நாட்டியத்தைப் பார்க்க வரும்படி கூப்பிடுகிறீர்கள்."

"கூப்பிடவில்லை, கட்டாயமாக அழைக்கிறேன். அதை நீங்கள் தான் பார்க்க வேண்டுமென்று என் அந்தரங்கம் ஆசைப்படுகிறது."

"உலகத்திலேயே மிகவும் ஏழையான ஒருவனை நீங்கள் சிரமப்பட்டு அழைக்கிறீர்கள்."

"அதுதான் சொன்னேனே; ஆதரவற்றதெல்லாம் ஏழைதான். அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை. நீங்களே ஏழையானால் உங்களால் காப்பாற்றப்பட்ட நான் உங்களைவிட பெரிய ஏழை."

அவள் இவ்வாறு கூறிக்கொண்டே கண்களில் நீர் நெகிழச் சத்தியமூர்த்தியை ஏறிட்டுப் பார்த்தாள். சத்தியமூர்த்திக்கு அந்தப் பேதையின் இதயம் ஒருவாறு புரிந்தது. அன்று இரவு அவன் கோவிலிலிருந்து வீடு திரும்பிய போது இரவு நெடு நேரமாயிருந்தது. பிள்ளை சாப்பிடாமலும் சொல்லிக் கொள்ளாமலும் போய் விட்டதனால் அம்மா வீட்டு வாசலிலேயே அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். சொல்லிக் கொள்ளாமலும் சாப்பிடாமலும் வெளியே போனதற்காக அம்மா அவனிடம் ஏதேதோ சொல்லி வருத்தப்பட்டாள். ஒன்றும் பதில் பேசாமல் ஏதோ பேருக்குச் சாப்பிட்டுவிட்டுத் திண்ணையில் வந்து பாயை விரித்துப் படுத்தான் அவன்.

அத்தியாயம் - 12

ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றியவுடன் தான் தெய்வத்துக்கு நன்றி செலுத்துவதென்று வைத்துக் கொண்டு தெய்வமும் அப்படிப்பட்ட நன்றியிலேயே திருப்தியடைந்து விடுமானால், அப்புறம் சர்க்கார் அதிகாரிகளுக்கும் தெய்வத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்.

நாட்கள் சுவாரசியம் இல்லாமல் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. மல்லிகைப் பந்தல் கல்லூரியிலிருந்து ஒரு விவரமும் தெரியவில்லை. கோடை வெயிலின் கொடுமை காலை எட்டு மணிக்கு மேல் மாலை ஆறு மணி வரை நகரத்தை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. நாள் தவறாமல் சத்தியமூர்த்தியின் தங்கை ஆண்டாள் தபால்காரனை எதிர்பார்ப்பதும், வாசலுக்கு வந்து காத்து நிற்பதும், ஏமாற்றத்தோடு திரும்பி வந்து, "அண்ணா! தபால் ஒண்ணும் இல்லையாம்?" என்று தமையனிடம் சொல்லிவிட்டுப் போவதுமாக எதிர்பார்த்தது எதுவோ அது நிகழாத நாட்கள் ஒவ்வொன்றாக நீண்டு கொண்டிருந்தன. மதுரை நகரமும் சுற்றுவட்டாரத்துப் பட்டி தொட்டிகளும் ஒன்று சேர்ந்து மொத்தமாக எதிர்பார்க்கும் நிகழ்ச்சியாகச் சித்திரைத் திருவிழா வந்து கொண்டிருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும், "சாமி என்னைக்கு ஆத்திலே எறங்குது?" என்று அழகர் ஆற்றில் இறங்குவதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். தெருக்களில் கோடைக்கான கீற்றுப் பந்தல்களும், தண்ணீர்ப் பானைகளும் அதிகமாயின. கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும் தங்கள் மக்களைச் சேர்க்க இடம் தேடி அலையும் பெற்றோர்களும் பெண் குழந்தைகளுக்கு வரன் தேடி அலையும் பெற்றோர்களுமாக எங்கும் ஒருவிதமான பரபரப்போடு வாழ்க்கை ஓடத் தொடங்கியிருந்தது. பகல்நேரம் முழுவதும் சத்தியமூர்த்தி வீட்டிலேயே அடைந்து கிடந்தான். அப்பா கண்ணாயிரத்தைச் சந்திக்கச் சொல்லி அவனை நச்சரித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லிக் கண்ணாயிரத்தைப் பார்க்காமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தான் அவன். மல்லிகைப் பந்தலில் இருந்து ஒரு விதமான தகவலும் வராமற் போகவே தந்தை சத்தியமூர்த்தியை அதிகமாக வற்புறுத்தத் தொடங்கியிருந்தார். தந்தை அவனிடம் நேரடியாகச் சொல்லாவிட்டாலும் அம்மாவின் மூலம் இன்னொரு தகவலும் அவனுக்குத் தெரிந்தது. வீட்டு மாடியை இடித்துக் கட்டுவதற்காகவும், தங்கை ஆண்டாளின் திருமணச் செலவுக்காகவும் அப்பா கண்ணாயிரத்திடம் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் கடன் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறாராம். முதலை வாய்க்குள் காலை விடுவதைப் போல் அப்பா கண்ணாயிரத்தின் பிடியில் தானாகப் போய் வலுவில் சிக்கிக் கொள்கிறாரே என்பதை எண்ணிப் பார்த்தபோது அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்தச் செய்தியை அறிந்த பின்பே கண்ணாயிரத்தோடு தன் தந்தை அடிக்கடி சுற்றிக் கொண்டிருப்பதற்கும், உடனே கண்ணாயிரத்தைப் பார்க்கும்படித் தன்னைத் தூண்டுவதற்கும் சரியான காரணம் அவனுக்குப் புரிந்தது. காலையும் மாலையும் எப்போது வந்து கண்ணாயிரம் கூப்பிட்டாலும் அப்பா மறுக்காமல் அவரோடு காரேறிப் போய்க் கொண்டிருந்ததற்கு வெளிப்படையாக வேறு என்னவோ காரணம் சொல்லிக் கொண்டிருந்தார். "மஞ்சள்பட்டி ஜமீந்தார் மக்கள் சபைத் தேர்தலுக்கு நிற்கப் போகிறானாம். ஆங்கிலமும் தெரியாமல் இந்தியும் தெரியாமல் தில்லிக்குப் போனால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருக்காதா? அதனால் ஜமீந்தாருக்கு மிக இரகசியமாக ஆங்கிலமும் இந்தியும் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். பெரிய இடத்து விவகாரம் அல்லவா? அதனால் வெளியே சொல்லப்படாது. இது வெளியில் தெரியக்கூடாது என்று ஜமீந்தாரே கூச்சப்படுகிறார். 'இத்தனை வயதுக்கு மேல் ஜமீந்தாருக்குப் படிப்பில் மோகமா?' என்று மக்கள் பேசிக் கொள்ளத் தொடங்கிவிடுவார்களோ என்பதற்காக அவர் பயப்படுகிறார்" என்று அப்பா ஒருநாள் பேச்சு வாக்கில் சிரித்துக் கொண்டே சொல்லியிருந்தார். அப்பா கண்ணாயிரத்திடம் கடன் வாங்க முயல்வதும், மஞ்சள்பட்டி ஜமீந்தாருக்கு ஆங்கிலமும் இந்தியும் கற்பிப்பதாக அலைந்து கொண்டிருப்பதும் சத்தியமூர்த்திக்குச் சிறிது கூடப் பிடிக்கவில்லை. 'நான் சம்பாதித்துப் போடுவதற்குத் தயாராகாத வரையில் இதையெல்லாம் தடுப்பதற்கு எனக்கு உரிமை ஏது?' என்று அடங்கியிருந்தான் அவன். ஆங்கிலச் செய்தித்தாளில் விடுமுறைக்குப் பின் மல்லிகைப் பந்தல் கல்லூரி திறக்கப் போகிற நாளைக் குறிப்பிட்டு விளம்பரம் கூட அன்று காலையில் வெளிவந்து விட்டது. ஏமாற்றமும், குழப்பமும் அவனை ஒடுங்கிப் போகச் செய்திருந்தன. பெட்டியில் இருந்த பாரதியின் கடிதத்தை அவன் இரண்டாவது முறையாக எடுத்துப் படித்தான். அந்தக் கடிதத்தைப் படிப்பதில் அவன் மனம் சிறிது ஆறுதல் அடைந்தது. 'என்னை ஏமாற்றி விடாதீர்கள் சார்! உங்களை அவசியம் இங்கே எதிர்பார்க்கிறேன்' என்று அந்தக் கடிதத்தை முடித்திருந்தாள் பூபதியின் மகள். அதைப் படிக்கும் போது அவன் தன் ஞாபகத்தில் முழுமையான மகிழ்ச்சியை உணர்ந்தான்.

"நான் உன் விருப்பப்படியே மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிட வேண்டும் என்று நினைத்தாலும் உன் தந்தை என்னை ஏமாற்றி விடுவார் போல் இருக்கிறதே பெண்ணே!" என்று எண்ணிக் கொண்டே மனத்துயரத்தோடு அந்தக் கடிதத்தைப் பெட்டியில் வைத்துப் பூட்டினான் சத்தியமூர்த்தி. இனிமேல் மல்லிககப் பந்தலிலிருந்து கடிதமோ, ஆர்டரோ வரும் என்ற நம்பிக்கைக் கூட அவனுக்கு இல்லை. தன்னுடைய உருக்கமான கடிதம் கூடப் பூபதியின் மனத்தை மாற்றவில்லை என்று எண்ணியபோது அவனால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியாமல் இருந்தது. வெளியில் எங்கும் புறப்பட்டுப் போகவே பிடிக்காமல் வீட்டின் தனிமையில் புத்தகங்களை நாடி மன அமைதி பெற முயன்றான் அவன். அவன் கண்ணாயிரத்தைப் பார்க்காமலே தட்டிக் கழித்தது பிடிக்காததனால் தந்தை அவனோடு பேசுவதையே நிறுத்தியிருந்தார். அம்மா தான் அவன் மனமறிந்து ஆறுதலாக அவ்வப்போது இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தாள்.

"வருத்தப்படாதே சத்தியம்! உனக்கென்று எப்படியும் ஒரு வேலை காத்துக் கொண்டு தான் இருக்கும். இல்லாததையெல்லாம் நினைத்து நீயாக மனத்தைக் கெடுத்துக் கொள்ளாதே, நிம்மதியாயிரு" என்று அவன் முகமும் மனமும் வாடுவதைப் பொறுக்க முடியாமல் அம்மா ஆறுதல் கூறும் வேளையில் அவனுக்குச் சிறிது மன அமைதி கிடைக்கும்.

சித்திரா பௌர்ணமிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. 'பூபதிக்கு இன்னொரு கடிதம் எழுதலாமா அல்லது ஒரேயடியாக மல்லிகைப் பந்தலை மறந்துவிட்டு வேறு கல்லூரிகளுக்கு முயற்சி செய்யலாமா?' என்று அவன் தயங்கிக் கொண்டிருந்த போது அந்த நல்ல செய்தி வந்து சேர்ந்தது. அவ்வளவு நாட்கள் அவனைக் காக்க வைத்ததற்கு வட்டியும் முதலுமாகச் சேர்ந்து வருவது போல் அன்று பகல் ஒரு மணித் தபாலில் மூன்று தனித் தனிக் கடிதங்கள் மல்லிகைப் பந்தலிலிருந்து அவனுக்கு வந்தன. அந்தக் கடிதங்கள் கைக்கு கிடைத்த போது அவன் அடைந்த மகிழ்ச்சியும் ஆர்வமும் எல்லையற்றவையாக இருந்தன. பூபதி தன் கடிதத்தைக் கண்டு அதில் தான் வேண்டிக் கொண்டிருந்தபடி தனக்கு மல்லிகைப் பந்தல் கல்லூரியில் வேலை கொடுப்பார் அல்லது விரும்பாவிட்டால் கொடுக்க மாட்டார் என்று மட்டும் தான் சத்தியமூர்த்தி எதிர்பார்த்திருந்தான். அவரோ அவனுக்கு ஆர்டரும் அனுப்பி விட்டுத் தனியாக ஒரு கடிதமும் எழுதியிருந்தார். ஆர்டர் கல்லூரி அலுவலகம் மூலம் தனியாக வேறோர் உறையில் வந்திருந்தது. மூன்றாவது கடிதம் பாரதியிடமிருந்து வந்திருந்தது. படிப்பதற்கு மனம் முந்துகிற அந்தக் கடிதத்தை இறுதியில் படித்துக் கொள்ளலாம் என்று வைத்துவிட்டுப் பூபதியின் கடிதத்தை முதலில் பிரித்துப் படிக்கலானான் அவன்.

"அன்புக்குரிய இளைஞர் சத்தியமூர்த்திக்கு அநேக ஆசிகள். உங்கள் கடிதம் கிடைத்தது. மல்லிகைப் பந்தல் கல்லூரியில் வேலை பார்க்க வேண்டும் என்று நீங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். எடுத்த எடுப்பில் உங்களைப் பார்த்தவுடன் தமிழ் விரிவுரையாளர் பதவியை உங்களுக்குத்தான் தரவேண்டும் என்று எனக்கே தோன்றியது. ஆனால் நமது சந்திப்பின் முடிவில் நீங்கள் பேசிய சில வார்த்தைகள் என் மனத்தை மிகவும் ஆழமாகப் புண்படுத்தி விட்டன. உங்களைத் தவிர வயதும் அநுபவமும் அதிகமாக உள்ள வேறு சிலரும் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் இப்போது உங்களையே இந்தப் பதவிக்கு நியமித்திருக்கிறேன். ஆர்டர் கல்லூரி அலுவலகத்திலிருந்து தனித் தபாலில் உங்களுக்குக் கிடைக்கும். நல்ல ஆசிரியர்கள் தான் என்னுடைய கல்லூரியின் செல்வம். நீங்கள் என்னுடைய கல்லூரிக்கு ஆசிரியராக வந்து பாடங்கள் கற்பிப்பது தவிர, மல்லிகைப் பந்தல் கல்லூரியின் அநுபவங்கள் உங்களுக்கே சில நல்ல பாடங்களைக் கற்பிக்கும் என்பது என் கருத்து. நான் எதிர்பார்க்கிற பணிவும் விநயமும் நாளடைவில் தானாகவே உங்களிடம் ஏற்பட்டுவிடும் என்று நம்புகிறேன்."

என்று மிகவும் சுருக்கமாகக் கடிதத்தை முடித்திருந்தார் பூபதி. இந்தக் கடிதத்தில் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தான் சத்தியமூர்த்தி. 'மல்லிககப் பந்தல் கல்லூரியின் அநுபவங்கள் உங்களுக்கே சில நல்ல பாடங்களைக் கற்பிக்கும் என்பது என் கருத்து' என்று எழுதியிருக்கும் வாக்கியத்தை எந்த அர்த்தத்தில் எப்படிப் புரிந்து கொள்வது என்று தயங்கினான் அவன்!

தனக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அந்த வாக்கியம் எழுதப்பட்டுள்ளதா அல்லது குத்திக் காட்டும் முறையில் எழுதப்பட்டுள்ளதா என்று சத்தியமூர்த்தியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. கல்லூரிக் கடிதத்தாளில் சம்பள விகிதம் - வந்து வேலையை ஒப்புக் கொள்ள வேண்டிய தேதி - எல்லாம் குறிப்பிட்டு ஆர்டர் டைப் செய்து அனுப்பியிருந்தார்கள். நிர்வாகி என்ற முறையில் அந்த ஆர்டரின் கீழேயும் பூபதிதான் கையொப்பமிட்டிருந்தார். கல்லூரி கோடை விடுமுறைக்குப் பின் திறக்கப்படும் முதல் நாளிலேயே அவன் மல்லிகைப் பந்தலுக்கு வந்து வேலையை ஒப்புக் கொண்டு விடவேண்டும் என்று ஆர்டரில் கண்டிருந்தது. பூபதியின் கடிதத்தையும் கல்லூரி ஆர்டரையும், மடித்து வைத்துவிட்டுப் பாரதியின் கடிதத்தை எடுத்து ஆவலோடு பிரித்துப் பார்த்தான் அவன். சென்ற கடிதத்தில் வைத்திருந்ததைப் போலவே இந்தக் கடிதத்திலும் இரண்டு மூன்று குடைமல்லிகைப் பூக்களை மறக்காமல் சொருகியிருந்தாள் அவள்.

"....."

"என் இதயமாகிய பீடத்தில் யாருடைய ரோஜாப்பூப் பாதங்கள் பதிந்து கொண்டிருக்கின்றனவோ அவருக்கு அநேக கோடி வணக்கங்களுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னுடைய முன் கடிதத்தில் நான் உங்களை வேண்டிக் கொண்டிருந்தபடி அப்பாவுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை அவர் வெளியே போயிருந்த போது அவருக்குத் தெரியாமல் நானும் எடுத்துப் படித்தேன். அவ்வளவு அருமையான இலக்கிய நயம் நிறைந்த கடிதத்தைப் படித்த பின்பும் அப்பாவால் எப்படி மனம் நெகிழாமல் இருக்க முடியும்? வேறு ஒரு சமயமாயிருந்தால் அப்பாவை உங்களுக்குச் சாதகமாக நினைக்க விடாமல் கல்லூரி முதல்வர் பிடிவாதமாக ஏதாவது சொல்லிக் கெடுத்துக் கொண்டேயிருப்பார். ஆனால் இப்போது சூழ்நிலை எந்த விதத்திலும் கல்லூரி முதல்வருக்குச் சாதகமாக இல்லை. சில நாட்களுக்கு முன் இங்கு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதைப் பற்றி உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

இராஜாராமன் என்று ஒரு மாணவன் பி.எஸ்.ஸி. பரீட்சை முடிவுகள் செய்தித்தாளில் வெளியான தினத்தன்று தான் பரீட்சையில் தேறவில்லை என்பதற்காகக் கல்லூரி முதல்வரைக் குத்திக் கொலை செய்ய முயன்றான். 'பல்கலைக் கழகத்தார் நடத்துகிற பொதுப் பரீட்சையில் நீ தேறாமல் போனால் அதற்குக் கல்லூரி முதல்வர் எப்படி அப்பா காரணமாக முடியும்?' என்று அப்பா அந்தப் பையனை விசாரிக்கும் போது கேட்டார். அந்தப் பையனோ 'கல்லூரி நாட்களிலிருந்தே நான் உருப்படாமல் போக வேண்டும் என்று பிரின்ஸிபல் திட்டமிட்டுக் கொண்டு சதி செய்தார் சார்' என்று ஒரே முரண்டு பிடித்தான். பல்கலைக்கழகப் பரீட்சையில் அந்தப் பையன் தேறாமல் போனதற்குக் கல்லூரியின் முதல்வர் காரணமாக இருக்க முடியாதென்று அப்பாவுக்குத் தெரிந்திருந்தாலும், இந்த நிகழ்ச்சியால் முதல்வரிடம் அவர் வைத்திருந்த நம்பிக்கையும் குறைந்திருக்கிறது. மாணவர்களைக் கொலை செய்யவும் துணிந்துவிடத் தூண்டுமளவுக்கு முதல்வரிடம் என்ன கெட்ட குணம் இருக்க முடியும் என்று அப்பா சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார். முதல்வருக்குச் சம்பந்தமில்லாத பொதுப் பரீட்சையில் தான் தேறாமல் போனதற்கு முதல்வர் காரணம் என்று அந்தப் பையன் கூறுவது உணர்ச்சி வெறியால் இருக்கலாம் என்று தெரிந்திருந்தும், இப்படி ஒரு சம்பவம் நேர்ந்ததால் அப்பா மிகவும் மனம் குழம்பிப் போயிருக்கிறார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளியானால் மல்லிகைப் பந்தல் கல்லூரியின் பெயர் கெட்டு விடுமே என்று அஞ்சி மிகவும் சிரமப்பட்டுத் தடுத்திருக்கிறார். கல்லூரி முதல்வர் தோள்பட்டையில் கத்திக்குத்துக் காயத்தோடு நாலைந்து நாள் ஆஸ்பத்திரியில் இருந்தார். முதல் நாள் சம்பவம் நடந்த தினத்தன்று நானும் அப்பாவும் கல்லூரி முதல்வரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தோம். அப்பா ஆஸ்பத்திரியிலேயே முதல்வரைக் கண்டித்தார்.
"இளம் பிள்ளைகளை நிறைய மன்னித்த பின்னே திருத்த முடியும். ஒரு பையன், நீங்கள் காரணமில்லாத ஒரு காரியத்துக்காக உங்களைக் கொலை செய்துவிடக் கத்தியைத் தூக்கிக் கொண்டு வரும் அளவு என்ன கெடுதலை நீங்கள் அவனுக்குச் செய்திருக்க முடியும் என்று எனக்குப் புரியவே இல்லை! இந்த விதமான அசம்பாவிதங்களில் இதுவே கடைசியாக இருக்க வேண்டும்" என்று கடுமையான குரலில் அப்பா முதல்வரைக் கண்டித்த போது நானும் அருகில் தான் இருந்தேன். கேம்பிரிட்ஜில் படித்து ஆக்ஸ்போர்டில் டாக்டர் பட்டம் வாங்கி விட்டால் மட்டும் போதுமா? பையன்களிடம் அன்பும் நெகிழ்ச்சியும் கொண்டு பழகி அவர்களை வசப்படுத்தத் தெரியாவிட்டால் என்ன பயன்? நீங்கள் உங்களுடைய பட்டுப் பாதங்களால் இந்தக் கல்லூரிக் காம்பவுண்டுக்குள் நடக்கப் போகிற முதல் தினத்திலிருந்து இந்த விதமான வம்புகள் எல்லாம் தொலைந்து போகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் இங்கு விரிவுரையாளராக வந்தபின் எப்படிப்பட்ட முரட்டு இளைஞர்களும் உங்களைச் சுற்றிக் கைகூப்பிக் கொண்டு திரியப் போகிறார்கள் பாருங்களேன். நீங்கள் இங்கே மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிட்டுத் திரும்பிய தினத்தன்று மாலை வேறொரு முதியவருக்கு 'இண்டர்வ்யூ' நடத்தி முடித்து அவரை அனுப்பிய பின் அப்பாவும் கல்லூரி முதல்வரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை நானே என் செவிகளால் கேட்டேன். அப்போது கல்லூரி முதல்வர் உங்களைப் பற்றி அப்பாவிடம் என்ன சொன்னார் தெரியுமா?

'சத்தியமூர்த்தியைப் போல் இளம் பருவமும் தோற்றப் பொலிவும் கேட்பவர்களை மயக்கிவிடுகிற பேச்சுக் கவர்ச்சியும் உள்ள இளைஞனால் மாணவர் மனங்களை விரைவில் கெடுக்க முடியும்' என்று நாவு கூசாமல் அப்பாவிடம் குறை சொன்னவர் தானே இவர்? அப்படிச் சொன்னவருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். அப்பப்பா! இந்த மனிதர் இருக்கிற இடத்தில் நெருப்புப் பிடித்து வெந்து போகும். நல்லவேளையாக இவர் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. உங்கள் கடிதம் கிடைப்பதற்கு முன்பே அப்பா தமிழ் விரிவுரையாளராக உங்களைத்தான் நியமிக்க எண்ணியிருந்தார். உங்கள் கடிதம் கிடைத்த பின் அந்த எண்ணம் நிச்சயமாகிவிட்டது. ஆனாலும் ஏனோ இத்தனை நாள் தாமதமாகிய பின் நேற்றுத்தான் உங்களுக்கு ஆர்டர் டைப் செய்யச் சொல்லி ஹெட்கிளார்க்கினிடம் கூறினார். அப்பாவும் உங்களுக்குத் தனியாக ஒரு கடிதம் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். தெய்வம் நம்மைக் கைவிட்டு விடவில்லை. நீங்கள் இங்கு வந்து எங்கள் கல்லூரியில் பணிபுரியப் போகிறீர்கள் என்ற ஞாபகத்தையே கொண்டாடும் மனத்தோடு நான் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் கூடத் 'தமிழ் குரூப்' எடுத்துக் கொள்ள தீர்மானம் செய்து விட்டேன். அப்பாவிடம் அவர் சம்மதிக்கிற சமயம் பார்த்து ஒரு வார்த்தை சொல்லிச் சம்மதம் பெற்ற பின் நிச்சயமாகத் தமிழ்ப் பிரிவில் நானும் சேர்ந்து விடுவேன். உங்களிடம் மாணவியாக இருந்து படிப்பது ஒரு பாக்கியம். இனி அது எனக்குக் கிடைக்கப் போகிறது. 'ஆர்டர்' கிடைத்ததற்கு நன்றி தெரிவித்து அப்பாவுக்கு ஒரு வரி எழுதி விடுங்கள். கல்லூரி திறக்கும் நாளன்று உங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு மிகவும் விருப்பமான மல்லிகைப் பந்தலின் மணம் மிகுந்த பூக்கள் இரண்டையும் இந்தக் கடிதத்தில் சொருகியிருக்கிறேன்.

உங்கள் பாரதி."

இந்தக் கடிதத்தைப் படித்ததும் இப்படிக் கூட ஓர் அன்பு உலகத்தில் உண்டா என்று ஆச்சரியம் அடைந்தான் சத்தியமூர்த்தி. உடனே பூபதிக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதமும் எழுதினான். அந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்த்துவிட்டு அவன் வீடு திரும்பிய போது அன்றொரு நாள் மோகினியோடு கோவிலில் பார்த்த அந்தச் சிறுவன் உள்ளே செல்வதா திரும்பிப் போய் விடுவதா என்ற தயக்கத்தோடு தன் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

"என்ன தம்பீ?"

"சார்! அக்கா உங்களைப் பார்த்து ஒரு சங்கதி சொல்லிவிட்டு வரச்சொன்னாங்க..."

"சொல்லேன்! என்ன சங்கதி அது?"

"சித்திரா பௌர்ணமியன்று மாலை ஏழு மணிக்கு தமுக்கம் பொருட்காட்சியில் மோகினி அக்காவோட நாட்டியம் இருக்கு. அதுக்கு நீங்க அவசியம் வரணுமின்னு அக்கா ஆசைப்படறாங்க! 'வேறே யாருக்கும் தெரியப்படாது. உடனே இதைப் போய் அவரிடம் சொல்லிவிட்டு வான்னாங்க'. இந்த வீட்டைக் கூட அக்கா சொன்ன அடையாளத்திலிருந்துதான் நான் தேடிக் கண்டுபிடித்தேன்."

"சரி வருவதற்கு முயற்சி செய்கிறேன் என்று உன் மோகினி அக்காவிடம் போய்ச் சொல்."

"அப்படிச் சொல்லாதீங்க சார். கண்டிப்பா வரேன்னு சொல்லுங்க. நீங்க வரேன்னு சொன்னாதான் அக்காவுக்கு நிம்மதி."

சத்தியமூர்த்தியிடமிருந்து சரியான பதில் கிடைக்கிற வரை போவதில்லை என்பது போல் விடாப்பிடியாக நின்று கொண்டிருந்தான் அந்தப் பையன். ஏற்கெனவே பலவிதமாகப் புண்பட்டுப் போயிருக்கும் அந்த அபலையின் மனத்தைத் தானும் புண்படுத்துவானேன் என்ற எண்ணத்தோடு, "நான் அவசியம் உன் அக்காவின் நாட்டியத்தைப் பார்க்க வருகிறேன் தம்பி?" என்று மேலும் நம்பிக்கையளிக்கிற விதத்தில் சொல்லி அந்தப் பையனை அனுப்பினான் சத்தியமூர்த்தி. வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் அப்பா அம்மா எல்லோரும் கூடத்தில் தான் இருந்தார்கள். ஆர்டரை எடுத்து அப்பாவின் கையில் கொடுத்தான் அவன். அதைக் கையில் வாங்கிக் கொண்டதும், பிரித்துப் பார்க்காமலே, "என்னது?" என்று அவனை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார் அப்பா. சத்தியமூர்த்தி நிதானமாக மறுமொழி கூறினான்:

"மல்லிகைப் பந்தல் கல்லூரியிலிருந்து ஆர்டர் வந்திருக்கிறது."

தன்னுடைய இந்தச் சொற்களைக் கேட்டு அம்மா, அப்பா, தங்கைகள் எல்லாரும் முகம் மலர்வதைக் கவனித்தான். ஆர்டரைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார் அப்பா.

அம்மா அவனை நோக்கிக் கேட்டாள், "சம்பளம் என்ன போட்டிருக்கிறார்கள்?"

அம்மாவின் இந்தக் கேள்வியைப் பொறுத்துக் கொள்ளவும் முடியாமல் கோபித்துக் கொள்ளவும் முடியாமல், "சம்பளத்தைப் பற்றி என்ன வந்தது இப்போது? இருநூறு ரூபாய்க்கு மேல் வருகிறார் போல் ஏதோ போட்டிருக்கிறார்கள்" என்று பதில் கூறினான் அவன்.

"இன்று சாயங்காலம் பேச்சியம்மன் கோவிலில் நெய்விளக்குப் போட்டுவிடு கல்யாணி! நான் சத்தியத்தின் நட்சத்திரத்துக்குப் பழைய சொக்கநாதர் கோவிலில் ஓர் அர்ச்சனையும் செய்து விடுகிறேன்" என்று அம்மா கூறிய போது அந்த பக்தியும் பேதமை நிறைந்ததாகவே தோன்றியது சத்தியமூர்த்திக்கு.

ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றியவுடன் தான் தெய்வத்துக்கு நன்றி செலுத்துவது என்று வைத்துக் கொண்டால் என்ன ஆவது? அப்படிப்பட்ட நன்றியிலேயே தெய்வமும் திருப்தியடைந்து விடுமானால் அப்புறம் சாதாரணமான சர்க்கார் அதிகாரிகளுக்கும் தெய்வத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? 'ஆர்டர் அனுப்பியவுடன் நன்றி செலுத்திப் பூபதிக்கு நான் எழுதிய கடிதத்துக்கும் அம்மாவின் அர்ச்சனைக்கும் தான் என்ன வேறுபாடு?' என்று நினைத்து வியந்தான் சத்தியமூர்த்தி.

"அண்ணா! இந்த வேலை எப்படியும் உனக்குக் கிடைத்து விடும் என்று எனக்குத் தெரியும். நீ இண்டர்வ்யூவுக்குப் புறப்பட்டுப் போன அன்று இரவே நான் கோவிலில் பூக்கட்டி வைத்துப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்" என்று தனியாக அவன் அருகே வந்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டாள் தங்கை ஆண்டாள். நாலைந்து முறை கண்ணாயிரத்தைப் பார்க்கச் சொல்லித் தன்னைத் துன்புறுத்தி விட்ட காரணத்தினால் இன்று எதிர்பாராத நிலையில் இந்த ஆர்டர் கிடைத்ததைக் கண்டதும் தந்தை தன்னிடம் மனத்தை விட்டுப் பேசவோ மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளவோ முடியாமல் தயங்கி வெட்கப்படுகிறார் என்பதையும் அப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அன்று மாலையில் அவன் குமரப்பனைச் சந்திக்கப் போயிருந்தான். மல்லிகைப் பந்தல் கல்லூரியிலிருந்து தனக்கு ஆர்டர் கிடைத்துவிட்ட செய்தியை சத்தியமூர்த்தி மகிழ்ச்சியோடு தன் நண்பனிடம் தெரிவித்தான். அந்த நல்ல செய்தி குமரப்பனுக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. இருவரும் வழக்கம் போல் உலாவப் போனார்கள். திரும்பி வரும்போது குமரப்பனே தற்செயலாய்ச் சித்திரைப் பொருட்காட்சியைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்தான்.

"சத்தியம்! சித்திரைப் பொருட்காட்சிக்கு ஒரு நாள் போகவேண்டும். எங்கள் பத்திரிகைக்குப் பாஸ் வந்திருக்கிறது. உனக்கு என்றைக்கு வசதிப்படும் என்று சொன்னால் அன்றைக்கு நாம் இருவரும் போய் வரலாம்."

"பௌர்ணமியன்று போகலாம் குமரப்பன்! நான் ஏற்கெனவே பௌர்ணமியன்று அந்தப் பொருட்காட்சிக்குப் போகலாமென்று நினைத்திருந்தேன்."

"ஐயையோ! அழகர் ஆற்றில் இறங்குகிற நாளில் பார்த்தா போக வேண்டும் என்கிறாய்? கூட்டம் தாங்க முடியாதே? போதாத குறைக்குச் சித்திரா பௌர்ணமியன்று நாட்டியக் கலைமணி குமாரி மோகினியின் ஆண்டாள் நடனம் வேறு ஏற்பாடாகியிருக்கிறது."

"அதையும் தான் பார்ப்போமே?" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் சத்தியமூர்த்தி. குமரப்பனும் ஒருவாறு அதற்குச் சம்மதித்தான். சித்திரா பௌர்ணமியன்று மாலை ஐந்து மணிக்கே வீட்டை விட்டுப் புறப்பட்டு விட வேண்டும் என்று பேசிக் கொண்டு பிரிந்தார்கள் நண்பர்கள். நடுவில் ஒருநாள் தான் இருந்தது. அதுவும் வேகமாக கழிந்து விட்டது. பௌர்ணமியன்று காலையில் மோகினியக்கா ஞாபகப்படுத்துமாறு சொல்லி அனுப்பியதாக மறுபடியும் அந்தச் சிறுவன் சத்தியமூர்த்தியிடம் வந்துவிட்டுப் போனான்.

குமரப்பன் அன்று மாலை நாலரை மணிக்கே சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு வந்துவிட்டான். இருவருமாகப் புறப்பட்டுத் தமுக்கம் பொருட்காட்சி மைதானத்துக்கு யானைக்கல், கல்பாலம் வழியாக நடந்தே சென்றார்கள். பொருட்காட்சியின் பகுதிகள் எல்லாவற்றையும் நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டு மோகினியின் நாட்டியம் நடைபெற இருக்கும் திறந்தவெளி அரங்குக்குள் அவர்கள் நுழையும் பொழுது ஆறே கால் மணி. கூட்டத்தில் எள் போட்டால் விழ இடமில்லை போலக் கூடியிருந்தது. அரங்குக்கு மிக அருகில் இரண்டாவது வரிசையில் வசதியான இடத்தில் நடுவாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் சத்தியமூர்த்தியும் குமரப்பனும்.

அப்போதும் அந்தச் சிறுவன் வந்து கூட்டத்தை நன்றாக உற்றுப் பார்த்து இரண்டாவது வரிசையில் சத்தியமூர்த்தி அமர்ந்திருப்பதைக் கண்டதும் முகமலர்ச்சியோடு திரும்பிச் சென்றான். முன் வரிசையில் வேறு சில பிரமுகர்களோடு கண்ணாயிரமும் தென்பட்டார். சிறிதும் தாமதமில்லாமல் சரியாக ஏழு மணிக்கு நாட்டியம் ஆரம்பமாகிவிட்டது. அரங்கை மறைத்துக் கொண்டிருந்த திரை விலகியதும் பாட்டும் தாளமும் சலங்கை ஒலியுமாகத் தெரிந்த முதல் காட்சியே சத்தியமூர்த்தியை மெய் சிலிர்க்கச் செய்தது.

'தன்னுடைய வாழ்வையும் உடல் பொருள் ஆவி முதலிய சகலத்தையும் கண்ணபிரானோடு சேர்க்குமாறு காதற் கடவுளாகிய மன்மதனை ஆண்டாள் வேண்டிக் கொள்வதாக ஆரம்பமாகும் நாச்சியார் திருமொழிப் பாசுரங்களோடு மோகினியின் நாட்டியம் தொடங்கியது. மோகினி ஆண்டாளாக நிற்க அவள் எதிரே கரும்பு வில்லில் மலர்க்கணை தொடுக்கும் கோலத்தில் இன்னொரு பெண் மன்மதனாகப் புனைந்து அலங்கரித்துக் கொண்டு ஆண் வேடத்தில் நின்றாள்.

வானிடை வாழும் அவ்வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தடநகில்கள்
மானிடவர்க்கு என்று பேச்சுப்படின்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே!

என்ற விருத்தத்தை ஸாவேரி ராகத்தில் கெஞ்சி வேண்டிக் கொள்கிற குழைவோடு பாடியவாறே மன்மதனை நோக்கிக் கைகூப்பினாள் மோகினி. மன்மதனை வணங்கிக் கெஞ்சும் கண்களும் தாமரை மொட்டுப் போல் அழகாகக் கூப்பிய கையுமாக அவளுடைய அந்தத் தோற்றம் மிக வனப்பாயிருந்தது. ஆண்டாளையும் மன்மதனையுமே நேரில் கண்டு கட்டுண்டிருப்பது போல் கூட்டம் பேரமைதியில் ஒடுங்கிப் போயிருந்தது. 'கமல வண்ணத் திருவுடை முகத்தில் திருக்கண்களால் திருந்த நோக்கு எனக்கு அருளு கண்டாய்' என்று அடுத்த பாசுரத்தில் கடைசி வரிக்கு அவள் அபிநயம் பிடித்த போது தன் முகத்தையே உற்றுப் பார்ப்பதைக் கண்டு சத்தியமூர்த்தி கூச்சத்துடனே தரையைப் பார்த்தான். 'கேசவநம்பியைக் கால்பிடிப்பாளென்னுமிப் பேறு எனக்கு அருளு கண்டாய்' என்று மற்றொரு பாசுரத்தின் கடைசி வரிக்கு அபிநயம் பிடித்த போதும் அவள் சத்தியமூர்த்தியையே பார்த்தாள். மீனாட்சி கோவில் பிரகாரத்தில் அவள் தன் பாதங்களளத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டதை இப்போது அவன் நினைத்துக் கொண்டான். அந்த நினைப்பால் அவன் உணர்ச்சி வசப்பட்டுக் கண்கலங்கினான். அப்போது யாரோ பின் வரிசையிலிருந்து தோள் பட்டையைத் தட்டிக் கூப்பிடுவதாகத் தோன்றவே திகைப்போடு திரும்பிப் பார்த்தான் சத்தியமூர்த்தி. வந்து நின்றது அந்தச் சிறுவன் தான்.

அந்தச் சிறுவன் தன்னிடம் வந்து ஏதோ சொல்வதற்காகச் சிரமப்பட்டு வழி உண்டாக்கிக் கொண்டு அப்போது அங்கே வந்திருப்பது அவனுக்குப் புரிந்தது.

அத்தியாயம் - 13

பெண்கள் இயல்பாகவே அழகும் கவர்ச்சியும் மிகுந்தவர்கள். பரதநாட்டியம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து அதற்கு இலக்கணமும் வகுத்து வைத்த பின் பெண்களின் அழகை அவர்களே நிச்சயமாக நிரூபித்துக் கொள்ள வழி செய்து கொடுத்து விட்டார் பரத முனிவர்.

அவ்வளவு பெரிய அவையில் சிறிதும் இடைவெளியின்றிக் கூடியிருந்த கூட்டத்தினர் மோகினியின் நாட்டியத்தில் முழுமையாக ஈடுபட்டு இலயித்திருந்த வேளையில் இடையே புகுந்து வழி உண்டாக்கிக் கொண்டு வருவதால் எத்தனை கோபதாபங்களைச் சந்திக்க நேருமோ அத்தனை கோபதாபங்களுக்கும் ஆளாகிய பின்பே அந்தச் சிறுவன் சத்தியமூர்த்திக்கு அருகே வந்திருந்தான். "முடிந்ததும் பேசாமல் எழுந்து போயிடாதீங்க. அக்கா உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க" என்று அந்தச் சிறுவன் தன் காதருகே முணுமுணுத்த போது, முதலில் அவன் மேல் அடக்க முடியாத கோபமும் பின்பு அவன் வந்திருக்கிற சூழ்நிலையை உணர்ந்து அவன் மேல் அநுதாபமும் உண்டாயின சத்தியமூர்த்திக்கு. அமைதியான அவையில் மிகவும் அமைதியாயிருந்த முன் வரிசையில் தன்னிடம் அந்தச் சிறுவன் வந்து பேசிய பேச்சுக் குரலே சுற்றிலுமிருந்த சிலர் தன் பக்கம் பார்த்து முகத்தைச் சுளிக்கக் காரணமாயிருப்பதைச் சத்தியமூர்த்தி புரிந்து கொண்டான். "நாட்டியம் முடிந்ததும் உன் அக்காவை அவசியம் பார்த்துவிட்டுப் போகிறேன். கூட்டத்தில் இப்படி அடிக்கடி நடுவே வந்து பேசாதே தம்பி..." என்று சொல்லி அந்தச் சிறுவனை அனுப்பி வைத்தான் அவன். அந்தச் சிறுவனோடு பேசிக் கொண்டிருந்த போது கூட அரங்கிலிருந்து ஒலிக்கும் இனிய குரலும் மாறி மாறி ஒலிக்கும் சலங்கை ஒலியும் வந்து செவிகளை நிறைத்துக் கொண்டு தான் இருந்தன. வளைகளும், சலங்கைகளும் ஓசையிட அவள் கொடிபோல் துவண்டு நயமாக ஆடிய நாட்டியம் அவன் இதயத்தைக் கவர்ந்தது. அந்த நாட்டிய நிகழ்ச்சியின் முதற்பகுதியாகவும் முக்கியமான பகுதியாகவும் இருந்தது ஆண்டாள் நடனம் தான். அதன் பின் பாம்பாட்டி நடனம், மார்வாரி நடனம் என்று வேறு சில நிகழ்ச்சிகளும் தொடர்ந்தன. அவையெல்லாம் அவளுடைய ஆண்டாள் நடனத்தைப் போல் சத்தியமூர்த்தியின் மனத்தைத் தொட்டு உருகச் செய்யவில்லையாயினும், கலைத்திறனையும் அவள் அழகின் பல நிலைகளையும் அவன் புரிந்து கொள்ளத் துணை செய்தான். இயற்கையாகவே அவளுடைய கலைத்திறன் அவ்வளவு சிறப்புடையதா அல்லது தன்னைப் போல் அவளுடைய அந்தரங்கத்தில் இடம் பெற்றிருக்கும் ஓர் இரசிகன் எதிரே வந்து உட்கார்ந்திருந்ததனால் தனக்காகவே அவ்வளவு சிறப்பாக அது அமைந்ததா என்று நுணுக்கமாகவே எண்ணிப் பார்த்தான் சத்தியமூர்த்தி. ஒவ்வொன்றாக ஞாபகம் வந்து அவளைப் பற்றிய கவர்ச்சியையும் மயக்கத்தையும் அவன் மனத்தில் அதிகமாக்கின. அவளுடைய கைகள் சேர்ந்தும், பிரிந்தும் முத்திரை பயின்றபோதெல்லாம் நிலவின் கதிர்களிலிருந்து கொய்த தளிர்களைப் போல் இலங்கிய விரல்களின் எழிலை நினைப்பதா? எதை நடித்துக் கொண்டிருந்தாளோ அதனுடைய பாவனைகளை அப்படியே மாற்றமின்றிப் பேசும் அவள் கண்களை நினைப்பதா? பாதரசங்களின் காட்சியழகும் சலங்கைகளின் ஓசை அழகுமாக அவளுடைய கால்கள் மான் துள்ளியது போல் துள்ளிய வேளைகளில் கூடியிருந்தவர்களின் மனங்களையெல்லாம் அவள் துள்ள வைத்த விந்தையை நினைப்பதா? எதை நினைப்பது? எதை நினைக்காமல் விடுவது? பரத நாட்டியம் பார்ப்பதற்காக ஓரிடத்தில் இரண்டு மணி நேரம் சேர்ந்து உட்கார்ந்தது என்பது சத்தியமூர்த்தியின் வாழ்க்கையிலும் இதுவே முதல் தடவை. இன்று இந்தக் கலை அவனை வசியம் செய்து கட்டுப்படுத்தி விட்டது. குமரப்பனுக்கு நாட்டியத்தைப் பற்றி நிறையத் தெரியும். வர்ணம், தில்லானா, ஜவானி, ஜதிஸ்வரம், சப்தம், அலாரிப்பு என்று அவன் ஏதாவது நாட்டியம் பார்க்கப் போய்விட்டு வந்த மறுநாள் வாய் ஓயாமல் அரற்றிக் கொண்டிருப்பான். அப்போதெல்லாம் அந்த அரற்றலைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர சத்தியமூர்த்தி அதற்கு தன் மனத்தில் எந்த விதமான முக்கியத்துவத்தையும் அளித்ததில்லை. இன்றோ 'வார்த்தைகளால் இவ்வளவு நேரத்தில் இப்படி பேசி முடித்து விடலாம்' என்று பேசி முடிக்க இயலாத அத்தனை அழகுகளும் இரகசியங்களும், வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அந்தக் கலையில் நிரம்பியிருப்பதை மோகினி அவனுக்குப் புரிய வைத்து விட்டாள். இரண்டு மணி நேரத்துக்கு மேல் அந்த நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்து முடித்து விட்டு எழுந்திருந்த போது மோகினியின் மேல் இனம் புரியாததொரு மதிப்பு உருவாகிய மனத்துடன் எழுந்திருந்தான் சத்தியமூர்த்தி. இவ்வளவு அருமையான கலைத்திறனும், தொழில் நுணுக்கமும் தெரிந்த பெண் தான் அன்று இரயிலிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றாள் என்பதையும், அப்படி முயன்றபோது 'என்னைப் போன்றவர்கள் வாழ்வதும் வாழ நினைப்பதும் அசட்டுக் காரியம். சாவுதான் எனக்குப் புகலிடம்' என்று தன்னைத்தானே வெறுத்துக் கொள்ளும் விரக்தியோடு கூறினாள் என்பதையும் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது. நாட்டியம் முடிந்து எழுந்த போது குமரப்பன் ஏதோ சொல்லத் தொடங்கினான்.

"பரதசாஸ்திரத்தை எழுதிய பரத முனிவர் மேலும், அபிநயதர்ப்பணத்தை எழுதிய நந்திகேசுவரர் மேலும் எனக்கு இப்போது சொல்ல முடியாத கோபம் வருகிறதடா சத்தியம்! பெண்கள் இயல்பாகவே அழகும் கவர்ச்சியும் மிகுந்தவர்கள். பரத நாட்டியம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து அதற்கு இலக்கணமும் வகுத்து வைத்தபின் பெண்களின் அழகை அவர்களே நிச்சயமாக நிரூபித்துக் கொள்ள வழி செய்து கொடுத்து விட்டார் பரத முனிவர். இந்தப் பரத முனிவர் இருக்கிறாரே, இவர் கண்டுபிடித்த கலை ஒரு பெண் தன்னிடம் நிரம்பியிருக்கும் அழகுகளை எவ்வளவு நாகரிகமாகப் புரிய வைக்கும் கருவியாயிருக்கிறது பார்த்தாயா?" என்று அவன் கூறிய சொற்களிலிருந்து மோகினியின் நாட்டியம் அவனையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பது சத்தியமூர்த்திக்குப் புரிந்தது. கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. மறுபடியும் அரங்கின் உட்புறத்திலிருந்து பக்கத்துப் படிகளின் வழியே அந்தச் சிறுவன் தன்னைத் தேடி வந்து கொண்டிருப்பதைச் சத்தியமூர்த்தி கவனித்தான்.

"இந்தப் பையன் யார்? நாட்டியம் நிகழ்ந்து கொண்டிருந்த போதும் இவன் உன்னைத் தேடிக் கொண்டு வந்தானே? இப்போதும் உன்னைத்தான் தேடி வருகிறான் போலிருக்கிறது" என்று குமரப்பன் கேட்ட போது சத்தியமூர்த்தி "எனக்குத் தெரிந்த பையன்! நான் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன். நான் திரும்பி வந்ததும் நாம் புறப்படலாம். அதுவரை இங்கேயே இரு!" என்று குமரப்பனிடம் கூறிவிட்டுத் தானே எதிர்கொண்டு புறப்பட்டு விட்டான். மேடையிலிருந்து பின் பக்கத்தில் கிரீன் ரூமிலிருந்தவாறே வெளியே புறப்பட்டுப் போய்விடுவதற்கு வசதியாக வேறோரு சாலையும் வாயிலும் இருந்தன. மேடையின் பின் பகுதிக்கும் அங்கிருந்தே மைதானத்தை விட்டு வெளியேறுவதற்கான வாயிலுக்கும் நடுவேயுள்ள பிரதேசத்தில் ஒரு பூங்கா இருந்தது. அந்தப் பூங்காவுக்குள் சத்தியமூர்த்தியை அழைத்துக் கொண்டு போனான் சிறுவன். கிரீன் ரூமில் மோகினியின் தாய் நாட்டிய உடைகளையும் அலங்கார நாட்டிய உடைகளையும் அலங்காரப் பொருள்களையும் சரிபார்த்து மடித்து அடுக்கிக் கொண்டிருந்ததைப் போகும் போது சத்தியமூர்த்தி கவனித்தான். கிரீன் ரூமுக்கும் மேடை அரங்கத்துக்கும் நடுவில் இருந்த சிறிய கூடத்தில் நட்டுவனார் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். பின்புறத்துப் படிகளில் இறங்கியவுடனே எதிரே ஆகாயம் முழுவதையும் நிறைத்துக் கொண்டாற் போல் முழு நிலா எழுந்து வந்திருப்பது தெரிந்தது. படிகளின் அருகே பூமியில் விளைந்த பச்சை விசிறியாக இருபுறமும் பக்கவாட்டில் இலைகளைச் சிலிர்த்துக் கொண்டு ஒரு விசிறி வாழை இருந்தது. அந்த விசிறி வாழையின் அருகே மோகினியும் அவனை எதிர்பார்த்துக் கொண்டு நின்றாள். மிக அருகே எங்கோ மாம்பூப் பூத்து அந்த வாசனையைக் காற்று அள்ளிக் கொணர்ந்து பரப்பிக் கொண்டிருந்தது. அந்த நிலா அதைத் தொங்கவிட்டுத் தாங்கிக் கவிந்து கொண்டிருப்பது போன்ற நீலவானம் - அதன் கீழே விசிறி வாழையருகே தனியாய் நின்று தன்னை வரவேற்றுப் புன்னகை பூக்கும் மோகினி, மாம்பூ மணக்கும் சித்திரை மாதத்து இளங்காற்று. எல்லாமாகச் சேர்ந்து அப்போது சத்தியமூர்த்தியைப் பரவசப்படுத்தியிருந்தன. அவன் மனம் மிக மிக உற்சாகம் உற்றிருந்தது.

"வாருங்கள்! உங்களை எதிர்பார்த்துத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று கைகூப்பினாள் மோகினி. அவளை எப்படியெப்படி யெல்லாமோ புகழ்ந்து தன் பாராட்டுதல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி, "உங்களுக்கு என் பாராட்டுதல்கள். மிகவும் நன்றாக ஆடினீர்கள். 'கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருளு கண்டாய்' என்று இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பக் கதறுகிறார் போல் பாடிக் கொண்டே நீங்கள் ஆடியபோது எனக்குக் கண் கலங்கிவிட்டது" என்று சுருக்கமாக ஏதோ சொன்னான். அவனுடைய பாராட்டுதலைக் கேட்டு அவள் முறுவல் செய்தாள். நாட்டியக் கோலத்தில் இருந்த ஆடையலங்காரங்களைக் களைந்து விட்டு ரோஸ் பவுடர் பற்றியிருந்த நிறம் போயும் போகாமலும் சோப்பினால் அவசரம் அவசரமாக முகம் கழுவிய பின்பு அதிகக் கவர்ச்சியில்லாத ஏதோ ஒரு துணிப் புடவையைக் கட்டிக் கொண்டு வந்து நின்ற தோற்றத்திலும் அவள் அழகாகத்தான் இருந்தாள்.

"நான் நன்றாக ஆடியதற்குக் காரணமே நீங்கள் என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்ற பலத்தினால் தான். எதிரே அவையில் உட்கார்ந்து கொண்டிருந்த அத்தனை ஆயிரம் பேருக்காகவும் நான் ஆடவில்லை. உங்களுக்காகத்தான் ஆடினேன். நீங்கள் என்னைக் காப்பாற்றிய தெய்வம். இன்றைக்கு நீங்கள் வராமல் என்னை ஏமாற்றி விடுவீர்களோ என்ற பயம் மேடைக்கு வந்து நிற்கிற வரை எனக்கு இருந்தது. நீங்கள் வந்திருக்கிறீர்களா என்று அறிவதற்காக அந்தப் பையனை இரண்டு மூன்று முறை கீழே போய்ப் பார்த்து வரச் சொல்லித் துரத்தினேன். நீங்கள் வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று அறிந்த பின்பு தான் எனக்கு நம்பிக்கையே வந்தது."

"நான் ஒன்றும் அவ்வளவு பெரிய கலா இரசிகன் இல்லை. நான் பார்க்கிற முதல் நாட்டியமே இதுதான்."

"நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். நான் உங்களை நினைத்து உங்களைப் பார்த்துப் பெற்ற உற்சாகத்தினால் தான் அப்படி ஆட முடிந்தது. நீங்கள் நன்றாயிருக்கிறது என்று சொல்வதை விட வேறு எந்த பாக்கியத்தை நான் எதிர்பார்க்க முடியும்?" இப்படிப் பேசும்போதே அவள் கண்களில் நீர் மல்கிற்று.

சத்தியமூர்த்தி பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் பார்வையால் பேசும் அந்தக் கண்களையும் பதங்களால் பேசும் அந்த மயக்கும் இதழ்களையும் பார்த்துக் கொண்டே நின்றான். கிரீன் ரூமிலிருந்த அவளுடைய தாய் அவளைக் கூப்பிடும் குரல் கேட்டது. கண்ணாயிரம் வேறு நட்டுவனாரோடு பேசிக் கொண்டே பின்பக்கமாகப் படியிறங்கிப் பூங்காவுக்குள் வந்து கொண்டிருந்தார். தான் அங்கிருந்து புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதென்பது அவனுக்குப் புரிந்தது.

"நான் வருகிறேன். வெளியே நண்பன் ஒருவன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். நீங்களும் ஆடிக் களைத்திருக்கிறீர்கள். வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் போல் இருக்கிறது. உங்கள் அம்மாவின் குரல் வேறு உள்ளேயிருந்து மிரட்டுகிறது. கண்ணாயிரம் வேறு வந்து கொண்டிருக்கிறார். நாம் மறுபடி சந்திக்கலாம்..." என்று அவளிடம் விடைபெற்றுக் கொண்டு அவன் கிளம்ப முயன்ற போது பதில் சொல்ல நா எழாமல் கலங்கிய கண்களுடனேயே கைகூப்பி விடை கொடுத்தாள் அவள். அந்தச் சந்திப்பை அப்படி அரை குறையாக முடித்துக் கொண்டு விடை பெறுவது அவனுக்கும் என்னவோ போல் இருந்தது. ஆயினும் குமரப்பன் வெளியே காத்திருப்பான் என்ற ஞாபகம், கண்ணாயிரத்தின் திடீர் வரவும் அவனை அங்கிருந்து புறப்படச் செய்தன. படியேறும் போது கண்ணாயிரமும் அவனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள நேர்ந்தது.

"என்னப்பா இது? உனக்கு ஒரு வேலை பார்த்துத் தரச் சொல்லி உன் தந்தை என்னை நச்சரித்துக் கொண்டிருக்கிறார். நீயானால் நாட்டியக் கச்சேரி மேடையைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாய்?" என்று கண்ணாயிரம் தம்முடைய கீழ்த்தரமான வம்பை ஆரம்பித்தார்.

"எனக்காக நீங்கள் வேலை எதுவும் தேடித் தர வேண்டாம் சார்! நாம் அப்புறம் பார்க்கலாம்..." என்று கூறிவிட்டு அவரைச் சந்திக்க நேர்ந்ததை வெறுப்பவன் போல் விறுவிறுவென்று மேலே நடந்து வெளியே வந்தான் சத்தியமூர்த்தி. வருகிற வழியில் கிரீன் ரூமுக்கு அருகே நின்று கொண்டிருந்த மோகினியின் தாய் வேறு அவனைப் பார்த்து முகத்தைச் சுளித்தாள்.

"என்னப்பா இது? ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்று போனவன் அரை மணி நேரத்துக்கு மேல் ஆக்கி விட்டாய்?" என்று கேட்டுவிட்டுச் சிறிது மௌனத்திற்குப் பின் தணிந்த குரலில், "மோகினியைத் தெரியுமா உனக்கு?" என்று மேலும் சத்தியமூர்த்தியை வினவினான் குமரப்பன்.

"தெரியும்! அவளை நான் சந்தித்தது ஒரு விநோதமான சம்பவம்!"

"எனக்குத் தெரியக்கூடாத சம்பவமானால் சொல்ல வேண்டாம். நான் உன்னைக் கேட்டதற்காக மன்னித்து விடு சத்யம்...?"

"அப்படி ஒன்றும் இல்லை. நானே சொல்கிறேன்." நேரம் அதிகமாகி விட்டதனால் அவர்கள் இருவரும் பொருட்காட்சி மைதானத்திலிருந்த ஓர் உணவு விடுதியில் நுழைந்து இரவுச் சாப்பாட்டை முடித்தார்கள். மைதானத்திலிருந்து கிழக்கே திரும்பிப் பார்த்தால் சாலையின் கிழக்குக் கோடியில் சித்திரை மாதத்து முழு நிலாவின் கீழ் காந்தி மண்டபம் இருபுறமும் அணிவகுத்து நிற்கும் நெட்டுலிங்க மரங்களிடையே தாஜ்மகாலைப் போல் அற்புதமாகத் தோன்றிக் கோண்டிருந்தது. தெற்கே மரக் கூட்டங்களுக்குள்ளே அமெரிக்கன் கல்லூரிக் கட்டிடங்கள் உறங்கின. சாலைகளில் எல்லாம் சித்திரைத் திருவிழாக் கூட்டம் நிறைந்திருந்தது. திரும்பிப் போகும் போது கல் பாலத்தில் போகாமல் இன்னும் மேற்கே தள்ளிப் போய் வையையில் குறுக்கே இறங்கி நடந்தார்கள் குமரப்பனும் சத்தியமூர்த்தியும். சித்திரைத் திருவிழாவின் பரபரப்பும், கலகலப்பும் பாலத்துக்குக் கிழக்கேதான் அதிகமாயிருந்தன. பாலத்தின் மேற்குப் பக்கம் வையை மணற் பரப்பு அமைதியாயிருந்தது. ஓர் ஓடுகாலின் கரையில் குவிந்திருந்த மணல் மேட்டில் நண்பர்கள் இருவரும் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசத் தொடங்கினர். ஓடுகால் நீர்ப்பரப்பில் நிலவு பிரதிபலித்து மிதந்து கொண்டிருந்தது. மல்லிகைப் பந்தல் கல்லூரியின் இண்டர்வ்யூக்குப் போய்விட்டுத் திரும்பும் போது இரயிலில் மோகினியைச் சந்திக்க நேர்ந்ததையும் அதன் பின் நிகழ்ந்தவற்றையும் நண்பனிடம் மனம்விட்டுக் கூறினான் சத்தியமூர்த்தி. எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குமரப்பன் பெருமூச்சு விட்டான். பிறகு கூறலானான்:

"இந்த உலகத்தில் கருவேலத்து முள்ளைப் போல் ரோஜா முள் பெரியதாகத் தெரிவதில்லை சத்யம்! அதனால் ரோஜாவில் முள்ளே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? ரோஜா முள்ளுக்குத்தான் வளைவும் கூர்மையும் அதிகம். ரோஜாப்பூவின் அழகு பார்க்கிறவர்களுக்கு அதனடியில் இருக்கும் முள்ளை மறந்து போகச் செய்து விடுகிறது. மோகினியைப் போன்ற கலைஞர்களின் கலைத் திறமையும் அழகும் பூத்துப் பொலியும் போது அவர்களுடைய அடிமனத்தில் உள்ள வேதனைகளும் ஏமாற்றங்களும் உலகத்துக்குத் தெரியாமல் போய் விடுகின்றன. வாழ்வை வெறுத்துத் தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்து விடுகிற அளவுக்கு அந்தப் பெண் அந்தரங்கமாகத் துயரப்படுகிறாள் என்பதை அறியும் போது எனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஆனாலும், துயரங்களை வெல்ல அவளால் முடியுமென்று தான் எனக்குத் தோன்றுகிறது."

"நீயும் நானும் ஆச்சரியப்பட்டு என்ன ஆகப் போகிறது? அநுதாபப்பட்டுத்தான் என்ன ஆகப் போகிறது? தனி மனிதனுடைய அநுதாபங்கள் வெறும் எண்ணமாக எழுந்து நிற்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் குமரப்பன்? ஒரு பிரச்சினைக்கு முடிவு ஏற்பட வேண்டுமானால் சமூகத்தின் சக்தி வாய்ந்ததும் ஒன்றுபட்டதுமாகிய முழு அநுதாபமும் அந்தப் பிரச்சினையின் பக்கமாகத் திரும்ப வேண்டும். ஆனால் நீயும் நானும் இங்கே நம்மைச் சுற்றிப் பார்க்கிற சமூகமே பரிசுத்தமில்லாததாக இருக்கிறதே? நூறு சாதிகள், நூறாயிரம் வேற்றுமைகள், போதா குறைக்கு நவீன சாதிகளாக வளரும் அரசியல் கட்சிகள், இவ்வளவும் நிறைந்த சமூகத்தில் அல்லவா நீயும் நானும் வாழ்கிறோம்? பேசுவதைத் தவிர வேறு என்ன செய்கிறோம் நாம்?"

"ஒன்றும் செய்யாமலே இருக்கலாம்? ஆனால், அதற்கு வேறு எத்தனையோ காரணங்கள் உண்டு சத்யம்! அறியாமையும், வறுமையும் தான் இன்று இந்த நாட்டில் மனிதர்களைப் பிரிக்கவும், தரப்படுத்தவும் காரணமாக இருக்கின்றன. பழைய காலத்தில் பெண்களின் பரிசுத்தம் சோதிக்கப்படுவதற்கு அக்கினிப் பிரவேசம் இருந்ததைப் போல் வறுமை வேதனைகளாலும் அறியாமை இருளினாலும் துன்பப்படுகிற நாடு தன் பரிசுத்தத்தை நிரூபித்துக் கொள்ள உழைப்பையும் நம்பிக்கையையும் வேள்வித் தீயாய்ப் பெருக்கி அவற்றின் ஒளி வெள்ளத்தே மூழ்கி எழ வேண்டும்! நேர்மையான இலட்சியத்தை முன் நிறுத்திச் செயல்படுகிற ஒவ்வோர் இயக்கமும் சமூகத்துக்கு ஓர் அக்கினிப் பிரவேசம் தான்."

"ஒப்புக் கொள்கிறேன், குமரப்பன்! ஆனால் மோகினியைப் போன்றவர்களின் துன்பத்துக்காக யாரும் இயக்கம் நடத்த மாட்டார்கள். அவர்கள் இப்படியே இந்தக் கவலைகளோடு வெந்து அழிய வேண்டியது தான்; சமூகத்தில் எல்லாருமே நாசூக்காகப் புறக்கணித்து விடுகிற பகுதி அது."

"நிச்சயமாக இல்லை! நீ சொல்லிய விவரங்களிலிருந்து அவளைப் போல் பிடிவாதக்காரப் பெண் தன்னைக் காத்துக் கொள்வதில் தனக்குத்தானே ஓர் இயக்கமாக இருப்பாள். 'சாது முரண்பட்டால் காடு கொள்ளாது' என்று ஒரு பழமொழி உண்டு. மோகினி எவ்வளவுக்கு எவ்வளவு மென்மையாகவும் அழகாகவும் இருக்கிறாளோ, அவ்வளவுக்கவ்வளவு உறுதியாகவும் இருப்பாள். கண்ணாயிரங்களும், மஞ்சள்பட்டி ஜமீன்தார்களும் அவளுக்கு முன்னால் முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு தான் போகப் போகிறார்கள். நீ கவலைப் படுவதை விட்டுவிடு! நிம்மதியாக மல்லிகைப் பந்தல் கல்லூரியில் போய் வேலையை ஒப்புக் கொள். கல்லூரி நேரம் போக எஞ்சிய நேரத்தில் நிறையப்படி. நிறையச் சிந்தனை செய். டாக்டர் ஆப் லிட்ரேசர், மாஸ்டர் ஆப் லிட்ரேசர், என்று எத்தனை பெரிய பெரிய பட்டங்கள் எல்லாம் உண்டோ அத்தனையையும் வாங்கித் தீர்ப்பதற்கு இப்போதிருந்தே திட்டம் போடு. மல்லிகைப் பந்தலைப் போல் அழகிய ஊரிலிருந்து கொண்டே நாட்களை வீணாகக் கழித்து விடாதே. வாழ்க்கைத்தரம் உயர்ந்த ஊர் அது. விலைவாசிகள் அதிகமாயிருக்கும். சிக்கனமாயிருக்கப் பழகிக் கொள்!... இன்னொரு செய்தி. வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை நானும் கல்லூரி நாளில் பழகிய நெருக்கமான நண்பர்களும் ஓட்டலில் உனக்கொரு விருந்து வைத்திருக்கிறோம். அதையும் இப்போதே நினைவு வைத்துக் கொள்..." என்று சொல்லிக் கொண்டே புறப்படுவதற்காக மணலைத் தட்டி விட்டு எழுந்தான் குமரப்பன்.

"எனக்கு வேலை கிடைத்தால் நீங்கள் எல்லோரும் விருந்து விடை கொடுக்க வேண்டும் என்பது என்ன முறையோ?"

"முறைதானடா சத்யம்! நம் நண்பர்களில் இன்னும் வேலை கிடைக்காதவர்கள் பலர் இருக்கிறார்களே...? அவர்களுக்கெல்லாம் உனக்கு வேலை கிடைத்துவிட்டது என்பதை ஞாபகப்படுத்துவதற்கும் உனக்கு விடை கொடுப்பதற்கும் சேர்த்துதான் இந்த விருந்து."

"நான் மதுரையை விட்டுப் புறப்பட்டுப் போகிறேன் என்பதை நம் நண்பர்களே நம்ப மாட்டார்கள் குமரப்பன்! என்னைப் போல் இந்த ஊரின் மேல் மோகம் கொண்டவன் இருக்க முடியாது!"

"இருந்தும் இப்போது நீ மல்லிகைப் பந்தலின் மேல் கொண்டிருக்கிற மோகம் அதிகமாகி விட்டது... இல்லையா?"

"மோகம் என்று சொல்லாதே. அது மதுரையின் மேல் மட்டும் தான் உண்டு. மல்லிகைப் பந்தலைப் போன்ற மலை நாட்டு நகரத்தின் சரியான நிர்வாகத்தோடு நடைபெறுகிற ஒரு கல்லூரியில் வேலை பார்க்க நினைக்கிறேன் தான். அதை மோகம் என்று நீ சொன்னால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்."

"சரி சரி! எப்படிச் சொன்னால் ஒப்புக் கொள்வாயோ அப்படியே வைத்துக் கொள். இப்போது புறப்படு. மணி பதினொன்றாகப் போகிறது..." - குமரப்பன் துரிதப்படுத்தவே மணல் மேட்டிலிருந்த சத்தியமூர்த்தியும் எழுந்திருந்து புறப்பட்டான். போகும் போதும் பேசிக் கொண்டே போனார்கள் நண்பர்கள்.

"மல்லிகைப் பந்தல் முதல்வரைப் பற்றி நினைத்தால் தான் தயக்கமாக இருக்கிறதடா குமரப்பன். பார்த்த சில மணி நேரத்திலேயே என் மேல் பொறாமை ஏற்பட்டு விட்டது அந்த மனிதருக்கு. நான் மாணவர்களைக் கவர்ந்து என் வசப்படுத்திக் கொண்டு விடுவேனோ என்று அவருக்குப் பயமாயிருக்கிறது. பிறருடைய தகுதிக் குறைவைக் குறித்து வருந்துகிறவர்களோடு சேர்ந்து நாமும் வருந்தலாம். பிறருடைய தகுதியைக் கண்டே வருந்தினால் அவர்களைப் பார்த்து நாம் என்ன செய்ய முடியும்?"

"என்ன செய்ய முடியுமாவது; நன்றாக வாய் விட்டுச் சிரிக்க முடியும்! அப்படிப்பட்டவர்களைப் பார்த்து நீ ஏன் கவலைப்படுகிறாய் சத்யம்? பிறருடைய பொறாமையை இப்படி மதிப்பிடத் தெரிந்து கொள்ளேன். உன்னிடம் ஏதோ ஒரு சாமர்த்தியம் - அவர்கள் பொறாமைப்படத் தக்கச் சாமர்த்தியம் இருப்பதால் தானே பொறாமைப்படுகிறார்கள்? உன் சாமர்த்தியத்தைப் பாராட்டுகிறவர்கள் உன்னை ஒப்புக் கொண்டு விடுகிறார்கள். பாராட்ட முடியாதவர்கள் பொறாமைப் படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? நான் சொல்வதை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள். 'பிறர் வழி உண்டாக்கிய பின் நடப்பதா அல்லது நாம் நடப்பதாலேயே ஒரு புது வழியை உண்டாக்குவதா?' என்பது தான் பிரச்சினை. உன்னையும் என்னையும் போலத் துணிந்த கட்டைகள் பிறர் உண்டாக்கிய வழியில் நடப்பதை விட நாமே நடந்து வழி உண்டாக்குவதைத்தான் விரும்புவோம். அப்படி வழி உண்டாக்க விரும்புகிறவர்களுக்கு மற்றவர்கள் தொல்லையளிப்பது இயல்புதான். மோகினியின் நிலைமையும் அதுதான்! அவளைப் போன்றவர்கள் எந்த வழியில் போக வேண்டும் என்று அவளுடைய தாயும், கண்ணாயிரம், மஞ்சள் பட்டியோ - மரகதப் பட்டியோ - அந்த ஜமீன்தாரும் எதிர்பார்க்கிறார்களோ அந்த வழியை வெறுத்து அவள் புதுவழியில் வர ஆசைப்படுவதால்தான் துன்பப்படுகிறாள். ஆனால் இத்தகைய துன்பங்கள் தான் மனிதனைப் புடம் போட்டு எடுக்கும் புனித அநுபவங்கள். இவற்றைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நேருக்கு நேர் நின்று சமாளிக்கத் தெரிய வேண்டும் நமக்கு."

"எதிர்கொள்வதற்குப் பயந்தோ, தயங்கியோ, இவற்றை உன்னிடம் சொல்லவில்லை, குமரப்பன். நீ சொல்வாயே, மனிதர்களில் சிலரும் 'எல்' போர்டாவது 'ஆன் டெஸ்ட்' போர்டாவது மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதாக - அந்த 'போர்டு' மாட்டிக் கொள்ள வேண்டிய மனிதர் ஒருவர் நான் பணிபுரியப் போகிற மல்லிகைப் பந்தல் கல்லூரியில் இருக்கிறார் என்பதற்காகச் சொல்ல வந்தேன்."

"அப்படி மனிதர்கள் இல்லாத இடம் உலகத்தில் எங்கே தான் இருக்கிறது? விட்டுத்தள்ளு... போய் நன்றாகத் தூங்கு" என்று சத்தியமூர்த்தியின் வீட்டு வாசலில் அவனுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டுப் புறப்பட்டான் குமரப்பன்.

'இவ்வளவு அருமையான நண்பனைப் பிரிந்து வெளியூர் செல்லப் போகிறோமே' என்று எண்ணிய போது சத்தியமூர்த்தியின் இதயம் அழுதது. கல்லூரி நாட்களின் இனிய அனுபவங்களையும், 'இலட்சியம்' என்ற பெயரில் நண்பர்களாகச் சேர்ந்து கையெழுத்துப் பத்திரிகை நடத்தியதையும், அந்தக் கையெழுத்துப் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் குமரப்பன் வழக்கமாக வரையும் கேலிச் சித்திரங்களையும் நினைத்தான் சத்தியமூர்த்தி. அந்தக் கையெழுத்துப் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் 'ஏமாற்றம்' என்ற தலைப்பில் வழக்கமாகக் கேலிச் சித்திரங்களை வரைவான் குமரப்பன். ஏமாற்றம் - 1, ஏமாற்றம் - 2, என்று இப்படி வரிசையாக அதே தலைப்பில் அந்தக் கேலிச்சித்திரங்கள் வரும். ஒரு நாள் சத்தியமூர்த்தியும் மற்ற நண்பர்களும், "இந்தா குமரப்பன்! ஏமாற்றம் என்ற தலைப்பில் தான் படம் போடுவாய் என்றால் இனிமேல் நீ நம் கையெழுத்துப் பத்திரிகையில் ஒரு படமும் போட வேண்டாம் அப்பா..." என்று அவனைக் கண்டித்துப் பார்த்தார்கள்.

"என்னடா இது? இதற்கா இப்படிக் கோபித்துக் கொள்கிறீர்கள்? முதல் பக்கத்தில் இலட்சியம் என்று பத்திரிகையின் பெயரை எழுதியிருக்கிறீர்கள்? நான் கடைசிப் பக்கத்தில் ஏமாற்றம் என்று அது முடிகிற இடத்தை விளக்குகிறேன்..." என்று குத்தலாகப் பதில் சொல்லிக் கூடியிருந்தவர்களிடையே சிரிப்பலைகளைக் கிளப்பினான் அவன். பிறவியிலேயே அவன் கேலிச் சித்திரக்காரன் தான். கண்ணாயிரத்தைப் பற்றி ஒரு நாள் அவன் கூறிய கருத்தை இப்போது சிந்தித்தான் சத்தியமூர்த்தி. நினைக்க நினைக்கச் சிரிப்பு மூட்டுவதாக இருந்தன குமரப்பனின் அந்த வாக்கியங்கள். மறுபடியும் அவற்றை நினைத்தான் சத்தியமூர்த்தி. "இந்தக் கண்ணாயிரம் இருக்கிறாரே, அவர் விலாங்கு மீனைப் போன்றவர். பிடித்தால் நழுவி விடுவார். நழுவிய பின்னும் பலர் அவரைப் பிடிக்க முயன்று பின்னால் ஓடித் துரத்திக் கொண்டிருப்பார்கள். பிடித்தால் நழுவி ஓடிவிடுவதும், நழுவி ஓடிய பின்பும் பலரைக் காக்க வைத்தும் தம்மைப் பிடித்தால் காரியம் ஆகும் என்று வீண் பிரமை கொள்ளச் செய்வதும் தான் அவருடைய சாமர்த்தியங்கள். விலாங்கு மீனையாவது வலையைப் போட்டுப் பிடித்துத் தொலைக்கலாம். கண்ணாயிரம் யாருக்கும் பிடி கொடுக்க மாட்டார். ஆனால் அவரிடம் பலர் பிடி கொடுத்தும், பிடிபட்டும் தவித்துக் கொண்டிருப்பார்கள். இதுதான் அந்த ஆளைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரம்" என்று அளவெடுத்துச் சொன்னாற் போல் பலமுறை சொல்லியிருக்கிறான். மனிதர்களைப் படித்து முடிப்பதில் அவனுக்கு நிகரான நிபுணன் அவன் தான். குமரப்பனும் தானும் சந்தித்து மனம் திறந்து பேசியிருக்கும் பல சந்தர்ப்பங்கள் எல்லாம் சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தன. அன்றிரவு அவன் கண்கள் சோர்ந்து உறங்கத் தொடங்கிய போது மூன்று மணிக்கு மேல் இருக்கும். மறுநாள் காலையில் சில வெளியூர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினான். மதுரையை விட்டு அவன் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களே இருந்தன. ஞாயிற்றுக்கிழமை மாலை நகரத்தின் பெரிய உணவு விடுதி ஒன்றில் குமரப்பனும் சத்தியமூர்த்தியின் நண்பர்களும் அவனுக்கு வழியனுப்பு உபசாரமாக ஒரு விருந்து கொடுத்தார்கள். நண்பர்கள் சிரிப்பும், கேலியுமாகப் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் மனம் அவர்களையெல்லாம் பிரிந்து புதிய ஊருக்குப் போகப் போவதை உணர்ந்து தவித்தது. தன்னுடைய இன்ப ஞாபகங்களும் துன்ப ஞாபகங்களும் வெற்றிகளும் தோல்விகளும் சகலமும் அத்தனை ஆண்டுகளாக அந்த நகரத்தோடு பிணைந்திருந்ததை நினைத்தான் அவன். இதைத் தான் தேசிய உணர்ச்சி என்று வேறு பெயரிட்டு அழைக்கிறார்களோ என்றும் அப்பொழுது அவன் எண்ணினான். நண்பர்கள் அதை ஒரு சிறு கூட்டமாகவே நடத்தி விட்டார்கள். "சத்தியமூர்த்தியைப் போன்ற ஓர் உயிர் நண்பனை வெளியூருக்கு அனுப்பும் போது பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காத துயரத்தினால் பேசாமலே உட்காருகிறேன் நான்" என்று நீர் குழம்பும் கண்களோடு பேச்சை முடித்துவிட்டான் ஒரு நெருங்கிய நண்பன். குமரப்பன் சிரிக்கச் சிரிக்க நிறையப் பேசினான். வேறு சில நண்பர்களும் பேசினார்கள். மதுரையைப் பிரிந்து வெளியூர் போகவிருப்பதை நிச்சயமாக ஞாபகப் படுத்துவதைப் போல் அந்த விருந்தும் நடந்து முடிந்து விட்டது. அது மகிழ்ச்சியா வேதனையா என்று புரிய முடியாத நிலை. உணவு விடுதியில் விருந்து முடிந்து வீடு திரும்பும் போது அவன் தவிக்கும் மனத்தோடுதான் திரும்பினான். தந்தை வீட்டுத் திண்ணையில் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார். "வா, சத்தியம்! இதில் நீ கையெழுத்துப் போட வேண்டியதில்லை என்று நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு. கண்ணாயிரம் கேட்கிற வழியாயில்லை. 'எதற்கும் பையனிடமும் ஒரு கையெழுத்து வாங்கி விடுங்கள்' என்கிறார். நீயும் போட்டு விடேன்" என்று பத்திரக் காகிதத்தை நீட்டினார் தந்தை. வீட்டை அடமானமாக வைத்துக் கண்ணாயிரத்தினிடம் கடன் வாங்குவதற்காக எழுதப்பட்ட பத்திரக் காகிதம் அது.

"கொஞ்சம் பொறுத்துக் கொண்டு செய்யலாமே அப்பா! கண்ணாயிரம் பின்னால் எப்படியெப்படி நடந்து கொள்வாரோ?" என்று அவன் கூறிய சொற்களைத் தந்தை கேட்கவில்லை. விரும்பவும் இல்லை.

"கையெழுத்துப் போடு சொல்கிறேன்" என்று வற்புறுத்தினார். அந்த நிலையில் தந்தையைப் பகைத்துக் கொள்ள முடியாத காரணத்தால் அவர் என்ன சொன்னாரோ அதைச் சொன்னபடியே செய்தான் சத்தியமூர்த்தி.

அத்தியாயம் - 14

நினைப்பையும் செயலையும், சொல்லையும் சத்தியமாக அளவிட்டுக் கணித்து - அந்தக் கணிப்பினால் மட்டுமே மனிதர்களின் சாதியைப் பிரிப்பதாக இருந்தால் தூய்மை உள்ளவர்கள், தூய்மை அற்றவர்கள் என்று இரண்டே இரண்டு சாதிகள் மட்டும் தான் பிரியும்.

மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட வேண்டிய நாள் நெருங்க நெருங்கப் பிறந்து வளர்ந்த ஊரையும் பழகிய மனிதர்களையும் பிரிந்து வெளியூருக்குச் செல்லப் போகிறோம் என்ற உணர்ச்சி சத்தியமூர்த்தியின் மனதில் உறைக்கத் தொடங்கியிருந்தது. தன் ஊர், தன் மனிதர்கள், தான் பழகிய சூழ்நிலை - இவற்றை நீங்கிப் புதிய ஊரில் புதிய மனிதர்களுக்கிடையே - புதிய சூழ்நிலையில் பழகப் போகிறோம் என்ற தவிப்பை எவ்வளவோ திடமாக மறந்துவிட முயன்றும் அவனால் முடியவில்லை. எண்ணி இன்னும் நான்கே நான்கு நாட்கள் தான் இருந்தன. நான்காவது நாள் இரவு இரயிலில் மதுரையிலிருந்து புறப்பட்டால் மறுநாள் காலையில் போய்ச் சேர்ந்து விடலாம். கண்காணாத தேசம் எதற்கும் போகப் போவதில்லை. அரைநாள் பயணத்தில் போய்ச் சேர்ந்து விடுகிறாற் போல் பக்கத்தில் இருக்கும் ஊர் தான்.

ஆனால், மனம் என்னவோ கண்காணாத தேசத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பது போலத்தான் பரிதவித்தது. எந்த ஊருக்கு இவன் புறப்பட்டுக் கொண்டிருந்தானோ அந்த ஊரை அவனுக்குப் பிடித்திருந்தது. அந்த ஊரின் இயற்கையழகை அவன் விரும்பினான் என்பதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், மனத்தின் பரிதவிப்பை அவனால் சிறிதும் தவிர்க்க முடியவில்லை. போகிற இடத்தைப் பற்றிய மகிழ்ச்சியும் பிரிகிற இடத்தைப் பற்றிய கனமான துயரமுமாக அவன் மனம் குழம்பியிருந்தது. ஒரு வேலையும் செய்வதற்கு ஓடவில்லை. அதே சமயத்தில் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளமாக இருப்பது போல் மலைப்பாகவும் இருந்தது. மூன்று அலமாரிகள் நிறைய ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் தேவையான புத்தகங்களை மட்டும் தனியே பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். புத்தகங்களை மட்டும் வைப்பதற்கே தனியாக ஒரு பெட்டி தேவைப்படும். கொஞ்சம் புதிய துணிமணிகள் வாங்கித் தைக்கக் கொடுக்க வேண்டும். மீதமிருக்கிற நாட்களில் பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்து கொள்ளவே சரியாக இருக்கும் போல் இருந்தது. துடிதுடிப்பும், சுறுசுறுப்பும் நிறைந்த இளைஞர்கள் பலரோடு அவர்களுடைய அன்புக்குரிய இளம் விரிவுரையாளனாக - இலட்சிய ஆசிரியனாகப் பழகப் போகிறோம் என்ற நம்பிக்கை ஒன்று மட்டும் தொலை தூரத்து மகிழ்ச்சியாய் ஞாபகத்தில் தோன்றிக் கொண்டிருந்தது. அருகில் வர மறுக்கும் மகிழ்ச்சியும், தொலைவில் விலகிப் போக மறுக்கும் துயரமுமாக உணர்வில் எல்லை கட்டிச் சொல்ல வகையில்லாததோர் மன நிலையோடு இருந்தான் அவன். ஊசியில் உள்ள சிறிய துளையில் நூல் நுழையாமல் தவறிக் கொண்டே இருப்பது போல் மனத்தின் பிடியில் சிக்க வேண்டிய நிம்மதி ஒன்று - சிக்காமலே விலகி விலகிப் போய்க் கொண்டிருப்பதை எண்ணித் தவித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. ஊருக்குப் புறப்படும் நாள் நெருங்க நெருங்க இந்தத் தவிப்பு அவன் மனத்தில் அதிகமாகியது.

அன்று பகலில் வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. வெயில் தணிந்த பின் மாலையில் குமரப்பனை அவனுடைய அறைக்குச் சென்று அழைத்துக் கொண்டு கடைக்குப் போய்ப் பயணத்துக்கான சில பொருள்களை வாங்க எண்ணியிருந்தான் சத்தியமூர்த்தி. காலையில் தந்தை அவனுடைய செலவுக்காகவும், துணிமணிகள் வாங்கிக் கொள்வதற்காகவும் இருநூறு ரூபாய் பணம் கொடுத்திருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரியில் அவன் முதல் மாதச் சம்பளம் வாங்குகிற வரை எல்லாம் இந்தத் தொகையில் இருந்து தான் செலவழித்துக் கொள்ள வேண்டும். மலைப் பிரதேசமாக இருப்பதால் இரவில் குளிர் வாட்டிவிடும். கம்பளிப் போர்வை ஒன்றும், ஸ்வெட்டரும் வாங்கிக் கொள்ள வேண்டும். மல்லிகைப் பந்தலுக்குப் போய்ச் சேர்ந்த பின் வசிப்பதற்கு ஒரு சிறிய அறை பார்த்துக் கொண்டு அதற்கும் வாடகை முன் பணமாகக் கொடுக்க வேண்டியிருக்கும்.

"தனி அறையாகப் பார்த்துக் கொண்டால் வாடகை அதிகமாகும். உன்னைப் போல் அந்த ஊரில் வேலை பார்க்கும் வேறு ஒருவரோ, இருவரோ வசிக்கும் அறையில் மற்றோர் ஆளாக நீயும் சேர்ந்து கொண்டு வாடகையைப் பங்கிட்டுக் கொள்" என்று அப்பா யோசனை சொல்லியிருந்தார்.

"சனி, புதன் எண்ணெய்க் குளி தவறாதே! மலைக்காட்டு ஊராயிருப்பதனால் எப்போது குளித்தாலும் வெந்நீரில் குளி. இரவில் ஒரு மணி இரண்டு மணி என்று கால வரம்பில்லாமல் தூக்கம் விழித்துப் புத்தகம் படிக்காதே. நேரத்தோடு படுத்துக் கொண்டு விடு. உடம்புக்கு வந்தால் செய்வதற்கு மனிதர்கள் யாரும் அங்கு கிடையாது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்" என்பதாக அம்மா திரும்பத் திரும்ப அவனுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தாள். கண்ணாயிரத்தினிடம் கடன் வாங்கிய தொகையை வைத்து மாடியை இடித்துக் கட்டுவதற்காகக் கொத்தனார்களையும் காண்ட்ராக்டர்களையும் தேடி அலைந்து கொண்டிருந்தார் அப்பா. பகல் நேரத்திலேயே புத்தக அலமாரிகளிலிருந்து தன்னோடு ஊருக்குக் கொண்டு போவதற்குத் தேவையான புத்தகங்களைப் பிரித்து எடுத்துக் கொண்டு விட நினைத்த சத்தியமூர்த்தி இப்போது அந்த வேலையில் ஈடுபடலானான். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகள், திருக்குறள் பரிமேலழகர் உரை, தொல்காப்பியப் பகுதிகள், சங்க இலக்கியங்கள், கம்பராமாயணன், அடிஸன், கோல்ட்ஸ்மித், பிராட்லி முதலியவர்களின் நூல்கள் ஆகியவற்றைத் தனியே பிரித்து அடுக்கினான். அந்தப் பெரிய டிரங்குப் பெட்டியின் முக்கால் பகுதி இடத்தைப் புத்தகங்களே நிரப்பிக் கொண்டு விட்டன. தேடி கண்டுபிடித்து அதில் வைப்பதற்கு இன்னும் புத்தகங்கள் இருந்தன.

"நீ பெட்டி நிறையப் புத்தகங்களை அடுக்குவதைப் பார்த்தால் படிப்புச் சொல்லிக் கொடுக்கப் போகிறாயா? அல்லது படிக்கப் போகிறாயா என்று சந்தேகமாயிருக்கிறது அண்ணா!" என்றாள் தங்கை ஆண்டாள்.

படிக்கிறவனைக் காட்டிலும் படிப்பு சொல்லிக் கொடுக்கிறவன் தான் அதிகமாகப் படிக்கவும் சிந்திக்கவும் வேண்டியிருக்கும் என்பதைத் தங்கை புரிந்து கொள்ளாமலிருப்பதை எண்ணித் தனக்குத்தானே சிரித்துக் கோண்டான் அவன். பெட்டியில் புத்தகங்களுக்குக் கீழே அடி மூலையில் பாரதி தனக்கு அந்தரங்கமாக எழுதியிருந்த கடிதங்கள் இரண்டையும் போட்டு வைத்தான். அபர்க் ராம்பி, வின்சென்டர், செயிண்ட்ஸ்பரி ஆகிய தலைசிறந்த ஆசிரியர்களின் இலக்கியத் திறனாய்வு நூல்கள் சிலவற்றை ஒரு நண்பன் இரவல் வாங்கிக் கொண்டு போயிருந்தான். ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு அந்த நண்பனைத் தேடிப் புத்தகங்களைத் திரும்பப் பெற வேண்டும். ஒவ்வொருவராகப் பார்த்துச் சொல்லி விடைபெற்றுக் கொள்வதற்கு நேரம் இல்லை. 'இன்றிலிருந்து அங்கங்கே நண்பர்களைச் சந்திக்க நேரும் போது அவர்களிடம் சொல்லிக் கொண்டு விடவேண்டியதுதான்' என்று பயணத்துக்கு முன் செய்ய வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றாக அவனுக்கு நினைவு வந்தன. கொண்டு செல்ல வேண்டிய புத்தகங்களைப் பிரித்து வைத்து முடித்த போது மாலை ஐந்து மணிக்கு மேலாகிவிட்டது. முகம் கழுவி உடைமாற்றிக் கொண்டு அவன் வெளியே புறப்பட்டான். தெருத் திருப்பத்தில் மாடியில் ஒண்டுக்குடித்தனம் இருக்கிற நிருபர் பரமசிவம் எதிர்ப்பட்டு வேலை கிடைத்ததைப் பற்றி விசாரித்துத் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். குமரப்பனுடைய அறைக்குப் போவதற்காக வடக்கு மாசி வீதியிலிருந்து கிருஷ்ணன் கோயில் சந்தைக் கடந்து வந்து கொண்டிருந்த போது மோகினியின் வீடு உள்ள தெரு அங்கிருந்து மிகவும் பக்கத்தில் இருப்பது அவனுக்கு ஞாபகம் வந்தது. தான் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டுப் போவதைப் பற்றி மோகினியிடம் சொல்லிக் கொள்வதா வேண்டாமா என்று அவன் மனத்தில் ஒரு கேள்வி எழுந்தது. இந்தக் கேள்வியின் தொடர்பாக இதையடுத்து அவன் மனத்தில் மோகினியைப் பற்றி ஒரு வாதப் பிரதிவாதமும் எழுந்தது.

'ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு வீடு தேடிக் கொண்டு போய்ச் சொல்லிக் கொள்வதற்கும், விடைபெறுவதற்கும் மோகினி யார்? நான் என் வேலை நிமித்தமாக மல்லிகைப் பந்தலுக்குப் போவதைப் பற்றி அவளிடம் எதற்காகச் சொல்ல வேண்டும்! ஏதோ ஒரு விதத்தில் எங்கோ இரயில் பயணத்தின் போது சந்திக்க நேர்ந்தவர்களை நான் எதற்காக என் வாழ்க்கையில் இவ்வளவு அவசியம் நிறைந்தவர்களாகக் கருத வேண்டும். அவளுடைய போதாத காலம் அவள் இரயிலிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றாள். அதே இரயிலில் நானும் பயணம் செய்ய நேர்ந்ததனால் நல்ல சமயத்தில் அவளுடைய மனவேதனையை மாற்றி அவளைக் காப்பாற்ற முடிந்தது. அதற்காக அவள் என்னை மதிக்கிறாள், வணங்குகிறாள் என்பதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், நான் என்னுடைய ஞாபகத்தில் அவளுக்கு எவ்வளவு இடம் அளிக்க முடியும்? எதற்காக அளிக்க முடியும்?' என்று கடுமையாகக் கருதித் தடுத்தது ஓர் எண்ணம்.

'நிச்சயமாக அப்படி இல்லை? மோகினி சேற்றில் பூத்த செந்தாமரை. குப்பையில் விளைந்த குருக்கத்தி. காசு பணத்துக்கு ஆசைப்படும் அவளுடைய தாயின் அருகே அவள் கண்ணியமான வாழ்வுக்கு மட்டுமே ஆசைப்படும் பரிசுத்தமான இதயத்தோடு நிற்கிறாள். அவள் எந்த வீட்டில் எப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் வாழ்ந்திருந்தாலும், இன்று அவளுடைய எண்ணத்திலும், செயலிலும், சொல்லிலும் தூய்மை இருக்கிறது. நினைப்பையும், செயலையும், சொல்லையும் சத்தியமாக அளவிட்டுக் கணித்து - அந்தக் கணிப்பினால் மட்டுமே மனிதர்களின் சாதியைப் பிரிப்பதாக இருந்தால் - தூய்மை உள்ளவர்கள், தூய்மை அற்றவர்கள் என்று இரண்டு சாதிகள் தான் பிரியும். அப்படிக் கணிக்கிற கணிப்பில் மோகினியின் சாதி நிச்சயம் உயர்ந்ததாகத்தான் இருக்க முடியும். மனிதனுடைய முன்னிலையில் வேண்டுமானால் செல்வத்தையும், செல்வமின்மையையும் வைத்து வளமும், வறுமையும் தீர்மானிக்கப்படலாம். ஆனால் கடவுளுடைய சந்நிதியில் வறுமையும், வளமையும் வேறுவிதமாகத் தீர்மானிக்கப்படுகின்றன. மனம், மொழி, மெய்களால் மனிதர்கள் எவ்வளவுக்குச் சத்தியமாக வாழ்ந்தார்கள், அல்லது வாழவில்லை என்பதை வைத்துத்தான் கடவுளுடைய சந்நிதானத்தில் செல்வமும், ஏழைமையும் நிறுத்துத் தீர்மானிக்கப்படுகின்றன. பணத்தைச் சம்பாதித்துப் பெரிய மனிதனாக முயலும் கண்ணாயிரமும், பணத்தைத் தாராளமாகச் செலவழித்து அதன் மூலமாகப் பெரிய மனிதனாக முயல்கிற மஞ்சள்பட்டியாரும் கடவுளின் சந்நிதியில் நிச்சயம் ஏழைகளாகத்தான் நின்று கொண்டிருப்பார்கள். இவர்கள் ஏழைகளாக நிற்கிற அதே இடத்தில் மோகினியைப் போன்ற அபலைகள் செல்வச் செழிப்போடு நின்று கொண்டிருப்பார்கள்' என்று மோகினியை ஆதரித்துப் பலமாக எதிர்வாதம் செய்தது அவனது மற்றோர் எண்ணம். இந்தச் சமயத்தில் கோவில் பிரகாரத்தில் தன்னிடம் அவள் கூறியிருந்த அந்த அழகிய வாக்கியத்தை மீண்டும் நினைவு கூர்ந்தான் சத்தியமூர்த்தி.

"ஆதரவற்றதெல்லாம் ஏழைதான். அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை."

கருத்தாழமும் கருத்தழகும் உள்ள இந்த வாக்கியத்தை நினைவு கூர்ந்த போது இதைச் சொல்லிவிட்டு அவள் சிரித்த சிரிப்பும் உடனிகழ்ச்சியாக அவன் நினைவில் தோன்றியது. 'தின்பதற்கு மட்டுமல்லாமல் தின்னப்படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற பற்கள்' என்ற கவியின் வருணனைக்கு நிதரிசனம் போன்ற அவளுடைய முல்லையரும்புப் பற்களை அவனால் மறக்க முடியவில்லை. அவள் பேசுவதும் இதழ்களைத் திறந்து சொற்களை ஒலிப்பதும் அழகாயிருந்தது என்றால், சிரிப்பது இந்த அழகுக்கு வேறு இணையில்லை என்று நிச்சயமாக உறுதிப்படுத்துவதாய் இருந்தது. சித்திரைப் பொருட்காட்சியில் அவள் ஆடிய நடனமும் அந்த நடனத்துக்குத் தான் அவசியம் வரவேண்டும் என்று அவளே சொல்லியனுப்பியதும், 'மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வாழ்கில்லேன்' என்று உள்ளம் உருகப் பாடி ஆடியதும், ஆட்ட முடிவில் தன்னைச் சந்தித்துப் பேசியதும் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்து அவனைத் தயங்கி நிற்கச் செய்தன.

'நான் கல்லூரியில் விரிவுரையாளனாக வேலை ஏற்றுக் கொண்டு மதுரையை விட்டு வெளியூர் போகிறேன்' என்று சித்திரை பொருட்காட்சியில் நாட்டியம் முடிந்த பின்பு அவளைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போதே அவளிடம் சொல்லியிருக்கலாம். என்ன காரணத்தாலோ அன்று அவளிடம் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவே இல்லை.

'அங்கே அவளுடைய வீடு இருக்கும் அந்தச் சிறிய தெருவில் நுழைந்து வெளியேறினாலே தெரிந்த மனிதர்கள் யாராவது பார்த்து ஒரு மாதிரி சிரித்துக் கொண்டு போவார்களோ' என்ற கூச்சமும், தயக்கமும் ஒரு புறம் இருந்தாலும் இறுதியில் அவையும் தோற்றன. கடைசியில் இனம் புரியாத அந்தப் பாசம் வென்றது. அவனுடைய கால்கள் அவனை அறியாமலே அந்தத் தெருவுக்குள் அவனை இழுத்துக் கொண்டு போயின. அவளுடைய வீட்டைக் கண்டுபிடித்து அவளிடம் எண்ணி இரண்டே இரண்டு நிமிஷங்களில் நாலு வார்த்தை சொல்லிக் கொண்டு புறப்பட்டு விடுவதென்று தீர்மானித்திருந்தான் அவன். பாதித் தொலைவு நடந்ததும் வந்த வழியே திரும்பிச் சென்று விடலாமா என்று கூடத் தோன்றியது அவனுக்கு. ஆனால் கால்கள் அவனோடு ஒத்துழைக்க மறுப்பவை போல் மேலே நடந்து அந்தச் சந்துக்குள் போய்க் கொண்டிருந்தன. அவள் அடையாளம் சொல்லியிருந்த அந்த வீடும் வந்துவிட்டது. படியேறி உள்ளே போக நினைப்பதிலும் ஒரு சிறிது தயக்கம் ஏற்பட்டது. யாரோ கதவைத் திறந்தார்கள். உள்ளே போவதற்காகப் படியேறத் தொடங்கியிருந்த சத்தியமூர்த்தி வருகிறவர்களுக்கு வழிவிடுவதற்காகச் சற்றே விலகினான். வந்தது வேறு யாருமில்லை. அன்று தேடி வந்த அந்தச் சிறுவன் தான் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். வந்தவன் சத்தியமூர்த்தியைப் பார்த்தானோ, இல்லையோ, "வாங்க சார்" என்று மலர்ச்சியோடும், உற்சாகத் துள்ளலோடும் கூறிவிட்டு, வீட்டின் உள்ளே ஓடினான். வாசற்படியைக் கடந்து உள்ளே நுழைந்ததும் 'கம்'மென்று சாம்பிராணிப் புகையின் நறுமணம் கமழ்ந்து கோயிலுக்குள் நுழைவதைப் போன்ற சூழ்நிலையை உண்டாக்கிற்று. மேற்கொண்டு உள்ளே போவதற்குத் தயங்கியபடி நடையிலே நின்றான் அவன். வீடு அமைதியாக இருந்தது.

"வாருங்கள்! இப்போதாவது வர வழி தெரிந்ததா! இன்று இந்த வீடு பாக்கியம் செய்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்" என்று அழைப்போடு எதிரே வந்து சிரித்துக் கொண்டு நின்றவளைப் பார்த்து மலைத்துப் போனான் அவன். முதுகில் காடாய்ப் புரளும் கருங் கூந்தலை நடுவாக ரிப்பனில் முடிந்து ஒரு கொத்து மல்லிகைப் பூவை அந்த இடத்தில் சொருகியிருந்தால் மோகினி. அவசரமாகவும், கைபோன போக்கிலும் அள்ளிச் சொருகிக் கொள்ளப் பெற்றிருந்த அந்தப் பூவானது பார்ப்பதற்குக் கூந்தலிலேயே பூத்துத் தொங்கி - இடம் கொள்ளாமல் சாய்ந்து சரிந்த மாதிரி அழகாக இருந்தது. சந்திர பிம்பமாக மின்னும் முகத்தில் நெற்றியின் நடுவே தீபச்சுடரைப் போல் ஒரு கீற்றுக் குங்குமத்தை எடுத்துத் தீற்றிக் கொண்டு வந்திருந்தாள்.

"என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? இன்னும் சிறிது நேரத்தில் கோவிலுக்குப் புறப்பட வேண்டும் என்பதற்காகத் திரும்பவும் நீராடிவிட்டு வந்தேன். ஈரத் தலைக்குப் புகை போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு நாளும் இல்லாத திருநாளாக இந்தப் பையன் ஓடிவந்து நீங்கள் வந்திருப்பதாகச் சொன்னான். முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. பரக்கப் பரக்கத் தலையை ரிப்பனால் கட்டிப் பூவை அள்ளிச் சொருகிக் கொண்டு இங்கே வந்து பார்த்தால் நிஜமாகவே நீங்கள் தான் வந்திருக்கிறீர்கள். இந்த ஆச்சரியத்தை எப்படிக் கொண்டாடுவதென்றே தெரியவில்லை எனக்கு. உள்ளே வாருங்கள். உட்காருங்கள்" என்று ஆவலோடும் அன்போடும் அவனை உள்ளே அழைத்தாள் மோகினி. ஊருக்குப் புறப்பட்டுப் போவதைப் பற்றி இரண்டு வார்த்தை சொல்லிவிட்டுப் போகலாமென்று வந்திருந்த சத்தியமூர்த்தி அங்கே நீண்ட நேரம் உட்கார்ந்து பேசுவதற்குத் தயங்கினான்.

"ஒன்றுமில்லை! நான் அன்றைக்குச் சித்திரைப் பொருட்காட்சியிலே உங்களைச் சந்தித்தபோது சொல்ல மறந்துவிட்டேன். எனக்கு மல்லிகைப் பந்தல் கல்லூரியில் வேலை கிடைத்திருக்கிறது. நான் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் புறப்பட்டு விடுவேன். உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு போக வேண்டுமென்று தோன்றியது. வந்தேன்."

இதைக் கேட்டு ஒன்றும் பேசத் தோன்றாமல் சிறிது நேரம் அப்படியே திகைத்துப் போய் நின்றாள் அவள். அந்தக் கவர்ச்சி நிறைந்த முகம், கண்கள், இதழ்கள் எல்லாம் திடீரென்று இருந்தாற் போலிருந்து அப்படியே சித்திரமாக மாறிவிட்டாற் போல் அமைதியுற்றன. அந்தக் கண்களில் சிரிப்பும், குறுகுறுப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து அவைகளில் எதையோ இழந்துவிடப் போவதைப் போன்ற சோகம் தெரிந்தது. அந்த வேதனையைக் கண்டு சத்தியமூர்த்தியே மனம் பொறுக்காமல் மேலும் கூறிலானான்.

"மனம் தளராதீர்கள்! நான் ஊருக்குப் போவதை உங்களிடம் சொல்லிவிட்டுப் போக வந்தேனென்பதை விட உங்களுக்குத் தைரியம் சொல்லிவிட்டுப் போகவே இங்கு வந்ததாக நினைக்கிறேன். நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். அன்று எப்படிப்பட்ட பரிதாபகரமான சூழ்நிலையில் உங்களை நான் காப்பாற்றினேனோ அப்படிப்பட்ட சூழ்நிலை இனி ஒரு நாளும் உங்களுக்கு வரக்கூடாது. உங்களுடைய அழகும், நீங்கள் பயின்றிருக்கும் கலையின் அழகும் உலகத்துக்கு நெடுங்காலம் நல்லபடியாகப் பயன்பட வேண்டும். நான் செய்த உதவி மிகவும் சிறியது. அதற்காக நீங்கள் என்மேல் செலுத்துகிற மதிப்பும், மரியாதையும் அதிகமானவை. மனிதர்கள் ஒருவருக்கொருவர் இயற்கையாகச் செய்து கொள்ள முடியாத எந்த அபூர்வமான உதவிகளையும் உங்களுக்கு நான் செய்துவிடவில்லை. எனக்கு விடை கொடுத்து அனுப்புங்கள். மறுபடி எப்போது சந்திக்க நேர்கிறதோ அப்போது சந்திக்கலாம். நீங்கள் இப்படி அநாவசியமாகக் கண்கலங்கித் தவித்தால் நான் வருத்தத்தோடு விடைபெற்றுத் திரும்ப வேண்டியிருக்கும். நீங்கள் எனக்கு மகிழ்ச்சியோடு விடை கொடுக்க வேண்டும். முதல் முதலாக உங்கள் வீட்டைத் தேடி வந்திருக்கிறேன்..."

"அதனால் தான் இப்படி நடையிலேயே நின்று பேசிவிட்டுப் போகப் பார்க்கிறீர்கள் போல் இருக்கிறது."

"எனக்கு நேரமாகிறது. நான் அவசரமாகப் போக வேண்டும். நண்பன் ஒருவனைச் சந்தித்து அழைத்துக் கொண்டு அவனோடு கடைகளுக்குப் போகவேண்டும்" என்றான் சத்தியமூர்த்தி.

"உண்மைதான்! என்னைப் போல் ஒவ்வொரு நாளும் நரக வேதனைப்பட்டுக் கொண்டு தவித்தும் ஏங்கியும் வாழ்கிறவர்களுக்குச் சில சமயங்களில் மற்றவர்களுடைய அவசரம் புரியாமல் தான் போய் விடுகிறது. இந்தப் பையனைக் காப்பி, சிற்றுண்டி வாங்கி வர அனுப்பியிருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் அம்மா வெளியிலிருந்து வந்ததும் பையனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கோயிலுக்குப் போக வேண்டும். அம்மா வந்து விட்டாலோ நீங்களும் நானும் இப்படி நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாலே காளி சொரூபம் எடுத்து விடுவாள். அவள் யார் யாரிடம் எவ்வளவு நேரம் நின்று சிரித்துப் பேசச் சொல்கிறாளோ அவர்களிடம் மட்டும் தான் நான் பேச வேண்டும். உங்களோடு பேச வேண்டுமென்று எனக்கே ஆசையாக இருக்கிறது. நீங்களோ வாசலில் ஒரு காலும் உள்ளே ஒரு காலுமாகப் பறந்து கொண்டு நிற்கிறீர்கள்..."

இவ்வளவு சொல்லி வேண்டிக் கொண்ட பின்பும் அவள் மனத்தைப் புண்படுத்துவது அழகில்லை என்று கருதியவனாக உள் கூடத்தில் போய் உட்கார்ந்தான் சத்தியமூர்த்தி. கூடம் முழுவதும் சிமெண்டுத் தரையில் பளீரென்று தெரிகிறாற் போல் மாக்கோலம் போட்டிருந்தது. மோகினியின் பெரிய பெரிய புகைப்படங்கள் இரண்டு மூன்று அவள் பலவித நிலைகளில் நாட்டியமாடும் கோலத்தில் எடுக்கப்பெற்றுக் கூடத்துச் சுவரில் மாட்டப்பெற்றிருந்தன. கிழக்கு முகமாகப் பிரம்மாண்டமான சரஸ்வதி படமொன்று வைக்கப்பெற்றிருந்தது. அந்தப் படத்தின் இரு பக்கங்களிலும் வீணை, தம்பூரா, மிருதங்கம் என்று விதம் விதமான வாத்தியங்கள் ஏழெட்டு உறையிடப் பெற்றும் உறையிடப் பெறாமலும் வைக்கப்பட்டிருந்தன. சாம்பிராணிப் புகையின் நறுமணமும் பூக்களின் வாசனையுமாக அங்கே உட்காருவதே மெய் மறந்து பரவசப்படும் அனுபவமாக இருந்தது. கூடத்தில் தனக்கு எதிர்ப்பக்கம் ஒதுங்கினாற் போல் நின்று கொண்டிருந்த மோகினியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கேட்டான் சத்தியமூர்த்தி.

"இத்தனை வாத்தியங்களும் தூசி படிந்து மங்கிப் போய் கிடக்கின்றனவே? இவற்றை இங்கு யாரும் எடுத்து வாசிப்பவர்களே இல்லையா?"

"வாத்தியங்கள் மட்டும் இல்லை. இந்த வீட்டில் மனிதர்களும் இப்படித்தான் இருக்கிறோம். உங்களைப் போல் சத்தியமும் நேர்மையும் நிறைந்த சுந்தர இளைஞர் ஒருவர் மனம் வைத்தால் வாழ்நாள் முழுவதும் வாசிப்பதற்குரிய பரிசுத்தமான வாத்தியம் ஒன்று இந்த வீட்டில் உங்களுக்காகக் காத்துக் கிடக்கிறது."

"எந்த வாத்தியத்தைச் சொல்லுகிறீர்கள்?"

அவனுடைய இந்தக் கேள்விக்கு மறுமொழி கூற மோகினி தயங்கினாள். அவளுடைய முகம் வெட்கத்தால் சிவந்தது. அவளுடைய இதழ்களிலும், கண்களிலும் சத்தியமூர்த்தியே அதுவரை பார்த்திராத விதமானதொரு குறும்புக் குறுநகை விளையாடியது.

"நிஜமாகவே நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லையா?" என்று கடைக்கண்களால் அவனைச் சூறையாடி விடுவது போல் பார்த்துக் கொண்டே கேட்டாள் அவள். அவன் இமையாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மதிமுகமும் மலர்விழிகளும் அப்போது ஆயிரமாயிரம் நயங்கள் நிறைந்த காவியமாகி இலங்கின. மிக மென்மையான குரலில் வெட்கம் அதிகமா, அல்லது இனிமை அதிகமா என்று கண்டுபிடிக்க முடியாத நளினமான தொனியோடு அந்த வாக்கியத்தைச் சத்தியமூர்த்தியிடம் கூறினாள் அவள்.

"இந்த வீட்டில் நீங்கள் எடுத்து வாசிப்பதற்காகவே உங்கள் காலடியில் காத்துக் கொண்டிருக்கும் வாத்தியம் இதோ இருக்கிறது" என்று தன் நெஞ்சைத் தொட்டுக் காண்பித்துவிட்டு அவனைக் கைக்கூப்பினாள் அவள். அப்போது அவளுடைய கண்களில் தெரிந்த தாபமும், தாகமும் எத்தனை எத்தனையோ யுகங்களாக இந்தச் சந்திப்புக்குக் காத்திருப்பது போல், தன்னுடைய பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்ட போது எந்த எதிர்பாராத உணர்ச்சி சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டதோ, அதே உணர்ச்சி தான் இப்போதும் ஏற்பட்டது.

"பிரிந்து வெளியூர் போகப் போவதைச் சொல்லிக் கொண்டு போகவந்தால் என்றும் பிரிய முடியாத பந்தத்தைச் சொல்லி நீங்கள் என்னைத் தடைப்படுத்துவது நியாயமா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் சத்தியமூர்த்தி.

"மன்னிக்க வேண்டும்! உங்கள் முன்னிலையில் நான் எதற்காக இப்படி மனமும் உணர்ச்சிகளும் நெகிழ்ந்து போய்த் தவிக்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. இது ஏதோ பழம் பிறவித் தொடர்பாயிருக்க வேண்டும். இரயில் கதவைத் திறந்து கொண்டு கீழே குதித்து ஒரேயடியாகச் செத்துத் தொலைந்து போய்விட இருந்தவளைப் பின்னாலிருந்து கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினீர்களே? எதற்காகக் காப்பாற்றினீர்கள்? 'இருந்து என் கழுத்தை அறுக்கிறதுக்குப் பதில் நீ ஒரேயடியாகச் செத்துத் தொலையறதே மேல்' என்று சொல்லிப் பெற்ற தாயே கைவிட்டு விட்டவளை நீங்கள் எதற்காகக் குறுக்கிட்டுக் காப்பாற்றினீர்கள்? மேளம் கொட்டாமல், நாதஸ்வரம் வாசிக்காமல், அந்த அதிகாலை நேரத்தில் ஓடும் இரயிலில் பாணிக்கிரகணம் செய்து கொண்டது போல் என் வலது கையைப் பிடித்து இழுத்தீர்களே - அப்போது எனக்கு எந்த ஞாபகம் வந்தது தெரியுமா? ஆண்டாள் கண்ணனைத் திருமணம் புரிந்து கொள்வதாகக் கனவு கண்டு பாடிய 'வாரணமாயிரம்' பாடல்கள் நினைவு வந்தன. 'கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்' என்று அப்போது என் இதயம் எனக்கு மட்டுமே கேட்கிற குரலில் பாடிக் கொண்டிருந்தது. பிடித்த கையைப் பாதியில் இழத்து முறித்துக் கொண்டு போகலாமா நீங்கள்? நீங்கள் மல்லிகைப் பந்தலுக்குப் போனாலும் சரி, வேறு ஏதாவது ஓர் ஊருக்குப் போனாலும் சரி, உங்களுடையவள் ஒருத்தி இங்கிருக்கிறேன் என்ற பவித்திரமான நினைவு உங்களுக்கு இருக்க வேண்டும்."

மிக மென்மையான தன் நெஞ்சின் உணர்ச்சிகள் தவிக்கத் தவிக்க அவள் இவ்வாறு கூறிக் கை கூப்பிய போது சத்தியமூர்த்தியும் கண்கலங்கிப் போய் இருந்தான். அந்த நிலையில் காப்பி சிற்றுண்டியை எடுத்து வழங்கினாள். அவன் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சிறிதும் எதிர்பாராத கேள்வி ஒன்று அவளிடமிருந்து பிறந்தது.

"நீங்கள் புறப்படுவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?"

"ஏன்? இன்னும் நான்கு நாட்களில் நான் புறப்பட வேண்டும்! ஆனால் இப்போதே பிரயாணச் சுறுசுறுப்பு வந்துவிட்டது."

"புறப்பட்டுப் போவதற்கு முன் உங்களை நான் இன்னொரு முறை சந்திக்க வேண்டும்" என்றாள் அவள்.

அத்தியாயம் - 15

இந்த நூற்றாண்டின் சமூக வாழ்க்கையில் யார் பெரிய ஆராய்ச்சியாளன் தெரியுமா? நல்லவர் கெட்டவர் பிரித்துக் கண்டு பிடிக்கத் தெரிந்தவன் தான் பெரிய ஆராய்ச்சியாளன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படிப் பிரித்துக் கண்டுபிடிக்கத் தெரிந்தவர்கள் நம்மிடையே மிகவும் குறைவாயிருக்கிறார்கள்.

'இந்த வீட்டில் நீங்கள் மட்டுமே எடுத்து வாசிப்பதற்குரிய பரிசுத்தமான வாத்தியம் ஒன்று உங்களுக்காகவே காத்துக் கிடக்கிறது' என்ற மோகினியின் வாக்கியம் சத்தியமூர்த்தியின் இதயத்தில் ஆழமாகப் பதிந்து கிடந்தது. அவளுடைய நீர் பெருகும் விழிகளைக் காணும் போதெல்லாம் 'ஒரு தூரத்து நண்பருக்கு' என்ற தலைப்பில் தொகுக்கப் பெற்றிருக்கும் கவி பைரனின் ஆங்கிலக் கவிதை ஒன்றை நினைவு கூர்ந்தான் அவன்.

'நாம் இருவரும் சந்தித்துப் பிரிந்தபோது கண்ணீரும் அமைதியுமே இருந்தன' என்று ஆரம்பமாகிற அந்தப் பாடல் 'கண்ணீராலும் அமைதியாலுமின்றி இதை நான் எப்படி வரவேற்க முடியும்?' என்ற கேள்வியோடு முடியும். 'வென் வி டூ பார்ட்டெட் - இன் சைலன்ஸ் அண்ட் டியர்ஸ்' என்ற ஆரம்ப வரிகளும் 'ஹௌ ஷுட் ஐ கிரீட் - த்தீ வித் சைலன்ஸ் அண்ட் டியர்ஸ்' என்ற இறுதி வரிகளும் அதே கவி வடிவத்தோடு அவன் இதயத்தில் மீண்டும் மீண்டும் பதிந்து உறைகிற ஞாபகமாகச் சுழன்றன. பொன்னுக்கும் பொருளுக்கும் கடன்படுவதை விடத் தூய்மையான அன்புக்கு அதிகமாகக் கடன்பட வேண்டியதன் அவசியம் இப்போது அவனுக்குப் புரிந்தது. ஊருக்குப் போவதைப் பற்றி இரண்டு வார்த்தை சொல்லிக் கொண்டு போகலாம் என்று வந்த இடத்தில் அன்புக்குக் கட்டுப்பட்டு அதிக நேரம் உட்கார்ந்து விட்டதை உணர்ந்தான் அவன். எந்த இடத்தில் பிறரை வெற்றி கொள்ள முடிந்த தூய்மையான அன்பு பிறந்து பொலிந்து நிற்கிறதோ அந்த இடத்தில் மனிதனுடைய பிடிவாதம் தோற்றுப் போய்விடுகிறது என்பது உண்மைதான். மோகினியின் அன்பு சங்கீத விநாயகர் கோவில் தெருவிலிருந்த அந்தச் சிறிய வீட்டில் பிடிவாதமாக அவனைப் பிடித்து உட்காரவைத்து விட்டது. முதலில் அந்தத் தெருவிற்குள் நுழைவதற்கே அவன் கால்கள் கூசின. அப்புறம் அந்த வீட்டிற்குள் நுழைவதற்கு அவன் கால்கள் தயங்கின. இறுதியில் அத்தனை தயக்கத்தையும் அவள் வென்றாள்.

இருள் தூங்கும் கூந்தல் அவிழ்ந்து பெருக - அப்படிப் பெருகும் எல்லையிலாப் பேரழகுக்கு ஒரு தடையிட்டுக் கட்டினாற் போல் பட்டு ரிப்பனால் கட்டி, அந்தக் கருமை வெள்ளத்தின் அலைகளுக்குள்ளிருந்து தானே பூத்துச் சரிந்தது போன்ற ஒரு கொத்துப் பூவோடும் புன்னகை பூத்த முகத்தோடும் அவள் வந்து நின்ற போது அவனும் தன்னை மறந்து நின்று விட்டான். மோகினி என்று அவளுக்கு இசைவாகப் பெயர் வைத்தவர்களை மறுமுறையும் இதயபூர்வமாக வாழ்த்தினான் அவன். வாசலில் நின்றது, இருந்தது, தயங்கியது, உள்ளே போய் உட்கார்ந்தது, சிற்றுண்டி காப்பி அருந்தியது, பேசியது எல்லாம் 'நானா இப்படிச் செய்தேன்?' 'நானா இப்படிச் செய்தேன்?' என்று அவன் தன்னைத்தானே நம்பி ஒப்புக் கொள்ள முடியாத காரியங்களாக இருந்தன. 'நான் எப்படி இவ்வாறு நெகிழ்ந்தேன்?' என்று அவன் தன் இதயத்தைத் தானே கேட்டுச் சோதித்துக் கொள்ளவும் முடியாதபடி மனமே அந்த நெகிழ்ச்சியை விரும்பி அதன் பக்கமாகச் சாய்ந்திருந்தது. அப்போது அவர்கள் இருவருக்கும் நடுவே கண்ணீரும் மௌனமுமே நிரம்பியிருந்தன. 'கண்ணீராலும் மௌனத்தாலும் அல்லாமல் இதை நான் வேறு எந்தவிதமாக ஏற்றுக் கொள்வேன்?' என்ற கவி பைரனின் கவிதை வரிகளைத் தான் அவனால் மீண்டும் சிந்திக்க முடிந்தது. அவளோ அவனுடைய இதயத்தின் நெகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தும்படியான வேறொரு வேண்டுகோளுடன் நின்றாள்.

"நீங்கள் ஊருக்குப் போவதற்கு முன் நான் உங்களை இன்னொருமுறை சந்தித்து மனம்விட்டுப் பேச வேண்டும்." சொற்களால் பேசுவதைவிட நீர் பெருகும் கண்களாலும், மௌனத்தாலுமே அதிகமாகத் தன் அந்தரங்கத்தைப் பேசினாள் அவள். மௌனத்தினாலும் வெறும் பார்வையினாலுமே சாமர்த்தியமாகப் பேசத் தெரிந்தவர்களுக்குச் சொற்களால் பேசுவதா பெரிய காரியம்? ஆனால் சொற்களால் பேசுவதற்கு ஒன்றுமே மீதமில்லாததைப் போல் அப்போது அவர்கள் இருவருமே மௌனத்தால் மட்டும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு நல்ல பூவுக்கு அதன் நிறமும் மணமும் சேர்ந்தே அழகாயிருப்பதைப் போல் துயரமும் மகிழ்ச்சியும் பாதி பாதியாகக் கலந்த மௌனமாயிருந்தது அது. ஒருவருக்கொருவர் முகத்துக்கு முகம் இமையாமல் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பார்வையில் தனியான மகிழ்சியும் இல்லை; தனியான துயரமும் இல்லை. இரண்டுமே கலந்திருந்தது. எந்த விதமாகக் கலந்தால் அழகோ அப்படியே கலந்திருந்தது.

அந்த அழகிய மௌனத்தைச் சத்தியமூர்த்திதான் முதலில் கலைத்தான்.

"நீங்கள் அன்று சித்திரைப் பொருட்காட்சியில் ஆண்டாள் நடனத்துக்குப் பின்னால் சில சில்லறை நடனங்கள் ஆடினீர்களே; அவற்றை எனக்குப் பிடிக்கவில்லை. பரநாட்டியத்துக்கு தொடர்ச்சியாக இவற்றை ஆடும்போது பரத நாட்டியத்தின் கௌரவத்தையே இவை கெடுத்து விடுகின்றன. நல்ல மரம் வளர்ந்த பின் அதைச் சில புல்லுருவிகளும் பற்றிப் படர்வது போல் ஒவ்வொரு கலையும், தான் வளரும் போது தன்னைச் சுற்றித் தன் கீழே இப்படிச் சில கலைகளையும் வளரவிட்டு விடுகிறது. கலைகளின் தரத்தைக் காக்க விரும்புகிறவர்கள் இந்தக் கலைகளைக் களைய வேண்டும்."

"உண்மைதான்! எனக்கும் அப்படிப்பட்ட சில்லறை நடனங்களைப் பிடிக்கவில்லை. எனக்கு இதைக் கற்றுக் கொடுத்த வாத்தியார் அடிக்கடி, 'இந்தக் கலை வெறும் தெருக்கூத்து இல்லையம்மா! இது சரசுவதியோட இலட்சணம்' என்று சொல்வார். 'நீ கால்களில் சலங்கையைக் கட்டிக்கொண்டு மேடையேறி ஆடும்போது உன்னால் ஆளப்படுகிற கலை எதுவோ அந்தக் கலையின் அழகு தான் மக்களைக் கவர வேண்டுமேயொழிய உன் உடலின் அழகு மட்டுமே மக்களைக் கவர்ந்து நீ ஆள்கிற கலையின் அழகு மக்களைக் கவர்வதற்குத் தவறிவிடக் கூடாது. அப்படித் தவறினால் அது பூப்பொட்டலத்தைச் சுற்றி வைத்திருந்த இலையைக் கூந்தலில் வைத்துக் கொண்டு பூவைத் தூர எறிவது போல் நோக்கம் பிறழ்ந்த கலையாகி விடும்' என்றும் வாத்தியார் அடிக்கடி சொல்லுவார். உயர்ந்த தரத்துக் கலையைத் தெருக்கூத்தாக மாற்றிக் கேவலப்படுத்தக் கூடாது என்பதுதான் என் அபிப்பிராயம். ஆனால் நான் எந்தக் கலையை ஆள்கிறேனோ அந்தக் கலையை என் விருப்பப்படி ஆளமுடியாமல் அம்மாவும் கண்ணாயிரமும் ஏதேதோ வியாபாரத் திட்டம் போடுகிறார்கள். அதுதான் சொன்னேனே, பல வகையான காரணங்களால் நான் நினைக்கிற உயரத்துக்கு மேலே ஏறிப் போய் என்னால் வாழ முடியாமலிருக்கிறது. மனத்தினால் மட்டும்தான் நான் வாழ்கிறேன்."

அவள் முகத்தையே பார்த்திருந்த சத்தியமூர்த்திக்கு அப்போது அவள் கூறியவற்றையெல்லாம் நம்பாமல் இருக்க முடியவில்லை. இரயிலில் முதன் முதலாக அவளைச் சந்தித்த தினத்தன்று, அந்த இரவில் அவளுக்கும் அவள் தாய்க்கும் நிகழ்ந்த உரையாடலைச் சத்தியமூர்த்தி இப்போது நினைவு கூர்ந்தான். அவளுடைய மனநிலையும், அவளைச் சுற்றியிருக்கும் சூழ்நிலையும் அவனுக்கு விளங்கின. "அக்கா! படங்களுக்குப் போடறதுக்கு மல்லிகைப் பூமாலை வந்திருக்கு..." என்று பூக்காரன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போன கூடையோடு சிறுவன் உள்ளே வந்தான். மோகினி அந்தக் கூடையை வாங்கி மாலைகளைப் பிரித்தாள். திடீரென்று அந்த வீட்டுக் கூடமே மிகப் பெரிய மல்லிகைத் தோட்டமாகிப் பூத்துக் குலுங்குவது போல் நறுமணம் கமழ்ந்தது. அங்கிருந்த சிறிய ஸ்டூல் ஒன்றைச் சுவர் ஓரமாக நகர்த்திப் போட்டுக் கொண்டு அவளுடைய கைகளால் அந்தச் சிறுவனிடமிருந்து மாலையை வாங்கிச் சூட்டும் நளினத்தைச் சத்தியமூர்த்தி கவனித்துக் கொண்டிருந்தான். அவன் உட்கார்ந்திருந்த இடத்துக்கு மேலே பின்புறத்துச் சுவரில் ஒரு முருகன் படம் மாட்டியிருந்தது. அந்தப் படத்துக்கு அவள் மாலையைச் சூட்ட வந்த போது மட்டும் வசதியாக நின்று கொண்டு அவள் மாலையைச் சூட்டுவதற்குத் தான் இடையூறாக இருக்கலாகாது என்ற எண்ணத்தினால் சத்தியமூர்த்தி எழுந்து விலகி நின்றான். படத்துக்கு மாலையைச் சூட்டிவிட்டுத் தான் கீழே இறங்கிய பின்பும் அவன் விலகி நின்று கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, "நீங்கள் உட்காரலாம். ஏன் நிற்கிறீர்கள்?" என்று அவள் நாற்காலியைச் சுட்டிக் காட்டினாள். பழையபடி உட்கார்ந்தான் அவன். அப்படி உட்கார்ந்த மறுகணமே அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. மேலேயிருந்த படத்தின் ஆணிகளில் சரியாகப் பதியாததனாலோ என்னவோ, முருகன் படத்திலிருந்த மாலை அப்படியே கழன்று 'இந்த இடத்தில் இப்படித்தான் விழவேண்டும்' என்று சொல்லி வைத்து விழுந்தாற் போல சத்தியமூர்த்தியின் கழுத்தில் வந்து விழுந்தது.

ஒரு சிறிதும் எதிர்பாராதபடி நேர்ந்த இந்த நிகழ்ச்சியால் ஏன் அடையவேண்டும் என்று புரியாத ஒருவிதமான அதிர்ச்சியும் அதே ரீதியில் அடைந்த ஒருவிதமான மகிழ்ச்சியுமாகப் பதறிக் கொண்டே அந்த மாலையை அவன் கழற்ற முற்பட்டபோது இரண்டு பூக்கரங்கள் அவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டு அந்த மாலையை அவன் கழற்ற விடாமல் தடுத்தன. "கழற்றாதீர்கள். இப்படியே இந்தக் கோலத்தில் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது" என்று உணர்வு நெகிழ்ந்த குரலில் அவள் அவனை வேண்டிக் கொண்டாள். ஆயினும் அவள் கைகளைத் திமிறிக் கொண்டு அந்த மாலையை அவசர அவசரமாகக் கழற்றி வைத்துவிட்டான் அவன். அப்படிக் கழற்றி வைத்துவிட்டாலும், அந்த இடத்தில் இன்னும் அந்த மாலையோடு சேர்ந்து அவன் எப்படித் தோன்றுவானோ அப்படியே தோன்றுவதாகப் பாவித்துக் கொண்டு பார்ப்பதைப் போல் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள் மோகினி.

"நான் புறப்படுகிறேன். நேரம் அதிகமாகிவிட்டது" என்று மெல்ல எழுந்தான் சத்தியமூர்த்தி.

"நீங்கள் புறப்படுவது இருக்கட்டும். என்னுடைய வேண்டுகோள் என்ன ஆயிற்று? ஊருக்குப் போவதற்கு முன் உங்களை நான் இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்றேனே...?"

"அவசியம் பார்த்தாக வேண்டுமோ?"

"அதில் சந்தேகமென்ன? நீங்கள் இங்கிருந்து புறப்படுமுன் கண்டிப்பாக உங்களை இன்னொரு முறை சந்தித்தாக வேண்டும்."

எதற்காக அந்தச் சந்திப்பை அவள் வேண்டுகிறாள் என்பதைப் புரிந்து கொள்ள முயல்கிறவனைப் போலச் சத்தியமூர்த்தி அவளுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அவள் அந்தப் பார்வைக்கு நாணி ஒசிந்து போய்ப் புன்னகை புரிந்தாள்.

"நீங்கள் இவ்வளவு வற்புறுத்திச் சொல்கிற போது நான் எவ்வாறு மறுக்க முடியும்? ஊருக்குப் புறப்படுவதற்கு முன்னால் மறுபடியும் உங்களைப் பார்த்துவிட்டுப் போக முயல்கிறேன்" என்று கூறி அவளிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான் அவன். மோகினியும் அந்தச் சிறுவனும் வாசற்படி வரை வந்து அவனை வழியனுப்பினார்கள். மிகுந்த நேரம் அதிக சிரத்தையோடு உட்கார்ந்து பேசிப் பழகி ஆறுதலும் அநுதாபமும் கூற வேண்டிய ஓர் உறவை வேகமாக முறித்துக் கொண்டு புறப்பட்டு விட்டாற் போன்ற உணர்ச்சி தான் அப்போது அவனுக்கு இருந்தது.

படத்திலிருந்து தவறி விழுந்த மாலையைக் கழுத்திலிருந்து கழற்றவிடாமல் தடுத்த அவளுடைய பட்டுக் கைகள் இன்னும் தன் தோள்களிலேயே பதிந்து இருப்பது போல் உணர்ந்தான் அவன். குமரப்பனுடைய அறை இருக்கிற இடத்துக்குப் போகிற வரை அவன் மதுரையின் வீதிகளில் நடந்து போனான் என்பதை விட, நிகழ்ந்தவை என்ற இனிய ஞாபகங்களின் மேல் மிதந்து, நிகழ இருப்பனவற்றுக்கு ஓர் அவசரத்தைப் படைத்துக் கொண்டு போனான் என்பதுதான் பொருந்தும். மனத்தில் குழப்பமோ சிக்கலோ இல்லாமல் தெளிவான எண்ணங்கள் ஓடும்போது நடையும் ஓட்டமாக இருப்பது சத்தியமூர்த்தியின் வழக்கம். எண்ணங்களில் சூடேறிச் சிந்தனையோடு நடந்து போகிற பல சமயங்களில் நடப்பதே ஞாபகமில்லாமல் பறந்திருக்கிறான் அவன். இன்றும் அப்படிப் பறந்து போய்த்தான் அவன் குமரப்பனுடைய அறையை அடைந்திருந்தான். அவன் போகும் போது குமரப்பன் ஏதோ ஒரு கார்ட்டூன் படத்துக்காகப் பென்சில் வரைபடம் (ஸ்கெட்ச்) போட்டுக் கொண்டிருந்தான். கால்மணி நேரம் அப்படியும் இப்படியுமாகக் கோடுகள் இழுத்து அழித்த பின், "இந்தப் பாழாய்ப் போன பிரமுகர்... வாழ்க்கையில் தான் சரியான வழிக்கு வராமல் திமிறித் திமிறிப் போய்க் கொண்டிருந்தார் என்றால் படத்திலுமா அப்படி இருந்து தொலைக்க வேண்டும்? நானும் தான் அரை நாழிகையாகக் கோடிழுத்துப் பார்க்கிறேனடா சத்யம்; ஒரு கோட்டிலுமே பிடிபடாமல் நழுவிக் கொண்டிருக்கிறார் இவர்" என்று கூறிச் சரியாக வராத அந்தக் கார்ட்டூனைத் தூக்கி எறிந்தான் குமரப்பன்.

"சரி! நாம் புறப்படலாம் வா... இந்தப் பிரமுகரைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம். திரும்ப வந்த பிறகாவது இவர் வழிக்கு வருகிறாரா என்று பார்க்கிறேன்" என்று கையில் இருந்த பென்ஸிலையும் அந்தக் காகிதத்தின் மேல் வெறுப்போடு வீசிவிட்டுச் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டான் குமரப்பன். நண்பர்கள் இருவரும் கீழவாசலுக்குப் போய் அம்மன் சந்நிதி முன்புறம் உள்ள சில துணிக்கடைகளில் படியேறி இறங்கினார்கள். துணிமணிகளை வாங்கிக் கொண்டு அவர்கள் சந்நிதி முகப்பில் நடந்த போது கோயிலுக்குள் போவதற்காகக் கண்ணாயிரம் காரில் வந்து இறங்கிக் கொண்டிருந்தார். நெற்றி நிறையத் திருநீறு துலங்க மார்பில் சட்டையோ, பனியனோ இல்லாமல் பளபளவென்று மின்னும் ஒரு பட்டு அங்கவஸ்திரத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டு பரம பக்தராகக் கோவிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தார் கண்ணாயிரம்.

"பார்த்தாய் அல்லவா?" என்று சிரித்துக் கொண்டே குமரப்பனைக் கேட்டான் சத்தியமூர்த்தி.

"ஆகா! பார்க்காமல் விடுவேனா? தாராளமாகப் பார்த்தேன். நாயன்மார்களும், ஆழ்வார்களும் பக்திக்குக் கவசமாயிருந்து அந்த நல்லுணர்வைக் காத்தார்கள். இந்தக் காலத்திலோ ஒழுக்கமும் நேர்மையுமின்றி வாழும் சிலருக்குக் கூடத் தங்களைக் காத்துக் கொள்ளும் ஒரு கவசமாகப் பக்தி பயன்படுகிறது. அவர்கள் பக்திக்குக் கவசமாக இருந்து அதைக் காத்தார்கள் என்றால் இவர்கள் பக்தியை ஒரு கவசமாக அணிந்து தங்களைக் காத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்."

"சரியாகச் சொல்லிவிட்டாய், குமரப்பன்! நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் எல்லோரிடமும் கடுமையாகவும் முறையின்றியும் நடந்து கொண்டே தெய்வத்தினிடம் மட்டும் எளிமையாகவும், பணிவாகவும் நடந்து கொள்வதாகப் பாவிக்கிறவர்களைத் தெய்வம் எப்படி மன்னிக்க முடியும்?"

"மன்னிப்பதால் பெருமைப்படலாம். ஆனால் மாற்றியமைப்பதால் மட்டுமே திருப்திப்பட முடியும். கண்ணாயிரத்தைப் போல் பொய்யாக வாழ்கிறவர்களும் பக்திக்கோலம் பூண்டு பரமபக்தராகக் கோவிலுக்கு வருகிறார்கள். இதயபூர்வமான பக்தியைத் தவிர வேறு எந்தக் காணிக்கையையும் சுமந்து கொண்டு வரமுடியாத பல்லாயிரம் ஏழைகளும் கோவிலுக்கு வருகிறார்கள். கோவிலுக்கு வருவதைக் காரணமாக வைத்தும் சமூகத்தில் நல்லவர் - கெட்டவர்களைப் பிரித்துக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது பார்த்தாயா? இந்த நூற்றாண்டின் சமூக வாழ்க்கையில் யார் பெரிய ஆராய்ச்சியாளன் தெரியுமா? நல்லவர் கெட்டவர் பிரித்துக் கண்டுபிடிக்கத் தெரிந்தவன் தான் பெரிய ஆராய்ச்சியாளன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படிப் பிரித்துக் கண்டுபிடிக்கத் தெரிந்தவர்கள் நம்மிடையே மிகவும் குறைவாயிருக்கிறார்களடா சத்தியம்!"

"இந்த நூற்றாண்டில் சமுதாயத்தின் பொதுவான சொத்து எதுவாயிருக்கிறது என்று பார்த்தால் பெரிய ஊர்களில் பரவலான கோழைத்தனமும் சிறிய ஊர்களில் பரவலான முரட்டுத்தனமும் தான் நிரம்பிக் கிடக்கின்றன. அப்படியிருக்கும் போது நல்லது கெட்டது தெரிந்தவர்கள் குறைவாயிருப்பதில் ஆச்சரியம் என்ன?" என்று குமரப்பனை எதிர்த்து விவாதம் செய்தான் சத்தியமூர்த்தி. இருவரும் பேசிக் கொண்டே அந்திக் கடைப் பொட்டலுக்கருகே மீனாட்சி பூங்காவுக்குள் போய் உட்கார்ந்தார்கள். சத்தியமூர்த்தி தன் நண்பனிடம் மனம் உருகிக் கூறலானான்:

"இனிமேல் இப்படி நாம் ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசிக்கொள்ளும் வாய்ப்புக்கள் இல்லாமற் போய்விடுமே? எப்போதாவது கல்லூரி விடுமுறைகளின் போது நான் மதுரைக்கு வந்தால் தான் உண்டு. ஊரைப் பிரிந்து போவதை விட உன்னைப் பிரிந்து போவதுதான் எனக்குப் பெரிய வேதனை குமரப்பன்! முயன்றால் வாழ்வதற்குத் தேவையான வசதிகள் எல்லா இடத்திலும் கிடைத்துவிடும். ஆனால் மனம் விட்டுப் பழகுவதற்குச் சாத்தியமான நண்பர்கள் எல்லா இடத்திலும் கிடைக்க மாட்டார்கள்."

"கவலைப்படாதே, சத்யம்! கடிதங்களால் சந்தித்துப் பேச முடியும் நாம். நான் அன்று ஒரு நாள் சித்திரைப் பொருட்காட்சி முடிந்து திரும்பிய போது கூறியது உனக்கு நினைவு இருக்குமென்று எண்ணுகிறேன். வழி உண்டாக்கிக் கொண்டு நடக்கிறவனுக்கு எங்கே போனாலும் நல்ல நண்பர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்" என்றான் குமரப்பன்.

"ஆயிரம் சொல், குமரப்பன்! நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். உன்னைப் போல் இன்னொரு நண்பன் எனக்குக் கிடைப்பான் என்று இனி நான் எதிர்பார்க்க முடியுமா? நீ மிகவும் அதிசயமானவன்..."

"அதெல்லாம் பெரிதாகச் சொல்லிப் புகழாதே. இப்படி இன்னும் எத்தனை அதிசயமானவர்களைச் சந்திக்கப் போகிறாயோ? வாழ்க்கையில் ஒவ்வொரு பெரிய அநுபவமும் அதற்கு முந்திய அநுபவங்களை ஞாபகத்தில் மங்கச் செய்து விடுவது வழக்கம். என்னுடைய நினைவையும் மங்கச் செய்து விடும்படியான பெரிய அநுபவங்கள் உன் வாழ்க்கையில் போகப்போக வரும். அநுபவங்கள் முடிச்சுப் போடுவது போலத்தான், இருக்கும் போதே முந்திய முடிச்சைத் தளர்த்திவிட்டு இறுகும். என் அநுபவத்தில் பலமுறை இதை நான் உணர்ந்திருக்கிறேன். அத்தகைய பெரிய அநுபவங்களை நீ அடைய அடையக் 'குமரப்பன்' என்ற கார்ட்டூனிஸ்ட்டை மறந்தாலும் மறந்து விடுவாய்... யார் கண்டார்கள்?"

"அப்படிச் சொல்லாதே, குமரப்பன்! உன்னை மறக்கக் கூடாதென்பது என் தவம். அது ஒரு போதும் வீணாகாது" என்று சத்தியமூர்த்தி உறுதிதொனிக்கும் குரலில் நண்பனிடம் கூறினான். மறுநாளும் மாலையில் நண்பர்கள் இருவரும் சந்தித்து நெடுநேரம் பேசினார்கள். அதற்கு அடுத்த நாளும் பேசினார்கள். சத்தியமூர்த்தி, ஊருக்குப் புறப்படும் நாள் நெருங்க நெருங்க அவர்கள் சந்தித்துப் பேசும் நேரமும் வளர்ந்தது. ஊருக்குப் புறப்படும் நாளுக்கு முதல் நாள் மாலை குமரப்பனைத் தேடிச் செல்லும் போதே மோகினியிடம் சந்திக்க வருவதாக ஒப்புக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தான் சத்தியமூர்த்தி. ஊருக்குப் போவதைச் சொல்லிக் கொள்ள மோகினியிடம் சென்றதையும் அப்படிச் சென்றபோது அங்கு நிகழ்ந்தவற்றையும் குமரப்பனிடம் சொல்வதற்கு வாய்க்கவில்லை. ஆனால் குமரப்பனாகவே நடுவே ஒரு நாள் அவளைப் பற்றி சத்தியமூர்த்தியிடம் சில வார்த்தைகள் பேசியிருந்தான்.

"அந்தப் பெண்ணுக்கு அவள் மேற்கொண்டிருக்கும் கலைத்துறையில் நல்ல எதிர்காலமும் புகழும் இருக்கின்றன. அந்தக் கலையை உயர்ந்த தரமாகவும் படித்துக் கொண்டிருக்கிறாள். இந்தக் கண்ணாயிரம் குறுக்கே புகுந்து பாழாக்கிவிடாமல் இருக்க வேண்டும். இவன் ஏதோ மஞ்சள்பட்டியார் தலையைத் தடவி இரண்டு மூன்று லட்ச ரூபாய் முதல் போடச் சொல்லி 'மூன்லைட் பிக்சர்ஸ்' என்றோ 'அமாவாசை பிக்சர்ஸ்' என்றோ படத் தயாரிப்புக் கம்பெனி ஆரம்பிக்கப் போகிறானாம். மோகினியும் பார்க்க இலட்சணமாக இருக்கிறாள். அவளுடைய அம்மாக்காரி கண்ணாயிரம் சொல்கிறபடி தலையாட்டுகிறாளாம். தங்க விக்கிரகம் போலப் பார்க்கிற எவனுக்கும் விரசமாக எந்த எண்ணமும் தோன்ற இடம் இல்லாதபடி ஏதோ நல்ல நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கிறது அந்தப் பெண். சினிமாவில் நடிக்கப் பண்ணுகிறேன் என்று கண்ணாயிரம் பாழாக்கி விடப்போகிறான். கண்ணாயிரம் எமகாதகன். யார் பணத்தையோ முதலாகப் போட்டு, யார் அழகையோ விளம்பரமாகக் காண்பித்துத் தான் பெரிய மனிதனாகிக் கடைசியில் மற்ற இருவரையும் நடுத்தெருவில் நிற்கும்படி செய்து விடுவான். இந்த விவரத்தையெல்லாம் அந்தப் பெண்ணுக்கோ, அவள் தாய்க்கோ யார் எடுத்துச் சொல்லப் போகிறார்கள்? பாவம்! வழிகாட்டுகிறவர்கள் இல்லாத அநாதைத் திறமைகள் எல்லாம் இந்த நாட்டில் யார் யாருக்கோ பயன்பட்டு வீணாகி அழிய வேண்டும் என்பதுதான் நியதி போல் இருக்கிறது. கண்ணாயிரம் இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாக என் காதில் செய்திகள் விழுகின்றன. இப்படிச் செயல்கள் கண்ணாயிரத்துக்குப் புதுமையில்லை. இப்படிச் செயல்களாலேயே வளர்ந்து வாழ்கிறவர் அவர். இந்தக் கொடுமையைப் புரிந்து கொள்ளாமல் மாட்டிக் கொண்டு வாழ்கிறவர்கள் பாடுதான் பரிதாபம். மஞ்சள்பட்டியாரைப் பற்றி நான் கவலையோ, அநுதாபமோ படமாட்டேன். அவரைப் பொறுத்தவரை அவருக்கும் இதெல்லாம் வேண்டியதுதான். தேவைக்கதிகமான வெள்ளைப் பணத்தையும், கறுப்புப் பணத்தையும் வைத்துக் கொண்டு 'என்ன செய்யலாம், என்ன செய்யலாம்' என்று துறுதுறுத்துத் திரிகிறவர்கள் கண்ணாயிரத்தினிடம் சிக்கிக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் மோகினியைப் போன்ற அபலைகள் சிக்கிக் கொள்ளக் கூடாது" என்று குமரப்பன் கூறியிருந்தான். சத்தியமூர்த்தியாவது ஒரு நாகரிகத்துக்குக் கட்டுப்பட்டுக் கண்ணாயிரத்தை அவர் இவர் என்று மரியாதைப் பன்மை கொடுத்துப் பேசுவான். குமரப்பன் அந்த மரியாதையும் கொடுக்கமாட்டான். கண்ணாயிரத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலே ஏக வசனத்தில்தான் வாக்கியங்கள் வரும் அவனுக்கு.

சத்தியமூர்த்தி மறுநாள் மாலை இரயிலில் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு இருந்ததால் மோகினியிடம் ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருந்தபடி ஊருக்குச் செல்வதற்கு முந்திய தினமாகிய அன்று அவளைக் காணச் சென்றான். குமரப்பன் கண்ணாயிரத்தைப் பற்றிச் சொல்லி எச்சரித்த செய்திகளையெல்லாம் அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டே போனான் அவன். கண்ணாயிரத்தைப் பற்றி அவளுக்கே நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். இவற்றையெல்லாம் அவளிடம் சொல்வதற்கும் அவளை எச்சரிப்பதற்கும் தான் யார்? தனக்கென்ன உரிமை? என்று நடுநடுவே மனம் தயங்கியது; கருணையும் பரந்த நோக்கமும் உள்ளவனுக்கு உரிமையும், உறவும் பார்த்துத்தான் மனிதர்கள் மேல் இரக்கப்படத் தெரிய வேண்டும் என்பதில்லை. யாருக்குத் துன்பம் வந்தாலும் இரக்கப்படத்தான் வேண்டும். இந்த விதமான எண்ணங்களோடு அவன் மோகினியின் வீட்டுக்குள் படியேறிச் சென்ற போது அவள் அவனை எதிர்பார்த்துத் தனியாகக் காத்திருந்தாள். தன்னைப் பார்த்ததும் அவள் அடைந்த உற்சாகத்தைக் கண்டு சத்தியமூர்த்தியே அயர்ந்து போனான். வழக்கம் போல் காப்பி சிற்றுண்டி உபசாரத்துக்குப் பின் கேட்கலாமா, கேட்கக் கூடாதா என்று தயங்கிக் கொண்டே அவளிடம் ஒரு கேள்வியைக் கேட்டான் சத்தியமூர்த்தி.

"கண்ணாயிரத்துக்கும் உங்கள் வீட்டுக்கும் என்ன தொடர்பு என்று நான் தெரிந்து கொள்ளலாமோ? தயவு செய்து இந்தக் கேள்வியை எந்த விதத்திலும் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். உங்கள் மேல் உள்ள அநுதாபத்தின் மிகுதியால் தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்."

"தொடர்பாவது ஒன்றாவது? ஏதோ வருகிறார் போகிறார். அவரால் தான் இந்த உலகமே நின்றுவிடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று அம்மாவுக்கு ஒரு பிரமை. சபைகளிலும், பொருட்காட்சிகளிலும் நாட்டியத்துக்கு கூப்பிடுகிறவர்கள் கண்ணாயிரம் சொல்லித் தூண்டுவதால் தான் கூப்பிட வருவதாக அம்மாவை அவரே நம்ப வைக்கிறார். என்னை அப்படியே சினிமா வானில் இலட்ச இலட்சமாகப் பணம் சம்பாதிக்கும் நட்சத்திரமாக மாற்றிவிடப் போவதாக அம்மாவிடம் அவர் வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டு திரிகிறார். "கூந்தல் தைல விளம்பரம், வாசனைச் சோப்பு விளம்பரம், பட்டுப்புடவை விளம்பரம் என்று எதன் பெயரைச் சொல்லியாவது கண்ணாயிரம் அம்மாவுக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கிறார். இவை எல்லாம் பிடிக்காமல் இருந்தும் பிடித்திருப்பது போல் அங்கீகரித்துக் கொண்டு சாகமாட்டாமல் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்று மோகினி அவனுக்கு மறுமொழி கூறியபோது கண்ணாயிரத்தின் மேலிருந்த வயிற்றெரிச்சல் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்பட்டது. பொறுமையிழந்து தான் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

"உங்களுடைய இதயத்தில் மண்டிக் கிடக்கும் வேதனைகளைக் கிளறி விடுவதாக என்னுடைய கேள்வி அமைந்திருந்தால் அதற்காக நான் வருத்தப்படுகிறேன். கண்ணாயிரத்தை நீங்களே சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அதிகமாக நம்பி ஏமாந்து போகக் கூடாது" என்று அவளுக்கு எச்சரிக்கை செய்தபோது, சத்தியமூர்த்தியின் மனம் தன்னைத்தானே குத்திக் காட்டியது. 'கண்ணாயிரத்தை நம்பி ஏமாந்து விடக்கூடாது என்று மோகினிக்கு அறிவுரை கூறிக் கொண்டு நிற்கிற நானே என் தந்தையிடம் இதை வற்புறுத்திக் கூற முடியாமல் போய் விட்டதே' என்று நினைத்துப் பெருமூச்சு விட்டான் அவன். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவளே அவனிடம் பேச ஆரம்பித்தாள். "உங்களை நான் இன்று சந்திக்க விரும்பிய காரியம்..." என்று சொல்லிக் கொண்டு தயங்கித் தயங்கி நடந்து போய்க் கூடத்தில் இருந்த அந்த முருகன் படத்துக்குக் கீழே நின்றாள் அவள். நாற்காலியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அவனும் அவளோடு எழுந்து போய் நின்றான். அப்போது அவள் அவனே எதிர்பார்த்திருக்க முடியாத புதுமையான காரியம் ஒன்றைச் செய்தாள்.

"இந்தக் கையால் தான் என்னைக் காப்பாற்றி எனக்கு அபயமளித்தீர்கள் நீங்கள்! என்னுடைய ஞாபகமாக இது இந்தக் கையில் இருக்கட்டும்" என்று தன் வலது உள்ளங்கையில் அதுவரை மூடி வைத்திருந்த நீலக்கல் மோதிரம் ஒன்றை அவனுடைய வலக்கரத்து விரலில் தானே கைப்பற்றி அணிவித்தாள் மோகினி. இன்பகரமான அந்த அதிர்ச்சியில் ஓரிரு கணங்கள் தயங்கியபின், "ஞாபகம் ஒரு பக்கத்தில் மட்டும் இருந்து பயனில்லை! இரண்டு பக்கத்திலும் அந்த ஞாபகம் நிரம்பியிருக்க வேண்டும்" என்று கூறியவாறே தன் வலக்கரத்தில் மற்றொரு விரலில் ஏற்கெனவே இருந்த வேறோர் மோதிரத்தைக் கழற்றி நிலாக் கொழுந்து போல் வனப்பு மிக்கதாயிருந்த அவளுடைய மோதிர விரலில் பூட்டினான் சத்தியமூர்த்தி. வெட்கமும் முறுவலுமாக அவள் முகம் அவனை நோக்கி நிமிர்ந்த வேளையில் அவன் முகமும் அவளை நோக்கி ஏறிட்டுப் பார்த்தது. ஒருவர் அறியாமல் மற்றொருவர் பார்க்க முயன்று இருவருமே பார்த்துக் கொண்ட அந்த நிலையில் கள்ளத்தனமானதொரு மகிழ்ச்சி பிறந்தது.

"அதோ அந்தக் கண்ணாடியில் நாம் நிற்பதைப் பாருங்கள்" என்று எதிரேயிருந்த மிகப்பெரிய நிலைக் கண்ணாடியைச் சுட்டிக் காண்பித்தாள் அவள். சத்தியமூர்த்தி நிமிர்ந்து எதிரே பார்த்தான்.

"இப்போது நாம் நிற்கிற கோலம் எப்படி இருக்கிறதென்று நான் சொல்லட்டுமா?..." அவள் குரல் அவனைக் கெஞ்சியது. "சொல்லேன்" என்று அவன் பதில் கூறியதும் அவள் எதைச் சொன்னாளோ, அதைக் கேட்ட அவன் பேரின்பச் சிலிர்ப்படைந்தான்.

அத்தியாயம் - 16

ஓர் ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாகச் செலுத்துகிற அன்பு வெற்றி பெறுகிறதா அல்லது தோற்றுப் போகிறதா என்பதைப் பொறுத்து உலகத்தில் பல காவியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக் காவியங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து இருவரில் யாரோ ஒருவருடைய அழுகுரல் தான் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

"இப்போது நாமிருவரும் நிற்கிற கோலம் எப்படி இருக்கிறதென்று சொல்லட்டுமா?" என்று கேட்ட கேள்விக்குச் சத்தியமூர்த்தியே அன்பின் நெகிழ்ச்சி மிகுதியினாலோ அல்லது வாய் குழறியோ 'சொல்லேன்' என்று ஏக வசனமாக ஒருமையில் பதில் சொல்லியது மோகினிக்குப் பிடித்திருந்தது. அவன் அப்படித் தன்னை அழைக்க வேண்டுமென்றுதான் அவள் விரும்பினாள். உரிமையை இன்னும் நெருக்கமாகப் புரிந்து கொள்வதற்கு ஒருமைக்கும் கீழானதொரு சொல் இருக்குமானால் அந்தச் சொல்லாலும் சத்தியமூர்த்தி தன்னை அழைக்க வேண்டும் என்று தான் அவள் ஆசைப்பட்டாள்; ஏங்கினாள். அன்பைக் குறைத்துத் தன்னைத் தனியாகப் பிரித்து நிறுத்திக் கொள்ளும் அதிகப்படியான மரியாதையைவிட மரியாதையைக் குறைத்து அன்பால் பெருகி நெருங்கும் உரிமையையும், உறவையும் அவள் பெரிதும் விரும்பினாள். ஆனால் அதே சமயத்தில் சத்தியமூர்த்தி அவசரத்தினாலும் பதற்றத்தினாலும் அவளை அப்படி அழைத்ததற்காகத் தனக்குள் மனம் குழம்பிக் கொண்டிருந்தான். 'எல்லாவிதமான கட்டுப்பாட்டையும் மீறி, என் வாய் எப்படிக் குழறியது? நான் எப்படித் தடுமாறினேன்?' என்று எண்ணியபடி அவன் மனம் வருந்திக் கொண்டிருந்த போது தன்னுடைய வார்த்தைகளால் மோகினி அவனுடைய வருத்தத்தைத் தவிர்த்தாள். அவளுடைய அந்தப் பணிவும் விநயமும் அவனுடைய பரவசத்தை மிகுதியாக்கின.

"நீங்கள் இப்படி வா, போ என்று உரிமையோடு ஒருமையில் அழைக்காமல், உயரத் தூக்கி வைத்து அநாவசியமாக மரியாதை கொடுத்து நேற்றுவரை என்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்தீர்கள். இன்றுதான் நான் சௌபாக்கியவதியானேன். 'சொல்லட்டுமா?' என்று நான் உங்களைக் கேட்டவுடன் 'சொல்லேன்' என்று ஒருமையில் பதில் வந்ததே உங்களிடமிருந்து - அந்த வார்த்தையை என் செவிகள் கேட்க நேர்ந்த நல்ல வேளையை நான் வாழ்த்துகிறேன். இனிமேல் இப்படியே அழையுங்கள். இப்படி அழைக்கப்படுவதில்தான் நான் மகிழ்ச்சியை உணர்கிறேன். அதோ எதிரில் உள்ள நிலைக்கண்ணாடி உங்களையும் என்னையும் சிறிதும் வஞ்சகமில்லாமல் மணமக்களைப் போல் பிரதிபலிக்கிறது பார்த்தீர்களா? இந்த மோதிரத்தை முதன் முதலாக இந்த வீட்டுக்குள் நீங்கள் நுழைந்த தினத்தன்றே உங்கள் விரலில் அணிவிக்க எண்ணியிருந்தேன். ஆனால் அப்போது இதில் இந்த நீலக்கல் உதிர்ந்திருந்தது. கல்லையும் பதித்து மோதிரத்துக்கு மெருகு கொடுத்து வாங்குவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இதற்காகத்தான் நீங்கள் ஊருக்குப் போவதற்குள் உங்களை மறுமுறையும் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். நீங்களோ உங்கள் கையில் உள்ள மோதிரத்தைக் கழற்றிப் பதிலுக்கு என் கையில் அணிவித்து விட்டீர்கள். என்னுடைய அம்மாவின் பெரியம்மா ஒருத்தி எனக்குப் பெரிய பாட்டி முறையாக வேண்டும், மதுரவல்லி என்று பெயர். அவள் தன்னுடைய பதினேழாவது வயதில் பக்கத்துச் சமஸ்தானத்துக்கு நவராத்திரியின் போது சதிராடப் போனவள் அங்கே கவிஞர் ஒருவரைச் சந்தித்துக் காதல் கொண்டாள். ஆனால் அடுத்த நவராத்திரிக்கு அவள் அங்கு போய் விசாரித்த போது பேரழகராகிய அந்தக் கவி அகால மரணமடைந்து விட்டதை அறிந்து, 'இனி இந்தக் கால்கள் சலங்கை கட்டி ஆடப் போவதில்லை' என்று விரதமெடுத்துக் கொண்டு திரும்பினவள் சாகின்றவரை தன் கைகளால் வெறும் வாத்தியங்களைத் தீண்டியது தவிர மனிதர்களைத் தன் அருகிலும் வரவிடாமல் வாழ்ந்து செத்துப் போனாளாம். சாகின்றவரை அந்தப் பெரிய பாட்டியின் ஞாபகத்தில் அவள் முதல் முதலாகச் சந்தித்த கவிஞரைத் தவிர வேறு எவரும் மதிப்புப் பெறவோ வணங்கப் பெறவோ இல்லையாம். அந்தப் பாட்டியை நான் பார்த்ததில்லை. ஆனால் அவளுடைய பரிசுத்தத்தையும் தூய்மையையும் பற்றி இந்த வீட்டில் எனக்கு நினைவு தெரிந்தபின் கதை கதையாகச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். 'நீயும் அந்தச் சனியன் பிடித்தவள் போனதைப் போலத்தான் உனக்கும் பயன் இல்லாமல் இந்த வீட்டுக்கும் பயனில்லாமல் போகப் போகிறாய். ஒருவேளை அவளே வந்து பிறந்து தொலைத்திருக்கிறாளோ என்னவோ?' என்று கோபத்தில் அம்மா என்னை எத்தனையோ முறை திட்டியிருக்கிறாள். அம்மா அப்படித் திட்டுவதைக் கேட்கும் போதெல்லாம் நான் பெருமைப்பட்டிருக்கிறேனே தவிர ஒரு சிறிதும் வருத்தப்பட்டதில்லை. சௌகரியங்களோடு வாழ்கிறவர்கள் அதற்காகக் கர்வப்படலாம். ஆனால் தூய்மையோடு வாழ்கிறவர்கள்தான் 'நாம் வாழ்கிறோம்' என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். நான் சௌகரியங்களுக்கு ஆசைப்படவில்லை. தூய்மையைக் காத்துக் கொள்ள மட்டும் ஆசைப்படுகிறேன். பலவிதமான சூழ்நிலைகளை உத்தேசித்து நான் வாழவே கூடாது. ஆனால் நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்கள் என்ற நல்ல ஞாபகத்தைப் போற்றுவதற்காவது இன்னும் சிறிது காலம் வாழவும் வேண்டும்."

"நிச்சயமாக வாழவேண்டும்! நீங்கள்... இல்லை... இல்லை... நீ... வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீட்டுக்குள் வாயிற்படியேறி வந்தேன் நான். இந்தப் படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் போது நான் மேலே ஏறிக் கொண்டிருக்கிறேனா அல்லது மேலே ஏறிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டே கீழே இறங்கிக் கொண்டிருக்கிறேனா என்று எனக்குள் பலமுறை தயங்கியிருக்கிறேன் நான். அப்படித் தயங்குவதும் நியாயம் தானே? உலகத்தில் இரண்டு விதமான அன்பு உண்டு. மழையைப் போல் எப்போதாவது பெய்து நின்று விடுகிற அன்பு. சூரியனைப் போல் நாள் தவறாமல் தோன்றுகிற அன்பு. மழையைப் போல் பெய்து பெய்து நின்றுவிடுகிற அன்பைத்தான் உன் தாய் உனக்கு உபதேசம் செய்திருக்கிறாள். உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டிருக்கிற அன்பும் அப்படிப்பட்டதுதான்..."

"நான் புரிந்து கொண்டிருக்கிற அன்பு அப்படிப்பட்டது இல்லை. சத்தியமானது. என்னையே நான் அர்ப்பணித்திருப்பது."

"இருக்கலாம், மோகினீ! ஆனால் ஓர் ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாகச் செலுத்துகிற அன்பு வெற்றி பெறுகிறதா அல்லது தோற்றுப் போகிறதா என்பதைப் பொறுத்து உலகத்தில் பல காவியங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக் காவியங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து இருவரில் யாரோ ஒருவருடைய அழுகுரல்தான் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருப்பதை நீயும் நானும் இன்றும் நாளையும் என்றும் கேட்கலாம்."

"..."

மோகினியிடமிருந்து அவனுக்கு மறுமொழியில்லை. பதில் சொல்லாமல் மெல்ல விசும்பி அழத் தொடங்கியிருந்தாள் அவள். சுவரில் சிரித்துக் கொண்டிருக்கும் அற்புதமான முருகன் படம். ஒரு மூலையில் மௌனமாய் வைத்தது வைத்தபடியே கிடக்கும் வாத்தியங்கள் - இவற்றையெல்லாம் மாறி மாறிப் பார்த்தான் சத்தியமூர்த்தி. அந்த அழுகையைத் தாங்காமல் அருகில் நெருங்கித் தயங்கி நடுங்கும் கையால் அவள் தோளைத் தொட்டுக் கூறினான் அவன்.

"இதோ! என்னை நிமிர்ந்து பார், மோகினீ! உன்னை அழ வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த வாக்கியங்களை நான் கூறவில்லை. உன்னுடைய வேண்டுகோளை மறுக்க முடியாமல் தான் இன்று இரண்டாவது முறையாகவும் இந்த வீட்டுக்கு நான் வந்தேன். உன்னுடைய வேண்டுகோளை மறுக்க முடியாமல் தான் இந்த மோதிரத்தை அணிந்து கொண்டேன். உன்னுடைய அன்புக்கு மரியாதை செய்ய வேண்டுமென்றுதான் பதிலுக்கு என் கை மோதிரத்தை உனக்கு அணிவித்தேன். நீ எனக்குச் சிரித்த முகத்தோடு விடை கொடுக்க வேண்டும்."

அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். மறுபடியும் அவள் திரும்பி வந்த போது கையில் ஒரு சிறிய குங்குமச் சிமிழோடு வந்தாள். தன் கையினாலேயே அவன் நெற்றியில் திலகமிட்டாள்.

"போய் வாருங்கள், என்னை மறந்து விடாதீர்கள். உங்கள் ஞாபகத்தில் தங்கி வாழ்வதைக் காட்டிலும் பெரிய பாக்கியம் எனக்கு வேறு ஒன்றும் இல்லை" என்று நாத்தழுதழுக்கக் கூறிக் கண் கலங்கக் கைகூப்பினாள் மோகினி. பிரிய மனமில்லாமல் அவளைப் பிரிந்தான் அவன். மேலே நடந்து போக முடியாமல் தயங்கி நிற்கும்படி செய்து விடுகிற அன்பு யாருடையதாக இருந்தாலும் அந்த அன்புக்கு நெகிழ்ந்தும் நெகிழாமலும் அதிலிருந்து விலகி நடக்கத்தான் வேண்டியிருக்கிறது. தான் அந்தச் சந்திலிருந்து திரும்பி மறைகிற வரை அவள் வீட்டு வாயிற்படியிலேயே நின்று பார்த்துக் கொண்டிருப்பதை இரண்டொரு முறை பின் பக்கமாகத் திரும்பிப் பார்த்தபோது அவன் கண்டான். வேகமாகக் கைவீசி நடந்தபோது புது மெருகும் நீலக் கல்லுமாக மின்னியது அந்த மோதிரம். "இதென்னடா புது மோதிரம்?" என்று குமரப்பன் கேட்டால் என்ன மறுமொழி கூறுவது? வீட்டுக்குப் போய் நின்றால் அம்மாவோ தங்கையோ கூட அந்தக் கேள்வியை அவனிடம் கேட்கமுடியும். யார் யாரிடம் எப்படிப் பதில் சொல்வது என்று அவன் இப்போதே சிந்திக்கத் தொடங்கினான். ஏற்கெனவே கையிலிருந்த பழைய பொன் மோதிரத்தைக் கடையில் கொடுத்துவிட்டுத் தானே மேலும் கொஞ்சம் ரூபாய் கொடுத்து இதை மாற்றிக் கொண்டு விட்டதாகச் சொல்லிக் கொள்ளலாமென்று அவனுக்குத் தோன்றியது. யாருக்கும் கெடுதல் செய்யாத இந்தப் பொய்யை எண்ணுவதற்கும் பேசுவதற்கும் கூட அவன் கூசினான். 'தான் இப்படிப் பொய் சொல்லவேண்டிய நிலையை உண்டாக்கியவள் அவள் தானே' என்ற முறையில் மோகினியின் மேல் கோபமும் வந்தது அவனுக்கு.

வீதியோரமாக நடந்து போய்க் கொண்டிருந்தவன் ஏதோ ஒரு பெரிய கடையில் முன்புறமாக இருந்த கண்ணாடியில் திரும்பும்போது தற்செயலாகத் தெரிந்து பிரதிபலித்த தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டான். கையில் நீலக்கல் மோதிரம் நெற்றியில் குங்குமத் திலகமுமாக ஆளே திடீரென்று புது மாப்பிள்ளையாக மாறிவிட்டாற்போலத் தோன்றியது. ஒரு கணம் அந்தத் திலகத்தை அழித்து விடுவதற்காக அவன் கை மேலே உயர்ந்தது. ஆனால் அப்படி அழிப்பதற்கும் மனம் துணியவில்லை. அதை அழிப்பதால் மனப்பூர்வமாகவும் அந்தரங்க சுத்தியோடும் செய்யப்பட்ட ஒரு மரியாதையை அவமதிப்பதாக உணர்ந்து மேலே எழுந்த கை தானாகவே தாழ்ந்தது. பெண்ணின் அன்பு என்பது மனிதனுடைய இதயத்தை மிக மென்மையாகத் துளைப்படுத்தும் உறுத்தாத விலங்குகளில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். சுழற்றவும் முடியாமல் கட்டிக் கொள்ளவும் முடியாமல் தவிக்க விடுகிற அந்த விலங்கு தன்னையும் இப்போது பிணித்திருப்பதைச் சத்தியமூர்த்தி நன்றாக உணர்ந்தான். 'நானும் கட்டுண்டேன்' 'நானும் கட்டுண்டேன்' என்பதை நிரந்தரமாக ஞாபகப்படுத்துவதைப் போல் அந்த மோதிரம் அவன் கையில் மின்னிக் கொண்டிருந்தது. 'இப்படி ஒரு சந்திப்பும் உறவும் என் வாழ்வில் தானா ஏற்பட்டிருக்கிறது?' என்பதை நினைத்து ஒரு கணம் தயங்கிப் பெருமூச்சு விட்ட பின், 'என் வாழ்வில்தான் ஏற்பட்டிருக்கிறது' என்பதை அவன் அந்தரங்கமாக ஒப்புக் கொண்டே ஆகவேண்டியிருந்தது. அன்று மாலை அவனும் குமரப்பனும் திருப்பரங்குன்றம் கோவிலுக்குப் போய்விட்டு வந்தார்கள். மறுநாள் மாலை மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுமுன் சத்தியமூர்த்தியை இரயில் நிலையத்தில் சந்திப்பதாகச் சொல்லி விடைபெற்றான் குமரப்பன். ஊருக்குப் புறப்படுகிற நாள் மிகவும் தொலைவில் இருப்பது போல் தோன்றிவிட்டுக் கடைசியில் அருகில் வந்து 'நான் மிகவும் அருகில் தான் இருக்கிறேன்' என்று நெருங்கி நின்றாயிற்று. அன்று இரவு நெடுநேரம் வரை அப்பாவும், அம்மவும் அவனோடு பேசிக் கொண்டிருந்தார்கள். வேலையைத் தேடி வெளியூர் போகிற பிள்ளையைப் பெற்றோர் வழியனுப்புகிற போது வழக்கமாய்த் திரும்பத் திரும்பப் பேசுகிறவற்றையெல்லாம் அவர்களும் அவனிடம் பேசினார்கள்.

பயணத்துக்கான பரபரப்பில் மறுநாள் பொழுது விடிந்ததும் தெரியவில்லை; பொழுது சாய்ந்ததும் தெரியவில்லை. 'நல்ல சகுனம் ஆகிறதா என்று பார்த்துக் கொண்டு படியிறங்கு' என்று கூறிய அம்மாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே தயாராக தெருவில் கொணர்ந்து நிறுத்தியிருந்த குதிரை வண்டியை நோக்கி நடந்தான் சத்தியமூர்த்தி. வண்டியில் பயணத்துக்கான சாமான்களையெல்லாம் ஏற்றி வைத்தாயிற்று. அப்பாவும் ஏறி உட்கார்ந்து கொண்டு விட்டார். அம்மாவும், தங்கைகளும் வாயிற்படியில் வந்து நின்று கொண்டு அவனுக்கு விடை கொடுத்தார்கள். குதிரை வண்டி தெருத் திரும்புகிறவரை மனம் ஏதோ பெரிய சுமையைத் தாங்க முடியாமல் கனப்பது போலிருந்தது. அதற்குள் தந்தை ஏதோ சொல்லத் தொடங்கினார். இரயில் நிலையம் வருகிறவரை சத்தியமூர்த்தி அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு வந்தான். குமரப்பனும் வேறு சில நண்பர்களும் இரயில் நிலையத்துக்கு வழியனுப்ப் வந்திருந்தார்கள். இரயில் புறப்படுகிறவரை நண்பர்கள் ஒவ்வொருவரோடும் பேசுவதற்குத்தான் சரியாயிருந்தது. சத்தியமூர்த்தியின் நண்பர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டதனால் தந்தை இரயில் நிலையத்திற்குள் வந்தபின் அவனோடு அதிகம் பேசவில்லை. இரயில் நகர்ந்ததும், 'போய்ச் சேர்ந்த விவரத்துக்குக் கடிதம் எழுது' என்று அவர் கூறியதற்கு 'ஆகட்டும்' என்று தலையசைத்தான் அவன். பிளாட்பாரத்தை விட்டு இரயில் விரைந்து செல்லத் தொடங்கியபோது தந்தை தளர்ந்த நடையோடு திரும்பிச் சென்று கொண்டிருப்பதை அவன் ஓடும் இரயிலிலிருந்தே பார்த்தான்.

நல்ல வேளையாக அன்று இரவு அவன் மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்தில் தங்க வேண்டிய அவசியம் நேரவில்லை. மேலே மலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த கடைசி பஸ்ஸில் அவனுக்கு இடம் கிடைத்துவிட்டது. மறுநாள் கல்லூரி திறக்கப் போகிற நாளாகையால் பஸ்ஸில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவனைப் போல் புதிதாக மல்லிகைப் பந்தல் கல்லூரியில் வேலை ஒப்புக் கொள்வதற்குச் செல்லும் இரண்டொரு விரிவுரையாளர்களும் ஏற்கெனவே அங்கு வேலை பார்க்கிற விரிவுரையாளர்களில் லீவுக்கு ஊர் போய்விட்டு மீண்டும் திரும்புகிற சிலரும் பஸ்ஸில் உடன் பயணம் செய்தார்கள்.

விடுமுறைக்காலம் என்ற சுதந்திரம் முடிந்து மீண்டும் கல்லூரிக்குத் திரும்புகிற மாணவ இளைஞர்களின் பேச்சும் சிரிப்புமாகப் பஸ்ஸில் ஓர் ஆரவாரம் இடையறாமல் இருந்தது. அதே கல்லூரியில் தாவர இயல் (பாடனி) விரிவுரையாளராக வேலை ஏற்றுக் கொள்ள வரும் இளைஞர் ஒருவரும் பொருளாதார விரிவுரையாளராக வேலை ஏற்றுக் கொண்டு இரண்டு மூன்றாண்டுகளாக வேலை பார்த்து வரும் நடுத்த வயதினர் ஒருவரும் பஸ்ஸில் சத்தியமூர்த்திக்கு அருகே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். தற்செயலாக பயணத்தின் போது ஒருவரையொருவர் விசாரித்ததில் அது தெரிந்தது.

"இந்த உத்தியோகத்தில் ஒரு சுகமும் இல்லை. ஏதோ வேறு வழி இல்லாத காரணத்தால் கல்லூரி ஆசிரியராக வந்து மாட்டிக் கொண்டு விட்டேன். ஏதாவது ஒரு கம்பெனியில் சின்ன உத்தியோகம் பார்த்துக் கொண்டு போயிருந்தால் கூட இதற்குள் கையில் கொஞ்சம் பணம் சேர்ந்திருக்கும்" என்று பொருளாதார விரிவுரையாளர் சத்தியமூர்த்தியிடம் அலுத்துக் கொண்டார். வாழ்க்கையே பணத்தைக் கொள்ளையடித்துக் குவிப்பதற்காக அளிக்கப்படுகிற ஒரு சந்தர்ப்பம் என்று அவர் நினைப்பதாகப் பட்டது சத்தியமூர்த்திக்கு. ஒவ்வொரு துறையிலும் அந்தத் துறையின் இலட்சியத்தில் மனப்பிடிப்பு இல்லாதவர்கள் ஒட்டிக் கொண்டு வேதனைப் படுவதைப் போல் நாட்டுக்கு மொத்தமான துன்பம் வேறு இருக்க முடியாது என்று நினைத்தான் அவன். சொந்தக் கசப்பை வெளியிடுவதற்கு மட்டும் தான் வாய் திறந்து பேச வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு அதற்காகவே பிறரோடு உரையாடுகிறவர்களைச் சத்தியமூர்த்தியால் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது. அந்தப் பொருளாதார விரிவுரையாளரோடு பேசுவதைத் தவிர்ப்பதற்காகக் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தபடியே தூங்குவது போல பாவனை செய்யலானான் அவன். பின் பக்கத்திலிருந்து மாணவர்களின் உற்சாகமான பேச்சுக்குரல் கேட்டது. 'வற்றல் குழம்பு' என்று கௌரவப் பெயர் சூட்டப்பெற்ற ஒரு பேராசிரியரைப் பற்றி அதே பெயரை உபயோகித்து அந்த மாணவர்கள் பரம உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

சத்தியமூர்த்திக்கு மாணவர்களின் அந்த அரட்டையைக் கேட்கக் கேட்கச் சிரிப்பு ஒரு பக்கமும் வேதனை ஒரு பக்கமுமாக இருந்தது. போராட்டங்களும், சாதனைகளும் நிறைந்த தன்னுடைய கல்லூரி நாட்களை நினைத்துக் கொண்டான் அவன். 'துடிதுடிப்பு நிறைந்தவர்களாக இருப்பதும் இப்படி வம்பு பேசுவதும் இல்லாத மாணவர்களை உலகம் முழுவதும் தேடினாலும் காணமுடியாது. ஆனால் ஆசிரியர்கள் அறிவின் கம்பீரமும், தோற்றத்தின் கம்பீரமும் உள்ளவர்களாக இருந்தால் மாணவர்களை ஓரளவு கட்டுப்பாட்டோடு ஆளலாம்' என்று அவன் மனம் சிந்தித்தது. மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் போய்ப் பஸ் நிற்கிறவரை 'வற்றல் குழம்பை'யும் 'கீரை வடை'யையும் பற்றியே வெகு உற்சாகமாகப் பேசிக் கொண்டு வந்தார்கள் அந்த மாணவர்கள். அந்தப் பெயர்களெல்லாம் அப்பாவி ஆசிரியர்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும் பெயர்கள் என்று சிறிது நேரம் தொடர்ந்து அவர்களுடைய பேச்சைச் செவி மடுத்ததிலிருந்து சத்தியமூர்த்தி அனுமானம் செய்து கொண்டு அறிந்தான். அந்த மாணவர்களின் வம்பையும் வாயரட்டையையும் கேட்டுப் பக்கத்திலிருந்த தாவர இயல் விரிவுரையாளர் மருள்வதையும் அவன் கவனித்தான்.

மஞ்சு படிந்து மங்கிய கட்டிடங்களையும் மலைச் சூழ்நிலையில் கண்ணுக்குக் குளுமையாக அடங்கித் திரியும் மின் விளக்குகளுமாக இரவில் அந்த நகரம் மிக அழகாக இருந்தது. ஊரின் நடுமையாக இருந்த ஏரியில் மின் விளக்குகள் ஆடி அசைந்து பிரதிபலித்துக் கொண்டிருந்தன. வட்ட வடிவமாக இருந்த அந்த ஏரியைச் சுற்றிலும் சாலையில் வரிசையாக அமைந்திருந்த மின் விளக்குகள் அந்தரத்திலிருந்து நழுவி விழும் ஒரு மாபெரும் ஒளியாபரணத்தைப் போல் தோன்றியது. சில்லென்று மலைக்குளிர் உடம்பில் உறைத்தது. பஸ் நிலையத்தில் பஸ் வந்து நின்ற போது ஊரே உறங்கிப் போயிருப்பது போல அத்தனை அமைதியாக இருந்தது. உடன் பயணம் செய்த தாவர இயல் விரிவுரையாளருக்கு யாரோ தெரிந்தவர்கள் வீடு இருந்ததால் அங்கே தங்குவதற்குப் போய்விட்டார் அவர். பொருளாதார விரிவுரையாளரும் அவசரமாக இறங்கிப் போய்விட்டார். பஸ் கண்டக்டர் இறக்கி வைத்த சத்தியமூர்த்தியின் பெட்டிகளும் சாமான்களும் தரையில் இருந்தன. எங்கே போய்த் தங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி.

பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு வருவதாக நச்சரித்துக் கொண்டு இரண்டு மூன்று கூலிக்காரச் சிறுவர்கள் அவனைச் சூழ்ந்து நின்றார்கள். நிற்கவே முடியாமல் குளிர்ந்த மலைக் காற்றுச் சுழித்துச் சுழித்து வீசிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பூபதியின் வீட்டை தேடிக் கொண்டு தங்கப் போவது அநாகரிகமாக இருக்குமென்று தயங்கினான் அவன். கல்லூரிக்குப் போகலாமென்றால் 'இந்த வேளையில் அங்கு யார் இருக்கப் போகிறார்கள்?' என்று நினைத்து அந்த எண்ணத்தையும் கைவிட்டான். ஏரிக்கரையில் 'லேக் வியூ லாட்ஜ்' என்று ஒரு பெரிய விடுதி இருப்பதாகச் சொல்லி அங்கே போய்த் தங்கிக் கொள்ளலாமென்று கூலிக்காரப் பையன் வற்புறுத்திக் கொண்டிருந்தான். என்ன செய்வதென்று அவன் தயங்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாகப் பூபதியின் மகள் பாரதியே காரில் வந்து இறங்கினாள். அவளுடைய வரவும் வணக்கமும் ஒரே உற்சாகமாக இருந்தன.

"நாளைக் காலையில் கல்லூரி திறக்க இருப்பதால் நீங்கள் இன்றிரவு கடைசி பஸ்ஸுக்கு எப்படியும் வந்துவிடுவீர்கள் என்று நானாக நினைத்துக் கொண்டு தேடி வந்தேன் சார். நான் நினைத்தது சரியாகப் போயிற்று. அப்பா ஊரில் இல்லை. எஸ்டேட்டுக்குப் போயிருக்கிறார். புதிதாக வருகிற ஆசிரியர்களை வரவேற்றுத் தங்குவதற்கு இடம் கூட ஏற்பாடு செய்யாமல் பிரின்ஸ்பலும் ஹெட்கிளார்க்கும் என்னதான் வெட்டி முறிக்கிறார்களோ பாவம்! நீங்களானால் பஸ்ஸிலிருந்து இறங்கி இந்தக் குளிரில் திண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். வாருங்கள், உங்களைக் கல்லூரியில் கொண்டு போய் விடுகிறேன். கல்லூரி வாட்ச்மேனை எழுப்பி ஆசிரியர்கள் ஓய்வு கொள்ளும் அறையில் இன்றிரவு தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யலாம்" என்று அவள் கூறியபோது சத்தியமூர்த்தியின் நிலை தர்மசங்கடமாக இருந்தது. ஆர்வமும் அன்பும் நெகிழ்கிற குரலில் அவள் வேண்டிக் கொள்வதை அவனால் மறுக்க முடியவில்லை. அதே சமயத்தில் தயக்கமும் இருந்தது. அமைதியான அந்த இரவு நேரத்தில் அவள் வந்தது, நின்றது, அவசரப்படுத்தியது எல்லாம் வியப்புக்குரியனவாயிருந்தன. குளிருக்கு அடக்கமாக கிளிப்பச்சை நிறத்துக்கு ஓர் அழகிய கம்பளிச் சட்டை (ஸ்வெட்டர்) அணிந்திருந்தாள் அவள். இடையிலிருந்த வாடா மல்லிகை நிற வாயில் புடவைக்கும், அந்தப் பச்சைச் சட்டைக்கும் இயைபாக அவள் தோன்றிய தோற்றத்தில் ஏதோ ஓர் அழகு பிறந்து அவனைக் கவர்ந்தது.

"ஏன் இப்படித் தயங்குகிறீர்கள்? நீங்கள் இந்தப் பஸ்ஸில் தான் வருவீர்கள். உங்களை அவசியம் சந்திக்க வேண்டும் என்று தவித்துக் கொண்டு பரபரப்போடு ஓடி வந்திருக்கிறேன் நான். நீங்களோ பாராமுகமாகத் தயங்கி நிற்கிறீர்கள்?" என்று அவள் செல்லமாகக் கோபித்துக் கொள்கிற குரலில் அவனைக் கேட்டபோது தனது மௌனமும் தயக்கமும் அந்தப் பேதைப் பெண்ணின் மனத்தைப் புண்படுத்துகின்றன என்பது அவனுக்குப் புரிந்தது.

"தயக்கம் ஒன்றும் இல்லை! சட்டப்படி நாளைக் காலையிலிருந்து தான் நான் மல்லிகைப்பந்தல் கல்லூரியின் விரிவுரையாளன். இன்றே நான் தங்குவதற்கு இடமும் வசதிகளும் தேடித்தர வேண்டும் என்று கல்லூரி முதல்வரிடமிருந்தோ நிர்வாகியிடமிருந்தோ நான் உதவியை எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்? என் சொந்த ஏற்பட்டில் நானே தங்கிக் கொள்வதுதான் முறை! இல்லையா?" என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்ட போது அவள் முகம் வாடிவிட்டது.

"நான் ஏதோ தெருவில் போகிறவள் உங்களை அழைத்து உபசாரம் செய்ய வரவில்லை. நீங்கள் எந்தக் கல்லூரியில் வேலை பார்க்க வருகிறீர்களோ அந்தக் கல்லூரி நிர்வாகியின் மகள் என்ற முறையில் வந்து உங்களைக் கூப்பிட்டால் வருவீர்களோ இல்லையோ...?" என்று அவள் கேட்டபோது அவனால் மறுமொழி கூற முடியவில்லை. அவளுடைய பிடிவாதத்துக்கு முன் அவன் தோற்றான். கூலிக்காரச் சிறுவன் ஒருவனை ஏவி அவனுடைய பெட்டி முதலியவற்றைக் காரில் எடுத்து வைக்கச் செய்தாள் அவள். அவனைக் கல்லூரியில் கொண்டு போய்விட்டு வாட்ச்மேனை எழுப்பித் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்த பின்புதான் அவள் வீடு திரும்பினாள்.

அரைமணி நேரம் கழித்து வாட்ச்மேன் பிளாஸ்க்குடனும் ஒரு சீப்பு மலைப் பழத்துடனும் சத்தியமூர்த்தியைத் தேடி வந்து சேர்ந்தான்.

"பிளாஸ்கிலே பால் இருக்கு! எடுத்துக்குவீங்களாம்..." என்று அவற்றைச் சத்தியமூர்த்திக்கு அருகே கொண்டு வந்து வைத்த போதும் அந்த அன்பு தன்னைத் துன்பப்படுத்துவதாகவே அவன் உணர்ந்தான். நான்கு மலைப் பழத்தையும் பாலையும் அவன் எடுத்துக் கொள்வதைத் தானே எதிரேயிருந்து பார்த்த பின்புதான் 'வாட்ச்மேன்' அங்கிருந்து போனான்.

மறுநாள் காலையில் விடிந்தும் விடியாததுமாகக் கல்லூரியைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த ஹெட்கிளார்க்கையும் பிரின்ஸிபாலையும் சத்தியமூர்த்தி சந்திக்க நேர்ந்தது. அவர்களோடு பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே தான் அங்கு தங்கியிருப்பதோ தொடர்ந்து தங்குவதோ அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவனால் புரிந்து கொண்டு விட முடிந்தது. பூபதியின் மகள் தன்னை அங்கே அழைத்து வந்து தங்கச் செய்ததை வாட்ச்மேன் அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டுமென்றும் அவனுக்குத் தோன்றியது. இண்டர்வ்யூவுக்கு வந்திருந்த போது பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் இடையே கல்லூரி முதல்வரிடம் ஒரே ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது. மேவாய்க்குக் கீழே சின்னஞ்சிறு தேன்கூடு கட்ட ஆரம்பித்திருப்பதுபோல் புல்கானின் தாடி வளர்க்கத் தொடங்கியிருந்தார் கல்லூரி முதல்வர். அவருடைய முகத்தை முன்னிலும் விகாரமாகக் காண்பிப்பதில் இந்தப் புதிய தாடி மிக மிக ஒத்துழைத்துக் கொண்டிருந்தது.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி... லேக் அவென்யூவில் நிறைய மாடி ரூம்கள் கிடைக்கும். நான் வேண்டுமானால் நம் ஹெட்கிளார்க்கிடம் சொல்லி உங்களுக்கு ஒரு ரூம் பார்க்கச் சொல்லட்டுமா?" என்று அவன் அங்கிருப்பது தமக்குப் பிடிக்காததை மிகவும் நாசூக்காகக் கூறியிருந்தார் கல்லூரி முதல்வர்.

"உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம் சார். இன்றைக்குச் சாயங்காலத்துக்குள் நானே ஒரு ரூம் பார்த்துக் கொண்டு போய்விடுவேன்" என்று அவர் கேட்காத கேள்விக்கும் சேர்த்து அவருக்குப் பதில் சொன்னான் அவன்.

அந்தப் பதிலைக் கூறிவிட்டுத் தனக்குள் சிந்திக்கத் தொடங்கிய சத்தியமூர்த்தி, 'இனி ஒவ்வொரு நாளும் இந்தத் திமிங்கலத்தோடு நாம் போராடி வெல்ல வேண்டியிருக்கும்' என்ற எதிர்கால நிகழ்ச்சியை இன்றே நினைவு கூர்ந்தான்.

அத்தியாயம் - 17

மனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும் எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும் முன் கூட்டியே தெரியாமலிருப்பதுதான்.

அந்த அதிகாலை நேரத்தில் மல்லிகைப் பந்தலின் வீதிகளில் நடந்து செல்வதே உற்சாகமாக இருந்தது. ஏறி இறங்கி மேடும் பள்ளமுமாக உயர்ந்தும் தாழ்ந்தும் செல்லும் சாலைகளின் இருபுறமும் ஒரே வரிசையாக நேர்கோடு பிடித்து நிறுத்தினாற் போல் நிற்கும் மரங்களும், குளிர்ந்த காற்றும் 'இந்த வீதியில் நாம் மகிழ்ச்சியோடும், பெருமிதத்தோடும் தாராளமாகக் கால்களை வீசி நடக்கலாம்' என்று நடக்கிறவனையே கர்வப்படச் செய்கிற வீதிகளாயிருந்தன அவை. 'லேக் அவென்யூ' என்று சொல்லப்பட்ட பகுதி அழகாக அமைந்திருந்தது. நகரின் நடு மையத்தில் வட்ட வடிவமான ஏரியைச் சுற்றி ஒரே அளவான மாடி வீடுகள் அந்த இடத்தின் வனப்பையே அதிகப்படுத்துவன போல் ஒத்த அமைப்போடு சீராக இலங்கின. நகரின் அழகுக்காக ஏரியைச் சுற்றியுள்ள 'லேக் சர்க்கிளில்' வீடு கட்டுகிறவர்கள் யாராக இருந்தாலும் ஒரே பிளானில் ஒரே திட்டத்தோடு தான் வீடுகளைக் கட்ட வேண்டும் என்று மல்லிகைப் பந்தல் நகரவையில் சட்டம் இருப்பதாகச் சத்தியமூர்த்தி கேள்விப்பட்டிருந்தான். எந்த இடத்தில் ஆரம்பித்தாலும் மறுபடியும் அந்த இடத்திற்கே வந்து முடிகிறார் போல் வட்ட வடிவமான ஏரியின் கரையில் ஏரிக்கும் வீடுகளுக்கும் நடுவே அகன்ற சாலையோடு அந்த வீதி அமைந்திருந்தது. முழுவட்டமான அந்த வீதியின் மொத்தச் சுற்றளவு பத்து மைல். ஆதலால் அதற்கு 'டென் மைல்ஸ் ரவுண்டு' என்றும் அந்த ஊரில் ஒரு பெயர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த அமைப்பின் படி வீதியின் ஒரு சிறகில் மட்டுமே வீடுகள் இருந்தன. எதிர்ச் சிறகில் ஒரே அளவாய் நெடிதுயர்ந்த மரங்களுக்கு அப்பால் பளிங்கு நீர் சலசலக்க ஏரி அகன்று விரிந்திருந்தது. ஒரே சீராக வாய்த்திருந்த ஒவ்வொரு வீட்டு வாயிலிலிருந்தும் மாடி பால்கனியிலிருந்தும் எதிரே பார்த்தால் வெள்ளை அல்லிப் பூக்களும், செவ்வல்லிப் பூக்களுமாக ஏரி நீர்ப் பரப்பும் அதில் அங்கும் இங்குமாக விரைந்து கொண்டிருக்கும் படகுகளும் மனிதர்களும் தெரிவார்கள். மேலை நாட்டுப் பாணியில் நடத்தப்படுகிற பெரிய பெரிய ஓட்டல்களும், திரைப்பட அரங்குகளும், கடைகளும், கம்பெனிகளும், எல்லாம் ஏரியைச் சுற்றியிருக்கும் இந்தப் பத்து மைல் வட்டத்துக்குள்ளேயே இருந்தன.

மல்லிகைப் பந்தல் நகரத்தின் உயிர்நாடியான பகுதி 'லேக் சர்க்கிள்' எனப்படும் இந்த 'டென் மைல்ஸ் ரவுண்டு' தான். ஒரே வரிசையான அளவொத்த மரம் செடி கொடிகளும் ஏரிக்குக் கரையிட்டாற் போல் பத்துமைல் சுற்றளவும் விளிம்பில் வகுக்கப்பட்டிருந்த சிறு பூங்காவும் எவர் கண்டாலும் மயங்கி விடும்படியான பெருமையை அந்த ஊருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தன. நான்கு பக்கமும் ஆகாயத்தின் நீல விளிம்போடு போய்க் கலக்கும் மலைகளின் நீலச் சிகரங்களுக்குக் கீழே சுற்றிலும் முத்துப் பதித்துக் குழிந்த கண்ணாடியை நடுவே வைத்தாற் போல் அந்த ஏரியும் வீடுகளும் மேலே மலையிலிருந்து பார்க்கிறவர்களுக்குத் தெரியும். பூபதி அவர்களின் கலைக் கல்லூரியும், மாணவர்களின் விடுதிகளும் இந்த மேட்டிலிருந்து கீழே லேக் சர்க்கிளில் போய்க் கலக்கும் சிறிய சாலை ஒன்றில் அப்போது நடந்து சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரியிலிருந்து புறப்படுமுன் தனக்கும், முதல்வருக்கும் இடையே நிகழ்ந்திருந்த உரையாடலை மீண்டும் நினைத்த போது கல்லூரி எல்லைக்குள் தான் மேலும் ஒரு வினாடி கூடத் தங்கியிருப்பது புத்திசாலித்தனமில்லை என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தான் அவன்.

"சாயங்காலத்துக்குள் நான் வேறு ரூம் பார்த்துக் கொண்டு போய் விடுகிறேன் சார்!" என்று அவன் கல்லூரி முதல்வரிடம் கூறியபோது, "நோ... நோ... நீங்கள் நம் கல்லூரி எல்லைக்குள் தங்கியிருப்பது எங்களுக்கு வசதிக் குறைவாக இருக்கும் என்பதாக நான் நினைக்கிறேனோ என்று என்னைத் தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இங்கே தங்கியிருக்கலாம். என் தலையில் கட்டிக் கொண்டு போவது ஒன்றுமில்லை. உங்கள் சௌகரியத்துக்காகத்தான் சொல்ல வந்தேன்..." என்று மேவாய்க்குக் கீழே நரையும் கருமையுமாகக் கலந்து வளரத் தொடங்கியிருந்த புல்கானின் தாடியைத் தடவிக் கொண்டே உபசாரமாக அவனுக்குப் பதில் சொல்லியிருந்தார் அவர்.

"ஆமாம்! ஆமாம்! நீங்கள் என் சௌகரியத்துக்காகத் தான் சொல்லுவீர்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன?" என்று அவருடைய பேச்சின் போக்கிலேயே அப்போது அவரை மடக்கிப் பேசி அனுப்பியிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி முதல்வரும் ஹெட்கிளார்க்கும் சரியான ஆஷாட பூதிகள் என்பது காலையில் அவர்களைச் சந்தித்த முதற் பார்வையிலேயே அவனுக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது. அதைப் புரிந்து கொண்ட மறுகணமே அவன் அங்கிருந்து உலாவப் புறப்படுவது போல் வெளியேறித் தங்கி வசிக்க அறை தேடுவதற்காக 'லேக் அவென்யூ'வுக்குப் புறப்பட்டு விட்டான். அவசரத்துக்குத் தனி அறையாகக் கிடைப்பதைப் பார்த்துத் தேடித் தங்கிக் கொண்டாலும் வாடகையைப் பகிர்ந்து கொள்வதற்குப் பின்னால் இரண்டொருவரைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினான் அவன். காலை நேரமாகையால் வெய்யில் வருவதற்கு முன்பாகப் படகில் ஏறிச் சுற்றுகிறவர்களும், சுற்றுவதற்குப் படகு காலியாவதை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுமாக ஏரியும் ஏரிக்கரையும் பரபரப்பாக இருந்தது. கரை ஓரமாக நீலப் பட்டுக்குப் பல வண்ணச் சரிகைக் கரையிட்டதைப் போல் ஊதாவும், சிவப்பும், மஞ்சளும், வெள்ளையுமாகப் பூக்கள் கொள்ளை கொள்ளையாகப் பூத்திருந்தன. வேறு வேறு நிறங்களில் ஸ்வெட்டரும், மப்ளரும், கம்பளிப் போர்வையுமாக அணிந்து கொண்டு சாலையில் மக்கள் நடமாடத் தொடங்கியிருந்தனர்.

"மாடியில் றூம்கள் வாறகைக்கு வீழப்படும்' என்று கண்ணில் தெரிந்த முதல் விளம்பரப் பலகையே தப்பும் தவறுமாகத் தெரிந்தது. 'றாயல் பேக்கரி' என்று பெயர்ப் பலகை மாட்டிய ஒரு ரொட்டிக் கிடங்கின் கதவுகளில் தான் அந்த விளம்பரம் தொங்கிக் கொண்டிருந்தது. கண்களைக் கசக்கிக் கொண்டு மறுபடியும் நன்றாகப் பார்த்தான் சத்தியமூர்த்தி. 'றூம்கள் வாறகைக்கு வீழப்படும்' என்று தான் இருந்தது. ரொட்டிக் கடைக்காரரோ இல்லையோ, மாவை அழுத்திப் பிசைகிற ஞாபகத்தில் போர்டையும் அழுத்தமாக எழுதியிருக்கிறார். ரூம்கள் அழுத்தமாக இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்காகவோ என்னவோ "றூம்கள்' என்று போட்டிருக்கிறார் என வேடிக்கையாக எண்ணிக் கொண்டே விசாரிப்பதற்குப் படியேறினான் சத்தியமூர்த்தி. பாதி மலையாளமும், பாதி தமிழுமாக வந்து பதில் சொல்லியவர் தெளிவில்லாமல் ஏதோ பேசினார். கால் மணி நேரம் தொண்டைத் தண்ணீர் வற்றிய பின்பே அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மாடியில் போய் அறையைப் பார்த்தான் சத்தியமூர்த்தி. அந்த மாடியில் மொத்தம் மூன்று அறைகள் இருந்தன. குளியலறை முதலிய வசதிகள் எல்லாம் மூன்று அறைகளுக்கும் பொதுவாகவே இருந்தன. மாடியின் பின்புறமாகக் கீழே ஏராளமான சண்பக மரங்கள் காடு மண்டிக் கிடந்ததனால் அவற்றின் கிளைகள் பின் பக்கத்து வராந்தாவில் குளியலறைக்கு அருகே வந்து கொஞ்சிக் கொண்டிருந்தன. சண்பக மணமும் ரொட்டிக்கடை நறுமணமும் சேர்ந்து மாடியில் வந்து தவிர்க்க முடியாமல் பரவிக் கொண்டிருந்தன. மாடியின் பின் பக்கத்து வராந்தாவிலிருந்து பார்த்தால் எங்கிருந்தோ வேகமாக இறங்கி வந்து கொண்டிருப்பது போல் மிக அருகே நீல மலைகள் தெரிந்தன. ஆளைப் பிடித்துக் கீழே தள்ளி விடுகிறார் போல் குளிர்ந்த காற்று பாய்ந்து பாய்ந்து வீசியது.

அறைக்குள் போவதற்கு முன் அவசரமாக ஒரு விநாடி திரும்பிப் பார்த்தாலும் வராந்தாவுக்கு அப்பால் ஏதோ அழகாக நிறைந்து கிடப்பதை மீண்டும் ஒருமுறை நோக்கவோ புரிந்து கொள்ளவோ முடியும். அவசரமாயினும் ஞாபகத்திலும் பார்வையிலும் தாமாகவே வந்து பதிந்து கொள்கிற நுணுக்கமான அழகுகள் அவை. வாடகை முதலிய விவரங்களைக் கூறுவதற்கு முன், 'சத்தியமூர்த்தி எதற்காக எந்த வேலையை ஏற்றுக் கொண்டு அந்த ஊருக்கு வந்திருக்கிறான்?' என்பது போன்ற சில விவரங்களை அறிந்து கொள்வதற்காக அவனிடம் விசாரித்தார் அந்த வீட்டின் சொந்தக்காரர். பூபதி கலைக் கல்லூரியின் பெயரைச் சொல்லிய மறுகணமே அந்த மனிதர் விசாரிப்பதை நிறுத்திக் கொண்டு அடங்கி விட்டதைக் கண்டு சத்தியமூர்த்தியே வியப்படைந்தான். தொழிலதிபர் பூபதியும், அவருடைய கல்லூரியும் அந்த ஊரில் எவ்வளவு கௌரவத்துக்கும், பெருமைக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவன் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒருவாறு விளங்கிக் கொள்ள முடிந்தது.

"அறை ஒன்றுக்கு மாதம் நாற்பத்தெட்டு ரூபாய் வாடகை. ஒருவரே அந்த வாடகையைக் கொடுத்துக் கொண்டு தனி ஆளாக இருப்பதானாலும் ஆட்சேபனையில்லை. வாடகையைப் பகிர்ந்து கொள்ள இன்னும் யாராவது வைத்துக் கொள்ள உத்தேசம் இருந்தால் அறை எவர் பெயருக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறதோ அவரைத் தவிர இன்னும் இரண்டு பேரை மட்டும் உடன் தங்கச் செய்து கொள்ளலாம். அப்படி உடன் தங்குகிற இருவரிடமும் தலைக்குப் பதினாறு பதினாறு ரூபாய்க்கு மேல் ஒரு சல்லிக் காசுகூட வசூலிக்கக் கூடாது. அதை வசூலிக்கும் பொறுப்பும் முதலில் அறை எடுத்துக் கொள்கிறவரைச் சேர்ந்ததுதான். வீட்டுக்காரர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு முடியாது. முதலில் அறை எடுத்துக் கொள்கிறவர் மாதம் பிறந்ததும் வீட்டுக்காரரிடம் ரூபாய் நாற்பத்தெட்டை எண்ணி வைத்து விட வேண்டும். குளியலறையில் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும். இரவு பத்து மணிக்கு மேல் மின்சார விளக்கை உபயோகிப்பது நல்லதில்லை. அறைச்சுவரில் அநாவசியமாக ஆணிகளை அடித்துப் பாழாக்கக் கூடாது. வீட்டுக்காரர், வசிப்பவர் இருவரில் யார் தரப்பிலிருந்து காலி செய்ய விரும்பினாலும் மூன்று மாதம் முன் தகவல் கொடுத்துவிட்டுக் காலி செய்ய வேண்டும். முதலில் அறை எடுத்துக் கொள்கிறவரோடு உடன் தங்குகிற மற்ற இருவரையும் வெளியேற்றும் உரிமை அவருக்கே உண்டு. இந்த இருவரைப் பற்றி எந்தக் கவலையும் வீட்டுக்காரர் பட முடியாது" என்று 'றூம்கள் வாறகைக்கு வீழப்படுவதற்கு' உரிய நிபந்தனைகள் சத்தியமூர்த்தியிடம் வரிசைக் கிரமமாக ஒப்புவிக்கப்பட்டன. அந்தச் சிறிய அறையை வாடகைக்குப் பேசி முடிப்பதை ஏதோ பெரிய 'நேச தேச உடன்படிக்கை' செய்வது போலச் செய்ய வேண்டியிருந்தது. நிபந்தனைகளைக் கையெழுத்துப் போடுவதற்கு இடம் மட்டும் மீதம் விட்டு முன்னேற்பாடாக ஆங்கிலத்தில் 'டைப்' செய்து வைத்திருந்தார் வீட்டுக்காரர். 'றூம்கள் வாறகைக்கு வீழப்படும்' நிபந்தனைகளின் கீழே கையெழுத்துப் போட்டு வீட்டுக்காரரிடம் முன் பணம் கொடுத்தான் சத்தியமூர்த்தி.

அவன் அந்த வீட்டுக்காரரின் நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு முன் பணம் கொடுத்துச் சாவியைக் கையில் வாங்கிக் கொண்டு கல்லூரிக்குத் திரும்பிய போது, காலை எட்டேகால் மணி. மலைப்பகுதியாதலால் இன்னும் வெய்யிலே வரவில்லை. கல்லூரி அறையிலிருந்து பெட்டி சாமான்களை எடுத்துக் கொண்டு போவதற்குத் தயாராக லேக் அவென்யூவிலிருந்து திரும்பும்போதே ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் திரும்பியிருந்தான் அவன். அங்கே கல்லூரி வாட்ச்மேன் பிளாஸ்கில் காப்பியோடு அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

"சார், நீங்க பாட்டுக்குச் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டுப் போயிட்டீங்களே? அந்தம்மா காப்பி கொடுத்தனுப்பியிருக்காங்க. நீங்க குளிச்சுத் தயாரானது தெரிஞ்சப்புறம் என்னைச் சைக்கிளில் புறப்பட்டு வரச் சொல்லியிருக்காங்க. நான் போய் உங்களுக்கு டிபன் கொண்டு வரணும்" என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்த 'வாட்ச்மேனிடம்' பெட்டியைக் கொடுத்து வாசலில் நிற்கும் ரிக்ஷாவில் கொண்டு போய் வைக்கச் சொன்னான் சத்தியமூர்த்தி. "ஏன் சார் வேறே எங்கேயாவது போய்த் தங்கப் போறீங்களா?" என்று கேட்டுவிட்டுக் கேள்வியோடும் பெட்டியோடும் தயங்கி நின்றான் வாட்ச்மேன்.

"ஆமாம்! லேக் அவென்யூவில் ராயல் பேக்கரி ரொட்டிக் கிடங்கு மாடியில் நல்ல அறையாகக் கிடைத்துவிட்டது. பேசி முன் பணமும் கொடுத்துவிட்டேன். 'அந்தம்மா வந்தாலும் இதைத் தெரிவித்துவிடு' என்று சொல்லிவிட்டுப் பெட்டியை விரைவாக ரிக்ஷாவில் கொண்டு போய் வைக்குமாறு அவனைத் துரிதப்படுத்தினான் சத்தியமூர்த்தி.

ஒன்பது மணிக்குள் அவன் மறுபடி லேக் அவென்யூவுக்கு வந்து அந்த ரொட்டிக் கிடங்கின் மாடியறையில் அவசர அவசரமாகக் குடியேறிவிட்டான். அங்கே வந்து தங்கிவிட்டதை உறுதிப்படுத்தும் நிச்சயமான சாட்சியைப் போல் மாடி வராந்தாவில் நிறைந்திருந்த சண்பகப்பூ வாசனை கமகமத்துக் கொண்டிருந்தது. எதிர்ப்புறம் நீலப்பெரும் பரப்பாய் ஏரி தன் அழகிய சிறிய அலைகளை மடித்துக் கொண்டு கிடந்தது. கீழே ரொட்டிக் கிடங்கிலிருந்து சர்க்கரைப் பாகு முறுகுவது போன்ற ஒரு வித வாசனையும் வந்து பரவிக் கொண்டிருந்தது. அதைத் தனி அறையாகத் தன் உபயோகத்துக்கு மட்டும் வைத்துக் கொண்டு நாற்பத்தெட்டு ரூபாய் நிச்சயமாக அவனால் கொடுக்க முடியாது. இன்னும் ஒரு வாரத்துக்குள் வெளியூரிலிருந்து தனிக்கட்டையாக அங்கு தன்னைப் போலவே வந்திருக்கும் ஆசிரியர்களையோ அல்லது வேறு மனிதர்களையோ - இரண்டு பேரை உடன் வசிப்பவர்களாகச் சேர்த்துக் கொண்டுவிட வேண்டும் என்று அவன் தனக்குள் சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

அன்று முதல் நாளாக இருந்ததனால் பதினோரு மணிக்குக் கல்லூரி திறப்பதாக அறிவித்திருந்தார்கள். லேக் அவென்யூவிலிருந்து கல்லூரிக் காம்பவுண்டை அடைவதற்கு அரைமணி நேரமோ, அல்லது அதற்கும் சிறிது குறைவான நேரமோ நடந்து போக வேண்டியிருக்கும் என்று தோன்றியது. ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டே நடந்து போவதற்கு ஏற்ற சுகமான சாலை அது. எனவே ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று முறை அந்தச் சாலை வழியே நடந்து போய்த் திரும்ப வேண்டியிருக்குமே என்பதை எண்ணிச் சத்தியமூர்த்தி மகிழ்ச்சி அடைந்தானே தவிரக் கவலைப்படவில்லை. அறைக்குள் மொத்தம் நான்கு அலமாரிகள் இருந்தன. ஒன்றில் தன் புத்தகங்களைப் பிரித்து அடுக்கினான் அவன். தன்னுடைய பொருள்களை எல்லாம் அந்த அறைக்குள் ஒழுங்குபடுத்தி வைத்த பின் நீராடச் சென்றான். மல்லிகைப் பந்தலின் குளிர்ந்த நீர் பட்டுப் போல் மென்மையாயிருந்தது. குழாயைத் திறந்ததும் குளிர்ந்த நீர் சில்லென்று சிலிர்த்துக் கொண்டு கொட்டியது. அவ்வளவு அருமையாகத் தண்ணீர் ஏற்பாடு செய்திருக்கும் மல்லிகைப் பந்தல் நகரசபையை வாழ்த்தியது அவன் உள்ளம். நீராடிவிட்டுத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தவன் கையில் பிளாஸ்க்குடன் அறை வாசலில் சாய்ந்தாற் போல் நின்று கொண்டிருந்த பாரதியைச் சந்தித்தான். கூச்சமும் பயமுமாக அந்தக் கோலத்தில் அவளைக் கடந்து அறைக்குள் போவதற்கே திகைத்துத் தயங்கினான் அவன். சாதாரணமாக ஆண் பிள்ளைகளுக்கு முன்னிலையிலே திறந்த மார்போடு நிற்பதையோ, நடப்பதையோ கூட விரும்பாதவன் இப்போது அந்தப் பெண்ணுக்கு முன்பாக இன்னும் கூசி நின்றான். பாரதியும் அந்த நிலையில் அவனிடம் என்ன பேசுவதென்று தோன்றாமல் நாணித் தயங்கினாள்.

ஈரம்பட்டுச் செந்தாமரைப் பூக்களாகச் சிவந்திருந்த அவனுடைய பாதங்களையும் இழைத்த சந்தனத்துண்டு போல் மினுமினுக்கும் பொன்னிறத் தோள்களையும் பாராதது போல் பார்த்து மறுபடியும் பார்க்கத் தவிக்கும் கண்களோடு நின்று கொண்டிருந்தாள் அவள். நாணித் தலையைக் குனிந்து கொள்ளும் பாவனையில் அவனுடைய தங்கத் திருவடிகளையும் அவற்றில் வெண்முத்துப் பதித்தாற் போன்ற நகங்களையும் அவள் சுலபமாகக் காண முடிந்தது. அந்தக் கால்கள் குளியலறையிலிருந்து நடந்து வந்த வழியெல்லாம் சித்திரம் பதித்தாற் போல் நீர்ப் பிரதிகளில் பாதக் கோலமாகப் பதிந்திருந்தன. கண்ணன் பிறப்புக்கு மாக்கோலம் போட்டதுபோல் அளவாகத் தெரிந்த அந்த நீர்ப் பிரதிகளை ஓடிப்போய் இரண்டு கைகளாலும் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டுவிட வேண்டும் போலத் தவித்தாள் அவள். பொன்னில் வார்த்துக் குழைத்தெடுத்தாற் போன்ற அந்தத் தோள்களை இன்னொரு முறை எப்படியும் பார்த்துவிட வேண்டுமென்று அவள் தன் அழகிய கண்களில் பார்வையை நிமிர்த்தி ஓரமாகச் சாய்த்தபோது அவன் தன் கையில் பிழிந்து வைத்திருந்த ஈரத்துண்டை மெல்ல உதறி மேலே போர்த்திக் கொண்டிருந்தான். ஆவலோடு கண்களை திருப்பிய அவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அந்த நிலையில், பாரதிக்கு ஒரு கவிதை நினைவு வந்தது. அம்பிகாபதி - அமராவதி கதையை நவீன காவியமாக எழுதி வெளியிட்டிருந்தார் நவநீத கவி என்ற கவி. அவர் ஒரு மறுமலர்ச்சித் தமிழ்க் கவிஞர். அதில் ஒரு பாட்டு பாரதிக்கு மனப்பாடமே ஆகியிருந்தது. அவளுக்கு மிகவும் பிடித்த பாட்டு அது.

பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும்
பாரா திருந்தே தவித்ததுவும்
யார்க்கும் தெரியா திணைந்ததுவும்
யாரும் அறிந்தே பிரிந்ததுவும்
பேசத் தவித்துப் பேசியதுவும்
பேசா திருந்தே தவித்ததுவும்
நேசம் தெரிந்து மணந்ததுவும்
நீசர் கலைக்கக் கலைந்தனவே

கவிதை இன்பத்துக்காக நூறு பாடல்களே உள்ள அந்தப் புத்தகத்தை ஏழெட்டுமுறை படித்திருக்கிறாள் அவள். இப்போதும் அவளுக்கு விருப்பமான அந்தப் பாட்டுத்தான் நினைவு வந்தது. அந்தப் புத்தகத்தின் பெயரே 'ஞாபக மலர்கள்' என்று வைக்கப்பட்டிருந்தது. சென்ற வருடம் அவளுடைய பிறந்த நாளன்று கல்லூரித் தோழி ஒருத்தி இந்த 'ஞாபக மலர்களை' அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தாள். 'பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும், பாராதிருந்தே தவித்ததுவும்' என்ற ஒரு வரியை பாரதி இப்போது திரும்பத் திரும்ப நினைத்தாள்.

சத்தியமூர்த்தியின் இந்தப் பாதங்களைப் பார்க்கும் போதும் அவள் தவித்தாள். பார்க்க முடியாத போதும் தான் அவள் தவித்தாள். இந்த உணர்ச்சியை அந்தக் கவி எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்?

"வழி விடுகிறீர்களா? உள்ளே போய் உடை மாற்றிக் கொண்டு வந்துவிடுகிறேன்" என்று கேட்டுக் கொண்டே அவன் மிக அருகில் வந்துவிட்ட பிறகுதான் அவள் சுயநினைவு வரப்பெற்று விலகி நின்று அவனுக்கு வழிவிட்டாள். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்துச் சத்தியமூர்த்தி உடைமாற்றிக் கொண்டு மின்னல் எதிரே நிற்பது போலப் பளீரென வெண்மையுடுத்தி நின்றான். சிரித்துக் கொண்டே அவளிடம் பேசலானான் அவன். "உங்களுக்கு மிகவும் சிரமம் கொடுத்துவிட்டேன். நீங்கள் என்னைத் தேடிக் கொண்டு இங்கேயெல்லாம் வந்து நிற்பீர்களென்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் இன்று காலையில் ரூம் தேடி வந்தபோது இந்த இடம் அகப்பட்டது. உடனே முன்பணம் கொடுத்துப் பேசிக் கொண்ட பின் இங்கே குடியேறிவிடத் தீர்மானித்தேன். விடிந்ததும், பிரின்ஸிபலும், ஹெட்கிளார்க்கும் கல்லூரியைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் பேச்சு, பார்வை எல்லாம் ஒரு மாதிரி இருந்தது. எனக்குப் பிடிக்கவில்லை. இங்கே வந்துவிட்டேன்..."

"..."

சில விநாடிகள் ஒன்றும் பேசாமல் மன அழுத்தத்தோடு உதட்டைக் கடித்துக் கொண்டிருந்த பாரதி பின்பு நிதானமாக அவனைக் கேட்கலானாள்.

"பிரின்ஸிபலையும், ஹெட்கிளார்க்கையும் தான் பிடிக்கவில்லையா? என்னையும் சேர்த்துப் பிடிக்காமல் போய்விட்டதா?"

"அதுசரி... உங்கள் தந்தை எஸ்டேட்டிலிருந்து திரும்பி விட்டாரா இல்லையா?" என்று அவள் கேள்விக்குப் பதில் கூறாததோடு சிரித்துக் கொண்டே அதற்குச் சம்பந்தமில்லாத வேறொரு கேள்வியையும் அவளிடம் கேட்டான் சத்தியமூர்த்தி.

"அப்பா திரும்பிவிட்டார். காலையில் அவர் திரும்பியதும் நீங்கள் வந்திருப்பதையும் கூடச் சொல்லிவிட்டேன். எதற்காக இப்படிப் பேச்சை மாற்றுகிறீர்கள்? காலையில் எழுந்ததும் எழுந்திராததுமாகச் சமையற்காரரைக் கூட அருகில் நெருங்க விடாமல் நானே என் கையால் காப்பிப் போட்டுப் பிளாஸ்க்கில் ஊற்றி உங்களுக்குக் கொடுத்தனுப்பினேன். நீங்களோ அந்தக் காப்பியைப் பிளாஸ்க்குடன் அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறீர்கள். நேற்றானால் அந்த அகாலத்தில் இருட்டென்றும் குளிரென்றும் பாராமல் நான் உங்களை அழைத்துக் கொண்டு போகப் பஸ் நிலையத்துக்கு வந்தேன். அப்போதும் நீங்கள் என்னிடம் சுமுகமாக இல்லை. பிரியப்பட்டுத் தவித்துக் கொண்டிருப்பவர்களை என்னதான் சொல்வது..." என்று சீறுகிறாற் போன்ற வார்த்தைகளால் அவனைச் சாடிக் கொண்டே பிளாஸ்க்கைத் திறந்து அதன் மூடிக்குள்ளே அடங்கியிருந்த சிறிய பிளாஸ்டிக் 'கப்'பில் ஆவி பறக்கும் காப்பியை ஊற்றி நீட்டினாள் அவள். அதை மறுக்காமல் வாங்கிப் பருகிய சத்தியமூர்த்தி, "உங்களுடைய கோபத்தைப் போலவே காப்பியும் சுவையாகத்தான் இருக்கிறது. ஆனால் பாவம்...! பிரியப்பட்டுத் தவித்துக் கொண்டிருப்பவர்களைப் புரிந்து கொள்ளத் தெரியாத கல்மனம் படைத்தவனைத் தேடி நீங்கள் இதை எடுத்துக் கொண்டு வந்திருக்க வேண்டாம்" என்று குறும்பு தொனிக்க மறுமொழி கூறினான். இதைக் கேட்டு அவள் கன்னங்களில் செம்மை குழம்பி நாணம் கனிந்தது. அவ்வளவு பெரிய செல்வச் செருக்கு நிறைந்த வீட்டில் பிறந்து வளர்ந்திருந்தும் அவளிடம் மிக மென்மையான நாணமும் இருப்பதைக் கண்டு சத்தியமூர்த்தி மகிழ்ந்தான். பெண்களை ஆண்கள் போலப் பிறரிடம் பழகுவதற்குப் பழக்கப்படுத்திவிட்டு ஆண்கள் விலகியிருந்து பெருமைப்பட்டுக் கொள்ளும் பெரிய குடும்பங்கள் பலவற்றைச் சத்தியமூர்த்தி பரிதாபத்தோடு பார்த்திருக்கிறான். 'மாணவ மாணவிகளிடம் நெருப்புக் காய்வதுப் போல் அதிகம் விலகிவிடாமலும், அதிகம் நெருங்கி விடாமலும் பழகவேண்டும்' என்று இண்டர்வ்யூவின் போது பூபதி கூறியிருந்த வாக்கியங்கள் அவனுக்கு இன்னும் மறக்கவில்லை. இதயங்கள் மலர எண்ணங்கள் மலர மெய்யான பிரியத்தைச் சுமந்து கொண்டு எதிரே வந்து நிற்கும் பாரதியையும், அவளுடைய தந்தையின் அறிவுரையையும் இணைத்து நினைத்த போது அவனுடைய நினைப்பு ஒழுங்காக வராமல் நடுவில் ஏதோ சிறிது தடுமாறியது. அந்தப் பெண் அடிக்கடி தன்னைத் தேடி வருவதையும், பார்த்துப் பேசத் தவிப்பதையும் எப்படிக் குறைத்துக் கொள்ளச் செய்யலாமென்று நேற்றிலிருந்தே ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. பிரின்ஸிபலும், ஹெட்கிளார்க்கும் காரணமில்லாமலே தம்மேல் பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கிற சமயத்தில் இந்தப் பெண் தேடி வருவதும், பார்ப்பதும், சிரிப்பதும் அவர்களுடைய பொறாமையை மேலும் வளர்த்து விபரீதமாக்கிவிடக் கூடாதே என்று அவன் தயங்கினான். 'நாணமும் அச்சமும் மடநாய்களுக்கும் அன்றோ வேண்டும்' என்று பாரதியார் ஆவேசமாகப் பாடியிருந்தாலும் சமூக வாழ்க்கையில் ஆண்மகனும் கூட அச்சமும் நாணமும் படவேண்டிய இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பழி வருகிற இடங்களை நினைத்தால் பயப்படாமலும் நாணப்படாமலும் இருக்க முடியாது. தன் மனத்தையும், நேர்மையையும் அரித்துத் தின்று விடுகிற சபலங்கள் தீரனுடைய வாழ்க்கையில் ஒரு போதும் குறுக்கிடக் கூடாது. புகழோடு வாழ முடியாமற் போகலாம்; ஆனால் பழியில்லாமல் வாழவேண்டும். 'பழியில்லாமல் வாழ்வதே வீரம்' என்று இப்படி எல்லாம் அவன் மனத்தில் நினைவுகள் ஓடின. அப்போது பிளாஸ்க்கைத் திருகி மூடியபடியே அவனைக் கேட்டாள் அவள்.

"இந்த வேளை உங்களுக்கே கிடைத்து நீங்கள் இங்கே வந்துவிட வேண்டுமென்று இராப் பகலாக நான் தவித்த தவிப்பு உங்களுக்குத் தெரியுமா சார்?..."

"நன்றாகத் தெரியும். அதற்காக நீங்கள் மிகவும் சிரமப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய கடிதங்கள் இரண்டும் நீங்கள் தவித்த தவிப்பை எனக்குப் பறைசாற்றுகின்றன. அத்தனை அழகான வாக்கியங்களால் ஒரு கடிதத்தையும் அதுவும் போதாமல் மற்றொரு கடிதத்தையும் எழுதிய உங்களை எப்படிப் பாராட்டுவதென்றே எனக்குத் தெரியவில்லை. அந்தக் கடிதங்கள் இன்னும் அப்படியே பசுமையாக என் மனதில் பதிந்திருக்கின்றன."

"கடிதங்கள் மட்டும் மனத்தில் பதிந்து விட்டால் போதுமா? அதை எழுதியவளைப் பற்றிய ஞாபகம் கொஞ்சம் கூடப் பதிந்ததாகத் தெரியவில்லையே...?" என்று அவள் கேட்ட கேள்விக்குச் சத்தியமூர்த்தி பதில் சொல்லாமல் இருந்தான். வெளியே வெயில் பரவியிருந்ததால் பால்கனிக்கு அப்பால் ஏரி நீர் வெள்ளிக்குழம்பாய்ப் பளபளக்கத் தொடங்கியிருந்தது. மணியும் ஏறக்குறையப் பத்தேகால் ஆவதற்கு இருந்தது.

"நீங்கள் நவநீதக் கவியின் 'ஞாபகமலர்கள்' என்ற புத்தகம் படித்திருக்கிறீர்களா சார்?" என்று இருந்தாற் போலிருந்து ஒரு புதிய கேள்வியை அவனிடம் கேட்டாள் பாரதி.

"ஏன்? படித்திருக்கிறேன். அதில் என்ன?" என்று சிறிது நேரம் பொறுத்துச் சத்தியமூர்த்தி அவளுக்குப் பதில் கூறினான்.

"ஒன்றுமில்லை! அதில் ஒரு பாட்டு உண்டு. 'பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும்... பாராதிருந்து தவித்ததுவும், பேசத்தவித்து பேசியதுவும், பேசாதிருந்து தவித்ததுவும்' என்று வரும். உங்களைப் பார்த்த நாளிலிருந்தே நானும் அப்படித்தான் இருக்கிறேன். நான் ஏன் இப்படிப் பைத்தியமானேன் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது."

"மனித வாழ்க்கையிலிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும், எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும் முன்கூட்டியே தெரியாமலிருப்பதுதான்..."

"அந்த ஆச்சரியம் என் வாழ்வில் நேர்ந்துவிட்டது" என்று தைரியமாக அவன் முகத்தைப் நிமிர்ந்து பார்த்துச் சொன்னாள் அவள். அந்தத் துணிவையும் உறுதியையும் பார்த்துச் சத்தியமூர்த்தி மலைத்துப் போனான். கல்லூரிக்கு நேரமாகிவிட்டது என்று அவளே அப்போது அவனுக்கு ஞாபகப்படுத்தினாள். அறையைப் பூட்டிக் கொண்டு அவன் கல்லூரிக்குப் புறப்படத் தயாரானான். மறுக்க முடியாத காரணத்தால் அவன் கல்லூரிக் 'காம்பவுண்ட் கேட்' வரை அவளோடு அவள் காரிலேயே போய் இறங்கிக் கொள்ள நேர்ந்தது.

அத்தியாயம் - 18

உண்மை பெரிய கோபுரத்தைப் போன்றது. கோபுரத்துக்கு அது கோபுரமாக இருக்கிறது என்பதால்தான் பெருமையே ஒழிய அதன் நிழல் பெரிதாக இருக்கிறது என்பதாலே பெருமையாகி விடாது. உண்மையாக வாழ்வதும் அப்படித்தான்.

கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரி திறக்கப்படுகிற முதல் நாளாகையினால் மைதானத்திலும், பச்சைப் பட்டு விரித்தாற் போன்ற புல்வெளிகளிலும், மரங்களின் அடியிலும், விரிவுரைக் கூடங்களின் வராந்தாவிலும், கல்லூரி முதல்வருடைய அறை முன்பும் மாணவர்களின் பெருங்கூட்டம் கூடியிருந்தது. கல்லூரி காம்பவுண்டு முழுவதும் புதுமண வீடு போல் மகிழ்ச்சியும் ஆரவாரமும் நிறைந்திருந்தன. பட்டுப் பூத்தது போல் 'நெக்டை'யும் கஞ்சிப் பசை பளபளத்து மின்னும் 'பாண்ட்'டும் கோட்டுமாக விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும், குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்கள். வெளியூர்களிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் பிள்ளைகளின் அட்மிஷனுக்குத் தேடி வந்திருக்கிற பெற்றோர்கள் கூட்டமும் ஒரு புறம் காத்திருந்தது. இரட்டைப் பின்னலும், ஒற்றைப் பின்னலும், இன்னும் பலவிதமான தலையலங்காரங்களுமாகப் பல வண்ணப் பட்டுப் பூச்சிகளைப் போல் மாணவிகள் அங்கும் இங்குமாக மான்குட்டிகளாய்த் துள்ளித் திரிந்து கொண்டிருந்தார்கள். பெரிய சித்திரத்தில் முக்கியமான வர்ணங்கள் தீட்டப்பட்டிருக்கிற இடங்கள் மட்டும் பளீரென்று பார்க்கின்றவனுடைய கண்களைத் தேடி வந்து பதிந்து கொள்ளுகிற மாதிரி அவ்வளவு பெரிய காம்பவுண்டில் அத்தனை பெரிய கூட்டத்தில் மாணவிகள் நின்று கொண்டிருக்கிற இடங்கள் கலீர் கலீரென்று பொங்கும் சிரிப்பும், கிண்கிணிப் பேச்சுக்களும், கிளுகிளுக்கும் வளை ஒலிகளுமாகத் தனிக் கவர்ச்சியோடு இலங்கின. மஞ்சள் காவி பூசிய கல்லூரிக் கட்டிடங்களுக்குப் பின்னால் 'ஸீன்' கட்டித் தொங்கவிட்டாற் போல் மேகக் கொத்துக்கள் பதிந்த மலைச் சிகரங்கள் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் நகர்ந்து வருகின்றனவென அழகாகத் தோன்றின. பொன் உருகி மஞ்சள் வெள்ளமாய்ப் பொங்கினாற் போல் இலைகளே தெரியாதபடி மஞ்சள் நிறத்துக்குப் பூத்துக் கொட்டியிருந்த ஒரு வகை மரங்கள் கல்லூரிக் காம்பவுண்டில் அங்கங்கே நிறைந்திருந்தன. பச்சைப் புல்வெளிக்கும் அதன் மேல் பொன் பூத்தாற் போலப் பொங்கியெழுந்த இந்த மஞ்சள் மலர்த்தருக்களுக்கும் பொருத்தமாக இருந்தன.

கல்லூரி அலுவலகத்தின் படிகளில் ஏறிக் கொண்டிருந்த போது சத்தியமூர்த்தியைப் பலர் சிரத்தையோடு திரும்பிப் பார்த்தார்கள். தூய வெள்ளை உடையும், மலர்ச்சியும் அழகும் மிக்க முகமாக மின்னல் நடந்து போவது போல் படியேறிப் போகும் இவன் யாராயிருக்கலாம் என்று அடக்க முடியாத ஆவலோடு திரும்பிப் பார்த்தார்கள் சுற்றியிருந்தவர்கள். கல்லூரி முதல்வரின் அறையும், ஹெட்கிளார்க், ரைட்டர், காஷியர், டைப்பிஸ்ட் முதலியவர்கள் அமர்ந்திருந்த அலுவலக அறையும் தனித்தனியாக இருந்தாலும் உட்புறமிருந்தே ஓர் அறையிலுள்ளவர்கள் மற்றோர் அறைக்குப் போய் வர வசதியாக அமைக்கப்பட்டிருந்தது. சத்தியமூர்த்தி நேராக முதல்வருடைய அறைக்குத்தான் போனான். முதல்வர் யாரோ நாலைந்து மனிதர்களை எதிரே உட்கார்த்திப் பேசிக் கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி உள்ளே வந்து நிற்பதைக் கவனிக்கவே அவருக்குக் கால் மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று. அவன் பக்கமாகத் திரும்பி நிமிர்ந்து பார்த்தவர், "ஓ..." என்று வியந்தவர் போல் சிரித்துவிட்டுச் சிறிது நேரம் நிரம்பவும் பரபரப்பாக இருப்பதற்கு அடையாளமாக ஓர் அர்த்தமுமின்றி மேஜை மேல் இந்தப் பக்கமாக இருந்த பைல் கட்டுகள் சிலவற்றை அந்தப் பக்கமாக நகர்த்தி வைத்துவிட்டுப் பியூனை ஆத்திரத்தோடு கூப்பிடுகிறவராய் மணியை உள்ளங்கையில் இரண்டு தரம் ஓங்கித் தட்டியபின் சத்தியமூர்த்தியை நோக்கி மேலும் கூறினார்:

"எக்ஸ்க்யூஸ் மீ... நௌ ஐ ஆம் வெரி பிஸி வித்... தி... நியூ அட்மிஷன்ஸ்... யூ ப்ளீஸ் மீட் மிஸ்டர் சிதம்பரம் அவர் காலேஜ் ஹெட்கிளார்... ஹி வில் மேக் நெஸஸ்ஸரி அரேஞ்மெண்ட்ஸ் டு ரெஸிவ் யுவர் ஜாயினிங் ரிப்போர்ட்..." இவ்வாறு கூறியபடியே வலது கை விரலால் தாடி நுனியைத் திரித்து விட்டுக் கொள்ளலானார் முதல்வர். மிகவும் இரசிக்கத்தக்கப் பிருகிருதியாயிருந்த அவரை எண்ணி மனத்துக்குள் சிரித்துக் கொண்டே ஹெட்கிளார்க் சிதம்பரத்தைக் காணப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி. ஹெட்கிளார்க் வாயெல்லாம் பல்லாகத் தெரியச் சிரித்த முகத்தோடு அவனை வரவேற்றார். "என்ன சார் அது? விடிந்ததும் விடியாததுமாகப் புறப்பட்டுப் போய் அலைந்து வேறு ரூம் பிடித்துத் தங்கிவிட்டீர்கள் போலிருக்கிறதே? ஆனாலும், நீங்கள் இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டியதில்லை. இன்னும் இரண்டு நாள் இங்கேயே தங்கிக் கொண்டு நிதானமாகப் பார்த்திருக்கலாமே...?" என்று போலியாக வருவித்துக் கொள்ளப்பட்ட பொய் அநுதாபத்தோடு அவனை விசாரித்தார் ஹெட்கிளார்க்.

"அதைப் பற்றி என்ன வந்தது இப்பொழுது? இரண்டு நாள் பொறுத்துச் செய்ய வேண்டிய நல்ல காரியத்தை இன்றே செய்து விட்டதற்காக வருத்தப்பட ஒன்றுமில்லை. பிரின்ஸிபல் உங்களைப் பார்க்கச் சொன்னார். நான் 'ஜாயினிங் ரிப்போர்ட்' கொடுத்துவிட்டு அட்டெண்டன்ஸில் கையெழுத்துப் போட வேண்டும்" - சிரித்துக் கொண்டே சத்தியமூர்த்தி இதைச் சொல்லிக் கொண்டிருந்த போது முதல்வரின் அறையிலிருந்து மணி அடிக்கப் பெற்றுக் கூப்பிடும் ஒலியைக் கேட்டு ஹெட்கிளார்க் எழுந்து ஓடினார். அவர் திரும்பி வருகிற போது வரட்டும் என்று பக்கத்திலிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்தான் சத்தியமூர்த்தி. பெரிய பெரிய ஸ்டீல் பீரோக்களும், பைல்களும் புத்தகங்களும் அடுக்கிய அலமாரிகளுமாக நிறைந்திருந்த அந்தக் கூடத்தில் ஹெட்கிளார்க்கைத் தவிர வேறு சில அலுவலர்களும் அமர்ந்திருந்தார்கள். சாயம் பூசிக் கனிந்த கைவிரல் நகங்கள் டைப்ரைட்டர் மேல் சுறுசுறுப்பாக ஓடி மின்னும்படி டைப் செய்து கொண்டிருந்தாள் ஓர் ஆங்கிலோ இந்தியப் பெண்மணி. கல்லூரி முதல்வரின் அறைக்குள்ளிருந்து திரும்பிய ஹெட்கிளார்க் அந்த லேடி டைப்பிஸ்ட்டின் அருகில் சென்று ஏதோ நாலைந்து காகிதங்களைக் கொடுத்து விவரம் சொல்லிவிட்டுப் பின் மீண்டும் தம் இடத்துக்கு வந்தார். மேசை இழுப்பறையைத் திறந்து ஏதோ அச்சிட்ட தாள்களை எடுத்தார்.

"இப்போது நல்லவேளை இல்லை போலிருக்கிறதே, இராகுகாலம் முடிந்ததும் நீங்கள் 'ஜாயினிங் ரிப்போர்ட்'டில் கையெழுத்துப் போடுகிறீர்களா?" என்று சொல்லித் தயங்கினார் ஹெட்கிளார்க். சத்தியமூர்த்தி இதைக் கேட்டு நகைத்தான்.

"துணிவோடும் நம்பிக்கையோடும் வாழ்ந்தால் எல்லா வேளையும் நல்ல வேளைதான். எல்லாக் காலமும் நல்ல காலம்தான். இந்த நூற்றாண்டில் வாழ்க்கையே ஓர் அவசரமான சந்தர்ப்பமாயிருக்கிறது. அப்படியிருக்கும் போது நேரத்தின் மேலும் காலத்தின் மேலும் விருப்பு வெறுப்புக் கொண்டு என்ன சாதித்து விடப் போகிறோம்?" என்று அவன் கூறியதைக் கேட்டு ஹெட்கிளார்க் அவனை சந்தேகக் கண்களோடு உற்றுப் பார்த்தார். 'ஆள் சுத்த சுயமரியாதைக்காரனாக இருப்பான் போலிருக்கிறதே' என்று அந்த ஹெட்கிளார்க் தன்னைப் பற்றி அப்போது மனத்தில் வெறுப்பாக நினைப்பதை அவருடைய முகத்திலிருந்தே சத்தியமூர்த்தியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் ஹெட்கிளார்க்கின் வாய்ச் சொற்கள் மட்டும் மிகவும் நாசுக்காக அவனைப் பாராட்டுவது போல் வெளிவந்தன. "சார் ரொம்பவும் சீர்திருத்த மனப்பான்மை உள்ளவராக இருப்பீர்கள் போல் தோன்றுகிறது" என்று சிரிப்போடு சிரிப்பாகச் சேர்த்து விஷமத்தனமாகக் கூறியிருந்தார் அவர். அவருடைய வாய் அப்படிச் சொல்லியிருந்தாலும் மனத்தில் உள்ளூர, 'பயல் பெரிய 'சு' னா 'ம'னாவாக இருப்பான் போல் இருக்கே' என்று தான் அவர் நினைத்திருக்க வேண்டுமென்பதைச் சத்தியமூர்த்தியால் உய்த்துணர முடிந்தது.

"இந்த உலகத்தில் மனிதன் உயிர் வாழ்கிற காலமே நல்ல சொப்பனத்தைப் போல் மிக மிக வேகமாகவும் சுருக்கமாகவும் ஓடி விடுகிறது. அதிலும் முக்கால்வாசி நேரத்தை இராகு காலம் எமகண்டம் என்று ஒதுக்கி விட்டால் முயற்சிக்கும் உழைப்புக்கும் மீதியிருக்கிற நேரம் தான் ஏது?" என்று தன் கருத்தையோ தன்னையோ அவர் தப்பாகப் புரிந்து கொள்ளாத வகையில் மேலும் தெளிவாக விளக்கிச் சொன்னான் சத்தியமூர்த்தி. ஹெட்கிளார்க் அவனுடைய விளக்கத்தைக் கேட்டுக் கொள்ளத் தயாராயில்லை.

"எனக்கென்ன வந்தது! உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்" என்று ஜாயினிங் ரிப்போர்ட்டையும், கல்லூரி நிர்வாகத்தினர் ஆசிரியர்களோடு செய்து கொள்ளும் வழக்கமான உடன்படிக்கைத் தாளையும் எடுத்து அவனிடம் நீட்டினார் ஹெட்கிளார்க். அவற்றை வாங்கிப் படித்துவிட்டுப் பூர்த்தி செய்ய வேண்டிய இடங்களை விரைந்து பூர்த்தி செய்து கையொப்பமிடுவதற்கு முன் 'யுவர்ஸ் ஒபிடியண்ட்லி' - (தங்கள் பணிவுள்ள) என்றிருந்த இடத்தை 'யுவர்ஸ் ட்ரூலி' (தங்கள் உண்மையுள்ள) என்று அடித்துத் திருத்திவிட்டுக் கையொப்பமிட்டான் சத்தியமூர்த்தி. அவன் கையொப்பமிட்டுக் கொடுத்தவற்றை வாங்கி மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு அதே பழைய வங்சகச் சிரிப்போடு உள்ளடங்கிய ஆத்திரம் தொனிக்கும் குரலில் அவனிடம் கேட்டார் ஹெட்கிளார்க்.

"இப்படி அடித்துத் திருத்தியிருப்பதனால் நாங்கள் உங்களிடம் 'ஒபிடியண்டை' (பணிவு) எதிர்பார்ப்பதற்கில்லை என்று அர்த்தமா? அல்லது உலகத்திலேயே நீங்கள் தான் உண்மையுள்ளவர் என்பதை நாங்கள் கண்டிப்பாகப் புரிந்து கொண்டு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமா?"

"பணிவுள்ளவர் போல் குழைந்து நெகிழ்ந்து பேசித் திரிகிறவர்களும், உண்மையில் அப்படியில்லாமல் ஏமாற்றுவதில்லையா? பணிவுள்ளவனும் உண்மையாக வாழாமல் இருக்கலாம். ஆனால் உண்மையாக வாழ்கிறவன் பணிவில்லாமல் இருக்க முடியாது. உண்மை என்பது எல்லா நல்ல குணங்களையும் இணைக்கிற ஒரு பெருங்குணம். பணிவு அப்படி இல்லை. பிறரைக் கவர்கிற சிறிய குணங்களில் பணிவும் ஒன்று. பல பெரிய குணங்கள் இல்லாதவனிடம் பணிவு என்ற ஒரு சிறிய குணம் இருக்கலாம். ஆனால் உண்மை என்ற ஒரு பெருங் குணமோ எல்லாச் சிறிய குணங்களையும் உடன் கொண்டது."

"அதாவது... அந்தப் பெருங்குணம் உங்களிடம் இருப்பதாக நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!... இல்லையா?"

"ஒருவர் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டுமென்பதற்காக மட்டுமே உண்மையாக வாழ முடியாது! உண்மையாக வாழவேண்டுமென்பதையே நோக்கமாக வைத்துத் தான் அப்படி வாழ வேண்டும்! உண்மையைப் பற்றியே சந்தேகமாயிருப்பவர்கள் உண்மையைப் புரிந்து கொண்டு பாராட்டுவார்கள் என்பதையும் எதிர்பார்க்க முடியாது. உண்மை பெரிய கோபுரத்தைப் போன்றது. கோபுரத்துக்கு அது கோபுரமாக இருக்கிறது என்பதால் தான் பெருமையே ஒழிய அதன் நிழல் பெரியதாக இருக்கிறது என்பதாலே பெருமையாகி விடாது. உண்மையாக வாழ்வதும் அப்படித்தான்." இதைக் கேட்டு ஹெட்கிளார்க் முகத்தைக் கோணிக் கொண்டு இடுங்கிய கண்பார்வையால் அவனை வெட்டினார்.

'பயல் திமிர் பிடித்தவனாகவும் இருப்பான் போலிருக்கிறதே' என்று இப்போது அவர் மனம் தன்னைப் பற்றி நினைப்பதாகச் சத்தியமூர்த்திக்குத் தோன்றியது. ஆனால் வெளிப்படையாக ஒன்றும் காட்டிக் கொள்ளாமல், "ஏதேது உங்களிடம் பேசி ஒன்றும் மீதம் கொண்டு போக முடியாது போலிருக்கே" என்றார் அவர். லேடி டைப்பிஸ்ட்டும், ரைட்டரும், தனக்கும் ஹெட்கிளார்க்குக்கும் நிகழ்ந்த இந்த விவாதத்தை அதுவரை சுவாரஸ்யமாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள் என்பதைச் சத்தியமூர்த்தி அப்போது தான் திரும்பிப் பார்த்துத் தெரிந்து கொண்டான். தான் 'ஒபிடியண்ட்லி' என்பதை அடித்துவிட்டு 'ட்ரூலி' என்று எழுதிக் கையொப்பமிட்டதை ஹெட்கிளார்க் சிறிதும் விரும்பவில்லை என்பதை அவன் உணர்ந்தான். வழக்கமாக எல்லோரும் கையெழுத்துப் போட்டுவிட்டுப் போகிற மாதிரி தானும் போடாமல் அப்படித் திருத்திக் கையொப்பமிட்டது தன்னைப் பற்றி அவர் மனத்தில் ஒரு விரும்பத்தகாத அபிப்பிராயத்தை முதல் பார்வையிலேயே ஏற்படுத்தியிருக்குமென்று அவனுக்குப் புரிந்தது. எல்லோரும் போகிற வழியில் போகாமல் தகுந்த காரணத்தோடு வழி விலகி நடக்கிறவனைப் பிறர் புரிந்து கொள்ள நீண்ட நாட்கள் பிடிக்கும் என்று தோன்றியது. 'ஜாயினிங் ரிப்போர்ட்' கொடுத்து முடித்ததும் ஹெட்கிளார்க் அவனை அழைத்துப் போய் வைஸ் பிரின்ஸிபலுக்கு (துணை முதல்வர்) அறிமுகம் செய்து வைத்தார். வைஸ் பிரின்ஸிபல் மற்ற ஆசிரியர்களை எல்லாம் அறிமுகம் செய்து வைத்தபின் 'தமிழ் டிபார்ட்மெண்ட்' அறைக்கு அவனை அழைத்துச் சென்று அவனுடைய 'ஹெட் ஆப் தி டிபார்ட்மெண்ட்'க்கு அவனை அறிமுகம் செய்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் காசிலிங்கனார் எம்.ஏ., பி.ஓ.எல்., எம்.லிட்., பி.எச்.டி., அவர்கள் அத்தனை பட்டங்களையும் தாங்கிக் கொள்ளக் கூட உடலில் ஆற்றலில்லாதவராய் எலும்பும் தோலுமாக மெலிந்து கோட் ஸ்டாண்டில் அப்படியே தூக்கி மாட்டி விடலாம் போல அத்தனை ஒல்லியாயிருந்தார். தமிழை ஆங்கிலம் போலவும் ஆங்கிலத்தைத் தமிழ் போலவும் உச்சரித்துப் பேசினார் அந்தப் பேராசிரியர். அவரிடம் அரைமணி நேரம் உட்கார்ந்து உரையாடியதில் அவரை நன்றாக எடை போட்டு முடித்து விட்டான் அவன். அவனைத் தவிர இன்னும் மூன்று விரிவுரையாளர்களும் இரண்டு டியூட்டர்களும் ஏற்கெனவே அங்கே தமிழ்த் துறையில் இருப்பதாகத் தெரிந்தது. அவனுடைய புரொபஸராகிய 'ஹெட் ஆப் தி டிபார்ட்மெண்ட்' கனமான சோடாபுட்டி மூக்குக் கண்ணாடியை அடிக்கடி கழற்றிக் கழற்றி மாட்டிக் கொண்டே, 'யூ ஸீ, யூ ஸீ...' என்று ஆரம்பித்துத் தப்பித் தவறி ஒரு தமிழ் வார்த்தை கூட வந்துவிடாமல் ஆங்கிலத்தில் பொழிந்து தள்ளினார். அந்த அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது நாலைந்து கல்லூரித் தோழிகளுடனே பாரதி அந்தப் பக்கமாய் ஏதோ காரியமாய் வருகிறவளைப் போல் வந்து தான் அங்கிருப்பதைக் கவனித்துக் கொண்டு போனதைச் சத்தியமூர்த்தியும் கவனித்தான். மறுபடியும் இரண்டு மூன்று முறை அதே போல ஆனால் உடனிருந்த தோழிகளின் தொகையை அதிகமாக்கிக் கொண்டு அந்தப் பக்கமாக வருவதும் போவதுமாயிருந்தாள். 'புதிய தமிழ் விரிவுரையாளர்' மிகவும் நல்லவர் என்று இந்தப் பேதைப் பெண் தன் தோழிகளைக் கூட்டிக் கொணர்ந்து என்னைக் காண்பித்துப் பெருமைப் பட்டுக் கொள்கிறாளோ?' என நினைத்தான் அவன்.

அன்று மாலை ஐந்தரை மணிக்கு நிர்வாகி பூபதி அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் கல்லூரி ஆசிரியர்களையும் அலுவலர்களையும் தேநீர் விருந்துக்கு அழைக்கும் 'சர்குலர்' ஒன்று வந்தது. அது ஒரு 'கோ-எஜுகேஷன்' (ஆண்களும் பெண்களும் சேர்ந்து கற்கும்) கல்லூரி ஆகையால் ஆசிரியர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் சில பெண்மணிகளும் கூட இருந்தார்கள். தமிழ்ப் பகுதியில் மிஸ் வகுளாம்பிகை என்று ஒரு பெண் விரிவுரையாளராக இருந்தாள். 'புரொபஸர் சார்... புரொபஸர் சார்' என்று காசிலிங்கனாரைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாள் அந்த இளம் ஆசிரியை. 'வகுளம்!... யூ ஸீ...' என்று ஆரம்பித்துக் காசிலிங்கனாரும் அவளிடம் பேசுவதற்காகவே உண்டாக்கிக் கொண்டது போன்ற வாஞ்சையான குரலில் அடிக்கடி சிரத்தையாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அல்லது பேச முயன்று கொண்டிருந்தார். அங்கு வந்து சேர்ந்த முதல் விநாடியிலிருந்து ஒவ்வொரு அசைவிலும் பார்வையிலும் எதையும் தப்பவிட்டுவிடாமல் அந்தக் கல்லூரியையும் அங்குள்ள மனிதர்களையும் சற்றுப் புரிந்து கொள்ளத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. தோற்றத்தில் அழகும் புத்தியில் திறமையும் உள்ள இளம் ஆசிரியர்கள் மாணவர்களைக் கவர்ந்து வசப்படுத்திக் கொண்டு விடுவார்களோ என்று பயப்படுகிற ஒரு முதல்வர், எல்லா வேளையிலும் இராகுகாலத்தைத் தவிர வேறெதையும் அக்கறையோடு தேடிப் பார்க்க விரும்பாத ஒரு ஹெட்கிளார்க், தமிழை ஆங்கிலத்தைப் போலவும், ஆங்கிலத்தைத் தமிழைப் போலவும் உச்சரிக்கக்கூடிய ஒரு தமிழ்ப் பேராசிரியர். அடிக்கடி அடக்க முடியாமலும், தவிர்க்க முடியாமலும் ஏதோ புதுமையைப் பார்க்கிறவர்களைப் போல் தன் பக்கம் திரும்பிப் பார்க்கிற சக ஆசிரியர்கள் எல்லாரையும் மனத்தில் அளந்து நிறுத்திக் கொண்டிருந்தான் அவன். இடைவேளைக்குப் பின் தமிழ் 'டிபார்ட்மெண்ட்' அறையிலிருந்து புறப்பட்டு எல்லா ஆசிரியர்களும் பொதுவாகத் தங்கி ஓய்வு கொள்ளும் ஓய்வுக் கூடத்துக்குச் சென்றான் சத்தியமூர்த்தி. முதல்நாள் இரவு பஸ்ஸில் உடன் பயணம் செய்த பொருளாதார விரிவுரையாளர் தாமாகவே அவனைத் தேடி வந்து வலுவில் பேசத் தொடங்கினார். அவன் கேட்காமலிருக்கும் போதே அவராகவே கல்லூரி நிர்வாகி பூபதியைப் பற்றியும் முதல்வரைப் பற்றியும் ஏதேதோ அபிப்பிராயங்களைத் தெரிவிக்கலானார்.

"பூபதி ரொம்ப 'ஷார்ட் டெம்பர்ட்' (விரைவில் உணர்ச்சி வசப்படுகிறவர்) மேன். அவர் நல்லதைக் கொண்டாடும்போது பிறர் சந்தேகப்படும்படியாக அளவு மீறிக் கொண்டாடுவார். இது நல்லதில்லையே என்று பிறர் வெறுக்கிறவற்றை அவர் நல்லதில்லை என்று புரிந்து கொண்டு வெறுக்க அதிக நேரம் பிடிக்கும். திடீரென்று கல்லூரிக்கு வருவார். விரிவுரையாளர்களோ, மாணவர்களோ அறியாதபடி வகுப்பறைகளுக்கு வெளியே நின்று விரிவுரைகளைக் கேட்பார். எந்த விரிவுரையாவது அவரை மிகவும் கவர்ந்து விட்டதோ அந்த விரிவுரையை நிகழ்த்திய ஆசிரியனை அவர் கொண்டாடிப் புகழ்கிற வேகத்தைப் பார்த்து மற்றவர்கள் எல்லாம் அவனை வெறுத்துப் பொறாமைப்படுகிற அளவுக்குச் செய்து விடுவார். வெறுக்கத் தொடங்கினாலும் அப்படித்தான். ஒன்றை விரும்புவதிலும் சரி வெறுப்பதிலும் சரி அவர் போய் நிற்கிற எல்லை எதுவோ அது மற்றவர்கள் அணுக முடியாததாயிருக்கும். அவருடைய மகிழ்ச்சியையும் தாங்கிப் பொறுத்துக் கொள்ள முடியாது. கோபத்தையும் தாங்கிப் பொறுத்துக் கொள்ள முடியாது. 'மேன் ஆஃப் மூட்ஸ்'. நிரம்ப 'எக்ஸைட்மெண்ட்' உள்ளவர். குண்டூசி குத்துகிற நேரத்தில் மாறி விடுவார். ஏன் மாறினார் என்று காரணமும் கண்டுபிடிக்க முடியாதபடி மாறி விடுவார்."

"அதனால் என்ன சார்? மனிதர்கள் தாங்களும் பலாபலங்கள் உள்ள வெறும் மனிதர்களாகவே இருக்கிறவரை இன்னொரு மனிதனைப் பற்றி இப்படி விமர்சனம் செய்து என்ன ஆகப் போகிறது?" என்று அந்தப் பேச்சை அவ்வளவில் நிறுத்த முயன்றான் சத்தியமூர்த்தி. அப்படியும் அவர் தமது பேச்சை நிறுத்தவில்லை.

"உங்களுக்குத் தெரியுமா மிஸ்டர் சத்தியமூர்த்தி? எல்லா லெக்சரர்களும் சேர்ந்து நம்முடைய பிரின்ஸிபலுக்கு 'க்ரொகடைல்' (முதலை) என்று பேர் வைத்திருக்கிறோம். அந்த முதலையின் ரூம் பக்கம் போனால், அப்புறம் 'ஒரே கஜேந்திர மோட்சம்'தான். அப்படியே ஆளைக் கவ்விக் குதறி விடும் குதறி. கடிபட்டவர் எந்த நாராயணமூர்த்தியைக் கூவி அழைத்தும் பயனில்லை. ஹெட்கிளார்க் பெரிய முதலைக்கு அநுசரணையாக இருக்கும் ஒரு குட்டி முதலை."

'ஆனால்... இராகுகாலம் குளிகை காலம் சரிபார்த்துக் கொண்டு அப்புறம் கடிக்கிற குட்டி முதலை' என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு சிரித்தான் சத்தியமூர்த்தி. மல்லிகைப்பந்தல் கல்லூரியைப் பற்றி நாடு முழுதும் நல்ல பெயர் பரவியிருந்தாலும் அங்கேயும் உள் அரசியல் நிறைந்திருப்பது அங்கு வந்து சேர்ந்த முதல் தினமாகிய அன்றே சிறிது சிறிதாகப் புரிந்தது அவனுக்கு. அலைகளே இல்லாத சமுத்திரம் எங்குமே இருக்க முடியாதென்று முடிவுக்கு வந்தான் சத்தியமூர்த்தி. இடம் காற்று முதலியவற்றுக்கு ஏற்பச் சிறிய அலைகளாகவோ பெரிய அலைகளாகவோ எப்படியும் அலைகள் இருப்பதுதான் கடலின் இலட்சணம் போலும் என்று எண்ணி மன அமைதி பெற முயன்றான் அவன்.

'முதல் தரமான மனிதர்கள் கருத்துகளைப் பற்றிப் பேசி விவாதிக்கிறார்கள். சாதாரணமான மனிதர்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசி விவாதிக்கிறார்கள். மட்டரகமான மனிதர்கள் மட்டுமே தனி நபர்களைப் பற்றிப் புறம் பேசி விவாதிக்கிறார்கள்' என்று ஒரு சீனப் பழமொழி உண்டு. சத்தியமூர்த்தி இப்போது அந்தப் பழமொழியை நினைவு கூர்ந்தான். சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனைப் பற்றிச் சுதந்திரமாகப் பேசி விமர்சனம் செய்யும் உரிமை தனக்கு வேண்டுமென்று ஆசைப்படுகிறான். அதே சமயத்தில் தன்னைப் பற்றி பிறர் அப்படி விமர்சனம் செய்ய ஆசைப்படுவதை மட்டும் அவனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. பிறரைப் புரிந்து கொள்வதையும் பிறரைப் பற்றிச் சிந்திப்பதையும் சத்தியமூர்த்தி ஒருபோதும் வெறுத்ததில்லை. அவனே பலரைப் பற்றி அப்படிப் புரிந்து கொள்ள முயன்று சிந்தித்திருக்கிறான். ஆனால் ஒவ்வொருவரையும் பற்றி விமர்சிக்க இன்னொருவர் தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைத் தராசு ஆக்கி நிறுப்பது எவ்வளவு நல்லது என்று விளங்கிக் கொள்ள முடியாமல் தயங்கினான் அவன். சொந்த விருப்பு வெறுப்புக்களை அளவு கருவியாகக் கொண்டு நிறுக்காமல் சம்பந்தப்பட்டவர்களின் குணங்களையோ குணக்கேடுகளையோ நிறுத்து விமர்சனம் செய்வதை அவன் வெறுப்பதில்லை. ஒவ்வொரு மனிதனையும் பற்றிச் சமுதாயமே இப்படி ஒரு விமர்சனத்தை தயாராக வைத்திருக்கும். யாரும் அதைத் தவிர்க்க முடியாது. அதிலிருந்து தப்பவும் முடியாது. சிலரைப் பற்றி ஒரு சமுதாய விமர்சனமும் வெளிவராது. வேறு சிலரைப் பற்றி ஏதாவது ஒரு சமுதாய விமர்சனம், மொத்தமாக வெளிவராமலிராது. மனிதனை, நல்லவனாகவோ, கெட்டவனாகவோ தீர்மானம் செய்கிற உரிமை, நல்லதும் கெட்டதும் தன்னிடமே உள்ள ஒரு தனிமனிதனிடம் விடப்படுவதைக் காட்டிலும் பல தனி மனிதர் சேர்ந்த சமூகத்தினிடம் விடப்படுவது உத்தரவாதமுள்ள காரியமென்று தோன்றியது. பொருளாதார விரிவுரையாளர் பேசிய பேச்சுக்கள், சொந்த விருப்பு வெறுப்பிலும் விரக்தியிலும் பேசப் பெற்றதாகப் படவே அதை அப்படியே எடுத்துக் கொள்ளலாகாது என்று எண்ணிப் போகப் போக இவற்றை எல்லாம் புரிந்து கொள்ள வாய்ப்பு நேரும், என்பதாக நம்பினான் சத்தியமூர்த்தி. தன்னைப் போலவே புதிதாக வந்திருப்பவரும் பயந்த சுபாவமுள்ளவராகத் தோன்றுகிறவருமாகிய 'பாடனி' விரிவுரையாளர் ஒரு மூலையில் 'புது மணப்பெண்' போன்ற வெட்கத்தோடு கூசிக் கொண்டே உட்கார்ந்து 'ப்ளாண்ட் அனாடமி' என்ற 'பாடனி' புத்தகத்தைக் கர்மசிரத்தையாகப் படிப்பதுபோல் பாவித்துக் கொண்டு அதன் மூலம் மற்றவர்களிடமிருந்து தம்மைப் பிரித்துக் காப்பாற்றிக் கொண்டவராக ஒதுங்கி இருப்பதைச் சத்தியமூர்த்தி கவனித்தான். இன்னும் நாலைந்து விரிவுரையாளர்கள் ஒரு பக்கம் கூட்டமாகச் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு 'கோடை விடுமுறைக்குப் பின் பிரின்ஸிபல் திடீரென்று ஏன் தாடி வளர்க்கத் தொடங்கினார்?' என்பதைப் பற்றி அரட்டையும் சிரிப்புமாக வம்பளந்து கொண்டிருந்தார்கள். அந்தப் பகுதியிலிருந்து குபீர் குபீரென்று எழும் சிரிப்பலைகளால் கட்டிடமே அதிர்ந்தது.

"எதை வளர்க்கலாம்? எதை வளர்க்கலாம்? என்று யோசித்துப் பார்த்தபின் முடிவில் தன்னால் எதையுமே வளர்க்க முடியாதபடி உறுதியாகத் தெரிந்து கொண்டு தாடியையாவது வளர்க்கலாம் என்று வளர்க்கத் தொடங்கி விட்டார் போலிருக்கிறது. 'பெர்ஸனாலிட்டி' இப்போ முன்னைவிடக் கொஞ்சம் 'இம்ப்ரூவ்' ஆகியிருக்கு. 'மேஜிக் செய்ய வருகிற நவீன மந்திரவாதி மாதிரி இப்போ 'முதலை'யைப் பார்த்தாலே பயமாயிருக்கு சார்..." என்று விமர்சனம் செய்து கொண்டிருந்தார் ஒரு விரிவுரையாளர். சத்தியமூர்த்திக்கும் இந்த விமர்சனத்தைக் கேட்டுச் சிரிப்பு வந்தது. அதே சமயத்தில் 'நாளைய சமூகத்தை நன்றாக உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள் இப்படி வம்பும் அரட்டையுமாகத் தனிமனிதனின் பலவீனங்களைப் பற்றி விமர்சனம் செய்து தங்கள் நேரத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்களே' என்று வேறு விதமாக மாற்றிச் சிந்தித்த போது வேதனையாகவும் இருந்தது.

அத்தியாயம் - 19

முற்போக்காகப் பேசுவதற்கும் செயலாற்றுவதற்கும் மனிதர்கள் கிடைக்காத குறையை விட முற்போக்காக நினைப்பதற்கே மனிதர்கள் கிடைக்காத குறைதான் பெரிய வறுமை. செயலாற்றுவதற்குச் சோம்பல் படுகிற மனிதர்களை விட நினைப்பதற்கே சோம்பல் படுகிற மனிதர்கள் தாம் அதிகம் இருக்கிறார்கள்.

மல்லிகைப் பந்தல் கல்லூரியின் சூழ்நிலைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எல்லாக் கல்லூரிகளிலும் உள்ள உறவு நிலை இப்படித்தான் இருக்கும் போலும் என்று தோன்றியது அவனுக்கு.

'மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பட்டப்பெயர் வைத்துக் கேலி செய்கிறார்கள். ஆசிரியர்கள் தங்களுக்கு மேலே உள்ளவர்களுக்குப் பட்டப்பெயர் வைத்துக் கேலி செய்து திருப்திப்படுகிறார்கள். இதற்கு ஒரு முடிவேயில்லையா?' என்று மனம் நொந்த அவன் இவற்றுக்கெல்லாம் ஒரு விதிவிலக்குப் போலத்தான் ஓர் முழுமையான தீவிர இலட்சிய ஆசிரியனாக அந்தக் கல்லூரியில் விளங்க வேண்டுமென்று வைராக்கியம் கொண்டான். அன்று அவனை வகுப்புகளுக்குப் போகச் சொல்லவில்லை. முதல் நாளாகையால் வகுப்புகளும் அதிகமாக நடைபெறவில்லை. பேருக்கு இரண்டு மூன்று பீரியடுகளை நடத்தி விட்டு விட்டார்கள். கல்லூரி ஊழியனை அனுப்பித் தபாலாபீசிலிருந்து கடித உறைகள் வாங்கி வரச் செய்து ஊருக்குக் கடிதங்கள் எழுதினான் சத்தியமூர்த்தி. தந்தைக்கும், குமரப்பனுக்கும், இன்னொரு நண்பனுக்கும் கடிதங்களை எழுதி முடித்த பின் கடைசிக் கடிதத்தை மோகினிக்கு எழுதலாமா என்று தோன்றியது. தபாலை மோகினியின் தாய் வாங்கிவிட்டால் என்ன செய்வது என்ற தயக்கமும் கூடவே உடனெழுந்து முந்திய எண்ணத்தைச் செயலாக்கவிடாமல் தடுத்துவிட்டது. கண்ணீர் பெருகும் விழிகளோடு அழுகின்ற இதயமும் ஏதோ ஒரு முறைக்காகச் சிரிக்கின்ற வாயுமாக அவள் தனக்கு விடை கொடுத்த அந்தக் காட்சியை நினைத்தான் அவன். 'நாமிருவரும் பிரியும் போது கண்ணீரும் அமைதியுமே இருந்தன' என்ற கவிதை வரி நினைவு வந்தது. கல்லூரியின் சாயங்காலப் பாட வேளைகளும் முடிவதற்கு அறிகுறியாக மணி அடித்தது. விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் ஒவ்வொருவராக எழுந்து புறப்படத் தொடங்கிவிட்டார்கள். சிலர் கல்லூரியிலிருந்தபடியே மாலையில் பூபதியின் வீட்டுத் தோட்டத்தில் நடைபெற இருந்த தேநீர் விருந்துக்குப் போகலாம் என்ற நோக்கத்தோடு அங்கே தங்கியிருந்தார்கள். சத்தியமூர்த்தி கடிதங்களைத் தபாலில் போட்டுவிட்டு 'லேக் சர்க்கிளில்' அறைக்குப் போய் விட்டுத் திரும்பலாம் என்று புறப்பட்டிருந்தான். பாடனி விரிவுரையாளரும் தற்செயலாக உடன் வந்தார். ஆனால் நெருங்கி வந்து பேசவோ, பழகவோ பயப்படுகிறவர் போல் விலகி விலகி முன்னால் நடந்து போனார் அவர். 'கேட்' அருகே கல்லூரி விட்டுக் காரில் போய்க் கொண்டிருந்த பாரதி சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் காரை நிறுத்திக் கொண்டு பதற்றத்தோடு கீழே இறங்கினாள். ஆனால் அதைக் கவனிக்காதது போல் வேகமாக முன்னால் நடந்து போய்ப் பாடனி விரிவுரையாளரோடு சேர்ந்து கொண்டு விட்டான் சத்தியமூர்த்தி. பொன் தூவினாற் போன்றிருந்த சாயங்கால வெயிலில் நூலிழை நூலிழையாய்ப் பன்னீர் தெளிப்பதெனச் சாரல் பெய்யத் தொடங்கியிருந்தது. பாடனி விரிவுரையாளரின் கூச்சத்தை நீங்கச் செய்து அவரோடு பேசிக் கொண்டே நடந்தான் சத்தியமூர்த்தி. அந்தச் சாயங்கால வேளையில் மல்லிகைப் பந்தல் ஊரும் கருநீலங் கன்றிய மலைமுடிகளும் சொல்லி மாளாத கொள்ளை அழகுடையதாகத் தோன்றிக் கொண்டிருந்தன. சாரலும் பொன் வெயிலும் அந்த அழகை மேலும் அலங்கரித்தன.

கடிதங்களைத் தபாலில் சேர்த்துவிட்டுச் சத்தியமூர்த்தி பாடனி விரிவுரையாளரோடு 'லேக் சர்க்கி'ளில் இருந்த தன் அறைக்குப் போய்க் கொண்டிருந்தான். சுபாவத்துக்கு அதிகமாகக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்த பாடனி விரிவுரையாளருடன் தான் பழகிய முறையினாலும் பேசிய விதத்தினாலும் சத்தியமூர்த்தி சிறிது மாறுதலை உண்டாக்கியிருந்தான். அந்த இளைஞரும் தங்கி வசிப்பதற்கு அறை தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.

"இந்த அறையில் என்னோடு இன்னும் இரண்டு பேரை உடன் வைத்துக் கொள்வதாக இருக்கிறேன். நீங்கள் விரும்பினால் இங்கே இருக்கலாம்" என்று சத்தியமூர்த்தி அவரிடம் தெரிவித்திருந்தான். ஒருவேளை சத்தியமூர்த்தி அதைத் தனக்கு மட்டும் தனி அறையாக வைத்துக் கொள்ள விரும்பலாமோ என்று எண்ணித்தான் கேட்கத் தயங்கியதாகவும் மற்ற இருவரை உடன் தங்க வைத்துக் கொள்கிற பட்சத்தில் முதல் ஆளாக உடனே தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், பாடனி விரிவுரையாளர் கேட்டார். சத்தியமூர்த்தியும் அதற்கு ஒப்புக்கொண்டான். மாலை ஐந்து மணிவரை அறையிலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பின்பு இருவரும் சேர்ந்தே பூபதி அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் நடைபெற இருந்த விருந்துக்குப் புறப்பட்டார்கள்.

"மாகாணத்திலேயே தலை சிறந்த கல்லூரி என்று சொல்கிறார்கள். ஆனால் இந்தக் கல்லூரியும் வம்புகள் நிறைந்ததாயிருக்கும் போல் தோன்றுகிறது சார்..." என்று பயந்து கொண்டே சுற்றும் முற்றும் மிரண்டுபோய்ப் பார்த்தவாறு கூறினார் பாடனி விரிவுரையாளர்.

"வம்புகள் இல்லாத இடம் உலகத்திலேயே கிடையாது ஐயா! எதிர்கொண்டு நீந்தத் தெரிந்தவன் தான் வாழலாம். படித்துப் பட்டம் பெற்றுக் கல்லூரியிலிருந்து வெளியேறிய உங்களைப் போன்ற இளைஞர்களில் பலர் பிறரிடம் பழகுவதற்கே கூச்சமும் பயமும் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். நியாயமான துணிவையும், நேர்மையான நம்பிக்கைகளையும் கொடுக்க முடியாத படிப்பும் ஒரு படிப்பா என்று சில சமயங்களில் படிப்பின் மேலேயே வெறுப்பாக இருக்கிறது எனக்கு. இன்றைய சமூகத்தில் படித்தவர்கள் தான் கோழைகளாக இருக்கிறார்கள். படித்தவர்கள் தாம் பொய் சொல்லுகிறார்கள். படித்தவர்கள் தாம் பிறரை ஏமாற்றுகிறார்கள். சமயங்களில் தாங்களே ஏமாறவும் செய்கிறார்கள். உண்மையிலேயே ஒரு சமயமாக வழிபடுவதற்குக் கற்றுக் கொடுக்காத படிப்பினால் நாட்டுக்கும் பயனில்லை; நமக்கும் பயனில்லை" என்று சத்தியமூர்த்தி வேகமாகப் பேசுவதைக் கேட்பதற்கே தயங்கிப் பயந்தார் பாடனி விரிவுரையாளர். நியாயத்தையும் உண்மையையும் இவ்வளவு வேகமாக வற்புறுத்திப் பேசுகிற முதல் மனிதனை இப்போதுதான் வாழ்க்கையில் மிக அருகே சந்திக்கிறார் அவர்.

"நீங்கள் ரொம்பவும் 'ப்ரொக்ரஸிவ்' (முற்போக்காக) ஆக இருக்கிறீர்கள். சில சமயங்களில் உங்கள் பேச்சைக் கேட்பதற்கே பயமாகவும் தயக்கமாகவும் இருக்கிறது" என்று அவர் பதில் கூறிய விதத்திலிருந்தே அவருடைய பயந்த சுபாவத்தைச் சத்தியமூர்த்தி புரிந்து கொண்டான். புதுமையாகவும் முற்போக்காகவும் நினைப்பதற்கும் பேசுவதற்கும் பயப்படுகிறவர்களே நம்மைச் சுற்றி இவ்வளவு பேர் இருக்கும் போது அப்படி வாழவும் செயலாற்றவும் துணிகிறவர்கள் எப்போது எப்படி வரப்போகிறார்கள் என்றெண்ணி ஆற்றாமையோடு பெருமூச்சு விட்டான் சத்தியமூர்த்தி.

"நண்பரே! நம்முடைய நாட்டைப் போல் எல்லாவிதத்திலும் இரண்டுங்கெட்ட சூழ்நிலையில் உள்ள ஒரு நாட்டுக்குப் பெரிய வறுமை இப்போது என்ன தெரியுமா? முற்போக்காகப் பேசுவதற்கும், செயலாற்றுவதற்கும் மனிதர்கள் கிடைக்காத குறையை விட முற்போக்காக நினைப்பதற்கே மனிதர்கள் கிடைக்காத குறைதான் பெரிய வறுமை! செயலாற்றுவதற்குச் சோம்பல்படுகிற மனிதர்களைவிட நினைப்பதற்கே சோம்பல்படுகிற மனிதர்கள் நம்மிடையே அதிகமாக இருக்கிறார்கள். மனத்தினாலும் சிந்தனையினாலும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதற்கு இது ஓர் அடையாளமாகும்."

உணர்ச்சிகரமாகச் சத்தியமூர்த்தி கூறிய இந்த வாக்கியங்களுக்குப் பாடனி விரிவுரையாளர் ஒரு பதிலும் கூறவில்லை. மௌனமாகப் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார் அவர். அந்தச் சமயத்தில் சத்தியமூர்த்தியின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கே பயமாக இருந்தது அவருக்கு. உண்மை இந்த உதடுகளிலிருந்துதான் பிறந்து வருகிறது என்பது போல் அத்தனை அழகாகத் தன் சிவந்த உதடுகளைத் திறந்து சத்தியமூர்த்தி கொதிக்கக் கொதிக்க உணர்ச்சி வசப்பட்டுப் பேசியதைக் கேட்கப் பயந்தது தவிர அவன் முகத்தைப் பார்க்கவும் பயந்தார் அப்பாவியான அந்தத் தாவர இயல் விரிவுரையாளர். பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் பூபதியின் வீட்டுத் தோட்டத்தை அடைந்தார்கள். தோட்டத்துப் புல்வெளியின் இடையேயிருந்த செடி கொடிகளிலும் பெயர் புரியாத குரோட்டன்ஸ்களிலும் இயற்கையாகவே பல்வேறு நிறங்களில் பூத்துத் தொங்கும் ஒளிப் பழங்களைப் போல் வண்ண வண்ணப் 'பல்பு'கள் எரிந்து கொண்டிருந்தன. 'காம்பவுண்ட்' கேட் அருகே தன் வரவை எதிர்பார்த்து ஆவலோடும் மலர்ந்த முகத்தோடும் பாரதி காத்துக் கொண்டிருப்பதைச் சத்தியமூர்த்தி கவனித்தான். தான் வருவதைப் பார்க்க வேண்டுமென்றே தனக்காக மட்டும் காத்துக் கொண்டிருந்தவள் போல் தான் உள்ளே வந்ததும் அந்தப் பெண் தோட்டத்து முகப்பிலிருந்து அப்பால் போய்விட்டதையும் அவன் பார்த்தான். தோட்டத்துப் புல்வெளியில் தூய வெள்ளை விரிப்புகளோடு விருந்து மேஜைகளும் நாற்காலிகளும் வரிசையாக நீண்டு கிடந்தன. கல்லூரி முதல்வர் வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டு நின்றார். விரிவுரையாளர்களையும், கல்லூரி அலுவலர்களையும் தவிர, மல்லிகைப் பந்தல் நகரப் பிரமுகர்கள் சிலரும் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். மேசை விரிப்புகளின் மேல் வெளேரென்று மின்னும் பீங்கான் கிண்ணங்களும், தட்டுக்களும், நடுநடுவே அலங்காரமாக மலர்க்குடுவைகளும் ஒரு பெரிய செல்வந்தர் வீட்டு விருந்துக்கே உரிய களையோடும், கம்பீரத்தோடும் இலங்கிக் கொண்டிருந்தன.

"தமிழ் டிபார்ட்மெண்ட்காரர்கள் எல்லாம் இதோ இங்கே உட்கார வேண்டும்" என்று காசிலிங்கனாரும், மிஸ் வகுளாம்பிகையும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பகுதியைச் சுட்டிக் காண்பித்தார் கல்லூரி முதல்வர். சத்தியமூர்த்தியும் அங்கே போய் உட்கார்ந்தான். சுற்றிச் சுற்றி வந்த வண்ணம் எல்லோருடனும் சிரித்துச் சிரித்து உரையாடிக் கொண்டிருந்த பூபதி நடுவே சத்தியமூர்த்தி உட்கார்ந்திருந்த பக்கமாகவும் ஒரு முறை வந்தார். சத்தியமூர்த்தி எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்தினான்; அவரும் அன்போடு விசாரித்தார். பின்பு காசிலிங்கனார் பக்கமாகத் திரும்பி, "இவர் உங்கள் டிபார்ட்மெண்டுக்குப் புது விரிவுரையாளராக வந்திருக்கிறார். சத்தியமூர்த்தி, முற்போக்கும், ஆர்வமும் நிறைந்த இளைஞர். நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்..." என்று சத்தியமூர்த்தியைக் காண்பித்துச் சொல்லிவிட்டு மேலே நடந்தார்.

பூபதியின் மகள் பாரதி விருந்துக்கு வந்திருந்த நகரத்துப் பிரமுகர்களின் வீட்டுப் பெண்மணிகள் கூடியிருந்த கூட்டத்துக்கிடையே சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும், அவளுடைய மை தீட்டிய கருவிழிகள் அடிக்கடி சத்தியமூர்த்தி வீற்றிருக்கும் பக்கமே திரும்பிக் கொண்டிருந்தன. தன்னைச் சுற்றியிருக்கிறவர்களுக்காகத் தன் வாயும் இதழ்களும் சிரித்துக் கொண்டிருந்த அதே வேளையில் சத்தியமூர்த்திக்காகச் சிரிக்கும் அந்தரங்கமான நளின நகையைக் கண்களால் செய்து கொண்டிருந்தாள் அவள். ஒதுக்குப்புறமான இந்த மலைநாட்டு நகரத்துக்குக் கூட இத்தனை விதமான 'ஹேர் ஸ்டைல்களும்' (கொண்டை அலங்காரங்கள்) வந்து பரவியிருக்கின்றன என்பதை எடுத்துச் சொல்வது போல் அத்தனை விதமான தலையலங்காரங்களுக்கும் எடுத்துக் காட்டான பெண்கள் அந்த விருந்துக்கு வந்திருந்தார்கள். பத்துப் பன்னிரண்டு பேர் ஒரே சமயத்தில் சேர்ந்து ஜலதரங்கம் வாசிப்பது போல் சிரிப்பொலிகள் அந்தப் பெண்மணிகளின் கூட்டத்திலிருந்து எழுந்து பரவிக் கொண்டிருந்தன. சத்தியமூர்த்தி மனிதர்களையும் அவர்களுடைய மனப்பான்மைகளையும் படித்து முடிக்கும் சுபாவமான சுறுசுறுப்போடும், ஆர்வத்தோடும் அந்த விருந்துக்கு வந்திருந்தவர்களைப் படித்துக் கொண்டிருந்தான். சிலர் மனம் நிறைய அழுதுகொண்டே கூட்டத்தையும் தன்னையும் ஏமாற்றிக் கொள்ளும் பொருட்டு வாய் நிறையச் சிரித்தார்கள். இன்னும் சிலர் ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்துக் கொள்வதையே துக்கம் விசாரிப்பது போலத் தவிர்க்க முடியாமல் செய்து கொண்டிருந்தார்கள். சுகமோ துக்கமோ, உணர்ச்சிகளில் ஆழ்ந்து நிற்கத் தெரியாத மனிதர்கள் எட்டுக்கால் பூச்சி ஊர்வது போல் பொது இடத்தில் பட்டும் படாமலும் பழகுகிற 'அழகைக்' கவனித்து இதயம் புழுங்கிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி நிர்வாகத்தினருக்கும் ஆசிரியர்களுக்குமிடையே எப்போதும் சுமுகமான உறவு நிலவுவதற்கும் குடும்பப்பாங்கான சூழ்நிலை உண்டாவதற்கும் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் இப்படி ஒரு தேநீர் விருந்து நடைபெறுவதாகக் கூறிக் கல்லூரி அதிபரின் தாராள மனப்பான்மையைப் புகழ்ந்து எல்லோரையும் வரவேற்று ஆங்கிலத்தில் பேசி விருந்தை தொடங்கி வைத்தார் முதல்வர். முதல்வர் அவ்வாறு கல்லூரி நிர்வாகியைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, 'முதலை எவ்வளவு நாகரிகமாகக் காக்காய்ப் பிடிக்கிறது பாரும் ஐயா' என்று சத்தியமூர்த்தியின் பக்கத்திலிருந்த ஒரு விரிவுரையாளரிடம் இன்னொரு விரிவுரையாளர் முணுமுணுத்ததை அவனும் கேட்டான். விருந்து தொடங்கியது. சிற்றுண்டிக்குப் பின் எல்லார் முன்பும் மேசை மேல் வைக்கப்பட்டிருந்த 'கப்-ஸாசரில்' பரிமாறுகிறவன் ஆவிபறக்கும் தேநீரை ஊற்றிக் கொண்டு போனபோது சத்தியமூர்த்தியை மட்டும் கவனிக்கத் தவறிவிட்டான். ஆனால் பாரதி அவனையே கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொள்ளும்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.

தான் உட்கார்ந்திருந்த பெண்கள் பகுதியிலிருந்து விறுவிறுவென்று எழுந்து வந்த பாரதி பரிமாறுகிறவன் கையிலிருந்த தேநீர்க் கெட்டிலை வாங்கிச் சத்தியமூர்த்தியின் அருகே வந்து அவனுடைய தேநீர்க் கோப்பையை நிறைத்த பின்பே தன் மனம் நிறைந்தவளாகத் திரும்பிச் சென்றாள். விருந்து நடத்துகிறவருடைய மகள் என்ற முறையில் அவள் அப்படிச் செய்ததை எந்த விதத்திலும் தவறாக எடுத்துக் கொள்ள இடமில்லையாயினும் தனக்காக அவள் அப்படிச் செய்ய நேர்ந்தது அதனால் எல்லாருடைய கவனமும் சில விநாடிகள் தன் பக்கமாகத் திரும்ப நேர்ந்தததை எண்ணி நாணினான் சத்தியமூர்த்தி. ஒரு கூட்டத்திலிருந்து ஒருவனைத் தனியே பிரித்துத் தேர்ந்தெடுத்துச் செலுத்தப்படுகிற அன்பு அந்தக் கூட்டத்தின் நடுவே அவனுக்கே தண்டனை போல் தோன்றும். சத்தியமூர்த்திக்கும் அப்போதும் அப்படித்தான் தோன்றியது. பரிமாறுகிறவனுடைய கவனத்தில் தான் தவறிவிட்ட அடுத்த விநாடியே பக்கத்திலிருந்தவர்கள் கூடக் கவனித்துக் கண்டுபிடிக்கும் முன்பாக அந்தப் பெண் எழுந்து வந்த வேகம், அவள் அதைப் பெரிய இழப்பாக எண்ணித் தவித்துப் போய் ஓடி வருவதாகப் புலப்படுத்தியது.

ஆனால் கல்லூரி நிர்வாகியின் ஒற்றைக்கொரு செல்வப் பெண்ணாகிய அவளே அப்படி எழுந்து வந்து பரபரப்போடு உபசரித்த காரணத்தினால் அந்த உபசரிப்புக்கு ஆளான சத்தியமூர்த்தியின் பக்கமாக மற்றவர்களின் பார்வை பொறாமை கால்கொள்ளும் குறிப்போடு சில விநாடிகள் திரும்பி நிலைக்கும்படி செய்து விட்டாள் அவள். விருந்து முடிந்ததும் பூபதி ஆங்கிலத்தில் பேசினார். புதிய ஆசிரியர்களுக்கு நல்வரவு கூறி வரவேற்றும், பழைய ஆசிரியர்களைப் பாராட்டி நன்றி சொல்லியும், கல்லூரி வருங்காலத்தில் எதிர்பார்க்கிற இலட்சிய சாதனைகளை விளக்கியும், அழகியதொரு சொற்பொழிவாற்றினார் அவர். அதற்குப் பின் துணை முதல்வர் (வைஸ்-பிரின்ஸிபல்) புதிய ஆசிரியர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். அவரும் ஆங்கிலத்திலேயே பேசினார். 'அத்தனை பேர்களும் தமிழறிந்தவர்களாகவே இருந்து கொண்டு ஏன் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் பேசிக் கொள்கிறார்கள்?' என்றெண்ணி வியந்தான் சத்தியமூர்த்தி. அந்தரங்கத்தில் தாய்மொழியை அவமரியாதை செய்யும் அந்த நிகழ்ச்சிக்காக வருந்தவும் செய்தான். அந்த நிலையில் அவனே முற்றிலும் எதிர்பாராத விதமாகப் பூபதி அவன் பக்கமாகக் கையைக் கான்பித்து, "இந்த ஆண்டில் புதிதாக வந்திருக்கும் ஆசிரியர்களின் சார்பாக என்னுடைய இளம் நண்பர் சத்தியமூர்த்தி சில வார்த்தைகள் பேசுவார்" என்று அவனை வம்பில் இழுத்துவிட்டார். சில விநாடிகள் தயங்கிய பின் சத்தியமூர்த்தி பேச எழுந்து சென்றான். பேசுவதற்குச் செல்லுமுன் தற்செயலாகப் பாரதியின் பக்கமாகச் சென்றது அவன் பார்வை. குழந்தைத்தனமான மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் அவள் தன்னுடைய பேச்சை எதிர்பார்த்து மலர்ந்திருப்பதையும் அப்போது அவன் கண்டான். 'பெரியோர்களே! நண்பர்களே! சகோதரிகளே!' என்று தமிழில் அவன் தன்னுடைய பேச்சைத் தொடங்கியதும் கல்லூரி முதல்வர் அவசரமாக எழுந்து வந்து, ஆங்கிலத்தில் பேசுமாறு அவன் காதருகே முணுமுணுத்தார். 'ஆங்கிலத்தில் பேசுவதுதான் கௌரவம்' என்று வேறு வற்புறுத்தினார். அவருடைய முணுமுணுப்புக்கு மறுமொழி கூறிய சத்தியமூர்த்தி, அவருடைய செவிகளுக்கு மட்டுமே கேட்கிறாற் போன்று மெதுவான குரலில் அடக்கிக் கூறாமல் கூட்டத்திலிருந்த எல்லாருமே கேட்கும்படி இரைந்து கூறினான்: "சார்... ஐ ஹானர் தி இங்கிலீஷ்... பட் ஐ ஒர்ஷிப் தி டமில்" (நான் ஆங்கிலத்தை மதிக்கிறேன். ஆனால் தமிழை வணங்குகிறேன்) என்று அவரைக் குத்திக் காட்டும் பொருட்டு ஆங்கிலத்திலேயே அவருக்குப் பதில் கூறிவிட்டு "நம்முடைய கல்லூரி முதல்வர் அவர்களை அவமதிக்கக் கூடாதாகையால் அவருடைய கேள்விக்கு ஆங்கிலத்திலேயே மறுமொழி கூறிவிட்டேன். இனி இங்கே, கூடியிருக்கிற உங்களையும் நம்முடைய தமிழ்மொழியையும் அவமதிக்கக் கூடாதென்பதற்காகத் தமிழில் பேசுகிறேன். தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற உங்களுடைய கூட்டத்துக்கு நடுவே அதே மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற நான் பேசும்போது, தமிழில் பேசுகிறது மன்னிக்க முடியாத குற்றமானால் போனால் போகிறதென்று நீங்கள் என்னை மன்னித்து வையுங்கள்.

"இந்த நூற்றாண்டில் ஆங்கிலம் மனிதனுடைய பொதுமொழி. தமிழ் தமிழன் மட்டுமே பேசுகிற மொழி. இந்தி இந்தியைப் பேசுகிறவனுடைய மொழி. ஆனால், ஆங்கிலம் எல்லோருக்கும் மொழியாகத் தக்கவிதத்தில் புது யுகத்துக்கு ஏற்ற மனிதனின் உலக சமுதாயப் பொது மொழியாக இருக்கிறது. அதன் இடத்தை வேறொன்று நிரப்பவே முடியாது. ஆனால், அதற்காக நமக்குள் நாம் கூடப் பேசிக் கொள்ளும்போது தாய்மொழியைப் புறக்கணித்து, அந்தப் புறக்கணிப்பைச் செய்வதற்காகவே பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதில்லை. உலகத்தோடு பழகுவது ஒரு மனிதனுக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் வீட்டோடு பழகுவதும். உலகத்தின் சமுதாய மொழியாக வளர்ந்து வீறு பெற்றுவிட்ட ஆங்கிலத்தை எப்படி மதிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். இந்த நாட்டின் பிரதேச மொழிகள் வளருவதற்கு ஆங்கிலம் ஒரு போதும் தடையாக இராதென்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். அதே சமயத்தில் அவரவர்களுடைய தாய்மொழியை மதிக்கவும் தெரிய வேண்டும்" என்று மொழிப் பிரச்சினையைப் பற்றித் தைரியமாக விளக்கம் சொல்லிவிட்டு, அந்தக் கல்லூரியின் சிறப்பியல்புகளாகத் தான் கேள்விப்பட்டிருந்தவற்றைச் சொல்லி, "அப்படிப்பட்ட கல்லூரியில் நானும் பணிபுரிய வந்திருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்" என்பதாகப் பேசி முடித்தான் சத்தியமூர்த்தி. அவனுடைய கணீரென்ற குரல் ஒலித்து நின்ற போதுதான் அந்தக் கூட்டம் அதுவரை எவ்வளவு அமைதியாயிருந்து கேட்டதென்பது புரிந்தது. முடித்துவிட்டுத் தன் இடத்துக்குத் திரும்பியபோது, 'என்னுடைய பேச்சால் முதன் முதலாக ஆங்கிலத்தில் பேசிய கல்லூரி முதல்வரும், பூபதியும் மனம் புண்பட்டிருக்கலாமோ?' என்ற சிறிய சந்தேகமும் அவனுள் கிளர்ந்தது. 'அவ்வாறு மனம் புண்பட்டிருந்தாலும் பரவாயில்லை. பிறர் மனம் புண்படுமே என்பதற்காக உண்மையை மறைத்துப் போலியாகச் சிரித்துவிட்டு மேலே போய்விடுகிற பழக்கத்துக்கு இனியாவது முடிவு கட்ட வேண்டும். நான் செய்தது சரிதான்' என்று அடுத்தகணம் அவன் மனமே அவனைப் பாராட்டவும் செய்தது. விருந்துக் கூட்டம் முடிந்ததும், பூபதியோ, கல்லூரி முதல்வரோ தன்னைச் சந்தித்துக் கடுமையாகக் கோபித்துக் கொள்வார்கள் என்று அவன் எதிர்பார்த்தான்.

ஆனால் அவன் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாகப் பூபதி அவனருகில் வந்து அவனைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். "நீங்கள் சொல்வதை நான் அப்படியே ஒப்புக்கொள்கிறேன் மிஸ்டர் சத்தியமூர்த்தி! பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட காரணத்தினால் தமிழ் நன்றாகத் தெரிந்தவர்களுக்கிடையேயும் என்னைப் போன்றவர்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கிறது. இனியாவது அதை நாங்கள் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். சில சமயங்களில் ஆங்கிலமே தெரியாதவர்களுக்கு முன்னால் கூட ஆங்கிலத்தில் தான் பேச வருகிறது. நமக்குத் தெரியும் என்று காட்டிப் பிறரை மருட்டுவதற்காக ஒரு மொழியைப் பேசலாகாது. மொழிப் பழக்கமும் ஒரு நாகரிகம். பிறருக்கு நம் மனத்தைப் புரிய வைப்பதே அதன் நோக்கமாயிருக்க வேண்டும். ஆங்கிலத்தையும் நீங்கள் குறைத்துச் சொல்லவில்லை. அதை 'மனிதனின் மொழி' என்று அழகாகக் கூறினீர்கள். நீங்கள் கூறியது போல் அது உலகத்தின் சமுதாயப் பொதுமொழி. அதனால் நிச்சயமாக இனிமேல் எந்தப் பிரதேச மொழியும் பாதிக்கப்பட்டு வலிமை இழக்காது. ஆனால் ஓர் உதாரணத்திற்குச் சொல்லுகிறேன். வளர்ச்சியும் பக்குவமும் இல்லாத வேறு ஏதாவது ஒரு மொழி ஆங்கிலத்தின் இடத்தைக் கைப்பற்ற முயலுமானால் அது பல்வேறு மொழி இனங்களும் பிரிவுகளும் உள்ள இந்த நாட்டை உருக்குலைத்துப் பாழாக்கிவிடும். பல்வேறு மொழி இனங்கள் உள்ள இந்த நாட்டில் பழக்கவழக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையைக் காப்பாற்றி வருவது ஆங்கிலம் ஒன்றுதான் என்பதை நீங்களும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த நாட்டின் பழமையான பிரதேச மொழிகள் எல்லாம் பிழைத்து உயிர் வாழ வேண்டுமானால் இனிமேலும் இங்கே ஆங்கிலத்தைக் காப்பாற்றினாலொழிய வேறு வழி இல்லை" என்றார் பூபதி. கல்லூரி முதல்வரின் முகத்தில் மட்டும் கடுமையும் வெறுப்பும் குடி கொண்டிருப்பதைச் சத்தியமூர்த்தி கவனித்தான். பலருக்கு முன்னால் எழுந்து நின்று பேச வாய்த்த முதல் சந்தர்ப்பத்திலேயே எல்லாருடைய சிந்தனையிலும் தான் ஒரு பிரச்சினையாகிவிட்டதை அவனே உணர்ந்தான். 'உங்கள் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது' என்று அத்தனை பேருக்கும் நடுவே தேடி வந்து அவனைப் புகழ்ந்து விட்டுப் போனாள் பூபதியின் மகள் பாரதி. குறுகிய நோக்கமுள்ள சில பேராசிரியர்கள் அவனை வெறுப்புமிழுங் கண்களால் பார்த்துவிட்டுப் போனார்கள். விருந்திருக்கு வந்திருந்த பிரமுகர்களில் பலர் "அந்தப் பையன் யார் சார்?", என்று பூபதியிடம் அக்கறையோடு தூண்டித் தூண்டி விசாரிக்கும்படி அமைந்திருந்தது அவன் பேச்சு. அந்த அரைமணி நேரப் பேச்சில் எல்லலருடைய கவனத்துக்கும் ஆளாகியிருந்தான் அவன். விருந்து முடிந்து அறைக்குத் திரும்பும் போது பாடனி விரிவுரையாளர் சத்தியமூர்த்தியோடு உடன் வந்தார். மறுநாள் முதற்கொண்டு சத்தியமூர்த்தியுடன் தாமும் அந்த அறைக்கு வந்து தங்கப் போவதாகக் கூறிவிட்டுச் சென்றிருந்தார் அவர். அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி விட்டுக் கல்லூரிக்குப் புறப்படத் தயாராக இருந்தான் சத்தியமூர்த்தி. காலை ஒன்பது மணி சுமாருக்குத் தம்முடைய பெட்டிப் படுக்கை முதலிய பொருள்களோடு முதல் நாள் கூறியிருந்தபடி தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசன் சத்தியமூர்த்தியோடு அந்த அறையில் வசிக்க வந்து சேர்ந்து கொண்டார். மூன்றாவது ஆளாக வேறு யாரையும் உடன் சேர்த்துக் கொள்ளாமல் தாங்கள் இரண்டுபேர் மட்டுமே அந்த அறையில் இருந்து கொண்டால் என்ன என்பதைப் பற்றி இருவரும் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள். இருவரும் தலைக்கு எட்டு ரூபாய் அதிகம் கொடுக்க நேர்ந்தாலும் இடம் தாராளமாயிருக்குமே என்று எண்ணினார்கள் அவர்கள்.

இரண்டாவது நாளாகிய அன்று கல்லூரியில் அவன் ஒரு வகுப்புக்குச் செல்ல நேர்ந்தது. 'டயம் டேபிள்' (பாடவேளை) 'ஸெலபஸ்' (பாடத்திட்டம்) ஒன்றும் வகுத்து முடிக்கவில்லையானாலும், கல்லூரி முதல்வரின் கையொப்பமிட்ட 'சர்க்குலர்' (சுற்றறிக்கை) ஒன்று அவனுக்கும் வேறு சில ஆசிரியர்களுக்கும் பாடவேளை குறிக்கப்பட்டு அனுப்பப்பெற்றிருந்தது. புதிய ஆசிரியர்களில் சத்தியமூர்த்தி ஒருவனுடைய பெயர்தான் அன்று இருந்தது. அவன் அந்த வகுப்புக்குச் சென்றான். பி.ஏ. முதலாண்டு மாணவர்கள் அறுபது எழுபது பேர் ஒரு ஹாலில் அடைந்து கிடந்தார்கள். வகுப்பின் வலது பக்கமாக முதல் மூன்று பெஞ்சுகளில் மட்டும் மாணவிகள் உட்கார்ந்திருந்தனர். மற்ற எல்லாப் பெஞ்சுகளிலும், மாணவர்கள் இருந்தார்கள். பல்வேறு பாடப்பிரிவுகளையும், 'க்ரூப்'களையும் சேர்ந்த எல்லா மாணவர்களும் அங்கிருந்ததனால் ஒரு மணி நேரப் பொழுதுக்கு என்ன பாடம் நடத்தி அவர்கள் இதயமும் செவிகளும் நிறையச் செய்ய முடியுமென்று சத்தியமூர்த்தி சிந்தித்தான். மாணவர்களும் புத்தகம் ஏதும் கொண்டு வந்திருப்பதாகத் தெரியவில்லை. முதன்முதலாக ஒரு வகுப்புக்குள் நுழைந்து சும்மா உட்கார்ந்திருப்பதையும் அவன் விரும்பவில்லை. முதல் வரிசையில் பெண்கள் பகுதியில் உட்கார்ந்திருந்த பூபதியின் மகள் பாரதி தன்னிடமிருந்த ஆங்கிலக் கவிதைத் தொகுதி ஒன்றைத் தானாகவே அவனிடம் கொண்டு வந்து கொடுத்து, "இதில் ஏதாவது ஒரு பாடலை விளக்குங்கள் சார்" என்றாள். அவனுடைய மனநிலையைப் புரிந்து கொண்டு தானாகவே தயாராக எடுத்து வைத்திருந்தது போல அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்திருந்தாள் அவள். 'தமிழ் விரிவுரையாளராவது ஆங்கிலக் கவிதைக்கு அழகாக விளக்கம் சொல்வதாவது?' என்று மாணவர்கள் மருண்டார்களோ என்னவோ? சத்தியமூர்த்தி அந்தப் புத்தகத்தில் கைக்குத் தோன்றிய பக்கமொன்றைப் பிரித்தான். சத்தியமூர்த்திக்கு மிகவும் விருப்பமான கவிதை ஒன்று அந்தப் பக்கத்தில் வந்து வாய்த்தது. 'ஷீ வாக்ஸ் இன் பியூட்டி' என்று தொடங்கும் அழகிய கவிதை அது. பாரதியாரின் 'அழகுத் தெய்வம்' என்ற கவிதையை அதனோடு ஒப்பிட்டு மாணவர்களுக்கு விளக்கத் தொடங்கினான் சத்தியமூர்த்தி. பைரனின் அந்தக் கவிதையை உணர்ச்சி வசப்பட்டு விளக்கிக் கொண்டிருந்த போது, அவன் நினைப்பில் மோகினியின் நீர் பெருகும் விழிகள் தோன்றின. அவளுடைய சத்தியமான தூய அன்பு நினைவு வந்தது அவனுக்கு. நட்சத்திரங்கள் நிறைந்த, நிர்மலமான இரவு நேரத்து நெடு நீலவானத்தில் தனியாக மிதப்பதைப் போன்ற மோகினியின் தெளிவான அன்பை எண்ணினான் அவன். 'ஷீ வாக்ஸ் இன் பியூட்டி லைக் தி நைட் ஆப் க்ளெவுட்லெஸ் கிளைம்ஸ் அண்ட் ஸ்டாரி ஸ்கைஸ்' என்று அந்த வரிகளைக் கணீரென்று தொடங்கியதுதான் அவனுக்கு நினைவிருந்தது. அதன் பின் அவன் அந்தக் கவிதையில் தானே இரண்டறக் கலந்துவிட்டான். மோகினியோடு பழகிய அழகிய அநுபவங்கள் அவனுடைய அந்தச் சொற்பொழிவை இணையற்றதாகச் செய்தன.

அத்தியாயம் - 20

புகழோ பழியோ எதுவானாலும் இரண்டுமே ஒரு நல்ல மனிதனை அவன் இயல்பாக நடந்து போய்க் கொண்டிருக்கிற நடையிலிருந்து சில விநாடிகள் தடுத்து நிறுத்தித் தயங்க வைத்து விடக்கூடியவை.

வகுப்பறையில் சத்தியமூர்த்தி அந்தச் சொற்பொழிவைச் செய்த நேரத்தில் அவனுடைய சொற்கள், அவனுடைய உணர்ச்சி, முக பாவங்களாலும், அபிநயங்களாலும் அவன் கருத்துக்களைப் பேசிய விதம், எல்லாம் அழகுமயமாயிருந்தன. பிறரை ஏங்கச் செய்கிற வசீகரமான சொல்லுக்கும் நினைப்புக்கும் சொந்தக்காரன் யாரோ அவன் அதிசயமானவனாக இருக்க வேண்டும். அந்த விரிவுரையைக் கேட்ட மாணவர்கள் அத்தனை பேருக்கும் அப்படி ஓர் அதிசயமாகத் தான் தோன்றினான். 'ஏ மைண்ட் அட் பீஸ் வித் ஆல் பிலோ ஏ ஹார்ட் ஹூஸ் லவ் இஸ் இன்னொஸெண்ட்' என்று அந்தக் கவிதையின் கடைசி வரிகளையும் அவன் கூறி விவரித்து முடித்த போது வகுப்பு முடியவேண்டிய நேரத்துக்கு மேலும் கால்மணி நேரம் ஆகியிருந்தது. மாணவ மாணவிகள் எழுதி வைத்த சித்திரங்களைப் போல் அசையாமல் கட்டுண்டு கிடந்தார்கள். அந்தப் பாடலின் நடுவே, 'ஹௌ பியூர்?' (எவ்வளவு பரிசுத்தம்?) 'ஹௌ டியர்?' (எவ்வளவு கனிவு?) என்ற தொடர்களை ஒலித்த போதும் மோகினி பரிபூரணமாக அவன் மனக்கண்களில் தோன்றி நின்றாள். வகுப்பை முடித்துவிட்டு, அவன் மாணவ மாணவிகள் பக்கம் திரும்பி, மௌனமாக நிமிர்ந்து பார்த்தபோது, அத்தனை பேருடைய கண்களும், முகங்களும் ஆச்சரியத்தினாலும் வியப்பினாலும் மலர்ந்திருப்பதைக் கண்டான். அவனிடமிருந்து புத்தகத்தைத் திருப்பி வாங்கிக் கொள்ள வந்த பாரதி, "இந்த வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களும் தங்கள் வாழ்நாளில் இதற்கு முன் இப்படி ஓர் இலக்கிய நயமிக்க விரிவுரையைக் கேட்டதில்லை சார்" என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு சொல்லிவிட்டுப் போனாள். வகுப்பறையை விட்டு வெளியேறும் போது சத்தியமூர்த்தியைப் பின்பற்றியும் சூழ்ந்து கொண்டும் மாணவர்கள் கூட்டம் மொய்த்தது. தங்கள் மனத்துக்குப் பிடித்த ஒரு நல்ல விரிவுரையாளனைக் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில் முகத்திலும் மனத்திலும் ஆர்வம் பொங்கச் சூழ்ந்தார்கள் இளைஞர்கள். அவர்களுடைய அன்பு நிறைந்த பாராட்டுதல்களிலிருந்தும், ஆர்வம் நிறைந்த விசாரிப்புகளிலிருந்தும் சிறிது சிறிதாகத் தன்னை விலக்கி விடுபட்டு வகுப்பறையிலிருந்து வெளியே வந்த சத்தியமூர்த்தி அந்த அறையின் கதவோரமாக நின்று கொண்டிருந்த பூபதியைப் பார்த்துத் திகைத்தான். அவனைப் பின்பற்றிக் கூட்டமாக வந்து கொண்டிருந்த மாணவர்கள் நிர்வாகியே அங்கு வந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விலகிப் பின் தங்கினர். ஆனால் பூபதியின் முகமோ காணாததைக் கண்டுவிட்டது போல் மலர்ந்து போயிருந்தது. அந்த வகுப்புத் தொடங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் வந்து நின்று கேட்க ஆரம்பித்திருக்க வேண்டுமென்று தோன்றியது.

"இளம் நண்பரே! முதலில் என்னுடைய மனப்பூர்வமான பாராட்டுதல்களை ஏற்றுக் கொள்ளுங்கள். கல்லூரி வகுப்பறையில் நிகழ்த்தப்படுகிற ஒரு சாதாரன விரிவுரையில் இத்தனை மெருகும், நயமும் அமைய முடியும் என்பதை நான் இன்று தான் முதல் முதலாகக் கண்டேன். 'ஷீ வாக்ஸ் இன் பியூட்டி' என்று இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது" என்று கூறியபடியே அருகே வந்து அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் அவர். மேலே விரைவாக நடந்து போக முடியாதபடி தன்னைத் தயங்கி நிற்கச் செய்துவிட்ட அந்தப் புகழுக்காக நாணினான் சத்தியமூர்த்தி. புகழோ, பழியோ, எதுவானாலும் இரண்டுமே ஒரு நல்ல ம்னிதனை அவன் இயல்பாக நடந்து போகிற நடையிலிருந்து சில விநாடிகள் நிறுத்தித் தயங்க வைத்துவிடக் கூடியவை என்பதைச் சத்தியமூர்த்தி பலமுறை அநுபவத்தில் கண்டிருக்கிறான். புகழால் தயங்கி நின்றாலும் அது தயக்கம் தான். பழியால் தயங்கி நின்றாலும் அது தயக்கம் தான். எப்படித் தயங்கினாலும் சரி, தயங்கி நிற்கிறோம் என்ற விளைவு தான் முக்கியம். நடந்து போகிற ஒருவனைக் கல் தடுக்கி நிற்கச் செய்தாலும் தடைதான்; கைதட்டி அழைத்து நிற்கச் செய்தாலும் தடைதான். இன்னும் சொல்லப் போனால் பழியால் தயங்கி நிற்பதைவிடப் புகழால் தயங்கி நிற்பதுதான் அதிகமாக இருக்கும் என்பதைப் பல மேதைகளுடைய வாழ்க்கையில் கூட ஒப்பு நோக்கி வியந்திருக்கிறான் சத்தியமூர்த்தி. நடந்து போவதற்கும் முந்தும் வலது காலும் ஒரு நாகரிகத்துக்காகப் போகவிடாமல் தயங்கி நிற்க வேண்டிய அவசியமுமாகப் பூபதியை எதிர்கொண்டான் அவன்.

ஆசிரியர்கள் வகுப்பு நடத்துவதை மறைந்து நின்று கேட்டு அவர்களுடைய தரத்தைத் தீர்மானம் செய்கிற வழக்கம் பூபதியிடம் உண்டு என்று தான் கேள்விப்பட்டிருந்த உண்மை இப்போது நிதர்சனமாகி விட்டதைச் சத்தியமூர்த்தி கண்டான். ஆசிரியர்கள் தங்கி ஓய்வு கொள்ளும் அறைக்குள் போய் அவன் நுழைகிற வரை அவனோடு பேசிக் கொண்டே உடன் வந்தார் பூபதி. அறை வாசல் வரை பூபதி அவனோடு கூட வந்ததனால் உள்ளே உட்கார்ந்திருந்த ஆசிரியர்களில் சிலர் அவனை அதிகமாக உறுத்துப் பார்த்தார்கள். ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த பொருளாதார விரிவுரையாளர் மெல்ல எழுந்து வந்து குறும்புத்தனமான தொனியில் சத்தியமூர்த்தியிடம் ஒரு கேள்வி கேட்டார். "நீங்கள் நம்முடைய கல்லூரி நிர்வாகிக்கு மிகவும் வேண்டியவர் போலிருக்கிறதே. நேற்றானால் அந்த விருந்துக் கூட்டம் முடிந்ததும் உங்களைத் தேடி வந்து நீங்கள் செய்த சொற்பொழிவை வானளாவப் புகழ்ந்தார். இன்றோ உங்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டே இந்த அறை வாசல் வரை கொண்டு வந்துவிட்டுப் போகிறார். பெரிய யோகக்காரர் ஐயா நீர்! பிடித்தாலும் சரியான புளியங்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறீர்..." என்று அந்தப் பாமர மனிதர் தன்னை விசாரித்த விதம் சத்தியமூர்த்தியின் மனத்தை மிகவும் புண்படுத்தியது. நாகரிகமாக நினைப்பதற்கும், பேசுவதற்கும் தெரியாதவர்கள் கூடப் படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருப்பதை எண்ணி வருந்தினான் அவன். பூத்தொடுப்பது போல் முறையான மென்மையோடு மணக்க மணக்க உரையாடவும் பிறரோடு பழகவும் தெரியாத பலர் பெரிய பட்டங்களுக்கும், பதவிகளுக்கும் சொந்தக்காரர்களாயிருப்பதை அவன் பொது வாழ்வில் அதிகம் பார்த்திருக்கிறான். இன்று இங்கேயும் அதைத்தான் பார்த்தான். பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பிக் கொண்டிருக்கிறவரை இந்த விதமான பேச்சுக்கள் வளர்ந்து கொண்டே போகும் என்பதும் அவனுக்குத் தெரியும். "வேண்டியவர் வேண்டாதவர் என்பதை இதை வைத்து எப்படித் தீர்மானம் செய்ய முடியும்? நீங்கள் கூடத்தான் நேற்றும் என்னைத் தேடி வந்து பேசினீர்கள். இன்றும் தேடி வந்து பேசுகிறீர்கள். இப்படி இரண்டு முறை தேடி வந்து பேசி விட்டதனாலேயே நீங்கள் எனக்கு மிகவும் வேண்டியவர் என்று நான் தீர்மானம் செய்து விட முடியுமா?" என்று குறும்புச் சிரிப்புடனே அவன் அவரைக் கேட்ட கேள்வி பதில் ஒன்றும் சொல்ல முடியாமல் திணறச் செய்தது. அந்த விநாடியிலிருந்து அவர் சத்தியமூர்த்தியிடம் அநாவசியமாகப் பேசுவதற்குப் பயப்படத் தொடங்கினார். பொருளாதார விரிவுரையாளர் அங்கிருந்து எழுந்து சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் சத்தியமூர்த்திக்கு அருகே அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசன், "ஏதோ பேசத் தெரியாமல் பேசிவிட்டார். நீங்கள் அவருக்குப் பதில் சொல்லாமல் சும்மா இருந்திருக்கலாம். வந்ததும் வராததுமாகப் புது இடத்தில் ஒருவரைப் பகைத்துக் கொண்டிருக்க வேண்டாமே?" என்றார். சத்தியமூர்த்தி அதைக் கேட்டுச் சிரித்தான்.

"பொது வாழ்வில் பலவற்றைத் தழுவி உறவு கொள்ள தெரிந்திருப்பது போல் சிலவற்றைப் பகைத்து எதிர்கொள்ளவும் துணிவு வேண்டும் என்று நண்பன் குமரப்பன் அடிக்கடி சொல்லுவான். வேண்டாதவற்றிலிருந்து தம்மை அவ்வப்போது தப்பிக்கச் செய்து கொண்டு விலகித் திருப்திப்படுவதைக் காட்டிலும் வேண்டாதவற்றை நம்மிடமிருந்தே தவிர்த்து விலக்கிவிடுவது புத்திசாலித்தனம் சுந்தரேசன்! இந்தப் பொருளாதார விரிவுரையாளர் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டாலும் எனக்குக் கவலையில்லை. நான் அவருக்குப் பொருத்தமாகச் சொல்ல முடிந்த பதில் எதுவோ அதைத்தான் சொல்லியிருக்கிறேன்."

"இதனால் அவருக்கு உங்கள் மேல் அநாவசியமான வெறுப்பும், கோபமும் உண்டாகலாம்..."

"உண்டாகட்டுமே! இன்னொருவருடைய வெறுப்பும், கோபமும் குறுக்கிடாத பகையற்ற வாழ்க்கை எங்கே தான் இருக்கிறது?" என்று சத்தியமூர்த்தி கேட்ட கேள்விக்குச் சுந்தரேசன் மறுமொழி கூறவில்லை! இடைவேளையின் போது சத்தியமூர்த்தி சுந்தரேசனையும் அழைத்துக் கொண்டு கல்லூரி உணவு விடுதிக்கே சாப்பிடப் போயிருந்தான். அங்கேயும் மாணவர்கள் கூட்டம் அவனைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் தங்கள் தங்கள் வகுப்புகளுக்கு அவன் வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். எதிர்காலத்தில் திடமான நம்பிக்கை கொள்ளச் செய்யும் அந்த இளைஞர்களின் ஆர்வம் சத்தியமூர்த்திக்கு மிகவும் இதமாயிருந்தது. பகல் இரண்டரை மணிக்கு அவன் உணவு விடுதியிலிருந்து திரும்பிய போது தமிழ்த்துறைத் தலைவர் காசிலிங்கனார் ஆசிரியர்கள் அறையின் முகப்பில் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! உங்களோடு இரண்டு நிமிஷம் தனியாகப் பேச வேண்டும்" என்ற வேண்டுகோளுடன் அவனை அணுகினார் அவர். அவர் அருகில் ஏற்கெனவே நின்று கொண்டிருந்த மிஸ் வகுளாம்பிகை "புரொபஸர்! நான் உங்களை அப்புறம் பார்க்கிறேன்" என்று குறிப்பறிந்து விலகிச் சென்றாள். சத்தியமூர்த்தியை ஒரு பக்கமாகத் தனியே அழைத்துச் சென்று தாம் சொல்ல வேண்டிய செய்தியை எப்படி ஆரம்பித்து எப்படிச் சொல்லி முடிப்பதென்ற தயக்கத்தோடு ஏதோ ஒரு விதத்தில் வார்த்தைகளைப் பின்னிப் பின்னிப் பேசலானார் காசிலிங்கனார்.

"இப்போது நான் சொல்லப் போவதெல்லம் நம்முடைய 'டமில் டிபார்ட்மெண்ட்'டின் நன்மைக்காகத்தான். தயவுசெய்து இனிமேல் எந்த வகுப்புக்குப் போனாலும் நம்முடைய டிபார்ட்மெண்ட்டுக்குத் தொடர்புடைய ஏதாவது ஒரு பாடத்தை நடத்திவிட்டு வாருங்கள். பாடத்திட்டங்களும், யார் யாருக்கு எந்த வகுப்பு என்பதும் இன்னும் முடிவாகவில்லையானாலும், போகிற வகுப்பு எதுவாயிருந்தாலும் நான் சொல்கிறபடி செய்து விடுவது நல்லது. எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் இன்று காலையில் நீங்கள் பி.ஏ. முதலாண்டு மாணவர்களுக்கு... ஏதோ ஆங்கிலக் கவிதையை விளக்கி விரிவுரை நிகழ்த்தினீர்களாம். கல்லூரி நிர்வாகி அதைக் கேட்டுவிட்டுப் பிரின்ஸிபலிடம் போய் உங்களை ஒரேயடியாக தூக்கி வைத்துப் பேசிக் கொண்டாடியிருக்கிறார். 'இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட்டுக்குப் புதுப்புது 'டீச்சிங் மெத்தேட்ஸ்' (கற்பிக்கும் வழி முறைகள்) தெரிவதற்காக வருஷத்துக்குப் பத்தாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் ரெபரன்ஸ் புத்தகங்களை வாங்கிக் குவிக்கிறீர்களே? மாணவர்கள் மனத்தில் பதியும்படியான அழகுணர்ச்சியோடு காலையில் அந்தப் பையன் நடத்தியதைப் போல் ஒரு கவிதை வகுப்பு யாராவது இதுவரை இங்கு நடத்தியிருக்கிறீர்களா?' என்று கல்லூரி நிர்வாகி உங்களைக் கொண்டாடியதை ஒட்டி இங்குள்ள இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட்டைப் பற்றிக் குறைத்துச் சொல்லியிருக்கிறார். பிரின்ஸிபல் அவரிடம் ஒன்றும் எதிர்த்துப் பேச முடியவில்லை. பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு இருந்துவிட்டார். நிர்வாகியின் தலை மறைந்ததும் என்னைக் கூப்பிட்டு வயிற்றெரிச்சலையெல்லாம் கொட்டித் தீர்த்துக் கொண்டாயிற்று. நீங்கள் அந்த வகுப்பில் மாணவர்களுக்கு ஆங்கிலக் கவிதையை விளக்கி விரிவுரை நிகழ்த்தியதனால்தான் இவ்வளவு வம்பும் வந்ததாம். 'இனிமேல் தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் எந்த வகுப்புக்குப் போனாலும் தமிழையே நடத்தச் சொல்லுங்கள். இல்லாத அதிகப் பிரசங்கித்தனமெல்லாம் வேண்டாம்' என்று என்னிடம் எரிந்து விழுகிறார் பிரின்ஸிபல். நேற்று நிர்வாகியின் வீட்டுத் தோட்டத்தில் நீங்கள் பேசியதைப் பற்றியும் பிரின்ஸிபலுக்கு நிறைய மனத்தாங்கல் இருக்கும் போல் தோன்றுகிறது..."

இவ்வாறு காசிலிங்கனார் கூறியவற்றையெல்லாம் கேட்டுச் சத்தியமூர்த்திக்குச் சிரிப்பு வந்தது. சிரித்தால் அவர் தம்மை அவமதிப்பதாக நினைத்துக் கொள்ளப் போகிறாரோ என்று எண்ணிச் சிரிப்பை அடக்கிக் கொண்டு, "உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி புரொபஸர்! நான் கவனமாக நடந்து கொள்வேன்" என்று சத்தியமூர்த்தி அவருக்குப் பதில் கூறினான். "ஒன்றும் மனத்தில் வைத்துக் கொண்டு வேதனைப் படாதீர்கள். உடனே சொல்லிவிடுவது நல்லதென்று உங்களைக் கூப்பிட்டுச் சொன்னேன்" என்றார் காசிலிங்கனார்.

"பரவாயில்லை! நான் பார்த்துக் கொள்கிறேன்..." என்று அவருக்குப் பதில் சொல்லி விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தான் சத்தியமூர்த்தி. பெரிய பட்டங்களைப் பெயருக்கு முன்னும் பின்னும் போட்டுக் கொண்டு நவநாகரிகமாக உடையணிந்து படிப்பும் பதவியும் உண்டாக்கிய கௌரவத்தோடு நடக்கிற முதிய மனிதர்களிடம் கூட இத்தனை பலவீனங்களும் ஆற்றாமைகளும் அசூயைகளும் இருப்பதை எண்ணி உள்ளூர சிரித்துக் கொண்டே போனான் அவன். அந்த வகுப்பில் அவன் காலையில் தான் நடத்திய ஆங்கிலக் கவிதையைப் பற்றிய விரிவுரையைப் பூபதி கேட்க நேரும் என்றோ அதன் விளைவாக உண்டாக்கிய புகழ்ச்சியால் தன் மேல் இத்தனை அசூயைகள் குறிவைத்துப் பாயும் என்றோ அவன் ஒரு சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயத்தில் அவன் இந்த விளைவுகளுக்காகப் பயப்படவும் இல்லை. உணர்ச்சியும், மலர்ச்சியும் நிறைந்த இளம் மாணவர்கள் கூட்டம் தான் நடக்கிற வழியில் தனக்குப் பின்னால் தொடர்ந்து வருவதற்குத் தயாராக இருக்கும் போது மூத்த பொய்ம்மைகளை நினைத்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று நம்பினான் அவன். 'நீங்கள் இந்தக் கல்லூரிக்கு விரிவுரையாளராக வந்த பின் எப்படிப்பட்ட முரட்டு இளைஞர்களும் உங்களைச் சுற்றிக் கைகூப்பிக் கொண்டு திரியப் போகிறார்கள், பாருங்களேன்' என்று பூபதியின் மகள் பாரதி தன்னுடைய கடிதத்தில் எழுதியிருந்ததை நினைத்துக் கொண்டான். கல்லூரி முதல்வரும் ஹெட்கிளார்க் சிதம்பரமும் முதலிலிருந்தே தன்னிடம் பழகுகிற விதம் சரியாயில்லை என்பது அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. அதை நினைத்தும் அவன் கவலைப்படவில்லை. அந்த இரண்டு மூன்று நாட்களிலேயே மாணவர்கள் மனதில் எல்லாம் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டான் சத்தியமூர்த்தி. அவன் கல்லூரிக்குள் நுழையும் போதும், கல்லூரி முடிந்து வெளியேறும் போதும் மலர்ச்சி நிறைந்த முகங்களோடு மாணவர்கள் பலர் அவனைச் சூழ்ந்து கொள்வதைப் பார்த்துக் கல்லூரி முதல்வரும், வேறு சில வயதான ஆசிரியர்களும் அந்தரங்கமாக மனம் புழுங்கினார்கள். மலர்ந்த முகத்தோடு அளவாகவும், அழகாகவும், சிரித்துப் பழகுகிற சுபாவம், நயமும் கருத்தும் கலந்த உரையாடல், எதைப் பற்றியும் சிக்கலோ, முரண்பாடோ இல்லாமல் விவாதிக்கும் திறன், இவற்றால் அந்தக் கல்லூரியின் மாணவர்களை எல்லாம் அபிப்பிராய பேதத்துக்கு இடமில்லாமல் மொத்தமாகக் கவர்ந்துவிட்டான் சத்தியமூர்த்தி. அரைகுறையாகப் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் நன்றாகவே பொறாமைப்படும்படியான காரியம் ஒன்று ஒருவாரம் கழித்து நடந்தது. கல்லூரி நிர்வாகி என்ற முறையில் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை எப்போதாவது கல்லூரிக்கு வந்து சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்வார் பூபதி. அன்றும் அப்படிச் சுற்றிப் பார்க்க வந்தவர் கல்லூரியைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் தமது அறையில் போய் இருந்து கொண்டு சத்தியமூர்த்தியைக் கூப்பிட்டு அனுப்பினார். சத்தியமூர்த்தி அவரைச் சந்திக்கச் சென்றான். அவர் அவனை வழக்கத்துக்கு அதிகமான ஆவலோடும் உற்சாகத்தோடும் வரவேற்றுப் பேசினார். 'அவனுக்கு அந்த ஊர் உடல்நலத்துக்கு ஒத்துக் கொள்கிறதா? கல்லூரியின் சூழ்நிலை பிடிக்கிறதா? சௌகரிய அசௌகரியங்கள் எவையேனும் உண்டா?' என்பது போல் பொதுவான அக்கறையோடு எல்லாவற்றையும் விசாரித்த பின்பு அவனே முற்றிலும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார் பூபதி.

"இந்தக் கல்லூரியின் ஹாஸ்டலுக்குச் சரியான வார்டன் இல்லை. ஒரு சம்பிரதாயத்துக்காக நம்முடைய வைஸ்பிரின்ஸிபலையே வார்டனாகப் போட்டிருக்கிறோம். கல்லூரிக் காம்பவுண்டுக்குள்ளேயே மேற்குக் கோட்டில் அவருக்கும் பிரின்ஸிபலுக்கும் வீடுகட்டிக் கொடுத்திருக்கிறோம். வயதாகிவிட்ட காரணத்தினால் வைஸ்பிரின்ஸிபல் ஓடியாடி அலைந்து ஒன்றும் பார்க்க முடியவில்லை. அவருக்குத் துணையாக உதவலாம் என்பதோடு ஹாஸ்டலில் இன்னும் நன்றாகக் கவனம் செலுத்தி உழைக்க வேண்டும் என்பதற்காக உங்களை 'உதவி வார்டனாக' நியமிக்கலாம் என்று நினைக்கிறேன். இதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா? நீங்கள் இதை விரும்பாததற்குத் தவிர்க்க முடியாத காரணம் ஏதாவது இருந்தாலொழிய உங்களை நான் விடமாட்டேன். இந்த ஒரு வாரமாக 'இதற்கு யார் தகுந்த ஆள்' என்று இடைவிடாமல் சிந்தித்து உங்களைத் தேர்ந்தெடுத்தேன்! நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?"

இதற்கு என்ன மறுமொழி கூறுவதென்று சத்தியமூர்த்தி சிறிது நேரம் தயங்கினான். பெருந்தொழிலதிபராகிய அந்தத் தேர்ந்த வியாபாரி தன்னை எதற்காகவோ பரீட்சை பார்க்கிறாரோ என்றும் நினைக்கத் தோன்றியது அவனுக்கு. 'மல்லிகைப் பந்தல் கல்லூரிக்கு நீங்கள் ஆசிரியராக வந்து பாடங்கள் கற்பிப்பது தவிர அந்தக் கல்லூரியின் அநுபவங்கள் உங்களுக்கே சில நல்ல பாடங்களைக் கற்பிக்கும் என்பது என் கருத்து' என்று தனக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்த வாக்கியம் வேறு இப்போது நினைவு வந்தது. அவனும் ஒரு பெரிய கல்லூரியில் மாணவனாக இருந்தவனாதலால், 'வார்டனாக' இருப்பதில் உள்ள கஷ்ட நஷ்டங்களைச் சிந்தித்து முடிவு சொல்லக் கூட அவகாசமில்லாமல் எப்படி ஒப்புக் கொள்வதென்று தான் தயங்கினான். இப்போது இப்படி வேண்டுகோள் விடுக்கிற இதே பூபதி தான் இண்டர்வியூவின் போது, 'நீங்கள் மிகவும் இளைஞராக இருக்கிறீர்கள். உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை. மாணவ மாணவிகளிடம் நீங்கள் அதிக கவனத்தோடு பழகவேண்டும்' என்றெல்லாம் சொல்லித் தயங்கினாரென்பதும் அவனுக்கு மறந்துவிடவில்லை.

அவனுடைய தயக்கத்தைப் புரிந்துகொண்டே பூபதி மேலும் தெளிவாக விளக்க முற்படுகிறவராகத் தம் மனக்கருத்தை அவனுக்கு விவரிக்கலானார்:

"நான் சொல்லுகிறபடி மறுக்காமல் ஒப்புக்கொள்ளுங்கள் மிஸ்டர் சத்தியமூர்த்தி! என்னுடைய மனக்கருத்தை நம்முடைய கல்லூரி முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் கூட இன்னும் நான் தெரிவிக்கவில்லை. உங்களைக் கேட்டுக் கொண்டு செய்யலாம் என்றிருக்கிறேன். இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும், நானாக ஒவ்வொன்றாய் நினைத்து நினைத்துச் செய்தால் தான் உண்டு. நான் வேற்றுமைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் பார்ப்பதில்லை. இங்கே படிக்கிற ஒவ்வொரு மாணவியையும் என் மகள் பாரதியைப் போலவே அக்கறையும் சிரத்தையும் செலுத்தி வளர்க்க விரும்புவது என் வழக்கம். என் சொந்தப் பிள்ளைகளை வளர்ப்பது போல் தான் மாணவ மாணவிகளைப் படிப்பும் பொறுப்பும் உள்ள இளைஞர்களாக உருவாக்கி அனுப்ப விரும்புகிறேன் நான். 'எப்போதும் போல் இருப்பவர்களே இருக்கட்டும்! புதிதாக உதவி வார்டன் எதற்கு?' என்று முதல்வரே என் அபிப்பிராயத்துக்குத் தடை கூறினாலும் கூறலாம். நான் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை. மாணவர்களை இன்னும் சிரத்தையோடு கவனித்துக் கொள்ள வேண்டும். அந்தக் காரியத்தைத் தைரியமாக உங்களிடம் ஒப்படைக்கலாம் என்று தோன்றுகிறது எனக்கு" என்றார் அவர்.

நீண்ட நேரத் தயக்கத்துக்குப் பின் சத்தியமூர்த்தி அவருக்குப் பதில் சொல்லியே தீர வேண்டியதாயிற்று. "நீங்கள் இந்தக் காரியத்துக்காக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். அதே சமயத்தில் இதை ஏற்றுக் கொள்ளவும் எனக்குத் தயக்கமாக இருக்கிறது சார்! வயதும், அநுபவமும் மிகுந்த ஆசிரியர்கள் பலர் இந்தக் கல்லூரியில் இருக்கிறார்கள். நான் வயதில் இளையவன், புதிதாக வந்திருப்பவன். உங்கள் எண்ணத்தை என்னால் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போனாலும் போகலாமோ என்று தான் தயங்குகிறேன் சார்..."

இப்படி அவன் சாதாரணமாகக் கூறிய பதிலை அவர் தம்மைக் குத்திக் காட்டுவதாக எடுத்துக் கொண்டார். முதன் முதலாக அவன் இண்டர்வ்யூவுக்கு வந்திருந்த போது அவனுடைய வயது இளமை, அனுபவம் ஆகியவற்றைப் பற்றித் தான் அதிகமாக விவாதித்துவிட்டதை இப்போது அவன் இப்படிச் சொல்லிக் காட்டுவதாகப் புரிந்து கொண்ட பூபதி, "மிஸ்டர் சத்தியமூர்த்தி! நீங்கள் எதற்காகவோ என்னிடம் இதைச் சொல்லிக் காண்பிக்கிறீர்கள் என்று படுகிறது. அப்படியானால் என்னை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்க வேண்டியிருக்கும்" என்றார். சத்தியமூர்த்தி மௌனமாக இருந்தான். பூபதி அவ்வளவுடன் அவனை விட்டுவிடவில்லை.

"இதோ என்னைப் பாருங்கள் சத்தியமூர்த்தி! நான் உங்களுக்குச் சம்மதமா, இல்லையா என்று கேட்டு இதுவரை தயங்கிக் கொண்டிருப்பதை இனிமேல் செய்யப் போவதில்லை. இன்னும் அரைமணி நேரத்தில் நீங்கள் இந்தக் கல்லூரியின் விடுதிக்கு 'உதவி வார்டனாக' நியமிக்கப்பட்டிருப்பதைப் பற்றி 'சர்குலர்' வரும். அப்போது தெரிந்து கொள்வீர்கள். இப்போது நீங்கள் புறப்படலாம்" என்று புன்முறுவலோடு அவன் பதில் சொல்ல இடமின்றிப் பேச்சை முடித்தார் பூபதி.

முக்கால் மணி நேரத்துக்கு மேல் கல்லூரி நிர்வாகியின் அறையில் உட்கார்ந்து அவரோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு அவன் வெளியே வந்து ஆசிரியர்கள் அறைக்குள் திரும்பி நுழைந்த போது மற்றவர்கள் அவனைப் பார்த்த பார்வையே 'ஒரு மாதிரி' இருந்தது.

"என்ன விசேஷமா? ரொம்ப நாழிகை பேசிக் கொண்டிருந்தீர்கள் போலிருக்கிறதே?" என்று விஷயத்தை அறிந்து கொண்டு வம்பளக்கும் ஆவலோடு அவனை அணுகிக் கேட்டார் ஒரு பேராசிரியர்.

"ஒன்றுமில்லை" என்று சுருக்கமாக அவருக்குப் பதில் சொல்லி அனுப்பினான் சத்தியமூர்த்தி. காசிலிங்கனாரோ வேறு எதையோ நினைத்துக் கொண்டு பயந்தார். "ஏதோ நமக்குள்ளே பேசிக் கொள்வதையெல்லாம் நீங்கள் மேலே இருக்கிறவர்களுக்குச் சொல்லி ரசாபாசம் பண்ணக்கூடாது. பிரின்ஸிபல் 'தமிழ்ப்பிரிவு ஆசிரியர்கள் தமிழ் தவிர வேறெதுவும் நடத்தக்கூடாது. ஆங்கிலத்தை ஆங்கில விரிவுரையாளர்கள் நடத்திக் கொள்வார்கள்' என்று கூறியதைப் பூபதி அவர்கள் காதில் போட வேண்டாம். இதெல்லாம் நமக்குள் ஓர் ஏற்பாடு. பிரின்ஸிபலையும் பகைத்துக் கொள்ள முடியாது. மற்றவர்கள் நன்றாக ஆங்கிலம் நடத்திப் பேர் வாங்கிவிட்டால் அவருக்குப் பிடிக்காது. இதெல்லாம் பட்டும் படாமலும் இருக்கணும்" என்று காசிலிங்கனார் உடனே வலுவில் தன்னிடம் வந்து கூறியதைப் பார்த்தால் அவர் பேசியதெல்லாம் தான் பூபதியிடம் சொல்லியிருப்பதாக அவரே சந்தேகப்படுகிறார் என்பது சத்தியமூர்த்திக்குப் புரிந்தது. 'படித்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? இப்படி நினைக்கிறார்கள்? ஏன் இப்படிப் பொய்யாகப் பழகுகிறார்கள்?' என்று எண்ணி எண்ணித் தனக்குள் நொந்து கொள்வதைத் தவிர சத்தியமூர்த்தியால் அப்போது வேறொன்றும் செய்ய முடியவில்லை.

'பொய் தவழும் உலகநடை என்னென்பேன்? என்னென்பேன்?' என்று இராமலிங்க சுவாமிகள் கதறியிருப்பதை நினைத்துக் கொண்டான் அவன். வகை வகையான எண்ணங்களையும் பழக்க வழக்கங்களையும் உடைய மனிதர்களை இரசிக்கத் தெரிய வேண்டுமென்று குமரப்பன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பானே, அது இப்போது ஞாபகம் வந்தது. செய்தி அதற்குள் எப்படியோ கல்லூரி முழுவதும் பரவியிருந்தது. கல்லூரி முடிந்து அறைக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில், "உங்களை உதவி வார்டனாக நியமிக்கப் போவதாகப் பேசிக் கொள்கிறார்களே?" என்று பாடனி விரிவுரையாளர் சுந்தரேசன் நடுவழியில் கேட்ட போது சத்தியமூர்த்தி மௌனமாகப் புன்னகை செய்தான். ஆமாம் என்றும் ஒப்புக் கொள்ளவில்லை, இல்லை என்றும் மறுக்கவில்லை. பலர் பணிபுரியும் பொது நிறுவனங்களில் தனி ஒருவனுடைய வளர்ச்சியும், தளர்ச்சியும் ஒவ்வொரு விநாடியும் அந்தப் பலராலும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்குமென்று அவனுக்குத் தெரியும். வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படவும், தளர்ச்சியைக் கண்டு பெருமைப்படவும் செய்வார்கள் என்பதும் தெரியும்.

அத்தியாயம் - 21

வாழைக்காய்க் குலை முற்றியவுடன் தாறு வெட்டிக் காய்களைச் சுற்றி வேப்பிலைக் கொத்துக்களால் மூடிக் களிமண்ணால் மூட்டம் போட்டுச் சூடும் வெம்மையும் உண்டாக்கிப் பழுக்கச் செய்வார்கள். அதைப் போல் அந்த வீட்டின் கசப்பினாலும் வெம்மையினாலுமே அவள் மனம் பழுத்து இனிமை கண்டிருந்தது.

நாலைந்து நாட்களாகத் தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததைப் போலவே அன்றும் பலமான இடிகளோடும், மின்னலோடும் கோடை மழை பெய்து ஓய்ந்திருந்தது. அந்த முன் மாலை நேரத்தில் மழை பெய்து நின்ற நிலையில் கோபுரங்களும், தானுமாக வார்த்தைகளால் இன்னதென வருணிக்க முடியாத தொரு பேரழகில் குளித்தெழுந்து ஈரம் புலராத பச்சை வனப்போடு இலங்குவது போல் தோன்றிக் கொண்டிருந்தது மதுரை நகரம். இசை வேளாளர்கள் நிறைந்த சங்கீத விநாயகர் கோயில் தெருவில் ஏதோ ஒரு வீட்டில் யாரோ ஓர் இளம் பருவத்து நாதஸ்வரக் கலைஞர் இந்த உலகத்தின் சகலவிதமான அழகுகளையும் ஒலி வடிவமான ஒரே ஓர் இராகத்தில் சொல்லிவிட விரும்புவதுபோல் தோடியை வாசித்துக் கொண்டிருந்தார். இன்னொரு வீட்டிலிருந்து தேர்ந்த விரல்கள் நல்ல வீணையின் நரம்புகளில் மிக மென்மையானதோர் இனிமையைப் பேசிக் கொண்டிருந்தன. தெருவைத் தழுவினாற் போல் நீண்டு செல்லும் மின்சார 'வயரிலும்' தந்திக் கம்பிகளிலும் முத்து முத்தாக மழை நீர் நிற்கவும் மாட்டாமல், சிந்தவும் மாட்டாமல் மனிதனுடைய ஆசைகளைப் போல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. யாரும் வராத தெருக்கோடியை வெறித்துப் பார்த்தபடி அங்கு யாரோ வேண்டியவர்கள் வரப்போவது போல் கற்பித்துக் கொண்ட ஆர்வத்தோடு வீட்டு வாசலிலிருந்து கவனித்த வண்ணம் இருந்தாள் மோகினி.

அங்கிருந்து விடுபட்டு எங்கோ உடனடியாகப் பறந்து போய்விட வேண்டும் போலத் தவித்துக் கொண்டிருந்தது அவள் மனம். உள்ளே அம்மாவும், கண்ணாயிரமும் கண்ணாயிரத்தோடு வந்திருந்த வேறொரு மனிதரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சிரிப்பும் அரட்டையுமாகக் கண்ணாயிரம் பேசிய விதத்தைப் பார்த்தால் இந்த உலகத்தையே தாம் வம்பளப்பதற்கென்று சாசனம் செய்து கொடுத்துவிட்டது போல் பாவிப்பதாகத் தோன்றியது. அந்த நிலையில் உள்ளே உட்காருவதற்குப் பிடிக்காமல் தான் வாசலுக்கு எழுந்து வந்திருந்தாள் மோகினி.

'அந்த வீட்டில் அந்தச் சூழ்நிலையில் தன் உடம்பையும் மனத்தையும் எப்படிப் பரிசுத்தமாகப் பாதுகாத்துக் கொண்டு வாழ்வதற்கும் முடியப்போகிறது?' என்று எண்ணித் தவித்த போது எதிர்காலம் இருண்டு தெரிந்தது. 'கேளாதே வந்து கிளைகளாய்த் தோன்றி' என்று ஒரு பழைய பாட்டு ஆரம்பமாகும். 'இந்த வீட்டைத் தேடி வந்து இந்த அம்மாவுக்குப் பெண்ணாய்ப் பிறந்து இந்தப் பூமியில் இப்படி அவதிப்பட வேண்டும் என்று யார் தவம் இருந்தார்கள்?' என்று எண்ணும் போது அவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. செந்தாமரைப் பூக்களாய் மலர்ந்த கைகளும், கால்களும் ஒளிரச் சத்தியமூர்த்தி அந்த வீட்டின் வாயிற்படிகளில் ஏறி வந்த இனிய நாட்கள் அவளுக்கு நினைவு வந்தன. கையில் அவனளித்த மோதிரத்தையும் இதயத்தில் அவனைப் பற்றிய நினைவுகளையும் அணிந்து கொண்டு நேரம் போவது தெரியாமல் தெருக்கோடியை வெறித்துப் பார்த்தபடி நின்றாள் அவள். 'இந்த வழியாகத்தான் அவர் கம்பீரமாக நிமிர்ந்து நடந்து வந்தார்! இந்த வழியாகத்தான் திரும்பிப் போனார்' என்று வந்த வழியும் போன வழியும் ஞாபகத்தில் இருந்தன. தெருவில் எங்கிருந்தோ நாத வெள்ளமான மதுர அலைகளோடு பொங்கிய நாதஸ்வரக்காரரின் தோடியும், மழை பெய்து நின்றிருந்த சூழ்நிலையும், இசை வண்டு முரல்வது போல் வீணையின் பக்குவமான ஒலியும், அவளை வேறு உலகத்தில் வேறு ஞாபகத்துக்குக் கொண்டு போயிருந்த போது அம்மா வந்து காதருகில் முணுமுணுத்து இந்த உலகத்தை ஞாபகப் படுத்தினாள்.

"வீட்டுக் கூடத்திலே பெரிய மனிசங்க... ரெண்டு பேரு வந்து பேசிக்கிட்டிருக்கிறப்போ, இங்கே தெருவிலே என்னா பாழாய் போறதுன்னு வந்து நின்னுக்கிட்டிருக்கிறே? உன்னையத்தாண்டி கேக்குறேனே. உள்ளே வந்து உட்கார்ந்து தொலை. வந்திருக்கிறவங்களுக்கு இதமா ரெண்டு வார்த்தை சிரிக்கப் பேசு. அதிலே ஒண்ணும் கொறைஞ்சு போயிடாது."

"நான் என்னம்மா பேச போறேன்? எல்லாம் நீயே பார்த்துப் பேசி அனுப்பிவிடு!" என்று அவள் வேண்டா வெறுப்பாகத் தட்டிக் கழிக்க முயன்ற போது அம்மா கோபித்துக் கொண்டு சீறினாள்.

"இப்பிடி யாருக்கு வந்த விருந்தோன்னு இருந்திட்டா நாளைப் பின்னே இந்த வீட்டைத் தேடி மனிசாள் யாரும் வரமாட்டாங்க. தொழில் பட்டுப்போய் நீயும் நானும் தெருவிலே பிச்சைக்கு நிற்கலாம்டீ..."

"மானங்கெட்டுப் போய் வீட்டுக்குள்ளே நிற்கிறதை விட மானத்தோடு தெருவில் நிற்கலாம்..."

இந்த வார்த்தைகளை இவ்வளவு துணிவாக அம்மாவிடம் 'வெடுக்'கென்று நேருக்கு நேர் அவள் சொல்லியிருக்கலாமோ, கூடாதோ? ஆனால் சொல்லியாயிற்று. அம்மா பரபரப்பாக வந்த விதம், 'பெரிய மனுசாள்' வந்திருக்காங்க என்று சொல்லிய விதம் எல்லாமே அவள் மனத்தில் வெறுப்பை ஊட்டின. அந்த வெறுப்பின் விளைவாகத்தான் அவள் இப்படிப் பேசியிருந்தாள். செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து செல்வமும் செல்வாக்கும் உள்ளவரான பெரிய வணிகர் ஒருவரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார் கண்ணாயிரம். அந்தத் தன வணிகர் வீட்டில் கலியாணமாம. கலியாணத்தன்று மாலை வரவேற்பின் போது மோகினியின் நாட்டியம் இருந்தால் நல்லதாம். கண்ணாயிரம் அந்தத் தன வணிகரை அழைத்துக் கொண்டு வந்தது, அறிமுகப்படுத்தியது, பேசியது எல்லாமே, 'நான் ஏற்பாடு செய்கிறேன்' 'நான் தான் இதெல்லாம் ஏற்பாடு செய்ய முடியும்' என்ற திமிர் தெரியும்படி இருந்தன. கண்ணாயிரத்தைப் போல் எந்தத் தகுதியினாலும் கர்வப்பட வழி இல்லாதவர்கள் எதற்காகவோ கர்வப்பட்டுக் கொள்வதை அவள் மனம் பொறுத்துக் கொள்ள முடியாமல் வெறுத்தது. கர்வப்படுவதற்கும் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் ஏதோ ஒரு சிறப்பான காரணம் உள்ளவர்கள் கர்வப்படுவதையே இந்த உலகம் ஏற்றுக் கொள்வதற்கும், அங்கீகரிப்பதற்கும் தயங்குகிறது. அப்படியிருந்தும் கண்ணாயிரத்தைப் போன்றவர்கள் தங்களைத் தாங்களே கர்வப்படுவதற்குரியவர்களாகப் பாவித்துக் கொண்டு திரிவதைச் சமூகமும் பெரிய மனிதர்களும் எப்படி மன்னிக்கிறார்கள்? என்று புரிந்து கொள்ள முடியாமல் மனம் கொதித்தாள் அவள். அந்தக் கொதிப்பினால் தான் அம்மாவுக்குப் பதில் சொல்லும் போது அவ்வளவு கடுமையான வார்த்தைகளாகச் சொல்லிவிட்டாள். அவளுடைய பதில் வார்த்தைகளைக் கேட்டு அம்மா கோபத்தோடு தோள்பட்டையில் முகத்தை இடித்துக் கொண்டு அழகுக் காட்டிவிட்டு உள்ளே போயிருந்தாள். வந்தவர்களும், அம்மாவும், கண்ணாயிரமும் எக்கேடும் கெட்டுப் போகட்டுமென்று வாசலிலிருந்தபடியே சிறுவனை அழைத்து, உள்ளே இருந்து தட்டில் பூவும், தேங்காய் பழமும் எடுத்துக் கொண்டு வரச்சொல்லி அவனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மீனாட்சி கோவிலுக்குப் புறப்பட்டுவிட்டாள் அவள். வடக்குக் கோபுரத்தின் வழியாகக் கோவிலுக்குள் நுழைந்து ஆடி வீதியில் கிழக்கு நோக்கி நடந்து கொண்டிருந்த போது மறுபடியும் மழை பிசுபிசுக்கத் தொடங்கியிருந்தது. அவளும் உடன்வந்திருந்த சிறுவனும் சாமி சந்நிதிக்குள் நுழைவதற்குள் மழை பலமாக வந்துவிட்டது. கோவிலுக்குள்ளும் கூட்டம் அதிகமாக இருந்தது. சாமி சந்நிதியில் தரிசனத்தை முடித்துக் கொண்டு மோகினி அம்மன் சந்நிதி முகப்புக்கு வந்த போதில் கூட்டம் உள்ளே நுழைய முடியாதபடி நெருக்கமாக இருந்தது. அர்ச்சனைச் சீட்டு வாங்குவதற்குப் பையனை வரிசையில் நிற்கச் சொல்லிவிட்டுக் கிளிக்கூண்டு மண்டபத்தை ஒட்டினாற்போல் தயங்கி நின்றாள் அவள். கூட்டிலிருந்த பல கிளிகளில் மிகவும் பெரியதாகிய பஞ்சவர்ணக் கிளி ஒன்று, வருகிறவர்கள் சொல்லித் தனக்குப் பழக்கப்படுத்திவிட்ட ஒரே ஒரு வார்த்தையாகிய, 'மீனாட்சி' 'மீனாட்சி' என்ற பதத்தை கிள்ளைப் பேச்சாக மிழற்றிக் கொண்டிருந்தது. கிழக்குப் பக்கம் பொற்றாமரைக் குளத்துக்கு மேலே திறந்த வானம் இடியும் மின்னலுமாக மழைக்கோலம் பூண்டிருந்தது. மழை நிற்கிற வழியாயில்லை. பொற்றாமரைக் குளத்தின் படிகளில் தண்ணீர் வடிந்து பாயும் ஓசை ஒரே அளவான சுருதியோடு ஒலித்துக் கொண்டிருந்தது. மிகப் பெரிதாகக் கேட்ட இடி ஓசை ஒன்றின் போது கிளிக்கூட்டு மண்டபத்தில் அடைபட்டிருந்த பஞ்சவர்ணக்கிளி மேலே 'படபட'வென்று சிறகடித்துப் பறக்க முயன்று முடியாமல் மறுபடியும் சட்டத்தில் வந்தமர்ந்தது. அப்படிப் பறக்க முயன்று போய்த் தளர்ந்து மறுபடியும் சட்டத்திலேயே அமர்ந்துவிட்ட அந்தக் கிளியையும் தன்னையும் மனத்தில் ஒப்பிட்டுப் பரிதாபத்தை உணர்ந்தாள் மோகினி. 'நீயும் நானும் கூண்டிலிருந்து பறந்து போய்ச் சுதந்திரமாக வாழ முடியாது கிளியே! காரணம் நீயும் நானும் பிறருடைய காட்சிக்குப் பண்டமாகிற அளவுக்கு அழகாயிருப்பதுதான். எங்கே இருக்கிறோமோ அங்கிருந்து பறந்து போய்விடத்தான் நீயும் நினைக்கிறாய். நானும் நினைக்கிறேன். ஆனால் சொல்லிக் கொடுத்தபடி வாழ்ந்து, கட்டுப்படுத்தியபடி கட்டுண்டு மடியவேண்டுமென்று தான் உன் தலையிலும் என் தலையிலும் ஒன்றாக எழுதியிருக்கிறது. ஆனால் ஒரே ஒரு வேறுபாடு. நீ இருக்கிற கூட்டை இரும்பு அளியிட்டு மூடியிருக்கிறார்கள். நான் இருக்கிற கூட்டை அப்படி யாரும் மூடிப் பூட்டி வைக்கவில்லை. வாசல், கொல்லை, கூடம், மேசை நாற்காலி, கட்டில், மெத்தை எல்லாம் இருக்கிற சுகமான கூட்டில் நான் அடைப்பட்டிருக்கிறேன். என்னுடைய கூட்டில் வாசலும் புறக்கடையும் திறந்தேயிருந்தாலும் நான் வெளியேற முடியாது. சொல்லிக் கொடுத்தபடி ஆடவும் அம்மாவுக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கவும் நான் அடைப்பட்டிருக்கிறேன். சொல்லிப் பழக்கப்படுத்தப் பெற்ற ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு நீயும் அடைப்பட்டிருக்கிறாய். நீயும், நானும் அழகாயிருக்கிறோம் என்று உலகம் திருப்திபடலாம். ஆனால் சுதந்திரமாயிருக்க முடியாத வரையில் நாம் திருப்திப்பட என்ன இருக்கிறது?' என்று இப்படியெல்லாம் நினைத்துப் பெருமூச்சி விட்டாள் மோகினி.

அதே மண்டபத்தின் அருகே முன்பு சத்தியமூர்த்தியைச் சந்தித்ததும், திருச்சுற்றில் வலம் வரும்போது அவன் பாதங்களைத் தொட்டு வணங்கியதும் நினைவு வந்து அவளைக் கண் கலங்கச் செய்தன. அந்தக் கணத்தில் அவளுடைய ஞாபகம் தான் தொட்டு வணங்கிய பாதங்களில் போய்ப் பதிந்தது அல்லது அவளுடைய ஞாபகத்தில் அந்தப் பாதங்கள் வந்து பதிந்தன. மீண்டும் மற்றோர் உரத்த இடியோசையில் மருண்ட அந்தக் கிளி மறுபடியும் சிறகடித்துப் பறக்க முயன்று முடியாமல் ஆற்றாமையோடு சட்டத்தில் வந்து அமர்ந்தது. அந்தப் பஞ்சவர்ணக்கிளியின் வெல்வெட் உடம்பையும் அதில் நிறங்களில் புரண்டெழுந்தாற் போன்ற பளபளப்பையும் பார்த்து, 'மீனாட்சி மீனாட்சி' என்ற ஒரே வார்த்தையைக் கதறி அதைத் தவிரக் கதறுவதற்கு வேறு பதமும், பறப்பதற்கு வேறு இடமும் கிடைக்காமலே தவிப்பதையும் உணர்ந்து, அந்த உணர்ச்சியிலேயே தன் துயரத்தையும் புரிந்து கொண்டவளாய் மலைத்து நின்றாள் மோகினி.

தேங்காய்ப் பழமும் பூவும் இருந்த கூடை கீழே விழுந்து விடும் போலக் கைகள் நடுங்கின. மனம் எதையோ எண்ணி யாருடைய ஞாபகத்திலோ பெரிதாகத் தவித்தது. இதற்குள் வரிசையில் நின்றிருந்த சிறுவன் அர்ச்சனைச் சீட்டோடு வந்து சேர்ந்திருந்தான். கூட்டத்தோடு கூட்டமாகக் கோவிலுக்குள் சென்றாள் மோகினி. மீனாட்சி சந்நிதியில் அர்ச்சனை முடிந்து, பிரகாரத்தில் சுற்றிய போது சத்தியமூர்த்தியின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்ட இடத்தில் மேலே நடக்கத் தோன்றாமல் சில விநாடிகள் தயங்கி நின்றாள் அவள். மனமும் கால்களும் அந்த இடத்தைவிட்டு நகர முடியாமல் தயங்கின. 'உயிரைக் கொடுத்த தெய்வத்தைத் தரிசிக்க வந்த இடத்தில் உயிரைக் காப்பாற்றிய தெய்வமாகிய உங்களையும் தரிசனம் செய்ய நேர்ந்தது' என்று முன்பு கோவிலில் சந்தித்த போது, தான் அவனிடம் கூறியிருந்ததை நினைத்தாள் அவள். கோவிலில் ஒவ்வொரு சந்நிதியிலும் வணங்குவதற்காகக் கையெடுத்த போதெல்லாம் அவன் அன்போடு பரிவோடு தன்னைக் கைப்பற்றி அணிவித்த அந்த மோதிரம் கவனத்தில் பட்டதனால் வணங்கிக் கொண்டிருந்த தெய்வத்தின் ஞாபகத்தோடு வணங்க வேண்டிய தெய்வத்தின் ஞாபகத்தையும் சேர்த்து உண்டாக்கின. மனத்தில் தனியாக ஓடிக் கொண்டிருந்த நினைப்பைப் போல் அல்லது நினைப்பிற்கு ஏற்றாற் போல் புறத்திலும் தனியே ஒதுங்கிப் பிரிந்து நடக்க முடியாமல் மழையின் காரணமாக வந்தவர்கள் எல்லாம் வெளியேற முடியாது போய்க் கோவிலில் கூட்டம் அதிகமாயிருந்தது. மழை நின்று அவள் சிறுவனோடு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது இரவு ஒன்பது - ஒன்பதரை மணிக்கு மேல் இருக்கும். அப்போதும் கூடக் கண்ணாயிரமும் வந்தவரும் திரும்பிப் போகவில்லை. மேசை நடுவே வெற்றிலைப் பாக்கையும் வார்த்தைகளையும் சுவைத்து மென்று தின்று கொண்டிருந்தார்கள் அம்மாவும் கண்ணாயிரமும். கைவிரல்களில் நகைக்கடை வைத்த மாதிரி விதம் விதமான கற்களில் மோதிரமும், சரிகைக்கரை மட்டுமே தெரிய மடித்த விசிறி மடிப்புப் பட்டு அங்கவஸ்திரமும், அடிக்கடி தோளில் நிற்காமல் நழுவுகிற அங்கவஸ்திரத்தை எடுத்து மேலே சார்த்திக் கொள்ளும் கையும் தொந்தியுமாக வந்தவர் அசடு வழியச் சிரித்துக் கொண்டிருந்தார். அம்பு பாய்வது போல் வீட்டுக்குள் நுழைந்து கூடத்தில் நிற்காமலே விறுவிறுவென்று நடந்து போய் மாடிப்படி ஏறிவிட்டாள் மோகினி. நேரங்கெட்ட நேரத்தில் ஆண் பிள்ளைகளை உட்கார்த்தி வைத்துப் பேசிக் கொண்டு அம்மா கொட்டமடிப்பதை அவள் மனம் வெறுத்தது. பின்னாலேயே அவளைத் தொடர்ந்து அம்மாவும் படியேறி வந்தாள். "இந்தா பாருடீ! உனக்குத் தான் சொல்றேன். பையனை இட்லி பலகாரம் வாங்கியாறச் சொல்லி அனுப்பு. வந்தவங்களுக்குக் கொடுக்கணும். இந்த நேரத்திலே இங்கே மாடியிலே தனியா என்ன கிழிக்கப் போறே? கீழே வந்து உட்கார்ந்து மனிசாளோட மனிசாளா இரேன்..."

மோகினி பதில் சொல்லாமல் உதட்டைக் கடித்துக் கொண்டு மன அழுத்தத்தோடு இருந்தாள்.

"நீ ஏண்டி இப்படி இருக்கே? பணமும் மதிப்பும் உள்ள பெரிய மனுசாள் வந்து மணிக்கணக்காகக் காத்திருக்காங்க. நான் படிச்சுப் படிச்சுச் சொல்றேன். குத்துக் கல்லாட்டமாச் சும்மா இருக்கியே... கல்யாணத்துக்கு ஆடணுமின்னு பேச வந்திருக்காரு. 'முழுசா அஞ்சு நூறு ரூபா நோட்டை எடுத்து அட்வான்ஸா வச்சிக்குங்க'ன்னு கொடுத்திருக்கிற மனுசாளிட்டே ரெண்டு வார்த்தை சிரிச்சுப் பேசிட்டாத் தான் என்ன குறைஞ்சு போவுதாம்?"

செய்ய விருப்பமில்லாத காரியத்தைச் செய்வதற்காகக் கதறி அழுகிற மனத்துடனும் செய்தே தீர வேண்டுமென்று கட்டாயப் படுத்தப்படுகிற அவசியத்துக்காகக் கீழிறங்கும் கால்களுமாக அம்மாவுடன் படிகளில் இறங்கினாள் அவள். கண்ணாயிரத்தின் வாழ்க்கையில் பொய் என்பது ஒரு பகுதியாயில்லை, பொய்யின் வாழ்க்கையில் தான் கண்ணாயிரம் ஒரு பகுதியாயிருக்கிறார் என்று மோகினி அறிந்திருந்தாள்.

'உங்கள் வீட்டுக் கல்யாணத்தில் தன் பெண் தான் நாட்டியமாடணும்னு முத்தழகம்மாளுக்கு ஆசை' என்று அங்கே கலியாணம் நடக்கிற பிரமுகர் வீட்டில் பேசியிருப்பார். இங்கே வீட்டில் வந்து 'முத்தழகம்மா! மோகினியோட நாட்டியக் கச்சேரி இருந்தால்தான் இந்தக் கலியாணத்துக்கு நான் சம்மதிக்க முடியும்'னு மாப்பிள்ளைப் பையனே ஒத்தக் காலில் நிற்கிறானாம்' என்று அதையே மாற்றிச் சொல்வார் கண்ணாயிரம். காரியம் ஆவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவர் அவர். புகழுக்காகவும் பணத்துக்காகவும் மானத்தையும் இழக்கலாம் என்ற எண்ணமும் செயலும் உடையவர் தான் கண்ணாயிரம். அம்மாவின் மிரட்டலுக்குப் பயந்து கீழே வந்திருப்பவர்களைப் பார்ப்பதற்காகப் படி இறங்கிக் கொண்டிருந்த போது கோவிலில் கிளிக்கூட்டு மண்டபத்துக்குள் அடைக்கப்பட்டிருந்த அந்தப் பஞ்சவர்ணக் கிளியின் ஞாபகம் வந்தது மோகினிக்கு. அதையும் விடத் தன் நிலைமை இன்னும் மோசம் என்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டாள் அவள். கீழே இறங்கிக் கூடத்துக்குப் போனதும் அம்மா அங்கு வந்து காத்திருந்தவரை விட்டுக் கொடுக்காமல் தன் தேர்ந்த சாமர்த்தியத்தைப் பயன்படுத்திச் சாகஸமாகப் பேசினாள்.

"கோயிலுக்குப் போய்விட்டு வந்த பொண்ணு மாடியிலே போய்த் தலைவலின்னு சுருண்டு படுத்திருச்சு. நான் போய்ச் சொன்னேனோ இல்லையோ? 'அப்படியா? தேடி வந்தவங்களைப் பார்க்காம அனுப்பறது வளமொறையில்லே'ன்னு தலைவலியோட எழுந்து வந்திருக்கு...?"

அம்மாவும் கண்ணாயிரமும் பச்சைப் பொய்களை வந்திருந்தவருக்கு முன்னால் தாராளமாக வாரி வழங்கினார்கள். கேட்கக் கேட்க மோகினி மனம் கொதித்தாள்; வயிறெரிந்தாள். தாம் ஏதோ மிகவும் செல்லமாகவும் உரிமையோடும் கூப்பிடப் பாத்தியப்பட்டவரைப் போல் கண்ணாயிரம் அவளுடையப் பேரைச் சுருக்கி, "என்ன மோகி! நம்ப... இவர் இருக்காரே... (வந்திருந்த சரிகை அங்கவஸ்திரப் பிரமுகரைச் சுட்டிக்காட்டி) ரொம்பப் பெரிய கலாரசிகர். பத்து லட்ச ரூபாய் முதலீடு பண்ணி முழுக்க முழுக்க டான்ஸே வருகிறாற் போல் ஒரு கலர் சினிமாப் படம் எடுக்கணும்னு இவாளுக்கு ஒரு நெனைப்பிருக்கு. அப்பிடி எடுத்தா நீதான் அந்தப் படத்திலே ஹீரோயின்!" என்று குழைந்தார். சரிகை அங்கவஸ்திரம் அசடு வழியச் சிரித்துக் கொண்டிருந்தது. மாமிசத்தைக் கொத்திக் கொண்டு போகிற கழுகுப் பார்வை. மரத்தூணில் புடவையைச் சுற்றி வைத்துவிட்டு எதிரே ஒரு நாற்காலியைப் போட்டு உட்காரச் சொன்னால் உட்கார்ந்து மூன்று நாள் வாய் திறந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கத் தயாராயிருக்கிற அளவுக்குச் சரியான பெண் பிள்ளை கள்ளனாயிருப்பான் போலிருக்கிறது. இரண்டு நிமிஷம் நின்று விட்டு அம்மாவின் வார்த்தைகளையே மெய்யாக்குகிறவளாய்த் "தலைவலி ரொம்ப அதிகமாயிருக்கு.. நான் வரேன்" என்று நடைப்பிணமாய் மாடிக்குத் திரும்பினாள் மோகினி. திரும்பினவள் அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு மாடப் பிறையில் கிடந்த பழைய டைரி ஒன்றிலிருந்து அரைத்தாளைக் கிழித்துப் பென்சிலால் அதில் ஏதோ எழுதலானாள். அப்போது அந்தக் காரியத்தைச் செய்யாவிட்டால் அவளுக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல் இருந்தது.

சில வாழைத் தோட்டங்களில் வாழைக்காய் குலை முற்றியவுடன் தாறு வெட்டிக் காய்களைச் சுற்றி வேப்பிலைக் கொத்துக்களால் மூடிக் களிமண்ணால் மூட்டம் போட்டுச் சூடும் வெம்மையும் உண்டாக்கிப் பழுக்கச் செய்வார்கள். அதைப் போல் அந்த வீட்டின் கசப்பினாலும் வெம்மையினாலும் அவள் மனம் பழுத்து இனிமை கண்டிருந்தது. கசப்பான அனுபவங்களிலும் வெம்மையான சூழ்நிலைகளிலும் வெந்து தவித்துக் கொண்டிருந்தவளுக்குக் கிடைத்த ஒரே ஒரு நல்ல ஞாபகம் சத்தியமூர்த்தியாயிருந்தான். அன்றிரவு மோகினி அந்தப் பென்சிலையும் காகிதத்தையும் வைத்துக் கொண்டு நீண்ட நேரமாய்ப் போராடும் மனத்தோடு இருந்தாள். படுக்கையில் விழுந்து குமுறிக் குமுறி அழுதாள். வாழ விரும்பாத போதும் வாழ்க்கையையே ஒரு கனமாகச் சுமையாக உணரும் போது சாவது கூடச் சுகமான காரியமாயிருக்கும் போல் தோன்றியது. கசப்புக்கும் வெம்மைக்கும் அப்பால் வாழ்க்கையின் இனிமைகள் பழுக்கவேயில்லை. யாரோ ஒரு சத்தியமான மனிதருடைய நல்ல கைகள் சாவிலிருந்து தன்னைக் காப்பாற்றிய ஞாபகத்தை மதிப்பதற்காக வாழ வேண்டுமென்றுதான் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள். நீண்ட நாழிகை அழுத பின்பு அந்தக் காகிதத்தில் பென்சிலால் எழுதியதை ஒரு பழைய உறையில் இட்டு நன்றாக ஒட்டி மேலேயும் பென்சிலால் ஏதோ எழுதினாள்.

வரவு செலவு பணம் காசு எல்லாம் அம்மா கையில் தான். ஸ்டாம்புக்குக் காசு வேண்டும். விடிந்ததும் அம்மாவிடம் என்ன சொல்லி எப்படிக் காசு கேட்பது? ஸ்டாம்பு ஒட்டின கடிதத்தை விட ஸ்டாம்ப் ஒட்டாத கடிதம் கண்டிப்பாகப் போய்ச் சேரும் என்று அவளுக்குத் தெரியும். விடியற்காலையில் மூன்றரை மணிக்குக் தெருக் கதவைத் திறந்து கொண்டு சந்தின் கோடியில் இருந்த பொதுத் தபால் பெட்டியில் அதைக் கொண்டு போய்ச் சேர்த்த போதே அறுபது எழுபது மைலுக்கு அப்பால் இருக்கும் மலை நாட்டு நகரத்தில் தன்னுடைய தெய்வம் அதைக் கையில் வாங்கிப் பிரித்துப் படிப்பது போல் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள் மோகினி. மாணவ மாணவிகள் புடைசூழ அந்தத் தெய்வம் கல்லூரிக்குள் நடந்து போவது போலவும், திரும்பி வருவது போலவும், தன்னுடைய தப்புத்தப்பாக எழுதிய பென்சில் எழுத்துக் கடிதத்தை வாங்குவது போலவும் கற்பனையில் நினைப்பதே சுகமான அநுபவமாக இருந்தது அவளுக்கு. அன்றைய வாழ்க்கையில் ஏதோ போதுமான பெரிய காரியத்தைச் செய்தது போன்ற திருப்தியை அடைந்திருந்தாள் அவள்.

காலையில் எழுந்ததும் அம்மா வேறு ஒரு செய்தியைச் சொன்னாள். "கண்ணாயிரம் யாரோ பத்திரிகைக்காரங்களைக் கூட்டிக்கிட்டு வரேன்னிருக்காரு. உன் படத்தையும் போட்டு ஏதோ பேட்டியோ போட்டியோ - வெளியிடப் போறாங்களாம்... குளிச்சு நல்லா டிரஸ் பண்ணிக்கோ. பளிச்சிண்ணு தெரியறாப்பலே இரு. அழுது வடியாதே. படம், கிடம் பிடிச்சாலும் பிடிப்பாங்க..."

'இந்த வீட்டுக்கு யாரையாவது கூப்பிட்டுக் கொண்டு வருவதும் போவதும் வெற்றிலைப் பாக்குப் போடுவதுமாக வாழாவிட்டால் கண்ணாயிரத்துக்குத் தலை வெடித்துப் போய் விடுமோ?' என்றெண்ணிக் குமுறுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் அவளால்?

அத்தியாயம் - 22

சமூகத்தின் அநுபவத்துக்குப் பொதுவான கலைகள் எவையானாலும் அவற்றை நம்பி வாழ்கிறவர்கள் ஊர் நடுவிலிருக்கிற மருந்து மரத்தைப் போன்று பயன்படுவது அதிகமாகவும், பயன்பெறுவது குறைவாகவும் வாழ்கிறார்கள்!

குத்து விளக்கு காரியாலயத்தின் உள்ளே சகல விதமான இருட்டுக்களும் உண்டாயினும் மேலுக்கு என்னவோ பிரகாசமான விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். அந்தக் காரியாலயத்தில் எந்த இடத்தில் எதற்காக எப்போது வெளிச்சமாக இருக்கும் என்பதும், எந்த இடத்தில் எதற்காக எப்போது இருட்டாக இருக்கும் என்பதும் குமரப்பனுக்கு நன்றாகத் தெரியும். குமரப்பன் அந்தப் பத்திரிகையின் 'கார்ட்டூனிஸ்ட்' மட்டுமல்ல; சமயாசமயங்களில் 'போட்டோகிராபராக'வும் 'ரிப்போர்ட்டரா'கவும் கூட வேலை செய்ய வேண்டியிருக்கும். இரண்டு கைகளையும் தாராளமாக வீசிக் கொண்டு நடக்கிற நடையிலே வழியில் நிற்கிற நாலு பேரை ஒதுங்கச் செய்து விடுகிற சாமர்த்தியசாலி அவன். சுற்றி இருக்கிறவர்களுடைய மனத்தின் இருளை நன்றாகப் புரிந்து கொண்டு பட்டும் படாமலும் பேசிக் கூர்மையான வார்த்தைகளால் அவர்களை நேருக்கு நேரேயே தாக்கிக் கூறிவிட்டுச் சிரிப்பதில் அவனுக்கு நிகரான நிபுணன் அவன் தான். துணிவும் அந்தத் துணிவை விட்டு நீங்காத ஒரு வித வேதாந்த மனப்பான்மையும் உடைய தைரியசாலி அவன். எப்போதும் யாரையும் எதற்காகவும் பொய்யாக மதிப்பதோ, பொய்யாகப் புகழ்வதோ அவனுக்குப் பிடிக்காது. அன்று காலையில் குமரப்பன் அலுவலகத்துக்கு வந்ததும் நாட்டியக் கலைமணி குமாரி மோகினியைப் பேட்டி கண்டு வருவதற்காகப் போக வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார்கள். குமரப்பனையும் அந்தப் பத்திரிகையின் கலை விமர்சனப் பகுதிகளைக் கவனித்துக் கொள்ளும் ஓர் உதவி ஆசிரியரையும் மோகினியின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போவதற்காகக் கண்ணாயிரம் தயாராக வந்து காத்துக் கொண்டிருந்தார். குமரப்பனைக் கண்டாலே கண்ணாயிரத்துக்கு எப்போதும் பயம் உண்டு. அந்தப் பயம் தமக்கு இல்லை என்பதை நிரூபித்துக் கொள்ள முயல்கிறவரைப் போல் குமரப்பனிடம் கலகலப்பாகப் பேச முயன்று, அப்படிப் பேசியதன் காரணமாகவே அந்தப் பயத்தை அதிகமாக்கிக் கொண்டு போய்ச் சேருவது அவர் வழக்கம். வெளிப்படையாகத் தைரியசாலியாக இருப்பதைப் போல் காண்பித்துக் கொண்டே அந்தரங்கமான கோழை என்று அவரைப் பற்றித் தீர்மானம் செய்திருந்தான் குமரப்பன். கண்ணாயிரம் அன்றும் அவனை விசாரித்துக் கொண்டே வந்து சேர்ந்தார்.

"என்ன குமரப்பன்? எப்படி இருக்கிறீர்கள்?" என்று அவர் விசாரித்தவுடன், "மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று தீர்மானம் செய்கிற உரிமையே உங்களைப் போன்றவர்களிடம் விடப்பட்டிருக்கும் போது நீங்களெல்லாம் இப்படி விசாரிக்கலாமா சார்?" என்று சிறிதும் இடைவெளியின்றி அவருக்கு மறுமொழி கூறினான் குமரப்பன். இந்த வார்த்தைகளில் இருந்த ஆழமான அர்த்தத்தினால் கௌரவமாகத் தாக்கப்பட்டுவிட்ட கண்ணாயிரம் மேலும் பேச சக்தியை இழந்துவிட்டார். மோகினியின் வீட்டில் போய்ப் பேட்டி காண்பதற்காக உடன் வர இருந்த உதவியாசிரியர் கண்ணாயிரத்துக்கு மிகவும் வேண்டியவர். காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது கண்ணாயிரத்தை வாய் ஓயாமல் தூக்கி வைத்துப் புகழ்ந்து கொண்டே வந்தார் அந்த உதவி ஆசிரியர். 'எல்லாரையும் புகழ்கிறவன் யாரோ அவன் எல்லாராலும் புகழப்படுவான்' என்று ஒரு சித்தாந்தம் உண்டு. அந்தச் சித்தாந்தப்படி புகழை ஏற்படுத்திக் கொண்ட உதவியாசிரியர் அவர். அந்தக் காரில் அவர்களோடு காமிராவும் கையுமாகப் போய்க் கொண்டிருந்த குமரப்பன், பொறுமை இழந்திருந்தான். குமரப்பன் ஒன்றும் பேசாமலேயே குறும்புத்தனமான மௌனத்தோடு உடன் வருவதைக் கவனித்த உதவி ஆசிரியர் அவனிடம் ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவன் கையிலிருந்த புகைப்படக் கருவியைச் சுட்டிக்காட்டி, "இது மிகவும் உயர்ந்த ரகத்துக் 'கேமிரா' - குமரப்பன்! 'அட்ஜஸ்ட்மெண்ட்' சரியாக இருந்தால் பிரமாதமாயிருக்கும்" என்றார். குமரப்பன் அவரைச் சும்மா விடவில்லை.

"ஆமாம் சார்! நன்றாகச் சொன்னீர்கள். 'அட்ஜஸ்ட்மெண்ட்' சரியாயிருந்தால் எதுவுமே பிரமாதமாகத்தான் இருக்கும்" என்று அந்த ஆள் வாய் ஓயாமல் கண்ணாயிரத்தைப் புகழ்வதையும் சேர்த்துத் துணிவாகவும், குத்தலாகவும் சொல்லிக் காண்பித்தான் குமரப்பன். அதற்கப்புறம் மோகினியின் வீடு வந்து சேர்கிற வரை அந்த உதவி ஆசிரியர் வாயைத் திறக்கவேயில்லை. மோகினியின் தாய் முத்தழகம்மாள் வீட்டு வாசலிலேயே அவர்களை எதிர்கொண்டு வந்து உள்ளே அழைத்துச் சென்றாள். கண்ணாயிரம் முத்தழகம்மாளிடம் 'குத்துவிளக்கின்' உதவியாசிரியரை முதலில் அறிமுகம் செய்து வைத்துவிட்டுக் குமரப்பனின் பக்கமாகத் திரும்பி, "இவர் அந்தப் பத்திரிகையில் கேலிச் சித்திரங்கள் வரைகிறவர். நிரம்பவும் வேடிக்கையாகப் பேசுவார். நல்ல கலை ரசிகர்" என்று அவனைப் பற்றியும் கூறினார். உடனே குமரப்பன் நடுவில் குறுக்கிட்டு, "தயவு செய்து அப்படிச் சொல்லாதீர்கள் சார்? நீங்களெல்லாம் கலை ரசிகரா இருக்கிற உலகத்தில் என்னைப் போன்றவர்களும் கலைரசிகர்களாக இருப்பது முடியாத காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஏதோ மனிதர்களை மட்டும் ரசித்துக் கொண்டிருக்கிற பாமரன் சார்" என்று அதிக விநயமாக ஆரம்பித்து அவரை மடக்கிப் பேசினான். ஒவ்வொரு முறையும் வாயைத் திறந்து பேசும் போது பேச்சில் அவனிடம் வகையாகப் பிடிபட்டுக் கொண்டு விழித்தார் கண்ணாயிரம். அவருக்கு அவன் ஒரு பிரச்சினையாயிருந்தான். நளின கலைகளின் இருப்பிடமான அந்தத் தெருவிலும் அந்த வீட்டுக்குள்ளும் நுழையும் போது குமரப்பன் தன் மனத்தில் ஏதேதோ சிந்தித்தான். மனித நினைவுகளைத் தெய்வீகத்தோடு கொண்டு போய் இணைப்பதற்காகத் தோன்றிய உயர்ந்த கலைகள் எல்லாம் பத்திரிகைப் புகழுக்கும் பணத்துக்கும் ஆட்படுகிறவைகளாகிப் போய்விட்டதை எண்ணி வேதனைப் பட்டான். தன்னுடைய புத்தியின் குறும்புத்தனத்தையும் சிந்தனையின் துறுதுறுப்பையும் அடக்கிக் கொண்டு கலைமகளே குடியிருப்பது போன்ற அந்தச் சிறிய வீட்டை ஒவ்வொரு பகுதியாகக் கூர்ந்து நோக்கினான் குமரப்பன்.

'இந்த வீட்டில் இந்த அழகிய கூடத்தில் பாதரசங்களும், கொலுசுகளும் ஒலிக்க எத்தனை எத்தனை அழகிய பாதங்கள் தலைமுறை தலைமுறைகளாக நடந்திருக்கும்? எத்தனை எத்தனை குரல்களும் வாத்தியங்களும் ஒலித்திருக்கும்! இந்த நான்கு சுவர்களும் தோன்றிய பிறகு, இவற்றுக்கிடையே எத்தனை பேருடைய ஆசைகளும், தாபங்களும், அநுதாபங்களும் தோன்றி அடங்கியிருக்கும்? எவ்வளவு சிரிப்பொலிகள் கலகலத்திருக்கும்? எவ்வளவு அழுகுரல் விம்மி ஒலித்து வெடித்துத் தணிந்திருக்கும்?' என்றெல்லாம் எண்ணியபோது அவனுடைய இதயம் ஓயாமல் தவித்தது. ஏதோ ஓர் அதிகாரத்தை மீற முடியாமல் கட்டுப்பட்டு உட்கார்ந்திருப்பவளைப் போல் மோகினி அங்கு அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்திருந்தாள். பத்திரிகைக்காரர்கள் பேட்டி காண வந்திருக்கிறார்கள் என்பதற்காக அவளிடம் எந்த விதமான உற்சாகமும், கிளர்ச்சியுமில்லை. சமூகத்தின் அனுபவத்துக்குப் பொதுவாயிருக்கிற கலைகள் எவையானாலும் அவற்றை நம்பி வாழ்கிறவர்கள் ஊர் நடுவில் இருக்கிற மருந்து மரத்தைப் போன்றவர்கள். பயன்படுவது அதிகமாகவும், பயன்பெறுவது குறைவாகவும் வாழவேண்டிய நியதி தான் அவர்களுக்குப் பெரும்பாலும் நியமிக்கப்பட்டிருக்கிறதென்று குமரப்பனுக்குத் தோன்றியது. ஏதோ ஒரு பதத்துக்கு அபிநயம் பிடிக்கச் சொல்லி இரண்டு மூன்று புகைப்படங்களைப் பிடித்துக் கொண்ட பின் குமரப்பனைப் பொறுத்தவரையில் அங்கு வந்த காரியம் முடிந்து விட்டது. குழந்தைக் குறுகுறுப்பும் தெய்வீகமானதோர் அமைதித் தன்மையும் நிறைந்த மோகினியின் முகத்தைப் பார்த்த போது சித்திரா பௌர்ணமியன்று இரவு வைகையாற்று மணலில் சத்தியமூர்த்தியும் தானுமாக அவளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததெல்லாம் குமரப்பனுக்கு நினைவு வந்தன. மனிதனுடைய ஆசைகளும் சபலங்களும் நெருங்கிய அந்த வீட்டில் சகல கலைகளுக்கும் அதிதேவதையாகிய கலைமகளே வந்து அடைபட்டுக் கிடப்பதுபோல் அவள் அடைபட்டுக் கிடப்பது அவனுக்குப் புரிந்தது. மோகினியைப் பேட்டி காண்பதற்காகத்தான் அவர்களை அழைத்து வந்திருந்தார் கண்ணாயிரம். ஆனால் எல்லாவிதமான பேச்சுவார்த்தைகளுக்கும் கண்ணாயிரமும், முத்தழகம்மாளுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பேசாமல் வீற்றிருக்கும் அழகிய சித்திரத்தைப் போல் குனிந்த தலை நிமிராமல் வீற்றிருந்தாள் மோகினி. பேட்டி காண வந்திருந்த உதவி ஆசிரியர் கண்ணாயிரத்துக்குக் கட்டுப்பட்டுக் கேள்விகளை எழுதிக் கொண்டு வந்திருந்தார் போலிருக்கிறது. மௌனமாகவே இருந்த மோகினி சில கேள்விகளுக்கு அம்மாவும் கண்ணாயிரமும் கூறிய மறுமொழிகளை எதிர்த்துச் சீறினாள்.

"நாட்டியக் கலையில் நீங்கள் செய்து முடிக்க விரும்புகிற உயர்ந்த சாதனை எதுவோ?" என்று ஒரு கேள்வி இருந்தது. அந்தக் கேள்விக்கு முத்தழகம்மாளும் கண்ணாயிரமும் சேர்ந்து பதில் சொல்லும் போது, 'திரைப்படங்களில் நடிக்க வேண்டும் - உலகமெல்லாம் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்' என்று ஏதேதோ ஆசைகளை வெளியிட்டார்கள். தானே நடுவில் குறுக்கிட்டுப் பேசி மோகினி அதை மறுத்தாள்.

"உங்கள் கேள்விக்குப் பதில் இப்படி எழுதிக் கொள்ளுங்கள்; என்னுடைய கலையில் பரிபூரணமான திறமை எதுவோ அதை நான் அடைவதுதான் என்னுடைய உயர்ந்த சாதனையாக இருக்க முடியும். ஊர் சுற்றுவதையும் சினிமாப் பாடல்களில் நட்சத்திரமாக மின்னுவதையும் சாமர்த்தியங்களாக நினைக்கலாம். ஆனால் சாதனையாக ஒப்புக் கொள்ள முடியாது" என்று மோகினி கூறிய போது, கண்ணாயிரம் மறுத்து விவகாரம் பேசினார்.

"அப்படியெல்லாம் புரியாத பதில்களைச் சொல்லாதே மோகினி! இந்தப் பேட்டியில் வெளிவருகிற ஒவ்வொரு வாக்கியமும் நமக்கு நல்ல விளம்பரமாக இருக்க வேண்டும். தயவு செய்து கேள்விகளுக்குப் பதில் சொல்லுகிற பொறுப்பை என்னிடமும் அம்மாவிடமும் விட்டுவிட்டு நீ பேசாமல் உட்கார்ந்திரு. இதெல்லாம் நம்மைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு நாமே செய்து கொள்கிற ஓர் ஏற்பாடு. இப்படியெல்லாம் செய்து கொண்டால் ஒழிய இந்தக் காலத்தில் முன்னுக்கு வர முடியாது. நீயோ குழந்தைப் பெண். உனக்கு இதெல்லாம் புரியவும் புரியாது! என்ன முத்தழகம்மாள்? நான் சொல்றது சரிதானே?" என்று அந்த அம்மாவையும் பேச்சில் இழுத்துத் தம்மோடு ஒத்துப்பாட சொன்னார் கண்ணாயிரம். ஆனால் மோகினி நிச்சயமாகவும், பிடிவாதமாகவும் தான் கூறிய வார்த்தைகளையே சாதித்தாள்.

"நாட்டியக் கலையில் நீங்கள் முன்னுக்கு வருவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார் யார் என்பதைச் சொல்ல முடியுமா?" என்ற கேள்வியைப் பேட்டி காண வந்திருந்த உதவியாசிரியர் கேட்ட போது, ஒரு கணமும் தயங்காமல் தன் தாயின் பெயரையும் தனக்கு நாட்டியம் கற்பித்த ஆசிரியர்கள் பெயரையும் கூறினாள் மோகினி. ஆனால், முத்தழகம்மாளோ அதை உடனே மறுத்து, "விளம்பர நிபுணர் கண்ணாயிரம் அவர்களும், கலைவள்ளல் மஞ்சள்பட்டி ஜமீன்தாரும் பலவகைகளில் ஒத்துழைத்து மோகினியை முன்னுக்குக் கொண்டு வந்தார்கள் என்று எழுதிக் கொள்ளுங்கள்" என்றாள்.

"இந்தப் பொய் அடுக்கவே அடுக்காது. யார் பேரை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். ஆனால் எனக்குக் கற்பித்த 'வாத்தியார்' பேரை எழுதாவிட்டால் சும்மா விடமாட்டேன்" என்று மோகினி சீறி விழுந்த பின்பே அவர்கள் வழிக்கு வந்தார்கள். அதுவரை ஒரு நியாயத்துக்குக் கட்டுப்பட்டு ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்த குமரப்பன் தானும் அங்கு இருப்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறாற்போல், ஒரு கனைப்புக் கனைத்து விட்டுக் கண்ணாயிரத்திடம் கேட்கலானான்:

"எனக்கு ஒரு சிறிய சந்தேகம் சார்! இந்தப் பேட்டியைக் குத்துவிளக்கில் வெளியிடும் போது, 'நாட்டிய நட்சத்திரம் மோகினியைப் பேட்டி கண்டு நமது நிருபர் அளிக்கும் பதில்கள்' என்று வெளியிடுவீர்களோ அல்லது மோகினிக்காக அவளுடைய தாயையும் கண்ணாயிரம் அவர்களையும் பேட்டி கண்டு நமது நிருபர் அளிக்கும் பதில் என்று வெளியிடப் போகிறீர்களோ? நான் இரண்டாவதாகச் சொன்ன மாதிரிதான் வெளியிடப் போகிறீர்கள் என்று தெரிந்தால், இதுவரை இங்கு பிடித்த புகைப்படங்களெல்லாம் வீணாகிவிடும். புதிதாக உங்களையும் இந்த அம்மாளையும் படம் பிடித்து வெளியிட்டு விடலாம் என்பதற்காகத்தான் கேட்கிறேன்" என்று விநயமாக விசாரிப்பது போல் குறும்புத்தனமாக விசாரித்தான் குமரப்பன். இந்தக் கேள்விக்குப் பின்பு கண்ணாயிரம் விழித்துக் கொண்டார்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. ஏதோ அவளுக்குப் பதில் சொல்ல முடியாத கேள்விகளை நாங்கள் சொல்லி விளக்கியிருப்போம். எங்களுக்குள் நாங்கள் வித்தியாசம் பழகவில்லை குமரப்பன்! மோகினி பதில் கூறினாலும் ஒன்றுதான்; நாங்கள் பதில் கூறினாலும் ஒன்றுதான். நீங்களாகத்தான் அநாவசியமான வேறுபாட்டை உண்டாக்கிப் பேசுகிறீர்கள். எங்களுக்குள் ஒரு வேறூபாடும் கிடையாது."

"இருக்கலாம். ஆனால் மோகினியின் நாட்டியத்தை மோகினியிடமிருந்து தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். மோகினிக்குப் பதிலாக அதையும் இன்னொருவர் ஆடிவிட முடியாது."

குமரப்பனின் இந்த வாக்கியத்தை வெறும் நகைச்சுவையாக ஏற்றுக் கொண்டு சிரிக்கிறவரைப் போல் சிரித்துவிட்டு அந்தச் சிரிப்பின் மூலம் தனக்குக் கிடைத்த தீவிரமான தாக்குதலை மறைத்துக் கொள்ள முயன்றார் கண்ணாயிரம். மானமும் சுயமரியாதையும் உள்ளவர்கள் தான் விருப்பு வெறுப்புக்களைத் தயங்காமல் எதிர்பார்த்துத் தைரியமாக ஏற்றுக் கொள்வார்கள். கண்ணாயிரத்தைப் போன்றவர்களோ எல்லாவற்றையும் துடைத்துவிட்டு வாழ்கிறவர்கள். எவ்வளவு கூர்மையான வார்த்தைகளால் தாக்கினாலும் தங்களுக்கு ஒன்றுமில்லை என்பது போல் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்து விடுகிற தன்மை உடையவர்களை என்ன செய்ய முடியும்? எந்த வார்த்தைகளால் தாக்க முடியும்?

"ஏதேது? போட்டோக்காரர் ரொம்பப் பொல்லாதவராக இருப்பார் போலிருக்கே?" என்று அப்பொழுதுதான் அவனைக் கூர்ந்து கவனித்தவளாக முத்தழகம்மாள் ஏதோ சொல்லி வைத்தாள். குமரப்பன் கைவசம் 'காமிரா' இருந்ததனாலும், அவன் படங்கள் பிடித்ததனாலும் தானாகவே அவனுக்கு 'போட்டோக்காரர்' என்ற ஒரு பெயரையும் முத்தழகம்மாளே உண்டாக்கியிருந்தாள். 'ரொம்பப் பொல்லாதவராயிருப்பார் போலிருக்கே' என்று அந்தம்மாள் தன்னைப் பற்றிக் கூறியதைக் கேட்டுக் குமரப்பன் சும்மாயிருந்து விடவில்லை. மனதில் உறைக்கும்படி நன்றாகப் பதில் கூறினான்: "நல்லவனாக இருப்பவனே தன்னை நல்லவன் என்று நிரூபித்துக் கொள்வது இந்தக் காலத்தில் ஒருவிதமான இலாபத்தையும் தராது அம்மா! எல்லாவிதத்திலும் பொல்லாதவனாக வாழ்கிறவன் தன்னை நல்லவனாக நிரூபித்துக் கொண்டு காலம் தள்ளுவதுதான் இந்தக் காலத்தில் மிகவும் இலாபகரமாக நடைபெறுகிற வியாபாரம். ஏதோ உண்மையைச் சொல்லலாமென்று வாயைத் திறந்தால் உடனே எனக்குப் பொல்லாதவனென்று பட்டம் கட்டுகிறீர்களே!"

"ஐயா! நீர் கொஞ்சம் சும்மா இருந்தால் நல்லது. உம்மோடு பேசறதுக்கே பயமாயிருக்கு" என்று கேலியாகச் சிரித்துக் கொண்டே சொன்னாள் முத்தழகம்மாள்.

"அப்படி நினைக்காதீர்கள் முத்தழகம்மாள்! நம் குமரப்பனுடைய சுபாவமே இப்படித்தான். இவரிடம் எதிலும் ஒளிவு மறைவான பேச்சு இருக்காது. வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவார். அவர் மட்டுமல்ல இவருடைய நண்பர்கள், இவரோடு பழகுகிறவர்கள் எல்லாருமே இப்படித்தான். சத்தியமூர்த்தியைத்தான் உங்களுக்குத் தெரியுமே? இரயிலில் உங்களுக்குப் பழக்கமாகி அப்புறம் உங்கள் பெண் பேனாவைக் கொடுப்பதற்காக அவனைத் தேடிக் கொண்டு போகணுமென்றாளே; அந்தப் பையன் கூடக் குமரப்பனுக்கு நெருங்கிய நண்பன் தான். அவனும் ஏறக்குறைய இவரைப் போலத்தான் பேசுவான்" என்று கண்ணாயிரம் கூறிய செய்தியைக் கேட்டு மோகினியின் முகம் மலர்ந்தது. குமரப்பன் அங்கே வந்ததிலிருந்து அவனை இதற்கு முன்பு எங்கே எப்போது பார்த்திருக்கிறோம் என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது குழப்பம் நீங்கித் தெளிவு பிறந்து விட்டது. சித்திரைப் பொருட்காட்சியில் தன்னுடைய நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்ற தினத்தன்று சத்தியமூர்த்திக்குப் பக்கத்தில் இந்த மனிதன் அமர்ந்திருப்பதை நினைவு கூர்ந்தாள் அவள்.

மனத்தினால் வெறுத்துக் கொண்டே வாய் வார்த்தையால் புகழ்கிறவர்கள் யாராயிருந்தாலும் அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குமரப்பனுக்குத் தெரியும். கண்ணாயிரம் இருந்தாற் போலிருந்து தன்னையும் சத்தியமூர்த்தியையும் பற்றி முத்தழகம்மாளிடம் கூறிப் புகழ ஆரம்பித்த போது குமரப்பனுடைய மனம் சிந்திக்கத் தொடங்கியது. வெளிப்படையாகப் புகழ்ந்துவிட்டு அந்தப் புகழ்ச்சியினால் எதிரி நலிந்து கவனக்குறைவாக இருக்கும்படி செய்தபின், அவனுக்கு நேர்மாறான காரியங்களை இரகசியமாகச் செய்கிற வஞ்சகத் திறமை கண்ணாயிரத்துக்கும் உண்டு என்று குமரப்பன் அறிவான். 'இவன் நமக்கு மிகவும் வேண்டிய நண்பன்' என்று தன்னைப் பற்றி நம்மைப் புரிந்து கொள்ளும்படி செய்துவிட்டுப் பின்னால் போய்ப் பகைவனாக வேலை செய்கிறவன் தான் சமூக வாழ்க்கையில் தனி மனிதனைப் பாழாக்கி விடுகிற பயங்கர எதிரி. இப்படி எதிரிகள் யார் யாரென்று கண்டுபிடித்து அவர்களைத் தன் வழிகளிலிருந்து விலக்கி விட முடியுமானால் அதற்கப்புறம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பிரச்சினைகளை எதிர்த்துப் போர் புரிய வேண்டிய அவசியம் மட்டும் தான் இருக்கும்; மனிதர்களை எதிர்த்துப் போர் புரிய வேண்டியிருக்காது. கண்ணாயிரம் அப்படி விலக்கிவிட வேண்டிய எதிரிதான் என்பதை நீண்ட நாட்களுக்கு முன் 'குத்துவிளக்கு' காரியாலயத்தில் முதன் முதலாக அவரைச் சந்தித்த சில தினங்களிலே குமரப்பன் தீர்மானம் செய்திருந்தான். அதனால் கண்ணாயிரம் முத்தழகம்மாளிடம் தன்னைப் பற்றித் தூக்கி வைத்துப் பேச ஆரம்பித்ததைக் குமரப்பன் சும்மா சிரித்தபடி, கேட்டுக் கொண்டிருந்தானே தவிர மனமார ஏற்றுக் கொள்ளவில்லை. நவீன யுகத்தில் நாகரிகமான இந்த நூற்றாண்டு மனிதர்களை அடித்து வீழ்த்துவதற்கும் சோம்பேறிகளாக்குவதற்கும் புகழைப் போல் நளினமான பயங்கர ஆயுதம் வேறு இல்லை என்பது குமரப்பனுடைய நம்பிக்கை. அந்தத் திடமான நம்பிக்கையோடுதான் கண்ணாயிரத்தின் வஞ்சகப் புகழ்ச்சிக்குச் செவி சாய்க்காமல் வீற்றிருந்தான் அவன். உதவியாசிரியர் மோகினியிடம் கேட்க வேண்டிய கடைசிக் கேள்வியைக் கேட்டார்.

"நீங்கள் ஆண்டாள் பாசுரங்களுக்கு அபிநயம் பிடிக்கும் போது தன்னை மறந்த தெய்வீக மலர்ச்சியோடு ஆடுகிறீர்கள் என்பதை எல்லாரும் அறிந்து ஒப்புக் கொண்டு மனமாரப் பாராட்டுகிறார்கள். சிறப்பு வாய்ந்த அந்த ஆண்டாள் நடனத்தை பலமுறை நீங்கள் ஆடியிருந்தாலும் என்றாவது ஒரு நாள்தான் உங்கள் மனமே பரிபூரணமான திருப்தியோடு இலயித்து ஆடியிருக்க முடியும். அப்படி இலயித்து ஆடிய தினத்தைப் பற்றிய எண்ணங்களை நீங்கள் 'குத்துவிளக்கு' வாசர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?"

இந்தக் கேள்விக்கு முத்தழகம்மாளும் கண்ணாயிரமும் பதில் தயாராக வைத்திருந்தார்கள். "போன வருடம் நவராத்திரியின் போது மஞ்சள்பட்டி சமஸ்தானத்தில் ஜமீந்தார் முன்னிலையில் ஆண்டாள் நடனத்தை ஆடினாற்போல் மோகினி என்றுமே ஆடியதில்லை. ஜமீந்தாருடைய தாராள மனப்பான்மையும், இரசிகத்தன்மையும் தான் அவ்வளவு சிறப்பாக மோகினி ஆடியதற்குக் காரணம் என்று சொல்ல வேண்டும்" என்று முத்தழகம்மாளும் கண்ணாயிரமும் முன்பே திட்டமிட்டுப் பேசி வைத்துக் கொண்டாற் போலப் பதில் கூறினார்கள். மோகினியைப் பற்றிய பேட்டியில் மஞ்சள்பட்டி ஜமீந்தாருடைய பெயர் எப்படியும் வந்துவிட வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்வது குமரப்பனுக்குப் புரிந்தது. உதவியாசிரியருக்கும் அது புரிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிப் புரிந்து கொள்ளாதது போல இருந்தார். ஜமீந்தாருக்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்பதற்காக அவருடைய தாராள மனப்பான்மையால்தான் மோகினியின் நடனமே சிறப்பாக அமைந்தது என்று பல்லாயிரம் பிரதிகள் செலவாகும் ஒரு பத்திரிகையில் அச்சிட்டுத் திருப்திப்பட எண்ணும் சிறுமையை நினைத்துக் குமரப்பன் மனம் குமுறினான். அவனைப் போலவே மோகினியும் மனம் குமுறியிருக்கிறாள் என்பது அப்போது அவள் கூறத் தொடங்கிய வார்த்தைகளிலிருந்து தெரியவந்தது. அவள் உதவியாசிரியரைக் கேட்ட கேள்வியில் சிறிது ஆத்திரமும் ஒலித்தது.

"நீங்கள் சற்று முன்னால் கேட்ட கேள்விக்கு மனப்பூர்வமாக நானே மறுமொழி கூற வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது மற்றவர்கள் சொல்லிய பதிலே போதுமென்று நினைக்கிறீர்களா?"

"என்னடீது? இப்படிக் கேட்கிறே? நீ என்னை மீறிக்கிட்டுச் சொந்தமாகச் சொல்றதுக்கு வேறே பதில் வச்சிருக்கிறாயா?" என்று மோகினியின் அம்மா அவள் வாயையே மேலே பேசவிடாமல் அடக்கி விடுகிற அதிகாரக் குரலில் மிரட்டினாள். மோகினி அந்த மிரட்டலுக்குப் பயந்து சிறிதும் அடங்கவில்லை.

"நீ சும்மா இரும்மா! நீயும் கண்ணாயிரம் மாமாவுமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்கி விடாதீர்கள். இந்த உலகமே மஞ்சள்பட்டி ஜமீந்தாரால் தான் நடக்கிறதென்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள் எனக்குக் கவலையில்லை. என்னைப் பற்றி ஏதோ கேள்வி கேட்டால் அதற்கும் மஞ்சள்பட்டி ஜமீந்தாரால்தான் நான் நாட்டியமே ஆடமுடிகிறதென்று சொல்வதை மட்டும் ஒப்புக் கொள்ளவே முடியாது. நிஜத்தைச் சொல்ல வேண்டுமானால் போன மாதம் சித்ரா பௌர்ணமியன்று தமுக்கம் பொருட்காட்சியில் ஆடினேனே, அன்று தான் நான் என்னை மறந்த இலயிப்போடு ஆண்டாளாகவே மாறி ஆடினேன்... அதைப் போல் வேறெந்த தினத்திலும் பெருமிதமாக நான் ஆடியதில்லை" என்று மோகினி கூறியதும் குமரப்பன் மனதுக்குள் அவள் தைரியத்தைப் பாராட்டினான். மஞ்சள்பட்டி ஜமீந்தாரிடம் பணம் கறப்பதற்காக அவர்கள் இப்படிப் பொய் சொல்வதை எதிர்த்து மோகினி துணிவாகக் குறிக்கிட்டுப் பதில் கூறியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

"மோகினி! நான் சொல்றதிலே ஓர் அர்த்தம் இருக்கு. நீ என்றைக்கு நன்றாக ஆடியிருந்தாலும் கவலையில்லை. பத்திரிகையிலே கொடுக்கிற பதிலில் மட்டும் மஞ்சள்பட்டி அரண்மனை நவராத்திரியில் ஆடின போதுதான் பிரமாதமாக ஆடினேன் என்று கொடுத்து வைப்போமே! அதில் நமக்கென்ன வந்தது? ஜமீந்தார் புகழ் பிரியர். அவருடைய மனம் இதனால் திருப்திபடும்" என்று கண்ணாயிரம் பிடிவாதமாக விட்டுக் கொடுக்காமல் மோகினியைக் கெஞ்சினார்.

"யாரோ திருப்திப்படறதுக்காக நான் நாட்டியமாடலை."

"எதிர்த்துப் பேசாதடீ! நாங்கள் உன் நன்மைக்காகத் தான் சொல்றோம்னு நெனை..."

அடக்கமுடியாத கோபத்தோடு அம்மா சீறினாள். மோகினியின் மை தீட்டிய கண்களில் நீர் முத்துக்கள் திரண்டன. மேலும் அங்கே உட்கார்ந்திருக்க விரும்பாமல் அழுது கொண்டே எழுந்து மாடிக்குப் போனாள் அவள். பேட்டி முடிந்து விட்டதாகப் பேர் பண்ணிவிட்டுக் கண்ணாயிரம் உதவியாசிரியரையும் குமரப்பனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். காரில் திரும்பிக் கொண்டிருந்த போது, "பேட்டி மிகவும் நல்லபடியாக ஆயிற்று. உங்களுக்குத்தான் மிகவும் நன்றி சொல்லணும்" என்று உதவியாசிரியர் கண்ணாயிரத்தின் தலையில் தாராளமாக ஐஸ் தூவினார்.

"ஆமாம்! ஆமாம்! இதில் சாருக்குத்தான் முக்கியமாக நன்றி சொல்லணும். ஏறக்குறைய இந்தப் பேட்டியில் மோகினிக்குச் சிரமமே வைக்காமல் எல்லாப் பதில்களையும் சாரே தயாராகச் சொல்லிவிட்டார் அல்லவா?" என்று வாழைப் பழத்தில் ஊசி இறக்குவது போல் சொல்லித் தன் வயிற்றெரிச்சலை நாசூக்காகத் தீர்த்துக் கொண்டான் குமரப்பன்.

அத்தியாயம் - 23

யாரை ஆள்கிறோமோ அவர்களிடம் தான் அதிகமாகப் பெருந்தன்மையும் அக்கறையும் காண்பிக்க வேண்டுமென்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இரகசியம்.

மல்லிகைப் பந்தல் கல்லூரியின் ஒவ்வொரு நாள் அநுபவமும் சத்தியமூர்த்தியின் வாழ்க்கையில் விரைவாகவும் புதுமையாகவும் திருப்பங்களை உண்டாக்கின. அஞ்சாமையையும், நேர்மையையும் பக்க பலங்களாகக் கொண்டு வலது காலை முன் வைத்து எப்போதும் போல் தடையில்லாமல் நடந்து கொண்டிருந்தான் அவன். மற்றவர்களுடைய சூழ்ச்சியையும், வஞ்சகத்தையும் பொய் புனைசுருட்டுகளையும் புரிந்து கொள்கிற போது அவனுக்கும் கூட மேலே நடக்கத் தோன்றாமல் மெலிந்து நலிந்து சில கணங்கள் தயங்கி நிற்கத் தோன்றும். அப்படி நலிந்து மனம் வருந்தும் வேளைகளில் நவநீத கவியின் அற்புதமான கவிதை ஒன்றை நினைவு கூர்வது அவன் வழக்கம். பக்குவமான நல்ல மனிதனுடைய சராசரி உள் மனத்தின் அந்தரங்கமான ஏக்கங்களும், தாபங்களும், தாகங்களும் சுயமாக ஒலிக்கிற நல்ல கவிதைகளை அந்தத் தலைமுறையில் நவநீத கவி ஏராளமாகப் பாடியிருந்தார். அவற்றில் சத்தியமூர்த்தி அடிக்கடி நினைவு கொள்கிற கவிதை இது:

இதழ் மலர்ப்பொழிவில் எண்ணங்கள் மலர்ந்திருக்க
எண்ண மலர்க் குவையில் ஏடெழுதும் கவியிருக்கக்
கண்ணும் மனமும் பசித்திருக்கக் கண்டவுலகில் பொய்யிருக்கக்
எண்ணமெழுத்தும் சலித்திருக்க ஏதோ நலிந்திருந்தேன் என்னுள் மெலிந்திருந்தேன்...

சொல்லிப் புரியவைக்க முடியாத நுணுக்கமான வேதனைகளின் போதெல்லாம் சத்தியமூர்த்திக்கு இந்தப் பாட்டு நினைவில் தோன்றியிருக்கிறது. 'கண்ணும் மனமும் பசித்திருக்கக் கண்டவுலகில் பொய்யிருக்க' என்ற வரிகளை வாய்க்குள்ளேயே முனகிப் பார்த்துக் கொண்டாலும் - அப்படித் திரும்பத் திரும்ப முனகுவதில் கூட 'இதுதான் உண்மை' என்று உண்மையை ஞாபகப்படுத்திக் கொள்கிற ஒரு சுகம் இருந்தது. நல்ல கவிதையை இரசிக்கிற சுகத்திலிருந்தும் கூட ஒருவன் தைரியசாலியாகவும், இலட்சியவாதியாகவும் இருக்க முடியும். சில கவிகளுடைய பாடல்கள் தலைமுறை தலைமுறையாகப் பெருகி வாழ்கிற ஒரு வீரப் பரம்பரையையே படைத்துக் காத்திருக்கிறது. அதைப் போல் ஓர் இலட்சியவாதியின் மனத்துக்கு ஆறுதல் தருகிற உட்குரல் இந்தப் பாடலில் இருப்பதை உணர்ந்திருக்கிறான் அவன். இந்தச் சில நாட்களில் அவனுடைய வாழ்வில் எத்தனை எத்தனையோ புதிய சம்பவங்களும் புதிய அநுபவங்களும் நேர்ந்திருக்கின்றன. பொறாமையால் வருகிற புகழையும் புகழால் வருகிற பொறாமையையும் மல்லிகைப் பந்தல் கல்லூரியில் மாறி மாறிச் சந்திக்கத் தொடங்கியிருந்தான் அவன். அவன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் பூபதி அவனை உதவி வார்டனாக நியமித்திருந்தார். மாணவர்களிடையே அளவற்ற பெருமதிப்பை அடைகிற ஆசிரியன், நிர்வாகிகளுடைய பகையைச் சம்பாதித்துக் கொள்ளுவதுமேதான் பெரும்பாலான கல்லூரிகளிலே வழக்கமாக இருக்கும். இரு சாராருடைய மதிப்பையும் பெறுகிற ஆசிரியனைப் பார்த்தால் எல்லாருக்கும் வியப்படையத்தான் தோன்றும். அதோடு பொறாமைப்படவும் தோன்றும். இதற்கு யாரும் எப்போதும் விதிவிலக்கு இல்லை.

கல்லூரி திறந்த இரண்டாவது வாரமோ, மூன்றாவது வாரமோ ஒரு நாள் பத்து மணிக்கு மேல் ஐந்து நிமிடம் தாமதமாகக் கல்லூரிக்குள் நுழைந்திருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி முதல்வர் ஏதோ காரியமாக அல்லது ஒரு காரியமும் இல்லாமல் அறை வாயிலில் நின்று கொண்டிருந்தவர் அவன் உள்ளே தனியாக வருவதையும் பார்த்துக் கைக்கடிகாரத்தையும் பார்த்தார். இதையடுத்து அரை மணி நேரத்துக்கெல்லாம் கல்லூரி முதல்வரின் கையொப்பமிட்டச் சுற்றறிக்கை ஒன்று எல்லா ஆசிரியர்களுக்கும் வந்தது. 'சில ஆசிரியர்கள் கல்லூரிக்குத் தாமதமாக வருவதையே ஒரு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டு அதைத் தவிர்ப்பதற்காக இனிமேல் ஆசிரியர்கள் கையொப்பமிடும் நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்துடன் அதற்குக் கீழே வந்த நேரமும் குறிப்பிட வேண்டும்' என்று அந்தச் சுற்றறிக்கையில் கண்டிருந்தது.

ஐந்து நிமிடங்கள் தாமதமாகத் தன்னைப் பார்த்ததும் முகத்தில் கடுகடுப்போடு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே அவர் அறைக்குள் நுழைந்ததையும் அதற்கடுத்த முப்பதாவது நிமிடத்தில் மேற்படி சுற்றறிக்கை வந்ததையும் பார்த்தபோது முதல்வர் தன் மேல் 'கரு' வைத்துக் கொண்டு பகைமை செலுத்தி வருகிறார் என்பதைச் சத்தியமூர்த்திக்கு நன்றாகப் புரிய வைத்தன. 'உதவி வார்டன்' ஒருவர் அவசியமில்லை என்பதாகவும், அப்படியே அவசியமாக இருந்தாலும் புதிதாக வந்திருக்கிற ஓர் இளம் விரிவுரையாளரை அதற்கு நியமிக்க வேண்டாம் என்றும் முதல்வர் நிர்வாகியிடம் கடுமையாக எதிர்த்ததாகவும், அந்த எதிர்ப்பையும் மீறிக் கொண்டு பூபதி தன்னை உதவி வார்டனாக நியமித்ததாகவும் சத்தியமூர்த்தி கேள்விப்பட்டு அறிந்திருந்தான். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்து முதல்வரின் மனத்தில் தன் மேல் எவ்வளவு வைராக்கியத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் என்பதும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கைக்குப் பின்னர் எல்லா ஆசிரியர்களும் கையெழுத்துடன் வந்த நேரமும் குறிப்பிடுவது வழக்கமாக இருந்தது. சத்தியமூர்த்தியும் இரண்டு மூன்று நாட்கள் கையெழுத்துடனே நேரமும் எழுதினான். நான்காவது நாள் ஏதோ ஒரு திட்டமான எண்ணத்துடன் அவன் நேரம் போடுவதை நிறுத்திவிட்டான். அன்று காலை பதினொரு மணி சுமாருக்கு ஆசிரியர் அறையில் உட்கார்ந்திருந்த சத்தியமூர்த்தியைத் தேடிக் கொண்டு கல்லூரி முதல்வரின் ஊழியன் (பியூன்) வந்து சேர்ந்தான். அவ்வாறு அவன் வருவதை ஒவ்வொரு விநாடியும் சத்தியமூர்த்தி எதிர்பார்த்துக் கொண்டுதான் காத்திருந்தான்.

"சார்! இதிலே நீங்க வந்த டயம் போடலியாம்; போட்டு வாங்கியாரச் சொல்லி ஹெட்கிளார்க் கொடுத்தனுப்பினாரு" என்று கையோடு கொண்டு வந்திருந்த அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரைச் சத்தியமூர்த்தியிடம் நீட்டினான் அந்த ஊழியன். உண்மையையும் நியாயத்தையும் காரணமாகக் கொண்டு எதிர்க்கவும் சமாளிக்கவும் நேர்கிற எந்த இடத்திலும் சத்தியமூர்த்தி சிறிதும் தலை குனியாமல் நிமிர்ந்து நின்றிருக்கிறான். இன்றும் அப்படி நிமிர்ந்து நிற்கத் தனக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்ததாகத்தான் அவனால் நினைக்க முடிந்தது.

"நேரம் குறிப்பிடுவதற்கில்லை என்று போய்ச் சொல்லு" என்பதாக அவன் உரத்த குரலில் பதில் கூறி ஊழியனை முகத்தில் அடித்தாற் போல் திருப்பி அனுப்பியபோது, ஆசிரியர் அறையில் உட்கார்ந்திருந்த மற்ற ஆசிரியர்கள் ஏதோ பெரிய சண்டை வரப்போகிறதென்ற பொதுவான மகிழ்ச்சியுடனும், தணியாத பயத்துடனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் எல்லோரும் மற்றவர்களுடைய பிரச்சினைகளை வம்புத்தனமான மகிழ்ச்சியோடு பேசி இரசித்துச் சிரிப்பதில் ஒருவருக்கொருவர் சளைக்காதவர்கள் என்பது சத்தியமூர்த்திக்கு நன்றாகத் தெரியும். பட்டறையில் உலைக்களத்தில் சம்மட்டி அடிக்கிற சாதாரணத் தொழிலாளிகள் கூடத் தொழில் நிமித்தமாக ஏற்படும் சாதக பாதங்களில் ஒன்றுபட்டுக் கூடி நிற்பார்கள். அதே சமயத்தில் படித்துப் பட்டம் பெற்று நாகரிகமாக உடையணிந்து நாகரிகமாகப் பேசித் திரிகிற புத்திமான்கள் அப்படி ஒன்றுபடாமல் ஒருவரைப் பற்றி ஒருவர் புறம் பேசுவதும், ஒருவருடைய வீழ்ச்சியில் மற்றொருவர் உள்ளூர மகிழ்வதுமாக மனத்தினால் அநாகரிகமாகவும் உடம்பினால் நாகரிகமாகவும் வாழ்வதில் வெட்கப்பட மாட்டார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். முதுகெலும்பு இல்லாதவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னளவில் எந்த நிமிடமும் எதையும் நியாயமாக எதிர்கொள்ளத் தயாராக நிமிர்ந்து உட்கார்ந்திருந்தான் சத்தியமூர்த்தி. சிறிது நேரத்தில் கல்லூரி முதல்வர் தம்முடைய அறைக்குக் கூப்பிட்டனுப்புவார் என்று எதிர்பார்த்திருந்தான் அவன். ஊழியன் வந்து சென்றதும், சத்தியமூர்த்தி உரத்த குரலில் அவனுக்கு மறுமொழி கூறி அனுப்பியதும் ஆசிரியர்கள் அறையில் அசாதாரணமானதொரு மௌனத்தையும், வஞ்சகமானதொரு அமைதியையும் நிலவச் செய்திருந்தன.

சிறிது நாழிகையில் கல்லூரி முதல்வரே 'டக், டக்'கென்று பூட்ஸ் ஒலிக்க நடந்து வந்து ஆசிரியர்கள் அறையில் படியேறி நுழைந்தார். ஒவ்வொரு படியாக மேலேறி அந்தப் பூட்ஸ் ஒலி அருகில் வரவரப் பயந்த சுபாவமுள்ள ஆசிரியர்களைச் சுற்றிலும் ஏதோ ஒருவிதமான அமைதி அதிகமாவது போலிருந்தது! அதன் பின்பு நடந்தவையெல்லாம் நாடகக் காட்சி போலிருந்தது. அறையில் நுழைந்ததும் எல்லோருடைய பார்வையிலும் படுகிறார் போல் முகப்பில் நின்று கொண்டு "மிஸ்டர் சத்தியமூர்த்தி! உங்களுக்குத்தான் ஒரு விஷயம் சொல்லிவிட்டுப் போக வந்தேன். இன்று 'அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்ட'ரில் நீங்கள் நேரம் குறிப்பிடவில்லை. நியாயமாக நடந்து கொள்வதில் எல்லோருக்குமே கவனம் வேண்டும். சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள ஆசைப்படுகிறவர்களுக்கு நியாயத்தில் இன்னும் அதிகமான கவனம் வேண்டும்" என்று ஏதோ பேச ஆரம்பித்துச் சீறினார். சத்தியமூர்த்தி எழுந்து நின்று நிதானமாகப் பதில் கூறினான்.

"நீங்கள் சொல்வதைச் சிறிதும் மறுக்காமல் அப்படியே ஒப்புக் கொள்கிறேன் சார்! மறந்து விட்டதன் காரணமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ நேரம் குறிக்காமல் விடவில்லை. வேண்டுமென்றே தான் நேரம் குறிப்பதைக் கைவிட்டிருந்தேன். எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து காப்பாற்றுகிறவரை தான் சார் நியாயத்துக்கு மரியாதை உண்டு. நீங்கள் எப்படி இருந்தாலும் நான் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நான் நியாயமாயிருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பதையும் சேர்த்து மன்னிக்கிற பொறுமை எனக்கு இருக்க வேண்டும் என்றால் அது எப்படி ஒழுங்காகும்? நீங்கள் சுற்றறிக்கை அனுப்பிய நாளிலிருந்து நானும் பார்த்துக் கொண்டு வருகிறேன், நாங்கள் எல்லோரும் வருகிற நேரத்தைக் குறிக்கிறோம். நீங்களும் உங்களுடைய துணை முதல்வரும், இன்னும் சில பேராசிரியர்களும் மட்டும் நேரம் குறிப்பதில்லை. நான் இரண்டு மூன்று நாள் இதைத் தொடர்ந்து கவனித்தேன். இன்றிலிருந்து என் கையெழுத்துக்குக் கீழேயும் நேரம் போடுவதை நிறுத்தி விட்டேன்."

"இருக்கலாம்! ஆனால் என்னைக் கேட்பதற்கு நீங்கள் யார்?"

"நான் யாரா? நான் உங்களுக்குக் கீழே பணிபுரிகிறவன் என்பதே உங்களை இப்படிக் கேட்கப் போதுமான தகுதிதான் சார். 'என்னைக் கேட்க நீங்கள் யார்?' என்று மாணவர்களிடம் கூட ஆசிரியர்கள் கேட்க முடியாத கேட்கக் கூடாத காலம் சார் இது!' யாரை ஆள்கிறோமோ அவர்களிடம் தான் அதிகப் பெருந்தன்மை காண்பிக்க வேண்டுமென்பது இந்த நூற்றாண்டின் இரகசியம் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்."

"நிறுத்துங்கள்! நீங்கள் அதிகம் பேசுவது நன்றாயில்லை."

"பயப்படாதீர்கள் சார்! நான் பேசுவதாலோ, நீங்கள் கேட்பதாலோ மரியாதைக் குறைவு ஆகிவிடாது. இந்தக் கல்லூரி காலை பத்து மணிக்கு ஆரம்பம் என்று தெளிவாக எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்கும் போது, நேரம் குறிப்பது எதற்கு? ஏதோ ஒரு நாள் யாரோ இரண்டு விநாடி தாமதித்து வந்தால் அதற்காக எல்லோருமே தாமதமாக என்றைக்குமே வருவதாகப் பாவித்துக் கொண்டு நீங்கள் ஏன் சிரமப்படவேண்டும்?"

ஒன்றும் பதில் கூறாமல் கல்லூரி முதல்வர் சில விநாடிகள் ஆசிரியர் அறையில் இங்கும் அங்குமாக இரை தேடுகிற புலி போல் நடந்தார். போவதற்கு முன் எல்லா ஆசிரியர்கள் பக்கமாகவும் திரும்பி, "எனக்கென்ன வந்தது? உங்களுக்கு எல்லாம் விருப்பம் இல்லையானால் நாளையிலிருந்து யாரும் நேரம் குறிக்க வேண்டியதில்லை" என்று வேண்டா வெறுப்பாகச் சொல்லிவிட்டுப் போனார் முதல்வர். அவர் இப்படி வந்து இரைந்துவிட்டுப் போன சிறிது நேரத்துக்குப் பின் தபால்காரர் சத்தியமூர்த்தியைத் தேடி வந்து ஸ்டாம்ப் ஒட்டாத கடித உறை ஒன்றை நீட்டிக் கட்டணம் வசூலித்துக் கொண்டு போனார். ஏதோ ஒரு நியாயத்துக்காகச் சத்தமிட்டுப் பேசிவிட்டு உட்கார்ந்திருந்த மறுகணம் ஸ்டாம்ப் ஒட்டாத கடிதத்தை வாங்க நேர்ந்ததும், அதை அனுப்பியதும் யாராயிருந்தாலும் கோபப்படுவதற்குரியவராகத் தோன்றியது அவனுக்கு. குழந்தைக் கையெழுத்துப் போல் எழுத்துக்கள் மேலும் கீழுமாக வலித்துக் கொண்டு போகும்படி பென்சிலில் எழுதிய முகவரி. 'ஸ்டாம்ப்' ஒட்டாத தவறு தவிர, அந்த முகவரியிலும் வேறு நாலைந்து தவறுகள் இருந்தன. சத்தியமூர்த்தி அவர்கள் - ஆசிரியர் காலேஜ் - மல்லிகைப் பந்தல் - என்று மட்டுமே முகவரி எழுதப் பட்டிருந்தது. அந்த ஊரில் ஒரே கல்லூரி மட்டுமே இருந்ததாலோ, அல்லது ஆசிரியராக வேறு சத்தியமூர்த்தி இல்லாததனாலோ கடிதம் இலக்குத் தப்பாமல் வந்து சேர்ந்திருந்தது. முதல்வரிடம் சொற்போர் நடத்தி முடித்த வேகம் தணியாத மனநிலையில் பென்ஸில் எழுத்து முகவரியும், ஸ்டாம்பு ஒட்டாத தண்டமும் மனத்தை உறுத்த, அதை எழுதியவர் மேல் கோபத்தோடு கடிதத்தைப் பிரித்தான் சத்தியமூர்த்தி. எவ்வளவுக்கெவ்வளவு கோபத்தோடு அந்தக் கடிதத்தைப் பிரித்தானோ அவ்வளவுக்கவ்வளவு அநுதாபத்தோடும் மன நெகிழ்ச்சியுடனும் படிக்க வேண்டிய கடிதமாயிருந்தது அது. யாரிடமிருந்து வந்திருந்ததோ அவளிடமிருந்து இப்படி ஒரு கடிதத்தை இங்கே அவன் எதிர்பார்க்கவேயில்லை.

"என்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வத்தின் திருவடிகளில் அடியாள் மோகினி அநேக வணக்கங்கள். நான் என் மனத்தில் என்னென்ன நினைக்கிறேனோ அவற்றையெல்லாம் எப்படி எந்தெந்த வார்த்தைகளால் உங்களுக்கு எழுதலாமென்று தெரியாமல் ஏதோ கிடைத்த காகிதத்தில் எப்படியோ எழுதுகிறேன். என்னுடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகிறது. அம்மாவும் கண்ணாயிரமும் என் மனப்போக்கைப் புரிந்து கொள்ளாமல் என்னைப் பாடாய்ப் படுத்துகிறார்கள். என் மனமோ எதிலும் இலயிக்கவில்லை. யார் யாரோ வருகிறார்கள். போகிறார்கள். நானோ, உங்களிடம் பறந்து வந்து விடத் துடிக்கிறேன். இந்தக் காகிதம் சிறிசு. என் மனத்தில் நினைக்கிற எல்லாவற்றையும் இதில் எழுதி விட முடியாது. இதை விடப் பெரிய காகிதத்தில் கூட அவற்றை எழுதி விட என்னால் இயலாது. புஷ்பமரத்தடியில் வீற்றிருக்கும் தெய்வத்துக்கு அர்ப்பணமாகும் பூவைப் போல் நான் தானாகவே உங்களுக்குச் சமர்ப்பணமானவள். 'என் ஞாபகமாக இந்த மோதிரம் உங்கள் கையிலிருக்கட்டும்' என்று நான் உங்கள் கையில் அந்த மோதிரத்தை அணிவித்த போது 'ஞாபகம் இருபுறமும் இருக்க வேண்டும்' என்று பதிலுக்கு உங்கள் கைமோதிரத்தைக் கழற்றி அணிவித்தீர்களே? அந்த ஞாபகம் உங்களுக்கு இருக்கா? இந்தக் கடிதத்துக்கு உங்களிடம் வந்து சேரும் சக்தி உண்டோ இல்லையோ? நான் பாட்டுக்குப் பைத்தியம் போல இந்தச் சிறிய காகிதத்தில் நுணுக்கி நுணுக்கி எழுதுகிறேன். இன்று சாயங்காலம் இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு முன் மீனாட்சி கோயிலுக்குப் போயிருந்தேன். அங்கே பிரகாரத்தில் சுற்றும் போது உங்கள் ஞாபகத்தினால் தவித்துப் போனேன். இதற்கு மேல் என்னால் ஒன்றும் எழுதமுடியவில்லை. இந்தக் கடிதத்தை முடிக்கிறதுக்கு முன் என் வேதனையைச் சொல்வதற்கு நல்ல வாக்கியம் வேண்டுமென்று யோசித்து யோசித்துக் கடைசியில் கீழ்க்காணும் வாக்கியத்தோடு முடிக்கிறேன். 'உங்களுடைய வாத்தியம் - உங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வாத்தியம் வாசிக்க நீங்கள் இல்லாமல் தூசி படிந்து போய் மூலையில் கிடக்கிறது' - இப்படிக்கு உங்கள் அடியாள் மோகினி."

இந்தக் கடிதத்தைப் படித்து முடித்த போது மோகினியே அருகில் வந்து நின்று கொண்டு மெல்ல மெல்ல விசும்பி அழத் தொடங்குவது போல் சத்தியமூர்த்திக்கு ஒரு பிரமை உண்டாயிற்று. பாரதியின் கடிதத்தைப் போல் ஆரம்பமும் முடிவும் நடுவும் ஒழுங்காக அமைந்து மயக்கி விடுகிற தன்மை இதில் இல்லாவிட்டாலும் ஒரு பரிசுத்தமான மனம் துடிப்பது இதில் நன்றாகத் தெரிந்தது. திட நெஞ்சமுள்ள சத்தியமூர்த்தியையே மௌனமாக அழச் செய்திருந்தது அந்தக் கடிதம். 'உங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வாத்தியம் நீங்கள் இல்லாமல் தூசி படிந்து போய் மூலையில் கிடக்கிறது' என்ற கடைசி வாக்கியத்தை இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தான் சத்தியமூர்த்தி. சின்னஞ்சிறு சந்தாகிய சங்கீத விநாயகர் கோவில் தெருவும், மீனாட்சி கோவில் கோபுரங்களும், தன் வீடும், அம்மாவும், அப்பாவும், தங்கைகளும், நண்பன் குமரப்பனும் ஞாபகம் வந்து மரத்தை வேரோடு பறிப்பதைப் போல் ஊர் ஏக்கம் நெஞ்சைப் பறித்தது. சில நாழிகை நேரம் உட்கார்ந்திருந்த இடத்தையும் சூழ்நிலையையும் கூட மறந்து போய் ஊர் ஞாபகத்தில் ஈடுபட்டிருந்தான் அவன். 'யாரோ ஒரு பெண்! எப்போதோ இரயிலில் சந்தித்த சந்திப்பு; அந்தச் சந்திப்புக்கு நிலையாக என்ன மதிப்பு இருக்கிறது?' என்று எண்ணி மோகினியை அவனால் மறந்துவிட முடியவில்லை. சித்திரா பௌர்ணமி இரவில் நிகழ்ந்த ஆண்டாள் நாட்டியத்திலிருந்து அவளுடனே தொடர்புடைய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்து அவனை ஆட்கொண்டன. முருகன் படத்திலிருந்து நழுவிக் கழுத்தில் விழுந்த மாலையோடு தன் தோள்களைப் பற்றிக் கொண்டு "இப்படியே இருங்கள்! இந்த மாலையைக் கழற்றாதீர்கள்! உங்களை இதே கோலத்தில் கண் நிறையப் பார்க்க வேண்டும் போல ஆசையாயிருக்கிறது" என்று கெஞ்சியதையும் ஞாபகப்படுத்திக் கொண்டான். மனம் இந்த ஞாபகத்தில் வேறெல்லாக் குழப்பங்களையும் மறந்துவிட்டது. கல்லூரி முதல்வர் ஆசிரியர்கள் கையெழுத்துப் போடும் நோட்டுப் புத்தகத்தில் நேரம் குறிப்பிடாததற்குச் சண்டைக்கு வந்ததையும், அதையொட்டி அவரும் தானும் காரசாரமாக விவாதம் செய்ததையும், என்றோ நடந்தது போல் மறந்திருந்தான் அவன்.

"கவலைப்படாதே! என்னுடைய வாத்தியத்தை மீட்டி இனிய பண்களை வாசிப்பதற்காக நான் ஒரு நாள் வருவேன். அதுவரை பொறுத்திரு. உன் ஞாபகம் இல்லாத, நேரமே கிடையாது. சில நாட்களுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்களுக்காக 'ஷீ வாக்ஸ் இன் ப்யூட்டி' என்று ஓர் ஆங்கிலக் கவிதையை விளக்கி வகுப்பு நடத்தினேன். அந்த விரிவுரை தத்ரூபமாகவும், அழகாகவும் வாய்த்துப் பலருடைய பாராட்டைப் பெற்றதற்குக் காரணமாக என் மனத்திற்குள் தூண்டுதலாக இருந்து பேசியவள் நீதான் மோகினி" என்றெல்லாம் விவரித்து அவளுக்கு பதில் கடிதம் எழுத எண்ணினான் சத்தியமூர்த்தி. ஆனால் எப்படி எழுதுவது? மோகினியின் தாயிடமோ, கண்ணாயிரத்திடமோ அந்தக் கடிதம் சிக்கினால் என்ன ஆவது? என்ற தயக்கமும் வழக்கம் போல் தோன்றித் தடுத்தது. அன்று வெள்ளிக்கிழமையாதலால் மறுநாள் சனியும் அதற்கடுத்த நாள் ஞாயிறும் விடுமுறைகளாக இருப்பதை உத்தேசித்துத் தாவரவியல் விரிவுரையாளர் சுந்தரேசன் ஊருக்குப் போய் வருவதாகச் சொல்லிக் கொண்டு மூன்று மணிக்கே புறப்பட்டிருந்தார். கல்லூரி எல்லைக்குள்ளே முதல்வருக்கும் அவனுக்கும் காரசாரமாக விவாதம் நடந்ததைப் பார்த்து மருண்டுபோய் நமக்கேன் வம்பு என்று விலகி நின்றுவிட்ட அதே ஆசிரியர்கள் எல்லாரும் கல்லூரிப் பாடவேளை முடிந்து காம்பவுண்டைக் கடந்து வெளியே வந்ததும் அவனருகே நெருங்கி வந்து பாராட்டினார்கள்.

"என்ன இருந்தாலும் நீர் பெரிய துணிச்சல்காரர் ஐயா! மதுரைக்காரரோ இல்லையோ? சும்மா விட்டுவிடுவீரா? இப்படி யாராவது புத்தி புகட்டினாலொழிய பிரினிஸிபாலுக்குக் கொழுப்பு ஒடுங்காது! 'நாளையிலேயிருந்து கையெழுத்து மட்டுமே போட்டாலும் கூடப் போதும்' என்று முதலையே பணிந்து போகும்படி செய்து விட்டீரே ஐயா!" என்று சத்தியமூர்த்தியை நாசுக்காகக் கொம்பு சீவிவிட்டார் ஓர் பேராசிரியர்.

"யாரை ஆள்கிறோமோ அவர்களிடம் தான் அதிகம் பெருந்தன்மை காண்பிக்க வேண்டும் என்பது இந்த நூற்றாண்டின் இரகசியம் என்று ஒரு போடு போட்டீரே, அந்த இடத்தில் ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் முதலை அப்படியே அயர்ந்து போய்விட்டது" என்று புகழ்ந்தார் இன்னொருவர்.

"என்ன காரணத்தாலோ பிரின்ஸிபல் உங்களுக்கு அதிகமாகப் பயப்படுகிறாரே!" என்று மூக்கில் விரலை வைத்தார் வேறோருவர்.

"பயமுறுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் நான் செப்பிடு வித்தைக்காரனோ பில்லி சூனியக்காரனோ இல்லை. எனக்கு நியாயம் என்று தோன்றியதை நான் உரத்த குரலில் சொன்னேன். அந்தச் சமயத்தில் பேசாமல் இருந்த நீங்கள் எல்லோரும் இப்போது என்னைப் புகழ்வதைப் பார்த்து எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. நல்லதை வெளிப்படையாக ஆதரிக்கவும், கெட்டதை வெளிப்படையாக எதிர்க்கவும் தெரியாமல் கல்லூரிக் காம்பவுண்டு தாண்டுகிறவரை ஒரு விதமாகவும், தாண்டி வெளியே வந்த பிறகு ஒரு விதமாகவும் பேசுகிற உங்களை எல்லாம் நான் எப்படி நம்ப முடியும்? நியாய உணர்ச்சியை இடத்துக்கேற்ப மறைத்துக் கொள்கிற கோழைத்தனம் படித்தவர்களிடமே இருப்பதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?" என்று ஆத்திரத்தோடு அவர்களை எதிர்த்துக் கேட்டான் சத்தியமூர்த்தி. எதிலும் உண்மையாகவும், வெளிப்படையாகவும் இத்தனை அஞ்சாமையை ஒரு மனிதனோடு இணைத்துப் பார்க்க முடியாத அவர்கள், "இந்தப் பையன் அசட்டுத் தைரியம் பேசுகிறான்; போகப் போக வாழ்வில் அதிகமாகக் கஷ்டப்படுவான்" என்று விலகிப் போய் வேறு விதமாக வேதாந்தம் பேசிக் கொண்டு சென்றார்கள்.

அன்று மாலை சில மாணவர்கள் சத்தியமூர்த்தியைத் தேடிக் கொண்டு அவனுடைய அறைக்கு வந்திருந்தார்கள். அந்த மாணவர்களையும் உடனழைத்துக் கொண்டு போய் எதிர்ப்புறம் ஏரிக்கரைப் புல்வெளியில் நீர்ப்பரப்பை ஒட்டினாற் போல் கரையோரமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. சங்க இலக்கியத்திலிருந்து 'ஸாமர் ஸெட்மாம்' வரை அவர்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் உற்சாகமாக விளக்கிப் பேசிக் கொண்டிருந்தான் அவன். நல்ல இசையரங்கில் கட்டுண்டு வீற்றிருக்கும் இரசிகர்களைப் போல் மாணவர்கள் தங்களை மறந்து ஈடுபட்டு அவன் கூறுவனவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் சமயம் பார்த்து ஏரிக்குள் தன் தோழிகளோடு படகில் போய்க் கொண்டிருந்த பாரதி, சத்தியமூர்த்தி உட்கார்ந்திருந்த பக்கமாகப் படகைக் கொணர்ந்து நிறுத்திக் கொண்டு, "சார்! உங்களைத்தானே கூப்பிடுகிறேன். படகில் ஒரு ரவுண்டு சுற்றலாம் வருகிறீர்களா?" என்று இரைந்து சிரித்துக் கொண்டே கேட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை. தான் சுவாரஸ்யமாக ஈடுபட்டுப் பேசிக் கொண்டிருப்பதை அவள் அவமதிப்பதாக எண்ணிய சத்தியமூர்த்தி அவளையும் அவள் தோழிகளையும் 'சர்'ரென்று நீரைக் கிழித்துக் கொண்டு வந்து நிற்கும் விசைப்படகையும் முற்றிலும் கவனியாதது போலவே முற்றிலும் பாராமுகமாக இருந்துவிட்டான்.

அத்தியாயம் - 24

ஆள விரும்புகிற அன்பைக் காட்டிலும் ஆட்படுகிற அன்பு மிகவும் பக்குவமானது. ஆள விரும்புகிற அன்பில் சுயநலமும் அகங்காரமும் உண்டு. ஆட்பட விரும்புகிற அன்பிலோ தியாகத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை.

தன்னைப் பொருட்படுத்த வேண்டுமென்றும், தனக்காக ஏங்கித் தவிக்க வேண்டுமென்றும் பிறரிடம் எதிர்பார்ப்பதில் பெண்களுக்கு இணையேயில்லை. பெண்ணின் மனத்தில் பெரிய அந்தரங்கமும் ஆசையும் இதுதான். அவளுடைய இரகசியமும் இதைத் தவிர வேறில்லை. அவளுடைய பகிரங்கமும் இதைத் தவிர வேறில்லை. இப்படி எதிர்பார்ப்பதன் விளைவு எதுவோ அதைப் பொறுத்தே அவள் வெற்றியாக ஏற்றுக் கொள்வதும், தோல்வியாகப் பாவிப்பதுமாகிய முடிவுகள் நேர்கின்றன. படகைத் திரும்பிக் கொண்டு போய்ச் சத்தியமூர்த்திக்கு அருகே நின்று அவனை அழைத்தபோது, அவன் பாராமுகமாக இருந்துவிட்டதைக் கண்ட பாரதி அதைத் தன்னுடைய தோல்வியாகவே பாவிக்கத் தொடங்கினாள். எதிர்பார்க்கிற இடத்தில் எதிர்பார்த்துத் தவிக்கின்ற அன்பு இல்லாமையை உணரும்போது பெண்ணைப் போல் வாடி ஒடுங்குகிற மெல்லிய மனம் மனிதச் சாதியில் வேறொருவருக்கும் இருக்க முடியாது என்பதை உலகில் நேற்று வரை பிறந்து வழங்கும் காவியங்களின் பரம்பரையெல்லாம் நிரூபிக்கின்றன. ஏமாற்றத்தில் பிறக்கும் ஒரு வகைக் கோபத்தோடு பாரதி படகை வேகமாக வலித்துக் கொண்டு போய் விட்டாள். ஆனாலும் அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. படகில் இருட்டுகிற வரை சுற்ற நினைத்திருந்தவள், பாதியிலேயே கரையேறி, "எனக்குத் தலைவலி... வீட்டுக்குப் போகிறேன்" என்று தோழிகளிடம் சொல்லித் தப்பித்துக் கொண்டாள். எந்த அறை பெண்ணின் அகங்காரத்தின் மேல் ஓங்கி விழுகிறதோ அந்த அறைக்கு வலி அதிகம். பெண்ணுக்கு ஏற்படுகிற அகங்காரங்களில் எல்லாம் மிகப்பெரிய அகங்காரம் அன்பு காரணமாக ஏற்படுவதாகத்தான் இருக்க முடியும். அப்படி ஓர் அகங்காரம் தன்னிடம் இருப்பது சில சமயங்களில் பெண்ணுக்கே தெரியாமற் போகலாம். ஆனால், அன்பு காரணமாக ஏமாறும் போதும், பிரியும்போதும், இப்படி ஓர் அகங்காரம் தன்னிடம் இருந்தது என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர முடியும். சத்தியமூர்த்தி, தான் ஆர்வத்தோடு அழைத்த குரலுக்குப் பதிலே சொல்லாமல் பாராமுகமாக இருந்ததை எண்ணி எண்ணி வேதனைப்பட்டாள் பாரதி. வீட்டுக்குத் திரும்பியிருந்தாலும் அங்கு அவளுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை.

நாலைந்து மாணவர்கள் புடைசூழ்ந்து அமர்ந்து உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்த வேளையில், அவள் குறுக்கிட்டு அழைத்ததை விரும்பாததனால் தான் சத்தியமூர்த்தி கவனிக்காதது போல் இருந்து விட்டான். மாணவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பிய பின் உணவு விடுதிக்குப் போய் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, அறைக்குத் திரும்பிய பின் அவனும் இதைப் பற்றித்தான் சிந்திக்கத் தொடங்கியிருந்தான். பாரதியிடம் வேண்டுமென்றே தான் பாராமுகமாக இருந்ததாகத்தான் அவனும் உணர்ந்திருந்தான். அந்த வேளையில் அப்படிப் பாராமுகமாக இருக்க வேண்டுமென்ற பிடிவாத உணர்ச்சி தனக்கு எதற்காக ஏற்பட்டதென்று நினைத்த போதும் அதன் காரணம் இப்போது அவனுக்கு புரியாததாக இருந்தது. ஏதோ அந்த வேளையில் அப்படித்தான் செய்துவிட வேண்டுமென்று தோன்றியது, 'செய்துவிட்டோம்' என்ற ஞாபகம் மட்டும் நினைக்க மீதமிருந்ததே தவிரக் காரணம் மீதமில்லை.

உறக்கம் வராத காரணத்தினால் அறைக்கு வெளிப்புறம் மாடி வராந்தாவில் உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. பேச்சுத் துணைக்குத் தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் ஊரில் இல்லை. பின் பக்கத்தில் சண்பக மரத்துக் கிளைகளும் இலைகளும் காற்றோடு பேசிக் கொண்டிருந்தன. முன் பக்கம் பாதரசம் வழிந்து நிறைந்து பரந்தாற் போல் ஏரியும், வெண்நீல மின் விளக்குகளுக்கும் அப்பால் இருளோடு இருளாக இனந்தெரியாமற் கலந்து போய்விட்ட மரக் கூட்டங்களும், மலைகளும், லேக் அவென்யூவும் அமைதியாகத் தெரிந்தன. நீண்டு பரந்த சோக இருளில் அங்கங்கே மின்னி மறையும் சின்னஞ்சிறு மகிழ்ச்சி மின்னல்களைப் போல் எங்கோ சில பகுதிகளிலிருந்து வானொலி இசைக் காற்றில் முறிந்து முறிந்து வந்து ஒலித்துக் கொண்டிருந்தது. எதிர்ப்புறம் ஏரியின் மறுகரையில் 'நியான்ஸைன்' நீலக்குழல் விளக்குகளில் எழுதப்பட்டிருந்த 'லேக் வியூ ஹோட்டல்' என்ற ஒளி எழுத்துக்கள் அணைந்து அணைந்து எரிவதன் மூலம் 'பெயரும் மின்னி மின்னி மறையக் கூடிய இயல்புடைய ஒன்றுதான்' என்பதை நாகரிகமாக நிரூபித்துக் கொண்டிருந்தது. தன் மனத்தில் இடைவிடாத இன்பக் கனவாக நிறைந்திருந்த மல்லிகைப் பந்தல் என்னும் அந்த ஊருக்கே தான் வந்து வசிக்கத் தொடங்கி வாரங்கள் சில ஓடி விட்டதையும் தன் ம்னம் விரும்பி வேலை பார்க்க வந்த அந்த ஊர் கலைக் கல்லூரியின் சுக துக்க அனுபவங்களும், புகழ் பொறாமை நிகழ்ச்சிகளும், போதுமான அளவு தன்னைச் சூழ்ந்து விட்டதையும் நினைத்துப் பார்த்துத் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. சாயங்காலம் ஏரிக்கரையில் பாரதியிடம் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டாமென்று தான் இப்போது அவன் நினைத்தான். அதில் அவளுடைய மனத்தை அதிகமாகப் புண்படுத்தியிருக்க முடியும் என்பதும் அவனுக்குப் புரிந்தது. ஆனாலும் அவன் பாரதியிடம் அளவாகவும், கண்டிப்பாகவும் பழக வேண்டுமென்றே தன் மனத்திற்கு அடிக்கடி எச்சரித்துக் கொண்டிருந்தான். அந்தக் கல்லூரியின் சூழ்நிலையும், வம்பு பேசும் மனப்பான்மையும், கோள் சொல்லும் குணம் உள்ளவர்கள் அங்கு நிறைந்திருப்பதும் தெரிந்து அவன் எச்சரிக்கையாக இருக்க விரும்பினான்.

கல்லூரி வகுப்பு நேரங்களிலும், வெளியேயும் பாரதி அடிக்கடி தன்னைச் சந்திக்க விரும்புவதைத் தவிர்த்துத் தான் அவளிடமிருந்து விலகி நிற்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. ஆர்வத்தோடு ஓடி வந்து அவள் தன் எதிரே நின்று சிரித்துப் பேசுவதையும் பாராட்டுவதையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளச் செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தான் அவன். அந்த நினைப்பைச் செயலாக்கத் தொடங்கும் போது மாலையில் நிகழ்ந்தது போல் பாரதியின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதும் அவனுக்குத் தெரியாமல் இல்லை. உலகில் எல்லா விதமாகவும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இரண்டு வகையான அன்பு உண்டு. யார் மேல் அன்பு செய்ய விரும்புகிறோமோ அவரையே ஆள விரும்புகிற அன்பு ஒன்று. யார் மேல் அன்பு செய்ய விரும்புகிறோமோ அவருகே ஆட்படுகிற அன்பு ஒன்று. ஆள விரும்புகிற அன்பைக் காட்டிலும், ஆட்படுகிற அன்பு மிகவும் பக்குவமானது. ஆள விரும்புகிற அன்பில் சுயநலமும் அகங்காரமும் உண்டு. ஆட்பட விரும்புகிற அன்பில் தியாகத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை. ஆள விரும்புகிற அன்புக்கு உலகில் காதல் என்றும், பிரேமை என்றும் விதம்விதமாகப் பெயர் சொல்லுகிறார்கள். ஆட்படுகிற அன்புக்குப் பக்தி என்று பெயர் சொல்லுகிறார்கள்.

'பாரதியும் என் மேல் அன்பு செலுத்துகிறாள். மோகினியும் என் மேல் அன்பு செலுத்துகிறாள். ஆனால், நானே நுணுக்கமாகச் சிந்தித்துப் பார்க்கும் போது இந்த இருவருடைய அன்பிலும் வேறுபாடு இருக்கிறது. பாரதியின் அன்பு என்னை ஆள விரும்புகிற அன்பு, மோகினியின் அன்போ என்னை ஆட்படுகிற அன்பு. ஆட்படுகிற அன்புக்கு இணையான உறவு உலகத்தில் வேறெதுவும் இருக்க முடியாது' என்று இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கிற போது, 'புஷ்ப மரத்தடியில் வீற்றிருக்கும் தெய்வத்துக்கு அர்ப்பணமாகும் பூவைப் போல் நான் தானாகவே உங்களுக்குச் சமர்ப்பணம் ஆனவள்' என்றும் 'உங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வாத்தியம் வாசிக்க நீங்கள் இல்லாமல் தூசி படிந்து போய் மூலையில் கிடக்கிறது' என்றும் தன்னுடைய கடிதத்தில் மோகினி எழுதியிருந்த உணர்ச்சிகரமான வாக்கியங்கள் அவனுக்கு ஞாபகம் வந்தன.

சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தலில் மோகினியைப் பற்றி எண்ணி மனம் தவித்துக் கொண்டிருந்த தினத்திற்கு மறுதினம் காலையில் கண்ணாயிரமும் அம்மாவும் உடன் வரக் காரில் மதுரையிலிருந்து நாட்டரசன் கோட்டைக்குப் பக்கத்தில் பெரிய தனவணிகர்கள் நிறைந்த சிறிய ஊர் ஒன்றில் கலியாணத்திற்குச் 'சதிர்க் கச்சேரி' செய்யப் போய்க் கொண்டிருந்தாள் மோகினி. மாலையில் வரவேற்பின் போது தான் சதிர்க் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது. ஆனாலும் காலையிலேயே புறப்பட்டுப் போய்விட வேண்டுமென்று அவசரப்படுத்திக் கண்ணாயிரம் அவர்களைக் காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டிருந்தார். கண்ணாயிரமே 'பெரிய புள்ளி'யை வீடு தேடி அழைத்து வந்து முன் பணம் கொடுக்கச் செய்து ஏற்பாடு பண்ணின கச்சேரியாயிற்றே? அதனால் அவரும் உடன் வந்தால் தான் கௌரவமாயிருக்கும் என்று அம்மா அவரையும் வற்புறுத்தி அழைத்துக் கொண்டு வருகிறாள் என்பது மோகினிக்குப் புரிந்தது. இம்மாதிரிப் பெரிய இடங்களில் நடைபெறும் எந்த வைபவமானாலும் அதில் தானும் போய்த் தலையைக் காண்பித்து விட்டு வரவேண்டுமென்ற நைப்பாசை அல்லது அற்பத்தனம் கண்ணயிரத்துக்கு உண்டு என்பதை மோகினி அறிவாள்.

படிப்படியாக இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டிருந்த காரணத்தினால் மோகினிக்குக் கண்ணாயிரத்தைப் பற்றி நினைப்பதற்கே அருவருப்பாயிருந்தது. ஆனால் அவளுடைய அம்மாவுக்கோ எல்லாக் காரியங்களுக்கும் கண்ணாயிரம் தான் தேவைப்பட்டார். எல்லா இடங்களுக்கும் கண்ணாயிரம் உடன் வந்தால் தான் தனக்குக் கௌரவம் என்று தப்பாக எண்ணிக் கொண்டிருந்தாள் அம்மா. இந்த நிலைமையை எண்ணி அம்மாவின் மேல் கோபப்படுவதா பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை மோகினிக்கு. அன்று காரில் நாட்டரசன் கோட்டைக்குப் போகும் போதும் கண்ணாயிரத்தின் மேல் தாங்க முடியாத அருவருப்போடு தான் பிரயாணம் செய்து கொண்டிருந்தாள் அவள். காரில் அம்மாவும் கண்ணாயிரமும் சளசளவென்று ஓயாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கலியாணத்துக்கு எந்தெந்தப் பெரிய மனிதர்கள் எல்லாம் வருவார்கள், எவ்வளவு தடபுடலாக ஏற்பாடுகள் செய்திருப்பார்கள் என்பதைப் பற்றி அவர்கள் பேச்சு வளர்ந்து கொண்டிருந்தது. மோகினி ஒன்றும் பேசப் பிடிக்காமல் - அவர்கள் பேசிக் கொண்டிருப்பது எதுவோ அதைக் கேட்கவும் பிடிக்காமல் மிகவும் பொறுமையோடிருந்தாள்.

கோடை வெயில் மண்டையைப் பிளக்கும் உச்சி நேரத்துக்கு அந்த ஊரை அடைந்தது கார். மனிதர்கள் அதிகம் பழகாமல் பூட்டிக் கிடக்கும் பெரிய பெரிய வீடுகளோடும் அகன்ற புழுதி மயமான சாலைகளோடும் தோன்றிய அந்த ஊர் அந்த ஒரே ஒரு கலியாணத்துக்காக வந்திருந்த கார்களுடனும், மனிதர்களுடனும் அவர்களால் உண்டாக்கிய செயற்கைக் கலகலப்புடனும் இயங்கிக் கொண்டிருந்தது. தெருவில் நுழைந்த கார் கலியாண வீட்டு வாசலில் பந்தலுக்கு முன்னால் போய் நிற்பதற்கு முன் 'டான்ஸ்காரங்க வந்தாச்சு' என்று ஒரு வகை பரபரப்பான பேச்சும் பரபரப்பான கூட்டமும் சேர்ந்திருந்தது. அந்தச் சிறிய ஊரில் அன்றைக்குப் பகலில் மிகப்பெரிய 'சென்ஸேஷனல் நியூஸ்' (உணர்ச்சியூட்டும் சேதி) 'டான்டஸ்காரங்கள்ளாம் வந்தாச்சாமே?' என்பதாகத்தான் இருந்தது. காரையும் தன்னையும் மேலும் கீழுமாக வெறித்து வெறித்துப் பார்க்கும் கூட்டத்துக்கு நடுவே கூசியபடி, தலையைக் குனிந்து கொண்டே காருக்குள் உட்கார்ந்திருந்தாள் மோகினி. அந்த நிலையில் அந்த சிறிய ஊரின் இரசிகப் பெரு மக்களுக்கு நடுவே அவள் ஓர் அபூர்வமாக இருந்தாள். கண்ணாயிரம் கீழே இறங்கிப் போய்க் கலியாண வீட்டுக்காரரிடம் தாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டின் சாவியை வாங்கிக் கொண்டு வந்தார். தெருக் கோடியில் அரண்மனை போல் பெரிதாயிருந்த ஒரு பழைய வீட்டின் மாடியில் இரண்டு விசாலமான அறைகளை அவர்கள் தங்கிக் கொள்வதற்காக ஒழித்து விட்டிருந்தார்கள்.

"மோகீ! இந்தக் கலியாணத்திலே நீ டான்ஸாடப் போறேங்கிறதை எதிர்பார்த்து இந்த ஊரே பரபரத்துப் போய்க் காத்துக் கொண்டிருக்காம்" என்று அறைக் கதவைத் திறந்து கொண்டே வியந்தாற் போல் கூறத் தொடங்கினார் கண்ணாயிரம்.

மோகினி இதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் சலித்தாற் போல் 'உச்'சூக் கொட்டினாள்.

"இல்லையா பின்னே? ராத்திரி டான்ஸ் முடிஞ்சதும் மறந்திடாமல் என் செல்லக் கண்ணுக்குத் திருஷ்டி கழிக்கணும்" என்று முத்தழகம்மாளும் ஒத்துப் பாடினாள். மோகினியோ ஒன்றிலும் மனம் ஒட்டாமல் சலித்துப் போயிருந்தாள். கலியாண வீடுகளில் ஏற்பாடு செய்யப்படும் மாலை நேரத்துக் கலை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் முறையைக் கழிப்பதற்காகவே இருக்கும். எதிரே உட்கார்ந்திருப்பவர்கள் பகல் சாப்பாட்டில் பாயாசம் நன்றாயில்லாமல் போய்விட்டதைப் பற்றியும் மாலைச் சிற்றுண்டியின் போது காப்பியில் வெந்நீரைக் கலந்து விட்டதைப் பற்றியும் வம்பு பேசிக் கொண்டிருப்பார்கள். பேசாமல் வந்து உட்காருகிறவர்களும் பாதியிலே கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு நாசூக்காக எழுந்து போய் விடுவார்கள். கொலு வைத்த பொம்மைகளைப் போல் கலியாணப் பெண்ணும் பிள்ளையும் மட்டுமே வரவேற்பு மேடையில் கடைசிவரை இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாரும் வருவதும் போவதும் உட்காருவதும் பேசுவதுமாக ஏதோ ஒரு பரபரப்பில் எதிரே தங்களுக்காகவே - தங்களைச் சபையாகக் கொண்டே நடத்தப்படும் நாட்டியக் கச்சேரியைக் கூடக் கவனிக்காத பரபரப்பில் ஈடுபட்டிருப்பார்கள். இன்னும் சிலர் நாற்காலிகளில் முன்புறம் மேடையைப் பார்த்து அமர்ந்துவிட்டுச் சிறிது நேரமானதும் பின்புறத்து வரிசையில் இருப்பவர்களோடு திரும்பிப் பேசத் தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளின் அழுகுரல்கள், சிறுவர்கள் பந்தலில் கட்டியிருக்கும் வாழை மரத்துப் பட்டையைப் பிய்த்துத் தரையில் அடித்தால் யானை வெடி வெடிக்கிற ஓசை வருகிறதா இல்லையா என்று பரிசோதிக்கும் ஓசைகளும், 'ஏலே! சும்மா இருக்கியா முதுகுத் தோலை உரிக்கட்டுமா?' என்று பெரியவர்கள் சிறுவர்களை அதட்டுகிற குரலுமாகச் சுற்றுப்புறமெல்லாம் ஒரே சந்தோஷப் போர்க்களத்தைப் போலிருக்கும். இந்தப் போர்களத்தினிடையே பணம் வாங்கி ஆட ஒப்புக் கொண்டுவிட்ட காரணத்தினால் ஆடுகிறவள் எதையுமே அவமானமாகக் கருதாமல் தலைவிதியே என்று சதிராடி முடிக்க வேண்டும். கலியாண வீட்டுக்காரரோ பின்னால் அங்கங்கே கலியாணத்தைப் பற்றி விசாரித்துப் பேசிக் கொள்கிறவர்கள் எல்லாரும் 'இன்னார் வீட்டுக் கலியாணத்திலே இன்னாருடைய சதிர்க் கச்சேரி நடந்ததாமில்லே?' என்று பேசிக் கொள்ள வேண்டும் என்ற பொய் கௌரவத்திற்காக மட்டுமே இத்தனை தாராளமாகவும் தடபுடலாகவும் ஏற்பாடுகள் எல்லாம் செய்திருப்பார். எல்லாமே ஒரு நாடகமாக இருக்கும். மூன்று - மூன்றரை மணி நேரம் வேர்க்க விறுவிறுக்கக் கால் கடுத்துபோய் ஆடிய பின் கடைசியில் வெற்றிலைப் பாக்குத் தேங்காய்ப் பழம் சந்தனம் புதுப் புடவை - பணம் வைத்து மிகவும் கௌரவமாக (அவ) மரியாதை செய்தனுப்புவதுடன் இந்தக் கலை நாடகம் முடிவது வழக்கம். அம்மாவின் பாகாசுரப் பணத்தாசையை அடிக்கடி நிறைவேற்றுவதற்காக மோகினியும் இந்த நாடகத்தை அவ்வப்போது அங்கங்கே ஆடியாக வேண்டியிருக்கிறது.

அம்மாவின் பணத்தாசையைத் தூண்டிவிடுவது போல் கண்ணாயிரமும் யாரையாவது அழைத்துக் கொண்டு வந்து கலியாணச் சதிர்க்கச்சேரிக்குச் சிபாரிசு செய்த வண்ணமாக இருந்தார். 'நல்லவேளையாக இது சின்ன ஊராய் இருப்பதனால் எல்லாருமே பாராமுகமாக இருந்துவிட மாட்டார்கள். சிலராவது பதிவாக உட்கார்ந்து நாட்டியத்தைப் பார்ப்பார்கள்' என்ற ஒரு நம்பிக்கை மீதம் இருந்தது அவளிடம். ஆனால் அதே சமயத்தில் இந்த மாதிரி சின்ன ஊர்களில் இன்னொரு தொல்லை. 'இதை ஆடு', 'அதை ஆடு' என்று உட்கார்ந்த இடத்திலிருந்தே கூக்குரல் போடுவார்கள். அல்லது சீட்டெழுதி அனுப்புவார்கள். எப்படிப் பார்த்தாலும் அமைதியும் பக்குவமுமில்லாத இரசிகர்களுக்கு முன் ஆடுவதில் சலிப்பான அனுபவங்களே மீதமிருக்க முடியுமென்று தோன்றியது. ஆகவே எப்படியாவது அந்த ஒரு நாள் கூத்தை ஆடி முடித்துக் கொண்டு ஊர் திரும்பினால் போதுமென்று நாழிகையை எண்ணிக் கொண்டிருந்தாள் மோகினி. வெயில் மயமான நீண்ட பகல் நேரம் மெல்ல மெல்லச் சரிந்தது.

ஒருவிதமாகப் பொழுது சாய்ந்து மாலையும் வந்தது. விதம் விதமாக தைத்துக் கொண்டு வந்திருந்த நாட்டிய உடைகளையெல்லாம் பெட்டியைத் திறந்து எடுத்துக் கடை விரிக்கத் தொடங்கினாள் அம்மா. மோகினி நீராடிவிட்டு வந்து அலங்காரம் செய்து கொள்ளத் தொடங்கினாள். வேர்வை அடங்க வேண்டும் என்பதற்காகவும் ஆடத் தொடங்குமுன் உடம்பில் ஒரு தூய்மையான உணர்ச்சி நிலவ வேண்டும் என்பதற்காகவும் நாட்டியத்துக்கு முன் நீராடி விடுவது அவள் வழக்கம். இன்ன இன்ன நாட்டியங்களை ஆட வேண்டும் என்று கண்ணாயிரமும் அம்மாவுமாக ஒரு பட்டியல் தயாரித்து மோகினியிடமும் சொல்லியிருந்தார்கள். அதைத் தவிர முன் வரிசையில் அமர்ந்திருக்கிற முக்கியமான பெரிய மனிதர்கள் ஏதாவது விரும்பிக் கேட்டால் அதையும் மறுக்காமல் ஆட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது மாதிரிக் கலியாண வீட்டு நிகழ்ச்சிகளில் இரசிக்கிறவர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கவனித்தாலும், கவனிக்காமலே நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தாலும், கொடுத்த பணத்துக்குக் குறைவில்லாமல் மூன்று - மூன்றரை மணி நேரம் ஆடி விட வேண்டும் என்பதில் மட்டும் அக்கறையாயிருப்பார்கள் என்பது மோகினிக்குத் தெரியும். மாலை ஐந்தரை மணியிலிருந்து ஏறக்குறைய இரவு ஒன்பது மணி வரை அன்று அவள் ஆடினாள். நூறு நூற்றைம்பது பேர்கள் பந்தலில் அங்கும் இங்குமாக உட்கார்ந்திருந்தார்கள். மற்றவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கூட்டம் எப்படி இருந்தாலும் கலைத்தெய்வத்தை மதித்துச் சிரத்தையாகவே ஆடினாள் அவள். வர்ணம், பதம், தில்லானா - எல்லாம் வகைக்கு ஒன்றாக ஆடினாள். அருணாசலக்கவியின் இராம நாடகக் கீர்த்தனையில் ஒன்றையும் கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன சரித்திரக் கீர்த்தனையில் ஒன்றையும் ஆடியபோது அவள் தன்னை மறந்த இலயிப்புடன் நிகழ்ச்சி முடிந்தது. கலியாண வீட்டுச் சதிர்க் கச்சேரி என்னும் ஆடம்பர நாடகத்தின் முடிவான கடைசிப் பகுதியும் வந்தது. கலியாண வீட்டுக்காரரும் இன்னும் நாலைந்து பெரிய புள்ளிகளும் இரத்தினக் கம்பளம் விரித்த கூடத்தில் வெற்றிலை பாக்குத் தேங்காய் பழம் - புதுப்புடவை சந்தனக் கிண்ணம் எல்லாம் தயாராக வைத்துச் சதிர்க் கச்சேரி ஆடியவளுக்குப் பணம் கொடுப்பதற்குக் காத்திருந்தார்கள். கண்ணாயிரத்தையும், அம்மாவையும் பின் தொடர்ந்து அடக்க ஒடுக்கமாக நின்றாள் மோகினி. கூடத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் ஐம்பது அறுபதைக் கடந்த முதியவர்களாக இருந்தும், பார்வை, பேச்சு, சிரிப்பு எல்லாவற்றையும் அந்த முதுமையோடு பொருந்தாமல் அசடு வழிந்தது. தன்னைத் துளைத்தெடுப்பது போல் பார்க்கத் தொடங்கிய அந்தக் கண்களுக்கு முன் நிற்கவே அருவருப்பாயிருந்தது அவளுக்கு. பணத்தையும் மரியாதை என்ற பேரில் அவர்கள் செய்து கொண்டிருந்த அவமரியாதையையும் ஏற்றுக் கொள்ளாமலே திரும்பிப் போய்விடலாம் போலக் கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது மோகினிக்கு. எவ்வளவு நேரம் தான் கால்கடுக்கக் காத்துக் கொண்டு நிற்பது? கூட்டத்தில் உட்கார்ந்திருந்தவர்களில் மிகவும் முதியவரான ஒருவர் அந்த முதுமைக்கும் வயதுக்கும் பொருந்தாத 'மைனர்' சிரிப்போடு கண்களை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கண்ணாயிரத்தை அருகே கூப்பிட்டுக் காதருகே ஏதோ சொன்னார். கண்ணாயிரம் அதே பாணியில் அதே செய்தியைக் காதருகே வந்து முத்தழகம்மாளிடம் மெல்ல அஞ்சல் செய்தார். மோகினி உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு முன்பு நிற்கவே பிடிக்காமல் மனம் குமுறியபடி நின்று கொண்டிருந்தவள் இதையெல்லாம் கவனித்து மேலும் அதிகமாகக் குமுறலானாள்.

அம்மா மோகினியின் காதருகே வந்து "டீ! உன்னைத்தானே! பொது இடத்திலே மாட்டேன்னு சொல்லி நாலு பேர் முன்னே என் மானத்தை வாங்கிப்பிடாதே. நம்மவங்களுக்கு இது ஒண்ணும் புதுசில்லே. நாம இப்படிச் செய்யற வளமுறை உண்டு. பெரியவங்களா இங்கே உட்கார்ந்திருக்கிற நாலு பேருக்கு உங்கையாலே கொஞ்சம் சந்தனத்தைத் தொட்டுப் பூசிவிட்டுப் பெறவு மரியாதையை வாங்கிக்க" என்று தணிந்த குரலில் முணுமுணுத்தாள். அதுதான் சமயமென்று கண்ணாயிரம் கீழேயிருந்த சந்தனக் கும்பாவையும் பன்னீர்ச் செம்பையும் எடுத்துக் கொண்டு குழைவாக மோகினிக்கு அருகே வந்தார். அவ்வளவில் மோகினி எரிமலையானாள். இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றிக் கொண்டு உலகத்திலேயே மிகவும் கீழ்த்தரமான உணர்ச்சிகளையும் சிறுமைகளையும் அப்போது தன் எதிரே பார்ப்பது போல் சுற்றியிருந்தவர்களைத் துச்சமாகப் பார்த்தாள். அவள் எங்கே தாறுமாறாகப் பேசிவிடப் போகிறாளோ என்ற பயத்தில் கண்ணாயிரத்தின் கைகள் சந்தனக் கும்பாவோடு நடுங்கிக் கொண்டிருந்தன. மோகினியின் கண் பார்வையில் நெருப்புப் பொறி பறந்தது.

"இவங்க பணம் நமக்கு வேண்டாம். கலியாணத்துக்கு நான் சும்மா ஆடினதாக இருக்கட்டும்!... புறப்படும்மா... புறப்படுறியா இல்லையா?" என்று வார்த்தைகளை வீசிவிட்டு அம்மா பின்னால் வருகிறாளா இல்லையா என்பதைக் கூட எதிர்பாராமல் விறுவிறுவென்று நடந்து அங்கிருந்து வெளியேறினாள் மோகினி. காலில் சலங்கைகள் கோபமாக ஒலிக்க அவள் ஆத்திரத்தோடு தரையையும் அவர்கள் நினைப்பின் சிறுமையையும் ஒரு சேர மிதித்துக் கொண்டு அந்தத் தொண்டு நிலைமையைத் 'தூ'வென்று தள்ளிவிட்டு வெளியேறிச் சென்றது கூட ரௌத்திராகாரமானதோர் அழகிய அபிநயம் போல் தோன்றியது.

அத்தியாயம் - 25

தக்காளிப் பழத்தின் தோற்றத்தில் சிவப்பு நிறமே நிறைந்திருந்தாலும் காம்போரத்தின் சின்னஞ் சிறு பச்சை நிறத்தை எடுத்துக் காட்டுவதற்கே அவ்வளவு சிவப்பு நிறமும் பயன்படும். படித்துப் பட்டம் பெற்றவர்களில் பலரிடமுள்ள புத்தியும் திறமையும் அகங்காரத்தை எடுத்துக் காட்டவே துணையாயிருக்கின்றன.

'அறிமுகம்' என்ற தொடருக்கு மெய்யான பொருள்தான் என்னவாக இருக்க முடியும்? முகத்துக்கு முகம் அடையாளம் தெரிந்து அறிந்து கொள்வது மட்டும் அறிமுகமில்லை. மனத்துக்கு மனம் அடையாளம் தெரிந்து அறிந்து கொள்வதுதான் அறிமுகம். சத்தியமூர்த்தி அங்கு வந்து அந்தக் கல்லூரியில் விரிவுரையாளனாகப் பணிபுரியத் தொடங்கியிருந்த சில வாரங்களிலேயே மாணவ மாணவிகளுக்கு நன்றாக அறிமுகமாகியிருந்தான். முகத்தை அறிந்தவர்கள் தவிர அவன் மனத்தை அறிந்த மாணவர்களும் அங்கு ஏராளமாக இருந்தார்கள். முதல் நாள் மாலை ஏரிக்கரையில் அவனோடு அமர்ந்து உரையாடிவிட்டுச் சென்ற மாணவர்கள் கூட்டத்தில் மிகவும் சுறுசுறுப்பான மாணவன் ஒருவன், "நீங்கள் இந்தக் கல்லூரிக்கு மட்டும் பேராசிரியர் இல்லை! பல விதங்களில் சமூகத்துக்கே பேராசிரியராய் ஆகிற தகுதி உங்களுக்கு இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள் தாம் சமூகத்துக்குப் பேராசிரியராக இல்ங்க வேண்டும்" என்று உணர்ச்சி வசப்பட்டுச் சொல்லியிருந்தான். பிறர் மிகையாகப் புகழும் போது அதற்குப் பதிலாகப் புன்முறுவல் பூத்து அந்தப் புகழ்ச்சியை மறப்பது அவன் வழக்கம். சத்தியமூர்த்தி இப்படியெல்லாம் இந்தப் புகழ்ச்சியைக் கொண்டாடாமல் இருக்கும் போதே அந்தக் கல்லூரி ஆசிரியர்களில் அவன் மேல் பொறாமைப்படுகிறவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

சில நோட்டுப் புத்தகங்களில் ஒரு புறமாகத் தாளைக் கிழித்தால் நாமறியாத மற்றொரு புறத்தையும் அது உதிர்த்து வைத்திருக்கும். இதைப் போல நம்முடைய ஒரு பக்கத்து விளைவுகள் மற்றொரு பக்கத்தைப் பாதிப்பதுண்டு. சத்தியமூர்த்தியின் புகழும் இப்படி அவனறியாமலே அவனை மற்றொரு பக்கத்தில் பாதித்திருந்தது. சதாகாலமும் அவனைச் சூழ நின்று மாணவர்கள் ஆர்வத்தோடு பேசுவது கல்லூரி முதல்வரிலிருந்து ஆசிரியர்கள் வரை யாருக்கும் பிடிக்கவில்லை. "பையன் ரொம்பவும் 'சீப் பாப்புலாரிட்டிக்கு' (மட்டமான புகழுக்கு) ஆசைப்படறான். எப்பப் பார்த்தாலும் தன்னைச் சுற்றிப் பிள்ளைகளை நெருங்க விட்டால் 'கெத்து'ப் போயிடும். நாளடைவிலே தானாகத் தெரிஞ்சுக்குவான். புதுமோகம் இப்படித்தான் இருக்கும்" என்று முதல்வர் வேறு யாரிடமோ கேலியாகப் பேசியதைத் தான் கேட்டதாக ஒரு மாணவன் சத்தியமூர்த்தியிடம் வருத்தத்தோடு வந்து கூறியிருந்தான். இன்னொரு வகுப்பில் ஆங்கிலப் பேராசிரியரிடம் சத்தியமூர்த்தி 'ஷீ வாக்ஸ் இன் பியூட்டி' என்ற கவிதையை அழகுற விளக்கிய பெருமையை மாணவர்கள் சொல்லிப் புகழ்ந்தார்களாம். சத்தியமூர்த்தியைப் பற்றிய புகழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்தப் பேராசிரியர், "உங்கள் மனப்போக்குத் தெரிந்து உங்களுக்குப் பிடித்தமான காதல் கவிதையைத் தேடிப் பிடித்து விளக்கினால் கொண்டாடத்தானே செய்வீர்கள்? இந்தப் புகழ்ச்சியும் மகிழ்ச்சியும் சிறுபிள்ளைத்தனமான காரியங்கள். இதனால் பரீட்சை எழுதிப் பாஸ் பண்ணி விட முடியாது..." என்று அதிகப் பொறுப்புள்ளவரைப் போல் பேசிப் பொறாமைப் பட்டாராம். இப்படிப்பட்ட செய்திகளைச் சத்தியமூர்த்தி தெரிந்து கொள்ள விரும்பாவிட்டாலும் அவனுடைய பெருமையில் அக்கறையுள்ள மாணவர்கள் இவற்றை அவனுக்குத் தெரிவிக்கத் தவறுவதில்லை. வேறொரு பேராசிரியர், "ஆள் பார்க்க நன்றாக இருந்தாலே உங்களுக்கெல்லாம் பிடித்துப் போகுமே? கேட்க வேண்டுமா?" என்று சத்தியமூர்த்தியைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டாராம். சத்தியமூர்த்தி கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இப்படிச் செய்திகள் நிறைய வந்து அவன் செவிகளை எட்டிக் கொண்டிருந்தன.

'பிள்ளைகளை அரட்டி மிரட்டி வைத்திருந்தால் தான் அவர்கள் தங்களிடம் ஓரளவாவது மரியாதை வைத்திருப்பார்கள்' என்ற தப்பபிப்பிராயம் பெரும்பாலான ஆசிரியர்களிடம் இருப்பதைச் சத்தியமூர்த்தி அறிந்து வருந்தினான். திறமையால் கவர்ந்து மதிப்பைப் பெற முடியாமல் பயமுறுத்திக் கவர்ந்து மதிப்பைப் பெற முயலும் இந்த முயற்சியை வியந்தான் அவன். 'உதவி வார்டன்' என்ற முறையில் அவன் மாணவர் விடுதிகளை அடிக்கடிச் சுற்றிப் பார்த்தான். ஆனால் 'வார்டன்' அப்படிச் சுற்றிப் பார்ப்பதை அவ்வளவாக விரும்பவில்லை என்று தெரிந்தது. "அடிக்கடி விடுதிகளில் சுற்றாதீர்கள். பிள்ளைகளிடம் நம்மைப் பற்றி ஓர் 'அத்து' இருக்க வேண்டும். அடிக்கொரு தரம் அருகே போய் வந்தால் 'அத்து' போய் விடும் என்று பேச்சுப் போக்கில் 'வார்டன்' அவனிடம் ஒரு நாள் எச்சரித்தார். பூபதியோ மாணவர்களின் விடுதியைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டுமென்று அவனிடம் கூறியிருந்தார். 'வார்டனின்' போக்கு விசித்திரமானதாக இருந்தது. சத்தியமூர்த்தியாக எதையும் செய்ய முடியாமல் தடுத்துக் கொண்டேயிருந்தார் அவர். இந்த நிலையில் அன்று காலை ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பின் 'வார்டனிடம்' பட்டும் படாமலும் தான் பழகிய நிலையை மாற்றிக் கொண்டு கண்டிப்பாகப் பேசியே தீரவேண்டிய அவசியம் சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டிருந்தது.

மல்லிகைப் பந்தல் கல்லூரியில் விடுதி விதிகள் ஓரளவு கண்டிப்பானவை. விடுதி அறையில் முதலாண்டு மாணவர்களானால் ஓர் அறைக்கு இருவர் வீதமும் இறுதியாண்டு மாணவர்களானால் ஓர் அறைக்கு ஒரே மாணவர் வீதமும் வசிக்க ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது. இறுதி ஆண்டு மாணவர்கள் பல்கலைக் கழகப் பரீட்சைக்குப் போகிறவர்களாயிருப்பார்கள் என்பதால், அவர்கள் படிப்பில் சிரத்தை காட்ட வேண்டுமென்று தனி அறையில் விடப்பட்டிருந்தார்கள். விடுதிக் கட்டணமும், உணவுச் செலவும் மொத்தச் செலவை ஈவு வைத்து (டிவைடிங் ஸிஸ்டம்) வசூலிக்கப்பட்டன. சைவ, அசைவ உணவுக் கூடங்கள் தனித்தனியே இருந்தன. எங்கே சுற்றினாலும் எந்த மாணவனும் இரவு எட்டு மணிக்குள் தன் அறைக்குத் திரும்பியாக வேண்டும். தகுந்த காரணங்கள் இருந்தால் வார்டனிடமோ உதவி வார்டனிடமோ சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டு தான் வெளியே போக வேண்டும். ஒரு மாணவன் சட்டத்தை மீறி யாரிடமும் அனுமதி பெறாமல் வெளியேறி போயிருப்பதாகத் தோன்றினால் அவன் திரும்பி வந்து அறைக்குள் நுழைய முடியாமல் அவன் அறையில் ஏற்கெனவே பூட்டியிருந்த பூட்டுக்கு மேல் இன்னொரு பூட்டைப் பூட்டிக் 'கவுண்டர் லாக்' செய்யும் அதிகாரம் வார்டனுக்கு உண்டு. இதனால் தவறு செய்த மாணவன் திரும்பி வந்தால் வார்டனைச் சந்திக்காமல் தன்னுடைய அறைக்குள் நுழைய முடியாது.

குறிப்பிட்ட சம்பவம் நடந்த தினத்துக்கு முன் தினம் இரவு மல்லிகைப் பந்தலிலிருந்து இருபது மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மலைக்காட்டு ஊரில் தன் தந்தையைப் புலி அடித்துப் போட்டுவிட்ட தகவல் தெரிந்து ஓர் அரிஜன மாணவன் இரவோடு இரவாக ஊருக்குப் போக நேர்ந்திருந்தது. அந்த மாணவன் கல்லூரிக் காம்பவுண்டுக்குள்ளேயே இருந்த 'வார்டனின்' வீட்டில் போய்க் கதவைத் தட்டியிருக்கிறான். யாரும் திறக்கவே இல்லை. 'வார்டன்' குடும்பத்தோடு இரண்டாவது ஆட்டம் திரைப்படம் பார்க்கப் போயிருந்தார். வேறு வழியில்லாத காரணத்தால் சத்தியமூர்த்தியின் அறைக்கு வந்து கதவைத் தட்டி அவனிடம் சொல்லிவிட்டுத் தந்தையைப் பறிகொடுத்த துயரம் தாங்காமல் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறியபடி ஊருக்கு ஓடியிருந்தான் அந்த மாணவன். நள்ளிரவில் அந்த மாணவன் வந்து தட்டி எழுப்பியதிலிருந்தும், தந்தையை புலி அடித்துப் போட்டு விட்டதைக் குமுறிக்கொண்டு வரும் அழுகையோடு அந்தப் பையன் கூறிவிட்டுப் போனதிலிருந்தும், சத்தியமூர்த்திக்கு மனம் அதிகமாகவே வேதனையுற்றிருந்தது. அதற்குப் பின்பு அன்றிரவு அவன் தூங்கவேயில்லை. ஆனால் என்ன கொடுமை? மறுநாள் மாலையில் அந்தப் பரிதாபத்துக்குரிய மாணவன் திரும்பி வந்த போது அவனுடைய அறையில் கவுண்டர் லாக் போட்டு மேல் பூட்டு பூட்டியிருந்தார்களாம். வார்டனிடம் போய் விசாரித்ததில் அந்த மாணவன் அன்றிலிருந்து ஒரு வாரத்துக்குள் இருபத்தைந்து ரூபாய் தண்டம் கட்ட வேண்டும் என்றும், யாரிடமும் அனுமதி பெறாமல் விடுதியிலிருந்து வெளியேறிப் போனதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் வார்டன் கூறினாராம். உதவி வார்டனிடம் சொல்லி அனுமதி பெற்ற பின்பே தான் சென்றதாக அந்த மாணவன் சொல்லியதைக் கேட்டு வார்டன் எரிந்து விழுந்தாராம்.

"உதவி வார்டனாவது, மண்ணாங்கட்டியாவது? நான் ஒருத்தன் 'வார்டன்' என்று இங்கே பட்டத்தைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் போது நீ அங்கே ஏன் போகணும்?" என்று வார்டன் ஆத்திரத்தோடு கூப்பாடு போட்டதாக அந்த மாணவன் வந்து தெரிவித்த போது சத்தியமூர்த்தியின் மனம் எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறிப் பொறுமையிழந்து தவித்தது. பொறுமையோடு தன்னடக்கமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள முயன்றான் அவன். தக்காளிப் பழத்தின் மொத்தமான தோற்றத்தில் சிவப்பு நிறமே நிறைந்திருந்தாலும் காம்போரத்தில் இருக்கிற சின்னஞ்சிறு பச்சை நிறத்தை எடுத்துக் காட்டுவதற்கே அவ்வளவு சிவப்பு நிறமும் பயன்படும். படித்துப் பட்டம் பெற்றவர்களில் பலரிடமுள்ள புத்தியும் திறமையும் சொந்த அகங்காரத்தை எடுத்துக் காட்டவே துணையாக இருப்பதை இந்த நிகழ்ச்சியாலும் சத்தியமூர்த்தி புரிந்து கொள்ள முடிந்தது. வார்டனைச் சந்தித்து விரிவாகப் பேச வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. அன்று விடுமுறை நாளாகையால் அந்தப் பையனை உடன் அழைத்துக் கொண்டு வார்டனுடைய வீட்டுக்குச் சென்றான் சத்தியமூர்த்தி. 'வார்டன்' மிகக் கடுமையாயிருந்தார். வீட்டுக்குப் படியேறி வருகிற சக ஆசிரியனை வரவேற்று ஒரு நாகரிகத்துக்காக மலர வேண்டிய முக மலர்ச்சி கூட அவரிடம் இல்லை. உடன் வந்த மாணவன் வெளியே வாசற்புறமே நின்று கொண்டு விட்டதனால் சத்தியமூர்த்தி மட்டுமே வார்டனுடைய வீட்டுக்குள் சென்றான். ஆனால் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த வார்டன், சத்தியமூர்த்தி அந்த மாணவனை உடனழைத்துக் கொண்டு வருவதைத் தொலைவிலேயே பார்த்துவிட்டார். இதனால் சத்தியமூர்த்தி உள்ளே படியேறி வந்ததுமே, "மிஸ்டர் சத்தியமூர்த்தி! இதில் எல்லாம் நீங்கள் 'இண்டர்ஃபியர்' செய்வது (தலையிடுவது) சிறிதும் நன்றாயில்லை. கடுமையாயிருந்தாலொழிய இந்தக் காலத்தில் மாணவர்களை வழிக்குக் கொண்டு வரமுடியாது..." என்று அவன் வந்த காரியத்தைப் பற்றிப் பேசுவதற்கே இடம் கொடுக்காதவராகப் பிடிவாதமாயிருந்தார்.

"இதில் நான் தலையிட்டுத் தீர வேண்டியிருப்பதற்காக என்னை மன்னியுங்கள் சார்! இந்தப் பையனுடைய அறைக்குக் 'கவுண்டர் லாக்' போட்டுப் பூட்டுவதற்கும், இருபத்தைந்து ரூபாய் தண்டம் கொடுப்பதற்கும் இவன் ஒரு தவறும் செய்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மலைக்காட்டு ஊரில் தகப்பனைப் புலி அடித்துக் கொன்று போட்டு விட்டதாகத் தகவல் தெரிந்து ஊருக்குப் போயிருக்கிறான். அந்த நிலையிலும் உங்களைத் தேடி வந்து சொல்லிவிட்டுப் போகத்தான் முயன்றிருக்கிறான் இவன். நீங்கள் வீட்டோடு பூட்டிக் கொண்டு இரண்டாவது ஆட்டம் திரைப்படத்துக்குப் போய்விட்டீர்கள். அப்புறம் என்னைத் தேடி வந்து சொல்லிக் கொண்டு தான் இவன் ஊருக்குப் போயிருக்கிறான். இவனுக்கு நேர்ந்திருக்கிற கொடுமைக்கு இவன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமலே விடுதியிலிருந்து புறப்பட்டுப் போயிருந்தாலும் நீங்களும் நானும் அதை மன்னிக்கத் தயாராயிருக்க வேண்டும் என்பது என் கருத்து. உங்களிடம் சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருப்பதற்கு நான் விரும்பவில்லை. இந்தப் பையனுடைய அறைக் கதவை திறந்து விடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். இல்லாவிட்டால் நான் கல்லூரி நிர்வாகியைப் பார்த்து இதைப் பற்றி விவாதிக்க நேரிடும்" என்று கூறிவிட்டு அவருடைய பதிலை எதிர்பார்க்காமலே வெளியேறினான் சத்தியமூர்த்தி. வார்டனின் வீட்டு வாசலிலிருந்தே அந்த மாணவனுக்கு விவரம் சொல்லி அனுப்பினான் அவன். "தம்பீ! நீ உன்னுடைய அறை வாயிலில் போய்க் காத்திரு. இரவு எட்டு மணிக்குள் 'கவுண்டர் லாக்' எடுக்கப் பெற்று அறைக் கதவைத் திறக்க வழி உண்டா இல்லையா என்று பார். முடியாவில்லையானால் எட்டரை மணிக்கு என்னை அறையில் வந்து பார். உன்னை நான் கல்லூரி நிர்வாகியிடம் அழைத்துக் கொண்டு போகிறேன்."

ஏழே முக்கால் மணிக்கு அந்த மாணவன் வந்து தன்னுடைய அறைக் கதவு திறந்து விடப் பெற்றதாகச் சொல்லிச் சத்தியமூர்த்திக்கு நன்றியும் தெரிவித்துவிட்டுப் போனான். இது ஒரு சாதாரண நிகழ்ச்சியானாலும் அன்றிரவு நீண்ட நேரம் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி முதல்வர், வார்டனாக இருக்கும் துணை முதல்வர் என்று இப்படி ஒவ்வொருவராகத் தனக்கு எதிரிகளாகி வருவதை எண்ணியபோது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வறட்சியாயிருந்தது. கெடுதல் செய்கிறவர்களுடைய பகைமையை நல்லவர்கள் விலை கொடுத்தாவது வாங்கிக் கொண்டு எதிர்க்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.

என்ற குறளை நினைவு கூர்ந்தான் சத்தியமூர்த்தி. 'ஒரு நல்ல மனிதன் வாழ்க்கையில் தன்னுடைய ஒவ்வொரு தேவைக்காகவும் மட்டுமே போராட முடியாது. தன்னுடைய தேவைக்காகவும் நியாயத்துக்காகவும் சேர்த்துப் போராட வேண்டியிருக்கும்' என்று அடிக்கடி நினைக்கும் அந்த வாக்கியம் ஞாபகம் வந்தது அவனுக்கு. தான் எடுத்துக் கூறி விவாதித்த விஷயம் எதுவோ அதிலுள்ள நியாயத்துக்குச் செவி சாய்க்காமல், 'எட்டு மணிக்குள் இந்தப் பையனுடைய அறைக் கதவைத் திறந்துவிடவில்லையானால் நான் இதைப் பற்றிக் கல்லூரி நிர்வாகியிடம் போய்ப் பேச வேண்டியிருக்கும்' என்று கூறியதற்காக மட்டும் செவி சாய்த்து அந்த விளைவுக்கு அஞ்சியே வார்டன் அப்படி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டிருப்பதாகச் சத்தியமூர்த்திக்குத் தோன்றியது. சுற்றியிருக்கிற கௌரவமான மனிதர்கள் எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் அருவருக்கத் தக்கவர்களாக அவன் கண்களுக்குத் தோன்றினார்கள். படிப்பையும் மதிக்காமல் நியாயத்தையும் மதிக்காமல் வறட்டு ஜம்பம் மட்டுமே கொண்டாடுகிறவர்களுக்கு நடுவே பழக நேரிடுவதைப் போல் ஒரு நல்ல மனிதனுக்கு ஆயுள் தண்டனை வேறொன்றும் இருக்க முடியாது. கண்மூடி உறங்காமல் மனப் போராட்டங்களாலும் எண்ணங்களாலுமே தன்னை மூடிக் கொண்டு உறங்க முயன்ற அந்த இரவுக்குப் பின் மறுநாள் பொழுது புலர்ந்து கல்லூரிக்குச் சென்ற போது மனம்விட்டுப் பேசவும், பழகவும் ஓர் உண்மை நண்பன் கூட இல்லாத சூனியப் பிரதேசமான பாலைவனத்தில் நடமாடுவதைப் போல் ஆளைத் தவிக்கச் செய்யும் ஒரு விதமான தனிமையைச் சத்தியமூர்த்தி உணர்ந்தான்.

தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் ஊரிலிருந்து இன்னும் திரும்பவில்லை. போன இடத்திலிருந்தே தந்தி கொடுத்து லீவை மேலும் இரண்டு நாளைக்கு வளர்த்திருந்தார் அவர். போதாத குறைக்கு அன்று காலையில் அவன் கல்லூரிக்குச் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் விடுதியில் தங்கி வசிக்கும் மாணவர்கள் பத்து பன்னிரண்டு பேர் ஹாஸ்டலில் மாணவர்களுக்காக இரவில் கொடுக்கப்படும் பாலைப் பற்றிப் பெரிதாகக் குறை சொல்லிக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் காலையில் குளிப்பதற்கு வெந்நீர், இரவில் பருகுவதற்குப் பால் ஆகியவை வேண்டுமானால், தனியே பணம் கட்டி அவற்றுக்காகக் கல்லூரியில் அச்சிட்டு வைத்திருக்கும் சீட்டுக்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெந்நீர் சீட்டுக்களுக்கும், பால் சீட்டுக்களுக்கும், எண்ணெய் நீராடுகிற தினங்களில் எண்ணெய்க்காக வழங்கப்படும் 'ஆயில் டிக்கெட்டு'களுக்கும் - 'காலேஜ் கரென்ஸி' என்று பெயர் சூட்டியிருந்தார்கள் குறும்புக்கார மாணவர்கள். ஒவ்வொரு மாதமும் இருபது தேதிக்கு மேலாகிவிட்டால் இந்தக் 'கரென்ஸி'க்கு மதிப்பு அதிகமாகிவிடும். 'வெந்நீர்க் கரென்ஸி' தீர்ந்து போனவன் அடுத்த அறைப் பையனிடம் நாலணாக் கரெண்ஸியை எட்டணாவுக்கு உயர்த்திப் 'பிகு' செய்வான். அவசரத் தேவைக்காக மாணவர்கள் இந்தக் 'கரென்ஸி'யை விற்பதும் உண்டு.

"ஒரு 'மில்க் கரென்ஸி'க்கு நாலணா கொடுத்து வாங்குகிறோம் சார்! முக்கால்வாசி நாட்கள் திரிந்து போன பாலைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். சில நாட்களில் சர்க்கரை போட மறந்து போகிறார்கள். இன்னும் சில நாட்களில் அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் போது பாலாக இருந்தது நாங்கள் பருகுவதற்குக் கையில் எடுக்கும் போது தயிராக மாறி விடுகிற விந்தையைக் காண்கிறோம்" என்று கோபமாகவும், அந்தக் கோபத்தில் பிறந்த நகைச்சுவையுடனும் சத்தியமூர்த்தியிடம் வந்து குறை சொல்லிக் கொண்டு நின்றார்கள் அந்த மாணவர்கள்.

"இதை நீங்கள் ஏன் 'வார்டனிடம்' போய்ச் சொல்லக் கூடாது?" என்று கேட்டான் சத்தியமூர்த்தி.

"வார்டனிடம் நாலைந்து முறை சொல்லி அலுத்துப் போச்சு சார்! அதிகம் சொன்னால், 'சரிதான் போங்கப்பா... ஒரு நாள் திரிந்த பாலைக் குடித்தால் தான் என்ன? குடியா முழுகிவிடும்?' என்று அவரே பதில் சொல்லி விடுகிறார் சார்" என்று சத்தியமூர்த்திக்குச் சொல்வதற்குத் தயாராகப் பதில் வைத்திருந்தார்கள் அந்த மாணவர்கள்.

"வர வர மல்லிகைப் பந்தல் 'காலேஜ் கரென்ஸி'யின் மதிப்பு அதல பாதாளத்துக்குக் கீழே இறங்கிப் போய்விட்டது சார்" என்று சத்தியமூர்த்தி தங்களைத் தவறாகப் புரிந்து கொள்கிற ஆளில்லை என்ற நம்பிக்கையோடும், உரிமையோடும் சிரித்துக் கொண்டே வேடிக்கையாகச் சொன்னான் மற்றொரு மாணவன். அன்று பிற்பகலில் அவன் மாணவர்கள் சார்பில் வார்டனிடம் இதை எடுத்துக் கூறச் சென்ற போது முதல் நாள் நிகழ்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு அவர் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. இரண்டாம் தரம் சற்றே அழுத்திக் கேட்ட போதும் "இதெல்லாம் நீங்களே பார்த்து ஏற்பாடு செய்யலாமே? என்னைக் கேட்பானேன்? நிர்வாகியையே நேரில் சந்தித்துக்கூட இதைப்பற்றி விவாதிப்பீர்கள் நீங்கள். உங்களால் முடியாத காரியமும் உண்டா?" என்று குத்தலாக மறுமொழி கூறினார் 'வார்டன்'. சத்தியமூர்த்திக்கு எதற்காக இவரைத் தேடி வந்தோம் என்று வெறுப்பாகி விட்டது. காலையில் கல்லூரிக்குள் நுழையும் போது மனம் விட்டுப் பழகுவதற்கு உண்மை நண்பர்கள் இல்லாத பாலைவனமாக அது தோன்றியதே, அதே போன்றதொரு தனிமையை மீண்டும் உணர்ந்தவனாக அரை நாளைக்கு லீவு எழுதிக் கொடுத்துவிட்டு அறைக்குத் திரும்பி விட்டான் அவன். கல்லூரிக் காம்பவுண்டிலிருந்து அவன் வெளியேறு முன் ஊழியன் பிற்பகல் தபாலில் அவன் பெயருக்கு வந்திருந்த கனமான கடித உறை ஒன்றைப் பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். முகவரி எழுதியிருந்த கையெழுத்து குமரப்பனுடையதாக இருக்கவே மனம் சிறிது ஆறுதலடைந்தது. அறையில் போய் அந்த உறையைப் பிரித்து நண்பனையே நேரில் சந்தித்தது போன்ற மகிழ்ச்சியோடு அவனுடைய கடிதத்தைப் படிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே சத்தியமூர்த்தி வேகமாக நடந்தான். அன்றிருந்த மனநிலையில் குமரப்பனின் கடிதம் வந்தது அவனுக்குப் பெரிய ஆறுதலாயிருந்தது. அறைக்குப் போய் எதிரே மலைகளும் அமைதியான ஏரி நீர்ப் பரப்பும் தெரிகிறாற் போல் மாடி வராந்தாவில் சாய்வு நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு அந்தக் கடித உறையைப் பிரித்த போது அவன் எதிர்பாராத வேறு மகிழ்ச்சியும் அந்த உறைக்குள்ளே இருந்தது. மோகினி நாட்டியமாடும் கோலத்தில் எடுத்த புதிய புகைப்படங்களிரண்டும் உறைக்குள் இருந்தன. ஒரு படத்தில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்தே சிரிப்பது போலிருந்தது அந்த அழகிய படம். குமரப்பன் எதற்காக எப்படி இந்தப் படங்களை எடுத்து அனுப்பினான் என்று அறிந்து கொள்ளத் தவிக்கும் மனத்தோடு அவனுடைய கடிதத்தைப் படிக்கத் தொடங்கினான் சத்தியமூர்த்தி. உண்மை நண்பனின் அந்தக் கடிதம் அன்று அவனுக்கு ஏற்பட்டிருந்த எல்லாவிதமான கவலைகளையும் மறக்கச் செய்தது.

அத்தியாயம் - 26

துன்பங்களால் மனம் பொறுமையிழந்து தவிக்கும் சில சமயங்களில் நீதி நூல்களையும் அற நூல்களையும் வாழ்க்கையில் நன்றாக ஏமாறிய அப்பாவிகள் ஒன்று சேர்ந்து கொண்டு எழுதி வைத்து விட்டுப் போயிருப்பார்களோ என்று கூட நமக்குத் தோன்றி விடுகிறது.

நண்பன் குமரப்பனுடைய அந்தக் கடிதம் அவனுடன் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசுவதைப் போல் சுவை நிரம்பியதாக இருந்தது. மனமும், உணர்ச்சிகளும் தளர்ந்து போய்க் கல்லூரியிலிருந்து அறைக்குத் திரும்பியிருந்த அந்த மாலை வேளையில் அப்படியே மதுரைக்குப் பறந்து போய் நண்பனோடு வைகையாற்று மணலில் நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்து பேச வேண்டும் போன்ற தவிப்பை அந்தக் கடிதம் உண்டாக்கியிருந்தது. வரி பிறழாமல் அழகிய கையெழுத்துக்களால் நேராக எழுதும் வழக்கம் குமரப்பனிடம் உண்டு. எப்போதாவது சத்தியமூர்த்தியும் மற்ற நண்பர்களும் அந்தக் கையெழுத்தைப் பற்றிப் புகழ்ந்தால், "எண்ணங்களில் கோணல் இல்லாதவர்களுக்குக் கையெழுத்தும் கோணல் இல்லாமல் தானே இருக்கும்?" என்று பெருமிதத்தோடு குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே பதில் சொல்வான் குமரப்பன். அவனுடைய கர்வத்தில் கூட ஒரு நியாயம் இருக்கும். தன்னிடம் இருக்கிற திறமையை மற்றவர்கள் புகழ்ந்தால் மட்டுமே இப்படிக் குறும்புத்தனமாகவோ, நகைச்சுவையாகவோ மறுமொழி கூறுவான். இல்லாத திறமைக்காக யாராவது பொய்யாய்ப் புகழத் தொடங்கினாலோ அதற்குக் கிடைக்கிற பதில் சூடாயிருக்கும். குமரப்பனைப் போல் பொருளாழமும், குத்தலும், குறும்பும், நகைச்சுவையுமாக உரையாடும் துணிவைக் கூடப் பிறரிடம் காண்பது அருமையாக இருக்கும்.

அந்தச் சாயங்கால வேளையில் எந்த விதமான வேகமும் பரபரப்புமில்லாமல், வாழ்க்கையே மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிற மல்லிகைப் பந்தலைப் போன்ற ஒரு மலைநாட்டு நகரத்தின் மாடி வராந்தாவில் குமரப்பனின் கடிதத்தோடு உட்கார்ந்து அவனைப் பற்றிச் சிந்திப்பதே சுறுசுறுப்பையும் துணிவையும் தருகிற அநுபவமாக இருந்தது. குத்துவிளக்கில் பிரசுரம் செய்வதற்காகக் கண்ணாயிரத்தோடும், உதவியாசிரியரோடும், மோகினியைப் பேட்டி காணச் சென்றதைப் பற்றியும், அப்போது மோகினியின் வீட்டில் நிகழ்ந்தவற்றைப் பற்றியும் அந்தக் கடிதத்தில் சத்தியமூர்த்திக்கு எழுதியிருந்தான் குமரப்பன். அந்தக் கடிதத்தில் மோகினியைப் பற்றி மிகவும் பெருமையாக எழுதியிருந்தான். குத்துவிளக்கில் வெளியிடுவதற்காக, தான் எடுத்த மோகினியின் உருவப்படங்கள் இரண்டிலும் ஓரோர் பிரதி கடிதத்தோடு இணைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தான். அந்தக் கடிதத்தை மற்றொரு முறையும் படிக்கத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு.

"...சித்திரா பௌர்ணமியன்று இரவு வைகையாற்று மணலில் நீயும் நானும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது நீ கூறியிருந்த ஒரு வாக்கியத்தை மோகினியைப் பேட்டி காண்பதற்காகச் சென்றிருந்த தினத்தில் மறுபடியும் நினைத்தேனடா சத்தியம்! 'மோகினியைப் போன்றவர்களின் துன்பத்துக்காக யாரும் இயக்கம் நடத்தமாட்டார்கள். அவர்கள் இப்படியே இந்தக் கவலைகளோடு வெந்து அழிய வேண்டியதுதான்' என்று நீ அன்று கூறிய போது நான் உன்னை மறுத்துப் பேசினேன். இப்போது நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்த பின்பு எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இந்த மாதிரி வீடுகளில் ஏதோ ஒரு கலையையும் யாரோ பல மனிதர்களையும் நம்பி வாழ்கிற சராசரியான பெண்களைப் போல் மோகினியும் இருந்து விட்டால் வம்பில்லை. அவளால் அப்படி இருக்க முடியாது. நரகத்தின் நடுவே தன் ஒருத்தியினுடைய நினைப்பினாலும் செயல்களாலுமே சொர்க்கத்தைப் படைத்துக் கொண்டு வாழ முயல்கிறாள் அவள். மோகினியைப் பேட்டி காண்பது என்ற பெயரில் கண்ணாயிரமும் முத்தழகம்மாளும் வேறு ஏதேதோ காரியங்களைச் சாதித்துக் கொள்ள முயன்றார்கள். அத்தனை அடக்குமுறைக்கு நடுவிலும் அந்தப் பெண்ணிடம் ஓரளவு தன்னம்பிக்கையும், தைரியமும், மீதமிருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுப் போனேனடா, சத்தியம்! 'உங்களுடைய ஆண்டாள் நடனத்தை நீங்களே மனம் விரும்பி, உணர்ச்சி மயமாகவும் பரிபூரணமாகவும் ஆடிய தினத்தைப் பற்றிய அநுபவத்தை நீங்கள் 'குத்துவிளக்கு' வாசகர்களுடன் பங்கிட்டுக் கொண்டு கூறமுடியுமா?' என்றாற் போல் பேட்டியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 'மஞ்சள்பட்டி சமஸ்தானத்தில் நவராத்திரியின் போது ஜமீந்தார் முன்னிலையில் ஆட நேர்ந்த சமயத்தில் தான் இவள் பரிபூரணமாக உணர்ந்து ஆடினாள்' என்று கண்ணாயிரமும் முத்தழகம்மாளும் இந்தக் கேள்விக்குத் தாங்களாகவே முந்திக் கொண்டு பதில் சொன்னார்கள். ஆனால் மோகினி இந்தப் பதிலை மறுத்து விட்டு, 'சித்திரா பௌர்ணமியன்று தமுக்கம் பொருட்காட்சியில் ஆடியபோது தான் நான் என்னை மறந்து இலயிப்போடு ஆண்டாளாகவே மாறி ஆடினேன். அதைப் போல் வேறெந்த தினத்திலும் பெருமிதமாக நான் ஆடியதில்லை' எனப் பதில் கூறினாள். இந்தப் பதில் அவளுடைய துணிவை நான் புரிந்து கொள்ளத் துணை செய்தது. கண்ணாயிரமும் முத்தழகம்மாளும் அவளைப் படுத்திய பாட்டில் பாதிப் பேட்டி நடந்து கொண்டிருந்த போதே அவள் அழுகையை அடக்க முடியாமல் தவித்ததை என் கண்களாலேயே பார்த்தேன். பேட்டி முடிந்ததும் அவள் அழுது கொண்டே எழுந்திருந்து மாடிக்குப் போனாள். இந்தக் கடிதத்தோடு நான் உனக்கு அனுப்பியிருக்கிற படங்களில் சிரித்துக் கொண்டிருக்கிற மோகினியைப் பார்த்தால் இதே படங்களைப் பிடித்து முடித்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் கண்கலங்கி அழுதிருக்க முடியும் என்பதைக் கூட நீ கற்பனை செய்ய முடியாது. ஆனால் வாய்விட்டுக் கதறியோ, அல்லது வாய்விட்டுக் கதற முடியாத மௌனத்துடனோ, அவள் சதா காலமும் எதற்காகவோ அழுது கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உண்மை. அவளுடைய முகத்தையும் கண்களையும் மிக அருகில் பார்க்கும் போது இரவிவர்மா வரைந்திருக்கிற கலைமகளின் தெய்வீகத் திருவுருவம் நினைவு வருகிறதடா சத்தியம். படத்தில் சிரித்துக் கொண்டிருப்பது போல் அவள் எப்போதாவது தப்பித் தவறிச் சிரித்தால் கூட அந்தச் சிரிப்பில் 'இலட்சுமிகரம்' நிறைந்திருக்கிறது.

திருமகளைச் சரண் புகுதல் என்ற தலைப்பிலே மகாகவி பாரதியார் எழுதியிருக்கும் கவிதையை நீ படித்திருப்பாயடா சத்தியம். அந்தக் கவிதையிலே திருமகள் எங்கெங்கே வாசம் செய்கிறாள் என்பதைச் சொல்லும் போது 'பரிசுத்தமான கன்னிப் பெண்களின் நகைப்பிலும் அவள் வாசம் செய்வதாக'ப் பாரதியார் பாடியிருக்கிறார். மோகினியின் சிரிப்பிலோ திருமகளும், கலைமகளும் சேர்ந்து வாசம் செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. 'மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன்' என்று கண்களில் நீர் நெகிழக் கதறிக் கொண்டே ஆடும் போது அவளைப் பார்த்தால் மெய் சிலிர்க்கிறது. அவளுடைய அம்மாவும் கண்ணாயிரமும் அவளை எப்படி எப்படியோ ஆட்டிப் படைக்க முயலுகிறார்கள். ஆண் மக்கட் காவல் இல்லாத இந்த மாதிரிக் குடும்பம் ஒன்றும், இதற்கு ஆலோசகராகக் கண்ணாயிரத்தைப் போல் ஒரு வரம்பில்லாத போலி மனிதனும் வாய்த்துவிட்டால் மேலே சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை. எந்த வகையிலாவது தன்னைப் பெரிய மனிதனாக நிரூபித்துக் கொண்டு சமூகத்தில் உலாவ வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் கண்ணாயிரம். மோகினியும் முத்தழகம்மாளும் தன் சொற்படி கேட்கிறவர் என்று பிறர் புரிந்து கொள்வதனால் கண்ணாயிரத்துக்குச் சில சௌகரியங்கள் இருந்து வருகின்றன. ஏழு எட்டு இடங்களுக்கு மோகினியோடும் முத்தழகம்மாளோடும் இப்படிப் போய்ப் பார்த்துப் பேசிச் சிரித்துவிட்டு வருவதனால் நாலைந்து இடங்களில் தன்னை ஞாபகம் வைத்துக் கொண்டாலும் கண்ணாயிரத்தின் விளம்பரத் தொழிலுக்கு அல்லது தொழில் விளம்பரத்துக்கு அது இலாபகரமான காரியம் தான். இந்த இலாபகரமான காரியத்துக்குத் தன்னையும் ஒரு கருவியாகக் கண்ணாயிரம் பயன்படுத்திக் கொள்ள முயலுவதும் அப்படிப் பயன்படுத்திக் கொள்வதற்கு அம்மா தெரிந்தும் தெரியாமலும் உடன்படுவதும் புரியப் புரிய மோகினி மனம் குமுறுகிறாள். ஆனால் கண்ணாயிரம் யாருடைய மனக்குமுறலைப் பற்றியும் எதற்காகவும் கவலைப்பட மாட்டான் என்பதை நான் அறிவேன். யார் யாரை எப்படி வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிந்தவன் கண்ணாயிரம். வெண்டைக்காய்ப் பொரியலையும் எலுமிச்சம் பழ ஊறுகாயையும் பற்றியே இருபத்து நான்கு மணி நேரமும் பேசிக் கொண்டு திரிகிற சாப்பாட்டுப் பிரியரான பெரிய மனிதரிடம் கண்ணாயிரம் அதைப் பற்றியே பேசுவான். அப்படிப்பட்டவருக்கு எப்போதாவது எதற்காகவாவது கடிதம் எழுதினால் கூட அந்தக் கடிதத்தில் எங்காவது ஓரிடத்தில் கீழ்க்காணும் வாக்கியத்தைக் கண்ணாயிரம் நிச்சயமாக எழுதியிருப்பான்.

'இரண்டு நாளைக்கு முன் நம் வீட்டில் வெண்டைக்காய்ப் பொரியல் வைத்திருந்தார்கள். நன்றாக வாய்த்திருந்தது. ஆனால், அதை ருசித்துச் சாப்பிடுவதற்கு நீங்கள் அருகில் இல்லையே என்று நான் வருந்திய வருத்தம் கொஞ்சம் நஞ்சமில்லை.'

கண்ணாயிரம் தானே ஒரு வீட்டுக்கு விருந்துச் சாப்பாடு சாப்பிடப் போய்விட்டுத் திரும்பி வந்த பின்பு அந்த வீட்டுக்குரியவருக்கு நன்றி தெரிவித்து எழுதுகிற கடிதமானால் அதில் மேல்படி வாக்கியம், 'சென்ற வாரம் உங்கள் வீட்டு விருந்துச் சாப்பாட்டில் பரிமாறிய வெண்டைக்காய்ப் பொரியலைப் போல் இந்தப் பிறவியில் இதுவரை வேறெங்கும் நான் சாப்பிட நேர்ந்ததில்லை; இனியும் நேரப் போவதில்லை' என்று மாறி அமைந்திருக்கும். யாரோடு பேசினாலும், யாருக்கு எழுதினாலும் அந்த விநாடி வரையிலும் அதற்கப்பாலும் அவர்களுக்காகவே தான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல் ஒரு பிரமையை உண்டாக்கி விடுவதில் கண்ணாயிரத்துக்கு நிகர் கண்ணாயிரம்தான்."

கடிதத்தின் இந்தப் பகுதியைப் படித்துக் கொண்டிருந்த போது, 'கண்ணாயிரத்தைப் போன்றவர்கள் நாலைந்து பேரோ அல்லது கண்ணாயிரத்திடமுள்ள தன்மைகள் உள்ள நாலைந்து பேரோ இல்லாத ஊர் எங்குமே கிடையாது போலிருக்கிறதடா குமரப்பன்! மல்லிகைப் பந்தல் கல்லூரியிலும் அந்த மாதிரி மனிதர்கள் சிலரை நான் சந்தித்து வருந்திக் கொண்டிருக்கிறேன்' என்று வாய்விட்டுக் கதற வேண்டும் போல் இருந்தது சத்தியமூர்த்திக்கு. வாழ்க்கையின் கண்ணெதிரே நடந்து போகிற நல்லவர் கெட்டவர்களைக் குமரப்பன் எவ்வளவு நன்றாகப் படித்து உணர்கிறான் என்றெண்ணி நண்பனை வியக்கவும் தோன்றியது அவனுக்கு. நண்பனுடைய கடிதத்தை ஒரு முறைக்கு இருமுறையாகப் படித்தபின் மோகினியின் புகைப்படங்களை மறுபடியும் பார்த்தான் அவன். அந்தப் படங்களில் அபிநயக் கோலத்தோடு அவள் சிரித்துக் கொண்டிருக்கிற சிரிப்பையும் பார்த்தான். அந்தச் சிரிப்பில் தெரிந்த இலட்சுமீகரத்தையும் தெரியாமல் மறைந்திருந்த சோகத்தையும் கூட அப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற அந்த அழகுப் பல்வரிசை அவன் நினைவில் நிறைந்தது. அதே கடிதத்தில் குமரப்பன் மேலும் எழுதியிருந்தான். "கண்ணாயிரத்தைப் போல் எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டுமென்ற நியாயத்தை மீறிய வேகத்துடன் ஓடி வருகிறவர்களுக்கு வாழ்க்கையின் எல்லா வழிகளும் தாராளமாகவும் எதிர்ப்பின்றியும் திறந்தே வைக்கப்பட்டிருக்கின்றன. மோகினியையும் உன்னையும் என்னையும் போல் நிதானமாக நடந்து வருகிறவர்களுக்கும் நியாயத்தையும் அதனால் வருகிற துன்பங்களையும் ஏற்றுக் கொண்டு செல்ல விரும்புகிறவர்களுக்கும் வாழ்க்கையின் எல்லா வழிகளிலும் ஏதாவதொரு தடை காத்துக் கொண்டிருக்கிறது. 'கார்ட்டூன் படத்தில் யாராவது ஒருவர் சிரிப்பதாக நான் வரைந்தேனானால் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்ற தோற்றம் முக்கியமில்லை! எதற்காக என்ன பாவனையில் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்ற குறிப்பு தான் முக்கியம்.' அதைப் போல மனிதன் வாழ்கிறான் என்பதை விட, எப்படி எதற்காக வாழ்கிறான் என்பதுதான் முக்கியம். ஆனால் கண்ணாயிரத்தைப் போன்றவர்கள் 'எதற்காக வாழ்கிறார்கள்?' என்ற கேள்வி தங்களைப் பற்றிப் பிறரிடம் எழுதுவதற்குக்கூட அவகாசம் கொடுக்காமல் அத்தனை வேகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆமை முயல் கதையில் 'ஸ்லோ அண்ட் ஸ்டடி வின்ஸ் தி ரேஸ்' (மெதுவாகவும், நியாயமாகவும் போய்ப் பந்தயத்தில் வெற்றியடையலாம்) என்று மூன்றாவது வகுப்பில் நீயும் நானும் படித்த நீதி போதனை இப்போது இந்த வயதுக்கும் இந்த நாள் அனுபவங்களுக்கும் ஏற்றாற் போல் புதிய தொனியுடன் எனக்கு இன்றும் ஞாபகம் வருகிறதடா சத்தியம். உலகத்தின் அநியாயங்களையும், பரபரப்பையும் பார்த்து நாம் பொறுமை இழந்து போகிற சமயங்களில் இந்த நீதிக் கதையின் மேலும் இதை எழுதியவன் மேலும் கோபம் கோபமாக வருகிறது. துன்பங்களால் பொறுமை இழந்து தவிக்கும் சில சமயங்களில் நீதி நூல்களையும், அற நூல்களையும் வாழ்க்கையில் நன்றாக ஏமாறிய அப்பாவிகள் ஒன்று சேர்ந்து கொண்டு எழுதி வைத்திருப்பார்களோ என்று கூடத் தோன்றி விடுகிறது. இப்படித் தோன்றுவது பாவமாயிருக்கலாம். ஆனாலும் 'இப்படி நினைப்பது பாவம்' என்ற எச்சரிக்கையோடு சேர்த்தே நாம் நினைக்கிற பாவங்கள் இல்லையா? அவற்றில் இதையும் ஒன்றாக வைத்து நமக்கு நாமே மன்னித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இப்போது நேரமில்லை. அவற்றை இன்னொரு கடிதத்தில் எழுதுகிறேன்" என்று முடித்திருந்தான் குமரப்பன்.

அந்தப் பெரிய கடிதத்தை இரண்டாம் முறையாகவும் மூன்றாம் முறையாகவும் படிக்கும் போது எல்லா இடங்களையும் படிக்காமல், முக்கியமான இடங்களை மட்டும் சத்தியமூர்த்தி திரும்பப் படித்திருந்தான். ஆனாலும் அன்று மாலை அவன் மனம் உணர்ந்து தவித்துத் தனிமையிலிருந்தும் சூனியத்திலிருந்தும் அவனை விடுதலை செய்திருந்தது அந்தக் கடிதம். கல்லூரியில் வார்டனும் சக ஆசிரியர்களும், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசப் பழகும் நிலையை நினைத்து மனம் வெந்து கொண்டே அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு அறைக்குத் திரும்பியிருந்தவனை அந்தக் கடிதம் வலிமையுள்ளவனாக்கியிருந்தது. கடிதத்தையும் அதனோடிருந்த புகைப்படங்களையும் அறைக்குள் மேஜை டிராயரில் கொண்டு போய் வைத்துவிட்டுப் பூட்டிக் கொண்டு சாப்பிடப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி.

மாலையும் இரவும் கலந்து மயங்குகிற அந்த வேளையில் மல்லிகைப் பந்தல் நகரத்தின் இதயம் போன்ற பகுதியாகிய 'லேக் சர்க்கில்' கலகலப்பாகவும் இருந்தது. கார்களின் ஹாரன் ஒலிகளும், பச்சையும் சிவப்புமாக மின்னி மறையும் விளக்கு ஒளிகளும், கூட்டம் கூட்டமாக ஆண்களும், பெண்களுமாய்ச் சிரித்துப் பேசிக் கொண்டு போகும் மனிதர்களின் குரல்களும், வானொலி இசையும், ஏரியில் படகுகள் நீரைக் கிழிக்கும் ஓசையுமாகச் சூழ்நிலையில் உயிரோட்டம் நிறைந்திருந்தது. சாலையில் இரு பக்கத்திலும் பாக்கு மரங்கள் பாளை வெடித்துப் பூத்துக் குலை தள்ளியிருந்தன போலும். அந்த வாசனை வீதியெல்லாம் நிறைந்து பெருமைப்படுத்திக் கொண்டிருந்தது. எப்படி எந்தச் சொற்களினால் வருணித்து முடிக்கலாமென்று நினைக்கவும் முடியாத மங்கலமான வாசனையாயிருந்தது அது. கோயில் மூலக்கிரகத்தின் புனிதமும் மல்லிகை பிச்சிப் பூக்களின் மயக்கும் தன்மையும், கஸ்தூரியின் கமகமப்பும் எல்லாம் சேர்ந்தாற் போன்று நறுமணமாயிருந்தது.

இந்த நறுமண வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்த போது சத்தியமூர்த்திக்கு வேறு ஒரு வாசனையும் ஞாபகம் வந்தது. மோகினியின் வீட்டில் மல்லிகைப் பூக்களும் அகிற்புகையும் மணத்துக் கொண்டிருந்த சாயங்கால வேளை ஒன்றில் அவளோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை நினைத்தான் அவன். வாசனைக்கும் மனிதனுடைய ஞாபகங்களுக்கும் ஏதோ ஒரு நுணுக்கமான தொடர்பு இருக்க வேண்டும் போலும். லேக் அவென்யூவின் தன்னுடைய மாடி அறையிலிருந்து சத்தியமூர்த்தி ஒவ்வொரு நாள் வைகறையிலும் படியிறங்கிக் கீழே வரும் போது 'ராயல் பேக்கரி' வாசலில் படரவிட்டிருக்கும் கொடி மல்லிகை பொல்லென்று பூத்துக் கொட்டியிருக்கும். காலை நேரத்தின் குளிர்ச்சி நீங்காத சூழலில் அந்தப் பூக்களின் வாசனையை நுகர்கிற முதல் மனிதனாக அதைக் கடந்து மேலே நடந்து தெருவுக்குள் போவதற்கு முன்பாகச் சத்தியமூர்த்தி ஒரு கணம் அந்த இடத்தில் தயங்கி நிற்பது வழக்கம்.

அந்த இடத்தில் நின்றால் நேர் எதிர்ப்பக்கம் வெள்ளி உருகி மின்னுகிறதோ என ஏரிக்கு அப்பால் தெரியும் மலை முகட்டில் ஓர் அருவி மலையே சிரித்துக் கொண்டிருப்பது போல் தோன்றும். அந்த அருவியைப் பார்த்து வியந்து கொண்டே 'மலை நகைத்தனைய வெள்ளருவி' என்று பாடப்பட்டிருக்கும் அழகிய இலக்கியத் தொடரையும் நினைத்துக் கொண்டு மேலே செல்வது அவன் வழக்கம். அந்தக் கொடி மல்லிகைப் பூக்களின் வாசனையில் தயங்கி நிற்கும் போது, சில வாரங்களுக்கு முன்பு சங்கீதம் விநாயகர் கோயில் தெருவின் அந்தச் சின்னஞ் சிறு வீட்டில் முருகன் படத்திலிருந்து தவறிக் கழுத்தில் விழுந்த மல்லிகைப் பூமாலையும் அந்த மாலையோடு மாலையாகச் சேர்த்துத் தோள்களைப் பற்றிய கைகளும் அவற்றின் நறுமணமும் சத்தியமூர்த்தியின் நினைவில் தோன்றி நிறைவது உண்டு. அந்தப் பூக்களின் வாசனையை நினைக்கும் போது அவனால் மோகினியையும் சேர்த்து நினைக்காமல் இருக்க முடியாது.

அன்றிரவு பாக்கு மரங்கள் பூத்து மணக்கும் வீதி வழியே இரவுச் சாப்பாட்டுக்காக உணவு விடுதிக்குச் சென்ற போதும், அதே வழியாகத் திரும்பி வந்த போதும், அவன் நினைவுகளை மோகினியே ஆண்டு கொண்டிருந்தாள். அறைக்குத் திரும்பியதும் மேஜை விளக்கைப் போட்டு டிராயரிலிருந்து அந்தப் புகைப்படங்களை எடுத்துப் பார்த்தான் அவன். நீலப்பட்டுப் போர்த்த மேஜை விளக்கின் அடங்கிய மெல்லொளியில் உயிருள்ள மோகினியே 'கலீவரின் யாத்திரையில்' வருகிற சிற்றுருவம் போலத் தத்ரூபமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

'மந்த மாருத நடையிற் - சிந்தும் நகையொடு சிவந்த இதழ்கள்' - என்ற நவநீத கவியின் பாடல் ஒன்று ஆரம்பமாகும். அந்தப் பாடலின் பெயர் 'கன்னிமைக் கனவுகள்' என்பது. அந்தப் பாடல் வரியையும் நினைத்துப் படத்தில் சிரித்துக் கொண்டிருக்கிற மோகினியையும் பார்த்தான் சத்தியமூர்த்தி. அந்த நிலையில் பதிலுக்குத் தானும் சிரிக்க வேண்டும் போலப் பாவித்துக் கொண்ட காரணத்தால் அப்போது அவன் இதழ்களும் அந்தப் படத்தை நோக்கி மலர்ந்தன. மறுநாள் காலையில் கல்லூரி வகுப்புக்களில் செய்ய வேண்டிய சொற்பொழிவுகளுக்காகச் சிந்தனை செய்தும் இரண்டொரு புத்தகங்களைப் படித்தும் சில குறிப்புக்கள் எடுக்க வேண்டியிருந்தது. இரவு எட்டரை மணியிலிருந்து ஒன்பதரை மணி வரை ஒரு மணி நேரம் அந்தக் காரியத்தைச் செய்துவிட்டுப் படுக்கச் சென்றான் சத்தியமூர்த்தி. அன்றென்னவோ அவனுடைய ஞாபகத்தில் மோகினியே இருந்தாள்.

சித்திரா பௌர்ணமியன்றே தான் பெருமிதமாக ஆண்டாள் நடனத்தை ஆடியதாகக் குத்துவிளக்கு பேட்டியில் அவள் மறுமொழி கூறினாள் என்று அறிந்ததும் சத்தியமூர்த்தி அவளுடைய அன்புக்காகப் பெருமிதப்பட்டான். சித்திரா பௌர்ணமியன்று நாட்டியம் முடிந்ததும் அவளோடு தனிமையில் பேசிக் கொண்டிருந்த பேச்சும் அவனுக்கு நினைவு வந்தது. அன்று அவன் எதைச் செய்தாலும் அவளுடைய நினைவிலேயே போய் முடிந்தது. எதைத் தொடங்கினாலும் அவளுடைய நினைவோடுதான் ஆரம்பமாயிற்று. குளிர்ந்த காற்றும் பாக்கு மரங்களின் பூத்த நறுமணமுமாக அறைக்குள் படுத்த சில விநாடிகளில் ஆழ்ந்து உறங்கிப் போயிருந்தான் சத்தியமூர்த்தி.

அன்றிரவு உறக்கத்தில் அவன் ஒரு கனவு கண்டான். உறங்குவதற்கு முந்திய ஞாபகங்களும், நினைவுகளும் பொருத்தமாகவும், பொருத்தமின்றியும் இணைந்தும், இணையாமலும் அந்தக் கனவாக விளைந்திருந்தது. எல்லாவிதத்திலும் அந்தக் கனவின் நிகழ்ச்சிகள் அபூர்வமாகவும், விளங்கிக் கொள்ள முடியாதனவாகவும் இருந்தன.

பிரம்மாண்டமான பெரிய பெரிய கட்டிடங்கள், வரிசை வரிசையாக அணிவகுத்திருக்கும் ஓர் அழகிய வீதி தெரிகிறது. அந்த வீதியின் நடுவே கிழிந்த சட்டையும் அழுக்கடைந்த வேட்டியுமாக அத்தகைய வீதியின் அழகுக்கும் செழிப்புக்கும் சிறிது கூடப் பொருத்தமில்லாத பிரகிருதியாகச் சத்தியமூர்த்தி நடந்து போய்க் கொண்டிருக்கிறான். அவனுடைய முகம் பொலிவிழந்து, தளர்ச்சியாகவும் சோர்ந்து தெரிகிறது. வாழ்க்கையில் நீதி நேர்மைகளுக்காகப் போராடிப் போராடிச் சலித்த சலிப்பு நடையில் தெரிகிறது. ஆனால் அந்தச் சலிப்பான வேளையிலும் அவனுடைய வலது கால் தான் நடப்பதற்கு முந்திக் கொண்டிருக்கிறது. அப்படி அவன் அந்த வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது நடுவழியில் ஒரு சம்பவம் நேரிடுகிறது. வீதியின் வலது சிறகில் உல்லாச மாளிகையாய்த் தெரியும் ஒரு பெரிய வீட்டின் பளபளப்பான சலவைக்கல் படிகளில் பாதசரங்களும், கொலுசுகளும், சலங்கையும் ஒலிக்க - ஒலிகளின் இனிமையெல்லாம் ஒன்றாகி நடந்து வருவது போல அவசர அவசரமாகப் படி இறங்கி ஓடி வந்து ஒரு பெண் மின்னலாய் எதிர் நின்று அவனை வழி மறிக்கிறாள். அவள் விடுபட்டு இறங்கி வந்த வீட்டிற்குள்ளிருந்து சகலவிதமான வாத்தியங்களின் இனிய ஒலிகளும் அவளைத் தேடி மீண்டும் அழைப்பது போல் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த ஒலிகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தன் இதயத்தில் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் வேறு ஓர் ஒலிக்கு மதிப்பு அளிக்கிறவளாய் அவனருகே வந்து நின்றாள் அவள். சிறிது நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் கண் கலங்கி நீர் மல்க நின்ற பின் அவள் கீழே குனிந்து, நெடுந்தூரத்து வழி நடையால் புழுதி படிந்து பொலிவும் நிறமுமற்றிருந்த அவனுடைய பாதங்களைத் தொட்டுத் தன் கண்களில் ஒத்திக் கொள்கிறாள்.

அந்த நிலையில் அவனுடையதோ பிச்சைக்காரனுக்கேற்ற பஞ்சைக் கோலமாக இருந்தது. அவளுடையதோ தெருவில் இறங்கி வந்து மண்ணின் மேல் நிற்கவே கூசும் அப்சரஸின் அழகு தோற்றமாயிருந்தது. எதிரே வந்து நிற்கிறவளை அவன் பார்க்கிற பார்வை விழித்த பின் கனவைப் பார்ப்பது போல் வேற்றுமையானதாக இருக்கிறது. அவளுடைய வணக்கத்தையும் அன்பையும் ஏற்றுக் கொள்ளத் தயங்கியவனாக மெல்லிய குரலில் அவன் சொல்கிறான்.

"என்னுடைய புழுதி படிந்த கால்கள் நீ தொழுவதற்குத் தகுதியற்றவை பெண்ணே!"

இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது தன்னுடைய சொல்லும் நாவும் குழறிப் போய்த் தடுமாறுகிறான் அவன். அவளோ பிடிவாதமாக அவனையே தொழுகிறாள்.

"ஐயா! அப்படிச் சொல்லாதீர்கள். இந்தக் கால்களில் வந்து படிந்திருப்பதினாலேயே தூசிக்கும் கூடத் தொழத் தகுந்த மதிப்பு ஏற்படுகிறது" என்று கண்களில் நீர் நெகிழ அவன் கால்களில் வீழ்ந்து கதறுகிறாள் அவள்.

"இந்த ஏழையைத் தொழுவதனால் ஒரு பயனுமில்லை" என்று தன்னை விடுவித்துக் கொண்டு மேலே நடக்க முயல்கிறான் அவன்.

"ஆதரவற்றதெல்லாம் ஏழை தான்! அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை" என்கிறாள் அவள்.

"உன்னுடைய இந்த அன்பு எனக்குப் பூட்டும் விலை மதிப்பற்ற விலங்காக இருக்கிறது பெண்ணே! இந்த விலங்கைக் கழற்றினாலும் எனக்கு வேதனை; கழற்ற முடியாவிட்டாலும் வேதனை" என்று அவன் பதிலுக்குக் கதறுகிறான்.

இவ்வளவில் அவன் கனவு அரைகுறையாகக் கலைந்து போய் விடுகிறது. சரியாக இந்தக் கனவு தொடங்கிக் கலைந்து சத்தியமூர்த்திக்கு விழிப்பு வந்தபோது விடியற்காலை ஐந்து மணிக்கு மேலாகியிருந்தது. விழித்து எழுந்த பின் நீராடுவதற்காகக் குளியலறைக்குள் புகுந்த போதும், உடை மாற்றிக் கொண்டு தலை சீவுவதற்காகக் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்ட போதும் அவன் மோகினியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். மாடியிலிருந்து காப்பி அருந்தி வருவதற்காகக் கீழே படி இறங்கிய போது, எதிரே தெரிந்த அருவியும், அங்கே பூத்து மலர்ந்திருந்த மல்லிகையும் சேர்ந்து அவன் நினைப்பை ஆண்டன! 'கால் நடையினிலே உந்தன் காதல் தெரியுதடீ' என்று முணுமுணுத்தபடி மெல்ல மேலே நடந்தான் சத்தியமூர்த்தி.

அத்தியாயம் - 27

நியாயமான இரக்கமும் கருணையும் வசதியில்லாத ஏழைகளிடம் இருக்கின்றன. ஆனால் ஏழைகளுக்கு இரக்கமும் கருணையும் படுவதற்குக் கூடத் தகுதியில்லை என்பது போல் சமூகத்தில் உள்ள போலிப் பெரிய மனிதர்கள் நினைக்கிறார்கள்.

இரவோடு இரவாகக் காரில் நாட்டரசன் கோட்டையிலிருந்து மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். கலியாண வீட்டில் பணம் வாங்கிக் கொள்ள மறுத்து ஆத்திரமாக வெளியேறியிருந்த காரணத்தினால் காரில் திரும்பி வரும்போது கண்ணாயிரமும் அம்மாவும் மோகினியிடம் மிகவும் கடுகடுப்போடு இருந்தார்கள். "மரியாதைக் குறைவாக நாலு பேருக்கு முன்னாலே எடுத்தெறிஞ்சி பேசிப்பிட்டு விறுவிறுவென்று நடந்து போய்க் காரிலே உட்கார்ந்திட்டா மட்டும் போதுமாடீ? கொஞ்சம் புத்தியும் வேணும். நீ இப்படிச் செய்திட்டதாலே அவங்களுக்கு ஒண்ணும் பெருமை கொறைஞ்சிடப் போறதில்லை. உன்னையெத்தான் அடங்காப்பிடாரி, முரண்டு பிடிச்சவ, அப்படி இப்படியின்னு வாயிலே வந்தபடி பேசுவாங்க" என்று காரில் ஏறியதும் ஒரு பாட்டம் வைது தீர்ந்திருந்தாள் முத்தழகம்மாள். அம்மாவும் கண்ணாயிரமும் பின் தங்கியிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வந்திருப்பார்கள் என்பது மோகினிக்குத் தெரியும். ஆனாலும் தாங்கள் சொல்லியபடி கேட்கவில்லை என்பதே அவர்கள் கோபத்துக்குக் காரணம் என்பது அவளுக்குப் புரிந்தது. அவர்களுடைய கோபத்தை அவள் சிறிதும் பொருட்படுத்தவில்லையாயினும், வேறு பல நினைவுகளால் உள்ளூர மனம் வெந்து கொண்டிருந்தாள் அவள். நாளுக்கு நாள் வாழ்க்கையே சாரமற்றுப் போய்க் கொண்டிருப்பது போல் தோன்றியது. அமைதியான இந்த இரவு நேரத்தில் நிலா ஒளியின் கீழ்க் காரில் எல்லோரோடும் சேர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த போதே மனத்தின் நினைவுகளால் அந்த எல்லாருடைய வழியிலிருந்தும் பிரிந்து வேறு ஒரு வழியில் போய்க் கொண்டிருந்தாள் அவள். வெளிப்படையாகத் தெரிந்தோ, தெரியாமலோ கண்ணாயிரமும் அம்மாவும் தன்னைச் சிறிது சிறிதாக வியாபாரப் பொருளாக்கிக் கொண்டு வருவதை அவள் உணர்ந்து மனம் கொதித்தாள். இப்போது காரில் முகத்தையும் மனத்தையும் கடுமையாக வைத்துக் கொண்டு அம்மா மௌனமாக வருகிறாளே இந்த மௌனத்திற்கு விளைவு என்னவாக இருக்கும் என்பதும் மோகினிக்குப் புரிந்தது. வீட்டுக்குத் திரும்பியதும் தன்னை வாயில் வந்தபடி பேசிக் கடுமையாக நடந்து கொள்ளப் போவதற்கு அம்மாவின் இந்த மௌனம் ஒரு முன் குறிப்பு என்பது அவளுக்குப் பழகிய உண்மைதான். அம்மாவின் ஈவு இரக்கமற்ற சிந்தனையில் அவள் முதலில் அடிமை, அப்புறம் தான் மகள். இப்போதுதான் சிறிது காலமாக அம்மா அவளைத் தொட்டு அடிப்பதில்லை. முன்பெல்லாம் கோபம் அளவுக்கு மீறிப் போயிருக்கிற சில சமயங்களில் தலையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளி அறைகிற அளவுக்கு அம்மாவின் கொடுமை எல்லை மீறிப் போயிருக்கிறது. இந்தக் கொடுமைகளில் இருந்தெல்லாம் விடுபடுவதற்கு ஒரே வழி சாவு தான் என்று தீர்மானம் செய்து கொண்டு சாக முயன்றும் முடியாமல் பிழைத்திருக்கிறாள் அவள். பட்ட துயரங்களையும் இனிமேல் படவேண்டிய துயரங்களையும் நினைத்த போது அழுகை குமுறிக் கொண்டு வந்தது.

கார் போய்க் கொண்டிருந்த சாலையின் இருபுறமும் வறண்ட செம்மண் மேடுகளாயிருந்தும் அந்த நிலவொளியில் அவைகளும் கூட அழகாகத்தான் தோன்றின. சாலை மேல் நடுநடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறுக்கிட்ட செழிப்பில்லாத கிராமங்கள் அரவமின்றி உறங்கிப் போயிருந்தன. சாலையும் சாலையின் இருபுறமும் செழிப்பும் பசுமையும் இல்லாமல் ஆனால் நிலவொளியால் வெளிப்பார்வைக்குச் செழிப்பும், பசுமையும் உள்ளது போல் மயக்கிக் கொண்டு அவளுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அப்படி இருந்தது. முன்ஸீட்டில் டிரைவருக்கு அருகில் அமர்ந்து அவன் தூங்கி விடாமல் இருப்பதற்காகப் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வந்தார் கண்ணாயிரம். அம்மா அரைகுறை தூக்கத்தில் இருந்தாள். மோகினி இரைந்து அழப் பயந்து மௌனமாக அழுது கொண்டிருந்தாள். கார் போய்க் கொண்டிருந்த வேகத்தில் காற்று சில்லென்று முகத்தில் வந்து மோதியது. கூந்தல் முன் நெற்றியில் சரிந்து புரண்டது. இருந்தாற் போல் இருந்து காரின் வேகம் குறைந்து சாலையில் ஒரு பக்கமாகச் சாய்ந்து கொண்டு போயிற்று. கடைசியில் ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டு நின்றது. "டயரில் லாடம் அடித்துப் பஞ்சர்' ஆகிவிட்டதுங்க" என்று கீழே இறங்கி டயரைத் தொட்டுப் பார்த்துவிட்டுச் சொன்னான் டிரைவர். கண்ணாயிரமும் கீழே இறங்கினார். அம்மா விழித்துக் கொண்டு "என்ன ஆச்சு? ஏன் நிற்கிறாங்க..." என்று விசாரித்தாள். "டயர் பஞ்சராகிப் போச்சாம்" என்று பதில் சொல்லிக் கொண்டே மோகினியும் கீழே இறங்கினாள்.

அந்த இடத்தில் சாலையின் மேல் கார் நின்று போன பகுதியை ஒட்டி ஒரு சிறிய ஊருணியும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களும் நடுவாக ஒரு குடிசையும் தெரிந்தன. குடிசை வாயிலில் தென்னை மரக் கீற்றோரம் கதிர் விரிக்கும் அழகிய நிலாவின் கீழ் நார்க் கட்டிலில் ஓர் இளம் பருவத்துக் குடியானப் பெண்ணும் இளைஞனும் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். டயர் பஞ்சராகிக் கார் நின்று போய் விட்டதைப் பார்த்து அந்தப் பெண்ணும் இளைஞனும் எழுந்திருந்து சாலையோரமாக வந்தனர். காரையும் மோகினியையும், அவள் அம்மாவையும் ஏதோ ஒரு பெரிய ஆச்சர்யங்களைப் பார்ப்பது போல் பார்த்தார்கள் அவர்கள்.

"அத்தான்! யாரோ சினிமாக்காரங்க போலிருக்கு... அந்தப் பெண்ணைப் பாரு... ரதியாட்டமிருக்கு..."

"சும்மானாச்சும் காது குத்தாதேம்மே! உன்னைக் காட்டியுமா அவ அழகுங்கிறே?"

அவர்கள் தங்களுக்குள் மிக மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தும் இந்த உரையாடலை மோகினியும் கேட்க நேர்ந்தது. தான் அழகு என்று அந்தப் பெண் தன்னைப் புகழ்ந்ததையும், தன்னை விட அவளே அழகு என்று... அவளுடைய அரும்பு மீசைக் கட்டுக்குடுமி கட்டழகனான அத்தான் அவளைப் புகழ்ந்ததையும் கேட்டுத் தன்னுடைய வேதனைகளையும் மறந்து சிரிக்கத் தோன்றியது மோகினிக்கு. நெடுந்தூரம் ஆள் நடமாட்டமில்லாத அந்தப் பொட்டல் காட்டில் வாழ்க்கையின் சுகங்களுக்குப் பிரதிநிதிகளைப் போல் அந்தக் குடிசை வாசலில் அவர்கள் தோன்றினார்கள்.

குடிசைக்கு முன்னால் இன்னொரு பக்கமாக ஒரு வேப்ப மரத்தடியில் உட்காருவதற்கு வசதியான சதுரக் கல் ஒன்றிருந்தது. மோகினியிடம் ஒன்றும் சொல்லிக் கொள்ளாமலும் அவளையும் உடன் வருமாறு கூப்பிடாமலும் வேகமாக நடந்து போய் அந்தக் கல்லில் உட்கார்ந்து கொண்டாள் முத்தழகம்மாள். அம்மா வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போன வேகத்திலிருந்தே அவளுடைய கோபம் சிறிது கூடத் தணியவில்லை என்பதை மோகினி புரிந்து கொள்ள முடிந்தது. கண்ணாயிரமும், டிரைவரும் ஜாக்கி கொடுத்துப் பஞ்சரான டயரைக் கழட்டி 'ஸ்டெப்னி' மாட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். கீழே இறங்கி நின்ற இடத்தை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்த மோகினியை நோக்கி, "நீங்களும் போய் உட்காரும்மா... ஸ்டெப்னி மாட்டியானதும் கூப்பிடறேன்" என்று கார் டிரைவர் கூறினார். அம்மாவுக்கும் கண்ணாயிரத்துக்கும் இல்லாத கருணை காரோட்டும் ஊழியனான அந்த ஏழையிடம் இருந்தது. அந்தச் சின்னஞ்சிறு கருணையைக் கூடக் கண்ணாயிரத்தினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

"அவங்களுக்கு உட்காரத் தெரியும். நீ உன் வேலையைக் கவனி..." என்று கண்ணாயிரம் அவனிடம் கூறினார். நியாயமான இரக்கமும் கருணையும் வசதியில்லாத ஏழைகளிடம் இருக்கின்றன. ஆனால், ஏழைகளுக்கு இரக்கமும் கருணையும் படுவதற்குக் கூடத் தகுதியில்லை என்பது போல் சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்கள் நினைக்கிறார்கள். தன்னிடம் கருணையோடு இரண்டு வார்த்தை பேசியதற்காகவே கண்ணாயிரம் அந்தக் காரோட்டும் ஊழியனிடம் அவ்வளவு எரிந்து விழுவதைப் பார்த்தபோது அதிலிருந்தே அவருடைய சுய ரூபத்தை மோகினியால் புரிந்து கொள்ள முடிந்தது. கண்ணாயிரத்தின் திருக்கல்யாண குணங்களைப் பற்றி அவள் புதிதாகப் புரிந்து கொள்வதற்கு ஒன்றும் மீதமில்லை என்றாலும் அவ்வப்போது தன்னைப் பற்றி அவள் சிந்தனை செய்வதற்கு நிறைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தார் கண்ணாயிரம். ஆனாலும் பொது இடங்களிலும் நாலு பேர் கூடி நின்று பேசும் போதும் அவரைப் போன்ற போலி மனிதர்கள் எல்லாருடைய கவனத்தையும் கவர்வது போல், நல்லவர்களால் கூடக் கவரமுடியாது.

மோகினிக்கு அவர் மேல் இவ்வளவு வெறுப்பும் கசப்பும் இருப்பதெல்லாம் உலகத்துக்குத் தெரியாது. மோகினியும் முத்தழகம்மாளும் அவரை வழிகாட்டியாகக் கொண்டு, அவர் சொல்கிற இடத்தில் நாட்டியமாடி, அவர் வேண்டாமென்று மறுக்கிற இடத்தில் ஆட ஒப்புக் கொள்ளாமல் வாழ்வதாக உலகத்தை மயக்கி வைத்திருந்தார் கண்ணாயிரம். அவருடைய வாழ்க்கைத் தத்துவமே தனியானது. தனி வாழ்க்கையில் அவர் கெட்டவராக இருந்தாலும், பொது வாழ்க்கை அவரை நல்லவராகவும், பிரமுகராகவும் ஒப்புக் கொண்டிருந்தது. எதிரே நின்று பேசுகிற மனிதரிடமிருந்து எந்த விதமான குரல் ஒலிக்கிறதோ அந்தக் குரலை அப்படியே எதிரொலித்து அவரோடு ஒட்டிக் கொண்டு பழக முயல்வது கண்ணாயிரத்துக்குக் கைவந்த பழக்கம். ஒவ்வொரு துறையிலும் அவர் பழகுகிற மனிதர்களும் பழக்க வழக்கங்களும் எல்லாம் இப்படித்தான்.

'நீங்கள் சொல்றாப்பிலே' என்ற வார்த்தைகளை நாலு தரம் எதிரே இருப்பவரிடம் குழைந்து சொல்லி அவர் சொல்கிற ஒவ்வொன்றையும் தாம் கர்மசிரத்தையாகக் கவனித்து மனத்தில் வைத்துக் கொள்வதைப் போல் நடித்து விட்டாரானால் அப்புறம் அந்த மனிதன் கண்ணாயிரத்தின் வலையில் சுருண்டு விழுவதற்குக் கேட்பானேன்? எதிராளி ஒன்றுமே சொல்லாவிட்டாலும் அவர் எல்லாவற்றைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருப்பது போல் பாவித்துக் கொண்டு, 'நீங்க சொல்றாப்பலே' என்று நடுநடுவே தழுவிக் கொண்டு பேசுவது ஒருவகை சாமார்த்தியம். அந்தச் சாமார்த்தியம் கண்ணாயிரத்திடம் தாராளமாக இருந்தது. அரசியலைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறவரிடம் கண்ணாயிரமும் அதைப் பற்றியே அளந்து விடுவார். சினிமா, நாடகம், சங்கீதம் போன்ற கலைகளைப் பற்றியே பேசுபவர்களிடம் அவைகளைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பவரைப் போல் பேசுவார். கண்ணாயிரம் சாப்பாட்டில் வெஜிடேரியனா, நாண்-வெஜிடேரியனா என்று பலருக்கு நிரந்தரமாக ஒரு சந்தேகம் உண்டு. இந்தப் பெரிய சந்தேகத்தை மிகவும் சுலபமாகத் தீர்த்து வைக்க முடியும். அவர் வெஜிடேரியன்களுக்கு நடுவில் வெஜிடேரியன். நாண்-வெஜிடேரியன்களுக்கு நடுவில் நாண்-வெஜிடேரியன். இன்னும் அந்தரங்கமாகவும் உண்மையாகவும் சொல்லப் புகுந்தால் மனிதர்களையே கடித்துச் சாப்பிட நினைக்கும் அளவுக்குப் பயங்கரமான 'நாண்-வெஜிடேரியன்' அவர்.

கண்ணாயிரத்தைப் போன்ற மனிதர்களைச் சமூக வாழ்க்கையிலிருந்தே நீக்கிச் சாய்த்து வீழ்த்திவிட வேண்டுமென்று பலர் நினைக்கலாம். ஆனால், கண்ணாயிரம் நிச்சயமாக வீழ்ச்சி அடைய மாட்டார். ஒரு பக்கமாகச் சாய்ந்து விட்டால் இன்னொரு பக்கமாக நிமிர்ந்து கொண்டு வாழக்கூடிய வல்லமை அவருக்கு உண்டு. அவர் தஞ்சாவூர்ப் பொம்மையைப் போன்றவர். எந்தப் பக்கம் சாய்ந்து விட்டாலும் நிமிர்ந்து நின்றுவிடும் வலிமை உள்ளவரை எத்தனை முறை எப்படி வீழ்த்தினாலும் பயனில்லைதான். அந்த வெட்ட வெளியில் நடுச்சாலையில் நடு இரவில் கண்ணாயிரம் நிமிர்ந்து நின்று கொண்டு கார் டிரைவரை வேலை வாங்கிய போது மோகினி இப்படி நினைத்தாள்.

அந்தக் கிராமத்துப் பெண்ணும் அவளுடைய அத்தானும் மோகினியைக் குடிசை வாசலுக்கு வந்து கட்டிலில் உட்காரும்படி பரிவோடு அழைத்தார்கள். "எவ்வளவு நேரம் தான் இப்பிடி நின்னுகிட்டிருக்கப் போறீங்கம்மா? வந்து உட்காருங்களேன். காலாறக் கொஞ்ச நேரம் இருந்திட்டுப் பெறவு போகலாம்..." என்று அருகில் வந்து கையைப் பிடித்து இழுக்காத குறையாய்க் கெஞ்சினாள் அந்தப் பெண். கட்டுக் குலையாத உடம்பும், வெற்றிலைக் காவி ஏறிய இதழ்களும், கோணல் சொருகுக் கொண்டையுமாக அந்தக் கிராமத்துப் பெண் மிகவும் அழகாகத்தான் இருந்தாள். அவளுடைய அத்தானோ கட்டுக் குடுமியும் காதில் சிவப்புக்கல் கடுக்கனும் வாயில் புன்னகையுமாக ஆண் பிள்ளைச் சிங்கம் போல் அருகில் நின்று கொண்டிருந்தான். 'இவளுக்கு நான் காவல், இவள் என்னுடையவள்' என்ற பெருமிதத்தோடும் ஆண்மையோடும் அவளுடைய அத்தான் அவளருகே நிற்பது போல் தோன்றியது. அதே போல் சத்தியமூர்த்தி தன்னருகே வந்து நிமிர்ந்து நிற்க வேண்டும் போல அவள் தன் மனத்துள் அந்தரங்கமாகக் கற்பித்துக் கொண்டு மகிழ்ந்தாள். அந்தக் கற்பனையால் மகிழ்ச்சியும் அது கற்பனை தான் என்பதால் ஏக்கமும் அவளைத் தாக்கின. குடிசை வாசல் கட்டிலில் வந்து உட்காரும்படி அந்தப் பெண் இரண்டு மூன்று முறை மோகினியை அழைத்தும் அவள் அதற்குச் செவி சாய்க்கவில்லை.

"நீ ஏனம்மா வேலை மெனக்கெட்டுத் தொண்டைத் தண்ணீ வத்துறே? இந்தக் குடிசையிலே நார்க்கட்டில்லே வந்து உட்காரச் சொல்லி அவுகளை நாம கூப்பிடலாமா?" என்று தன்னுடைய மௌனத்தை அலட்சியமாகப் புரிந்து கொண்ட அவளுடைய அத்தான் அவளைக் கண்டிப்பது போல் கோபிப்பதையும் மோகினி கவனித்தாள். அதற்கு மேலும் அவர்களுடைய பொறுமையைச் சோதிக்க விரும்பாதவளாய் அந்தப் பெண்ணோடு நடந்து போய் நார்க்கட்டிலில் உட்கார்ந்தாள் மோகினி. மோகினியுடன் அவளுக்கு இணையாகக் கட்டிலில் உட்காருவது மரியாதைக் குறைவு என்று கருதியவளைப் போல் அந்தக் கிராமத்துப் பெண் மோகினிக்கு எதிரே அவள் காலடியில் தரையில் உட்கார்ந்திருந்தாள். மேலே வந்து தன்னோடு கட்டிலில் உட்காரும்படி மோகினி எவ்வளவோ வற்புறுத்தியும் அந்தப் பெண் கேட்கவில்லை. 'மனிதர்களுக்கு விட்டுக் கொடுத்து மரியாதை செய்வதில் தான் இந்த நாட்டுப்புறத்து மக்களுக்கு எவ்வளவு பெருந்தன்மை?' என்றெண்ணித் தன் மனத்துக்குள் அவளை வியந்தாள் மோகினி.

"தாகத்துக்கு எதுனாச்சும் மோர்-தண்ணீர் கொண்டாந்து தரட்டுமா அம்மா?" என்று மோகினியை ஆவலோடு விசாரித்தாள் அந்தப் பெண். மோகினிக்குத் தாகமாக இருக்கவே, "தண்ணீர் இருந்தால் போதும்" என்றாள் அவள். உடனே அந்தப் பெண் உள்ளே எழுந்து போய்த் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். அந்தப் பெண் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த பழைய காலத்து வெண்கலச் செம்பு இடியாகக் கனத்தது. அந்தத் தண்ணீர் செம்பைப் போலவே வாழ்க்கையின் பண்புகள் அங்கே இந்த நாட்டுப்புறத்தில் கனமாகவும் அழுத்தமாகவும் இருப்பதுபோல் தோன்றியது அவளுக்கு. "நீங்க பயாஸ்கோப்பிலே 'ஆக்ட்' பண்ணுறீங்களா அம்மா?" என்று தண்ணீர்ச் செம்பைத் திருப்பி வாங்கிக் கொண்டே மோகினியைக் கேட்டாள் அந்தப் பெண். 'வாழ்க்கையே நடிப்பாகத்தான் இருக்கு. இன்னும் அது ஒன்று தான் குறை' என்று அந்தப் பெண்ணுக்கு மறுமொழி கூற நினைத்து அப்படிக் கூறுவதனால் ஒரு வேளை அந்தப் பெண்ணின் மனம் புண்படலாமோ என்று தயங்கியவளாய் 'இல்லை' என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தாள் மோகினி. அந்தப் பெண் தண்ணீர்ச் செம்போடு குடிசையின் உள்ளே நுழையவும் தொலைவில் தயங்கி நின்று கொண்டிருந்த அவளுடைய அத்தானும் பின் தொடர்ந்து வந்து அவளோடு உள்ளே சென்றான். அடுத்த சில விநாடிகளில் உள்ளேயிருந்து மெல்லிய பேச்சுக் குரல்களும் சிங்காரச் சிரிப்பொலிகளும் மாறி மாறி ஒலித்தன. கால் நாழிகைக்கெல்லாம் அந்தப் பெண் வெளியே வந்த போது அவள் மேல் எதற்காகவோ தான் பொறாமைப்பட வேண்டும் போலிருந்தது மோகினிக்கு. அந்தப் பொறாமையை அவளால் தவிர்க்கவும் முடியவில்லை.

"ஊருணிக் கரையிலே அத்தான் வெள்ளரித் தோட்டம் போட்டிருக்காங்க. நல்ல பிஞ்சா ஒரு கூடை பறிச்சுத் தரேங்கிறாங்க. ஊருக்குக் கொண்டு போங்களேன்" என்று மோகினியை உபசாரம் செய்தாள் அந்தப் பெண். 'எதற்கு வீண் சிரமம்? வேண்டாம்' என்று மோகினி மறுத்தும் அவளுடைய அத்தானும் அவளும் கேட்கவில்லை. அந்த நிலாவில் அவளிடம் கொடுத்தனுப்புவதற்கு வெள்ளரிப் பிஞ்சு பறித்துக் கொண்டு வருவதற்காகக் கூடையை எடுத்துக் கொண்டு ஊருணிக் கரையை நோக்கி நடந்தான் அவளுடைய அத்தான். காரில் அம்மாவும் கண்ணாயிரமும் கலியாண வீட்டிலிருந்து வாங்கிக் கொண்டு வந்த ஆப்பிள் பழங்கள் ஒரு கூடையில் நிறைந்து கிடந்தன. மோகினி அவசரம் அவசரமாக எழுந்திருந்து போய் அந்தக் கூடையிலிருந்து நாலைந்து ஆப்பிள் பழங்களை எடுத்துக் கொண்டு வந்து அந்தக் கிராமத்துப் பெண்ணிடம் கொடுத்தாள். இவற்றை வாங்கிக் கொண்டு அவள் மோகினியிடம் கேட்டாள்: "இதென்ன பழம் அம்மா? நாங்க இதைப் பார்த்ததேயில்லை?"

"இதோ, இதை ஆப்பிள்ம்பாங்க. நல்ல சத்துள்ள பழம், விலை அதிகம்."

"அப்படிங்களா? கடிச்சித் தின்னா வெள்ளரிப் பிஞ்சைக் காட்டிலும் நல்லாவா இருக்கும்?" என்று அந்தப் பேதைப் பெண் வினவிய போது மோகினிக்குச் சிரிப்பு வந்து விட்டது. வெள்ளரிப் பிஞ்சை விட அதிகமான சுவையுள்ள பண்டமும் உலகில் இருக்க முடியுமா என்ற சந்தேகத்தோடு கேட்கப்படுவது போல் இருந்தது அவளுடைய கேள்வி. அந்தக் கேள்வியிலிருந்த பேதமையின் அழகை இரசித்துக் கொண்டே மோகினி அவளுக்கு மறுமொழி கூறினாள்: "உங்கள் வெள்ளரிப் பிஞ்சை ஒரு கூடை எட்டணாவுக்கு வாங்கிவிடலாம். இந்த ஆப்பிள் பழம் ஒரு ரூபாயிலிருந்து ஒன்றரை ரூபாய் வரை ஆகுமே...?"

"அம்மாடீ இதென்ன சீமையிலே இல்லாத விலையாயில்லே இருக்கும் போலேயிருக்கு? ரொம்பப் 'பணக்காரப் பழம்'னு சொல்லுங்க..." என்று அந்தப் பட்டிக்காட்டுப் பெண் பாதி வேடிக்கையாகவும் பாதி பிரமிப்பாகவும் ஆப்பிளுக்குப் பணக்காரப் பழம் என்று பேர் வைத்ததைக் கேட்டுத் தன்னுடைய கவலைகளையெல்லாம் மறந்து மோகினி வாய்விட்டுச் சிரித்தாள். அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணையும் அவளுடைய பட்டிக்காட்டு அத்தானையும் அவர்கள் வசிக்கும் மகிழ்ச்சி நிறைந்த அந்தக் குடிசையையும், அதனருகிலிருந்த ஊருணியையும் தென்னை மரங்களையும், இந்த உலகத்தின் குழப்பமில்லாத எளிய சந்தோஷங்களுக்குச் சின்னங்களாகக் கற்பித்துக் கொண்டு பார்ப்பது போல் பார்த்து ஏக்கத்தோடு பெருமூச்சு விட்டாள் மோகினி. மேடைகளில் நாட்டியமாடிப் பணத்தையும் புகழையும் சம்பாதித்துக் கொண்டு வாழ்க்கையின் நியாயமான உரிமைகளையோ, சுகங்களையோ கூடச் சம்பாதிக்க முடியாமல் வேதனைப்படும் தன்னை விட வெள்ளரித் தோட்டத்து அத்தானுக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்க்கையைத் தவிர வேறு புகழ், பெருமைகளுக்கு ஆசைப்படாத அந்தப் பட்டிக்காட்டுப் பெண் எவ்வளவோ பாக்கியசாலி என்று தோன்றியது அவளுக்கு. அவளுடைய அத்தானின் கண்களுக்கு அவளைத் தவிர வேறெந்தப் பெண்களும் அழகாகத் தோன்றவில்லை. அவள் பாக்கியசாலி என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்? அந்தப் பட்டிக்காட்டுத் தம்பதிகள் தங்களுடைய சின்னஞ்சிறு குடிசைக்குள் கலகலப்பாகச் சிரித்துப் பேசும்போது அந்தக் குடிசையைத் தவிர அதற்கு அப்பாலிருக்கும் பரந்த உலகில் வேறெங்கும், வேறெதிலும், இத்தனை திருப்தியும் இத்தனை நிம்மதியும் இருக்க முடியாது என்பதைப் போல் அத்தனை திருப்தியாகவும் நிம்மதியாகவும் சிரிக்கிறார்கள், மகிழ்கிறார்கள், வாழ்கிறார்கள்.

சமூக வாழ்க்கையில் கண்ணாயிரத்தை விடச் சிறந்த ஆண்மகன் இந்த வெள்ளரித் தோட்டத்து அத்தானாகத் தான் இருக்க முடியும். ஏனென்றால் இவன் யாரையும் ஏமாற்றி வாழ விரும்புவதில்லை. எவரையும் சார்ந்து நின்று வாழவும் விரும்புவதில்லை. தன் கையால் தனக்காக உழைத்து வாழுகிறான் இவன். தன்னுடைய புகழுக்கும் பழிக்கும் நானே காரணமாக இருக்க வேண்டுமென்ற எச்சரிக்கையும், தன்னம்பிக்கையும், இவனுக்கு இருக்கின்றன. இவனுடைய மனைவி அதிக விலை கொடுத்துப் பெருமையோடு வாங்கித் தின்கிற ஆப்பிள் பழத்தை விட, ஊருணிக்கரை மேட்டில் காய்கிற வெள்ளரிப் பிஞ்சில் சிறப்பாகச் சுவை கண்டிருக்கிறாள். வாழ்க்கையில் இவர்களைப் போல் கொடுத்து வைத்தவர்கள் வேறெவர் இருக்க முடியும் என்றெண்ணிக் கொண்டே எதிரில் நின்ற அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை உற்றுப் பார்த்தாள் மோகினி. அந்தப் பெண் வெட்கத்தோடு தலைசாய்த்துச் சிரித்துக் கொண்டே மோகினியை நோக்கிக் கேட்டாள்.

"என்னம்மா! என்னையே அப்படிப் பார்க்கிறீங்க...?"

"ஒன்றுமில்லை! இந்த இடத்தில் உங்களுடைய குடிசை ஒன்று மட்டும் தானா? வேறு வீடுகளே இல்லையா?" என்று சம்பந்தமில்லாமல் அவளிடம் வேறு எதையோ கேட்டுப் பேச்சை மாற்றினாள் மோகினி.

"நாங்க மட்டும் தான் தனியா இந்தக் குடிசையிலே இருக்கோம். நாங்களும் வெள்ளரித் தோட்டக் காவலுக்காக நாலு மாதம் இங்கே இருப்போம். அப்புறம் ஊருக்குள்ளாரப் போயிடுவோம். தோட்டம்னு போட்டுட்டா பாதை மேலே வரவங்க, போறவங்களுக்கெல்லாம் கூடத் திருடனுமின்னு ஆசை வருது. பகலிலேதான் திருடறாங்கன்னு பார்த்தால், இராத்திரி இரண்டு மைலுக்கு அப்பாலே இருக்கிற டூரிங் பயாஸ்கோப் ரெண்டாவது ஆட்டம் விட்டுத் திரும்பி வர்ர சனங்க வெள்ளரித் தோட்டத்திலே புகுந்து கைவைக்க ஆரம்பிக்கிறாங்க. அதுக்காக ராவுலேயும் காவல் இருக்க வேண்டியிருக்கு. தோட்டம் பட்டுப்போய்க் காய்ப்பு நின்னப்புறம் கிராமத்துக்குள்ளே போயிடுவோம். அதுவரை அத்தானும் நானும் இங்கே தான் வாசம்!" என்றாள் அந்தப் பட்டிக்காட்டுப் பெண்.

'வெள்ளரித் தோட்டத்தில் மட்டுமில்லை! நாடு நகரங்களில் வீதி தெருக்களிலும் திருடர்கள் உண்டு பெண்ணே' என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு சிரித்தாள் மோகினி. இதற்குள் அவளுடைய அத்தான் கூடை நிறைய வெள்ளரிப் பிஞ்சோடு திரும்பி வந்திருந்தான். அந்தக் கூடையைக் கையில் வாங்கிக் கொண்டு, "காவல் முடிஞ்சதும் ஊருக்குள்ளே போயிடுவோமென்றாயே! உங்கள் ஊர் எங்கே இருக்கிறது?" என்று அவளைக் கேட்டாள் மோகினி.

"பக்கத்திலேதாம்மா இருக்குது. இங்கிருந்து தென் கிழக்கா ரெண்டு மைல் போனா 'சொகவாசம்'னு ஒரு கிராமம் இருக்கு. அதுதான் எங்க ஊர்."

"என்னது? என்னது? அந்த ஊரின் பெயரை இன்னொரு தரம் சொல்லு" என்று அடக்க முடியாத ஆவலோடு மோகினி மீண்டும் வினவினாள்.

"அதுதான் சொன்னேனே! சொகவாசம்பாங்கம்மா."

"சுகவாசம் - எத்தனை பொருத்தமான பெயர்!" என்று தனக்குள் மெல்லச் சொல்லித் திருப்திப்பட்டுக் கொண்டாள் மோகினி. அப்போது கண்ணாயிரம் வந்து புறப்படுவதற்கு அவசரப்படுத்தவே, அவள் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு காரை நோக்கி நடந்தாள்.

"எப்பவாச்சும் இந்தப் பாதையா வந்தா மறுபடியும் வாங்கம்மா" என்று அந்தப் பட்டிக்காட்டுப் பெண் தன் அத்தானுக்கு அருகில் நின்று சிரித்துக் கொண்டே இரைந்து கூறினாள். அவளுடைய பாக்கியத்தை வியந்தவளாக மோகினி காரில் ஏறினாள். அம்மாவும் கண்ணாயிரமும் ஏறிக்கொண்ட பின், கார் சாலையின் புழுதியை வாரி இறைத்து விரைந்தது.

அத்தியாயம் - 28

பிழையாகவே நினைத்துப் பிழையாகவே அனுமானமும் செய்து பிழையாகவே பேசுகிறவர்கள் பத்துப்பேர் ஒன்று சேர்ந்து விட்டால் அப்புறம் சொர்க்கத்தைக் கூட நரகமாக மாற்றிவிடலாம்.

'காலநடையினிலே உந்தன் காதல் தெரியுதடீ' என்ற கவிதைத் தொடரிலே 'காலநடை' என்ற பதச் சேர்க்கையை இணைத்துப் புனைந்ததற்காக மகாகவி பாரதியாரைப் பலமுறை மனத்தில் நினைத்து நினைத்துக் கொண்டாடியிருக்கிறான் சத்தியமூர்த்தி. அன்று அதிகாலையில் மோகினியின் ஞாபகத்தை அடியொற்றினாற் போல் இந்தக் கவித் தொடரும் நினைவு வந்தது அவனுக்கு. காப்பி குடிப்பதற்காகச் சிற்றுண்டிச் சாலைக்குள் நுழைந்து, காப்பி குடித்து விட்டுத் திரும்பியது எல்லாமே தன் நினைவோ, ஞாபகமோ இல்லாமல் மிக மிக அவசரமாக நடந்து விட்டதைப் போல் தோன்றின. அப்போது அவனுடைய ஞாபகத்தின் பரப்பை எல்லாம் மோகினி ஒருத்தியே முழுமையாக ஆண்டு கொண்டிருந்ததனால், காரியமாகச் செய்து கொண்டிருந்த எதுவும் நினைவாக ஞாபகத்தில் நிற்கவில்லை. காப்பி குடித்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தவன் வழியில் அங்கங்கே தனித்தனியாகவும், இருவர், மூவர் இணைந்து கூட்டமாகவும், சந்தித்த மாணவர்களின் வணக்கங்களையும், மலர்ந்த முகங்களையும் பார்த்துப் பதிலுக்கு இயந்திரம் போல் வணங்கிவிட்டு மேலே நடந்து கொண்டிருந்தான்.

அன்று அதிகாலையில் மல்லிகைப் பந்தல் நகரம் அழகு மயமாக இருந்தது. பன்னீர் தெளிப்பது போல் சாரல் விட்டுவிட்டுப் பெய்து கொண்டிருந்த சூழ்நிலையில் 'கூலிங் கிளாஸ்' அணிந்து கொள்ளாமலிருந்த போதே 'கூலிங் கிளாஸி'ல் தெரிவதைப் போல் ஊர் குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் இருந்தது. நான்கு பக்கமும் கருநீல மேகங்கள் கற்றை கற்றையாகச் சுருட்டிக் கொண்டு மலை முகடுகளில் வந்து சரிந்து விடப் போவதைப் போல் தொங்கிக் கொண்டிருந்தன. இயல்பாகவே எழில் வாய்ந்த நகரமான மல்லிகைப் பந்தலில் இப்படி மழைக்கோப்பான நாளாகவும் வேறு இருந்து விட்டால் கிராமாந்தரத்துக் கலியாண வீட்டைப் போல் பிடிபடாதனவும் புரிபடாதனவுமாகிய மகிழ்ச்சிகள் நிரம்பியிருக்கும். மலைச் சாரலில் 'கால்ஃப்' பந்தாட்டத்துக்கான புல்வெளிப் பரப்பெல்லாம் மரகதப் பசுமை மின்னிக் கொண்டிருந்தது. புல்வெளிப் பசுமையில் மின்னும் பனித் துளிகளும் நடுநடுவே 'கால்ஃப்' பந்தாட்டத்துக்கான வெண்மணல் பரப்பிய சின்னஞ்சிறு வட்டங்களும் அங்கே தெரிகிற காட்சியைப் பார்த்துக் கொண்டே நடந்த சத்தியமூர்த்தி அறைக்குப் போவதற்காக மாடிப்படி ஏறுமுன் சாலையில் காரைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டுக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த பாரதியைச் சந்திக்க நேர்ந்தது.

தவிர்க்க முடியாமலும் பார்க்காதது போல் விலகிப் போய்விட முடியாமலும் மிக அருகில் நேர்ந்து விட்டது அந்தச் சந்திப்பு. அந்தக் கல்லூரியின் வம்பு பேசும் மனிதர்களையும், பொறாமை நிறைந்த சூழ்நிலையையும் புரிந்து கொண்டு பாரதி தன்னைத் தேடி வருவதை குறைத்துக் கொள்ளும்படி அவளிடமே இரண்டொரு முறை குறிப்பாகச் சொல்லியிருந்தான் சத்தியமூர்த்தி. இன்றும் அவள் தன்னைத் தேடி வந்திருப்பதிலிருந்து அவள் தான் கூறியதைச் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்றே அவனுக்குத் தோன்றியது. கைநிறைய இனிப்பு மிட்டாயை வைத்துக் கொண்டே அதற்காக அழுகிற குழந்தையிடம் ஒன்றுமில்லையென்று சொல்லி ஏமாற்றுவது போல் அவள் தன்னைத் தான் தேடி வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டே யாரோ யாரையோ தேடி வந்திருப்பது போல் பாராமுகமாகப் போய்விட முடியவில்லை அவனால். 'நீ இன்னும் இப்படி என்னைத் தேடி வரலாமா?' என்று கண்டிப்பது போல் அவளைக் கடுமையாக நிமிர்ந்து பார்த்து விட்டுத் தயங்கி நின்றான் சத்தியமூர்த்தி. அவளோ அவன் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதற்கே பயந்து நடுங்கினாள். நாவும் அழகிய உதடுகளும், எவ்வளவு வேகமாகப் பேசத் துடித்துக் கொண்டிருந்தனவோ, அவ்வளவு வேகமாக ஒத்துழைக்காத சொற்களுடன் அவனிடம் தயங்கித் தயங்கிப் பேசினாள் அவள்.

"அன்று மாலை ஏரிக்கரையில் 'போட் கிளப்' அருகே புல்வெளியில் நீங்கள் மாணவர்களோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது நான் அருகே வந்து அழைத்ததை நீங்கள் சிறிதும் விரும்பாதது போல் கடுமையாக நடந்து கொண்டீர்கள். அன்று அப்படி உங்கள் சுவாரஸ்யமான பேச்சின் நடுவே குறுக்கிட்டுத் தொல்லை கொடுத்துவிட்டதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்! என்னைப் போன்றவர்கள் அன்பின் மிகுதியினாலேயே சில சமயங்களில் தவறு செய்து விடுகிறோம்" என்று அவள் தளர்ந்த சொற்களால் நிறுத்தி நிறுத்திக் கூறிய போது சத்தியமூர்த்திக்கு அவளிடம் என்ன மறுமொழி கூறுவதென்றே தெரியவில்லை. அந்த நிகழ்ச்சி அவள் மனத்தை இவ்வளவு ஆழமாகப் புண்படுத்தி வைத்திருக்குமென்று அவன் எதிர்பார்க்காததனால் முதலில் சிறிது மருண்டான். மறுபடியும் அவன் அவளுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்த போது அந்தக் கவர்ச்சி வாய்ந்த கண்களில் நீர் முட்டிக் கொண்டிருந்தது. அவளே மறுபடியும் பேசலானாள்:

"இப்போது கூட நான் உங்களைத் தேடித்தான் இங்கே வந்திருக்கிறேனோ என்றெண்ணிக் கொண்டு என் மேல் நீங்கள் கோபப்படலாம். இன்று அப்பாவின் விருந்தாளியாக ஐரிஷ்காரத் தொழிலதிபர்கள் இருவர் வீட்டில் வந்து தங்குகிறார்கள். வீட்டை அலங்கரிப்பதற்காகக் கொஞ்சம் பூக்கள் வாங்கிக் கொண்டு போகலாம் என்று தான் இங்கே வந்தேன்" என்று கூறி, 'ராயல் பேக்கரிக்கு' அருகிலிருந்த 'பிளவர்ஸ் கார்னர்' என்னும் கடையைச் சுட்டிக் காண்பித்தாள் பாரதி.

அந்தக் கடையில் மேஜைகளிலும், அலங்காரக் கூடங்களிலும் கண்ணாடிக் குடுவையில் சொருகி அழகுபடுத்தும் நவநாகரிக மலர்கள் மட்டுமே வியாபாரம். விதம் விதமான நிறங்களில் வகைவகையான உருவங்களில் வாசனையில்லாதனவாய்ப் பார்க்க மட்டும் அழகுடைய பூக்களை அடுக்கி வைத்துக் கொண்டு விற்று முதலாக்க மல்லிகைப் பந்தலில் முடியும். அந்த அலங்காரப் பூக்கள் விற்கும் கடை காலை ஏழுமணியிலிருந்து பத்து மணி வரை மட்டும் தான் திறந்திருக்கும். அந்த மூன்று மணி நேரத்துக்குள் அங்கே ஐம்பதிலிருந்து நூறு ரூபாய் வரை வியாபாரம் ஆகிவிடுமென்று சத்தியமூர்த்தி கேள்விப்பட்டிருந்தான்.

தரைப்பகுதி ஊர்களான நாட்டுப்புறத்து நகரங்களில் இப்படி ஒரு மணமில்லாத பூக்கடையை நாளெல்லாம் திறந்து வைத்துக் கொண்டிருந்தாலும் கால் காசுக்கு வியாபாரம் ஆகாது. ஜமீந்தார்களும், சமஸ்தானாதிபதிகளும், தொழிலதிபர்களும் கோடைக்கால வாசத்துக்காகப் பெரிய பெரிய பங்களாக்களைக் கட்டி வைத்திருக்கும் மல்லிகைப் பந்தலிலோ ஒவ்வொரு பங்களாவுக்கும் பத்துப் பதினைந்து ரூபாய்க்குக் குறையாமல் அலங்கரிப்பதற்கு இந்த மணமில்லாப் பூக்களை வாங்குவார்கள். விடியற்காலையில் ஏழு மணியிலிருந்து பூக்களெல்லாம் தீர்ந்து போய் 'பிளவர்ஸ் கார்னரில்' கடையை இழுத்து மூடுகிற வரை அங்கே வரிசையாகக் கார்கள் வந்த வண்ணமாகவே இருக்கும். பார்வைக்கு மட்டும் அழகான அந்த மணமில்லாப் பூக்களை வாங்கிச் செல்வதற்கு மனிதர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவதைப் பார்த்து வாழ்க்கையின் எந்தப் பகுதியிலிருந்தும் வறுமையின் நலிந்த குரல்கள் ஒலிக்காத அந்த ஊரின் செழிப்பைச் சத்தியமூர்த்தி வியந்திருக்கிறான்.

பூபதியின் வீட்டுத் தோட்டத்திலேயே ஏராளமான மலர்கள் இருக்கும் போது, பாரதி 'பிளவர்ஸ் கார்னரில்' கவர்ச்சிப் பூக்கள் வாங்கவென்று அப்போது அங்கே வந்ததாகக் கூறியதை அவனால் நம்ப முடியவில்லை. அதை ஒரு காரியமாக வைத்துக் கொண்டே வேறெதற்காகவோ அவள் அப்போது அங்கே வந்திருப்பதாகத் தோன்றியது. அவள் சொல்லிய காரணத்தைத் தான் நம்பவில்லை என்பது தெரிய மெல்லச் சிரித்தான் அவன்.

"என்ன அப்படிச் சிரிக்கிறீர்கள்?"

"ஒன்றுமில்லை! இந்த ஊரில் உள்ள அத்தனை வீடுகளையும் அலங்கரிக்கப் போதுமான அவ்வளவு பூக்கள் உங்கள் தோட்டத்திலேயே இருக்கும் போது, நீங்கள் 'பிளவர்ஸ் கார்னரை'த் தேடிக் கொண்டு பூ வாங்க வந்ததாகக் கூறுகிறீர்களே? அதை நினைத்துத்தான் சிரித்தேன்."

சிறிது நேரம் அவளுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் திகைத்துத் தடுமாறிய பின் அவள் மெல்ல மெல்லத் தன்னைச் சமாளித்துக் கொண்டு பேசினாள்.

"இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது சார்? மேஜைகளில் உள்ள மலர்க் குடுவைகளில் அப்படியே கொண்டு போய்ச் சொருகி விடுவதற்கு வசதியாக 'மேட்ச், ஆகிற நிறங்களில் பொருத்தமான பூக்களைச் சேர்த்துக் கட்டித் தயாராக வைத்திருக்கிறார்கள் இங்கே. வீட்டுத் தோட்டத்தில் நாமாகப் பறித்துச் சேர்த்து அலங்கரிக்க முயன்றால் அதுவே ஒரு பெரிய வேலையாகி விடுகிறது. அப்புறம் படிப்பதற்கு நேரமே இருப்பதில்லை. நீங்கள் பாடம் சொல்லிக் கொடுக்கிற கவர்ச்சியில் மயங்கித் 'தமிழ் குரூப்'பில் வேறு சேர்ந்தாயிற்று. தண்டியலங்காரத்தையும் புறப்பொருள் வெண்பாமாலையையும் நினைத்தாலே பயமாயிருக்கிறது. அன்றைக்கு நடக்கிற பாடல்களை அன்றே மனப்பாடம் பண்ணி விடுகிறேன். பாடல்களிலோ அவற்றின் பொருளிலோ ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் கூட உங்களைத் தேடி வந்து கேட்டுத் தெரிந்து கொள்ளப் பயப்பட வேண்டியிருக்கிறது. என்னிடம் நீங்கள் ஏன் தான் இவ்வளவு கடுமையாயிருக்கிறீர்களோ, தெரியவில்லை?" என்று அவள் கூறிய பதிலிலிருந்து அவள் கண்டிப்பாகப் பூ வாங்குவதற்காக மட்டும் அங்கு வரவில்லை என்பதை அவன் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

"பிளவர்ஸ் கார்னரில் பூ வாங்குவதற்காகத்தானே வந்தீர்கள்? அப்படியானால் கடையில் பூக்கள் தீர்ந்து போவதற்கு முன்னால் வாங்கிக் கொண்டு புறப்படுங்கள்..." என்று இருந்தாற் போலிருந்து அவசரமாகவும் அவளைப் புண்படுத்துகிற முறையிலும் பேச்சைத் திடீரென்று முறித்துக் கொண்டு மேலே போக முயன்றான் சத்தியமூர்த்தி. மல்லிகைப் பந்தல் கல்லூரியில் ஆசிரியராக வந்து சேர்ந்த மறுநாளிலிருந்து அந்தப் பெண் பாரதியிடம் அவன் 'இனிமேல் இவளிடம் தீர்மானமாக இப்படித்தான் பழக வேண்டும்' என்று முடிவு செய்து கொள்ளக் காரணமாகச் சில நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்திருந்தன. இரண்டாவது முறையாகத் தனக்குள் நினைத்துப் பார்க்கவும் அருவருப்பான அந்நிகழ்ச்சிகளை திரும்பத் திரும்ப எண்ணி வருத்திக் கொண்டிருப்பதை விட ஒரேயடியாகத் தன்னைத்தானே மாற்றிக் கொண்டு விடுவது என்று மாறியிருந்தான் அவன்.

தன்னைப் போல் எல்லா மாணவர்களையும் கவர முடிந்த ஓர் இளம் பருவத்து ஆசிரியனைக் கல்லூரி அதிபரின் மகளான பாரதி சுற்றிச் சுற்றி வருவதையும், மதிப்பதையும், புகழ்வதையும், மலர்ந்த முகத்தோடு எதிர் நின்று வணங்குவதையும், மற்றவர்கள் எப்படிப் புரிந்து கொள்ள முடியும் என்று அந்தச் சில நிகழ்ச்சிகளிலிருந்து அவன் தெரிந்து கொண்டிருந்தான். முதன் முதலாக அங்கு வேலை ஒப்புக் கொள்வதற்கு முந்திய நாள் இரவு அவன் அந்த ஊர் பஸ் நிலையத்தில் வந்து இறங்கிப் பெட்டிப் படுக்கையோடு தங்க இடமின்றித் தவித்த போது, பாரதி காரில் வந்து அழைத்துப் போய்க் கல்லூரியில் அவன் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து கொடுத்தாளே, அதைப் பற்றியே கல்லூரி முதல்வரும் ஹெட்கிளார்க்கும் இல்லாத வம்புகளையெல்லாம் பரப்பியிருந்தார்கள். அவன் எப்படி யாரால் அங்கே அழைக்கப் பெற்று வந்து தங்கச் செய்யப்பட்டான் என்பதை அறிந்து மறுநாள் காலை அவர்கள் 'ஒரு தினுசாக'ச் சிரித்துக் கொண்டே பேசியது கூட அவனை வேதனைக்குள்ளாக்கியிருந்தது. அவன் செவிகளில் கேட்காதென நினைத்து அன்று முதல்வரும் ஹெட்கிளார்க்கும் தங்களுக்குள் பேசிக் கொண்டு போன உரையாடலையும் அவன் அரைகுறையாகக் கேட்டு மனம் வெந்து போயிருந்தான்.

"மனிதன் இண்டர்வ்யூ நடத்துகிற மாதிரியா நடத்தினாரு? வீட்டிலே கூப்பிட்டு வைத்துக் கொண்டு மகளையே தேநீர் கலந்து கொண்டு வரச்சொல்லி விருந்து உபசாரமெல்லாம் பண்ணிச் 'சுயம்வரம்' நடத்தற மாதிரி நடத்தினார். பையன் அப்பாவும் மகளும் சேர்ந்து இரசிக்கிறாப்பிலே நல்ல காதல் கவிதையாகத் தேடிப் பிடிச்சுப் பாடம் நடத்தினான். உடனே 'ஆகா ஊகூ'ன்னு எல்லாரையும் வச்சுக்கிட்டே தலைமேலே தூக்கிப் பேசிக் கொண்டாடினாரு... இனிமேல் மகள் அதுக்கு மேலே கொண்டாடுவா போலிருக்கு... அவன் இந்த ஊர்லே காலை வைக்கிறதுக்கு முன்னாலே காரிலே போய்த் தேடி அழைச்சிட்டு வந்து தங்க ஏற்பாடெல்லாம் பிரமாதமாகப் பண்ணிக் கொடுத்திருக்கா. உமக்கும் எனக்கும் நடக்குமா ஐயா இந்த உபசாரம்...?" இப்படிப் பேசியது கல்லூரி முதல்வர். இதைக் கேட்டுவிட்டு, "பார்க்கலாம்! பார்க்கலாம்! இதெல்லாம் எங்கே போய் நிற்குதுன்னுன்னுதான் பார்க்கலாமே?" என்று பதில் கூறியவர் ஹெட்கிளார்க்.

தனக்குத்தானே இரண்டாம் தடவையாக மறுபடி நினைத்துப் பார்க்கவும் விரும்பாத இந்தப் பழைய உரையாடலைச் சத்தியமூர்த்தி இன்னும் மறந்து போய்விடவில்லை. யாரையும் இலட்சியம் செய்யாமல் வந்த தினத்தன்று காலையிலே அவன் சொந்தமாகத் தங்குவதற்கு அறை தேடிக் கொண்டு போனதற்கு இதுவும் ஒரு காரணம். வேறொரு நாள் இதே விதமாக வம்பு ஒன்றைப் பூபதியின் வீட்டுத் தோட்டத்தில் நடந்த விருந்தின் முடிவில் மீண்டும் அவனே தன் செவிகளால் கூச்சத்தோடு கேட்டுக் கொண்டு போக நேர்ந்தது.

"பையன் கேட்கிறவர்கள் மயங்க மயங்கப் பிரமாதமாகப் பேசறான். அப்பா வாயாலே புகழ்ந்து கொண்டாடுகிறார். மகளோ கையாலேயே கொண்டாடுகிறாள். எழுந்திருந்து ஓடி வந்து அவனுடைய கிண்ணத்தில் தேநீர் ஊற்றிய காட்சியைப் பார்த்தீரோ இல்லையோ?" என்று அன்றைய விருந்துக் கூட்டம் முடிந்து போகும் போது வயது முதிர்ந்தும் மனம் முதிராத பேராசிரியர் ஒருவர் இன்னொருவரிடம் அரட்டைப் பேச்சாகப் பேசிக் கொண்டு போனார். சத்தியமூர்த்திக்கு வேதனை ஒரு புறமும் சிரிப்பு ஒரு புறமுமாக இருந்தன. கல்லூரி எல்லையில் காசிலிங்கனார் 'வகுளம் வகுளம்' என்று மிஸ் வகுளாம்பிகையைச் சுற்றிச் சுற்றி வருவதையோ வகுளாம்பிகை அடிக்கடி 'சந்தேகம் கேட்பதாக'க் காசிலிங்கனாரைச் சுற்றி வருவதையோ இங்கு யாரும் ஒரு வம்பாகப் பேசுவதில்லை. 'குழந்தைத் தன்மையும் பேதமையும் மாறாத பூபதியின் பெண் என் மேல் அக்கறை காட்டுவது இத்தனை பெரிய வம்புக்குரிய தவறா? அன்பைச் சம்பாதிப்பதில் கூட அப்படிச் சம்பாதிக்கிறவன் மேல் மற்றவர்கள் பொறாமைப்படுவதற்கு இடம் இருக்கிறது போலும்! மற்றவர்கள் பொறாமைப்படுகிற விதமான பேரன்பைச் சம்பாதிக்கிறவன் அதனால் சொந்த மனத்தில் நிம்மதியிழந்து தவிக்க வேண்டும் என்பதுதான் உலக நியதியா என்ன?' என்று மிக அந்தரங்கமாக எண்ணி எண்ணிச் சில சமயங்களில் மனம் குமைந்திருக்கிறான் சத்தியமூர்த்தி. வெளிப்படத் தெரியாத அல்லது தெரியவிடாத இத்தனை மனப்போராட்டங்களுக்கும் பிறகுதான் அவன் பாரதியிடம் பழகுகிற விதமே மாறியது. ஆனால் பாரதி அவனுடைய மாற்றத்துக்கு இவ்வளவு தீவிரமான காரணமும் திட்டமும் உண்டு என்பதைக் கூடப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவன் ஒரு காரணமும் இல்லாமலே ஏதோ ஒரு வகை வெறுப்புடன் தன்னுடன் கடுமையாக மாறிக் கொண்டு வருவதாகத்தான் தோன்றியது அவளுக்கு. அவன் அவ்வளவு வேகமாகப் பேச்சை முறித்துக் கொண்டு மாடிப் படியேறி மேலே போய்விட முயன்றும் கூட அவள் அவனைப் போகவிடாமல் பேசிக் கொண்டு நின்றாள். தான் பூக்கடைக்காக வந்திருப்பதையே அவள் மறந்து போய்விட்டாற் போலிருந்தது.

"நான் இந்த ஆண்டில், 'தமிழ் குரூப்' எடுக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டதற்குக் காரணமே சொல்லிக் கொடுப்பதற்கு நல்ல ஆசிரியராக நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதுதான். அப்பாவும் என்னை உங்களிடம் தமிழில் நிறைய கேட்டுத் தெரிந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார். 'இண்டர்வ்யூ'வுக்கு வந்திருந்த போது நீங்கள் விளக்கிச் சொல்லிய அந்தத் தமிழ்ப் பாட்டைக் கேட்டுத்தான் நானும் அப்பாவும் உங்களிடம் மனத்தைப் பறிகொடுத்தோம். அதற்குப் பின்னால் நீங்கள் வகுப்பில் நடத்திய 'ஷீ வாக்ஸ் இன் ப்யூட்டி' பாடலைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அப்பாவும் அதைக் கேட்டிருக்கிறார். அன்று மாலை வீட்டில் அதைப் பற்றி என்னிடம் அப்பா புகழ்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்!" என்று அவள் பேசிய பேச்சின் தொனியிலிருந்து 'இவ்வளவு பிரியமாயிருக்கிற என்னை நீங்கள் இன்னும் எதற்காகச் சோதிக்கிறீர்கள்?' என அவனிடம் கேட்பது போல் இருந்தது. தன் செவியில் விழுந்திருந்த அந்த இரண்டு வம்புப் பேச்சுக்களையும் அப்போதே அவளிடம் தெளிவாகக் கூறித் தன் நிலையை விளக்கி விடலாமா என்று எண்ணினான் சத்தியமூர்த்தி. அப்படி விளக்குவதனால் உலகத்தின் களங்கம் நிறைந்த சிந்தனையின் ஒரு பகுதியை அவள் புரிந்து கொண்டு வேதனைப்பட நேருமே என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அந்த வேதனை தன்னோடு போகட்டுமே என்று அவன் தன்னைத்தானே அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. ஏற்கெனவே குறிப்பாக அவளிடம் எச்சரித்திருந்த எச்சரிக்கையை இன்னும் வற்புறுத்தி இப்போது கூறலானான்.

"என்னைப் போன்ற ஆசிரியர்கள் எல்லா மாணவ மாணவிகளுக்கும் பொதுவானவர்கள். எங்களுடைய பாசமும், உரிமையும், அன்பும், எங்களிடம் படிக்கிற அத்தனை பேருக்கும் பாரபட்சம் இல்லாமல் பொதுவானவை. எங்களுடைய சமூகப் பொறுப்பு எப்போதும் பரந்த நோக்கமுடையதாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. உங்களைப் போல் கல்லூரி நிர்வாகியின் மகள் மட்டுமே அடிக்கடி என்னைத் தேடி வந்து கொண்டிருந்தாலோ, மேலே உள்ளவர்களைத் தன்னைக் கட்டிக் கொள்வதற்காகவே நான் உங்களுக்கு மட்டும் அதிக சிரத்தையோடு சொல்லிக் கொடுக்கிறேன் என்றும், மற்ற மாணவர்களைக் கவனிப்பதில்லை என்றும் எனக்குக் கெட்ட பெயர் வரும். என்னிடம் மட்டும் இவ்வளவு மதிப்பும் ஆர்வமும் காண்பித்துவிட்டு மற்ற ஆசிரியர்களைக் கவனிக்காதது போல் இருந்தால் உங்களுக்கும் அதனால் கெட்ட பெயர் வரும்."

"தாராளமாக வரட்டுமே உங்களை மதிப்பதனால் வருகிற கெட்ட பெயர் எவ்வளவு பெரிதாயிருந்தாலும் நான் அதை தாங்கிக் கொள்வதற்குத் தயார். சிறந்த ஆசிரியர் என்ற முறையில் என்னைப் போல் ஒரு மாணவி உங்களை மதிப்பதோ உங்களிடம் ஆர்வம் காண்பிப்பதோ எப்படிப் பிழையாகும்?" என்று ஆத்திரமாகவும் தைரியமாகவும் அப்போது அவனை எதிர்த்துக் கேட்டாள் பாரதி. அவளுடைய அறியாமையையும் வெகுளித் தனத்தையும் பார்த்துச் சத்தியமூர்த்தி சிரித்தான்.

"உங்கள் கேள்வி நியாயமானது! ஆனால் பிழையாகவே நினைத்துப் பிழையாகவே அநுமானம் செய்து பிழையாகப் பேசுகிறவர்கள் பத்துப் பேர் ஒன்று சேர்ந்தால் சொர்க்கத்தைக் கூட நரகமாக மாற்றி விடலாம். அதைத் தெரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் அளவாகப் பழக வேண்டும். சுருக்கமாக ஒன்று சொல்வேன். நீங்கள் நினைப்பது போல் மென்மையாகப் பழகவே தெரியாத அளவு நான் கடுமையானவன் இல்லை. நம்முடைய சமூகப் பொறுப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சில இடங்களில் நாம் மலரவோ சிரிக்கவோ கூட முடியாமல் போய்விடுகிறது" - இதைக் கூறிவிட்டு அவளிடம் விடைபெற்றுக் கொண்டு மாடிப்படி ஏறிய போது தான் சொல்ல வேண்டியதை மிக நாசூக்காகச் சொல்லி விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி.

இண்டர்வ்யூவுக்கு வந்து திரும்பிய போதும், அவளுடைய கடிதங்கள் மதுரையில் தனக்குக் கிடைத்த போதும், மல்லிகைப் பந்தலுக்கு தான் வந்து சேர்ந்த முதல் தினத்தன்று அவளே தன் அறையைத் தேடிக் காப்பி எடுத்துக் கொண்டு வந்தபோதும், அவளைப் பற்றி அவன் மனத்தில் இருந்த சிறிதளவு நளின நினைவுகள் கூட இப்போது அறவே வற்றிப் போயிருந்தன. 'எல்லாரையும் போல அவளும் ஒரு மாணவி' என்பதைத் தவிர வேறெந்த எண்ணமும் அவனுக்கு இப்போது இல்லை. ஆனால் அவளோ பார்த்த முதல் விநாடியிலிருந்து அவனிடம் எத்தனை தவிப்பும் ஆர்வமும் கொண்டிருந்தாளோ அத்தனை தவிப்புடனும், ஆர்வத்துடனுமே இன்னும் அவனைத் தேடி வந்து கொண்டிருந்தாள். அவ்வளவு விரைவாக அவன் அப்போது தன் பேச்சை முடித்துக் கொண்டு மாடிக்குப் போனதுகூட அவன் தன்னைப் புறக்கணித்து விட்டுப் போவதாகத்தான் அவளுக்குத் தோன்றியிருக்கும். எப்படித் தோன்றியிருந்தாலும் சத்தியமூர்த்தி அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மேலே மாடிக்கு வந்து அறைக் கதவைத் திறந்துவிட்டு ஏதோ பழைய புத்தகம் ஒன்றைத் தேடி எடுப்பதற்காகப் பெட்டியைக் குடையத் தொடங்கியிருந்த அவனுடைய கையில் அதன் ஒரு மூலையில் கிடந்த பாரதியின் கடிதங்கள் இரண்டும் அகப்பட்டன. அவற்றைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு கணம் ஏதோ நினைத்துத் தயங்கியவன் அடுத்த கணம் மனம் மாறியவனாக அவற்றின் துணுக்குகள் அடையாளமே தெரியாதனவாய் மிகமிகச் சிறியவையாகி விடும்படி விரல்களின் பிடியில் மேலே கிழிக்கவும் முடியாமல் தடுமாறுகிற அளவு மாற்றி மாற்றிக் கிழித்தான். பெட்டியின் மற்றொரு மூலையில் மோகினியின் பென்ஸில் எழுத்துக் கடிதமும் கிடப்பது தெரிந்தது. ஒரு விநாடி 'அதையும் கிழித்தால் என்ன?' என்று நினைத்த அடுத்த விநாடி அப்படிச் செய்ய விடாமல் ஏதோ ஒரு ஞாபகம் இடைப்பட்டுத் தடுத்ததனால், அந்த ஒரே ஒரு கடிதத்தை மட்டும் தனது பெட்டியில் வைத்தான்.

பாரதியின் கடிதங்களைக் கிழித்த துணுக்குகளை அப்படியே அருகில் குவித்துவிட்டுப் புத்தகத்தைத் தேடும் வேலையைத் தொடர்ந்த போது அறை வாசலில் நிழல் தட்டியது. திரும்பினால் மறுபடியும் அந்தப் பெண் பாரதி வந்து நின்று கொண்டிருந்தாள். அவள் கையில், 'பிளவர்ஸ் கார்னரில்' வாங்கிய அலங்காரப் பூக்கள் நிறைந்திருந்தன. "இந்த அறையில் நடுவாக ஒரு வட்டமேஜையைப் போட்டுப் பொன்நிறக் கண்ணாடி கூஜா ஒன்றையும் வைத்து நீர் ஊற்றி நான் கொண்டு வந்திருக்கிற மலர்களில் சிலவற்றால் அலங்கரிக்க வேண்டும் போல ஆசையாயிருக்கு" என்று உற்சாகமாகச் சிரித்துக் கொண்டே கூறியபடி அவள் அறைக்குள் நுழையவும் சத்தியமூர்த்தி கீழே குவித்து வைத்திருந்த கிழிசல் கடிதத் துணுக்குகள் பலகணி வழியாக வீசிய காற்றில் மேலே எழும்பிப் பறக்கவும் சரியாயிருந்தது. பூக்களை ஒரு கையில் மாற்றிக் கொண்டு அறை முழுவதும் குப்பையாகச் சிதறிவிட்ட அந்தக் காகிதத் துணுக்குகளைப் பொறுக்கிச் சுத்தம் செய்ய முந்திய பாரதி நாலைந்து துணுக்குகளைப் பொறுக்கியதுமே திகைத்துப் போய் நின்று விட்டாள். தன்னுடைய ஆசையின் சிதறல்களைத் தானே பொறுக்கி வெளியில் எறிய நேருவது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பெரிய துர்ப்பாக்கியம்! அந்தத் துர்ப்பாக்கிய நிலையில் தான் பாரதியும் அப்போது இருந்தாள். சத்தியமூர்த்தியோ ஒன்றும் செய்யத் தோன்றாத நிலையில் அவள் முகத்தை அப்போது ஏறிட்டுப் பார்ப்பதற்கே கூசிப் போயிருந்தான்.

அத்தியாயம் - 29

தீரர்கள் ஒரு போதும் தங்களுக்குப் பக்கத்தில் நிற்கிற ஆயிரம் நண்பர்களால் மட்டும் திருப்திப்பட்டு விடுவதில்லை. எங்கோ இருக்கிற யாரோ ஓர் எதிரியை அழிக்கவே அவர்கள் அதிகமாகக் கவலைப்பட வேண்டியிருக்கிறது.

ஒரு மென்மையான மலரை வாடி விடாமல் பத்திரமாகப் பொதிந்து வைக்க வேண்டுமென்ற முயற்சியிலேயே கைதவறிக் கசக்கி எறிந்து விட்டாற் போன்றிருந்தது அந்தச் சூழ்நிலை. தரையிலிருந்து பொறுக்கிய கடிதத் துணுக்குகளைக் கையில் வைத்துக் கொண்டு அவள் கண் கலங்கி நிற்பதை உணர்ந்த போது அவன் அடைந்த வேதனை சொற்களால் அளவிட்டு உரைக்க முடியாததாக இருந்தது. ஒருவரை வெறுத்தாலும் அந்த வெறுப்பை அதற்கு ஆளானவளே நேருக்கு நேர் இவ்வளவு குரூரமாகக் கண்டுகொள்ளும்படி நடந்துவிட்ட அநாகரிகத்தை எண்ணி மனம் புழுங்கினான் அவன். கிழிந்த கடிதத் துணுக்குகளையும் தன்னையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுக் கண்ணீர் பெருகும் விழிகளோடு சொல்லிக் கொள்ளாமலே அவள் படியிறங்கித் திரும்பிச் செல்லும் போது நடைப் பிணமாகச் செல்வதை அவனும் உணர்ந்தான். 'இன்றைக்கென்று இந்த நேரம் பார்த்து அந்தக் கடிதங்களைக் கிழிக்க வேண்டும் என்று எனக்கு ஏன் தான் தோன்றியதோ' என்று எண்ணித் தன்னைத் தானே நொந்து கொண்டான் அவன்.

அன்று காலையில் கல்லூரிக்குப் போனால் 'அந்தப் பெண்ணின் கலங்கிய விழிகளைத் தைரியமாக எப்படி எதிர் கொள்வது?' என்று தயங்கியது அவன் மனம். நீண்ட நேரமாக மேற்கொண்டு ஒரு வேலையும் செய்யத் தோன்றாமல் மலைத்துப் போய் உட்கார்ந்திருந்து விட்டுக் கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்ததும் உற்சாகமில்லாமல் உடை மாற்றிக் கொண்டு ஏதோ கொலைக் களத்துக்குப் புறப்படுவது போல் புறப்பட்டிருந்தான் அவன். கல்லூரிப் பாடவேளைகள் தொடங்கி அவன் வகுப்புக்குச் சென்ற போது, அன்று அவள் கல்லூரிக்கே வரவில்லை என்று தெரிந்தது. பாரதி தனக்கு எழுதியிருந்த கடிதங்களை அவளே காணும்படி தான் துண்டுதுண்டாகக் கிழித்தெறிந்திருந்ததை எண்ணி எவ்வளவுக்கு மனம் உடைந்திருப்பாள் என்று நினைத்த போது சத்தியமூர்த்தி நிம்மதியிழந்து தவித்தான். பாரதி அன்று கல்லூரிக்கே வரவில்லை என்பது வேறு அவனுடைய கவலையை அதிகமாக்கியிருந்தது. கல்லூரியிலோ அந்த மனநிலையோடு அவன் உற்சாகமாகச் செய்ய முடியாத சுறுசுறுப்பான வேலை ஒன்று அவனுக்காகக் காத்திருந்தது.

நடப்பு ஆண்டில் கல்லூரி யூனியனுக்கு மாணவர்களிலிருந்து ஒரு தலைவனோ, தலைவியோ தேர்ந்தெடுப்பதற்காகத் தேர்தல் நடத்தும் பொறுப்பை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லிப் பூபதி 'ஆர்டர்' அனுப்பியிருந்தார். கல்லூரி மாணவர் யூனியன் தலைவரையும், இலக்கியச் சங்கம், விஞ்ஞானக் கழகம், விளையாட்டுக் குழு முதலியவற்றுக்கான செயலாளர்களையும் தேர்ந்தெடுப்பதற்குரிய தேர்தலை நடத்துவதற்குச் சத்தியமூர்த்தி எலெக்ஷன் ஸ்பெஷல் ஆபிஸராக நியமிக்கப்பட்டிருப்பதாகக் காலேஜ் நோட்டீஸ் போர்டில் வேறு அறிக்கை தொங்கிக் கொண்டிருந்தது. மனத்தில் களிப்பில்லாமல் கடமையைக் காப்பாற்றுவதற்காக அந்தக் காரியங்களை அவன் செய்ய வேண்டியிருந்தது. உதவியாகவோ, ஆதரவாகவோ, அநுதாபத்துடனோ, யாரும் ஒத்துழைக்காத ஒரு சூழ்நிலையில் பொறுப்புக்கள் மேலும் மேலும் பெருகிக் கொண்டு போவதை எண்ணி அவனுக்குத் தயக்கமாக இருந்தது. முதல்வரும், துணை முதல்வருமாகிய வார்டனும், ஹெட்கிளார்க்கும் - தனக்கு ஆதரவாக இல்லை என்பதோடு மறைமுகமான எதிர்களாக இருக்கிறார்கள் என்பது நன்றாக அவனுக்குத் தெரிந்திருந்தது. மற்றவர்கள் எதிரிகளாக இல்லாதது போலவே நண்பர்களாகவும் இல்லை. மாணவர்கள் தான் அவன் மேல் உயிரையே வைத்திருந்தார்கள். ஓர் ஆசிரியன் பெருமைப்பட்டுக் கொண்டு நிமிர்ந்து நடப்பதற்கு இதைத் தவிர வேறென்ன வேண்டும்? ஆனாலும் இந்த ஒரு பெருமையால் மட்டுமே சத்தியமூர்த்தியின் மனம் நிம்மதியடைந்து விடவில்லை. இப்படிக் கவலைப்படுவது தான் தீரர்களின் சுபாவம்.

தீரர்கள் ஒரு போதும் தங்களுக்குப் பக்கத்தில் நிற்கிற ஆயிரம் நண்பர்களால் மட்டும் திருப்திப்பட்டு விடுவதில்லை. எங்கோ இருக்கிற யாரோ ஓர் எதிரியை அழிக்கவே அவர்கள் அதிகமாகக் கவலைப்பட வேண்டியிருக்கிறது. கல்லூரி முதல்வர் நல்ல எண்ணத்துடனே சுமுகமாகப் பழகுகிறவராக இருந்தால் மாணவர் யூனியன் தேர்தலைப் பற்றிச் சத்தியமூர்த்தியிடம் நேரில் விவரித்துப் பேசி எல்லாம் சொல்லியிருக்க வேண்டும். நிர்வாகியின் வார்த்தையைத் தட்ட முடியாமல் அந்தப் பொறுப்பைச் சத்தியமூர்த்தி எப்படி நிறைவேற்றினாலும் சரி என்று அவனிடம் விட்டுத் தொலைப்பது போல் முறையைக் கழித்திருந்தார் முதல்வர். தனக்காகத் தன்னை மதிக்காமல் நிர்வாகியின் அபிமானம் தனக்கு இருக்கிறது என்பதற்காகத் தன்னைப் பிறர் மதிப்பதைச் சத்தியமூர்த்தி சிறிதும் விரும்பவில்லை.

கல்லூரி முதல்வரோ புகழ்பெற்ற மேலை நாட்டுச் சர்வகலாசாலைகளில் எல்லாம் பயின்று பட்டம் பெற்றும் தாழ்வு மனப்பான்மையும், பிறர் தன்னைப் படிப்பாளியாக மதித்துப் பயப்படுகிறார்களா இல்லையா என்ற சந்தேகத்துடனேயே உலகத்தைப் பார்க்கும் பார்வையுமாக வாழ்ந்தார். இரண்டு நாட்களுக்கு முன் கல்லூரி நூல்நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து சத்தியமூர்த்தி அவரை மிக நன்றாகப் புரிந்து கொண்டிருந்தான். அவர் எத்தனை பெரிய கோழை என்பதைச் சத்தியமூர்த்தி அந்தச் சம்பவத்திலிருந்து முடிவு செய்திருந்தான். அன்று நடந்தது இதுதான்.

பகல் இரண்டரை அல்லது மூன்று மணி இருக்கும். ஒரு வகுப்புமில்லாத ஓய்வு வேளையாகத் தனக்கு அந்த நேரம் வாய்த்திருந்த காரணத்தினால் சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கல்லூரியின் நூல்நிலையத்தில் போய் ஷேக்ஸ்ப்பியருக்கு 'பிராட்லி' எழுதிய விமர்சனப் புத்தகம் ஒன்றை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தான். புத்தகத்தில் ஈடுபட்டு ஆழ்ந்த பின் அவன் சுற்றுப்புறத்தைப் பற்றியே மறந்து போயிருந்தான். அப்போது கல்லூரி முதல்வர் ஏதோ காரியமாக அங்கு வந்திருக்கிறார். அவர் அங்கு வந்ததும் சத்தியமூர்த்திக்குத் தெரியாது. திரும்பிப் போனதும் சத்தியமூர்த்திக்குத் தெரியாது. அரை மணி நேரத்துக்குப் பின்பு கல்லூரி ஊழியன் ஒரு சிறிய காகிதத்தை மடித்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்டிய போது தான் என்ன நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். 'கல்லூரி முதல்வர் வந்தால் எழுந்து நிற்க வேண்டும் என்ற மரியாதையைக் கூட இன்னும் இங்கே சில ஆசிரியர்கள் கற்றுக் கொள்ளவில்லை. பாவம்! அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்' என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் முதல்வர் ஏதோ எழுதிக் கையெழுத்திட்டிருந்தார். சத்தியமூர்த்திக்கு அதைப் படித்ததும் ஒன்றுமே புரியவில்லை. 'இதற்கு என்ன அர்த்தம்?' என்று அதைக் கல்லூரி லைப்ரேரியன் ஜார்ஜிடம் காண்பித்துக் கேட்டான் சத்தியமூர்த்தி. ஜார்ஜ் அதைப் படித்துவிட்டுச் சிரித்துக் கொண்டே சொன்னார்:

"மனிதர் அரைமணி நேரத்திற்கு முன்னால் இங்கே வந்து போனார். என்ன காரியமாக வந்தாரோ? நீங்கள் எழுந்து நின்று மரியாதை செய்யவில்லையே என்ற கோபத்தில் வந்த காரியத்தைக் கூட மறந்து போய்விட்டார் போலிருக்கிறது. சுற்றிச் சுற்றி வந்தார். நீங்கள் எழுந்து நிற்கிற வழியாக இல்லை. உங்கள் மேல் குற்றம் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை. நீங்கள் ஒரேயடியாகப் புத்தகத்தில் மூழ்கிப் போயிருந்தீர்கள். நீங்கள் எழுந்து நின்று தன்னை மதிக்கவில்லையே என்ற கோபத்துடனும், உங்களைக் கூப்பாடு போட்டு எழுப்ப முடியாத அதைரியத்துடனும் அவர் சுற்றுவதைப் பார்த்து நானே உங்கள் அருகில் வந்து, "சார்! ஒரு நிமிஷம் எழுந்து நின்று விடுங்கள். மனிதன் மரியாதைப் பசி பிடித்து அலைகிறான் என்று சொல்லி விடலாம் போல் தவித்துப் போனேன். நீங்களோ அசைந்து கொடுக்கவில்லை. மனிதன் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் ரொம்பக் கோபத்தோடு இங்கிருந்து திரும்பிப் போனார். நான் அப்போதே நினைத்தேன். ஆள் தம்முடைய அறைக்குப் போய் இருந்து கொண்டு இதுமாதிரி ஏதாவது அனுப்புவார் என்று எனக்குத் தெரியும்" என்றார் ஜார்ஜ்.

"அது சரி, மிஸ்டர் ஜார்ஜ்! ஆனால் மல்லிகைப் பந்தல் கல்லூரி பிரின்ஸிபாலுக்குத் தருகிற மரியாதையை விட அதிகமான மரியாதையை நான் ஷேக்ஸ்பியருக்கும் பிராட்லிக்கும் அல்லவா தரவேண்டும்? அவர்களையே நான் உட்கார்ந்து கொண்டு படிக்கும் போது எனக்குத் தெரியாமல் உள்ளே வந்து போன ஒருவருக்காக நான் எப்படி எழுந்து நின்று மரியாதை செய்ய முடியும்? மரியாதை என்கிற விஷயம் எவ்வளவு கஷ்டமானதாக இருக்கிறது பார்த்தீர்களா மிஸ்டர் ஜார்ஜ்? அதை முட்டாள்களும் எதிர்பார்க்கிறார்கள்; அறிவாளிகளும் எதிர்பார்க்கிறார்கள். அதை யாருக்குக் கொடுப்பது என்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. உலகத்தில், பிறரிடமிருந்து ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கும் போது, அப்படி எதிர்பார்க்கிறவர்களில் சரி பாதிப் பேர் கோழையாயிருக்கிறார்கள்; இன்னும் சரிபாதிப் பேர் முரடர்களாக இருக்கிறார்கள். கோழைகளும் இல்லாமல் முரடர்களுமில்லாமல் வீரர்களாயிருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் எதிர்பார்க்கிறபடி எதுவும் இருப்பதில்லை..." என்று சத்தியமூர்த்தி கூறிய கருத்துக்களை ஜார்ஜ் மிகவும் ஆர்வத்தோடு கேட்டுப் பாராட்டினார்.

"கொடுப்பவர்கள் தாம் வீரர்கள். எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் கோழைகளே. நம்முடைய பிரின்ஸிபல் எப்போதும் இப்படித்தான் சார்! இத்தனை வயதாகியும், இவ்வளவு படித்தும் அவருடைய மரியாதைப் பசி இன்னும் அடங்கவில்லை என்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது சார்! இப்போது உங்களையேதான் எடுத்துக் கொள்ளுங்களேன்! நீங்கள் சொல்லி வேண்டிக் கொண்டதனாலோ எதிர்பார்த்துத் தவிப்பதனாலோ மாணவர்கள் உங்களை மதிக்கிறார்கள் என்று கூறிவிட முடியுமா? அவர்களுக்காகவே உங்களை மதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது; மதிக்கிறார்கள். மழையைப் போல் தானாகவே குளிரக் குளிரப் பெய்ய வேண்டும். அதுதான் சார், என்றும் நிலைக்கிற மரியாதை" - இப்படி லைப்ரேரியன் ஜார்ஜ் ஆவேசமாகப் பேசியபோது தன்னைப் பற்றியும் தன்னை மாணவர்கள் மதிப்பதைப் பற்றியும் அவர் இவ்வளவு நுணுக்கமாகக் கவனித்து வைத்திருப்பதைக் கண்டு சத்தியமூர்த்தியே ஆச்சரியப்பட்டுப் போனான். தன்னைப் பற்றி லைப்ரேரியன் ஜார்ஜ் கூறியவற்றைக் கேட்கும் போது அவனுக்குச் சிறிது கூச்சமாகக் கூட இருந்தது. தன்னைப் பற்றிய இந்த மரியாதையை இப்படித் தன்னிடமே வாய்விட்டுக் கூறாமல் ஜார்ஜ் தம் மனத்துக்குள்ளேயே வைத்துக் காப்பாற்றியிருந்தாரானால், இன்னும் நாகரிகமாக இருந்திருக்குமே என்று நினைத்தான் சத்தியமூர்த்தி.

சொல்லாக வெளிவந்து விடுகிற புகழ்ச்சியைவிட ஒருவருடைய மனத்தில் நிலைத்த மதிப்பீடாகத் தங்கிச் சொல்லாக வெளிப்படாத புகழ்ச்சி மிகவும் தரமானது என்று எண்ணுகிற சுபாவம் சத்தியமூர்த்திக்கு உண்டு. மாணவர் யூனியன் தேர்தலை நடத்துகிற பொறுப்பைக் கல்லூரி நிர்வாகியின் கட்டளைக்காகத் தன்னிடம் விட்டுவிட்டு விலகி நிற்கிற முதல்வரைப் பற்றிச் சிந்தித்த போது இந்தச் சம்பவம் சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. நோட்டீஸ் போர்டில் தேர்தலைப் பற்றிய அறிவிப்பை ஒட்டி அன்று பிற்பகல் வேளையிலிருந்தே வகுப்பறைகளிலும் கல்லூரி மைதானத்திலும் மாணவர் யூனியன் தேர்தலுக்குரிய கலகலப்பும் பரபரப்பும் வந்துவிட்டன. பத்துப் பன்னிரண்டு மாணவர்களாகச் சேர்ந்து கும்பல் கும்பலாக நின்று பேசுவதும், மாணவர்களைக் கூட்டம் கூட்ட முயல்வதுமாகக் கட்சித் தன்மையோடு கூடிய ஒரு சுறுசுறுப்பு, கல்லூரி எல்லையெல்லாம் வந்து நிரம்பிவிட்டது.

பிற்பகல் மூன்று மணிக்கு அந்தக் கல்லூரி மாணவர்களிலேயே முரடன் என்று மற்ற ஆசிரியர்கள் கருதிப் பயந்த புலி கோவிந்தன் என்ற மாணவன் யூனியன் தலைவர் தேர்தலுக்குச் சத்தியமூர்த்தியிடம் மனுச் செய்தான். அவனுடைய மனுவை வேறு இரண்டு மாணவர்கள் ஆதரித்து வழி மொழிந்திருக்கிறார்கள். நாலரை மணிக்குப் புலி கோவிந்தன் கோஷ்டியைப் பிடிக்காத வேறு ஒரு மாணவர் கூட்டம் இன்னொரு பையனை அழைத்து வந்து ஆதரவுக் கையெழுத்திட்டு அபேட்சை மனுக் கொடுக்கும்படி செய்தது. மறுநாள் மாலை வரை அபேட்சை மனுக்கொடுப்பதற்கு நேரம் இருப்பதால் இன்னும் மனுக்கள் வரலாமென்று சத்தியமூர்த்தி எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். புலி கோவிந்தனுடைய மனுவை ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி நிராகரித்து விடவேண்டும் என்று வைஸ் பிரின்ஸிபால் வந்து காதைக் கடித்தார். சத்தியமூர்த்தி அதற்குச் சம்மதிக்கவில்லை.

"அந்தப் பயல் ரொம்பவும் அர்ரகண்ட்! மாரல் ரெக்! போன வருடம் பையன்களைக் கூட்டம் கூட்டி வைத்து ஹாஸ்டல் சாப்பாட்டைப் பகிஷ்கரித்து 'ஸ்டிரைக்' பண்ணத் தூண்டினவன் இந்தப் புலிகோவிந்தன் தான்! 'காலேஜ் ஹாஸ்டல் பாத்ரூம் குழாய்களில் தண்ணீர் வருகின்றதா, அல்லது கண்ணீர் வருகின்றதா? அவைகள் ஏன் இப்படி நன்றாகத் தண்ணீர் வராமல் சொட்டுச் சொட்டாக அழுவது போல் கண்ணீர் சிந்துகின்றன?' என்று எதுகை மோனையோடு பேசினவன் இவன். ஜாக்கிரதை! இவனை யூனியன் பிரஸிடெண்டாக வர விட்டாச்சோ, அப்புறம் காலேஜ் குட்டிச்சுவர் தான்..." என்று மிரட்டினார் அவர். "புலிகோவிந்தனும் சட்டப்படி இந்தக் கல்லூரி மாணவன். கல்லூரி அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரில் அவன் பெயர் இருக்கிறவரை அவனுக்கும் மற்ற மாணவர்களுக்குள்ள அத்தனை உரிமைகளும் உண்டு. அப்படியிருக்கும் போது அவனுடைய அபேட்சை மனுவை நான் எப்படி நிராகரிப்பது?" என்று சத்தியமூர்த்தி மறுத்துவிட்டான். 'மாணவர்களுக்குப் பயப்படுகிற இந்த ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்து உருவாக்குகிற பட்டதாரிகள் தானே நாளை சமூகத்தில் போய் நிறையப் போகிறார்கள்?' என்று நினைத்த போது சத்தியமூர்த்தி மனம் வருந்தினான்.

'வைஸ் பிரின்ஸிபல் சார்! நம்முடைய நிர்வாகி நமது கல்லூரிக் கட்டிடங்களை மிகவும் உறுதியாகப் பக்கா காங்கிரீட் போட்டுக் கட்டியிருக்கிறார். கேவலம் ஒரு புலி கோவிந்தன் மட்டும் முயன்று அவற்றைக் குட்டிச் சுவராக்கிவிட முடியாது. சுவர்களைப் பற்றிய கவலையை விட்டு விட்டு தயவு செய்து நாளையிலிருந்தாவது மாணவர்களைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பியுங்கள். சுவர்களைக் கூர்க்காக்களும், வாட்ச்மேன்களும் கவனித்துக் கொள்வார்கள்' என்று குத்தலாகப் பதில் சொல்லத்தான் அவனுடைய நாவு முந்தியது. அந்த மனிதருடைய வயதையும் முதுமையையும் மதித்து இப்படி நினைத்ததை அவன் சிரமப்பட்டு அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. மாலையில் வகுப்புக்கள் முடிந்து கல்லூரியை விட்டுக் கிளம்புவதற்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகைப் பந்தலில் வந்து படிக்கும் மகேசுவரி தங்கரத்னம் என்ற பெண்ணும், இன்னொரு மாணவியும் சத்தியமூர்த்தியைத் தேடி வந்தார்கள். அவர்கள் அவனிடம் விடுத்த வேண்டுகோள் விநோதமாயிருந்தது.

"சார்! 'தமிழ் குரூப்'பில் இந்த ஆண்டில் மாணவிகளாகிய நாங்களும் நாலைந்து பேர்கள் படிக்கிறோம். எங்களில் யாராவது மாணவர் யூனியன் தலைவர் பதவிக்கு ஏன் நிற்கக் கூடாது என்று நானும் இவளுமாகச் சிந்தித்து மிஸ் பாரதியை நிறுத்தலாம் என்ற முடிவுடன் அவள் வீட்டுக்குப் போய்ச் சொன்னோம். அவள் இன்று கல்லூரிக்கு வரவில்லை. எங்களால் ஆன மட்டும் சொல்லிப் பார்த்தும் அவள் கேட்கவில்லை. நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் அவள் நிச்சயமாகக் கேட்பாள். எங்களுக்காக இந்த உதவியை நீங்கள் செய்ய முடியுமா?" என்று மகேசுவரி தங்கரத்தினமும், அவளுடைய தோழியும் தன்னிடம் வந்து வேண்டுகோள் விடுத்தபோது தனக்கும் பாரதிக்கும் அவ்வளவு நெருக்கமான உறவு இருப்பதாக அவர்கள் புரிந்து கொண்டிருப்பதையே ஆத்திரத்தோடும் வெறுப்போடும் தான் அவன் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அந்த வெறுப்பையும் ஆத்திரத்தையும் தன்னுடைய மறுமொழியில் தெரியச் செய்தான் அவன்.

"மிஸ் மகேசுவரி தங்கரத்தினம்! உங்களுக்குப் பாரதியைத் தேர்தலுக்கு நிற்கச் செய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்தால் நீங்களே அவளிடம் வற்புறுத்தி நிற்கச் சொல்வதுதான் முறை. 'நான் சொல்வதை அவள் மறுக்க மாட்டாள்' என்று நீங்கள் என்னைத் தேடி வந்து சொல்வதே எனக்குப் பிடிக்கவில்லை. யூனியன் தலைவர் பதவிக்குத் தகுதியுள்ள மாணவ மாணவிகளில் யார் அபேட்சை மனுவைக் கொண்டு வந்து கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டியது என்னுடைய பொறுப்பு. அபேட்சை மனுவைக் கொடுக்கச் சொல்லி யாரையும் தேடிப் போய் வற்புறுத்துவது என்னுடைய வேலை இல்லை! தயவு செய்து இனிமேல் என்னிடம் வந்து யாரையும் எதற்காகவும் தூண்டச் சொல்லி வற்புறுத்தாதீர்கள்."

"அதற்கில்லை சார்! நாங்கள் வேண்டுவதைத் தப்பாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். பாரதி நீங்கள் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டாள் என்பதால் தான் சொன்னேன். உங்கள் மேல் அந்தப் பெண் அத்தனை 'ரிகார்ட்' வைத்திருக்கிறாள் என்பதால் தான் உங்களைத் தேடிக் கொண்டு இதைச் சொல்ல வந்தோம். இதில் ஏதாவது பிழை இருந்தால் எங்களை மன்னித்து விடுங்கள்" என்று சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு போய்விட்டாள் மகேசுவரி தங்கரத்தினம்.

தன்னையும் பாரதியையும் இப்படிச் சேர்த்து நினைக்கும்படியான மனநிலை எவருக்கும் எதனாலும் உண்டாகாத விதத்தில் இனி அளவோடுதான் பழக வேண்டும் என்று தன் மனத்தில் வைராக்கியமாக ஒரு தீர்மானம் செய்து கொண்டான் அவன். தன் தோழிகளிடம் பேசும் போதும், மற்றவர்களிடம் புதிய தமிழ் விரிவுரையாளரைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளும் போதும் பாரதி காண்பித்திருக்கிற அளவற்ற ஆர்வத்தினால் தான் இப்படித் தன்னையும் அவளையும் சேர்த்து நினைக்கிறார்கள் என்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அதே சமயத்தில் இப்படி வம்பு பேசுகிறவர்களுக்காகவும் பொய்யர்களுக்காகவும், அயோக்கியர்களுக்காகவும் எந்தத் தவறும் செய்யாத நான் எதற்காகப் பயப்பட வேண்டுமென்று ஆத்திரமாகவும் கோபமாகவும் கூட இருந்தது அவனுக்கு.

அத்தியாயம் - 30

சில சமயங்களில் பெண் என்பவள் மனிதனுடைய சிந்தனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட அதிசயமாயிருக்கிறாள். அப்படிச் சமயங்களில் அவள் அதிசயமாயிருக்கிறாள் என்ற ஒன்றைத் தவிர வேறு எதையுமே அவளைப் பற்றிப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

கல்லூரி யூனியன் தேர்தலுக்கு மாணவர்கள் அபேட்சை மனுவைக் கொடுக்கும் இறுதி நாளான மறுநாள் மாலை மகேசுவரி தங்கரத்தினமும் மற்ற மாணவிகளும் எப்படியோ பாரதியைச் சம்மதிக்கச் செய்து அவள் கையாலேயே சத்தியமூர்த்தியிடம் அபேட்சை மனுவைக் கொண்டு வந்த போது பாரதியின் முகத்தில் சிறிது கூட மகிழ்ச்சியே இல்லை. முன்பின் பழக்கமில்லாத மூன்றாம் மனிதனைத் தேடிக் கொண்டு வந்து அபேட்சை மனுவைக் கொடுப்பது போல் அவள் அவனிடம் கொடுத்துவிட்டுப் போனாள். அவள் சற்றே அலட்சியமாக வந்து போனது போலவுமிருந்தது. சத்தியமூர்த்தியும் அவளிடம் அப்படியே நடந்து கொண்டான். தனக்கு அவள் பிரியமாக எழுதியிருந்த கடிதங்களை அவள் கண் முன்பே சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்திருந்தது அவளுடைய மனத்தை அவ்வளவு ஆழமாக வேதனைப்படுத்தி ஆத்திரத்துக் குள்ளாக்கியிருக்கிறதென்று சத்தியமூர்த்தியால் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்படி அவள் மாறியிருந்தாலும், அவளைப் பொறுத்தவரை, அந்த மாற்றத்தையே சத்தியமூர்த்தியும் நீடிக்க விரும்பினான்.

தன்னைப் பார்த்துப் பேசிவிட்டு போன பின்பு மகேசுவரி தங்கரத்தினம் பாரதியைச் சந்தித்திருந்தால் அந்தச் சந்திப்பின் போது அவள் பாரதியைக் கேட்டிருக்கும் முதல் கேள்வி, "உனக்கும் சத்தியமூர்த்தி சாருக்கும் ஏதாவது தகராறா பாரதி?" என்பதாகத்தான் இருந்திருக்க முடியும் என்று அவனால் இருந்த இடத்திலிருந்தே அநுமானம் செய்ய முடிந்தது. அபேட்சை மனுக்களை வாங்க வேண்டிய தேதி முடிந்துவிட்டதனால் வந்திருந்த மூன்று அபேட்சை மனுக்களையும் ஏற்றுக் கொண்டு நோட்டீஸ் போர்டில் அறிவிப்பை ஒட்டச் செய்துவிட்டான் சத்தியமூர்த்தி. அந்தந்த அபேட்சகர்களே விரும்பிக் கேட்டிருந்தபடி புலி கோவிந்தனுக்கு 'ஸ்கூட்டர்' வாகனச் சின்னமும், இன்னொரு மாணவனுக்குச் சைக்கிள் சின்னமும், பாரதிக்கு ரோஜாப்பூச் சின்னமும், தேர்தல் அடையாளங்களாகக் கொடுக்கப்பட்டிருந்தன.

ஏதோ பொதுத்தேர்தல் நடப்பது போல் கல்லூரி எல்லைக்குள் கூட்டமும் விளம்பரமும் பிரசாரச் சொற்பொழிவுகளும் தடபுடலாயிருந்தன. தரையில் சுண்ணாம்பினால் எழுதியும், சுவரொட்டிகள் அச்சடித்து ஒட்டியும், கூட்டம் போட்டுப் பேசியும் மாணவர்களின் ஆர்வம் பிரமாதப்பட்டுக் கொண்டிருந்தது. மூன்றாவது நாள் மாலையில் தேர்தல் வாக்குச்சீட்டுப் பதிவு நடைபெறுவதாக இருந்ததால் அதற்கு முந்திய இரண்டு தினங்களுக்குள்ளேயே மாணவர்கள் தங்களுடைய எல்லா விளம்பர வேலைகளையும் முடித்துக் கொண்டு விட வேண்டுமென்று தேர்தல் அறிக்கையில் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. சைக்கிள் சின்னத்திற்குரிய மாணவன் கடைசி நேரத்தில் என்ன காரணத்தாலோ மனம் மாறித் தன்னுடைய அபிமானிகளிடமும், அநுதாபிகளிடமும் பாரதியை ஆதரிக்கும்படி வேண்டுகோள் விடுக்கத் தொடங்கியிருந்தான். அவனுடைய ஆசை எப்படியாவது புலி கோவிந்தனைத் தோற்கும்படி செய்ய வேண்டுமென்பதுதானாம். அதனால்தான் விட்டுக் கொடுத்துப் புலி கோவிந்தனுக்கு எதிராகப் பாரதியின் கைகளை வலிமைப்படுத்தும் வேலையை மேற்கொண்டிருந்தான் சைக்கிள் சின்னத்திற்குரிய மாணவன். முடிவில் ஸ்கூட்டருக்கும், ரோஜாப் பூவுக்கும், கடுமையான போட்டி மூண்டிருந்தது. கல்லூரி மைதானத்தில் இரண்டு கட்சிக்காரர்களும் தீவிரமாக விளம்பரம் செய்யலானார்கள். ரோடுகளில் சுண்ணாம்பினால் எழுதினார்கள். போஸ்ட்டர்கள் அச்சிட்டு ஒட்டினார்கள். துண்டுப் பிரசுரங்களும் அச்சிட்டுக் கொடுத்தார்கள். கூட்டம் போட்டுச் சொற்பொழிவுகள் செய்தார்கள்.

ஒரு கூட்டத்தில் புலி கோவிந்தன், "ரோஜாப் பூவைக் காட்டிப் பூவையர்கள் உங்களை மயக்க முயல்கிறார்கள். மயங்காதீர்கள் ஆண் சிங்கங்களே! நம்முடைய ஸ்கூட்டரின் சக்கரங்களுக்குக் கீழே ரோஜாப்பூ நசுங்கப் போவது உறுதி! உறுதி!! உறுதி!!!" என்று கடுமையாகப் பேசினானாம். அப்படி அநாகரிகமாகப் பேசியதற்காக அவன் மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரியான சத்தியமூர்த்தியிடம் வந்து பாரதியின் சார்பில் புகார் செய்தாள் மகேசுவரி தங்கரத்தினம். அவள் தன்னுடைய புகாரைச் சொல்லிவிட்டுப் போன கால் நாழிகைக்கெல்லாம் 'புலி'யின் சார்பில் ஒரு முரட்டு மீசைக்கார மாணவன் ஓடி வந்து, "உங்களை எல்லாம் ஏறி மிதித்துச் சவாரி செய்ய நினைக்கிறார்கள் என்பதற்கு அவர்களுடைய ஸ்கூட்டர் சின்னமே சரியான அடையாளமாக இருக்கிறது மாணவர்களே! ஆகவே, ஸ்கூட்டரை நம்பாதீர்கள். அது உங்களை ஏறி மிதித்துச் சவாரி செய்து அதன் மூலம் தாங்கள் முன்னுக்குப் போய்விட விரும்புகிற சுயநலமிகளின் சின்னம் என்பதை மறவாதீர்கள் என்று அந்த யாழ்பாணத்துப் பொண்ணு பேசறா சார்! இதை நீங்க கண்டிக்கணும்" என்று ரிப்போர்ட் செய்தான். 'தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டங்களில் இரு தரப்பாரும் நாகரிகமாகப் பேச வேண்டும்' என்று பொதுவாக மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி விட்டுப் பேசாமல் இருந்தான் சத்தியமூர்த்தி.

இந்த மாதிரித் தேர்தல் வேளைகளில் கல்லூரிகள் உணர்ச்சி வெள்ளமாயிருப்பதை யாரும் தடுக்க முடியாது. 'வயதானவர்கள் நடத்துகிற தேர்தல்களிலேயே சிறு பிள்ளைத்தனம் நிறைந்திருக்கும் போது சிறுபிள்ளைகளாகவே நடத்துகிற தேர்தல் வம்பில்லாமல் எப்படியிருக்க முடியும்?' என்று நினைத்து மன அமைதி பெற்றான் அவன். தன்னுடைய கல்லூரி நாட்களில் அவனும் இப்படித் தேர்தல்களை அநுபவித்திருந்தான். 'இவைகளில் நிரம்பியிருக்கும் உணர்ச்சிப் போராட்டங்களும், ஆர்வங்களும் தான் சுவையான அம்சங்கள். அவற்றை முயன்று தடுக்கவும் முடியாது; தடுப்பதும் கூடாது' என்பது அவன் எண்ணமாயிருந்தது. தேர்தலுக்காக மறுநாள் பிற்பகல் கல்லூரி வகுப்புக்கள் நடைபெறவில்லை. கல்லூரி நூல் நிலையம் 'போலிங் பூத்' ஆக மாறியிருந்தது. லைப்ரேரியன் ஜார்ஜ், சத்தியமூர்த்திக்குத் தேர்தல் உதவியாளராகியிருந்தார்.

கல்லூரி மாணவர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் இந்தச் சின்னஞ்சிறு தேர்தல் விழாவுக்கே இத்தனை பரபரப்பும் ஆர்வமும் இருக்குமானால் 'நாட்டளவில், நகரளவில், தேர்தல்களும், பஞ்சாயத்துத் தேர்தல்களும், அடிபிடி, குத்துவெட்டு, சொற்கொலை, உயிர்க்கொலை, மரியாதைக் கொலைகளை விளைவிப்பதற்குக் கேட்பானேன்?' என்றெண்ணினான் சத்தியமூர்த்தி. இளம் மாணவர்கள் இந்தத் தேர்தலில் கொண்டுள்ள சபலங்களையும் ஆர்வங்களையும் பார்த்தபோது மனித மனத்தின் இயல்பைப் பற்றி நவநீதக் கவி பாடியிருக்கும் பாடல் வரிகள் சில அவன் நினைவுக்கு வந்தன. திரும்பத் திரும்ப அன்று அவன் இந்தப் பாடலையே நினைத்தான்.

எண்சாண் உடம்பினில்
ஐம்புலக் கூடுவைத்தாய் - அந்த
ஐம்புலக் கூட்டினுள்ளே
ஆயிரம் நினைவுகளலைந்திட - ஓர்
ஒற்றை மனம் படைத்தாய்
ஒற்றை மனத்தினுள்ளே
கற்றைச் சபலங்களாய் - பல
காரியச் சுமைகள் கனக்க வைத்தாய்

ஆயிரம் நினைவுகள் அலைந்திட - ஒற்றை மனம் படைத்தாய் என்ற ஒரு வரியை எத்தனை முறை வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தாலும் இன்பமாகத்தான் இருந்தது.

தேர்தல் முடிந்தது. கல்லூரி நூல் நிலையத்தில் உள்ளே அமைக்கப்பட்டிருந்த 'போலிங் பூத்'தில் கடைசி மாணவனும் தன் வாக்குச் சீட்டைப் பதிவு செய்துவிட்டு வெளியேறிய பின்பு ஜார்ஜும், சத்தியமூர்த்தியும் வாக்குச் சீட்டுக்களை எண்ணுவதற்காக உட்புறம் தாழிட்டுக் கொண்டு உட்கார்ந்தார்கள். அப்போது ஜார்ஜிடம் இந்தப் பாடலைச் சொல்லி இதிலுள்ள கருத்து நயங்களை விளக்கினான் சத்தியமூர்த்தி.

"லைப்ரேரியனாக இருப்பதிலுள்ள ஒரே ஒரு தொல்லை, புத்தகங்களைப் படிக்க வேண்டுமென்ற தாகமே இல்லாமல் போய்விட்டது சார்! நீங்கள் இப்போது இந்தக் கவிதையை விளக்கிச் சொல்கிறீர்கள். கேட்பதற்குச் சுவையாக இருக்கிறது. இதே நவநீதக் கவியின் கவிதைப் புத்தகங்கள் நமது நூல் நிலையத்தில் நிறைய இருந்தும் நானாக இதுவரை எடுத்துப் படிக்க வேண்டுமென்று தோன்றவே இல்லை சார்!" என்று பதில் சொன்னார் ஜார்ஜ்.

அப்போது பிற்பகல் நாலரை மணிக்கு மேல் ஆகியிருந்தது. ஆறு மணி ஆறரை மணிக்குள் வாக்குச் சீட்டுக்களை எண்ணி மாணவர்களுக்குத் தேர்தல் முடிவை அறிவித்துவிட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு ஜார்ஜும், சத்தியமூர்த்தியும் ஓட்டுக்களை எண்ண ஆரம்பித்தார்கள். நூல் நிலையக் கட்டிடத்துக்கு வெளியே முடிவை அறிந்து கொள்ளத் தவிக்கும் ஆர்வத்தோடு மாணவர்களும், மாணவிகளும் ஏராளமாகக் கூடியிருந்தார்கள்.

கைகள் வாக்குச் சீட்டை எண்ணிக் கொண்டிருந்தாலும் அந்த இரண்டு மூன்று நாட்களில் பாரதியிடம் ஏற்பட்டிருந்த மாறுதல்களைப் பற்றியே சத்தியமூர்த்தியின் மனம் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது. 'பிளவர்ஸ் கார்னரில்' பூ வாங்குவதற்காக வந்திருந்த தினத்தன்று, அவள் தன்னைத் தேடி அறைக்குள் வந்து தான் கிழித்தெறிந்திருந்த கடிதத் துணுக்குகளைப் பார்த்துவிட்டு நடைப் பிணமாகத் திரும்பியதையும் பின்பு அன்று முழுவதும் கல்லூரிக்கு வராமலிருந்ததையும் மறுநாள் கல்லூரிக்கு வந்து தன் முகத்தைக் கூட நன்றாக நிமிர்ந்து பாராமலே அபேட்சை மனுவைக் கொடுத்துவிட்டுச் சென்றதையும் ஒருசேரச் சிந்தித்து அவளுள்ளே நிகழ்ந்திருக்கும் மாறுதல்களை அவன் அனுமானிக்க முயன்றான். தான் கடுமையாகவும், நெகிழ்ச்சியின்றியும் இருப்பதைப் புரிந்து கொண்ட பிறகு, அவளுடைய பணிவும், விநயமும் தன்னிடம் மாறியிருப்பதாகத் தோன்றியது அவனுக்கு.

முதன் முதலாகப் பூபதியின் மாளிகையில் இன்டர்வியூவுக்கு வந்திருந்த போது கிளிகள் எழுதிய திரைச்சீலையை விலக்கிக் கொண்டு, எழுதாத பசுங்கிளியாய் எட்டிப் பார்த்து நாணமும் அழகும் போட்டியிடும் முகத்தோடு தலையைக் குனிந்து கொண்ட பாரதிக்கும், நேற்று முன் தினம் அபேட்சை மனுவைக் கொடுப்பதற்கு வந்திருந்த பாரதிக்கும் நிறைய வேறுபாடு இருந்தது. 'அன்பை செலுத்துவதற்கு நம்பிக்கை வாய்ந்த அந்தரங்க மனிதன் இவன்' என்று ஒரு பெண் தான் மனப்பூர்வமாக நேசிக்கத் தேர்ந்தெடுத்த ஒருவனிடம் அந்த நம்பிக்கையும் அந்தரங்கமும் இல்லையென்று தெரிந்து மனம் உடைந்த பின் தெரிகிற சோர்வும் அலட்சியமும் இப்போது பாரதியிடம் ஏற்பட்டிருப்பதாக அவனுக்குப் புரிந்தது. 'செல்வக் குடும்பத்துப் பெண்களில் இத்தனை பணிவாகவும், நாணமாகவும் ஆண்களுக்கு முன் நடந்து கொள்கிறவர்கள் கூட இருக்கிறார்களா?' என்று பாரதியைச் சந்தித்த முதல் சந்திப்பின் போது அவன் வியந்திருக்கிறான். அதே பாரதிதான் அவனிடம் அபேட்சை மனுவைக் கொடுக்க வந்த தினத்தன்று முற்றிலும் மாறிப் போயிருந்தாள். அவள் மாற வேண்டுமென்று தான் அவனே ஆசைப்பட்டான். ஆனால் அந்த மாறுதல் இப்படி ஓர் அலட்சியமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை.

முன்பு 'இன்டர்வ்யூ' முடிந்ததும் தன்னைப் பஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது ஆர்வத்தோடு கல்லூரிக் கட்டிடங்களையெல்லாம் சுற்றிக் காண்பித்த பாரதியையும், அன்று பஸ் நிலையத்தில் மழை பெய்திருந்த செம்மண் பூமியைப் பார்த்து, "இன்டர்வ்யூவின் போது நீங்கள் கூறிய பாடலில் வந்த உவமையின் அழகு இப்போது தான் நன்றாகப் புரிகிறது சார்!" என்று கூறிய பாரதியையும் இப்போது நினைவு கூற முயன்றான் சத்தியமூர்த்தி. அவள் எந்த விதமான அன்பை அவனிடம் எதிர்பார்த்தாளோ அது அவனிடம் இல்லையென்று புரிந்ததும் பணிவு, விநயம் எல்லாம் கூட அவளிடமிருந்து இன்று உடனடியாக மாறிப் போய் விட்டாற் போலிருந்தது. அவள் மதுரையில் தனக்குக் கிடைக்கும்படி எழுதியிருந்த கடிதங்களைத் தான் படித்த போது, "உலகத்தில் இப்படியும் ஓர் அன்பு உண்டா" என்றெண்ணி வியந்ததையும் இப்போது நினைத்தான் சத்தியமூர்த்தி. அந்தக் கடிதங்களை அவனே கிழித்திருந்ததைப் பார்த்துத்தான் அவள் மனம் மாறியிருக்கிறாள். ஏதோ ஒன்றை எதிர்பார்த்துப் பணிகிற பணிவும் நாணமும் நிலையானவை அல்ல என்று தான் இப்போது அவன் எண்ண வேண்டியிருந்தது. சில சமயங்களில் பெண் என்பவள் மனிதனுடைய சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட அதிசயமாக இருக்கிறாள். அப்படிப்பட்ட வேளைகளில் அவள் அதிசயமாக இருக்கிறாள் என்ற ஒன்றைத் தவிர, வேறு எதையும் அவளைப் பற்றிப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

'உங்களைப் பாராத போது பார்க்கத் தவித்திருக்கிறேன். பார்த்த போது பிரியத் தவித்திருக்கிறேன்' என்று நவநீதக் கவியின் கவிதையைச் சொல்லி ஒரு நாள் தன்னிடம் அழுத அதே பாரதி அபேட்சை மனுவைக் கொடுக்க வந்த தினத்தன்று அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு போனதை நினைத்துப் பார்த்து அவள் தான் அப்படிச் செய்தாள் என்பதை நம்ப முடியாமல் மனம் குழம்பினான் சத்தியமூர்த்தி. 'ஆயிரம் நினைவுகள் அலைந்திட ஒற்றை மனம் படைத்தாய்' என்று நவநீதக் கவி பாடினாரே, அது பெண்களுக்குத் தான் மிகமிகப் பொருத்தம் என்று நினைக்கத் தோன்றியது அவனுக்கு. அவளுடைய மாறுதலால் தான் எதையும் இழப்பதாக அவனுக்குத் தோன்றாவிட்டாலும், 'அவள் ஏன் இப்படி மாறினாள்?' என்று மட்டும் சிந்திக்கத் தோன்றியது. அப்படிச் சிந்தித்ததில் மோகினியின் அன்பைப் போல ஆட்படுகிற அன்பைச் செய்வதற்குப் பாரதி பொறுமையற்றவள் என்றும் பாரதியால் செய்ய முடிந்த அன்பு ஆள விரும்புகிற அன்பே என்றும் அவனால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஜார்ஜ் தாம் எண்ண வேண்டிய வாக்குச் சீட்டுக்களை எண்ணி முடித்து அந்த எண்ணிக்கையையும் ஒரு துண்டுத் தாளில் குறித்துத் தயாராக வைத்துவிட்டார். சத்தியமூர்த்தி இரண்டு மூன்று முறை எண்ணும் போதே எண்ணிக்கையை மறந்து போய்ச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டதன் காரணமாக மீண்டும் மீண்டும் அவற்றை எண்ண வேண்டியிருந்தது. சந்தேகமாக இருந்ததனால் சத்தியமூர்த்தி தான் எண்ணிய வாக்குச் சீட்டுகளையும் ஒருமுறை ஜார்ஜிடம் கொடுத்து அவரை எண்ணச் செய்த பின் மொத்தம் கூட்டிப் பார்த்ததில் நானூறு ஓட்டுக்கள் அதிகமாகப் பெற்றுப் பாரதியே வெற்றியடைந்திருப்பதாகத் தெரிந்தது.

"இப்போது நம்முடைய நிலை மிகவும் தர்ம சங்கடமானது சார்! புலி கோவிந்தனும் அவனுடைய ஆட்களும் வெளியே ஆவலோடு காத்திருக்கிறார்கள். பாரதிக்கு வெற்றி என்று வாயில் பக்கம் போய் அறிவித்தோமானால் நீங்களும் நானும் ஏதோ சூழ்ச்சி செய்து கல்லூரி நிர்வாகியின் மகளாகிய பாரதியை வெற்றி பெற வைத்து விட்டோம் என்று தோல்வி ஏமாற்றத்தில் வாய் கூசாமல் சொல்லுவார்கள். பேசாமல் மாணவர்கள் எல்லாரையும் வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு 'நாளைக் காலையில் நோட்டீஸ் போர்டில் முடிவு வெளியாகும். விடிந்ததும் வந்து பார்த்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லி அனுப்பி விடலாம்" எனக் கூறி மருண்டார் ஜார்ஜ்.

"இதிலென்ன பயம் வந்தது? வாக்குச் சீட்டுக்களை எண்ணிப் பார்த்து உண்மை முடிவை அறிவிக்கிறோம் நாம். நம்மை யார் எதற்காகப் பழி சொல்ல முடியும்?" என்றான் சத்தியமூர்த்தி. அதைக் கேட்ட பின்பும் ஜார்ஜ் பயந்து தயங்கத்தான் செய்தார்.

"உங்களுக்குத் தயக்கமாக இருந்தால் நான் வெளியே போய் தேர்தல் முடிவை அறிவிக்கிறேன் மிஸ்டர் ஜார்ஜ்!" என்று கையில் இரண்டு அபேட்சகர்களுடைய மொத்த வாக்குச் சீட்டுக்களின் எண்ணிக்கைத் தொகையையும் எழுதிய காகிதத்துடன் நூல் நிலையக் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் சத்தியமூர்த்தி. அவன் வெளியே வந்ததும் அங்கு நிலவிய சந்தைக் கடை இரைச்சல் போன்ற கூப்பாடுகளும், மாணவ மாணவிகளின் பேச்சுக் குரல்களும் அடங்கி எல்லார் முகங்களும் அவனையே நோக்கின. எல்லார் செவிகளும் அவன் கூறப்போகும் சொற்களுக்காகத் தாகத்தோடு காத்திருந்தன. புலி கோவிந்தனுடைய ஒரு கை வலது பக்கத்து மீசை நுனியிலிருந்தது. பாரதி மட்டும் தலையைக் குனிந்து கீழே தரையைப் பார்க்கத் தொடங்கியிருந்தாள்.

"மிஸ் பாரதி" - என்று பேரைப் படித்துவிட்டு அவளுடைய மொத்த ஓட்டுக்களின் எண்ணிக்கையையும் படித்து அவள் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டுப் புலி கோவிந்தனின் மொத்த வாக்குகளையும் கூறி, அவற்றை விடப் பாரதிக்கு எவ்வளவு ஓட்டுக்கள் அதிகம் என்பதையும் அவன் சொல்லி முடிப்பதற்குள்ளேயே பாரதியோடிருந்த பெண்களின் வெற்றி ஆரவாரமும், புலி கோவிந்தனோடிருந்த ஆண்களின் முரட்டுக் கூக்குரல்களும் ஒலிக்கத் தொடங்கி விட்டன. 'ஸ்கூட்டர் பஞ்சராகி விட்டதுடீ' என்று ஒரு குறும்புக்காரப் பெண் கூச்சலிட, அதைக் கேட்டு ஆத்திரமடைந்த புலி கோவிந்தனின் தோழன் ஒருவன் கீழே கிடந்த சரளைக் கல் ஒன்றை எடுத்து அந்தப் பெண்ணின் மேல் வீசுவதற்குக் குறி பார்த்தான்.

"எங்கே எறியுங்கள் மிஸ்டர்! நீங்கள் மட்டும் என்மேல் இந்தக் கல்லை எறிந்து விடுங்கள் பார்க்கலாம்" என்று அந்தப் பெண் முன்னால் ஓடிவந்து அசட்டுத் துணிவோடு நின்றாள். சத்தியமூர்த்தி ஓடிப்போய் அந்தப் பையனின் கையில் இருந்த கல்லைப் பறித்து எறிந்தான்.

"வயதினால் சிறு பிள்ளையாக இருக்கலாம். அது தவறில்லை. ஆனால் புத்தியினாலும், செயலினாலும் கூடச் சிறு பிள்ளைகளாயிருப்பதை மன்னிக்க முடியாது" என்று ஆத்திரத்தோடு அந்த மாணவனையும், அவனைக் கோபமூட்டிய மாணவியையும் கண்டித்தான் சத்தியமூர்த்தி. கூட்டத்தைக் கலையச் செய்து மாணவர்களுக்குள் தேர்தல் முடிவு பற்றிய கலகம் மூளாமல் வீட்டுக்கு அனுப்புவதற்குள் அவன் அரும்பாடு பட வேண்டியிருந்தது. எல்லாரும் கலைந்த பின்பும், பாரதியும், அவள் தோழிகள் சிலரும் தங்களுக்குள் ஏதோ பேசியபடி நூல் நிலையத்துக்கு வெளிப்பக்கத்திலிருந்த மைதானத்திலேயே தயங்கி நின்றார்கள். ஒரு நாகரிகத்துக்காகப் பாரதியிடம், 'கங்க்ராஜுலேஷன்ஸ்' என்று அவளருகே சென்று சத்தியமூர்த்தி வெற்றியைப் பாராட்டித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்த போது கூட அவள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"சார் உன்னைத்தான் கூப்பிடறார்டீ" என்று பாரதிக்கு அருகில் நின்ற மகேசுவரி தங்கரத்தினம் எடுத்துக் கூறியும் அவள் சத்தியமூர்த்தியை ஏறிட்டுப் பார்க்கவேயில்லை. சத்தியமூர்த்திக்குச் சுருக்கென்றது. "சிரமப்படுத்தியதற்கு மன்னிக்க வேண்டும் மிஸ் பாரதி!" என்று கூறிவிட்டுப் பதிலை எதிர்பாராமல் உள்ளே திரும்பிவிட்டான் அவன். ஆனாலும் அப்போது அவள் நடந்து கொண்ட விதம் அவனுடைய மனத்துக்குள் ஒரு தீராத புதிராகவே இருந்தது.

அத்தியாயம் - 31

ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திப்பதிலும், தீர்மானம் செய்வதிலுமே சென்ற தலைமுறைக்கும், இந்தத் தலைமுறைக்குமுள்ள அடிப்படை வேறுபாடுகள் ஏராளமாக இருக்கின்றன.

அன்று பகல் மூன்று மணி சுமாருக்குத் தேர்தல் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது கல்லூரி ஊழியன் சத்தியமூர்த்தியிடம் அவன் தந்தை மதுரையிலிருந்து எழுதியிருந்த கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்திருந்தான். அப்போதிருந்த பரபரப்பில் கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளத்தான் முடிந்ததே தவிர, அதைப் பிரித்துப் படிப்பதற்கு நேரம் இல்லை. மாணவர் யூனியன் தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுக்களை எண்ணி முடிவையும் அறிவித்து விட்டுச் சத்தியமூர்த்தி அறைக்குத் திரும்பும் போது சிறிது தொலைவு வரை கல்லூரி லைப்ரேரியன் ஜார்ஜும் பேசிக் கொண்டே கூட நடந்து வந்தார். ஜார்ஜ் விடைபெற்றுக் கொண்டு சென்ற பின் அறைக்குப் போய்ச் சட்டையைக் கழற்றிய போது தந்தையின் கடிதம் நினைவு வந்தது சத்தியமூர்த்திக்கு. உறையைக் கிழித்துக் கடிதத்தைப் படிக்கலானான். அப்பாவின் வழக்கப்படி பிள்ளையார் சுழி 'முருகன் துணை'க்குக் கீழே கடிதம் ஆரம்பமாயிற்று. சங்கிலி பின்னியது போல் எழுத்துக்களைச் சேர்த்து நீட்டி இழுத்து எழுதப்பட்ட கூட்டெழுத்துக்களால் நான்கு பக்கத்துக்கு ஏதேதோ வளர்த்து எழுதியிருந்தார் அப்பா.

'சிரஞ்சீவி சத்தியத்துக்கு அநேக ஆசிகளுடன்' கடிதம் தொடங்கியிருந்தது. 'கண்ணாயிரம் பரம உபகாரியாயிருக்கிறார். வீட்டு மாடியை இடித்துக் கட்டுவதற்கு நகரசபை அனுமதி விரைவில் கிடைக்குமோ, கிடைக்காதோ என்று தயங்கிக் கொண்டிருந்தேன். கண்ணாயிரம் யாரோ அவருக்குத் தெரிந்த மனிதர் மூலம் நகரசபையில் உள்ள ஒருவருக்குக் கடிதம் வாங்கிக் கொடுத்தார். அந்தக் கடிதத்தினால் காரியம் சுலபமாக முடிந்துவிட்டது. கொத்தனார்கள் இரண்டு நாட்களாக மாடியை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்டிட வேலைகளுக்காக நிறைய 'சிமிண்ட்' தேவையாயிருக்கிறது. 'சிமிண்ட்' கண்ட்ரோல் விலைக்குக் கிடைப்பதற்குச் சிரமப்படும் போல் இருக்கிறது. அதற்கும் கண்ணாயிரத்தைத்தான் நம்பியிருக்கிறேன். இவரிடம் சொல்லித்தான் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும். நீ சென்ற மாதம் நூற்று இருபது ரூபாய் மணியார்டர் இங்கே அனுப்பியிருந்தாய். வருகிற மாதத்திலிருந்தாவது கட்டாயம் நூற்றைம்பது ரூபாய்க்குக் குறையாமல் ஊருக்கனுப்புவதற்கு முயற்சி செய். கண்ணாயிரத்தினிடம் ஏற்கெனவே வாங்கியிருக்கும் கடன் கட்டிட வேலைகளுக்குப் போதாதென்று தோன்றுகிறது. மூத்தவள் ஆண்டாளுக்குக் கலியாணம் முடித்துவிட வேண்டும் என்று வேறு உன் அம்மா அவசரப்படுகிறாள். எதைச் செய்வதற்குத்தான் அவசரப்படுவது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் கை நிறையப் பணத்தை வைத்துக் கொண்டு அலைந்தாலொழிய ஒரு காரியமும் ஆகாது. வீட்டை இப்போது இடித்துக் கட்டுகிற வேலையை நான் தொடங்கியது நல்லதாயிற்று. இல்லாவிட்டால் இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் மாடி இடிந்து தலையில் விழுந்து விடும். மாடிச் சுவரை இடித்த மேஸ்திரியே இதைச் சொன்னான். 'நல்ல சமயத்தில் மராமத்து செய்கிறீர்கள். இன்னும் கொஞ்ச நாளில் விழுந்துவிடும்' என்று அவன் சொன்னதை நீ நேரில் பார்த்தாலும் அப்படியே ஒப்புக் கொண்டாக வேண்டியிருக்கும்.

நாற்பது வருடங்கள் பள்ளிக்கூட வாத்தியாராக வாழ்நாளைக் கழித்தவனின் குடும்பமும் அந்தக் குடும்பத்தின் எதிர்காலமும் எவ்வளவுக்குச் செழிப்பின்றி வறண்டு போயிருக்கும் என்பதற்கு நானே ஓர் உதாரணமாகி விட்டேனடா சத்தியம்! என் கண் காண நீயும் அதே வாத்தியார் உத்தியோகத்துக்குப் போயிருக்கிறாய்; காலேஜில் வாத்தியார் உத்தியோகத்துக்குப் போயிருக்கிறாய் என்று வேண்டுமானால் கொஞ்சம் பெருமைப்படலாம். மாதம் முதல் தேதி பிறந்ததும் நூற்றைம்பது ரூபாய் எனக்கு அனுப்பிவிட்டால் மீதமிருக்கிற சம்பளப் பணத்தில் நீ வாயைக் கட்டிக் காலம் தள்ள வேண்டியிருக்கும். அதை நினைத்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது. கண்ணாயிரத்திடம் இன்னும் ஐயாயிரம் ரூபாய் கடனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த வீட்டின் மேலேயே அடமானமாகப் புதிய கடனையும் தர முயல்வதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். மஞ்சள்பட்டி ஜமீந்தாரும் அவ்வப்போது இங்கே வந்து மதுரையில் தங்குகிற காலங்களில் சந்திப்பதற்குச் சென்றால் என்னிடம் பிரியமாகவே நடந்து கொள்கிறார்.

பணமும், செல்வாக்கும் உள்ள நாலு பெரிய மனிதர்களைப் பழக்கிக் கொண்டால் தான் இந்தக் காலத்தில் எந்தக் காரியத்தையும் தடையில்லாமல் சாதிக்க முடிகிறது. 'டியூசன்'களையும் ஒவ்வொன்றாக விட்டுவிட்டேன். நேரமில்லாததுதான் காரணம். விடிந்து எழுந்திருந்தால் கொத்து வேலைகளை மேற்பார்க்கவும், சிமெண்ட்டுக்கும், செங்கல்லுக்கும் அலையவும் தான் சரியாயிருக்கிறது. மாடியிலும், முன் பக்கத்துப் 'போர்ஷனி'லும் மராமத்து வேலை நடப்பதால் ஒண்டுக் குடித்தனம் இருந்த இரண்டு பேரையும் காலி செய்து அனுப்பியாயிற்று. அதனால் வாடகை வருமானமும் இன்னும் நான்கைந்து மாதங்களுக்குக் கிடையாது. கட்டிடம் முடிந்து நிறைவேறிய பின் மறுபடி குடித்தனக்காரர்களை வாடகைக்கு வைக்கலாமா அல்லது வாசல் பக்கமாக - வீட்டுக்குள் வராமலே ஏறி இறங்க வசதியாக மாடிப்படி கட்டிக் கொடுத்து ஏதாவது ஆபீசுக்கு விட்டு விடலாமா என்று யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன். 'நீர் மட்டும் நான் கொடுக்கிற 'பிளானை' அநுசரித்துக் கட்டுவதாயிருந்தால் நம் 'மூன்லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸீஸ்' காரியாலயத்தையே உம்முடைய மாடிக்கு மாற்றிவிடலாம்' என்று கண்ணாயிரம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரால் நல்ல வாடகை கொடுக்கவும் முடியும். தாராளமாகச் செலவழிக்கிற கைராசிக்காரர். நமக்கும் படிப்படியாகக் கடன் கழிந்தே போகும்...'

கடிதத்தில் இந்த இடத்தைப் படித்த போது 'அப்பா கண்ணாயிரத்தை நம்பி மோசம் போய்விடப் போகிறாரே' என்று வருத்தமாக இருந்தது. அதே சமயத்தில் அப்பாவுக்கும் தனக்குமிடையில் ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதிலும், தீர்மானம் செய்வதிலும் ஒரு தலைமுறைக் கால அளவு வித்தியாசம் இருப்பதையும் அவனால் உணர முடிந்தது. இன்று இந்த நாட்டில் மேலெழுந்து நிற்கும் பல சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமே ஒரு தலைமுறைக்கு முந்திய மனிதர்களுக்கும் இந்தத் தலைமுறையினருக்கும் நடுவேயுள்ள சிந்தனைப் போராட்டம் தான். ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திப்பதிலும், தீர்மானம் செய்வதிலுமே சென்ற தலைமுறைக்கும், இந்தத் தலைமுறைக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகள் ஏராளமாயிருக்கின்றன. 'மஞ்சள்பட்டி ஜமீந்தாரும், கண்ணாயிரமும் அப்பாவின் கண்களுக்கும், சிந்தனைக்கும் பெரிய மனிதர்களாகத் தோன்றுகிறார்கள். நானும் குமரப்பனுமோ இதே ஜமீந்தாரையும் கண்ணாயிரத்தையும் எல்லா விதத்திலும் குறைபாடுடைய சமுதாயக் கள்ளர்களாக நினைக்கிறோம்' என்று எண்ணியபடியே தந்தையின் கடிதத்தின் மீதமுள்ள பகுதியைப் படிக்கலானான் அவன்.

'... வரவர உன் அம்மாவுக்கு உடம்பு தள்ளவில்லை. பல நாட்கள் ஒரு வேலையும் செய்ய முடியாமல் சோர்ந்து படுத்து விடுகிறாள். வீட்டுக் காரியங்களை உன் தங்கைகள் தான் ஓடியாடிச் செய்ய வேண்டியிருக்கிறது. எனக்கும் முன்பு மாதிரி உடல்நிலை திடமாயில்லை. இரண்டு தரம் மாடிக்கு ஏறி இறங்கினாலே மூச்சு வாங்குகிறது. இவ்வளவு தளர்ச்சி இதற்கு முன்னால் எப்போதும் இருந்ததில்லை. ஏதோ காலம் போய்க் கொண்டிருக்கிறது. வந்து திரும்புவதற்குப் பிரயாணச் செலவு வீணாகும். இல்லாவிட்டால் இரண்டு மூன்று நாள் சேர்ந்தாற் போல் விடுமுறை வருகிற சமயமாகப் பார்த்து நீ ஒரு தரம் மதுரைக்கு வந்து போகலாம். உன் அம்மாவுக்கும் உன்னைப் பார்க்கவேணும் போலிருக்கிறதாம். முடியுமானால் வந்து போக முயற்சி செய். கல்லூரியில் கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்துக் கொண்டு பழகு. யாரிடமாவது ஏதாவது கடுமையாகப் பேசிப் பகைத்துக் கொள்ளாதே. உன் குணம் தெரிந்துதான் இதை எழுதுகிறேன்...' இந்த உபதேசத்துடன் கடிதத்தை முடித்திருக்கிறார் அப்பா. யாரோ மாடிப்படி ஏறி மேலே அறைக்கு வருகிற ஓசை கேட்டது. சத்தியமூர்த்தி திரும்பிப் பார்த்தான். தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசன் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போயிருந்தவர் திரும்பி வந்து கொண்டிருந்தார். பத்து நிமிஷங்கள் அவரை நலம் விசாரிப்பதிலும் அவரோடு பேசுவதிலும் கழிந்தன. சத்தியமூர்த்தி முகம் கைகால் கழுவிக்கொண்டு இரவு உணவுக்காகப் புறப்பட்ட போது "நானும் வருகிறேன் சார்!" என்று சுந்தரேசனும் புறப்பட்டார்.

சாப்பாடு முடிந்து அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, "ஒரு நல்ல ஆங்கிலப் படம் நடக்கிறது. போய்விட்டு வரலாமே" என்று சுந்தரேசன் வற்புறுத்தினார். "ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள், பிரயாணக் களைப்பு வேறு இருக்கும். தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு எதற்காகப் படத்துக்குப் போக வேண்டும் என்கிறீர்கள்?" என்று சத்தியமூர்த்தி மறுத்தும் அவர் பிடிவாதமாகப் படத்துக்குப் போக வேண்டும் என்றார். "அந்தப் படம் இன்றைக்குத்தான் கடைசி நாள். நாளைக்கு வேறு படம் வந்து விடுகிறது சார். 'இம்பீரியல் ரோம் பீரியடில்' அடிமைகள் கொடுமைப் படுத்தப் பெற்றதையும் அந்த அடிமைகளின் கூட்டத்திலிருந்து கிளர்ந்தெழுந்த வீரன் ஒருவன் அரச வம்சத்துப் பெண்ணைக் காதலிப்பதைப் பற்றியும் வருகிற கதை. பிரமாதமாக எடுத்திருக்கிறானாம். ஆங்கில வரலாற்றுப் படங்களிலேயே இப்படி ஒரு படம் இதுவரை வந்ததில்லையாம். ஒன்றரை நாள் இரயிலிலும் பஸ்ஸிலுமாகப் பயணம் செய்து வந்த அலுப்பு இருந்தாலும் இன்றைக்கு இந்தப் படத்தைப் பார்க்காமல் தவற விட்டு விட்டேனானால் அப்படித் தவற விட்டுவிட்டேன் என்ற ஏக்கத்தினாலேயே நாளைக்கு இதைவிட அதிக அலுப்பாக இருக்கும் எனக்கு" என்று பக்குவமடையாத சிறுபிள்ளை மனத்தோடு வற்புறுத்தினார் சுந்தரேசன். சத்தியமூர்த்திக்கு முரண்டு பிடித்து பழக்கமில்லை. 'பிறரைத் தனக்காக அளவு கடந்து வற்புறுத்துவதும் சத்தியமூர்த்திக்குப் பிடிக்காது. பிறர் தன்னிடம் வேண்டுகோளோடு நிற்கும்போது, வேண்டுகோளுடன் போய் நிற்பதே அருமையாகவும் வாய்க்கும்படி பழக்கப்படுத்திக் கொண்டிருந்தான் அவன். இப்போது சுந்தரேசன் வற்புறுத்தித் திரைப்படத்துக்கு அழைத்த வேளையிலும் அவன் அப்படியே நடந்து கொள்ள நேர்ந்தது. "உங்கள் விருப்பத்தைக் கெடுப்பானேன்? போகலாம், வாருங்கள்" என்று அவரோடு திரைப்படத்துக்குப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி.

மல்லிகைப் பந்தல் நகரில் இருந்த இரண்டு மூன்று முக்கியமான திரைப்படக் கொட்டகைகளும் அந்த 'லேக் சர்க்கில்' பகுதியிலே இருந்தன. அங்குள்ள தியேட்டர்களில் சிறந்ததும் வழக்கமாக ஆங்கிலப் படங்கள் மட்டுமே நடைபெறக் கூடியதுமாகிய 'புளுஹில் பாரடைஸில்' நுழைந்தனர் இருவரும். சுந்தரேசனுடன் இடையிடையே பேசிக் கொண்டே பல வண்ணப் படமாகவும் பல்சுவைக் காவியமாகவும் எடுக்கப் பட்டிருந்த அந்தத் திரை ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போதும் கூடத் தந்தையின் கடிதமும் அந்தக் கடிதத்தில் நிரம்பியிருந்த வீட்டுக் கஷ்டங்களைப் பற்றிய சிந்தனைகளும் தாயின் உடல்நலக் குறைவுமே சத்தியமூர்த்தியின் மனத்தில் அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தன. இரும்பு இதயம் படைத்த பிரபுக்களின் கொடுங்கோன்மையில் சிக்கிக் கண்களும் உடம்பும் இரத்தமும் சிந்திடத் தவிக்கும் அடிமைகளின் அவல வாழ்க்கையைத் திரையில் மிக நன்றாகச் சித்தரித்திருந்தார்கள். "ஒரு தலைமுறையின் சரித்திரம் பின்னால் வருகிற மற்றொரு தலைமுறைக்குக் காவியமாகி விடுகிறது பார்த்தீர்களா? எதையும் கலையழகுபடச் சித்தரிக்க முடியுமானால் மனிதர்கள் கொடுமையில் வாடித் துன்பப்படுவதைக் கூட கலையழகுபடச் சித்தரிக்க முடியும் என்பதை இந்தப் படத்தில் நிரூபித்து விட்டார்கள்" என்று திரைக்காட்சி முடிந்து வெளியே வந்தபோது சுந்தரேசன் உற்சாக மிகுதியில் ஆர்வம் பொங்கச் சொல்லிக் கொண்டே வந்தார். பூபதியும் அவர் மகளும் கூட அன்று அந்தத் திரைப்படத்துக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. காட்சி முடிந்ததும் சத்தியமூர்த்தியும் சுந்தரேசனும் தியேட்டருக்கு வெளியே கார்களைப் 'பார்க்' செய்திருந்த பகுதியைக் கடந்து நடந்து கொண்டிருந்த போது பூபதியும் அவர் மகளும் காரில் புறப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். போகிற போக்கில் பாரதியின் பார்வை ஒருகணம் சத்தியமூர்த்தியின் மேல் தயங்கிவிட்டு விலகியது. அப்படி விலகும்போது கடுமையோடும், அலட்சியமாகவும் விலகுவது போல் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. சத்தியமூர்த்தியின் பார்வை சென்ற திசையை ஒட்டிச் சுந்தரேசனின் கண்களும் திரும்பின. "நம்முடைய காலேஜ் கரஸ்பாண்டண்டும் அவர் பெண்ணும் கூட இந்தப் படத்துக்கு வந்துவிட்டுப் போகிறாங்க போலிருக்கே..." என்று வியந்தாற் போல் சத்தியமூர்த்தியின் காதருகே கூறினார் சுந்தரேசன். "ஆமாம், நானும் பார்த்தேன்" என்று சுவாரஸ்யம் இல்லாமல் அவருக்குப் பதில் கூறினான் சத்தியமூர்த்தி. அறைக்குத் திரும்பும் போது குளிர் கடுமையாக இருந்தது. மூச்சு விடும்போது மூக்குத் துவாரங்களின் வழியே புகை வருவது போல் தெரிய, அங்கும் இங்குமாக இழுத்துப் போர்த்தியபடி விரைந்து கொண்டிருந்தார்கள் மனிதர்கள்.

"அடுத்த மாதச் சம்பளத்திலாவது நீங்களும் நானும் ஆளுக்கொரு 'எலக்ட்ரிக் ஹீட்டர்' வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஊரில் குளிரில் காலம் தள்ளுவது சிரமமாக இருக்கும் போலிருக்கு சார்" என்று சுந்தரேசன் பேச்சுப் போக்கில் ஞாபகப்படுத்தினார். 'அடுத்த மாதத்திலிருந்துதான் அப்பா நூற்றைம்பது ரூபாய்க்குக் குறையாமல் ஊருக்கு அனுப்ப வேண்டுமென்று எழுதியிருக்கிறார். ஹீட்டர் வாங்குவதற்குப் பணத்துக்கு எங்கே போவது?' என்று மனம் நினைத்து வருந்தத் தொடங்கிய அதே வேளையில், "நீங்கள் விரைவில் உங்களுடைய உபயோகத்துக்காக ஒரு ஹீட்டர் வாங்கிக் கொள்ளுங்கள் சுந்தரேசன்! எனக்கு இப்போது அவசரமில்லை" என்று வாயினால் நாகரிகமாகப் பதில் சொல்லித் தன் வறுமையை மறைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி.

அறைக்குத் திரும்பிப் போய்ச் சேர்ந்த போது சத்தியமூர்த்திக்காக அவனே முற்றிலும் எதிர்பாராத ஆச்சரியம் அங்கே காத்திருந்தது. மாடிப்படி ஏறுகிற வழியில் ராயல்பேக்கரி வாசல் வராந்தாவில் பெட்டி-பை-ஹோல்டால் சகிதம் குமரப்பன் வந்து காத்துக் கொண்டிருந்தான். பிரயாணத்தினால் தலை முன் நெற்றியில் வந்து கத்தி நுனியாகச் சரிந்திருந்த 'கிராப்' அந்த முகத்தின் குறும்புத்தனத்தை அதிகமாக்கிக் காண்பித்துக் கொண்டிருந்தது.

"என்னப்பா இது! சொல்லாமல் கொள்ளாமல் நடு இரவில் திடுதிப்பென்று வந்து சேர்ந்திருக்கிறாய்? குத்து விளக்கில் வெளியாகும் கார்ட்டூன்களும் நகைச்சுவைப் படங்களும் தான் வியப்பும் அதிர்ச்சியும் தரக்கூடியவைகளாயிருக்குமென்றால் அவைகளை வரைகிறவருடைய காரியங்கள் அவற்றை விட அதிர்ச்சி தரக்கூடியவைகளாயிருக்கிறதே?" என்று சத்தியமூர்த்தி வினாவவும், "மல்லிகைப் பந்தலையும் உன்னையும் தேடிக் கொண்டு வருகிறவர்கள் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று புறப்பட்டு வரக்கூடாது என்று யாராவது நிபந்தனை விதித்திருக்கிறார்களா சத்தியம்? ஏதோ தோன்றியது மூட்டையைக் கட்டிக் கொண்டு புறப்பட்டு வந்துவிட்டேன். இப்படித் திடீரென்று வரக் கூடாதென்று நீ கருதுவதாக இருந்தால் காலையில் முதல் பஸ்ஸுக்குத் திரும்பிப் போய் விடட்டுமா?"

'அந்த அர்த்த ராத்திரி வேளையிலும் தன்னுடைய இயற்கை குணமான குறும்பும் கேலியும் சிறிது கூடக் குறையாமல் நான் தான் குமரப்பன் வந்திருக்கிறேன்' என்று தான் வந்திருப்பதைத் தன் பேச்சினாலும், சிரிப்பினாலுமே நிரூபித்துக் கொண்டு நின்றான் குமரப்பன். சுந்தரேசனுக்கும் குமரப்பனுக்கும் அறிமுகம் செய்து வைத்தான் சத்தியமூர்த்தி. "பாடனி படித்தவரா? ரொம்பப் பொருத்தமான ஊருக்குத்தான் வந்திருக்கிறீர்கள். ஒன்றும் பொழுது போகவில்லையானால் ஏதாவது இலையைக் கிள்ளியோ, செடியை முறித்தோ ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கலாம். இலைகளுக்கும் செடிகளுக்கும் பஞ்சமில்லாத ஊராச்சே இது" என்ற சந்தித்த முதல் விநாடியிலேயே உரிமையோடு சுந்தரேசனிடம் கேலியில் இறங்கி விட்டான் குமரப்பன். 'மனிதர்களுக்குள்ளே நான் கேலியும் கிண்டலும் செய்யமுடியாத அதிக உயரத்தில் இருப்பவர்கள் யாரும் கிடையாது' என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு விட்டாற் போன்ற அசகாய சூரத்தனத்தோடு பழகுவான் குமரப்பன். இந்தச் சூரத்தனத்தைக் கண்டு பலமுறை தனக்குள் மலைத்துப் போயிருக்கிறான் சத்தியமூர்த்தி. சில துறுதுறுப்பான குழந்தைகளுக்கு வேற்று முகமே தெரியாது. எவரிடமும் கலகலப்பாக நெருங்கிப் பழகும் துணிவை அந்தக் குழந்தைகளின் சுறுசுறுப்பிலும் குறுகுறுப்பான பழக்கவழக்கங்களிலும் காணலாம். குமரப்பனும் அத்தகைய சுபாவமுள்ளவன் தான். அவனுடைய குறும்புத் தனத்தில் வஞ்சகம் கிடையாது. குமரப்பனுடைய மூட்டை முடிச்சுக்களை அவனும் சத்தியமூர்த்தியுமாக ஆளுக்குப் பாதியாகப் பிரித்துச் சுமந்து கொண்டு மாடிப்படி ஏறியபோது, "என்னடா பழி! இரண்டு இரண்டரை மணி நேரம் ஓர் உண்மை நண்பனை இப்படி இந்தக் குளிரில் காத்துக் கிடக்கும்படி செய்து விட்டாயே! இது நியாயமா உனக்கு? பாடனி சார்! நீங்களே சொல்லுங்கள்; நான் வருகிற இன்றைக்கென்றா இவன் சினிமாவுக்குப் போவது?" என்று சத்தியமூர்த்தியைக் கேட்டு விட்டுச் சுந்தரேசன் பக்கமாகத் திரும்பி அவரையும் வம்புக்கு இழுத்தான் குமரப்பன்.

"என்ன கார்ட்டூனிஸ்ட் அவர்களே! இப்படித் திடீரென்று இங்கே புறப்பட்டு வந்துவிட்டீர்களே; வருகிற வாரம் குத்து விளக்கில் தங்கள் கார்ட்டூன்களைக் காண முடியுமோ, இல்லையோ?" - சத்தியமூர்த்தியின் இந்தக் கேள்விக்கும் குமரப்பன் கூறிய பதில் விநோதமாக இருந்தது.

"கார்ட்டூன் போட்டுக் கொடுத்து விட்டுத்தான் வந்திருக்கிறேனடா சத்தியம்! அது ரொம்பவும் சுவாரஸ்யமான கார்ட்டூனாக இருக்கும். ஆனால் அந்தக் கார்ட்டூனைக் குத்து விளக்கில் பிரசுரிப்பார்களா என்பதுதான் சந்தேகமாயிருக்கிறது!"

"ஏன் அப்படி...?"

"இத்தனை சுலபமாக உன் கேள்விக்குப் பதில் சொல்ல்விட முடியாது, அப்பனே! இன்றைக்கு 'ஸ்கெட்ச்' மட்டும் தான் கொடுக்க முடியும். எல்லாம் நாளைக் காலையில் விவரமாகச் சொல்கிறேன்..." என்று கூறிக்கொண்டே ஹோல்டாலை விரித்துப் படுக்கையைப் போடத் தொடங்கியிருந்தான் குமரப்பன்.

அத்தியாயம் - 32

ஒரு தொழிலை நாம் செய்கிற போது அந்தத் தொழிலைப் பற்றி முதலில் நமக்கு ஒரு சுயமரியாதை வேண்டும். இல்லாவிட்டால் அதை நாம் ஒரு போதும் நாணயத்தோடு செய்வதற்கு முடியவே முடியாது.

காலையில் சத்தியமூர்த்தி விழித்து எழுந்திருப்பதற்கு முன்பாகவே குமரப்பன் எழுந்து நீராடி உடைமாற்றிக் கொண்டு மாடி வராந்தாவில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டே எதிர்ப்புறம் மலைக் காட்சிகளையும், ஏரியையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். ஆள் மிகவும் உற்சாகமாய் இருப்பதற்கு ஓர் அடையாளம் போல் அவனுடைய வாயிதழ்கள் ஏதோ விருப்பமான பாடலைச் சீட்டியடித்துக் கொண்டிருந்தன.

"இதென்ன புது வழக்கமாக இருக்கிறதே, குமரப்பன்? நீ எப்போதுமே நேரங்கழித்து விழித்துக் கொள்கிறவனாயிற்றே?" என்று கேட்டுக் கொண்டே படுக்கையிலிருந்து எழுந்து வந்தான் சத்தியமூர்த்தி. சுந்தரேசன் இன்னும் எழுந்திருக்கவில்லை. இழுத்துப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தார்.

"ரொம்ப நாட்களாக ரொம்ப விஷயங்களில் நேரம் கழித்துத்தான் விழித்துக் கொண்டிருந்தேனடா, சத்தியம்! ஆனால் இப்போதெல்லாம் சீக்கிரமாகவே விழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டேன். காலையில் மட்டுமில்லை. எல்லா நேரத்திலும் எல்லா விஷயங்களிலுமே சீக்கிரமாக விழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டேன்" என்று குமரப்பன் கூறிய பதிலில் இரண்டு தொனி இருந்தது. சத்தியமூர்த்தி அவ்வளவில் விட்டுவிடாமல் நண்பனை மேலும் தூண்டிக் கேட்டான். "என்ன தான் சொல்கிறாய் நீ? உன்னுடைய திடீர் வரவு தான் ஆச்சரியமாக இருக்கிறதென்றால் நீ பேசுகிற பேச்சும் ஆச்சரியமாகவே இருக்கிறது குமரப்பன்! கொஞ்சம் புரியும் படியாகத்தான் சொல்லேன்."

"நீ என்னுடன் ஒரு மணி நேரம் தனியாக வெளியில் உலாவ வருவதற்குத் தயாராயிருந்தால் எல்லாவற்றையும் சொல்கிறேன். சொல்வதற்கு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் உன்னைப் போல் ஓர் உண்மை நண்பனிடம் எல்லாவற்றையும் மறக்காமல் சொல்லியும் ஆக வேண்டும். நான் எதைச் சொல்லப் போகிறேனோ அதில் நீ கவலைப்படுவதற்கும் ஒன்றுமில்லை; நான் கவலைப்படுவதற்கும் ஒன்றுமில்லை; தனக்காகத் தான் கவலைப்படுவதே அவமானம் என்று எண்ணும் உண்மைத் தைரியசாலி ஒருவன் தனக்கு அனுதாபப்படுவதாகப் பிறர் கவலைப்படுவதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் குமரப்பன். அவசரமாகப் பல் விளக்கி நீராடி முடித்துக் கொண்டு நண்பனுடைய வேண்டுகோளை மறுக்காமல் அவனோடு உலாவச் சென்றான் சத்தியமூர்த்தி. பக்கத்து உணவு விடுதியில் காலைக் காப்பி சிற்றுண்டியை முடித்துக் கொண்டு புறப்பட்டார்கள் நண்பர்கள். சிறிது தொலைவு வரை மௌனமாக நடந்த பின்பு குமரப்பன் தானாகவே பேச்சை ஆரம்பித்தான்.

"குத்துவிளக்கில் வருகிற வாரம் என்ன கார்டூன் வரும் என்று நேற்றிரவு நீ என்னைக் கேட்டாயல்லவா? கொந்தளிக்கும் கடலில் ஒரு சிறு படகு தத்தளிப்பதாகவும் அந்தப் படகின் நடுவே ஒரு குத்துவிளக்கு காற்றில் ஆடியசைந்து அவிவதாகவும் வரைந்து, கொந்தளிப்பின் மேல் ஊழல் என்றும் படகின் மேல் தரமின்மை என்றும் எழுதி நிர்வாகியின் மேஜை மேல் கொண்டு போய் எறிந்தேன். திரும்பிப் பாராமல் வந்துவிட்டேன். கடந்த ஒரு வாரத்திற்குள் அந்தப் பத்திரிகையின் நிர்வாகம் உரிமை எல்லாம் கைமாறி மஞ்சள்பட்டி ஜமீந்தாரிடம் போய்விட்டது. அவரும் கண்ணாயிரமும் அடிக்கடி காரியாலயத்துக்கு வந்து எல்லாரையும் வாயில் வந்தபடிப் பேசி மிரட்டுகிறார்கள்.

"கணக்கு வழக்குகளைப் புரட்டிப் பார்த்தபோது, காரியாலயத்தில் யார் யாருக்கு என்ன சம்பளம் என்று விசாரித்த ஜமீந்தார், என் சம்பளத்தைப் பற்றிக் கேட்டதும், 'என்ன ஆச்சரியம்? அப்படியும் இப்படியுமா இரண்டு கோட்டை இழுத்துப் பொம்மை போடறவனுக்கு இவ்வளவு சம்பளமா?'ன்னு கேட்டாராம். அதுதான் சமயமென்று பக்கத்திலிருந்த கண்ணாயிரம், 'இத்தனை சம்பளம் போதாதுன்னு திமிர் பிடிச்ச ஆளாகவும் வேறு வந்து சேர்ந்திருக்கான்' என்று என்னைப் பற்றிச் சொன்னானாம். ஒரு தொழிலை நாம் செய்கிறபோது அந்தத் தொழிலைப் பற்றி முதலில் நமக்கு ஒரு சுயமரியாதை வேணும். இல்லாவிட்டால் அதை நாம் நாணயத்தோடு செய்ய முடியாது. அந்த சுய கௌரவத்தைக் கூடப் புரிந்து கொள்ளாத இடத்திலிருந்து குப்பை கொட்டுவதை விட நடந்து காட்டி விடுவது மேல் என்று நடையைக் கட்டி விட்டேன். கண்ணாயிரம் என்ற குரங்கு குத்துவிளக்கு என்ற மலர் மாலையை எடுத்துக் குலைப்பதாக ஒரு படம் வரைந்து அந்தப் படத்தின் மேலே 'குரங்கு கையிலகப்பட்ட பூமாலை' என்றும் எழுதி என்னுடைய ராஜிநாமாக் கடிதத்தோடு சேர்த்து அனுப்பிவிட்டு மூட்டையைக் கட்டிக் கொண்டு மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்திருக்கிறேன். 'ஏன் இங்கே வந்தாய்?' என்று நீ என்னைக் கேட்க மாட்டாய். கேட்டால் அதற்கும் பதில் தயாராக வைத்திருக்கிறேன். வேலைக்குத் தலை முழுகி விட்டு வந்த உற்சாகத்தை யாராவது ஓர் உண்மை நண்பனோடு இருந்து கொண்டாட வேண்டும் என்று தோன்றியது. அதை உன்னோடு கொஞ்ச நாள் இருந்து கொண்டாடலாம் என்ற எண்ணத்தோடு தான் வந்திருக்கிறேன்..."

குமரப்பனுடைய பேச்சில் வருத்தத்துக்குப் பதில் உற்சாகம் தான் அதிகமாக இருந்தது. எல்லாவற்றையும் போட்ட பின் சிறிது தொலைவு ஒன்றும் பதில் பேசாமல் சத்தியமூர்த்தி தயக்கத்தோடும் மௌனத்தோடும் நடந்து வருவதைக் கூடக் குமரப்பனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "என்னடா சத்தியம்! பதில் பேசாமல் வருகிறாயே? நான் செய்துவிட்டு வந்தது ஏதோ பெரிய ஆகாத காரியம் என்று நினைத்து நீ அதற்காகத் துக்கம் கொண்டாடுவதாக இருந்தால் நாளைக்கே நான் இங்கிருந்து பஸ் ஏறி விடுவேன். உன்னை நான் அப்படி எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் உன்னிடம் வந்திருக்கிறேன்."

"நீ வந்ததைப் பற்றி நான் எவ்வளவு ஆச்சரியப்படுகிறேனோ அவ்வளவிற்கு மகிழ்ச்சியும் அடைகிறேன் குமரப்பா! எனக்கு நன்றாக உன்னைத் தெரியும். இதைப் பற்றி நான் தவறாக எண்ணமாட்டேன். ஆனால் உலகியல் வேறு. நியாயத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடி, அதனால் சொந்த வசதிகளை நிறைவு செய்கிற உத்தியோகத் தொழுவிலிருந்து விடுபட்டு ஓடி வருகிறவர்களைப் பலர் எதிர்கொள்ளத் தயங்குவதுதான் சமூக வழக்கம். நீயானால் ஏதோ பெரிய தளையிலிருந்து விடுபட்டு வந்து நிற்கிறவனைப் போல் சிரிக்கிறாய்... சந்தோஷப்படுகிறாய்..."

"ஆமாம்! இதற்காகச் சந்தோஷப்படுவதில் இதைவிடப் பரிபூரணமான எல்லை ஒன்று இருக்க முடியுமானால், அந்த எல்லைவரை துணிந்து சென்று சந்தோஷப்படுவதற்குக் கூட நான் இப்போது தயாராக இருக்கிறேன். நம்முடைய உணர்ச்சிகளின் நியாயத்தையும் மானத்தையும் புறக்கணித்து விட்டு நம்மை அடக்கி ஒடுக்கி ஆள விரும்புகிறவர்களுடைய உணர்ச்சிகளின் அநியாயத்துக்கும் அவமானத்துக்கும் பண்டமாகிற போதெல்லாம் நாம் நிச்சயமாகத் தளைப்படுகிறோம் என்பதில் சந்தேகமே இல்லை. தளையிலிருந்து விடுபட்டு வந்து விட்டதாகத் தான் உணர்கிறேன். 'குத்து விளக்கில் இருந்து கொண்டே என்னுடைய நியாயங்களுக்காகவும், தன்மான உணர்வுகளுக்காகவும் நான் போராடினால் என்ன?' என்று நீ என்னிடம் கேட்க நினைக்கலாம். நான் என்னுடைய எதிரிகளாகக் கருதத் தகுந்தவர்களோடு மட்டும் தான் எதிர்த்துப் போராடலாம். என் எதிரிகளாகக் கருதவும் கூடத் தகுதியில்லாதவர்களோடு நான் எப்படிப் போராட முடியும்? போராடுவதற்குக் கூட நம்முடைய எதிரிகள் நம்மளவுக்குப் பக்குவமானவர்களாக இருக்க வேண்டாமா? அங்கே அதுவும் இல்லை. கண்ணாயிரம் என்னிடம் நேரில் பேசுவதற்குப் பயப்படுகிறான். பின்புறமாக நான் இல்லாதபோது ஜமீந்தாரிடம் சிண்டு முடிகிறான். ஜமீந்தாரோ, "பொம்மை போடுகிறவருக்கு இவ்வளவு சம்பளமா?" என்று கேட்கிற அளவுக்கு மூடனாயிருக்கிறான். இந்தச் சூழ்நிலையில் நான் செய்கிற தொழிலில் சுயமரியாதை இருக்கிறதே, அதைக் காத்துக் கொள்ளவாவது நான் அங்கிருந்து வெளியேறியாக வேண்டும்."

"உண்மைதான்! சுயமரியாதையும் பெருமையும் காத்துக் கொள்வதுதான் ஆண்பிள்ளைக்குக் கற்பு என்ற பொருளில் ஒரு திருக்குறள் கூட உண்டு. 'பெண்களுக்குக் கற்பைப் போல் ஆண்களுக்குக் கற்பு அவர்களுடைய பெருமைதான்' என்று அந்தக் குறளில் வள்ளுவர் கூறியிருக்கிறார். "ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத் தான் கொண்(டு) ஒழுகின் உண்டு' என்ற குறள் கேள்விப்பட்டிருக்கிறாயா குமரப்பன்?"

"எனக்குக் குறள் எல்லாம் தெரியாது அப்பனே அதெல்லாம் சொல்வதற்குத்தான் நீ இருக்கிறாயே! குறள் படித்திருக்கிறார். எத்தனையோ ஆண்டுகள் ஆசிரியராக இருந்து குறளை மாணவர்களுக்குச் சொல்லியும் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவ்வளவு பெரிய மதுரையில் மஞ்சள்பட்டியாரையும், கண்ணாயிரத்தையும் தான் அவரால் பெரிய மனிதர்களாக மதிக்க முடிகிறது. உன்னாலும் என்னாலும் அப்படி மதிக்க முடியவில்லையே! அது ஏன்?" - என்று குமரப்பன் கேட்டபோது முதல் நாள் தந்தையின் கடிதத்தைப் படித்த சமயத்தில் இதே விஷயத்தைத் தானும் சிந்தித்ததைப் பற்றி நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. அவர்கள் இரண்டு பேருடைய சிந்தனையும் இந்த விஷயத்தில் ஒன்றாயிருந்தது.

"உங்கள் தெருப் பக்கமாக ஒரு நாள் போயிருந்தேனடா சத்தியம்! உங்கள் வீட்டு மாடியை இடித்துக் கட்டுகிறார்கள் போலிருக்கிறது. மராமத்து வேலைகள் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். கண்ணாயிரத்தோடு காரில் உன் தந்தையையும் இரண்டு மூன்று முறை வேறு வேறு இடங்களில் பார்த்தேன். மற்றொரு நாள் ஜமீந்தாரோடு கூடப் பார்த்தேன். பாவம் அலைகிறார்" என்று குமரப்பன் மேலும் தந்தையைப் பற்றிக் கூறிய போது தன் தந்தை அந்தத் தீயவர்களையெல்லாம் அண்டிக் கொண்டிருப்பதை நினைக்கவும் வெட்கமாக இருந்தது. சத்தியமூர்த்திக்குச் சௌகரிய அசௌகரியங்கள் பெரிய தளைகளாக இருந்து வாழ்க்கையில் நல்லவர்கள் நல்லவர்களோடு இணைய முடியாமலும், கெட்டவர்களுக்கு நல்லவர்களும் கலந்தோ சம்பந்தப்பட்டோ தவிக்க நேரிடுவதையும் அவன் அப்போது தன் சிந்தனையில் பொறுத்துக் கொண்டே தீர்வதற்குப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நண்பர்கள் இருவரும் அறைக்குத் திரும்பும் போது சத்தியமூர்த்தி கல்லூரிக்குப் புறப்பட நேரமாகியிருந்தது. குமரப்பன் திடீரென்று வந்ததினால் ஏற்பட்ட திகைப்போ, அல்லது அவன் குத்துவிளக்கு வேலையை உதறிவிட்டதனால் விளைந்த வருத்தமோ எதுவும் இல்லாமல் சினேகத்துக்கு அந்தரங்கமான உண்மை நண்பன் வந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சி ஒன்று மட்டுமே நிலவும் மனத்தோடு தான் அறைச்சாவியை அவனிடம் கொடுத்து விட்டுக் கல்லூரிக்குப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி. சுந்தரேசன் அவர்கள் இருவரும் திரும்புவதற்குள் எழுந்து நீராடிக் கல்லூரிக்குப் புறப்பட்டுப் போயிருந்தார். இடைவேளையில் கல்லூரி விட்டதும் தான் வந்துவிடுவதாகவும், அதன் பிறகு இருவரும் சேர்ந்து பகல் உணவுக்குப் போகலாம் என்றும் சத்தியமூர்த்தி நண்பனிடம் கூறியிருந்தான். நண்பன் குமரப்பனும் அதுவரையில் அறையில் தங்கி ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி அங்கே இருந்து கொண்டான்.

அன்று வகுப்பில் சத்தியமூர்த்திக்கு ஒரு புதுமையான அநுபவம் ஏற்பட்டது. பாடம் நடத்திக் கொண்டிருந்த போது ஏதோ மேற்கோளுக்காகப் புறநானூற்றுப் பாடல் வரிகள் சிலவற்றைச் சொல்லி விளக்க வேண்டியிருந்தது. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா - நோதலும் தணிதலும் அவற்றோரன்ன' என்று அந்தப் பாடலில் தான் சொல்ல வேண்டிய மேற்கோளுக்குப் பொருத்தமான அடிகளைக் கூறிவிட்டுத் 'தீமையும் நன்மையும் பிறர் தருவதனால் வருவதாக நினைப்பது பேதமை; அதைப் போலவே நாம் வருந்துவதற்கும் வருத்தம் தணிவதற்கும் பிறர் காரணமாக அமைவதில்லை...' எனப் பொருளை விளக்கிய போது ஒரு நாளும் இல்லாத வழக்கமாகப் பாரதி கேள்வி கேட்பதற்காக நடுவகுப்பில் எழுந்து நின்றாள்.

மாணவர்கள் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்க எழுந்து நிற்கும்படி எதையும் அவன் மீதம் விடுவதில்லை. மாணவர்கள் மனதில் எந்த எந்த இடங்களில் இயற்கையாக என்னென்ன சந்தேகங்கள் எழ முடியும் என்ற தடைகளையும் தனக்குத் தானே எழுப்பிக் கொண்டு அவற்றுக்கும் சேர்த்து விடைகளைக் கூறி முடிப்பது சத்தியமூர்த்தியின் வழக்கம். அதனால் அவன் பாரதியை உட்காரச் சொல்லிக் கையமர்த்தினான். அவன் கையமர்த்தியதைக் கவனிக்காதது போல் முகத்தையும் கடுமையாக வைத்துக் கொண்டு, "எனக்கு ஒரு சந்தேகம் சார்! அதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக நான் இப்போது நிற்கிறேன்" என்றாள் பாரதி. சத்தியமூர்த்திக்கு அவள் முரண்டு பிடிப்பதாகவோ அடம் பண்ணுவதாகவோ தோன்றியது.

"எதைச் சொல்லி விளக்கிக் கொண்டிருக்கிறேனோ அதை நான் இன்னும் முடிக்கவில்லை, மிஸ் பாரதி! நான் முடித்த பிறகு ஒருவேளை உங்கள் சந்தேகம் தீர்ந்து போனாலும் போகலாம். தயவு செய்து நான் முடித்த பின்பு கேளுங்கள்..." என்று சற்றே கடுமையான குரலில் சொல்லி அவளை உட்கார வைத்தான் சத்தியமூர்த்தி. தன்னுடைய சொற்பொழிவில் கட்டுண்டு கிடந்த பெரிய வகுப்பினிடையே அமைதியைக் கலைப்பது போல் முன் வரிசையில் ஒரு பெண் எழுந்து நின்று அடம் பிடித்ததை அவன் அவ்வளவாக விரும்பவில்லை.

"தீமையும் நன்மையும் நம் கண் காணப் பிறர் செய்வதனாலேயே நமக்கு வருவதை உலகியலில் ஒவ்வொரு நாளும் காண்கிறோம். அதைப் போலவே நம்முடைய வருத்தத்துக்கும், மகிழ்ச்சிக்கும் காரணமான செய்கைகளையும் பிறர் நமக்குச் செய்வதையும் காண்கிறோம். அப்படி இருக்கும் போது இந்தப் பழைய பாடலில் கூறப்பட்டிருக்கிற தத்துவம் எவ்வாறு பொருந்தும் என்று உங்களில் சிலருக்குச் சந்தேகம் உண்டாகலாம். 'மாடர்ன் சென்ஸிபிலிட்டி' என்று சொல்கிறார்களே அந்தப் புதிய அறிவுணர்ச்சி... எவ்வளவுக்கு நவீனமானதோ அவ்வளவுக்குப் பலக் குறைவானதாகவும் சில இடங்களில் இருக்கும். உதாரணமாக இந்தப் பாடலில் நான் சொல்லிய விதமான சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டு அந்த சந்தேகம் ஏற்படுவதற்குக் காரணமாக உங்களுடைய 'மாடர்ன் சென்ஸிபிலிட்டி' தான் தூண்டுதலாக இருக்கிறது என்று நீங்கள் எண்ணுவது பிழை. இந்தப் பாடல் எந்த நிலையில் எத்தகைய சான்றோரால் எதற்காகக் கூறப்பட்டதென்று சிந்தித்தால் இப்படி ஒரு சந்தேகமே உங்களுக்கு எழப் போவதில்லை. மனிதர்களுக்கு மனிதர்கள் பகையின்றி வாழவும், கருணையும், அன்பும் நிறைந்த உலகைக் காணவும், பொருள் மொழிக் காஞ்சியாக அறிவுரை கூறுகிற சான்றோர் ஒருவர் இதைப் பாடியிருக்கிறார். விருப்பும் வெறுப்புமில்லாமல் வாழப் பழகிக் கொண்ட பெருந்தன்மையாளர் ஒருவர் 'துன்பமும் இன்பமும் பிறர் தருவதனால் வருவதாக எண்ணித் துன்பம் செய்கிறவர்களை வெறுக்கவும் இன்பம் செய்கிறவர்களை விரும்பவும் பழகிக் கொள்ளலாகாது' என்று சம நிலையோடு அறிவுரை சொல்கிறாரென்றால், அந்த ஒற்றை மனத்தின் பண்பாட்டு உயர்வை மட்டுமாவது நாம் போற்ற வேண்டாமா? நீதி நூல் கருத்துக்களிலும், அறநூல் கருத்துக்களிலும் அதிகமாகச் சந்தேகம் கேட்கிறவர்கள் இந்த அடிப்படையை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். 'அறம் செய்வது நல்லது' என்றால் 'இன்று நம் கண் காணப் பலர் அறம் செய்யாமலே நன்றாக இருக்கிறார்களே?' என்று சந்தேகம் கேட்டுவிடத்தான் 'மாடர்ன் சென்ஸிபிலிட்டி' என்று நினைப்பது தவறு உணரும் முறை நவீனமாயிருக்கலாம். அதைத்தான் 'மாடர்ன் சென்ஸிபிலிட்டி' என்கிறோம். ஆனால் உணரும் முறை பிறழ்வதாயிருக்கக் கூடாது; பிறழ உணர்வதை மட்டுமே 'மாடர்ன் சென்ஸிபிலிட்டி' என்று கூறுவதாய் இருந்தால் 'மாடர்ன்' சென்ஸிபிலிட்டி' என்பதன் ஒரே நோக்கம் 'பிறழ உணர்தல்' என்று முடிவு செய்ய நேரிடும். 'மாடர்ன் சென்ஸிபிலிட்டி இன் பொயட்ரி' என்பதைப் பற்றி இன்னொரு நாள் நான் உங்களுக்கு விரிவாகச் சொல்கிறேன்" என்று விளக்கி முடித்ததும் ஞாபகமாகப் பாரதியின் பக்கம் திரும்பி, "இனி உங்கள் சந்தேகத்தைக் கேட்கலாம் மிஸ். பாரதி" என்று சத்தியமூர்த்தி கூறிய போது அவள் எழுந்து நின்று ஒன்றும் கேட்கத் தோன்றாமல் விழித்தாள். அதைக் கண்டு மாணவர்கள் இரைந்து சிரித்து விட்டார்கள். அவளுக்கு அவமானம் பிடிங்கித் தின்றது. டெஸ்க்கிலிருந்து தன் புத்தகங்களை அவசரம் அவசரமாக அள்ளிக்கொண்டு முகம் சிவந்து போய் உதடுகள் துடிதுடிக்க வகுப்பறையிலிருந்து வெளியேறி விட்டாள் அவள்.

வகுப்பறையிலிருந்து வெளியேறிச் செல்லும் போது அவள் தலை தாழ்ந்து போயிருந்தது. சத்தியமூர்த்திக்கு இதைப் பார்க்க வேதனையாயிருந்தது. 'பெரிதாக என்ன நடந்துவிட்டது? எதற்காக இந்தப் பெண் நடுவகுப்பில் பாடவேளை முடிவதற்குள் சொல்லாமல் கொள்ளாமல் இப்படி எழுந்து போகிறாள்?' என்றெண்ணி அவன் வருந்தினான். வகுப்பில் பாரதிக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவியைக் கூப்பிட்டு, "போய் அழைத்து வாருங்கள். எழுந்து வெளியே போகும்படி இப்போது என்ன நடந்துவிட்டது? மாணவர்களில் யாராவது வகையாக மாட்டிக் கொள்ளும்போது மாணவிகளாகிய நீங்களும் தான் சிரிக்கிறீர்கள்! அப்போது அதற்காக உங்களை என்ன செய்வது? குழந்தைப் புத்தியோடு இருந்தால் நன்றாயில்லை. உங்கள் சிநேகிதியை வகுப்பில் வந்து உட்காரச் சொல்லுங்கள். கல்லூரி யூனியன் தலைவியாக வந்திருக்கிற மாணவியே இப்படி நடந்து கொள்வது சிறிதும் விரும்பத்தக்கதில்லை" என்றான். அந்த மாணவி வெளியே போய்ப் பார்த்து விட்டு வந்து, "பாரதி காரில் போய் உட்கார்ந்து, விசும்பி விசும்பி அழுது கொண்டிருக்கிறாள் சார். நான் சொல்லியதை அவள் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை" என்றாள். அதற்கு மேல் அந்த நிகழ்ச்சியைப் பெரிதுப்படுத்த விரும்பாத சத்தியமூர்த்தி வகுப்பைத் தொடர்ந்தான்.

ஆனால் வகுப்பில் கசமுசவென்ற பேச்சுக் குரல்களும், இரகசிய முணுமுணுப்புகளும் ஓய்வதற்குச் சிறிது நேரமாயிற்று. தன்னிடம் பிரியமுள்ள மாணவி என்று பகிரங்கமாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிற பாரதி தனக்கு முன்பே நடு வகுப்பில் சந்தேகம் கேட்கப் போவதாக எழுந்து நின்று அடம் பிடித்ததையும், தான் அவளுக்குச் சொல்லிய பதில் கடுமையாக இருந்ததையும் மற்ற மாணவர்கள் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் நினைத்து முணுமுணுக்க முடியும் என்பதை அவன் உடனே அநுமானிக்கத் தவறவில்லை. ஆனாலும் தன்னுடைய நயமான சொல்லாட்சித் திறனால் ஐந்தே நிமிடங்களில் வகுப்பில் பழைய அமைதி நிலவும்படி செய்தான் அவன். இந்த நிகழ்ச்சியை வகுப்பு முழுதும் மறந்து விடும்படி செய்ய அவனுக்குச் சாமர்த்தியம் இருந்தது. ஆனால் தன் மனத்தளவில் அவனால் அதை மறக்கவே முடியவில்லை. அந்த வகுப்பு வேளை முடிந்த பின் அடுத்த வகுப்புக்குப் போய் அதற்கடுத்த வகுப்புக்குப் போன பின்னும் கூட அவனால் அன்று இதை மறக்க முடியவில்லை. இடைவேளையின் போது அறைக்குப் போய்க் குமரப்பனைச் சாப்பிட அழைத்துப் போகவும் இயலாமற் போய்விட்டது. கல்லூரித் துணை முதல்வர் ஹாஸ்டல் விஷயமாக ஏதோ பேச வேண்டுமென்று இடைவேளையில் கூப்பிட்டனுப்பவே அவரோடு போய் உட்கார வேண்டியதாயிற்று. தான் போக முடியாவிட்டாலும் லேக் சர்க்கிள் பக்கமாகச் சென்று திரும்பும் மாணவன் ஒருவனிடம் குமரப்பனுக்குத் தகவல் சொல்லி அனுப்பி அவன் மட்டும் போய்ச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்து அறையில் ஓய்வு கொள்ளுமாறு ஏற்பாடு செய்திருந்தான் சத்தியமூர்த்தி.

கல்லூரி முடிந்து அவன் மாலையில் அறைக்குத் திரும்பிச் சென்ற போது குமரப்பன் இருந்தாற் போலிருந்து அவனிடம் ஒரு கேள்வி கேட்டான்:

"ஏண்டா, சத்தியம்! எந்தத் தவற்றைப் பிறருக்குத் தெரியாமல் சுலபமாக நம்மால் மறைக்க முடியும் என்று தோன்றுகிறதோ அதைக் கூடப் பிறரிடம் சொல்லி மன்னிப்புக் கேட்பது நியாயமென்பதை நீ ஒப்புக் கொள்வாயா..."

"இதென்னது?... இருந்தாற் போல் இருந்து மன்னிப்பைப் பற்றி..." என்ற சத்தியமூர்த்தி பேச்சை இழுத்து நிறுத்தித் தயங்கினான். அதற்குக் குமரப்பன் கூறிய பதில் அவனைச் சிறிது நேரம் அப்படியே திகைக்க வைப்பதாக இருந்தது. ஆனால் அந்தத் திகைப்புக்குப் பின்பும் உண்மை நட்புத்தான் சத்தியமூர்த்தியின், மனத்தில் நின்றதே ஒழிய நண்பனைப் பற்றிச் சிறிதளவு வெறுப்பும் நிற்கவில்லை.

அத்தியாயம் - 33

இந்தக் காதல் என்கிற உணர்ச்சி இருக்கிறதே, அதை ஓர் ஆச்சரியமாகத் தான் கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அது கதையில் வரும் போது உண்மையைப் போல் தோன்றி மயக்குகிறது. உண்மையில் நடக்கும் போதோ கதையைப் போல் தோன்றி மருட்டுகிறது.

சத்தியமூர்த்தியின் முகத்தையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த குமரப்பன் கூறலானான்: "நான் தான் இந்தத் தவற்றைச் செய்தேன் என்று சொல்லி விளக்குவதற்கு அவசியமில்லாமலே, இதை என்னால் மறைத்திருக்க முடியுமானால் அப்படிச் செய்ய நான் விரும்பவில்லையடா சத்தியம்! நீ கல்லூரிக்குச் சென்ற பிறகு இங்கு எனக்குப் பொழுது போகவில்லை. படிப்பதற்கு ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்று தேடினேன். வெளியில் நல்ல புத்தகமாக எதுவுமில்லை. நமக்கில்லாத உரிமையா என்ற தைரியத்தில் உன் பெட்டியைத் திறந்து புத்தகங்களைத் தேடிய போது ஒரு மூலையில் இந்தக் கடிதம் மடிக்கப்பட்டுக் கிடந்தது. ஏதோ ஒரு விதமான அசட்டுத் தைரியத்தில் அடக்கமுடியாத ஆவலோடு இதைப் பிரித்துப் படித்துவிட்டேன். இதைக் கையில் எடுத்த வரை என்னை நீ மன்னிக்கலாம். கையில் எடுத்த பின்பும் பிரித்துப் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை என்னளவில் தடுத்துக் கொண்டிருக்க முடியும். அப்படி நான் என்னைத் தடுத்துக் கொள்ள முடியாமற் போனதற்காகத்தான் இப்போது மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கிறது." மனத் தயக்கத்தோடு இப்படிக் கூறிவிட்டுக் குமரப்பன் சத்தியமூர்த்தியிடம் நீட்டிய கடிதம் அவன் மல்லிகைப் பந்தலுக்கு வந்த பின் மோகினி அவனுக்கு எழுதியது. தன்னுடைய பெட்டியின் ஒரு மூலையில் அந்தக் கடிதத்தைப் போட்டு வைத்த போது, பின்னால் என்றாவது, குமரப்பனோ, இன்னொரு நண்பனோ, அதை எடுத்துப் படிக்க நேரிடுமென்று சத்தியமூர்த்தி கனவிலும் நினைத்ததில்லை. குமரப்பன் அதை எடுத்துப் படிக்க நேர்ந்துவிட்டதென்று இப்போது தெரிந்து போன பின்பும் அதற்காக அவன் மனம் உடைந்து போய்விடவில்லை. சிறிது நேரம் திகைப்பும் சிந்தனையுமாக ஒரு பதிலும் சொல்லாமல் மௌனமாயிருந்த பின் சத்தியமூர்த்தி தன் நண்பனை நோக்கி வெகு நிதானமாகப் பேசினான்:

"இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது குமரப்பன்? என் வாழ்க்கையின் மிக அந்தரங்கமான பகுதியைத் தெரிந்து கொள்வதற்கு நீ உரிமையற்றவன் என்று சொல்லிவிட முடியுமா?"

"முடியுமோ, முடியாதோ? உன் அந்தரங்கங்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை எனக்கு உண்டு அல்லது இல்லை என்று தீர்மானம் செய்ய வேண்டியவன் நீதானே? நானாக அந்த உரிமையை எப்படி எடுத்துக் கொள்ள முடியுமடா சத்தியம்."

"அப்படிச் சொல்லாதே குமரப்பன்? எந்த உரிமையையும், தாராளமாக உன்னிடம் விட்டுவிடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். உன்னைப் போல் உண்மை நண்பன் ஒருவனிடம் வாழ்வதா - சாவதா என்று சிந்தித்து முடிவு சொல்லும் பொறுப்பைக் கூட பரிபூரணமாக விட்டுவிட்டு நீ சிந்தித்து முடிவு சொல்கிறவரை நிம்மதியாகச் சிரித்துக் கொண்டிருக்கலாம்."

"நீ வாழ்வதற்குச் சிந்தித்து முடிவு சொல்கிற நண்பனாக மட்டுமே கடைசிவரை இருப்பேன்" என்று கூறிவிட்டுக் குமரப்பன் சத்தியமூர்த்தியின் முதுகில் தட்டிக் கொடுத்தான். சத்தியமூர்த்தியின் மனத்திலும் மோகினியைப் பற்றிய அந்த இன்ப நினைவுகள் இந்த விநாடி வரை தானே சுமந்தாக வேண்டிய தனிச்சுமையாகவும் பாரமாகவும் இருந்தன. தன் மனத்தில் மோகினியைப் பற்றி அலைந்து கொண்டிருந்த சிந்தனையலைகளைக் குமரப்பனைப் போன்ற நெருங்கிய நண்பன் ஒருவனிடம் சொல்லியாக வேண்டிய சந்தர்ப்பம் தவிர்க்க முடியாமல் தானாகவே நேர்ந்ததை அவனும் வரவேற்றான். நளினமான இந்த இங்கித நினைவுகளை நண்பனிடம் விவரிப்பதற்கு முன்னால் தான் அங்கு இல்லாத போது தன்னுடைய பெட்டியிலிருந்து நண்பன் அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்த வேளையில் என்னென்ன உணர்வுகளை அவன் அடைந்திருக்க முடியும் என்று அனுமானம் செய்கிற ஆவலோடு இப்போது தானே அதை ஒரு முறை படிக்கத் தொடங்கினான் சத்தியமூர்த்தி.

'என்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வத்தின் திருவடிகளில் அடியாள் மோகினி அநேக வணக்கங்கள்' என்று தொடங்கிய அந்தக் கடிதம் 'புஷ்ப மரத்தடியில் வீற்றிருக்கும் தெய்வத்துக்கு அர்ப்பணம் ஆகும் பூவைப் போல் நான் தானாகவே உங்களுக்குச் சமர்ப்பணமானவள்' என்ற வாக்கியத்தைப் படிக்கும் போதும், 'உங்களுடைய வாத்தியம் உங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட வாத்தியம் - வாசிக்க நீங்கள் இல்லாமல் தூசி படிந்து போய் மூலையில் கிடக்கிறது' என்ற இறுதி வாக்கியத்தைப் படிக்கும் போதும், அவனை மெய் சிலிரிக்கச் செய்தது. இதே வாக்கியங்களைப் படிக்கும் போது குமரப்பன் என்னென்ன உணர்ச்சிகளை அடைந்திருப்பான் என்றெண்ணிப் பார்க்க முயன்றான் சத்தியமூர்த்தி.

கடிதத்தைப் பிரித்துப் பிடித்துக் கொண்டிருந்த கைவிரலில் பழைய ஞாபகங்களின் சுகத்துக்கு ஒரு சாட்சியாக அந்த நீலக்கல் மோதிரம் மின்னிக் கொண்டிருந்தது. பூக்களும், ஊதுவத்தியும் மணந்து கொண்டிருந்த ஒரு சிறிய வீட்டின் கூடத்தில் மனோரம்மியமான சாயங்கால வேளை ஒன்றில் அழகிய விரல்கள் தன்னைக் கைப்பற்றி அந்த மோதிரத்தை அணிவித்த நாள் அவனுக்கு ஞாபகத்தில் வந்தது. மோகினியின் ஞாபகத்தில் அவன் மனம் நெகிழ்ந்தது. அப்போது சத்தியமூர்த்தி இருந்த நிலையைப் பார்த்து அவன் தன்னிடம் நிறையப் பேச விரும்புகிறான் என்று குமரப்பன் குறிப்பாகப் புரிந்து கொண்டு அவனை ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றான். கரையில் கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பேசிய வண்ணமிருக்கவே, நண்பனோடு மனம் விட்டு உரையாடுவதற்கேற்ற தனிமைக்காக ஒரு படகுக்கு வாடகை பேசி முன் பணம் கொடுத்து நண்பனையும் அமரச் செய்த பின் தானே துடுப்புகளை வலித்து ஏரியின் நடுப்பகுதிக்குச் செலுத்திக் கொண்டு போனான் குமரப்பன். வெள்ளையும் சிவப்புமாக நீர்ப்பூக்கள் மலர்ந்த ஏரி நீர்ப் பரப்பினிடையே மோகினியைப் பற்றிய நினைவுகள் பூக்கும் மனநிலையோடு பிரமை பிடித்தாற் போல் படகில் அமர்ந்திருந்தான் சத்தியமூர்த்தி. நண்பன் குமரப்பனிடம் தான் எதைப் பேச வேண்டுமென்று நினைத்தானோ அதற்குப் பொருத்தமான ஆரம்பத்தைத் தேடிச் சிந்திப்பது போலிருந்தான் அவன். இரண்டு கைகளாலும் துடுப்புக்களை வலித்துக் கொண்டிருந்த குமரப்பனோ இருந்தாற் போலிருந்து தன் வலது கையைத் துடுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டு சத்தியமூர்த்தியின் கரத்தைப் பிடித்திழுத்து அந்த நீலக்கல் மோதிரத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் குறும்பு நகை புரிந்தான். பின்பு அதே குறும்புச் சிரிப்போடு சத்தியமூர்த்தியை நோக்கிச் சொன்னான்: "இதை உன் கரத்தில் அணிவித்தவள் இப்போது உன் கையையும் நினைவையும் ஒன்றாக அழகுபடுத்திக் கொண்டிருக்கிறாள். நான் எண்ணுவது சரிதானே?"

சத்தியமூர்த்தி மறுமொழி கூறாமல் புன்னகை பூத்தான்.

"மனிதனுடைய வாழ்க்கையில் நேரிடும் அழகிய இரகசியங்களெல்லாம் அன்பு காரணமாகவே நேரிடுகின்றன என்று சொல்லுவார்களடா சத்தியம்! நெருங்கிய நண்பனுக்குக் கூடத் தெரியாமல் உன் வாழ்க்கையில் அத்தகைய இரகசியங்கள் நேர்ந்திருக்கின்றன. முன்பொரு நாள் சித்திரைப் பொருட்காட்சியில் மோகினியின் நடனத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பி வையையாற்று மணலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது நீ அவள் மேல் அதிக அநுதாபத்தோடு பேசியதையும் குத்துவிளக்கின் சார்பில் மோகினியைப் பேட்டி காணச் சென்று திரும்பிய பின் நான் அவள் புகைப்படங்களில் சிலவற்றை இணைத்து உனக்கு எழுதியிருந்த கடிதத்துக்கு நீ அதிக ஆர்வத்தோடு நன்றி தெரிவித்துப் பதில் எழுதியிருந்ததையும் இப்போது நினைத்தால் எனக்கு எல்லாமே புரிகிறதடா சத்தியம்!"

"புரிகிறதல்லவா! புரிந்த பின் நீ என்னைப் பற்றி என்னதான் நினைக்கிறாய் என்பதைச் சொல்லேன்!" என்று அதுவரை பேசாமலிருந்த சத்தியமூர்த்தி நண்பனைக் கேட்டான்.

"அதெப்படி? நீதான் எனக்குச் சொல்வதற்கு நிறைய மீதம் வைத்திருக்கிறாய் சத்தியம்! இரயிலிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது மோகினியைத் தடுத்துக் காப்பாற்றியதைப் பற்றி அன்று வையை ஆற்று மணலில் பேசிக் கொண்டிருந்த போது தெரிவித்தாய்! அன்று உரையாடிக் கொண்டிருந்த போது நாம் இருவருமே அவளுக்காக மிகவும் அனுதாபப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குப் பின்னால் உங்களுக்குள் எவ்வளவோ நடந்திருக்கிறாற் போலிருக்கிறதே! அவற்றையெல்லாம் இப்போது எனக்குச் சொல்லப் போகிறாய் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீ என்னடாவென்றால் என்னைச் சுலபமாக ஏமாற்றிவிடப் பார்க்கிறாய்" என்று குமரப்பன் கேட்கவே சத்தியமூர்த்தி தான் மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு முன் முதல் முறையாக மோகினியின் வீட்டுக்குச் சென்றது தொடங்கி நண்பனிடம் எதையும் மறைக்காமல் ஒவ்வொன்றாக விவரித்தான். அந்த நினைவுகளை நண்பனோடு பேச வேண்டும் என்று அவனே ஆவலாயிருந்த நிலையில் நண்பனும் விரும்பிக் கேட்கவே உற்சாகமாகவும் நயமாகவும் அவனால் அதைச் சொல்ல முடிந்தது.

மோகினியைப் பற்றி நண்பனிடம் விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்த அந்த ஒரு மணி நேரமும் அவன் தனி உலகத்தில் இருந்தான். கடைசியாக அவளிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்ட தினத்தன்று அவள் தன் கையில் அந்த மோதிரத்தை அணிவித்துவிட்டுத் தான் பதிலுக்கு அணிவித்த மோதிரத்தையும் பெற்றுக் கொண்டு கண்ணீர் மல்கும் விழிகளோடு குங்குமச் சிமிழை எடுத்து வந்து தனக்குத் திலகமிட்டு விடை கொடுத்த சம்பவத்தைக் குமரப்பனுக்குச் சொல்லிய போது, சத்தியமூர்த்தியின் குரல் தழுதழுத்தது!

"அவள் எனக்கு விடை கொடுக்கும் போது சொல்லிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன, குமரப்பன்! 'என்னை மறந்து விடாதீர்கள். உங்களுடைய ஞாபகத்தில் தங்கி வாழ்வதைக் காட்டிலும் பெரிய பாக்கியம் எனக்கு வேறு ஒன்றும் இல்லை' என்று கூறி விடைகொடுத்த போது அவள் கண்களில் தெரிந்த தவிப்பை இன்று நான் வார்த்தைகளால் உனக்குச் சொல்லிவிட முடியாது. நீ இன்று படித்தாயே இந்தக் கடிதம் நான் இங்கு வந்த பிறகு அவளிடமிருந்து எனக்கு வந்தது! மோகினியின் புகைப்படங்களை நீ எனக்கு அனுப்பியிருந்தாயே அப்போது உன் கடிதத்தில் அவளைப் பற்றிப் புகழ்ந்திருந்தாய். மோகினியின் சிரிப்பில் கலைமகளும் திருமகளும் சேர்ந்து வாசம் செய்வதாக நீ புகழ்ந்திருந்த வாக்கியத்தை நான் திரும்பப் படித்துக் கொண்டாடினேன்."

சத்தியமூர்த்தி இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது குமரப்பன் நகை மலரும் முகத்தோடு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டுச் சிறிது நாழிகை மௌனத்துக்குப் பின் நிதானமாக மறுமொழி கூறினான்:

"இந்தக் காதல் இருக்கிறதே இதை ஓர் ஆச்சரியமாகக் கருதுவதை விட வேறுவிதமாகக் கருத முடியாது போலிருக்கிறது. ஏனென்றால் அது கதையில் வரும் போது உண்மையைப் போல் மயக்குகிறது. உண்மையில் நடக்கும் போதோ கதையைப் போல் மருட்டுகிறது. ஆனாலும் ஒரு விதத்தில் நீ பெரிய பாக்கியசாலிடா சத்தியம்! உடம்பும் மனமும் அழகாயிருக்கிற கலையரசி ஒருத்தி தன்னுடைய சகலத்தையும் உனக்காக ஆத்ம சமர்ப்பணம் செய்யக் காத்திருக்கிறாள். யாருடைய சலங்கை கட்டிய நளின பாதங்கள் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களுடைய இதயத்தில் சௌந்தரியக் கனவாக ஆடிக் கொண்டிருக்கின்றனவோ அவளுடைய இதயத்தில் உன் பாதங்கள் நிறுத்தி வைத்து வணங்கப்படுகின்றன. உன்னுடைய பெட்டியில் புத்தகங்களைத் தேடும் போது அந்தக் கடிதம் என் கையில் கிடைத்தது. அதை நான் படித்த சமயத்திலேயே நீ அடைந்திருக்கும் தூய்மையான காதலை நினைத்து நினைத்துப் பெருமைப்பட்டேன். உன்னிடம் சொன்னால் என்ன நினைத்துக் கொள்வாயோ என்று தயக்கமாக இருந்தது. எவ்வளவுதான் நெருங்கிய நண்பனாக இருந்தாலும் அவனுக்கு அந்தரங்கமாக அனுப்பப்பட்டிருக்கிற ஒரு கடிதத்தை எடுத்துப் படிக்கத் துணிவது குற்றம் தானே? நம்மளவுக்கு நாம் கட்டுப்பாட்டோடு வாழ்ந்தாலும் பிறருடைய இரகசியங்களை அறிந்து கொள்ள முயலும் போது நாணயம் தவறி விடுகிறதே?" என்று குமரப்பன் தனக்குத்தானே வருத்தப்பட்டுக் கொள்வது போல் பேசினான்.

"நாணயக் குறைவான எந்தக் காரியத்தையும் நீ செய்துவிட்டதாக நான் நினைக்கவில்லை குமரப்பன்! நீ செய்த காரியம் உன் நண்பனிடம் உனக்கு இருக்கும் உரிமையின் நெருக்கத்தை நிரூபிக்கிறது அவ்வளவுதான்!" என்று சத்தியமூர்த்தி மனம் விட்டுக் கூறிய பின்பும், "அதெல்லாம் இல்லை! நீ மிகவும் பெருந்தன்மையாக என்னை மன்னிக்கிறாய்! அதற்காக நன்றி. இதில் ஒரு மகிழ்ச்சியும் இருக்கிறது, ஒரு துயரமும் இருக்கிறது. உன் பெட்டியைத் திறந்து நானாகவே இதைத் தெரிந்து கொண்டு உன்னை இப்படித் திகைக்கச் செய்வதற்காகத் துயரப்படுகிறேன். நான் எதைத் தெரிந்து கொண்டேனோ அதனால் என் நண்பன் மகா பாக்கியசாலி என்றறிந்ததனால் மகிழ்கிறேன்" என்றான் குமரப்பன். இருட்டிய பின்பு சிறிது நேரம் ஏரிக்குள் படகிலேயே சுற்றிக் கொண்டிருந்து விட்டு நண்பர்கள் கரையேறினர். அறைக்குப் போய்த் தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனையும் அழைத்துக் கொண்டு உணவு விடுதிக்குப் போகலாம் என்று அவர்கள் புறப்பட்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாகச் சுந்தரேசனே அறையைப் பூட்டிக் கொண்டு எதிரே வந்து விட்டார். மூவரும் சேர்ந்தே போய் உணவு விடுதியில் இரவு உணவை முடித்துக் கொண்டு திரும்பினார்கள்.

மல்லிகைப் பந்தலுக்குக் குமரப்பன் வந்து சேர்ந்த பின்பு ஒவ்வொரு நாளும் கல்லூரிப் பாடவேளைக்கு அப்பாலும் சத்தியமூர்த்தியின் நேரம் உற்சாகமாகக் கழிந்து கொண்டிருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் நண்பர்கள் மூவரும் மல்லிகைப் பந்தலுக்குப் பக்கத்தில் இருந்த மயிலாடும் பாறை தேயிலை எஸ்டேட்டையும் அருவியையும் பார்க்கப் போயிருந்தார்கள். இன்னொரு ஞாயிற்றுக் கிழமை ஆரஞ்சுப் பழம், வால்பேரிக்காய், திராட்சைக் கொடி போன்ற கனி வகைகள் விளையும் பெரிய பழத் தோட்டம் ஒன்றிற்கு உல்லாசப் பயணம் போய் வந்தார்கள். மல்லிகைப் பந்தல் மலைப் பகுதியில் அங்கும் இங்குமாக இருந்த அழகிய இடங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கும் வாய்ப்பு ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் அவர்களுக்குக் கிடைத்தது. அடுத்த மாதம் முதல் தேதி பிறந்ததும் ஒன்றுமே விளக்கமாகச் சொல்லாமல், "இந்தா, இதை வைத்துக் கொள்" என்று குமரப்பன் பதினாறு ரூபாய்க்கான நோட்டுகளையெண்ணிச் சத்தியமூர்த்தியிடம் நீட்டினான். சத்தியமூர்த்திக்கு நண்பனின் செய்கை ஒன்றும் புரியவில்லை.

"எதற்காக இந்த ரூபாயை என்னிடம் கொடுக்கிறாய் குமரப்பன்? நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா?" என்று நண்பனைக் கோபித்துக் கொண்டான் அவன். நண்பனோ தன் செய்கையில் பிடிவாதமாக இருந்தான்.

"சொன்னால் கேள் சத்தியம்! 'மயில் ஊடாடா நட்பில் பொருள் ஊடாடக் கெடும்' என்று பழமொழியே இருக்கிறது! இந்தப் பதினாறு ரூபாயை அறை வாடகையின் மொத்தத்தில் என் பங்காக எடுத்துக் கொள். என் கையில் இருக்கிற வரை நான் செலவழித்துத்தான் ஆக வேண்டும். நட்பு வேறு, பொருட் செலவு வேறு..."

"நீயும் நானும் அப்படி எதிலும் வேறு வேறாகப் பழகவில்லையே குமரப்பன்?"

குமரப்பன் பதிலே சொல்லாமல் தன் கையில் இருந்த ரூபாய் நோட்டுக்களைச் சத்தியமூர்த்தியின் சட்டைப் பையில் திணித்து விட்டுச் சிரித்தான். அதற்கடுத்த வாரம் ஒரு விடுமுறை நாளில் பெற்றோரைப் பார்ப்பதற்காகச் சத்தியமூர்த்தி மதுரைக்குப் போய் விட்டுத் திரும்பினான். அவன் போயிருந்த ஒரே ஒரு நாளில் எப்படியோ சிறிது நேரம் மீதப்படுத்திக் கொண்டு மோகினியைச் சந்திக்கும் ஆவலோடு அவள் வீட்டுக்குச் சென்றிருந்தான். மோகினியும் அவள் தாயும் ஏதோ நாட்டியத்துக்காக வெளியூர் போயிருந்ததனால் அவன் ஏமாற்றத்தோடு திரும்ப வேண்டியதாயிற்று.

மல்லிகைப் பந்தல் கல்லூரியில் மாணவர் யூனியன்களின் காரியதரிசிகளுக்கான தேர்தலும் முடிந்து மாணவர்களின் மொழிவாரி மன்றங்களுக்கான இலக்கியத் தொடக்க விழாக்களும் ஒவ்வொன்றாக நிகழலாயின. தமிழ் மன்றத் தொடக்க விழாவிற்கு நவநீதக் கவியை அழைப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தான் சத்தியமூர்த்தி. மாணவர் மன்றத் தலைவி என்ற முறையில் பாரதியும் நவநீதக்கவியை அழைப்பதற்கு இணங்கினாள். "சென்னையிலிருந்து நவநீதக்கவி வந்து போவதற்கு நூற்றைம்பது ரூபாய்க்கு மேல் பயணச் செலவு ஆகுமே? பக்கத்து ஊர்களிலிருந்து யாரையாவது அழைத்துச் சிக்கனமாக நடத்தி விட்டால், என்ன? கல்லூரிகளில் இந்த விழாகிழா எல்லாம் சும்மா ஒரு 'ஃபார்மாலிடி' தான் மிஸ்டர் சத்தியமூர்த்தி; இதுக்காகவே நேரத்தை வீணாக்கக்கூடாது. எல்லாம் போகப் போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க..." என்று முதல்வரும், காசிலிங்கனாரும் நவநீதக்கவியை அழைப்பது பற்றி அசிரத்தையாகப் பேசினார்கள்.

இந்த அசிரத்தையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் நவநீதக் கவியையே அழைத்துத் தமிழ் மன்றத் தொடக்க விழாவை நிகழ்த்தி மாணவர்களிடம் நல்ல பெயர் வாங்கி விட்டான் சத்தியமூர்த்தி. 'தொடக்க விழாவன்று நவநீதக் கவி பேசிய சில கருத்துக்கள் அதிக முற்போக்காகவும் - ஏதோ ஓர் அரசியல் கட்சிச் சார்புடையன போலவும் தோன்றின' என்று முதல்வரும் காசிலிங்கனாரும் வீண் புரளியைக் கிளப்பி விட்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்தப் புரளிக்காகச் சத்தியமூர்த்தி ஒரு சிறிதும் அஞ்சவில்லை. நாட்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. கல்லூரியில் காலாண்டுத் தேர்வுக்குத் தேதிகளும் குறித்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை வந்து விட்டது. விடுதிகளில் பரீட்சைக்குப் படிப்பதற்காகக் கண்காணிப்பு அதிகமாயிற்று.

சத்தியமூர்த்தியின் அறை இருந்த மாடிக்குக் கீழே ராயல் பேக்கரி ரொட்டிக் கிடங்கின் அருகே சிறுகடை இருந்த இடம் ஒன்று காலியாகி 'டு லெட்' என்ற போர்டு தொங்குவதை ஒரு நாள் காலையில் சத்தியமூர்த்தியும் குமரப்பனும் தற்செயலாகக் காண நேர்ந்தது. அப்போது குமரப்பன் ஒரு நோக்கமும் இல்லாமல் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆவல் ஒன்றை மட்டுமே காரணமாகக் கொண்டு சும்மா விசாரிப்பவன் போல் சத்தியமூர்த்தியிடம் அந்த இடம் யாருக்குச் சொந்தமானது, அதற்கு என்ன வாடகை கேட்பார்கள் என்றெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். நண்பன் எதற்காக அந்த இடத்தைப் பற்றி அவ்வளவு விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டான் என்பதை அன்று மாலை கல்லூரியிலிருந்து திரும்பி வந்த பின்பே சத்தியமூர்த்தியால் விளங்கிக் கொள்ள முடிந்தது.

மாலையில் அவன் கல்லூரியிலிருந்து திரும்பி வந்து அறைக்குப் போவதற்காக மாடிப்படியேறிய போது ரொட்டிக் கடைக்காரர் அவனைக் கூப்பிட்டுச் சொன்னார்: "சார்! கீழே காலியான கடையை உங்க சினேகிதருக்கு வாடகை பேசி விட்டிருக்கிறேன்."

"சினேகிதருக்கா? எந்தச் சினேகிதர்?" என்று சத்தியமூர்த்தி திகைத்த போது "அதோ பாருங்க! அவரே கடையில் போர்டு மாட்டிக்கிட்டிருக்காரு" என்று கடையைச் சுட்டிக் காண்பித்தார் ரொட்டிக் கடைக்காரர். அப்போது தான் புது வர்ணம் பூசப்பட்டு மின்னும், 'குமரப்பன் ஆர்ட்ஸ்' என்ற விளம்பரப் பலகையை அந்தக் கடையின் முகப்பில் மாட்டி ஆணி அடித்துக் கொண்டிருந்தான் குமரப்பன்.

அத்தியாயம் - 34

உடம்பினால் மட்டும் முதுமையடைகிறவர்களையாவது மன்னிக்கலாம்; மனத்தினாலும் முதுமை அடைந்து தளர்ந்து விடுகிறவர்களை மன்னிக்கவே முடியாது.

பளீரென்று புதிய வர்ணம் மின்னும் 'குமரப்பன் ஆர்ட்ஸ்' என்ற விளம்பரப் பலகையை அருகில் சென்று நிமிர்ந்து பார்த்துவிட்டு "இதெல்லாம் என்ன குமரப்பன்! இந்த இடத்தை வாடகைக்குப் பேசி அட்வான்ஸ் வேறு கொடுத்திருக்கிறாயாமே? ரொட்டிக் கடைக்காரர் இப்போதுதான் சொன்னார்" என்று சத்தியமூர்த்தி சிரித்துக் கொண்டே நண்பனைக் கேட்டான். சத்தியமூர்த்தி இந்தக் கேள்வியைக் கேட்கும் போது சிரித்துக் கொண்டே கேட்டது குமரப்பனுக்குப் பிடிக்கவில்லை.

"ஏன் சிரிக்கிறாய், சத்தியம்? இந்த மல்லிகைப் பந்தல் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் எத்தனை கம்பெனிகளும், வியாபார நிறுவனங்களும், தேயிலை, காப்பி எஸ்டேட்களும், பழத்தோட்டங்களும் இருக்கின்றன? ஒரு பெரிய கல்லூரியும் இருக்கிறது. இவ்வளவிற்கும் தேவையான போர்டுகள், டிசைன்கள், விளம்பர எழுத்துக்கள் எழுதிக் கொடுப்பதற்கு என்னைப் போல் ஒரு நாணயமான தொழிலாளி இப்படி ஒரு கடை வைத்தால் தோற்றுப் போய்விடுவேன் என்றா நினைக்கிறாய்? தொழில் தெரிந்தவன் சும்மா இருக்கக் கூடாது; சும்மா இருக்கவும் முடியாது. எண்ணி இன்னும் பதினைந்தே நாட்களில் இந்தக் கடையைப் பார்; இங்கே மாதம் முந்நூறு ரூபாயிலிருந்து ஐந்நூறு ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்படி தொழில் நடத்தவில்லையானால் என்னை ஏன் என்று கேள்" என்று சத்தியமூர்த்திக்கு மறுமொழி கூறிக்கொண்டே 'இவ்விடம் சகலவிதமான விளம்பரப் பலகைகளும், டிஸைன்களும் எழுதிக் கொடுக்கப்படும்' என எழுதப்பட்டிருந்த மற்றொரு சிறிய விளம்பரப் பலகையை முன்பு மாட்டப்பட்டிருந்த பெரிய விளம்பரப் பலகைக்குக் கீழே வைத்து ஆணிகளை அடிக்கத் தொடங்கினான் குமரப்பன். 'நம்பிக்கையையும் தைரியத்தையும் முதலாக வைத்து என்னால் எந்தத் தொழிலையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்' என்ற கர்வத்தோடு அவன் காரியங்களைச் செய்வதாகத் தோன்றியது. குமரப்பனை அவன் போக்கில் விடுவதே நல்லதென்று சத்தியமூர்த்தி பேசாமலிருந்து விட்டான். காலாண்டுத் தேர்வு நவராத்திரி விடுமுறையும் அருகில் நெருங்கிவிட்டதனால் சத்தியமூர்த்திக்கும் கல்லூரி வேலை அதிகமாக இருந்தது. இரவில் மாணவர்கள் விடுதி அறைகளில் ஒழுங்காகத் தங்கிப் படிக்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டியிருந்தது. மாணவர்களை விடுமுறையில் வெளியூருக்கு அழைத்துச் சென்று சமூகச் சேவையில் பழக்கப்படுத்துவதற்காகவும் ஓர் ஏற்பாட்டைச் செய்ய வேண்டியிருந்தது. கல்லூரி மாணவ, மாணவிகளிடையே 'சோஷியல் சர்வீஸ் லீக்' என்று ஒரு சங்கம் இருந்தது. அதில் உள்ள மாணவ மாணவிகளை அக்கம் பக்கத்துச் சிற்றூர்களுக்கு அழைத்துச் சென்று சாலைகள் போடுதல், வைத்திய உதவி செய்தல், சமூக நலம், கிராம முன்னேற்றம் போன்றவற்றைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லுதல் ஆகிய காரியங்களைச் செய்வதற்காக 'ஒர்க் காம்ப் - பணி முகாம்' - ஒன்றை ஏற்பாடு பண்ண வேண்டியிருந்தது. நவராத்திரி விடுமுறை பன்னிரண்டு நாட்களுக்குக் குறையாமல் இருந்ததென்றால், அதன் தொடக்கத்தில் ஒரு வாரம் சமூகச் சேவைக்காக ஓர் 'ஒர்க் காம்ப்' போக வேண்டியிருந்தது. 'ஒர்க் காம்ப்' போகும் போது, கிராமத்துக் குழந்தைகளுக்குக் கரைத்துக் கொடுப்பதற்காக வந்திருந்த 'பால் பவுடர்' டின்கள் சத்தியமூர்த்தியின் உதவி வார்டன் அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கல்லூரி 'சோஷியல் சர்வீஸ் லீக்' தலைவராக வேறொரு முதிய பேராசிரியர் இருந்தார். மாணவர்களின் சமூகச் சேவை முகாமை விடுமுறையின் போது எந்தக் கிராமத்தில் அமைக்கலாம், எத்தனை நாட்கள் அமைக்கலாம் என்று கலந்து பேசுவதற்காக அன்று மாலை அந்தப் பேராசிரியருடைய வீட்டிற்குப் போயிருந்தான் சத்தியமூர்த்தி. பேராசிரியருக்குச் சொந்த ஊர் பாலக்காட்டுப் பக்கம். அதனால்தானோ என்னவோ அந்த மனிதர் முக்கால்வாசி நேரம் சமையலைப் பற்றியும் சாப்பாட்டில் உள்ள சுசி ருசிகளைப் பற்றியுமே சுவைத்துப் பேசிக் கொண்டிருப்பார். சேர்ந்தாற் போல அவர் வாயலுக்காமல் ஒன்றரை மணி நேரமோ இரண்டு மணி நேரமோ பேசுவதற்கு ஒரு விஷயத்தை ஆரம்பித்து வைக்க வேண்டுமானால், அவியலைப் பற்றியோ, வறுவலைப் பற்றியோ ஆரம்பித்து வைக்க வேண்டும். மாணவர்களில் சிலர் அந்தப் பேராசிரியருக்கு 'மலையாளத்து அவியல்' என்றே பெயர் சூட்டியிருந்தார்கள். 'ஓய்! பாலக்காடு வர்மா கபேயில் இரண்டு கரண்டி அவியல் சாப்பிடுவதற்குப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா!' என்று எவரிடமாவது ஒரு நாளைக்கு ஒரு தரமேனும் பாலக்காடு 'வர்மா கபே'யைப் பற்றிச் சொல்லாவிட்டால் அவருடைய மண்டை வெடித்துப் போகும். இந்த விநோதப் பிரகிருதியைச் சந்திப்பதற்காகச் சத்தியமூர்த்தி அவருடைய வீட்டுக்குப் போயிருந்த போது ஒரு கிளாஸ் நிறையப் பலாப்பழப் பாயசத்தையும், நேந்திரங்காய் வறுவலையும் கொண்டு வந்து வைத்துச் சாப்பிட்டால் தான் ஆயிற்று என்று பிடிவாதம் செய்தார். இன்று ஏதோ பண்டிகை நாளாம். மாலையில் சத்தியமூர்த்தி வரப்போகிறானென்று அவனுக்காகவே ஒரு கிளாஸ் பலாப்பழ பாயசமும் கொஞ்சம் வறுவலும், அவியலும் எடுத்து வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

சத்தியமூர்த்திக்குப் பாயசம் வைப்பதும், பண்டிகைகள் கொண்டாடுவதும் அதிகமாகப் பிடிக்காத காரியங்கள். "இந்தத் தேசத்தில் வயிற்றுக்குச் சோறில்லாத கடைசி ஏழை இருக்கிறவரை நம் வீடுகளில் பாயசமும் பண்டிகைகளும் இல்லை. தெருவோரத்தில், மரத்தடியில், புழுதியில் படுத்துறங்கும் அநாதைகள் இருக்கும் வரை நாம் கட்டிலும் மெத்தையும் விரித்துப் படுத்திருப்பது பாவம்" என்று கல்லூரி நாட்களில் மாணவர்களிடையேயும், மற்ற மேடைகளிலும் அடிக்கடி ஆவேசமாக வற்புறுத்திப் பேசியிருக்கிறான் அவன். வீட்டிலோ தெரிந்தவர்களுடனோ, அமர்ந்து உண்ணும் போது பாயசம் பரிமாறப்படுகிற வேளையில் இலையை மறித்துக் கை நீட்டி, மறுத்துவிடுவது அவன் வழக்கம். பண்டிகை தினங்களில் புதிது உடுத்திக் கலகலப்பாகச் சுற்றித் திரிவதையும் அவன் விரும்பியதில்லை. எல்லாரும் மனக்குறைவோ, பணக்குறைவோ இன்றி ஓரளவு வசதியாக வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தின் பொதுத் திருவிழாக்களாக இந்தப் பண்டிகைகள் எல்லாம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இன்று உண்ணவும் உடுக்கவுமே திண்டாடுகிற பலரை நம்மைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு அவர்களுடைய வயிறெரிய ஒரு சிலர் மட்டுமே விருந்துண்டு புதிது உடுத்தித் திரிவது அநாகரிகம் என்பது அவன் கருத்து. இவற்றையெல்லாம் சொல்லி விவாதிப்பதற்கோ பேசுவதற்கோ அந்தப் பாலக்காட்டுப் பேராசிரியர் பொருத்தமான மனிதர் இல்லை என்று அவன் கருதியதால், அவரிடம் அதிகம் விவாதிக்காமல், 'தனக்கு இனிப்புப் பிடிக்காது' என்று சொல்லிப் பாயசத்தை மறுத்துவிட்டான். அப்படி மறுத்த பின்பும் அவர் ஏதாவது சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று விடேன் தொடேன் என்று வற்புறுத்தியதால் சத்தியமூர்த்தி தேநீர் மட்டும் பருகினான். இரண்டு மூன்று தினங்களுக்கு முன் ஒரு நாள் தற்செயலாக உலாவப் போய்க் கொண்டிருந்த போது லேக் அவென்யூ சாலையில் எதிர்ப்பட்ட இந்தப் பேராசிரியரை நண்பன் குமரப்பனுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததையும் அப்போது குமரப்பன் இவரிடம் பேசிய பேச்சுக்களையும் இன்று நினைத்துச் சிரித்துக் கொண்டான் சத்தியமூர்த்தி.

எல்லாரிடமும் சாதாரணமாகப் பேசுகிறாற் போல், "ஓய்! பாலக்காடு வர்மா கபேயில் இரண்டு கரண்டி அவியல் சாப்பிடுவதற்கு முன் பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா!" என்று குமரப்பனிடம் பேச்சை ஆரம்பித்தார் இவர். அவ்வளவுதான்! குமரப்பன் இவரை சரியாக மடக்க ஆரம்பித்து விட்டான். "அப்படியானால் முன் பிறவியில் நன்றாகப் புண்ணியம் செய்தவர்கள் எல்லாம் பாலக்காட்டில் பிறந்து 'வர்மா கபே'யில் அவியல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களென்று சொல்லுங்கள்" என்று அவன் பேசியதில் உள்ள குத்தலை இவர் புரிந்து கொள்ள வெகு நேரம் ஆயிற்று. இன்றும் சத்தியமூர்த்தி வந்தவுடன் குமரப்பனைப் பற்றி ஞாபகமாக விசாரித்தார் இந்தப் பேராசிரியர். சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த பின் வந்த காரியத்தைப் பற்றி அவரிடம் சொல்லி விவாதிக்கத் தொடங்கினான் சத்தியமூர்த்தி.

"வருகிற நவராத்திரி விடுமுறையில் சமூகச் சேவை முகாமுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் சார். இங்கிருந்து இருபத்தைந்தாவது மைலில் 'சந்தனச் சோலை' என்று மலைகளுக்கு நடுவே ஒரு சிறிய கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தையும் பிரதான சாலையையும் இணைக்கும் கிளைச் சாலையில் அதிக மழையின் காரணமாக மண் சரிந்து மேவியிருக்கிறதாம். முடிந்த தொலைவுவரை நமது மாணவர்களைக் கொண்டு அந்தச் சாலையை செப்பனிடுவதற்கு, 'ஒர்க் காம்ப்' அமைக்கலாம் என்று கருதுகிறேன்."

"ஓய்! 'ஒர்க் காம்ப்', 'ஒர்க் காம்ப்' என்று எதற்காக உயிரை விடுகிறீர்கள். பேசாமல் 'செமினார் காம்ப்' என்று பையன்களோடு நாலைந்து நாள் உல்லாசப் பயணம் போய்விட்டு வரலாம். 'ஒர்க் காம்ப்'பினால் நமக்கும் தொல்லை, நம்மோடு வருகிற மாணவ, மாணவியருக்கும் தொல்லை. எவன் ஐயா, வேலை மெனக்கெட்டுக் கூடையையும், மண்வெட்டியையும் பிடித்துக் கொண்டு சிரமப்படுவான். 'செமினார் காம்ப்' என்று போட்டீரானால் சுகாதாரத்தைப் பற்றியும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதைப் பற்றியும், கல்வி அறிவின் அவசியத்தைப் பற்றியும் கிராமத்தில் இருக்கிற பத்துப் பேரைக் கூப்பிட்டு உபதேசம் செய்துவிட்டுக் குஷாலாகத் திரும்பி வரலாம்! 'ஒர்க் காம்ப்'பில் மாணவ மாணவிகளைக் கட்டி மேய்ப்பதும் பெரிய தொல்லை. சில முரட்டு மாணவர்கள் தன் போக்கில் போவார்கள், சொன்னபடி கேட்க மாட்டார்கள்" என்று அக்கரையில்லாமல் பேசினார் அந்தப் பேராசிரியர். 'சோஷியல் சர்வீஸ்' என்ற பகுதியில் நாட்டுப்புறத்து ஊர்களுக்குச் சென்று அரசியல் இலக்கியம் சமுதாயம் பற்றிய கருத்துக்களை விளக்கிக் கூறுவதாகப் பிரிக்கப்பட்டுள்ள 'செமினார் காம்ப்' என்பது காரிய ரீதியாக எதையும் சாதிக்காத வீண் முயற்சியாக இருப்பதைப் பல கல்லூரிகளில் பார்த்திருந்த சத்தியமூர்த்தி தன்னுடைய கல்லூரியிலாவது நடப்பு ஆண்டுக்குள் மூன்று நான்கு 'ஒர்க் காம்ப்' அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டான். வயது முதிர்ந்த அந்தப் பேராசிரியரோ 'சோஷியல் சர்வீஸ்' என்ற பெயரில் மாணவர்களை அழைத்துக் கொண்டு அழுக்குப் படாமல் உல்லாசப் பயணம் போய்விட்டு வர ஆசைப்பட்டார். உண்மையில் மாணவர்கள் 'செமினார் காம்ப்'பை விட 'ஒர்க் காம்ப்'பில் ஆர்வம் காட்டினார்கள். உடம்பினால் மட்டும் முதுமையடைகிறவர்களையாவது மன்னிக்கலாம். மனத்தினாலும் முதுமை அடைந்து தளர்ந்து விடுகிறவர்களை மன்னிக்கவே முடியாது. இந்தப் பேராசிரியர் மனத்தினாலும் மூத்துத் தளர்ந்து போயிருந்தார். இவரைக் கலந்தாலோசிப்பதில் பயனில்லை என்று நினைத்து, மாணவ மாணவிகளிடம் காலாண்டு விடுமுறையில் 'ஒர்க் காம்ப்'புக்குப் பெயர் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துச் சுற்றறிக்கை அனுப்பினான் சத்தியமூர்த்தி. இந்த மனிதரிடம் ஏற்பட்டாற் போன்ற இதே சலிப்பான அநுபவம் ஒன்று மறுநாள் மாலை வார்டனிடம் அவனுக்கு ஏற்பட்டது. நீண்ட நாட்களாக ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டிருக்கிற பலர் செய்கிற தொழிலிலும், வாழ்கிற வாழ்க்கையிலும் சலிப்படைந்து திருப்தியற்றிருப்பதை இந்தச் சம்பவங்கள் அவனுக்குப் படிப்படியாக விளக்கின. மறுநாள் மாலை வார்டனுக்கும் சத்தியமூர்த்திக்கும் தர்க்கம் நிகழக் காரணமாயிருந்த அந்த விஷயம் மிகவும் முக்கியமானது.

காலாண்டுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் இரவு எட்டு மணிக்கு மேல் மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறுவது கண்டிப்பாகத் தடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாணவனுடைய அறையிலும் வீண் அரட்டைக் குரலோ பேச்சுக் குரலோ இருக்கலாகாது. விளக்கைப் போட்டுக் கொண்டு ஜன்னல்களைத் திறந்து வைத்துப் படிக்க வேண்டும். சிலர் விளக்கைப் போட்டுக் கொண்டு தூங்கி விடுவதும் உண்டாகையினால் தூங்குகிறார்களா விழித்திருந்து படிக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்காக ஜன்னலையும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது. ஹாஸ்டல் விதிகள் அடங்கிய விண்ணப்பத்தில் ஒவ்வொரு மாணவனும் அவனுக்குப் பொறுப்பாகப் பெற்றோரோ கார்டியனோ சேர்ந்தும், கையொப்பமிட்டிருப்பதனால் விதிகளை மீறும் மாணவனைக் கடுமையாக விசாரிக்கவும் தண்டிக்கவும் நியாயமிருந்தது. இப்படியெல்லாம் கண்டிப்பான விதிகளிலிருந்தும், பரிட்சைக்குச் சில நாட்களே இருக்கும் அந்தச் சமயத்தில் கூட உள்ளே இருந்து படிக்கிறாற் போலத் தோன்றுமாறு அறை விளக்குகளைப் போட்டுவிட்டுப் பின் பக்கத்துப் பாத்ரூம் குழாய் வழியாகத் தொற்றிக் கொண்டு கீழிறங்கிச் சுவரேறிக் குதித்து இரண்டாவது ஆட்டம் திரைப்படத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள் சில மாணவர்கள். இந்தச் செய்தியைச் சத்தியமூர்த்தி அறிந்து கொண்ட பின் இதை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும் என்று மனத்தில் உறுதி செய்து கொண்டான். வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டித் தங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு பையன் படிக்கிறான் என்ற நம்பிக்கையில் மாதம் தவறாமல் படிப்புக்கும் செலவுக்கும் பணம் அனுப்புகிற அப்பாவிப் பெற்றோர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுகிற பொறுப்பு வார்டனுக்கும் உதவி வார்டனாகிய தனக்குமே இருப்பதாக அவன் உணர்ந்தான்! எனவே அன்று மாலையில் அவன் வார்டனைச் சந்தித்து, "சார், நீங்களும் வாருங்கள், நன்றாக இருட்டிய பின்பு ஆளுக்கொரு டார்ச் லைட்டோடு புறப்பட்டுப் போய் ஹாஸ்டலின் பின்புறத்துச் சுவரருகே பதுங்கியிருந்து தவறு செய்கிறவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கலாம். நிலைமையை இப்படியே வளர விடுவது ஹாஸ்டல் கட்டுப்பாட்டையே பாழாக்கி விடும்" என்று சொல்லிக் கூப்பிட்டான். வார்டன் அதற்குக் கூறிய பதில் பொறுப்பற்றதாகவும், தட்டிக் கழிப்பதாகவும் இருந்தது.

"இதையெல்லாம் கண்டும் காணாத மாதிரி இருந்து விடவேண்டும். ஒரு நிலைமை வரைதான் நாம் கண்காணிக்க முடியும். அதற்காக 'வாட்ச்மேன்' செய்கிற வேலையெல்லாம் நாம் செய்ய முடியாது. இராத் தூக்கம் விழித்து டார்ச் லைட்டும் கையுமாகக் காலேஜ் ஹாஸ்டல் காம்பவுண்டுச் சுவர்களைச் சுற்றி வருவதற்கு நாம் பாராக்காரர்களா அல்லது ரோந்து சுற்றுகிறவர்களா? பூச்சி பொட்டுகள் நடமாடுகிற இடம். நான் அங்கெல்லாம் இரவில் வர முடியாது" என்று நிர்த்தாட்சண்யமாகப் பதில் கூறி விட்டார் வார்டன். முந்திய தினம் கல்லூரி 'சோஷியல் சர்வீஸ் லீக்' நியாயமாக இயங்க வேண்டும் என்று அவன் விவாதித்த போது வேறொரு முதிய பேராசிரியரிடம் எந்த விதமான அலட்சியம் எதிரொலித்ததோ அதே விதமான அலட்சியத்தைத்தான் இப்போது வார்டனிடமும் சத்தியமூர்த்தி கண்டான். கடமையைப் புறக்கணிக்கிறவர்கள் எத்தனை பெரிய பாவத்தைச் செய்கிறார்கள் என்றெண்ணி அவன் மனம் நொந்தான். தீர்த்தமாடுதல், தரிசனம் செய்தல், தர்மம் இதையெல்லாம் செய்யாதவர்களைக் காட்டிலும் பெரிய பாவத்தைக் கடமை தவறுகிறவர்கள் சுமக்கிறார்கள் என்று தோன்றியது அவனுக்கு. வார்டன் தன்னோடு ஒத்துழைக்காததைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் அன்றிரவு சாப்பாடு முடிந்ததும் ஹாஸ்டல் வரை போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாகக் குமரப்பனிடமும் சுந்தரேசனிடமும் சொல்லிக் கொண்டு டார்ச் லைட்டோடு தனியே புறப்பட்டுப் போனான் சத்தியமூர்த்தி. இரவு எட்டு மணிக்கு மேல் கல்லூரியின் அந்தப் பெரிய காம்பவுண்டில் தூங்குமூஞ்சி மரங்களைத் தவிரக் கட்டிடங்களும் தூங்கினாற் போல் அமைதியடைந்து விடும். மலையடிவாரத்து அமைதியும், சிள்வண்டுகளின் ஓசையுமாகத் தனிமையின் ஆழ்ந்த பயங்கரம் சூழ்ந்திருக்கும் விடுதிச் சுவர் ஓரமாகப் போய் நின்று காத்திருந்தான் சத்தியமூர்த்தி.

ஒன்பது மணிக்குமேல் இருளில் சரியாக அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத யாரோ இரண்டு மூன்று முரட்டு மாணவர்கள் அறைகளின் பின்புறம் பாத்ரூம் குழாய்களின் வழியே இறங்கிச் சுவரேறிக் குதித்து வெளியே விரைந்த போது, சத்தியமூர்த்தி ஓசைப்படாமல் அவர்களைப் பின் தொடர்ந்தான். கல்லூரி எல்லையைக் கடந்து அவர்கள் வெளியேற இருந்த கடைசி வாசல் அருகே சென்றதும், திடீரென்று பின்புறத்திலிருந்து அவர்கள் முற்றிலும் எதிர்பாராத நிலையில் டார்ச் ஒளியை அவர்கள் மீது பாய்ச்சி "நானும் உங்களோடு துணைக்கு வரட்டுமா தம்பிகளா?" என்று கேட்டு அவர்களைத் திகைத்து நிற்க வைத்துவிட்டான் சத்தியமூர்த்தி. "நாங்கள் உங்களைக் கௌரவமான மாணவர்களாக நடத்த விரும்புகிறோம். ஆனால் நீங்களாகவே இப்படிச் சிறைக் கைதிகளைப் போல் நடந்து கொள்ள முயல்கிறீர்கள்" என்று அவன் மேலும் கூறிவிட்டு இன்னும் அருகில் சென்று அவர்கள் முகங்கள் தெளிவாகத் தெரியும்படி விளக்கை இட்டுப் பார்த்தான். அந்த மாணவர்கள் வெட்கித் தலைகுனிந்தபடி அறைக்குத் திரும்பினார். சத்தியமூர்த்தியும் அவர்களோடு அறைக்குச் சென்று அவர்களே தங்கள் நிலையை உணரும்படி மனம் விட்டுப் பேசினான். அந்த மாணவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு திருந்தினார்கள். அன்று சத்தியமூர்த்தி தன் அறைக்குத் திரும்பும் போது இரவு பதினொன்றரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதற்கு அடுத்த நாளிலிருந்து ஹாஸ்டலில் அந்த மாதிரித் திருட்டுத்தனம் நிகழ்வது நின்றது. கடமையையும் உண்மையையும் போற்ற வேண்டுமென்று அவன் இவற்றைத் தானாகவே விரும்பிச் செய்தானே ஒழிய இவற்றுக்காக அவனை யாரும் பாராட்டக் காத்திருக்கவில்லை.

அத்தியாயம் - 35

ஒரு பெண் எதற்காகவும் வாய்விட்டு அழலாம். ஆனால் ஆண் பிள்ளை பல சமயங்களில் அப்படி அழ முடியாது. இதயத்தினால் மட்டுமே அழுவதற்கு முடியும்.

பயன் கருதாமல் அந்தக் கல்லூரிக்கும் அதன் மாணவர்களுக்கும் எத்தனையோ பல நற்பணிகளைத் தொடர்ந்து புரிந்து கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அவற்றையெல்லாம் பேராசிரியர்களும் கல்லூரி முதல்வரும் பாராட்டவில்லையானாலும் நாளுக்கு நாள் மாணவ மாணவிகளுக்கும் சத்தியமூர்த்திக்குமிடையே நெருக்கமும் பாசமும் அவற்றால் வளர்ந்து பெருகிக் கொண்டிருந்தது. சக விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும், கல்லூரி முதல்வரும், துணை முதல்வரும் இதற்காக அவன் மேல் அதிகமாகப் பொறாமைப்பட்டார்கள். அவனைப் பற்றி அதிகமாகப் புறம் பேசினார்கள். காலாண்டுத் தேர்வுக்கான பரீட்சைகளும் அவசர அவசரமாக நடந்து முடிந்த பின் இருபத்தைந்து மாணவர்களும், ஐந்து மாணவிகளும் சந்தனச் சோலை கிராமத்தில் மலை சரிந்து மண் மேவிப் போனச் சாலையைச் செப்பனிடச் சம்மதித்துக் கையொப்பமிட்டிருந்த தாளையும், ‘சோஷியல் சர்வீஸ்’ ‘ஒர்க் காம்ப்’புக்கான திட்டத்தையும் எடுத்துக் கொண்டு போய், முதல்வரையும், பாலக்காட்டுப் பேராசிரியரையும் சத்தியமூர்த்தி சந்தித்த போது அவர்கள் மறுக்காமல் ‘ஒர்க் காம்ப்’பிற்கு இணங்கியாக வேண்டியிருந்தது. நவராத்திரி விடுமுறைக்காக அப்பாவோடு மைசூர் தசராவுக்குப் போகப் போவதாக ஆசிரியர்களிடமும், சக மாணவிகளிடமும் பெருமையடித்துக் கொண்டிருந்த பாரதியே அந்த ஒர்க் காம்ப்பிற்கு இணங்கித் தானாகக் கையொப்பமிட்டிருந்தது சத்தியமூர்த்திக்குப் பெரிதும் ஆச்சரியத்தை அளித்தது. சமூகச் சேவை முகாமுக்காகக் கூடாரங்கள், சமையல், சாப்பாடு ஏற்பாடுகள் எல்லாம் மாணவர்களே செய்தார்கள். மலை மேல் சில ஆயிரம் அடி உயரத்துக்கு இருந்த அந்தச் சிற்றூரில் சந்தன மரங்கள் ஏராளமாக இருந்தன. அந்த ஊரின் குளிரில் அட்டைக் கடியையும் பொறுத்துக் கொண்டு ஒரு வாரம் கடுமையாகப் பாடுபட்டு மலைச் சரிவை அகற்றிச் சாலையைப் பழையப்படி ஆக்குவதற்காக மாணவ மாணவிகள் மிகவும் கடுமையாக உழைத்தார்கள். சத்தியமூர்த்திக்குத் துணையாக ஆயிரம் அலுப்புச் சலிப்போடு அந்த மலையாளத்து அவியல் பேராசிரியரும் வந்திருந்தார். மாணவிகளை மேற்பார்க்க ஒரு பேராசிரியையும் வந்திருந்தார். பயனை எதிர்பாராமல் யாரோ நடக்க யாரோ வழி உண்டாக்கித் தருகிற அந்தப் பணியில் எவ்வளவு மன நிறைவு இருக்க முடியும் என்பதை அந்தச் சமூகச் சேவை முகாம் முடிந்து, மாணவ மாணவிகளைத் திரும்ப அழைத்துக் கொண்டு மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிய தினத்தன்று சத்தியமூர்த்தி உணர்ந்தான். எந்த இடத்தோடு அந்தச் சாலையை அவர்கள் செப்பனிட்டு முடித்தார்களோ அந்த இடத்தில் ஓர் அடையாளமாகச் சாலை மேல் ஏதாவது மரம் நட வேண்டும் என்று மாணவர்கள் அபிப்பிராயப் பட்டார்கள். அந்த மரத்தைச் சத்தியமூர்த்தியே தன் கையால் நட வேண்டுமென்றும் மாணவர்கள் விரும்பினர்.

சத்தியமூர்த்தி அங்கே சந்தன மரத்தின் சிறு செடி ஒன்றை நட்டான். அருகில் நின்று கொண்டிருந்த பாரதி உற்சாகமாகப் பூவாளியைத் தூக்கிக் கொண்டு வந்து அந்தச் செடிக்குத் தண்ணீர் ஊற்றினாள். “மிஸ் பாரதியே தன் கையால் நீர் வார்த்த பிறகு இந்த மரத்தின் யோகத்துக்குக் கேட்கவா வேண்டும்?” என்று சத்தியமூர்த்தி அப்போது இருந்த கலகலப்பான நிலையில் வேடிக்கையாகச் சொல்லியதைக் கூட அவள் இரசிக்கவில்லை போலிருந்தது. எல்லோரும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள். அவளோ தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பூவாளியையும் கீழே போட்டுவிட்டு முகத்தைத் தூக்கிக் கொண்டாள். அப்போது மறுபடியும் அவனுக்கு அவள் புதிரானாள். சமூகச் சேவை முகாம் முடிந்து அவன் மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிய நாளன்று அங்கே குமரப்பன் அவனுக்குச் சொல்வதற்காக ஒரு துயரச் செய்தியை வைத்திருந்தான்.

நமக்கு மிகவும் வேண்டியவர்களுக்குத் துயரம் வந்து விட்டால் அப்படி ஒரு துயரம் நிகழ்ந்ததாகவே நம் மனம் நம்பி ஒப்புக் கொள்ள மறுக்கிறது. சந்தனச் சோலை கிராமத்தில் சமூகச் சேவை முகாம் முடிந்து மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிய சத்தியமூர்த்தியிடம் குமரப்பன் தெரிவித்த துயரச் செய்தியும் நம்பவும், ஒப்புக்கொள்ளவும் இயலாத அளவுக்கு வேதனை நிறைந்ததாகத்தான் இருந்தது. ஏற்கனவே சமூகச் சேவை முகாம் முடிந்து திரும்பியதும் மதுரைக்குப் புறப்படுவதாக இருந்த அவன், இந்தச் செய்தி தெரிந்ததும் உடனே புறப்பட்டாக வேண்டியிருந்தது. உடம்பும் மனமும் தளர்ந்து போய்க் கேள்விப்பட்ட துயர நிகழ்ச்சியால் தாங்க முடியாத வருத்தத்தோடிருந்தான் அவன். ‘இரண்டு மூன்று நாட்களுக்கு முன் நவராத்திரி விழாவுக்காக மஞ்சள்பட்டி சமஸ்தானத்துக்குப் போய்விட்டுத் திரும்பும் போது மோகினியும் அவள் தாயும் வந்து கொண்டிருந்த கார் பயங்கரமான விபத்துக்குள்ளாகி விட்டதென்றும் விபத்து நடந்த இடத்திலேயே மோகினியின் தாய் முத்தழகம்மாள், கார் டிரைவர் இறந்து போய் விட்டனர் என்றும், விபத்தில் உயிர் தப்பிய மோகினி சில்லரைக் காயங்களோடு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் என்றும் தினப்பத்திரிகைகளில் செய்தி வந்திருப்பதாகக் கூறிவிட்டுக் குமரப்பன் அந்தப் பத்திரிகைகளையும் கொண்டு வந்து காண்பித்தான். ‘கார் விபத்தில் பிரபல நாட்டியக்காரி மயிரிழையில் உயிர் தப்பினார்’ என்று தலைப்பிட்டு முதற் பக்கத்தில் பரபரப்பான செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது அது. அந்தச் செய்தியைப் படித்ததும் சத்தியமூர்த்தியின் உடம்பும் மனமும் நடுங்கின. கண்கலங்கிற்று. பிறருடைய துயரங்களுக்காக மனம் வருந்தி அனுதாபப்பட நேரும் சம்பவங்கள் அவன் வாழ்க்கையில் நிறைய நிகழ்ந்திருக்கின்றன. இன்று மோகினிக்கு நேர்ந்த துன்பத்தைக் கேள்விப்பட்ட போதோ சாதாரணமான வருத்தத்திற்கும் துயரத்திற்கும் அப்பாற்பட்டதொரு தவிப்பையே அவன் உணர்ந்தான். சொற்களால் சொல்ல முடியாததோர் அழகிய சோகம் மிதக்கும் மோகினியின் கண்களை நினைவு கூர்ந்தான். அந்தக் கண்களில் நீர் பொங்க அவள் அழுவது போலக் கற்பனை செய்தபோது அந்தக் கற்பனையைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத அத்தனை துயரத்தை அடைந்தது அவன் மனம். தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் அவன் அழத் தொடங்கிய போது குமரப்பன் அருகில் வந்து ஆறுதல் கூறினான்.

”உன் துயரம் எனக்குப் புரிகிறது சத்தியம்! ஆனால் உன்னையும் என்னையும் போல் ஆண் பிள்ளைகளின் துயரம் உணர்ச்சியளவில் நிற்க வேண்டுமே ஒழிய அழுகையாக வெளிப்படக் கூடாது. பெண்கள் எதற்காகவும் வாய்விட்டு அழலாம். ஆண்கள் இதயத்தினால் மட்டுமே அழ முடியும். பெருமைக்கும், வலிமைக்கும் உரியவனான ஆண்மகன் துயரப்படும் போது கூட ஆண்மை அழியாமல் துயரப்பட வேண்டும். என்ன நேர்ந்துவிட்டதென்று இப்படிக் கண் கலங்குகிறாய்? மோகினிக்கு இப்படிப்பட்ட துயரம் நேர்ந்திருக்கக் கூடாதுதான். நேர்ந்து விட்ட பிறகு நாமும் என்ன செய்ய முடியும்? நாளைக் காலையில் முதல் பஸ்ஸில் மதுரை சென்று ஆஸ்பத்திரியில் அவளைப் பார்த்துவிட்டு வரலாம். என்னுடைய கடையில் இப்போது தான் தொழில் சுறுசுறுப்பாக நடக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் நான் தொழிலை விட்டுவிட்டுக் கடையை இழுத்துப் பூட்டிக் கொண்டு உன்னோடு மதுரைக்கு வர முடியாது. ஆனாலும் உன்னைத் தனியாக அனுப்புவதைக் காட்டிலும் நானும் உடன் வருவது நல்லதென்று எண்ணி நான் வருகிறேன். பொறுமையாக இரு. காலையில் புறப்பட்டுப் போய் பார்க்கலாம்...” என்றான் குமரப்பன்.

மலைக்காட்டு ஊரில் ஒரு வார காலமாக ஓடியாடி உழைத்துக் களைத்துப் போய் வந்திருந்தும் அன்றிரவு சத்தியமூர்த்தி உறங்கவேயில்லை. மோகினியைப் பற்றிய ஞாபகங்களிலேயே அந்த இரவு கழிந்தது. அவளுடைய நிகழ்காலத் துயரத்தை நினைத்த போது கடந்த துயரங்களாகத் தன்னால் அநுமானிக்க முடிந்தவற்றையும் சேர்த்து எண்ணினான் சத்தியமூர்த்தி. மறுநாள் காலை ஐந்தரை மணிக்கு விடிகிற நேரத்துக் கருக்கிருட்டில் நண்பன் குமரப்பனோடு பஸ் நிலையத்துக்குப் போய் மதுரைக்குப் பஸ் ஏறிய போது இன்னும் மூன்று - மூன்றரை மணி நேரம் பயணம் செய்து போக வேண்டும் என்று நினைப்பதற்கே பொறுமையின்றி இருந்தான் அவன். மோகினியின் மென்மையான இதயத்தைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். கார் விபத்தினாலும் தாயின் மரணத்தினாலும் அவள் எவ்வளவிற்கு அதிர்ச்சியடைந்து வாடியிருப்பாள் - என்று கற்பனை செய்து பார்த்துத் தன் மனத்திற்குள் அவன் வருந்தினான்.

சத்தியமூர்த்தியும் குமரப்பனும் சேர்ந்து செய்கிற பயணத்தில் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளாமல் அவசரத்துடனும், மௌனமாகவும் செய்த முதற் பயணமாக இருந்தது இன்றைய பயணம். இருவரும் மதுரையை அடைந்து ஆஸ்பத்திரிக்குச் சென்று கொண்டிருந்த போது, “கார் விபத்தில் மோகினிக்கு அதிகக் காயங்கள் ஏற்பட்டிருக்குமோ குமரப்பன்?” என்று பரபரப்பாக ஒரு கேள்வியை இருந்தாற் போலிருந்து கேட்டான் சத்தியமூர்த்தி. “அப்படியெல்லாம் நினைத்து வீணாகக் கலவரமடையாதே சத்தியம்! ‘சில்லறைக் காயங்களோடு உயிர் தப்பினார்’ என்று தான் பத்திரிகைகளில் போட்டிருக்கிறது. இன்னும் கால் மணி நேரத்தில் ஆஸ்பத்திரிக்குப் போய் நேரிலேயே பார்த்துவிடப் போகிறோம். மனத்தை அலட்டிக் கொள்ளாமல் வா” என்று நண்பனைத் தேற்றி அழைத்துக் கொண்டு சென்றான் குமரப்பன். எர்ஸ்கின் ஆஸ்பத்திரிக்கு அவர்கள் இருவரும் டவுன் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்த போது வையைப் பாலம் நெருங்கும் வேளையில் சத்தியமூர்த்தியின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. ஓடுகால் பள்ளங்களும், மணல் மேடுகளும் மறைந்து, வையையில் செந்நிறப் புதுநீர் அபூர்வமாகப் பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது. பாலத்தின் மேற்குப் புறம், கட்டை வண்டிகளும், மற்றப் போக்குவரவு வாகனங்களும் செல்கிற கல் பாலத்துக்கும் அப்பால் தளர்ந்த கல் தூண்களோடு எதற்கோ கட்டுப்பட்டு நிற்கும் பழைய உண்மையாய் மைய மண்டபம் நின்று கொண்டிருந்தது. அதற்கும் மேற்கே இரயில் பாலத்தில் - பாலத்தின் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் சரியாயிருக்கிறாற் போல் ஒரு கூட்ஸ் வண்டி போய்க் கொண்டிருந்தது. அந்தப் பாலத்தில் இரயில் வந்து கொண்டிருந்த அதிகாலை நேரமொன்றின் போதுதான் கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வதற்கிருந்த மோகினியை அவன் காப்பாற்றினான். அவன் அப்படிக் காப்பாற்றியதைப் பற்றிப் பின்னால் ஒரு சமயம் அவளே கூறியிருந்த அழகிய வாக்கியமும் இப்போது சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. எத்தனை அழகிய வாக்கியம் அது...?

”மேளம் கொட்டாமல் நாதஸ்வரம் வாசிக்காமல் அந்த அதிகாலை நேரத்தில் ஓடும் ரயிலில் பாணிக்கிரணம் செய்து கொண்டது போல் என் வலது கையைப் பிடித்து இழுத்தீர்களே...” என்ற இனிய குரல் இப்போதும் இன்னும் கூட அவன் காதருகே ஒலித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது.

ஆஸ்பத்திரியின் அருகே பஸ்ஸிலிருந்து இறங்கி உள்ளே சென்ற போது முன்பக்கம் வரிசையாக நின்றிருந்த கார்களைப் பார்த்துக் கொண்டே நடந்த குமரப்பன், “கண்ணாயிரமும் மஞ்சள்பட்டியாரும் கூட வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. இதோ அவர்களுடைய கார்கள் அடுத்தடுத்து நிற்கின்றன பார்!” என்றான். மஞ்சள்பட்டி ஜமீந்தாருடைய மிகப் பெரிய 'காடிலாக்' காரும் அதனருகே கண்ணாயிரத்தின் சின்னஞ்சிறிய காரும் அங்கு அப்போது நின்று கொண்டிருந்தன. மோகினி அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்பெஷல் வார்டு அறையின் முன்புறம் கூட்டம் அதிகமாயிருந்தது. அறையின் முகப்பில் இருந்த நாற்காலிகளில் பழக் கூடைகள், ஹார்லிக்ஸ் பாட்டில் சகிதம் ஜமீந்தாரும், கண்ணாயிரமும் அட்டகாசமாக உட்கார்ந்திருந்தார்கள். இன்னும் சிறிது தள்ளி மேஜைக்கு அருகே ஒரு சிறிய ஸ்டூலில் நர்ஸ் ஒருத்தி அமர்ந்திருந்தாள். அறைக்குள் நுழையத் தயங்கினான் சத்தியமூர்த்தி. உள்ளே போய் மோகினியைப் பார்ப்பதற்கு அவன் கால்களும் மனமும் துடித்தாலும் முன்புறம் காவல் நாய்களைப் போல் உட்கார்ந்து கொண்டு முறைத்துப் பார்த்த ஜமீந்தாரையும் கண்ணாயிரத்தையும் கண்டு தயங்கினான். நர்ஸ் வந்து ஏதோ விசாரித்தாள். அதற்கும் குமரப்பன் தான் பதில் கூறினான். "தயங்காமல் உள்ளே வாடா சத்தியம்! இந்தப் பாவிகள் இங்கே இருக்கிறார்கள் என்பதற்காக நீயும் நானும் எதற்காகத் தயங்க வேண்டும்? பேசாமல் என் பின்னால் வா... சொல்கிறேன்" என்று ஸ்கிரீன் வைத்து மறைத்திருந்த மறுபுறத்துக்கு அவனை அழைத்துச் சென்றான் குமரப்பன். கட்டிலில் படுத்திருந்த மோகினி நல்ல வேளையாக அப்போது விழித்துக் கொண்டு தான் இருந்தாள். அவளுடைய நெற்றியிலும், மோவாயிலுமாக இரண்டு மூன்று பிளாஸ்திரி ஒட்டுக்கள் போடப்பட்டிருந்தன. அவளுடைய அழகிய கண்கள் இரண்டும் அழுது அழுது இரத்தம் கன்றிச் சிவந்திருந்தன. முகம் கறுத்து வாடியிருந்தது. திடீரென்று தன் கட்டிலருகே சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் அவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. சத்தியமூர்த்தியைக் கட்டிலருகே இருந்த ஸ்டூலில் உட்காரச் சொல்லிக் கையைக் காண்பித்து விட்டுப் படுக்கையில் நிமிர்ந்து தலையணைகளில் சாய்ந்தாற் போல் உட்கார்ந்தாள் அவள். தேனிற் செய்தது போன்ற அவள் குரல் இன்று துயரத்தினால் உடைந்து நலிந்து போயிருந்தது.

"நீங்கள் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் உங்களுக்கு இதெல்லாம் தெரியுமோ, தெரியாதோ என்று எண்ணி என் ஆசையை நானே அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. என் தவிப்பு வீண் போகவில்லை. நான் எதிர்பார்த்தபடி தெய்வமே உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்டது..." மேலே பேச முடியாமல் அழுகை பொங்கியெழுந்து அவள் குரலை அடக்கியது.

"தெரியாமல் போகுமா? செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்தேன். உடனே நானும் இவனும் புறப்பட்டு வந்தோம். தெய்வமே என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருப்பதாகச் சற்று முன் நீ கூறினாயே, அந்தத் தெய்வம் இவன் தான்!" என்று சொல்லிக் குமரப்பன் பக்கமாகக் கையைக் காண்பித்தான் சத்தியமூர்த்தி. "ஒருவருக்கொருவர் புகழ்ந்து கொள்வதற்கும் நன்றி சொல்லிக் கொள்வதற்கும் இதுவா நேரம்? ஆறுதலாக நாலு வார்த்தை பேசிக் கொண்டிரு. நான் வெளியில் போய் இருக்கிறேன். ஜமீந்தாரும், கண்ணாயிரமும் ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்" என்று சொல்லிவிட்டுக் குமரப்பன் அங்கிருந்து நகர்ந்தான். அவன் வெளியேறிய சிறிது நேரத்தில் நர்ஸ் கட்டிலருகே வந்து, "படுத்துக் கொண்டு பேசுங்கள். வீணாக, 'ஸ்டிரெயின்' பண்ணிக் கொள்ளக் கூடாது..." என்று மோகினியை எச்சரித்து விட்டுப் போனாள்.

"இந்த நர்ஸ் ரொம்ப நல்லவள்! இன்று அல்லது நாளைக்கு இவளை விட்டு உங்களுக்கு ஒரு கடிதம் எழுதச் சொல்லலாம் என்றிருந்தேன். நானே எழுத முடியாதபடி கையிலும், தோள் பட்டையிலும் கட்டுப் போட்டுத் தொலைத்திருக்கிறார்கள். இவளிடம் சொல்லி எழுதச் செய்யலாமென்றால், ஒரு நிமிடம் கூடத் தனியாக இருக்க முடியாதபடி பாழாய்ப்போன ஜமீந்தாரும், கண்ணாயிரமும் எனக்கு உபசாரம் செய்கிறேன் பேர்வழியே என்று மாற்றி மாற்றிக் காவல் இருக்கிறார்கள். நல்ல வேளையாக என் வேதனையும் தவிப்பும் பொறுக்க முடியாமல் தெய்வமே கண் திறந்தது போல் நீங்களே தேடி வந்து விட்டீர்கள். இனிமேல் தான் என் வாழ்க்கையில் வேதனைகளும் சோதனைகளும் அதிகம். இந்தக் கார் விபத்தில் அம்மாவும் டிரைவரும் செத்துப் போனதற்குப் பதில் நான் செத்தொழிந்திருந்தால் எவ்வளவோ நிம்மதியாயிருக்கும். இந்த உலகத்தில் யாருமே புரிந்து கொள்ளாத அநாதைப் பெண்ணாக உயிர் வாழ்வதைக் காட்டிலும் சாவது எவ்வளவோ மேல். நான் தீர்மானமாகச் செத்துப் போய் விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு சாக முயன்ற ஒரே ஒரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் குறுக்கிட்டுக் காப்பாற்றி விட்டீர்கள்."

"அப்படி நீங்கள் என்னைக் கைப்பிடித்துக் காப்பாற்றிய முதல் விநாடியிலிருந்து, அல்லது இதை அந்தரங்கமாக நான் எப்படி நினைக்கிறேனோ அப்படியே சொல்வதாக இருந்தால், நீங்கள் என்னைக் காப்பாற்றிக் கைப்பிடித்த முதல் விநாடியிலிருந்து நான் உங்களுக்கு மானசீகமாக வாழ்க்கைப்பட்டு விட்டேன். உங்களை நினைப்பதற்காக, உங்களை நினைத்துத் தவிப்பதற்காக, உங்களுக்காகத் தவித்து உருகுவதற்காக, நான் இன்னும் வாழ வேண்டும் போலவும் ஆசையாயிருக்கிறது. நீங்கள் நினைப்பதற்கு ஒரே ஒரு பவித்திரமான ஞாபகமாகச் சாகவேண்டும் போலவும் ஆசையாயிருக்கிறது. 'நான் வாழ்ந்து உங்களை நினைக்க வேண்டும். அல்லது நீங்கள் வாழ்ந்து நினைக்க ஒரு ஞாபகமாகி நானே போய்விட வேண்டும். 'மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வாழ்கில்லேன்' என்று ஆண்டாளாக அரிதாரம் பூசிக்கொண்டு நாட்டிய மேடையில் கதறிக் கண்ணீர் மல்கி நான் ஆடும் ஒவ்வொரு முறையும் எந்தத் தெய்வத்தை நினைத்துக் கொண்டு ஆடுகிறேனோ, அந்தத் தெய்வம் நீங்கள் தான்!"

"என்னைச் சுற்றிலுமோ, என் வாழ்க்கையைச் சுற்றிலுமோ, உங்களைச் சந்திப்பதற்கு முன் இவ்வளவு சத்தியமான எந்த மனிதரையும் நான் சந்தித்ததில்லை. ஆண்டாள் அரங்க நாதருக்குச் சூடிக் கொடுத்தது போல நான் உங்களுக்குச் சூடிக் கொடுத்து வாழ்க்கைப்பட்டிருக்கிறேன். அன்று ஒரு நாள் எங்கள் வீட்டு முருகன் படத்துக்கு நான் மாலை சூட்டிய போது உங்களை நினைத்துக் கொண்டு சூட்டினேன். நான் நினைத்ததும் பாவித்ததும் வீண் போகாமல் அந்த மாலை உங்கள் கழுத்திலேயே நழுவி விழுந்தது. வெள்ளைக்காரச் சாதியில் - மோதிரம் மாற்றிக் கொண்டாலே திருமணம் முடிந்து விடுமாமே! நாம் வெள்ளைக்காரர்களில்லையானாலும் எங்கள் வீட்டில் அந்த முருகன் படத்தைத் தெய்வ சாட்சியாகக் கொண்டு நம்முடைய திருமணம் நிகழ்ந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன்..." மோகினி தன் பேச்சை முடிக்காமல் விசும்பி விசும்பி அழலானாள். கண் கலங்கி வீற்றிருந்த சத்தியமூர்த்தி அவளுடைய தலையைக் கோதிவிட்டுக் கொண்டே கனிவுடன் கூறினான்:

"நானும் அதை மறுக்கவில்லை மோகினி! இந்து தர்மப்படி ஒரு பெண் தனக்கு நினைவு தெரிந்த பின் எந்த ஆண்மகனைச் சுயமாகவும் இதயப் பூர்வமாகவும் வரித்துக் கொண்டு அவனுடைய க்ஷேமலாபங்களுக்காக இடைவிடாமல் நோன்பும் தவமும் செய்கிறாளோ, அந்த ஆண்மகனுக்கு அவள் மனைவியாகிறாள். பெண் மெய்யாக உறையும் மனை கணவனுடைய வீடு மட்டுமன்று. இந்தத் தேசத்துப் பெண்ணின் வாழ்க்கை இலட்சியம் கணவனுடைய இதயத்தில் நித்திய சுமங்கலியாகத் தங்கி வசிப்பதுதான்."

"நான் அப்படி உங்கள் இதயமாகிய மனையில் என்றும் நித்திய சுமங்கலியாகத் தங்கி வசிக்க முடியுமோ அன்பரே?"

இந்தக் கேள்வியை அவனிடம் கேட்கும் போது அவளுக்கு மெய் சிலிர்த்தது. விழிகளில் நீர் பெருக எதிரே மிக அருகில் வீற்றிருக்கும் அவனுடைய கம்பீரமான முகத்திலும் கண்களிலும் தன் வாழ்வின் நம்பிக்கைகளைத் தேடுகிறவளைப் போல் ஏறிட்டுப் பார்த்தாள் மோகினி.

அத்தியாயம் - 36

சுற்றமும் சூழலும் படைத்து வைத்து விட்ட உறவுகளைக் காட்டிலும் இதயமும் உணர்வும் தானே புரிந்து கொள்ளுகிற உறவுகள் அதிக வலிமை அடைந்து விடுகின்றன.

நெஞ்சின் ஆழத்தைத் தொடுகிற அந்தப் பார்வையில் அவளுக்குக் கட்டுப்பட்டான் சத்தியமூர்த்தி. சில விநாடிகளுக்குப் பின் அவளுக்கு மறுமொழி கூறிய போது அவன் மனம் மிகவும் நெகிழ்ந்திருந்தது.

"சத்தியமாக மட்டுமின்றி நித்தியமாகவும் நீ என் மனத்தில் தங்கியிருப்பாய் மோகினி! உன் அம்மா உயிருடன் வாழ்ந்திருக்கும் போதே நீ அநாதைதான். அம்மா போன பின் இப்போதோ நீ இன்னும் நிராதரவாகவும், நிச்சயமாகவும் அநாதையாகிவிட்டாய்! ஆனால் இனி நீ அநாதையுமில்லை, உன்னை நீயே அநாதையென்று வருணித்துக் கொள்ளுவதற்கும் இனிமேல் நான் விடமாட்டேன். உடம்பும் முகமும் அழகாயிருக்கிற பெண்ணொருத்திக்குக் கணவனாயிருக்கிற ஆண் மகனே நிமிர்ந்து நடக்கிற இந்த உலகத்தில் இதயமும் அழகாயிருக்கிற உன்னைக் கைப்பிடித்த நான் அதற்காக எவ்வளவோ பெருமைப்படலாம், எவ்வளவோ நிமிர்ந்து நடக்கலாம்."

"மேளதாளமில்லாமல் சந்தனம் வெற்றிலை பாக்கு இல்லாமல் நடந்துவிட்ட இந்தக் கலியாணத்துக்கு உலகம் மரியாதை செய்யுமா அன்பரே?" என்று அவள் கேட்ட கேள்விக்குச் சத்தியமூர்த்தி கூறிய பதிலில் ஒரு பெரிய காவியமே உள்ளடங்கியிருந்தது.

"மனத்தின் சந்தோஷமே மங்கல வாத்தியங்களாகவும் பரஸ்பர நம்பிக்கையே அங்கீகாரமாகவும் நடைபெறும் காந்தர்வ விவாகங்களைப் பற்றி இதிகாசங்களிலும் காவியங்களிலும் தான் இதுவரை படித்திருக்கிறோம் மோகினி. கொட்டும் அடைமழையில் காரிருளில் வஸந்தசேனையையும் சாருதத்தனையும் போல் மணந்து கொண்டவர்களும் இந்த நாட்டுக் காவியங்களில் தெய்வீகக் காதலர்களாகத் தானே வாழ்கிறார்கள்."

"யார் இந்தக் காதலர்கள்? அவர்களைப் பற்றி எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்! உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற நேரம் வளர வளர நான் உற்சாகத்தை அடைவதாக உணர்கிறேன். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் மாமிசக் கழுகுகளாக வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் மனமில்லாமல் போலியாக ஏதாவது சிரித்துப் பேச வேண்டியிருக்கிறது! இன்னும் சிறிது நேரத்துக்கு அந்தப் பாவிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். உங்களுக்கு ரொம்பப் புண்ணியமாகப் போகிறது?"

சத்தியமூர்த்தி மோகினியின் இந்த வேண்டுகோளைக் கேட்டுச் சிரித்தான்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?"

"தன் கணவனிடம் வேண்டுகோள் விடுக்கிற மனைவியை நினைத்தால் சிரிப்பு வராமல் வேறென்ன செய்யும்?"

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது நர்ஸ் மோகினிக்காக ஒரு கிளாஸ் நிறையச் சாத்துக்குடிப் பழரஸத்தைப் பிழிந்து கொண்டு வந்து வைத்தாள். சத்தியமூர்த்தி நர்ஸ் வைத்த இடத்திலிருந்து அந்தக் கிளாஸைத் தன் கையால் எடுத்துச் சிரித்துக் கொண்டே மோகினியிடம் நீட்டினான்.

"முதலில் நீங்கள் கொஞ்சம்..." என்று வெட்கத்தினாள் சிவக்கும் முகத்தோடு அவனை வேண்டினாள் அவள். அந்தக் கிளாஸிலிருந்த சாத்துக்குடி ரஸத்தைச் சிறிது பருகிவிட்டுக் கிளாஸை அவளிடம் நீட்டினான் சத்தியமூர்த்தி. அந்த நேரத்தில் ஸ்கிரீன் மறைவுக்கு அப்பால் ஜமீந்தாரும் கண்ணாயிரமும் உட்கார்ந்திருந்த பகுதியில் குமரப்பனுக்கும் வேறு யாருக்குமோ பேச்சுத் தடித்து உரத்த குரல்கள் எழுந்து சண்டை போடுவது போல் ஒலிக்கவே என்னவென்று பார்ப்பதற்குச் சத்தியமூர்த்தியே வெளியில் எழுந்து வர வேண்டியதாயிற்று.

குமரப்பனும் ஜமீந்தாரும் தான் உரத்த குரலில் வாதாடிக் கொண்டிருந்தார்கள். கழன்று விழுந்து விடுகிறார் போல் இருந்த ஜமீந்தாரின் உருண்டை விழிகள் கோபத்தினால் சிவந்திருந்தன. மீசை துடிதுடிக்க உரத்த குரலில் ஏதோ கத்திக் கொண்டிருந்தார் அவர். சண்டையைத் தடுக்கவும், வேடிக்கை பார்க்கவும், வார்டு வாசலில் டாக்டர்களும், நர்ஸுகளும், ஆஸ்பத்திரி வேலையாட்களுமாகக் கூட்டம் கூடத் தொடங்கியிருந்தது.

"உங்கள் இஷ்டம் போல் ஆட்டிப்படைக்க இதுவும் குத்துவிளக்கு காரியாலயமில்லை! இது ஆஸ்பத்திரி என்பது நினைவிருக்கட்டும் ஜமீந்தார்வாள்! குத்துவிளக்கு காரியாலயத்தில் வேண்டுமானால் உங்கள் மீசை ஆடும்போதே வேலையாட்களின் கைகால்களும் ஆடும். இங்கே யாரும் உங்களுக்காக அப்படி நடுங்க மாட்டார்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்..." என்று குமரப்பன் அவரை எதிர்த்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான்.

ஜமீந்தாரோடும், கண்ணாயிரத்தோடும் சண்டைபோட நேர்ந்த காரணத்தைக் குமரப்பனிடம் அருகில் நெருங்கி விசாரித்தான் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தி அதை எவ்வளவுக்கு எவ்வளவு மெதுவான குரலில் விசாரித்தானோ அவ்வளவுக்கு அவ்வளவு இரைந்த குரலில் குமரப்பனிடமிருந்து பதில் வந்தது.

"அப்போதிருந்து நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேனடா சத்தியம்! பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா? பத்து நிமிஷத்துக்கு ஒரு தரம் அந்த நர்ஸைக் கூப்பிட்டு, 'உள்ளே பேசிக் கொண்டிருக்கிற ஆளை வெளியே போகச் சொல்லு' என்று இவர்கள் தூண்டிக் கொண்டிருக்கிறார்கள். 'வார்டுலே கட்டுக்காவல் ஒன்றுமே கிடையாதா? கண்ட காலிப் பயல்கள் எல்லாம் உள்ளே போய்ப் பேசிக்கிட்டிருக்கானுகளே! கேள்வி முறை இல்லையா?' என்று இதோ அமர்ந்திருக்கிறார்களே, இந்த மேன்மை தங்கிய ஜமீந்தாரவர்கள் சிறிது நேரத்துக்கு முன் என் காதிலும் விழும்படி கண்ணாயிரத்திடம் திருவாய் மலர்ந்தருளினார். அதுவரை பொறுமையாயிருந்த என்னால் உன்னையும் என்னையும் 'காலிப்பயல்களாக' வருணித்ததைக் கேட்ட பின்பும் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. 'காலிப்பயல்' என்று இன்னொருவனைத் திட்ட வேண்டுமானால் அப்படித் திட்டுகிறவனுக்கும் அதற்கு ஒரு யோக்கியதை வேண்டுமல்லவா?" என்று குமரப்பன் ஆத்திரமாகவும், ஆவேசமாகவும் கூறிய பதில் சத்தியமூர்த்திக்கும், உட்புறம் மோகினிக்கும், வெளியே கூடியிருந்த கூட்டத்துக்கும், ஜமீந்தாருக்கும், கண்ணாயிரத்துக்கும் எல்லாருக்குமே தாராளமாகக் கேட்கிற இடிமுழக்கக் குரலாக இருந்தது.

"ஓகோ! ஜமீந்தார் அவர்கள் அவசரமாக உள்ளே போய்ப் பார்த்துப் பேச வேண்டும் போலிருக்கிறது. நாம் அதற்கு குறுக்கே நிற்பானேன்? மறுபடியும் மாலையில் வந்து பார்த்துக் கொள்ளலாம். ஒரு நிமிஷம் இரு. உள்ளே போய்ச் சொல்லிக் கொண்டு வந்துவிடுகிறேன்" என்று அலட்சியமாக ஜமீந்தார் பக்கம் ஒரு பார்வை பார்த்தபின் குமரப்பனிடம் கூறிவிட்டுச் சத்தியமூர்த்தி உட்புறம் சென்றான். படுக்கையில் சாய்ந்தாற் போல் உட்கார்ந்திருந்த மோகினி கன்னத்தில் கையூன்றியபடி மெல்ல அழுது கொண்டிருந்தாள். அவன் பரிவுடன் அவளருகே சென்று கேட்டான். "ஏன் அழுகிறாய் மோகினி?"

"சற்று முன் வெளியே உங்கள் நண்பர் இரைந்து பேசியதெல்லாம் காதில் விழுந்தது. நான் என்ன செய்வேன்? எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என் அருகில் அதிக நேரம் இருக்க முடியவில்லையே என்பதை நினைத்தேன். அழுகை வந்து விட்டது. நான் பெரிய பாவி. என்னைச் சுற்றி ஒரே நரகமாக இருக்கிறது..."

"கவலைப்படாதே மோகினி! அந்த நரகத்தினிடையே நீ மட்டும் ஒரு சொர்க்கமாக இருக்கிறாய். உன்னை மறுபடியும் நான் மாலையில் வந்து பார்க்கிறேன்."

"நீங்கள் மறுபடியும் வந்து பார்க்கப் போகிறீர்கள் என்ற ஞாபகத்திலேயே மாலை வரை கவலை இல்லாமல் கழிந்து விடும். மாலையில் வரும்போது சிறிது நேரத்துக்கு முன் நீங்கள் கூறினீர்களே, அந்த வஸந்தசேனையையும், சாருதத்தனையும் பற்றி எனக்குச் சொல்ல வேண்டும்."

'ஆகட்டும்' என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான் சத்தியமூர்த்தி.

"இன்னொரு காரியமும் நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டும்."

"என்ன காரியமோ?"

"இன்று வெள்ளிக்கிழமை. கடந்த மூன்று வருஷங்களாக ஒரு வெள்ளிக்கிழமை கூடத் தவறாமல் மீனாட்சிக் கோவிலில் அர்ச்சனை செய்து கொண்டு வருகிறேன். இன்றைக்கும் அர்ச்சனை முறை நிற்காமல் நடந்துவிட வேண்டும். சங்கீத விநாயகர் கோவில் தெருவில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் முன்பு அடிக்கடி உங்களிடம் அனுப்புவேனே அந்தப் பையன் இருப்பான். அவனைப் பார்த்து அவனிடம் ஒரு ரூபாய் பணம் கொடுத்து அர்ச்சனையை நடத்திவிடச் சொல்ல வேண்டும்."

"அதற்கென்ன? கட்டாயம் சொல்லிவிடுகிறேன். என் கேள்வியைத் தப்பாக நினைத்துக் கொள்ளாவிட்டால் உன்னை ஒரு கேள்வி கேட்கலாமென்று நினைக்கிறேன்..." என்று சொல்லித் தயங்கினான் சத்தியமூர்த்தி.

"என்ன கேட்கப் போகிறீர்கள்? நீங்கள் எதைக் கேட்டாலும் தப்பாக நினைத்துக் கொள்ளப் போவதில்லை."

"எதை நோக்கமாக வைத்து, எந்த விளைவை எதிர்பார்த்து இந்த அர்ச்சனை, பிரார்த்தனை எல்லாம் செய்கிறாய் மோகினி?" சிரித்துக் கொண்டே அவன் கேட்ட இந்தக் கேள்விக்கு அவள் உடனே பதில் சொல்லிவிடவில்லை. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள். மெல்லப் புன்னகை புரிந்தாள். பின்பு கூறினாள்:

"என்னுடைய பிரார்த்தனையும் அர்ச்சனையும் நான் எதிர்பார்த்ததை விடப் பெரிய சௌபாக்கியத்தை எனக்குக் கொடுத்திருக்கின்றன. உங்களைப் போன்ற உத்தமரை அடைவதற்கே நான் முன் பிறவியில் தவம் செய்திருக்க வேண்டுமே...?" என்று சொல்லி மறைய முயலும் நாணமும் மலர விரும்பும் புன்னகையும் நிறைந்த முகத்தால் அவனைப் பார்த்துக் கைகூப்பினாள் அவள். ஆஸ்பத்திரியில் அவளிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்படுமுன் தன் வீட்டிற்கே தான் இன்னும் போகவில்லை என்றும், மல்லிகைப் பந்தலிலிருந்து வந்து இறங்கியதும் நேரே ஆஸ்பத்திரிக்கு அவளைப் பார்க்க வந்ததாகவும் பேச்சுப் போக்கில் அவன் குறிப்பிட நேர்ந்தது. அதற்காகவும் அவள் அவனைச் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.

"உங்கள் ஞாபகத்தில் எத்தனை பெரிய இடத்தை நீங்கள் எனக்கு அளித்திருக்கிறீர்கள் என்பதைப் பார்த்து எனக்கே பயமாக இருக்கிறது. நான் அவ்வளவு பாக்கியம் செய்திருப்பவளா? சொந்த வீட்டிற்குப் போகாமல் பெற்றோரையும், உடன் பிறந்த தங்கைகளையும் கூடப் பார்க்காமல் நேரே என்னைத் தேடிக் கொண்டு ஓடி வந்திருக்கிறீர்களே? இப்படிச் செய்யலாமா நீங்கள்?"

"என்ன செய்வது? காரணம் புரியாமலே சிலரிடம் நம்மனம் ஒன்றி விடுகிறது. அந்தச் சிலருக்காக நாம் தவிக்கிறோம், அழுகிறோம், ஏங்குகிறோம். சுற்றமும் சூழலும் படைத்து வைத்துவிட்ட உறவுகளைக் காட்டிலும் இதயமும் உணர்வும் புரிந்து கொள்ளுகிற உறவுகள் அதிக வலிமை அடைந்து விடுகின்றன. ஏதோ விட்டகுறை, தொட்டகுறை என்பார்களே அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. மூன்று வருடங்களாக அர்ச்சனையும், பிரார்த்தனையும் செய்வதாகச் சொல்கிறாயே, மூன்று வருடங்களுக்கு முன் உன்னைப் போல் உடம்பும் மனமும் அழகிய பெண்ணொருத்தி இருப்பதாகவே நான் நினைத்திருக்க முடியாது. என்னைப் போல் உன்னைக் காப்பாற்ற ஒருவன் நடுவழியில் வருவேன் என்று நீயும் எதிர்பார்த்திருக்க முடியாது. இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்தால் வாழ்க்கையில் சில விஷயங்கள் முன்னும், பின்னும் முடிவும் இல்லாத தனித்தனி ஆச்சரியங்களாக மட்டுமே நிற்கின்றன."

"ஆச்சரியம் தான்? அந்தக் காலத்தில் ஆரம்ப நாட்களில் 'வழி சொல்ல வருவான் ஒருவன்' என்று தொடங்குகிற பதம் ஒன்றிற்கு அபிநயம் பிடிக்கிற போதெல்லாம் நான் என் மனத்திற்குள், 'நமக்கு வழி சொல்ல யார் வரப்போகிறார்கள்?' என்று ஏக்கத்தோடு நினைத்துக் கொள்வேன்."

இதற்குச் சத்தியமூர்த்தி ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தான். ஆனால், அதற்குள் ஜமீந்தாரும் கண்ணாயிரமும் வார்டின் டாக்டரையும் உடன் அழைத்துக் கொண்டு உள்ளே வந்துவிட்டார்கள். சத்தியமூர்த்தி கண் பார்வையினாலேயே அவளிடம் குறிப்பாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான். வாசலில் வெளிப்புறம் காத்திருந்த குமரப்பன் மிகவும் கோபமாக இருப்பதற்கு அடையாளமாக வந்து கை முஷ்டியைக் குவித்து மடக்கி, இடது உள்ளங்கையில் குத்தியபடி, குறுக்கும் நெடுக்கும் உலாவிக் கொண்டிருந்தான்.

"காலிப் பயல்களாம்; காலிப்பயல்கள்! அதைச் சொல்வதற்கு இந்தக் காலிப்பயல்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? குடி, சூதாட்டம், குதிரைப்பந்தயம் முறை தவறிய கேளிக்கைகள், விளையாட்டுக்கள், லீலைகள் எல்லாம் இந்தக் காலிப்பயல்களிடம் தான் உண்டு. ஒரு தலைமுறையில் பிரான்ஸிலிருந்த ஃயூடலிஸ் வாழ்வின் (பிரபுத்துவ வாழ்க்கை) ஊழல்களை நையாண்டி செய்து எமிலி ஜோலாவும், பால்ஸாக்கும் இலக்கியம் எழுதின மாதிரி இந்த நாட்டிலும் இப்படிக் காலிகளை நையாண்டி செய்து யாராவது தைரியசாலிகள் இலக்கியம் படைக்க வேண்டுமடா சத்தியம்!" என்று இதயம் குமுறும் வார்த்தைகளைப் பேசிக் கொண்டே சத்தியமூர்த்தியோடு புறப்பட்டிருந்தான் குமரப்பன். முதலில் அவர்கள் இருவரும் வடக்கு மாசி வீதிக்குள் புகுந்து சங்கீத விநாயகர் கோயில் தெருவுக்குப் போய் மோகினியின் பக்கத்து வீட்டுச் சிறுவனிடம் வெள்ளிக்கிழமை அர்ச்சனை முறையை நினைவு படுத்தி விட்டு அப்புறம் பேச்சியம்மன் படித்துறைத் தெருவுக்கு வந்தார்கள்.

சத்தியமூர்த்தியின் வீட்டை மாடியிலும் முன்பகுதியிலும் இடித்துக் கட்டிக் கொண்டிருந்ததால் அங்கே தங்குவதற்கு வசதியும் இடமும் மிகக் குறைவாக இருக்கும் போலத் தோன்றியது. குமரப்பன் டவுன்ஹால் சாலையில் இருக்கும் தன் நண்பன் ஒருவனுடைய அறையில் தங்கிக் கொள்வதாகவும், மாலையில் வந்து சத்தியமூர்த்தியை மீண்டும் சந்திப்பதாகவும் கூறிவிட்டுச் சென்றான். சத்தியமூர்த்தி வீட்டுக்குள் நுழைந்த போது படியிறங்கி எங்கேயோ வெளியேறிக் கொண்டிருந்த தந்தை அவனைப் பார்த்ததும் அவனோடு பேசிக் கொண்டே உள்ளே திரும்பினார். சமையலறை நிலைப்படியில் சாய்ந்தார் போல் உட்கார்ந்திருந்த அம்மா மிகவும் இளைத்துத் தளர்ந்து போயிருந்தாள். அவள் பக்கத்தில் வெந்நீர்ப்பை, மருந்து பாட்டில்கள், அவுன்ஸ் கிளாஸ் என்று நோயாளியின் சூழ்நிலை உருவாகியிருந்தது. பிள்ளையைப் பார்த்ததும் அம்மாவின் தளர்ந்து வாடிய முகத்தில் மலர்ச்சி பிறந்தது. "ஏண்டா சத்தியம், லீவுக்கு வரப்போவதாக ஒரு கடிதாசு கூடப் போடலியே நீ?" என்று பிள்ளையை வரவேற்று விசாரித்து விட்டு உட்பக்கம் திரும்பி, "ஆண்டாள்! சத்தியம் அண்ணன் வந்திருக்குது... காப்பி... போடு" என்று குரல் கொடுத்தாள். ஊஞ்சள் பலகையில் உட்கார்ந்து நூல் வேலை செய்து கொண்டிருந்த இன்னொரு தங்கை கல்யாணி மெல்ல எழுந்து வந்து அப்பாவை அண்டினாற் போல் நெருங்கி நின்று கொண்டாள்.

"நவராத்திரி விடுமுறை இன்னும் எத்தனை நாள் மீதமிருக்கிறது? இன்னும் ஒரு வாரம் இங்கு இருந்து விட்டுப் போவாய் அல்லவா? நீ போன தடவை வந்திருந்த போது லீவுக்கு இங்கே வரப்போவதில்லை என்று சொல்லியிருந்ததாக ஞாபகம். ஏதோ காலேஜ் பையன்களை அழைத்துக் கொண்டு 'சோஷியல் செர்வீஸ் காம்ப்' போகப் போவதாகக் கூறியிருந்தாய். 'காம்ப்' போகவில்லையா?" என்று அப்பா கேட்டார்.

"'காம்ப்' நேற்றே முடிவடைந்துவிட்டது. இன்று மாலையில் முதல் பஸ்ஸிற்கு நானும் குமரப்பனும் புறப்பட்டு வந்தோம்" என்று தந்தைக்கு மறுமொழி கூறத்தொடங்கிய சத்தியமூர்த்தி குமரப்பன் மதுரையில் பார்த்துக் கொண்டிருந்த குத்துவிளக்கு கார்ட்டூனிஸ்ட் வேலையை விட்டு விட்டதைப் பற்றியும், மல்லிகைப் பந்தலில் வந்து கடை வைத்திருப்பதைப் பற்றியும், தந்தையிடம் தெரிவித்தான். ஆனால் குமரப்பனைப் பற்றி அவன் கூறியவற்றைத் தந்தை அவ்வளவு சுமுகமாக விரும்பிக் கேட்கவில்லை. முகத்தைச் சுளித்து 'உச்சூ'க் கொட்டினார்.

"உதவாக்கரைப் பயல்களைப் பற்றியும், பிழைத்து உருப்படத் தெரியாதவர்களைப் பற்றியும் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது! ரொம்பவும் திமிர் பிடித்துப் போய் அவன் இந்த வேலையைச் சரியாகப் பார்க்கவில்லையாம். கண்ணாயிரமும், ஜமீந்தாரும் அவனைச் சீட்டுக் கிழித்து அனுப்பிவிட்டதாகச் சொன்னாங்க... அவன் ஏதோ கண்ணாயிரத்தையும், ஜமீந்தாரையும் கேவலப்படுத்தற மாதிரிப் படம் எல்லாம் எழுதி அவர்களிடமே கொடுத்தானாமே?"

சத்தியமூர்த்தி தந்தைக்குப் பதில் சொல்லவில்லை. தந்தை கூறியதிலிருந்து குமரப்பன் அந்தக் காரியாலயத்தில் வேலை பார்க்க விருப்பமின்றி அவனாகவே இராஜிநாமா செய்த உண்மையைச் சற்றே திரித்து மாற்றி ஜமீந்தாரும் கண்ணாயிரமும் தாங்களாகவே அவனைச் சீட்டுக் கிழித்து அனுப்பி விட்டதாகப் பொய் சொல்லித் திருப்திப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. தங்களுடைய சொந்த திருப்திகளையும் மகிழ்ச்சிகளையும் கூடப் பொய்யிலிருந்து தேடுகிறவர்களை நினைத்து, அவன் மனம் அந்த விநாடியில் பெரிதாக - மிகப் பெரிதாக நையாண்டி செய்து சிரித்தது.

"ஆமாம், நீதான் காலையில் முதல் பஸ்ஸுக்கே வந்து விட்டதாகச் சொல்கிறாயே? வீட்டுக்கு வருவதற்கு ஏன் இவ்வளவு நேரமாயிற்று? பஸ் ஏதாவது தகராறு ஆகி நடுவழியில் நின்றுவிட்டதா?" என்று தந்தையின் அடுத்த கேள்வி பிறந்தது.

"பஸ் ஒன்றும் தாமதமாகவில்லை... பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நேரே எர்ஸ்கின் ஆஸ்பத்திரிக்குப் போய் ஒருத்தரைப் பார்க்க வேண்டியிருந்தது. அதனால் நேரமாகிவிட்டது" என்று சுபாவமாகப் பதில் சொன்னான் சத்தியமூர்த்தி.

"அடடே! ஜமீந்தாரைப் பார்ப்பதற்காகக் கண்ணாயிரம் இன்றைக்கு என்னைக்கூட எர்ஸ்கின் ஆஸ்பத்திரிக்குத் தான் வரச் சொல்லியிருக்கிறார். ஏதோ குளுக்கோஸ் டப்பா அது இது என்று சாமான் எல்லாம் வாங்கிக் கொண்டு வரச்சொல்லி ஒரு பெரிய 'லிஸ்டு' கூடக் கொடுத்தனுப்பியிருக்கிறார். நீ வருகிற போது நான் ஆஸ்பத்திரிக்குத் தான் எதிரே புறப்பட்டுக் கொண்டிருந்தேன்" என்றார் அவன் தந்தை. தன்னுடைய தந்தை ஜமீந்தாருக்கும் கண்ணாயிரத்துக்கும் எடுபிடி வேலையாளைப் போல் அலைந்து கொண்டிருப்பதை அறிந்த சத்தியமூர்த்தியின் மனம் கொதித்தது. அந்தக் கொதிப்போடு கொதிப்பாக இன்னொரு விளைவையும் எதிர்பார்த்தான் அவன். 'என் தந்தை ஜமீந்தாரும் கண்ணாயிரமும் கூப்பிட்டனுப்பியிருக்கிறபடி ஆஸ்பத்திரிக்குப் போகப் போகிறார். அங்கே அவர்கள் என் தந்தையிடம் "காலையில் உங்கள் பிள்ளையாண்டானும், அந்தத் திமிர் பிடித்த 'கார்ட்டூனிஸ்ட்'டும் இங்கே வந்திருந்தார்கள்" என்று தொடங்கிக் கோள் சொல்லிக் கோபமூட்டி விடப் போகிறார்கள். அதைக் கேட்டுக் கொண்டு இங்கே வந்து அப்பா என்னிடம் கூப்பாடு போடப் போகிறார்' என்று மாலையில் நடக்கப் போவதை இப்போதே அவனால் அநுமானம் செய்ய முடிந்தது. 'இத்தனை வயதுக்கு மேல் இப்படிக் கண்ணாயிரத்தைப் போல் மானம் மரியாதை தெரியாதவர்களுக்குக் காரியம் செய்து கொண்டு அலையாதீர்கள் அப்பா!' என்று தந்தைக்குச் சொல்ல நினைத்து அதைத் தான் சொல்வது பொருத்தமாக இராதென்று தன்னை அடக்கிக் கொண்டான் அவன். தந்தை ஆஸ்பத்திரிக்குப் போன பின்பு அம்மா அவனோடு நிறையப் பேசிக் கொண்டிருந்தாள்.

"இந்த வயதில் ரொம்ப அலைகிறார். நல்லவர்கள் - கெட்டவர்கள் தெரியாமல் எல்லாரோடும் அலைகிறார்" என்று அம்மா அவனிடம் தந்தையைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டாள்.

பகல் உணவுக்கும் தந்தை வரவில்லை. சத்தியமூர்த்தி தனியாகவே சாப்பிட்டான். உணவுக்குப் பின் நடுக் கூடத்துத் தூணில் சாய்ந்து கொண்டு நவநீதக் கவியின் 'சப்த சமுத்திரம்' என்ற புதிய கவிதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அந்தக் கவிதைத் தொகுதியில் பெண்களின் ஏழு பருவ வாழ்க்கையையும், ஏழு தனித்தனிச் சமுத்திரங்களாக உருவகப்படுத்தி மிக அழகாகப் பாடியிருந்தார் நவநீதக்கவி. சந்தங்களினாலும், சப்த அழகினாலும் கூட இந்தப் பெயர் நூலுக்குப் பொருத்தமாக வரும்படி நவநீதகவி இரட்டை அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்திருந்தார். கூடத்தின் இன்னொரு பக்கம் அம்மாவும் தங்கைகளும் பல்லாங்குழியில் சோழி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் அப்பா யாரும் எதிர்பாராத விதமாகக் கோபத்துடனும், கண்ணாயிரத்துடனும் வீட்டின் உள்ளே நுழைந்தார்.

காலச் சுவரில் ஓவியமாய் - என்றும்
கரையா நினைவிற் காவியமாய்
நீலக்கடலில் பேரலையாய் - மனம்
நீந்தித் தீராப் பெருவெளியாய்

என்று கண் பார்வையில் பட்டுக் கருத்தைக் கவர்ந்து கொண்டிருந்த 'சப்த சமுத்திர' வரிகளில் அவன் ஈடுபட்டிருந்த போது "ஏண்டா! நீ செய்யறதெல்லாம் உனக்கே நல்லாயிருக்கா...? கண்ணாயிரமும், ஜமீந்தாரும் ரொம்ப வருத்தப்பட்டாங்க" என்று அப்பா கூப்பாடுடன் ஆத்திரமாக வந்தார்.

அத்தியாயம் - 37

எப்போது பார்த்தாலும் பிறருக்கு உபதேசம் செய்து கொண்டே திரிய வேண்டும் என்ற துடிதுடிப்பு எவர்களிடம் குறைவாயிருக்கிறதோ அவர்கள் தான் உண்மையில் உபதேசம் செய்வதற்கே யோக்கியதை உள்ளவர்கள்.

கண்ணாயிரம் கூடத்து ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டு சிகரெட் பற்ற வைத்துப் புகைக்கத் தொடங்கினார். மூன்றாம் மனிதரோடு கோபமாகவும் பரபரப்பாகவும் இரைந்து கொண்டே அப்பா உள்ளே நுழைந்ததைப் பார்த்ததும் பெண்கள் இருவரும் பல்லாங்குழியில் சோழிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு அவசரமாகக் கூடத்திலிருந்து உள்ளே போய் விட்டார்கள். 'ஊரிலிருந்து வந்திருக்கிற பிள்ளையை - வந்ததும் வராததுமாக இவர் எதற்காகக் கோபித்துக் கொள்கிறார்?' என்று அறிந்து கொள்ளும் ஆவலில் நிலைப்படியோரம் சாய்ந்தாற் போல் தளர்ந்து நின்ற அம்மாவும் கண்ணாயிரம் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து புகைக்கத் தொடங்கியதும் முகத்தைச் சுளித்துக் கொண்டு உள்ளே போய்விட்டாள். தந்தையின் கூப்பாடு நிற்காமல் தொடர்ந்தது. அவர் தம் மகனைக் கண்டபடி பேசி இரைகின்ற காட்சியைக் கண்ணெதிரே பார்த்து இரசிக்கின்றவரைப் போல் கண்ணாயிரம் திமிராகவும் அலட்சியமாகவும் சிகரெட் சாம்பலை உதறி உதறிப் புகையை உறிஞ்சி விட்டுக் கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி இன்னொருத்தருக்கு முன்னால் தந்தையை எதிர்த்துப் பேச நேர்கிற அநாகரிகத்தை விரும்பாமல் கையிலிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டுக் குனிந்த தலை நிமிராமல் மௌனமாக உட்கார்ந்திருந்தான்.

"என்னடா... லீவுக்கு வரமாட்டேன்னு சொன்னவன் திடீர்னு புறப்பட்டு வந்திருக்கியேன்னு பார்த்தேன். இதுக்குத்தான் புறப்பட்டு வந்தியா...? எல்லாம் கண்ணாயிரம் இப்போதுதான் எனக்குச் சொன்னார். மல்லிகைப் பந்தல் வேலைக்காக இண்டர்வ்யூவுக்கு அலைந்துவிட்டுத் திரும்பி வந்த போதே நீ நாட்டியக்காரப் பெண்ணோடு தான் இரயிலிலிருந்து இறங்கினாயாம். இந்தப் பழக்கம் எல்லாம் கொஞ்சம் கூட நல்லதில்லே. வீணாக புத்திக் கெட்டுப் போய் அலையாதே. ஊரிலிருந்து வந்தவன் வீட்டு வாசலைக் கூட எட்டிப் பார்க்காமல் நேரே ஆஸ்பத்திரிக்கு ஓடிப்போய் அவளைப் பார்த்து உருகணும்னா உனக்கு எவ்வளவு புத்தித் தடுமாறி நீ மயங்கிப் போயிருக்கணும்? நீ இப்படி அந்த நாட்டியக்காரப் பெண்ணிடம் பைத்தியம் பிடிச்சுப் போய் அலையறது தெரிந்தால் ஊர் சிரிக்கும்... குடும்பப் பெயரைச் சீரழிச்சிப்பிடுவே போலிருக்கே...? 'உங்க பையனா இருக்கக் கொண்டு எச்சரிக்கை செய்யறேன். இன்னிக்குக் காலையிலே ஆஸ்பத்திரியிலே என்னை அவமானப்படுத்தினதுக்கு வேறொருத்தனாயிருந்தா இதுக்குள்ளே நடக்கிறதே வேறே... ஆளை... உருப்படியா பார்த்திருக்க மாட்டீங்க... கையைக் காலை முறிச்சுப் போட்டிருப்பேன்...' அப்படீன்னு ஜமீந்தார் சத்தம் போடறாரு" என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார் தந்தை. அதுவரை ஆத்திரப்படாமல் கேட்டுக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி, மெல்லத் தலை நிமிர்ந்து தந்தையை நோக்கி நிதானமாகப் பதில் சொல்லலானான்.

"ஜமீந்தாரை நாங்கள் ஏதோ அவமானப்படுத்தியதாக சொல்லுகிறீர்கள். ஆஸ்பத்திரியில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. ஜமீந்தார்தான் எங்களை அவமானப்படுத்தினார் என்று சொல்ல வேண்டும். அடிக்கடி நர்ஸைக் கூப்பிட்டு எங்களை வெளியே போகச் சொல்லிக் கொண்டிருந்தார்..." என்று அவன் கூறியதைக் கேட்டு மறுபடியும் சீறினார் தந்தை.

"அவர் அப்படிச் சொல்லியிருந்தால்தான் அதில் என்ன தப்பு? யாரோ கூத்தாடறவ கார்லே அடிபட்டு ஆஸ்பத்திரியிலே விழுந்து கிடந்தா அங்கே உனக்கென்னடா வேலை?"

அதுவரை சத்தியமூர்த்தியோடு நேரில் பேசாமல் உட்கார்ந்திருந்த கண்ணாயிரம் திடீரென்று அவன் பக்கமாகத் திரும்பிச் சிகரெட் புகையை ஊதிக்கொண்டே குத்தலாகக் கேட்டார்.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! உங்களை ஒன்று கேட்கிறேன். நிறையத் தமிழ் நூல்கள் எல்லாம் படித்திருக்கிறீர்களே? எந்தத் தமிழ் நூலிலாவது தந்தையை எதிர்த்துப் பேசினால் புண்ணியம் உண்டு என்று சொல்லியிருக்கிறதா? அப்படிச் சொல்லியிருந்தால் இப்போது பேசியதைப் போல் இன்னும் தாராளமாக எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் உங்களுடைய தந்தையை எதிர்த்துப் பேசலாம்" - கண்ணாயிரத்தின் இந்தப் பேச்சைக் கேட்டுச் சத்தியமூர்த்திக்கு அடக்க இயலாத சினம் மூண்டு விட்டது.

"மிஸ்டர் கண்ணாயிரம்! துரதிர்ஷ்டவசமாக இப்போது நீங்கள் சொல்லியதையெல்லாம் மறுத்துப் பேச முடியாத நிலையிலிருக்கிறேன் நான். தங்கள் வாழ்நாள் முழுவதும் பாவங்களைத் தவிர வேறெதுவும் செய்தறியாதவர்கள் புண்ணியங்களைப் பற்றியும், தர்மங்களைப் பற்றியும் பிறரிடம் உபதேசம் செய்ய வரும்போதுதான் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. என் தந்தையும் நானும் உங்களிடம் பணத்துக்குக் கடன்பட்டிருக்கலாம். அப்படிக் கடன் பட்டிருப்பதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு எங்களுக்கே உபதேசம் செய்கிற தைரியம் உங்களுக்கு வந்துவிடக் கூடாது. எப்போது பார்த்தாலும் பிறருக்கு உபதேசம் செய்து கொண்டே திரிய வேண்டும் என்ற துடிதுடிப்பு எவர்களிடம் குறைவாயிருக்கிறதோ அவர்கள் தான் உண்மையில் உபதேசம் செய்வதற்கே யோக்கியதை உள்ளவர்கள். பணமும், அந்தஸ்தும், பதவியும் இருப்பதே உபதேசம் செய்வதற்குப் போதுமான தகுதிகள் என்று உங்களைப் போலவே பலர் இன்றைய சமூகத்தில் தங்களுடைய தகுதியைப் பற்றிப் பிழையான நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று சத்தியமூர்த்தி கண்ணாயிரத்தைச் சாடிக் கொண்டிருந்த போது அவன் தந்தை குறுக்கிட்டார்.

"டேய்! பேசறதை நிறுத்து. எனக்குக் கெட்ட கோபம் வரும். கண்ணாயிரம் என்னோட நான் கூப்பிட்டதனாலே தான் இந்த வீட்டுக்குள்ளார வந்திருக்காரு... அவரை மரியாதைக் குறைவாகப் பேசினியோ... என்னாலே பொறுத்துக்க முடியாது. உன்னைச் சொல்றதிலே குத்தமில்லையடா... எல்லாம் நீ பழகற ஆட்களாலே வந்த பேச்சு... அந்தக் குமரப்பனோட தானே நீ நெருங்கிப் பழகறே...? அவனைப் போலவே நீயும் கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை இல்லாமப் பேசப் பழகிக்கிறே போலிருக்குது?" என்ற சீற்றத்தோடு தந்தை பேசத் தொடங்கியதும் உள்ளேயிருந்து தங்கை ஆண்டாள் ஓடி வந்து "அண்ணா! உன்னை அம்மா உள்ளே கூப்பிடுறாங்க" என்று சத்தியமூர்த்தியைக் கூப்பிட்டாள்.

'கூடத்தில் தந்தைக்கும் தனக்கும் இடையே பேச்சு தடித்துச் சண்டை வளருவதைத் தடுப்பதற்காக அம்மா செய்த தந்திரமான ஏற்பாடு இது' என்பதைப் புரிந்து கொண்டவனாகச் சத்தியமூர்த்தி உட்புறம் எழுந்து சென்ற போது, அவன் சிந்தனையில் போராட்டங்கள் நிறைந்திருந்தன. கண்ணாயிரம் பாவ புண்ணியத்தைப் பற்றிப் பேசியதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவனுள்ளே குமுறியது ஓர் எண்ணம். மோகினியின் இதயத் தூய்மையையும் குணநலன்களையும் தெரிந்து கொள்ளாமல் சற்று முன் தந்தை அவளைப் பற்றிக் 'கூத்தாடுகிறவள்' என்று எடுத்தெறிந்து சொல்லியிருந்த வார்த்தை அவன் மனத்தைப் புண்படுத்தியிருந்தது.

"மேளதாளமில்லாமல் சந்தனம் வெற்றிலைபாக்கு இல்லாமல் நடந்து முடிந்து விட்ட இந்தக் கல்யாணத்துக்கு உலகம் மரியாதை செய்யுமா?" என்று அவள் என்னைக் கேட்ட கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது. 'என் தந்தையே அந்த மரியாதையைச் செய்யத் தயாராயில்லை என்று எனக்குத் தெரிந்து விட்டது' என்பதை எண்ணிய போது சத்தியமூர்த்தியின் மனத்தில் நம்பிக்கை தளர்ந்தது. எந்த இலட்சியவாதியும், எத்தகைய தைரியசாலியும் சமூகத்தை எதிர்கொள்ளத் தயங்க வேண்டிய சில பிரச்சினைகள் உலகில் நிரந்தரமாக இருப்பதை அவன் உணர்ந்து கொண்டு மனத்தில் தயங்கினான்.

"ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக உன்னிடம் இந்த மனிதர் எதற்காக இப்படிச் சண்டை பிடிக்கிறார் சத்தியம்? யாரோ மூன்றாம் மனிதரையும் கூப்பிட்டு வைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே உன்னிடம் சண்டை பிடிக்கிறாரே?" என்று அம்மாவே அப்பாவைப் பற்றி அவனிடம் குறைபட்டுக் கொண்டாள். எந்தச் சண்டையைத் தவிர்ப்பதற்காக அம்மா அவனை உள்ளே கூப்பிட்டிருந்தாளோ அந்தச் சண்டை விரைவில் உள்ளேயும் அவனைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தது.

"என்னடா, நான் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கிறேன். நீ பெண்டு செட்டியைப் போல உள்ளே போய் உட்கார்ந்து கொண்டு விட்டாய்?" என்று கேட்டுக் கொண்டே அப்பா உள்ளே வந்தார். கண்ணாயிரமும், ஜமீந்தாரும், அவரைச் சரியானபடி முறுக்கேற்றியிருக்கிறார்களென்று தெரிந்தது. "வயது வந்த பிள்ளையை வேற்று மனிதர்களுக்கு முன்னால் வைத்துக் கொண்டு இப்படிச் சண்டை பிடிக்கிறீர்களே? இது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா?" என்று அம்மா குறுக்கிட்டுக் கேட்டதைக் கூட அவர் இலட்சியம் செய்யவில்லை. அம்மாவின் பேச்சுக் காதில் விழுந்ததாகவே காண்பித்துக் கொள்ளவில்லை அவர்.

ஏறக்குறைய வீடு போர்க்களமாயிருந்த இந்த நேரத்தில் காலையில் சத்தியமூர்த்தியிடம் சொல்லிவிட்டுப் போயிருந்த குமரப்பன் திரும்பி வந்து சேர்ந்தான். கோபத்தில் தந்தை நண்பனிடம் போய் அவனை ஏதேனும் அநாகரிகமாகப் பேசி விடக்கூடாதே என்பதற்காகச் சத்தியமூர்த்தி முந்திக் கொண்டு நண்பனை வரவேற்க எழுந்து சென்றான். நல்லவேளையாகத் தந்தை அப்படி ஏதும் அநாகரிகமாக நடந்து கொள்ளவில்லை. வீடு தேடி வந்த குமரப்பனை வா என்று கூட ஒரு வார்த்தை சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டதைத் தவிர வேறு எந்த அவமானத்தையும் அவர் அப்போது அவனுக்குச் செய்யவில்லை. சத்தியமூர்த்தியின் தந்தையைப் பற்றிக் குமரப்பனுக்கு நன்றாகத் தெரியுமாதலால் அவன் அப்போது அவருடைய கனிவான வரவேற்பை எதிர்பார்க்கவும் இல்லை. சிரித்துக் கொண்டே உள்ளே போய் சத்தியமூர்த்தியின் அம்மாவையும், தங்கைகளையும் பார்த்துப் பேசினான் குமரப்பன்.

"இருந்து ஒரு வாய் காப்பி சாப்பிட்டு விட்டு போ" என்று சத்தியமூர்த்தியின் தாய் கூறிய வார்த்தைகளை மதித்துக் கூடத்து ஊஞ்சலில் கண்ணாயிரத்துக்குப் பக்கத்தில் போய் அவர் உட்கார்ந்திருந்தாற் போலவே கால்மேல் கால் போட்டுத் தானும் உட்கார்ந்து கொண்டான் குமரப்பன். சத்தியமூர்த்தியின் தந்தை கண்ணாயிரத்துக்குக் காப்பி கொடுத்துத் தடபுடலாக உபசாரம் செய்வதில் ஈடுபட்டிருந்தார். குமரப்பன் தன்னருகே வந்து கால்மேல் கால்போட்டு உட்கார்ந்ததை விரும்பாத கண்ணாயிரம் மெல்ல எழுந்திருந்து கூடத்தில் உலாவுவது போல் நடக்கலானார். அப்போது குமரப்பன் தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். ''அப்ஸ்டார்ட்கள்' (திடீரென்று பணக்காரராகிய அற்பர்கள்) எல்லாம் பிறர் தங்களை மதிக்க வேண்டும் என்று தவித்து மரியாதை பசி பிடித்து அலைவார்கள். உலகம் தங்களை மதிக்கிறதா, இல்லையா என்பதை அறிந்து கொள்வதிலே மற்றவர்களை விட இந்த அற்பர்களுக்கு ஆசையும் தாபமும் அதிகம்' என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டு சிரித்தான் குமரப்பன்.

"அடடா! இதென்ன எழுந்து விட்டீர்கள்? உட்காருங்கள் சார்! ஊஞ்சலில் உட்காரச் சிரமமாக இருக்கிறதென்றால் நாற்காலியைக் கொண்டு வந்து போடட்டுமா?" என்று கண்ணாயிரம் எழுந்து நிற்பதையும் தரையில் நடப்பதையும் பொறுக்க முடியாமல் பரிதாபப்பட்டுப் பயந்து வந்து நெகிழ்ந்து போய் நாற்காலியைத் தேடிக் கொண்டு வந்து போடுவதற்காகப் பதறி ஓடினார் சத்தியமூர்த்தியின் தந்தை.

"பரவாயில்லை! நீங்கள் உங்கள் வீட்டு மாடியில் மராமத்து வேலை நடப்பதை எனக்குக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தீர்களே; இப்போது மாடிக்குப் போய்ப் பார்க்கலாமா?" என்று பேச்சை வேறு வழிக்கு மாற்றிச் சத்தியமூர்த்தியின் தந்தையையும் அழைத்துக் கோண்டு மாடிக்குப் போனார் கண்ணாயிரம். மாடியில் காரியம் ஒன்றுமில்லையானாலும் ஏதோ பேசுவதற்காகவே அவர்கள் இருவரும் தனியாகப் போகிறார்கள் என்று ஒருவாறு அநுமானிக்க முடிந்தது. அவர்கள் இருவரும் மாடிப்படியேறி மேலே போனதும் குமரப்பன் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி, "என்னடா! பெரிய புயல் வீசி ஓய்ந்திருக்கிறார் போல் தோன்றுகிறதே" என்று சிரித்துக் கொண்டே கேட்டான். ஆனால் அப்போது சத்தியமூர்த்தியோ தன் நண்பனுடைய கேள்வியைக் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் சிந்தனையில் மூழ்கியிருந்தான். அவனுடைய இதயத்தில் மோகினி ஒரு பெரும் வினாவாக எழுந்து நின்றாள்! அவள் மேல் தான் கொண்டிருக்கும் அன்புக்கும் தன் மேல் அவள் கொண்டிருக்கிற பரிசுத்தமான காதலுக்கும் முதல் எதிர்ப்புத் தன் வீட்டிலிருந்தே புறப்பட்டுவிட்ட தென்பதை அவனால் மறக்க முடியவில்லை. காவியங்களிலும் இதிகாசங்களிலும் வருகிற காதல் அநுபவங்களைப் போற்றிக் கொண்டாடித் தொழுகின்ற இந்த உலகம் வாழ்க்கையில் கண்ணெதிரே ஒரு பெண்ணிடம் ஓர் ஆண் அதிக அநுதாபம் காண்பிப்பதைக் கூட அருவருப்பாகவும் விரும்பத் தகாததாகவும் நோக்குவதைத்தான் புரிந்து கொள்ள முடிந்தது. சில சமயங்களில் சில அபூர்வமான உன்னத உணர்வுகளும் கற்பனைகளும் மனிதர்களைக் களமாகக் கொண்டு பிறப்பதைப் போலவே அதற்கு எதிரான சில சாதாரண உணர்வுகளையும் மனிதர்களே தங்கள் களத்தில் உண்டாக்கி வளர்க்கிறார்கள் என்றும் நினைக்கத் தோன்றியது. பூக்கள் மலர்ந்து மணம் பரப்புகிற இதே மண்ணின் மேல் தான் நிறமும் மணமும் இல்லாத காளான் குடைகளும் பூக்கின்றன என்பதை அருவருப்போடு நினைத்து நம்பி ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டியிருந்தது. காதலைக் கற்பித்தவர்களும் மனிதர்கள்தான். பல சமயங்களில் அதை அவமதிக்கிறவர்களும் மனிதர்களாகவேதான் இருக்கிறார்கள்.

தன்னுடைய மன அரங்கில் நித்தியமாக ஆடிக் கொண்டிருக்கிற பரிசுத்தவதி ஒருத்தியைப் பற்றிக் 'கூத்தாடறவளிட்ட உனக்கென்னடா பரிவு?' என்று தன் தந்தையே தன்னிடம் கேட்க நேர்ந்துவிட்ட வேதனையை மறக்க முடியாமல் தவித்தான் சத்தியமூர்த்தி.

சிறிது நேரத்தில் மாடியில் சுற்றிப் பார்க்கப் போயிருந்த கண்ணாயிரமும் தந்தையும் படியிறங்கிக் கீழே வந்ததும் வராததுமாக, "உன்னிடம் ஒரு விஷயம் பேசணும்! இப்படி வா" என்று தந்தை தன்னைத் தனியே அழைத்த போது போவதா வேண்டாமா என்று சற்றே தயங்கிய பின் தயக்கத்துடனேயே அவரோடு சென்றான் சத்தியமூர்த்தி. தந்தை அப்போது தனியே அழைத்துச் சென்று தன்னிடம் கூறியதைக் கேட்ட பின் அவனுக்கு அடக்க முடியாத சீற்றம் மூண்டது. "ஒரு போதும் என்னால் அப்படிச் செய்ய முடியாது..." என்று தன் தந்தையிடம் உறுதியாக மறுத்துக் கூறினான் அவன். மகனுடைய சீற்றத்தைக் கண்டு அப்போது தந்தையே மலைத்துப் போனார். மகன் தன்னை அத்தனை தீர்மானமாகவும் கடுமையாகவும் எதிர்ப்பது அதுவே முதல் தடவை என்பதைத் தயக்கத்தோடு நினைத்துப் பார்த்தார் அவர்.

அத்தியாயம் - 38

ஏழைகள் புதிது புதிதாகக் கவலைப்பட்டுச் செலவுக்குப் பணம் தேடுகிறார்கள். பணக்காரர்களோ புதிது புதிதாக யோசித்துப் பணத்துக்குச் செலவு தேடுகிறார்கள்.

"வீணாகப் பெரிய மனிதர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது. சாயங்காலம் நானும் உன் கூட வருகிறேன். மேற்கே கோச்சடைக்குப் போகிற வழியில் வையைக் கரையோரம் உள்ள ஜமீன் மாளிகையில் ஜமீந்தார் தனியாகத்தான் இருப்பார். போய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வந்து விடலாம். இனிமேல் நீ அந்த நாட்டியக்காரியைத் தேடிக் கொண்டு செல்லாதே. அதெல்லாம் பெரிய இடத்து விவகாரம். ஜமீந்தார் கோபத்துக்கு ஆளாகக் கூடாது. கண்ணாயிரமும் ஜமீந்தாரும் நினைத்தால் யாருக்கு என்ன கெடுதல் வேண்டுமானாலும் செய்ய முடியும். இந்தக் குத்துவிளக்குப் பத்திரிகையை ஜமீந்தார் விலைக்கு வாங்கறதுக்கு முன்னாலே ஒரு சமயம் இப்ப ஆஸ்பத்திரியிலே படுத்துக்கிட்டிருக்காளே, இந்த நாட்டியக்காரப் பெண்ணைப் பேட்டி கண்டு வருவதற்காக கண்ணாயிரம் குமரப்பனையும் இன்னொரு உதவியாசிரியரையும் அழைச்சிட்டுப் போயிருந்தாராம். அப்படிப் போயிருந்தப்போ கண்ணாயிரத்தையும் வச்சிக்கிட்டே அவரையும் ஜமீந்தாரையும் பற்றி இந்தக் குமரப்பன் ஏதோ குத்தலாகப் பேசினானாம். அந்தப் பகையை மனத்திலே வைத்திருந்து 'குத்துவிளக்கை' விலைக்கு வாங்கினதும் முதல் வேலையா அவனோட வேலைக்குச் சீட்டுக் கிழிச்சிருக்காங்க..." என்று தந்தை கூறியவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி இறுதியாக அவர் சொல்லிய செய்தியால் பொறுமையிழந்தான்.

"ஜமீந்தாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று நீங்கள் சொல்வதை எப்படி ஒப்புக் கொள்ள முடியாதோ அப்படியே குமரப்பனைப் பற்றி நீங்கள் சொல்கிற பொய்யையும் என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை அப்பா! குமரப்பன் உண்மையும் ஒழுக்கமும் இல்லாதவர்கள் எவ்வளவு பெரிய பணம் பதவி உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களைத் துச்சமாக நினைக்கிறவன். அவனுடைய பார்வையிலும் நினைப்பிலும் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் வெறும் நாய்கள்!... 'காலுக்கு உதவாத செருப்பைக் கழற்றி எறி' என்பது போல் குமரப்பனே குத்துவிளக்கு வேலையைத் தனக்கு வேண்டாமென்று விட்டிருக்கிறான். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் அந்த உண்மையைத் திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்; நீங்களும் அதை அப்படியே நம்புவதைப் பார்த்துத் தான் பரிதாபமாயிருக்கிறது..."

சத்தியமூர்த்தி இப்படித் தன் தந்தையை எதிர்த்துப் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டுக் குமுறும் மனநிலையோடு இருந்தான். தந்தையும் அவனும் இப்படித் தனியே பிரிந்து வந்து வீட்டின் பின் கட்டில் விவாதித்துக் கொண்டிருந்த போது கூடத்து ஊஞ்சலில் குமரப்பன் தனியே உட்கார்ந்திருந்தான். கண்ணாயிரம் சிகரெட் பிடித்தவாறு குறுக்கும் நெடுக்கும் உலாவிக் கொண்டிருந்தார். நண்பனைக் கூடத்தில் தனியே விட்டுவிட்டு உள்ளே தந்தையிடம் அதிக நேரம் விவாதித்துக் கொண்டிருப்பதைச் சத்தியமூர்த்தி விரும்பவில்லை. அப்போது தந்தைக்கு அவன் கூறிய பதில் கண்டிப்பானதாயிருந்தது.

"ஜமீந்தாரிடம் அடிபணிவதோ, மன்னிப்புக் கேட்பதோ முடியாத காரியம். மனிதர்களுக்கும் அவர்களுடைய செல்வாக்குக்கும் பயப்பட்டு நடுங்கிய காலம் மலையேறி விட்டது. நியாயத்துக்கும் உண்மைக்குமே பயப்பட வேண்டிய புதிய சுதந்திரத் தலைமுறையில் நாம் வாழ்கிறோம். ஜமீந்தாரையும் கண்ணாயிரத்தையும் நீங்கள் பெரிய மனிதர்களாக நினைக்கிறீர்கள் அப்பா! நானும், குமரப்பனும் எங்களைப் போல் புதிய சிந்தனை வளத்தை ஒப்புக் கொள்கிற இளைஞர்களும் அவர்களைச் சமுதாய விரோதிகளாக நினைக்கிறோம்!"

"இப்படிப் பேசினால் உருப்படாமல் தான் போகப் போகிறாய்; எக்கேடும் கெட்டுப் போ... ஆனால் ஒன்று... மறுபடியும் எப்போதாவது அந்த நாட்டியக்காரியைத் தேடிக் கொண்டு போகாதே... அவர்கள் பரம்பரை பரம்பரையா ஜமீன் குடும்பத்துக்குத்தான் பழக்கம். குடியிருக்கிற வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் ஜமீந்தார் செலவிலே அநுபவிக்கிறவங்க வேறே எப்படியிருக்க முடியும்? ஜமீந்தார் சின்ன வயசிலே தாரமிழந்தவரு... அந்த இடத்திலே இந்தப் பெண்ணை வைத்துக் கொள்ளலாம் என்கிற அபிப்பிராயம் அவருக்கு இருக்கும் போலத் தோன்றுகிறது. முத்தழகம்மா மகளும் மகா சௌந்தரியவதியா இருக்கா. அதனாலே ஜமீந்தார் முழு மனத்தையும் அவளிடம் பறிகொடுத்திருக்கார். அந்தப் பெண்ணை வைத்துச் சினிமாப் படம் கூடப் பிடிக்கப் போகிறாராம். அப்புறம் இன்னும் எங்கேயோ பெரிய 'நாட்டிய கலாகேந்திரம்'னு பரத நாட்டியத்தைப் பரப்புவதற்கு ஒரு கலாசாலை வேறே வைக்கப் போகிறாராம். இதெல்லாம் உன்னை எச்சரித்து வைப்பதற்காக கண்ணாயிரம் எனக்குச் சொன்னார். பேரைக் கெடுத்துக் கொள்ளாதே! படித்தவனாக இலட்சணமாக விலகி இரு. ஜமீந்தார் பகை நமக்கு வேண்டாம்..."

தந்தை இதைச் சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பாராமல் கண்ணாயிரத்தோடு வெளியே புறப்பட்டுப் போய்விட்டார். அவர் போனதும் அம்மா அருகே வந்து "அப்பாவுக்கும் உனக்கும் என்னடா சண்டை?" என்று தூண்டி தூண்டிக் கேட்டாள். 'ஒன்றுமில்லை' என்று மழுப்பத் தான் முடிந்ததே ஒழிய அம்மாவுக்குத் தெளிவான பதில் எதுவும் சத்தியமூர்த்தியால் சொல்ல முடியவில்லை. அந்த வேளையில் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்த குமரப்பன் வந்து, "இந்தாடா, சத்தியம்! நீயும் உன் தந்தையும் உள்ளே பேசிக் கொண்டிருந்த போது தபால்காரன் இதைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான்" என்று சொல்லி ஒரு கவரை நீட்டினான். கவரின் மேல் மல்லிகைப் பந்தல் கல்லூரி முத்திரை குத்தியிருந்தது. வார்டன் ஏதாவது அவசர வேலையாகப் பாலக்காட்டுப் பக்கம் புறப்பட்டுப் போயிருப்பார். 'வார்டன் ஊரில் இல்லாத போது உதவி வார்டனாகிய நீங்களும் வெளியூரில் போயிருப்பது நல்லதில்லை. உடனே புறப்பட்டு வாருங்கள்' என்று பிரின்ஸிபால் ஒரு குரல் அழுதிருப்பார். அந்த அழுகையே இந்தக் கடிதமாயிருக்கும் என்பதாக நினைத்துக் கொண்டே கடிதத்தைப் பிரித்தால் கடிதம் கல்லூரி அதிபர் பூபதியிடமிருந்து வந்திருந்தது. அந்தக் கடிதத்தை அவசர அவசரமாக எழுதியிருந்தார் அவர்.

"அன்புக்குரிய சத்தியமூர்த்திக்கு! இன்று காலை எட்டு மணிக்கு உங்களைப் பார்க்க வேண்டுமென்று தேடி ஆள் அனுப்பினேன். நீங்கள் அதிகாலையிலேயே முதல் பஸ்ஸில் அவசரமாக மதுரைக்குப் போயிருப்பதாகத் தெரிந்தது. காலை ஒன்பதரை மணிக்கு இங்கிருந்து புறப்படுகிற மெயில் பஸ்ஸில் இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்புகிறேன். இன்று மாலைக்குள் இந்தக் கடிதம் உங்கள் கைக்குக் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இதை இவ்வளவு அவசரமாக எழுதுகிறேன். நானும் என் மகள் பாரதியும் இன்று பகலில் இங்கிருந்து கார் மூலம் மதுரைக்குப் புறப்படுகிறோம். இன்று காலை இவ்வளவு அவசரமாகப் புறப்பட்டுச் செல்லாமல் புறப்படுவதற்கு முன் நீங்கள் என்னைச் சந்தித்திருந்தால் உங்களையும் என்னோடு காரில் வரச்சொல்லி வற்புறுத்தியிருப்பேன். இந்தக் கடிதத்தில் மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றை உங்களுக்குத் தெரிவிக்கப் போகிறேன். பல விதங்களில் நவபாரதத்துக்குத் தொண்டு செய்யும் தொண்டர்களையும், பிரமுகர்களையும் கௌரவித்துப் பாரதக் குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்குகிறாரல்லவா? இந்த ஆண்டு வழங்கப் போகிற விருதுகளில் தென்னிந்தியாவிலேயே சிறந்த கலைக் கல்லூரியைச் சிறந்த சூழ்நிலையில் மிகச் சிறந்த விடுதிகளுடன் நடத்தி வருகிற எனக்கும் ஒரு கௌரவம் கிடைக்கப் போகிறது.

உங்களுடைய கல்லூரி அதிபர் அடுத்த வாரம் விஜயதசமி நாளிலிருந்து 'பத்மஸ்ரீ'யாகி விடுவார். இந்தச் செய்தியை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் தந்தி நேற்றிரவு தான் டில்லியிலிருந்து எனக்குக் கிடைத்தது. இன்று மாலையோ அல்லது நாளைக் காலையோ செய்தித்தாள்களிலும் இச்செய்தி வெளிவந்து விடும். நானும் என் மகள் பாரதியும் இன்று பகல் இங்கிருந்து காரில் புறப்பட்டு இன்று மாலை அல்லது இரவு மதுரைக்கு வந்துவிடுவோம். நாளை மாலை மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை சென்று அங்கிருந்து இரவு விமானத்தில் உடனே டில்லிக்குப் புறப்படலாம் என்று திட்டம் போட்டிருக்கிறேன். மதுரைக்கு வருகிற வழியில் நிலக்கோட்டையிலும், சோழவந்தானிலும் சில வியாபார நண்பர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வரவேண்டியிருப்பதனால் தான் நான் எந்த நேரத்தில் சரியாக மதுரைக்கு வந்து சேருவேன் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் நான் மதுரையில் தங்குகிற பிரமுகருடைய பங்களாவின் விலாசத்தைக் கீழே குறிப்பிட்டிருக்கிறேன். இன்றிரவு ஏழு மணி சுமாருக்கு உங்களை அங்கே எதிர்பார்க்கிறேன். அல்லது நாளைக்குக் காலையிலாவது கட்டாயம் வந்து சந்தியுங்கள். எப்படியும் நான் டில்லிக்குப் புறப்படுமுன் உங்களை அவசியம் பார்த்துப் பேசியாக வேண்டும்..." என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தின் இறுதிப் பகுதியில் அது முழுவதும் காரியக் கடிதம் இல்லை என்பதை நிரூபிப்பது போல 'சத்தியமூர்த்தியும் அவன் பெற்றோர்களும் சுகமாயிருப்பார்கள் என்று தாம் நம்புவதாக' ஒரு வரி சேர்த்திருந்தார் பூபதி. காலாண்டு விடுமுறைத் தொடக்கத்தில் சத்தியமூர்த்தி மாணவர்களை அழைத்துச் சென்றிருந்த 'சோஷியல் செர்வீஸ் காம்ப்' நன்றாயிருந்ததாகத் தாம் கேள்விப்பட்டதாகவும், எந்தக் கிராமத்தில் மாணவர்களால் சாலை செப்பனிடப்பட்டதோ அந்தக் கிராமத்து மக்களும், பஞ்சாயத்துத் தலைவரும் அதற்கு நன்றி தெரிவித்துக் கல்லூரி நிர்வாகத்தினருக்கு எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டு அவனைப் பாராட்டியும் ஒரு வாக்கியத்தை எழுதி அந்தக் கடிதத்தை முடித்திருந்தார் அவர். கீழே மதுரையில் அவர் வந்து தங்கப் போகிற பங்களாவின் விலாசமும் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருந்தது.

"என்ன சங்கதி? நீ ஊருக்குப் புறப்பட்டு வந்ததைப் பற்றிப் பிரின்ஸிபல் ஏதாவது தகராறு செய்கிறாரா?" என்று கடிதத்தைப் படித்து முடித்த சத்தியமூர்த்தியை நோக்கிக் கேட்டான் குமரப்பன்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை! கல்லூரி அதிபர் பூபதிக்குப் 'பத்மஸ்ரீ' விருது கிடைத்திருக்கிறதாம். விஜயதசமியன்று டில்லியில் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குகிறாராம். டில்லிக்குப் போக விமானம் ஏறுவதற்காகப் பூபதி இன்று இங்கே வருகிறார். அவரைச் சந்திக்கச் சொல்லிக் கடிதம் எழுதியிருக்கிறார்" என்றான் சத்தியமூர்த்தி. அவனும் குமரப்பனும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதே வீட்டு வாசலில் சங்கீத விநாயகர் கோயில் தெருப்பையனின் தலை தெரிந்தது. சத்தியமூர்த்தி வாசற்பக்கம் சென்று பையனை எதிர்கொண்டான்.

"மோகினி அக்கா சொல்லியபடி மீனாட்சி கோவிலிலே அர்ச்சனை செய்தாச்சு. நவராத்திரிக் கூட்டம் நிலை கொள்ளவில்லை. உள்ளே போய் அர்ச்சனை முடிஞ்சு வெளியில் வர நேரமாயிடிச்சு. நீங்க சாயங்காலம் ஆஸ்பத்திரிக்குப் போகப் போறதாகச் சொல்லியிருந்தீங்களே... போனா அக்காவிடம் இந்த அர்ச்சனைப் பிரசாதத்தைக் கொடுத்திடுங்க..." என்று அர்ச்சனை செய்து வாங்கிய குங்குமப் பொட்டலத்தையும், இலையில் சுற்றிக் கட்டியிருந்த பூவையும் சத்தியமூர்த்தியிடம் கொடுப்பதற்கு வந்தான் பையன். அப்போது சத்தியமூர்த்தி அவற்றைப் பெற்றுக் கொள்ளத் தயங்கினான்.

"அவசரமாக ஊரிலிருந்து வருவதாக எனக்குத் தெரிந்தவர் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார் தம்பி! நாளைக்கு மாலை விமானத்தில் அவர் டில்லி போய் விடுவார். அதனால் நான் இன்றிரவே அவரைப் பார்த்துப் பேசியாக வேண்டும். இந்த விவரத்தை அக்காவிடம் சொல்லி நீயே எனக்காக ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு வந்து விடு" என்று சத்தியமூர்த்தி கூறியதும் பையன் மறுக்காமல் அப்படியே செய்ய ஒப்புக் கொண்டான்.

"ஆஸ்பத்திரியில் பார்வை நேரம் முடிவதற்குள் சீக்கிரம் போக வேண்டும். தாமதமின்றிப் பக்கத்துப் பஸ் ஸ்டாப்பில் போய்ப் பஸ் ஏறிப் புறப்படு. முடிந்தால் மறுபடியும் நான் நாளைக் காலையில் வந்து பார்ப்பதாக உன் மோகினி அக்காவிடம் சொல்!" என்று கூறிப் பையனை அனுப்பிய பின் பூபதியைப் பார்க்கச் சொல்லலாமென்பதாக நண்பன் குமரப்பனிடம் தெரிவித்தான் சத்தியமூர்த்தி.

"நீ மட்டும் போய் வா சத்தியம்! உன்னுடைய கல்லூரி அதிபரை நீ பார்க்கச் சொல்லும்போது நான் கூட வரவேண்டாம். இன்னொரு சேதி. இன்று இரவு இரயிலில் புறப்பட்டு மல்லிகைப் பந்தல் ரோடு வரை போய்த் தங்கிவிட்டு நாளைக் காலை முதல் பஸ்ஸிற்கு நான் மலைமேல் போகப் போகிறேன். உனக்கு இன்னும் நாலைந்து நாட்கள் லீவு இருப்பதால் நீ இஷ்டம் போல் புறப்பட்டு வரலாம். என் பெயரில் ஒரு கடையை வேறு அங்கே திறந்து வைத்துவிட்டு நான் இங்கே வந்து இப்படி எத்தனை நாள் உட்கார்ந்திருப்பது?" என்று அன்று மாலையே தான் மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பத் திட்டமிட்டிருப்பதைத் தெரிவித்தான் குமரப்பன்.

நண்பன் கூறிய காரணம் சரியாக இருந்ததனால் சத்தியமூர்த்தி அவனைத் தன்னோடு தடுத்து நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஏழரை மணிக்கு நண்பன் இரயிலேற வேண்டும். இரயில் நிலையம் வரை உடன் சென்று நண்பனை இரயிலேற்றி அனுப்பிவிட்டு அப்புறம் பூபதியை அவர் கொடுத்திருந்த விலாசத்தில் போய்ப் பார்க்கலாம் என்று எண்ணினான் சத்தியமூர்த்தி. முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு நண்பன் குமரப்பனோடு அவன் புறப்படுவதற்குச் சிறிது நேரமாயிற்று. நடந்தே இரயில் நிலையத்திற்குச் சென்றார்கள் நண்பர்கள். டிக்கட் வாங்கிக் கொண்டு நிலையத்திற்குள் சென்ற பிறகும் இரயில் வந்து புறப்படுவதற்கு இன்னும் அரை மணி நேரத்துக்கும் மேல் மீதமிருந்தது. பிளாட்பாரத்தில் கூட்டமில்லாத பகுதிக்குச் சென்று நண்பர்கள் இரயில் வருகிறவரை பேசிக் கொண்டிருந்தார்கள். தந்தைக்கும் தனக்கும் இடையே நடந்த கடுமையான விவாதங்களைப் பற்றி நண்பனிடம் சொல்லத் தொடங்கினான் சத்தியமூர்த்தி: "கண்ணாயிரமும், ஜமீந்தாரும் அப்பாவை நன்றாக முடுக்கி விட்டிருக்கிறார்கள். அப்பா என்னிடம் வந்து சீறுகிறார். மோகினியைப் போன்றவர்களுடைய வீடு, வாசல், உணவு, உடையெல்லாம் ஜமீந்தார் அவர்களுக்காக அளித்துக் கிடைக்கும் உதவிகளாம். அவளுடைய அழகும் கலைத்திறனும் ஜமீந்தாருக்கு உரியவைகளாம். அவளைப் பார்க்கப் போவதோ அவள் மேல் அனுதாபப்படுவதோ ஜமீந்தாரின் கோபத்தைக் கிளர்ந்தெழச் செய்யுமாம். 'அவளை மறந்துவிடு! வீணாக ஜமீந்தாரின் கோபத்துக்கு ஆளாகிச் சீரழியாதே!' என்று அப்பா என்னை எச்சரிக்கிறார். நானோ என் இதயத்தில் இருந்து ஒருக்காலும் பிரிக்கவும், விலக்கவும் முடியாத பாசத்தை அவள் மேல் வைத்து விட்டேன். 'ஐ கேன் டை வித் ஹெர் - பட் நாட் லிவ் வித் அவுட் ஹெர்' (நான் அவளோடு சாகவும் முடியும் - ஆனால் அவளின்றி வாழ்வது முடியாத காரியம்) என்று 'ஜான் டிரைடன்' பாடியிருக்கிறானே அப்படி இருக்கிறேன் நான். அவளுடைய தவிப்பும் வேதனையுமோ என்னை விட அதிகம். ஜமீந்தார் சின்ன வயதில் தாரமிழந்தவராம். எனவே மோகினியை இழந்து போன அந்த இடத்தில் வைத்து அவளுடைய அழகுக்கும் கலைத்திறனுக்கும் சொந்தம் கொண்டாட ஆசைப்படுகிறாராம்."

சிறிது நேரம் ஒரு பதிலும் சொல்லாமல் சத்தியமூர்த்தி கூறியதை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த குமரப்பன் நீண்ட பெருமூச்சு விட்டுப் பின் பேசலானான்.

"உன் நிலமை புரிகிறது சத்தியம்! முழுவதும் புரியவில்லையானாலும் உங்கள் வீட்டு ஊஞ்சல் பலகையில் நான் உட்கார்ந்திருக்கும் போதே ஏதோ பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது என்று ஜாடைமாடையாகப் புரிந்தது. உன்னைக் கூட அங்கேயே இதைப்பற்றி நான் நடுவில் ஒரு முறை கேட்டேன். நீ ஏதோ சிந்தனையில் என் கேள்வியைக் கவனிக்காமல் இருந்துவிட்டாய். இரண்டு மூன்று நாட்களாக நான் ஓர் ஆச்சரியகரமான விஷயத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய அழகு ஒளிரும் சிவந்த முகம் இந்தச் சில நாட்களாகக் கவலையால் வாடியிருக்கிறதடா சத்தியம். உன்னுடைய தாமரைப் பூப்போன்ற பாதங்கள் தூசி படிந்து பொலிவின்றித் தோன்றுகின்றன. உன் கண்களில் இடைவிடாத சிந்தனை தேங்கியிருக்கிறது. உலகத்துக்காகக் கவலைப்படும் போது ஒளி நிறைந்து தோன்றும் அந்த மேதைகளின் முகம் தங்கள் சொந்தக் கவலைகளின் போது தானே வாடி விடுகிற விந்தையை நினைத்தேன்."

"உன்னுடைய படிப்பினாலோ சிந்தனைகளினாலோ, நவீன இலட்சியங்களினாலோ நிச்சயமாக நீ ஓர் இளம் மேதை என்பது என் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை இன்று வரை நான் உன்னிடம் கூடச் சொல்லாமல் என் இதயத்தில் பரம இரகசியமாகவே ஒப்புக் கொண்டு பொதிந்து வைத்திருக்கிறேன். ஆனால் சில சமயங்களில் எனக்கு உன்னைப் பார்த்துப் பரிதாபமாயிருக்கிறது. நீயே உனக்கு ஒரு விலங்கைப் பூட்டிக் கொண்டு அழகு பார்க்க முயல்கிறாயோ என்று கூடப் பயமாயிருக்கிறது. உனக்காக நான் கவலைப்படுகிறேன். சமூகப் பிரச்சினைகளின் மேல் அன்பும், அநுதாபமும் கொண்டு கொதித்துக் குமுறிப் பேசிக் கொண்டிருந்த பழைய சத்தியத்தின் முகத்தை நினைத்துவிட்டு இப்போது உன்னைப் பார்த்தால் உன் முகத்தில் ஏதோ ஒன்று குறைகிறதடா சத்தியம்! உண்மையான அன்பு - அதாவது காதல் கூடப் பல சமயங்களில் மனிதன் தனக்குப் பூட்டிக் கொள்ளும் விலை மதிப்பற்ற விலங்காகத்தான் இருக்கிறது."

"உண்மையான அன்பு தான் 'கயஸை' லைலாவுக்காகப் பைத்தியம் பிடித்து அலைய வைத்தது. தேவதாஸைப் 'பாரு'வுக்காக இரத்தம் கக்கிச் சாக வைத்தது. அம்பிகாபதியைக் கழுவேற்றியது. இராமனை இலங்கைவரை படையெடுத்துச் சென்று அலைய வைத்தது. சீதையைத் தூக்கிச் சென்றது போல் குடிசையைப் பெயர்த்துத் தூக்கிக் கொண்டு போகிறவர்கள் தான் இராமாயணக் காலத்தில் இராவணர்கள். ஆனால் இந்தக் காலத்திலோ உன்னுடைய மனத்திலிருந்து மோகினியைப் பிரித்தெடுத்துக் கொண்டு போக முயல்கிற மஞ்சள்பட்டி ஜமீந்தாரைப் போன்ற நாகரிக இராவணர்கள் சமூகத்தில் நிறைய இருக்கிறார்கள். உன்னையும், மோகினியையும் நீங்கள் இருவரும் அன்பு செலுத்துவதையும் நான் மிக அதிகமாக மதிக்கிறேன் சத்தியம்! ஆனால் உனக்கு முன்பாக வந்து நிற்கும் பிரச்சினைகளையும், எதிர்ப்புக்களையும் பார்க்கும் போது என் உயிர் நண்பனாகிய நீ இன்னும் முகத்தில் ஒளியிழந்து, கண்களில் சிந்தனை தேங்கிக் கால்கள் நடை சோர்ந்து வாழ்க்கை வீதியில் அலைய நேரிடுமே என்று தான் பரிதாபமாக இருக்கிறது."

குமரப்பன் மேலே பேசுவதற்குள் இரயில் வந்து நின்று விட்டதற்கான பரபரப்பும், ஒலிபெருக்கி அறிவிப்பும் கேட்டன. அவன் விரைந்து நடந்தான். சத்தியமூர்த்தியும் பின் தொடர்ந்தான். இரயிலில் இடம் பிடித்து ஏறிக் கொண்டான் குமரப்பன்! இரயில் புறப்படுமுன், "உன்னுடைய நம்பிக்கைகள் நலியச் செய்வதற்காக இவ்வளவு நேரம் நான் பேசவில்லை. நீ நான் கூறியவற்றையெல்லாம் நிதானமாகச் சிந்தனை செய்ய வேண்டும்" என்று குமரப்பன் சிரித்துக் கொண்டே சொல்லி விட்டுப் போனான். நண்பன் இரயிலில் புறப்பட்டுப் போய்விட்டாலும் அவன் உண்டாக்கி விட்டுப் போன சிந்தனை கனக்கும் மனத்தோடு சத்தியமூர்த்தி இரயில் நிலையத்துக்கு வெளியே வந்தான். மணி ஏழரைக்கு மேலாகியிருந்தது. பூபதியைப் பார்ப்பதற்காக அவன் செல்ல வேண்டியிருந்த பங்களாவோ இரயில் நிலையத்து மேற்பாலத்தைக் கடந்த அரசரடிக்கும் அப்பால் கோச்சடைப் பகுதியில் இருந்தது. நடந்து சென்றால் உரிய நேரத்தில் போக முடியாது என்று தோன்றவே ஒரு சைக்கிள் ரிக்ஷாவை வாடகைக்குப் பேசிக் கொண்டு புறப்பட்டான் சத்தியமூர்த்தி. அரை மணி நேரப் பயணத்துக்குப் பின் மாபெரும் தோட்டத்தோடு கூடிய அந்தச் சலவைக்கல் மாளிகை வாசலில் போய் இறங்கிய போது இந்த இடத்தில் வந்து இறங்குவதற்கே சைக்கிள் ரிக்ஷாவைப் போன்ற ஒரு சாதாரண வாகனம் தகுதியற்றது போல் தோன்றியது. ரிக்ஷாக்காரனுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டுக் கீழிறங்கிய போது 'வெறும் ரிக்ஷாவில் வந்து 'கேட்'டுக்கு வெளியே இறங்குகிற பஞ்சைகளைப் பற்றி எனக்கென்ன கவலை?' என்று அலட்சியமாயிருப்பது போல் நின்ற கூர்க்காவைக் கவனித்தான் சத்தியமூர்த்தி. கூர்க்காவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பி விசாரித்து முடிக்கவே மிகவும் சிரமப்பட்டான் அவன். கூர்க்கா சத்தியமூர்த்தியை உள்ளே அழைத்துக் கொண்டு போய் மாளிகையின் முன்புறம் 'ரிஸப்ஷன்' என்று எழுதப்பட்டிருந்த பகுதியில் அதற்காக அமர்த்தப்பட்டிருந்த ஓர் இளம் சட்டைக்காரப் பெண்மணியின் முன்னால் நிறுத்தினான். விளக்கு வெளிச்சத்தில் தேவலோகமாகத் தெரிந்தது அந்த மாளிகை. புல்வெளியிலும், தோட்டத்திலும் கூட இருளுக்கு இடமே இல்லாதபடி மின்சார விளக்கொளி வெள்ளமாகப் பரவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்புறம் சிறிதும், பெரிதுமாகப் பல கார்கள் நின்றன. அங்கு செய்யப்பட்டிருந்த ஆடம்பரச் செலவைப் பார்க்கும் போது, "ஏழைகள் புதிது புதிதாகக் கவலைப்பட்டுச் செலவுக்குப் பணம் தேடுகிறார்கள். பணக்காரர்களோ புதிது புதிதாக யோசித்துப் பணத்துக்குச் செலவு தேடுகிறார்கள்" என்று குமரப்பன் அடிக்கடி சொல்கிற வாக்கியம் நினைவுக்கு வந்தது. "ஹூம் டூ யூ வாண்ட் டூ ஸீ" (நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும்?) என்று கடுகடுப்பாகக் கேட்டாள் அந்த ஆங்கிலோ இந்தியப் பெண்மணி. சத்தியமூர்த்தி பூபதியின் கடிதத்தை எடுத்து நீட்டினான். அதை வாங்கிப் பார்த்து விட்டு அவனை உள்ளே அழைத்துச் சென்றாள் அவள். ஒரு சமயம் அரண்மனையைப் போல் தோன்றிய அந்த மாளிகையே இன்னொரு சமயம் ஒரு பெரிய 'நைட் கிளப்' போலவும் ஹோட்டல் போலவும் தோன்றிச் சத்தியமூர்த்தியை மருட்டியது. உட்புறம் போய் ஹாலில் பார்த்தபோதுதான் அவன் சிறிதும் விரும்பாத அல்லது எதிர்பாராத ஓர் உண்மை திடீரென்று புரிந்தது. ஹாலில் மஞ்சள்பட்டி ஜமீந்தாரும், கண்ணாயிரமும், பூபதியோடு சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஹாலில் பாரதியின் தலைதெரிந்தது. மதுரையில் உள்ள மஞ்சள்பட்டியாரின் பங்களா அதுதான் என்பதும், அங்கேதான் பூபதி வந்து தங்கியிருக்கிறார் என்பதும் மிக்கக் கசப்பான உண்மைகளாக அந்தக் கணத்தில் அவனுக்குத் தெரியவந்தன.

அத்தியாயம் - 39

தாங்களே தங்களுடைய மனச்சாட்சிக்காக நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதை விடத் தங்களைப் பிறரிடம் நல்லவர்களாக நிரூபித்துக் கொண்டால் போதும் என்ற ஆசைதான் இன்று மிகப் பலரிடம் இருக்கிறது.

சத்தியமூர்த்தி அந்தக் கூடத்துக்குள் நுழைந்து நின்றவுடனே சீட்டு விளையாடிக் கொண்டிருந்த பூபதி அவனைப் பார்த்துவிட்டார். அதே சமயத்தில் அவனால் மனப்பூர்வமாக வெறுக்கப்பட்ட மற்ற இருவரும் கூட அவன் அங்கு வந்து நிற்பதைப் பார்த்து விட்டார்கள். கருகருவென்று மயிரடர்ந்த புருவங்களை மேலே ஏற்றி இறக்கி வளைத்து ஜமீந்தார் தன்னைப் பார்த்த பார்வை நெஞ்சில் வந்து குத்தித் துளைத்தெடுப்பது போலிருந்தது சத்தியமூர்த்திக்கு. 'நாடு சுதந்திரம் பெற்று ஜமீன் ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ முறையைத் தீர்த்துக் கட்டும் நில உச்சவரம்பு ஆகிய சட்டங்களெல்லாம் வந்த பின்பும் இன்றைய நிலையில் கூட மஞ்சள்பட்டியாரைப் போன்றவர்கள் ஊருக்கு ஊர் பங்களாக்களும், ஆடம்பர ஏற்பாடுகளும் செய்து கொண்டு பழைய ஜமீந்தார் வீறாப்புகளைச் சிறிதும் இழக்காமலும் குறைத்துக் கொள்ளாமலும் வாழ முடிகிறதே' என்பதை எண்ணிய போது சத்தியமூர்த்தி மனம் கொதித்தான். ஜமீந்தார் முறையை ஒழித்துவிட்டாலும் பணக்காரர்களில் பலருடைய இரத்தத்தில் ஓர் இயற்கையாக ஊறிப் போயிருக்கும் ஜமீந்தார் மனப்பான்மையை ஒரு போதும் ஒழிக்க முடியாது போல் தோன்றியது. ஜமீன் ஒழிப்புக்கு பின் இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மக்கள் மஞ்சள்பட்டியாரை ஜமீந்தார் என்றுதான் சொல்கிறார்கள். பழைய டாம்பீகங்களையும் ஆடம்பரங்களையும் விட்டுவிடாமல் நாட்டியத்தையும் சங்கீதத்தையும் காப்பாற்றுவதாகச் சொல்லிக் கொண்டு ஜமீந்தார் மஞ்சள்பட்டியில் இன்னும் நவராத்திரி விழாக் கொண்டாடுகிறார். மஞ்சள்பட்டி என்கிற சிறிய ஊரில் இருப்பதை விட அதிக வசதிகளும் ஆடம்பரங்களும் நிறைந்த மாளிகைகளும் பங்களாக்களும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் கோடை வாசத்துக்குரிய மலை நகரங்களிலும் ஜமீந்தாருக்குச் சொந்தமாக இருக்கின்றன.

ஜமீந்தாரின் கொடிய கண்பார்வை தன்மேல் பட்டுத் திரும்பிய சில கணங்களில் இவ்வளவும் நினைத்தான் சத்தியமூர்த்தி. இதற்குள் பூபதியே அவன் பக்கம் எழுந்து வந்துவிட்டார். "வாருங்கள்! என் கடிதம் கிடைத்ததா? அப்போதிருந்து உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று புன்னகையோடு கூறிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து நின்றார் பூபதி. அவருக்குப் பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பதற்காக அவரைச் சந்தித்தவுடனே தன் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்ள எண்ணியிருந்த சத்தியமூர்த்தியைப் பேசவிடாமல் அவரே முந்திக் கொண்டு ஜமீந்தாரைப் பற்றி உற்சாகமாகக் கூற ஆரம்பித்து விட்டார்.

"உங்களுக்கு நம் ஜமீந்தாரவர்களைத் தெரியும் அல்லவா? பெரிய கலாரசிகர், நல்ல தமிழபிமானி. இவருடைய முன்னோர்களில் சிலரைப் பற்றிப் பழைய புலவர்கள் இரட்டை மணிமாலை என்ன, நான்மணிமாலை என்ன, பிள்ளைத் தமிழென்ன, கோவை உலா மடலென்ன என்று இப்படி கணக்கு வழக்கில்லாமல் பாடிப் புகழ்ந்திருக்கிறார்கள். இந்த நிமிஷத்தில் கூட நம்முடைய ஜமீந்தாரைத் தூண்டிவிட்டுக் கூளப்ப நாயக்கன் காதலையும், விறலிவிடு தூதுவையும் பற்றிச் சொல்லச் செய்தால் விடிய விடியக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். பொழுது போவது தெரியாது மிஸ்டர் சத்தியமூர்த்தி! இதையெல்லாம் விட அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மல்லிகைப் பந்தல் கல்லூரியின் நிர்வாகக் குழுவில் நம் ஜமீந்தார் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறார் என்பதுதான்!" என்றிவ்வாறாகச் சத்தியமூர்த்தி பதில் சொல்லவோ சிந்திக்கவோ அவகாசம் கொடுக்காமல் மிக ஆர்வமாகச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டே போனார் பூபதி. அவற்றைச் செவியில் ஏற்று மனத்தில் சிந்தித்த பொழுது சத்தியமூர்த்தியினால் பொறுத்துக் கொள்ள இயலாத உண்மைகளாயிருந்தன அவை. ஓரளவு கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய கூளப்ப நாயக்கன் காதலும், விறலிவிடு தூதுவும் ஜமீந்தாருக்குத் தெரிவதைக் காரணமாகச் சொல்லி அவரை அதற்காகத் தமிழபிமானி என்று குறிப்பிடும் பூபதியை நினைத்து, அவன் உள்ளூரப் பரிதாபப்பட்டான். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் ஏற்கெனவே உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அசையாமல் சத்தியமூர்த்தியையே கடுமையாக உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பூபதியோ நிலைமை புரியாமல் சத்தியமூர்த்தி கையைப் பற்றி இழுத்து மிக அருகில் அழைத்துக் கொண்டு போய் ஜமீந்தாரிடமும் கண்ணாயிரத்தினிடமும், "சார் உங்களுக்கெல்லாம் ஓர் இளம் நண்பரை இப்போது அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்..." என்று தொடங்கி மடமடவென்று சத்தியமூர்த்தியைப் பற்றி அவர்களுக்குச் சொல்லத் தொடங்கிவிட்டார். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் சத்தியமூர்த்தியின் அறிமுகத்தையோ, அவனுடைய சிறப்பியல்புகளையோ சிறிதும் விரும்பவில்லை. தவிர சத்தியமூர்த்தி அவர்களுக்குப் புதிதாக அறிமுகமாக வேண்டியவனும் இல்லை. நிலைமையைச் சமாளிப்பதற்காகக் கண்ணாயிரம் ஏதோ காரியமாக எழுந்து போய் விட்டார். ஜமீந்தார் அப்படி எழுந்து போய்விடவில்லையானாலும் பூபதி கூறிய எல்லாவற்றையும் சிறிது கூட முகமலர்ச்சியில்லாமல் கடுகடுப்போடு கேட்டுவிட்டு 'ஐ... ஸீ' என்று அழுத்தமாகச் சொல்லியபடியே நிமிர்ந்து சத்தியமூர்த்தியை ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வை அவனை வாள் கொண்டு அறுப்பது போல் அறுத்தது. சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அந்த விரும்பத்தகாத சூழலில் நிகழும் விரும்பத்தகாத அறிமுகத்துக்காகக் கால்கள் பொருந்தாதபடி நின்று கொண்டிருந்தான் அவன். கால் மேல் கால் போட்டு அலட்சியமாக உட்கார்ந்திருந்த ஜமீந்தார் கால் பாதத்தை மேலும் கீழுமாக ஆட்டியபடி 'ஐ...ஸீ' என்று வார்த்தைகளை இழுத்ததை நினைத்து மனம் வெறுத்து அருவருப்பு அடைந்தாலும் அங்கே தன்னுடைய எந்த உணர்ச்சியையும் வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ள முடியாமல் நின்றான் சத்தியமூர்த்தி.

ஜமீந்தாருக்குச் சத்தியமூர்த்தியை அறிமுகம் செய்த போது அவர் அதிக அலட்சியமாக இருந்ததைப் பூபதியும் அறிந்து கொண்டாலும் அதற்குக் காரணமாக எதையும் மனத்தில் கற்பித்துக் கொள்ளவில்லை அவர். அந்த நேரத்தில் சத்தியமூர்த்தி நினைத்துத் தலைகுனியும்படியான வேறு ஒரு நிகழ்ச்சியும் அங்கு நடந்தது. அவனும் பூபதியும் அங்கு நின்று கொண்டிருந்த போதே ஜமீந்தார் ஒரு வேலைக்காரனைக் கூப்பிட்டு, "டேய்! பின்புறம் தோட்டத்தில் அந்தப் பேச்சியம்மன் படித்துறைக் கிழவன் நின்று கொண்டிருப்பான். நான் கூப்பிட்டேனென்று அந்தக் கிழவனை இங்கே வரச்சொல்" என்று ஏவினார். ஐந்து நிமிஷங்கள் கழித்து ஜமீந்தாரால் அழைக்கப்பட்ட அந்தக் 'கிழவன்' வந்து கைகட்டி வாய் பொத்தி நின்றபோது பூபதியோடு பேசிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி, தற்செயலாகத் திரும்பிப் பார்த்தான். அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. ஜமீந்தாருடைய ஏவலுக்காக ஓடிவந்து கைகட்டி வாய் பொத்தி நின்ற கிழவர் வேறு யாருமில்லை; அவனுடைய அருமைத் தந்தைதான். சத்தியமூர்த்திக்கு மனம் கொதித்தது. வந்து பவ்வியமாக நின்று கொண்டிருந்த அவனுடைய தந்தையிடம், "உள்ளே சிகரெட் 'டின்' இருக்கும். புதிதாக ஒன்று எடுத்துக்கிட்டு வாங்க..." என்று கூறி ஜமீந்தார் கட்டளையிட்டதைச் சத்தியமூர்த்தி தன் இருவிழிகளாலும் கண்டு இரு செவிகளாலும் கேட்டு வயிறெரிந்தான். அந்த நேரத்து உணர்ச்சிகளின் வேகத்தை அவனால் அங்கு வெளியே காட்டிக் கொள்ளவும் முடியவில்லை. இதே வெட்கத்தோடுதான் தந்தையும் அவனைப் பார்க்காதது போல் அங்கிருந்து மெல்ல நழுவிப் போயிருக்க வேண்டும். தன்னை அவமானப்படுத்தித் தலைகுனிய வைக்க வேண்டுமென்று ஜமீந்தார் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார் என்பதைச் சத்தியமூர்த்தியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் புரிந்து கொண்டு அங்கே என்ன செய்ய முடியும்? பூபதியோ அவனுடைய மனப்போராட்டங்களையும் வேதனையையும் உணர்ந்து கொள்ளாமல் எதை எதையோ அவனிடம் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அவனும் பூபதியும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே ஜமீந்தார் சிகரெட் 'டின்'னும் கையுமாகக் கண்ணாயிரம் பின் தொடர அவர்களைக் கடந்து பங்களாவின் முன் பகுதிக்குச் சென்றார். அப்படிச் செல்லும்போதே ஜமீந்தார் ஒரு கணம் பின்னால் திரும்பி, "ஏய் பூபதி! நானும் கண்ணாயிரமும் வெளியில் எங்காவது புறப்பட்டு விட்டோமோ என்று நினைத்துக் கொள்ளாதே. வெளியே தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்... பேசி அனுப்பிவிட்டு நீயும் வா... காற்றாடத் தோட்டத்தில் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருக்கலாம்" என்று பூபதியிடம் சொல்லிவிட்டுப் போனார்.

ஜமீந்தாருக்கும் பூபதிக்குமிடையே இருப்பதாகத் தெரிந்த நெருக்கமும், நேசமும் சத்தியமூர்த்தியைத் திகைத்துப் போகச் செய்திருந்தன. 'ஏய் பூபதி! என்று போகிற போக்கில் மதயானை நடப்பது போல் நடந்து கொண்டே கூப்பிட்டுப் பேச வேண்டுமானால் மஞ்சள்பட்டி ஜமீந்தாருக்குப் பூபதியிடம் எவ்வளவு உரிமையும் நேசமும் இருக்க வேண்டும்?' என்றெண்ணி தனக்குள் வியந்தான் சத்தியமூர்த்தி. பூபதியோ அவனிடமே மேலும் மேலும் விடாப்பிடியாய் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! ஜமீந்தாருக்கு எல்லாரிடமும் அத்தனை கலகலப்பாகப் பழக வராது. உங்களிடம் அவர் அதிகம் பேசவில்லையே என்று நீங்கள் வித்தியாசமாக நினைத்துக் கொள்ளக் கூடாது. நாங்கள் இருவரும் அண்ணன் தம்பி மாதிரி. இந்த ஜமீந்தார் இல்லேன்னா வியாபாரத்திலேயும் தொழில் துறையிலும் நான் இவ்வளவு செழிப்பாக வளர்ந்து முன்னுக்கு வந்திருக்க முடியாது. இவர் பரம உபகாரி. இப்போது நம் கல்லூரி இருக்கிறதே, அந்த இடம் முழுவதும் ஒரு காலத்தில் இவருக்குச் சொந்தமான பழத் தோட்டங்களாக இருந்தன. அவ்வளவு இடத்தையும் சும்மாவே எனக்குக் கொடுத்திட்டார். வியாபாரத்திலும் தொழிலிலும் கூட எனக்கு நொடிப்பு வந்த போதெல்லாம் நிறைய கைகொடுத்து உதவியிருக்கிறார். நான் இவரை வெறும் 'பிஸினஸ் பார்ட்னரா' மட்டும் நினைக்கிறதில்லை. ரொம்ப ரொம்ப வேண்டிய சினேகிதராகவே நினைக்கிறேன். நானும் என் பெண்ணும் எப்போது மதுரைக்கு வந்தாலும் இவருடைய பங்களாவில் தான் தங்குவது வழக்கம். இது எங்களுடைய சொந்த வீடு போல. மல்லிகைப் பந்தலிலே நம் ஜமீந்தாருக்கும் அரண்மனை போல் பெரிய பங்களா இருக்கிறது. பாவம்! சின்ன வயதிலேயே மனைவியைப் பறிகொடுத்து விட்டார். கலைத்துறையில் நிறைய அபிமானம் உடையவர்; பரதநாட்டியம்னா உயிர். கர்நாடக சங்கீதம்னாப் பசி தாகமே தெரியாது."

ஜமீந்தார் புகழ்பாடும் படலத்தில் பொறுமை இழந்த சத்தியமூர்த்தி துணிந்து, பூபதியின் பேச்சில் நடுவே குறுக்கிட்டான்.

"சார்! உங்களுடைய கடிதத்தில் நீங்கள் டில்லிக்குப் புறப்படு முன் என்னிடம் ஏதோ முக்கியமாகப் பேச வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். உங்களுக்குக் குடியரசுத் தலைவர் 'பத்மஸ்ரீ' விருது வழங்கப் போவதைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய மனப்பூர்வமான பாராட்டுதல்களை ஏற்றுக் கொள்ளுங்கள்..." என்று சத்தியமூர்த்தி கூறிக்கொண்டே வந்த போது பூபதிக்குப் பின்புறமிருந்து வளைகள் கலகலத்து ஒலிக்கும் இனிய இசை கேட்டது. சத்தியமூர்த்தி நிமிர்ந்து பார்த்தான். பாரதி வந்து நின்று கொண்டிருந்தாள். தந்தைக்கு முன்னால் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்ள விரும்பிய பாரதி, "வணக்கம் சார்" என்று அவனை நோக்கிக் கைகூப்பினாள். அவனும் பதிலுக்குப் புன்முறுவல் பூத்து அந்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டு இந்த இரண்டு வார்த்தைகளால் பொதுவாக அவளை நலம் விசாரித்து வைத்தான். தந்தை அமர்ந்திருந்த நாற்காலியின் பின்புறத்தைக் கைகளால் பற்றியபடி அவளும் அங்கேயே நின்று கொண்டாள். சிகரெட் 'டின்' எடுத்துக் கொடுப்பதற்கும் ஓவல்டின் கொண்டு வந்து கரைத்துக் கொடுப்பதற்குமாக உள்ளே எடுபிடி வேலையாள் போல் அலைந்து கொண்டிருக்கிறவர் தன்னுடைய தந்தைதான் என்பது பாரதிக்கோ, பூபதிக்கோ தெரிந்திருக்கலாமோ என்ற தவிப்பினால் பொறுமையும் மலர்ச்சியும் இழந்து ஏதோ பொம்மை போல் ஒரு முறைக்காக அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அப்போது தன்னுடைய கம்பீரமான உருவம் கூனிக் குறுகிவிட்டது போல் அவனுக்கே ஒரு பிரமை உண்டாகியிருந்தது. தன்னைத் தர்மசங்கடமான நிலைமைக்கு ஆளாக்கிவிட்ட தந்தை மேல் கோபம் கோபமாக வந்தது அவனுக்கு. தந்தையை அந்த அளவு துணியச் செய்துவிட்ட தன் வீட்டு வறுமையின் மேலும் கோபம் வந்தது. இறுதியாகப் படைப்பின் மேலும் கடவுளின் மேலுமே கோபம் வந்து குமுறியது. ஒரு வேளை கண்ணாயிரமோ, ஜமீந்தாரோ தன்னை அவமானப்படுத்த வேண்டுமென்றே அந்த உண்மையைப் பூபதியிடமும், பாரதியிடமும் சொல்லியிருந்தும் அவர்கள் தன்னிடம் அதைத் தெரிந்து கொள்ளாதது போல நடிக்கிறார்களோ என்ற சந்தேகமும் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. சில இடங்களில் சில மனிதர்களோடு சேர்ந்து இருந்தாலே எதற்கோ அடிமைப்பட்டு விட்டது போல் அந்தரங்கமாக ஒரு தவிப்பும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும். அத்தகைய தவிப்புக்கும் குமுறலுக்கும் இப்போது ஆளாகியிருந்தான் சத்தியமூர்த்தி.

"உங்கள் ஆசிரியரைப் பார்த்தாயா அம்மா? ஜமீந்தாரைப் பற்றிச் சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். பாதியிலேயே கேட்பதற்குப் பொறுமை இழந்து விட்டார்..." என்று பின்புறம் நின்றிருந்த மகளிடம் சொல்கிறாற் போலச் சொல்லிக் கொண்டே சத்தியமூர்த்தியை நோக்கிக் குத்தலாகப் பேசினார் பூபதி. சத்தியமூர்த்தியும் அவரை நோக்கி மௌனமாகப் புன்னகை புரிந்தான். இல்லை புன்னகை புரிவதாக நடித்தான். அந்தப் புன்னகையும் மனப்பூர்வமாக வரவில்லை. அதே வேளையில் 'சமூகத்தில் உள்ள பலர் அவர்களிடம் இருக்கும் நியாயமான தகுதிகளுக்காகக் கூடப் புகழப்படுவதில்லை. வேறு சிலரோ அவர்களிடம் இல்லாத தகுதிகளுக்காகவும் சேர்த்துப் புகழப்படுகிறார்கள் என்று அவன் மனம் நினைத்துக் குமுறிக் கொண்டிருந்தது. தமக்கு வேண்டியவர் என்பதற்காக ஜமீந்தாரிடம் இல்லாத தகுதிகளுக்காகவும் சேர்த்து அவரைப் பூபதி புகழ்ந்தது சத்தியமூர்த்திக்குப் பிடிக்கவில்லை. "மிஸ்டர் சத்தியமூர்த்தி! நான் உங்களைக் கூப்பிட்டனுப்பிய காரியம் ஒரு புறம் இருக்கட்டும். என் நண்பர் என்ற முறையில் நீங்கள் ஜமீந்தாரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படாவிட்டாலும் மல்லிகைப் பந்தல் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் எனக்கு அடுத்தபடி மிகவும் முக்கியமானவர் என்பதற்காகவாவது அவரைத் தெரிந்து கொள்ள வேண்டும். நம் ஜமீந்தார் சமீபத்தில் ஒரு பெரிய வாரப் பத்திரிகையை விலைக்கு வாங்கியிருக்கிறார். இந்த ஊரிலிருந்து வெளிவருகிற 'குத்துவிளக்கு' வாரப் பத்திரிகையை நீங்கள் பார்த்திருப்பீர்களே?"

சத்தியமூர்த்தி இப்போதும் பூபதிக்குப் பதில் ஒன்றும் கூறாமல் புன்னகை புரிந்தான். தனக்கு விருப்பமில்லாத விஷயமானாலும் அந்த விஷயத்தை எடுத்துச் சொல்கிறவருடைய விருப்பத்தைப் புண்படுத்தாமல் புன்னகை புரிந்தபடியே கேட்டுக் கொண்டு மௌனமாயிருந்துவிடும் பழக்கத்தை மேற்கொள்வது அவனுக்கு இன்று மட்டும் புதுமையில்லை. சிறிது நேரம் ஜமீந்தாருடைய புகழ்மாலை வளர்ந்த பின் கண்ணாயிரம் என்கிற பிரமுகரின் சாமர்த்தியங்களைப் பற்றியும் யாரோ முன்பின் தெரியாதவனுக்கு எடுத்துச் சொல்வது போல் பூபதி அவனிடம் சொல்லத் தொடங்கினார்.

"கண்ணாயிரத்தை என்னவோ என்று நினைத்து விடாதீர்கள். அவர் பெரிய 'ஜீனியஸ்'. இந்த உலகத்தில் அவரால் முடியாத காரியம் என்று எதுவும் கிடையாது. முன்னால் 'மூன்லைட் அட்வர்டைஸிங் ஏஜென்ஸீஸ்' என்று ஒரு விளம்பரக் கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருந்தார். இப்போது 'குத்துவிளக்கின்' ஜெனரல் மானேஜராக இருந்து நிர்வாகம் செய்யும் பொறுப்பையும் ஜமீந்தார் அவரிடமே விட்டிருக்கிறார். மக்களுக்குக் கவர்ச்சியான புதுப்புது அம்சங்களைப் புகுத்திக் 'குத்துவிளக்கை' மிக வேகமாக மின்னச் செய்யப் போகிறார் கண்ணாயிரம்..."

"... எனக்குத் தெரியும்..." என்று சுருக்கமாகப் பதில் வந்தது சத்தியமூர்த்தியிடமிருந்து. அவன் மனநிலையை உணர்ந்து கொண்டவர் போல் பேச்சைத் திடீரென்று வேறு திசைக்குத் திரும்பினார் பூபதி.

"எனக்குப் பத்மஸ்ரீ விருது கிடைத்ததென்ற தகவல் தெரிந்ததோ இல்லையோ, விடிந்ததும், விடியாததுமாக, பிரின்ஸிபல் யானைத் துதிக்கை அளவுக்குப் பெரிய ரோஜாப்பூ மாலையைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டார். என் மகளும் நானும் மல்லிகைப் பந்தலை விட்டுக் காரில் புறப்படுவதற்குள் அநேகமாக எல்லா நண்பர்களும், தெரிந்தவர்களும் தேடி வந்து மகிழ்ச்சியைத் தெரிவித்துப் பாராட்டிவிட்டுப் போய்விட்டார்கள். முதலில் என் மகள் பாரதி மதுரை வரை வந்து என்னை வழியனுப்பிவிட்டு மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிவிடப் போவதாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தாள். இப்போது என்னவோ திடீரென்று 'நானும் டில்லிக்கு வருகிறேன் அப்பா' என்கிறாள். அவளுக்கும் 'ஏர்டிக்கட்' வாங்கியாயிற்று. நான் உங்களைக் கூப்பிட்டனுப்பிய காரியம்..." என்று தொடங்கிய பூபதி எதையோ நினைத்துத் தயங்கினார். பின்னால் திரும்பி மகள் பாரதியைத் தேநீர் எடுத்துக் கொண்டு வரச் சொல்லி சாமர்த்தியமாக அவளை உள்ளே அனுப்பிவிட்டுக் குரலைத் தணித்துக் கொண்டு சத்தியமூர்த்தியிடம் மெல்லக் கூறலானார் பூபதி.

"நான் டில்லியிலிருந்து திரும்புவதற்கும் கல்லூரி நவராத்திரி விடுமுறை முடிந்து திறப்பதற்கும் சரியாயிருக்கும். கல்லூரி திறந்த ஒரு வாரத்திற்குள் என்னுடைய பிறந்த தினம் வருகிறது. அதையொட்டி 'ஸ்தாபகர் தின விழாவோ' என்னவோ கொண்டாடப் போவதாகப் பிரின்ஸிபல் சொல்லிக் கொண்டிருக்கிறார். எனக்கு இதெல்லாம் பிடிப்பதே இல்லை... என்ன கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது? ஆனால் பிரின்ஸிபலும் மாணவர்களும் ஆசைப்படுவதைக் கெடுக்க விரும்பவில்லை. அந்த விழாவுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்கிற பொறுப்பு உங்களுடையதாக இருக்கணும்... நம்முடைய மந்திரியைக் கூப்பிடச் சொல்லியிருக்கிறேன். மந்திரிக்குக் கொடுக்கிறதுக்கு ஒரு வரவேற்பு இதழ் நீங்க எழுதணும். அதிலே இந்த விஷயத்தைக் கொஞ்சம் அழுத்தி வற்புறுத்தணும்..." என்று சொல்லிக் கொண்டே காதருகில் வந்து வரவேற்பு இதழில் வற்புறுத்த வேண்டிய விஷயத்தை இரகசியமாக அவனிடம் கூறினார் பூபதி. வரவேற்பு இதழில் எந்த விதமாகவும் தொடர்புபடுத்திச் சொல்ல முடியாத சொந்த நலனுக்குரிய ஒரு விஷயமாக இருந்தது அது. சத்தியமூர்த்தி திகைத்துப் போனான். பல பெரிய மனிதர்கள் 'ஜெகில் அண்ட் ஹைடாக' இருப்பதும் உள்ளொன்றும் புறமொன்றுமாக வாழ்வதும் அவனுக்குத் தெரியும். பூபதியைப் பற்றி அவன் அப்படி இதுவரை நினைக்கவில்லை. இன்றோ இந்த விநாடியிலிருந்தே அவரையும் அப்படி நினைக்கத் தொடங்குவதற்கு அவன் சிறிதும் தயங்கவில்லை. புகழுக்கும் பெருமைக்கும் சிறிது கூட ஆசை இல்லாதவர்களைப் போலப் பேசிக் கொண்டே அவற்றுக்காகத் தவித்து மாய்கின்ற பணக்காரப் பிரமுகர்கள் பலரைப் போலத் தான் பூபதியும் இருக்கிறார் என்று அவன் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டான். தர்மத்தையும், பக்தியையும் பற்றி அடிக்கடி பேசுவதன் மூலமாக மட்டுமே தங்களைப் புற உலகுக்கு நல்லவர்களாகக் காண்பித்துக் கொண்டு - வாழ்கிற வாழ்க்கையில் தர்மமோ, பக்தியோ, ஒழுக்கமோ சிறிதுமில்லாத ஆஷாட பூதிப் பிரமுகர்களில் பூபதியும் ஒருவராக இருப்பதைச் சத்தியமூர்த்தி தெரிந்து கொள்ள நேர்ந்து விட்டது. அவன் அப்போது அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே அருவருப்பும் கூச்சமும் அடைந்து எங்கோ பார்க்கலானான்.

ஆனால் பூபதியோ கூசாமல் அவன் முகத்தைப் பார்த்து மேலும் ஏதோ சொல்வதற்கு இருந்த நிலையில் பாரதி தேநீர்க் கோப்பைகளோடு அங்கு வந்துவிட்டாள். தேநீரைப் பருகிக் கொண்டே சத்தியமூர்த்தி நினைத்தான்: 'தாங்களே தங்களுடைய மனச்சாட்சிக்காக நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதை விடத் தங்களைப் பிறரிடம் நல்லவர்களாக நிரூபித்துக் கொண்டாலே போதும் என்ற ஆசைதான் இன்று மிகப் பலரிடம் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாகப் பூபதியும் அந்தப் பலரில் ஒருவராகத்தான் இருக்கிறார்! ஒழுக்கமும் பண்பாடும் இல்லாத ஜமீந்தாரை வேறு பல சொந்தக் காரியங்களுக்காகப் பூபதி தாராளமாகப் புகழ்கிறார். அயோக்கியரான கண்ணாயிரத்தை 'ஜீனியஸாக' வருணிக்கிறார். இவற்றையெல்லாம் செவிகளில் ஏற்றுப் பொறுத்துக் கொள்ள முடியாமல் நான் மனம் புழுங்குகிறேன். இந்த இடத்தில் இந்த மாளிகையில் இப்படி உட்கார்ந்திருந்த போது நான் எதற்கோ அடிமைப்பட்டிருப்பதைப் போல் என் இதயமும் குமுறுகிறது. என் தோள்களில் பல்லாயிரம் தீமைகளைச் சாடி நொறுக்கும் அவ்வளவு பெருந்துணிவு தினவெடுத்துப் பொங்குகிறது' என்று இவ்வாறு சிந்தித்தபடி வீற்றிருந்த சத்தியமூர்த்தியைப் பூபதி வினவினார்.

"ஏன் இங்கு வந்ததிலிருந்து நீங்கள் என்னவோ போலிருக்கிறீர்கள்? உங்களுக்கு உடம்பு சரியில்லையா...! போய் ஓய்வெடுத்துக் கொண்டு நாளை மாலை விமான நிலையத்துக்கு வாருங்கள். நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும். 'ஸ்தாபகர் தின விழா' நன்றாக நடைபெற்றால் அந்தப் பெருமை எல்லாம் உங்களுக்குத்தானே?"

சத்தியமூர்த்தி அங்கிருந்து புறப்படத் துடித்துக் கொண்டிருந்தான். பூபதி இப்படி வினாவியதையே ஒரு காரணமாக வைத்து அவரிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து உடனே புறப்பட்டு விட்டான் அவன்.

அத்தியாயம் - 40

ஒரு பெண்ணின் அதிகப் பேச்சுக்குச் சில சமயங்களில் ஓர் அர்த்தமும் இல்லாமல் போகலாம். ஆனால் ஒரு பெண்ணின் அதிக மௌனத்துக்கு மட்டும் எத்தனையோ பல அர்த்தங்கள் உண்டு.

மஞ்சள்பட்டியாரின் மாளிகை எல்லையில் மறுபடியும் தன் தந்தையை அந்த அவலமான நிலையில் தான் சந்திக்க நேரிடும் முன்பே அங்கிருந்து புறப்பட்டு வெளியேறி விட வேண்டுமென்றுதான் சத்தியமூர்த்தி அவ்வளவு அவசரமாக புறப்பட்டிருந்தான். அவனுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுப் பூபதியும், அவர் மகள் பாரதியும் கூடத் தோட்டத்தில் ஜமீந்தார், கண்ணாயிரம் ஆகியவர்களோடு அமர்ந்து கொண்டார்கள். ஜமீந்தாரும், கண்ணாயிரமும், பூபதியும், பாரதியும் தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த பகுதியிலிருந்து அரட்டைப் பேச்சுக்களும், பெரிதாக எழுந்து ஒலிக்கும் வெடிச் சிரிப்புக்களுமாக அந்தக் காம்பவுண்டிலிருந்து வெளியேறிச் சென்று கொண்டிருந்த சத்தியமூர்த்தியின் செவிகளில் கேட்டு அவனை அருவருப்படையச் செய்தன. அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்து சேரும் வரை அவன் மனத்தில் பலவிதமான சிந்தனைகள் அலைமோதிக் கொண்டிருந்தன. வீட்டுக்கு வந்து இரவுச் சாப்பாட்டை முடித்த பின்பும் அவனுக்கு உறக்கம் வரவில்லை. அம்மா அவனிடம் எதையெதைப் பற்றியோ பேச முயன்றும் கேட்க முயன்றும் அவன் சரியாக மறுமொழி கூறாததனால் தானாகவே ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்துவிட்டுச் சிறிது நேரத்தில் தூங்கப் போய்விட்டாள்.

இரவு பதினோரு மணிக்கு மேல் தந்தை வீட்டுக்குத் திரும்பி வந்த போதும் சத்தியமூர்த்தி விழித்துக் கொண்டுதான் இருந்தான். திருத்தம் செய்து மதிப்பிடுவதற்காக மாணவர்களின் பரீட்சை விடைத்தாள்கள் சிலவற்றை மல்லிகைப் பந்தலிலிருந்து கையோடு எடுத்துக் கொண்டு வந்திருந்தான் அவன். அன்றிரவு தன்னால் முடிந்த நேரம் வரை கண்விழித்து அந்த விடைத்தாள்களில் பெரும் பகுதியைத் திருத்தி விட வேண்டும் என்று அவற்றை எடுத்து வைத்துக் கொண்டான் அவன் வேலையைத் தொடங்கியிருந்த போதுதான், தந்தை வந்து கதவைத் தட்டினார். வீட்டில் அம்மா உள்பட எல்லாரும் தூங்கிப் போய்விட்டதனால் சத்தியமூர்த்தி தான் திருத்தத் தொடங்கியிருந்த விடைத்தாள்களைக் கீழே வைத்துவிட்டு எழுந்து சென்று கதவைத் திறக்க வேண்டியதாயிற்று. அப்போது அவரும் அவனிடம் ஒன்றும் பேசவில்லை. அவனும் அவரிடம் ஒன்றும் பேசவில்லை. தந்தையின் மேல் கோபமும் பரிதாபமும் மாறி மாறி ஏற்பட்டன அவனுக்கு. திருமணமாக வேண்டிய தங்கைகளையும், இடித்துக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டுக்கு ஆகும் செலவுகளையும், தந்தையின் கவலைகளையும் நினைத்த போது அவனுக்குப் பரிதாபமாகவும் இருந்தது; அதே சமயத்தில் ஊர் உலகம் மெச்ச வேண்டும் என்ற போலி கௌரவத்துக்காக ஜமீந்தாருக்கு ஏதோ டியூஷன் நடத்துவதாகப் பொய் சொல்லிவிட்டுத் தன் தந்தை அங்கே எடுபிடி வேலையாளாகச் சுற்றிக் கொண்டிருப்பதை நினைத்து அடக்க முடியாத சீற்றமும் எழுந்தது. அன்றிரவு அந்த வீட்டின் எல்லையில் தந்தையும் நிம்மதியாக உறங்கவில்லை; மகனும் நிம்மதியாக உறங்கவில்லை. ஏறக்குறைய இரவு இரண்டு மணிவரை கல்லூரிப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண்களைக் (மார்க்) கூட்டிப் போட்டுக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அதற்கு அப்புறமும் உறக்கம் வராமல் சிறிது நேரம் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். ஆழ்ந்த உறக்கம் அன்றிரவு அவனுக்குக் கிடைக்கவேயில்லை. மறுநாள் காலையில் அவன் எவ்வளவு விரைவாக எழுந்திருந்தானோ அவ்வளவு விரைவாக எர்ஸ்கின் ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டு விட்டான். பஸ்ஸிலிருந்து இறங்கி ஆஸ்பத்திரிக் காம்பவுண்டுக்குள் அவன் நுழையும் போது ஆறு அல்லது ஆறே கால் மணி இருக்கும். அப்போதுதான் ஆஸ்பத்திரி மெல்ல மெல்ல விழித்துக் கொள்ளத் தொடங்கியிருந்தது. நர்ஸுகள் சுறுசுறுப்பாக நடமாடிக் கொண்டிருந்தார்கள். பிளாஸ்கும் கையுமாக நோயாளிகளுக்குக் காப்பி எடுத்துக் கொண்டு வருகிறவர்களும், பழங்களும் கையுமாக நோயாளிகளைப் பார்க்க வருகிறவர்களுமாக ஆஸ்பத்திரி வாசலில் கலகலப்பு ஆரம்பமாகியிருந்தது.

மோகினி இருந்த ஸ்பெஷல் வார்டில் அவன் நுழைந்த போது ஓர் அற்புதமான கண்ணுக்கினிய காட்சியைக் கண்டான். அப்போதுதான் பல்விளக்கி முகம் கழுவிக் கொண்டு வந்திருந்த மோகினி தன் அடர்ந்த கருங்கூந்தலை அவிழ்த்துக் கோதிக் கொண்டிருந்தாள். தலையை ஒரு புறமாகச் சாய்த்து வளை விளையாடும் பொன்னிறக் கையினால் கூந்தலைக் கோதிவிட்டுக் கொண்டிருந்த கோலத்தில் தோகை விரித்தாடும் அழகிய மயிலைப் போல் காட்சியளித்தாள் அவள். முகத்தில் சரிபாதி வந்து விழுந்து மேகக்காடு கவிழ்ந்தாற் போல் தொங்கி மறைத்துக் கொண்டிருந்த நிலையில் கருமை மின்னிச் சிற்றலையோடு நெளியும் அந்தக் கூந்தலின் நறுமணம் சத்தியமூர்த்தியைக் கிறங்கச் செய்தது. தனிமையில் தன்னிச்சையாகக் கூந்தலை அவிழ்த்து விட்டுக் கோதிக் கொண்டிருந்தவள் திடீரென்று அங்கு அவனைப் பார்த்ததும் நாணத்தோடு சிரித்துக் கொண்டே அவசரம் அவசரமாகக் கூந்தலை அள்ளி முடியத் தொடங்கினாள். அந்த அவசரத்திலும் பரபரப்பிலும் நாணத்திலும் கூட அவள் மிக அழகாக இருந்தாள். கைகளுக்கு அடங்காத அந்தப் பெருங் கூந்தலைக் கோணல் மாணலாகச் சுற்றிக் கொண்டை போட்டுக் கொண்ட போது அவன் கண்களுக்கு அவள் இன்னும் அழகாகத் தெரிந்தாள்.

"வாருங்கள்!... நேற்று வருகிறேனென்று சொல்லி ஒரேயடியாக ஆசைப்பட வைத்துக் கடைசியில் என்னை ஏமாற்றி விட்டீர்களே...? பையன் வந்து அர்ச்சனைப் பிரசாதத்தைக் கொடுத்து விவரம் சொல்கிறவரை நான் தவியாய்த் தவித்துப் போனேன்."

"நேற்றே வந்திருந்தால் உன்னை இன்று காலையில் இப்போது பார்த்தேனே இந்த அழகிய கோலத்தில் பார்த்திருக்க முடியாது மோகினி! பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா இல்லையா என்பதைப் பற்றி நக்கீரர் சிவபெருமானோடு கருத்து மாறுபட்டு வாதிட்டதாக ஒரு பழைய கதை உண்டு. உன்னுடைய கூந்தல் நறுமணமோ இந்த ஆஸ்பத்திரி வார்டையே கமகமக்கச் செய்து கொண்டிருக்கிறது. கரிய மேகங்களிடையே பாதி மறைந்தும் பாதி மறையாமலும் தெரியும் சந்திர பிம்பத்தைப் போல் கூந்தலில் மறைந்தும் மறையாமலும் தெரிந்த உன் முகத்தைப் பார்த்ததும் நான் கவிஞனாக இல்லையே என்ற வருத்தம் தான் எனக்கு ஏற்பட்டது."

"கேலி செய்யாதீர்கள்..."

"உன்னை தாராளமாகக் கேலி செய்யும் உரிமை எனக்கு உண்டோ இல்லையோ?"

"எல்லா உரிமைகளும் உங்களுக்குத்தான் உண்டு. ஏதோ அம்மா என்று ஒருத்தி இருந்தாள். அவளும் போய்ச் சேர்ந்துவிட்டாள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளுடைய கண்களில் நீர் பெருகிவிட்டது. மிகவும் பாசத்தோடு அருகில் சென்று மேல்துண்டால் அவளுடைய கண்ணீரைத் துடைத்தான் சத்தியமூர்த்தி. அவன் கண்ணீரைத் துடைத்த பின்னும் விலகிச் செல்லாமல் ஒட்டினாற் போலவே அவனருகில் தயங்கி நின்று கொண்டிருந்தாள் அவள். சிரித்தபடியே அவள் அவன் முகத்தை ஏறிட்டு நோக்கிக் கூறினாள்.

"நீங்கள் இப்படிச் செய்வதற்காகவே நான் இன்னும் கண்ணீர் விட்டு அழவேண்டும் போல் ஆசையாயிருக்கிறது!"

"கவலைப்படாதே! உன்னுடைய கண்ணீரைத் துடைப்பதற்கு இந்தக் கைகள் எப்போதும் தயாராக இருக்கும்" என்று அவளுக்குப் பதில் சொல்லிய போது தான் சொல்லிய வார்த்தைகளின் பொருளாழத்தை நினைத்து மெய்சிலிர்த்தான் அவன். "நேற்று மாலையில் அந்தப் பையன் கொண்டு வந்து கொடுத்த கோயில் பிரசாதத்தை இன்னும் அப்படியே வைத்திருக்கிறேன். உங்கள் கையால் இந்தக் குங்குமத்தை என் நெற்றியில் இட்டு விடுங்கள்" என்று சொல்லி இடுப்பிலிருந்து அந்தப் பொட்டலத்தை எடுத்து அவனிடம் கொடுத்தாள் மோகினி. தன் நெஞ்சருகே வந்து மேல் நோக்கி நிமிர்ந்த அவள் முகத்திலிருந்து கமகமக்கும் சந்தனச் சோப்பின் வாசனையை நுகர்ந்தவாறே அவளுடைய அழகிய நெற்றியில் கோவில் குங்குமத்தை இட்டான் சத்தியமூர்த்தி. "இந்தக் குங்குமம் உன்னுடைய அழகிய நெற்றியில் என்றும் இப்படியே இருக்க வேண்டும்" என்று விளையாட்டாக அவளை வாழ்த்துவது போல் அப்போது அவன் கூறினான்.

"நீங்கள் இருக்கிற வரை இந்தக் குங்குமமும் இப்படியே இருக்கும்!" என்று உறுதி தொனிக்கும் குரலில் மோகினியிடமிருந்து பதில் வந்தது. நர்ஸ் காப்பி கொண்டு வந்தாள். ஆஸ்பத்திரிக் காப்பியை மோகினியும் சத்தியமூர்த்தியும் ஆளுக்குப் பாதியாகப் பருகினார்கள். முதல் நாள் தன் தந்தை மோகினிக்கும் ஜமீந்தாருக்கும் ஏற்படவிருக்கும் உறவைப் பற்றியும் வேறு சில கசப்பான உண்மைகளைப் பற்றியும் தன்னிடம் கூறி எச்சரித்தவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் அப்படியே மோகினியிடம் சொல்லி எது உண்மை? எது பொய்? என்று இப்போது அவளையே விசாரித்து விடலாமா என்று ஒரு கணம் எண்ணினான் சத்தியமூர்த்தி. ஆனால் அடுத்த கணமே மகிழ்ச்சிகரமான இந்த வேளையில் அந்தக் கசப்பான உண்மைகளை அவளிடம் சொல்லி விசாரிப்பதனாலேயே அவள் மனம் வேதனைப்படுமோ என்று நினைத்து, இப்போது அவற்றைப் பற்றி அவளிடம் விசாரிக்காமல் இருப்பதே நல்லதென்று அவன் தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. அவளோ மிகவும் ஞாபகமாக 'வஸந்தசேனையையும் சாருதத்தனையும்' பற்றி மறுமுறை சந்திக்கும் போது அவன் தனக்குச் சொல்வதாக ஒப்புக் கொண்டிருந்த கதையை உடனே சொல்லியாக வேண்டுமென்று பிடிவாதம் செய்தாள். அந்தக் கதையை அவளுக்கு எந்தவிதமாகத் தொடங்கி எப்படிச் சொல்லலாமென்று முதலில் சிறிது தயங்கினான் சத்தியமூர்த்தி.

'வஸந்தசேனை' என்பவள் உச்சயினி நகரத்தில் பேரழகும் பெருஞ்செல்வமும் நிறைந்திருந்த 'ஓர் இளம் கணிகை' என்று ஆரம்பிக்கலாமா, அல்லது 'ஓர் இளம் தாசி' என்று ஆரம்பிக்கலாமா - எப்படி ஆரம்பித்தால் மோகினியின் மனம் புண்படாமல் இருக்கும்? என்று எண்ணி 'மிருச்சகடிகம்' காவியத்தை அவளுக்கு மிக மிக நாசூக்காகச் சொல்லி முடிப்பதற்குச் சீரான கதை உருவத்தைத் தன் மனத்தில் முதலில் அமைத்துக் கொள்ள முயன்றான் அவன். 'வஸந்தசேனை ஓர் இளம் கணிகை' என்று தொடங்கினால் நல்லதா? அல்லது 'ஓர் இளம் தாசி' என்று தொடங்கினால் நல்லதா? எப்படிச் சொன்னால் மோகினி தன்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாமலிருப்பாள் என்று நினைத்து நினைத்துத் தயங்கிய பின் முதல் வாக்கியத்தைச் சொல்லி முடித்த சுவடு நீங்குவதற்குள்ளாகவே 'ஆனால் அவள் செய்த காதல், புனிதமும் பரிசுத்தமும் நிறைந்தது' என அடுத்த வாக்கியத்தையும் உடனே சேர்த்துச் சொல்லி விடுவதென்று முடிவு செய்து கொண்டான் அவன். தன்னுடைய வாழ்க்கைக்கும் வஸந்தசேனை - சாருதத்தன் கதைக்கும் ஏதோ ஓர் ஒற்றுமை இருப்பதனால் தான் முன் தினம் பேசிக் கொண்டிருந்த போது சத்தியமூர்த்தி அதைப் பற்றித் தன்னிடம் குறிப்பிட்டிருக்க வேண்டுமென்று மோகினி நினைத்ததனால் அந்தக் கதையைப் பற்றிய ஆவலைத் தன் மனத்தினுள் தானாகவே வளர்த்துக் கொண்டிருந்தாள் அவள். சத்தியமூர்த்தியும் அதனைப் பற்றிய அவளின் ஆவலைப் புரிந்து கொண்டிருந்தான். அவளுடைய மனத்தில் வேற்றுமையாக எதுவும் தோன்றாதபடி வஸந்தசேனை - சாருதத்தன் கதையை அவளுக்கு நாசூக்காகவும் மென்மையாகவும் வளர்த்துச் சொல்லத் தொடங்கி விட்டான் அவன்.

வஸந்தசேனையின் எழில் கொஞ்சும் இளமைப் பருவத்தைப் பற்றியும், உச்சயினி நகரத்தின் அரண்மனையையும் விடப் பெரிய அவளது செல்வ மாளிகையைப் பற்றியும் சாருதத்தனிடம் அவளுக்கு ஏற்பட்டிருந்த பரிசுத்தமான காதல் பிடிவாதத்தைப் பற்றியும் ஒருவிதமாகச் சொல்லி முடித்தாகி விட்டது. சாருதத்தனுடைய குணநலன்களைப் பற்றியும், பிறருக்குக் கொடுத்துக் கொடுத்து அந்தக் கொடையின் மிகுதியினாலேயே அவன் ஏழையாகி விட்டதைப் பற்றியும், இப்போது சத்தியமூர்த்தி அவளுக்குச் சொல்லத் தொடங்கியிருந்தான்.

"ஆண்மகனின் அழகும், அந்த அழகுக்குத் துணையான ஒரு சிறந்த குணமும் சேர்ந்துதான் பேரழகியான ஒரு பெண்ணை நிரந்தரமாகக் கவர முடியுமே தவிரத் தனி உடலழகு மட்டுமே ஒரு பெண்ணை நிரந்தரமாகக் கவர்ந்துவிட முடியாது. சாருதத்தன் இணையற்ற ஆணழகன். அழியக்கூடிய இந்த அழகைத் தவிர வந்தவர்கெல்லாம் தன்னிடமிருந்த செல்வத்தை வரையாது கொடுத்துக் கொடுத்து அந்தக் கொடைப் பெருமிதத்தினாலே அழியாத குண அழகையும் பெற்றிருந்தான் அவன். கொடுத்துக் கொடுத்துத் தான் ஏழையாகிவிட்டதற்காக வருத்தப்படாமல் தன்னைத் தேடி வருபவர்களுக்குக் கொடுக்கத் தன்னிடம் இனி ஒன்றும் மீதமில்லையே என வருந்திக் கொண்டிருந்தான் சாருதத்தன். அவனுக்குத் திருமணமாகி இல்லற வாழ்வில் ஓர் ஆண் மகவு இருந்தும் கூட இளம் கணிகையான வஸந்தசேனை அவனையே தன் நாயகனாகப் பாவித்து அவனுக்கு ஆட்பட்டு உருகிக் கொண்டிருந்தாள். சாருதத்தன் ஏழையாயிருக்கிற அதே உலகத்தில் தான் செல்வத்தோடிருப்பதற்கே வெட்கமாக இருந்தது அவளுக்கு.

'கொடியை வளைத்துப் பூப்பறிக்க நேர்ந்தால் கூடக் கொடிக்கு நோகுமாமே என்று தயங்கிப் பூக்களைக் கொடியிலிருந்து பறிக்கவும் விரும்பாத அளவு மென்மையான மனம் படைத்த சாருதத்தன் இப்போது வறுமையால் எப்படி எப்படி வாடியிருப்பானோ' என்று எண்ணும் போதெல்லாம் வஸந்தசேனை கண் கலங்கித் தவித்தாள். உச்சயினி நகரத்துக் காமன் கோவிலில் முதன் முதலாகச் சாருதத்தனைச் சந்தித்து அவனிடம் தன் மனத்தைப் பறிகொடுத்த முதல் விநாடியிலிருந்து அவள் அவனுக்கு மானசீகமாக வாழ்க்கைப்பட்டிருந்தாள். சாருதத்தன் உலகத்துக்கு முன் பரம ஏழையாக இருந்தாலும் வஸந்தசேனையின் இதயத்தில் அவன் ஒருவனே உலகத்தின் மிகப் பெரிய செல்வனாகக் கொலு வீற்றிருந்தான். அவளுடைய வீதியிலேயே அவளுக்கு அருகே இருந்த வீடுகளிலுள்ள பல இளம் கணிகைகள் தங்கள் அழகை முதலாக வைத்து வாணிகம் செய்து பெரும் பொருள் குவித்துக் கொண்டிருந்த அதே வேளையில், அவள் சாருதத்தனை நினைத்து உருகிக் கொண்டிருந்தாள். உச்சயினி நகரத்தின் செல்வச் சிறப்பு மிக்க ஆடவர்கள் அவளுடைய தெருவைத் தேடி வருகிற மாலை வேளைகளில் அவள் தெய்வத்தைச் சந்திக்கப் போகும் பரம பக்தையாகச் சாருதத்தனுடைய தெருவைத் தேடி அலைந்து நடந்து கொண்டிருந்தாள். அப்படிச் சென்று கொண்டிருந்த மாலை வேளை ஒன்றில் அப்போது உச்சயினியை ஆண்டு கொண்டிருந்த பாலகன் என்ற கொடுங்கோலரசனுக்கு ஆசைக்கிழத்தி ஒருத்தியிடம் பிறந்த மகனாகிய சகாரன் என்ற காமுகன் வஸந்தசேனையைத் துரத்துகிறான். சகாரனுடைய கொடுமைக்கு ஆளாகாமல் தப்பிப் பிழைப்பதற்காகச் சாருதத்தன் வீட்டிலேயே அடைக்கலம் புகுந்து தன்னுடைய விலைமதிப்பற்ற அணிகலன்களையும் பாதுகாப்பாக அங்கேயே ஒப்படைத்துவிட்டு மீள்கிறாள் வஸந்தசேனை.

'இதயத்தையே ஒப்படைத்துவிட்ட இடத்தில் அணிகலன்களை ஒப்படைப்பதா பெரிய காரியம்?' என இந்த இடத்தில் மோகினி கதை கூறிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியிடம் நடுவே குறுக்கிட்டுப் பேசினாள். சத்தியமூர்த்தி அவளுடைய இந்த வாக்கியத்தில் எதையோ புரிந்து கொண்டவனைப் போல் ஒரு கணம் தான் சொல்லிக் கொண்டிருந்த கதையை நிறுத்திவிட்டு அவள் முகத்தை உற்றுப் பார்த்து புன்னகை பூத்தான். பின்பு கதையை மேலே வளர்த்துச் சொல்லிக் கொண்டே வருகையில், இருளிலும் மழையிலும் தவித்த வஸந்தசேனை சாருதத்தனைச் சந்திக்கப் போன இரவைப் பற்றியும், சாருதத்தனின் மகன் தெருவில் மண் வண்டி வைத்து விளையாடும் ஏழ்மையைப் பொறுக்க முடியாமல், வஸந்தசேனை தன்னுடைய பொன் நகைகளையும் கழற்றி அந்த மண் வண்டியில் வைத்த சம்பவத்தைப் பற்றியும், சத்தியமூர்த்தி மிகவும் உருக்கமாகக் கூறிய போது, மோகினி கண்கலங்கி விட்டாள். கதையை முழுவதும் சொல்லியபின், "உலகம் நிரந்தரமாகப் பழித்துக் கொண்டிருக்கிற ஒரு பகுதியைச் சேர்ந்த அழகிய பெண்களிடையேயிருந்துதான் வஸந்தசேனை, மாதவி, மணிமேகலை - கடைசியாக மோகினி எல்லோரும் தோன்றியிருக்கிறார்கள்" என்று சத்தியமூர்த்தி கூறிக் கொண்டே முடித்த போது அந்தப் பட்டியலில் அவன் தன் பெயரையும் சேர்த்துக் கொண்டதற்காக மோகினி நாணித் தலை குனிந்தாள். கன்னம் சிவக்க அவள் இதழ்களில் நகை கனிந்தது. அந்த நகை மாறாத முகத்தோடு அவனை நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டே எங்கோ பார்ப்பது போல் பராக்குப் பார்த்தபடி அவள் மெல்லச் சொன்னாள்:

"மணிமேகலையை விட்டுவிடுங்கள். அவள் துறவி. அவளைத் தவிர மற்ற இருவருக்கும் கிடைத்த காதலர்களை விட என்னுடைய காதலர் எவ்வளவோ மேலானவர். சாருதத்தனும், கோவலனும் தங்கள் அன்புக்கு ஆட்பட்டவர்களைச் சாக முயல்வதிலிருந்து காப்பாற்றி வாழ வைக்கவில்லை. என்னுடைய காதலர் யாரோ அவரால்தான் நான் சாவிலிருந்து காப்பாற்றப்பட்டு இப்போது உயிர் வாழ்கிறேன் இல்லையா?"

அவளுடைய அந்த அன்புப் புகழ்ச்சியில் அவன் மெய் மறந்திருந்த போது வார்டு அறையின் முன்புறம் ஏதோ கார் வந்து நிற்கிற ஓசை கேட்டது. அந்த ஓசையைக் கேட்டதுமே மோகினியின் முகத்தில் மகிழ்ச்சியும் சிரிப்பும் மறைந்து பயம் வந்து நிறைந்தது. புலியின் வருகையால் நடுங்கும் மான் குட்டியைப் போல் பதறினாள் அவள். "ஜமீந்தாருடைய காராகத்தான் இருக்கும்" என்று அவள் பரபரப்பாகக் கூறவும், சத்தியமூர்த்தி எழுந்து ஸ்கிரீன் மறைவுக்கு மேல் தலைநிமிர்ந்து வெளியே எட்டிப் பார்க்கவும் சரியாக இருந்தது.

ஜமீந்தார் மட்டுமல்லாமல், அவரோடு மல்லிகைப் பந்தல் கல்லூரி அதிபர் பூபதி, அவர் மகள் பாரதி, கண்ணாயிரம் எல்லாரும் ஒரு பெரிய காரில் வந்து இறங்கி உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். பிரமுகர் பூபதிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்குப் பாராட்டுத் தெரிவிப்பதற்காக அவருடைய படத்தை அட்டையில் தாங்கி வெளிவந்திருக்கும் புதிய 'குத்துவிளக்கு' இதழை நடந்தவாறு புரட்டிக் கொண்டே கடைசியாக வந்து கொண்டிருந்தாள் பாரதி. கண்ணாயிரமும், பூபதியும், ஜமீந்தாரும் சிரித்தபடியே பேசிக் கொண்டே வார்டுக்குள் நுழைந்தனர். முதலில் 'இதென்ன வேண்டாத இடத்தில் வேண்டாத சந்திப்பாக வந்து வாய்க்கிறதே!' என்று மனம் குழம்பிய சத்தியமூர்த்தி பின்பு சிறிதும் தயங்காமல் மிகமிக அருகே வந்துவிட்ட பூபதியை நோக்கி, "ஹலோ சார், குட்மார்னிங்..." என்று வரவேற்கவும் நிமிர்ந்து அவனைப் பார்த்த பூபதி, "நீங்கள் எங்கே... இப்படி இங்கே...?" என்று எதிர்பாராமல் அவனைச் சந்தித்துவிட்ட திகைப்போடு வினவினார். அவனுடைய குரலை அடையாளம் கண்டு பத்திரிகை படித்தபடி நடந்து வந்த பாரதியும் அதே திகைப்போடு எதிரே நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மோகினியைத் தனக்குத் தெரியும் என்றும் அவள் கார் விபத்தில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதை அறிந்து பார்த்துவிட்டுப் போக வந்ததாகவும், பூபதியிடம் சிறிதும் தயங்காமல், தெளிவாகவும் பொதுவாகவும் அவன் மறுமொழி கூறினான். அவர் அதை எப்படி வரவேற்றார், எவ்வளவு நம்பினார் என்பதைப் பற்றி அவன் அதிகமாகக் கவலைப்படவில்லை. கண்ணாயிரமும், ஜமீந்தாரும், சத்தியமூர்த்தி இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கவும் இல்லை. அவனை இலட்சியம் செய்யவும் இல்லை. பூபதியும் கூட அவ்வளவாகச் சுமுகமான நிலையில் அந்தச் சந்திப்பை ஏற்றுக் கொண்டதாகச் சத்தியமூர்த்திக்குத் தெரியவில்லை. பாரதியோ அவனிடம் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக, "இதில் அப்பாவைப் பற்றி வந்திருக்கிறது, பார்த்தீர்களா?" என்று தன் கையில் வைத்துக் கொண்டிருந்த புதிய 'குத்துவிளக்கு' இதழைச் சத்தியமூர்த்தியிடம் நீட்டினாள். அதை வாங்கிச் சிறிது நேரம் புரட்டிப் பார்த்துவிட்டு அவளிடமே திருப்பிக் கொடுத்துவிட்டான் அவன்.

"நீங்கள் எப்படி... இப்படி... இங்கே?" என்று அவளுடைய தந்தை வினாவினாற் போலவே அவளும் அவனை வினாவ நினைத்திருக்கலாம். ஆனால், நினைத்ததைக் கேட்காமல் அவள் அழுத்தமாகவே இருந்துவிட்டாள். ஒரு பெண்ணின் அதிகப் பேச்சுக்குச் சில சமயங்களில் ஓர் அர்த்தமும் இல்லாமல் போகலாம். ஆனால் ஒரு பெண்ணின் அதிக மௌனத்துக்கு எத்தனையோ பல அர்த்தங்கள் உண்டு. இந்த விதத்தில் பார்த்தால் ஒரு பெண்ணின் பேச்சைவிடப் பேசாமை பயங்கரமானது! பாரதியின் மௌனமும் அப்போது அப்படிப்பட்டதாகத்தான் இருந்தது. பூபதியிடம் ஒருவிதமாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து மெல்லக் கிளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தான் சத்தியமூர்த்தி. பகலில் மீதமிருந்த பரீட்சை விடைத்தாள்களைத் திருத்த முடியாமல் முக்கியமான நாலைந்து நண்பர்கள் அவனைத் தேடி வந்து விட்டார்கள். அவர்கள் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு போவதற்குள் மாலை நேரமாகி விட்டது. மாலையில் அவன் பூபதியை வழியனுப்ப விமான நிலையத்துக்குப் போக வேண்டியிருந்தது. ஜமீந்தார் சார்பில் கண்ணாயிரம் மட்டும் விமான நிலையத்துக்கு வழியனுப்ப வந்திருந்தார். பூபதிக்குப் பெரிய ரோஜாப்பூ மாலையைப் போட்டு வழியனுப்பினார் கண்ணாயிரம். புறப்படுவதற்கு முன்னும் பூபதி, தாம் திரும்பியவுடன் நடைபெற வேண்டிய ஸ்தாபகர் தின விழாவைப் பற்றியும், அதற்கு வருகிற மந்திரிக்குக் கொடுக்க வேண்டிய வரவேற்பைப் பற்றியுமே அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி மனத்திலோ முகத்திலோ மலர்ச்சியின்றிக் கேட்டுக் கொண்டிருந்தான். தந்தைக்குப் போடப்பட்ட மாலைகளைக் கையில் சுமந்து எங்கோ பார்த்தபடி நின்றிருந்தாள் பாரதி. நகரிலிருந்து வெகு தொலைவு தள்ளியிருந்தும் விமான நிலையத்துக்குப் பூபதியின் நண்பர்களும் பிரமுகர்களுமாகப் பலர் வழியனுப்ப வந்திருந்தார்கள். "நானும் அப்பா கூடப் போகலாம் என்றிருந்தேன். திடீரென்று காலையில் ஜமீந்தார் மாமா வேண்டாம் என்றார். 'டிக்கெட்'டை கான்சல் செய்து விட்டேன். அப்பா டில்லியிலிருந்து வருகிற வரை ஜமீந்தார் மாமாவுடன் மதுரையில் தான் இருக்கப் போகிறேன்" என்று பாரதி யாரிடமோ வந்திருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் சத்தியமூர்த்திக்கு அவள் தந்தையோடு டில்லிக்குப் போகவில்லை என்று தெரியும்.

உரிய வேளையில் பிரயாணிகளை விமானத்தில் ஏறிக் கொள்ளச் சொல்லி வேண்டுகிற அறிவிப்பும் ஒலித்தது. பூபதி எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு விமானப் படிக்கட்டை நோக்கி நடந்தார். "என்னம்மா? கடைசிப்படி ஏறுவதற்குள் மறுபடி 'நானும் டில்லிக்கு வருவேன்' என்று மாறிவிட மாட்டாயே; நிச்சயமாக நீ வரவில்லைதானே?" என்று இறுதியாக மகளிடம் வேடிக்கையாகக் கேட்டுவிட்டு நடந்தார் அவர்.

அத்தியாயம் - 41

தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களை விட பெரிய நாஸ்திகர்கள் மனிதப் பண்பிலும் ஒழுக்கத்திலும் நம்பிக்கை இல்லாதவர்கள் தான்.

பூபதி எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லிவிட்டுப் போயிருந்தும் விமான நிலையத்திலிருந்து திரும்பும் போது சத்தியமூர்த்தி கண்ணாயிரத்தோடு அவர் கொண்டு வந்திருந்த ஜமீந்தாரின் 'காடிலாக்' காரில் திரும்பவில்லை. சற்று முன் அதே விமான நிலையத்தின் கூட்டத்தில் வழியனுப்ப வந்திருந்தவர்களோடு நின்று கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் பலர் நடுவே அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பது போல், யாரிடமோ பேசுகிற பாவனையில் அவனைத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார் கண்ணாயிரம்.

"அதுலே பாருங்க... எவ்வளவுதான் சலுகை கொடுத்துப் பெருந்தன்மையா நடத்தினாலும் இந்தத் தமிழ் வாத்தியார் பசங்க கெட்ட அயோக்கியனுகளாயிருக்காங்க... ஒருத்தனுக்காவது தெய்வ பக்தி இருக்கிறதில்லை... நல்லெண்ணமும் கிடையாது. படிக்கிற பயல்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுகிறார்கள்" என்று சத்தியமூர்த்தியின் காதில் கேட்கிறாற் போலவே இரைந்து சொல்லியிருந்தார் கண்ணாயிரம். பூபதி அப்போது வேறு யாரோ தம்மை வழியனுப்ப வந்திருந்த நாலைந்து பேரோடு பேசிக் கொண்டிருந்தார். பூபதியை வழி அனுப்ப வந்திருந்த சத்தியமூர்த்திக்குக் கண்ணாயிரத்தின் இந்த உளறலைக் கேட்டு மனம் குமுறியது. குமரப்பன் அப்போது அங்கே இருந்திருந்தால் "ஷட் அப் மிஸ்டர் கண்ணாயிரம்! யூ டோண்ட் டிஸர்வ் டூ ஸ்பீக் எபௌட் ஸச் ஸேக்ரேட் திங்ஸ்..." என்று கண்ணாயிரத்தின் மேல் புலியாய்ப் பாய்ந்து அவரைக் குதறியிருப்பான். எதிர்த்து வாதாடுவதற்குக் கூடத் தகுதியில்லாதவரிடம் விவாதித்துப் பயனில்லை என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் சத்தியமூர்த்தி.

கண்ணாயிரமும் அவனிடம் நேருக்கு நேர் எதிர்த்துப் பேசத் தைரியமில்லாத கோழையாக யாரிடமோ பேசுகிறாற் போலத்தான் பேசித் தாக்கியிருந்தார். இந்த உலகத்தில் தெய்வ பக்தியையும் நல்லெண்ணத்தையும் கட்டிக் காப்பாற்றுவதற்குத் தாம் ஒருவரே பொறுப்பேற்றுக் கொண்டு விட்டிருப்பது போல் கண்ணாயிரம் பேசியது சத்தியமூர்த்திக்குப் பிடிக்கவில்லை. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களைவிடப் பெரிய நாஸ்திகர்கள் மனிதப் பண்பிலும், ஒழுக்கத்திலும் நம்பிக்கை இல்லாதவர்கள்தான். மனிதப் பண்பையும் சகலவிதமான ஒழுக்க நேர்மைகளையும் நம்பாமல் தெய்வத்தை மட்டும் நம்புவதாகச் சொல்லித் தற்காப்புச் செய்து கொள்கிற போலிப் பக்தியால் உலகத்துக்கு நியாயமான பயன் ஒன்றுமில்லை. ஆனால் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் இப்படிப்பட்ட போலிப் பக்தியினாலேயே இந்த உலகில் தங்களைப் பெரிய மனிதர்களாக நிரூபித்துக் கொள்ள முடிந்தது.

கண்ணாயிரத்தின் கார் புறப்பட்டுச் சென்ற பின் விமான நிலைய எல்லையை விட்டு வெளியே நடந்தபோது இவ்வளவு சிந்தனைகளும் மனத்தில் அலைபாயச் சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. விமான நிலையத்துக்கு வரும்போது பூபதியும் அவர் மகள் பாரதியும் உடன் வரக் கண்ணாயிரம் ஓட்டிக் கொண்டு வந்த அதே காரை விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்லும் போது கண்ணாயிரம் உடன் வரப் பாரதி ஓட்டிக் கொண்டு சென்றதையும் சத்தியமூர்த்தி கவனித்தான். 'பெரிய மனிதர்களில்' பெரும்பாலோர் தங்களோடு ஒத்த அளவு அல்லது அதிக அளவு 'ஸ்டேட்ஸ்' உள்ளவர்களிடம் என்னென்ன குணக்குறைவுகள் இருந்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாதது போல் மன்னித்துவிட்டுப் பழகுவதும், அதே சமயத்தில் தங்களோடு ஒத்த அளவு 'ஸ்டேட்ஸ்' இல்லாதவர்களிடம் மிக மிகச் சிறந்த குணநலன்கள் இருந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமலே அலட்சியமாக வாழ்ந்து கொண்டிருப்பதைப் பற்றி அவன் பலமுறை மனம் கொதித்துச் சிந்தித்திருக்கிறான்.

அவன் சந்தித்த பெரிய மனிதர்களில் பூபதி ஒரு விதிவிலக்காக இருந்தார். குணநலன்கள் யாரிடமிருந்தாலும் பாராட்டுகிற அவரது பெருந்தன்மையை அவன் விரும்பினான். 'ஷி வாக்ஸ் இன் ப்யூட்டி' என்ற ஆங்கில கவிதையை அவன் வகுப்பில் நடத்திய தினத்தன்று அவனுக்கே தெரியாமல் வகுப்புக்கு வெளியே நின்று கடைசி வரை கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, வகுப்பு முடிந்து அவன் வெளியே வந்ததும் மனப்பூர்வமாகப் பாராட்டினார் அவர். ஆனால் அவரிடமும் ஜமீந்தார், கண்ணாயிரம் போன்றவர்களை மன்னித்துப் புகழ்ந்து மதிக்கிற குணம் இருக்கிறது என்பதை நேற்றும் இன்றும் நடந்திருந்த நிகழ்ச்சிகளால் சத்தியமூர்த்தி புரிந்து கொண்டிருந்தான். நல்லவர்களைப் புகழாவிட்டாலும் பரவாயில்லை. அப்படிப் புகழாதவர்களை மன்னிக்கலாம். கெட்டவர்களை அநாவசியமாகத் தூக்கி வைத்து மதித்துப் புகழ்கிறவர்களை மன்னிக்கவே முடியாதென்று தோன்றியது.

மதுரையிலிருந்து விமான நிலையத்தை ஒட்டிச் செல்லும் பிரதான சாலை அருப்புக்கோட்டைக்குப் போவது. சத்தியமூர்த்தி விமான நிலைய எல்லைக்குள்ளிருந்து இந்தப் பிரதான சாலைக்கு வந்ததும் அருப்புக்கோட்டையிலிருந்து மதுரைக்கு திரும்புகிற வெளியூர் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கையை நீட்டி அந்தப் பஸ்ஸில் இடம் பிடித்து நகருக்குள் வந்து சேர்ந்தான் அவன். எதற்கும் கலங்காத அவன் மனம் காரணமின்றியோ அல்லது இன்னதென்று நிர்ணயித்துச் சொல்ல முடியாத பல காரணங்களாலோ குழம்பியிருந்தது. நகருக்குள் நுழைந்து பஸ் நிலையத்துக்குப் போவதற்கு முன்பாகத் தெற்கு வெளி வீதியிலேயே இறங்கிப் பாண்டிய வேளாளர் தெரு வழியே நடந்தான் அவன். பாண்டிய வேளாளர் தெருவும் பெருமாள் கோவில் தெருவும் சந்திக்கிற இடத்தில் கூடலழகப் பெருமாள் கோவில் தேர் தகரக் கூடாரமிட்டு மூடப்பட்டு நின்று கொண்டிருந்தது. தேர் ஓடாத காலங்களில் நிலையில் நிற்கும் போது மூன்று புறமும் தகர அடைப்புக்களின் மேல் சினிமா விளம்பரச் சுவரொட்டிகளும், மல்யுத்த விளம்பரங்களும் ஒட்டப்பட்டிருப்பது அந்த இடத்து மரபு. நடந்து வந்து கொண்டிருந்த சத்தியமூர்த்தி தற்செயலாக நிமிர்ந்து பார்த்தபோது தேர் அடைப்பின் மேல் தன்னுடைய கவனத்தைக் கவரக் கூடிய விளம்பரம் ஒன்றைக் கண்டான். மதுரை நகரப் பெருமக்கள் மேன்மை தங்கிய மஞ்சள்பட்டி ஜமீந்தாருக்கு ஐம்பதாண்டுகள் நிறைந்து விட்டதற்காகப் பொன்விழாக் கொண்டாடிக் கௌரவிக்க விரும்புவதை அறிவிக்கும் விளம்பரம் அங்கே ஒட்டப்பட்டிருந்தது. கையில் பசையுள்ள பெரும் புள்ளிகள் சிலர் தாங்களே பணத்தைக் கொடுத்து இப்படிப்பட்ட விழாக்களுக்கு ஏற்பாடு செய்து கொள்வதாகச் சத்தியமூர்த்தி கேள்விப்பட்டிருந்தான். குடிப் பழக்கத்தைப் போலவோ சூதாட்டத்தைப் போலவோ புகழும் சிலருக்குத் தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறதென்பது பொது வாழ்வைக் கூர்ந்து கவனித்ததிலிருந்து அவன் தெரிந்து கொண்ட உண்மை. இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பூபதி டில்லியிலிருந்து மதுரைக்குத் திரும்புகிற தினத்தன்று அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கையில் பசையுள்ளவர்கள் புகழையும், பெருமையையும் கூட மிகவும் மலிவான விலைக்கு வாங்க முடிகிறதென்று நினைத்தான் அவன். மனம் ஒரு நிலை கொள்ளாமல் ஒரு நோக்கமில்லாமல் எங்காவது சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் போல் தவித்தது. சத்தியமூர்த்தி மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போனான். கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு வடக்குக் கோபுர வாசல் வரிசையாக அவன் வெளியேறிய போது இரவு ஏழு மணிக்கு மேலிருக்கும். அப்புறம் உடனே வீட்டுக்குப் போக வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவில்லை. வடக்குக் கோபுர வாசலில் வெற்றிலை பாக்குக் கடையை முற்றுகையிட்டிருந்த வித்வான் பொன்னுசாமி பிள்ளைத் தெருப் பாட்டு வாத்தியார் சத்தியமூர்த்தியைப் பார்த்து விட்டார்.

"அடடே! ஐயாவைப் பார்த்து மாதக் கணக்காகி விட்டதே! மல்லிகைப் பந்தலிலே காலேஜ் வாத்தியாராயிருப்பதாகச் சொன்னாங்க... ரொம்ப சந்தோஷம்... எங்கேயாவது நல்லாயிருக்க வேண்டியதுதானே?" என்று பேசிக் கொண்டே அவனோடு கூட நடந்து விட்டார் பாட்டு வாத்தியார். நல்ல இசை வேளாளர் பரம்பரையில் வந்தவராகிய இந்தப் பாட்டு வாத்தியார் எப்போது சந்தித்தாலும் அதிகமாக வழவழவென்று பேசுவார் என்ற ஒன்றைத் தவிர சத்தியமூர்த்திக்கு இவரை மிகவும் பிடிக்கும். அரை மணி நேரம் சந்தித்துப் பேசினால் கூடத் தஞ்சாவூர்க் கோவிந்த தீட்சிதர் எழுதிய 'சங்கீத சுதாநிதி' யிலிருந்து வித்வான் பொன்னுசாமிப் பிள்ளை இயற்றிய 'பூர்வீக சங்கீத உண்மை' என்ற அபூர்வ நூல் வரை எல்லாவற்றைப் பற்றியும் சொல்லிவிட வேண்டுமென்று சுறுசுறுப்பாகத் தொடங்கிவிடுவார். ஒவ்வொரு கலையிலும் அதிர்ஷ்டம் எட்டிப் பார்க்காத துரதிர்ஷ்டம் பிடித்த மேதைகள் இப்படிப் பலர் இருப்பார்கள். இந்தப் பாட்டு வாத்தியாரும் அத்தகைய பலரில் ஒருவராகத்தான் இருந்தார். இவரைப் போல் அவ்வளவு ஞானமில்லாதவர்கள் இவரிடமே அரைகுறையாகப் படித்துவிட்டுப் போனவர்கள் எல்லாம் 'சீனியர்' வித்வான்களாகிக் காரை விட்டுக் கீழிறங்காமல் சுற்றிக் கொண்டிருக்கிற இதே மோசக்கார உலகத்தில் கடந்த இருபது வருடங்களாக முன்னேற முடியாமல் இந்தத் தெரு முனையில் உள்ள வெற்றிலை பாக்குக் கடையிலே இவர் தயங்கி நின்று விட்டார். அதிர்ஷ்டத்துக்கும் இவருக்கு இடையேயுள்ள தூரம் அல்லது இவருக்கும் அதிர்ஷ்டத்துக்கும் இடையே உள்ள பகைமை அதிகமாகிவிட்டது. கோயிலிலிருந்து வெளியேறி வந்திருந்த சத்தியமூர்த்தியும் இரண்டு நாட்களாகத் தன் மனத்தை உறுத்திக் கொண்டிருந்த ஒரு சந்தேகத்தை இந்தப் பாட்டு வாத்தியாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிவு செய்தான். பாட்டு வாத்தியாருடன் பேசிக் கொண்டே நடந்த சத்தியமூர்த்தி மேற்காவணி மூல வீதி வழியாக டவுன் ஹால் ரோடுக்கு வந்து அங்கு ஒரு ஹோட்டலில் நுழைந்து வாத்தியாரும் தானுமாகக் காப்பி குடித்த பின் காற்றாட உலாவிக் கொண்டே பேசுவதற்காக இரயில்வே மேற்பாலத்துக்குச் சென்றான். வாத்தியாரும் 'தோடியை' இராஜரத்தினம் பிள்ளை கையாண்ட லாவகத்தை வியந்தபடிக் கூறிக் கொண்டே உடன் வந்தார்.

ஒரு பக்கம் இரயில் நிலையமும் மற்றொரு பக்கம் பஸ் நிலையமுமாக நடுவே அமைந்த இந்தப் பாலத்தில் நின்று இருளும் ஒளியும் கலக்கிற சாயங்கால வேளையில் நகரத்தையும் சுற்றுப்புறங்களையும் பார்ப்பது சுவை மிகுந்ததோர் அனுபவமாயிருப்பதைச் சத்தியமூர்த்தி பலமுறை உணர்ந்திருக்கிறான்.

இந்த இரயில்வே மேற்பாலத்தில் நின்று மதுரையையும் நகரின் சுற்றுப்புறங்களையும், பார்க்கும் பல சமயங்களில் கல்லூரி நாட்களில் 'மைனர் போயம்'ஸில் படித்திருந்த 'வில்லியம் வேட்ஸ் வொர்த்'தின் கவிதை ஒன்று அவனுக்கு ஞாபகம் வருவதுண்டு. அந்தக் கவிதையில் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்திலிருந்து இலண்டன் நகரம் தெரிகிற கோலத்தை உள்ளமுருக சொல்லியிருக்கிறான் 'வேட்ஸ் வொர்த்'. 'அபான் வெஸ்ட் மின்ஸ்டர் பிர்ட்ஜ்' என்ற அந்தக் கவிதை, 'எர்த் ஹேஸ் நாட் எனிதிங் டு ஷோ மோர் ஃபேர்' என்று கம்பீரமாகத் தொடங்கும். 'உலகத்தில் இதை விட அழகான காட்சி வேறொன்று இருக்க முடியாது. இந்த இடத்தில் நின்று இங்கிருந்து தெரியும் காட்சிகளை ஆர அமர இரசிக்கத் தெரியாமல் வேகமாக நடந்து போகிறவர்கள் எவ்வளவு மந்தமானவர்களாயிருக்க வேண்டும்?' என்று வெஸ்ட் மின்ஸ்டர் பாலத்திலிருந்து வில்லியம் வேட்ஸ் வொர்த் என்னும் ஆங்கிலச் சொல்லழகன் மனம் நிறைந்த மகிழ்ச்சியினால் ஆச்சரியப்பட்டுக் கூவினாற் போல் மதுரையின் இந்த இரயில்வே மேற்பாலத்தில் நின்று கொண்டு கோபுரங்களும், கட்டிடங்களும், மரங்களின் பசுமையுமாகத் தெரிகிற நகரின் மொத்தமான தோற்றத்தைப் பார்த்து, மகிழ்ந்து வியந்து கூற வேண்டுமென்று பலமுறை எண்ணியிருக்கிறான் சத்தியமூர்த்தி. இன்றோ அவனும் பாட்டு வாத்தியாரும் இந்தப் பாலத்தின் மேல் வந்து நிற்கும் போது இதன் சாயங்கால அழகையும் காட்சிகளையும் பார்க்க முடியாமல் நன்றாக இருட்டிப் போய்விட்டது. கம்பம், தேனீ என்று வெளியூர்களிலிருந்து நகருக்குத் திரும்புகிற பஸ்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்துப் பாலத்தின் மேல் வந்து கொண்டிருந்தன. கீழே இரயில்வே லயனில் 'ஷண்டிங்' என்ஜின் ஒன்று இங்கும் அங்குமாகப் புகை கக்கியபடி 'விஸில்' ஓசையோடு போய் வந்து கொண்டிருந்தது.

பாட்டு வாத்தியாரும் சத்தியமூர்த்தியும் பாலத்தின் இரும்புக் கிராதியில் சாய்ந்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள்.

காலையிலிருந்து - இன்னும் நன்றாகச் சொல்லப் போனால் முந்திய தினம் குமரப்பன் இரயிலேறிப் போனதிலிருந்து தன் மனத்தை உறுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை - மோகினியின் தெருவுக்குப் பக்கத்து தெருக்காரராகிய அந்தப் பாட்டு வாத்தியாரிடம் அந்தரங்கமாக விசாரித்தான் அவன்.

'குடியிருக்கிற வீடு வாசல் எல்லாம் ஜமீந்தார் செலவிலே அனுபவிக்கிறவங்க வேறே எப்படி இருக்க முடியும்? அவங்க பரம்பரையா ஜமீன் குடும்பத்துக்குப் பழக்கம்' என்று முதல் நாள் தன் தந்தை மோகினியைப் பற்றித் தன்னிடம் கூறியிருந்ததையும், குமரப்பன் இரயில் நிலையத்தில் எச்சரித்ததையும் அதற்குத் தொடர்பாக இன்று காலை ஆஸ்பத்திரியில் வஸந்தசேனை - சாருதத்தன் கதையைச் சொல்லிக் கொண்டிருந்த போது ஜமீந்தாரின் கார் வந்து விட்ட ஓசையைக் கேட்டுத் தன் எதிரிலேயே மோகினி பயந்து மிரண்டதையும் நினைத்துச் சத்தியமூர்த்தியே மனம் குழம்பிப் போயிருந்தான். ஜமீந்தாரையும் கண்ணாயிரத்தையும் அவள் வெறுக்கிறாள் என்பதற்காக அவளைப் பாராட்டிய அதே சத்தியமூர்த்தியால் அவர்களுக்காக அவள் பயப்படவும் செய்கிறாள் என்பதைச் சிறிது கூடப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஜமீந்தாருக்கு அவள் பயப்படுகிற பயத்துக்கு என்ன அர்த்தம் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் தான் மனக் குழப்பம் அடைந்திருந்தான் அவன். பழைய தலைமுறை மனிதராகிய இந்தப் பாட்டு வாத்தியாரை விசாரித்தால் ஏதாவது சில விவரங்கள் தெரியலாமென்றுதான் இப்போது அதைப் பற்றி அவன் அவரை விசாரித்தான். சங்கீத விநாயகர் கோயில் தெருவில் மோகினி குடியிருக்கிற வீடு ஜமீன் வீடுதான் என்ற உண்மையைப் பாட்டு வாத்தியார் அழுத்தமாக வற்புறுத்திச் சொன்னார். மோகினியின் தாயான முத்தழகம்மாளைப் பற்றியும் அவர் அவ்வளவாகப் பெருமைப்படுத்திச் சொல்லவில்லை. அதே சமயத்தில் மோகினியைப் பற்றி மட்டும் மிக உயர்வாகச் சொன்னார். கவிஞர் ஒருவரைக் காதலித்து அந்தக் காதல் நிறைவேறாததனால் சிறிய வயதிலேயே நிராசையோடு இறந்து போன மோகினியின் பெரிய பாட்டி 'மதுரவல்லி'யைப் பற்றியும் பெருமையாகச் சொன்னார். இந்தப் பெரிய பாட்டியைப் பற்றி மோகினியே தன்னிடம் ஒருநாள் சிறப்பித்துச் சொல்லியிருந்தது இப்போது சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தது.

"இந்தப் பெண் மோகினி சின்ன வயதிலிருந்தே நெருப்பாய் வளர்ந்தவள் ஐயா! யாரையும் பக்கத்திலே நெருங்க விட்டதில்லை. அவள் முகத்தைப் பார்த்து மகாலட்சுமி மாதிரி இருக்கிறதிலிருந்தே இதை நீங்கள் தெரிஞ்சுக்கலாமே! இந்த விநாடி வரை நடத்தையிலே அப்பழுக்குச் சொல்ல முடியாது. இந்தப் பெண்ணை எவனாவது தாறுமாறாகப் பேசினால் அவன் நாக்கு அழுகிப் போய்விடும்... ஆனால் குழந்தைப் பொண்ணு... கள்ளங்கபடு தெரியாத மனசு... அம்மா இருக்கிறப்பவே இந்தப் பெண் அவளை எதிர்த்துச் சண்டை போடும்... இப்போ அந்த அம்மாவும் கண்ணை மூடிப்பிட்டா. இனிமேல் இந்த ஜமீந்தாரும், கண்ணாயிரமும் என்ன பாடுபடுத்தி வைக்கப் போறாங்களோ?... இவ ரொம்ப அழகாயிருக்கிறதினாலேயும், நாட்டியத்திலே பேர் வாங்கியிருக்கிறதினாலேயும், ஜமீந்தார் விடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறானென்று கேள்வி...! பாவம் மோகினி! இந்த மாதிரி வீட்டிலே பொறக்கற பொண்ணே இல்லை. எங்காவது நல்ல குடும்பத்திலே வீட்டுக்கு இலட்சுமியாய்ப் பிறந்திருக்க வேண்டிய பெண். இங்கே பிறந்து கஷ்டப்படணுமின்னு தலையிலே எழுதியிருக்கிறான்..." என்று மோகினியைப் பற்றிச் சொல்லி அலுத்துக் கொண்டார் பாட்டு வாத்தியார். இதைக் கேட்டுச் சத்தியமூர்த்தி நெட்டுயிர்த்தான். தனக்கும், மோகினிக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் பொதுவாக விசாரிப்பது போல்தான் இந்த விவரங்களைப் பாட்டு வாத்தியாரிடம் விசாரித்திருந்தான் அவன். எல்லாவற்றையும் சொல்லி முடித்த பின் பாட்டு வாத்தியாரும் எதற்காகவோ பயந்து நடுங்கியதைக் கண்டுதான் சத்தியமூர்த்தி ஆச்சரியப்பட்டான்.

"நமக்கேன் ஐயா இந்த வம்பு? பகலில் பக்கம் பார்த்துப் பேசு... இராத்திரி அதுவும் பேசாதே என்று சொல்லியிருக்கிறாற் போல இந்த இடத்திலே இருட்டுக்குக் கூடக் காது கேட்கும். எவனாவது ஜமீந்தாருக்கோ கண்ணாயிரத்துக்கோ வேண்டிய ஆட்கள் கேட்டுக் கொண்டிருந்து போய்ச் சொல்லி விட்டால் தலைக்கே ஆபத்து."

"வாத்தியாரே, உங்களைப் போன்றவர்கள் இப்படிப் பயந்து பயந்து தான் இந்த உலகத்தைப் பாழாக்கி விட்டீர்கள்" என்றான் சத்தியமூர்த்தி.

"நான் இருக்கிற இருப்புக்குப் பயப்படாமல் வேறென்ன செய்ய முடியும் ஐயா?" என்று கேட்டுவிட்டு வறட்சியாகச் சிரித்தார் பாட்டு வாத்தியார். இந்த வாத்தியாரின் பயத்தைப் போலவே மோகினியின் பயமும் காரணமற்றதாகத்தான் தோன்றியது அவனுக்கு. 'அவர்களெல்லாம் இப்படிப் பயந்து கொண்டேயிருந்தால், மஞ்சள்பட்டி ஜமீந்தார் இன்னும் எட்டுக் கலரில் போஸ்டர் அடித்து ஒட்டி விளம்பரம் பண்ணித் தமக்கு ஏன் பொன்விழாக் கொண்டாடிக் கொள்ள மாட்டார்?' என்று எண்ணி மனம் கொதித்து வருந்தினான் அவன். பாட்டு வாத்தியாரும் அவனும் பாலத்தை விட்டு இறங்கி வீடு திரும்பும் போது இரவு ஒன்பதரை மணிக்கு மேலே ஆகியிருந்தது. மறுநாள் சரசுவதி பூசை. அதற்கு அடுத்த நாள் விஜயதசமி. 'இன்னும் சிறிது நேரத்தில் சென்னையிலிருந்து இன்றிரவு விமானத்தில் பூபதி டில்லிக்குப் புறப்பட்டு விடுவார்' என்பது சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தது. அவர் மதுரையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு தன்னிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தபடி விடுமுறை முடிவதற்கு ஓரிரு தினங்கள் முன்பாகவே மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிப் போய் ஸ்தாபகர் தின விழாவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அவன். நாளைக்கும் நாளன்றைக்கும் மதுரையில் இருந்துவிட்டு அடுத்த நாள் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட வேண்டியதுதான் என்றும் தனக்குள் தீர்மானித்துக் கொண்டிருந்தான். அன்றிரவு அவன் நெடுநேரம் கண்விழித்துக் கல்லூரிப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்த வேண்டியிருந்தது.

"நாள் தவறாமல் இப்படிக் கண் விழிக்கிறாயே! உடம்பு என்னத்துக்கு ஆகும்? பொழுதோடு படுத்துக் கொண்டு காலையில் எழுந்து திருத்தக் கூடாதோ?" என்று பன்னிரண்டு மணிக்கு அம்மா வந்து அவனைக் கோபித்துக் கடிந்து கொண்டிருந்தாள். மறுநாள் காலையிலும், அவனால் மோகினியைத் தேடி ஆஸ்பத்திரிக்குப் போகாமல் இருக்க முடியவில்லை. தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியாத அத்தனை பெரிய ஆவலை அவள் அவனிடம் உண்டாக்கியிருந்தாள். முதல் நாள் தான் ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தபோது கூந்தலுக்குப் பூவில்லாமல் அவள் வெறுங் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டிருந்த நிகழ்ச்சி நினைவு வரவே ஞாபகமாக இன்று கீழமாசி வீதிப் பூக்கடைக்குப் போய் நல்ல மல்லிகைப் பூவாக நாலு முழம் வாங்கிக் கொண்ட பின் புறப்பட்டிருந்தான் சத்தியமூர்த்தி. நேற்றுப் போல் மோகினியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கண்ணாயிரம், பாரதி - இவர்களெல்லாம் 'இன்றைக்கும் ஆஸ்பத்திரிக்குத் தேடிக் கொண்டு வந்தால் என்ன செய்வது?' என்று சிந்தித்து அப்படி அவர்கள் வந்தாலும் தான் பாதியிலேயே அங்கிருந்து புறப்படுவதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டிருந்தான் அவன். தான் கொண்டு போகிற பூவை மோகினியின் கூந்தலில் தானே சூட்டிவிட்டு அவளிடம் என்னென்ன பேச வேண்டும், எப்படி நயமாகப் பேச வேண்டும் என்றெல்லாம் நினைத்தபடியே போய்க் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி.

"தன் கணவன் சகல சௌபாக்கியங்களோடும் நன்றாயிருக்கிறான் என்பதை அவனுடைய கிருகலட்சுமியான மனைவி பூவும், மஞ்சளும், குங்குமமுமாகப் பொலிந்து தோன்றுவதன் மூலமாக உலகுக்கு நிரூபிக்கிறாள்! தன்னுடைய வாழ்வில் மங்கலங்கள் நிரம்பியிருக்கின்றன என்பதை உலகத்துக்கு மிக நாகரிகமாகச் சொல்லும் சின்னங்களாக ஒரு குடும்பப் பெண்ணுக்குப் பூவும் மஞ்சளும், குங்குமமும் இந்த நாட்டில் வாய்த்திருக்கின்றன..." என்று பூவைச் சூட்டிவிட்டு அவளிடம் சொல்ல வேண்டும் என்பதாகத் தோன்றியது. அதற்கு அவன் தன்னிடம் என்ன பதில் சொல்வாள் என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். "அப்படியானால் உங்களை நினைத்து நீங்கள் எனக்குக் கணவராகக் கிடைத்திருக்கிற சௌபாக்கியத்தை ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக நான் இனிமேல் நாள் தவறாமல் பூச்சூடி மையிட்டுத் திலகமணிந்து மங்கலமாக விளங்குவேன்" என்று அவள் புன்னகையோடு மறுமொழி கூறுவாள் என்றும் கற்பனை செய்ய தோன்றியது அவனுக்கு. ஆனால் ஆஸ்பத்திரி எல்லையை அடைகிறவரை தான் இந்தக் கற்பனையெல்லாம் அவன் மனத்தில் நிகழ்ந்தது. ஆஸ்பத்திரிக்குள் போய் ஸ்பெஷல் வார்டில் நுழைந்த போதோ அங்கு மோகினியே இல்லையென்ற உண்மை மிகப் பெரிய ஏமாற்றமாக அவனை எதிர்கொண்டது.

அத்தியாயம் - 42

செய்கிற பாவங்களுக்காகச் சில சமயங்களில் சிலர் மன்னிக்கப்படுகிறார்கள். செய்யாத புண்ணியங்களுக்காகவும் சில வேலைகளில் சிலர் மன்னிக்கப்படுகிறார்கள். சிலர் எதற்காகவும் எப்பொழுதுமே நிச்சயமாக மன்னிக்கப்படுவதில்லை.

சத்தியமூர்த்தி திகைத்துப் போனான். மோகினியின் ஸ்பெஷல் வார்டில் இருந்த அந்த நர்ஸ் எங்காவது தென்பட்டால் அவளையாவது விசாரிக்கலாமென்று பார்த்தால் அவளையும் அங்கே காணமுடியவில்லை. வேறு வார்டுக்காவது, வேறு அறைக்காவது அவள் மாறியிருக்கலாமோ என்ற சந்தேகமும் அப்போது அவனுக்கு ஏற்பட்டது. எதற்கும் பக்கத்தில் யாரையாவது விசாரிக்கலாம் என்று அங்கே விசாரித்ததில் மோகினியை 'டிஸ்சார்ஜ்' செய்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டதாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஏமாற்றத்தோடு அந்தப் பூவை - அவளுக்காக வாங்கிய மல்லிகைப் பூவை எப்படியும் அவளிடம் சேர்த்து விடவேண்டுமென்ற ஆவலோடு சங்கீத விநாயகர் கோயில் தெருவுக்குத் திரும்பிப் போனான் அவன். அங்கேயும் அவளுடைய வீடு பூட்டியிருந்தது. பூட்டிக் கிடந்த வீட்டைப் பார்த்து அவன் அப்படியே மலைத்துப் போய் நின்று விட்டான். பக்கத்து விட்டுப் பையனை விசாரித்ததில் காலையில் ஜமீந்தாருடைய கார் வந்து அந்த வீட்டில் இருந்த தம்புரா, வீணை முதலிய வாத்தியங்களையெல்லாம் ஒழித்து எடுத்துக் கொண்டு போனது மட்டும் தனக்குத் தெரியும் என்று பையன் சொன்னான். சத்தியமூர்த்தி உடலும், மனமும் சோர்ந்து வீடு திரும்பினான். அப்போது அவன் இதயத்தைப் போலவே, கையில் அவளுக்காகக் கொண்டு போயிருந்த அந்த மல்லிகைப் பூவும் வாடியிருந்தது.

'அந்த வீட்டில் இருந்த மங்கலமான வாத்தியங்களையெல்லாம் அங்கிருந்து ஒழித்து எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்! ஆம்! அவனுக்கு - அவன் வாசிப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட பரிசுத்தமான வாத்தியத்தையும் சேர்த்துத் தான்!' நினைக்கவும் வேதனை தருவதாக இருந்தது அந்த உண்மை! 'ஹெர் லைஃப் இஸ் எ ரிவால்விங் ட்ரீம்' - (அவளுடைய வாழ்க்கை மேலும் மேலும் சுழன்று வளரும் ஒரு கனவாகிறது) என்று கவிக்குயில் சரோஜினி நாயுடு பாடியிருக்கிற ஆங்கிலப் பாடல் வரி ஒன்றை நினைவு கூர்ந்தான் சத்தியமூர்த்தி. 'ஸாரோ லுக்ஸ் இன்ட்டு ஹெர் ஃபேஸ்' (சொல்லிலடங்காத சோகங்கள் அவள் முகத்தில் தென்படுகின்றன) என்று அதே பாடலில் வருகிற இன்னொரு வாக்கியத்தையும் மோகினியைப் பற்றி நினைக்கும் போது அவனால் சேர்த்து நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவனுடைய எல்லாவிதமான அவநம்பிக்கைகளுக்கும் நடுவே அவள் மட்டும் ஒரு நிச்சயமாகியிருந்தாள். ஆனால், அவன் வாழ்கிற சூழ்நிலையோ எந்த விதத்திலும் நிச்சயமில்லாமல் இருந்தது. மனம் ஒப்பி - மறுக்காமல் - தவிர்க்காமல் அவள் ஜமீந்தாருடைய வீட்டுக்குப் போய் விட்டாள் - என்பதை நினைக்கவும் - பொறுத்துக் கொள்ளவும், நம்பவும் முடியாமல் தவித்தான் அவன். அவள் மேல் கோபப்படுவதா - பரிதாபப் படுவதா - என்று நினைத்து நெடு நேரம் ஒரு முடிவும் கிடைக்காமல் அவன் மனம் குழம்பினான். அவள் மேல் எந்தக் காரணத்துக்காகக் கோபித்துக் கொள்ளத் தொடங்கினாலும் கூட அந்தக் கோபம் தானாகவே தளர்ந்து நெகிழ்ந்து வெறும் பரிதாபத்திலோ, அநுதாபத்திலோ போய் முடிந்தது.

'அவள் என்ன செய்வாள்? பாவம்! பேதைப் பெண். ஜமீந்தாரையும், கண்ணாயிரத்தையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் என்னைப் போலவோ, குமரப்பனைப் போலவோ அவர்களை வெளிப்படையாக வெறுக்கவோ பகைத்துக் கொள்ளவோ அவளுக்கு வலிமை இல்லை. அது அவளுடைய குற்றமாகாது' என்று நினைத்து அவன் மன அமைதி பெற முயன்றாலும் முடியவில்லை. 'பூபதியைச் சந்திப்பதற்காக மஞ்சள்பட்டி ஜமீந்தாருடைய மாளிகைக்குச் சென்ற போதே அங்கு கால்கள் பொருந்தாமல் நின்றேன் நான். பூபதி எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் 'வைகைக்கரை மாளிகை' - என்ற பொருளில் 'ரிவர் காசில்' - கோச்சடை, மதுரை என்று மட்டுமே மதுரையில் தாம் தங்கப் போகிற இடத்து முகவரி கொடுத்திருந்தார். அதுதான் ஜமீன் மாளிகை என்று தெரிந்திருந்தால் ஒரு வேளை அங்கு நான் போயே இருக்க மாட்டேன். இப்போது மோகினியைச் சந்திப்பதற்காக இன்னொரு முறையும் நான் அங்கே எப்படிப் போவேன்?' என்று தயங்கியது அவன் உள்ளம்.

முதல் நாள் பகல் தன்னைத் தேடி வந்திருந்த நண்பர்களில் ஒருவன் இன்று பகலில் உணவிற்குத் தன்னை அவன் வீட்டுக்கு அழைத்துவிட்டுப் போயிருந்தது இப்போது சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தது. நண்பனுடைய வீட்டுக்குச் சாப்பிடப் போவதா - வேண்டாமா என்று நீண்ட நேரம் மனம் குழம்பி ஒரு முடிவுக்கும் வராமல் இருந்த பின் கடைசியாகப் போவது என்று முடிவு செய்தான். அந்த நண்பனுடைய வீடு நன்மை தருவார் கோயில் தெருவில் இருந்தது. அங்கே போய்ப் பகல் உணவை முடித்துக் கொண்டு நண்பனோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்படியே கோச்சடைக்குப் போய் ஜமீந்தார் மாளிகையில் மோகினியைச் சந்திக்கலாம் என்று எண்ணிக்கொண்டு புறப்பட்டிருந்தான் சத்தியமூர்த்தி.

அந்த நண்பனுக்கு வானொலியில் திரைப்பட இசை கேட்கிறதென்றால் உயிர். பக்கத்தில் நான்கு வீடுகளுக்குக் கேட்கிற மாதிரி ஓசை வைத்து அவனும் அவனுடைய தங்கையுமாக வானொலி இசை வெள்ளத்தில் மெய்மறந்து மூழ்கியிருந்தபோது, சத்தியமூர்த்தி உள்ளே நுழைந்தான். எங்கே சத்தியமூர்த்தி சாப்பிட வராமல் ஏமாற்றி விடுவானோ என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கு அவனைப் பார்த்ததும் தான் நிம்மதி பிறந்தது.

"இன்றைக்கு மட்டும் உன்னுடைய கொள்கைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடு. நீ நம் வீட்டில் கண்டிப்பாக இன்று பாயசம் சாப்பிட்டாக வேண்டும் சத்தியம்! மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் சும்மா விடமாட்டேன். என்னுடைய பிறந்தநாள்" என்று நண்பன் வற்புறுத்திய போது, "இலை போடுவதற்கு முன்பே சொல்லி விடுகிறேன். நிச்சயமாக நான் பாயசம் சாப்பிட முடியாது" என்று மறுத்தான் சத்தியமூர்த்தி. ஒரு மணிக்கு மேல் இலை போட்டுப் பரிமாறிச் சத்தியமூர்த்தியும், நண்பனும், அவனுடைய தங்கையும் சாப்பிட உட்கார்ந்தார்கள். இலையில் உட்காருவதற்கு முன் வானொலியை இலங்கையிலிருந்து பகல் நேரத்துச் செய்தி கேட்பதற்காகத் திருச்சிக்கு மாற்றி விட்டு உட்கார்ந்தான் நண்பன்.

வானொலியில் பகல் நேரத்துச் செய்திகள் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்கள் சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள். பாதிச் சாப்பாட்டின் போது அவர்கள் கவனத்தை இழுத்து எதிர்பாராத அதிர்ச்சியளிப்பதாக அந்தத் துயரச் செய்தி வானொலியிலிருந்து ஒலித்தது.

"நேற்றிரவு சென்னையிலிருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் வைகவுண்ட் விமானம் நாகபுரியிலிருந்து டில்லிக்குச் செல்லும் போது இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. பதினைந்து பிரயாணிகளும், ஐந்து விமான ஊழியர்களும் இந்த விமான விபத்தில் மாண்டு போனார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் கேட்பது அகில இந்திய ரேடியோவின் செய்தி அறிக்கை."

திடீரென்று இருந்தாற் போலிருந்து இடி விழுந்த மாதிரி ஒலித்தது இந்தச் செய்தி.

நடுச்சாப்பாட்டில் வானொலிச் செய்தியைக் கேட்டுச் சத்தியமூர்த்தி அப்படியே அதிர்ந்து போய்ச் சிலையாய் அமர்ந்துவிட்டான். பூபதி மதுரையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட நேரம் சென்னையிலிருந்து டில்லிக்குப் புறப்படும் இரவு விமானத்தின் நேரம் எல்லாவற்றையும் கவனக்குறைவின்றி நன்றாக நினைவுபடுத்திக் கொண்டு சிந்தித்தும் அதே இரவு விமானத்தில் அவர் டில்லிக்குப் போகாமல் தவற விட்டிருக்க முடியும் என்பதற்கு ஒரு நிரூபணமும் கிடைக்கவில்லை. 'அந்த விமானத்தில் அவர் போகாமல் இருந்திருக்கக் கூடாதா' என்று அவன் இதயம் நினைத்து நினைத்துப் பரிதாபப்பட்டது. சிந்திக்கச் சிந்திக்க அந்த விமானத்திலேயே அவர் போய் இருக்கக்கூடும் என்பதற்குத்தான் அதிக நிரூபணங்கள் கிடைத்தனவே தவிர அவர் அதில் போகாமல் தவற விட்டிருக்கக் கூடும் என்பதற்கு ஒரு நிரூபணமும் கிடைக்கவில்லை. மேலே ஒன்றும் ஓடாமல் பாதிச் சாப்பாட்டிலேயே எழுந்து கைகழுவி விட்டான் அவன். என்ன நடந்திருக்கிறது என்பதை ஒரு சில கேள்விகளின் மூலமே நண்பனால் அப்போது சத்தியமூர்த்தியிடமிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. சத்தியமூர்த்திக்கோ வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு வேதனையோடு நெஞ்சம் பதறித் துடித்தது. 'மனித வாழ்க்கை எவ்வளவுக்குப் பாதுகாப்பில்லாததாகவும் அபாயங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது?' என்று எண்ணி எண்ணி நெக்குருகினான் அவன்.

விபத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக மேலமாசி வீதியிலிருந்த பெரிய ஓட்டல் ஒன்றில் நுழைந்து விமானத்துறை அலுவலகத்துக்கும் பத்திரிகை அலுவலகங்களுக்கும் டெலிபோன் செய்து விசாரித்தான் சத்தியமூர்த்தியின் நண்பன். சத்தியமூர்த்தியும் அப்போது உடன் இருந்தான். விபத்துக்கு ஆளானவர்களின் பெயர்ப் பட்டியலில் 'மல்லிகைப் பந்தல் இண்டஸ்ட்ரியலிஸ்ட் பூபதி' என்ற பெயரும் இருக்கிறது என்பதைத் தெளிவாகவும் வருத்தத்தோடும் விமானத்துறை அலுவலத்திலிருந்து அறிவித்தார்கள். மாலைப் பத்திரிகையில் எல்லா விவரங்களும் வெளிவந்துவிடும் என்று பத்திரிகை அலுவலகத்தில் தெரிவித்தார்கள். டெலிபோன் டைரக்டரியில் மஞ்சள்பட்டி ஜமீந்தாருடைய பங்களாவின் தொலைபேசி எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து விசாரிக்க எண்ணினான் சத்தியமூர்த்தி. ஆனால் அந்த முயற்சியும் பயன்படவில்லை. அந்த எண்ணில் யாருமே டெலிபோனை எடுக்கவே இல்லை. நீண்ட நேரமாக மணி அடித்துக் கொண்டேதான் இருந்தது. நேரில் அங்கேயே போய்விடலாம் என்ற தீர்மானத்துக்கு வந்தவனாகச் சத்தியமூர்த்தி டெலிபோனை வைத்துவிட்டான். அவன் மனம் ஒரு நிலை கொள்ளாமல் பரபரப்பு அடைந்திருந்தது.

"இந்த நூற்றாண்டின் கார் விபத்துக்களும், விமான விபத்துக்களும், இரயில் விபத்துக்களுமே முக்கால் பங்கு மனிதர்களைக் கொன்றுவிடும் போலிருக்கிறது சத்தியம்! ஏதோ விஜயதசமியன்று பத்மஸ்ரீ விருது வாங்குவதற்காக டில்லிக்குப் போகிறார் என்று உங்கள் கல்லூரி அதிபர் பூபதியைப் பற்றிப் பத்திரிகைகளில் எல்லாம் பிரமாதமாக வந்திருந்ததே? என்ன பரிதாபம்! இப்படி ஒரு பெருமையும் கிடைத்து, அதை அடைவதற்குள்ளேயே சாகிற மனிதன் எவ்வளவு பெரிய துர்பாக்கியமுள்ளவனாக இருக்க வேண்டும்" என்று நண்பன் வருத்தப்பட்டுக் கொண்டே உடன் வந்தான். நண்பனை அப்புறம் சந்திப்பதாகச் சொல்லி அவனுக்கு விடை கொடுத்து அனுப்பிய பின் ஒரு சைக்கிள் ரிக்ஷா வாடகைக்குப் பேசிக் கொண்டு மஞ்சள்பட்டி பங்களாவுக்கு விரைந்தான் அவன். பூபதியின் மகள் பாரதியும் முதலில் இதே விமானத்தில் அவரோடு கூட டில்லிக்குச் செல்வதற்கு இருந்ததும், அப்புறம் கடைசி விநாடியில் தன் பயணத்தை நிறுத்தி விட்டதையும் ரிக்ஷாவில் போய்க் கொண்டிருந்த போது சத்தியமூர்த்தி நினைத்தான்.

அவரை மரணத்தின் பாதையில் இழுத்துக் கொண்டு போன அதே விதி அவருடைய மகளை மிகவும் நல்லெண்ணத்தோடு கடைசி விநாடியில் அந்தப் பாதையிலிருந்து திருப்பி அழைத்துக் கொண்டு வந்துவிட்ட விந்தையை அவன் மனம் வியந்தது. இரயில்வே மேம்பாலத்தின் ஏற்றத்தில் கீழே இறங்கி ரிக்ஷாவைக் கையினால் தள்ளிக் கொண்டு போகத் தொடங்கியிருந்தான் ரிக்ஷாக்காரன். ரிக்ஷா மிக மிக மெல்ல நகர்ந்தது. அப்போதிருந்த பரபரப்பான மன நிலையில் அந்த வேகக் குறைவைக் கூட சத்தியமூர்த்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பூபதியைத் தான் மதுரை விமான நிலையத்தில் கடைசியாகப் பார்த்த கோலத்தை நினைவு கூர்ந்தான் அவன்.

"என்னம்மா?... நான் வரட்டுமா? கடைசி படி ஏறுவதற்குள் மறுபடி நானும் உங்களோடு 'டில்லிக்கு வருவேன்' என்று மாறிவிட மாட்டாயே? நிச்சயமாக நீ வரவில்லைதானே?" என்பதாக விமான படிக்கட்டை நோக்கி நடப்பதற்கு முன் தம் மகளிடம் சிரித்துக் கொண்டே கேட்டப் பூபதியின் தோற்றம் இப்போதுதான் பார்த்துவிட்டு வந்தது போல் சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தது.

ஊருக்குப் போய்விட்டுத் திரும்புவதற்காக அவர் அப்படிச் சொல்லிக் கொண்டு போனாரா? அல்லது இந்த உலகத்தை விட்டே போய்விடப் போகிறோமென்று தான் அத்தனை கனிவாகவும் அவ்வளவு பாசத்தோடும் சொல்லிக் கொண்டு போனாரா என்று எண்ணியபோது சத்தியமூர்த்திக்குக் கண் கலங்கியது.

'பூபதியின் அருமை மகள் பாரதி இந்தப் பேரிடி போன்ற துயரச் செய்தியை அறிந்து எவ்வாறு கதறித் துடித்து அழுதிருப்பாள்?' என்று அவனால் அவளுடைய துயரத்தைக் கற்பனை செய்யவும் முடியாமலிருந்தது.

எல்லாப் பெரிய மனிதர்களிடமும், பிரமுகர்களிடமும் இருந்த சில பொதுவான குறைபாடுகள் பூபதியிடமும் இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கடந்த சில தினங்களில் அவரை 'ஜெகில் அண்ட் ஹைடாக்' என்று எண்ணித் தான் மனம் கொதித்ததையும் இப்போது சத்தியமூர்த்தி நினைத்தான். பலரிடம் இருந்த அந்தச் சில குறைபாடுகளோடு பலரிடம் இல்லாத சில நிறைவான நல்ல குணங்களும் பூபதியிடம் இருந்ததை அவனால் மறந்து விட முடியவில்லை.

'தங்களுக்கு எதிரே பிறர் உடகார்ந்து பேசுவது கூட மரியாதைக் குறைவு' என்று அற்பத்தனமாக நினைக்கிற பல போலிப் பெரிய மனிதர்கள் நிறைந்திருக்கிற இந்த உலகில் தம்முடைய கல்லூரியில் விரிவுரையாளராக வந்திருக்கிற ஓர் இளைஞரை அன்போடு வரவேற்று எதிரே அமரச் செய்து விட்டு, விருந்தாளியை உபசரிப்பது போல் பெருந்தன்மையாகப் பழகிய பூபதியையும், வகுப்பில் அதே இளைஞரின் விரிவுரையைக் கேட்டுப் பாராட்டிய பூபதியையும், அந்த இளைஞரையே உதவி வார்டனாக நியமித்துப் பெருமைப்பட்ட பூபதியையும் போற்றாமலிருக்க முடியுமென்று தோன்றவில்லை. அதே பூபதியிடம் சொந்த பலவீனங்கள் காரணமாக இருந்த சில குற்றங் குறைகளை அவன் வெறுத்தாலும் பலருக்கு நிழல் தந்து கொண்டிருந்த பெரிய ஆலமரத்தில் இடி விழுந்து எரிந்ததைப் போல் அவருடைய இந்த மரணத்தை அவனால் பொறுத்துக் கொள்ள முடியாமலிருந்தது. குணக் குற்றங்களில் ஒன்றே முழுமையாக நிறைந்த மனிதர்கள் உலகில் எங்குமே இல்லைதான். பல நல்ல குணங்களுக்காகச் சில குற்றங்களையாவது மன்னிக்கிற சுபாவம் பொது வாழ்க்கைக்கு அவசியம் வேண்டும் போலும் என்ற பலவீனமான சிந்தனை ஒன்றும் அவனுடைய தளர்ந்த மனத்தில் இப்போது எழுந்தது. 'செய்கிற பாவங்களுக்காகச் சில சமயங்களில் சிலர் மன்னிக்கப்படுகிறார்கள். செய்யாத புண்ணியங்களுக்காகவும் சில வேளைகளில் சிலர் மன்னிக்கப்படுகிறார்கள். சிலர் எதற்காகவும் எப்பொழுதுமே மன்னிக்கப்படுவதில்லை' என்று எந்த நாட்டு பழமொழியோ ஒன்று உண்டு. இந்தப் பழமொழியின்படி ஜமீந்தாரையும், கண்ணாயிரத்தையும் எதற்காகவும் எப்போதும் மன்னிக்க முடியாது. ஆனால் பூபதி அப்படிப்பட்டவரில்லை. அவரை எதற்காகவோ நிறையப் பாராட்டவும் வேண்டும்! எதற்காகவோ கொஞ்சம் மன்னிக்கவும் வேண்டும் என்று தான் தோன்றியது. கல்வி வளர்ச்சியில் ஆர்வமும், பெரிய இலட்சியங்களும் கொண்டு பூபதி நிறுவிய மல்லிகைப் பந்தல் கல்லூரி எதிர்காலத்தில் சரியாய்ப் பேணுவார் இல்லாமல் எடுப்பார் கைப்பிள்ளையாகவும், நிராதரவாகவும் போய்விடுமோ என்றெண்ணிய போதே ஒரு நல்ல கனவு கலைவது போல் துயரமிகுந்தது.

கல்வித் துறையில் தாம் சாதித்த சாதனைகளுக்காகத் தகுந்த பாராட்டுப் பெறச் சென்று கொண்டிருந்த வேளை பார்த்துப் பூபதியைக் காலன் கவர்ந்து கொண்டு விட்டானே என்று அந்த விமான விபத்தை நினைப்பதற்கும் நம்புவதற்கும் கூட முடியாமல் சத்தியமூர்த்தி மனம் கலங்கினான். மஞ்சள்பட்டி ஜமீன் பங்களாவுக்குள் அவன் நுழையும் போது பகல் மூன்று மணிக்கு மேலாகிவிட்டது. முன்புறத்துத் தோட்டத்தைக் கடந்து அவன் அந்த மாளிகைக்குள் நுழையும் போது அது சாவு வீடு போல களையற்றிருந்தது. எடுப்பதற்கு ஆளில்லாமல் டெலிபோன் மணி கதறிக் கதறி ஓய்ந்த வண்ணமிருப்பதையும் சத்தியமூர்த்தி அங்கே கண்டான்.

சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் முன்புறத்துப் புல்வெளியில் எங்கோ இருந்த தோட்டக்காரன் ஓடி வந்து விவரம் சொன்னான்: "காலையில் அஞ்சு மணிக்கே ஏரோப்ளேன் கம்பெனியிலிருந்து டெலிபோன் வந்திருச்சிங்க... ஜமீந்தார் ஐயா, கண்ணாயிரம் எசமான், மல்லிகைப் பந்தல் பெரிய ஐயாவோட மகள் எல்லாருமாகப் புறப்பட்டு உடனே போயிட்டாங்க... ப்ளேன்ல அவங்களும் அங்கே போவாங்க போலிருக்குதுங்க... ஏரோப்ளேன் விழுந்து போயிட்டாரே... அந்த ஐயாவோட மகள்... அதுதான் இன்னிக்குக் காலையிலே மணியடிச்சதும் ஓடி வந்து டெலிபோனை எடுத்திச்சு. சமாசாரத்தைக் காதிலே கேட்டுச்சோ இல்லையோ அப்படியே டெலிபோனடியிலேயே மூர்ச்சையாகி விழுந்துட்டுதுங்க. ரொம்பக் கண்றாவி... அந்தப் பொண்ணைப் பார்க்கச் சகிக்கலே. நான் பெரிய திட மனசுக்காரனின்னு பேரு... எனக்கே கண் கலங்கிப் போச்சுன்னாப் பார்த்துக்குங்களேன்..."

"இங்கே யாருமே இப்போது இல்லையா?" என்று சத்தியமூர்த்தி தோட்டக்காரனைக் கேட்டான்.

"டைப் அடிக்கிற அம்மா - அதாங்க அந்த சட்டைக்காரப் பொண்ணு - உடம்பு சௌகரியமில்லேன்னு ரெண்டு நாளா வரவேயில்லை. புதிசா வந்திருக்கிற கணக்குப்பிள்ளைக் கிழவனாரும்... ஜமீந்தாரோட இன்கம்டாக்ஸ் ஆடிட்டர் ஏதோ அவசரமா வரச் சொன்னாருன்னு சிட்டை, பேரேடு, வரவு செலவுப் புத்தகம் எல்லாத்தையும் கட்டி எடுத்துக்கிட்டுப் போனாரு. அவரும் இன்னும் வரக் காணலை..."

"அது யாரு கணக்கப்பிள்ளைக் கிழவர்?" என்று தெரிந்தும் தெரியாமலும் பாதி சந்தேகத்துடனே தோட்டக்காரனைக் கேட்டான் சத்தியமூர்த்தி.

"அதுதாங்க... பழைய பள்ளிக்கூடத்து வாத்தியாரு. பேச்சியம்மன் படித்துறையிலேருந்து வருவாரே! அந்தக் கிழவருதாங்க..." என்று சத்தியமூர்த்திக்குப் பதில் கூறினான் தோட்டக்காரன். தன்னுடைய சந்தேகப்படியே அவன் குறிப்பிட்ட கிழவர் தன் தந்தைதான் என்பதைச் சத்தியமூர்த்தி விளங்கிக் கொள்ள முடிந்தது. சத்தியமூர்த்தி அங்கிருந்து திரும்பி விடும் எண்ணத்தோடு தயங்கி நின்ற போது அந்த மாளிகையில் முன் கூடத்து அறையில் அவனுக்குப் பழக்கமான குரல் மெல்ல விசும்பி அழுகிற ஒலி கேட்டது. 'மோகினி அங்கேதான் இருக்கிறாளா?' என்பதை அந்தத் தோட்டக்காரனிடம் எப்படி விசாரிப்பது என்றெண்ணித் தயங்கிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி, இந்த அழுகை ஒலியைக் காரணமாக வைத்தே தான் நினைத்த கேள்வியைத் தோட்டக்காரனிடம் சுலபமாகக் கேட்க முடிந்தது.

"யாரோ உள்ளே ரொம்ப நேரமா அழுது கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறதே? யார் அது?" என்று கேட்டான் சத்தியமூர்த்தி.

அத்தியாயம் - 43

பரிசுத்தமான அன்பு என்பது மனம் நெகிழ்ந்து உருகும் தூயவர்களின் கண்ணீரால் இவ்வுலகில் நிரூபிக்கப்படுகிறது.

சத்தியமூர்த்தியின் கேள்விக்குத் தோட்டக்காரனும் புண்பட்ட மனத்தோடு தான் பதில் சொன்னான். "இந்த அழுகைக்கு எங்கே விடிவு பொறக்கப் போகுது? இதை நீங்களும் நானும் கேட்டு ஒண்ணும் ஆகப் போகிறதில்லீங்க. தெய்வம் இருக்குதே தெய்வம் அதுக்குக் காதுன்னு ஒண்ணு இருந்தா அது செவி சாய்ச்சு கேட்க வேண்டிய அழுகை இது! இந்த வயித்தெரிச்சலைக் கேட்காதீங்க... இது இன்னொரு கண்றாவிக் கதை..." என்று தொடங்கிக் குரலைத் தணித்துக் கொண்டு ஏதோ ஆவேசம் வந்தவனைப் போல் மேலும் மேலும் மனக் கொதிப்போடு பேசலானான் அந்தத் தோட்டக்காரன்.

"சாரோ! சாரு! உங்களைத்தானே? உங்களுக்கு ஏன் இல்லாத வம்பெல்லாம்? உலகத்திலே - இந்தப் பாழாப் போன உலகத்திலே இப்பிடி ரொம்ப நாளா ரொம்ப அநாதைங்க அழுதுகிட்டிருக்குதுங்க. சாமிக்குக் காதிருந்து கேட்டுக் கண் திறந்தால்தான் இவர்களுக்கு விடிவு உண்டு... 'மோகினி'ன்னு கிளியாட்டமா இந்த ஊர்லே ஒரு டான்ஸ்காரப் பொண்ணு இருக்குதே - அதான் சார் - அந்தப் பொண்ணோட அம்மாக்காரி கூடக் கொஞ்சம் நாளைக்கு முன்னே கார் விபத்துலே செத்து வச்சாளே... அந்தப் பொண்ண இங்கே கொண்டாந்து தங்க வச்சிருக்கார் எங்க ஜமீந்தார்... ரொம்ப நாசுக்காகச் சொல்லணுமானா ஜெயில் இருக்குதே ஜெயில், அதிலே கைதியை பிடிச்சு வச்ச மாதிரி வச்சிருக்காரு... அந்தப் பொண்ணுக்குத் துணையாயிருக்கணும்கிற பேரிலே ஒரு ஆயாக் கிழவியையும் காவலாப் போட்டிருக்காரு. உள்ளே எட்டிப் பாரு சார். எங்கியாவது இந்த அநியாயம் நடக்குமா? அந்தப் பொண்ணு தலைவிரி கோலமாகக் கீழே தரையிலே கிடக்கிற வீணையிலேயும் தம்புராவிலேயும் தலையை மோதிக்கிட்டுக் கதறிக் கதறி அழுவுது. ஆயாக் கிழவியோ ஜமீந்தாருக்குப் பயந்து கிளியைக் கூட்டிலே பிடிச்சி அடைச்ச மாதிரி அந்தப் பொண்ணை உள்ளார வச்சுக் கதவையே பூட்டிப்புட்டா. ரொம்ப தங்கமான பொண்ணு சார்... அசோக வனத்துலே சீதையைக் கொண்டாந்து வச்ச மாதிரி எங்க ஜமீந்தாரு இந்தப் பொண்ணை இங்கே கொண்டாந்து வச்சிருக்காரு..." என்று கூறிக் கொண்டே மாளிகையின் முன்புறம் பூட்டப்பட்ட அறையின் திறந்த ஜன்னலருகே சத்தியமூர்த்தியை அழைத்துக் கொண்டு போய்க் காண்பித்தான் தோட்டக்காரன். உயிருள்ள மங்கல வாத்தியமொன்று உயிரில்லாத மர வாத்தியங்களைத் தழுவியபடியே தாங்க முடியாத சோகத்தால் தளர்ந்து துவண்டு கிடப்பதைச் சத்தியமூர்த்தி அப்போது அந்த அறைக்குள் பார்த்தான். மோகினி தலைவிரி கோலமாகக் கிடந்தாள். அவளுடைய மூடிய கண்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. அவனுடைய வாத்தியம் - அவனுக்கு ஆத்ம சமர்ப்பணமான பரிசுத்த வாத்தியம் அங்கே சிறைபட்டு அழுது கொண்டிருப்பதை அவன் தன் கண்களாலேயே கண்டான்.

மனத்தை நெகிழச் செய்து தவிக்க வைக்கும் அந்தச் சோகக் காட்சியைப் பார்த்த பின் அவனுடைய கால்கள் அங்கிருந்து நகர மறுத்தன. 'பூபதியாவது விமான விபத்தில் ஒரேயடியாக இறந்து போய்விட்டார். இவளுக்கோ வாழ்க்கையே பெரிய விபத்தாக இருந்து ஒவ்வொரு நாளும் இவளைச் சிறிது சிறிதாகக் கொன்று கொண்டிருக்கிறது. விரும்பியபடி வாழ முடியாமல் போவதும், வாழ்வதில் விருப்பமில்லாதபடி ஏனோதானோ என்று இயங்குவதும் கூட ஒருவகைச் சாவுதான். மனத்தைக் கொன்று விட்டு உடம்பால் மட்டும் வாழ முடியுமானால் அந்த வாழ்க்கையே அப்படி வாழ்கிறவர்களுக்கு ஒரு சாவாக இருக்கும்!' என்று நினைத்தான் சத்தியமூர்த்தி.

"என்ன சார், அப்படிப் பார்க்கிறீங்க? இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா?" என்று சத்தியமூர்த்தியைக் கேட்டான் தோட்டக்காரன்.

"தெரியும்! இந்தத் துர்ப்பாக்கியசாலியைத் தெரிந்த துர்ப்பாக்கியசாலிகளில் நானும் ஒருவன். சிறிது நேரத்திற்கு முன்னால் நீ கூறினாற்போல் கடவுளே கண் திறந்து இரக்கப்பட்டால் தான் இவளுக்கு விடிவு பிறக்கும் போல் இருக்கிறது. ஆனால் கடவுள் மிகப் பல நல்ல சமயங்களில் கொஞ்சமும் இரக்கமில்லாதவராயிருந்து விடுகிறார். சாதாரண மனிதர்களைப் போல் சில வேளைகளில் அவரும் நம்ப முடியாதவராகி விடுகிறார்" என்று கண்ணும் மனமும் கலங்கிய நிலையில் நாத் தழுதழுக்கச் சொன்னான் சத்தியமூர்த்தி. இதைக் கேட்டு விட்டுச் சிறிது நேரத்தில் தன் வேலையைக் கவனிப்பதற்காகத் தோட்டத்துப் பக்கமாகப் போய்விட்டான் அவன்.

அவர்களுடைய பேச்சுக் குரலினால் கவரப்பட்டுச் சோர்ந்தாற் போல் தளர்ந்து கண் மூடிக் கிடந்த மோகினி விழித்துக் கொண்டு விட்டாள். ஜன்னலுக்கு அப்பால் மோகினி சத்தியமூர்த்தியைப் பார்த்தாளோ இல்லையோ, அவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. எழுந்து நின்று ஜன்னலின் கம்பிகளுக்கு நடுவே தெரிந்த அவனுடைய முகத்தை நன்றாகப் பார்த்தாள் அவள். புகை படிந்த ஓவியத்தைப் போல் அழுது அழுது ஒளி மங்கியிருந்த அவளுடைய சுந்தர முகத்தை அவனும் பார்த்தான். சோகமும் மௌனமுமே நகர்வது போல் நகர்ந்து வந்து ஜன்னலின் உட்புறம் அவனெதிரே நின்று பயபக்தியோடு கைகூப்பினாள். அவனிடமிருந்து நீங்கிப் போய் விலகிய வாழ்க்கையின் சுகங்களைப் போல் அந்த வீணை தரையில் தனியே கிடந்தது. பேச வார்த்தைகள் கிடைக்காமலோ கிடைத்த வார்த்தைகளைக் கொண்டு பேச முடியாத அளவற்ற வேதனையினாலோ அவளையே இமையாமல் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றான் சத்தியமூர்த்தி. அவள் அவனுடைய கம்பீரமான முகத்திலும் கண்களிலும் ஒளிர்ந்த தூய்மையைக் கௌரவிப்பது போல் அவனை நிமிர்ந்து பார்க்க நாணித் தலைகுனிந்தாள்.

"கடைசியில் நான் இந்த நரகத்துக்கே வந்து விட்டேன். சொல்லாமல் கொள்ளாமல் ஆஸ்பத்திரியிலிருந்து திடீரென்று 'டிஸ்சார்ஜ்' செய்து என்னை இங்கே கொண்டு வந்து தள்ளி விட்டார்கள். பழைய வீட்டுக்கும் இனிமேல் போக முடியாது. அங்கேயிருந்த சாமான்களையெல்லாம் ஒழித்துக் கொண்டு வந்தாயிற்று" என்று குமுறிக் கொண்டு வருகிற அழுகைக்கு நடுவே ஒலி தளர்ந்து நலிந்த சொற்களால் பேசினாள் அவள்.

"அந்த வீடும் ஜமீந்தாருடையது தானாமே?" என்று அப்போது அவளைக் கேட்டு விடுவதற்காக நாவின் நுனிவரை வந்துவிட்ட ஒரு கேள்வியைக் கேட்காமல் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு விட்டான் அவன். மோகினியின் தாய் முத்தழகம்மாள் எந்த எந்த விதத்திலோ மஞ்சள்பட்டி ஜமீன் குடும்பத்துக்கு ஆட்பட்டு வீடு வாசல், உணவு உடை எல்லாம் ஜமீந்தாரிடம் ஏற்பாடு செய்து கொண்டிருந்தால் அதற்குப் பேதை மோகினி என்ன செய்வாள்? 'மோகினி அவளுடைய நாட்டியக் கலையில் மட்டுமே ஞானி! மற்றவற்றில் எல்லாம் அவள் வெறும் பேதை. பேதைகளை அதிகம் புண்படுத்துவது பாவம்' என்று எண்ணியது அவன் உள்ளம். அவளே மேலும் அவனிடம் பேசினாள்:

"நேற்று என் மேல் உங்களுக்குக் கோபம் போல் இருக்கிறது. ஜமீந்தாரும் மற்றவர்களும் காலையில் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த போது நீங்கள் என்னிடம் சொல்லி கொள்ளாமலே அங்கிருந்து போய் விட்டீர்கள்" - சத்தியமூர்த்தி இப்போது அவளுக்குப் பதில் கூறலானான்: "உன் மேல் கோபப்பட்டு என்ன பயன்? நீ ஒரு பேதை! உன்னைச் சந்திக்காமலிருந்தால் நானும் என்னுடைய வாழ்க்கையில் ஓர் அழகிய பேதையின் அவலங்களை நினைத்து இப்படிக் கண் கலங்க நேர்ந்திருக்காது."

"அப்படிச் சொல்லாதீர்கள்! உங்களைச் சந்திக்காமலிருந்தால் நான் வாழவே நேர்ந்திருக்காது."

"வாழ்வதும் சாவதும் நம் கையில் இல்லை மோகினி! பூபதி சிறப்பாகப் பேரோடும் புகழோடும் வாழ்வதற்குத் தான் பத்மஸ்ரீ விருது வாங்கப் பறந்து போனார். பாவம் ஒரேயடியாக உலகத்தை விட்டே போய்விட்டார். அவர் சாக வேண்டும் என்று நினைக்கவேயில்லை. ஆனால் வாழ முடியாமல் போய்விட்டது."

"செய்தி தெரிந்த போது எனக்கு ரொம்பப் பாவமாயிருந்தது. அவருடைய பெண் இங்கே கதறி அழுத குரல் கேட்டுக் காலையில் நான் பயந்தே போனேன்" என்று மோகினி கூறிய போது, "நீதான் ஜமீந்தாருக்கே பயப்படுகிறவளாயிற்றே? வெறும் அழுகுரலைக் கேட்டு ஏன் பயப்பட மாட்டாய்?" என்று சத்தியமூர்த்தி நடுவில் குறுக்கிட்டு அவளைக் கேட்டான். இதைக் கேட்டு அவள் முகம் மேலும் வாட்டமடைந்தது. இந்தச் சொற்களால் அவளுடைய மென்மையான இதயம் தாக்கப்பட்டு விட்டது.

"இப்போது நீங்கள் கூறியதற்கு என்ன அர்த்தம்?"

"நீ கெட்டவர்களைக் கண்டு பயப்படுகிறாய் என்று அர்த்தம்."

"கொடிய புலிகளைப் பார்த்துப் பலமில்லாத மான்கள் நடுங்குவது தவறா?"

"நடுங்கலாம். ஆனால் கோழையாயிருக்கக் கூடாது. கோழைகள் எதையும் தீர்மானமாக விரும்புவதற்கும் வெறுப்பதற்கும் கூடத் தகுதியற்றவர்கள். அவர்களால் எப்படித் தைரியமாகக் காதலிக்க முடியும்?"

"நான் உங்களை விரும்பித் தொழுவதற்குத் தைரியமில்லாமல் தொழவில்லை. நீங்கள் ஆஸ்பத்திரிக்குள் என்னைத் தேடிக் கொண்டு வருவது பிடிக்காமல் தான் ஜமீந்தார் அவசரம் அவசரமாக என்னை இங்கே கொண்டு வந்து தள்ளினார். அதனால் என் இதயத்தில் தளர்ச்சி வந்து உங்களைத் தொழுகிற தொழுகையை நான் இன்னும் நிறுத்தவிடவில்லையே?"

"அப்படியானால் மனம் ஒப்பி இந்த நரகத்துக்கு நீ ஏன் வந்தாய்?"

"சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டு போக நீங்கள் இன்னும் அருகில் நெருங்கி வரவில்லை. நீங்கள் இல்லாத போது, பாவிகள் என்னைப் பயமுறுத்தி, மிரட்டி இங்கே கொண்டு வந்து தள்ளியிருக்கிறார்கள். நான் விரும்பியா இந்த நரகத்துக்கு வந்தேன்? எனக்கு உங்களைத் தவிர வேறு உலகம் இல்லை. இந்த நிமிஷமே - வெளியே பூட்டியிருக்கிற இந்தக் கௌரவமான சிறைக் கதவைத் திறந்து விட்டு உங்கள் வலது கரத்தை முன்னால் நீட்டி என்னைக் கைப்பற்றி அழைத்துச் செல்லுங்கள். நான் உங்கள் வழியில் நடந்து வரத் தயார். ஆனால் என்னை அழைத்துப் போகிற உங்களுக்கு நானே அதன் பிறகு ஒரு பெரிய தளையாகிவிடுவேன். ஜமீந்தாருடைய ஆட்கள் உங்களைக் கருவறுக்க வேண்டுமென்று துரத்திக் கொண்டு புறப்படுவார்கள். வசந்தசேனையும், மாதவியும் வாழ்ந்த காவிய காலத்தில் நாம் வாழவில்லை. ஆனால் அதே உயரிய ஆசை எனக்கும் உங்களுக்கும் இருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கிற உலகில் எல்லாத் துன்பமும் உண்டு. இன்றைய உலகத்திலோ என்னுடைய பழிகள் - நான் பிறந்த இடத்தின் பழிகள் - எல்லாம் விட்டுவிடாமல் ஞாபகப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. என் கலையை உலகம் அங்கீகரிக்கும். பிறப்பை அங்கீகரிக்குமா, அன்பரே?"

"வழிபாட்டுக்கு உரிய தாமரைப் பூக்கள் சேற்றில் தான் பூக்கின்றன. வாசனை மிக்க சந்தன மரம் மண்ணில் தான் முளைக்கிறது! பிறப்பு எல்லா உயிர்க்கும் ஒன்று. சிறப்புத்தான் வேறுவேறாக வந்து வாய்க்க முடியும்!"

"பயத்தையும் நிராதரவையும் தவிர என்னைப் போன்ற பேதையின் வாழ்வில் வேறென்ன சிறப்பு இருக்க முடியும்...?"

"அப்படிச் சொல்லாதே! நீயே ஒரு சிறப்புத்தான். நீ பேதையாயிருக்கிறாய் என்பது உனக்கு இன்னும் ஒரு சிறப்பு. பேதைகள் சுலபமாக மனத்தைப் பறி கொடுக்கிறார்கள். புத்தியும் தந்திரமும் உள்ளவர்களால் இன்னொருவருடைய மனத்தைப் பறித்துக் கொள்ள முடியுமே தவிர இன்னொருவருடைய மனத்துக்கு விட்டுக் கொடுக்க முடியாது."

"நான் யாரிடம் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறேனோ அவர் என் மோதிரத்தைத் தான் அணிந்து கொண்டு தன் மோதிரத்தை எனக்கு அணிவித்துத் தெய்வீகமாகவும் அந்தரங்கமாகவும் என்னை மணந்து கொண்டிருக்கிறார். அப்படி மணந்து கொண்ட விநாடியிலிருந்து மனத்தினாலும் பாவனைகளினாலும் நான் அவருடைய மனைவியாகவே இருந்து வருகிறேன். உலகத்துக்குத் தெரிந்து வாழ முடிந்தாலும் உள்ளத்தினாலும் உணர்ந்து வாழ முடிந்தாலும் நான் அவருக்காகத்தான் வாழ்வேன்! 'நீண்ட நாட்களுக்கு முன் ஒரு சமயம் கோவிலில் என்னைச் சந்தித்த போது, வயிறு நிரம்ப வேண்டுமானால் யார் சொல்கிறபடியாவது கேட்டுத்தான் ஆகவேண்டும். கேட்கவும் ஒப்புக் கொள்ளவும் கசப்பாயிருந்தாலும் இதுதான் வாழ்க்கையைப் பற்றிய உண்மை' என்று என்னிடம் கோபமாகச் சொல்லியிருக்கிறீர்கள் நீங்கள். வயிற்றை நிரப்பிக் கொண்டு எங்கேயாவது வாழ வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. உங்களைத் தவிர இன்னொருவர் இந்தக் கையைத் தொடுகிற போது என்னுடைய உடம்பில் உயிர் இருக்காது. இது வெறும் வார்த்தையில்லை. உங்கள் ஆணையாகச் சத்தியம்..." என்று கூறி ஜன்னல் வழியே கையை நீட்டி அவனுடைய வலது கையைத் தன் கையோடு சேர்த்துக் கொண்டு அந்தச் சத்தியத்தை நிரந்தரமாக்குவது போல நிச்சயித்தாள் மோகினி. அப்போது சத்தியமூர்த்தி அவளைக் கேட்டான்:

"எப்படியும் நீ இந்த நரகத்தில் உன்னைத் தூய்மையாக வைத்துக் கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு மோகினீ! ஆனால் உன்னை இப்படி இந்த அறையில் தள்ளி அடைத்துப் பூட்டிச் சிறை வைக்கிற அளவு நீ யாருக்கு என்ன கொடுமை செய்தாய்? ஏன் இப்படிப் பாவங்களைக் கூசாமல் செய்கிறார்கள்?"

"அறையைப் பூட்டாமல் திறந்திருந்தாலும் எனக்கு இது சிறைக்கூடமாகத்தான் இருக்கும்! மனத்திற்குப் பிடிக்காத இடத்தில் கால்கள் நிற்பதே சிறைதான். நான் தப்பி ஓடிப் போய்த் தற்கொலை பண்ணிக் கொண்டு விடக் கூடாதே! அதற்காகத்தான் ஜமீந்தார் எனக்கு இத்தனை பாதுகாப்புப் பண்ணி வைத்திருக்கிறார். நான் செத்துப் போகவும் எனக்குச் சுதந்திரம் இல்லை."

"கவலைப்படாதே! என்றாவது ஒரு நாள் நீ உன் மனம் விரும்புகிறபடி கௌரவமான வாழ்வை அடைய முடியும். தெய்வம் உன்னை வாழவைக்கும்! உன் தூய நம்பிக்கைகள் என்றாவது வெற்றிபெறும்."

"என் தெய்வம் நீங்கள் தான்! எப்போதும் இந்தக் கால்கள் உங்கள் பின்னால் நீங்கள் போகிற வழியில் நடந்துவரத் தயாராகத் துடித்துக் கொண்டிருக்கின்றன. என்னுடைய அழகும் கலைத்திறனும் எனக்குப் பெரிய பகைகள். நான் நினைக்கிறபடி வாழக் கொடுத்து வைக்கவில்லை. பிறந்ததிலிருந்து அழுகைதான் என்னுடைய சௌபாக்கியம்! என்னுடைய வாழ்வு ஓர் உறுதியில்லாத கனவாயிருக்கிறது. நீங்கள் என்னை வாழ வைப்பீர்கள். ஆனால் அப்படி முன் வருகிற உங்களை உலகமும் மற்றவர்களும் வாழ விட மாட்டார்கள்."

"ஜமீந்தார் உன்னிடம் என்னவிதமான வாழ்வை எதிர்பார்க்கிறார்?"

"இந்தக் கேள்வியே மகாபாவம். இதற்குப் பதில் சொல்கிற பாவத்தை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை."

"கேள்வி கேட்காமல் நான் எப்படி எதைத் தெரிந்து கொள்ள முடியும், மோகினீ! ஆனால் நீயோ கேள்வி கேட்பதே பாவம் என்று சீறுகிறாய்!"

"சீறாமல் பின் என்ன செய்வேன்? பந்தல் போட்டு, சுற்றமும் உறவும் அழைத்து மேளதாளத்தோடு மாலை மாற்றிக் கொண்டால் தான் கலியாணமா? ஆண்டாள் அரங்கநாதரைப் பாவித்தது போல் உங்களை மணந்து, உங்கள் மனைவியாகவே என்னைப் பாவித்துக் கொண்டிருக்கிறேன் நான். உங்கள் மனைவியிடமே 'நீ யாரோடு வாழ விரும்புகிறாய்' என்று நீங்கள் கேட்பது பெரிய பாவமில்லையா?"

அவளுடைய இந்தச் சொற்கள் அவனைப் புல்லரிக்கச் செய்தன. 'இந்தப் பேதையின் இதயத்தில்தான் எவ்வளவு உறுதியான அங்கீகாரம் நிரம்பியிருக்கிறது. 'நான் உங்கள் மனைவி' என்று சொல்லிக் கொள்வதிலேயே இவளுக்கு வாழ்க்கையைப் பற்றிய சகல விதமான திருப்திகளும் கிடைத்து விடுவதாகப் பாவனை புரிய முடியுமானால் இது எவ்வளவு உயர்ந்த காதலாக இருக்க முடியும்? பரிசுத்தமான அன்பு என்பது மனம் நெகிழ்ந்து உருகும் தூயவர்களின் கண்ணீரால் இவ்வுலகில் நிரூபிக்கப்படுகிறது என்று சொல்வது இவளை பொறுத்தவரை எவ்வளவு பொருத்தமான வாக்கியம்?' என்று எண்ணி அவளுடைய தோற்றத்தையே ஒரு வியப்பாகக் கருதி கவனித்தான் சத்தியமூர்த்தி. அவன் வாசிப்பதற்காகவே அவனெதிரே காத்து நிற்கும் நிர்மல வாத்தியமாய் - அப்போது நின்று கொண்டிருந்தாள் அவள். வாழ்வில் இரண்டு நன்மைகளின் நடுவே நிற்கும் சாமானியமான பல தடைகளைப் போல் அவனுக்கும் அவளுக்கும் நடுவே ஜன்னல் கம்பிகள் இருந்தன.

"உன்னுடைய மங்கல நினைவுகள் வீண் போகாது மோகினீ!" என்று உணர்ச்சிப் பெருக்கோடு தொடங்கி அவன் அவளிடம் ஆறுதல் கூறிக் கொண்டிருக்கும் போது, "நீங்கள் எனக்கு ஓர் வாக்குறுதி செய்து கொடுக்க முடியுமானால் நான் அதிர்ஷ்டசாலியாக இருப்பேன்" என்று பிச்சை கேட்பது போன்ற குரலில் அவனிடம் ஒரு வேண்டுகோளைத் தொடங்கினாள் அவள். அந்த வேண்டுகோளைக் கேட்டு அவன் கண்ணீர் சிந்தினான். அவன் மனம் நெகிழ்ந்து உருகியது.

"இதென்ன அம்ங்கலமான வேண்டுகோள்?" என்று அதைக் கேட்டு அவள் மேல் சீற்றங்கொண்டு அவன் கோபித்தான். ஆனால் அவளோ பிடிவாதமாக அந்த வேண்டுகோளையே வற்புறுத்தினாள்.

"உன்னுடைய வாழ்வின் திருப்தி இந்த மிக எளிமையான தேவைகளிலிருந்தே உனக்குக் கிடைத்து விட முடியுமா மோகினீ?" என்று அவன் எதிர்த்து வினாவிய போது அவளும் பதில் சொல்ல முடியாமல் பெரிதாக அழுது விட்டாள். ஆனால் அந்த அழுகையும் சில விநாடிகளில் நின்றது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் அவள் அவனைப் பார்த்த போது அந்தப் பேதையின் முகம் கலக்கமில்லாத பேரமைதியோடிருந்தது.

அவளுடைய வேண்டுகோளைக் கேட்டுச் சத்தியமூர்த்தி கண் கலங்கிய அதே வேளையில் வாழ்க்கையின் சகலவிதமான திருப்திகளையும் அடைந்து இதய பூர்வமாக அவற்றை அங்கீகரித்துக் கொண்டு விட்டாற் போலச் சலனமற்றிருந்தாள் அவள். மனத்தின் திருப்தியும் தியாகமும் தெரிகிற தூய பார்வையால் அவளுடைய கண்களின் அழகு அப்போது பெருகியிருந்தது. கண்களில் உள்ள மோகன மயக்கத்தாலும் கவர்ச்சியாலும் பெண்களுக்கு 'மதிராட்சி' என்று சில கவிகள் பெயர் சூட்டிப் புனைந்துரைத்திருப்பதை நினைத்தான் சத்தியமூர்த்தி. திராட்சை மதுவைப் போல் கண்கள் என்று பாடியவன் உணர்ச்சிமிக்க கவியாயிருக்க வேண்டும். மேல் வானத்து நீல முற்றத்தில் சில வேளைகளில் மிதக்கும் ரோஸ் மேகங்களைப் போல் சிவந்த அந்த முகமும், அந்த முகத்துக்குரியவளின் செம்மை பூவிரிக்கும் உள்ளங்கைகளும் செம்மை அரும்பிப் பளபளக்கும் இதழ்களுமாகப் பார்வையே பேசுவதாய் நின்றாள் அவள். அந்தக் கண்கள் அவனிடமிருந்து எதையோ கேட்டன. எதற்கோ ஏங்கின. சிரிக்க விரும்பாத சூழ்நிலையில் பழகிப் பழகிச் சோகமே நிரந்தர உணர்ச்சியாகிவிட்டாலும் அவளுடைய அந்த உதடுகளில் சிரிப்பு மறைவாய், உறங்கிக் கொண்டிருந்தது. புறப்படாத மோனமாக ஒரு புன்னகை அங்கே தயங்கி நின்றது. அவள் சற்று முன் அவனிடம் வாக்குறுதியும் வேண்டுகோளும் கேட்டிருந்த கோமளமான மெல்லிய குரல் இன்னும் அவன் செவிகளில் ராகமாய், அநுராகமாய் இனிமை கவிந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

அத்தியாயம் - 44

விரும்பியதை அடைய முடியாமற் போவதும் விரும்பாததை அடைந்து விடுவதும் தான் துர்ப்பாக்கியசாலிகளின் வாழ்க்கையாக இருக்கிறது.

இந்திர நீலப் பூக்களைப் போன்ற அந்தக் கருநீல விழிகளில் தானே இமையால் பார்க்கப்படும் ஒரே பொருளாகிவிட்டதை எண்ணி அதற்காகவே பெருமைப்படலாம் போலவும் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. அந்தப் பெருமையால் ஏற்பட்ட மகிழ்ச்சியை அவளுடைய துயரம் நிறைந்த வேண்டுகோள் நினைவு வந்து அழ வைத்தது. மை தீட்டாமல் மை தீட்டினாற் போல் கரியதாயிருந்த அந்த நீலக் கருவிழிகளில் நினைத்தபடி வாழ முடியாமல் போய்விட்ட நிராசைகள் தெரிந்தன. தேர்ந்து பழகிய நாட்டியராணியாகிய அந்தக் கலையரசியின் நிராசையிலும் கூட ஓர் அழகிய பாவம் இருந்தது.

அவளுடைய அந்த வனப்பு வாய்ந்த மூக்கினி நுனியில் அழகு நிறைகிற இடம் இதுவே என்று ஒரு முற்றுப்புள்ளி வைத்த மாதிரியும், அழகு இங்கே தான் தனது பரிபூர்ணத் தன்மையை அடைகிறது என்று தீர்மானமாக முடிந்த முடிவு மாதிரியும் ஓர் எழில் கொஞ்சித் தெரிந்தது. முதல் முதலாக அவளை இப்போதுதான் பார்க்கிற புதுமையாய்க் கருதிப் பார்க்கலானான் சத்தியமூர்த்தி. இந்த எழில் வெள்ளம் இதற்குரியவளாலேயே தனக்கு ஆத்ம சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது என்ற நினைப்பில் அவன் மனம் கர்வப்பட்டது. மாலையினிடையே ஓடும் நார்த்தொடுப்பைப் போல் தன்னுடைய எல்லா எண்ணங்களுக்கும் நடுவே ஓர் இன்றியமையாத உறவாக அவளும் இணைந்திருப்பதை அவனால் உணர முடிந்தது. மூலமாக நடுநிற்கும் அந்த நினைவு தன்னைப் பிணித்திருந்ததன் காரணமாக அதிலிருந்து விடுபட முடியாமலும் விடுபட விரும்பாமலும் கட்டுண்டிருந்தான் அவன். பொன் கிண்ணத்தில் ஒளி நிழல் படிவது போல் மோகினியின் அழகிய சிவந்த முகத்தில் தெரியும் அந்த நேரத்து உணர்வுகளை மதித்து அவள் கேட்ட வாக்குறுதியை அவளுக்குக் கொடுத்தான் சத்தியமூர்த்தி.

"உன்னை நன்றாக வாழ வைக்க வேண்டும் மோகினீ! ஆனால் இப்போது நானும் ஒருவிதத்தில் அதைச் செய்ய முடியாத பலவீனனாயிருக்கிறேன். உண்மைதான் என்னுடைய பெரிய பலம். உண்மையை நம்புவதும் தொழுவதுமே என்னுடைய மதம். ஆனால் இன்றைய சமூக வாழ்வின் குழப்பங்களிடையே அதுவே என்னுடைய பலவீனமாகவும் இருக்கிறது. ஜமீந்தாரிடமும், கண்ணாயிரத்திடமும் பணபலமும், ஆள் பலமும் இருக்கின்றன. என்னுடைய மனோ பலத்தினால் நான் வெற்றி பெற அதிக நாள் ஆகும். அதுவரை உனக்குப் பொறுமையும் தைரியமும் இருக்குமானால், இந்தப் பரந்த உலகில் நீயும் நானும் எங்காவது என்றாவது கணவன் மனைவியாக ஊரறிந்து மணந்து வாழலாம்" என்று சத்தியமூர்த்தி கூறிக் கொண்டே வந்த போது அவள் தன் கண்களில் மறுபடியும் நீர் மல்கக் குறிக்கிட்டுப் பேசினாள்:

"இப்போதே நான் உங்களை மணந்து உங்களோடு தான் வாழ்கிறேன். நீங்களே என் இதயத்தில் தெய்வமாக இருக்கிறீர்கள். உங்களை நினைத்து வாழ்வதாகப் பாவித்தபடியே இறந்து போய்விட்டாலும் கூட என்னால் திருப்தி அடைய முடியும். ஆனால், என்னுடைய அந்த வேண்டுகோளை நீங்கள் எப்படியும் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நம்பிக்கையோடுதான் நான் என்னுடைய கடைசி மூச்சைக் காற்றில் கலக்க விடுவேன்."

"அசடே! உன்னுடைய இந்த அமங்கலமான பேச்சை முதலில் விட்டுவிடு. சாவைப் பற்றிப் பேசாவிட்டால் உனக்குப் பொழுது போகாதோ?"

"சில பேருக்கு வாழ்வே மகிழ்ச்சி நிறைந்த பொழுது போக்கு உள்ளதாயிருக்கிறது! அது போல எனக்குத் துயரமும் துயரச் சொற்களும் பொழுது போக்காயிருக்கின்றன" என்றாள் அவள். இந்தச் சமயத்தில் தனக்குப் பின்னால் யாரோ வந்து நின்று கொண்டு அப்படி நிற்பதை உணர்த்துகிறாற் போல் கனைப்புக் குரல் கொடுக்கவே சத்தியமூர்த்தி திரும்பிப் பார்த்தான். அவன் தந்தை அங்கே வந்து நின்று கொண்டிருந்தார்.

கை நிறைய ஒரு கட்டு பைல்களோடும், கணக்குப் புத்தகங்களோடும் சத்தியமூர்த்தி அப்போது அங்கு வந்து நின்று மோகினியோடு பேசிக் கொண்டிருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் முகம் நிறைய ஆத்திரத்தோடும் நின்றார் அவன் தந்தை. 'புத்தி கெட்டவனே! நீ ஏன் இங்கு வந்து இவளைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறாய்?' என்று அவனைக் கடுமையான சீற்றத்தோடு கேட்பது போல் இருந்தது அவருடைய பார்வை. சத்தியமூர்த்தியின் மேல் அப்போது அவருக்கு எவ்வளவு வெறுப்பும், ஆத்திரமும் இருந்தன என்பதை நிரூபிப்பவர் போல் - வராந்தாவின் சுவர் ஓரத்தில் வேகமாக நடந்து போய்த் தோட்டத்தில் காறித் துப்பினார் அவர். அப்புறம் அவனோடு பேசினால் எவ்வளவு ஆத்திரத்தைக் கொட்டியிருக்க முடியுமோ - அதை விட அதிக ஆத்திரத்தோடு அவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே போனார். அவர் உள்ளே போன சிறிது நேரத்துக்கெல்லாம் யாரோ வேலைக்காரனைப் போலத் தோன்றிய முரட்டு ஆள் ஒருவன் சத்தியமூர்த்தியிடம் வந்து, "நீங்கள் என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள்? யாரைப் பார்க்க வேண்டும்?" என்று ஆளைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாகக் கேள்விகளைக் கேட்டான். அதோடு உள்ளேயிருந்து யாரோ சொல்லியனுப்பியதற்காக அந்தக் காரியத்தைச் செய்கிறவன் போல் மோகினி நின்று அவனோடு பேசிக் கொண்டிருந்த ஜன்னல் கதவையும் மூடுவதற்குத் தயாரானான் வேலையாள். அப்போது தான் அங்கிருந்து புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதைச் சத்தியமூர்த்தி புரிந்து கொண்டான்.

"கடைசியில் என்னை இந்த நரகத்திலேயே விட்டுவிட்டுப் புறப்படுகிறீர்களே?" என்று கேட்பது போல் நீர் மல்கும் கண்களால் மோகினி அவனை நிமிர்ந்து பார்த்தாள். எதிரே தெரியும் தோற்றத்தை நன்றாகக் காண முடியாமல் மறைக்கும் ஜன்னல் கம்பிகளின் மறுபுறத்தில் இருந்து அவளைப் போல் தானும் வாய்விட்டு அழமுடியாமல் இதயத்தினால் அழுதுகொண்டு நின்றான் சத்தியமூர்த்தி.

"தைரியமாயிரு! உன்னுடைய தூய்மையைக் காப்பாற்றிக் கொள். உடம்பைத்தான் மனிதர்களால் சிறைப்படுத்த முடியும். இதயத்தையும், எண்ணங்களையும் சிறைப்படுத்த முடியாது. விரும்பியதை அடைய முடியாமற் போவதும், விரும்பாததை அடைந்துவிடுவதும் தான் துர்ப்பாக்கியசாலிகளின் வாழ்க்கையாக இருக்கிறது. ஆனால் நீயும் நானும் துர்ப்பாக்கியசாலிகள் இல்லை. மாலையில் மலர்களைப் போல் நம்முடைய எண்ணங்கள் ஒன்றாகத் தொடுக்கப்பட்டிருக்கின்றன."

"அந்த மாலையிலும் நீங்கள் தான் பூ! நான் வெறும் நார்...!"

"இருக்கலாம் மோகினி! ஆனால் பூவைக் கட்டிப் பிணைப்பது நார் தானே?"

அவர்கள் இருவரும் மேலே பேசிக் கொண்டிருந்தவற்றைப் பேசிக் கொள்ள முடியாமல் ஜன்னல் கதவுகள் அடைக்கப்பட்டன. 'இன்னும் அதிகமான மரியாதைக் குறைவு எதுவும் நிகழ்வதற்குள் இங்கிருந்து வெளியேறி விடுவது நல்லதென்று' சத்தியமூர்த்தி அங்கிருந்து மெல்ல நடந்தான். அப்பால் இருப்பதைத் தெரியவிடாத அந்த ஜன்னலின் மூடிய கண்ணாடிக் கதவுகளைத் திரும்பிப் பார்த்த போது உள்ளே சிறைப்பட்டிருக்கும் சோகங்களை அவை அவனுடைய கண் பார்வையிலிருந்து மறைத்தன.

விமான விபத்தில் பூபதி மரணம் அடைந்துவிட்டதைத் தெரிந்து கொண்டதும் தாங்க முடியாத சோகத்தோடு அவன் அந்த மாளிகைக்கு வந்தான். திரும்பும் பொழுதோ பூபதியைப் பறிகொடுத்த சோகத்தை விட மோகினியைச் சந்தித்த சூழ்நிலையின் சோகங்களில் அவன் மனம் அழுந்திப் போயிருந்தது. 'அவளைப் பின் தங்கி விட்டுவிட்டுத் தான் மேலே நடந்து போகிறோம்' என்ற நினைவினாலே அவனுடைய நடை தளர்ந்திருந்தது. ஜமீந்தாரின் நேர்மையற்ற வாழ்க்கையையும் ஒழுக்க நியாயங்களை மதிக்காத உன்மத்தம் பிடித்த போக்கையும் கண்டு ஒரு சாதாரணத் தோட்டக்காரனிடம் இருக்கிற குமுறலும் கொதிப்பும் கூடத் தன் தந்தையிடம் இல்லாமல் போயிற்றே என்று சத்தியமூர்த்தி வருந்தினான். என்ன மடமையான சமூக வாழ்க்கை இது? 'கோவிலில் அரை மணி நேரம் தெய்வத்தைத் தொழுகிறவர்கள் - அதே கோவிலுக்கு வெளியே வந்து இருபத்து நான்கு மணி நேரமும் ஒழுக்கமோ நற்குணமோ இல்லாத வெறும் பணக்காரர்களைத் தொழுது வயிற்றைக் கழுவ வேண்டியிருக்கிறது. துர்த்தேவதைகளை வழிபடுகிறவர்களுக்கு உடனடியாகப் பலிக்கிற சில மந்திர தந்திர சாதனைகள் கிடைப்பது போல், இந்தக் குணக்கேடான, வெறும் பணக்காரர்களைத் தொழுகிறவர்களுக்கும் சில நிலையில்லாத சௌகரியங்கள் கிடைக்கின்றன என்று மனம் வெறுத்த நிலையில் சிந்தித்துக் கொண்டே சென்றான் அவன். இரயில்வே மேற்பாலத்து இறக்கத்தில் பஸ் நிலையத்தருகே ஒரு சிறுவன் செய்தித்தாள் மாலைப் பதிப்பை விற்றுக் கொண்டே எதிரே வந்தான். விமான விபத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காகச் சத்தியமூர்த்தி அவனிடம் ஒரு செய்தித்தாளை விலைக்கு வாங்கினான்.

விமான விபத்தைப் பற்றிய செய்திகள் விவரமாக வெளியாகி இருந்தன. விபத்தில் மரணமடைந்தவர்களின் பிரேதங்களை அடையாளம் கண்டுபிடித்து எடுக்கவும் முடியாத அளவுக்குச் சேதம் நேர்ந்திருப்பதாகச் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. விமானத்தில் சென்று அகால மரணமடைந்தவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புக்களும் புகைப்படங்களும் - அவர்களில் மிக முக்கியமானவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளும் கூட அந்தச் செய்தித்தாளில் வெளியிடப்பட்டிருந்தன.

தொழிலதிபரும், கல்வித் துறைக்கு எண்ணற்ற நிறுவனங்கள் மூலமாகவும், தம்முடைய கல்லூரி மூலமாகவும் பணி புரிந்திருப்பவருமாகிய பூபதி - பத்மஸ்ரீ விருது பெறுவதற்கு டில்லி போய்க் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி இறந்து விட்டதைப் பற்றிப் பத்திரிகை ஆசிரியர் விமான விபத்தைப் பற்றித் தனியே எழுதியிருந்த தலையங்கத்தில் வருத்தப்பட்டிருந்தார். விபத்து நடந்த இடத்துக்குப் பூபதியின் மகள் பாரதியும், மஞ்சள்பட்டி ஜமீந்தாரும், கண்ணாயிரமும் புறப்பட்டுப் போகிறார்கள் என்ற செய்தி கூடப் பத்திரிகையில் வந்திருந்தது. மறுநாள் மல்லிகைப் பந்தலுக்குப் போய் ஸ்தாபகர் தின விழாவுக்கு ஏற்பாடு செய்வதற்குப் பதில் தானே அநுதாப கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதை நினைத்து விதியின் கொடுமைக்கு மனம் கலங்கினான் சத்தியமூர்த்தி. இரவு வீட்டுக்குப் போய் தன் தந்தையைச் சந்தித்த போது அந்தச் சந்திப்பையே வெறுக்கும் மனநிலையோடு இருந்தான் அவன். தந்தையோ அவனிடம் நேரில் பேச விரும்பாமல் தாயிடம் அவனைப் பற்றிக் குறை சொல்லிக் கோபித்துக் கொண்டிருந்தார்.

பாரதியை மதுரையிலே சந்தித்து அவளுடைய தந்தையின் மரணத்துக்குத் துக்கம் விசாரித்து அநுதாபம் தெரிவிக்க சென்றால், அவளோ விபத்து நடந்த இடத்துக்குக் கண்ணாயிரத்தோடும், ஜமீந்தாரோடும் புறப்பட்டுப் போய்விட்டதாகத் தெரிந்ததனால் அவன் தன்னுடைய தீர்மானத்தை மாற்றிக் கொண்டு மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட வேண்டியிருந்தது. சரசுவதி பூஜையன்றைக்கு மாலை இரயிலில் அவன் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டு விட்டான். இரயிலில் அவன் இருந்த பகுதியில் உடன் வந்தவர்கள் கூட அந்தப் பயங்கரமான விமான விபத்தைப் பற்றியே பேசிக் கொண்டு வந்தார்கள். மோகினியின் துயரங்கள், பூபதியின் அகால மரணம், தன் தந்தையின் போக்கு, எல்லாவற்றையும் நினைத்து நினைத்து உற்சாகம் இழந்த நிலையில் பயணம் செய்தான் அவன்.

மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்தில் பஸ் மாறி மலைக்குப் போய்ச் சேர்ந்த போது மழை பிடித்துக் கொண்டது. மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் முழங்கால் நனைகிற அளவு தண்ணீர் பெருகியிருந்தது. மழை சிறிது நின்றதும் ஒரு ரிக்ஷாவைப் பிடித்து 'லேக் அவென்யூ'வுக்குப் போய்ச் சேரும் போது இரவு பதினொரு மணியாகிவிட்டது. குமரப்பன் அறையில் விழித்துக் கொண்டுதான் இருந்தான். உறங்கிக் கொண்டிருந்த தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனுக்கு இடையூறில்லாமல் மேஜை விளக்கை மட்டும் போட்டுக் கொண்டு பம்பாயிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழ் ஒன்றிற்குத் தான் வழக்கமாக வரைந்து அனுப்பும் 'கார்ட்டூனை' வரைந்து கொண்டிருந்தான் குமரப்பன். சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் குமரப்பன் முதல் கேள்வியாகப் பூபதியின் மரணத்தைப் பற்றித்தான் விசாரித்தான். "பெரிய மனிதர்களிலும், பணக்காரர்களிலும் கொஞ்சம் விதிவிலக்காயிருந்த ஒரே நல்ல மனிதனும் போய்ச் சேர்ந்து விட்டானடா சத்தியம்!" என்று குமரப்பன் வருத்தப்பட்டான்.

"பூபதி இறந்து போய்விட்டார் என்பதை நினைத்துக் கொண்டு அந்த வேதனையோடு இந்த அழகிய மலைநாட்டு நகரத்தையும் இதன் தெருக்களையும் பார்த்தால் இந்த ஊரே இருந்தாற்போல் இருந்து மங்கலம் இழந்து விதவையாகி விட்டார் போலத் தோன்றுகிறது குமரப்பன்! பஸ்ஸிலிருந்து கீழே இறங்கும் போதே மிகவும் வேண்டியவர் யாரையோ இழந்து விட்டதுபோல் மனம் தவித்தது" என்று சத்தியமூர்த்தி நண்பனிடம் கூறினான். நண்பர்கள் இருவரும் சிறிது நேரம் பூபதியின் பெருந்தன்மையைப் பற்றியும் விமான விபத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதன் பிறகு சத்தியமூர்த்தி உறங்கச் சென்றான். 'குத்து விளக்கு' வேலையை உதறித் தள்ளிய பின்பு சில வடநாட்டு ஆங்கில இதழ்களுக்குத் தன் விருப்பத்துக்கிசைந்த கருத்தினைத் தன்னுடைய அபிப்பிராய சுதந்திரத்துக்குப் பங்கமில்லாத முறையில் கார்ட்டூன்களாக வரைந்து அனுப்பி அதற்கு மட்டும் சன்மானத் தொகையைப் பெறும் வழக்கத்தைக் குமரப்பன் கடைப்பிடித்து வந்தான். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் குமரப்பனை அந்த வாரத்தின் முந்திய ஐந்து ஆறு தினங்களில் வெளியான தினப் பத்திரிகைகளின் குவியல்களுக்கு நடுவேதான் பார்க்க முடியும். அவற்றைப் படித்துக் கார்ட்டூன்களுக்குக் கருத்தைத் தேடி எடுப்பான் அவன்.

பகலில் 'குமரப்பன் ஆர்ட்ஸ்' என்ற விளம்பரக் கலைக் கடையைக் கவனிக்க வேண்டியிருந்ததனால் இரவில் தான் அவனுக்குக் கேலிச் சித்திரங்கள் வரைய நேரம் கிடைக்கும். அவன் ஒரு பிறவிக் கலைஞன். இந்த உலகத்தைக் குறும்புத் தனமான கார்ட்டூன் கண்களால் பார்த்துப் பார்த்து இரசிக்கிற சுகத்தை அவனால் ஒரு போதும் இழக்கவே முடியாது. அதனால் 'குமரப்பன் ஆர்ட்ஸ்' கடையில் போர்டுகளும், டிசைன்களும், ஸ்லைடுகளும் எழுதிக் கொடுப்பதன் மூலம் வருமானம் வந்தாலும் கூட அவனால் கார்ட்டூன் வரையாமல் சும்மா இருக்கவே முடியாது. போர்டுகளும் டிசைன்களும் வரைந்து சம்பாதிப்பதனால் அவன் திருப்திப்பட முடியும். ஆனால், கார்ட்டூன்களை வரையாவிட்டாலோ அவனால் சந்தோஷப்படவே முடியாது. அவனுடைய பிறவிக் கலைக்குணம் பண வருமானத்தினால் மட்டும் சந்தோஷப்படாத கலைப் பேராசை வாய்ந்தது. சத்தியமூர்த்திக்கும் குமரப்பனின் பல குணங்கள் பிடிக்கும். அவற்றில் மிக முக்கியமானது குமரப்பனுடைய இந்தக் கலை மனம் தான். இரவு பன்னிரண்டு மணிக்கு மேலும் கண் விழித்துக் காகிதத்தையும், மையையும், சிந்தனையையும் முதலாக வைத்துக் கொண்டு, 'அந்த அகாலத்திலும் இந்த உலகத்தில் கேலி செய்வதற்கு ஏதாவது விஷயம் இருக்கிறதா?' என்று சிந்தித்துத் தவிக்கிற நண்பனை நினைத்து பெருமைப்பட்டான் சத்தியமூர்த்தி.

பூபதியின் மரணம் மல்லிகைப் பந்தல் நகரத்தையே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது என்பது மறுநாள் பொழுது விடிந்ததிலிருந்து தெரிந்தது. பூபதியின் தொழில் நிறுவனங்களாலும், கல்வி நிலையத்தினாலும், எஸ்டேட்டுகள் கம்பெனிகளாலும்தான் அந்த ஊரே இத்தனை பெரிதாக வளர்ந்தது. அதனால் எங்கு திரும்பினாலும் விமான விபத்தைப் பற்றியும், அவருடைய மரணத்தைப் பற்றியுமே பேசிக் கொண்டிருந்தார்கள். ஊரே களையிழந்து போய்விட்டாற் போலத் தோன்றியது. யாரைச் சந்தித்தாலும் இந்த மரணத்தைப் பற்றியே ஒருவருக்கொருவர் துக்கம் விசாரித்துக் கொண்டு தயங்கி நின்றார்கள்.

விஜயதசமிக்கு அடுத்த நாள் கல்லூரி திறப்பதாக இருந்தது. ஆனால் அன்று காலையில் கல்லூரி திறந்தவுடனேயே கல்லூரியை நிறுவியவராகிய பூபதியின் அகால மரணத்துக்கு அநுதாபம் தெரிவிக்கும் முறையில் மூடி விடுமுறை விட்டுவிட்டார்கள். ஆசிரியர்களும், மாணவர்களும், மாணவிகளும் கருப்புத் துணி பாட்ஜ் அணிந்து மல்லிகைப் பந்தல் வீதிகளில் துக்க ஊர்வலம் நடத்திய பின் கல்லூரி மைதானத்தில் ஓர் அநுதாபக் கூட்டமும் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் மாணவர்கள் எல்லாம் பூபதி அவர்களின் பெருந்தன்மையையும் கொடைப் பண்பையும் பற்றிப் பேசிக் கொண்டே சென்றார்கள். ஆனால் ஆசிரியர்களோ, பூபதிக்குப் பின்னர்க் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராக யார் வர இடமிருக்கிறது என்பது பற்றிய வாதப் பிரதிவாதங்களுடன் சென்றார்கள். அநுதாபக் கூட்டத்துக்குக் கல்லூரி முதல்வர் தலைமை வகித்தார். பூபதியின் சிறப்புக்கள், தொண்டு, பெருந்தன்மை, இவற்றைப் பற்றியோ, அவருடைய மரணத்தினால் ஏற்பட்டிருக்கும் பெரிய தேசிய நஷ்டத்தைப் பற்றியோ ஒன்றுமே கூறாமல் தமக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்த சில சொந்த நிகழ்ச்சிகளை மட்டுமே பேசி மாணவர்களைச் சலிப்படையச் செய்து கொண்டிருந்தார் முதல்வர். "என் மேல் அவருக்கு மிகவும் பிரியம் உண்டு. ஒரு முறை மாணவர் ஒருவர் ஆத்திரப்பட்டு என்னைக் கத்தியால் குத்த முயன்று நான் தோள்பட்டையில் கத்திக் குத்து காயத்தோடு ஆஸ்பத்திரியில் கிடந்தேன். அப்போது என்னைத் தேடிக் கொண்டு தம் மகளோடு ஆஸ்பத்திரிக்கே வந்து விட்டார் நம்முடைய கரஸ்பாண்டெண்டு" என்று இப்படித் தம்மைப் பற்றியே பேசி முடித்தார் முதல்வர். மற்ற ஆசிரியர்களில் சிலரும் இதே விதமாகத் தான் பேசினார்கள். மாணவர்களில் இரண்டொருவர் மிக நன்றாகப் பூபதியின் கல்விப் பணியைப் பற்றியும் அவருடைய மரணத்தினால் தேசத்துக்கு ஏற்பட்டவிட்ட பேரிழப்பைப் பற்றியும் உணர்ந்து பேசினார்கள்.

கடைசியாகச் சத்தியமூர்த்தி பேச எழுந்திருந்தான். "இந்த மலைகளும் இங்கு நம்மைச் சூழ்ந்திருக்கும் வானளாவிய கல்லூரிக் கட்டிடங்களும், கடந்த சில தினங்களாகக் களையிழந்து போயிருக்கின்றன. நம்மைப் பார்ப்பவர்கள் கேட்பவர்கள் எல்லாரும் ஓர் உண்மையான பெருந்தன்மையாளரின் மரணத்தைப் பற்றி விசாரிக்கிறார்கள். நாம் கண்ணில் நீர் நெகிழ நம்மிடம் விசாரிப்பவர்களுக்கு மறுமொழி கூறவும் முடியாமல் தயங்கி நின்று விடுகிறோம். ஒல்லையூர்ப் பெருஞ்சாத்தன் இறந்த பின்பு அந்த வள்ளலின் வீட்டு வாயிலிலிருந்த முல்லைக் கொடியைப் பார்த்து, 'வல்லேற் சாத்தன்மாந்த பின்றை - முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?' என்று குடவாயில் கீர்த்தனார் புறநானூற்றில் கேட்பது போல் இந்த அழகிய மலை நகரத்தில் உள்ள பூஞ்செடிகளையும், கட்டிடங்களையும், அருவிகளையும், ஏரிகளையும் பார்த்து உங்களுக்கு வளம் தந்த பெருமகன் மறைந்துவிட்டானே தெரியுமா? என்று கேட்கத் தோன்றுகிறது நமக்கு. நம்மைக் கண் கலங்க செய்துவிட்டு அவர் போய் விட்டார். இந்த உலகில் நல்லவர்களும், நல்லெண்ணமும் விரைவில் அழிந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்து நமக்குக் கவலையாக இருக்கிறது" என்று உருக்கமாகப் பேசத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. அவன் பேசிக் கொண்டிருந்த போது கூட்டம் எழுதி வைத்த பாடம் போல அமைதியாயிருந்தது. உணர்ச்சி மிக்க அந்தச் சொற்பொழிவில் மனம் நெகிழ்ந்து சில மாணவர்கள் கண்கலங்கி விட்டார்கள். சத்தியமூர்த்தி, தனக்கும் பூபதிக்கும் உள்ள நேரடிப் பழக்க வழக்கங்களைப் பற்றியோ, தன் மேல் அவருக்கு அதிகப் பிரியம் உண்டு என்பதைப் பற்றியோ - எதுவுமே பேசவில்லை. அப்படியிருந்தும் கூட்டம் முடிந்து, அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது "இவனிடம் அவருக்குக் கொள்ளைப் பிரியம்! இவனைத் திடீரென்று உதவி வார்டனாக்கினார். அடிக்கடி கூப்பிட்டுப் பிரியமாகப் பேசினார்... இவனுடைய விரிவுரை ஒன்றைக் கேட்டுவிட்டு 'ஆகா ஊகூ' என்று கொண்டாடினார். அப்படி எல்லாம் தன்னைத் தனி அக்கறையோடு கவனித்தவரை இவன் ஏன் புகழமாட்டான்?" என்று புறம் பேசிக் கொண்டு போன சில ஆசிரியர்களின் வம்புப் பேச்சைச் சத்தியமூர்த்தி தானே கேட்டு மனம் வருந்தினான். பாரதியும் ஜமீந்தாரும், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிடலாம் என்றும், பாரதி திரும்பி வந்த பின் எல்லா ஆசிரியர்களும் ஒரு முறைக்காக அவளை வீடு தேடிப் போய்த் துக்கம் கேட்டுவிட்டு வரவேண்டுமென்றும் முதல்வர் கூறியிருந்தார். அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கல்லூரி நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டத்தில் காலேஜ் போர்டின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதைப் பற்றியும் ஆசிரியர்கள் தங்களுக்குள் பரவலாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அத்தியாயம் - 45

ஒவ்வொரு மனத்திலும் ஒரு சோகக் கதை உண்டு. அது கதையாக வெளிப்படாத வரை உலகத்துக்குக் கிடைக்க வேண்டிய சுவாரசியமான அநுபவம் ஒன்று நஷ்டமாகி விடுகிறது.

காலமே அடங்கி ஒடுங்கி இயக்கமற்றுப் போய்விட்டது போல் மல்லிகைப் பந்தல் நகரமெங்கும் ஒருவகை அசதி தெரிந்தது. மென்று சுவைத்து நிதானமாகச் சாப்பிடுகிறவனுக்குச் சோற்றில் உள்ள கல் தெரிகிறாற் போல் நின்று நிதானித்துப் பார்க்கிறவனுக்கு வாழ்க்கையின் துன்பங்கள் தெரிகின்றன. தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் துன்பங்கள் எதிர்கொண்டு தெரிவதைச் சத்தியமூர்த்தி உணர்ந்தான். பிறர் பொறாமைப்படுவதற்கும் சிந்திப்பதற்கும் காரணமில்லாமலே தான் ஆளாகி விடுவதைப் பல சமயங்களில் அவன் புரிந்து கொண்டிருக்கிறான். பூபதியின் மரணத்துக்கு அநுதாபம் தெரிவித்துக் கல்லூரி மாணவர்கள் நடத்திய இரங்கற் கூட்டத்தில் தான் மனம் உருகிச் சொற்பொழிவாற்றியதற்கு வம்புக்காரர்கள் என்ன அர்த்தம் கற்பித்துப் பேசிக் கொள்ளுகிறார்கள் என்பதைக் கேட்டு அவன் மனம் வருந்தினாலும் பொறுத்துக் கொண்டான். மிருகத் தன்மைகள் இல்லாத மனிதர்கள் மிகவும் அபூர்வமாகத்தான் வாழ்வில் தென்படுகிறார்கள் என்று எண்ணத் தோன்றியது அவனுக்கு. அநுதாப ஊர்வலமும், கூட்டமும் முடிந்து அவன் அறைக்குத் திரும்பிய போது மாலை ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. மழை 'இதோ வந்துவிட்டேன்' என்று பயமுறுத்துவது போல் மேகங்கள் கவிந்து இருட்டிக் கொண்டிருந்தது. மழையை உறுதியாக எதிர்பார்த்துப் பாதுகாப்புச் செய்து கொண்ட மாதிரி மனிதர்கள் கரும் பூதங்களைப் போல் மழைக்கோட்டுக்குள் புகுந்து நடமாடிக் கொண்டிருந்தார்கள். 'லேக் அவின்யூ'வில் மரங்களின் உச்சிகளில் கூட மேகங்கள் வந்து தழுவினாற் போல் தெரிந்தன. சத்தியமூர்த்தி நேரே மாடிப் படியேறி அறைக்குப் போகாமல் குமரப்பனுடைய கடைக்குள் நுழைந்தான். குமரப்பன் ஏதோ பெரிய விளம்பரப் பலகை ஒன்றைத் தரையில் வைத்துக் கீழே படுத்துவிட்டாற் போல் சாய்த்து அதில் எழுதிக் கொண்டிருந்தான்.

சத்தியமூர்த்தி கடைக்குள் வருவதைப் பார்த்துவிட்டு, "ஒரு பதினைந்து நிமிஷம் அந்த நாற்காலியில் உட்கார்ந்து செய்தித்தாளைப் படித்துக் கொண்டிரு சத்தியம்! இந்த வேலையை முடித்துவிட்டு வருகிறேன். இது ஒரு ஜவுளிக் கடை போர்டு. தீபாவளி சீஸனுக்காக எழுதச் சொல்லியிருக்கிறார். விரைவில் முடித்துக் கொடுத்துவிட வேண்டும்" என்றான் குமரப்பன். "ஆகா! தாராளமாக உன் வேலையை முடித்துவிட்டு வா! நான் நீ வரும் வரை காத்திருக்கிறேன்" என்று நண்பனுக்கு மறுமொழி கூறிய சத்தியமூர்த்தி நாற்காலியில் அமர்ந்து நண்பனுடைய அந்தச் சிறிய கடையை நன்றாக உற்றுப் பார்த்துக் கவனிப்பது போல் அங்கும் இங்குமாக உலாவினான். ஒரு மூலையில் 'நாய்கள் ஜாக்கிரதை' என்று சிறிய எச்சரிக்கைப் பலகைகள் - எழுத்துடனும் நடுவில் ஒரு நாய்த் தலை படத்துடனும், பளபளவென்று புதிய வண்ணத்தில் 'தொடாதே அபாயம்' என்ற எச்சரிக்கைப் பலகைகளும் சில இருந்தன. சத்தியமூர்த்தி இந்த விளம்பரப் பலகைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குமரப்பன் தன் வேலையை முடித்துக் கொண்டு கைகழுவி விட்டு அவனருகே வந்து நின்றான். அப்போது குமரப்பனுடைய முகத்தில் குறும்புத்தனமானதொரு மலர்ச்சி தெரிந்தது.

"என்னடா சத்தியம்! நமது கலைக்கூடத்தில் உருவாகும் அமர இலக்கியங்களையெல்லாம் இவ்வளவு கவனமாகப் பார்க்கிறாயே? இந்தக் கடை ஆரம்பமான நாளிலிருந்து இங்கே அதிகமாகச் செலவழிந்திருக்கிற போர்ட்டுகள் என்ன தெரியுமா? 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற போர்டு தான். பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன் இங்கே ஒரு - 'டாக் ஷோ' (நாய்க் காட்சி) நடந்ததே. அந்த நாய்க் காட்சியில் பலர் புதிய நாய்கள் விலைக்கு வாங்கினார்கள். அதோடு நம் கடைக்கு வந்து இந்தப் 'போர்டி'லும் ஒன்று வாங்கிக் கொண்டு போனார்கள். 'ஒவ்வொரு பங்களாவிலும் நாய்கள் இருக்கும் என்பதும் அவை கடிக்கும் என்பதும், எங்கும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை தானே? அப்படி இருக்கும் போது 'நாய்கள் ஜாக்கிரதை' என்று இரண்டு வார்த்தைகளை எழுதி ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? சும்மா 'ஜாக்கிரதை' என்று மட்டும் ஒவ்வொரு பங்களாவின் வாசற் கதவிலும் போர்டு போட்டால் போதுமே? அந்தப் போர்டைப் பார்த்ததுமே அது ஒரு பங்களா என்பதையும் - அதற்குள் நாய்கள் இருக்கும் என்பதையும் - அவை கடிக்கும் என்பதையும் பார்த்தவன் தெரிந்து கொள்ள முடியாதோ?' என்று முதல் நாள் போர்டு வாங்க வந்த ஓர் பணக்கார ஆளிடம் விளையாட்டாகப் பேசப் போய் அவன் என்னிடம் பழியாகச் சண்டைக்கு வந்துவிட்டான். நானும் அவனைச் சும்மா விடவில்லை. உடனே 'தொடாதே! அபாயம்' என்ற போர்டைக் கையில் எடுத்துக் காண்பித்தேன் அவ்வளவு தான்! ஆள் வாலைச் சுருட்டிக் கொண்டு பேசாமல் போய்ச் சேர்ந்தான். இதே போல் 'டாக் ஷோ'வுக்கு நானும், இந்த ராயல் பேக்கரி ரொட்டிக்கடை நாயரும் போயிருந்த போது ஒரு பெரிய வம்பு வந்து சேர்ந்தது. பகுதி பகுதியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் நாய்களை அணிவகுத்து, அந்தந்த பகுதிக்கு மேல், அங்கு உள்ளேயிருக்கும் நாயின் இனம், பெயர், வயது, அது எந்த நாய்க் 'கிளப்'பின் பிரதிநிதியாக 'ஷோ'வில் கலந்து கொள்கிறது என்பன போன்ற விவரங்களைக் குறிக்கும் அறிவிப்புப் பலகையும் போட்டிருந்தார்கள். ஒரே ஒரு பகுதியில் மட்டும் அங்கு இருக்க வேண்டிய நாய் வெளியே எங்கோ கொண்டு போகப்பட்டிருந்ததனாலோ என்னவோ - அந்த நாய்க்குச் சொந்தக்காரி போல் தோன்றிய ஓர் முரட்டு ஆங்கிலோ - இந்தியப் பெண்மணி மட்டும் உள்ளே உட்கார்ந்திருந்தாள். மழையினால் போர்டில் நாயின் பெயர் அழிந்து போய் 'ஷீலாராணி' என்ற அந்த நாய்க்கு உடமைக்காரியின் பெயர் மட்டும் அறிவிப்புப் பலகையில் தெரிந்தது. "நாயர்! இது ரொம்ப நல்ல வெரைட்டியாயிருக்கும் போல் தெரிகிறது. 'ஷீலாராணி' என்று பெயர் போட்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு பெண் மாதிரியே இருக்கிறது பார்த்தீர்களா?" என்று நான் சிரிக்காமல் உடன் வந்திருந்த நாயரிடம் காதருகே சொன்னேன். நாயருக்கோ அடக்க முடியாத சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்துவிட்டது. மனிதர் அந்த இடத்திலே சிரித்துத் தொலைக்கப் போய், அந்தப் பெண்மணி என்னுடைய பயங்கரமான நகைச்சுவையைப் புரிந்து அதன் விளைவாக 'வாட் டு யூ மீன்...' என்று சீறிப் பாயத் தொடங்கிவிட்டாள். தப்பித்தோம், பிழைத்தோம் என்று நாயரை இழுத்துக் கொண்டு ஓட்டமெடுத்தேன் நான். அதற்கு இரண்டு மூன்று நாளைக்கு முன் இந்த மல்லிகைப் பந்தலில் வழக்கமாக வருடா வருடம் நடைபெறும் ஃபிளவர் ஷோ (மலர்க் காட்சி) ஃபுரூட் ஷோ (பழக் காட்சி) ஆகியவற்றில் அந்தப் பூக்களுக்கும், பழங்களுக்கும் அருகே அவற்றின் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று இந்த ஊர் நகரசபைக் கமிஷனர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். முதல் காரியம் அவன் கூப்பிட்டனுப்பியதே எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நகரசபை அதிகார அடக்குமுறைக்குப் பயப்படாவிட்டால் நானும் என் கடையும் காலம் தள்ளிக் குப்பை கொட்ட முடியுமா? அதற்காக அவனைச் சந்திக்கப் போனேன். 'டிசைன்' 'போர்டு' எழுதுகிற பெயிண்டர் என்றால் ஏதோ கைகட்டி வாய் பொத்தி 'எசமான் உத்தரவுக்கு, அடிமை காத்திருக்கேனுங்க' என்பது போல் வந்து நிற்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

"இந்த ஊர்க்காரர்களுக்குப் பூக்காட்சியிலும் பழக்காட்சியிலும் மல்லிகைப் பூவுக்குக் கீழே, 'இதுதான் மல்லிகைப் பூ' என்றும், ஆரஞ்சுப் பழத்துக்குக் கீழே, 'இதுதான் ஆரஞ்சுப் பழம்' என்றும் எழுதி வைத்தால்தான் புரியுமோ சார்?' என்று பேச்சுப் போக்கில் சிரித்துக் கொண்டே மெதுவாக வாழைப் பழத்தில் ஊசி இறக்குவது போல் அந்தக் கமிஷனரிடம் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு வந்தேனடா சத்தியம். அப்புறம்தான் ஆள் என்னை யாரென்று புரிந்து கொண்டான்? ஒழுங்காகக் கேட்டத் தொகையைக் கொடுத்துப் போர்டுகளை எழுதி வாங்கிக் கொண்டான்."

சத்தியமூர்த்தி சிரித்தபடியே நண்பன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது தற்செயலாக அங்கு ஒரு மூலையில் அரைகுறையாக எழுதி வைக்கப்பட்டிருந்த ஒரு போர்டு சத்தியமூர்த்தியின் கண் பார்வையில் தென்பட்டுச் சிரிப்பு மூட்டியது. "என்னடா குமரப்பன்! இதற்கு என்ன அர்த்தம்?" என்று சிரித்தபடியே கேட்டுக் கொண்டே நண்பனிடம் அந்தப் போர்டை எடுத்துக் காட்டி வினவினான் சத்தியமூர்த்தி. அந்தப் 'போர்டில்' 'உத்தரவின்றி உள்ளே பிரசவிக்கக்கூடாது' என்று குண்டு குண்டாக எழுதியிருந்தது. அதைப் பார்த்துக் குமரப்பனும் விழுந்து விழுந்து சிரித்தான்.

"இதில் ஒரு சுவாரசியமான கதையே அடங்கியிருக்கிறது சத்தியம்! நம்முடைய ராயல் பேக்கரி நாயர் சிபாரிசு செய்தார் என்று அவருக்காக ஒரு மலையாளிப் பையனை - மாதம் அறுபது ரூபாய் சம்பளம் பேசி என் கடையில் எனக்கு உதவியாகச் சிறு போர்டுகள் டிசைன்கள் எழுத அமர்த்திக் கொண்டேன். அவனுக்குத் தமிழ் கொஞ்சம் தகராறு. நன்றாகத் தமிழ் பேசவோ எழுதவோ வராது. 'செகண்ட் அவென்யூ'வில் பிரபலமான மெடர்னிட்டி ஹோம் (பிரசவ ஆஸ்பத்திரி) வைத்து நடத்தி வருகிறாளே - ஒரு இங்கிலீஷ்கார டாக்டர் அம்மாள் - அந்த அம்மாளுடைய பிரசவ ஆஸ்பத்திரியில் உபயோகத்துக்காக 'உத்தரவின்றி உள்ளே பிரவேசிக்கக் கூடாது' என்று நான்கு போர்டுகள் வேண்டும் என்று எழுதித் தரச்சொல்லிக் கேட்டிருந்தார்கள். அந்த நான்கு போர்டுகளையும் எனக்கு வேறு வேலை இருந்ததனால் என்னுடைய 'அஸிஸ்டெண்டாக' வந்திருந்த புத்திசாலியை எழுதச் சொல்லப் போக அவன் நான்கு பலகைகளிலுமே 'உத்தரவின்றி உள்ளே பிரசவிக்கக் கூடாது' என்று எழுதி எடுத்துக் கொண்டு போய்ப் பிரசவ ஆஸ்பத்திரியில் அவர்கள் சொன்ன இடங்களில் எல்லாம் ஆணியடித்து மாட்டிவிட்டு வந்து விட்டான். இரண்டு நாள் கழித்து மூஞ்சியில் எறியாத குறையாகப் போர்டுகளைத் திருப்பிக் கொண்டு வந்து எறிந்து விட்டுப் போனாள் அந்த இங்கிலீஷ் டாக்டரம்மாளுடைய நர்ஸ். என்னடா சங்கதி என்று போர்டுகளைப் பார்த்தால் படுபாவிப்பயல், 'உத்தரவின்றி உள்ளே பிரசவிக்கக் கூடாது' என்று எழுதிப் பிரசவ ஆஸ்பத்திரியின் பிழைப்பிலேயே மண்ணைப் போட்டிருக்கிறான். முதல் வேலையாகப் பையனைக் கணக்குத் தீர்த்து வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்" என்று தன்னுடைய அனுபவத்தை மிகவும் இரசித்துச் சொன்னான் குமரப்பன்.

கடையைப் பூட்டிய பின் நண்பர்கள் தேநீர் பருகி விட்டு அறைக்குப் போனார்கள். மழையினால் எங்கும் வெளியில் உலாவப் போக முடியவில்லை. பேசிக் கொண்டிருந்த போது நடுவில் மோகினியைப் பற்றி விசாரித்தான் குமரப்பன். சத்தியமூர்த்தியின் அந்தரங்கத்திலோ - அவளைப் பற்றிய கவலைகளும் தவிப்புமே நிரம்பியிருந்ததனால் யாராவது மோகினியைப் பற்றி ஞாபகப்படுத்திப் பேசினால் கூட வேதனையாக இருந்தது அவனுக்கு. சிறிது நேரம் தயங்கிய பின் மதுரையில் நடந்தவற்றைப் பற்றிய விவரங்களைக் குமரப்பனிடம் கூறினான் சத்தியமூர்த்தி. எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குமரப்பன் சிறிது நேரம் மலைத்தாற் போல் உட்கார்ந்திருந்தான். அப்புறம் சற்று நேரத்துக்குப் பின் ஒரு பெருமூச்சையும் விட்டு விட்டு வெளிப்படையாக வேடிக்கையானதும், ஆனால் கூர்ந்து கவனிக்கும் போது ஆழ்ந்த துயரம் தெரியக் கூடியதுமான ஒரு வாக்கியத்தைச் சத்தியமூர்த்தியிடம் கூறினான் அவன்.

"கடைசியில் கிளியைப் பிடித்துக் கூண்டில் அடைத்தே விட்டார்கள் என்று சொல்!"

இதைக் கேட்டுச் சத்தியமூர்த்தி நண்பனுக்குப் பதில் சொல்லாமல் கீழே குனிந்து தரையைப் பார்த்தபடி இருந்தான். மனத்துக்குப் பிடித்தமான வாத்தியத்தில் மனத்துக்குப் பிடித்தமான இராகத்தை வாசித்தது போல் மோகினியோடு உரையாடிய வேளைகளை எல்லாம் இப்போது நினைத்து மனமுருகினான் அவன். அவன் பதில் பேசாமல் சும்மா இருப்பதைப் பார்த்துக் குமரப்பனே மேலும் கேட்டான்:

"என்ன? பதில் பேசாமல் திகைத்து உட்கார்ந்து விட்டாய்?"

"பதில் பேச என்ன இருக்கிறது? கூண்டில் அடைபட்டு விட்டதாகச் சொல்கிறாய், அந்தக் கிளியின் மனத்தில் உள்ள நினைவுகள் ஒவ்வொன்றும் ஒரு சோகக் கதையாயிருக்கிறது..."

"ஒவ்வொரு மனத்திலும் ஒரு சோகக்கதை உண்டு. அது கதையாக வெளிப்படாத வரை உலகத்துக்குக் கிடைக்க வேண்டிய சுவாரசியமான அநுபவம் ஒன்று நஷ்டமாகிவிடுகிறது சத்தியம்..."

"ஆனால் மோகினியின் சோகம், கதைகளை எல்லாம் விடப் பெரியது குமரப்பன்..."

"என்ன செய்யலாம்? வசீகரமான நினைவுகளோடு வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறோம். ஆனால், அங்கு மிகவும் குரூரமான நினைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தனியாக இருந்து சிந்திக்கும் போது அழகாயிருக்கிற இந்த வாழ்க்கையை - பலரோடு கலந்து வாழும் போது - தடைகளும் - இடையூறுகளும் நிறைந்ததாயிருப்பதை மிகவும் கசப்போடு நீயும் நானும் புரிந்து கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட சமயங்களில் மேலே என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கித் தளர்ந்துதான் நிற்க வேண்டியிருக்கிறது..."

"இடையூறுகளையும் - தடைகளையும் பற்றி நான் கவலைப்படவில்லை குமரப்பன்! அவைதான் என்னுடைய தைரியத்தையும் சிந்தனையையும் வளர்க்கின்றன. பிரச்சினைகள் சூழ்ந்து நின்று உறுத்தும் போது தான் நான் பலசாலியாயிருக்கிறேன். ஆனால் என்னை நினைத்து எனக்காகத் தவித்து என்னை அடையவும் முடியாமல் அடையவேண்டும் என்ற ஆசையை விடவும் முடியாமல் இன்னொருவர் வேதனைப்படுவதைத்தான் நான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..."

"இன்னொருவருடைய தூய்மையான அன்பு என்பது வாழ்க்கையில் மனிதன் அடைகிற விலைமதிப்பற்ற பண்டங்களில் ஒன்று. எந்த விலைமதிப்பற்ற பண்டத்தையும் கவலையோ பாதுகாப்போ இல்லாமல் அடைய முடியாது என்பது வாழ்க்கைத் தத்துவம்!"

"உண்மைதான்? நம்முடைய ஒவ்வொரு விருப்பமும் - அப்படி விருப்பமாகப் பிறக்கும் போதே - கவலையோடும் - ஏமாற்றத்தோடும் சேர்ந்துதான் பிறக்கின்றது" - தங்களுக்குள் இப்படி நீண்ட நேரம் வரை பேசிக் கொண்டிருந்தார்கள் நண்பர்கள்.

அடுத்த நாள் காலை கல்லூரி வகுப்புக்கள் வழக்கம் போல் தொடங்கிவிட்டன. மாணவர்களின் அன்பையும் ஆர்வத்தையும் கண்டு சில நாழிகை நேரம் அவன் தன் கவலைகளை மறக்க முடிந்தது. மறுதினம் காலையில் - பூபதியின் மகள் பாரதியும், ஜமீந்தாரும், கண்ணாயிரமும் மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள்.

"இன்று காலையில் அவர்கள் வந்ததும் வராததுமாக நாம் போய் நிற்க வேண்டாம். வர்த்தகப் பிரமுகர்களும், நண்பர்களுமாகத் துக்கம் விசாரிக்கிற கூட்டம் இன்னும் இரண்டு நாளைக்கு அங்கே நிறைந்திருக்கும்.. எனவே, நாம் நாளை அல்லது நாளன்றைக்குப் போய் அந்தப் பெண்ணிடம் ஒரு மரியாதைக்காகத் துக்கம் விசாரித்துவிட்டு வரலாம்" என்று கல்லூரி முதல்வர் ஆசிரியர்களிடம் எல்லாம் கூறியிருந்தார். பூபதியின் மகளைத் துக்கம் விசாரிக்கப் போகிற வேளையில் அதே வீட்டில் மஞ்சள்பட்டியாரையும், கண்ணாயிரத்தையும் சந்திக்க நேரிடுமோ என்று கூசித் தயங்கிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. இரண்டு நாட்களுக்குப் பின்பு ஒரு நாள் மாலை கல்லூரி வகுப்புக்கள் முடிந்து ஆசிரியர்களும், முதல்வரும் கூட்டமாகப் பாரதியைச் சந்திக்கப் புறப்பட்டபோது அவனும் சேர்ந்து செல்ல வேண்டியிருந்தது. கூட்டத்திலிருந்து தன்னை அவனால் பிரித்துக் கொள்ள முடியவில்லை. ஆசிரியர்களை எல்லாம் பார்த்ததும் பாரதி பெரிதாகக் கதறி அழுதுவிட்டாள். கல்லூரி முதல்வரும், துணை முதல்வரும் அவள் அருகே வீற்றிருந்தனர். சத்தியமூர்த்தி சிறிது தொலைவு தள்ளி அமர்ந்திருந்தான். அத்தனை பேருக்கு நடுவிலும் அவளுடைய கண்கள் அவனிடமிருந்து தனியாக ஏதோ அநுதாபத்தைத் தேடுவதுபோல் அடிக்கடி அவனை நிமிர்ந்து பார்த்தன. அவனும் அவளுடைய துயரத்துக்காக மனம் வருந்தினான். வாடி இளைத்து முகம் கறுத்துக் களையிழந்து போயிருந்தாள் அந்தப் பெண். அங்கே பூபதியின் படம் ஒன்று பெரிதாக்கப்பட்டுச் சுவரில் மாட்டி மாலை சூட்டப் பெற்றிருந்தது. கல்லூரி முதல்வர் ஜமீந்தாரையும் சந்தித்துத் துக்கம் கேட்க வேண்டும் என்று விரும்பியவராகப் பாரதியிடமே அவரைப் பற்றி விசாரித்தார். அவரும் கண்ணாயிரமும் எஸ்டேட்டுகளைச் சுற்றிப் பார்க்கக் காரில் புறப்பட்டுப் போயிருப்பதாகத் தெரிவித்தாள் அவள். "நாளைக்குச் சாயங்காலம் காலேஜ் போர்டு மீட்டிங் இருக்கிறதே? அதற்குள் திரும்பி வந்து விடுவார்களோ இல்லையோ?" என்று பாரதியைக் கேட்டுவிட்டுப் பின்புறம் சிறிது தள்ளினாற் போல் நின்றிருந்த ஹெட்கிளார்க்கை ஜாடை காண்பித்து அருகில் வரவழைத்து... "மீட்டிங் சர்க்குலர் எல்லாருக்கும் கையெழுத்துக்குப் போய் வந்து விட்டதா இல்லையா?" என்று விசாரித்தார் கல்லூரி முதல்வர். 'ஆமாம்' என்று தலையை ஆட்டினார் ஹெட்கிளார்க்.

பாரதியிடம் தனியாக இரண்டு ஆறுதல் வார்த்தைகள் மனத்தைத் தொடும்படியாகப் பேச வேண்டும் என்று சத்தியமூர்த்தி நினைத்திருந்தது வீணாயிற்று. இதே போல் அவனைப் பார்த்ததும் தனியே கதறியழ வேண்டுமென்று அவளும் நினைத்து அந்த நினைப்பைச் செயலாக்க முடியாமல் வீணாகியிருக்கலாம். துக்கம் விசாரிக்கிற சடங்கை முடித்துக் கொண்டு ஆசிரியர்கள் புடைசூழத் திரும்பிப் புறப்பட்டு விட்டார் கல்லூரி முதல்வர். சத்தியமூர்த்தியும் அவர்களோடு புறப்பட்டு விட்டான். அந்த வீட்டின் கடைசிப் படியிலிருந்து அவன் திரும்பிப் பார்த்துத் தன் கண்களின் பார்வையையும் உட்புறம் திருப்பிய போது கதவருகே அவனையே பார்த்தபடி பாரதி கண்கலங்க நின்றிருந்தாள். ஒரு கணம் தயங்கி விட்டுக் கூட்டத்தோடு கூட்டமாக விரைந்து நடந்தான் அவன். ஆனால் அவனுடைய மனம் மட்டும் இன்னும் ஒரு கணம் அதிகமாக அங்கே தங்கியது.

"ஏன் சார்! உங்களைத்தானே? உங்களுக்கு இந்த விவரம் நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டுமே? பாரதிக்குத் திருமணமாகி, அவள் கணவன் வீடு போகிறவரை - பூபதியின் சொத்துக்களுக்கும், பெண்ணுக்கும் ஜமீந்தார் தான் 'கார்டியனாமே'? நிஜம்தானா அது?" என்று சத்தியமூர்த்தியை விசாரித்தார் வம்பளப்பதில் ஆர்வம் உள்ள ஒரு பேராசிரியர். 'தனக்கு அந்த விவரம் ஒன்றும் தெரியா'தென்று அவருக்கு அடக்கமாக மறுமொழி கூறினான் அவன். "இத்தனை வயசுக்கு மேலே இந்த ஜமீந்தார் யாரோ ஒரு நாட்டியக்காரியிடம் மனத்தைப் பறிகொடுத்திருக்கிறாமே! இது தெரியுமா உங்களுக்கு?" என்று அதே வம்புக்காரப் பேராசிரியர் இன்னொருவரிடம் சொல்லிக் கொண்டு சென்ற போது சத்தியமூர்த்தி உடனே அருகில் ஓடிப் போய் அவரைக் கன்னத்தில் அறைய வேண்டும் போலப் பொறுமை இழந்திருந்தான். ஆனால், அவன் தன் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.

அத்தியாயம் - 46

கெட்டவர்களை வெளிப்படையாக பகைத்துக் கொள்வதும், நல்லவர்களை வெளிப்படையாக ஆதரிப்பதும் கூடச் சில சமயங்களில் அப்படிச் செய்கிறவனுக்குத் தொல்லைகளை உண்டாக்கும்.

மறுதினம் மாலையில் கல்லூரி அலுவலகத்தில் வைத்தே நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகக் குழுவினர் கல்லூரி நிர்வாகத்தின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்ததும், புதிய தலைவர் - ஆசிரியர்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு துறை ஆசிரியர்களும் புதிய தலைவருக்குத் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கல்லூரி முதல்வர் அன்று மாலையில் வகுப்புக்கள் முடிந்த பின்பும் ஆசிரியர்களை வீட்டுக்குப் போக விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார். கல்லூரி நிர்வாகக் குழுவின் கூட்டம் மிகவும் சுருக்கமாக அரைமணி நேரத்தில் முடிந்துவிட்டது. ஏற்கெனவே பலமான வதந்தி இருந்தது போலவும், பலர் எதிர்பார்த்துப் பேசிக் கொண்டது போலவும் மஞ்சள்பட்டி ஜமீந்தாரே கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். எதிர்பார்த்திருந்த உண்மைதான் அது! ஆனால், அதே உண்மை நிச்சயமாகவும் உறுதியாகவும் ஆகிவிட்ட போது சத்தியமூர்த்திக்குக் கவலையையும் கசப்பையும் உண்டாக்கிவிட்டது.

சம்பிரதாயப்படி ஆசிரியர்கள் புதிய தலைவருக்கு மாலை சூட்டித் தேநீர் விருந்தளிக்க வேண்டும். அடுத்த ஹாலில் தேநீர் விருந்துக்கும் கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் தயாராக இருந்தன.

மறைந்தவருக்கு இரங்கற் கூட்டம் நடந்து ஒரு வாரம் கூடக் கழியவில்லை! அதற்குள் புதிதாக வந்துவிட்ட தலைவருக்குப் பாராட்டுக் கூட்டமும் மாலையும் விருந்தும் தயாராகி விட்டன. அப்பப்பா! இந்த உலகத்துக்குத்தான் எத்தனை அவசரம்? வருத்தப்பட்டு இரங்குவதிலும் அவசரம்தான்! சந்தோஷப்பட்டுக் கொண்டாடுவதிலும் கூட அவசரம் தான்! வருத்தத்தையும் பரபரப்பாகக் கொண்டாடி முடித்து விடுகிறார்கள். சந்தோஷத்தையும் பரபரப்பாகக் கொண்டாடி முடித்து விடுகிறார்கள்.

தேநீர் விருந்து முடிந்ததும் முதலில் பிரின்ஸிபல், ஜமீந்தார் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராக வந்ததைப் பாராட்டிப் பேசி, அவருக்கு மிகப் பெரிய மாலை சூட்டினார். அடுத்து இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட் சார்பில் மாலை சூட்டினார்கள். அடுத்து வார்டன் ஆகிய துணை முதல்வர் மாலை சூட்டினார். இதற்கும் அடுத்தபடியாகத் தமிழ்த்துறையின் சார்பில் காசிலிங்கனார் மாலை சூட்ட வேண்டும். காசிலிங்கனார் அன்று லீவு. கல்லூரிக்கே வரவில்லை. "மிஸ்டர் சத்தியமூர்த்தி! யூ கம்... ஆன்..." என்று சத்தியமூர்த்தியைக் கூப்பிட்டுவிட்டு, அவன் இருந்த பக்கமாகத் திரும்பினார் முதல்வர். அதற்கு இரண்டு நிமிஷங்களுக்கு முன்பு வரை அங்கே உட்கார்ந்திருந்த சத்தியமூர்த்தியை இப்போது திடீரென்று காணவில்லை. அவன் உட்கார்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. "ஜஸ்ட் நௌ ஹி ஹாஸ் கான் அவுட் ஸார்!" என்று பக்கத்திலிருந்த பொருளாதார விரிவுரையாளர் எழுந்திருந்து முதல்வருக்குப் பதில் கூறினார். முதல்வரின் முகத்தில் ஈயாடவில்லை. ஜமீந்தாரோ அப்போதுதான் நிதானமாக மேஜை மேல் இருந்த ரோஜாப்பூ ஒன்றை எடுத்து அதன் இதழ்களை விரல்களிடையே கசக்கியபடி மெதுவாகப் புன்முறுவல் பூக்க முயன்று கொண்டிருந்தார். முகம் தான் புன்முறுவல் பூக்க முயன்று கொண்டிருந்ததே ஒழியக் கைவிரல்கள் ரோஜாப்பூ மாலைகளின் பூவிதழ்களை அழுத்திக் கசக்கிக் கொண்டிருந்தன.

தேநீர் விருந்துக்குப் பின் நிகழ்ந்த பாராட்டுக் கூட்டத்திலே மாலை போட வேண்டிய நேரத்தில் ஜமீந்தாரை வேண்டுமென்றே அவமானப்படுத்தினாற் போல் சத்தியமூர்த்தி வெளியே எழுந்திருந்து போய்விட்டது தெரிந்து கல்லூரி முதல்வரின் மனத்தில் பெருங்கோபம் மூண்டிருந்தது. "இந்தத் தமிழ் டிபார்ட்மெண்ட் ஆட்களே இப்படித்தான்! இவர்களோடு எப்பவும் பெரிய தலைவலிதான்" என்று மேடையில் பக்கத்தில் அமர்ந்திருந்த ஜமீந்தாருக்கும் கேட்கும் குரலில் முணுமுணுத்தார் முதல்வர். ஜமீந்தார் முகத்தில் புன்முறுவலோடு அமர்ந்திருந்தாலும் அவர் உள்ளம் சத்தியமூர்த்தியை நினைத்து எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தது. மதுரை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சத்தியமூர்த்தியையும், குமரப்பனையும், முதன் முறையாகத் தான் சந்திக்க நேர்ந்த சம்பவம், மோகினி விஷயமாகச் சத்தியமூர்த்தியின் மேல் தனக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, இப்போது தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் வந்து விட்ட கல்லூரியில் தனக்கே மாலை போட விரும்பாதவனைப் போல் அவன் நடுக்கூட்டத்தில் எழுந்து வெளியே சென்றுவிட்ட அவமானம், எல்லாவற்றையும் சேர்த்து நினைத்து ஜமீந்தாரின் உள்ளம் கனன்று கொதித்தது.

தேநீர் விருந்தும், பாராட்டுக் கூட்டமும் முடிந்து, ஜமீந்தார் வெளியேறிய போது அவருடைய கார் நின்று கொண்டிருந்த இடம் வரை அவரோடு பக்கத்துக்கு ஒருவராக நடந்து சென்ற கல்லூரி முதல்வரும் துணை முதல்வரும் அவருடைய கோபத்துக்குத் தூபம் போட்டு வளர்த்துக் கொண்டு போனார்கள். ஜமீந்தார் காரில் ஏறிய பின்போ அதே காரியத்தை உடன் இருந்த கண்ணாயிரம் செய்யத் தொடங்கினார். ஜமீந்தார் கோபம் கணத்துக்குக் கணம் சூடேறி உள் நெருப்பாய்க் கனலத் தொடங்கியது. படிப்பில்லாத மனிதனால் தன்னை இன்னொருவன் அவமானப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்துக் கொள்ள மட்டும் முடியவே முடியாது.

அதே சமயத்தில் கூட்டத்திலிருந்து பாதியிலே வெளியேறிச் சென்றிருந்த சத்தியமூர்த்தியோ ஏரிக்கரைப் பூங்காவில் தனிமையானதொரு மூலையில் உட்கார்ந்து, 'தான் செய்தது சரியா, சரியில்லையா?' என்ற சிந்தனைக் குழப்பங்களில் மூழ்கியிருந்தான். அந்தப் பாவ வடிவத்தைத் தன் கைகளால் மாலை சூட்டிக் கௌரவிக்கும்படி நேர்ந்து விடாமல் தப்பித்து வந்து விட்டதற்காக அவனுடைய ஒரு மனம் அவனைப் பாராட்டியது. 'பொது வாழ்வில் கெட்டவர்களும், நல்லவர்களும் கலந்து தான் இருப்பார்கள். இன்னும் நன்றாகச் சொல்லப் போனால் சில சமயங்களில் கெட்டவர்கள் தான் அதிகம் இருப்பதாக ஒரு பிரமை கூட ஏற்படும். கெட்டவர்களை வெளிப்படையாகப் பகைத்துக் கொள்ளுவதும், நல்லவர்களை வெளிப்படையாக ஆதரிப்பதும் கூடச் சில சமயங்களில் அப்படிச் செய்கிறவனுக்குத் தொல்லைகளை உண்டாக்கும். கெட்டவர்களை நல்லவர்கள் தொழ நேரிடும் போது, போற்றிப் பணிந்து மாலை சூட்ட நேரிடும் போது கூட உலகியல் தெரிந்து அவற்றை முகம் சுளிக்காமல் செய்துதான் ஆகவேண்டியிருக்கிறது. ஜமீந்தாருக்கு மாலை சூட்ட நேர்ந்த சமயத்தில் கூடியிருந்த கூட்டத்தையும், சூழ்நிலையையும் உணர்ந்து மாலையைச் சூட்டிவிட்டு வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் நீ வெறுத்து வெளியேறி வந்த பிடிவாதம் - யதார்த்த வாழ்வில் உன்னைப் பலவிதங்களில் தொல்லைக்குள்ளாக்கப் போகிறது' என்று இன்னொரு மனம் அவனைப் பயமுறுத்திப் பார்த்தது. அகிம்சை என்ற பேரிலோ, சாந்தம் என்ற பேரிலோ, தீமையை அங்கீகரிக்கவோ, மன்னிக்கவோ, பொறுத்துக் கொள்ளவோ செய்வதை அவனால் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ள முடிவதில்லை. எருமை மாட்டின் முதுகில் மழை பெய்தாற் போல் தீமைகளையும் கொடுமைகளையும் உணரவோ, எதிர்க்கவோ தெம்பும் தைரியமும் இல்லாமல் பட்டும் படாமலும் வாழ்கிற பரவலான பெரும்பான்மை நாகரிகத்தைக் கடுமையாக வெறுக்கும் மனப்பான்மை அவனுள் உருவாகியிருந்தது. கடிவாளமிட்டுக் கண்கள் மறைக்கப் பெற்ற குதிரை ஓடுவது போல் ரூபாய் நோட்டுக்களால் கண்களை மறைத்துக் கொண்டு நல்லது கெட்டதைக் கவனியாமல் ஆசைச் சுமைகளைச் சுமந்து இழுத்து ஓடும் சராசரி மனிதர்களிலே தானும் ஒருவனாக இருந்துவிட அவனால் முடியாது. 'இந்த நூற்றாண்டில் வாழ்க்கையின் சித்தாந்தமே தனி. நிறைந்த படிப்பையும், பண்பையும் வைத்துக் கொண்டு பலர் திண்டாடும் போது சிறிதளவு சமயோசித புத்தியையும் சூழ்ச்சியையும் வைத்துக் கொண்டே சிலர் நன்றாக வாழ்ந்து விடுகிற காலம் இது! இந்தக் காலத்திலேயே சமயோசித புத்தி இல்லாமல் கூட்டத்தில் ஒருவரை விட்டுக் கொடுத்து வெளிப்படையாகப் பகைத்துக் கொண்டு வெளியே இருக்கிற உன்னைப் போன்றவர்கள் பலசாலிகளின் விரோதிகளாகின்றீர்களே?' என்று தன்னைப் பயமுறுத்தும் போலி மனப் பிராந்தியை எள்ளி நகையாடினான் அவன். நினைத்து நினைத்து வெறுத்தது கடைசியில் நிகழ்ச்சியாகவே நடந்துவிட்டது. ஜமீந்தாரே கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவர் என ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து விருந்து வைத்து மாலை சூட்டி அந்த வைபவத்தைக் கொண்டாடியும் விட்டார்கள். அந்தக் கசப்பான உண்மையைத் தேநீர் விருந்து வைத்து நிரூபித்தாகி விட்டது.

நன்றாக இருட்டிய பின்பும் எழுந்திருந்து போகத் தோன்றாமல் ஏதேதோ சிந்தித்தபடி ஏரிக்கரையிலேயே உட்கார்ந்திருந்தான் சத்தியமூர்த்தி. மழை வந்துவிட்டது என்பதைப் புரிய வைக்கிறாற்போல் இரண்டொரு தூற்றல் மேலே விழுந்த பின்புதான் அவன் அங்கிருந்து புறப்பட்டான். ஜமீந்தார் மல்லிகைப் பந்தல் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராகி விட்டார் என்ற செய்தி அதற்குள் ஊர் முழுவதும் பரவியிருந்தது. மழையில் நனைந்து விடாமல் இருப்பதற்காக அவசரமாக அறையை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்த சத்தியமூர்த்தியை நடுவழியில் அவனைப் போலவே அவசரமாக எதிரே வந்து கொண்டிருந்த சில மாணவர்கள் சந்தித்தார்கள். அதே அவசரத்திலும் கூடத் துக்கம் விசாரிப்பது போல் அவர்கள் அவனிடம் விசாரித்த சேதி, 'ஜமீந்தார் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராகி விட்டாராமே' என்பதுதான். சத்தியமூர்த்தியின் மனப்பான்மையை நன்கு புரிந்து கொண்ட மாணவர்களாகையால் இந்தப் புதிய நிர்வாகத் தலைமையினால் அவனும் மனம் வருந்தியிருப்பான் என்று எதிர்பார்த்தே விசாரிப்பது போலிருந்தது அந்த மாணவர்களின் சொற்கள். மல்லிகைப் பந்தல் கல்லூரியின் மாணவர்களிடம் உண்டாகியிருந்த புத்துணர்ச்சிக்கும், சுறுசுறுப்புக்கும், இலட்சியக் கட்டுப்பாடுகளுக்கும், சத்தியமூர்த்தி நெருங்கிய காரணமாகவும், தலைவனாகவும் இருந்ததனால், பெரும்பாலான மாணவர்கள் அவனை ஒரு நம்பிக்கையாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். புதிய தலைவர் பற்றிய விசாரிப்பை மாணவர்களும் வருத்தத்தோடு விசாரித்துப் போன பின் லேக் அவென்யூவுக்குப் போய் அறையை அடைகிற வரை அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு போனான் அவன். மழையினால் கடையைச் சீக்கிரமே பூட்டிக்கொண்டு வந்திருந்த குமரப்பனும், தேநீர் விருந்து முடிந்து கல்லூரியிலிருந்து நேரே திரும்பியிருந்த தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் கூட அப்போது தங்களுக்குள் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள் என்பது உள்ளே நுழைந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே சத்தியமூர்த்திக்குத் தெரிந்தது. சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டு, "என்னப்பா? துரதிர்ஷ்டம் தேநீர் விருந்தோடு ஆரம்பமாகியிருப்பதாகக் கேள்விப்பட்டேனே, நிஜம்தானா?" என்று கேட்டான் குமரப்பன். 'ஆமாம்' என்று சுருக்கமாகப் பதில் வந்தது சத்தியமூர்த்தியிடமிருந்து.

"என்ன சார் இது? திடீரென்று இருந்தாற் போலிருந்து அப்படி எழுந்து போய்விட்டீர்கள்? பிரின்ஸிபலுக்கு உங்கள் மேல் சொல்ல முடியாத கோபம். கடைசியில் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துக் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவர் என்ற முறையில் ஜமீந்தார் பேசினார்" என்று சுந்தரேசன் விவரிக்கத் தொடங்கினார்.

"என்ன பேசினார் அவர்?" என்று வெறுப்புடனும், சற்றே அதைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடனும் வினவினான் சத்தியமூர்த்தி. சுந்தரேசன் சிரித்துக் கொண்டே இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னார்:

"ஜமீந்தாரோ இல்லையோ? ஆள் சரியான முரட்டுப் பேர்வழி போலிருக்கிறது. ஆட்கள் கைகட்டி வாய் பொத்தி பயத்தோடு விலகி நிற்கிற மாதிரி பேசும் பாஷைகள் கூடப் பக்கத்தில் நெருங்க அஞ்சுகின்றன. ஆங்கிலம் அருகில் வருவதற்கே பயப்படுகிறது. தமிழ் கொஞ்சம் பக்கத்தில் வருகிறது. ஆனால் மனிதர் அதைச் சித்திரவதை செய்து விடுகிறார். 'நீங்கள் என்னைப் பாராட்டிக் கௌரவித்தீர்கள். பூபதி உயிரோடிருக்கும் போதே இந்தக் காலேஜ் பொறுப்பை நான் தான் ஏற்றுக் கொள்ளணுமின்னு ரொம்ப ரொம்பச் சொல்லிக் கொண்டிருந்தான். நான் தான் வேண்டாமின்னு சொல்லி மறுத்து வந்தேன். இப்போது இந்தப் பொறுப்பு என் தலையிலே விழுந்திருச்சு. உங்களில் சில ஆசிரியர்கள் பணிவும் மரியாதையும் தெரியாதவர்களாக இருக்கிறீர்கள். திருத்திக் கொள்ளாவிட்டால் நல்லதில்லை. உங்களுக்கு என் நன்றி. வாழ்த்துக்கள்'" என்று சுந்தரேசன் வெறுப்புக் கலந்த உற்சாகத்தோடு அதை 'இமிடேட்' செய்தார்.

"முதற் கூட்டத்தில் நாலைந்து நிமிஷம் பேசுவதற்குள்ளேயே இப்படி ஆசிரியர்கள் தலையில் நிறையக் கல்லைத் தூக்கிப் போட்டு விட்டார் என்று சொல்லுங்கள்" என்று குமரப்பன் சுந்தரேசனிடம் குத்தலாகக் கேட்டான். சுந்தரேசன் இதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்தார்.

"பெரிய மனித லட்சணங்களில் இதுவும் ஒன்று குமரப்பன்! ஒரு பெரிய மனிதன் என்றால் குறைந்த பட்சம் தாய் மொழியில் நாலு வாக்கியம் தப்பாகவாவது பேசத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது தாய்மொழியில் ஒன்றுமே பேசவோ எழுதவோ தெரியாதிருக்க வேண்டும். இது இன்னும் உத்தமம். மஞ்சள்பட்டி ஜமீந்தாரோ ரொம்ப ரொம்பப் பெரிய மனிதர். அதனால் தான் தாய்மொழியும் அவருக்கு நன்றாகத் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது" என்று சத்தியமூர்த்தி குறுக்கிட்டுப் பேசினான். அவனுடைய இந்தப் பொய்ப் புகழ்ச்சியில் வெறுப்பும் அலட்சியமும் தொனித்தன. அப்போது குமரப்பன் வேறொரு குறிப்பை நினைவூட்டினான்.

"அதிருக்கட்டும் சத்தியம்! ஜமீந்தார்வாளுடைய சொற்பொழிவில் இன்னொரு குறிப்பும் இருக்கிறது. பணிவையும் மரியாதையையும் பற்றி அவர் ஞாபகப்படுத்திப் பேசியிருக்கிறாரே, அது உனக்காகத்தான். நீ பாதிக் கூட்டத்தில் அலட்சியமாக எழுந்து சென்று விட்டதை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர் அப்படிப் பேசியிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது."

"தோன்றுவதாவது ஒன்றாவது? சத்தியமூர்த்திக்காகத் தான் ஜமீந்தார் அப்படிப் பேசியிருக்கிறார் என்று கூட்டம் முடிந்து வெளியேறிய போது ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுக்குள் சொல்லிக்கொண்டு வந்தார்களே?" என்றார் சுந்தரேசன். "நீங்களும் உங்கள் வெறுப்பை அவ்வளவு வெளிப்படையாக அங்கே காண்பித்திருக்க வேண்டாமென்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். கூட்டங்களில் நமக்கு வேண்டாதவர்களைப் புகழ நேரிடுவதும் நம்மால் வெறுக்கப்படுகிறவர்களுக்கு நம் கைகளாலேயே மாலை சூட்ட நேரிடுவதும் இன்றைய பொது வாழ்வில் தவிர்க்க முடியாத காரியங்கள். நூற்றுக்குத் தொண்ணூறு பாராட்டுக் கூட்டங்கள் அப்படித்தான் நடைபெறுகின்றன. 'இரகசியமான பகைமையும், பகிரங்கமான உறவும் தான் இன்றைய வாழ்வில் சாமர்த்தியமாக வாழ்வதற்குக் கருவிகள்' என்று இராச தந்திரிகள் மட்டுமல்லாமல் சாதாரணப் பொதுமக்களும் கூடப் புரிந்து கொண்டிருக்கிற காலத்தில் நீங்கள் மட்டும் அதைப் புரிந்து கொள்ளத் தவறியிருப்பது வருந்தத்தக்கது" என்று சுந்தரேசனே மனப்பூர்வமான அநுதாபத்தோடு மேலும் கூறினார். சத்தியமூர்த்தி இதைக் கேட்டு மறுமொழி ஒன்றும் கூறவில்லை. நண்பர்களுக்குள் இந்த விவாதம் அன்று மாலை இவ்வளவில் முடிந்துவிட்டது. மூவரும் சேர்ந்து இரவு உணவுக்குப் போய்விட்டு வந்தார்கள். தூங்குவதற்கு முன் அவர்கள் பேசிக் கொண்டிருந்த விஷயம் அன்றைய காலைத் தினசரிப் பத்திரிகைகளில் 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்து போய்விட்டாரா இல்லையா?' என்பதைப் பற்றியதாயிருந்தது. சத்தியமூர்த்திக்கும் குமரப்பனுக்கும் 'சுபாஷ் போஸ்' என்றால் உயிர். "பிரதேசங்களை இழப்பதும் தோற்பதும் கூட ஒரு தேசத்துக்குப் பெரிய நஷ்டம் இல்லை. சுபாஷ் போஸைப் போல் உணர்ச்சி மிக்க ஒரு தலைவனை இழப்பதுதான் பெரிய நஷ்டம்" என்று குமரப்பன் போஸைப் பற்றிப் பேசும் போதெல்லாம் வாய்க்கு வாய் கூறுவான். எதற்கும் அலட்சியமாகச் சிரித்து விடத் தெரிந்த அந்தத் துணிவு மிக்க 'கார்ட்டூனிஸ்ட்' போஸைப் பற்றிப் பேசும் போது மட்டும் நெகிழ்ந்து கண் கலங்கி விடுவான்.

"இராணுவ ஞானமும் தேசத்துக்காகக் கொதிக்கிற பரந்த தன்மானமும் உள்ள ஒரு பெரிய தலைவன் எந்தச் சமயத்தில் இந்தத் தேசத்துக்குத் தேவையோ அந்தச் சமயத்தில் இல்லாமல் போய்விட்டது, நம்முடைய துரதிர்ஷ்டம்" என்று சத்தியமூர்த்தியும், குமரப்பனும் தங்களுக்குள் அடிக்கடி போஸைப் பற்றிப் பெருமையாகக் கூறிக் கொள்வார்கள். 'ஃபாதர் ஆஃப் இந்தியன் ரெவல்யூஷன்' (இந்தியப் புரட்சியின் தந்தை) என்று போஸைப் பற்றி ஓர் அறிஞர் கூறியிருப்பதைச் சத்தியமூர்த்தி தன் சொற்பொழிவுகளில் மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவதும் உண்டு. அன்றிரவு பேசிக் கொண்டிருந்த போது சுந்தரேசன் மட்டும் இந்தக் கருத்தை ஒப்புக் கொள்ளத் தயங்கினாற் போலச் சிறிது மாறுபட்டார். "மேடைகளில் பேசுவதையும், கட்டிடங்களைத் திறந்து வைப்பதையும் தவிர வேறு விதமான செயல் துணிவில்லாத பதவி மோகமுடையவர்களையே இன்று எங்கும் பரவலாகக் காண்கிறோம். போஸைப் போல் ஒரு பிறவி வீரர் நம்மிடையே இப்போது இருப்பாரானால் புதுமைகள் நிகழக் காணலாம்" என்று சத்தியமூர்த்தி சுந்தரேசனுக்கு அழுத்திச் சொன்னான். சுந்தரேசன் வேறு ஏதோ காரணங்களைச் சொல்லி இதை மறுத்துப் பேச முயன்றார். இதே விஷயத்தைப் பற்றியே மேலும் விவாதித்துக் கொண்டிருந்து விட்டு நண்பர்கள் அன்றிரவு உறங்கிவிட்டார்கள்.

மறுநாள் காலை சத்தியமூர்த்தி கல்லூரியில் நுழைந்ததும் மைதானத்திலும் - அலுவலகத்திலும் - பிரேயர் கூட்டத்திலும் - ஆசிரியர்கள் அறையிலும் - அங்கங்கே அவனைச் சந்தித்த ஆசிரியர்கள் எல்லோரும் அவனருகே பூகம்பத்தையோ, எரிமலையையோ அவனோடு சேர்த்துப் பார்ப்பது போல் பயத்தோடு பார்த்தார்கள். 'முதல் நாள் தேநீர் விருந்தின் போது எழுந்து வெளியே சென்ற பெருங் குற்றத்துக்காகப் பிரின்ஸிபல் அவனை என்ன செய்யப் போகிறார்?' என்று அறிந்து கொள்ளவும், காணவும் அத்தனை ஆசிரியர்களும் ஆவலாயிருப்பதாகத் தெரிந்தது. ஆனால் சத்தியமூர்த்தியோ வழக்கத்தை விட அதிகமாக நிமிர்ந்து நடக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டவனைப் போல் கல்லூரி எல்லையில் நிமிர்ந்து நடந்து கொண்டிருந்தான். அன்று முதல் பாட வேளை நேரத்திலேயே அவனுக்கு முக்கியமான வகுப்பு இருந்தது. சத்தியமூர்த்தியை முதல்வர் கூப்பிடுவதாகப் பாதி வகுப்பில் கல்லூரி ஊழியன் வந்து கூப்பிட்டான். "இப்போது வருவதற்கில்லை. வகுப்பை முடித்துவிட்டு வருகிறேனென்று சொல். மறுபடியும் நடு வகுப்பில் உள்ளே நுழைந்து என்னைக் கூப்பிடாதே" என்று பதில் சொல்லி அந்த ஊழியனைத் திருப்பி அனுப்பிய பின் ஒன்றுமே நிகழாதது போல் பழைய புன்முறுவலோடு மாணவர்கள் பக்கமாகத் திரும்பி வகுப்பைத் தொடர்ந்தான் சத்தியமூர்த்தி. மறுபடியும் வேண்டுமென்றே யாரோ தூண்டிவிட்டுச் சொல்லியனுப்பியது போல் அதே ஊழியன் பத்து நிமிஷங் கழித்து வகுப்பறைக்குள்ளே வந்து "சார் பிரின்ஸிபல் உடனே கூப்பிடறாங்க" என்று தொந்தரவு செய்தான். மாணவர்களுக்கு அப்போது அந்த ஊழியனை அறைந்து விடலாம் போல் எரிச்சலாக இருந்தது. 'ஹிஸ்டரி ஆஃப் லாங்வேஜ் அண்ட் லிட்ரேச்சர்' (மொழி இலக்கிய வரலாறு) வகுப்பை அன்று தான் நடத்தத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. மொழி இலக்கிய வரலாற்றைப் பற்றி அவன் அழகுறத் தொடங்கியிருந்த சொற்பொழிவு பாதியிலே நிற்கும்படி இரண்டு முறை குறுக்கிட்டுப் பிரின்ஸிபல் கூப்பிடுவதாக அந்த ஊழியன் தொல்லைப் படுத்தியதை வகுப்பில் யாராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சத்தியமூர்த்திக்கும் பொறுமை பறிபோய் விட்டது.

அத்தியாயம் - 47

பிறரை ஏவுவதிலும் பிறருக்கு ஆணையிடுவதிலும் திருப்திப்படுகிற மனமுள்ளவர்களால் யாரையாவது ஏவாமலும் யாருக்காவது ஆணையிடாமலும் சும்மா இருக்கவே முடியாது.

மாணவர்களையும் வகுப்பையும் அப்படி அப்படியே விட்டு விட்டுத் தன்னை உடனே வரச் சொல்லிக் கல்லூரி முதல்வர் திரும்பத் திரும்பக் கூப்பிட்டனுப்புவதைக் கண்டு சத்தியமூர்த்தியின் மனம் வெறுப்படைந்தது. அந்த வெறுப்பின் எல்லையிலே அவன் பிடிவாதக்காரனாக மாறினான். வகுப்பை அப்படியே பாதியில் விட்டுவிட்டு ஆசிரியர் வெளியேறினால் அந்த வகுப்பில் அமைதி குறையும் என்பதும், அப்படி அமைதி குறைவது - பக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற மற்ற வகுப்புகளுக்கு இடையூறாகும் என்பதும் கல்லூரி முதல்வருக்குத் தெரியாத செய்திகள் அல்லவே? தெரிந்திருந்தும் அவர் ஏதோ முரண்டு பிடிப்பது போல் விரட்டியதைக் கண்டு சத்தியமூர்த்தியால் மனம் குமுறாமல் இருக்க முடியவில்லை.

"வகுப்பை அரைகுறையாக விட்டு விட்டு வருவதற்கில்லை என்று போய்ச் சொல்! இல்லையானால் அவர் கைப்படவே வகுப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு வந்தாலும் பரவாயில்லை - உடனே நான் அவரைப் பார்க்க வந்தாக வேண்டுமென்று எழுதிக் கையெழுத்தும் போடச் சொல்லி வாங்கிக் கொண்டு வா" என்று கண்டிப்பாகக் கூறி அந்த ஊழியனைத் திருப்பி அனுப்பினான் அவன். அதற்குப் பின் வகுப்பு முடிகிற வரை யாருமே அவனைத் தேடி வரவில்லை. வகுப்பை முடித்துக் கொண்டு வெளியே வராந்தாவுக்கு வந்ததும் அதே பழைய ஊழியன் சத்தியமூர்த்தியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான். உறையின் மேலே சத்தியமூர்த்தியின் பெயர், பதவிப்பெயர் எல்லாம் தெளிவாக எழுதப்பெற்ற ஒரு கடிதம் அந்த ஊழியன் கையிலிருந்தது. உறையைச் சத்தியமூர்த்தியிடம் கொடுத்து விட்டு, அதை அவன் பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாகக் கையோடு கொண்டு வந்திருந்த கல்லூரி அலுவலக நோட்டுப் புத்தகத்தில் ஒரு கையெழுத்துப் போடும்படியும் வேண்டினான் அந்த ஊழியன். சத்தியமூர்த்தி சிறிதும் பதறாமல் கடித உறை ஒன்றைக் கல்லூரி அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொண்டதாக அதில் கையெழுத்திட்டான்.

இவ்வளவும் நிகழ்ந்த போது வகுப்பு முடிந்து வெளியேறிய மாணவர்கள் சத்தியமூர்த்தியைச் சூழ்ந்து கூட்டமாக நின்று பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். வாங்கிய கடித உறையைப் பிரித்துப் படிக்கவும் நேரமில்லாமல் அடுத்த பாடவேளையிலும் அவன் வகுப்பு எடுக்க வேண்டியிருந்தது. எனவே கல்லூரி முத்திரையோடு பிரின்ஸிபல் தனக்கு அனுப்பியிருந்த அந்தக் கடித உறையை அப்படியே வாங்கிக் கையிலிருந்த புத்தகத்தில் சொருகிக் கொண்டு அவசர அவசரமாக அவன் அடுத்த வகுப்பிற்குள் நுழைய வேண்டியதாயிற்று. அந்த வகுப்பையும் முடித்துக் கொண்டு வெளியேறிய பின்புதான் அவனுக்கு ஓய்வு இருந்தது. ஆசிரியர்கள் தங்கும் அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டு அந்த உறையைப் பிரித்துப் படிக்கலானான் சத்தியமூர்த்தி. முதல் நாள் மாலையில் கல்லூரியின் புதிய நிர்வாகியைப் பாராட்டி நடைபெற்ற கூட்டத்தில் நடுவே எழுந்து போனதற்குக் காரணம் கேட்டும், வேறு சில பழைய, புதிய குற்றங்களைச் சுமத்தியும் 'எக்ஸ்பிளநேஷன்' கோரியிருந்தார் கல்லூரி முதல்வர். காலையில் நேரில் கூப்பிட்டனுப்பிய போது வர மறுத்ததை - 'இன்ஸ்பார்டிநேசன்' (கீழ்ப் பணியாமை) - என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தின் கீழே அது முடிகிற இடத்தின் ஒரு கோடியில் 'காப்பி - டு - தி கரஸ்பாண்டெண்ட்' (நிர்வாகிக்கும் நகல் அனுப்பப்பட்டிருக்கிறது) என்று குறித்திருந்ததையும் அவன் நிதானமாகக் கவனித்துப் படித்துக் கொண்டான். இப்படி ஒரு முறைக்கு இருமுறையாக அந்தக் கடிதத்தைப் படித்து முடித்த பின் மறுநாள் எழுத்து மூலம் அதற்கு எழுதிக் கொடுக்க வேண்டிய மறுமொழியைப் பற்றிக் கூட இப்போதே அவன் மனம் சிந்திக்கத் தொடங்கிவிட்டது. அப்படிச் சிந்திக்கத் தொடங்கிய போது, ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் அவன் திரும்பத் திரும்ப ஆச்சரியப்பட்டான். சிந்தனைச் சுதந்திரம், சொற் சுதந்திரம், செயல் சுதந்திரம் என்று மேடைகளில் முழங்குவதும், இதழ்களில் எழுதும் போதும் எவ்வளவுதான் கூறினாலும் இன்னொருவன் தமக்கு பணிந்து அடங்குகிறானா இல்லையா என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் ஒரு சிறிதும் இல்லாத கௌரவமான மனிதனே உலகில் கிடையாதோ என்று தோன்றியது சத்தியமூர்த்திக்கு. பிறரை ஏவுவதிலும் பிறருக்கு ஆணையிடுவதிலும் திருப்திப்படுகிற மனமுள்ளவர்களால் யாரையாவது எதற்காகவாவது ஏவாமலும் ஆணையிடாமலும் சும்மா இருக்கவே முடியாது. பிறரை அடிமைப்படுத்தி மகிழ வேண்டுமென்ற ஆசை மகா மன்னர்களுக்கும், நவாபுகளுக்கும், சுல்தான்களுக்கும் இருந்ததைப் பழைய வரலாறு சொல்கிறது. ஆனால் நம் தலைமுறையில் நம்முடன் வாழும் ஒவ்வொரு மனிதனிடமுமே அவனவனுடைய புத்திக்கும் அகங்காரத்துக்கும் தகுந்தாற் போல் இன்னொருவனை அடக்கி ஆள வேண்டுமென்ற அடிமை வேட்கை (வேட்டை) அந்தரங்கமாக இருக்கிறது. தான் சொல்கிறபடியே இன்னொருவன் சொல்ல வேண்டுமென்றும், தான் செய்கிறபடியே இன்னொருவன் செய்ய வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறதற்கும் அதிகமாகத் தான் சிந்திக்கிறபடியே தான் இன்னொருவனும் சிந்திக்க வேண்டும் என்று கண்டிப்பாய் எதிர்பார்க்கிற சிந்தனை அடிமைத்தனம் - மிகப் பயங்கரமான தொத்து வியாதியாய் இந்தத் தேசம் முழுவதும் பரவிக் கொண்டு வருகிறதே என்றெண்ணி அஞ்சினான் சத்தியமூர்த்தி. மனிதர்களை மதிப்பதிலும் அவர்களுடைய தராதரங்களைக் கணிப்பதிலும் சொந்தமாகவோ அல்லது பிறர் நினைக்கிற நினைப்பிலிருந்து மாறுபட்டோ - சிந்திப்பதற்கு எனக்கு உரிமை இல்லை என்று கல்லூரி முதல்வர் எண்ணுகிறாற் போலிருக்கிறது.

வாழ்க்கையின் நடுவே தன்னுடைய நியாயத்தையும் நேர்மையையும் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த உரிமை மிகமிக அவசியமென்று சத்தியமூர்த்தி கருதினான். மறுநாள் காலையில் பத்து மணிக்குக் கல்லூரிக்குள் நுழைந்ததும் தன்னுடைய மறுமொழிக் கடிதத்தைப் பிரினிஸிபலிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டு வரும்படி அதே பழைய ஊழியனிடம் கொடுத்தனுப்பினான் சத்தியமூர்த்தி. அவன் பிரின்ஸிபலுக்குக் கொடுத்திருந்த மறுமொழிக் கடிதம் விரிவாகவும் மனத்தில் அழுத்தி உறைக்கும் படியாகவும் எழுதப்பட்டிருந்தது. முந்தினம் மாலை ஆறு மணிக்குக் குமரப்பனும், தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் ஏதோ திரைப்படத்துக்குப் போகலாமென்று சத்தியமூர்த்தியை அழைத்த போது தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி அவர்களோடு திரைப்படத்துக்குப் போகாமல் அவர்களை மட்டும் அனுப்பிவிட்டு அறையில் தங்கி அந்தக் கடிதத்தை எழுதியிருந்தான் சத்தியமூர்த்தி.

முதல்வர் அவனை 'எக்ஸ்பிளநேஷன்' கேட்டிருக்கும் செய்தி ஆசிரியர்கள் எல்லாருக்கும் தெரிந்திருந்தது. என்ன காரணத்தினாலோ கல்லூரியின் புதிய நிர்வாகியான மஞ்சள்பட்டியார் சத்தியமூர்த்தியை அறவே வெறுக்கிறார் என்பதும் சில ஆசிரியர்களுக்குத் தெரிந்திருந்தது. அவனோடு நெருங்கி நின்று பேசினாலோ அவனை அணுகி நின்று சிரித்துக் கொண்டிருந்தாலோ கூடத் தாங்களும் கல்லூரி முதல்வரின் கடுஞ்சினத்துக்கு ஆளாக நேரிடுமோ என்ற பயத்தினால் வழக்கமாக அவனிடம் கலகலப்பாகப் பேசிப் பழகும் சில ஆசிரியர்கள் கூட இப்போது பேசவும் சிரிக்கவும் பயந்து மெல்ல விலகிச் சென்றார்கள். செய்தி மாணவர்கள் மத்தியிலும் பரவலாகத் தெரிந்திருந்தது. பிரின்ஸிபலுக்கும் சத்தியமூர்த்திக்கும் ஏதோ தகராறு என்று தெரிந்து கொண்டு அந்தத் தகராறில் நிச்சயமாக நியாயம் சத்தியமூர்த்தியின் பக்கம் தான் இருக்க முடியும் என்பதையும் அங்கீகரித்துக் கொண்டு அவன் மேல் அனுதாபத்தோடு இருந்தார்கள் மாணவர்கள்.

"நான் கேள்விப்பட்டது மெய்தானா மிஸ்டர் சத்தியமூர்த்தி? நீங்கள் 'உதவி வார்டன்' என்ற பெயருக்கேற்ப எந்த உதவியையும் செய்வதில்லை என்றும், நீங்கள் நெருங்கிப் பழகியும் சிரித்துக் கலந்து பேசியும் ஹாஸ்டல் மாணவர்களையெல்லாம் வார்டனிடம் பயமோ மரியாதையோ இல்லாமல் செய்து விட்டீர்கள் என்றும் இப்போது வார்டனாக இருக்கும் வைஸ் பிரின்ஸிபல் உங்களைப் பற்றிப் பிரின்ஸிபலிடமும், புதிய நிர்வாகியிடமும் புகார் செய்திருக்கிறாராமே? அந்தப் புகாரைக் கேட்டு விட்டு 'நீங்கள் உதவி வார்டனாக இருந்து சாதித்தது போதும், முதலில் இராஜிநாமாச் செய்துவிட்டு மறுவேலை பாருங்கள்' என்று பிரின்ஸிபல் உங்களை இராஜிநாமாச் செய்யும்படி வற்புறுத்துகிறாராமே? உண்மைதானா?" என்று முற்றிலும் புதியதும் சத்தியமூர்த்திக்கே அதுவரை தெரியாததுமான ஒரு விஷயத்தை விசாரித்தார் வாயரட்டையில் கெட்டிக்காரரான பேராசிரியர் ஒருவர். நடந்ததாகத் தெரிந்தவை - இனி நடக்குமென்று தாங்களாகவே அநுமானித்துக் கொண்டவை - எல்லாவற்றையும் பற்றித் தாராளமாகப் பேசி வம்பளக்கத் தொடங்கியிருந்தார்கள்! பிரின்ஸிபலுக்காக எழுதி எடுத்துக் கொண்டு வந்திருந்த கடிதத்தை அவருக்குக் கொடுத்தனுப்பிவிட்டு ஆசிரியர்கள் தங்கும் அறையில் அமர்ந்திருந்த போதுதான் இவ்வளவு வம்புகள் அங்கு நிரம்பிக் கிடப்பதைச் சத்தியமூர்த்தியே புரிந்து கொள்ள முடிந்தது. அன்றைக்கென்று நேர்ந்தாற் போல் முதல் இரண்டு பாட வேளைகளிலும் அவனுக்கு எந்த வகுப்பும் இல்லை. பதினோரு மணிக்கு அவனைப் பிரின்ஸிபல் கூப்பிடுவதாகக் கல்லூரி ஊழியன் வந்து தெரிவித்தான். சத்தியமூர்த்தி உடனே அவரைச் சந்திக்கச் சென்றான். ஏதோ பெரிய கலகத்துக்காகக் காத்திருப்பது போல் பிரின்ஸிபல் அறை - வீரர்கள் கைகலப்பதற்கு முந்திய போர்க்களமாய் அமைதி மண்டியிருந்தது. மின்சார விசிறி ஓசைப்படுவதற்கும் பயந்தாற் போல் மெல்ல ஓசைப்பட்டுச் சுற்றிக் கொண்டிருந்தது. சுவரில் நான்கு பக்கமும் பெரிய பெரிய நிலைக் கண்ணாடி அளவுக்குச் சட்டம் போட்டு மாட்டப்பட்டிருந்த காந்தியடிகள் படம், விவேகானந்தர் படம், கவி ரவீந்திரநாத் தாகூர் படம், மகாகவி பாரதியார் படம் எல்லாம் அந்த அறையில் வந்து சிறைப்பட்டு விட்டதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பது போல் அமைதியாயிருந்தன. புதிதாகப் பூபதி அவர்களின் படமும் அறையில் முக்கியமானதொரு பகுதியில் மாட்டப்பட்டிருந்தது. சத்தியமூர்த்தி உள்ளே வந்து நின்று பத்து நிமிடங்கள் வரை அவன் வந்து நிற்பதையே கவனிக்காதவர் போல் குனிந்து எழுதிக் கொண்டிருந்தார் பிரின்ஸிபல். மேஜை மேல் டெலிபோன் - பின் குஷன் - மை ஒத்தும் தாள் பதித்த கட்டை - பைல் கட்டுகள் - சத்தியமூர்த்தியின் பிரிக்கப்பட்ட கடிதம் எல்லாம் இருந்தன. அவர் வேண்டுமென்றே தன்னை அலட்சியம் செய்ய முயல்வதாகத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. ஒரு கனைப்புக் கனைத்துவிட்டு நாற்காலியை ஓசைப்படும்படியாக அழுத்தி இழுத்துப் போட்டுக் கொண்டு அவருடைய மேஜைக்கெதிரே உட்கார்ந்து கொண்டான் அவன். முன்பே அவன் வந்திருப்பது தெரிந்திருந்தும் அப்போதுதான் நிமிர்ந்து பார்ப்பவர் போல் பார்த்து, "ஓ நீங்களா?" என்று கேட்டுவிட்டு எழுதிக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து எழுதலானார்.

சத்தியமூர்த்தி சுவரில் படங்களாக இருந்த மேதைகளின் ஒளி நிறைந்த கண்களை நோக்கத் தொடங்கினான். 'இந்த நாட்டில் பிறரை அதிகார வெறியோடு அடக்கியாள்வதில் மகிழ்ச்சியடையக் கூடிய எத்தனையோ அற்பர்களுடைய அறையில் இப்படித்தான் நீங்களெல்லாம் படங்களாகத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள் பாவம்!' என்று நினைக்கத் தோன்றியது அவனுக்கு. இப்போது மேஜையிலிருந்த டெலிபோன் மணி அடித்தது. பிரின்ஸிபல் எழுதிக் கொண்டிருப்பதிலிருந்து விடுபட்டு டெலிபோனை எடுத்தார். சத்தியமூர்த்தியை அப்போது அங்கே எதிரே வைத்துக் கொண்டு பேசுவதற்குச் சிரமப்பட்டார் அவர். மிக அருகில் இருந்ததனால் டெலிபோனில் எதிர்ப்புறமிருந்து ஒலித்த குரலை அவனும் ஓரளவு கேட்க முடிந்தது. மஞ்சள்பட்டியாரின் குரல் தான் அது! முன்னும் பின்னும் தொடர்பில்லாமல் காதில் விழுந்தாலும் 'பயலைத் தொலைத்துக் கட்டிவிட்டு மறுகாரியம் பாருங்க' என்று எதிர்ப்பக்கமிருந்து டெலிபோனைக் கீழே வைப்பதற்கு முன் இரைந்து ஒலித்த வாக்கியம் அவனுக்கு நன்றாகக் கேட்டது. டெலிபோனைக் கீழே ரெஸ்டில் வைத்துவிட்டு, எழுதிக் கொண்டிருந்த காகிதங்களையும், அடுக்கி டிராயரில் போட்ட பின் மேஜை மேல் இருந்த 'பைல்' கட்டுக்களை இங்கும் அங்குமாக இரண்டு முறை நகர்த்தியும் முடிந்த பிறகு அவனை விசாரிப்பதற்குத் தயாராகி விட்டவர் போல் ஒரு கனைப்புக் கனைத்துவிட்டுத் தலை நிமிர்ந்தார் பிரின்ஸிபல் உடனே மணியடித்து அந்த மணிக்கு விடையாக வந்து நின்ற ஊழியனிடம் ஹெட்கிளார்கை உடன் அழைத்து வருமாறு கூறினார். ஹெட்கிளார்க் வந்து நின்று கொண்ட பின் சிறிது நேரம் சத்தியமூர்த்தி இருந்த பக்கமே கவனிக்காமல் - அவன் அங்கு இருப்பதையும் மறந்து விட்டார் போல் ஹெட்கிளார்க்கிடம் வேறு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். அப்புறம் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பித் திடீரென்று அவர் பேச்சை ஆரம்பித்த போது ஹெட்கிளார்க் வெளியேறாமல் தானாக அங்கு ஆணி அடித்தாற் போல் நின்று கொண்டது சத்தியமூர்த்திக்கு அநாகரிகமாகத் தோன்றியது. பிரின்ஸிபல் ஹெட்கிளார்க் அங்கு தன்னோடு உடனிருப்பதையே விரும்புவது போல் தெரிந்தது. பிரின்ஸிபலும் பேசத் தொடங்கிவிட்டார்.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! உங்களுடைய 'எக்ஸ்பிளநேஷனை'ப் படித்தேன்! நான் கேட்டதற்குப் பதில் இல்லை...! வேறு என்னென்னவோ வளைத்து வளைத்து எழுதியிருக்கிறீர்கள்..."

"வளைத்து வளைத்து எதையும் எழுதவில்லை சார்! நீங்கள் ஏதேதோ குற்றங்களையெல்லாம் என் மீது சுமத்தியிருந்தீர்கள். அந்தக் குற்றங்களை 'நான் செய்யவில்லை' என்று விளக்கம் எழுதியிருந்தேன்."

"அப்படியில்லை! நேற்று நான் உங்களைக் கூப்பிட்டனுப்பிய போது நீங்கள் என்னைப் பார்க்க வந்திருக்கலாம். நீங்கள் வர மறுத்தது உங்களுடைய 'அர்ரகென்ஸை' (திமிரை)த்தானே காண்பிக்கிறது? நீங்கள் உங்களைப் பற்றி ரொம்பவும் டூ மச் ஆக (அதிகமாக) நினைத்துக் கொண்டு விட்டதுதான் இதற்கெல்லாம் காரணம்."

"வகுப்பைப் பாதியில் விட்டுவிட்டு வருவதற்கு நான் தயாராக இல்லை சார்! வகுப்பைப் பாதியில் விட்டாலும் பரவாயில்லை, உங்களை உடனே பார்த்தாக வேண்டும் என்று நீங்கள் எழுத்து மூலம் எழுதி அனுப்பியிருந்தால் வந்திருப்பேன்."

"நான் எப்படி எதைச் செய்ய வேண்டும் என்று வரையறுக்க நீங்கள் யார்?"

"நான் உங்களுக்குக் கீழே வேலை பார்க்கிற ஒரு சாதாரண விரிவுரையாளன் தான்! ஆனால் நான் மதிக்கவும் - வணங்கவும் தலைவராக ஏற்றுக் கொள்ளவும் உங்களிடம் சில குறைந்த பட்சத் தகுதிகளாவது இருக்க வேண்டும் என்று என் மனம் ஒவ்வொரு விநாடியும் உங்களிடம் தகுதிகளைத் தேடிக் கொண்டிருக்கிறதென்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது."

"நான்ஸென்ஸ்! நீங்கள் எல்லை மீறிப் பேசுகிறீர்கள்!"

"..."

"பல காரணங்களால் உங்களைப் போன்ற ஒருவர் 'டிபுடி வார்ட'னாக இருப்பதை நானும் - நிர்வாகியும் - வார்டனும் விரும்பவில்லை. நீங்கள் உடனே 'டிபுடி வார்டன்' பதவியை 'உங்களால் பார்க்க முடியவில்லை' என்று ரிஸைன் (இராஜிநாமா) செய்ய வேண்டும்...!"

"பிரின்ஸிபல் சார்! தயவு செய்து இதற்கு ஒரு சிறு விளக்கம் உங்களிடமிருந்து எனக்கு உடனே தேவை!"

"என்ன விளக்கம்?"

"ரிஸைன் செய்வது என்றால் என்ன?"

"புரியாவிட்டால் பச்சைத் தமிழில் தெளிவாகவே சொல்லுகிறேன்? நீங்கள் இராஜிநாமா செய்ய வேண்டும்..."

"... என்று நீங்கள் என்னை வற்புறுத்துகிறீர்கள் இல்லையா?"

"விதண்டாவாதம் செய்யாதீர்கள்."

"நீங்கள் தான் இதுவரை அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். 'இராஜிநாமா' என்று யார் அதைச் செய்கிறானோ அவனே விட்டு விட விரும்பி அல்லவா செய்ய வேண்டும்? நீங்கள் கூப்பிட்டு மிரட்டுகிறீர்கள் என்பதற்காக அதை நான் எப்படிச் செய்ய முடியும்? வேண்டுமானால் பிரின்ஸிபலும் கல்லூரி நிர்வாகியும் என்னைக் கூப்பிட்டு மிரட்டுவதால் நான் என்னுடைய 'டிபுடி வார்டன்' பதவியை இராஜிநாமாச் செய்கிறேன்' என்று உண்மைக் காரணத்தையும் அதிலேயே எழுதிக் கையெழுத்துப் போடுகிறேன் சார். அல்லது 'டிபுடி வார்டனாக' இருக்க எந்தெந்தக் காரணங்களால் நான் தகுந்தவன் அல்ல என்பதைக் கூறி என்னை அந்தப் பதவியிலிருந்து நீங்களே தைரியமாக நீக்கி விடுங்கள்."

"நீங்கள் 'டிபுடி வார்டனாக' இருந்து ஹாஸ்டலில் எதுவுமே செய்யவில்லை."

"இது முழுப் பொய்! ஹாஸ்டலில் உள்ள நூற்றுக் கணக்கான மாணவர்களைக் கூப்பிட்டு ஓர் இடத்தில் கூட்டம் கூட்டி என்னை முன் நிறுத்தி இந்தக் கேள்வியைக் கேளுங்கள். 'நான் எதுவும் செய்யவில்லை' என்று ஒரு மாணவன் வாய் திறந்தாலும் நான் 'டிபுடி வார்டன்' வேலை, லெக்சரர் வேலை எல்லாவற்றையும் விட்டுவிடத் தயார். வார்டனாக இருப்பவர் ஹாஸ்டல் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை. 'நமக்கென்ன டிபுடி வார்டன் தானே?' என்று சும்மா இராமல் நான் ஆர்வத்தோடு ஓடியாடிப் பாடுபட்டதற்கு உங்கள் வார்த்தை நல்ல பரிசாக இருக்கிறது சார்! உங்களுக்கு என் மேல் வெறுப்பு இருக்கலாம். அதற்காக என்னைப் பற்றிய உண்மைகளை நீங்கள் மறைப்பது பாவம்..."

"சுற்றி வளைத்துப் பேச விரும்பவில்லை மிஸ்டர் சத்தியமூர்த்தி! நீங்கள் 'டிபுடி வார்டனாக' இருப்பது நம்முடைய புதிய நிர்வாகிக்குப் பிடிக்கவில்லை! இன்னும் வயது முதிர்ந்தவர் யாராவது 'டிபுடி வார்டனாக' இருக்க வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார்..."

"மிகவும் நல்லது! இதே காரணத்தைக் கல்லூரி நோட்டீஸ் போர்டில் எழுதித் தொங்க விட்டுவிட்டு நீங்களோ, நிர்வாகியோ என்னை 'டிபுடி வார்டன்' பதவியிலிருந்து வெளியேற்றினால் போகிறது. அதற்காக என்னை இராஜிநாமாச் செய்யும்படி தூண்டுவானேன்? அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. வெறும் நியாயம் தானே என்னிடம் இருக்கிறது! உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யலாமே?" என்று கூறி விட்டு பிரின்ஸிபல் அறையிலிருந்து அவன் வெளியேறுவதற்காக எழுந்திருந்த போது எதிரே சுவரில் இருந்த காந்தியடிகளின் படம் அவனுடைய பார்வையைச் சந்தித்தது.

'ஏ மகாத்மாவே! உன்னை மகாத்மாவாகப் புரிந்து கொண்டிருக்கிற இந்தத் தேசத்தில் சாதாரண ஆத்மாக்கள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கின்றன பார்த்தாயா?' என்று அந்தப் படத்திற்கு முன்னால் கோவென்று கதறி அழ வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு. அவன் பிரின்ஸிபல் அறையிலிருந்து கோபமாக வெளியேறியதை இடைவேளைக்காக மைதானத்தில் கூட்டமாக வெளியேறி நடந்து கொண்டிருந்த மாணவ மாணவிகளும் அப்போது பார்த்தார்கள். அரை மணி நேரத்துக்கெல்லாம் சத்தியமூர்த்தி ஏதோ ஒரு வகுப்பில் இருந்த போது கல்லூரி ஊழியன் இரண்டாவது முறையாகக் கல்லூரி அலுவலக முத்திரையோடு கூடிய ஒரு தடித்த கடித உறையை அவனிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டுக் கையெழுத்தும் வாங்கிக் கொண்டு சென்றான்.

அத்தியாயம் - 48

சில மாடுகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக உண்ணி என்ற பூச்சி அவற்றின் உடலிலேயே ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல் சமூகத்தில் நல்லவர்களின் பொதுநலனை உறிஞ்சிக் கெடுக்கும் சில கெட்டவர்களும் மிக அருகிலேயே ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பூபதி உயிரோடிருந்த வரையில் தன் மேல் வெறும் பொறாமையோடிருந்தவர்கள் எல்லாரும் இப்போது அதை ஓர் எதிர்ப்பாக வெளிப்படையாக மாற்றிக் கொண்டு செயல்படுவது சத்தியமூர்த்திக்குப் புரிந்தது. முதல்வர், துணை முதல்வர், ஹெட்கிளார்க் எல்லோரும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு காரணத்தால் அவனுக்குக் கெடுதல் செய்யக் காத்திருப்பவர்கள்தான். புதிய நிர்வாகியாகிய மஞ்சள்பட்டியாரோ அவனை அறவே வெறுத்து மனம் கொதித்துக் கொண்டிருப்பவர்.

கெடுதல் செய்வதையே பொழுது போக்காகக் கொண்டிருப்பவர்களுக்குப் பயந்தும், நயந்தும் அமைவதனால் சமூகத்துக்குப் பொதுவான நன்மை எதுவும் கிடையாது. சில மாடுகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக 'உண்ணி' என்ற பூச்சிகள் அந்த மாடுகளின் உடலிலேயே அட்டை போல் ஒட்டிக் கொண்டிருக்கும். அதைப் போல் சமூகத்தில் உள்ள நல்லவர்களின் பொதுவான நலத்தை உறிஞ்சிக் கொழுப்பதற்குச் சுயநல உண்ணிகளாகிய சில கெட்டவர்களும் மிக அருகில் இருப்பார்கள். அப்படிக் கெட்டவர்கள் மல்லிகைப் பந்தலிலும் இருப்பதைக் கண்டு சத்தியமூர்த்தி வியப்படைந்து விடவில்லை. அவன் கல்லூரி முதல்வரை அவருடைய அறையில் போய்ச் சந்தித்துவிட்டு வந்த அரை மணி நேரத்துக்கெல்லாம் மறுபடி ஊழியன் தேடி வந்து அவனிடம் கொடுத்து விட்டுப் போன உறையில் இரண்டு பெரிய கடிதங்கள் இருந்தன. ஒரு கடிதத்தில் கல்லூரி நிர்வாகக் குழுவும் அதன் தலைவரும் முதல்வரும், சத்தியமூர்த்தி 'உதவி வார்டனாக' இருந்து இதுவரை தன் கடமைகளைச் சரிவரப் புரியவில்லை என்று கருதுவதாகவும், அவனை அந்தப் பதவியிலிருந்து உடனே நீக்குவதாகவும், அவனிடம் உள்ள விடுதி சம்பந்தமான காரியங்களை வார்டனிடம் 'சார்ஜ்' ஒப்படைத்து விட்டு விலகிவிட வேண்டும் என்பதாகவும் கண்டிருந்தது. இன்னொரு கடிதத்தில் ஏற்கெனவே முதல்வர் அவனிடம் கேட்டிருந்த 'எக்ஸ்பிளநேஷனுக்கு'ச் சரியான மறுமொழி கொடுக்கப்படவில்லை என்றும் அடுத்த நாள் காலைக்குள் இன்ன இன்ன குற்றச்சாட்டுகளுக்குப் பொருந்திய மறுமொழி கொடுத்தாக வேண்டுமென்றும் கண்டிருந்தது. சூழ்நிலை மிகவும் மனம் வெறுக்கத் தகுந்த முறையில் உருவாகிவிட்டதைப் பார்த்து அவன் கவலைப்படவில்லை. மறுநாள் அவன் கல்லூரி முதல்வருக்கு எழுதிய மறுமொழிக் கடிதம் இப்படி ஆரம்பமாகியிருந்தது.

"என்னுடைய நினைவு, சொல், செயல் ஆகியவற்றின் நன்மை தீமைகளை உற்று ஆராய்ந்து கடுமையாகத் தாக்குவதற்கும், பாராட்டுவதற்கும், குத்திக் காட்டுவதற்கும் எனக்குள்ளேயே பாரபட்சமற்ற விமரிசகன் ஒருவன் இருக்கிறான். அந்த விமரிசகனுக்குத்தான் மனச்சாட்சி என்று பெயர். மற்றவர்களுடைய பொறாமையும் காழ்ப்பும் நிறைந்த விமரிசனத்தை விட என்னுள்ளேயே இருக்கும் இந்த உண்மையான விமரிசகனுடைய கருத்துக்குத்தான் நான் அதிகமான மதிப்பளிக்க முடியும். அப்படி மனச்சாட்சிக்கு மதிப்பளிக்காமல் எந்தக் காரியத்தையும் நான் செய்ததில்லை; செய்ய நினைத்ததுமில்லை. விரிவுரையாளனாகவும், விடுதி உதவி வார்டனாகவும் இருந்து, நான் இந்தக் கல்லூரியில் ஒவ்வொரு விநாடியும் என்னுடைய காரியங்களை மனச்சாட்சிக்குத் துரோகம் செய்யாமல் நன்றாகத்தான் ஆற்றியிருக்கிறேன். என்னை உதவி வார்டன் பதவியிலிருந்து விலக்கியிருப்பதாக நிர்வாகக் குழுவின் சார்பில் எழுதியிருக்கிறீர்கள். விலக்கவும், நீக்கவும் உங்களுக்குத் தாராளமாக அதிகாரம் உண்டு. எல்லாவற்றையும் செய்து முடிக்கும் அதிகாரமுள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். நீங்களும் அப்படி நினைத்துக் கொண்டுதான் இதைச் செய்திருக்கிறீர்கள்..." என்று தொடங்கி அவன் எழுதியிருந்த பன்னிரண்டு பக்கக் கடிதம் மறுநாள் காலை முதல்வருடைய மேஜைக்குப் போய்ச் சேர்ந்தது. தற்செயலாக அன்று காலை அவன் கல்லூரிக்குள் நுழைந்த போது - காலையில் சர்க்கரை போடாத கசப்புக் காப்பியை விடுதியில் வழங்கியதாகவும் - சர்க்கரையைக் குறைத்துச் செலவழிக்க வேண்டுமென்று வார்டன் கூறியிருப்பதால் விடுதியின் ஊழியர்களை வற்புறுத்தி வினாவிய போதும் அவர்கள் சர்க்கரை தர மறுத்ததாகவும் சில மாணவர்கள் குறை தெரிவித்தார்கள். மாணவர்கள் கல்லூரி உணவு விடுதி சம்பந்தமான எந்தக் குறையை வந்து தெரிவித்தாலும் அதை சத்தியமூர்த்தி பொறுப்பாக உடனே நிவர்த்திச் செய்து மாணவர்களின் மனக்கசப்பைப் போக்கி விடுவான். அதனால் மாணவர்கள் சத்தியமூர்த்தியைத் தேடிக் கொண்டு வந்து எதை வேண்டிக் கொண்டாலும் அது நிறைவேறிவிடும் என்கிற முழு நம்பிக்கையோடு வேண்டிக் கொள்வது வழக்கமாயிருந்தது. ஆனால் இன்றோ தேடி வந்திருந்த மாணவர்களே கேட்டுத் திகைக்கும்படியான ஓர் உண்மையை அவர்களிடம் தெரிவித்தான் சத்தியமூர்த்தி.

"இளம் நண்பர்களே! கல்லூரி விடுதியில் வழங்கும் காப்பி சம்பந்தமாக உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற கசப்பை நான் இன்று மாற்ற முடியாமல் இருப்பதற்காகத் தயவு செய்து நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஏனென்றால் நேற்றுப் பகலிலிருந்து நான் இந்தக் கல்லூரியில் வெறும் தமிழ் விரிவுரையாளராகத்தான் இருக்கிறேன். விடுதி உதவி வார்டனாக இல்லை..."

இதைக் கேட்டு மாணவர்களுக்குப் பெரிதும் அதிர்ச்சியாக இருந்தது.

"ஏன் சார்? நீங்களே வேண்டாமென்று விட்டு வீட்டீர்களா?"

"இல்லை! அவர்களே வேண்டாமென்று விட்டு விட்டார்கள். என்னைக் காட்டிலும் சுறுசுறுப்பாகவும் நன்றாகவும் உங்களுக்கு உதவி செய்ய முடிந்த யாராவது ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்கப் போவதாகக் கல்லூரி முதல்வர் கூறியிருக்கிறார். அதனால் நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம்."

"அப்படிச் சொல்லாதீர்கள் சார்! இந்தச் செய்தியைக் கேட்டு எங்களுக்கு இரத்தம் கொதிக்கிறது" என்று ஆத்திரப்பட்டுக் குமுறினான் ஒரு மாணவன். சத்தியமூர்த்தி ஒரு புன்முறுவலோடு அந்த மாணவர்களுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டு மேலே நடந்தான். மாணவர்களின் நடுவே சத்தியமூர்த்திக்கு எவ்வளவு செல்வாக்கும், புகழும் உண்டு என்பது கல்லூரி முதல்வருக்குத் தெரியும். அதனால் தான் அவனை உதவி வார்டன் பதவியிலிருந்து நீக்கிய செய்தி எந்த விதமான பரபரப்புணர்ச்சியுடனும் மாணவர்களிடையே பரவிவிடாமல் அவர் கவனமாயிருந்தார். ஆனால் செய்தி எப்படியோ பரவிவிட்டது. லேடி டைப்பிஸ்ட், சத்தியமூர்த்திக்காக என்ன கடிதம் டைப் செய்யப்பட்டது என்ற இரகசியத்தைக் கல்லூரி லைப்ரேரியன் ஜார்ஜிடம் சொல்லி எப்படியோ மாணவர்களிடையே முதல்வரும், நிர்வாகியும் சத்தியமூர்த்திக்கு அநீதி இழைத்திருக்கிறார்கள் என்ற உண்மை பரவிவிட்டது. அதன் விளைவு இருந்தாற் போலிருந்து பெரிதாக விசுவரூபம் எடுத்தது. விடுதி மாணவர்கள் ஸ்டிரைக் செய்தார்கள். திடீரென்று கல்லூரி முதல்வரே எதிர்பாராதபடி நண்பகல் உணவின்போது ஹாஸ்டல் உணவு விடுதிக்குள் ஒரு மாணவனும் நுழையவில்லை.

உணவு மேஜைகளில் விரித்த இலைகளும் தண்ணீர் நிரம்பிய டம்ளர்களும் அப்படியே கிடந்தன. பரிமாறுகிறவர்களும், சமையற்காரர்களும் சாயங்காலம் வரை காத்திருந்து பார்த்தார்கள். மெஸ்ஸிற்குள் ஒரு மாணவன் கூட எட்டிப் பார்க்கவில்லை. சத்தியமூர்த்தியே மறுபடியும் உதவி வார்டனாக வேண்டுமென்பது விடுதி மாணவர்களின் கோரிக்கையாக இருந்தது. நாளுக்கு நாள் இதே ஸ்டிரைக் இன்னும் தீவிரமாகியது. முதல் நாள் உணவு விடுதி சாப்பாட்டை மட்டும் பகிஷ்காரம் செய்த மாணவர்கள் மறுநாள் சத்தியமூர்த்தியின் வகுப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா ஆசிரியர்களின் வகுப்புக்களையும் கூடப் பகிஷ்காரம் செய்தார்கள். 'முதல்வரின் அநீதி ஒழிக' 'முதல்வர், சத்தியமூர்த்தி அவர்களிடம் நியாயமாக நடக்க வேண்டும்' 'உதவி வார்டனை மாற்றாதே' என்றெல்லாம் அங்கங்கே தட்டிகளிலும், சாலைகளிலும் சுண்ணாம்பினாலும் கொட்டை கொட்டையாக எழுதியிருந்தார்கள் மாணவர்கள். நான்கு நாட்களாக இதே நிலைமை நீடித்தது. கல்லூரி விடுதியில் சிற்றுண்டியும், பகல், இரவு உணவுகளும் நாடுவாரின்றி வீணாகச் சீரழிந்தன. "ஸ்டிரைக்கில் சேர்ந்திருக்கிற முதலாண்டு மாணவர்களை எல்லாம் 'செலக்ஷனில்' தொலைத்து விடுவேன், தொலைத்து! மரியாதையாக விடுதிக்குச் சாப்பிடச் செல்லுங்கள். ஒழுங்காக வகுப்புகளுக்கு வந்து சேருங்கள்" என்று பிரின்ஸிபல் மிரட்டியது பயன்படவில்லை. சத்தியமூர்த்தி மாணவர்களின் இந்த விதமான குமுறலையும் கொதிப்பையும் தடுக்க நினைத்தாலும் முடியவில்லை.

'அவர்கள் நியாயத்துக்காகப் போராடுகிறார்கள். எனக்காக மட்டும் போராடவில்லை. அவர்களை நான் தடுத்தால் நானே கல்லூரி முதல்வர் செய்தது நியாயம் என்று ஒப்புக் கொள்வது போலாகும்!' என்பதாக எண்ணி அவன் அமைதியாக இருந்தான். நான்காவது நாள் மாலை முதல்வரும், நிர்வாகியும் இரகசியமாகச் சந்தித்து 'ஸ்டிரைக்கை எப்படி ஒடுக்குவது' என்று பேசி ஆலோசனை செய்து சத்தியமூர்த்திக்கு இன்னொரு குற்றச்சாட்டுக் கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள். அதில் மாணவர்களை அவன் தான் 'ஸ்டிரைக்' செய்யத் தூண்டினான் என்றும், ஸ்டிரைக்கை வாபஸ் வாங்குவதற்கான முயற்சிகளில் அவன் ஈடுபடாவிட்டால் உடனே அவனை விரிவுரையாளர் பதவியிலிருந்தும் 'சஸ்பெண்ட்' செய்ய நேரும் என்றும் பயமுறுத்தியிருந்தார்கள்.

'நான் யாரையும் எதற்கும் தூண்டவில்லை. நீங்கள் தான் உங்கள் செய்கைகளின் மூலம் அருமையான மாணவர்களை இப்படியெல்லாம் ஆவேசம் கொள்ளும்படித் தூண்டியிருக்கிறீர்கள். அவர்கள் கோருகிற நியாயத்தைத் தடுக்க எனக்கே உரிமை இல்லை. அவர்கள் உங்களிடம் நியாயம் கேட்கிறார்கள். நீங்கள் அதை அளிக்க முயற்சி செய்வது தான் அவர்களை ஸ்டிரைக்கிலிருந்து மீளச் செய்வதற்கு வழி' என்று கல்லூரி முதல்வருக்குச் சுருக்கமாகப் பதில் அனுப்பி விட்டான் அவன். ஆசிரியர்கள் சத்தியமூர்த்தியை அணுகி நின்றாலே கேடு வருமோ என்று அஞ்சினார்கள். மிகச் சில நாட்களில் அங்கே அவன் தனியானான். அவன் வந்து போகிற வழியும் யாரும் துணையற்ற தனி வழியாகியது.

"இந்த பையனை வேலைக்காக 'இண்டர்வ்யூ' செய்யும் போதே பழைய நிர்வாகியிடம் நான் எவ்வளவோ வற்புறுத்திச் சொன்னேன். 'இவன் அரசியல் சம்பந்தம் உள்ளவனாக இருப்பானோ என்று சந்தேகமாக இருக்கிறது சார்! இந்த மாதிரி ஆட்களை உள்ளே விட்டுவிட்டால் 'ஸ்டிரைக்' எல்லாம் வந்து காலேஜ் குட்டிச் சுவராகி விடும். மாணவர்கள் பாழாகி விடுவார்கள்' என்று முட்டிக் கொண்டேன். அவர் கேட்கவில்லை. இப்போது நான் கிடந்து அவஸ்தைப் பட வேண்டியிருக்கிறது" என்று முதல்வர் வாய்க்கு வாய் பேசுகிறவர்களிடம் எல்லாம் சத்தியமூர்த்தியை அதி பயங்கரவாதியாக உருவாக்கிக் காட்ட முயன்று கொண்டிருந்தார். மற்ற மாணவர்கள் கல்லூரி வாயிலில் நின்று மறியல் செய்ததன் காரணமாகப் பெற்றோர்களுக்கும், முதல்வருக்கும், ஆசிரியர்களுக்கும் பயந்து வகுப்புக்களுக்குப் போக நினைத்த சில மாணவர்கள் கூட வாயிற் பக்கத்திலேயே தடுக்கப்பட்டார்கள். மஞ்சள்பட்டியாரும், கல்லூரி முதல்வரும் நிலைமை மிகவும் கடுமையாவதை உணர்ந்து ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு மேல் கல்லூரி அலுவலக அறையில் நீண்ட நேரம் கலந்து பேசி ஆலோசனை செய்தார்கள். கடைசியில் ஏழு ஏழரை மணிக்கு அவர்கள் சத்தியமூர்த்தியின் அறைக்குச் சொல்லியனுப்பி அவனை வரவழைத்தார்கள். சத்தியமூர்த்தியைப் பயமுறுத்திப் பார்த்தார் மஞ்சள்பட்டியார்! ஏதோ ஆளடிமையாக வந்த வேலைக்காரர்களை மிரட்டுவது போல் அவனை மிரட்டினார்.

"என்னைக்கிருந்தாலும் உன்னை இந்தக் காலேஜிலிருந்து சீட்டுக் கிழித்தால்தான் எங்களுக்கு நிம்மதி. நீ விவரம் தெரியாமே நெருப்போடு விளையாடிக்கிட்டிருக்கிறே. உன்னை உள்ளே தள்ளிக் கம்பி எண்ண வைச்சுப்பிடுவேன்... தெரியுமா?"

"முடிந்தால் செய்ய வேண்டியது தானே? அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. 'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்று பாரதியார் பாடியிருக்கிறார்."

"இதெல்லாம் மேடையிலே பேசு, அப்ளாஸ் கொடுப்பாங்க... பட்டம் வாங்கிட்டாப்பிலே ஆச்சா? மரியாதை, மண்ணாங்கட்டி ஒரு யழவும் தெரியறதில்லை..."

"உங்களைப் போல யார் வேண்டுமானாலும் நிர்வாகியாக வந்துவிட முடியும்! ஆனால் என்னைப் போல் பதினைந்து ஆண்டுகள் படித்துப் பட்டம் பெற்றவன் தான் ஓர் ஆசிரியராக வரலாம். இந்தத் தேசத்தைப் பிடித்த துரதிர்ஷ்டம் புத்திசாலிகளான ஏழைகள் - முட்டாள்களாயிருக்கிற பசை உள்ளவர்களுக்குத் தலைவணங்க நேரிடுகிறது! நாங்கள் மிகவும் மலிவான விலைக்கு உங்களுக்கு கிடைத்து விடுகிறோம். என்ன செய்யலாம்?"

"உனக்கு எத்தனை திமிர் இருந்தால் முதன் முதலா நான் நிர்வாகியா வந்த ஒரு வாரத்துக்குள்ளேயே பையன்களை நீ இப்படிக் கலகம் பண்ணத் தூண்டி விட்டிருக்க முடியும்? இரு! இரு! முதலில் உன்னைத் தொலைச்சிப்பிட்டு மறுவேலை பார்க்கிறேன்..." என்று கறுவினார் மஞ்சள்பட்டியார்.

சத்தியமூர்த்தி மரியாதை தெரியாத அந்த மனிதனிடம் அதற்கு மேலும் நின்று பேசிக் கொண்டிருக்க விரும்பாமல் அங்கிருந்து தானாக வெளியேறிவிட்டான். அன்றிரவே ஹாஸ்டலின் ஒரு மூலையிலிருந்த பழைய கூரை 'ஷெட்' ஒன்றுக்குத் தீ வைக்கத் தாமே ஏற்பாடு செய்து அதை நன்றாக எரியவிட்ட பின் - இரவு பதினொரு மணிக்கு மேல் மாணவர்களில் சிலரை உடன் அழைத்துக் கொண்டு சத்தியமூர்த்தியே அங்கு வந்து அந்த கூரை ஷெட்டுக்கு நெருப்பு வைக்கும்படி மாணவர்களைத் தூண்டியதாகவும் - அவர்கள் 'சத்தியமூர்த்திக்கு ஜே!' என்று கூவிக் கொண்டு நெருப்பு வைத்ததாகவும் - மல்லிகைப் பந்தல் போலீசுக்குத் தந்திரமாக ரிப்போர்ட் செய்தார் மஞ்சள்பட்டியார். இரண்டு சமையற்காரர்களும், ஓர் இரவுக் காவற்காரனும்... 'சத்தியமூர்த்திக்கு ஜே!' என்று கூவியபடியே மாணவர்கள் இரவில் வந்து நெருப்பு வைத்ததைப் பார்த்ததாகவும் அப்போது சத்தியமூர்த்தியும் அவர்களோடு உடன் இருந்ததாகவும் சாட்சியங்கள் எழுதிக் கொடுத்திருந்தார்கள்.

தீ விபத்து என்ற வஞ்சக நாடகம் நடந்த தினத்தன்று விபத்து முடிந்த இரவுக்குப் பின் மறுநாள் அதிகாலை ஐந்து ஐந்தரை மணிக்குப் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரும் இரண்டு கான்ஸ்டபிளும் லேக் அவின்யூவில் சத்தியமூர்த்தியின் அறையைத் தேடிக் கொண்டு வந்த போது குமரப்பன் தான் அவர்களை முதலில் பார்த்து வரவேற்க நேர்ந்தது. சத்தியமூர்த்தி அப்போது குளியலறைக்குள் பல் விளக்கிக் கொண்டிருந்தான். போலீஸ்காரர்களையும், இன்ஸ்பெக்டரையும் வரவேற்ற குமரப்பனிடம் அவர்கள் தாங்கள் அங்கே வந்திருக்கும் காரியத்தைச் சொன்ன போது, "இது என்ன ஐயா அநியாயப் பழியாயிருக்கிறது? நேற்றிரவு ஒன்பது மணியிலிருந்து என் நண்பன் சத்தியத்தோடு நான் இதே அறையில் தான் விடிய விடிய இருக்கிறேன். அவன் எப்படி இங்கிருந்து ஹாஸ்டலுக்கு வந்து மாணவர்களைக் கூரை ஷெட்டிற்கு நெருப்பு வைக்கும்படி தூண்டியிருக்க முடியும்? அவன் தான் என்னோடு இங்கேயே இருந்தானே?" என்று போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் குமரப்பன் வாதாடினான். இன்ஸ்பெக்டரோ சத்தியமூர்த்தி மாணவர்களைத் தூண்டி நெருப்பு வைக்கச் சொல்லியதற்குச் சாட்சிகள் இருப்பதாகக் கூறினார். குமரப்பனும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் வாதாடிக் கொண்டிருக்கும் போது சத்தியமூர்த்தியே பல் விளக்கி மிகம் கழுவிக் கொண்டு குளியல் அறையிலிருந்து வெளியே வந்து விட்டான்.

அத்தியாயம் - 49

தங்களுடைய சொந்தப் பலத்தை நியாயத்துக்கு எதிராகவும் கூடப் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்கிற ஆசை உள்ளவர்களால் வெற்றி கிடைக்கிற வரை சூதாட்டத்தைப் போன்ற அந்த ஆசையை இழக்கவே முடியாது.

இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தியை 'அரெஸ்ட்' செய்து கொண்டு போக வந்திருப்பதாகக் கூறினார். "என்ன காரணத்துக்காக என்னை அரெஸ்ட் செய்ய வந்திருக்கிறீர்கள்?" என்று சிறிதும் பதறாமல் நிதானமாக அவரை வினவினான் சத்தியமூர்த்தி. இன்ஸ்பெக்டர் காரணத்தைக் கூறிய போது, 'நீ விவரந் தெரியாம நெருப்போடு விளையாடிக்கிட்டிருக்கிறே! உன்னை உள்ளே தள்ளிக் கம்பி எண்ண வச்சுப்பிடுவேன் தெரியுமா?' என்று முன் தினம் ஜமீந்தார் தன்னைக் கூப்பிட்டு மிரட்டியிருந்ததைச் சத்தியமூர்த்தி நினைவு கூர்ந்தான். தம்முடைய பயமுறுத்தலை ஜமீந்தார் இப்போது இப்படி நிரூபித்து விட்டார் என்று அவனுக்குப் புரிந்தது. 'பணபலமும், அதிகார பலமும் நியாயத்துக்கு எதிராய் எப்படி வலுவாக எதிர்த்துக் கொண்டு வந்து நிற்கின்றன?' என்பதை நினைத்த போது அந்தக் கணத்தில் சத்தியமூர்த்திக்கு இந்த உலகத்தின் மேல் கோபம் வரவில்லை. சிரிப்புத்தான் வந்தது. 'திரைப்படங்களிலும், நாவல்களிலும் தான் கதாநாயகர்களுக்கு எதிராக அளவு மீறிக் கெடுதல் செய்கிற கொடியவர்கள் வருவார்கள்' என்று அடிக்கடி வேடிக்கையாகச் சொல்வான் குமரப்பன். வாழ்க்கையில் கண்ணெதிரிலேயே அப்படிப்பட்ட கொடியவர்கள் உண்டு என்பதை மஞ்சள்பட்டியார் இப்போது நிதரிசனமாகக் காண்பித்து விட்டார்.

குமரப்பன் அங்கு வந்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரோடு எவ்வளவோ வாதாடிப் பார்த்தான். இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தியை அரஸ்ட் செய்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினார். அவசியமானால் குமரப்பன் போலீஸ் ஸ்டேஷனுக்கு உடன் வந்து ஜாமீனில் சத்தியமூர்த்தியைத் திருப்பி அழைத்துக் கொண்டு போகலாமென்று அந்த இன்ஸ்பெக்டர் விரைவாகப் பேச்சை முடித்துக் கொண்டு புறப்படத் தயாராகி விட்டார். போலீஸ்காரர்கள் புடைசூழ இன்ஸ்பெக்டருக்குப் பின்னால் விலங்கு மாட்டப்படாத கைதியாய் - ஆனால் அதே சமயத்தில் உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் - பல்லாயிரம் விலங்குகள் விழுந்து அழுத்தி உறுத்துவதைப் போன்ற கூச்சத்தோடு சத்தியமூர்த்தி படியிறங்கி நடந்து சென்ற போது மல்லிகைப் பந்தலின் அழகிய வீதிகளில் பொழுது நன்றாக விடிந்திருந்தது. மனிதர்கள் நடமாடத் தொடங்கியிருந்தார்கள். செய்யாத குற்றத்திற்காக அநியாயப் பழி சுமத்தப் பெற்றுப் போலீஸ்காரர்களுக்குப் பின்னால் நடந்து போய்க் கொண்டிருந்தாலும் தன் மேல் பொய்யாகக் குற்றம் சுமத்திவிட்ட இந்த உலகத்தை நிமிர்ந்து பார்க்க மன விருப்பமில்லாமல் வெறுத்தாற் போல் தலைகுனிந்து சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. ஜாமீன் கொடுத்துத் திரும்ப அழைத்துக் கொண்டு வருவதற்காகப் பின்னால் சென்று கொண்டிருந்த குமரப்பனோடு ராயல் பேக்கரி ரொட்டிக்கடை நாயரும், அறையில் உடனிருந்த தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் கூடச் சென்றார்கள். மல்லிகைப் பந்தலைப் போல் சிறிய நகரம் ஒன்றில் பலருக்கு அறிமுகமான கல்லூரி விரிவுரையாளர் ஒருவரைப் போலீஸ்காரர்கள் தெரு வழியே அழைத்துக் கொண்டு போனால் மக்கள் எவ்வாறு பரபரப்பாகக் கூடி நின்று கவனிப்பார்களோ அப்படிக் கவனிப்பதற்குச் சத்தியமூர்த்தியும் அன்று பாத்திரமானான். இவ்வாறு போலீஸ்காரர்களால் அவன் தெரு வழியே அழைத்துக் கொண்டு போகப்படும் காட்சியைக் கண்டவர்களில் சில மாணவர்களும் இருந்தார்கள்; மாணவிகளும் இருந்தார்கள். மல்லிகைப் பந்தலைப் போன்ற சிறிய ஊரில் கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தத்திலிருந்து காய்கறிக் கடை வாசலில் நடைபெறுகிற சிறிய பூசல் வரை எதுவுமே இரகசியமாக இருக்க முடியாது. நல்ல வேளையாக அந்த ஊரிலிருந்து தினசரிப் பத்திரிகைகள் எதுவும் பிரசுரித்து வெளியிடப்படுவதில்லை. தினப் பத்திரிகை இருந்திருந்தாலோ, 'விடுதிக்கு நெருப்பு வைக்கும்படி மாணவர்களைத் தூண்டியதாகத் தமிழ் விரிவுரையாளர் கைது' என்று சாயங்காலப் பதிப்பிலேயே கொட்டை எழுத்துக்களால் அச்சிட்டு முதற் பக்கத்தில் தலைப்பிலேயே வந்துவிடும். அத்தனை அவசரமாகச் செய்தி எங்கும் பரவிவிட்டது. சத்தியமூர்த்தியும் உடன் வந்தவர்களும் போலீஸ் ஸ்டேஷன் இருந்த சாலையை நெருங்கிவிட்ட சமயத்தில் அந்த நிலையில் அங்கே சந்திப்பதற்கு மனம் கூசக்கூடிய ஒருத்தியைச் சத்தியமூர்த்தி எதிர்பாராமல் அங்கே சந்தித்து விடும்படி நேர்ந்தது. மல்லிகைப் பந்தல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவதற்காகக் கீழ்நோக்கி இறங்குகிற மலைச் சாலையும், சற்றே மேடான இடத்தில் உள்ள பூபதியின் பங்களாவுக்காக மேல்நோக்கி ஏறுகிற மலைச்சாலையும் 'வி' என்ற ஆங்கில எழுத்தைச் சாய்த்து வைத்தாற் போல் அருகருகே இருந்ததனால் தந்தையை இழந்த துக்கத்தில் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்து விட்டு நீண்ட நாட்களுக்குப் பின்பு வீட்டிலிருந்து காரில் எங்கோ புறப்பட்ட பாரதி - கீழ்ப்புறத்துச் சாலையில் போலீஸ்காரர்கள் புடைசூழச் சத்தியமூர்த்தி செல்வதைப் பார்த்துவிட்டாள். அவனும் அவளுடைய காரைப் பார்த்தான். உடனே டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லிவிட்டுத் துடிக்கும் நெஞ்சுடன் பாரதி கீழே இறங்கி நின்று பார்த்தாள்.

"இவரு ஏதோ பையன்களைத் தூண்டிவிட்டு ராத்திரியோடு ராத்திரியா... ஹாஸ்டலுக்கு நெருப்பு வச்சிட்டாராம். அதனாலே ஜமீந்தார்... போலீசிலே சொல்லி ஆளை உள்ளார வைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறாரு" என்று அவள் கேட்காமலே தானாகச் சொல்லத் தொடங்கினான் உடன் இருந்த டிரைவர். இதைக் கேட்டுப் பாரதியின் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. கீழே வளைவாகச் சரிந்து இறங்கும் செம்மண் சாலையில் நோக நோக நடந்து செல்லும் சத்தியமூர்த்தியின் பொன்னிறப் பாதங்கள் மேற்புறத்துச் சாலையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அவள் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தன. நெடு நாட்களுக்குப் பின்பு அந்தப் பளிங்கு நிறப் பாதங்கள் அவளுக்கு இன்று காட்சி கொடுத்தன. அவள் நின்ற இடத்திலிருந்து அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவனுடைய நடையில் அதே பழைய கம்பீரமும் பெருமிதமும் இருந்தன. ஆனால் பொய்யும் அநீதியும் மலிந்து விட்ட இந்த உலகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூசினாற் போல் அவனுடைய தலை மட்டும் சற்றே தாழ்ந்து கீழ்நோக்கிக் குனிந்திருந்தது. அவனுடைய கைகளும், கால்களும் படிகிற இடமெல்லாம் ரோஜாப்பூப் பூத்துக் கொட்டுவதாகத்தான் முன்பு ஒரு சமயம் அவள் கற்பனை செய்திருக்கிறாள். கல்லூரி விடுதிக்கு நெருப்பு வைக்க அவனுடைய கைகள் தூண்டியிருக்க முடியுமென்று இன்று அவளால் நினைப்பினுள் கற்பனை செய்யவும் முடியவில்லை. தந்தையின் மரணத்துக்குப் பின் பல நாட்களாக அவள் கல்லூரிக்கே போகவில்லை. அதனால் கல்லூரி நடைமுறைகள் எதுவும் அவளுக்கு விவரமாகத் தெரிய வழியில்லாமல் போய்விட்டது.

மஞ்சள்பட்டி ஜமீந்தாரும், கல்லூரி முதல்வரும் அடிக்கடி கல்லூரி நிர்வாக சம்பந்தமாக வீட்டில் சந்தித்துப் பேசிக் கொள்வதைத் தானும் அதே வீட்டிலிருந்ததன் காரணமாகச் சில சமயங்களில் பாரதி கண்டிருக்கிறாள். சத்தியமூர்த்திக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் நல்ல உறவு இல்லாமல் முறிவு ஏற்பட்டிருக்கிறது என்பதும், விடுதி மாணவர்களும், பிறரும் சில நாட்களாக வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள் என்பதும் ஒருவாறு அவளுக்குத் தெரிந்திருந்த உண்மைகள் தான். ஆனால் அந்த உண்மைகளின் விளைவு இவ்வளவு பயங்கரமாக மாறிச் சத்தியமூர்த்தியைப் போலீஸ் ஸ்டேஷன் வரை இழுத்துக் கொண்டு போய்விடும் என்று அவள் கனவிலும் எதிர்பார்த்ததில்லை. கல்லூரி முதல்வருக்கும் - சத்தியமூர்த்திக்கும் அடி நாளிலிருந்தே நல்ல உறவு இல்லை என்பது அவளுக்குத் தெரியும். தன் தந்தை இருந்தவரை முதல்வருடைய இடையூறுகளைப் பொருட்படுத்தாமல் அவரே சத்தியமூர்த்தியை நேரடியாகக் கவனித்து அன்பாக நடந்து கொண்டது போல் மஞ்சள்பட்டி ஜமீந்தார் நடந்து கொள்ள மாட்டார் என்பதையும் தனக்குத்தானே அநுமானித்து உணர்ந்து கொண்டிருந்தாள் பாரதி. மேற்பக்கத்துச் சாலையில் வேகமாகத் திரும்பிக் கீழிறங்கிக் கொண்டிருந்த கார் நின்றதையும் - காரிலிருந்து அவள் வெளியே இறங்கிப் பரபரப்பாகத் தன்னைக் கவனித்ததையும் சத்தியமூர்த்தி கண்டிருந்தான். ஆனால் போலீஸ் ஸ்டேஷன் நெருங்கி விட்டதன் காரணமாக நின்று நிதானித்து அவளை நிமிர்ந்து பார்க்க நேரமும் விருப்பமும் இல்லாமல் போய்விட்டது அவனுக்கு. தன்னை அந்தக் கோலத்தில் அந்த நிலையில் போலீஸ்காரர்கள் புடைசூழப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் பார்த்ததும் அவள் என்ன நினைத்துக் கொண்டு செல்வாள் என்று மனத்துக்குள் சிந்தித்துப் பார்க்கக் கூட அப்போது அவனுக்கு நேரமில்லை. போலீஸ்காரர்களும், சப் இன்ஸ்பெக்டரும், அவனும், அவனோடு கூட வந்தவர்களும் ஸ்டேஷனுக்குள் நுழைந்து விட்டார்கள். தெருவில் அங்கங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மற்ற மாணவர்களுக்குச் சொல்லி மற்ற மாணவர்கள் இன்னும் வேறு சில மாணவர்களுக்குச் சொல்ல - அதன் பயனாகப் போலீஸ் ஸ்டேஷன் வாயிலில் பெருங்கூட்டம் கூடிவிட்டது. வெகுநேரம் மேற்கொண்டு என்ன செய்வதென்று கையும் காலும் ஓடாமல் மேலே உள்ள சாலையில் காரருகே நின்றபடி போலீஸ் ஸ்டேஷன் வாயிலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பாரதி. தன்னையறியாமலே அவளுக்குக் கண் கலங்கிவிட்டது. சத்தியமூர்த்தி தன்னிடம் பாராமுகமாக இருக்கிறான் என்றும் தன்னுடைய அன்பைப் புரிந்து கொள்ளாமல் விலகி விலகிப் போகிறான் என்றும் அவனைப் பற்றி அவள் மனத்தாங்கலும் ஏக்கமும் கொண்டிருந்தாலும் இன்று அவனுக்குத் துன்பம் வந்து விட்டதைப் பார்த்துக் கண்ணும் மனமும், கலங்காமல் அவளால் விலகிப் போய்விட முடியவில்லை. தந்தை இறந்த பின் பல நாட்களாக அவள் வீட்டிலிருந்து வெளியேறி எங்கும் போகவேயில்லை. இன்றோ உடல் நலனைப் பரிசோதித்துக் கொள்வதற்காக டாக்டர் வீட்டுக்குப் போகலாம் என்று புறப்பட்டிருந்தவள் - டாக்டர் வீட்டுக்குப் போகும் எண்ணத்தையே விட்டுவிட்டு யாராவது அந்தரங்கமானவர்களிடம் அந்த விடிகாலை வேளையில் சத்தியமூர்த்திக்கு இழைக்கப்பட்டு விட்ட அநீதியையும் துன்பத்தையும் பற்றிக் குமுறிக் குமுறிப் பேச வேண்டுமென்று தோன்றியது. நல்லவேளையாக, மாணவர்களுடைய விடுதியில் மட்டும்தான் வேலை நிறுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. கல்லூரியில் உள்ள மாணவிகளின் விடுதியில் வேலை நிறுத்தம் கிடையாது. மாணவிகள் விடுதிக்கு உடனே போய் மகேசுவரி தங்கரத்தினத்தையோ, அவள் இல்லாவிட்டால் வேறு யாராவது ஒரு தோழியையோ தன்னுடைய காரில் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்று எல்லா விஷயங்களையும் மனம் விட்டுப் பேச வேண்டுமென்று தோன்றியது பாரதிக்கு. கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றியும், சத்தியமூர்த்தி அதற்கு எந்த விதத்தில் காரணம் என்பதைப் பற்றியும் - கல்லூரி விடுதியிலேயே இருக்கிற ஒரு மாணவியிடம் விசாரித்து விட வேண்டுமென்று அப்போது அவள் மனம் துடிதுடித்துக் கொண்டிருந்தது. தன் மனத்தில் அன்பும் அநுதாபமும் கலந்து கனத்துக் கிடக்கும் உணர்வுச் சுமைகளை யாரிடமாவது பங்கிட்டுக் கொண்டாக வேண்டும் போலவும் தவிப்பாக இருந்தது அவளுக்கு.

"காரை நேரே பெண்கள் ஹாஸ்டலுக்கு விடு" என்று ஏறி உள்ளே உட்கார்ந்து கொண்டு டிரைவருக்குக் கட்டளையிட்டாள் பாரதி. கார் அங்கிருந்து நேரே பெண்கள் ஹாஸ்டலுக்கு விரைந்தது. கல்லூரிக் காம்பவுண்டைச் சுற்றிலும் சாலைகளிலும், விடுதி முகப்பிலும், முதல்வர் அறையருகேயும் ஏராளமாக 'ஸ்பெஷல் மலபார் ரிஸர்வ் போலீஸ்' காவல் காத்துக் கொண்டிருந்தது. கட்டிடங்களும், விளையாட்டு மைதானமும், புல்வெளிகளும் வகுப்பறைகளும் களையிழந்து தெரிந்தன. 'அப்பா உயிருடன் இருந்திருந்தால் புகழ்பெற்ற இந்தக் கல்லூரியின் வரலாற்றிலேயே இப்படி ஒரு களங்கம் நேர விட்டிருக்க மாட்டார்!' என்று மனத்தில் நினைத்த போது பாரதிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. நியாயத்துக்கு எதிராக தன்னுடைய வலிமையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை அப்பாவுக்கு ஒரு போதும் இருந்ததில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சி நேர்ந்து கல்லூரியின் பெயர் கெடுவதை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியாது! ஜமீந்தார் மாமாவிடமோ எல்லா முரட்டுக் குணங்களும் உண்டு. அதிகம் படிப்பில்லாதவர்களால் தங்களை இன்னொருவன் மதித்துப் பயப்பட வேண்டும் என்கிற ஆசையை ஒரு போதும் இழக்கவே முடியாது. தங்களுடைய சொந்தப் பலத்தை நியாயத்துக்கு எதிராகக் கூடப் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உள்ளவர்களால் வெற்றி கிடைக்க முடியாது. ஜமீந்தார் மாமா சூதாட்டத்தில் ஆசை உள்ளவர். வாழ்க்கையையும் சூதாட்டத்தைப் போலவே ஆடப்பார்க்கிறார். வெற்றி கிடைக்கும் வரை சூதாட்டம் போன்ற அந்த ஆசையை இழக்கவே மாட்டார் அவர்' என்று எண்ணினாள் பாரதி. மாணவிகளின் விடுதியைச் சுற்றியும் கூடப் பலமான போலீஸ் காவல் இருந்தது. கலைக்கூடமாகிய அந்தக் கல்லூரியின் அழகிய கட்டிடங்கள் இப்படிப் போலீஸ்காரர்களின் காவலோடு போர்க்களமாகக் காட்சி தருவதைக் கண்டு அதை நிறுவியவரின் மகள் என்ற உணர்வோடு மனம் வருந்திக் கண்கலங்கினாள் அவள்.

மகேசுவரி தங்கரத்தினத்தையும் - உடன் அழைத்துக் கொண்டு கல்லூரி விடுதியிலிருந்து பாரதி வீட்டுக்குத் திரும்பிய போது காலை எட்டு மணிக்கு மேல் ஆகியிருந்தது. காரிலேயே இருவரும் பேசிக் கொண்டு வந்தார்கள்.

"நான் கேள்விப்பட்டவரை மாணவ மாணவிகள் எல்லாரும் இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள் பாரதீ! சத்தியமூர்த்தியை 'டிஸ்மிஸ்' செய்து இந்தக் கல்லூரியிலிருந்து வெளியே அனுப்புவதற்குச் சரியான காரணம் வேண்டும் என்பதற்காகக் காலேஜ் பிரின்ஸ்பலும், நிர்வாகியும் ஹாஸ்டலிலிருந்த பழைய கூரை ஷெட்டுக்குத் தாங்களே நெருப்பு மூட்டிவிட்டு அவர் மேல் பழியைச் சுமத்தியிருப்பதாகத்தான் மாணவர்கள் எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். இந்த அநியாயம் தெய்வத்துக்கே அடுக்காது. சத்தியமூர்த்தி எப்போதுமே 'ஸ்ட்ரெயிட் ஃபார்வட்'. அவருக்குப் பொய் பேசத் தெரியாது. பொய்யாகப் புகழத் தெரியாது. பொய்யாக வாழத் தெரியாது. அவரைப் பழி வாங்கி வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு ஏதோ சூழ்ச்சி நடக்கிறது. நீ வீட்டிலேயே இருக்கிறாய்! ஜமீந்தாரும் பிரின்ஸிபலும் அடிக்கடி உன் வீட்டில்தானே சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள்? உனக்குத் தெரியாது? எனக்கென்னடி தெரியும்?"

"வீட்டில் சந்தித்தால் எனக்கென்ன தெரிகிறது? நான் எங்கோ ஒரு மூலையில் அடைந்து கிடக்கிறேன். அவர்கள் இன்னொரு மூலையில் சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள். ஜமீந்தார் மாமாவும் கண்ணாயிரமும் வந்து தங்கிய பின் நான் வீட்டின் முன் பக்கத்துக்கு அதிகமாக வருவதே கிடையாது. இன்னும் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ என்னோடு இருந்துவிட்டு அப்புறம் ஜமீந்தார் இந்த ஊரிலேயே இருக்கிற அவரோட சொந்தப் பங்களாவுக்குப் போகப் போகிறார்" என்று பாரதி தன் தோழிக்கு மறுமொழிக் கூறிக் கொண்டிருந்த போது கார் டிரைவர் ஒரு கனைப்புக் கனைத்து விட்டு ஏதோ சொல்லத் தயாரானான். "பெரிய ஐயா... இந்த மலையிலே எஸ்டேட் வாங்கின நாளிலேயிருந்து நான் அவரிட்ட டிரைவராயிருக்கேன் அம்மா! நீ குழந்தையாக இருந்த வயசிலேயிருந்து உன்னை எடுத்து வளர்த்திருக்கேன். உங்கிட்ட மெய் பேசாமற் போனாத் திங்கற சோறு என் வவுத்துல ஒட்டாது. ஆனாலும் இப்போ நான் சொல்லப் போறதை நான் சொன்னேனின்னு நீ யாரிட்டேயும் சொல்லப்படாது. நான் ஏழை. வல்லமை உள்ளவர்களை விரோதிச்சுக்கிட்டு வாழ முடியாதவன். நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு வர்ற விஷயத்தைக் கேட்டதினாலே அதைப் பற்றி எனக்குத் தெரிந்த நெசத்தை நான் உங்ககிட்டச் சொல்லிடனுமுன்னு தோணுது. பணத்துக்கும் அதிகாரத்துக்கும் எதிரா நெஜமும், நியாயமும் கூட நிற்கிற காலமில்லேம்மா இது..."

"நீ என்ன சொல்லப் போகிறாய், முத்தையா?" என்று பாரதி வியப்போடு அந்த டிரைவரைக் கேட்டாள்.

"வேறொண்ணுமில்லையம்மா! நீங்க பேசிக்கிட்டிருக்கிற அதே விஷயம் தான்!" என்று மேலே பேச வேண்டியதைப் பேசத் தயங்கினாற் போல் சிறிது நேரம் மௌனம் சாதித்தான் அவன்.

அத்தியாயம் - 50

ஒவ்வொரு பெண்ணின் அநுதாபமும் வேறெதையும் செய்ய முடியாத வரை வெறும் அழுகையில் போய்த்தான் நிறைய முடியும்.

டிரைவர் முத்தையா கூறிய செய்தியைக் கேட்டுப் பாரதி அப்படியே அதிர்ந்து போனாள். ஜமீந்தார் மாமாவை அவ்வளவு கெட்டவராக அவள் இதுவரை கற்பனை செய்தும் பார்த்ததில்லை. குளிக்காமல், சாப்பிடாமல் நாட்கணக்கில் சீட்டாட்டத்தில் உட்காருவார். குதிரைப் பந்தய சீஸனில் எந்தெந்த ஊரில் எல்லாம் பந்தயம் நடக்கிறதோ அங்கெல்லாம் போவார். கொஞ்சம் குடிப்பழக்கமும் உண்டு. ஆனால் நியாயத்தையும் நேர்மையையுமே உறிஞ்சிக் குடித்து விடுகிற அளவுக்கு அவர் மிகப் பெரிய குடிகாரர் என்பதை இன்று டிரைவர் முத்தையா தெரிவித்த இந்தப் புதிய செய்தியால் அவள் திட்டமாகப் புரிந்து உணர்ந்து கொண்டு விட்டாள்.

முந்திய தினம் இரவில் இதே காரில் டிரைவர் முத்தையாவையும் உடன் வைத்துக் கொண்டு கல்லூரி முதல்வரும் மஞ்சள்பட்டி ஜமீந்தாரும் காரில் போகும் போதே ஹாஸ்டல் கூரை ஷெட்டில் நெருப்பு வைத்துவிட ஏற்பாடு செய்துவிட்டு அந்தப் பழியைச் சத்தியமூர்த்தியின் தலையில் சுமத்திக் கல்லூரியிலிருந்து அவனை வெளியேற்றிவிடுவது என்று சதித்திட்டம் வகுத்துப் பேசிக் கொண்டு போனார்களாம். அந்தச் சதிப் பேச்சைத் தன் இரண்டு காதுகளாலும் கேட்டுக் கொண்டே காரைச் செலுத்திச் சென்றதாகப் பயந்து கொண்டே இப்போது அவளிடம் தெரிவித்து விட்டான் டிரைவர் முத்தையா.

"சத்தியமூர்த்தியை டிஸ்மிஸ் செய்து இந்தக் கல்லூரியிலிருந்து வெளியே அனுப்புவதற்குச் சரியான காரணம் வேண்டும் என்பதற்காகக் காலேஜ் பிரின்ஸிபலும் நிர்வாகியும் ஹாஸ்டலிலிருந்த பழைய கூரை ஷெட்டுக்குத் தாங்களே நெருப்பு மூட்டி விட்டு அவர் மேல் பழியைச் சுமத்தியிருப்பதாகத் தான் மாணவர்கள் எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள்" என்று சிறிது நேரத்துக்கு முன் மகேசுவரி தங்கரத்தினம் கூறியபோது 'அப்படியுமா செய்வார்கள்?' என்று அதை நம்பத் தயங்கிய பாரதி இப்போது நம்பியே ஆக வேண்டியிருந்தது. டிரைவர் முத்தையா பொய் சொல்ல மாட்டான். நீண்ட காலமாகப் பூபதியின் குடும்பத்தில் ஒருவனாகக் கலந்து பழகிவிட்ட நம்பிக்கை வாய்ந்த தொழிலாளி அவன். அவனுடைய வார்த்தைகளையும் மகேசுவரி தங்கரத்தினம் கூறியவற்றையும் இணைத்துச் சிந்தித்து அப்படியே நம்பினாள் அவள். சத்தியமூர்த்தி அவளிடமிருந்து விலகியிருந்த காலத்திலும் அவளுடைய இதயத்தின் அந்தரங்கம் அவனைத் தன்னிடமிருந்து விலக்கி விடவில்லை.

'என்னுடைய கண் பார்வைக்கு எட்டிய மட்டும் ஆகாயத்தில் ஒரே ஒரு பிரகாசமான நட்சத்திரம் தான் தெரிகிறது. அந்த நட்சத்திரத்தையும் நீ மறைக்க முயலாதே மேகமே! அப்படியே நீ மறைத்தாலும் மறுபடி அந்த ஒளிமயமான என் இலட்சிய நட்சத்திரம் தெரிகிற வரை நான் அதைப் பார்க்கத் தவித்துக் கொண்டேயிருப்பேன் என்பதை நீ மறந்துவிடாதே' என்று பொருள்பட நவநீதக் கவியின் உருக்கமான பாடல் ஒன்று உண்டு. சத்தியமூர்த்தி தன்னை விட்டு விலகிச் செல்ல முயன்ற காலத்திலும் இந்தப் பாட்டை நினைவு கூர்ந்து பாரதி நெகிழ்ந்து உள்ளுருகித் தவித்திருக்கிறாள். வெளிப்படையாக எலலப் பெண்களையும் போல் ஆற்றாமை, கோபம், போலி விரோதம் எல்லாவற்றையும் அவன் மேல் கொண்டு விட்டாற் போல அவளும் அவனிடம் நடித்திருக்கலாம். ஆனால் அவளுடைய அந்தரங்கம் மௌனமாக அவனுக்காகத் தவித்திருக்கிறது. அவளுடைய அந்தரங்கத்தில் அவன் ஒரு தவப்பயனாக நிறைந்திருந்திருக்கிறான். யாருடைய அழகான பாதங்கள் அவள் இதயத்தில் நிறைந்திருந்தனவோ அவருடைய அதே பாதங்கள் இன்று மல்லிகைப் பந்தலின் தெருக்களில் வருந்த வருந்த நடந்து வந்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த காட்சியை அவளும் தன் கண்களாலேயே காண நேர்ந்துவிட்டது. அவளுக்குத் தெரிய வந்த நிகழ்ச்சிகளை யெல்லாம் ஒன்று சேர்த்து நினைத்த போது அவள் மனம் எரிமலையாகக் குமுறியது.

டிரைவர் முத்தையாவைப் போன்ற நாணயமான மனிதனே தன்னிடம் எடுத்த எடுப்பில் நடந்த உண்மையை அப்படியே சொல்லத் தயங்கிப் பட்டும் படாமலும் வேறு விதமாகச் சொல்லியதை நினைத்த போது கெட்டவர்களைத் தவிர அவர்களுக்குப் பயப்படுகிறவர்களும் இருந்தாக வேண்டிய அவசியத்தைக் கடைப்பிடிக்கிற உலக நியதியை அவள் புரிந்து கொள்ள முடிந்தது. போலீஸ் நிலையத்தின் அருகே சத்தியமூர்த்தி அழைத்துக் கொண்டு போகப்படுவதைப் பார்த்து தான் காரை நிறுத்தச் சொல்லிவிட்டு பரபரப்பாக கீழே இறங்கி கண்ட போது "இவரு ஏதோ பையன்களைத் தூண்டி விட்டுக் காலேஜ் ஹாஸ்டலுக்கு நெருப்பு வச்சிட்டாராம். அதனாலே... ஜமீந்தார்... போலீஸிலே சொல்லி ஆளை உள்ளார வைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்காரு" என்று மட்டும் சொல்லித் தனக்கு ஒன்றும் தெரியாதது போல் இருந்து விட்ட அதே டிரைவர் முத்தையா தான் அப்புறம் மனம் பொறுக்காமல் தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்ல இப்போ இப்படி முன் வந்திருக்கிறான் என்பதையும் அவள் சிந்திக்கத் தவறவில்லை. அவளோடு உடன் வந்திருந்த மகேசுவரி தங்கரத்தினம் - சத்தியமூர்த்திக்கு அநீதி இழைக்கப்பட்டதன் காரணமாக மாணவ, மாணவிகளின் மனங்கள் குமுறிக் கொண்டிருப்பதைப் பற்றியும் கூறினாள். வேலை நிறுத்தத்தினால் அநியாயமாகக் கல்லூரிப் பாடங்களும் வகுப்புக்களும் வீணாவதைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டாள்.

"காரில் என்னை அங்கு அழைத்துக் கொண்டு வரும் போது நீயும் தான் பார்த்தாயே? மாணவர்கள் நூற்றுக்கணக்காகப் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வருத்தம் தோய்ந்த முகங்களோடு வந்து கூடி நிற்கிற பரிதாபத்தை என்னவென்று சொல்வது? இத்தனை பேருடைய பிரியத்தையும் அநுதாபத்தையும் சம்பாதிக்க முடிந்த ஓர் ஆசிரியர் எப்படிக் கெட்டவராக இருக்க முடியும்டீ பாரதி?"

"அவர் கெட்டவராயிருக்க வேண்டுமென்று கூட நாமாக ஏன் நினைக்க வேண்டும். அவருக்கு வேண்டாதவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அவரைக் கெட்டவராக நிரூபித்து விட முயல்கிறார்கள் என்று மட்டும் இதனால் புரிந்து கொள். வேண்டியவர்களுடைய குற்றங்களை மறைத்துவிட்டு ஒரேயடியாக மேடையில் புகழ்வதும் - வேண்டாதவர்களுடைய குணங்களை மறைத்துவிட்டு ஒரேயடியாகத் தூற்றுவதும் அரசியலில் தான் உண்டு. மெல்ல மெல்லச் சமூக வாழ்விலும் அந்தச் சந்தர்ப்ப நியாயம் வந்து சூழ்ந்து கொண்டு விடும் போலிருக்கிறது."

இதைக் கூறிவிட்டுப் பாரதி மேலே ஒன்றும் பேசத் தோன்றாமல் பெருமூச்சு விட்டாள். அவளுக்கு ஆறுதலாக மகேசுவரி தங்கரத்தினம் இன்னும் சிறிது நேரம் அங்கே உடனிருந்து பேசிக் கொண்டிருந்து விட்டுக் கல்லூரி விடுதிக்குத் திரும்பிச் சென்றாள். அவளும் போன பின் பாரதிக்கு அங்கு இருப்புக் கொள்ளவே பிடிக்கவில்லை. ஜமீந்தாரும் - அவருடன் கண்ணாயிரம் என்ற கொடியவனும் அந்த வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு என்னென்னவோ சூழ்ச்சிகளைப் புரிவதாகத் தோன்றியது அவளுக்கு. மகேசுவரி தங்கரத்தினத்தைக் காரில் கல்லூரி விடுதிக்குக் கொண்டு போய் விட்டுத் திரும்பிய டிரைவர் வீட்டு ஹாலில் தனியாக உட்கார்ந்து கண் கலங்கி அழுது கொண்டிருந்த அவளிடம் ஆறுதலாக ஒரு செய்தி சொன்னான்.

"பாரதி அம்மா! உங்களுக்கு ஒரு நல்ல சேதி. அவரை யாரோ சிநேகிதங்க ஜாமீன் கொடுத்துப் போலீஸ் ஸ்டேஷன்லேருந்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போயிட்டாங்க... பிரியம்னா படிக்கிற பையன்களுக்கு இப்படியும் ஒரு பிரியம் இருக்குமான்னு எனக்கு ஆச்சரியமாயிருக்குது அம்மா! அவரு போலீஸ் ஸ்டேஷன் வாசற்படியிலேயிருந்து கீழே இறங்கினாரோ இல்லையோ, அப்படியே அலை அலையாய்ப் பையன்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு ஊர்வலம் போலக் கூடப் போறாங்க... அவர் பேரைச் சொல்லி 'வாழ்க' என்கிற குரல்களும், 'நீதி வேண்டும்' என்கிற குரல்களுமாக வானத்தையே பிளந்திடும் போலிருக்கு. ஜமீந்தார் ஐயா பேரிலேயும் பிரின்ஸிபல் ஐயா பேரிலேயும் பையன்களுக்கு ஒரே வெறுப்பா மூண்டிருக்கு" என்று டிரைவர் முத்தையா திரும்பி வந்து ஏதோ இரகசியத்தைச் சொல்வது போல் அவளிடம் சொல்லியபோது, அப்போது அதைச் சொன்னால்தான் அவளுக்கு ஆறுதலாயிருக்கும் என்று அவன் தனக்குத் தானே புரிந்து கொண்டிருப்பது போல் தெரிந்தது. தளர்ந்து நலிந்த குரலில் பாரதி முத்தையாவைக் கேட்கலானாள்:

"முத்தையா! காரில் இருந்தபடியே அவரைப் பார்த்தாயா? அல்லது நீ பக்கத்தில் போய் அவரைப் பார்த்தாயா?"

"பக்கத்தில் நெருங்க முடியுமா அம்மா? எவ்வளவு பெரிய கூட்டம்?"

"அதற்கில்லை. இப்படியெல்லாம் பொய்யாகப் பழி சுமத்தி அவரை மனம் தளரச் செய்திருக்கிறார்கள் பாவிகள். அதனால் மிகவும் வாடிச் சோர்ந்து போயிருக்கிறாரோ என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் உன்னைக் கேட்டேன்..."

"அவருக்கு என்னம்மா சோர்வு? நியாயம் அவர் பக்கத்திலே இருக்குது. ராஜாவாக நடந்து போகிறாரு..."

டிரைவர் முத்தையா இயல்பாக இப்படிக் கூறினானா அல்லது தன் மனத்தைப் புரிந்து கொண்டு, இப்படிக் கூறினால் தான் தனக்குத் திருப்தியாயிருக்குமென்று கூறினானா என்பதைப் பாரதியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பத்தரை மணிக்கு ஜமீந்தாரும், கண்ணாயிரமும் உணவு மேஜைக்கு வந்தார்கள். அவர்களைப் பார்க்கப் பிடிக்காமல் - அவர்களோடு பேசவும் - சேர்ந்து சாப்பிட உட்காரவும் கூடப் பிடிக்காமல் பாரதி தோட்டத்துப் பக்கம் எழுந்து போயிருந்தாள். ஆனால் ஜமீந்தாரோ அவளைத் தேடிக் கொண்டு தோட்டத்துக்கே வந்து விட்டார். அவருடைய முகத்தைப் பார்க்க வெறுப்பாகவும் அருவருப்பாகவும் இருந்தது அவளுக்கு. வெளிப்படையாக எதையும் சொல்லவும் முடியாமல் யார் மேலும் அநுதாபத்தைக் காண்பித்துக் கொள்ளவும் முடியாமல் இரண்டுங் கெட்டான் நிலையில் தவித்தாள் அவள். ஜமீந்தாரோ அவள் மேல் அன்பையும் பாசத்தையும் அள்ளிப் பொழிவதாகப் பொய்யாய் நடித்துக் குழைந்தார்.

"வர வர நீ சரியாகச் சாப்பிடுகிறதில்லேன்னு சமையக்காரங்க ஒரேயடியாப் புகார் செய்யிறாங்க. இப்படி இளைச்சா உடம்பு என்னத்துக்கு ஆகும்? 'டாண்'ணு பத்தரை மணியடிச்சா சாப்பாட்டு மேஜைக்கு வந்துடணும். நீ காலேஜ் போகத் தொடங்கினப்புறம் ஒன்பதரை மணிக்குச் சாப்பாட்டை வைச்சுக்கலாம்..."

ஜமீந்தாருடைய இந்தப் பரிவான விசாரணைக்குப் பதில் ஒன்றுமே சொல்லாமல் உதட்டை அழுத்திக் கடித்துக் கொண்டே அவருக்குப் பின்னால் வெறுப்போடு நடந்த பாரதி சிறிது நேரம் கழித்து, "காலேஜிலே ஏதோ ஸ்டிரைக்காமே? ஊரெல்லாம் ஒரே புரளியாயிருக்கிறதே...?" என்று தைரியமாக அவருடைய மனத்தின் உள்ளெண்ணத்தை அறியும் நோக்குடன் பேச்சை ஆரம்பித்தாள். இந்தப் பேச்சை அவள் ஆரம்பித்த போது இருவரும் உணவு மேஜைக்கு எதிரே போய்ச் சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள். கண்ணாயிரமும் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்திருந்தார். அவள் இப்படிக் கேட்டதும் - அந்தப் பேச்சை மேலே வளர்க்க விரும்பாமல் அப்படியே அசுவாரஸ்யமாக விட்டுவிட்டாற் போன்ற ஒருவகை மௌனம் ஜமீந்தார் பக்கம் நிலவியது. சமையற்காரர் பரிமாறத் தொடங்கியிருந்தார். சாப்பாட்டைத் தொடங்குமுன் திடீரென்று அப்போதுதான் நினைத்துக் கொண்டவர் போல், "கண்ணாயிரம் மதுரைக்கு ஒரு 'அர்ஜெண்ட்' கால் புக் பண்ணு. கணக்குப் பிள்ளை பேரைச் சொல்லி நம்ம பங்களா நம்பருக்குக் கூப்பிடு..." என்றார் ஜமீந்தார். கண்ணாயிரம் உடனே எழுந்து போய் அதே 'டைனிங் ஹாலில்' ஒரு மூலையிலிருந்த டெலிபோனில் மதுரைக்கு 'டிரங்கால்' புக் பண்ணி விட்டு வந்தார். அப்போது பாரதி தன்னைக் கேட்ட கேள்வியை மறந்தாற் போல விட்டுவிட்டு "தலையிலே இடி விழுந்த மாதிரிப் பெரிய துக்கம் நடந்து போச்சு. அப்பா போனதைத்தான் சொல்றேம்மா! உன் மனசுக்கும் இனிமே ஒரு ஆறுதல் வேணும்! இன்னிக்கோ நாளைக்கோ நம்ம கணக்குப் பிள்ளை மோகினியை மதுரையிலேருந்து காரிலே இங்கே அளச்சிட்டு வந்திடுவாரு. நீ அவகிட்ட பரத நாட்டியம் கத்துக்க. உன் மனசுக்கும் ஒரு மாறுதல் வேணுமில்லே? அந்தப் பொண்ணுக்கு வீணை கூட நல்லாத் தெரியும். நீ அதையும் அவகிட்டவே படிச்சிக்கலாம்?" என்று சம்பந்தமில்லாமல் வேறு ஏதோ பேசத் தொடங்கினார் ஜமீந்தார். பாரதிக்கு இதைக் கேட்டு உள்ளூரக் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு அவள் மௌனமாயிருந்தாள். சாப்பாடு முடிவதற்குள்ளே 'டிரங்கால்' கிடைத்து ஜமீந்தார் பேசி முடித்து விட்டார். மறுநாள் மாலை மோகினியும் கணக்குப் பிள்ளையும் காரில் வருவார்கள் என்றும் பேசிவிட்டு வந்து தெரிவித்தார்.

"ஒரு வாரம் வரை மோகினி இந்தப் பங்களாவிலேயே உன்னோடு தங்கியிருக்கட்டும்! அப்புறம் பக்கத்து அவென்யூவிலுள்ள மஞ்சள்பட்டி ஜமீன் அரண்மனையிலே அவள் நிரந்தரமாகத் தங்க ஏற்பாடு செய்துக்கலாம். நான் கூட இனிமே அங்கேயே நம்ம அரண்மனையிலே குடியேறிவிட நினைத்திருக்கிறேன்" என்றார்.

சாப்பிட்டு முடித்த பின் ஹாலில் மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று எதிர்பாராத விதமாகப் பிரின்ஸிபல் வந்து சேர்ந்தார். அவர் முகம் பேயறை பட்டாற் போல் வெளிறிப் போய் இருந்தது. கண்ணாயிரமும் ஜமீந்தாரும் பிரின்ஸிபலை அழைத்துக் கொண்டு முன் பக்கத்து அறைக்குப் போனார்கள். பாரதிக்கு அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அறிய ஆசையாயிருந்தது. ஆனால் அதை அவள் அறிந்து கொள்ள முடியாமல் அவர்கள் முன் பக்கத்து அறையையும் கடந்து வெளியே தோட்டத்து மரத்தடியில் போய்ப் பேசிக் கொண்டு நின்றார்கள். பதினைந்து நிமிடங்களுக்குப் பின் ஜமீந்தார் மட்டும் உள்ளே திரும்பி வந்தார். கண்ணாயிரமும், பிரின்ஸிபலும் காரில் அவசரமாக எங்கோ வெளியே கிளம்பிச் சென்றார்கள். ஏதோ சதித் திட்டத்துக்கு ஆலோசனை செய்கிறவர் போல் ஜமீந்தார் ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்த போது, "காலேஜில் ஸ்டிரைக் ஆரம்பித்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் போலிருக்கிறதே?" என்று இரண்டாவது தடவையாக அவரிடம் அந்தப் பேச்சைத் தொடங்கிப் பார்த்தாள் பாரதி.

"அதைப் பற்றி உனக்கென்ன வந்ததும்மா! அதெல்லாம் நிர்வாக விஷயம். நீ ஒண்ணும் தலையிடாதே..." என்று அவள் அதைப் பற்றிப் பொதுவாகத் தன்னிடம் விசாரிப்பதையே விரும்பாதவர் போல் பேச்சை வெட்டினார் ஜமீந்தார். அப்பொழுது அவருடைய கண்கள் சிவந்து கொடிய பார்வையோடு இருந்தன. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறார் போல கடுங்கோபம் துள்ளிக் கொண்டிருந்தது.

"காலேஜ் ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை ஒரு ஸ்டிரைக் கூட வந்ததில்லை. அப்பா நயமாகவும், பயமாகவும் எல்லாவற்றையும் சமாளித்து விடுவார்... இப்பத்தான் எல்லாப் போதாத காலமும் ஆரம்பமாயிருக்கு. வீணாகக் காலேஜுக்கும் கெட்ட பேர்..." என்று அவள் மேலும் எதையோ சாதாரணமாகப் பேசத் தொடங்கிய போது "வாயை மூடு! உனக்கு வேறே வேலை இல்லே? நீ முதல்லே உள்ளாரப் போ... சொல்றேன். ஸ்டிரைக்... மண்ணாங்கட்டி எல்லா யழவும் தான் வரும்... அதைக் கவனிச்சுக்கத் தான் நானும் பிரின்ஸிபாலும் இருக்கோமே? உனக்கென்னா வந்திருச்சுங்கறேன்?" என்று சொல்லிச் சீறத் தொடங்கிவிட்டார் ஜமீந்தார். யாரையோ உடனே கொலை செய்து விடவேண்டும் போன்ற அவ்வளவு கோபம் அப்போது அவருடைய முகத்தில் மிகவும் குரூரமாகத் துடித்துக் கொண்டிருந்தது. பாரதி மேலும் ஒன்றும் பேசாமல் உள்ளே போய்விட்டாள். ஒவ்வொரு பெண்ணின் அநுதாபமும் வேறெதையும் செய்ய முடியாதவரை வெறும் அழுகையில் போய்த்தான் நிறைய முடியும். அதையேதான் அப்போது அவளும் செய்தாள்.

அத்தியாயம் - 51

படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றது தான். எந்தப் பிரச்சினையோடாவது உராயும் போதுதான் அதிலிருந்து சிந்தனைச்சுடர் புறப்படுகிறது.

அகங்காரத்திலிருந்துதான் வெறுப்புப் பிறக்கிறது. இவன் நம்மை மதிக்க மாட்டேனென்கிறானே என்னும் காழ்ப்பினால் அந்த வெறுப்பு வளர்கிறது. ஜமீந்தார், கல்லூரி முதல்வர், கண்ணாயிரம், எல்லாரும் சத்தியமூர்த்தியின் மேல் அளவற்ற வெறுப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாரதியும் உணர்ந்திருந்தாள். அந்த வெறுப்புக்கும் அவர்களுடைய சொந்த அகங்காரமே காரணமென்பதும் அவளுக்குப் புரிந்திருந்தது. உலகத்தின் சந்தோஷ மயமான விநாடிகள் சந்தர்ப்பங்கள் எல்லாம் அன்று காலையில் சத்தியமூர்த்தியைப் போலீஸ் நிலையத்தின் அருகே சந்தித்த வேளையோடு முடிந்து போய்விட்டதாகத் தோன்றியது அவளுக்கு. அவள் வரையில் அப்படித் தோன்றியிருப்பது தான் உண்மையாக நின்றது. அந்தத் துயரத்தை அவள் இப்போது மனப்பூர்வமாக அங்கீகரித்தேயாக வேண்டும்.

அகங்காரத்திலிருந்து பிறக்கிற வெறுப்புக்கு அவளும் தான் முன்பு ஆளாகியிருக்கிறாள். சத்தியமூர்த்தி தன்னிடம் அலட்சியமாகவும், பாராமுகமாகவும் இருந்த போது செல்வத்திலும், சீராட்டிலும் வளர்கிற எல்லாப் பெண்களுக்கும் இயற்கைக் குணமாக வந்து படிந்துவிடும் ஆள விரும்புகிற அன்பால் அவளும் அவனை வெறுக்க முயன்று தோற்றிருக்கிறாள். ஆற்றாமையும், ஏமாற்றமும் அவள் இதயத்தில் கூட அகந்தையைப் புகையச் செய்திருக்கின்றன. அவன் தன்னை வெறுக்கிறானோ என்ற தாழ்வு மனப்பான்மையால் தான் அவனை வெறுக்க முயன்று, அந்த முயற்சியே காதலாகப் பெருகித் தவிக்கிறாள் அவள். பற்றிப் படரத் தவித்த கொடியாக அவள் அலைந்த போது அவன் கோபுரமாய் உயர்ந்து நின்றிருக்கிறான். துன்பமும், தோல்விகளும் பட்டுப்பட்டுத்தான் மனம் மென்மையடைந்து மலர வேண்டும். அந்த மலர்ச்சிக்குப் பின்போ பிறருக்கு விட்டுக் கொடுப்பதென்பது கடினமாகத் தோன்றுவதே இல்லை. துன்ப வயப்பட்டால்தான் இதயம் மெதுவாகும்; இளகும்; தான் என்ற அகந்தை ஒழியும்.

தந்தையின் அகால மரணம் அவளைத் தனிமையோடும், துயரத்தோடும் நிறுத்திவிட்டது. அந்தப் பெரிய துயரத்தில் நடுவே வந்து மனத்தை மறைத்துக் கொண்டிருந்த சிறிய அகந்தை சென்றொழிந்து விட்டது. அவளுடைய மனத்தில் உண்மை அன்பின் பரிசுத்தமான தேவையே ஓர் ஏக்கமாக வந்து நிற்கிறது இப்போது. "அதெல்லாம் நிர்வாக விஷயம்; நீ ஒண்ணும் தலையிடாதே!" என்று ஜமீந்தார் சீறி விழிந்து அவளை மிரட்டியிருந்தாலும் அவளுடைய மனம் சத்தியமூர்த்தியின் வெற்றிக்காகத்தான் இன்னும் ஏங்கிக் கொண்டிருந்தது. சத்தியமூர்த்தியை யாரோ நண்பர்கள் ஜாமீன் கொடுத்துப் போலீஸ் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றார்கள் என்பதையும் அப்போது மாணவர்களின் பெருங்கூட்டம் அநுதாபத்தோடு அவரைச் சூழ்ந்தது என்பதையும் டிரைவர் முத்தையா தானாகவே வந்து தெரிவித்த போது, அவள் மனத்துக்கு ஆறுதலாயிருந்தது.

வேலை நிறுத்தம் தீவிரம் அடையவும் கண்ணாயிரமும் முதல்வரும் பதறிச் சர்க்கிள் இன்ஸ்பெக்டரைத் தேடிக் கொண்டு போனதையும், ஜமீந்தாரும் நிர்வாகி என்ற முறையில் மாவட்டக் கலெக்டருக்கு டெலிபோனில் தகவல் தெரிவித்ததையும் அதே வீட்டில் உடனிருந்தே கவனித்துக் கொண்டிருந்தும் ஒன்றுமே அவற்றிற்கெதிராகச் செய்ய முடியாமல் தவித்தாள் பாரதி. கருத்தழகும் காட்சியழகும் மிக்க இந்தச் சத்தியமூர்த்தி என்னும் அபூர்வமான இலட்சிய ஆசிரியர் தங்கள் கல்லூரிக்கே வேலைக்கு வந்துவிட வேண்டுமென்று வருட ஆரம்பத்திலே இண்டர்வியூவின் போது தான் காண்பித்த ஆவல் எல்லாம் இப்போது நினைவு வந்து அவளை அழவைத்தன. 'சுக துக்கங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையின் முடிவற்ற பாதையில் இன்னும் ஓரடி முன்னால் எடுத்து வைக்க எப்போதும் நான் தயார்' என்பது போல் வலது பாதம் முன் இருக்க நிமிர்ந்து உட்கார்ந்து 'யாயும் ஞாயும் யாராகியரோ?' என்று குறுந்தொகைக் கவிதையை அவர் தன் தந்தையிடம் நயமாக விளக்கிச் சொல்லியதெல்லாம் இப்போது அவளுக்கு ஞாபகம் வந்தன. பழைய ஞாபகங்களாலும், தந்தையை இழந்த பரிதாப நினைவுகளாலும் தன்னுடைய ஆசையையெல்லாம் கொள்ளை கொண்ட இலட்சிய ஆசிரியருக்கு வந்துவிட்ட துன்பங்களை எண்ணி வருந்தும் வருத்தத்தாலும் நெடுநேரம் மௌனமாய் அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்டு கண்ணீர் பெருக்கிய வண்ணம் இருந்தாள் அவள். மாணவர்கள் எந்த விஷயத்தையும் சுயமாகச் சிந்தித்து எதிர்கொள்ளத் தயாராயிருக்க வேண்டும் என்ற கருத்தை வற்புறுத்துவதற்காகச் சத்தியமூர்த்தி தன் வகுப்புக்களில் அடிக்கடி விளக்கமாகச் சொல்கிற உவமை ஒன்று உண்டு.

"படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றதுதான். எந்தப் பிரச்சினையோடு உராய்ந்தாலும் அப்படி உராய்வதன் காரணமாகவே சிந்தனைச் சுடர் புறப்படுகிறது. 'அறிவுப் புரட்சி' என்பது புத்தக அறிவை எல்லா இடங்களிலும் பரப்பி விட முயல்வது மட்டுமன்று. ஒவ்வொருவருடைய கஷ்ட நஷ்டங்களையும் மற்றொருவர் அறிந்து உணர்ந்து மனம் நெகிழ்கிற சூழ்நிலையை உண்டாக்கி விட்டாலே அறிவில் புரட்சி விளைந்தாற் போலத்தான். இத்தகைய அறிவுப் புரட்சியால் சுயமரியாதைக்கும் மானாபிமானத்துக்கும் கூட இழுக்கு வர முடியாது. மானாபிமானம் என்றால் தன்மானத்தின் மேல் அபிமானம் இருந்து மட்டும் பயனில்லை. நம்முடைய எல்லா அபிமானங்களிலும் கூட மானமிருக்க வேண்டும். மானமில்லாத அபிமானங்கள் வாழ்க்கைக்கே களங்கம்" என்பார் அவர். 'அப்படிப்பட்டவருடைய மானத்துக்குப் பங்கம் உண்டாக்கி அவமானப்படுத்திவிட வேண்டுமென்றல்லவா இந்தக் கல்லூரி முதல்வரும் ஜமீந்தாரும் இப்போது இப்படிச் சூழ்ச்சி செய்கிறார்கள்?' என்று நினைத்த போது அந்த நினைப்பைத் தாங்கிக் கொள்வதற்கே பொறுமையின்றி வேதனைப்பட்டாள் அவள்.

சத்தியமூர்த்தியை அரெஸ்ட் செய்துகொண்டு போய் ஜாமீனில் விடுவித்த தினத்தன்று மறுதினம் காலையில் கல்லூரி வேலை நிறுத்த நிலைமை இன்னும் தீவிரமாகியது. சத்தியமூர்த்திக்கு உடந்தையாயிருந்ததாகவும், வேலை நிறுத்தம், தீ வைத்தல் ஆகிய காரியங்களில் ஈடுபட மற்ற மாணவர்களைத் தூண்டியதாகவும் பொய்க் குற்றம் சுமத்தி ஏற்கெனவே வேறு காரணங்களால் அவருக்குப் பிடிக்காத சில மாணவர்களைக் கல்லூரியிலிருந்து 'டிஸ்மிஸ்' செய்திருந்தார் முதல்வர். நோட்டீஸ் போர்டில் இதை அறிவிக்கும் முதல்வருடைய அறிக்கை தொங்கியது. இதனால் வேலை நிறுத்த நிலைமை தீவிரமாகவே கலெக்டருக்குத் தந்திகள் பறந்தன. ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக மல்லிகைப் பந்தலில் முகாம் செய்து நிலைமையை நேரில் கண்டறியுமாறு அரசாங்கம் மாவட்டக் கலெக்டரைக் கேட்டுக் கொண்டிருந்தது. பெற்றோர்கள் படிப்பு வீணாகிறதே என்று கவலைப்பட்டார்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்குக் கல்லூரி முதல்வரும், நிர்வாகியும் தங்களது முரட்டுப் பிடிவாதத்தால் மாணவர்களின் படிப்பைப் பாழாக்குகிறார்கள் என்ற அபிப்பிராயம் வலுத்திருந்தது. சத்தியமூர்த்தி ஹாஸ்டலுக்கு நெருப்பு வைக்கும்படி மாணவர்களைத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்திருப்பதாகப் பத்திரிகைகளில் அன்று காலை செய்தி வந்துவிட்டாலும் மாணவர்கள் அந்தச் செய்தி பொய்யாகுமாறு அவ்வளவு வலுவாக ஊரில் உண்மையைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். கல்லூரி முதல்வர் தனியாக நடந்து வெளியே வர அஞ்சுகிற அளவுக்கு அவரே தம்மைச் சுற்றிப் பயங்கரமானதொரு சூழலைப் படைத்துக் கொண்டு விட்டார். ஆனால் மாணவர்கள் எல்லோரும் கட்டுப்பாடாகவும், ஒழுங்காகவும் நடந்து கொண்டார்கள்.

தங்கள் மேலும் தங்களுடைய மதிப்புக்குரிய விரிவுரையாளர் மீதும் சுமத்தப்பட்டிருந்த பொய்ப் பழிகளை மெய்யோ எனச் சந்தேகிக்கும்படியான எந்தச் சிறிய தவறும் தங்களால் நேர்ந்து விடாதபடி ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு மிக அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். மானாபிமானம் நிறைந்த தங்கள் விரிவுரையாளருக்குத் தங்களுடைய ஆத்திரத்தால் மெய்யாகவே எந்தப் பழியும் வந்துவிடக் கூடாதென்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாயிருந்தார்கள். முதல் நாள் ஜமீந்தார் கோபித்துக் கொண்டு சீறி விழுந்த பின்பு கல்லூரி வேலை நிறுத்தத்தைப் பற்றி அவரிடம் பேச்சை எடுப்பதையே விட்டுவிட்டு உள்ளூர மனம் புழுங்கிக் கொண்டிருந்த பாரதியிடம் மறுநாள் நடுப்பகலில் ஜமீந்தார் தாமாகவே வந்து வலுவில் பேச நேர்ந்தது. "காலையில் மதுரையிலிருந்து மோகினியும் கணக்குப் பிள்ளையும் காரில் புறப்பட்டுவிட்டதாக ஃபோன் வந்தது. அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ளார இங்கே வந்திடுவாங்க - வர்றவங்களை நீதான் கொஞ்சம் கவனிச்சுக்கணும். நானும் கண்ணாயிரமும் பிரின்ஸிபலை அழைச்சுக்கிட்டு காலேஜ் பக்கம் போயிட்டு வர்ரோம்! மனுசன் பெரிய பயந்தாங் கொள்ளியாயில்ல இருக்காரு... பையன்களோட கூச்சலுக்கே நடுங்குகிற பிரின்ஸிபலாப் பார்த்து உங்கப்பா வேலைக்கு வச்சிட்டுப் போயிட்டாரேம்மா..." என்று மிகவும் தன்மையாகப் பேசுகிறாற் போன்ற பாவனையில் சொல்லிவிட்டு அவர் கண்ணாயிரத்தோடு வெளியே புறப்பட இருந்தார். ஆனால் அவர்கள் புறப்படுவதற்குள்ளேயே போர்டிகோவில் கார் வந்து நின்றுவிட்டது. ஜமீந்தாரின் மேலும் கண்ணாயிரத்தின் மேலும் தனக்கு அப்போது இருந்த கோபத்தினால் மோகினியின் மேல் அசிரத்தை காண்பிக்கவில்லை பாரதி. மோகினியின் இணையற்ற நாட்டியக் கலைத் திறமையில் அவளுக்குப் பக்தியும் மரியாதையும் எப்போதுமே உண்டு.

கார் வந்து நின்ற ஓசையைக் கேட்டுக் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் முன் பக்கத்திற்கு விரைந்தார்கள். தயங்கித் தயங்கி அவர்களைப் பின் தொடர்ந்து பங்களாவின் முகப்புக்கு வந்தாள் பாரதி. வந்து நின்ற காரிலிருந்து கணக்குப் பிள்ளை முன்னால் இறங்கிப் பின்புறத்துக் கதவைத் திறந்து விட்டதும் கீழே இறங்கிய மோகினியைப் பார்த்துப் பாரதி அப்படியே திகைத்துப் போனாள். 'வாடிக் கருத்து இளைத்து இவள் ஏன் இப்படிச் சோக ஓவியமாக இறங்கி வருகிறாள்?' என்று பாரதியின் மனம் அவளைப் பார்த்துக் கலங்கியது.

காரின் அருகே வந்து நிற்கும் ஜமீந்தாரையும், கண்ணாயிரத்தையும் கவனிக்காதது போலவே அவள் நேரே தன்னை நோக்கி வருவதைப் பார்த்ததும் பாரதிக்கு இன்னும் ஆச்சரியத்தை அளித்தது. ஜமீந்தாரையும், கண்ணாயிரத்தையும், அவர்கள் அங்கு வந்து நிற்பதைத் தெரிந்து கொண்டும், ஓரளவு அலட்சியமாகவும், வெறுப்புடனும், தான் பார்க்க விரும்பாதது போல் அவள் புறக்கணித்து விட விரும்புவதாகத் தோன்றியது பாரதிக்கு. 'ஏதோ நானும் இங்கு வந்து சேர்ந்து விட்டேன்' என்று வேண்டா வெறுப்பாகச் சோர்ந்த பாவனையில் மோகினி காரிலிருந்து இறங்கி நடைப் பிணமாக நகர்ந்து வருவது போலவும், முன் நோக்கிக் கால் எடுத்து வைக்கிற ஒவ்வோர் அடியையும் யோசித்துக் கொண்டே எடுத்து வைப்பது போலவும் தோன்றியது பாரதிக்கு. மோகினியின் அழகையும் எடுப்பான தோற்றத்தையும் பற்றிப் பாரதிக்கு அவளைச் சந்தித்த முதல் நாளிலிருந்து அந்தரங்கமாக ஒரு பொறாமை கூட உண்டு. எப்போதோ சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள்பட்டி ஜமீந்தாரோடும், கண்ணாயிரத்தோடும் அப்பா மதுரையில் தங்கியிருந்த போது மோகினியின் இணையற்ற நடனத்தையும் அவளையும் பாரதி அறிமுகம் செய்து கொண்டிருந்தாள். அதற்கு பின் இரண்டோர் ஆண்டுகளில் மஞ்சள்பட்டி அரண்மனை நவராத்திரி விழாவில் அவளுடைய நடனத்தைக் கண்டு வியந்திருக்கிறாள். அவளிடமோ, அவள் தாயிடமோ தானும் பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆசை கூடப் பாரதிக்கு இருந்ததுண்டு.

கார்காலத்து முல்லைக்கொடி சிரித்துக் கொண்டு நடந்து வருவது போல் நடப்பதே ஓர் அழகு நடனமாய் வருகிற மோகினியைப் பலமுறை மதுரையில் நாட்டிய மேடைகளில் அவள் பார்த்திருக்கிறாள். அழுதழுது கலங்கிச் சிவந்த கண்களும், கலைந்து முன் நெற்றியிலும், காதோரமும் சுழலும் தூசி படிந்த கூந்தலும், தளர்ந்த நடையுமாகத் தனக்கு முன் இப்போது வந்து நின்ற மோகினியைப் பார்த்ததும் திகைப்பிலிருந்து விடுபட்டு அவளை வரவேற்று விசாரிக்கவே பாரதிக்குச் சில கணங்களாயின. "அக்கா! வாருங்கள்! ஏன் இப்படி வாடிக் கறுத்திருக்கிறீர்கள்? மதுரைக்கு வந்திருந்த போது ஆஸ்பத்திரியில் பார்த்ததை விட இப்போது இன்னும் மோசமாயிருக்கிறீர்களே?" என்று அவள் தன்னை விசாரித்ததற்குப் பதில் சொல்லாமல் "அப்பா காரியம் ஆகிவிட்டது போலிருக்கிறதே?" என்று பாரதியிடம் அவள் தந்தையின் மரணத்துக்குத் துக்கம் விசாரித்துக் கொண்டு கண் கலங்கி நின்றாள் மோகினி. அவளுக்குப் பின்னால் காரிலிருந்து வீணையும் கையுமாக இறங்கி வந்த கணக்குப் பிள்ளையை ஜமீந்தாரும் கண்ணாயிரமும் நடுவழியில் மறித்துப் பேசிக் கொண்டு நின்றார்கள். கணக்குப் பிள்ளையிடம் ஏதேதோ பேசிய பின் பாரதியும் மோகினியும் நின்று கொண்டிருந்த இடத்துக்கு வந்து ஜமீந்தாரும் கண்ணாயிரமும் "பிரயாணம் நல்லாயிருந்ததா? உடம்பெல்லாம் சௌக்கியம்தானே?" என்று அக்கறையாக விசாரித்த போது கூடக் குனிந்த தலை நிமிராமல் அப்படியே கடுமையாக இருந்துவிட்டாள் மோகினி. அவள் அப்படிப் பதில் சொல்லாமல் தன்னை அலட்சியம் செய்துவிட்டதில் ஜமீந்தாருக்குச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் ஊமைக் கோபம் மூண்டிருக்க வேண்டும் என்பதை அவர் முகம் கடுமையாக மாறியதிலிருந்தே பாரதி புரிந்து கொண்டாள். "ஏன் ஐயா அப்பிடியே மலைச்சுப் போய் நிற்கிறீங்க? காருக்குள்ளார இருக்கிற சாமான்களை எல்லாம் ஒண்ணொண்ணா எடுத்து வைக்கிறதுதானே?" என்று டிரைவரிடமும் கணக்குப் பிள்ளையிடமும் எரிந்து விழுவதன் மூலம் ஜமீந்தாருடைய அந்தக் கோபம் வெளிப்பட்டுத் தீர்ந்தது. இரண்டாவது தடவை ஜமீந்தார் சிறிது கடுமையாகவே, "இந்தா மோகினி; உன்னையெத்தான் கேக்குறேன். பதில் சொல்றதுக்கு என்ன? உடம்புக்குச் சுகந்தானே? பிரயாணத்துலே ஒண்ணும் கொறைவில்லையே?" என்று கேட்ட போது முன் போலவே நிமிர்ந்து பாராமல் ஆனால் தலையை மட்டும் மெல்ல அசைத்தாள் மோகினி. அவள் முகத்தில் அப்போதும் மலர்ச்சியோ சிரிப்போ இல்லை என்பதை பாரதி கூர்ந்து கவனித்தாள்.

"உடம்பிற்கு இதமா நல்லா வெந்நீர் வச்சுத் தரச்சொல்லிக் குளி. சாப்பிடு. 'ரெஸ்ட்' எடுத்துக்க" என்று மோகினியிடம் சொல்லியபின் பாரதியின் பக்கம் திரும்பி, "நீ பார்த்துக் கவனிச்சுக்கம்மா! சும்மா நிற்கிறியே..." என்று துரிதப்படுத்தி விட்டுப் போய்ச் சேர்ந்தார் ஜமீந்தார். மோகினியோ ஜமீந்தார் போன பின்பும் நீண்ட நேரம் ஒன்றுமே பேசாமல் தலைகுனிந்து மௌனமாகக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள். பாரதியோடும் கலகலப்பாகப் பேசவோ பழகவோ முயலவில்லை அவள். ஆனாலும் பாரதி அவளை அப்படியே விட்டுவிடவில்லை.

"ஏன் அக்கா அழறீங்க...?"

இதைக் கேட்டு மோகினியின் அழுகை இன்னும் பெரிதாகியது. அழகின் அரசி போலவும் கலையின் அதிதேவதை போலவும் விளங்கும் அந்த இலட்சுமீகரமான பெண் குமுறிக் குமுறி அழுவதைப் பார்த்துப் பாரதியால் கண் கலங்காமல் இருக்க முடியவில்லை. "நீங்கள் அழக்கூடாது அக்கா..." என்று அவள் ஆறுதல் கூறத்தொடங்கவும், "அழாமல் என்ன செய்யறதம்மா! நான் பிறந்த பிறப்பை நினைச்சு அழறேன்" என்று பதில் வந்தது மோகினியிடமிருந்து.

"மதுரையை விட்டு இங்கே வந்தது பிடிக்கவில்லையா உங்களுக்கு?" என்று சின்னக்குழந்தை ஆறுதல் கூறுவது போல் பேதமையாக அவளிடம் ஏதோ கேட்டாள் பாரதி.

"பிடிக்காதது ஒண்ணுமட்டுமில்லை. எத்தனையோ பிடிக்கலை... வாழ்க்கையே பிடிக்கலை... வாழ்க்கையே பிடிக்காமல் போனப்புறம் பிடிக்காததுன்னு தனியா எதைச் சொல்ல முடியும்?" என்று மோகினி அழுது கொண்டே பதில் கூறிய போது பாரதிக்கு அந்த முடிவிலாச் சோகம் பொறுக்காமல் மனம் நெகிழ்ந்து விட்டது. ஓர் அநாதைக் குழந்தை தற்காலிகமாகத்தான் ஓர் அநாதை என்பதை மறந்து விட்டு இன்னோர் அநாதைக் குழந்தைக்குத் தைரியம் சொல்லி ஆறுதலாக உபசரிப்பது போல், பாரதி மோகினியை உள்ளே அழைத்துக் கொண்டு போய்ச் சமாதானப்படுத்தி முதலில் காப்பி குடிக்க வைத்தாள். அப்புறம் வெந்நீரில் குளிக்க வைத்துக் கட்டிக் கொள்ள மாற்றுப் புடவையும் கொடுத்தாள்.

"அக்கா! உங்களுக்குத் தலைகொள்ளாமல் கருகருவென்று நிறையக் கூந்தல்! பூ வைத்துக் கொள்ளுங்கள்..." என்று ஒரு பந்து மல்லிகைப் பூவோடு வந்து பாரதி பிடிவாதம் பிடித்த போது மோகினி அந்தப் பூவை வைத்துக் கொள்ள மறுத்துப் பிடிவாதம் பிடித்ததுடன் எதை நினைத்தோ மறுபடியும் அழத் தொடங்கிவிட்டாள். மோகினியிடம் பாரதி பூவும் கையுமாக மன்றாடிக் கொண்டிருந்த அதே வேளையில் முன்பக்கத்து அறையில் ஜமீந்தார் கோபமாக இரைந்து பேசிக் கொண்டிருந்த பேச்சு கல்லூரி வேலை நிறுத்தத்தோடு தொடர்புடைய ஏதோ ஒன்றாக இருப்பது போல தோன்றவே பாரதி அதைச் செவிசாய்த்துக் கவனிக்கலானாள்.

"ஓய், கணக்குப் பிள்ளை! ஊராருக்கு அடங்காத பிள்ளையை நீரே தான் அடக்கணும். எனக்கு மாலை போடறதுக்கு மனசு வெறுத்துப் பாதிக் கூட்டத்திலே வெளியே எந்திரிச்சுப் போனான் ஐயா அவன்! மனசிலே எத்தினி திமிரு இருந்தா அப்படிச் செய்திருக்கணும்? உம்ம பையன் தான் இப்ப எனக்கு ஒண்ணா நம்பர் விரோதி ஐயா! நீர் அவனை வழிக்குக் கொண்டு வரலியோ எல்லாத்தையும் கூண்டோட தொலைச்சுத் தலை முழுக வேண்டியதுதான்! ஜாக்கிரதை" என்று ஜமீந்தார் இரைந்ததற்குப் பதிலாகத் தணிந்த குரலில் மதுரையிலிருந்து வந்த கணக்குப் பிள்ளை ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நடுநடுவே கண்ணாயிரத்தின் குரலும் ஒலித்தது. மதுரையிலிருந்து மோகினியை அழைத்துக் கொண்டு வந்திருக்கும் அந்தக் கணக்குப் பிள்ளையிடம் யாரைப் பற்றி எதற்காக ஜமீந்தார் இப்படி இரைந்து கொண்டிருக்கிறார் என்பது மட்டும் பாரதிக்குப் புரியவில்லை.

மோகினியை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்குக் காரில் அழைத்துக் கொண்டு வரச்சொல்லி அந்தப் பேச்சியம்மன் படித்துறைக் கிழவனுக்கு டெலிபோன் செய்த போது ஜமீந்தாருக்கும் கண்ணாயிரத்துக்கும் முன்பு தோன்றாத புது யோசனை ஒன்று இப்போது தோன்றியது. சத்தியமூர்த்தியின் தகப்பனான இந்தக் கிழவனைக் கொண்டே அவனை அடக்கி ஒடுக்க வேண்டுமென்ற யோசனையைக் கண்ணாயிரம் ஜமீந்தாருக்குத் திருவாய் மலர்ந்தருளினார்.

"அத்தனை திமிராயிருக்கிறவன் எங்கே ஐயா தகப்பன் பேச்சுக்கு அடங்கப் போகிறான்?" என்று ஜமீந்தார் தயங்கினார்.

"முயன்று பார்ப்போம். தகப்பனும் மகனுமாகச் சேர்ந்து கையெழுத்துப் போட்டு வீடு கட்டறதுக்கு என்னிடம் நெறையக் கடன் வாங்கியிருக்காங்க... அதையும் நினைவுபடுத்திப் பயமுறுத்திப் பார்க்கலாம். கல்லை எறிஞ்சா அப்புறம் மாங்காயோ கல்லோ எது வேணாத் திரும்பி விழுந்திட்டுப் போவுது...!" என்றார் கண்ணாயிரம். எனவே இரண்டு பேருமாகச் சத்தியமூர்த்தியின் தந்தையை நயமாகவும், பயமாகவும் மிரட்டிப் பார்த்தார்கள். பலவிதங்களில் அவர்களுக்குக் கட்டுப்பட்ட அந்த ஏழை மனிதர் தம் மகனுடைய பிடிவாத குணத்தை நன்றாக உணர்ந்திருந்தும், பணம் படைத்த அவர்களுடைய வற்புறுத்தலை மீற முடியாமல், அன்றே அவனைச் சந்தித்து ஜமீந்தாரிடமும் பிரின்ஸிபலிடமும் மன்னிப்புக் கேட்கும்படி புத்தி சொல்லிப் பார்ப்பதாக ஒப்புக் கொண்டார். துணிந்து சத்தியமூர்த்தியைத் தீர்த்துக் கட்டிச் சீட்டுக் கிழித்து வீட்டுக்கு அனுப்பிவிடுவது என்ற முயற்சியில் தானும் பிரின்ஸிபலும் இறங்கியிருந்தாலும் மாணவர்களுடைய ஆதரவு சிறிது கூட குறையாமல் அவன் பக்கம் இருப்பதைப் பார்த்து இப்போது ஜமீந்தாருக்குச் சிறிதளவு தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. அதனால் சத்தியமூர்த்தியே தன்னிடமும் பிரின்ஸிபலிடமும் வந்து மன்னிப்புக் கேட்டு விட்டுப் பையன்களையும் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கும்படி செய்கிறாற் போல் அவனுடைய தகப்பனார் மூலமே ஒரு நிர்ப்பந்தத்தை அவனுக்கு உண்டாக்கி விட முடியுமானால் நல்லதென்று தான் அவருக்குத் தோன்றியது. அப்படி நடந்தால் மாணவர்களுக்கும் அவன் மேல் உள்ள பற்றுதல் குறைந்து போகும். கோர்ட், கேஸ் என்று வளர்ந்து ஹாஸ்டலுக்கு நெருப்பு வைத்ததற்குச் சத்தியமூர்த்தியின் தூண்டுதலோ, மாணவர்களின் செயலோ காரணமில்லை என்று நிரூபணமாகிவிட்டால் என்ன செய்வதென்ற பயமும் ஜமீந்தாருடைய மனத்தில் இப்போது மூண்டிருந்தது.

அத்தியாயம் - 52

ஒரு பெண் தன் அந்தரங்கத்திலிருக்கிற உண்மையை உலகத்துக்குப் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்ளத் தான் எத்தனை ஆயிரம் தடைகள்?

இனிமேலாவது நல்ல காரியங்களைச் செய்து நல்லபடியாக வாழலாம் என்று நினைப்பதற்குப் பதில் இதுவரை செய்திருக்கிற தவறுகளையும், இனிமேல் செய்யப் போகிற தவறுகளையுமே நல்ல காரியங்களாக நிரூபித்துக் கொண்டு வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிற வறட்டுக் கௌரவத்தைச் சிலரால் விட்டு விட முடியாது. மஞ்சள்பட்டியார் இந்த விதத்தைச் சேர்ந்தவர். சத்தியமூர்த்தியின் தந்தையைக் கூப்பிட்டு அவனை அடக்கி வழிக்குக் கொண்டு வருமாறு சொல்லியதோடு நிற்காமல் அதற்கு முன்பே ஜமீந்தார் வேறு சில ஏற்பாடுகளையும் செய்திருந்தார். தம்முடைய சொந்தப் பத்திரிகையாகிய குத்துவிளக்கில் அந்த வாரம் மாணவர்களின் வேலை நிறுத்தத்தைக் கண்டனம் செய்தும், மாணவர்களைச் சில ஆசிரியர்கள் தவறான வழியில் தூண்டுவதை ஒடுக்க வேண்டுமென்று கண்டித்தும் தலையங்கம் எழுதச் சொல்லியிருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரி விடுதியின் 'கூரை ஷெட்' நெருப்புப் பிடித்து எரிந்த காட்சியைப் புகைப்படமாகப் பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களுடைய அநுதாபத்தைத் தங்கள் பக்கமாகத் திருப்பிக் கொள்ள வேண்டுமென்பதற்காக ஜமீந்தாரும் கண்ணாயிரமும் இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். ஜமீந்தாருடைய சொந்தப் பத்திரிகையாகக் கைக்கு வந்து கண்ணாயிரத்தின் நிர்வாகத்தில் அடங்கிய பின் குத்துவிளக்கில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. பொதுமக்களுடைய கவனத்தை மிக வேகமாகக் கவர வேண்டும் என்பதற்காக 'இரவில் நடந்த இருபது கொலைகள்' என்ற அதி பயங்கரத் துப்பறியும் தொடர் கதையை 'இரத்தக் காட்டேரி' என்னும் புனைப்பெயர் பூண்ட பேயாண்டி என்ற மர்மக் கதை மன்னர் எழுதி வந்தார். திரைப்படச் சிங்காரிகளின் தலை அலங்காரங்களைப் பற்றிய புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவரலாயின. புதிதாக நியமிக்கப்பட்டிருந்த மலையாள ஆசிரியர் ஆங்கிலத்தில் எழுதுகிற தலையங்கங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்து கொண்டிருந்தன. 'குத்துவிளக்கின்' ஊழல்களைப் பற்றியும், அதில் வருகிற தரக்குறைவான அம்சங்களைப் பற்றியும் அதே பத்திரிகையில் முன்பு வேலை பார்த்து வந்தவன் என்ற முறையில் குமரப்பனிடம் யாரோ நண்பர்கள் கேட்டபோது "நாமெல்லாம் இருந்து வேலை பார்த்து அதை இன்னும் அதிக காலம் நன்றாக வாழ வைத்துவிடக் கூடாது. இட் ஈஸ் மை விஷ் தட் இட் எண்ட்ஸ் இன் எ நேச்சுரல் டெத்' (அது இயற்கையாகவே சாகும்படி விட்டு விட வேண்டுமென்பதுதான் எனது ஆசை). துப்பறியும் கதைகளில் அதிகமாகச் செலவழிவது கொலை செய்யப்படுகிறவர்களின் இரத்தம். அதிகமாகச் செலவழியாதது அவற்றை எழுதுகிறவர்களின் மூளை. 'இரவில் நடந்த இருபது கொலைகள்' என்ற தலைப்பை அதிபயங்கரமாகப் போட்டு விட்டுத் தூக்கம் வராமல் வேதனைப்பட்ட கதாநாயகன் கட்டிலுக்கடியில் இருந்த இருபது மூட்டைப் பூச்சிகளையும் நசுக்கிக் கொன்றதாக முடிப்பதிலும், 'எரிந்த பங்களா' என்று தலைப்பை எழுதிவிட்டுக் கடைசியில், 'நேற்றுவரை இருண்டு போயிருந்த அந்தப் பங்களாவில் இன்று விளக்கு எரிந்தது' என்பதாக முடிப்பதும் கூட உண்டு. அதெல்லாம் என்ன செய்வதென்று தெரியாதவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலே ஏதோ செய்து வருகிற காரியங்கள். நாம் ஏன் அவற்றையெல்லாம் பற்றிக் காலைப்பட வேண்டும்?" என்று குமரப்பன் அலட்சியமாக மறுமொழி கூறியிருந்தான். அதே குத்துவிளக்கில்தான் இப்போது மாணவர்களின் வேலை நிறுத்தத்தைக் கண்டித்தும், ஜமீந்தாருடைய நிர்வாகத் திறமையைப் புகழ்ந்தும், தலையங்கங்கள் வெளிவந்திருந்தது. குத்துவிளக்கின் இந்த அடாத செயலை எதிர்த்துத் தங்கள் அதிருப்தியைக் காட்டுவதற்காக மல்லிகைப் பந்தல் கல்லூரி மாணவர்கள் அந்த வாரம் கட்டுக்கட்டாக அந்தப் பத்திரிகைப் பிரதிகளை விலைக்கு வாங்கிப் பொது இடங்களில் நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள்.

"நல்லாக் கொளுத்தட்டும்! நமக்கென்ன வந்திச்சு? உள்ளூர் ஏஜெண்டை இன்னும் நாலு கட்டுப் பார்சல் வரவழைச்சுக் கொளுத்துறவங்களுக்கு விற்கச் சொல்லு" என்று ஜமீந்தார் இதைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லாமல் கண்ணாயிரத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலை நிறுத்தத்துக்கு அநியாயமான முறையில் மாணவர்களைத் தூண்டியவன் சத்தியமூர்த்திதான் என்பதற்கு ஒரு 'ரிக்கார்டு' வேண்டுமென்பதற்காகக் குத்துவிளக்கில் அந்தத் தலையங்கம் வரச் செய்திருந்தார் ஜமீந்தார்.

அந்த வாரத்துக் 'குத்துவிளக்கு' இதழ் வெளியாகி நெருப்புக்கிரையான பின்னும் நம்பிக்கை போய்விடாதபடி அதற்கு மறுதினம் மோகினியை அழைத்துக் கொண்டு மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்த சத்தியமூர்த்தியின் தந்தையைக் கருவியாகப் பயன்படுத்தி மகனை ஒடுக்கி விடலாம் என்ற யோசனையைக் கண்ணாயிரம் ஜமீந்தாரிடம் சமயம் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த யோசனையை மறுக்க முடியாமல் நிர்ப்பந்தத்தின் காரணமாகச் சத்தியமூர்த்தியின் தந்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. காலஞ்சென்ற பூபதியின் மகள் என்ற உரிமையோடு பாரதி கல்லூரி வேலை நிறுத்தத்தைப் பற்றி இனி எதுவும் விசாரிக்க வாய்ப்பில்லாதபடி அவளை மோகினியிடம் நாட்டியம் படித்துக் கொள்ளச் சொல்லித் தந்திரமாக ஒதுக்கிவிட்டிருந்தார் ஜமீந்தார். மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்த மறுதினம் காலையில் ஜமீந்தார் அவளையும் பாரதியையும் வற்புறுத்தி நாட்டிய டியூஷனைத் தொடங்கி வைத்துவிட்டார். மோகினிக்கும் நாட்டியம் கற்பிப்பதற்கேற்ற அமைதியான மனநிலை அப்போது இல்லை. பாரதிக்கும் நாட்டியம் கற்றுக் கொள்வதற்கான ஏற்ற அமைதியான மனநிலை அப்போது இல்லை. இரண்டு பேரும் ஜமீந்தாருடைய கூப்பாட்டுக்குப் பயந்து கற்பிப்பது போலவும் கற்றுக் கொள்வது போலவும் நடிக்க வேண்டியிருந்தது. அடவு, விளம்பரகாலம், மத்தியகாலம், துரிதகாலம், திஷ்ர ஜதி, சதுரஸ்ர ஜதி, கண்ட ஜதி, மிஸ்ர ஜதி, சங்கீர்ண ஜதி, என்று சில வார்த்தைகள் காதில் விழுகிற வரை உடன் உட்கார்ந்திருந்து மருண்டு விட்டு அப்புறம் ஜமீந்தார் அங்கிருந்து எழுந்து போய்விட்டார். சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டு விட்ட துன்பங்களாலும், தந்தையை இழந்த சோகம் மாறாத மனநிலையாலும் பாரதி தளர்ந்திருந்தாளே ஒழிய உண்மையில் மோகினியைப் போல் பரத நாட்டியக் கலையில் வசீகரமான தேர்ச்சியுள்ள ஒருத்தியிடம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவளுக்கே அந்தரங்கமாக உண்டு. ஜமீந்தார் எழுந்திருந்து போனப் பின்போ பாரதியின் ஆசை வேறு விதமாகத் திரும்பியது. "அக்கா நீங்க ஆடுங்க... நான் பார்க்கிறேன்" என்று சொல்லித் 'தாயே யசோதா' என்ற தோடி ராகக் கீர்த்தனத்துக்கும், 'நாதர் முடிமேல்' என்ற புன்னாக வராளிப் பாட்டிற்கும் மோகினியை ஆடச் சொல்லிப் பார்த்து மகிழ்ந்தாள் பாரதி.

ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த வானவில்லைப் போலவும், பூமியில் உள்ள பலநிற மலர்களாலும் தொடுத்த பூமாலையைப் போலவும் மோகினி சுழன்று சுழன்று ஆடிய ஆட்டத்தைக் கண்டு பாரதி அபூர்வமான சொப்பனங்கள் நிறைந்த ஒரு புதிய உலகத்திற்கே போய்விட்டுத் திரும்பி வந்ததைப் போன்ற உணர்வை அடைந்திருந்தாள். மோகினி ஆடி முடித்த பின்பு அந்த இடத்தைச் சுற்றிலும் அழகின் நவரச நயங்களும் பாவனைகளும் வந்து காத்துக் கட்டுண்டு கிடப்பன போல் ஒரு சூழ்நிலை உருவாகியிருந்தது. வியப்பு மிகுதியினால் உணர்ச்சி வசப்பட்ட பாரதி, "அக்கா! இந்த விநாடியில் நீங்கள் தெய்வமாகக் காட்சியளிக்கிறீர்கள்! இப்படியே உங்களை நிற்கச் செய்து கைகூப்பித் தொழ வேண்டும் போல இருக்கிறது" என்றாள். இந்த வார்த்தையைக் கேட்ட மோகினியோ கண்கலங்க நின்று கொண்டிருந்தாள். "எனக்குள்ளே சுயமாக நிறைந்திருந்த கலையுணர்வு செத்துப் போய் பலநாட்களாகி விட்டதம்மா! இன்னும் நான் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றால் என்னுள் யாரோ ஒருவருடைய நல்ல ஞாபகம் மீதமிருந்து ஆட்டிக் கொண்டிருக்கிறதென்று தான் சொல்ல வேண்டும்" என்றாள் மோகினி. அவள் இருந்த நிலையைப் பார்த்து அவளிடம் மேலே எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் பாரதி. அப்படி அமைதியாக உட்கார்ந்திருந்தவளுடைய கவனத்தைப் பங்களாவின் முன்பக்கம் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த வேறொரு நிகழ்ச்சி கவர்ந்தது. 'போர்டிகோ'வில் காரைக் கொண்டு வந்து நிறுத்திக் கண்ணாயிரமும் ஜமீந்தாருமாக - மதுரையிலிருந்து மோகினியை அழைத்துக் கொண்டு முன் தினம் மாலையில் மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்த அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரை எங்கோ புறப்பட வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். "நான் அவனைப் போய்ப் பார்க்கிறதுக்குக் கார் எதுக்குங்க...? நடந்தே போய்ப் பார்த்துச் சொல்ல வேண்டியதைச் சொல்லிப்பிட்டு வந்திடறேன்" என்று அந்தக் கிழவர் காரில் ஏற மறுத்ததையும் - காரில் தான் போக வேண்டுமென்று வற்புறுத்திக் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் அந்தக் கிழவரைப் பிடித்து உள்ளே தள்ளாத குறையாகக் காரில் ஏற்றிவிட்டுத் தாங்களும் பக்கத்துக்கொருவராக ஏறி உட்கார்ந்து கொண்டு எங்கோ அவசரமாகப் புறப்பட்டுப் போவதையும் பாரதி அப்போது கவனித்தாள். முந்திய நாள் மாலையில் இதே கிழவரிடம் ஜமீந்தார் ஏதோ சொல்லிப் பயமுறுத்திக் கொண்டிருந்ததையும் இப்போது நினைத்தாள் அவள். அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவர் யாரிடம் எதைச் சொல்லி எப்படிக் கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தத்தைத் தடுக்க முடியும் என்பதுதான் அவளுக்குப் பெரிய மர்மமாக இருந்தது. எவ்வளவு சிந்தித்தாலும் எதையும் தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரைப் பற்றி மோகினிக்கு ஏதேனும் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் அந்த நிலையில் இதைப் பற்றி அவளிடம் கேட்கத் தயங்கிக் கொண்டே கேட்டாள் பாரதி. "அக்கா! இந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இவர் யார்? இத்தனை வயதானவரை ஜமீந்தார் மாமா ஏன் இப்படி வேலைக்காரர்களை ஏவுவது போல் ஏவிச் சிரமப்படுத்தறாங்க?"

"எனக்கு எதுவுமே தெரியாதம்மா? மதுரையில் மஞ்சள்பட்டி பங்களாவில் கணக்குப் பிள்ளையாக இருக்கிறாற் போல் இருக்கு. என்னிடம் அவர் அதிகம் பேசறதேயில்லை. மதுரையில் காரில் சாமான்களையும் என்னையும் ஏற்றிவிட்டு முன் ஸீட்டில் டிரைவருக்குப் பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டவர் இங்கே வந்து சேருகிற வரையில் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட என்னோடு பேசவில்லை. யாரோ பாவம்! அப்பாவி! என்னைப் போலவே இந்தப் பாவிகளிடம் அகப்பட்டுக் கொண்டு விழிக்கிறார்..." என்றாள் மோகினி. கண்ணாயிரத்தையும், ஜமீந்தாரையும் மோகினி உள்ளூற வெறுக்கிறாள் என்பதைப் பாரதி முன்பே குறிப்பாகப் புரிந்து கொண்டிருந்ததனால், இதைக் கேட்டு அவள் அதிகம் வியப்படையவில்லை. இந்தப் புதிரைப் புரிந்து கொள்ள அவளுக்கு ஒரே ஒரு நம்பிக்கை மீதமிருந்தது. டிரைவர் முத்தையாதான் காரை ஓட்டிக் கொண்டு போயிருக்கிறான். திரும்பி வந்ததும் அவனைத் தனியே கூப்பிட்டு விசாரித்தால் அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரை அவர்கள் எங்கே அழைத்துக் கொண்டு போனார்கள்? என்ன செய்வதற்காக அழைத்துக் கொண்டு போனார்கள்? என்ற விவரமெல்லாம் தெரிந்து விடும். 'கார் திரும்பி வருகிற வரை பொறுத்திருப்போம்' என்று பொறுமையோடு இருந்தாள் அவள். அப்படியிருந்த போது அதுவரை தானாக வலுவில் அதிகம் பேசாமல் இருந்த மோகினியே பாரதியிடம் மெல்லப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினாள்.

"ஏனம்மா பாரதீ? உங்க அப்பாவுக்கு அப்புறம் இந்தக் காலேஜ் நிர்வாகத்தை எல்லாம் யார் கவனிக்கிறாங்க...? அவரைப் போலப் பெருந்தன்மையா இனிமேல் இன்னொருத்தர் கவனிக்க முடியுமா?"

"இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள் அக்கா? நீங்க 'நியூஸ்பேப்பரே' பார்க்கிறதில்லையா? அப்பாவுக்கு அப்புறம் ஜமீந்தார் மாமா காலேஜ் நிர்வாகக் கமிட்டித் தலைவராக வந்திருக்காரு. அதோடு காலேஜிலே 'ஸ்டிரைக்'கும் வந்திருக்கு...! எதுவுமே உங்களுக்குத் தெரியாதா?" என்று பாரதி கூறிய செய்தியைக் கேட்டதும் மோகினிக்குத் 'திக்'கென்றது. அவளுடைய உள்ளுணர்வு பயந்து நடுங்கியது. 'என்னைக் காப்பாற்றிக் கைப்பற்றி ஆட்கொண்ட தெய்வம் விரிவுரையாளராக வேலை பார்க்கிற இந்தக் கல்லூரிக்கும் ஜமீந்தார் தலைவராக வந்து விட்டாரே! இனி என் அன்பருக்கு என்னென்ன தொல்லைகளெல்லாம் வருமோ?' என்றெண்ணி மனம் கலங்கினாள் அவள். அவளை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்கு அழைத்து வந்த கணக்குப் பிள்ளைக் கிழவரும் "டிரங்கால் வந்தது! ஜமீந்தார் ஐயா உங்களைக் காரிலே மல்லிகைப் பந்தலுக்கு அழைச்சுக்கிட்டு வரச் சொல்லியிருக்காரு. நாளைக் காலையிலே புறப்படணும்" என்று மட்டும் தான் கூறியிருந்தாரே ஒழியக் கல்லூரி நிர்வாகியாக ஜமீந்தார் வந்திருப்பதையோ, வேலை நிறுத்தம் பற்றியோ, மல்லிகைப் பந்தல் அரண்மனையிலேயே இனிமேல் குடியேற வேண்டுமென்பதைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்கவில்லை. "நிஜமாகவே உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா அக்கா?" என்று மறுபடியும் வியப்பு மேலிட்டு வினாவிய பாரதிக்கு மோகினி கூறிய பதிலில் ஆற்றாமையும் துயரமுமே நிறைந்திருந்தன.

"எனக்கென்னம்மா தெரிகிறது? மதுரையில் ஜெயில் கைதி மாதிரி அடைந்து கிடந்தேன். இனிமேல் இங்கே அடைந்து கிடக்கணும்...!"

"இந்த ஜமீந்தார் மாமா ரொம்ப மோசம்! உங்களுக்குக் கூட அவர் இதெல்லாம் தெரிவிக்கிறதில்லையா?... வரட்டும் சொல்கிறேன்..." என்று பதில் சொல்லத் தொடங்கிய பாரதி, 'உங்களுக்குக் கூட' என்ற வார்த்தையை ஏதோ ஒரு தொடர்பை நினைவூட்டுவது போன்ற அர்த்தத்துடன் பேசியதைக் கேட்டு மோகினி உள்ளூர மனம் கொதித்தாள். ஆனால் அதை வெளியே சொல்லிக் கொள்ள முடியாமல் தவித்தாள். மோகினி ஜமீந்தாரை வெறுத்தாலும் அவள் அவருடையவள்தான் என்று தவறாகப் புரிந்து கொண்டு பேசி வந்தாள் பாரதி. மோகினியோ அந்தப் பேச்சினால் மனம் புழுங்கிச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் உள்ளேயே வெந்து துடித்தாள். அப்பப்பா! ஒரு பெண் தன் அந்தரங்கத்திலிருக்கிற உண்மையை உலகத்துக்குப் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்ளத்தான் எத்தனை ஆயிரம் தடைகள்! மோகினியின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் பாரதி மேலும் மேலும் பேசிக் கொண்டே இருந்தாள். அவள் பேச்சு மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றித் திரும்பியது.

"இங்கே ஓர் இளம் விரிவுரையாளர் உதவி வார்டனாக இருக்கிறார். அவர் ரொம்ப நல்லவர். மாணவ மாணவிகளுக்கு எல்லாம் அவர் மேல் உயிர். அவரைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென்று பிரின்ஸிபலும் ஜமீந்தார் மாமாவும் சதி செய்யறாங்க... அதனாலேதான் 'ஸ்டிரைக்கே' வந்து சேர்ந்தது" என்று அந்த இளம் ஆசிரியரின் பெயர், பதவி ஒன்றையுமே தெரிவிக்காமல் பொதுவாகவே பேசிக் கொண்டு போனப் பாரதி அப்போது தன்னையறியாமலே தன் பேச்சினால் மோகினியின் ஆவலைத் துடிதுடிக்கச் செய்து கொண்டிருந்தாள். சத்தியமூர்த்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை அடக்க முடியாமல் தான் மோகினி கல்லூரி நிர்வாகத்தைப் பற்றிய பேச்சையே பாரதியிடம் வலுவில் தொடங்கியிருந்தாள். வெளிப்படையாகச் "சத்தியமூர்த்தி என்ற ஆசிரியர் உங்கள் கல்லூரியில் இருக்கிறாரா?" என்று நேரடியாய் விசாரிக்க முடியாமல் பயமும் கூச்சமும் தடுத்த காரணத்தால் அவள் அப்படிச் செய்யவில்லை. 'மேலும் சத்தியமூர்த்தியைப் பற்றி மட்டுமே விசாரித்தால் பாரதிக்கு அதன் காரணமாகத் தன் மேல் என்ன சந்தேகம் மூளுமோ' என்ற தயக்கமும் மோகினிக்கு இருந்தது. அவள் வெளிப்படையாக எதைக் குறிப்பிட்டும் விசாரிக்காத காரணத்தால் பாரதி கல்லூரியைப் பற்றியும், மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றியும் பொதுவாகவே கூறிக் கொண்டிருந்தாள். அவள் அப்படிப் பொதுவாகக் கூறிய போதிலும் வேலை நிறுத்தத்துக்குக் காரணமாக இருந்த இளம் ஆசிரியரைப் பற்றி அவள் தெரிவித்த குறிப்புகளைக் கூர்ந்து கேட்ட மோகினி, 'அந்த விரிவுரையாளர் சத்தியமூர்த்தியாக இருப்பாரோ?' என்ற அநுமானத்தாலேயே மனம் பதறினாள்.

அத்தியாயம் - 53

அறியாமை அவ்வளவு இழிவு அன்று. அறிய மனம் இல்லாமைதான் மிக மிக இழிவு.

கல்லூரி மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள் என்பதையும், அதற்குக் காரணமாக இருந்தவர் இதே கல்லூரியில் வேலை பார்க்கும் ஓர் இளம் விரிவுரையாளர் என்பதையும் பாரதி கூறக் கேட்டதும் மோகினி தானாகவே மனதில் எதை எதையோ கற்பனை செய்து கொண்டு கலங்கினாள்.

'ஐயோ! என் உயிரினும் மேலான தெய்வம் துன்பப்படுவதை நான் அருகில் இருந்தே காணும்படி விதி என்னையும் இங்கே கொண்டு வந்து தள்ளிவிட்டதே' என்று 'அப்படி இருக்குமோ?' என்பதை அநுமானிக்கும் போதே மோகினி நடுங்கினாள். இந்த வேளையில் முன்புறம் போர்டிகோவில் மறுபடியும் கார் வந்து நிற்கும் ஓசையைக் கேட்டுப் பாரதி மோகினியோடு பேசிக் கொண்டிருந்த பேச்சை அப்படியே பாதியில் விட்டு விட்டு எழுந்து போய்ப் பார்த்தாள். காரில் ஜமீந்தாரும் கண்ணாயிரமும், புதிதாகப் பிரின்ஸிபலும் திரும்பி வந்திருந்தார்கள். கணக்குப்பிள்ளைக் கிழவரை மட்டும் காணவில்லை. அவர்கள் போன இடத்தில் அந்தக் கிழவரை மட்டும் எங்கேயோ விட்டு விட்டுப் பிரின்ஸிபலை அழைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. வந்தவர்கள் மூவரும் காரிலிருந்து கீழே இறங்கி உள்ளே முன் பக்கத்து அறைக்குள் நுழைந்தவுடன், தோட்டத்துப் பக்கமாகப் பின்புறம் வந்து தன்னைப் பார்க்குமாறு டிரைவர் முத்தையாவுக்கு ஜாடை காட்டினாள் பாரதி. வண்டியை ஷெட்டில் கொண்டு போய் விட்டு விட்டு உடனே வருவதாக அவனும் பதிலுக்கு ஜாடை காட்டிச் சென்றான்.

பின்புறம் தோட்டத்து வராந்தாவின் கிராதியைப் பிடித்தவாறே டிரைவர் முத்தையாவின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது அப்படிக் காத்திருந்த ஒவ்வொரு விநாடியும் ஒரு தனி யுகமாய் நகருவதாகத் தோன்றியது பாரதிக்கு. அவள் எதை அறிந்து கொள்வதற்காகக் காத்திருந்தாளோ அதை அறிந்து கொள்ள விரும்பியதற்கும் அறிந்து கொண்டு முடிப்பதற்கும் இடையிலுள்ள காலம் ஒவ்வொரு கணமும் கனமாகவும் மெதுவாகவும் தயங்கி நின்றது. அந்த வராந்தாவின் இரும்பு அளிக்கு அப்பால் அளவாகக் கத்தரித்து விடப்பட்ட தோட்டத்து மரங்களின் மறுகோடியில் டிரைவர் முத்தையாவின் தலை தெரிவதை எதிர்பார்த்து அவளுடைய கண்கள் அந்தத் திசையிலேயே இமையாமல் நோக்கிக் கொண்டிருந்தன. கடைசியாக அவனும் ஒரு வழியாக வந்து சேர்ந்தான். கார்ச் சாவிக் கொத்தை வலது ஆள்காட்டி விரலில் கொடுத்துச் சுழற்றிக் கொண்டே டிரைவர் முத்தையா விரைவாக நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போதே அவள் இதயம் படபடவென்று வேகமாக அடித்துக் கொண்டது. அவன் அருகில் வந்து வராந்தா மேடையின் இரும்பு அளிக்குக் கீழே தனக்கு எதிரில் நின்றதும், 'சிறிது நேரத்துக்கு முன்பு காரில் அந்த மதுரைக் கணக்குப்பிள்ளைக் கிழவரை அழைத்துக் கொண்டு ஜமீந்தாரும், கண்ணாயிரமும் எங்கோ புறப்பட்டுப் போனார்களே? அவரை எங்கே கொண்டு போய் விட்டுவிட்டு வந்தார்கள் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்பதற்குத் துடிதுடித்துக் கொண்டிருந்தாள் பாரதி. ஆனால் டிரைவர் முத்தையாவோ அவள் கேள்வி கேட்பதற்கு இடமே வைக்காமல் என்ன என்ன சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் தானாகவே சொல்லத் தொடங்கி விட்டான். அடுத்தவர்கள் தங்களிடம் எப்போது எதை எதிர்பார்த்துத் தயங்கி நிற்பார்கள் என்று குறிப்பறிந்து நடந்து கொள்கிற சாமர்த்தியம் படித்துப் பட்டம் பெற்ற பலரிடம் கூட இல்லாமல் போகிற அதே வேளையில் படிப்பறிவில்லாத வெறும் அநுபவசாலிகள் சிலரிடம் அந்தச் சாமர்த்தியம் அளவற்றிருப்பதைச் சில சமயங்களில் நாம் கண்டு வியக்க நேரிடும். டிரைவர் முத்தையா நானும் அத்தகைய அநுபவசாலிகளில் ஒருவன் என்பதை அப்போது நிரூபித்தான்.

"பாரதி அம்மா! உங்களுக்குத் தெரியுமா சேதி! காரியங்களெல்லாம் ரொம்பத் தந்திரமாயில்லே நடக்குது? நேத்திக்கிப் பொழுது சாயறப்போ மதுரையிலேருந்து கார்லே டான்ஸ்கார அம்மாவைக் கூட்டிக்கிட்டு வந்தாரே ஒரு கணக்குப்பிள்ளைக் கிழவரு - அவருதான் நம்ப சத்தியமூர்த்தி சாரோட தகப்பனாராம். தகப்பனாரு ஜமீந்தார் ஐயாவுக்கும், கண்ணாயிரத்துக்கும் ரொம்பப் பயந்து கட்டுப்படறாரு. அதுனாலே அவரை அனுப்பிச் சத்தியமூர்த்தி சாரை அடக்கிடலாம்னு ஜமீந்தார் ஐயாவும், கண்ணாயிரமும் கனாக் காண்றாங்க... பிரின்ஸிபல் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயி ஏதோ டைப் அடிச்ச கடுதாசியை அந்தக் கிழவரு கையில் திணிச்சி லேக் அவின்யூவிலே சத்தியமூர்த்தி சாரோட ரூம் பக்கத்திலே கொண்டு போய் அவரை இறக்கி விட்டுப்பிட்டு வந்திருக்காங்க... மேலே என்ன நடக்கப் போவுதோ? ஒண்ணும் தெரியலை..."

இதைக் கேட்டுப் பாரதியின் திகைப்பு அடங்கவே சில விநாடிகள் பிடித்தன. ஏழ்மையில் நைந்த கோலமும், அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுக் கட்டுப்பட்டுப் பயந்த சுபாவமும் உள்ளவராகத் தோன்றிய அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவருடைய முகத்தை இப்போது நினைவுக்குக் கொண்டு வர முயன்றாள் அவள். எதிரே வந்து கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் போது, அப்படி நிற்கிற நிலையிலே 'நான் ஒரு தீரன்' என்று நிரூபித்துக் கொண்டு - வாய் திறந்து பேசினால் எதிரே நின்று கேட்கிறவர்களைப் பிணிக்கும் கணீரென்ற குரலுடன் பேசும் சத்தியமூர்த்தியையும் இந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவரையும் சேர்த்துத் தந்தை மகன் என்ற உறவு கற்பித்து நினைக்கவும் முடியாமல் தயங்கியது அவள் மனம். இந்தக் கிழவர்தான் என்னுடைய தந்தை என்பதைத் தானும் தன் தந்தையும் முன்பு மதுரை மஞ்சள்பட்டி அரண்மனையில் போய்த் தங்கியிருந்த போது அங்கு தன் தந்தையைச் சந்திக்க வந்த வேளையில் அவரிடம் கூடச் சத்தியமூர்த்தி தெரிவிக்கவில்லை என்பதையும் பாரதி இப்போது நினைவு கூர்ந்தாள். தாங்கள் மதுரையிலுள்ள மஞ்சள்பட்டி பங்களாவில் தங்கியிருந்த சமயத்தில் இந்தக் கிழவரை அங்கே அடிக்கடி பார்க்க நேர்ந்தும் கூட இவர் தான் சத்தியமூர்த்தியின் தந்தை என்பதைத் தெரிந்து கொள்ள நேரிடாமல் போனதை நினைத்து இப்போது அவளுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. திகைப்பிலிருந்து விடுபட்டுத் தன் நிலையடைந்த பின்பே டிரைவர் முத்தையாவுக்கு விடை கொடுத்தாள் அவள்.

"அந்தக் கிழவரை அழைத்துக் கொண்டு அவர்கள் வெளியே புறப்படும் போது சந்தேகமாக இருந்தது. அரை குறையாகக் காதில் விழுந்ததிலிருந்து ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதுதான் உன்னைக் கேட்கலாமென்று கூப்பிட்டேன் முத்தையா! நான் கேட்காமல் நீயே எல்லாம் சொல்லி விட்டாய்."

"அப்புறம் வந்து பார்க்கிறேனம்மா! ஒரு மணிக் கூறு கழிச்சு மறுபடியும் போய் விட்ட இடத்திலேருந்து அந்தக் கிழவரை இங்கே அழைச்சிட்டு வரணுமின்னு ஜமீந்தார் ஐயாவோட உத்தரவு..." என்று சொல்லிப் பாரதியிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றான் டிரைவர் முத்தையா. உள்ளே மோகினி தனியாயிருந்தும், உள்ளே போய் அவளோடு எதிரே உட்காரத் தோன்றாமல், 'சத்தியமூர்த்தியை அவருடைய தந்தை என்ன சொல்லி அடக்க முயல்வார்? அதற்கு அவர் எப்படி எப்படி மறுத்துக் கூறுவார்?' என்று அங்கேயே வராந்தாவிலிருந்த நாற்காலியில் அமர்ந்து சிந்திக்கத் தொடங்கி விட்டாள் பாரதி. நியாயத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு அவர் தம்முடைய தகப்பனாரது வற்புறுத்தலுக்காக இணங்கிவிடுவார் என்று அவளால் கற்பனை செய்து பார்க்கவும் கூட முடியவில்லை.

அவள் இப்படி இங்கே தன் வீட்டில் உட்கார்ந்து வெறும் கற்பனையில் தந்தையும் மகனுமாகச் சந்திக்கும் அவர்களுடைய சந்திப்பைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் அங்கே லேக் அவென்யூவில் உள்ளே சத்தியமூர்த்தி அறையில் அவனுக்கும் அவனுடைய தந்தைக்கும் கடுமையான விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

குமரப்பன் அவனுடைய கடையைக் கவனிப்பதற்காகக் கீழே இறங்கிப் போனப்பின் சத்தியமூர்த்தி பலவிதமான சிந்தனைகளுடன் மாடியறையின் வெளி வராந்தாவில் உலாவிக் கொண்டிருந்தான். உலாவிக் கொண்டிருந்தவனுடைய பார்வை தற்செயலாகக் கீழ்ப்பக்கம் திரும்பிய போது சாலையில் ஏதோ ஒரு பெரிய கார் வந்து நின்றதையும் அதிலிருந்து தன் தந்தை இறங்கிப் படியேறுவதற்காக மாடியை நோக்கி வருவதையும் பார்த்து வியப்படைந்து, 'இவர் எப்போது மல்லிகைப் பந்தலுக்கு வந்தார்? எதற்காக வந்தார்? மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றியோ, எனக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் நடுவேயுள்ள வேறுபாடு பற்றியோ தகவல் தெரிந்து அல்லது பத்திரிகைகளில் நான் கைது செய்யப்பட்டதாகச் செய்தி வெளியானதைப் பார்த்துப் பதறிப் போய் உடனே புறப்பட்டு வந்து விட்டாரோ?' என்று தான் அவரைப் பார்த்ததும் நினைக்கத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. உடனே கீழே படியிறங்கிப் போய், "வாருங்கள்!" என்று தந்தையை வரவேற்றவனுக்கு பதில் கூடச் சொல்லாமல் உள்ளடங்கிய ஆத்திரத்தோடு மேலே படியேறி வந்தார் அவர். மிகவும் கோபமும் கொதிப்பும் அடைந்து வெறுப்போடு வந்திருக்கிறார் என்பது அவர் பதில் சொல்லாமல் படியேறி வந்ததிலிருந்தே தெரிந்தது.

"பிழைக்க வந்த இடத்தில் அதிகாரமுள்ளவங்க யாரோ அவங்க தயவைச் சம்பாதிச்சுக்கிட்டு, வேலையை ஒழுங்காகப் பார்த்து மாதம் முடிஞ்சா சம்பளத்தை எண்ணி வாங்கறதை விட்டுப்பிட்டு இதெல்லாம் என்னடா அசிங்கம்? நீ செய்யிறது உனக்கே நல்லாயிருக்கா?" என்று அறைக்குள் நுழைந்ததும் நுழையாததுமாகச் சத்தியமூர்த்தியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்காமல் எங்கோ மேல் விட்டத்தைப் பார்த்துக் கொண்டே இரைந்தார் அவனுடைய தந்தை.

"என்ன நடந்திருக்கிறது என்பதை விவரமாகத் தெரிந்து கொண்டு பேசுங்கள் அப்பா! ஒருத்தருடைய தயவை சம்பாதிக்கணும் என்பதற்காக நியாயத்தை விட்டுவிட முடியாது. முறை தவறி நான் எதையும் செய்யவில்லை..."

"மகா நியாயத்தைக் கண்டுபிட்டே நீ... என்னமோ... இதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்! பொடிப் பசங்க கைத்தட்டறாங்கன்னு இன்னிக்குச் சந்தோஷப்பட்டுக்கலாம். நாளைக்கு வேலை போனப்புறம் தெருவிலே நின்று வயிறு காய்ந்தால் அப்போ அதிகாரம் யாரிட்டே இருக்கோ அந்தப் பெரிய மனுசங்க தயவுதான் வேண்டியிருக்கும்."

"எதைப் பற்றிச் சொல்கிறீர்கள் அப்பா?"

"அதுதான் பேப்பர்ல எல்லாம் வந்திருக்குதாமே. எனக்கு ஒரு எழவும் தெரியாது. ஜமீந்தாரு இங்கே ஒரு காரியமா ஒருத்தரை காரிலே மதுரைலேர்ந்து அழைச்சிக்கிட்டு வான்னாரு; வந்தேன். வந்தா இங்கே நீ பண்ணியிருக்கிற கூத்தையெல்லாம் சொன்னாங்க. ஏதுடா ஏழைக் குடும்பமே.. கலியாணத்துக்கு ரெண்டு தங்கச்சி நிற்கிறதே? ஒண்ணையும் நீ உணர்ந்ததாகத் தெரியலே... ஜமீந்தார் ரொம்பப் பொல்லாதவரு. மனசிலே வைரம் வைச்சார்னா அவ்வளவுதான்..."

"ஆனால் நியாயம் அவரை விட பொல்லாதது அப்பா."

"இதோ பாருடா... உன்னையெத்தானே? உன்னோட வாதாடறதுக்கு இங்கே நான் வரலே... நான் சொல்றதெக் கேளு... 'ஏதோ தெரியாத்தனமாகப் பையன்களை ஸ்டிரைக்குக்குத் தூண்டிப்பிட்டேன். நான் ஹாஸ்டல் ஷெட்டுக்குத் தீ வைக்கத் தூண்டினதும் தப்புத்தான். இந்த ஒரு தடவை மட்டும் என்னைப் பெரிய மனசு பண்ணி மன்னித்துத் தொடர்ந்து வேலை பார்க்க வழி செய்யணும்னு...' இதிலே நீயே வேண்டிக்கிறாப்பலே அவர்களே டைப் அடிச்சுக் கொடுத்திருக்காங்க... மூச்சு விடாமலே இதிலே ஒரு கையெழுத்துப் போடு. ஜமீந்தார் காலேஜ் நிர்வாகி என்கிற முறையிலே இதை வாங்கி இரகசியமாகப் பையிலே போட்டுப்பிட்டு உன்னை மன்னிச்சிடுவார். அதுக்குத்தான் நான் வந்திருக்கேன். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் நமக்கு ரொம்ப வேண்டியவங்க. கண்ணாயிரத்திடம் கடன் வேறே பட்டிருக்கோம். வீணா அவர்களை முகத்தை முறிச்சிக்கப்படாது. சொல்றதைக் கேளு?" என்று தந்தை நீட்டிய டைப் செய்த காகிதத்தை வாங்கி அவரே எதிர்பார்த்திராதபடி கோபத்தோடு சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்தான் சத்தியமூர்த்தி.

"மன்னிக்க வேண்டும் அப்பா! 'உங்கள் ஜமீந்தாரிடம் போய் என் மகன் அடங்காப்பிடாரி. அவன் நான் புத்திமதி கூறியும் கேட்கவில்லை' என்று சொல்லி விடுங்கள். என்னை வீழ்த்தி விட வேண்டுமென்று அவர்களே ஹாஸ்டல் ஷெட்டிற்கு நெருப்பு வைத்து விட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை என்னை இழுத்தடிக்கிறார்கள். நான் நியாயம் கிடைக்கிற வரை சும்மா விடமாட்டேன்..." என்று அந்த டைப் செய்தத் தாளைக் கிழித்தெறிந்த கையோடு அவன் கைகட்டி நிமிர்ந்து நின்று கொண்டு பதில் சொல்லிய போது தந்தையின் முகம் கோபத்தினால் சிவந்து உதடுகள் துடித்தன. மீசை ஆடியது. அவனை நோக்கி ஆவேசமாகக் கூப்பாடு போட்டுக் கொண்டே அவர் திரும்பினார்.

"இனிமே உனக்கும் எனக்கும் என்னடா இருக்கு? மகனாவது ஒண்ணாவது? ஒரு வார்த்தைக்குக் கட்டுப் படலைன்னா நீ என்னடா மனுஷன்! உன் முகத்திலே முழிக்கிறதே பாவம்! மானம் மரியாதை இருந்தா இனிமே ஊர்ப்பக்கம் வீட்டுப் பக்கம் என்னைப் பார்க்க வராதே! உன்னைப் பெத்த தகப்பனின்னு நானும் வேலையத்துப் போயி இங்கே தேடி வந்தேனே?" என்று காறித் துப்பி விட்டு அதே வேகத்தோடு படியிறங்கினார் அவனுடைய தந்தை. சத்தியமூர்த்தி அப்போது அவரைத் தடுக்கவில்லை. அவர் நின்று நிதானித்துப் பேசுகிற சுய புத்தியோடு வரவில்லை என்று அவனுக்குப் புரிந்துவிட்டது. நியாயம் அவன் பக்கம் இருந்தாலும் அதை விட்டுவிட்டு ஜமீந்தாருக்கே அடிபணிய வேண்டுமென்ற தந்தையின் பயத்தை அவன் வெறுத்தான். தந்தை தன்னுடைய பக்கத்திலிருந்த நியாயத்தை அறியாமலோ அறிய விரும்பாமலோ அல்லது அறிய மனம் இல்லாமலோ - பிடிவாதம் பிடித்ததைக் கண்டு அவனால் பொறுமையோடு இருக்க முடியவில்லை. 'அறியாமை அவ்வளவு இழிவு அன்று. அறிய மனம் இல்லாமை தான் மிகமிக இழிவு' என்று ஒரு தத்துவ ஞானி சொல்லியிருப்பதை இப்போது நினைத்தான் அவன். தந்தை தன் பக்கத்து நியாயத்தை அறிய மனமில்லாமலே புறக்கணித்துத் தனக்கே குழி பறிக்கத் துணையாகவும், சான்றாகவும் ஆகிற ஒரு தாளில் தன்னைக் கையொப்பமிடத் தூண்டிப் பிடிவாதம் பிடித்ததைக் கண்டு பொறுமை இழந்த அவன் அதைச் சுக்கு நூறாகக் கிழித்தெறிந்ததைக் கண்டு அவர் ஆத்திரப்பட்டு விட்டார். அந்த ஆத்திரத்தில் என்ன பேசுவதென்று தெரியாமல் பேசிவிட்டுப் போய்விட்டார். அதற்காகவும் சத்தியமூர்த்தி கவலைப்படவில்லை. ஒரு நிலைமைக்கு மேல் போய்விட்டால் அப்புறம் கவலைகள் தான் மெய்யான நண்பர்களாகி விடுகின்றன. அவற்றைப் போல் சிந்தனைக்குச் சக்தியூட்டுவதற்கு வேறெவற்றாலும் முடிவதில்லை. நூற்றுக்கணக்கான மாணவர்களை ஏமாற்றிவிட்டு அவன் தான் பிழைக்க ஆசைப்படவில்லை. மறுநாள் கலெக்டரும் மாவட்டப் போலீஸ் அதிகாரியும் மல்லிகைப் பந்தலுக்கு வந்து முகாம் செய்து விசாரிப்பதாக இருந்தது. அதற்குள் இப்படி ஒரு கடிதத்தில் கையெழுத்து வாங்கித் தன்னை அடக்கி வீழ்த்தி விட முயலும் அவர்களுடைய சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் ஓரளவு படிப்பும் பகுத்தறிவும் உள்ள தந்தையே ஏமாந்ததை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை அவனுக்கு. அவரைச் சொல்லி என்ன குற்றம்? 'பணமும் செல்வாக்கும் இருப்பதனால் ஜமீந்தாரும் கண்ணாயிரமும் தான் இந்த உலகத்தின் அதிதேவதைகள் என்று நினைத்துச் சதாகாலமும் அவர்களைச் சுற்றிக் கொண்டு திரிகிறவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்' என்றெண்ணி வருந்தினான் அவன். தந்தை போனப் பின்பு சிறிது நேரத்துக்கெல்லாம் குமரப்பன் கீழே கடையிலிருந்து மேலே மாடிக்குப் படியேறி வந்து விசாரித்தான்.

அத்தியாயம் - 54

அதிகமாக அன்பு செய்கிறவன் அதிகக் கவலைப்பட்டுத் தான் ஆக வேண்டும். ஏனென்றால், அவனுடைய கவலையின் எல்லைகள் அவனது அன்பு வியாபித்திருக்கிற எல்லாப் பரப்புக்கும் உரியது.

"என்னடா, உன் அப்பா திடீரென்று கோபமாக வந்தார். திரும்பிப் போகும் போதும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு போகிறாரே? ஏன் இப்படி வந்ததும் வராததுமாக உடனே திரும்பிப் போய் விட்டார்?" என்று வந்து விசாரித்த நண்பன் குமரப்பனுக்குத் தன் தந்தை வந்துவிட்டுப் போனக் காரியத்தையும் நடந்தவற்றையும் விவரித்தான் சத்தியமூர்த்தி. அதைக் கேட்டுவிட்டு குமரப்பன், "நல்ல காரியம் செய்தாய்! எதிலாவது கையெழுத்து வாங்கிக் கொண்டு உன்னை நிரந்தரமாகக் கம்பி எண்ண வைக்க முயலுகிறார்கள். கவனமாக விழித்துக் கொண்டிரு. தூங்கிப் போய்விடாதே. ஜமீந்தாரும் கண்ணாயிரமும் தானே உன் தந்தையைக் காரில் இங்கே கொண்டு வந்து இறக்கி விட்டுப் போனார்கள்! நான் கடையிலிருந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். திரும்பிப் போகிற போதும் அதே கார் தான் வந்து அவரை ஏற்றிக் கொண்டு போகிறது" என்று குமரப்பன் சத்தியமூர்த்திக்கு விவரத்தைக் கூறி எச்சரித்து விட்டுப் போனான்.

முதன் முதலாகத் தான் வேலை பார்க்கிற ஊருக்குத் தந்தை தன்னைத் தேடி வர நேர்ந்து அதுவும் இப்படி அரைகுறைச் சந்திப்பாய் ஆகி முறிந்து போய்விட்டதே என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும், தந்தையைக் கருவியாகப் பயன்படுத்தி வேண்டாதவர்கள் தனக்கு விரித்த வஞ்சக வலையைத் தான் அறுத்தெறிந்துவிட்ட பெருமையையும் அவன் இப்போது தன்னுள் உணர்ந்திருந்தான். சில நாட்களாக அவன் மனம் ஓய்வு ஒழிவில்லாமல் எண்ணப் போராட்டங்களில் மூழ்கியிருந்தது. 'நரி இடம் போனாலென்ன? வலம் போனாலென்ன? மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரிதான்' என்ற மனப்பான்மையோடு தன்னை மட்டும் தப்பித்துக் கொள்ள விரும்பாமல், எல்லாருடைய நியாயத்துக்காகவும் பொறுமையோடு காத்திருந்தான் அவன். பொறுமையிழந்து மனம் கொதித்துக் குமுறும் படியான சோதனைகள் எல்லாம் வந்தன. அளவற்றுத் துன்பப்பட நேர்ந்த சமயங்களில் எல்லாம் அவற்றிலிருந்து விடுபட்டு ஓடிவிட மட்டும் தவிக்கிற சமுதாயக் கோழையாக இருந்து விடாமல் அவன் மிக நிதானமாகச் சிந்தித்திருக்கிறான். இன்றும் அதே நிதானத்தோடுதான் இருந்தான் அவன். தன்னிடம் தந்தை கையெழுத்துப் போடச் சொல்லி நீட்டிய தாளைக் கிழித்தெறிந்த மறுகணமே தான் சற்றே நிதானம் தவறி ஆத்திரப்பட்டு விட்டோமோ என்று உணர்ந்து அவனால் வருந்தாமல் இருக்க முடியவில்லை. தந்தை வந்ததும், இரைந்ததும் முடிவில் கோபத்தோடு திரும்பிப் போனதும் - குமரப்பன் விசாரித்துவிட்டுச் சென்றதற்கு அப்புறம் கூட நெடுநேரம் அவன் நினைவைக் கலக்கிக் கொண்டிருந்தன. பொழுது சாய்கிற நேரத்துக்கு குமரப்பன் கடையை அடைத்துக் கொண்டு மேலே வந்த பின் நண்பர்கள் இருவரும் லேக் அவின்யூ கடைவீதி வழியாக உலாவப் புறப்பட்டார்கள். அப்போது தன் மனம் மேலும் அதிர்ந்து கலங்கும்படியான ஒரு நிகழ்ச்சியைச் சத்தியமூர்த்தி அங்கு எதிர்கொள்ள நேர்ந்தது.

கடைவீதியிலிருந்த பிரபல பட்டு ஜவுளிக்கடை ஒன்றின் வாசலில் ஜமீந்தாரைப் பின் தொடர்ந்து மோகினி காரிலிருந்து கீழிறங்கி நடந்து கொண்டிருந்தாள். சத்தியமூர்த்தியின் தந்தையும் கண்ணாயிரமும் கூட அவர்களோடு உடன் வந்திருந்தார்கள். ஜமீந்தார் ஜவுளிக் கடையில் படியேறி உள்ளே நுழைந்து விட்ட பின்பும் கூட மோகினி கார் அருகிலிருந்து நகராமல் கண்கலங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தாள். அப்படிப் பின் தங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தவளைத் தன் தந்தை அருகிலிருந்து பயபக்தியோடு கடைக்குள் வருமாறு அழைப்பதையும் சத்தியமூர்த்தி கவனித்தான். 'ஜமீந்தாரு இங்கே ஒரு காரியமா ஒருத்தரைக் காரிலே மதுரையிலேருந்து அழைச்சிக்கிட்டு வான்னாரு! வந்தேன்?' என்று தந்தை பகலில் தன்னைச் சந்திக்க வந்திருக்கும் போது மதுரையிலிருந்து அழைத்து வந்ததாகக் குறிப்பிட்டது மோகினியைத்தான் என்பது இப்போது சத்தியமூர்த்திக்குப் புரிந்து விட்டது. 'அவங்க பரம்பரை பரம்பரையா ஜமீந்தார் குடும்பத்துக்குப் பழக்கம். நீ அந்தப் பெண்ணைப் பார்க்கிறதோ பேசறதோ கொஞ்சம் கூட நல்லாயில்லே. வீணா ஜமீந்தாரோட கோபத்துக்கு ஆளாகாதே' என்று மதுரையிலே தன்னை கண்டித்திருந்த தந்தை அதே மோகினியை ஜமீந்தாருடைய கட்டளையின்படி இப்போது மல்லிகைப் பந்தலுக்கு அழைத்து வந்திருப்பதைத் தெரிவிக்கத் தயங்கி, யாரையோ அழைத்து வந்திருப்பதாகக் கூறியதை நினைத்து அவன் சிறிதும் வியப்படையவில்லை. ஜமீந்தார் சொல்லித் தன் தந்தை மோகினியை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்குக் காரில் அழைத்து வந்திருப்பதாக இப்போது அவனால் தெளிவாகவும், பிரத்தியட்சமாகவும் புரிந்து கொள்ள முடிந்தது.

குமரப்பனோடு வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த சத்தியமூர்த்தி பட்டு ஜவுளிக்கடை வாசலில் இந்தக் காட்சியைக் கண்ட போது நடையில் வேகம் குறைந்து தளர்ந்து நின்று விட்டான். குமரப்பனுக்கு இந்த எதிர்பாராத சந்திப்பு ஆச்சரியத்தை அளித்தது. அவனும் அப்படியே திகைத்துப் போய் நண்பனுக்கு அருகில் நின்று விட்டான். இந்த நிலையில் மோகினி மிகவும் பரிதாபத்துக்குரியவளாகத் தென்பட்டாள். காரிலிருந்து இறங்கித் தயங்கி நின்ற அவளுடைய கண்களில் அழுகையும் கண்ணீரும் முந்திக் கொண்டு வந்தன. 'தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற பற்கள் தெரியாதபடி மூடி மறைத்துக் கொண்டிருந்த அவள் உதடுகளில் அழுகை துடிதுடித்துக் கொண்டிருந்தது. அவர்களோடு அந்தக் கடைக்கு வருவதற்குப் பிரியமில்லாமல் வற்புறுத்தப்பட்டு பலவந்தமாகத் தான் அழைத்துக் கொண்டு வரப்பட்டிருப்பதைப் புலப்படுத்திக் கொண்டு நடைப்பிணமாய் நின்றாள் அவள்.

ஜமீந்தாரும், கண்ணாயிரமும் காரிலிருந்து இறங்கி... அப்படி அவர்களைப் போன்ற வசதியும் செல்வாக்கும் உள்ள புள்ளிகளுக்குக் கடைக்காரர்கள் வழக்கமாக அளிக்கும் மிக ஆடம்பரமான 'ஸிவிக் ரிஸப்ஷனை'யும் ஏற்றுக் கொண்டு உள்ளே போய்விட்டார்கள். மோகினி மட்டும் பிரமை பிடித்தாற் போல் அழுது கொண்டு நின்றாள். "வாங்கம்மா! ஐயா உள்ளாரக் காத்திருக்காரு" என்று கடைக்காரர்களும் காரருகே வந்து அவளை வியாபார விசுவாசத்தோடு மிகப் பணிவாக அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். கடைசியில் ஜமீந்தாரே உள்ளேயிருந்து எழுந்திருந்து வந்து கூப்பாடு போடவே, மோகினி தயங்கித் தயங்கிப் படியேறி கடைக்குள் சென்றாள். அந்த நிலையில் அவள் தன்னை அங்கே பார்த்துவிடாதபடி அவசரமாகக் கடைவீதியைக் கடந்து மேலே சென்று விட வேண்டும் என்று சத்தியமூர்த்தி எண்ணியிருந்தான். ஆனால் அவனுடைய எண்ணம் கடைசி விநாடியில் வீணாகிவிட்டது. படியேறிக் கடைக்குள் நுழைவதற்காகத் தயங்கித் தயங்கிச் சென்று கொண்டிருந்த மோகினி கடைசிப் படியில் ஏறிவிட்டுத் தற்செயலாக வீதிப்பக்கம் திரும்பியவள் - அவளுடைய பார்வையில் படக்கூடாது என்பதற்காகவே - அப்போது அவசர அவசரமாக வீதியைக் கடந்து கொண்டிருந்த சத்தியமூர்த்தியையும் குமரப்பனையும் பார்த்து விட்டாள். அந்தக் கணத்தில் அவளுடைய நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. தன்னையறியாமலே கால்கள் விரைந்து முந்தியதன் காரணமாகத் திரும்பி ஒரு படி கீழே இறங்கவும் செய்துவிட்டாள் அவள். அப்படியே கீழே இறங்கி வீதியில் ஓடிப்போய் விரைந்து நடந்து கொண்டிருக்கும் சத்தியமூர்த்தியின் பாதங்களில் வீழ்ந்து, 'தெய்வமே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று கதற வேண்டும் போலத் தவித்தது அவள் உள்ளம். ஆசைப்பட வைக்கும் அந்தப் பாதங்களில் ஓடிப் போய் வீழ்ந்து கதற வேண்டுமென்று அவள் நினைத்த அதே சமயத்தில் முன்புறம் நின்ற ஜமீந்தார் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவளை உள்ளே தள்ளிக் கொண்டு போய்விட்டார்.

பட்டு ஜவுளிக்கடை வாசலை ஒட்டி நடந்த போது அவள் தன்னைப் பார்த்து விட்டாள் என்பது சத்தியமூர்த்திக்குத் தெரியும். ஆனாலும் அவன் வேகமாக நடந்து கடையைக் கடந்து விட்டான். அவன் மனத்தின் ஒரு பகுதி அவளுடைய துயரங்களை நினைத்து மௌனமாகக் கலங்கி அழுது கொண்டிருந்தது. இன்னொரு பகுதி அவள் இப்படியெல்லாம் ஜமீந்தாருடைய கைப்பாவையாக - அவருக்குப் பயந்து அடங்கி ஒடுங்கி இயங்குவதைப் பற்றி நினைத்து நினைத்து உள் நெருப்பாய்க் குமுறிக் கொண்டிருந்தது. அவள் மேல் அளவு கடந்த பிரியமும் நம்பிக்கையும் வைத்துவிட்ட காரணத்தினால் அவள் இன்னொருவனுக்கு அடிமைப்படுகிறாள் என்று தெரிகிற போதெல்லாம் மனம் குமுறினான் சத்தியமூர்த்தி. யார் மேலும் மனம் வைத்து அன்பு செய்யாதவரை நாம் இன்னொருவருக்காகக் கவலைப்பட்டுக் கலங்கி அழ வேண்டியதில்லை. மனம் வைத்து அன்பு செய்ய ஆரம்பித்து விட்டால் அந்த அன்புக்கு ஆளாகிறவரைப் பற்றிய கவலைகளையும் நம்மால் தவிர்க்க முடியாமல் போகிறது. அதிக அன்பு செய்கிறவன் அதிகமாகக் கவலைப்பட்டுத் தான் ஆக வேண்டும். ஏனென்றால், அவனுடைய கவலையின் எல்லைகள் அவனது அன்பு வியாபித்திருக்கிற எல்லாப் பரப்புக்கும் உரியது. மோகினியைச் சந்தித்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் மௌனமாக நடந்து கொண்டிருந்த சத்தியமூர்த்தியிடம் உடன் சென்ற குமரப்பன் மெல்லப் பேச்சுக் கொடுத்தான்.

"மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வந்திருப்பது உனக்கே இப்போதுதான் தெரியுமா சத்தியம்?"

பதில் பேச முடியாமல் மனம் கலங்கிப் போயிருந்த சத்தியமூர்த்தி 'ஆமாம்' என்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தான். குமரப்பனே மேலும் பேசினான்.

"பாவம்! அந்தப் பெண் அழுதுகொண்டே படியேறிக் கடைக்குள் போகிறாள். ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை மிகவும் மலிவாக விலைக்கு வாங்கிவிட முயல்கிற இந்த ஜமீந்தாரை நினைத்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது; ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை விலைக்கு வாங்கி விடுவதற்குப் பட்டு, தங்கம், வைரம், கார், பங்களா - இவையெல்லாம் மிகவும் சாதாரண விலைகள். சாதாரணமான விலைகளைக் கொண்டு அசாதாரணமான அன்பைப் பேரம் பேசி வாங்கிவிட முடியும் என்று நினைப்பதே பேதமை..."

"அப்படிச் சொல்வதற்கில்லை, குமரப்பன்! இந்த மோசக்கார உலகத்தில் சில சமயங்களில் அசாதாரணமான பொருள்களும் கூடச் சந்தர்ப்ப வசத்தினால் சாதாரண விலைக்குப் போய்விடுகின்றன. அப்படிப்பட்ட சமயங்களில் அநுதாபப்பட்டுத் தவிப்பதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?" என்று உள்ளங்கிய ஆத்திரத்தோடு சத்தியமூர்த்தி கூறியதைக் கேட்டு நடப்பதை நிறுத்திவிட்டு நண்பனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் குமரப்பன். மோகினியின் அன்பு சாதாரணமான விலைக்குப் போய்விடும் என்று தான் ஒரு கருத்தைக் கூற நேர்ந்து சத்தியமூர்த்தி, அதைக் கடுமையாக மறுத்திருந்தால் குமரப்பன் அப்போது சிறிதும் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டான். சத்தியமூர்த்தியே அப்படிக் கூறியதைக் கேட்டுத்தான் அவனுக்குத் திகைப்பாயிருந்தது. மோகினி ஜமீந்தாரோடு ஜவுளிக் கடைக்கு வந்ததை விரும்பாமல் சத்தியமூர்த்தியின் மனத்தில் கோபமோ - ஆத்திரமோ மூண்டிருக்க வேண்டும் என்று குமரப்பனுக்குப் புரிந்தது. அவன் நண்பனைச் சமாதானப்படுத்த விரும்பினான்.

"உன் கோபம் காரணமற்றது சத்தியம்! அவள் என்ன செய்வாள் அபலைப் பெண்! பாவம்! அவளுடைய நிலையை எண்ணி அநுதாபப்பட வேண்டிய நீயே இப்படிப் பேசுவதை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது..."

சத்தியமூர்த்தி இதைக் கேட்டு நண்பனுக்கு மறுமொழி ஒன்றும் கூறவில்லை. பேசாமல் நடந்தான். ஜமீந்தாருடைய உத்தரவுக்குப் பயந்து மனப்பூர்வமாக ஆசைப்பட்டு மல்லிகைப் பந்தலுக்கு அவள் வந்திருப்பாள் என்றோ, விருப்பத்தோடு பட்டுப்புடவைக் கடைக்குப் புறப்பட்டிருப்பாள் என்றோ சத்தியமூர்த்தியும் கூடத் தன் அந்தரங்கத்தில் நம்பவில்லை. அவளுடைய இதயம் தன்னிடம் தான் இருக்கிறதென்று அங்கீகரித்துக் கொண்டிருந்தும் இத்தகைய வேளைகளில் மனம் தடுமாறிக் குமுறாமல் இருக்க முடியாதபடி தானும் உணர்ச்சிகளால் உந்தப்படுவதைத் தவிர்க்க இயலாது தவித்தான் சத்தியமூர்த்தி. அநுதாபமும், கோபமும் கலந்த இந்த விநோத உணர்ச்சிக்கு அவன் பலமுறை ஆளாகியிருக்கிறான். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த உணர்ச்சி மோகினியின் காரணமாகவே தான் அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அநுதாபத்தை மறுபுறமாகக் கொண்ட ஆத்திரம் அன்புடையவர் மேல் தான் ஏற்பட முடியும். சத்தியமூர்த்தியின் மனத்தில் அந்த வேளையில் பொங்கிக் கொண்டிருந்த ஆத்திரமும் அத்தகையதுதான். மனம் குழம்பியிருந்த இந்த விநாடியிலும் கூட மதுரையிலிருந்து நவராத்திரி விடுமுறை முடிந்து தான் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு முன் கோச்சடையிலுள்ள மஞ்சள்பட்டி அரண்மனையில் மோகினிக்கும் தனக்குமிடையே நிகழ்ந்த ஓர் உருக்கமான உரையாடல் இப்போது சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. அவளைப் பற்றிய அந்தப் பழைய நினைவு இப்போதும் அவனுக்கு ஆறுதலாயிருந்தது.

'உன் மேல் கோபப்பட்டு என்ன பயன் மோகினி! நீ ஒரு பேதை! உன்னைச் சந்திக்காமல் இருந்தால் நானும் என்னுடைய வாழ்க்கையில் ஓர் அழகிய பேதையின் அவலங்களை நினைத்து இப்படிக் கணகலங்க நேர்ந்திருக்காது' என்று தான் கூறியவுடன், 'அப்படிச் சொல்லாதீர்கள்! உங்களைச் சந்திக்காமலிருந்திருந்தால் நான் வாழவே நேர்ந்திருக்காது' என்பதாக அவள் மறுமொழி கூறிவிட்டு அழுத உருக்கமான நிகழ்ச்சி இப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது. ஆஸ்பத்திரியில் வஸந்தசேனை சாருதத்தன் கதையை மோகினிக்குக் கூறிய சம்பவமும் நினைவு வந்து அவன் மனத்தைக் கலக்கிக் கொண்டிருந்தது. நண்பன் குமரப்பனோடு நடந்து சென்றவாறே சத்தியமூர்த்தி இப்படி மனம் வருந்தி வேதனைப்பட்டுக் கொண்டிருந்த இதே வேளையில் பட்டுப்புடவைக் கடைக்குள் நுழைந்த மோகினி தூண்டிற் புழுவைப் போல் அங்கு இருப்புக் கொள்ளாமல் தவித்தாள். ஜமீந்தாரோ அவள் மனத்தைக் கவர வேண்டுமென்பதற்காகக் கடைக்காரனிடம் சொல்லி விதம் விதமான பட்டுப்புடவைகளை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்தார். அவளுடைய மனமோ கடைக்குள் நுழைவதற்கு முன் சத்தியமூர்த்தியை அந்த வீதியில் சந்தித்த ஞாபகத்தில் ஆழ்ந்து போயிருந்தது. அப்போது ஒரு கணம் சத்தியமூர்த்தியின் பார்வையும் தன் பக்கம் திரும்பிக் கவனித்ததும் அவளுக்குத் தெரியும்.

'தான் மஞ்சள்பட்டி ஜமீந்தாரும், கண்ணாயிரமும் உடன் வர ஜவுளிக்கடைக்குள் நுழைவதைப் பார்த்து அவர் என்ன நினைத்துக் கொண்டு போகிறாரோ?' என்று எண்ணியபோது அவளுக்கு வேதனை தாங்க முடியவில்லை. 'ஜமீந்தாரையும் கண்ணாயிரத்தையும் அவருக்குப் பிடிக்காது! நான் இவர்களோடு எதற்காக மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டு வந்தேன்? எப்போது வந்தேன்? எப்படி வந்தேன்? என்றெல்லாம் சந்தேகப்பட்டு அவராகவே தம் மனத்தில் ஏதாவது கற்பனை செய்து கொண்டு என் மேல் ஆத்திரப்படப் போகிறாரே?' என்று எண்ணிப் பயந்த போது, மோகினியின் அந்தப் பயத்தில், 'சத்தியமூர்த்தி தன்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாதே' என்ற சுயநல நோக்கமே இல்லை. ஓர் இந்துக் குடும்பத்தில் கணவனுக்கு மனைவி அடங்கி அஞ்ச வேண்டிய நியாயமான அடக்கம் - பரம்பரைப் பரம்பரையாகப் பெண்குலத்திலேயே 'இது தன் எல்லை' என்று புரிந்து அங்கீகரித்துக் கொள்ளப்பட்ட அடக்கம் தான் அப்போது மோகினியின் பயமாகவும் இருந்தது. மாலையில் திடீரென்று இருந்தாற் போலிருந்து புடவைக் கடைக்குப் புறப்பட வேண்டும் என்று கண்ணாயிரம் கூறிய போதே அவளுக்கு வெறுப்பாயிருந்தது. "அப்பா காலமாகி அதிக நாளாகவில்லை. நான் உங்களோடு புடவைக் கடைக்கு வந்தால் நன்றாயிருக்காது அக்கா! நீங்கள் மட்டும் போய்விட்டு வாருங்கள்" என்று சொல்லிப் பாரதி உடன் வர மறுத்து விட்டாள். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் 'போர்டிகோவில்' காரைக் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டு அவளையும் அழைத்து வருமாறு அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவரை உள்ளே துரத்தியிருந்தார்கள். ஜமீந்தாருக்குப் பயந்து மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டு வந்த போதே உணர்ச்சி செத்துப் போய்க் கொலைக் களத்துக்குப் புறப்பட்டு வருவது போல் வந்து சேர்ந்திருந்தாள் அவள். அவளைப் புடவைக் கடைக்கு அழைத்துப் போய் ஊரார் மெச்சும்படி வாங்கிக் கொடுத்து மகிழச் செய்ய வேண்டுமென்று ஜமீந்தாருக்கு ஆசையாயிருந்தது. அந்த ஆசையை அவள் வெறுத்தாலும் வெளிப்படையாகத் துணிந்து மறுக்க முடியவில்லை. அநியாயமாக ஜமீந்தாருக்குக் கோபம் வந்து பிறர் முன்னிலையில் ஒரு பெரிய கலகமும் கூப்பாடும் ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவாவது அவள் அவரோடு கடைக்குப் புறப்பட வேண்டியதாயிற்று.

கடைவீதியில் சத்தியமூர்த்தியை ஒரு கணம் பார்க்க நேர்ந்த போது அவளுடைய வேதனை இன்னும் அதிகமாகி விட்டது. பார்த்த புடவைகளும் பிடிக்கவில்லை. மனத்துக்குப் பிடித்தவர் ஒரு கந்தல் துணியை வாங்கிக் கொடுத்துக் கட்டிக் கொள்ளச் சொன்னாலும் அது சிறப்பாயிருக்கும். மனத்துக்குப் பிடிக்காதவர் வைரத்தால் இழைத்துப் பொன்னால் நெய்த பட்டுப்புடவைகளை மலையாக வாங்கிக் கொடுத்தாலும் எடுத்துக் கட்டிக் கொள்கிற போது ஒவ்வொரு பட்டும் உடம்பிலே பாம்பாக நெளிவது போல் அருவருப்பாயிருக்கும். அவள் அங்கே பார்த்த பட்டுப் புடவைகளில் எதுவுமே தனக்குப் பிடித்ததாகச் சொல்லவில்லை. ஜமீந்தாரும் கண்ணாயிரமும் அவர்களுடைய இரசனைக்கெட்டிய வரையில் எந்தெந்த நிறத்திலோ பளீர் பளீரென்று மின்னும்படியான பட்டுப்புடவைகளைத் தேர்ந்தெடுத்து முடித்தார்கள். பில் வந்தது.

இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு மேல் ஜமீந்தாரிடமிருந்து பணம் 'செக்'காகக் கடைக்காரர்கள் கைக்கு மாறியது. கடைக்காரர்கள், மூட்டை கட்டிக் கொடுத்த ஜவுளியைக் கணக்குப் பிள்ளைக் கிழவர் வாங்கிக் கொண்டு போய்க் காரில் வைத்தார். உயிரற்ற பொம்மையாய் இறங்கி நடந்து போய் மோகினியும் காரில் உட்கார்ந்தாள். பக்கத்தில் ஜமீந்தாரும் உட்கார்ந்து கொண்டார். மோகினி ஜமீந்தார் மேல் பட்டுவிடாமல் விலகிக் கதவோரமாக ஒட்டினாற் போலக் காரின் மறுகோடியில் உட்கார்ந்து கொண்டாள். அவள் விலகி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து உள்ளூரக் கோபம் குமுறினாலும் வெளிப்படையாக அருகில் உட்காரச் சொல்லி மிரட்டுவதோ, கோபிப்பதோ சாத்தியமில்லையாதலால் ஜமீந்தார் சிரமப்பட்டுப் பொறுமையாயிருக்கும்படி ஆயிற்று. கண்ணாயிரமும் கணக்குப்பிள்ளைக் கிழவரும் முன் ஸீட்டில் ஏறிக் கொண்ட பின் கார் புறப்பட்டது. பூக்கடை வாசலில், "ஒரு நிமிஷம் காரை நிறுத்து" என்று சொல்லித் தாமே கீழே இறங்கிய ஜமீந்தார் ஒரு பெரிய பொட்டலம் பூவை வாங்கிக் கொண்டு வந்து மோகினியிடம் நீட்டினார். மோகினி இரண்டு விநாடிகள் தயங்கிவிட்டு அதை வேண்டா வெறுப்பாய் இடது கையால் வாங்கிக் காரில் வைத்தாள். முன் கோபக்காரரான ஜமீந்தார் தம்முடைய ஆத்திரத்தின் போக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டு உள்ளேயே எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தார். 'அவளுடைய பிரியத்தின் விலை என்னவாக இருக்க முடியும்?' என்று புரிந்து கொள்ள இயலாமல் தவித்தது அந்த ஜமீந்தாரின் முரட்டு இதயம்.

அத்தியாயம் - 55

கொள்கையில்லாத படிப்பு வேரில்லாமல் ஊன்றிய செடியைப் போல் சிறிது காலம் பசுமையாய்த் தோன்றி விரைவில் பட்டுப்போய் விடுகிறது.

"வேகமாகப் போய்த் தொலையேன்! இதென்ன பெருமாள் கோவில் தேருன்னு நினைச்சுக்கிட்டியா? ஊர்வலம் போறியே?" என்று தம்முடைய கோபத்தைக் கார் டிரைவரின் மேல் திருப்பினார் ஜமீந்தார். அவருடைய அக்கினிக் கோபம் உள்ளூரக் கனன்று கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டு கண்ணாயிரமும் கணக்குப்பிள்ளைக் கிழவரும் வாயைத் திறந்து பேசுவதற்கே பயந்தவர்களாகக் காரில் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். கார், பங்களாவின் 'போர்டிகோ'வில் போய் நின்றதும், ஜமீந்தார் விருட்டென்று கீழே இறங்கித் தம்முடைய ஆத்திரத்தின் அளவு தெரியும்படி கார்க் கதவை எவ்வளவு பலமாக ஓங்கி அடைக்க முடியுமோ அவ்வளவு பலமாக ஓங்கி அடைத்து விட்டு உள்ளே போய்விட்டார். மறுபுறமாக வந்து மோகினி கீழே இறங்குவதற்காகக் கார்க் கதவைத் திறந்து விட்டு விலகி நின்று கொண்டார் கணக்குப்பிள்ளைக் கிழவர். மோகினி பயந்து கொண்டே காரிலிருந்து இறங்கும் புள்ளிமானாகக் கண்ணீர் சிந்தியபடி கீழிறங்கினாள். கண்ணாயிரமும் கணக்குப்பிள்ளைக் கிழவரும் பட்டுப்புடவை மூட்டையைத் தூக்கிக் கொண்டு பின்னால் நடந்தார்கள். ஜமீந்தார் வாங்கிக் கொடுத்த பூப் பொட்டலம் காருக்குள்ளேயே கிடந்தது. டிரைவர் அதை எடுத்துக் கொண்டு பின்னால் - ஓடி வந்து மோகினியிடம் கொடுக்க முயன்று அவள் அதை வாங்கிக் கொள்ளாமல் வேகமாக நடந்து விடவே கண்ணாயிரத்திடம் கொடுத்துவிட்டுச் சென்றான். தனக்குப் பின்னால் கண்ணாயிரமும், கணக்குப்பிள்ளைக் கிழவரும், பூவுடனும், புடவை மூட்டையுடனும் வருகிறார்கள் என்ற ஞாபகமே இல்லாமல் புயலாக உள்ளே விரைந்து கொண்டிருந்தாள் மோகினி. எதிரே வந்த பாரதி, "புடவைக் கடைக்குப் போய்விட்டு வந்தீர்களா அக்கா..." என்று தொடங்கி முக மலர்ச்சியோடு ஏதோ விசாரித்ததற்கும் கூட நின்று பதில் சொல்கிற மனநிலையில் அவள் அப்போது இல்லை. 'மோகினி ஏன் பதில் சொல்லாமல் போகிறாள்? பட்டுப் புடவையை வாங்கப் போன இடத்தில் ஜமீந்தாருக்கும் இவளுக்கும் ஏதாவது சண்டையோ என்னவோ? அழமாட்டாத குறையாகக் கண் கலங்க நடந்து போகிறாளே? பாவம்!' என்று தனக்குள் நினைத்தாள் பாரதி. மோகினியைத் துரத்திக் கொண்டு போவது போல் புடவை மூட்டையும், பூப்பொட்டலுமுமாகக் கணக்குப்பிள்ளைக் கிழவரும், கண்ணாயிரமும் பின்னால் போவதைப் பார்த்து, 'இவர்கள் போய் அவளிடம் இன்னும் ஏதோ வயிற்றெரிச்சலைக் கிளறப் போகிறார்கள்' என்று பாரதி நினைத்துக் கொண்டாள். அவள் நினைத்தபடியே நடந்தது. அடுத்த அறையில் மோகினி கண்ணாயிரத்திடம் சீறி விழுவதைத் தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்தே ஜன்னல் வழியாகப் பார்த்தாள் பாரதி. அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவர் அதிகாரத்துக்கு நடுங்குவதையும் பயந்து சாவதையும் பார்த்து அவர் தான் சத்தியமூர்த்தியின் தந்தை என்பதையே ஒப்புக் கொள்ளத் தயங்கும் மனத்தோடு இருந்தாள் அவள். அந்தக் கிழவரைச் சத்தியமூர்த்தியின் அறையிலிருந்து காரில் திரும்ப அழைத்துக் கொண்டு வந்த விட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் இரண்டாவது தடவையாக டிரைவர் முத்தையா பாரதியைப் பார்க்கத் தோட்டத்துப் பக்கமாக வந்திருந்தான். அப்படிப் பார்க்க வந்திருந்த போது, "பாரதி அம்மா! சத்தியமூர்த்தி சாரோட அறையிலிருந்து இந்தக் கிழவர் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு படியிறங்கி வந்ததைப் பார்த்தாக் காரியம் ஒண்ணும் பலிக்கலேன்னு தோணுதம்மா! இவங்க சூழ்ச்சிக்குச் சத்தியமூர்த்தி சார் இணங்கியிருக்க மாட்டாரு..." என்று தெரிவித்து விட்டுப் போனான். உடனே சிறிது நேரத்துக்குள் ஜமீந்தாரையும், கண்ணாயிரத்தையும், அழைத்துக் கொண்டு ஜவுளிக் கடைக்குப் புறப்பட்டு விட்டான் முத்தையா. அதனால் அவனைப் பாரதியால் அதிக நேரம் நிறுத்தி வைத்துப் பேசிக் கொண்டிருக்க முடியாமல் போயிற்று. ஜமீந்தார், கண்ணாயிரம் முதலியவர்கள் மோகினியை அழைத்துக் கொண்டு ஜவுளிக்கடைக்குப் போயிருந்த போது கல்லூரி முதல்வரிடமிருந்து டெலிபோன் வந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லாததால் பாரதியே டெலிபோனை எடுத்து முதல்வருக்குப் பதில் சொல்ல வேண்டியதாயிற்று. கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்த நிலைமையை நேரில் கண்டறிந்து விசாரிப்பதற்காக மல்லிகைப் பந்தலுக்கு வந்து முகாம் செய்வதற்கிருந்த கலெக்டரையும் - மாவட்டப் பெரிய போலீஸ் அதிகாரியையும் தம்முடைய ஜமீன் மாளிகையிலோ, பூபதியின் பங்களாவை ஒட்டி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டிருந்த 'கெஸ்ட் ஹவுஸிலோ' (விருந்தினர் விடுதி) தங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு பிரமாதமான ஏற்பாடுகளையெல்லாம் செய்திருந்தார் ஜமீந்தார். கலெக்டரையும், போலீஸ் அதிகாரியையும் அவர்கள் மல்லிகைப் பந்தலுக்கு வந்து இறங்கிய சூட்டோடு போய்ப் பார்த்து வரவேற்று மஞ்சள்பட்டி ஜமீன் மாளிகையிலும், விருந்தினர் விடுதியிலும் அவர்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஜமீந்தார் செய்திருப்பதாகவும், இரண்டு பேருடைய சௌகரியங்களுக்காகவும் இரண்டு பெரிய கார்கள் டிரைவருடன் தனித்தனியே கத்திருப்பதாகவும், தெரிவித்து அழைத்துப் பார்த்திருக்கிறார் கல்லூரி முதல்வர். "ஜமீந்தாருடைய ஏற்பாடுகளுக்கு மிக்க நன்றி. ஆனால் நாங்கள் 'டிராவலர்ஸ் பங்களாவில்' தங்கிக் கொள்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டோம். எங்களுக்காக நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாம்" என்று கலெக்டரும், டி.எஸ்.பியும் மறுத்து விட்டார்களாம். இந்த விவரத்தை ஜமீந்தார் வந்ததும் அவரிடம் தெரிவித்து விட வேண்டுமென்று ஃபோனில் பாரதியிடம் கூறியிருந்தார் கல்லூரி முதல்வர். பாரதியும் ஜமீந்தார் வந்ததும் அவற்றை அப்படியே தெரிவிப்பதாகச் சொல்லியிருந்தாள்.

இப்போது ஜமீந்தார் கடைவீதியிலிருந்து திரும்பியிருந்தாலும் அவர் கோபமாக உள்ளே நுழைந்த கோலத்தைப் பார்த்து அவரிடம் போய்ப் பேசுவதற்குப் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு. கண்ணாயிரத்திடம் சொல்லி அவர் மூலம் ஜமீந்தாருக்குத் தெரிவிக்கலாம் என்றால் கண்ணாயிரமும் உள்ளே மோகினியிடம் ஏதோ இரைந்து கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார். கண்ணாயிரத்தைக் கூப்பிட்டுக் கல்லூரி முதல்வர் டெலிபோன் செய்த விவரத்தைக் கூறலாம் என்று நினைத்த பாரதி உடனே அதைச் செய்யத் தோன்றாமல் ஜன்னலருகிலேயே தயங்கினாள். அடுத்த அறையில் கண்ணாயிரம் பட்டுப்புடவைப் பொட்டலத்தைப் பிரித்துப் பரப்பிக் கொண்டு மோகினியிடம் ஏதோ கத்துவதையும், மோகினி விசும்பி விசும்பி அழுவதையும் பார்த்துப் பரிதாபமாயிருந்தது அவளுக்கு. 'இந்தப் பெண்ணை ஏன் இவர்கள் இப்படிப் பாடாய்ப் படுத்துகிறார்கள்?' என்று அவளுக்கு வருத்தமாகவும் இருந்தது.

"ஜவுளிக் கடையிலேயே நீ நடந்துக்கிட்ட தினுசைக் கண்டு ஜமீந்தாருக்கு ரொம்பக் கோபம். நீ நடந்துகிறது கொஞ்சம் கூட நல்லாயில்லே மோகீ! இப்பவாவது இதிலே உனக்குப் பிடிச்ச பொடவை ஒண்ணை எடுத்துக் கட்டிக்கிட்டு இந்தப் பூவை தலையிலே வச்சிக்க. முதல்லே வாடிப்போன பழம் பூவைத் தலையிலேருந்து எறி. முகம் கழுவிப் பொட்டு வச்சிக்கிட்டு ஜமீந்தாரிட்டப் போயி ரெண்டு வார்த்தை சந்தோஷமாகப் பேசு... அவரு கோபம் தணியும்" என்று கண்ணாயிரம் நயமாகவும் பயமாகவும் மிரட்டிக் கொண்டிருந்தார். மோகினியோ பாரதி பகலில் சூட்டிவிட்டு இப்போது வாடிப் போயிருந்த அதே பழம் பூவோடு சுவரோரமாக அழுது கொண்டு நின்றாள். கண்ணாயிரத்தையும் அவரருகே நின்ற சத்தியமூர்த்தியின் தந்தையாகிய அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவரையும் அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கண்ணாயிரம் மூட்டையைப் பிரித்து உதறியிருந்த பட்டுப் புடவைகளையோ அவள் இலட்சியமே செய்யவில்லை. சிறிது நேரம் அவளோடு வாய்கொடுத்து அழுகையைத் தவிர ஒரு பதிலும் ஒரு பயனும் கிடைக்காமற் போகவே கண்ணாயிரம் அறையிலிருந்து வெளியே வந்தார். அவர்கள் வெளியே வருவதைப் பார்த்த பாரதி, முதல்வர் டெலிபோன் செய்த விவரத்தைக் கூறி அதை ஜமீந்தாரிடம் தெரிவித்து விடும்படி வேண்டிக் கொண்டாள். "சுத்தச் சோம்பேறி மனுஷனாவில்ல இருக்காரு! அவங்களை எப்படி வரவேற்று நம்ம 'கெஸ்ட் ஹவுஸி'லே தங்க வைக்கிறதுங்கிற விவரத்தைச் சொல்றதுக்காகவே இன்னிக்கு மத்தியானம் இந்தப் பிரின்ஸிபலை இங்கே வரவழைச்சிக் கிளிப் பிள்ளைக்குப் பாடம் சொல்ற மாதிரிச் சொல்லி அனுப்பிச்சிருக்கோம். கடைசியிலே காரியத்தைக் கோட்டை விட்டுப்பிட்டாரே" என்று பாரதி கூறியதைக் கேட்டுக் கல்லூரி முதல்வர் மேல் குறைபட்டுக் கொண்டு போனார் கண்ணாயிரம். அவருடைய தலை மறைந்ததும் மோகினியைச் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறுவதற்காகப் பாரதி அவள் அழுது கொண்டிருந்த அறைக்குள் புகுந்தாள். அவளைப் பார்த்ததும் அங்கே தயங்கி நின்று கொண்டிருந்த சத்தியமூர்த்தியின் தந்தையும் அறையிலிருந்து வெளியேறி விட்டார்ர். தான் படிக்கிற கல்லூரி முதல்வரைத் தன்னிடமே தூற்றுகிற அளவு கண்ணாயிரம் துணிந்ததை எண்ணியபோது பொறாமையும் கெட்ட எண்ணமும் நிறைந்த அந்தக் கொடிய முதல்வர் மேல் கூடச் சிறிது அநுதாபம் கொண்டாள் பாரதி. கண்ணாயிரத்தையும், ஜமீந்தாரையும் போல் படிப்பும் சிந்தனையும் இல்லாத முரடர்களிடம் கூடத் திட்டு வாங்கும்படி ஆகிவிட்ட அவர் நிலைமையை எண்ணி அவளுக்குப் பரிதாபமாகவும் இருந்தது. 'கல்லூரி முதல்வரிடமிருந்த அதிகார வெறி, கர்வம், பொறாமை, கெட்ட எண்ணங்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் அவர் ஒரு டபிள் எம்.ஏ., வெளிநாட்டுப் பல்கலைக் கழக அநுபவமும், டாக்டர் பட்டமும் பெற்றவர். ஆங்கில இலக்கியக் கடலைக் கரை கண்டவர். அப்படி எல்லாம் இருந்தும் அவர் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் செல்வாக்குப் பெறவோ, சோபிக்கவோ முடியாமல் போவதற்குக் காரணம் என்னவென்று பாரதி பலமுறை தனக்குள் சிந்தித்துக் காரணத்தையும் உணர்ந்திருக்கிறாள். ஊன்றிய கொள்கைதான் படிப்பின் உறுதிக்குக் காரணம். கொள்கை இல்லாத படிப்பு வேரில்லாமல் ஊன்றிய செடியைப் போல் சிறிது காலம் பசுமையாய்த் தோன்றி விரைவில் பட்டுப்போய் விடுகிறது. கல்லூரி முதல்வருடைய படிப்புப் பட்டுப் போவதற்குக் காரணம் அதுதான். கண்ணாயிரத்தைப் போல் சந்தர்ப்பத்தினால் முன்னுக்கு வந்தவர்கள் கூடக் குறைத்துப் பேசும்படி நிறையப் படித்தவரான முதல்வர் தாழ்ந்து போய்விட்டாரே' என்று மோகினியின் அறைக்குள் நுழைவதற்கு முன், பாரதி நினைத்தாள். இவ்வாறு நினைத்த போது அவள் ஒரே ஒரு கணம் முதல்வருக்காக அநுதாபப்படவும் செய்தாள். அந்த அநுதாபமும் ஒரு கணம் தான். அடுத்த கணமோ அவளுடைய அநுதாபம் முழுமைக்கும் மோகினி ஒருத்தியே பாத்திரமானாள். மோகினியின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூற வேண்டிய காரியத்தைத் தானாகவே ஏற்றுக் கொண்டு அந்தக் காரியத்தில் மனம் நெகிழ்ந்து ஈடுபட்டாள் பாரதி.

அதே நேரத்தில் ஜமீந்தாரும் கண்ணாயிரமும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஏமாற்றமளிக்கும் செய்திகளைத் தெரிந்து கொண்டிருந்தார்கள். அன்று பிற்பகல் சத்தியமூர்த்தியிடம் அவனுடைய தந்தையையே அனுப்பி வழிக்குக் கொண்டு வர முயற்சி செய்து அது முடியாமற் போயிற்றென்று அறிந்த போதே, அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. விசாரணைக்காக வருகிற போலீஸ் அதிகாரியையும், கலெக்டரையும் தங்களுடைய விருந்தினராகத் தங்க வைத்துத் தடபுடலாக உபசரித்துக் குளிப்பாட்டிக் காரியத்தைச் சாதித்துக் கொள்ள நினைத்துத் தங்கள் சார்பில் பிரின்ஸிபலை இவர்கள் இருவரையும் அழைக்க அனுப்பியிருந்தார்கள் அவர்கள். அதற்கும் அதிகாரிகள் சம்மதிக்காமல் நழுவிவிட்டார்கள் என்று கேள்விப்பட்டதும் ஜமீந்தாருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. வந்திருக்கிற கலெக்டரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தார் அவர். நேர்மையாளரும், முற்போக்கான மனநிலையுடையவருமான இந்தக் கலெக்டரைச் செல்வாக்கைப் பயன்படுத்தியோ, உபசாரங்களைச் செலவழித்தோ ஒன்றும் நெகிழச் செய்து விட முடியாது என்று பலர் சொல்லியிருந்தது நிஜமாகிவிட்டதை அறிந்து, ஜமீந்தாரும் கண்ணாயிரமும், பிரின்ஸிபலும் பயந்தனர். அடுத்த முயற்சியாக அன்றிரவு அவர்கள் மூவரும் தாங்களாகவே கலெக்டரையும், போலீஸ் அதிகாரியையும் சந்திப்பதற்காக 'டிராவலர்ஸ் பங்களா'வுக்குப் போனார்கள். அப்போது அவர்களுக்கு அங்கே இன்னும் பெரியதோர் அதிர்ச்சி காத்திருந்தது. கலெக்டர் முகாம் செய்திருந்த அறையில் கலெக்டரோடு சத்தியமூர்த்தியும் குமரப்பனும் அமர்ந்து சிரிக்கச் சிர்க்கப் பேசிக் கொண்டிருந்தனர்.

பக்கத்து அறையிலிருந்த கலெக்டரின் பி.ஏ.யை விசாரித்ததில், "இவங்க ரெண்டு பேரும் எங்க கலெக்டர் ஐ.ஏ.எஸ். எழுதிக் கலெக்டராக வருவதற்கு முன் காலேஜ் லெக்சரராக இருந்த போது அவரிடம் படித்த மாணவர்களாம். அதனாலே கலெக்டர் ரொம்பப் பிரியமாகக் கூப்பிட்டுப் பேசிக்கிட்டிருக்காரு..." என்றார் அவர். ஜமீந்தாரும், கண்ணாயிரமும், பிரின்ஸிபலும் கலெக்டரைச் சந்திப்பதற்காகச் சொல்லி அனுப்பினார்கள். "என்ன காரியமாகப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று கேட்டுக் கொண்டு வரச் சொன்னார் சார்?" என்று உள்ளே போன ஆள் திரும்பவும் வந்து விசாரித்த போது, ஜமீந்தாருக்கும் கண்ணாயிரத்துக்கும் கோபம் தாங்க முடியவில்லை. 'முதன் மந்திரியிலிருந்து மாகாண கவர்னர் வரை ஒரு வார்த்தையில் கட்டுப்படக்கூடிய அத்தனை ஆற்றலுள்ள மஞ்சள்பட்டி ஜமீந்தாரிடமா இந்த முந்தா நாள் கலெக்டர் வாலை ஆட்டுகிறான்? இவனை இந்த ஜில்லாவிலிருந்து மாற்றி விட்டு மறுவேலை பார்க்க வேண்டியதுதான்' என்று கண்ணாயிரம் மனத்துக்குள் கறுவிக் கொண்டார். ஜமீந்தாருக்கும் ஆத்திரம் பொங்கியது. கல்லூரி முதல்வரும் அதே மனநிலையில் இருந்தாலும் ஒரு சிறிய தாளை எடுத்து அதில் தாங்கள் பார்க்க வந்த காரியத்தையும், வந்திருப்பவர்கள் பெயரையும் குறித்துக் கலெக்டருக்கு அனுப்பி வைத்தார். பத்து நிமிஷத்துக்கெல்லாம் கலெக்டரின் பி.ஏ. மறுபடியும் திரும்பி வந்து, "ஐ ஆம் வெரி சாரி சார்! இந்தக் காரியமாகக் கலெக்டரே நாளைக்கு உங்களையெல்லாம் கூப்பிட்டுப் பேசுவாராம். இப்போது இதே காரியமாக வேறு சிலரோடு பேசிக் கொண்டிருப்பதனால் உங்களை நாளைக்குக் கூப்பிட்டு அனுப்புவதாகச் சொன்னார்" என்று தெரிவித்த போது ஜமீந்தாருக்கு முகத்தில் அறைந்தாற் போலாகி விட்டது. "வெள்ளைக்காரன் ராஜாங்கம் நமக்கு ஸர் பட்டம் கொடுத்தப்ப அதைப் பாராட்டித் தன் சந்தோஷத்தைத் தெரிவிச்சுக்கறதுக்காக அப்ப கலெக்டராயிருந்த துரையும், துரைச்சானியும் மஞ்சள்பட்டி அரண்மனைக்குத் தேடிக்கிட்டு வந்தாங்க... இப்ப என்னடான்னா முந்தாநாள் பயலுகளெல்லாம் கலெக்டரா வந்து பெரிய மனுசங்கிட்ட மரியாதை தெரியாம நடந்துக்கறாங்க. இவரு கூப்பிட்டு அனுப்புவாராம்... நான் வரணுமாம்... அதையுந் தான் பார்க்கலாமே" என்று திரும்பிப் புறப்படுவதற்காகக் காரில் ஏறியப் பின் கண்ணாயிரத்திடம் கலெக்டரைப் பற்றிச் சொல்லிச் சீறினார் ஜமீந்தார். வீட்டுக்குத் திரும்பியதும் அன்றிரவே ஜமீந்தாருக்கு 'ப்ளட் பிரஷர்' லோவாகிப் படுக்கை போட்டுவிட்டது. டாக்டர் வந்து பங்களாவிலேயே தங்கியிருந்தார்.

மறுநாள் கலெக்டரும் டி.எஸ்.பி.யும் காலையில் கல்லூரியைச் சுற்றிப் பார்த்தார்கள். முதலில் மாணவர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றைச் சந்தித்துப் பேசினார்கள். அப்புறம் சத்தியமூர்த்தியோடு சேர்ந்து அவனுடைய தூண்டுதலுக்குட்பட்டு ஹாஸ்டல் ஷெட்டுக்கு நெருப்பு வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாணவர்களையும், நெருப்பு வைக்கும் போது பார்த்ததாகச் சாட்சி கூறியிருந்த இரண்டு சமையற்காரர்களையும், ஒரு நைட் வாட்ச்மேனையும், கூப்பிட்டு விசாரித்தார்கள். கலெக்டரை அருகில் வைத்துக் கொண்டு அந்த மூன்று சாட்சிகளையும் மடக்கி மடக்கிக் கேள்வி கேட்டார் டி.எஸ்.பி. "நிஜத்தை அப்படியே சொன்னால் பிழைத்தீர்கள்! உங்களை யாராவது பயமுறுத்துகிறார்கள் என்பதற்காகவோ, பணம் கொடுத்து ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவோ, பொய்ச் சாட்சி சொன்னீர்களோ வருஷக்கணக்கில் உள்ளே இருந்து கம்பி எண்ண நேரிடும்! ஜாக்கிரதை" என்று அவர் மிரட்டிய போது முதலில் சமையற்காரர்கள் அழுது கொண்டே உண்மையைக் கூறிவிட்டார்கள். அப்புறம் வாட்ச்மேனும் பயந்து போய் உண்மையைக் கக்கிவிட்டான்.

'நெருப்புப் பிடித்துக் கொண்டு எரிந்தது மட்டும் தான் தங்களுக்குத் தெரியும் என்றும் சத்தியமூர்த்தியும் மாணவர்களும் வந்து நெருப்பு வைத்ததைப் பார்த்ததாகக் கூறியது மேலே உள்ள அதிகாரிகளும் நிர்வாகியும் பயமுறுத்தியதற்காகக் கூறிய பொய்' என்றும் அந்த மூவரும் ஒப்புக் கொண்டு விட்டார்கள். கடைசியாகப் பிரின்ஸிபலைக் கூப்பிட்டு விசாரித்த போது அவரும் மென்று விழுங்கினார். கலெக்டரும், டி.எஸ்.பி.யும் பிரின்ஸிபலுக்கு அறிவுரை கூறினார்கள். பிரின்ஸிபலுக்குத் தலை குனியும்படியான நிலைமையாகி விட்டது.

"நாம் படித்தவர்கள் என்பதை நிரூபிக்க ஏதாவது நல்ல காரியங்களைச் செய்தால் மட்டுமே போதும் சார்! மானேஜ்மெண்டிற்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்று பையன்களையும், நல்ல ஆசிரியர்களையும் பகைத்துக் கொண்டு விடக் கூடாது. நீங்கள் நிறையப் படித்தவர். நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாளையிலிருந்து ஒழுங்காகக் காலேஜ் நடைபெற வேண்டும். நீங்களும், நிர்வாகிகளும் ஒத்துழைத்து இப்படியெல்லாம் ஒரு தனி ஆசிரியரையும், மாணவர்களையும் கெட்ட பெயர் வாங்கச் செய்திருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கிற போது ரொம்ப வருத்தமாயிருக்கிறது. நான் ஐ.ஏ.எஸ். பாஸ் செய்து கலெக்டராக வருவதற்கு முன் சத்தியமூர்த்திக்கு விரிவுரையாளராக இருந்திருக்கிறேன். எனக்கு அவனை நன்றாகத் தெரியும். அவனுக்குப் பொய் பேசத் தெரியாது. உண்மைக்காக முரண்டும் பிடிவாதமும் செய்கிறவன் அவன். அவனைப் போல் தங்கமான மாணவனாக அந்த நாளிலேயே நான் வேறொருவனைப் பார்த்ததில்லை. நீங்களும் நிர்வாகிகளும் சத்தியமூர்த்தியைப் பிடிக்கவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்று வெளியே பரவினால் கல்லூரியின் பெயரும், நிர்வாகியின் பெயரும், உங்கள் பெயரும் கெடும்" என்று சொல்லிவிட்டுக் கலெக்டர் தம் பேச்சை ஒரு நிமிஷம் நிறுத்திவிட்டு பிரின்ஸிபலின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார்.

அத்தியாயம் - 56

ஆணின் மனத்தில் உணர்வுகள் தோன்றலாம். ஆனால் பெண்ணின் மனத்திலோ உணர்வுகள் மிக மெல்லப் பூக்கின்றன. உள்ளேயே மணந்து மணந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளைப் பெண் தன்னுடைய பலமான நிதியாக்கிக் கொண்டு விடுகிறாள்.

ஓரிரு விநாடிகள் கல்லூரி முதல்வரின் முகத்தைக் கூர்ந்து கவனித்த பின் கலெக்டரே மேலும் தொடர்ந்து கூறலானார். "சில வட இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும், மாணவர்கள் வேலை நிறுத்தத்தால் வகுப்புக் கலவரங்கள், அடிபிடி சண்டைகள், அரசியல் தலைவர்களின் தலையீடு எல்லாம் கூட வரும். நம்முடைய தமிழ்நாட்டுக் கல்லூரிகளுக்கும் நீங்களே வலுவில் அப்படிக் கெட்ட பெயர் தேடாதீர்கள். இதுவரை நடந்தது போகட்டும். எல்லாவற்றையும் மன்னித்து விடலாம். இனிமேல் நாளையிலிருந்து ஒரு பொறுப்புள்ள பிரின்ஸிபலாக இருந்து கல்லூரியை நடத்துங்கள். இப்படியெல்லாம் நடந்துவிட்டதே என மனத்தில் வைரம் வைத்துக் கொண்டு சமையல்காரர்களையோ, கல்லூரி நைட்வாட்ச்மேனையோ பழிவாங்காதீர்கள். இத்தனை நாட்களாக வகுப்புக்கள் நடைபெறாததால் மாணவர்களுக்கும் படிப்பு கெட்டுப் போயிருக்கிறது. கல்லூரியின் நல்ல பெயரையும், சம்பந்தப்பட்டவர்களின் கௌரவத்தையும் உத்தேசித்து எந்த மேல் நடவடிக்கையும் இல்லாமல் இந்த விஷயங்களை நாங்கள் இப்படியே விட்டு விடுகிறோம்" என்று கலெக்டர் பரிவோடு கூறியபோது, பிரின்ஸிபல் குனிந்த தலை நிமிராமல் கேட்டுக் கொண்டிருந்தார். பின்பு மாணவர்களுடைய பெருங்கூட்டத்தினிடையேயும் ஒரு அரைமணி நேரத்துக்கு மேல் கலெக்டரும், டி.எஸ்.பி.யும் சொற்பொழிவாற்றினார்கள். பொறுப்புள்ள மாணவர்கள் தாம் தேசத்தின் எதிர்கால நம்பிக்கை என்பதையும், அவர்கள் அடிக்கடி வேலை நிறுத்தம் செய்வதற்கோ ஒத்துழைக்காமல் போவதற்கோ கல்லூரி என்பது குழப்பங்களும் போராட்டங்களும் நிறைந்த தொழிற்சாலையல்ல என்பதையும் விளக்கி அறிவுரை கூறினார்கள் அவர்கள். எல்லாம் சுமுகமாக முடிந்து விட்டது. ஜமீந்தார் 'லோ பிளட் பிரஷ'ரில் படுத்தவர் படுத்தவர் தான். சாயங்காலம் கல்லூரி முதல்வர் நடந்தவற்றை எல்லாம் தெரிவிக்கச் சென்றிருந்த போது கண்ணாயிரத்திடம் தான் எல்லாவற்றையும் தெரிவிக்க வேண்டியிருந்தது. ஜமீந்தரின் உடல்நிலையை எண்ணி அந்தச் செய்திகளை அவரிடம் அப்போது தெரிவிக்க வேண்டாமென்று டாக்டர் தடுத்துவிட்டார். கண்ணாயிரம் கல்லூரி முதல்வரை ஏதோ கோபித்துக் கொள்ளத் தொடங்கிய போது, "காலேஜை எப்படி நடத்தறதுன்னு எனக்கு நீங்கள் சொல்லித் தெரிய வேண்டாம்! தயவு செய்து உங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள்" என்று முதல்வரிடமிருந்து மிகவும் கடுமையாகப் பதில் வந்தது. டிரைவர் முத்தையா பின்புறமாகத் தோட்டத்துப் பக்கம் போய்ப் பாரதியிடம் நடந்தவற்றைத் தெரிவித்துக் கொண்டிருந்தான். சத்தியமூர்த்தியின் உண்மை வென்றுவிட்டதென்ற செய்தி அவளைப் பூரிக்கச் செய்தது.

ஆனால், அதே மாலை வேளையில் மல்லிகைப் பந்தலின் டிராவலர்ஸ் பங்களா வாசலில் இன்னும் சற்று நேரத்தில் அங்கிருந்து மதுரைக்குப் புறப்படுவதாயிருந்த சத்தியமூர்த்தியின் முன்னாள் விரிவுரையாளராகிய இன்றைய கலெக்டர் அவனைக் கூப்பிட்டு மிகவும் அந்தரங்கமாக அவனுடைய எதிர்கால நலனுக்குகந்த அறிவுரை ஒன்றை அவனுக்குக் கூறிக் கொண்டிருந்தார். அந்தக் கலெக்டரின் பழைய மாணவனான குமரப்பனும் அப்போது உடனிருந்தான். சத்தியமூர்த்தியை அருகில் வந்து தட்டிக் கொடுத்து விட்டு ஊருக்குப் புறப்படு முன் விடைபெற்றார் கலெக்டர். 'ஜீப்' தயாராக டிராவலர்ஸ் பங்களாவின் முகப்பில் நின்று கொண்டிருந்தது. "மதுரைக்கு வந்தால் வீட்டுக்கு வா சத்தியம்! என்னுடைய யோசனையையும் மனத்தில் வைத்துக் கொள்! உன் எதிர்காலத்தில் மிகவும் நம்பிக்கை உண்டு எனக்கு. நடந்ததையெல்லாம் கெட்ட சொப்பனம் போல மறந்துவிடு! நான் யோசனை கூறிய விஷயமாக இன்னும் ஒரு வாரத்தில் நானே உனக்கு விவரமாக ஒரு கடிதம் எழுதுவேன் அதன் பிறகு உன் முடிவை நீ எனக்கு எழுதினால் போதும்" என்று சத்தியமூர்த்தியிடம் கூறிவிட்டுக் குமரப்பனின் பக்கமாகத் திரும்பி, "நீ விவரமாக எல்லாவற்றையும் உன் நண்பனுக்கு விளக்கிச் சொல் குமரப்பன்! நானும் ஊருக்குப் போய்க் கடிதம் எழுதுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் கலெக்டர். அந்தக் கலெக்டருக்குச் சத்தியமூர்த்தி இப்போது எவ்வளவோ நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருந்தான். விரிவுரையாளராயிருந்த காலத்திலேயே அவருடைய இலக்கியத் திறனையும் அறிவு நுணுக்கத்தையும் விரும்பி நேசித்தவன் அவன். அரசாங்கப் பிரதிநிதியாக ஒரு பொதுக் காரியத்தில் நியாயம் விசாரிக்க வந்திருந்தாலும், 'சத்தியமூர்த்தி' என்ற தன் பெயரைக் கேள்விப்பட்டதுமே தன்னைப் பற்றிய விவரங்களை விசாரித்து அந்தப் பெயருக்குடையவன் தம்முடைய பழைய மாணவனாகத் தான் இருக்க வேண்டுமென்று அநுமானமும் செய்து கொண்டு உடனே தன்னைக் கூப்பிட்டனுப்பி மனம் விட்டுப் பேசிய அந்தக் கலெக்டரின் பெருந்தன்மையை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தான் அவன். அதையெல்லாம் விடப் பெரிதாக அவன் மனத்தைத் தொட்ட பெருந்தன்மை, 'ஏதோ வந்தோம் - விசாரித்தோம் - போனோம்' என்று முறையைக் கழித்துவிட்டுப் போகாமல், மிகவும் உரிமை பாராட்டி, அவனுடைய எதிர்கால நலனுக்குரிய சிறந்த யோசனை ஒன்றையும் வற்புறுத்திக் கூறிவிட்டுப் போயிருந்தார் அந்தக் கலெக்டர். நண்பன் குமரப்பனுக்கும் அந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அன்றிரவு முழுவதும் சத்தியமூர்த்தி அதைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியிருந்தான்.

அவன் தன் எதிர்காலத்தைப் பொருளாக வைத்துச் சிந்திக்கத் தொடங்கியிருந்த இதே இரவில் அவனைப் பொருளாக வைத்துத் தாங்கள் சிந்திக்கத் தொடங்கியிருந்த சிந்தனைக்கு முடிவே கிடைக்காமல் ஒரே வீட்டின் ஒரே அறையில் இரண்டு பெண் மனங்களும் தவித்துக் கொண்டிருந்தன. அன்றிரவு படுத்துக் கொள்வதற்கு முன் மோகினியும் பாரதியும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஹாலில் வேறு யாரும் இல்லை. அவர்கள் இரண்டு பேர் மட்டுமே தனியாக இருந்தார்கள். கண்ணாயிரமும், கணக்குப் பிள்ளைக் கிழவரும் முன்புறம் ஜமீந்தார் படுத்திருந்த அறையருகில் அவருக்கு உதவியாகக் காத்திருந்ததனால் பங்களாவின் உள்கூடத்தில் மோகினியும், பாரதியும் தனியாக அமர்ந்து பேசிக் கொள்ள வசதியாக இருந்தது. பாரதியின் மனத்திலோ அப்போது கல்லூரி வேலை நிறுத்தத்தைப் பற்றிய விசாரணையில் சத்தியமூர்த்திக்கு நியாயம் கிடைத்து அவர் வென்று விட்டார் என்ற பெருமிதமும் மகிழ்ச்சியுமே நிரம்பியிருந்தன. அந்த மகிழ்ச்சிப் பெருமிதத்தை இன்னும் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போலத் தனக்குத்தானே உணர்ந்தவளாக மோகினியிடம் பேச்சுக் கொடுத்தாள் பாரதி.

"அக்கா! உங்களுக்குத் தெரியுமா சேதி! நான் சொன்னேனே, அதுதான்... மாணவர்களுக்கு எல்லாம் விருப்பமான ஓர் இளம் விரிவுரையாளரை வெளியேற்றிவிடுவதற்கு ஜமீந்தாரும் எங்கள் பிரின்ஸிபலும் சூழ்ச்சி செய்கிறார்கள் என்றேனே - அது பலிக்கவில்லை. அந்த நல்ல விரிவுரையாளருக்கு நியாயம் கிடைத்துவிட்டது. இவர்கள் அவரை ஒன்றும் அசைக்க முடியவில்லை..."

என்று தொடங்கிச் சொல்லிக் கொண்டு வந்த பாரதியைக் குறுக்கிட்டுத் தன் ஆவலை அடக்க முடியாமல் மோகினி ஒரு கேள்வி கேட்டாள்.

"அது சரி, பாரதி! அந்த விரிவுரையாளரின் பெயர் என்னவென்று எனக்குச் சொல்லவில்லையே நீ" - இப்படி வினவிய போது வேகமாக அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் அவள் பதில் சொல்லப் போகும் பெயருக்காகக் காத்து தவிக்கத் தொடங்கியிருந்தாள் மோகினி.

"அவர் கூட உங்கள் ஊர்க்காரர்தான் அக்கா! அவர் பெயர் சத்தியமூர்த்தி என்பார்கள். இன்னொரு விஷயம் கூட எனக்கே நேற்றுத்தான் தெரிந்தது. உங்களை மதுரையிலிருந்து இங்கே அழைத்துக் கொண்டு வந்தாரே, ஒரு கணக்குப்பிள்ளைக் கிழவர் - அவர் தான் சத்தியமூர்த்தியுடைய தந்தையாம். அவரிடம் அந்தக் கிழவரையே அனுப்பியும் மிரட்டிப் பார்த்திருக்கிறார்கள்... பலிக்கவில்லை" என்று சொல்லிக் கொண்டே வந்த பாரதி மோகினியின் முகபாவத்தில் தெரிந்த மாறுதல்களையும், அவளுடைய கண்கள் கலங்குவதையும் பார்த்துப் பேச்சை அவ்வளவில் நிறுத்தினாள்.

"ஏனக்கா இப்படி? உங்களுக்குச் சத்தியமூர்த்தியைத் தெரியுமா..."

பதில் சொல்லாமல் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள் மோகினி. பாரதி மறுபடியும் அருகில் வந்து, "அவரை ஏற்கெனவே உங்களுக்குத் தெரியுமா அக்கா?" என்று வினவியபோது, 'தெரியும்' என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தாள் மோகினி. சிறிது நேரம் கழித்து, "அப்புறம் என்ன நடந்தது பாரதி? மாணவர்கள் வேலை நிறுத்தம் எப்படி நின்றது? அவருக்கு நியாயம் எவ்வாறு கிடைத்தது?" என்று மோகினியே அழுகையை நிறுத்திவிட்டுத் தன்னைத் தூண்டிக் கேட்ட போது பாரதி ஆச்சரியமடைந்தாள். எனினும் தன் ஆச்சரியத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்தவை எல்லாவற்றையும் மோகினிக்குக் கூறினாள் அவள். மோகினியோ மேலும் மேலும் வேதனை கலந்த ஆர்வத்தோடு சத்தியமூர்த்தியைப் பற்றிப் பாரதியிடம் ஒவ்வொன்றாக வினாவிய வண்ணம் இருந்தாள். "இந்த ஊரில் அவர் எங்கே தங்கியிருக்கிறார் பாரதி? அவர் தான் ஹாஸ்டல் உதவி வார்டன் என்று கூறினாயே? அதனால் ஒருவேளை ஹாஸ்டலிலேயே தங்கியிருக்கிறாரோ?" என்று மோகினி கேட்டபோது சத்தியமூர்த்தியைப் பற்றி அவள் காட்டிய அக்கறையும் சிரத்தையும் பரபரப்பும் பாரதியின் மனத்தில் வியப்பையும் சந்தேகத்தையும் வளர்த்தன. 'நேற்றோ முந்தாநாளோ அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவரைப் பற்றி, 'இந்த முதியவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா அக்கா?" என்று இவளிடம் நான் விசாரித்த போது, 'எனக்கு ஒன்றுமே தெரியாதம்மா' என்று அப்பாவிபோல் பதில் கூறினாளே? இப்போது அந்த முதியவரின் மகனான சத்தியமூர்த்தியைப் பற்றி மட்டும் இப்படித் தூண்டித் தூண்டி விசாரிக்கிறாளே? சத்தியமூர்த்தியைப் பற்றி மட்டும் இவளுக்கு என்ன இத்தனை அக்கறை?' என்று மனத்துக்குள் எண்ணினாள் பாரதி. 'சத்தியமூர்த்தியை மட்டும் உங்களுக்கு எப்படித் தெரியும் அக்கா?' என்று மோகினியைக் கேட்டுவிடக் கூடப் பாரதியின் நாவு துடிதுடித்துக் கொண்டிருந்தது. ஆனால் மோகினியின் கலைத்திறனாலும் அழகு பெருமையினாலும் அவள் மேல் தன்னையறியாமலே பாரதிக்கு உண்டாகியிருந்த ஒரு விதமான பயபக்தி அப்படிக் கேட்கவும் துணியவிடாமல் அவளைத் தடுத்துவிட்டது. 'அவரைப் பற்றி இவளுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?' என்று மனம் தூண்டித் தூண்டிக் கேட்க மனத்தின் அந்தக் கேள்வியை உள்ளேயே இரகசியக் குரலாகப் புதைத்துவிட்டு வாய் வார்த்தைகளால் மோகினி கேட்பதற்கெல்லாம் இயந்திரம் போல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் பாரதி.

பேச்சு முடிந்து படுத்துக் கொள்ளச் சென்ற பின்போ, இருவருமே உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார்கள். பக்கத்துப் பலகணியின் வழியே தோட்டத்தில் அவசர அவசரமாக முன்னிரவிலேயே மலர்ந்து விட்டிருந்த பவழ மல்லிகைப் பூக்கள் நறுமணம் அறைக்குள் வந்து கமழ்ந்து கொண்டிருந்தது. பலகணிக்கு அப்பால் மலைப் பிரதேசத்தின் மங்கிய வானத்தில் எங்கோ ஒரு மூலையில் கீறிவிட்டாற் போல் பிறை நிலா நகர்ந்து கொண்டிருந்தது. மௌனமாக மெல்ல நகரும் அந்தப் பிறை நிலவும், மந்த மாருதம் போன்ற மெல்லிய காற்றின் சிலுசிலுப்போடு கலந்து அறைக்குள் வந்து நிறையும் பவழ மல்லிகைப் பூக்களின் மணமும் சேர்ந்து மோகினியின் இதயத்தில் தாபத்தைப் பெருக்கின. முந்தினம் மாலையில் பட்டுப்புடவைக் கடையின் வாசலில் சத்தியமூர்த்தியைச் சந்தித்த போதே அவள் தவித்த தவிப்பு இப்போது பன்மடங்காகப் பெருகியிருந்தது.

வாய்விட்டுக் கேட்கவும் முடியாமல் தானாகத் தெரிந்து கொள்ளவும் வழி இல்லாமல் தவித்த உண்மை தெரிந்து விட்டதென்று களிப்பும் - அந்தக் களிப்பின் மறுபுறமான வேதனைகளும் நிறைந்த மனநிலையோடு படுக்கையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் மோகினி. சத்தியமூர்த்தியின் பாதங்களை நினைத்த போது, 'ஆரார் ஆசைப்பட்டார் நின் பாதத்துக்கு' என்ற முத்தத்தாண்டவர் பதத்தைத் தான் உணர்ச்சி மல்க ஆடிய வேளைகளும் மேடைகளும், ஞாபகம் வந்தன அவளுக்கு. மாலையில் பட்டுப்புடவைக் கடை வாசலில் என்னை ஜமீந்தாரோடும் கண்ணாயிரத்தோடும் சேர்த்துப் பார்த்தவர் 'என்ன நினைத்து எப்படி எண்ணி மனம் குமுறிக் கொண்டு போகிறாரோ?' என்று ஞாபகம் இப்போதும் அவளைக் கலக்கியது. 'நான் மதுரையிலிருந்து ஜமீந்தார் கூப்பிடுகிறாரே என்பதற்குப் பயந்து இங்கே வந்திருப்பதே அவருக்குப் பிடிக்காது! 'கோழைகள் காதலிக்கக் கூடத் தகுதியற்றவர்கள்' என்பாரே அவர்! நானும் தான் ஏன் இப்படிச் செய்தேன்? எதற்காக இங்கே புறப்பட்டு வந்தேன்? ஜமீந்தார் கூப்பிட்டால் நான் ஏன் பயப்பட வேண்டும்? 'நான் வரமாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்திருக்கலாமே! பாவி அப்படிச் செய்யாமற் போனேனே!' என்று எண்ணிக் கழிவிரக்கத்தில் ஆழ்ந்தாள் அவள். பாரதி சொல்வது உண்மையாயிருந்தால் தன்னை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தல் வரை காரில் அழைத்து வந்தவர் வேறு யாரும் அந்நியர் இல்லை! தன் இதயம் கவர்ந்தவரின் தந்தை தான் என்ற மகிழ்ச்சியும் அந்தக் கழிவிரக்கத்தில் இருந்தது. தந்தைக்கும் மகனுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள அத்தனை வேறுபாடு இருப்பதை அவளும் நினைத்துப் புரிந்து கொண்டாள். 'என்ன ஆச்சரியம்! இந்தக் கிழவன் தான் சத்தியமூர்த்தி அவர்களின் தந்தை என்பதை இதுவரை நான் தெரிந்து கொள்ள முடியாமல் போய் விட்டதே' என்று நினைத்து அந்த நினைப்பின் சுவடு நீங்குவதற்குள்ளாகவே 'என்னுடைய மாமனார்' என மெல்லத் தனக்குத்தானே கள்ளத்தனமாகச் சொல்லிப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள் அந்தப் பேதை. கல்லூரியில் அவருக்கு ஏற்பட்ட இடையூறுகள் எல்லாம் தவிர்த்து நியாயம் பிறந்துவிட்டது என்ற செய்தியைப் பாரதி கூறக் கேட்ட போது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. 'பாரதியும் அதைப் பெருமகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் என்னிடம் கூறினாளே; அவளுக்குத் தான் தன் விரிவுரையாளரிடம் எத்தனை பெருமதிப்பு!'

'இந்தப் பாரதியைப் போல்தானே மல்லிகைப் பந்தல் கல்லூரியிலே படிக்கிற ஒவ்வொரு மாணவனும் மாணவியும் என் அன்பரின் மேல் பெருமதிப்பு வைத்திருப்பார்கள்?' என்று எண்ணிப் பெருமைப்பட்டாள் மோகினி. 'பாரதி சத்தியமூர்த்தியைப் பற்றிய பேச்சை மிகவும் ஆர்வத்தோடு பேசியதற்கும் அந்த விரிவுரையாளருக்கு நியாயம் கிடைத்த செய்தியை மகிழ்ச்சிப் பெருக்கோடு தெரிவித்ததற்கும், அவர் அவளுடைய மதிப்புக்கும் அன்புக்கும் உரிய விரிவுரையாளர்' என்பதைத் தவிர வேறு காரணமே இருக்க முடியாதென்றுதான் மோகினி நினைத்தாள். ஆனால் அதே சமயத்தில் பக்கத்தில் உள்ள மற்றொரு படுக்கையில் புரண்டு கொண்டிருந்த பாரதியோ, 'மோகினிக்குச் சத்தியமூர்த்தியிடம் ஏன் இவ்வளவு அக்கறை?' என்று புரியாப் புதிருக்கு விடை காண முடியாமல் மனம் குழம்பிக் கொண்டிருந்தாள். ஓர் ஆணின் மனத்தில் உணர்வுகள் தோன்றலாம். ஆனால் ஒரு பெண்ணின் மனத்திலோ உணர்வுகள் மிக மெல்லப் பூக்கின்றன. உள்ளேயே மணந்து மணந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளைப் பெண் தன்னுடைய பலமான நிதியாக்கிக் கொண்டு விடுகிறாள். மறுநாள் பொழுது புலர்ந்ததும் மோகினி அப்படி ஆகிவிட்டாள். மனத்தின் முழுமையான மகிழ்ச்சியை அரைகுறையாக வெளிப்படுத்துவதாக முறிந்து முறிந்து வெளிப்படும் தற்செயலான சங்கீதத்தைப் போல அவளுடைய இதழ்கள் ஏதேதோ பாடல் வரிகளைப் புதிது புதிதாக இசைத்தன. பாரதி அன்றையிலிருந்து கல்லூரிக்குப் போய்வரத் தொடங்கலாம் என்று புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்போது நீராடிய ஈரக் கூந்தலைக் கோதியவாறே மோகினி அவளிடம் தயங்கித் தயங்கி வந்து நின்றாள்.

"என்ன அக்கா! உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமா? இன்றிலிருந்து காலேஜுக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்..." என்றாள் பாரதி. மோகினி முதலில் சிறிது நாணித் தயங்கிவிட்டு அப்புறம் கூறலானாள்:

"உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டும் பாரதி! சத்தியமாக நீ அதைச் செய்வதாக ஒப்புக் கொண்டால்தான் எனக்கு உன் மேல் நம்பிக்கை உண்டாகும்."

"அதென்ன அக்கா, அத்தனை பெரிய காரியம்! உங்களுக்குக் காரியமும் ஆக வேண்டும்; அதே சமயத்தில் சத்தியமும் வேண்டுமாக்கும்? சரி!... உங்கள் விருப்பப்படியே சத்தியமாக நீங்கள் சொல்வதைச் செய்கிறேன்... சொல்லுங்கள்" என்று சிரித்துக் கொண்டே இணங்கினாள் பாரதி.

"நான் ஒன்று கொடுக்கிறேன். அதை நீ தயவு செய்து எனக்காக 'அவரிடம்' கொண்டு போய்க் கொடுத்து விட முடியுமா பாரதி?"

"அவரிடமென்றால் எவரிடம் அக்கா?"

"அவர்தான்! நேற்றுப் பேசிக் கொண்டிருந்தோமே, உங்கள் தமிழ் விரிவுரையாளர்..."

"யார்? சத்தியமூர்த்தி சாரிடமா?"

"ஆமாம் அவரிடம்தான்..."

இதைக் கூறும் போது மோகினியின் முகத்திலிருந்த நாணத்தையும், கனிவையும் கண்டு பாரதி திகைத்துப் போனாள். தன் உணர்ச்சிகளை எப்படி மறைத்துக் கொள்வதென்றே அவளுக்குப் புரியவில்லை. மோகினியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கவே தயக்கமாயிருந்தது பாரதிக்கு. சூறையாடப்பட்டது போன்ற மனநிலையில் எதிரே நிற்பவளுக்குப் பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் கீழே குனிந்த தலையுடன் கால் கட்டை விரலால் தரையைத் தேய்த்துக் கொண்டு நின்றாள் பாரதி. 'கோ' வென்று கதறி அழுதுவிடாமல் மிகவும் சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள் அவள். அவளுடைய நிலையையும் அவள் ஒன்றும் பதில் சொல்லாமல் தலைகுனிந்து விட்டதையும் பார்த்துத் தான் கூறிய காரியத்தை 'அவளால் செய்ய முடியாதோ என்னவோ' என்று தானாகவே அநுமானித்துக் கொண்டே மோகினி, "ஏன்? என்ன? உன்னால் முடியாதென்றால், வேண்டாம் பாரதி!" என்று பதற்றத்தோடு கூறினாள். சில விநாடிகள் வரை மோகினியை நிமிர்ந்து பார்க்கத் துணிவின்றித் தலைகுனிந்து நின்றிருந்த பாரதி பின்பு நிதானமாகவும், நிச்சயமான முகபாவத்துடனும் நிமிர்ந்து பார்த்தாள். "அதெல்லாம் ஒன்றும் இல்லை! என்னால் முடியும். நிச்சயமாக முடியும். ஆனால்..." என்று வார்த்தையை மெல்ல இழுத்து நிறுத்தித் தயங்கினாள்.

"ஆனால்... என்ன...?"

"கல்லூரியில் வைத்து அவரை நான் சந்தித்துப் பேச முடியுமென்று தோன்றவில்லை அக்கா! 'லேக் அவின்யூ'விலுள்ள அவருடைய அறையில் போய் அவர் கல்லூரிக்குப் புறப்படுவதற்கு முன்பே வேண்டுமானால் அவரைப் பார்த்துவிட முடியும்..."

"எங்கே பார்த்தாலும் பரவாயில்லை! உன்னை என் கூடப் பிறந்த தங்கையாகப் பாவித்துக் கொண்டு நம்பி இதைக் கொடுத்தனுப்புகிறேன் பாரதீ" என்று கூறிக் கொண்டே மோகினி கொடுத்த கடித உறையைக் கை நீட்டி வாங்கிய போது பாரதியின் கை நடுங்கியது. மனமோ கைகளை விட அதிகமாக உள்ளே நடுங்கிக் கொண்டிருந்தது. அதைத் தானே தன் கைகளால் நேரில் கொண்டு போய்ச் சத்தியமூர்த்தியிடம் கொடுக்கப் போகிற காட்சியைக் கற்பனை செய்த போது தலை சுற்றிக் கொண்டு கீழே தள்ளிவிடுவது போல் உலகமே சுழல்வதாகத் தோன்றியது அவளுக்கு. தன் உணர்ச்சிகள் மோகினிக்கு முன்பாகவே குமுறி வெளிப்பட்டு விடாமல் அவள் மிகவும் சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.

"மோகினி கொடுத்தனுப்பினாள் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிட்டு வா பாரதி! நீ கல்லூரி விட்டு திரும்பிய பின் சாயங்காலம் உனக்கு நானே எல்லாம் விவரமாகச் சொல்கிறேனம்மா!" என்று எதிரே நிற்பவளின் மனக்குமுறல் புரியாமல் நாணமும் சிரிப்பும் பொங்கிடப் பேதையாக ஏதோ சொல்லத் தொடங்கினாள் மோகினி. அதைக் கேட்ட பாரதியோ செயற்கையாக ஏற்படுத்திக் கொண்ட முக மலர்ச்சியோடு ஏதோ ஒப்புக்குச் சிரிக்க முயன்றாள். பாவம்!

அத்தியாயம் - 57

பார்க்கப் போனால் இன்னொருவருடைய துயரத்தை மறுபுறமாகக் கொள்ளாத அசல் மகிழ்ச்சியே இந்த உலகத்தில் இருக்க முடியாது போலும்.

தனக்குள்ளே பொங்கிக் கொண்டிருக்கிற துயரத்தையும் ஏமாற்றத்தையும் மோகினி தெரிந்து கொண்டு விட முடியாமல் மிகவும் சாமர்த்தியமாக நடித்துவிட்டாள் பாரதி. இன்னொருவருக்கு முன்னால் எதையும் நடித்து ஏமாற்றி விட முடிகிறது. ஆனால் அதே காரியத்தைத் தன்னுடைய மனச்சாட்சிக்கு முன்னால் தானே நடிக்கவும் முடிவதில்லை; ஏமாற்றவும் முடிவதில்லை. சில வேதனை நிறைந்த வேளைகளில் தன்னை ஏமாற்றிக் கொள்ளவும் முடிந்தால் கூட நன்றாயிருக்கும் போல் தோன்றியது பாரதிக்கு. தன்னுடைய மகிழ்ச்சியின் மறுபுறமே பாரதியின் மௌனத்துக்கும் கலக்கத்துக்கும் காரணம் என்பதை மோகினியாலும் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை.

பார்க்கப் போனால் இன்னொருவருடைய துயரத்தை மறுபுறமாகக் கொள்ளாத அசல் மகிழ்ச்சியே இந்த உலகத்தில் இருக்க முடியாது போலும். கல்லூரி நிர்வாகியும் முதல்வரும் சத்தியமூர்த்திக்கு எதிராகச் செய்த சூழ்ச்சிகளும், கெடுதல்களும் தோற்று, நியாயமும் வெற்றியும் அவர் பக்கமே கிடைத்துவிட்ட முதல் தினத்தைக் கொண்டாடி மகிழும் எண்ணத்துடன் தான் பாரதி அன்றிலிருந்து கல்லூரி வகுப்புகளுக்குப் போகத் தொடங்குவதென்று தீர்மானித்திருந்தாள். அந்தத் தீர்மானத்தில் என்னவோ இப்போது கூட மாறுதல் இல்லை. ஆனால் அந்தத் தீர்மானத்துக்குக் காரணமாயிருந்த உற்சாகம் மட்டும் தளர்ந்து நலிந்து குன்றிப் போயிருந்தது. தான் கொடுத்தனுப்பிய கடிதத்தை அவள் கொண்டு போகிறாள் என்ற மகிழ்ச்சிப் பெருக்கோடு மோகினி வந்து முன்புறம் வழியனுப்புகிற பாவனையில் உடன் நிற்க, மனத்தின் துயரத்தை மறைத்துக் காட்டும் பொய்ச் சிரிப்போடு காரில் ஏறி அமர்ந்தாள் பாரதி. 'தந்தையைப் பறிகொடுத்துத் துயரம் ஆறி ஒரு வழியாகச் சின்னம்மா இன்றிலிருந்து காலேஜுக்குப் போக ஆரம்பிச்சிருக்காங்க' என்ற உற்சாகத்தோடு காரை ஸ்டார்ட் செய்த முத்தையா, கார் காம்பவுண்டைக் கடந்து சிறிது தொலைவு சென்றதும் பின் ஸீட்டிலிருந்து மெல்ல விசும்பி அழுகிற ஒலியைக் கேட்டுத் திகைத்தான்.

"என்னம்மா இது? அசட்டுப் பொண்ணு போல... எதுக்காவ இப்படி அழுவுரே? அப்பா நெனப்பு வந்திரிச்சுப் போலேருக்கு... நீ ஒண்ணும் சின்னஞ் சிறிசோ பச்சைப் பசலையோ இல்ல. எத்தினி அழுதாலும் அந்தப் புண்ணியப் பெறவி - மகராசன் இனிமே வரப்போறாரா? விவரந் தெரிஞ்ச பொண்ணு நீயாத்தான் உன் மனசைத் தேற்றிக்கணும். இன்னிக்கு மனசு சரியா இல்லேன்னா காலேஜுக்குப் போகாட்டிப் போவுது... நாளைக்குப் போயிக்கலாம்மா! என்ன சொல்றே? வண்டியை வீட்டுக்குத் திருப்பட்டுமா?" என்று 'அவளுடைய துயரத்துக்குத் தந்தையின் ஞாபகம் தான் காரணமோ?' எனத் தானாகவே தனக்குள் கற்பித்துக் கொண்டு ஆறுதல் கூறத் தொடங்கியிருந்தார் டிரைவர் முத்தையா. "இல்லே முத்தையா! காலேஜுக்கு அப்புறம் போகலாம். முதலில் லேக் அவின்யூவுக்கு போ" என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அவனுக்கு மறுமொழி கூறினாள் பாரதி. அப்போது அவள் கையிலிருந்த கல்லூரிப் பாடப் புத்தகங்களுக்கிடையே மோகினி சத்தியமூர்த்தியிடம் அளிப்பதற்காகக் கொடுத்தனுப்பியிருந்த கடித உறை இருந்தது. அவள் மேல் தனக்கிருக்கும் அதிக நம்பிக்கையை நினைவூட்டுவதற்காகவோ அல்லது உறைக்குள் இருக்கிற கடிதத்தில் எந்த இரகசியமும் இல்லை என்று கருதியதாலோ உறையை ஒட்டாமலே திறந்து வைத்திருந்தாள் மோகினி. செய்த சத்தியத்தையும் ஒப்புக் கொண்டு வாக்குக் கொடுத்து விட்டதையும் காப்பாற்றுவதற்காகப் பாரதி அந்தக் கடிதத்தைச் சத்தியமூர்த்தியிடம் கொண்டு போய்ச் சேர்த்தேயாக வேண்டும். தான் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமானால் அதைச் சத்தியமூர்த்தியிடம் கொடுப்பதற்கு முன் தானும் ஒருமுறை படித்துவிட வேண்டுமென்று இந்த விநாடியில் தன் மனத்தின் அடி மூலையில் எழுகிற திருட்டு ஆசையைத் தான் விட்டு விடுவதே நல்லதென்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் மிகப் பல சமயங்களில் மனிதர்களால் நினைப்பளவிலும் சொல்லளவிலும் தான் நியாயத்துக்கும் சத்தியத்துக்கும் அதிக பட்சமாக மரியாதை செய்ய முடிகிறது. 'நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்' என்று நினைக்க முடிந்த வரை பெரும்பாலான மனிதர்கள் நல்லவர்கள் தான். இந்த நினைப்பின் எல்லைவரை எல்லாருக்கும் வெற்றிதான். ஆனால் இந்த நினைப்பளவைக் கடந்து 'செயலளவு' என்ற இடம் வரும்போதுதான் சத்தியசோதனை மெய்யாகவே ஆரம்பமாகிறது. கல்வித் திறனும், நெஞ்சுரமும் உள்ள மனமுதிர்ச்சியாளர்கள் பலரே இந்தச் சோதனையில் தோற்றுவிடும்போது பாரதியைப் போல் ஓர் அபலைப் பெண் மட்டும் எப்படி வென்றுவிட முடியும்? நீண்ட நேரத் தயக்கத்துக்குப் பின் அந்தக் கடிதத்தைத் தானும் படித்து விட வேண்டுமென்ற ஆவல்தான் அவள் மனத்தில் வென்றது.

நடுங்கும் கைகளால் மோகினியின் அந்தக் கடிதத்தை உறையிலிருந்து எடுத்துப் படிக்கத் தொடங்கினாள் அவள். கார் அதிக வேகமில்லாமல் 'லேக் அவின்யூவை' நோக்கி மெல்லப் போய்க் கொண்டிருந்தது. அந்தக் கடிதத்தைப் படித்து முடித்து விட்டு மீண்டும் உறைக்குள் வைத்த போது 'தான் தவறு செய்து விட்டோம்' என்ற உணர்வு அவளுள் எழுந்தது. படிக்கத் தொடங்குவதற்கு முன்பும் அதே உணர்வுதான் இருந்தது. படித்த போது மட்டும் ஆவல் பெருகி அவளுடைய கண்களுக்கு முன் நியாயத்தைச் சிறியதாக மறைத்து விட்டது. தவறு செய்வதன் இலக்கணமே அப்படித்தான். செய்யத் தொடங்கும் முன்பிருந்த விழிப்பும் எச்சரிக்கையும் அநேகமாகப் பயன்படுவதில்லை. செய்து முடித்த பிறகு வருகிற விழிப்பினாலும் எச்சரிக்கையினாலுமோ எந்த விதத்தினாலும் பயனே இல்லை. மோகினி சத்தியமூர்த்திக்கு மிக உருக்கமாகவும் அந்தரங்கமாகவும் காதல் கனியக் கனிய எழுதியிருந்த அந்தக் கடிதத்தைப் பாரதி படித்திருக்கக் கூடாதுதான்! ஆனால், 'தான் அதைப் படித்திருக்கக் கூடாது' என்ற உணர்ச்சியே அதைப் படித்த பின்பு தான் அவளுக்கு ஏற்பட்டது. படித்ததன் விளைவோ - அவளுக்கு முன்னைக் காட்டிலும் அதிகமாக அழுகை குமுறிக் கொண்டு வந்தது. திடீரென்று இருந்தாற் போலிருந்து தான் யாரும் விரும்பக் கூடாத குரூபியாகி விட்டாற் போலவும், தன்னிடமிருந்த சிறிய அழகும் இப்போது மோகினி ஒருத்தியிடமே போய்ச் சேர்ந்து அந்தப் பேரழகோடு சங்கமமாகி விட்டாற் போலவும் மோகினி எல்லாரும் விரும்பத்தக்க ஒரே பேரழகியாக ஒளிர்வதாகவும் ஒரு பிரமை கொண்டாள் பாரதி. மோகினிக்கும் - சத்தியமூர்த்திக்கும் இடையே தவிர்க்க முடியாத பிணைப்பும், அன்பும் இருப்பதாக இந்தக் கடிதம் பாரதிக்குச் சொல்லிவிட்டது. அதே சமயத்தில் இன்னொரு விஷயத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாமல் மனம் குழம்பினாள் பாரதி.

இந்த நாட்டியக்காரி மோகினியைத் தான் ஏற்கெனவே மணந்து கொண்டு விட்டது போன்ற ஒரு நெருக்கமான உரிமையைப் பெற்றிருப்பதாகவும், இனி அந்த உரிமையை அதிகார பூர்வமாக அடைவதற்காக அவளைப் பதிவுத் திருமணமே செய்து கொண்டு விடக் கருதியிருப்பதாகவும், ஜமீந்தார் மாமா தன் தந்தை பூபதி உயிரோடிருந்த போது அவரிடம் மதுரையில் வைத்துப் பேசிக் கொண்டிருந்ததை நினைத்து, மனம் குழம்பினாள் பாரதி. ஜமீந்தாரும் தன் தந்தையும் முன்பு இதைப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதிலிருந்து மோகினியை ஜமீந்தாரோடு தொடர்பு படுத்தியே நினைக்கத் தொடங்கியிருந்தாள் பாரதி. மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிட்ட பின்னே பாரதியின் இந்த நினைப்பு படிப்படியாக மாறியது. மல்லிகைப் பந்தலில் வந்து தங்கிய சில தினங்களுக்குள்ளேயே மோகினி ஜமீந்தாரையும் கண்ணாயிரத்தையும் அடியோடு வெறுப்பதையும் பாரதி புதிதாகப் புரிந்து கொண்டிருந்தாள். அந்த நாட்டியக் கலையரசியின் இதயம் எங்கே ஆட்பட்டிருக்கிறதென்பது இன்று இந்த விநாடியில் பாரதிக்குத் தெரிந்து விட்டது. ஆனால் மோகினியின் லாபம் தன்னுடைய நஷ்டமாயிருப்பதை உணர்ந்து வேதனைப்பட்டுத் தவிக்காமல் இப்போது அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. காரில் அவள் கண் கலங்கி அழுவதைப் பார்த்து - இறந்து போன தந்தையின் நினைவாக அழுகிறாள் என்று டிரைவர் முத்தையா எண்ணிக் கொண்டான். பாரதியோ 'லேக் அவென்யூ' வருவதற்குள் அழுகையோடு அழுகையாக ஆவலையும் அடக்கிக் கொள்ள முடியாமல் அந்தக் கடிதத்தை இரண்டு மூன்று முறை அவசர அவசரமாக எடுத்துப் படித்துவிட்டாள். ஒவ்வொரு முறை படித்து முடித்த போதும் அவளுக்குத் தவிர்க்க முடியாத அழுகை குமுறிக் கொண்டு வந்தது. கடிதமோ மனப்பாடமே ஆகிவிட்டது.

மல்லிகைப் பந்தல் பட்டுப்புடவைக் கடையில் என்னை ஜமீந்தாரோடு சேர்த்துப் பார்த்ததைத் தவறாக எண்ணிக் கொள்ளக் கூடாது. மறுக்க முடியாத காரணத்தால் மறுக்க முடியாத சூழ்நிலையில் அவரோடும் கண்ணாயிரத்தோடும் நான் கடைக்குப் புறப்படும்படி ஆகிவிட்டதென்று மோகினி கடிதத்தில் எழுதியிருந்தாள். இதைப் படித்த பின்பே பட்டுப் புடவைக் கடையிலிருந்து திரும்பும் போது மோகினி கண்கலங்கிய நிலையில் வருத்தத்தோடு வீட்டுக்குத் திரும்பியதன் காரணம் பாரதிக்குப் புரிந்தது. மேலும், அந்தக் கடிதத்தில் சத்தியமூர்த்திக்குக் கல்லூரியில் வந்த இடையூறுகள் தீர்ந்து நியாயம் கிடைத்ததைப் பாராட்டியும் அவருடைய தந்தை யாரென்று பாரதியின் மூலம் தான் புரிந்து கொள்ள நேர்ந்ததைப் பற்றியும் எழுதியிருந்தாள் மோகினி. இவற்றைத் தவிர முதன் முதலாக இரயிலிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது சத்தியமூர்த்தி தன்னைக் காப்பாற்றியதிலிருந்து சங்கீத விநாயகர் கோவில் தெருவில் தன் வீட்டுக்கு வந்து தன் இதயத்தை ஆண்டது வரை எல்லாம் கூறி, 'நான் வாழ்ந்து உங்களை நினைக்க வேண்டும்; அல்லது நீங்கள் வாழ்ந்து நினைக்க ஒரு ஞாபகமாகி நானே போய்விட வேண்டும்' என்று கடிதத்தை முடித்திருந்தாள் மோகினி. இவற்றையெல்லாம் கண்ணீருக்கிடையில் பாரதி படித்து முடித்த போது 'அவள் பாக்கியசாலி' என்று மோகினியின் மேல் பெருமையாகவும் இருந்தது; அதே சமயத்தில் அவள் பெற்றிருக்கும் பாக்கியம் எதுவோ அதுவே தான் இழந்து கொண்டிருக்கிற பாக்கியம் என்று அவள் மேல் பொறாமையாகவும் இருந்தது. காரை 'லேக் அவின்யூ'விலுள்ள ராயல் பேக்கரி ரொட்டிக்கடை வாசலில் நிறுத்தச் சொல்லிவிட்டுக் கீழிறங்கிய போது, பூமியில் மிதித்து நடப்பதற்கே சக்தியில்லாதவள் போல் சோர்ந்து போயிருந்தாள் பாரதி. மாடிப்படி ஏறிப் போய்ச் சத்தியமூர்த்தியை நேருக்கு நேர் சந்தித்துத் தானே தன் கையினால் அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுத்தாக வேண்டும் என்று நினைத்த போது அவளுடைய கால்கள் அந்தச் செயலைச் செய்வதற்காக முன் நோக்கி நடக்கத் துணியாமல் தயங்கின. மனம் மலைத்தது. நினைவுகள் கூசின. மோகினியிடம் சொல்லி ஒப்புக் கொண்டு விட்ட வார்த்தைகள் ஒன்றைக் காப்பாற்றிவிட வேண்டுமென்ற பிடிவாதத்தை விட முடியாமல் தன்னுடைய ஆசையைத் தானே பலியிடுவது போன்ற அந்தக் காரியத்தைச் செய்வதற்காக நடைப்பிணமாய் மாடிப்படி ஏறினாள் பாரதி. 'படிகளிலேயே சுருண்டு விழுந்து விடுவோமா' என்று பயப்படுமளவுக்கு அப்போது அவளுடைய கால்கள் ஒன்றோடொன்று பின்னின. அவளுடைய உடல் மேலே படியேறிக் கொண்டிருந்த அதே வேளையில் மனமும் உணர்ச்சிகளும் கீழே அதல பாதாளத்துக்குச் சரிந்து தலை குப்புறக் கவிழ்ந்து வீழ்ந்து கொண்டிருந்தன. அரிய முயற்சி செய்து அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.

முகத்தில் அழுத சுவடு தெரியாமல் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, துடைத்தெடுக்க முடியாத அழுகையின் சாயலோடும் கையில் கடித உறையோடும் அவள் சத்தியமூர்த்தியின் அறைக்குள் நுழைந்த போது, நல்லவேளையாக அறையில் அவன் மட்டுமே தனியாக இருந்தான். மேனியில் வெள்ளை வெளேரென்று மின்னலாய் வழியும் ஜிப்பாவும் வேஷ்டியும் அணிந்து பொன் மின்னலொன்று வெறும் மின்னலையுடுத்தி வீற்றிருந்தாற் போல் கல்லூரிக்குப் புறப்படத் தயாராகிவிட்ட கோலத்தில் ஏதோ வகுப்பு நடத்துவதற்கான பாடக் குறிப்புக்களைப் பார்த்தபடி வீற்றிருந்தான் சத்தியமூர்த்தி.

மெல்லத் தயங்கித் தயங்கி அறைக்குள் நுழைந்த பாரதி, அவன் தன்னை நிமிர்ந்து பார்த்ததும் என்ன செய்கிறோம் என்ற உணர்வே இன்றி ஆனால் ஏதோ செய்தாக வேண்டும் என்ற உணர்வுடன் மிகவும் தொலைவில் விலக்கி வைத்து வணங்கி மரியாதை செய்ய வேண்டிய பெரிய மனிதர் ஒருவரை எதிரே பார்த்து விட்டாற் போல் பயபக்தியோடு கைகூப்பினாள். திடீரென்று அவளை அங்கே எதிர்பாராமல் சந்தித்த பரபரப்பைச் சிறிதும் காண்பித்துக் கொள்ளாமல் "என்ன?... சௌக்கியமாயிருக்கிறீர்களா?" என்று நிதானமாகச் சிரித்தபடி சுகம் விசாரித்தான் சத்தியமூர்த்தி. அந்தச் சிரிப்பும் அந்த முகமும் அந்தக் கண்களும், மின்னலாய் எதிரே வீற்றிருக்கும் அந்தக் கம்பீரத் திரு உருவமும், தரையில் பூத்த செந்தாமரைகளாய் இலங்கும் அந்தக் கால்களும் இப்போது 'தான் ஆசைப்படக் கூடாதவனவாகி விட்டன' என்று நிராசையின் காரணமாகவே முன்னிலும் அதிக அழகோடும், அதிகச் சோபையோடும் தோன்றி அவளை மயக்கின. அந்த மயக்கத்தினால் தன் கண்கள் கலங்குவதையும் அடக்கிக் கொள்ள முடியாமல்... "இதை மோகினி அக்கா உங்களிடம் கொடுக்கச் சொன்னாங்க" என்று சொல்லுருவம் நலிந்து உடைபட்ட வார்த்தைகளால் கூறிவிட்டுக் கையிலிருந்த அந்தக் கடித உறையை அவன் கையில் நேரடியாகக் கொடுக்கவும் துணியாமல் அவனருகே இருந்த மேஜையின் மேல் விளிம்பில் பட்டும் படாமலும் வைப்பது போல் தயங்கியபடி வைத்தாள் பாரதி.

'மோகினி அக்கா' என்ற பெயரைக் கேட்டதும் சத்தியமூர்த்தியின் முகத்தில் சிரிப்பு மறைந்து இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத ஓர் உணர்வு தெரிவதை எதிரே நின்ற பாரதி கவனித்தாள். அவள் சிறிது நேரம் நிராசையோடு அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். ஆசைப்பட முடியாத எல்லையில் தான் அதிக ஆசை பெருகுகிறது என்பது அந்தக் கணத்தில் அவளைப் பொறுத்தவரை மெய்யாயிருந்தது. அவன் பார்வை நேர் எதிரே தன் மேல் இருந்திருந்தால் அவளுக்கு அவனை ஏறிட்டுப் பார்க்கும் துணிவே வ்ந்திருக்காது. அவன் குனிந்து கடிதத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற காரணத்தால் அவள் நன்றாக அவனைப் பார்க்க முடிந்தது. அவள் உணர்ச்சி வசப்பட்டாள். அழுகை குமுறிக் கொண்டு வந்தது. விசும்பல் ஒலியைக் கேட்டுத் தலைநிமிர்ந்த சத்தியமூர்த்தி, "நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?" என்று அவள் அழுவதன் காரணத்தைத் தானும் புரிந்து கொண்டே புரியாதது போல் கேட்ட போது பாரதி வேகமாகக் கீழே திரும்பிப் படியிறங்கினாள். "அடேடே... இதென்ன தர்ம சங்கடம்...?" என்று சொல்லிக் கொண்டே எழுந்திருந்த சத்தியமூர்த்தி அழுது கொண்டே விரைந்துவிட்ட அவளைப் பின் தொடரவும் முடியவில்லை. மேலேயிருந்து பலகணி வழியே கீழ்ப்புறம் சாலையைப் பார்த்த போது அவள் ஏறிக் கொண்ட பின் கார் புறப்படுவது மட்டும் தெரிந்தது. அந்தக் கடிதத்தைப் பாரதியிடம் அப்பாவித்தனமாகக் கொடுத்தனுப்பிய பேதை மோகினியின் மேல் தான் அவனுக்கு அப்போது கோபம் கோபமாக வந்தது. சிறிது நேரத்துக்குப் பின் கல்லூரிக்குப் புறப்பட்டான் அவன்.

அன்று கல்லூரியில் மாணவர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தார்கள். முதல் முதலாக அவன் நுழைந்த வகுப்பில் மாணவர்கள் அவனை மாலை சூட்டி வரவேற்றார்கள். மூன்றாவது பாடவேளையில் பாரதியின் வகுப்புக்குச் சென்ற போது தான் அவளும் அன்று கல்லூரிக்கு வந்திருப்பதை அவன் தெரிந்து கொள்ள நேர்ந்தது. தற்செயலாக அன்று நடத்த வேண்டிய பாடக் கட்டுரையாக வந்து வாய்த்தது, 'குறுந்தொகையில் இலக்கிய நயம்' என்ற தலைப்பில் இருந்தது. கட்டுரையின் நடுவே சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கல்லூரிக்கு இண்டர்வியூவுக்கு வந்திருந்த போது பூபதியிடம் விளக்கிக் கூறிய 'யாயும் ஞாயும் யாராகியரோ?' என்ற குறுந்தொகைப் பாடலும் இருந்தது. சத்தியமூர்த்தி அந்தப் பாடலின் பொருளையும் நயங்களையும் இன்றும் மாணவர்களுக்கு விளக்கத் தொடங்கினான். வகுப்பில் அதைக் கேட்கக் கேட்கப் பாரதியின் முகம் அழுவது போல் சிவந்து கண்கள் கலங்குவதைச் சத்தியமூர்த்தியும் கவனித்தான். வகுப்பின் நடுவே அவள் குமுறி அழுதுவிட்டால் நன்றாக இருக்காதென்று கருதிய சத்தியமூர்த்தியே மிகவும் சாதுரியமாக ஒரு காரியம் செய்தான். "மிஸ் பாரதீ! உங்கள் தந்தையை இழந்த பின் முதல் முதலாக இன்றுதான் கல்லூரிக்கு வந்திருக்கிறீர்கள். ஆனாலும் உங்கள் மனம் இன்னும் முழுமையாக ஆறுதல் அடையவில்லை என்று தெரிகிறது. தயவு செய்து இன்றும் வீட்டிற்குப் போய் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்! உங்களைப் பார்த்தால் மிகவும் வருந்தத்தக்க நிலையில் இருக்கிறீர்கள்..." என்று சொல்லி அவளுக்கு வகுப்பிலிருந்து வெளியே செல்லத் தானாகவே அனுமதி கொடுத்துவிட்டான். அவளும் தலை குனிந்தபடியே எழுந்து மௌனமாக வெளியே சென்று விட்டாள். அவள் எதற்காக மனம் உடைந்து போயிருக்கிறாள் என்று சத்தியமூர்த்திக்குத் தெளிவாகப் புரிந்திருந்தும் அந்தப் பேதைக்கு முன்னால் அவனே ஒன்றும் தெரியாதது போல் அப்போது நடிக்கத்தான் வேண்டியிருந்தது. அவள் வெளியேறிச் சென்ற பின்பு வகுப்பு அமைதியாக நடைபெற்று முடிந்தது. வெளியேறிச் சென்ற பாரதியோ கார் நிற்கும் இடத்துக்குப் போய் நேரே வீட்டுக்கு விடச் சொல்லி புறப்பட்டு விட்டாள். மாலையில் திரும்பவும் அவள் கல்லூரிக்கு வரவேயில்லை.

சாயங்காலம் கல்லூரி விட்டதும் தான் பாரதி திரும்பி வருவாள் என்று நினைத்து 'அவள் திரும்ப வரும் வேளை இந்த விநாடியே உடனே வரக்கூடாதா' என்னும் தவிப்போடு வீட்டில் காத்திருந்த மோகினி நண்பகலிலேயே அவள் திரும்பி வருவதையும் அவளுடைய கண்கள் அழுது அழுது சிவந்திருப்பதையும் பார்த்துத் திகைத்துப் போனாள். போர்டிகோவில் காரிலிருந்து இறங்கி உள்ளே நடந்து வந்த பாரதி தன் கையில் அடுக்கிக் கொண்டிருந்த புத்தகங்களில் இரண்டொன்று வருகிற வழியில் வரிசையாக நழுவிக் கீழே தரையில் விழுவதைப் பார்த்து மோகினிக்கு ஒன்றுமே புரியவில்லை. கையிலிருந்து நழுவி விழுகிற புத்தகங்களைப் போல அவளுடைய மனதிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிற உணர்வுகளை மோகினியால் புரிந்து காரணம் என்னவென்பதை ஒருவேளை அவளால் உணர்ந்து கொண்டிருக்க முடியுமோ என்னவோ?

"ஏன் நீ காலேஜுக்குப் போகவில்லையா? பாதியிலேயே வந்து விட்டாயா?... உடம்புக்கென்ன? பார்ப்பதற்கு என்னவோ போலிருக்கிறாயே?" என்று விசாரித்த மோகினிக்குப் பதில் சொல்ல முடியாமல் அவளருகே வந்து தயங்கி நின்றாள் பாரதி. இரண்டாம் முறையாகவும் இதே கேள்விகளை மோகினி பாரதியிடம் கேட்ட போது, "அவரை அறையிலேயே போய்ப் பார்த்து அந்தக் கடிதத்தைக் கொடுத்தாச்சு அக்கா!... எனக்கு ஒரே தலைவலியா இருக்கு... ஜுரமும் இலேசாக வந்திருக்கிறாற் போலத் தோன்றுகிறது..." என்று அவள் தன்னைக் கேட்காத கேள்விக்கும் கேட்ட கேள்விக்கும் சேர்த்தே மறுமொழி கூறினாள் பாரதி.

"கடிதத்தைப் பற்றி இப்போ என்ன வந்ததம்மா? நீ இன்றைக்குக் காலேஜுக்குப் போகாமலிருந்தாலும் பரவாயில்லையோ?... போய் இப்படி உடம்புக்கு இழுத்துவிட்டுக் கொண்டு வந்திருக்கிறாயே..." என்று ஆறுதலாகக் கூறியபடி பாரதியைத் தழுவினாற் போல் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று படுக்கையில் படுக்க வைத்தாள் மோகினி.

"உடம்புக்குச் சரியில்லை என்றால் பச்சைக் குழந்தை மாதிரி இப்படியா அழுவாய் பெண்ணே?" என்று மோகினி சிரித்துக் கொண்டே வினவிய போது, பாரதி பதிலுக்குச் சிரிக்க முயன்று முடியாமல் ஏதோ நடித்தாள். மாலை வரை பாரதியிடம் ஒன்றும் பேச்சுக் கொடுக்காமல் அவளை நிம்மதியாய்த் தூங்குமப்டி கூறித் தனியே விட்டு விட்டுப் போயிருந்த மோகினி மாலையில் திரும்பி வந்து அவள் படுத்திருந்த அறையில் பார்த்த போது அவள் தூங்கவே இல்லை என்று தெரிந்தது. "அசடு! எதற்காக அழுகிறாய் இப்படி? காலேஜுக்குப் போன உடனே உனக்கு அப்பாவின் நினைவு வந்துவிட்டதா? பாவம்.." என்று கேட்டுக் கொண்டே டெம்பரேச்சர் பார்த்த மோகினி பாரதிக்கு நிஜமாகவே ஜுரம் வந்திருப்பதைப் புரிந்து கொண்டு பரபரப்படைந்து பதறினாள்.

அத்தியாயம் - 58

பலரிடம் வாழ்க்கையின் அந்தரங்கங்களைச் சொல்ல முடியாததைப் போல் சிலரிடமாவது அவற்றைச் சொல்லாமலிருக்கவும் முடியாது.

பாரதியின் ஜுரம், ஜன்னி கண்டு பிதற்றுகிற எல்லைவரை வளர்வதும், குறைவதுமாக பத்துப் பதினைந்து நாட்கள் அவளை வாட்டி எடுத்துவிட்டது. தாய் தன் அருமை மகளைக் கவனிப்பது போலவும், அன்புத் தமக்கை தன் பிரியமுள்ள தங்கையைப் பேணி உபசரிப்பது போலவும், பாரதி உடல் நலமின்றிப் படுக்கையில் கிடந்த நாட்களில் இரவு பகலாகத் தூக்கம் விழித்து ஓடியாடி அவளுக்குப் பணிவிடை செய்தாள் மோகினி. சிறு வயதிலேயே தாயன்பை இழந்திருந்த பாரதி, மோகினியின் சில நாள் பணிவிடையிலேயே அதை உணர்ந்தாள். பார்க்கும் கண்களை அப்படியே இழுத்து நிறுத்தித் தன் மேல் நிலைக்க வைக்கும் மோகினியின் உடல் வனப்பும் அந்த வனப்பை உறுதிபடுத்திச் சாட்சி சொல்வது போல் அவளிடம் அமைந்திருந்த நாட்டியக்கலைத் திறனும் தான், இதுவரை பாரதிக்குத் தெரிந்திருந்தவை. இப்போதோ உடல் வனப்புக்கும், கலைத்திறனுக்கும் அப்பால் மோகினியின் மிக உயர்ந்த மனப்பண்பும் அவளுக்குத் தெரிந்து விட்டது. அந்த மனத்தில் கருணையும், பரிவும் நிறைந்துள்ளதை அவள் அநுபவப் பூர்வமாக புரிந்து கொண்டு விட்டாள். உடம்பின் வனப்பைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக மனத்தின் வனப்பை அவள் பெற்றிருக்கிறாள் என்பதை உணர்ந்த போது பாரதியால் அவள் மேல் எந்தக் காரணத்துக்காகவும் பொறாமைப்பட முடியவில்லை. சத்தியமூர்த்தியின் மனத்தை வென்று அவருக்கு ஆட்பட்டு, மோகினியால் அவருடைய அன்பைப் பெற முடிந்ததற்காகப் பெருமைப்பட்டு அந்தப் பெருமையோடு தன் ஆற்றாமையையும் நினைத்து உள்ளுருக முடிந்ததே தவிரப் பாரதியால் அவள் மேல் குரோதமடைய இயலவில்லை.

மோகினியிடம் அமைந்திருந்த இணையிலாப் பேரெழிலும் கலைத்திறனும் பாரதிக்கு அவள் மேல் குன்றாத பயபக்தியை உண்டாக்கியிருந்தாலும் அவளிடம் சூது வாதும், கள்ளங் கபடும் மிகுந்த உலகியல் அறிவும் சிறிதும் இல்லாததால் அவள் இன்னும் ஒரு பேதையாகவே இருக்கிறாள் என்பதைப் பாரதி புரிந்து கொண்டிருந்தாள். பாரதி உடல் நலமின்றிப் படுக்கையில் கிடந்த பத்துப் பதினைந்து நாட்களில் தேவையான போது டாக்டருக்குப் ஃபோன் செய்து வரவழைப்பது தவிர மற்ற நேரங்களில் அன்பும், பரிவும், பாசமும் மிகுந்த ஒரு நர்ஸ் போலவே மோகினி உடனிருந்து கவனித்ததன் காரணமாக அவளும் பாரதியும் மனம் விட்டுப் பழக நேர்ந்தது. அப்படிப் பழக நேர்ந்த வேளைகளிலும் கூட மோகினி தன்னை ஒரு பேதையாகவே அவளிடம் நிரூபித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அதே சமயத்தில் பாரதியோ உலகியல் அறிவோடு ஒட்டிய சூதுவாதும், கள்ளங்கபடும் நிறைந்த புத்திசாலிப் பெண்ணாகத் தன்னையும் தன் உணர்வுகளையும் மறைத்துக் கொண்டு மோகினியிடம் பழகியிருக்கிறாள். மோகினிக்காகச் சத்தியமூர்த்தியிடம் கடிதம் கொண்டு போய்க் கொடுக்க நேர்ந்தது, அதனால் மனநலமும் உடல்நலமும் குன்றிப் போய்ப் பாரதி கல்லூரியிலிருந்து பகலிலேயே வீடு திரும்ப நேர்ந்த தினத்தன்று இரவில் அவளும் மோகினியும் தங்களுக்குள் சத்தியமூர்த்தியைப் பற்றிப் பேசிக் கொள்வதற்கு வாய்த்தது. பாரதி உடல் நலங்குன்றிச் சோர்வோடு வீடு திரும்பியிருந்ததனால் திரும்பிய உடனேயே "அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுத்தாயா பாரதி? படித்துப் பார்த்த பின்பு அவருடைய முகத்தில் மலர்ச்சியிருந்ததா? அல்லது கோபம் தெரிந்ததா? என்னிடம் தெரிவிக்கச் சொல்லி அவர் ஏதாவது பதில் கூறி அனுப்பினாரா, இல்லையா?" என்றெல்லாம் அவளிடம் கேட்க நினைத்திருந்தும், மோகினியால் அப்போதிருந்த நிலைமையில் ஒன்றுமே கேட்க முடியவில்லை. தளர்ந்து போய்ப் பாதிக் கல்லூரியிலேயே வீடு திரும்பி விட்ட பெண்ணிடம் தான் கொடுத்தனுப்பிய கடிதத்தையும் அதைப் படித்ததும் அவர் என்ன கூறினார் என்பதையுமே உடனடியாக ஆவலோடு விசாரித்துக் கொண்டு நிற்பது நன்றாயிராது என்று எண்ணியே மோகினி தன் ஆசையை அடக்கிக் கொண்டாள். 'அவரை அறையிலேயே போய்ப் பார்த்து அந்தக் கடிதத்தைக் கொடுத்தாச்சு அக்கா?' பாரதியே கல்லூரியிலிருந்து திரும்பி வந்ததும் வராததுமாகத் தானாகவே கூறத் தொடங்கிய போது கூட, 'கடிதத்தைப் பற்றி இப்போது என்ன வந்ததம்மா?' என்று மோகினி அதைத் தெரிந்து கொள்வதில் மட்டுமே அப்போது தனக்கு அக்கறையில்லை என்பது போல் நடித்து மறுக்க வேண்டியிருந்தது. அதே தினம் மாலையில் பாரதிக்குக் கடுமையான ஜுரம் வந்து விட்டதனால் மோகினி டாக்டரை உடனே அழைத்து வரச் சொல்லி டிரைவர் முத்தையாவை அனுப்பினாள். டாக்டர் வந்தார். பார்த்தார். ஓர் இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு மேலும் ஏதேதோ மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.

அதன் பின்பு இரவு எட்டு மணிக்குக் கண்ணாயிரம் வந்து சமையற்காரர் எங்கோ வெளியில் போய் இருப்பதாகவும் ஜமீந்தாருக்கு 'குளுக்கோஸ்' கரைத்துக் கொடுக்க வேண்டுமென்றும் மோகினியிடம் அவள் இதற்குச் சம்மதிக்காமல் போய்விடுவாளோ என்று பயத்தோடு பயமாகத் தயங்கியபடி வேண்டினார். "ஏன் நீங்களே கரைத்துக் கொடுக்கலாமே?" என்று மோகினி வேண்டா வெறுப்பாகக் கண்ணாயிரத்தைக் கேட்ட போது, "நானே கரைச்சுக் கொடுக்கத் தெரியாமே உன்னைக் கூப்பிடறதுக்கு இங்கே வந்து நிற்கலே... நான் கொடுக்கிறேன் அல்லது பக்கத்தில் நாய் மாதிரி நிற்கிறானே அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவன், அவனைக் கரைச்சுக் கொடுக்கச் சொல்றேன். வேறு யாரும் ஆளில்லாமல் உங்கிட்ட வந்து கெஞ்சலை. ஜமீந்தார் உடம்புக்குச் சுகமில்லாமல் படுத்தப்புறம் நீ அவர் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. அவரிடம் ஆறுதலா ரெண்டு வார்த்தை விசாரிக்கக் கூட இல்லை... அவர் உன் மேலே ரொம்பக் கோபமாயிருக்காரு. அதனாலே தான் சொன்னேன். உன் கையாலே நீயே குளுகோஸ் கரைச்சு எடுத்துக்க்கிட்டுப் போனியானா அவருடைய கோபம் தணியும்..." என்று கண்ணாயிரம் பதில் கூறினார். தான் ஜமீந்தாருக்குக் குளுகோஸ் கரைத்துக் கொடுக்க மறுத்தால் அந்த வேலையைத் தன் உயிர் அன்பராகிய சத்தியமூர்த்தியின் தந்தையிடம் சுமத்தித் தான் மறுத்த கோபமும் உடன் சேர அந்த அப்பாவிக் கிழவரை அவர்கள் விரட்டுவிரட்டென்று விரட்டப் போகிறார்களே என்ற எண்ணத்தினால் மறுபேச்சுப் பேசாமல் ஜமீந்தாருடைய அறையில் போய் அவருக்குக் குளுக்கோஸ் கரைத்துக் கொடுத்தாள் மோகினி.

"மோகினி! ஒரு நிமிஷம் நில்லு! உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... உன்னைப் பார்த்தாலேயே எனக்கு உடம்பு தேறிடும் போலேயிருக்கு" என்று பல்லிளிக்கத் தொடங்கிய ஜமீந்தாரிடம், "பாரதி காலேஜுக்குப் போயி உடம்புக்கு இழுத்து விட்டுவிட்டு வந்திருக்கா... நான் அவளை கவனிக்கணும்" என்று கூறிக் கடுமையாக மறுத்துவிட்டுத் திரும்பினாள் மோகினி. கண்ணாயிரம் சிறிது நேரத்தில் எங்கோ வெளியே புறப்பட்டுப் போய்விட்டார். ஜமீந்தாருக்கு இரவில் சாப்பாடு இல்லை. ஓட்ஸ் கஞ்சி போட்டு அவருடைய அறையில் கொண்டுபோய்க் கொடுத்தாயிற்று. சமையற்காரர் இல்லாததனால் தானாகவே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடவும் முடியாமல், யாரிடமும் கேட்கவும் கூசிக் கொண்டு அந்த இரவில் சத்தியமூர்த்தியின் தந்தை தவிப்பதை மோகினி குறிப்பாகப் புரிந்து கொண்டாள். மோகினி தன் மனத்தினுள்ளே அரும்பியிருக்கும் ஓர் அந்தரங்கமான பற்றுதலுடன் தானே இலையை எடுத்துப் போட்டுப் பரிமாறிவிட்டு அந்தக் கிழவரைச் சாப்பிட உட்காருமாறு அழைத்த போது, அவர் கூச்சமும் பயமுமாகத் தயங்கினார்.

"உங்களுக்கு எதுக்கம்மா இந்தச் சிரமம்? நீங்க ஜமீந்தார் ஐயாவைக் கவனியுங்க... யாராவது வேலைக்காரங்க வந்தப்புறம் நான் ஒரு வாய் கேட்டு சாப்பிட்டுகிட்டாப் போகுது" என்று பதறினார் அவர். 'என் அன்பரின் தந்தைக்கு நானே இலை போட்டுப் பரிமாறப் போகிறேன்' என்ற பெருமிதத்தோடு அவரை வற்புறுத்தி இலையில் உட்காரச் செய்து மேலும் தொடர்ந்து பரிமாறினாள் மோகினி. 'ஜமீந்தார் வலிந்து கூப்பிட்டனுப்பினாலும் அவர் உடல் நலமின்றிப் படுத்த படுக்கையாயிருக்கும் அறைக்குள் எட்டிப் பார்க்கக் கூட மறுத்து வெறுப்பும் அலட்சியமும் காட்டுகிற இந்தப் பெண் இன்று இருந்தாற் போலிருந்து திடீரென்று - நம்மை மட்டும் வற்புறுத்தி அழைத்து இலைபோட்டுப் பிரியத்தோடு பரிமாறுகிற காரணம் என்ன?' என்று புரியாமல் பயம் கலந்த மகிழ்ச்சியோடு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அந்தக் கிழவர். அவருக்குப் பரிமாறி முடித்ததும் 'தானும் ஏதோ சாப்பிட்டோம்' என்று பேர் செய்தபின் பாரதிக்காக கஞ்சியை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குள் போனாள் மோகினி. கஞ்சியை ஆற்றிக் கொண்டே பாரதியிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தாள் அவள்.

"கடிதத்தை அவர் படித்துப் பார்த்தாரா பாரதி!"

"அவர் உங்கள் கடிதத்தைப் படித்துப் பார்க்கத் தொடங்குகிற வரை நானும் அவரோடு கூட இருந்தேன் அக்கா! அப்புறம் எனக்குக் காலேஜுக்கு நேரமாகி விட்டதால் - கடைசிவரைக் காத்திருந்து அவர் என்ன பதில் சொல்லுகிறாரென்று கேட்டுக் கொண்டு வர முடியவில்லை" என்று தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு மறுமொழி கூறினாள் பாரதி. அவள் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு நடித்த அதே வேளையில் மோகினி தன் அந்தரங்கமான உணர்ச்சிகளையெல்லாம் ஒன்று விடாமல் அவளிடம் கொட்டத் தொடங்கினாள். பாரதி அவற்றையெல்லாம் ஏற்கெனவே மோகினி தன்னிடம் சத்தியமூர்த்திக்காகக் கொடுத்தனுப்பிய கடிதத்தில் படித்துப் புரிந்து கொண்டிருந்தாலும் இப்போதுதான் புதிதாகக் கேட்டுத் தெரிந்து கொள்கிறவளைப் போல் மிகவும் ஆர்வத்தோடு கேட்கத் தொடங்கினாள். மனித மனத்தின் பலவீனமான வேளைகளில் இப்படிப்பட்ட வேளையும் ஒன்றாகும். பலரிடம் வாழ்க்கையின் அந்தரங்கங்களைச் சொல்ல முடியாததைப் போல் சிலரிடமாவது அவற்றைச் சொல்லாமலிருக்கவும் முடியாது. பாரதியை மனப்பூர்வமாக நம்பி அவளிடம் தன் வாழ்க்கையின் அந்தரங்கங்களையெல்லாம் சொல்லிவிட வேண்டும் என்று அந்த விநாடியில் தன்னுள் பொங்கியெழும் உணர்ச்சி வேகத்தைத் தடுத்துக் கொள்ள முடியாமல் எல்லாவற்றையும் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் மோகினி. மோகினி கூறுவதைக் கேட்கக் கேட்கப் பாரதிக்குக் கண்கள் கலங்கின. பாவம்! பேதை மோகினி அப்போது தான் சொல்லிக் கொண்டிருந்த சோகமயமான சுயசரிதத்தையும், தான் சத்தியமூர்த்திக்கு ஆட்பட்டதையும் கேட்டு இளகிய சுபாவமுள்ளவளாகிய பாரதி சும்மா கண்கலங்கி அழுகிறாள் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டாள். ஆனால் அவளுடைய கலக்கத்தில் சொந்தக் காதலில் ஏமாறிய ஏமாற்றமும் தோல்வியும் இருப்பதைப் பேதையான மோகினியால் ஒரு சிறிதும் புரிந்து கொள்ள முடியவில்லை.

"என் கதை இதுதான் பாரதி! நான் இந்த ஊருக்கு வந்த புதிதில் நீ கூட ஒருநாள் என்னைப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ பேசினாய்! 'ஜமீந்தார் உங்களுக்குக் கூட இதெல்லாம் சொல்வதில்லையா அக்கா?' என்று ஜமீந்தாரும் நானும் ரொம்ப நெருக்கமாக இருக்கிறாற் போல நீயாக நினைத்துக் கொண்டு கூறிய போது நான் திகைத்தேன். ஏதோ எங்கள் குடும்பம், என்றோ ஜமீன் உப்பைத் தின்று வளர்ந்திருக்கிறது என்ற நன்றியினாலும் இந்தக் கொடிய ஜமீந்தாரிடமுள்ள பயத்தினாலும் நான் சில சமயங்களில் இவர்களுக்கு அஞ்சிக் கட்டுப்படுகிறேன். என் மனம் வேறு எங்கே இருக்கிறதென்று இப்போதாவது நீ தெரிந்து கொண்டிருப்பாய் பாரதீ!" என்று மோகினி உருக்கமாகக் கூறி முடித்தாள். அவள் இவற்றையெல்லாம் கூறி முடித்த பின் சிறிது நேரம் பாரதிக்கும் அவளுக்குமிடையே பேச்சில்லாததோர் மௌனம் நிலவியது; இருவருக்குள்ளேயுமோ மௌனமில்லாத ஊமைப் பேச்சுக்கள் ஆயிரமாயிரமாகக் குமுறிக் கொண்டிருந்தன. இருவருக்குமிடையே வெளிப்படையாக நிலவிய மௌனம் இருவருள்ளேயும் குமுறும் மனத்தில் பேச்சுக்களை ஒரு விதத்தில் அள்விட்டுக் காட்டுவதாக இருந்தது. அந்த மௌனத்தைக் கலைத்து விட்டுப் பாரதிதான் முதலில் பேசத் தொடங்கினாள்.

"அக்கா! நீங்கள் பாக்கியசாலி..." என்று இருந்தார் போலிருந்து அழுகை தயங்கும் குரலில் மோகினியிடம் கூறினாள் பாரதி. கூறிவிட்டு அசையாமல் மோகினியின் முகத்தையும் அப்போது கூர்ந்து கவனித்தாள் அவள்.

"ஏன் அப்படிச் சொல்கிறாய்? என்னிடம் இன்று திடீரென்று என்ன பாக்கியத்தைக் கண்டுவிட்டாய் பாரதீ?"

"தகுந்த காரணத்தோடுதான் சொல்கிறேன் அக்கா! நீங்கள் நிச்சயமாகப் பெரிய பாக்கியசாலி! பாக்கியசாலிகளால்தான் காதலில் ஜெயிக்க முடிகிறது. துர்பாக்கியசாலிகள் அநேகமாக எப்படியாவது தோற்றுப் போய்விடுகிறார்கள்..."

"இருக்கலாம்! ஆனால் என்னுடைய பாக்கியமோ அல்லது துர்ப்பாக்கியமோ இன்னும் தீர்மானமாக முடிவாகவில்லையே அம்மா? என்னுடைய சகல சௌபாக்கியங்களும் அவர் ஒருவர்தான்! அவரோ என்னிடமிருந்து வெகு தொலைவில் விலகியிருக்கிறார். அவருக்குக் கெடுதல் செய்து அவரை இந்தக் கல்லூரியிலிருந்து வெளியேற்றித் துரத்தி அனுப்பிவிட வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்கள் யாரோ அவர்களுக்கே இந்தக் கையால் குளுக்கோஸ் கரைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் நான்! என்னுடைய இந்தப் பாவத்துக்கு விடிவு ஏது? அவருடைய பாதங்களை இந்தக் கண்களால் அருகில் நின்று ஒரு முறை பார்க்கவும் முடியாத கொடும்பாவியாகி விட்டேனே நான்?"

"கவலைப்படாதீர்கள் அக்கா! உங்களுடைய சௌபாக்கியத்தை உங்களுக்கு மிக அருகில் வரவழைக்கிறேன் நான். நீங்களே அவரைத் தேடிக்கொண்டு பார்க்கப் போனால் இந்த ஜமீந்தாரும் கண்ணாயிரமும் உங்களைக் கொன்று போட்டு விடுவார்கள். அதனால் என் தோழி மகேசுவரியிடம் நானே சொல்லியனுப்பிச் சத்தியமூர்த்தி சாரை இன்னும் இரண்டு மூன்று நாளில் இங்கு இந்த வீட்டுக்கு வரவழைக்கிறேன். தன் மாணவியாகிய என்னைப் பார்த்துவிட்டுப் போக வருவது போல் இங்கு வருவார் அவர். அப்போது நீங்கள் அவரைக் கண் குளிர உங்களுக்கு மிக அருகில் பார்க்கலாம். பேசலாம். உங்கள் கடிதத்தைப் பற்றியும் விசாரிக்கலாம்..."

"இந்தப் பாவிகள் இருக்கிற நரகத்துக்கு அவர் வருவாரா பாரதீ?"

"கட்டாயம் வருவார்! வரச்செய்வது என் பொறுப்பு அக்கா! கல்லூரியிலேயே மாணவ மாணவிகளிடம் அன்பும் கருணையும் நிறைந்த விரிவுரையாளர் அவர் ஒருவர் தான் அக்கா! அன்று தமிழ் வகுப்பில் நான் உடல் நலமில்லாமல் சோர்ந்து காணப்பட்ட போது கூட அவராகவே தான் பரிவோடு என்னைப் பார்த்து 'வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லி அனுப்பினார். அப்படிப்பட்டவர் நான் என் உடல் நிலையைச் சொல்லியனுப்பினால் ஒரு முறைக்கு விசாரித்துப் போவதற்காகவாவது நிச்சயம் வருவார்..."

பாரதி இப்படிக் கூறிக் கொண்டிருக்கும் போதே மோகினி மனக்கண்களில் சத்தியமூர்த்தி அங்கு வருவது போலவும் பாரதியின் அறையில் நுழைந்து தன் மாணவியாகிய அவளுடைய உடல் நலனை விசாரிப்பது போலவும் அப்போது தான் காப்பியோடு அந்த அறைக்குள் புகுந்து அவரை திகைக்க வைப்பது போலவும் உல்லாசமாகத் தனக்குத்தானே கற்பனை செய்யத் தொடங்கி விட்டாள்.

பாரதியின் குரல் குறுக்கிட்டு அந்த வேளையில் அவள் கற்பனையைத் தடை செய்திராவிட்டால் அவள் கனவுலகுக்கே போயிருப்பாள்.

"அக்கா! இந்தப் பாட்டை நீங்கள் படித்திருக்கிறீர்களா? எத்தனை சோகமாகப் பாடியிருக்கிறார் பாருங்கள்? காதலில் தோல்வியடைந்தவர்களின் நினைவைச் சித்தரிப்பதாக இந்தப் பாட்டை நவநீதக் கவி பாடியிருக்கிறார்! சத்தியமூர்த்தி சாருடைய தமிழ் வகுப்புச் சொற்பொழிவுகளுக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்தவை இந்தக் கவிஞரின் உணர்ச்சி மயமான பாடல்கள் தான்! இதோ இந்தப் பாட்டைக் கொஞ்சம் பாருங்களேன், சொல்கிறேன்" என்று பக்கத்து ஸ்டூலில் மருந்துப் பாட்டில்களோடும் அவுன்ஸ் கிளாஸோடும் நடுவே கிடந்த கவிதைத் தொகுதி ஒன்றை எடுத்து அடையாளமாக அதில் ஒரு பக்கத்தைப் பிரித்து மோகினியிடம் நீட்டினாள் பாரதி. மோகினிக்கு அந்தப் பாடலை வாய் விட்டுப் பாடினாள்.

முன்னும் பின்னும் நினைவாகி - அது
முடிவிற் பெரிய கனவாகி
நீயும் நானும் கதையாகி நம்
கதையும் உலகிற் செலவாகிக்
காலப் படுகை யதன்மேலே - முன்
கழிந்த நினைவுகள் கண்ணயர
அழிந்த நினைவுகள் கண்கலங்க
அங்கும் இங்கும் அலைபாயும்

இந்தப் பாடலை மோகினி தன்னுடைய இனிய குரலில் ஓரளவு நன்றாகவே பாடி முடித்தவுடன் தன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் பாரதிக்கு அழுகை குமுறி வெடித்துக் கொண்டு வந்து விட்டது.

"பாட்டு ரொம்பவும் உருக்கமாகத்தான் இருக்கிறது; அதற்காக நீ ஏன் இப்படி அழுகிறாய் பெண்ணே? சில பேருக்குச் சினிமாப் படத்தில் துன்பப்படுகிற காட்சிகளைப் பார்த்தால் கூட அழுகை வந்துவிடும். அதைப் போல நீயும் பச்சைக் குழந்தை மாதிரி இருக்கிறாயே அம்மா? பாட்டு நன்றாயிருக்கிறதென்றால் அதுக்குக் கூட இப்படி ஒரு அழுகையா?" என்று பாரதியின் உள்மனம் புரியாமல் மோகினி அவளைப் பேதையாக நினைத்துக் கொண்டு அந்தப் பேதைமையைப் புகழவும் தொடங்கிவிட்டாள். ஆனால் உண்மையில் மோகினிதான் அப்போது அசல் பேதையாக நடந்து கொண்டிருந்தாள். அதன் பின்பு ஒவ்வொரு நாளும் இப்படி இருவருக்குமிடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் மர்மமாக எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்தன. மோகினி தன் வாழ்க்கையில் பாரதிக்குச் சொல்ல இனி ஒன்றும் மீதமில்லை என்பது போல் ஒவ்வொரு நாளும் அவளிடம் மனம் விட்டுப் பழகி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். பாரதியும் கண்கலங்கி அழுவது போல் உணர்ச்சி வசப்பட்டு அவற்றைக் கேட்பது வழக்கமாயிருந்தது. பாரதி ஜுரமாகப் படுத்த பதின்மூன்றாவது நாளோ பதினான்காவது நாளோ, "அக்கா! இன்று மாலையில் கல்லூரி விட்டதும் சத்தியமூர்த்தி சார் என்னைப் பார்த்து விசாரிப்பதற்கு இங்கே வருவதாகச் சொல்லியிருக்கிறாராம். நேற்று இங்கே வந்திருந்த மகேசுவரி தங்கரத்தினத்திடம் நான் அவருக்குச் சொல்லியனுப்பினேன். அவர் இன்று இங்கே வர ஒப்புக் கொண்டிருப்பதாக அவள் சற்று முன்புதான் ஃபோனில் கூறினாள். நீங்கள் அவரைச் சந்திக்கத் தயாராயிருக்க வேண்டும்" என்று மகிழ்ச்சி மிக்கச் செய்தியைத் தெரிவித்தாள். இதைக் கேட்டு மோகினியின் மகிழ்ச்சியும் ஆவலும் எல்லையற்றுப் பெருகின. ஆர்வம் பொங்கும் மனத்தோடு மாலை வேளையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அவள். ஒரு நாளுமில்லாத திருநாளாக அன்று ஜமீந்தாருக்கு உடல்நிலை தேறி மாலையில் பங்களாவின் முன் வராந்தாவில் சாய்வு நாற்காலியை எடுத்துப் போடச் சொல்லிச் சாய்ந்து கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி அங்கு வரப் போவதாகப் பாரதி சொல்லியிருந்த நேரம் ஆகிவிடவே அவரைப் பார்க்கும் ஆவலை அடக்க முடியாமல் வாயிற்புறமாக அவர் அங்கு வருகிறாரா என்று பார்க்க வந்த மோகினியைத் தற்செயலாக அங்கு சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த ஜமீந்தார் பார்த்துவிட்டார்.

"மோகீ! உடம்பு இன்னிக்குக் கொஞ்சம் தேவலை! உன் கையாலே காப்பி கலந்து கொண்டாயேன்..." என்று ஜமீந்தார் அப்போது வேண்டிக் கொண்டதை மறுக்கவும் முடியாமல் விரும்பி அங்கீகரிக்கவும் முடியாமல் மனப்போராட்டத்தோடு உள்ளே சென்ற மோகினி 'கடனே' என்று வெறுப்போடு ட்ரேயில் காப்பியை எடுத்து வந்து சாய்வு நாற்காலியருகே சென்று ஜமீந்தாரிடம் கொடுக்கவும் அதை வாங்கிக் கொண்டு ஜமீந்தார் அவளைப் பார்த்து ஏதோ சொல்லிச் சிரிக்கவும் அதே வேளையில் நேர் எதிரே வாயிற்புறமிருந்து சத்தியமூர்த்தி உள்ளே நுழையவும் சரியாயிருந்தது. நிமிர்ந்து பார்த்த மோகினி எதிரே வந்து நின்ற சத்தியமூர்த்தி தான் ஜமீந்தாருக்கு உபசாரம் செய்து பணிவிடை புரிவதாக எண்ணிக் கொண்டு முகத்தைச் சுளித்து எரித்துவிடுவது போல் தன்னை நோக்குவதைக் கண்டு மனம் பதறி நடுங்கினாள். சத்தியமூர்த்தி உள்ளே நுழைந்து வருவதைப் பார்க்க இயலாத நிலையில் ஜமீந்தார் பக்கவாட்டில் நோக்கியபடி சாய்வு நாற்காலியில் சாய்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்தார். ஆனால் அந்த வேளையில் ஜமீந்தாரையும் அவளையும் அங்கே சேர்த்துப் பார்க்க முடிந்த சத்தியமூர்த்தி அவளை எப்படி எப்படியோ தவறாகப் புரிந்து கொள்ளும்படி சந்தர்ப்பம் சதி செய்துவிட்டது.

அத்தியாயம் - 59

ஒரு வேளை சந்தேகமும் பொறாமையும் இந்த உலகத்தில் இல்லாமலிருந்தால் முக்கால்வாசி மனிதர்கள் தேவர்களாயிருப்பார்களோ என்னவோ?

கண்ட காட்சியினால் மனத்தின் அமைதியும் நிதானமும் குலைந்து போய்ப் புயல் வேகத்தில் மின்னல் நுழைந்தாற் போல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த ஜமீந்தாரையும் அவருக்கு அருகிலே நின்ற மோகினியையும் கடந்து வீட்டிற்குள்ளே சென்றான் சத்தியமூர்த்தி. பாரதி உடல் நலமின்றிப் படுத்திருந்த அறையை அடைவதற்கு முன் உள்கூடத்தில் நேர் எதிர்புறத்துச் சுவரில் படங்கள் மாட்டியிருந்த இடத்தில் ஒரு கணம் தயங்கி நின்றான் அவன். முதலில் கவனிக்காமலிருந்து அவன் உள்ளே நுழைந்த போது மட்டுமே நிமிர்ந்து நோக்கி முறைத்துப் பார்த்துவிட்டு ஏதோ முணுமுணுத்த ஜமீந்தார் முகத்தை வேறு பக்கமாக வெறுப்போடு திருப்பிக் கொண்டார். 'வருவார் வருவார்' என்று ஆசையோடு காத்திருந்தவர் வந்து படியேறி உள்ளே நுழைந்ததும், பின்னால் ஓடிப்போய் உபசரிக்க முடியாமல் ஜமீந்தார் பக்கத்திலிருந்து தன் ஆவலை அடியோடு கட்டுப்படுத்திக் கொள்ளும்படி செய்துவிட்ட வேதனையோடு தயங்கித் தயங்கி அவனைப் பின் தொடர்ந்த மோகினியின் பார்வை - உள் கூடத்தில் அவனுடைய கண்கள் மேலே மாட்டியிருந்த படங்களில் எந்தப் படத்தைப் பார்த்துத் தயங்கினவோ அந்தப் படத்தைப் பார்த்து அவள் தீயை மிதித்தவள் போலானாள். 'எப்போது அந்தப் படத்தை எடுத்தார்கள்? எப்படி எடுத்தார்கள்? யார் அதை அங்கே கொண்டு வந்து மாட்டினார்கள்?' என்பதொன்றுமே புரியாமல் அவளுக்குத் தலைசுற்றியது. 'என்ன அக்கிரமம் இது?' என்று கொதித்துக் குமுறும் மனநிலையோடு உள்ளே விரைந்தாள் அவள். நிலைக்கண்ணாடி அளவுக்குப் பெரிதாக்கி மாட்டப்பட்டிருந்த அந்த வண்ணப் புகைப்படத்தில் அவளும் ஜமீந்தாரும் கழுத்தில் ரோஜாப்பூ மாலையணிந்து மணமக்களைப் போல் அருகருகே நிற்பதாகத் தெரியக் கண்டு பாதாதி கேச பரியந்தம் நடுங்கினாள் அவள். 'கழுத்தில் ரோஜாப்பூ மாலையோடும் வாயிதழ்களில் நாணப் புன்முறுவலோடும் இப்படி ஒரு புகைப்படத்தை நான் எடுத்துக் கொண்டதே இல்லையே' என்று கொதிக்கும் மனத்தோடு அந்தப் படத்துக்குக் கீழே தயங்கி எரிமலையாய் நிற்கும் சத்தியமூர்த்தியை நெருங்கிய போது அவன் அவள் தன்னருகில் வந்து நிற்பதையே அருவருத்து வெறுக்கிறவனாகப் பாரதியின் அறையை நோக்கி விரைந்தான்.

'என்ன சூழ்ச்சி இது? இந்த அநியாயத்தை யார் செய்தார்கள்? இதை இப்படியே இழுத்துக் கீழே தள்ளிச் சுக்கல் சுக்கலாக உடைத்தெறிந்தால் என்ன?' என்பது போல் ஆத்திரம் பொங்கிட, அது உடைத்தெறிய முடியாத உயரத்தில் மாட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஆற்றாமையும், அழுகையுமாகப் பாரதியின் அறைக்குள் மோகினி தயங்கித் தயங்கி நுழைந்தாள். மோகினி உள்ளே நுழைந்ததைப் பார்த்ததும், பாரதி தன் அருகே அமர்ந்து தன்னை விசாரித்துக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியிடம், "சார்! இதோ வாசல்பக்கமாக யார் வந்திருக்கிறார்கள் என்று கொஞ்சம் திரும்பிப் பாருங்களேன்! உங்கள் மோகினி உங்களைப் பார்க்க வந்து நிற்கிறாள்..." என்று தன்னுடைய சொந்த ஆசாபாசங்களைத் தீர்மானமாகத் தியாகம் செய்துவிட்டு நிர்ச்சலனமான குரலில் சிரித்துக் கொண்டே கூறிய போது மோகினியின் பக்கமே ஏறெடுத்துப் பார்க்காமல் வெறுப்போடு தலைகுனிந்து கொண்ட சத்தியமூர்த்தி, "தயவு செய்து மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் மோகினி என்று சொல்லுங்கள்!" என்று கோபத்தோடு மோகினிக்கும் கேட்கும்படியான குரலில் பாரதிக்குப் பதில் கூறினான். இந்தக் குத்தலான வார்த்தைகளைக் கேட்டு மோகினியின் தலையில் பேரிடி விழுந்தது போலாயிற்று. "யாரோ சூழ்ச்சி செய்திருக்கிறார்கள்! அந்தப் படத்தைப் பற்றி எனக்கு ஒரு பாவமும் தெரியாது!" என்று அப்போதே அவர் காலில் விழுந்து கதற நினைத்தாள் மோகினி. அந்த நிலையில் மிக அருகிலிருந்த அவளுடைய தெய்வத்துக்கோ அவள் அழுகை ஒரு சிறிதும் காதில் கேட்கவில்லை. பதற்றத்தோடு பதற்றமாக உள்ளே ஓடிப்போய் நடுங்கும் கைகளால் காப்பி கலந்து எடுத்துக் கொண்டு வந்தாள் மோகினி. அப்போதுதான் பாரதியிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்டு திரும்பிப் புறப்பட்டுக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியின் எதிரே போய் பேச வார்த்தை எழாமல் தளர்ந்து போய்விட்ட நாவுடன் காப்பியை அவள் நீட்டிய போது, "இந்த உபசாரம் எல்லாம் நீங்கள் ஜமீந்தாருக்குச் செய்தால் போதும். நான் இங்கு என்னுடைய மாணவியைப் பார்த்துவிட்டுப் போவதற்காகத்தான் வந்தேன். உங்கள் கையால் காப்பி குடிக்க இங்கே வரவில்லை..." என்று ஆத்திரத்தோடு வெட்டினாற் போலப் பதில் சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தான் அவன். இதைக் கேட்டதும் மோகினியின் கையிலிருந்த காப்பி டவரா கீழே நழுவியது. பாரதிக்கோ ஒன்றுமே புரியவில்லை. சத்தியமூர்த்தி சாருக்கு இவ்வளவு கோபம் வந்து அவள் பார்த்ததே இல்லை. 'புயலைப் போல் வந்தேன். மின்னலைப் போல் மறைந்துவிட்டேன்' என்று 'ஷோரப் அண்ட் ரஸ்டம்' காவியத்தில் படித்திருப்பதையொப்பச் சத்தியமூர்த்தி வேகமாக வந்தார்; ஆத்திரமாகத் திரும்பிப் போய்விட்டார் என்று எண்ணியபோது அவளுக்கும் அழுகைதான் வந்தது.

சத்தியமூர்த்தி சாரை வரச்சொல்லி தோழியின் மூலமாக ஏற்பாடு செய்த போது அவர் தன்னிடம் மட்டுமே கோபமாகவும், ஆத்திரமாகவும் நடந்து கொள்வாரென்றும் மோகினியைப் பார்த்ததும், அவருடைய ஆத்திரம், கோபம் எல்லாம் பறந்து போய், முகத்தில் புன்முறுவல் மலரும் என்றும் கற்பனை செய்து வைத்திருந்த பாரதி அந்தக் கற்பனைக்கு நேர்மாறாகத் தன்னிடம் அவர் பரிவாக நடந்து கொண்டு விசாரித்து விட்டுப் போனதையும், அதே வேளையில் மோகினியைக் கடுமையாக வெறுத்து அவளைப் பார்க்கவே பிடிக்காதவரைப் போல் முகத்தை முறித்துக் கொண்டு போய்விட்டதையும் நினைத்துக் காரணம் ஒன்றும் விளங்காமல் மனம் திகைத்துக் கலங்கினாள்.

"என்ன அக்கா! ஏன் அவர் இப்படி உங்களிடம் கோபித்துக் கொண்டு போகிறார்" என்று அறை மூலையில் தலை குப்புறச் சுருண்டு விழுந்து விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்த மோகினியைக் கேட்டாள் பாரதி.

"சிறிது நேரத்துக்கு முன்புதானே நீ என்னைப் பாக்கியசாலி என்று சொல்லியிருந்தாய் பாரதி! என்னுடைய பாக்கியம் இப்போது எப்படி முடிவாகியிருக்கிறது, பார்த்தாயா?" என்று அழுகைக்கிடையே பதில் கூறிய மோகினி தான் ஜமீந்தாருக்குக் காப்பி கொடுத்து உபசரிக்கும் போது அவர் எதிர்பாராதவிதமாக உள்ளே நுழைந்ததையும், நடுக்கூடத்தில் இன்றைக்கென்று பார்த்து எப்படியோ, எங்கிருந்தோ முளைத்து வந்து சேர்ந்திருக்கும் அந்தப் படத்தைப் பார்த்ததையும் விவரித்தாள்.

இதைக் கேட்டு ஒரு நீண்ட பெருமூச்சுவிட்ட பாரதி, "சந்தேகமும், பொறாமையும் தாக்காத மனித இதயமே இருக்க முடியாது போல் தோன்றுகிறது அக்கா! ஒரு வேளை சந்தேகமும் பொறாமையும் இந்த உலகத்தில் இல்லாமலிருந்தால் முக்கால்வாசி மனிதர்கள் தேவர்களாயிருப்பார்களோ என்னவோ? அப்படியும் கூடச் சொல்வதற்கில்லை. ஏனென்றால் நம்முடைய இதிகாசங்களில் தேவர்கள் கூடச் சந்தேகமும் பொறாமையும் பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்" என்று துக்கத்தோடு பதில் கூறினாள். அந்த நிலையில் மோகினியைப் பார்க்கவே சகிக்காமல் பாரதிக்குப் பரிதாபமாக இருந்தது. சந்தர்ப்பங்கள் சதி செய்து அவளுடைய ஒரே நம்பிக்கையைப் பாழாக்கி விட்டதோடு அவளைத் துரதிர்ஷ்டசாலியாகவும் நிரூபித்து விட்டதை எண்ணி பாரதி மனம் உருகினாள். 'இந்தப் பாழாய்ப் போன ஜமீந்தாருக்கு இன்றைக்கென்று பார்த்தா இவள் கையால் காப்பி குடிக்க வேண்டுமென்று ஆசை வரணும்?' என்பதாக ஜமீந்தார் மேல் திரும்பியது பாரதியின் கோபம். கோபத்தோடு கோபமாக மோகினியிடம் அப்போது ஒரு கேள்வி கேட்டாள் பாரதி.

"அக்கா! உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். இப்படிக் கேட்பதனால் என்னைத் தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நீங்கள் எப்போதாவது கழுத்தில் ரோஜாப்பூ மாலை அணிந்து புன்முறுவல் பூத்த முகத்தோடு தனியாக நின்றோ வேறு யாரோடும் சேர்ந்தோ புகைப்படம் ஏதாவது எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா?"

இதைக் கேட்டுச் சிறிது நேரம் தயங்கிவிட்டு மோகினி பதில் கூறினாள்:

"எத்தனையோ படம் எடுக்கிறார்கள். முதல் முதலாக நாட்டியம் அரங்கேற்றம் ஆன தினத்திலே எங்க நட்டுவாங்கம் வாத்தியாரு - அவருக்கே ஆசை தாங்காமே ஒரு பெரிய தும்பிச்சங்கை ரோஜாப்பூ மாலையை வாங்கி எங்கம்மா கையிலே கொடுத்து எனக்குப் போடச் சொன்னாரு. அப்போதுதான் சபைக்குக் கூசினாற் போல மேடையிலே கழுத்திலே மாலையோடு சிரித்துக் கொண்டு நின்றேன். அதைப் படம் பிடிச்சாங்க. அதிலே ஒரு பிரதி மஞ்சள்பட்டி அரண்மனையிலே கூட உண்டு."

"ரொம்ப சரி! அந்தப் படத்தையும் அதற்குப் பக்கத்தில் ஜமீந்தார் படத்தையும் வைத்துத் தந்திரமாக இணைத்து ஒன்றாக்கி வர்ணம் தீட்டிப் பெரிதாக்க முடியும்! பணத்தை வாரி இறைத்தால் இதைச் செய்து கொடுக்க ஆயிரம் போட்டோகிராபர்கள் ஓடி வருவார்கள் அக்கா! ஜமீந்தாரைக் குஷிப்படுத்துவதற்காகக் கண்ணாயிரம் இந்த அற்பத்தனமான காரியத்தைச் செய்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!" என்று கூறிவிட்டு டிரைவர் முத்தையாவை உடனே வரவழைத்து, 'கண்ணாயிரம் கடந்த இரண்டு மூன்று நாட்களில் ஏதாவது போட்டோ ஸ்டூடியோவுக்கோ கண்ணாடி பிரேம் போடும் இடத்துக்கோ காரில் போனாரா?' என்பதைப்பற்றி விசாரித்த போது அவன் உடனே விவரமாக எல்லாவற்றையும் அவளுக்குக் கூறினான்.

நான்கு நாட்களுக்கு முன் இரண்டு பெரிய படங்களை எடுத்துக் கொண்டு மல்லிகைப் பந்தல் பஜாரிலுள்ள ஒரு சிறந்த புகைப்பட நிறுவனத்துக்கு கண்ணாயிரம் காரில் போனதாகவும், முந்திய தினம் மாலையில்தான் அந்தப் படங்களில் உள்ள தனித்தனி உருவங்களை இணைத்து ஒன்றாகச் செய்தது போலாக்கிப் பெரிய படமாகப் பிரேம் போட்டுத் திரும்பி வாங்கி வந்ததாகவும், சிறிது நேரத்துக்கு முன்பே தன்னிடம் அதை ஜமீந்தார் அறையிலிருந்து அங்கே உள் கூடத்தில் எடுத்து வந்து மாட்டச் சொன்னதாகவும் டிரைவர் முத்தையா கூறியபோதுதான் பாரதிக்கு தன்னுடைய அநுமானம் முற்றிலும் சரியென்று புரிந்தது. கண்ணாயிரத்தின் அந்த அற்பத்தனமான சந்தோஷம் பேதையான மோகினியின் துரதிர்ஷ்டமாக முடிந்து விட்டதை எண்ணி அவள் மிகவும் வருந்தினாள். மோகினியின் மகிழ்ச்சிக்காகத் தன்னையும் தன் ஆசைகளையும் கூட வெளிப்பட, நஷ்டத்தைக் காண்பித்துக் கொள்ளாமலே அந்தரங்கமாகத் தியாகம் செய்துவிட்டு அவள் பொருட்டுச் சத்தியமூர்த்தியை அங்கு வரவழைத்த பாரதி அது எப்படியோ அசம்பாவிதமாக முடிந்து மோகினியைத் துரதிர்ஷ்டசாலியாக்கி விட்டதை எண்ணி எண்ணி நிலை கொள்ளாமல் தவித்தாள்.

உள்கூடத்து ஊஞ்சல் கம்பியைப் பற்றிக் கொண்டு சத்தியமூர்த்தி அந்த வீட்டிலிருந்து நடந்து வெளியேறிச் சென்ற வழியையே வெறித்துப் பார்த்துக் கண்ணீர் மல்க நிற்கும் மோகினியைக் கண்டு மனம் ஒரு நிலை கொள்ளாமல் பரிதாபமுற்றாள் பாரதி. மோகினியோ அப்போது அதற்கு முன் எப்போதுமில்லாதபடி மனம் இடிந்து போயிருந்தாள். சத்தியமூர்த்தியையும் தன்னையும் விலக்கிப் பிரிக்கும் மெல்லிய வேற்றுமை வலை ஒன்றை விதி தங்களுக்கிடையே அந்த விநாடியிலிருந்து தொடங்கி மிக வேகமாகப் பின்னிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. அவர் கடுமையாகவும், தீவிரமாகவும் மனம் மாறும்படி அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் அன்று அங்கே தற்செயலாக நேர்ந்து விட்டதையும், சந்தர்ப்பம் தனக்கெதிராகச் சதி செய்து விட்டதையும் எண்ணி மனம் நொந்து போயிருந்தாள் அவள். அப்போது ஊஞ்சல் கம்பிகளைப் பற்றிக் கொண்டிராவிட்டால் நிற்கவே சக்தியிராது போன்ற பலவீனத்தை உணர்ந்திருந்தாள் மோகினி. தன்னை வெறுத்துவிட்டு வெளியேறுகிற சத்தியமூர்த்தியைப் பின் தொடர முடியாமல் ஊசலாடும் மனமும் ஓய்ந்து தளரும் கால்களுமாகத் துவண்டு நின்ற போதுதான் அப்படியே யுகம் யுகமாக அவரிடமிருந்து பின் தங்கி நின்று விட்டது போல் அத்தனை பெரிய சலிப்பு வாழ்க்கையின் மேல் அவளுக்கு ஏற்பட்டது. தன்னைப் போல் துர்ப்பாக்கியசாலி வாழ்க்கையில் வேறொருவரும் இருக்க முடியாதென்றும் அப்போது அவளுக்குத் தோன்றியது.

உள்ளே அறையிலிருந்த பாரதி சிறிது நேரம் கழித்து டிரைவர் முத்தையாவிடம் சொல்லிக் கோபத்தோடு இரைந்து கண்ணாயிரத்தைக் கூப்பிட்டனுப்பினாள். கண்ணாயிரம் மிகவும் திமிராக நடந்து வந்தார். அவரிடம் அந்தப் படத்தைப் பற்றிக் குறிப்பிட்டு அதைக் கூடத்தில் யார் மாட்டியதென்று அவள் கடுமையான கோபத்தோடு விசாரித்த போது, அவர் வஞ்சகமான விஷமச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே, "நேற்று வரை அந்தப் படத்தை ஜமீந்தார் படுத்திருந்த அறையில் தான் மாட்டியிருந்தார். இன்று மாலையில் தான் ஜமீந்தாரே என்னைக் கூப்பிட்டுக் 'கண்ணாயிரம்! இன்னிக்குச் சாயங்காலம் இங்கே ரொம்ப முக்கியமான விருந்தாளி ஒருத்தர் பாரதியைப் பார்க்க வரப்போறாரு. அவரு இந்தப் படத்தையும் பார்க்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம். இன்னிக்கு மட்டும் இதை அங்கே கூடத்திலே மாட்டிவை' என்று சிரிச்சிக்கிட்டே சொன்னாரு. அதனால் தான் இங்கே கொண்டாந்து மாட்டினேன்" என்று கூறிய போது தான் பகலில் மகேசுவரி தங்கரத்தினமும் தானும் டெலிபோனில் பேசியதை ஜமீந்தார் முன்புறம் தமது அறையிலுள்ள எக்ஸ்டென்ஷனிலிருந்து இரகசியமாக 'ஓவர் ஹியர்' செய்திருக்கிறாரென்று பாரதியால் அநுமானம் பண்ண முடிந்தது. உள்பகுதியிலும் முன் அறையிலுமாக அந்த வீட்டில் இருந்த ஒரே எண்ணுக்குரிய இரண்டு டெலிபோன் ரெஸீவர்களில் ஒன்றைக் கையிலெடுத்தால் இன்னொன்றில் மற்றொருவர் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்க முடியும் என்பதைப் பாரதியும் அறிவாள். ஜமீந்தாரும், கண்ணாயிரமும் செய்திருக்கிற அநியாயங்களை நினைத்த போது அவளுடைய வயிறெரிந்தது. அவர்களை எண்ணிய போதே 'வெல் டிரஸ்டு ரோக்ஸ்' என்று எரிச்சலோடு முணுமுணுத்தாள் பாரதி. அக்கிரமமாகத் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தை மாட்டியிருந்த இடத்திலிருந்து வெளியில் எடுத்தெறியச் சொல்ல வேண்டும் போல மனம் குமுறினாள் அவள். மோகினியின் பரிசுத்தமான காதலை ஒப்புக் கொண்டு தன்னுடைய ஆசையைத் தனக்குள்ளேயே பெருந்தன்மையாகத் தியாகம் செய்து கொண்டிருந்தாள் பாரதி. ஆனால், இப்போது தானே ஒப்பி மகிழ்ந்த மோகினியின் காதலுக்குக் கூட கெடுதல் வருவதை அவளால் சிறிதும் தாங்க முடியவில்லை.

"கவலைப்படாதீர்கள் அக்கா! 'நீங்கள் பாக்கியசாலி' என்று நான் சொல்லிய வார்த்தையை மறுபடியும் இறுதி வரை நிரூபிப்பது என் பொறுப்பு. மறுபடியும் என் தோழி மகேசுவரியை வரவழைத்து, அவளிடம் விவரமாக உங்கள் கைப்படவே கடிதம் எழுதிக் கொடுத்துச் சத்தியமூர்த்தி சாரிடம் கொண்டு போய்ச் சேர்க்கச் சொல்கிறேன். அவர் மனம் சமாதானம் அடையும் விதத்தில் அந்தக் கடிதத்தை நீங்கள் தான் அக்கா எழுத முடியும். உடனே எழுதுங்கள். நான் இப்போதே டிரைவர் முத்தையாவிடம் சொல்லி மகேசுவரி தங்கரத்தினத்தை வரவழைக்கிறேன்" என்று பாரதி ஆறுதலாக யோசனை கூறிய போது, மோகினி அந்த வார்த்தைகளை நம்பி அப்படியே சத்தியமூர்த்திக்கு மிகவும் உருக்கமாகத் தன் நிலையை விளக்கி, ஒரு கடிதம் எழுதலானாள். கடந்த சில நாட்களில் தான் உடல் நலமின்றிக் கிடந்த போது மோகினி தனக்குப் பணிவிடை செய்த விசுவாசத்தினாலும், இந்தப் பரந்த உலகில் சத்தியமூர்த்தியைத் தவிரத் தனக்குத் துணை என்று வேறு யாருமில்லாமல் உள்ளும் புறமும் அந்த ஒரே உயிர்த் துணையையே உணர்ந்து தவிக்கும் மோகினியின் பரிசுத்தமான காதலை மதித்துத் தானே தன்னையே தியாகம் செய்து கொள்வதென்று பாரதி முடிவு செய்திருந்ததனாலும் தன்னுடைய கஷ்டத்தை மறந்து மோகினியின் காதல் வெற்றி பெற மட்டுமே அவள் பாடுபட்டாள். மகேசுவரி தங்கரத்தினத்தை வரவழைத்து மோகினி எழுதிய கடிதத்தை லேக் அவின்யூவிலுள்ள சத்தியமூர்த்தியின் அறைக்குக் கொடுத்தனுப்பிய போதும், அப்படிக் கொடுத்தனுப்பிய பின் மோகினிக்கு ஆறுதல் கூறிய போதும், சத்தியமான அந்தக் காதல் வெற்றி பெறப் பாடுபடுகிற ஒரே ஒரு புண்ணியமாவது தனக்குக் கிடைக்கட்டுமென்ற பரந்த மனப் பண்புதான் பாரதியிடமிருந்தது. ஆனால் எல்லாருக்கும் மேலாக விதியோ வேறு விதமாக இருந்தது.

பாரதியை விசாரித்து விட்டுப் போக வந்த இடத்தில் மோகினிக்கும் ஜமீந்தாருக்கும் மணமாகிப் புதுமணத் தம்பதிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டது போல் அலங்காரமாக எடுத்து ஆடம்பரமாக மாட்டப்பெற்ற புதிய பெரிய படத்தை அங்கே பார்த்ததாலும், தன்னுடைய சகலவிதமான அவநம்பிக்கைகளிடையேயும் ஒரே ஒரு நிச்சயமாக இருந்த அவளே நிச்சயமற்று ஜமீந்தாரிடம் சிரித்துப் பேசி உபசாரம் செய்து கொண்டு நின்ற நிலையில் அவளைச் சந்தித்ததாலும், மனம் வெறுத்து வேதனையோடு அங்கிருந்து வெளியேறியிருந்தான் சத்தியமூர்த்தி.

எவ்வளவோ மனப்பக்குவமும் நிதானமும் உள்ளவனாயிருந்தும், அந்த நிலையை மட்டும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

'இந்த மாதிரிப் பெண்களை 'இருமணப் பெண்டிர்' என்று திருவள்ளுவர் எத்தனை பொருத்தமாக இழித்துக் கூறியிருக்கிறார்! 'சூதாட்டத்தையும், குடியையும் போல் மன ஒருமை இல்லா பெண்ணின் அன்பும் ஒருவனைச் சீரழித்துவிடும்' என்று அவர் கூறியிருப்பது எவ்வளவு பெரிய உண்மை. ஒழுக்கமும், நேர்மையும் இல்லாத சதைப் பிண்டமான அந்த ஜமீந்தாரின் பக்கத்தில் கழுத்து நிறைய மாலையோடும் இதழ்கள் நிறையப் புன்சிரிப்போடும் நிற்கிறாளே இந்தக் கேடு கெட்டவள்! அதுதான் வெறும் படம் என்றால் என் கண்களாலேயே அந்த வீட்டு வராந்தாவில் கால் நீட்டிச் சாய்ந்திருந்த ஜமீந்தாருக்கு இவள் காப்பி டிபன் கொடுத்து உபசாரம் எல்லாம் செய்து பயபக்தியோடு அருகே நிற்கிற கோலத்தை நான் சற்று முன்பு கண்டேனே? நான் கண்ணால் கண்டது எப்படிப் பொய்யாகும்? 'நான் வாழ்ந்து உங்களை நினைக்க வேண்டும்; அல்லது நீங்கள் வாழ்ந்து என்னை நினைக்க ஒரு ஞாபகமாகி நானே போய்விட வேண்டும்' என்று என்னிடம் இந்தக் கூத்தாடுகிறவள் நாடகமாடியதெல்லாம் எத்தனை பெரிய நடிப்பு?' என்று தனக்குள் அவளைக் கடுமையாக நினைக்கும் நினைப்புகளுடனே நடையை வேகமாக்கித் தன் அறைக்கு விரைந்து கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி.

அறையில் குமரப்பன் அவனை எதிர்பார்த்துப் பரபரப்போடும், மதுரையிலிருந்து வந்திருந்த அவசரமான தந்தியோடும் காத்திருந்தான்.

"என்னடா சத்தியம்! கல்லூரி விட்டதும் உடனே அறைக்குத் திரும்பி வரக் கூடாதோ? நம் கலெக்டர் மதுரையிலிருந்து உடனே புறப்பட்டு வரச் சொல்லித் தந்தி கொடுத்திருக்கிறார். இப்போது கிளம்பினால் பஸ் நிலையத்திலிருந்து இன்னும் பத்துப் பதினைந்து நிமிஷத்தில் புறப்படவிருக்கும் அஞ்சரை மணி பஸ்ஸில் மதுரை போகச் சரியாயிருக்கும். உடனே புறப்படு சொல்கிறேன். நானும் உன்னோடு மதுரை வரை வந்து விட்டுத் திரும்ப நினைத்திருக்கிறேன்" என்று குமரப்பன் அவசரப்படுத்தியதும் மறுபேச்சுப் பேசாமல் கல்லூரிக்கு ஒரு வாரம் லீவு எழுதிக் கொடுத்து அதை மறுநாள் காலை கல்லூரி முதல்வரிடம் சேர்க்குமாறு ரொட்டிக்கடை ஆளிடம் கூறிவிட்டு நண்பனோடு மதுரைக்குப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி. இந்தப் பிரயாணம் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான பெரிய மாறுதலை ஏற்படுத்தப் போகிறதென்று சத்தியமூர்த்திக்குத் தெரியும். யாரோ ஒருத்தியினுடைய அன்பு தடையாக இருந்து அவனைக் கடந்த ஒரு வாரமாக இதற்குத் தயங்கச் செய்து கொண்டிருந்தது. இன்று இந்த விநாடியிலோ 'உலகத்தில் எல்லாப் பெண்களுக்கும் இரண்டு மனங்களென்ன, ஈராயிரம் மனங்கள் கூட இருக்க முடியும்; பிடிவாதமாகக் காதலித்து அதற்காக உயிர் விடுகிற ஒரு மனப் பெண்களை வாழ்வில் சந்திக்கவே முடியாது போலும்! ஒரு வேளை நல்ல கவிகள் எழுதுகிற மகா காவியங்களில் வேண்டுமானால் அப்படி ஓரிரு பெண்கள் கற்பனையாக வரலாம்' என்று நினைக்கும் வறண்ட மனத்தோடும் வெறுப்போடும் அவன் இருந்தான். எனவே குமரப்பனுடைய வேண்டுகோளையும் கலெக்டருடைய தந்தியையும், அதன் விளைவுகளையும் சிறிதும் தயக்காமல் எதிர்பார்த்து, ஏற்றுக் கொள்ளவும் கருதி அவன் உடனே நண்பனோடு மதுரைக்குப் புறப்பட்டு விட்டான். கல்லூரி வேலை நிறுத்தம் பற்றிய விசாரணைக்காக வந்திருந்த கலெக்டர் திரும்பும் போது, "சத்தியம் உனக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். என் மனப்பூர்வமாக உனக்கு நான் கூறுகிற இந்த அறிவுரையை நீ ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உன் விருப்பத்தைப் பொறுத்தது. இவ்வளவு நல்ல படிப்பையும், தோற்றத்தையும் வைத்துக் கொண்டு உன்னைப் புரிந்து கொள்ளாத இவர்களுக்கிடையே நீ சாதாரண விரிவுரையாளனாக இருந்து என்ன பயன்?"

"உனக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் இடையே எவ்வளவு பிரச்சினை - வேறுபாடுகள் எல்லாம் உண்டாகி அவற்றிலிருந்து நீ தப்பி வென்று விட்டாலும், இனியும் உன் மேல் வைரம் வைத்துக் கொண்டு பழிவாங்க அவர்கள் நேரம் பார்த்திருப்பார்கள். தனியார் நிர்வாகத்திலுள்ள எல்லாக் கல்லூரிகளிலும் இப்படிப்பட்ட பாரபட்சங்கள் நிறைய உண்டு. பூபதி உயிரோடிருந்திருந்தால் நடப்பது வேறு. அவரும் போய்ச் சேர்ந்துவிட்டார். 'ஹென்றி வான் டைக்' 'டு தி அன்னோன் டீச்சர்' என்ற பெயரில் ஒரு கவிதை பாடியிருக்கிறான் தெரியுமா? அதுதான் இப்போது எனக்கு நினைவு வருகிறது."

"'ஆசிரியனே! நீ எல்லாருடைய இதயத்திலும் இருளகற்றி ஒளி பரப்பி அவர்களைப் புகழுக்குரியவர்களாக்குகிறாய்; ஆனால் உன் புகழும் பெருமையும் எல்லாருக்கும் மொத்தமாக மறந்து போய் விடுகின்றன. நீ இருளில் கிடந்து வாடுகிறாய்?' என்று அந்தக் கவிதையில் அவன் கூறுகிறான். உன்னுடைய வாழ்வும் படிப்பும் அப்படி இருளடைவதாய் ஆகிவிடக் கூடாது. நான் சொல்வதைக் கேள். சமீபத்தில் ஆங்கிலச் செய்தித்தாளில் நான் ஒரு விளம்பரம் பார்த்தேன். மேற்கு ஜெர்மனியிலுள்ள ஹிடல்பர்க், மார்பர்க் ஆகிய பல்கலைக் கழகங்களில் பழமையான கீழ்த்திசை மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சித் துறைக்காகத் தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்களைக் கேட்டு இந்தியாவிலுள்ள ஜெர்மன் தூதராலயத்தின் சார்பில் அரசினரின் விளம்பரம் வந்திருந்தது. பயிற்சிக் காலத்தில் மாதம் 1500 மார்க்ஸ் (சுமார் ரூ. 1875) உதவித் தொகையாகத் தருகிறார்கள். இரண்டு மூன்று வருடங்கள் நான் கூறிய ஜெர்மானியப் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சித் துறையில் இருந்து விட்டு மொழியியல் துறையில் டாக்டர் பட்டத்தோடு நீ இந்தியாவுக்குத் திரும்பி வா. இந்த வேலைக்குத் தகுதியும் தோற்றப் பொலிவும் உள்ள நீ அவசியம் தேர்வு பெறுவாய்."

"ஊருக்குப் போனதும் விண்ணப்பத்தாளும் விவரங்களும் உனக்கு அனுப்பி வைக்கிறேன். உடனே பூர்த்தி செய்து உன் முகவரி கொடுக்கும் போது மட்டும் கவனமாக உன் பெயரை எழுதி மேற்பார்வை என்று போட்டுக் கீழே என்னுடைய மதுரை முகவரியைக் கொடுத்து விடு. டெல்லியிலுள்ள ஜெர்மன் தூதராலயத்தில் விரைவில் உனக்கு 'இண்டர்வியூ' நடைபெறும். இண்டர்வியூவில் நம்முடைய சென்னையைச் சேர்ந்த மொழியியல் பேராசிரியர் ஒருவரும் தேர்வாளராக இருப்பார். அவர் எனக்கு மிகவும் வேண்டியவர். நீ தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று அவருக்கு நான் சிபாரிசு செய்து எழுதுகிறேன். இந்த மல்லிகைப் பந்தல் கல்லூரியில் உனக்கும் இவர்களுக்கும் மனக்கசப்பு ஏற்பட்ட பின் நீ தொடர்ந்து இங்கு இருப்பது உன்னுடைய எதிர்காலத்துக்கு எந்த விதத்திலும் நல்லதில்லை. நான் சொல்லுகிற இந்த ஏற்பாட்டினால் உன் எதிர்காலமும் விரைவில் ஒளிபெறும். உன் வீட்டு வறுமையும் ஓரளவு குறையும். திரும்பும் போது இந்தியாவின் எந்தப் பெரிய பல்கலைக் கழகத்திலும் நல்லதொரு பேராசிரியர் பதவியைப் பெற ஏற்ற தகுதியோடும் டாக்டர் பட்டத்தோடும் நீ திரும்பலாம்" என்று கூறிவிட்டுப் போயிருந்தார். குமரப்பனுக்கும் அவருடைய இந்த யோசனை பிடித்திருந்தது. சத்தியமூர்த்தி மட்டும் சிறிது தயங்கினான். ஆனால் ஊர் சென்ற மறுநாளே கலெக்டர் அனுப்பிய விண்ணப்பங்களை மட்டும் தயங்காமல் அவர் கூறியபடியே பூர்த்தி செய்து அவன் டெல்லிக்கு அனுப்பி வைத்திருந்தான்.

அதன் தொடர்பாகத் தான் இன்று கலெக்டரிடமிருந்து அவசரமாகத் தந்தி வந்து அவனும் நண்பன் குமரப்பனும் உடனே மதுரைக்குப் புறப்பட்டிருந்தார்கள். பஸ்ஸில் போகும் போது குமரப்பன் பேச்சுப் போக்கில் சத்தியமூர்த்தியிடம் மோகினியைப் பற்றி ஏதோ சொல்லத் தொடங்கிய வேளையில், "வேறு ஏதாவது பேசு! ஊரிலுள்ள நாட்டியக்காரிகளைப் பற்றியெல்லாம் நமக்கென்ன கவலை?" என்று சத்தியமூர்த்தி முகத்தைச் சுளித்து வெறுப்போடு மிகவும் கடுமையாகக் கூறியதைக் கண்டு அவனுடைய அந்தத் திடீர் மனமாறுதலுக்குக் காரணம் ஒன்றும் புரியாமல் குமரப்பன் திகைத்தான்.

அத்தியாயம் - 60

மனத்தின் எல்லா நோய்களுக்கும் அன்புதான் மருந்து. அதே அன்பு பொய்யாயிருந்து விட்டாலோ அதை விடப் பெரிய நோய் வேறெதுவும் இல்லை.

தந்தியைப் பற்றிக் கூறியதும் உடனே கல்லூரிக்கு லீவு எழுதிக் கொடுத்துவிட்டு மறுக்காமல் மதுரைக்குப் புறப்பட்டிருந்தாலும் பிரயாணத்தின் போது சத்தியமூர்த்தி சிறிதும் உற்சாகமின்றி ஏதோ ஆழ்ந்த மனப்போராட்டங்களாலே தாக்கப்பட்டவனைப் போல் தளர்ந்து உடன் வருவதைக் குமரப்பன் உணர்ந்து கொண்டான். எனவே நண்பனோடு அதிகம் பேச்சுக் கொடுக்காமலும் அவனுடைய மனப்போரட்டத்துக்குக் காரணத்தை அவனிடமே தூண்டித் தூண்டிக் கேட்காமலும் பஸ்ஸுக்கு வெளியே ஓடும் காட்சிகளில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தலானான் குமரப்பன்.

சரியாக அதே நேரத்திலே லேக் அவின்யூவில் சத்தியமூர்த்தியின் அறையைத் தேடி மோகினியின் கடிதத்தோடு வந்த மகேசுவரி தங்கரத்தினத்துக்கு, "அவரு ஊருக்குப் போயிருக்காரு! ஏதோ அவசரமாகத் தந்தி வந்தது. ஒரு வாரம் காலேஜுக்கு லீவு போட்டு விட்டுக் கிளம்பிட்டாரு" என்று கீழேயிருந்த ரொட்டிக் கடை வேலைக்காரன் பதில் கூறினான். ஏமாற்றத்தோடு திரும்பிய மகேசுவரி கடிதத்தைத் திருப்பிக் கொடுத்து, 'அவர் ஊரில் இல்லை' என்ற விவரத்தையும் தெரிவித்தாள். 'சத்தியமூர்த்தி ஊரில் இல்லை' என்ற விவரத்தைப் பாரதியிடமிருந்து கேள்விப்பட்ட போது, "நீ ஏன் வீணாக மனம் கலங்குகிறாய் பெண்ணே! என் பாக்கியம் அவ்வளவுதான். இந்த உலகத்தில் என்னைப் போல் துரதிர்ஷ்டசாலி வேறு யாரும் கிடையாது" என்று அழுகைக்கிடையே பாரதியைப் பார்த்துக் கூறினாள் மோகினி. "கவலைப்படாமல் இருங்கள் அக்கா! சந்தேகங்களும் தடைகளும் குறுக்கிடாத காதல் தேவர்களின் இதிகாசங்களில் கூட இல்லை. உங்களுடைய புண்ணியம் வீண் போகாது. சத்தியமூர்த்தி சார் எவ்வளவோ நல்லவர். முன் கோபமும், பொறாமையும் அவரிடம் என்றுமே இருந்ததில்லை. இன்று ஏதோ சந்தர்ப்பக் கோளாறுகளால் இப்படி ஆகிவிட்டது! நீங்கள் ஜமீந்தாருக்குக் காப்பி கொடுத்துக் கொண்டிருந்ததையும், உங்களை அவரிடமிருந்து பிரிக்க வேண்டுமென்றே இந்தப் பாவிகள் தந்திரமாகத் தயார் செய்து மாட்டிய படத்தையும் பார்த்துத் திடசித்தமுள்ளவராகிய சத்தியமூர்த்தியே மனம் வேறுபட்டு ஆத்திரம் கொண்டுவிட்டார். எல்லாம் விஷக்கடி வேளை" என்று வருந்திய பாரதி மோகினியைச் சமாதானப்படுத்தி அமைதியடையச் செய்ய மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

"நீங்கள் நிம்மதியாக இருக்கணும் அக்கா! சத்தியமூர்த்தி சார் மதுரைக்குத்தான் போயிருக்கிறார் என்று தெரிகிறது. உங்களுடைய இந்தக் கடிதத்தைப் படித்தால் எப்படியும் அவருடைய மனம் இளகும். அவருடைய மதுரை வீட்டு விலாசம் எனக்குத் தெரியும். உங்கள் கடிதத்தை நாளைப் பகலில் மதுரைக்குத் தபாலில் அனுப்பி வைக்கிறேன். கடிதம் அவருக்குக் கிடைத்து அதை அவர் படித்த பின்பு மறுபடி இங்கு திரும்பி வரும் போது உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டதற்காக மனம் வருந்தியபடி வருவார். எல்லாம் சரியாகி நல்லபடி முடியும். வீணாக மனம் கலங்காதீர்கள்" என்று மோகினிக்கு ஆறுதல் கூறிவிட்டு அவள் சத்தியமூர்த்திக்கு எழுதிய கடிதத்தை மறுநாள் பகலில் அவருடைய மதுரை முகவரி எழுதிய உறையிலிட்டு ஒட்டி ரிஜிஸ்தர் தபாலில் அனுப்பிவிடச் சொல்லி மகேசுவரி தங்கரத்தினத்திடம் கொடுத்தனுப்பினாள். டிரைவர் முத்தையாவிடம் கொடுத்தனுப்பலாமென்றால், அவன் கண்ணாயிரத்தையும் கணக்குப்பிள்ளைக் கிழவரையும் அழைத்துக் கொண்டு காரில் நேரே மஞ்சள்பட்டி போய் அங்கு ஏதோ காரியங்களை முடித்துக் கொண்டு அப்புறம் மதுரை போய் விட்டுத் திரும்புவதற்காக மறுநாள் காலையில் புறப்படுவதாகச் சொல்லியிருந்தான். 'சத்தியமூர்த்தியின் தந்தையாகிய அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவரிடமே உறையிலிட்டு ஒட்டிய இந்தக் கடிதத்தைக் கொடுத்து மதுரையில் அவருடைய மகனிடம் சேர்க்கச் சொன்னால் என்ன?' ஒரு கணம் பாரதிக்கு யோசனை தோன்றியது. அடுத்த கணமே, அந்த யோசனை பைத்தியக்காரத்தனமாகவும், நம்பிக்கையற்றதாகவும் படவே, அவள் அதைச் செய்வதில்லை என்ற முடிவுடன் தன் தோழி மகேசுவரி மூலம் தபாலுக்குக் கொடுத்தனுப்பினாள். 'கணக்குப்பிள்ளைக் கிழவர் தம் மகனை என்ன காரணத்தினாலோ வெறுக்கிறார். தவிரவும் அவர் நேரே மதுரைக்குப் போகாமல் காரில் முதலில் மஞ்சள்பட்டி போய் அங்கு ஒருநாளோ இரு நாட்களோ தங்கிக் காரியங்களைப் பார்த்துவிட்டு அப்புறம் கண்ணாயிரத்தோடு அங்கிருந்து புறப்பட்டு மதுரைப் போகப் போகிறார். கண்ணாயிரமும் உடன் போகிற போது கணக்குப்பிள்ளைக் கிழவரை நம்பி இதைக் கொடுத்தனுப்புவது பைத்தியக்காரத்தனம்! பணத்துக்காகச் சேரத் தகாதவர்களோடு சேர்ந்து சொந்த மகனையே வெறுக்கிறவரை எப்படி நம்புவது?' என்று சிந்தித்த பின்பு கடிதத்தைச் சத்தியமூர்த்தியின் பேருக்கே பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தாள் பாரதி.

பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போதும் அதன் பின்பு மல்லிகைப் பந்தல் ரோடு இரயில் நிலையத்தில் இறங்கி மாறி புகைவண்டியில் பிரயாணம் செய்யும் போதும் சத்தியமூர்த்தி பிரயாணம் செய்வது கூட ஞாபகமில்லாது ஆழ்ந்த சிந்தனைகளில் மூழ்கியிருந்தான். 'பிறர் மனமிரங்கிக் கண் கலங்குமாறு செய்யும் ஆற்றல் எல்லாப் பெண்களுக்குமே இருக்கிறது. மோகினியைப் போல அழகும், கவர்ச்சியும், திறனும் உள்ள பெண்களுக்கு இந்த ஆற்றல் சிறிது அதிகமாகவே இருக்கலாம். இவ்வளவு நாள் இவளை ஒரு பொருளாக மதித்து மனத்தில் இடமளித்துக் கவலைப்பட்டு நான் உருகுமாறு செய்த ஆற்றல் என்னை இதுவரை ஏமாற்றியிருக்கிறதென்றே சொல்லலாம். இவள் என் மேல் உயிரையே வைத்து வாழ்கிறாள் என்று நான் எண்ணியிருந்தது எத்தனை பெரிய பேதைமை? ஜமீந்தாருக்கும் இவளுக்கும் திருமணம் நடந்திராவிட்டால் இப்படி மணக்கோலத்தில் புகைப்படம் எடுத்து மாட்டுவதற்கு வேறு சந்தர்ப்பம் ஏது? ஊர் உலகத்தில் தன்னைப் பற்றிக் கேவலமாகப் பேசிக் கொள்வார்களே என்று பயந்து இந்த ஜமீந்தார் இவளை ஆசைக் கிழத்தியாக விரும்பிக் காதும் காதும் வைத்தாற் போல் இரகசியமாக மணந்து கொண்டிருக்கிறாற் போல் இருக்கிறது. இதை என்னிடம் மூடி மறைத்து ஏமாற்றிக் கொண்டு, 'பட்டுப் புடவைக் கடையில், ஜமீந்தாரையும் என்னையும் சேர்த்துப் பார்த்ததனால் என்னைத் தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள்' என்று எனக்குக் கடிதம் எழுதிக் கொடுத்தனுப்புகிறாளே இந்தப் பழிகாரி! என் கையில் இந்த மோதிரத்தை அணிவித்து விட்டு, 'மேளதாளமில்லாமல் சந்தனம் வெற்றிலை பாக்கு இல்லாமல் புஷ்ப மரத்தடியில் வீற்றிருக்கும் தெய்வத்துக்குச் சமர்ப்பணமாகும் பூவைப் போல் தானாகவே உங்களிடம் சேர்ந்தவள்' என்று இவள் என்னிடம் உருகிய உருக்கமெல்லாம் எவ்வளவு பெரிய துரோக நாடகம்? 'இந்த வீட்டில் நீங்கள் வாசிப்பதற்குரிய பரிசுத்தமான வாத்தியம் ஒன்று காத்துக் கிடக்கிறது என்று கண் கலங்கிட இவள் முன்பு என்னிடம் கூறியிருந்த வாக்கியத்தையும் அதன் உறுதியையும் காற்றில் பறக்க விட்டுவிட்டாளே?' என்றெல்லாம் வெறுப்போடு எண்ணியபோது அவள் தன்னைக் கைப்பற்றி அணிவித்த அந்த நீலக்கல் மோதிரத்தை உடனே கைவிரலிலிருந்து கழற்றித் தலையைச் சுற்றித் தூர எறிந்து விட வேண்டும் போல் அருவருப்பாயிருந்தது அவனுக்கு. அருகிலிருந்த நண்பன் குமரப்பனும் இரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் சக பிரயாணிகளும் காணும்படி அந்த மோதிரத்தைக் கழற்றி எறியக் கூடாது என்பதற்காக அந்தக் கம்பார்ட்மெண்டின் ஒரு கோடியிலிருந்த குளியலறைக்குச் சென்றான் அவன். குளியலறைக் கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு அந்த மோதிரத்தை விரலிலிருந்து கழற்ற முயன்ற போது அது விரலோடு விரலாக இறுகிப் போயிருந்ததனால் கழற்ற வரவில்லை. ஓடும் இரயிலில் குளியலறைக்குள் அங்கும் இங்குமாகத் தள்ளாடியதும் மோதிர விரலில் இரத்தம் குழம்பிக் கன்றிச் சிவந்ததும் தவிர அவனுடைய அந்த முயற்சிக்கு வேறு பயன் விளையவில்லை. 'சனியன்! கழற்றி எறியவும் வரவில்லை' என்று வெறுப்போடு முணுமுணுத்தவாறே குளியலறையிலிருந்து திரும்பி மறுபடியும் தன் இடத்தில் போய் உட்கார்ந்தான் அவன். 'இந்த உலகத்தில் ஒரே நோய் தான் உண்டு! ஒரே மருந்துதான் உண்டு. அன்பு இன்மைதான் பெரிய நோய். அன்பு தான் மருந்து. துன்பம், சோர்வு, பயம் எல்லாம் அன்பில் அழிந்து விடும். அதே அன்பு உண்மையாயில்லாமல் பொய்யாகவோ, வஞ்சகமாகவோ இருந்துவிட்டால் அது தான் மிகப் பெரிய நோய்! அந்த நோய் அதற்கு ஆளானவனுடைய மனத்தையே பாலைவனமாக்கி விடும். 'குலத்தளவே ஆகுமாம் குணம்' என்று ஔவையார் பாடியிருப்பது எத்தனை பொருத்தமாகிவிட்டது? பிடிவாதமாக அன்பு செய்யவோ சிறப்பாக ஒருவனிடம் மட்டும் மனத்தைக் கொடுத்துக் காதல் புரியவோ இவர்களுக்குத் தனிமனம் கிடையாது என்பதனால் அல்லவோ கம்பர் இவர்களையெல்லாம், நிதி வழி நேயம் நீட்டும் பொது மனப் பெண்டீர் என்று பாடி வைத்தார்?' என்பதாக எண்ணங்கள் மோகினியின் மேல் விளைந்திருக்கும் வரம்பிலா வெறுப்புக் காரணமாகவே அவன் மனத்தில் தோன்றிக் கொண்டிருந்தன. பல நாட்களுக்கு முன் முதன் முதலாக மதுரை வைகைப் பாலத்தருகே இரயிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வதற்கிருந்த நிலையில் வானவில்லைப் போல் நிறங்களின் அழகிய பக்குவமெல்லாம் இணைந்த அற்புதமாய்ச் சரீரமெங்கும் பாதாதிகேச பரியந்தமும் சந்தனமும், மருக்கொழுந்தும் மலர்ந்தாற் போல் மணக்க, தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற்கென்று அமைந்தாற் போன்ற பற்களோடு மோகினி தனக்கு அறிமுகமான சம்பவமும் அதற்குப் பின்பு அவளோடு பழக நேர்ந்த சம்பவங்களும் ஒவ்வொன்றாக நினைவு வந்து இந்த விநாடியில் அவனது மன எல்லையெல்லாம் நிறைந்திருந்த வெறுப்பையும், விரோதத்தையும், மேலும் மேலும் வளர்த்தன. அவளைச் சுற்றியிருக்கும் எல்லா நரகங்களுக்கிடையேயும் அவளே மிகப் பெரிய நரகமாகி விட்டதாக அவனுக்குத் தோன்றியது. மனிதனுடைய அழுக்குக் கைகள் தொட்டுப் பறிப்பதற்கு முன்பு, மண்ணில் தாங்களாகவே உதிர்ந்து தங்கள் தூய்மையைக் காப்பாற்றிக் கொண்டு விடும் பவழ மல்லிகைப் பூவைப் போல தூயவளென்று முன்பு அவளை நினைத்திருந்தான். இன்றோ படத்தில் மணக்கோலத்தோடு ஜமீந்தாருடன் சிரித்துக் கொண்டு நின்ற நிலையிலும், நேரில் அவருக்கு உபசாரம் செய்து கொண்டிருந்த நிலையிலும் பிரத்தியட்சமாக அவளைப் பார்த்துவிட்ட பிறகு, அவன் நினைப்பில் அவளே ஓர் பெரிய அழுக்காகத் தோன்றினாள். 'ஷி வாக்ஸ் இன் பியூட்டி' என்ற கவிதையை முன்பு கல்லூரி வகுப்பறையில் மாணவர்களுக்குக் கற்பித்த போது, அதில் வருகிற 'ஹௌ பியூர்?' (எவ்வளவு பரிசுத்தம்?) 'ஹௌ டியர்?' (எவ்வளவு கனிவு?) என்ற வரிகளைத் தான் மோகினியின் ஞாபகத்தோடு மனம் நெகிழ்ந்து விளக்கிச் சொல்லியதையும் அந்த நிகழ்ச்சியில் வகுப்பிலுள்ள மாணவ மாணவிகளெல்லாம் மயங்கியதும் இன்று அவனுக்கே வெறும் பொய்யாகத் தோன்றுகின்றன; இன்னும் நன்றாகச் சொல்லப் போனால் அவளும் அவளோடு தொடர்புடைய எல்லாமுமே வஞ்சகமாய்ப் பொய்யாய்த் தோன்றுகின்றன.

'சந்திக்கிறோம், அறிகிறோம், அன்பு செய்கிறோம், பின்பு பிரிகிறோம். மிகப் பல மனித இதயங்களின் சோகக் கதை இதுதான்' என்ற பொருளில் 'டு மீட், டு நோ, டு லவ் அண்ட் தென் டு பார்ட், இஸ் தி ஸேட் டேல் ஆஃப் மெனி எ ஹ்யூமன் ஹார்ட்' என்பதாகக் கால்ரிட்ஜ் ஒரு கவிதை பாடியிருக்கிறான். அந்தக் கவிதைதான் இன்று இந்த விநாடியில் சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. மோகினியின் நினைவுகள் என்னும் தூய நறுமண மலர்களால் தொடுக்கப்பட்டிருந்த அவனுடைய ஞாபகமாலை இப்போது சிதைந்து அறுந்து போய் விட்டது. அந்த நளின நறுமண மாலை மணம் பரப்பிக் கொண்டிருந்த இடத்தில் இப்போது வெறுப்பும், ஏமாற்றமும், அவநம்பிக்கையும், அருவருப்பும் வந்து குடிகொண்டிருந்தன. 'உலகம் நிரந்தரமாகப் பழித்துக் கொண்டிருக்கிற ஒரு பகுதியைச் சேர்ந்த அழகிய பெண்களிடையே இருந்துதான் வஸந்தசேனை, மாதவி, மணிமேகலை - கடைசியாக மோகினி எல்லாரும் தோன்றியிருக்கிறார்கள்' என்று தானே ஒரு நாள் மோகினியிடம் அவளைப் புகழ்ந்து கூறியதை நினைத்து அதற்காக இப்போது வருந்தி வெட்கமுற்றது அவன் மனம்.

மதுரை இரயில் நிலையத்தில் போய் இறங்கிய போதும் கூட மனம் குழம்பிய நிலையில்தான் இருந்தான் அவன். "ஏன் இப்படி இருக்கிறாய்? தலைவலியா? உடல் நலமில்லையா?" என்று குமரப்பன் விசாரித்த போது கூட சத்தியமூர்த்தி ஏதோ பதில் சொல்லி மழுப்பி விட்டான். இரயில் நிலையத்துக்குக் கலெக்டருடைய மூத்த மகன் வந்திருந்தார். அப்போது இரவு ஒன்பதே கால் மணி ஆகியிருந்தது. அந்த இரயிலிலேயே அவர்கள் இருவரும் வருவார்கள் என்று எதிர்பார்த்து அப்பா வீட்டில் காத்திருப்பதாகவும் இருவரையும் நேரே தங்கள் வீட்டுக்கே அழைத்து வருமாறு தன்னை ரயில் நிலையத்துக்கு அவரே அனுப்பியதாகவும், கலெக்டருடைய புதல்வர் கூறினார்.

சத்தியமூர்த்தியும், குமரப்பனும் கலெக்டரின் மகனோடு அவரைச் சந்திக்கப் புறப்ப்ட்டார்கள். அவர்கள் இரயிலிலிருந்து வந்த பின் எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிடலாம் என்று காத்திருந்த கலெக்டர், சத்தியமூர்த்தியும் குமரப்பனும் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் அங்கேயே அவர்களையும் சாப்பிடச் செய்து விட்டார். டெல்லியிலிருந்து இண்டர்வ்யூவுக்குத் தேதி குறிப்பிட்டு வந்திருப்பதாகச் சத்தியமூர்த்தியிடம் மகிழ்ச்சியோடு தெரிவித்தார் அவர். "இண்டர்வ்யூவில் வெற்றி கிடைத்து நீ தேர்வு பெறுவதைப் பற்றி எனக்குச் சந்தேகமே இல்லை! அதற்கான ஏற்பாடுகளைக் கூட நான் செய்துவிட்டேன் சத்தியம். நீ நாளை மாலை இங்கிருந்து சென்னை புறப்பட்டு நாளன்றைக்குக் காலையில் சென்னையிலிருந்து கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லிக்குச் செல்ல வேண்டும். டெல்லியில் எல்லாம் சரியாக முடிந்துவிட்டால் அடுத்த மாத மத்தியில் பம்பாயிலிருந்து புறப்படும் லுப்தான்ஸா என்ற ஜெர்மானிய ஜெட் விமானத்தில் உன் பிரயாணம் இருக்கும். அதற்கும் அதிக நாள் இல்லை. எல்லாமே துரிதமாகச் செய்ய வேண்டும். அவர்கள் செலவில் அழைத்துப் போகிறார்கள் என்றாலும் உன் கைச்செலவுக்கும் கொஞ்சம் பணம் கொண்டு போவது நல்லது. அதற்கு நமது ரிசர்வ் பாங்கியிலுள்ள எக்ஸ்சேஞ்சு கண்ட்ரோலுக்கு இப்போதே மனு செய்து வைக்க வேண்டும். 'எஜுகேஷனல் டூர்' என்பதால் அதிக சிரமமில்லாமல் 'பெர்மிட்' கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்" என்று தொடங்கி கலெக்டர் அப்போதே பிரயாணம் அருகில் வந்துவிட்டது போல் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். டெல்லியிலிருந்து அவனுக்கு வந்திருந்த 'இண்டர்வ்யூ கார்டை'யும் பிற விவரங்களையும் அவன் கையில் கொடுத்துக் கலெக்டர் அவர்களிருவருக்கும் விடையளிக்கும் போது இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் விழித்தெழுந்து கலெக்டரின் மகன் அவர்களைக் காரில் பேச்சியம்மன் படித்துறைத் தெரு வரையில் கொண்டு வந்து விட்டுச் சென்றார். சத்தியமூர்த்தியும், குமரப்பனும் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டுக் காத்துக் கொண்டு நின்றார்கள். அம்மா வந்து கதவைத் திறந்த போது அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. "என்னடா, சத்தியம்! இந்த நேரத்துக்கு எந்த இரயிலில் வந்தாய்? அப்பா கூட ஏதோ ஜமீந்தார் காரியமாக அங்கே தான் மல்லிகைப் பந்தலுக்கு வந்திருக்கிறார்? உன்னை வந்து பார்த்தாரோ இல்லையோ? ஏது இப்படித் திடீரென்று புறப்பட்டு வந்தாய்?" என்று கேட்டவளுக்கு உள்ளே போய் எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னான் சத்தியமூர்த்தி. குமரப்பனும் அன்றிரவு அங்கேயே தங்கினான். வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றிக் கூறிய பின், "அப்பாவுக்கும் எனக்கும் தகராறு. 'வீட்டு வாசற்படி ஏறாதே. முகத்திலே விழிக்காதே' என்று கத்திவிட்டுப் போயிருக்கிறார். நான் ஜமீந்தாரிடத்திலே மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று அப்பா முரண்டு பிடித்தார். நான் முடியாதென்று மறுத்தது பொறுக்காமல் அவருக்கு ஆத்திரம் வந்தது. அதற்கப்புறம் அவரும் என்னைப் பார்க்க வரவில்லை" என்று அவன் கூறிய போது அம்மா பெருமூச்சு விட்டாள்.

"என்னமோ போ! நீ இப்படியே வீட்டோட வாசலோட ஒட்டுதல் இல்லாத பிள்ளையாகப் போய்க்கிட்டிருந்தா விடிஞ்சாப் போலத்தான். ஏதுடா, பெரியவங்களையோ தன் மனிசாளின்னு ரெண்டு பேரையோ கலந்து பேசிக்காம இதெல்லாம் ஏற்பாடு செய்யறோமேன்னு நீ கொஞ்சமாவது கவலைப்படறியோ? தேசம் விட்டுத் தேசம் போயி ரெண்டு மூணு வருசம் இருக்கப் போறே! அதைப் பற்றிப் பெத்த தகப்பனிட்ட ஒரு வார்த்தை கேட்கலை. நீ செய்யறது உனக்கே நல்லாயிருந்தா சரி" என்று அலுத்துக் கொண்டாள் அவன் அம்மா.

"உன்னைப் பார்க்காமல் சொல்லாமல் போக மனசு இல்லே அம்மா! தங்கைகள் ஆண்டாள், கல்யாணி இவர்கள் மேலே வைச்சிருக்கிற பிரியமும் ஒரு காரணம். இன்று இங்கே அப்பா இருந்திருந்தால் என்னை வீட்டு வாசற்படி ஏற விட்டிருக்க மாட்டார். என்னை விட இப்போது ஜமீந்தாரும், குடி கெடுக்கிற கண்ணாயிரமும் தான் ரொம்ப வேண்டியவர்களாகி விட்டார்கள் அவருக்கு. 'தன் மனிசாள்' என்று நீ சொல்கிறாய்! 'தன் மனிசாள்' என்ன நல்லது செய்யறாங்க? இதோ இந்தக் கலெக்டர் எப்போ எனக்கு வாத்தியாராயிருந்தாரு. நான் கேட்டுச் செய்யாமல் அவராகவே இவ்வளவும் எனக்கு செய்கிறார். இந்த மாதிரிப் பெருந்தன்மையைத் தன் மனிசாளிடத்திலே கூட எதிர்பார்க்க முடியறதில்லை" என்று சத்தியமூர்த்தி பதில் சொல்லிய போது குமரப்பனும் அதை ஆமோதிப்பது போல் அந்த அம்மாளிடம் இரண்டு நிமிஷம் ஏதோ தன்மையாகப் பேசிக் கொண்டிருந்தான்!

"படுத்துக் கொள்ளுங்கள்! காலையில் பேசிக் கொள்ளலாமே" என்று இரண்டு பேருக்கும் படுக்கை தலையணைகளைக் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனாள் அம்மா. படுக்கையை விரித்துப் படுத்தவுடனே குமரப்பன் நன்றாகத் தூங்கிப் போய்விட்டான். சத்தியமூர்த்திக்குத் தூக்கம் வரவில்லை. மோகினி தனக்குத் துரோகம் செய்து விட்டு ஜமீந்தாரை இரகசியமாக மணந்து கொண்டு அவருக்கு உபசாரம் செய்கிறாள் என்பதை நம்பவும் முடியாமல் மறந்துவிடவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது அவன் மனம். அவளோடு தொடர்புடைய எண்ணங்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்து அவனுடைய நிம்மதியையும் தூக்கத்தையும் பாழாக்கிக் கொண்டிருந்தன. இதே வீட்டு வாசலில் தன்னைத் தேடி வந்து இரயிலில் தான் தவறவிட்ட பேனாவைக் கொடுத்துவிட்டு, "என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் வருகிறேன்" என்று சித்திரம் போல் அடக்கமாய் நின்று மோகினி தெருவிலிருந்தவாறே சிரித்தபடி தன்னைக் கைகூப்பிச் சென்றதும், அவளுடைய கைபட்டு மணந்த அந்தப் பேனாவை நெஞ்சின் மேலேயும் அவளைப் பற்றிய அனுதாபத்தை நெஞ்சின் உள்ளேயும் பதித்துக் கொண்டு அன்று தான் அவளுக்காக மனம் உருகியதையும் இப்போது நினைத்தான் சத்தியமூர்த்தி. அதன் பின்பு மீனாட்சி கோவில் பிரகாரத்தில், "உயிரைக் கொடுத்த தெய்வத்தைத் தரிசிக்க வந்தேன். அப்படி வந்த இடத்தில் உயிரைக் காப்பாற்றிய தெய்வத்தின் தரிசனம் கிடைத்திருக்கிறது" என்று சொல்லிவிட்டுக் கீழே குனிந்து அவள் தன் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டதையும், "ஆதரவற்றதெல்லாம் ஏழைதான்! அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை" என்று சிரித்தபடி தனக்கு மறுமொழி கூறியதையும், சித்திரா பௌர்ணமியன்று அவளுடைய நாட்டியத்தைப் பார்த்துத் தன் மனம் உருகியதையும், கடைக்கண்ணால் நோக்கிப் புன்னகை கிறங்கும் இதழ்களைத் திறந்து, "இந்த வீட்டில் நீங்கள் எடுத்து வாசிப்பதற்காகவே உங்கள் காலடியில் காத்துக் கிடக்கும் வாத்தியம் இதோ இருக்கிறது" என்று அவள் தன் நெஞ்சைத் தொட்டுக் காண்பித்ததையும், "அந்த அதிகாலை நேரத்தில் இரயிலில் மேளம் கொட்டாமல் நாதஸ்வரம் வாசிக்காமல் பாணிக்கிரணம் செய்து கொண்டது போல் கையைப் பிடித்து இழுத்தீர்களே" என்று அவள் தன்னிடம் உணர்வு மல்கக் கூறியதையும், கற்பையும் கன்னிமையையும் காத்துக் கொள்வதற்காகவே உயிர் நீத்த தன் பெரிய பாட்டி மதுரவல்லியோடு அவள் தன்னை ஒப்பிட்டுப் பேசியதையும், முருகன் படத்துக்கு அவள் சூட்டிய மாலை அதற்கு நேர் கீழே அமர்ந்திருந்த அவன் கழுத்தில் நழுவி விழுந்த போது அதைக் கழற்ற முற்பட்ட அவனுடைய தோள்களைப் பூச்செண்டு போன்ற தன் இரு வளைக்கரங்களாலும் பற்றிக் கொண்டு, "கழற்றாதீர்கள்! மாலையை எங்கே சூட்டவேண்டுமென்று நினைத்தேனோ அங்கேயே அது விழுந்துவிட்டது" என்பது போல் ஏதோ கூறிச் சிரித்ததையும் அவளுடைய வீட்டுக் கண்ணாடியில் தானும் அவளும் சேர்ந்து தெரிந்த கோலத்தை மணக்கோலமாக வருணித்து அவளே நாணியதையும் "என்னுடைய அன்பு, மழையைப் போல் எப்போதாவது பெய்து மறைவதில்லை. கதிரவனைப் போல் நித்தியமாக உதிப்பது" என்று அவளே உறுதி கூறியதையும் "உங்கள் ஞாபகத்தில் தங்கி வாழ்வதை விட எனக்கு வேறு பாக்கியமேது" என்று அவள் மனம் நெகிழ்ந்து கூறியதையும், அவளுடைய படங்களோடு குமரப்பன் தனக்குக் கடிதம் எழுதியிருந்ததையும், அவள் தனக்கு எழுதியிருந்த கடிதமொன்றைத் தன் பெட்டியிலிருந்து குமரப்பன் தெரியாமல் எடுத்துப் படித்துவிட்டுத் தன்னைப் பாக்கியசாலியாக வருணித்ததையும், கார் விபத்தில் தாய் இறந்து அவள் ஆஸ்பத்திரியில் கிடந்த போது நண்பனோடு மதுரைக்குப் போய்ப் பார்த்த வேளையில், "நான் மானசீகமாக உங்களுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டேன். சாகும் போது உங்கள் மனைவியாகவே சாவேன்" என்று அவள் தன்னிடம் அழுது கண்ணீர் சிந்தியதையும், வசந்தசேனை சாருதத்தன் கதையைத் தான் அவளுக்குக் கூறியதையும், பொன்னுசாமிப் பிள்ளைத் தெருப் பாட்டு வாத்தியாரிடம் அவளைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு தான் பெருமைப்பட்டதையும், கோச்சடை ஜமீன் மாளிகையில் அடைபட்டுக் கிடந்த போது அவள் தன்னிடம் அழுது வேண்டிய வேண்டுகோளையும், "உங்களோடு வாழ்ந்ததாகப் பாவித்தபடியே இறப்பது கூட என் சௌபாக்கியம்" என அப்போது அவள் கூறிக் கதறியதையும், அலங்கரித்த தேர் போல் அவள் தன் எதிரே நடந்த நாட்களையும், சிரித்த சிரிப்புக்களையும், அழுத அழுகைகளையும் எல்லாவற்றையும் நினைத்து - 'அப்படிப்பட்டவள் இன்று ஒழுக்கக்கேடும் குணக்கேடும் உள்ள இந்த ஜமீந்தாரை மணந்து அவருக்கு ஓடியாடி உபசாரம் செய்யத் துணிந்தது எப்படி? என்னால் இதை நம்பவே முடியவில்லை' என்று நினைத்து நினைத்து அந்த நினைப்புக்கு ஒரு முடிவும் தெளிவும் கிடைக்காமல் சத்தியமூர்த்தி மனம் கொதித்தான்.

'பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்று கற்புள்ள பெண்களைப் புகழ்ந்த அதே வள்ளுவர், 'இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம் போல வேறுபடும்' என்றும் வேறொரு இடத்தில் உறுதியாகக் கூறியிருக்கிறார். வேறுபடுவதில் பெண் மனம் அவ்வளவு பலமற்றதா? செய்த சத்தியங்களையும் சொல்லிய காதல் மொழிகளையும் அறவே மறந்து போய் இந்த ஜமீந்தார் காலடியில் விழுந்து பணிவிடை புரிய இவள் எப்படித் தன்னைத் தயாராக்கிக் கொண்டாள்? இவள் எக்கேடு கெட்டால் என்ன? நான் ஏன் இவளுக்காக இவ்வளவு தவிக்க வேண்டும்? இவ்வளவு நினைக்க வேண்டும்? என் மனம் இந்தத் தவிப்பையும் கொதிப்பையும் இன்னும் ஏன் விடமாட்டேனென்கிறது?' என்று தன்னையே கடிந்து கொண்டு வலிந்து தூங்க முயன்றான் அவன். விடிகாலை மூன்று மணிக்கு மேல் அயர்ச்சி தாங்காமல் தூக்கம் மெல்ல வந்தது. அதிலும் ஒரு சொப்பனம். 'சந்தேகம் உங்கள் கண்களை மறைக்கிறது! நான் துர்பாக்கியசாலி. என்னைக் கெட்டவளாக நினைக்காதீர்கள்' என்று மோகினி தன்னிடம் வந்து கதறுவது போல் கனவு கண்டான் அவன்.

காலையில் விடிந்ததும் பத்துப் பத்தரை மணிக்கு மறுபடியும் கலெக்டரைப் பார்க்கப் போனார்கள் அவர்கள். பாஸ்போர்ட், ரிஸர்வ் பேங்க் விண்ணப்பம் பற்றி அவர் சில யோசனைகளைக் கூறினார். சென்னையிலும் டில்லியிலும் சிலரைப் பார்க்குமாறு சத்தியமூர்த்திக்கு அறிமுகக் கடிதங்கள் கொடுத்தார். அவருடைய வீட்டிலிருந்து நேரே மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போனார்கள் நண்பர்கள். அம்மன் கோவிலில் திருச்சுற்றை வலம் வரும்போது அந்தப் பழிகாரியின் நினைவு வந்து சத்தியமூர்த்தியின் மனத்தைக் கலக்கியது. அன்று மாலை ஆறரை மணியளவில் அவன் சென்னைக்கு இரயிலேற வேண்டும். அதே இரயிலில் குமரப்பனும் அவனோடு கூட வந்து மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ்ஸில் போய் விடுவதாக ஏற்பாடு செய்திருந்தார்கள். "டெல்லியில் இண்டர்வ்யூ முடிந்ததும் மதுரை வந்து என்னைப் பார்த்துவிட்டு அப்புறம் மல்லிகைப் பந்தலுக்குப் போய் உன்னுடைய ராஜிநாமாவைக் கொடுக்கலாம். நான் எல்லா விவரமும் சொல்கிறேன்" என்று கூறியிருந்தார் கலெக்டர். சந்தர்ப்பங்களும், அநுபவங்களும் மாறி வாய்ப்புகள் அணுகும் போது மனித வாழ்க்கை மிக வேகமாக ஓடி விடுவது போல் அவசரப்படுகிறது. எல்லாம் விரைந்து நடைபெறுவது போல் ஒரு பிரமை உண்டாகிறது. இப்போது சத்தியமூர்த்திக்கும் அந்தப் பிரமை உண்டாகியது.

அத்தியாயம் - 61

இந்தத் தேசத்தின் இன்றைய வாழ்க்கையில் வாழ வேண்டும் என்கின்ற ஆசைகள் ஒருபுறமும் வாழ்வதற்கு வேண்டிய சௌகரியங்கள் வேறு ஒரு புறமுமாக முரண்பட்டு நிற்கின்றன.

மாறுதலும் விரைவும் மிக நெருங்கிய உறவினர்கள் போல் இருக்கிறது. அதனால் தான் சந்தர்ப்பங்கள் மாறும் போது வாழ்க்கையே மிகவும் வேகமாக ஓடிவிடுவது போல் தோன்றுகிறது.

"என்ன தான் விரோதம் வந்துவிட்டாலும அவரிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் நீ இதைச் செய்யலாமா? என்னமோ போ. வீட்டோடு ஒட்டாமல் போயாச்சு?" என்று அம்மா கண்கலங்கி விடைகொடுத்த போதும், தங்கைகள் ஏறக்குறைய அழுகிற நிலைக்கு மனம் வருந்தியதையும் கண்டும் காணாதவனாகப் புறப்பட்டு விட்டான் சத்தியமூர்த்தி. கலெக்டர் இரயில் நிலையத்துக்கு வந்து வாழ்த்துக் கூறி அவனை வழியனுப்பினார்.

மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்தில் அந்த எக்ஸ்பிரஸ் வண்டி மூன்று நிமிடங்கள் நின்றது. குமரப்பன் மலைக்கு பஸ் ஏறுவதற்காக அங்கே இறங்கிக் கொண்டான். மறுநாள் காலை சத்தியமூர்த்தி சென்னையை அடையும் போது இரயில் இரண்டரை மணி நேர தாமதத்தோடு ஒன்பதே முக்கால் மணிக்கு எழும்பூருக்குப் போய்ச் சேர்ந்ததனால் நிலையத்திலேயே குளித்து உடை மாற்றிக் கொண்டு அவசரம் அவசரமாகச் சென்டிரல் நிலையத்துக்குப் போய் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸைப் பிடிப்பதற்குத்தான் நேரம் சரியாயிருந்தது. கலெக்டர் கடிதம் கொடுத்துச் சொல்லியனுப்பியிருந்த சென்னைப் பிரமுகர்களை டில்லியிலிருந்து திரும்பும் போதுதான் பார்க்க முடியுமென்று தோன்றியது. பாரதத்தின் தலைநகருக்குத் தமிழ்நாட்டின் தலைநகரிலிருந்து புறப்படும் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் தனக்குரிய சகலவிதமான கம்பீரங்களுடன் ஒன்றே முக்கால் நாள் ஓடி அலுத்த களைப்போடு டெல்லி மாநகரை அடைந்த போது - டெல்லியிலுள்ள மதராஸி ஓட்டல் ஆட்கள் ஸ்டேஷன் பிளாட்பாரத்தை முற்றுகையிட்டுக் கிராக்கி பிடிப்பதற்குப் பறந்தார்கள். மறுநாள் காலையில் இண்டர்வ்யூ. களைப்பாக இருந்ததனால் ஓய்வு கொள்ள விரும்பிய சத்தியமூர்த்தி ஸ்டேஷனுக்கு வந்திருந்த ஹோட்டல் ஏஜெண்டுகளில் யாரோ ஒருவரோடு புறப்பட்டுப் போய் மலிவான ஏதோ ஒரு ஹோட்டலில் தங்கினான். கையில் பணம் குறைவாகக் கொண்டு வந்திருந்ததனால் இண்டர்வ்யூ முடிந்ததும் அடுத்த இரயிலில் திரும்பத் திட்டம் போட்டு ஸ்டேஷனில் இறங்கியதும் முன்னேற்பாடாகத் திரும்புவதற்கு டிக்கட் கூட எடுத்தாயிற்று.

ஜெர்மன் தூதராலயத்தில் மறுநாள் காலையில் நிகழ்ந்த இண்டர்வ்யூவுக்கு மொத்தம் ஏழு பேர்கள் வந்திருந்தார்கள். அதில் சத்தியமூர்த்தி உள்பட மூவர் முதல் வகுப்பில் தேறிய ஆனர்ஸ் பட்டதாரிகள். இருவர் வெறும் எம்.ஏ.க்கள். இன்னும் இருவர் வெறும் பி.ஓ.எல். தகுதி மட்டுமே உடையவர்கள். இண்டர்வ்யூவில் தூதராலயத்தைச் சேர்ந்தவர்கள் உலக அரசியல், நிலவியல் பற்றிச் சில கேள்விகள் கேட்டனர். மற்றவர்கள் மொழியியல் பற்றிச் சில கேள்விகள் கேட்டார்கள். சத்தியமூர்த்தி திருப்திகரமாகவும் நன்றாகவும் மறுமொழிகளைக் கூறினான். இண்டர்வ்யூ முடிந்ததும் கலெக்டரின் அறிமுகக் கடிதங்களுக்குரியவர்கள் சிலரைச் சந்தித்தான். எல்லாரும் 'நீங்கள் தேர்ந்தெடுக்கப் பெறுவது உறுதி. அதில் சந்தேகமே படவேண்டாம்' என்ற தோரணையில் அவனிடம் நம்பிக்கையளித்துப் பேசினார்கள். அங்கிருந்தே கலெக்டருக்கும் நண்பன் குமரப்பனுக்கும் கடிதங்கள் எழுதினான் சத்தியமூர்த்தி. திரும்பும் போது மதுரையைச் சேர்ந்த பார்லிமெண்ட் உறுப்பினர் ஒருவரை இரயில் நிலையத்தில் இரயிலேறுகையில் தற்செயலாக அவன் சந்திக்க நேர்ந்தது. அவரை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவரோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான் அவன். அவரும் அவன் வந்த காரியத்தை அறிந்து அவனை மனப்பூர்வமாகப் பாராட்டினார்.

"அப்படியா? ரொம்ப சந்தோஷம்! இரண்டாவது உலகப் போருக்குப் பின் அமெரிக்க ஐரோப்பிய உதவிகளும் தன் சொந்தத் திறமையும் சேர்ந்து மேற்கு ஜெர்மனியை இணையிலா வளர்ச்சியடையச் செய்து விட்டன. அப்படி வளர்ந்த நாடுகளுக்கு உங்களைப் போன்ற இளைஞர்கள் சென்று திரும்புவது பல துறைகளில் வளராத இந்த நாட்டுக்கு எவ்வளவோ பயன்படும். நாம் இன்னும் எவ்வளவோ வளர வேண்டும். வளர வேண்டும் என்னும் உணர்வு வருவதற்கு முதலில் வளர்ந்திருப்பவர்களைக் கண் திறந்து பார்க்க வேண்டும்" என்று அவனை உற்சாகமூட்டுவதற்காக மேற்கு ஜெர்மனியைப் பற்றிய புதுமைகளைப் புகழ்ந்து கூறத் தொடங்கியிருந்தார் அந்தப் பார்லிமெண்ட் உறுப்பினர். அவர் முதல் வகுப்பிலும் அவன் மூன்றாம் வகுப்பிலுமாகப் பயணம் செய்தாலும், பயணத்தினிடையில் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். சென்னையில் ஒரு நாள் தங்கி மாக்ஸ் முல்லர் பவனிலும், ஜெர்மன் கான்ஸல் ஜெனரல் அலுவலகத்திலும், இந்தோ - ஜெர்மன் கல்ச்சுரல் சென்டர் ஆஃப் கதே இன்ஸ்டிடியூட் - சென்னைக் கிளையிலும் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தான் அவன்.

சத்தியமூர்த்தி மதுரை திரும்பிய தினத்தன்று கலெக்டர் ஊரில் இல்லை. எங்கோ முகாமில் இருந்தார். மதுரையிலிருந்தே கடிதம் மூலம் மல்லிகைப் பந்தல் கல்லூரிக்கு லீவை இன்னும் இரண்டு நாட்கள் வளர்த்து எழுதினான். மறுநாள் கலெக்டர் 'காம்ப்'லிருந்து திரும்பவே அவரைப் பார்த்து எல்லா விவரமும் கூறிய பின் தன் வீட்டுக்கும் ஒரு நடை சென்றிருந்தான்.

சத்தியமூர்த்தி டெல்லியிலிருந்து திரும்பிய தினத்தன்று அவனுடைய தந்தை மதுரையில் தான் இருந்தார். ஆனால் அவன் அம்மாவைப் பார்த்துச் சொல்லிக் கொள்ளப் போயிருந்த போது அவர் வீட்டில் இல்லை. அம்மா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் திரும்பி வருகிற வரை வீட்டில் காத்திராமல் அம்மாவிடமும் தங்கையிடமும் மட்டும் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டான் சத்தியமூர்த்தி. அவன் புறப்படும் போது வாசல் வரை கூட வந்த தங்கை ஆண்டாள், "அண்ணா! நீ ஊரில் இல்லாத போது உன் பெயருக்கு நேற்றோ முந்தாநாளோ மல்லிகைப் பந்தல் தபால் முத்திரையோடு ஒரு ரிஜிஸ்தர் கவர் வந்தது. போஸ்ட்மேன் பழக்கத்தினால் தன்மையாக அப்பாவிடமே கையெழுத்து வாங்கிக் கொண்டு அதைக் கொடுத்து விட்டான். அதிலே என்னதான் இருந்ததோ? தெரியலை. அப்பா அதை வாங்கிப் பிரித்துப் படித்துவிட்டு ரொம்பக் கோபமா அப்படியே கிழிச்சி அடுப்பிலே கொண்டு போய்ப் போட்டாரு" என்று காதருகே சொல்லி விட்டுப் போனாள்.

'குமரப்பனை அவருக்குப் பிடிக்காது. அவன் எனக்கு ஏதாவது கடிதம் எழுதியிருப்பான். அதைக் கிழித்து அடுப்பில் போட்டிருப்பார்'" என்று முதலில் நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. ஆனால் அதே சமயத்தில் நண்பன் தனக்கு பதிவுத் தபாலில் என்ன கடிதம் எழுதியிருக்க வேண்டுமென்ற சந்தேகமும் உண்டாகியது. அப்போதிருந்த பரபரப்பில் அதைப் பற்றி அதிகம் சிந்திக்க நேரமில்லை அவனுக்கு. மோகினி எழுதிய கடிதமொன்றைப் பாரதி வாங்கிப் பதிவுத் தபால் மூலம் தன்னுடைய மதுரை முகவரிக்கு அனுப்பியிருக்க முடியும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லையாதலால் அந்த நினைவே அப்போது அவனுக்கு வரவில்லை. மூன்றாம் நாள் காலை மல்லிகைப் பந்தலுக்குப் பஸ்ஸில் வந்து இறங்கிய போது, இன்னும் சில நாட்களில் டில்லியிலிருந்து விவரம் தெரிந்த பின் பிரின்ஸிபலிடம் தனது ராஜினாமாக் கடிதத்தைக் கொடுப்பதென்ற உறுதியான முடிவுக்கு வந்திருந்தான் அவன்.

சத்தியமூர்த்தி மதுரைக்கும் சென்னைக்கும் டில்லிக்கும் போய்விட்டுத் திரும்புவதற்குள் மல்லிகைப் பந்தலில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்திருந்தன. ஜமீந்தார் உடல்நிலை தேறி எழுந்திருந்தார். பாரதி தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டு இரண்டு நாள் ஆகியிருந்தது. மல்லிகைப் பந்தல் நகரின் மற்றொரு பகுதியில் மாபெரும் தோட்டத்துக்கிடையே இருந்த மஞ்சள்பட்டி ஜமீன் மாளிகை சில இடங்களில் புதுப்பித்துக் கட்டப் பெற்றுக் கவர்ச்சிகரமான டிஸ்டெம்பர் பூச்சுடன் செப்பனிடப்பட்டிருந்தது. நவீன மின் விளக்கு அழகுகளும், புதுப்புது மேஜை நாற்காலிகளும், சோபாக்களும், கட்டில்களும், மெத்தைகளும் வாங்கிப் போட்டு அழகு மாளிகையினை, அரண்மனையாக்கியிருந்தார் கண்ணாயிரம். இதற்காகப் பட்டனத்திலிருந்து இரண்டு லாரிகள் நிறைய சோபா, நாற்காலிகள், முக்கிய மரச்சாமான்களும், சுவரில் பதிப்பதற்கான பெல்ஜியம் கண்ணாடிகளும் வந்திருந்தன. சௌகரியமுள்ளவர்களுக்குக் கிராமமும் பட்டினம்தான். ஏனென்றால், சௌகரியமில்லாதவர்கள் பட்டினத்திலும் கிராமத்தின் அசௌகரியங்களை அடைகிறார்கள். சௌகரியமுள்ளவர்கள் கிராமத்திலும் பட்டினத்தின் வசதிகளை அடைய முடிகிறது. இறைக்க இறைக்க ஊறும் பேய் ஊற்றைப் போல் ஜமீன் ஒழிப்புக்குப் பின்னும் ஜமீந்தாரிடம் பணம் ஊறிக் கொண்டிருந்தது. அவர் விரும்பிய சௌகரியங்கள் எல்லாம் இருக்குமிடத்தைத் தேடி வந்தன. ஒவ்வொரு பெரிய ஊரிலும் அந்தத் தனி மனிதருக்கு மாபெரும் தியேட்டர்களைப் போல் பெரிய வீடுகள் இருந்தன.

'பல பங்களாக்களிலிருக்கும் கார் ஷெட்டுக்களை விட சிறிய மோசமான குடிசைகளில் இந்தத் தேசத்து ஏழைகள் குழந்தை குட்டிகளோடு மூச்சுத் திணறிச் சாகிறார்கள். அதே சமயத்தில் இரண்டொரு மனிதர்களே வசிக்கும் சில பங்களாக்களில் மனிதர்களுக்காக வெளியே இருக்கும் குடியிருப்புக்களை விட அழகான கார் ஷெட்டுகள் இருக்கின்றன. வரவர இது ஒரு வேடிக்கையான இரண்டுங்கெட்டான் தேசமாகிவிட்டது! எளிமையிலும் முழுமையாக நம்பிக்கை இல்லை. குணத்தையும், ஒழுக்கத்தையும் பேச்சில், எழுத்தில் கொண்டாடுகிறார்கள். பணத்தையும் பதவியையும் செல்வாக்கையுமே வாழ்க்கையில் நடைமுறையில் மதித்துப் பயப்படுகிறார்கள். புராதனமான ஆன்மீகப் பாரம்பரியத்தைத் தங்களுடையதாகச் சொல்லி மற்ற நாட்டாரிடம் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். சொந்த நாட்டிலோ அன்றாட வாழ்வில் வெறும் காரியவாதிகளாக - லோகாயதவாதிகளாக வாழ்கிறார்கள். இலட்சியத்தில் - நினைப்பளவில் கடவுளைப் பக்தி செய்கிறார்கள். நடைமுறையில் கண்முன்னால் சௌகரியமுள்ள மனிதனைப் பக்தி செய்து மடிகிறார்கள். இந்தத் தேசத்தின் இன்றைய வாழ்க்கையில் 'வாழ வேண்டும் என்கின்ற ஆசைகள் ஒரு புறமும், வாழ்வதற்குரிய சௌகரியங்கள் வேறு ஒரு புறமுமாக முரண்பட்டு நிற்கின்றன' என்று நவநீதகவி ஒரு கூட்டத்தில் சொற்பொழிவாற்றியிருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்கில் நடைபெற்ற அகில உலகக் கவி சம்மேளனத்தில் இந்தியாவிலிருந்து தமிழ் நாட்டின் பிரதிநிதியாகப் போய்க் கலந்து கொண்டு உலக சமாதானப் பண்ணிசைத்து விட்டுத் திரும்பிய பின் தமிழகத்தின் முக்கியமான ஊர்களிலெல்லாம் - அந்தக் கவிஞன் பெருமானுக்கு வரவேற்பளித்தார்கள். அந்தச் சமயத்தில் மதுரையிலும் ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது துன்பப்படுவோர்களின் ஊமைத் துன்பங்களையெல்லாம் சொல்லாய்க் கவிதையாய் உருவாக்கும் அந்தக் கவிஞர் திலகர் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் 'உலக அரங்கில் இந்தியாவின் சமூக வாழ்வு எப்படி ஒப்பிடப்பட முடியும்?' என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு இந்தக் கருத்துக்களையெல்லாம் தெரிவித்தார். அன்று அந்தக் கூட்டத்துக்குக் குமரப்பனும், சத்தியமூர்த்தியும் மற்ற நண்பர்களும் போயிருந்தார்கள். அன்று அவர் பேசிய கருத்துக்கள் எல்லாம் சத்தியமூர்த்தியின் மனத்தில் சிந்தனைகளைத் தூண்டியிருந்தன. அந்தக் கருத்துக்களை மையமாகக் கொண்டு பலநாள் பல சந்தர்ப்பங்களில் அவன் தன்னுடைய சொந்தச் சிந்தனைகளை வளர்த்திருக்கிறான். டில்லியிலிருந்து திரும்பும் போது பாராளுமன்ற உறுப்பினராகிய மதுரைப் பெரிய மனிதர் 'வளராத நாடுகளில் ஒன்றாகிய பாரதம் வளர்ந்த நாடுகளைக் கண்டறிவதனால் மட்டுமே வளர முடியும்' என்று அடிக்கடி சொல்லி வந்த வேளையில் கூட நவநீதக் கவியின் இந்தப் பழைய சொற்பொழிவைத்தான் சத்தியமூர்த்தியால் நினைக்க முடிந்தது. பொது வாழ்வில் தனி மனிதனுடைய சமுதாய அந்தஸ்து உயராத வரை இந்தியா வளரவும் வழியில்லை என்று எண்ணினான் அவன். இந்த விநாடி வரையில் பணத்தோடும், செல்வாக்கோடும், பதவியோடும் சேர்ந்திருக்கிற மனிதனைத் தவிர குணத்தோடும், நியாய நேர்மைகளோடும் சேர்ந்திருக்கிற மனிதனுக்குச் சமுதாய அந்தஸ்து என்பதே இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று சத்தியமூர்த்தி ஆசைப்பட்டான். எனவே பலவிதத்திலும் வளர்ச்சியடைந்த நாடு ஒன்றின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் போய் இரண்டாண்டுகள் இருக்கப் போகிறோம் என்ற வாய்ப்பை அவன் மனம் ஒவ்வொரு விநாடியும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால் இத்தனை எண்ணங்களுக்கும் நடுவே 'மோகினி தன்னை ஏமாற்றிவிட்டாள்' என்ற வேதனையும் ஆறாததோர் பச்சைப் பசும் புண்ணாக அவன் மனத்தில் ஊறிப் போயிருந்தது. முன்பு ஒரு நாள் நண்பன் குமரப்பனிடம் பேசும் போது 'ஐ கேன் டை வித் ஹெர் - பட் நாட் லிவ் வித் அவுட் ஹெர்' என்று அவன் மோகினியைப் பற்றி உணர்ச்சி வசப்பட்டுக் கூறியிருந்தான். அன்று தான் இப்படிக் கூறியதைக் கேட்டு, 'உண்மையான அன்பு - அதாவது காதல் கூடப் பல சமயங்களில் மனிதன் தனக்குப் பூட்டிக் கொள்ளும் விலைமதிப்பற்ற விலங்காகத்தான் இருக்கிறது. உண்மையான அன்புதான் கயஸை லைலாவுக்காகப் பைத்தியம் பிடித்து அலைய வைத்தது. தேவதாஸைப் பாருவுக்காக இரத்தம் கக்கிச் சாக வைத்தது. அம்பிகாபதியைக் கழுவேற்றியது. உன்னுடைய காதலுக்கு முன்பாக வந்து நிற்கும் பிரச்சினைகளையும் எதிர்ப்புக்களையும் பார்க்கும் போது என் உயிர் நண்பனாகிய நீ இன்னும் முகத்தில் ஒளியிழந்து கண்களில் சிந்தனை தேக்கிக் கால்கள் நடை சோர்ந்து வாழ்க்கை வீதியில் அலைய நேரிடுமே என்றுதான் பரிதாபமாக இருக்கிறது' என்று குமரப்பன் சிரித்துக் கொண்டே பதில் சொல்லியிருந்ததைச் சத்தியமூர்த்தி இப்போது நினைவு கூர்ந்தான். 'பெண்ணின் அன்பு என்பது மனிதனுடைய மனத்தைப் பிணிக்கும் உறுத்தாத விலங்குகளில் ஒன்றாகத்தான் இருக்கும் போலும்' என்று இந்த விநாடியில் அவனும் தனக்குத் தானே உணர்ந்தாக வேண்டியிருந்தது.

"ஆண் பிள்ளைகளின் வீரத்தையும், தன்மானத்தையும் அழிக்கிற அழகுகள் உலகத்துக்கு எந்த லாபத்தைத் தர முடியும்? கிரேக்க நாட்டு ஹெலனின் அழகிலே ஆயிரம் கப்பல்கள் பாய் விரித்துப் பறக்கத் தூண்டும் கட்டளைக் கவர்ச்சி இருந்ததாம் எகிப்திய அழகி கிளியோபாட்ரா சீஸரைச் சீரழித்தாள். ஹெலன், கிளியோபாட்ரா, சீதை, நூர்ஜஹான், மும்தாஜ், அகல்யை, அனார்க்கலி ஆகியவர்களின் இணையிலா அழகினால், ஆண்பிள்ளைகள் பலர் பிரச்சினைக்குரியவர்களாகவும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறவர்களாகவும் ஆகி அவஸ்தைப்பட்டிருக்கிறார்கள்" என்றே நினைத்தான் அவன். அந்த நினைப்பு நீங்குவதற்குள்ளாகவே 'மோகினியின் உடலழகைக் காட்டிலும், மனத்தின் அழகைத்தான் நான் அதிகமாக விரும்பினேன். அந்த மன அழகே பொய்யாய்ப் போன பின் நான் அவளை நினைத்துத்தான் என்ன பயன்?' என்று கழிவிரக்க ஞாபகமும் அவனுக்கு உண்டாயிற்று. அவளை இப்போது நம்பிக்கைத் துரோகியாகப் புரிந்து கொண்டு விட்டான் அவன். ஒரு காலத்தில் அவன் அவளுடைய உயிரைக் காப்பாற்றினான்; அவளோ தன்னுடைய நம்பிக்கையைக் கூடக் காப்பாற்றாமல் துரோகம் செய்து விட்டாளென்று இன்று அவனுக்குத் தெரிந்தது. இப்படித் தனக்குத்தானே குமுறும் மனக் குமுறல்களையெல்லாம் அடக்கிக் கொண்டு புறத்தே அமைதியாக இருப்பது போலவும் இயல்பாக இருப்பதுபோலவும் நடமாடிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. ஏமாற்றத்தையும் துரோகத்தையும் அருகருகே சந்திக்கும் போது அவற்றை விட்டு விலகி ஓடிவிட வேண்டும் போலத் தவிக்கும் இயற்கையான மனத் தவிப்புக்கு ஏற்றாற் போல வெளிநாட்டுப் பயணம் வந்து வாய்த்திருந்தது. தன்னுடைய உண்மைத் திறனையும் நேர்மை இலட்சியங்களையும் மதிக்கத் தெரியாத ஒரு கல்லூரி நிர்வாகத்தையும், சௌகரியமுள்ளவர்களுக்கு எப்படியாவது அடங்கி ஒடுங்கிப் பணிவதுதான் சொகுசான வாழ்க்கை என்று நினைக்கும் ஒரு தகப்பனையும், செய்த சத்தியத்தையும், சொல்லிய காதல் மொழிகளையும் மறந்து, பணத்துக்கும் பகட்டுக்கும் பயந்து கோழையாகிவிட்ட ஒரு காதலியையும் மறந்து, விலகி எங்காவது போய் விட வேண்டும் போல் அவனுடைய கால்கள் ஒவ்வொரு கணமும் துடித்துக் கொண்டுதான் இருந்தன.

'ஓர் ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாகச் செலுத்துகிற அன்பு வெற்றி பெறுகிறதா அல்லது தோற்றுப் போகிறதா என்பதைப் பொறுத்து உலகத்தில் பல காவியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக் காவியங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து இருவரில் யாரோ ஒருவருடைய அழுகைக் குரல் தான் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது' என்று முன்பு ஒரு நாள் தான் அவளிடம் கூறியது இப்போது அவனுக்கு நினைவு வந்தது. அந்த அழுகுரல் வெளிப்படாத அழுகுரலாகத் தன் மனத்தின் மோனமான துக்கமாய் வந்து நிறைந்து விட்டதை இன்று அவன் உணர்ந்தான்.

இதே வேளையில் பேதை மோகினியோ பாரதி தன்னிடமிருந்து வாங்கிப் பதிவுத் தபாலில் மதுரைக்கு அனுப்பிய கடிதம் கிடைத்து அதைப் படித்ததனால் தன் தெய்வத்தின் மனத்தில் தன்னைப் பற்றி ஏற்பட்டிருந்த சந்தேகங்கள் தீர்ந்திருக்கும் என்று நம்பத் தொடங்கியிருந்தாள். ஜமீந்தாரோ அவள் மனம் வெறுக்கிற காரியங்களை ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்கியிருந்தார். புதுப்பித்துக் கட்டிய மல்லிகைப் பந்தல் ஜமீன் மாளிகையைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று ஒரு நாள் சாயங்காலம் பாரதியையும், மோகினியையும் காரில் அழைத்துக் கொண்டு போனார். பாரதி கூட வருகிறாள் என்ற நம்பிக்கையில் மோகினி மறுக்காமல் புறப்பட்டிருந்தாள். அந்தக் கட்டிடத்தைச் சுற்றிக் காட்டும் போது, "பாரதீ! இன்னும் கொஞ்ச நாளில் நாங்கள் எல்லாரும் இங்கே வந்து விடுவோம். அப்புறம் மல்லிகைப் பந்தல் கல்லூரி நிர்வாகியின் அலுவலகமும் - பிரபல நடனராணி மோகினியின் பங்களாவும் - மஞ்சள்பட்டி ஜமீன் அரண்மனையும் - எல்லாம் இதுதான்!" என்று ஜமீந்தார் சிரித்தபடி கூறிய வேளையில் மோகினி தீயை மிதித்தவள் போல் திகைத்தாள். ஜமீந்தாரின் நினைவுகளும், எதிர்கால நோக்கமும் எப்படி எப்படி ஓடுகின்றன என்பதை எண்ணிய போது அவளுக்குப் பாதாதிகேசபரியந்தம் நடுங்கியது. பாரதியோ "கவலைப்படாதீர்கள் அக்கா! என் உடம்பில் உயிர் உள்ளவரை நான் உங்களைத் தனியாகவோ, நிராதரவாகவோ விட்டுவிட மாட்டேன். யார் என்ன வேண்டுமானாலும் கனவு காணட்டும். நீங்கள் தைரியமாக இருந்தால் போதும்" என்று தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

கணக்குப்பிள்ளைக் கிழவரோடு காரில் மஞ்சள்பட்டி, மதுரை எல்லாம் போய் அந்தக் கிழவரை மதுரையிலேயே விட்டுவிட்டுத் திரும்பியிருந்த கண்ணாயிரம் திடீரென்று ஒருநாள் மாலை வைரமும், தங்கமுமாக நகைப்பெட்டிகளைக் கொண்டு வந்து மோகினியிடம் காண்பித்து, "இதெல்லாம் உனக்குப் பிடிச்சிருக்கான்னு ஜமீந்தார் கேட்கச் சொன்னார்" என்று வினவிய போது "எனக்கு நீங்க செய்யறது எதுவுமே பிடிக்கவில்லை" என்று அழுதுகொண்டே உள்ளே எழுந்து சென்றுவிட்டாள் அவள். தன்னை ஏமாற்றிவிட்டு அங்கு ஏதோ மர்மமாக ஏற்பாடுகள் நடப்பதைக் கண்டு மோகினி பதறினாள். ஆனால் பாரதி மட்டும் துணிவோடு தைரியமாக இருந்தாள். ஜமீந்தாரும் மோகினியும் சேர்ந்து எடுத்துக் கொண்டாற் போல் தந்திரமாகச் செய்து மாட்டியிருந்த அந்தப் போலிப் படத்தை அவளே துணிந்து கழற்றி எறிந்த போது கண்ணாயிரம் வந்து ஏதோ இரைந்தார். "மிஸ்டர் கண்ணாயிரம்! இது யாருடைய வீடு தெரியுமா? அதிகம் பேசினீரோ உமக்கு நடக்கிற மரியாதை வேற..." என்று பாரதி ஒரு அதட்டு அதட்டியதும் வாலைச் சுருட்டிக் கொண்டு பேசாமல் போய்ச் சேர்ந்தார் கண்ணாயிரம்.

டில்லியில் இண்டர்வ்யூ முடிந்து, மதுரை வந்து ஓரிரு நாள் தங்கிவிட்டுச் சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிய சில தினங்களிலேயே 'அவர் வெளிநாட்டு சர்வகலா சாலைக்கு இரண்டு வருட ஒப்பந்தத்தோடு மொழியியல் துறை ஆராய்ச்சிக்காகப் போனாலும் போகலாம்' என்ற செய்தி பராபரியாகப் பாரதியின் காதிலும் விழுந்தது. வேண்டுமென்றே இதை அவள் மோகினியிடம் சொல்லவில்லை. ஏற்கெனவே மனம் உடைந்து போயிருக்கிறவள் இதைக் கேட்டு இன்னும் மனம் உடைந்து போவாள் என்ற தயக்கத்தோடு தான் மோகினியிடம் இதைச் சொல்லாமல் இருந்துவிட்டாள் பாரதி. தான் மகேசுவரி தங்கரத்தினத்திடம் கொடுத்துப் பதிவுத் தபாலில் மதுரைக்கு அனுப்பிய மோகினியின் கடிதம் சத்தியமூர்த்திக்குக் கிடைத்ததா இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியாமல் மனம் குழம்பியிருந்தாள் அவள். 'அந்தக் கடிதம் அவர் கைக்குக் கிடைத்திருந்தால் மோகினியைப் பார்ப்பதற்கு இங்கே வந்திருக்க வேண்டும். அவரோ வந்து இரண்டு மூன்று நாட்களாகியும் இன்று அவரை இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. இந்தப் பெண்ணோ, அவரை நினைத்து நினைத்து உருகி ஓடாகப் போய்க் கொண்டிருக்கிறாள். இவளுடைய மனம் புரியாமல் ஜமீந்தாரும், கண்ணாயிரமும், பங்களாவையும், வைர நகைகளையும், பட்டுப் புடவைகளையும் இவளிடம் காண்பித்துக் கொண்டு திரிகிறார்கள். என்ன பாவம் இது?' என்று நினைத்து தவித்துக் கொண்டிருந்தாள் பாரதி. அவளுடைய நினைப்பிலும் செயலிலும் இப்போது மோகினியின் மேல் சிறிதும் பொறாமை இல்லை. எல்லையற்ற பெருந்தன்மையோடு மோகினியையும் சத்தியமூர்த்தியையும் மதித்து அவர்களைப் போன்றவர்கள் ஒன்று சேர முடியாத சமுதாய வாழ்வில் அவர்களை எப்படியாவது ஒன்று சேர்த்துவிட்டு அதற்காக மகிழ்வது மட்டுமே இப்போது அவளுடைய நோக்கமாக இருந்தது. சத்தியமூர்த்தியின் பாதங்கள் இன்னும் அவளுடைய நினைவில் இருந்தன. அவற்றைப் பாவனையினால் அவளும் தொழுதாள். ஆனால் மோகினியோடு போட்டி போட்டு அவற்றை ஆண்டு மகிழ முடியாமல் போனதற்காகக் கவலைப்படாது விட்டுக் கொடுக்கிற பெருந்தன்மை அவளுடைய குடும்பச் சொத்து. அப்பா பல சமயங்களில் பொது காரியங்களுக்காகப் பணத்தையும் செல்வாக்கையும் செலவழித்து வாழ்வில் பெருந்தன்மையாக நடந்திருக்கிறார். மகளோ இப்போதுதான் ஆசைப்பட்ட விருப்பத்தையும் அந்த விருப்பத்துக்கு அப்பால் காத்துக் கிடக்கும் வாழ்வையுமே இன்னொருத்திக்குப் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துவிட்டு அவளுக்கு உதவியாகவும், காவலாகவும் வாழ்வது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

"மேற்கு ஜெர்மனியிலுள்ள ஹிடல்பர்க் பல்கலைக் கழகத்திலும் மற்றும் சில ஜெர்மானியப் பல்கலைக் கழகங்களிலுமாக மொழியியல் ஆராய்ச்சித் துறையில் பணிபுரிவதற்காகச் சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாராம். இன்னும் பத்துப் பதினைந்து நாளில் அவர் பம்பாயிலிருந்து புறப்பட வேண்டுமாம். நாளை அல்லது நாளன்றைக்கு இங்கே நம் கல்லூரியில் அவர் தம்முடைய ராஜினாமாவைக் கொடுத்து விடுவாரென்று தெரிகிறது. மாணவர்கள் ரொம்ப வருத்தத்தோடிருக்கிறார்கள். அவர் போவது உறுதிதானாம். வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று - மாணவ மாணவிகள் அவருக்கு ஒரு பிரிவுபசார விருந்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். அந்த விருந்தைக் கூட கல்லூரி எல்லைக்குள் வைத்து நடத்தினால் அவர் விரும்புவாரோ விரும்ப மாட்டாரோ என்றெண்ணி லேக்வியூ ஹோட்டலில் நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று மறுநாள் மகேசுவரி தங்கரத்தினம் உறுதியாக வந்து தெரிவித்த செய்தியைக் கேட்டு ஏதோ வாய்விட்டுச் சொல்லமுடியாத ஊமைத் துயரத்தை உணர்ந்து பாரதி தவித்தாள். மோகினிக்கு இது தெரிந்தால் அவள் எங்கே மூர்ச்சையாகி விழுந்து விடுவாளோ என்று பயந்தாள் பாரதி. படிப்படியாக மோகினியின் மனத்தை மாற்றி அவளைத் தன்னுடையவளாக்கிக் கொண்டு விடலாமென்ற ஆசையால், ஜமீந்தார் அவளோடு புதுப் பங்களாவில் குடியேறி வாழ்வதற்குத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார். பாரதி இவற்றை எல்லாம் மனத்தளவில் கடுமையாக வெறுத்தாலும் வெளிப்படையாக ஜமீந்தாரைக் கோபித்துக் கொள்ளவோ பகைத்துக் கொள்ளவோ கண்டிக்கவோ முடியாமல் இருந்தது.

அத்தியாயம் - 62

மனித மனத்தின் எல்லையற்ற சோகத்தையோ எல்லையற்ற சந்தோஷத்தையோ அப்படி அப்படியே சொல்லி முடிப்பதற்குப் பாஷையும் கூடப் பரிபூரணமாகத் துணை செய்வதில்லை.

மனிதனை வலுப்படுத்துகிற சக்திகளில் பிறர் அவன் மேல் செலுத்துகிற மெய்யான அன்பும் ஒன்று. பிறர் நம்மேல் அன்பும் அக்கறையும் உள்ளவராக இருக்கிறார்கள் என்பதை உணர்வது எத்தனை சுகமாக இருக்கிறதோ அத்தனை வேதனையும் ஏமாற்றமும் அந்த அன்பு பொய் என்று புரிந்து கொள்ளும் போது வாழ்வில் உண்டாகிறது. சத்தியமூர்த்தி இளமையிலிருந்தே எதற்கும் எங்கும் தயங்கி நிற்காத தீரன். கீழே விழும்போதெல்லாம் அதை விட வேகமாக மேலே எழுந்திருக்க வேண்டும் என்ற உணர்ச்சியைத் தன் வாழ்வில் பலமுறை அடைந்திருக்கிறான் அவன். அவனுடைய வலது கால் முன்னால் அடியெடுத்து வைப்பதற்கு எப்போதும் தயாராயிருந்திருக்கிறது. 'இது இப்படித்தான் முடியும்' என்று எதைப் பற்றியும் ஒரேவிதமாகச் சிந்தித்து அது அப்படி முடியாததனால் ஏமாறித் தவித்ததில்லை அவன். இப்போது மோகினியின் செய்கையால் அவன் மனம் புண்பட்டிருக்கிறது.

ஒன்று மட்டுமே எல்லா உறுதியையும் மீறி அவனை ஆழமாய் வருத்திக் கொண்டிருக்கிறது. அந்த வேதனையோடு வேதனையாக அவன் தன்னுள் நினைக்கலானான்: 'இனிமேல் என்னைப் போல் எந்த இலட்சியவாதியின் வாழ்க்கையிலும் காதல் என்ற மோகம் மூடாமல் இருக்கட்டும்! அவனுடைய தீவிரமான எண்ணங்களை எல்லாம் ஏதாவது ஒரு பெண்ணின் ஞாபகம் தவிக்கச் செய்யாமல் இருக்கட்டும்! எந்த ஒரு பெண்ணுக்காகவும் அவனுடைய கண்களோ, இதயமோ, இரகசியமாகவோ பகிரங்கமாகவோ கண்ணீர் சிந்தாமல் இருக்கட்டும்!' என்று எண்ணியபோது அவன் இதயம் குமுறிக் கொண்டிருந்தது. ஏற்பாடுகள் எல்லாம் வேகமாகவும் சாதகமாகவும் நடந்து கொண்டிருந்தன. டெல்லியிலிருந்து அவன் தேர்ந்தெடுக்கப்பட்ட தந்தி கிடைத்துவிட்டது. பாஸ்போர்ட், எக்ஸேஞ்ச் கண்ட்ரோல் அனுமதி எல்லாம் கிடைத்துவிட்டன. குத்துவிளக்கிலிருந்து வெளியேறிய போது குமரப்பனிடம் கொஞ்சம் பணம் இருந்தது. மல்லிகைப் பந்தலில் கடை வைத்தபின் இன்னும் கொஞ்சம் சேர்ந்திருந்தது. கண்ணாயிரத்தின் கடனை அடைப்பதற்கும், வெளிநாடு செல்ல உடை முதலியவற்றுக்கும், கையில் கொண்டு போவதற்கும் சத்தியமூர்த்திக்கு மனம் விரும்பி உதவினான் அவன். கல்லூரி முதல்வரிடம் உரிய காலத்தில் சத்தியமூர்த்தி தன்னுடைய இராஜிநாமாக் கடிதத்தைக் கொடுத்து விட்டான். அப்படிக் கொடுக்கும் போது 'நீங்கள் இந்தக் கல்லூரிக்கு ஆசிரியராக வந்து மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிப்பது தவிர இந்தக் கல்லூரியின் எதிர்கால அநுபவங்கள் உங்களுடைய இளமை வேகத்துக்கு ஒரு பாடமாகவும் ஆகலாமல்லவா?' என்று எப்போதோ காலஞ்சென்ற பூபதி தன்னிடம் கூறியிருந்ததை இப்போது ஒரு கணம் நினைத்துச் சிரித்துக் கொண்டான் அவன்.

'ஒரு மனிதனுடைய நேர்மையான சமுதாயத் தேவைகள் கூட அவன் நினைத்தபடி நிறைவேறாது. ஒவ்வொரு நல்ல மனிதனும் தன்னுடைய தேவைக்காக மட்டுமே போராட முடியாது. தன்னுடைய தேவைக்காகவும் பிறருடைய நியாயத்துக்காகவும் சேர்ந்தே போராடியாக வேண்டும்' என்பதுதான் அன்றும் இன்றும் என்றும் சத்தியமூர்த்தியின் வாழ்க்கையின் நோக்கமாயிருந்தது. அதனால் தான் மிகக் குறுகிய கால ஆசிரிய வாழ்க்கையிலேயே மல்லிகைப் பந்தல் கல்லூரியில் இவ்வளவு சோதனைகளும் அவனுக்கு ஏற்பட்டு விட்டன. புனித மனத்தின் எல்லையற்ற சோகத்தையோ எல்லையற்ற சந்தோஷத்தையோ அப்படியே சொல்லி முடிப்பதற்குப் பாஷையும் சில சமயங்களில் பரிபூரணமாகத் துணை செய்வதில்லை. தெரிந்தோ தெரியாமலோ மனித உணர்ச்சிகளின் சங்கமம் தான் வாழ்க்கையாயிருக்கிறது. ஆனால் உணர்ச்சிக்குப் பாஷை எப்போதுமே கருவியாக இருந்து ஒத்துழைப்பதில்லை.

அந்தச் சில நாட்களில் குமரப்பனோடு கூடச் சத்தியமூர்த்தி அதிகமாகப் பேசவில்லை. வெளிநாட்டுப் பயணத்துக்கான உடுப்புகளைத் தைக்கக் கொடுப்பதற்காக மல்லிகைப் பந்தல் கடைத்தெருவில் உள்ள பிரசித்திபெற்ற தையற்கடை ஒன்றிற்குச் சத்தியமூர்த்தியைக் குமரப்பன் அழைத்துக் கொண்டு போயிருந்தான். அன்று தையற்கடையில் அளவு எடுத்துக் கொண்ட பிறகு மாலை வேளையாக இருந்ததனால் அப்படியே நண்பர்கள் உலாவப் போயிருந்தார்கள். அன்று கூட நண்பனிடம் மோகினியைப் பற்றியோ தன் வேதனைகளைப் பற்றியோ அவன் அதிகமாகக் கூறவில்லை. 'ஹிடல்பர்க்' யூனிவர்ஸிடியைப் பற்றியும், அது ஜெர்மனியின் ஜீவநதியான ரைன், நெக்கார் நதிகளின் கரையில் திராட்சைத் தோட்டங்கள் நிறைந்த சூழலில் இயற்கையழகுடன் அமைந்திருப்பதையும், 'ஆஃப் ஹியூமன் பாண்டேஜ்' என்ற தன் நாவலில் ஸாமர்ஸெட்மாம் அந்தப் புராதனமான ஜெர்மன் யூனிவர்ஸிடியைப் பற்றி எழுதியிருப்பதைக் குறித்தும் குமரப்பன் ஏதேதோ கூறிக் கொண்டு வந்தான். நோபல் பரிசைத் தியாகம் செய்த டாக்டர் ஷியா கோவின் ஆசிரியர் பாஸ்டர் நாக் சில காலம் தங்கிப் படித்த மார்பர்க் பல்கலைக் கழகத்தைப் பற்றியும் குமரப்பன் சில விவரங்களைக் கூறினான். ஜெர்மனிக்குப் போனவுடன் வழக்கப்படி ஜெர்மன் மொழியைப் பிற நாட்டினர்க்குக் கற்பிக்கும் 'கதே இன்ஸ்டிடியூட்டில்' ஆறு மாதம் சத்தியமூர்த்தி ஜெர்மன் மொழி கற்க வேண்டியிருக்கும் என்பதையும் குமரப்பன் கூறினான். மறுநாள் மாலை லேக்வியூ ஹோட்டலில் மாணவர்கள் சத்தியமூர்த்திக்கு ஒரு பிரிவுபசார விருந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த விருந்துக்கு பிரின்ஸிபலோ, வார்டனோ, வேறு விரிவுரையாளர்களோ, பேராசிரியர்களோ யாருமே வரவில்லை. தமிழ்த் துறையைச் சேர்ந்த காசிலிங்கனார் கூட வரவில்லை. தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசன் மட்டும் தயங்கித் தயங்கி வந்து நின்றார். கல்லூரி லைப்ரேரியன் ஜார்ஜ் மிகவும் தைரியமாகவும் மனம் விரும்பியும் அந்த விருந்தில் கலந்து கொண்டார். விருந்து முடிந்ததும் சத்தியமூர்த்தியைப் பாராட்டி மேடையில் பேசும் போதே சில மாணவர்கள் கண்கலங்கி விட்டார்கள். மாணவர்கள் யூனியன் தலைவி என்ற முறையில் பாரதியும் அந்த விருந்துக்கு வந்திருந்தாள். அவள் ஜமீந்தாருக்கும் பிரின்ஸிபலுக்கும் பயப்படாமல் துணிவாக அந்த விருந்துக்கு வந்து கலந்து கொண்டதோடு மாணவர்கள் சத்தியமூர்த்தியைப் பாராட்டிப் பேசிய போதெல்லாம் மற்றவர்களோடு சேர்ந்து தானும் கைதட்டி மகிழ்ந்து கொண்டிருந்தாள். படிக்கிற மாணவர்கள் பதவியை விட்டுப் போகும் ஆசிரியருக்குக் கொடுக்கும் விருந்துபசாரம் என்ற முறையில் சத்தியமூர்த்தியின் மாணவியாகிய பாரதி அங்கு வந்திருந்தாலும், நிர்வாகத்தோடு பகைத்துக் கொண்ட ஓர் ஆசிரியரைக் கௌரவிக்கத் தன் தந்தை இறந்து அதிக நாளாகாத அந்த நிலையிலும் அவள் வந்திருக்கிறாள் என்பதே பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளோ, பிரிவுபசார விருந்துக்கு வருவது போல் வந்திருந்தாலும் சத்தியமூர்த்தியைச் சந்தித்துப் பேச வேண்டிய அவசரமான காரியமும் அவளுக்கு இருந்தது. அவள் இந்தப் பிரிவுபசார விருந்துக்கு வீட்டிலிருந்து புறப்படும் போது ஜமீந்தார் பேச்சுவாக்கில் அவளிடம், "நாங்கள் இன்னும் ஒரு வாரம் பத்து நாளைக்குள்ளாரப் புது வீட்டுக்குப் போயிடறோம் அம்மா! நீ அந்தப் படத்தை எடுத்தெறிஞ்ச மாதிரியே ஆளையே எடுத்தெறிஞ்சாலும் எறிஞ்சிடுவே. உங்கிட்டே எனக்கு ரொம்பப் பயமாக இருக்கு" என்று வேடிக்கையாகத் தொடங்குவது போல் தொடங்கிக் குத்தலாகச் சொல்லிக் காண்பித்திருந்தார். படத்தைத் தான் எடுத்தெறிந்தது பற்றிக் கண்ணாயிரம் ஜமீந்தாரிடம் கோள் மூட்டியிருக்க வேண்டும் என்று அப்போதுதான் பாரதிக்குப் புரிந்தது.

வெளிப்படையாக மோகினியின் மேல் தான் அனுதாபப்படுவதைக் காண்பித்துக் கொண்டால், "எனக்கில்லாத அக்கறை உனக்கென்ன வந்தது? அவளுக்குப் பரிந்து பேச நீ யார்?" என்று ஜமீந்தார் முரட்டுத்தனமாகத் தன்னை எதிர்த்துக் கேட்பாரே என்று நினைத்து அவரிடம் மோகினி விஷயமாக எடுத்துச் சொல்லத் தயங்கினாள் பாரதி. அதே சமயத்தில் மோகினியை நிராதரவாக விட்டு விடவும் அவளுக்கு மனமில்லை. இதையெல்லாம் நன்றாகச் சிந்தித்த பின் அன்று நடக்கும் பிரிவுபசாரக் கூட்டத்தின் முடிவில் எப்படியும் சத்தியமூர்த்தியைச் சந்தித்து, "மோகினியை கைவிட்டு விடாதீர்கள்! அவள் புனிதமானவள். அவளைக் காப்பாற்றுங்கள்" என்று வேண்டிக்கொள்ள எண்ணியே அங்கு வந்திருந்தாள் பாரதி. ஆனால் அது முடியாமல் போய் விட்டது. மாலை ஆறரை மணிக்குத் தொடங்கிய விருந்து முடியவே ஏழரை மணி ஆகிவிட்டது. அப்புறம் மாலையிட்டுப் பாராட்டுரைகள் வழங்கிக் கூட்டம் முடிய ஒன்பதரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. கூட்டம் முடிந்த பின்னும் மாணவர்கள் பலாப்பழத்தைச் சுற்றிய ஈக்களைப் போல் சத்தியமூர்த்தியை மொய்த்து நெருங்கிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவரிடம் பேசுவதற்குரிய தனிமை அப்போது கிடைக்குமென்று தோன்றவில்லை பாரதிக்கு. மறுநாள் அதிகாலையில் அவரை அவருடைய அறையிலேயே போய்ப் பார்ப்பதென்ற முடிவுடன் திரும்பி விட்டாள் அவள்.

மாலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பதரை மணி வரை பாரதி வீட்டிலிருந்து லேக்வியூ ஹோட்டலில் நடைபெற்ற விருந்துக்குப் போயிருந்த அந்த மூன்றரை மணி நேரத்துக்குள் இங்கே வீட்டில் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் ஒரு பிரளயமே நடத்தியிருந்தார்கள். மல்லிகைப் பந்தலுக்கு வந்த முதல் தினத்திலிருந்து அன்று வரை ஒரு நாள் கூட மோகினி அவ்வளவு நேரம் தனியாக அந்தக் கிராதகர்களோடு வீட்டில் இருக்க நேர்ந்தது இல்லை. கல்லூரி மாணவர்கள் நடத்தும் அந்தப் பிரிவுபசார விருந்துக்குத் தான் எந்தத் தொடர்பைக் கொண்டும் போக முடியாத காரணத்தால் அன்று மோகினி வீட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று. என்ன பிரிவுபசார விருந்து யாருக்கு என்பதைப் பாரதியும் அவளிடம் சொல்லவில்லை. கண்ணாயிரமும், ஜமீந்தாரும் தன்னிடம் ஏதாவது வம்புக்கு வரலாம் என்று பயந்து பாரதி புறப்பட்டதும் மோகினியே தன் அறைக் கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு ஏதோ புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கியிருந்தாள். பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அதற்குள் யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். 'புறப்பட்டுப் போன பாரதியே எதையாவது மறந்து போய்விட்டு மறுபடி வந்து கதவைத் தட்டுகிறாளோ' என்றெண்ணிக் கதவைத் திறந்தாள் மோகினி. அசடு வழியச் சிரித்துக் கொண்டே ஜமீந்தார் கதவருகே நிற்பதைப் பார்த்து அவளுக்குச் சர்வ நாடியும் ஒடுங்கிப் போய்விட்டது. அவ்வளவு பெரிய பங்களாவில் அப்போது வேறு யாருமே இல்லை. சுற்றிலும் மெல்ல இருட்டத் தொடங்குகிற நேரம். கண்ணாயிரமும் வெளியே போவது போல் எங்கோ நழுவியிருந்தார். டிரைவர் முத்தையாவோ பாரதியைக் காரில் அழைத்துக் கொண்டு 'லேக்வியூ' ஹோட்டலுக்குப் போயிருந்தான். சமையற்காரர் பின்கட்டில் எங்கோ இருந்தார். 'மோசம் போய்விடக் கூடாதே' என்ற பயமும் பதற்றமும் நடுங்கிடக் குமுறும் சொற்களால் "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று குனிந்த தலை நிமிராமல் ஜமீந்தாரைக் கேட்டாள் அவள்.

"இதென்ன கேள்வி? நீதான் வேண்டுமென்று வைத்துக் கொள்ளேன்" என்று கைகளை நீட்டிப் பல்லிளித்தார் ஜமீந்தார். கொடிய மிருகமாக எதிரில் வந்து நிற்கும் அந்தக் கயமையை அருவருப்போடு துச்சமாகப் பார்த்தாள் அவள்.

"ஏன் அப்படிப் பார்க்கிறே மோகீ? கொஞ்சம் என்னோட வந்து தோட்டத்துப் புல்வெளியிலே சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தா என்ன கொறைஞ்சு போவுதாம்?"

"....."

"இரு? இரு? இந்த வீட்டிலே சேர்ந்து இருக்கிற வரை தானே நீ அந்தப் பொண்ணு பாரதியோடயே இருக்க முடியும்? ஜமீன் வீட்டுக்குப் போனப்புறம் என்னதான் செய்யப் போறியோ?" என்று சொல்லி வயதுக்குப் பொருந்தாமல் சின்னத்தனமாகக் கண் சிமிட்டினார் ஜமீந்தார். 'தூ'வென்று காறித் துப்பிவிட்டு எதிரே வந்து நிற்கும் அந்த மிருகத்தை இலட்சியம் செய்யாமல் கதவைப் படீரென்று அடைத்து உட்புறமாகத் தாளிட்டாள் மோகினி. மீண்டும் கதவு உடைபடுவது போல் தட்டப்பட்டது. தானாகக் கை ஓய்ந்து போய்க் கதவைத் தட்டுவதை நிறுத்தட்டும் என்று உள்ளே புலிக்குப் பயந்து புதரில் பதுங்கிய புள்ளி மானாய் நடுங்கிக் கொண்டிருந்தாள் மோகினி. கதவு தட்டப்படுவது நிற்கவே இல்லை.

சிறிது நேரத்துக்குப் பின் ஜமீந்தாரின் குரலோடு கண்ணாயிரத்தின் குரலும் வெளியே கேட்டது. உள்ளே தாழ்ப்பாள் போட்டாலும் வெளியே இருந்து சாவியால் திறக்கிற மாதிரிப் பூட்டு அது. அவர்கள் சாவியினாலேயே தாழ்ப்பாளைத் திறந்து விடுவார்களோ என்று அவள் பயந்தாள். பயந்தபடியே நடந்தது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே பாய்ந்த கண்ணாயிரம் எரிமலையாகச் சீறி இரைந்தார்.

"நீ உன் மனசில் என்னதான் நினைச்சிருக்கே! ஜமீந்தாரு... எவ்வளவு பெரிய மனுஷன்... தனியாய் ரெண்டு வார்த்தை பேச வந்தார்னா சந்தோஷமாப் பேசி அனுப்பாமே... காறித் துப்பினியாமே? ஆடறது கூத்துன்னாலும் போடறது பத்தினி வேஷம்னானாம்..."

அவ்வளவு தான். இதைக் கேட்டு அதுவரை பொறுமையாயிருந்த மோகினி பத்திரகாளியானாள். "கண்ணாயிரம்!" என்று அவள் உரக்க ஒலித்த சீற்றக் குரலில் அந்த வீடே அதிர்ந்தது. பாதிக் கோழைத்தனமும், பாதிப் பயமும் உள்ள அந்தச் சாதுப் பெண் தன்னைப் பதிலுக்கு இரைந்து கோபிக்க மாட்டாள் என்றெண்ணியிருந்த கண்ணாயிரம், அவள் எதிர்பாராமல் போட்ட கூப்பாட்டினால் அப்படியே திகைத்துப் போய்விட்டார். "வேளைக்கு ஒருத்தியைப் பெண்டாள வலை வீசும் உங்களையும் ஜமீந்தாரையும் போன்ற சண்டாளர்களைப் பெற்ற குலமே பத்தினிக் குலமானால் பிறந்த குலத்தைத் தவிர வேறு பிழை செய்தறியாத நானும் பத்தினிதான். இந்த நாசகாரச் சமூகத்தில் நீங்கள் எல்லாம் பெரிய மனிதர்கள். நானோ கூத்தாடுகிறவள். குலத்தில் பிறக்காதவள். மானம் கெட்டவரே! என்னைக் குறை சொன்னால் உம் நாக்கு அழுகிப் புழு நெளியும்..." என்று உணர்ச்சி வசப்பட்டுக் குமுறி மண்டை வெடித்துவிடும் போல இரைந்து கத்திய அவளை ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்ற உணர்வே இன்றிக் கன்னத்தில் ஓங்கி அறையப் பார்த்து விட்டார் கண்ணாயிரம். மோகினி அவர் தன்னை அறையப் பாய்ந்து வருவதைப் பார்த்து சிறிதும் நகரவோ ஓடவோ விலகவோ இல்லை. தன்னுடைய நினைவின் புனிதத்துவம் தன்னைக் காக்கும் என்ற நம்பிக்கையோடு கம்பீரமாக நிமிர்ந்து பார்த்து நெருப்பாய் ஜொலித்துக் கொண்டு நின்றாள். அவள் நின்ற கம்பீரத்தில் ஒடுங்கி மிரண்டு நெருப்பருகே நெருங்க அஞ்சுகிறவரைப் போல ஓங்கிய கையோடு பின்வாங்கித் தயங்கினார் கண்ணாயிரம். அவளைக் கைநீட்டி அடிக்காத குறையைச் சத்தியமூர்த்தியை வாயில் வந்தபடி திட்டித் தீர்ப்பதன் மூலம் கண்ணாயிரம் அப்போது தணித்துக் கொண்டார். "அந்தத் தமிழ் வாத்தியார்ப் பயல் மேலிருக்கும் மயக்கத்தில்தான் நீ இப்படி ஜமீந்தாரை அலட்சியம் செய்யறே! உங்கம்மா இருக்கிறப்பவே நீ ஜமீந்தாருக்குன்னுதான் உன்னை அவரிட்ட ஒப்படைக்க முடிவு செய்திருந்தாள். நீயானா இன்னிக்கு இப்படித் திமிர்ப்பிடிச்சுத் திரியறே" என்று கண்ணாயிரம் இரைந்த போது,

"அவர் தெயவம்! தெய்வத்தைக் குறை சொல்ல மனிதர்களுக்கு யோக்யதை இல்லை. நீங்களோ மனிதர்களிலும் கேடு கெட்ட இராட்சசர்கள். உங்களுக்கு அவர் பேரைச் சொல்லக் கூடத் தகுதி கிடையாது" என்று பதிலுக்குச் சொல்லிச் சத்தியமூர்த்தியை அவர்கள் குறைத்துக் கூறுவதைப் பொறுக்காமல் சீறினாள் மோகினி.

"இரு! இரு! சீரழியத்தான் நீ இவ்வளவு பேசறே" என்று கறுவிக் கொண்டு போனார் கண்ணாயிரம்.

"சும்மா பேசி இரசாபாசம் பண்ணாதே கண்ணாயிரம்! இதோட சேர்ந்து நம்ப பூபதி மகளும் கெட்டுப் போச்சு. நம்ம மேலே ஏதோ மட்டு மருவாதி வச்சிருந்த அந்தப் பொண்ணு பாரதியும் இதுனாலே நம்ம படத்தையே தூக்கி எறியிற அளவுக்கு வெறுக்குது. இந்த வீட்டிலே இருக்கிறவரை இது வழிக்கு வராது? நம்ம வீட்டுக்குப் போய்ப் படுத்தற விதமாப் படுத்தினா வழிக்கு வரும். சும்மா மயிலே மயிலேன்னா இறகு போடாது. பேசாமே வா... அப்புறம் பார்த்துக்கலாம்" என்று ஒத்துப் பாடினார் ஜமீந்தார். அவர்கள் போனதும் மறுபடியும் கதவைத் தாழிட்டுக் கொண்டு ஆற்றாமையோடு குமுறிக் குமுறி அழுதாள் மோகினி. அப்படி அழுத போது, "இந்தக் கைகள் உன் கண்ணீரைத் துடைப்பதற்கு எப்போதும் தயாராயிருக்கும்" என்று முன்பு ஒரு சமயம் சத்தியமூர்த்தி கூறியிருந்த வாக்கியம் அவளுக்கு நினைவு வந்தது. நாட்டரசன் கோட்டைக்குப் பக்கத்தில் ஏதோ கலியாணத்திலே சதிராடப் போய்விட்டுத் திரும்புகிற வழியில் சொகவாசம் கிராமத்தில் சந்தித்த அந்தப் பட்டிக்காட்டுத் தம்பதிகளும் இப்போது அவளுக்கு நினைவு வந்தனர்.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த எளிய இன்ப வாழ்க்கை அவளுள் ஒரு பொறாமையான முன் மாதிரியாய் உறைந்து கிடக்கிறது. தான் வாழ முடியாமல் தவிக்கும் போதுகளில் எல்லாம் அந்த வாழ்வின் அமைதி அவள் நினைவில் மேலெழுந்து உறுத்தியிருக்கிறது. புகழ், பணம், கலை, ஆடம்பரம் எல்லாவற்றையும் கழற்றி எறிந்து விட்டுச் சத்தியமூர்த்தியோடு அந்த மாதிரிச் சிறிய குடிசையில் போய் வாழ்ந்தாலும் அந்த வாழ்வில் நிறைவிருக்கும் என்று அவள் கனவு கண்ட நாட்கள் பல. மீண்டும் மதுரை மீனாட்சி கோவில் கிளிக்கூண்டு மண்டபத்தில் பார்த்த அந்தச் சிறைப்பட்ட கிளி நினைவு வந்தது அவளுக்கு. நினைக்க நினைக்க அவளுடைய இதயம் கனத்தது. அழுகையும் பெருகி வளர்ந்தது.

"கூட்டிலிருந்து விடுபட்டால் சுதந்திரம் தான்! ஆனால், சுதந்திரமாகப் பறந்து போகவிட மாட்டார்களே பாவிகள்!" என்று அழுகைக்கிடையே தனக்குள் மெல்லச் சொல்லி முணுமுணுத்துக் கொண்டாள் மோகினி.

விருந்து உபசாரக் கூட்டம் முடிந்து பாரதி வந்து கதவைத் தட்டியபோது எழுந்து போய்க் கதவைத் திறந்த மோகினியைப் பார்த்தால் அழுது அழுது கண்கள் சிவந்திருந்தன. அவளிருந்த கோலத்தைப் பார்த்து, "என்னக்கா இது? என்ன நடந்தது?" என்று பதறிப் போய் விசாரித்த பாரதியிடம்,

"இந்த அழுகைதான் நான் என் பிறவியோடு கொண்டு வந்த சீதனம் அம்மா! எல்லாம் என் தலைவிதி" என்றாள் மோகினி. பாரதி மேலும் தூண்டித் தூண்டிக் கேட்டாள்.

"கண்ணாயிரம், ஜமீந்தார் யாராவது உங்களைக் கோபிச்சுக்கிட்டாங்களா?"

மோகினி பதில் சொல்லாமல் தலைகுனிந்து கண்ணீர் சிந்தினாள். ஜமீந்தாரும் கண்ணாயிரமும், கூச்சமின்றியும், பச்சையாகவும் தன்னைப் பேசிய வசைப் பேச்சுக்களையெல்லாம் அப்படியே கூட்டியோ குறைத்தோ பாரதியிடம் சொன்னால் அவள் மனம் கூட வேறுபடும் என்பதால் மோகினி அவற்றை அவளிடம் சொல்லவேயில்லை.

"நாமெல்லாம் இப்படி அஞ்சி அழுது பயனில்லை அக்கா! தைரியமாக நம்மைத் துன்புறுத்துகிறவர்களைப் பதிலுக்கு அழ வைக்க வேண்டும்..."

"அதையும் ஒரு நாள் செய்யத்தான் போகிறேன்" என்று எந்த அர்த்தத்திலோ பதில் கூறினாள் மோகினி. ஆனால் அந்த அர்த்தம் பாரதிக்குச் சரியாய்ப் புரிந்திருக்க முடியாது. மறுநாள் சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தலை விட்டுப் புறப்படுவதாக இருந்தது. மனத்தில் தனக்குத் தானே பெருந்தன்மையாக ஒரு திட்டம் வகுத்துக் கொண்டிருந்த பாரதி சத்தியமூர்த்தியை மறுநாள் அதிகாலையில் சந்தித்து, மதுரைக்கு அனுப்பிய கடிதத்தைப் பற்றி விசாரித்த பின், "என் வார்த்தைக்குத் தயவு செய்து செவி சாயுங்கள் சார்! மோகினியைப் போன்ற அழகிய அநாதைகளைச் சமூகம் எந்த நிலையில் வைத்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியும். வீண் சந்தேகங்களுக்கு இரையாகி அவளைக் கைவிட்டு விடாதீர்கள். அவளைப் போல் புனிதமான பெண் வேறொருத்தி இந்த உலகில் இருக்க மட்டாள். நீங்கள் மேற்கு ஜெர்மனிக்குப் புறப்படு முன் கடவுள் சாட்சியாக ஒரு காரியம் செய்யுங்கள். நீங்கள் தைரியமுள்ளவர். முற்போக்குவாதி. இதற்குத் தயங்க வேண்டிய அவசியமேயில்லை! எங்கள் வீட்டுக் காரில் நானே நம்பிக்கையான டிரைவருடன் உங்களையும் மோகினியையும் மதுரைக்கு ஏற்றி அனுப்புகிறேன். மதுரைக்குப் போய் ரிஜிஸ்தர் ஆபீஸில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு திருப்பரங்குன்றம் கோவிலில் ஓர் அர்ச்சனை செய்துவிட்டு உங்கள் மனைவி என்ற சட்டப்பூர்வமான அங்கீகாரத்தோடு மோகினியை மறுபடி என்னிடம் கொண்டு வந்து விட்டுவிட்டு நீங்கள் அப்புறம் எங்கு வேண்டுமானாலும் புறப்படுங்கள். நீங்கள் திரும்புவதற்கு யுகக் கணக்கில் ஆனாலும் நான் அவளைக் காக்கிறேன். வாழ்க்கையில் உங்களுக்காகவும், அவளுக்காகவும் இந்தத் தியாகத்தைச் செய்யவாவது என்னை அனுமதியுங்கள். உங்கள் மனைவி என்ற சட்டப்பூர்வமான அங்கீகாரத்தோடு நான் அவளை வைத்துக் காக்கிற போது, ஜமீந்தாரோ, கண்ணாயிரமோ என்னிடம் தொல்லை கொடுக்க முடியாது. தயை செய்யுங்கள். நீங்கள் வெளிநாட்டுக்கு விமானம் ஏறும் போது வெறும் புரொபஸர் சத்தியமூர்த்தியாக மட்டுமே புறப்படாதீர்கள்" என்று உள்ளமுருகி வேண்டிக் கொள்ள நினைத்திருந்தாள். இப்படிச் செய்தாலொழிய, 'நீங்கள் பாக்கியசாலி! அதனால் தான் காதலில் ஜெயித்திருக்கிறீர்கள்! அந்த ஐயத்தை இறுதிவரை நிரூபிக்க நான் துணையாயிருக்கிறேன்' என்று மோகினியிடம் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாதென்று பாரதிக்குத் தோன்றியது. 'மோகினி சட்டப்பூர்வமாகச் சத்தியமூர்த்தியின் தர்ம பத்தினியாகிவிட்டால் அப்புறம் கொடியவர்களான ஜமீந்தாரோ, கண்ணாயிரமோ அவளுக்குத் தொல்லை கொடுக்க முடியாது! நானும் தாராளமாகவும் உரிமையுடனும் இவளைப் பாதுகாத்துக் கொண்டு அவர்களைத் துணிந்து எதிர்க்கலாம்! என்னுடைய காதல் எந்த இடத்தில் தோற்றதோ அங்கேயே மோகினியின் காதல் வென்றது. அந்த வெற்றியையாவது நான் காத்துக் காப்பாற்றிக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அப்படிக் காப்பாற்றி விட்டால் ஜமீந்தார் தம்மோடு தமது மஞ்சள்பட்டி மாளிகையில் வந்து இருக்கச் சொல்லி மோகினியை வற்புறுத்த முடியாது. எப்படியும் இதை நான் செய்தே ஆக வேண்டும்' என்று கங்கணம் கட்டிக் கொண்டாற் போல உறுதியாயிருந்தாள் பாரதி. அப்படிச் சத்தியமூர்த்தி அவளைப் பதிவுத் திருமணம் செய்து கொள்ள அழைத்துப் போவதற்கு இணங்கி விடுவாரென்றும் அந்த நற்செய்தியோடு சேர்ந்தே அவர் வெளிநாடு சென்று இரண்டாண்டுகளுக்கு மேல் தங்கப் போகிற துயரச் செய்தியையும் மோகினியிடம் சொல்ல வேண்டுமென்றும் அதை அந்த விநாடி வரை இரகசியமாக வைத்திருந்தாள் பாரதி. ஆனால் அதே நாளில் அதே இரவில் மோகினியும் அந்தச் செய்தியைத் தெரிந்து கொண்டு விட்டாளென்றும், அப்படித் தெரிந்து கொண்டதால் ஏற்கெனவே நலிந்து தளர்ந்திருந்த அவள் மனம் இன்னும் தளர்ந்து நம்பிக்கை வீழ்ந்து விட்டதென்றும் பாரதி அறிந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. பாரதி எந்தப் பிரிவுப்சாரக் கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பி வந்திருந்தாளோ அந்தப் பிரிவுபசாரக் கூட்டத்தில் வெவ்வேறு வகுப்பு மாணவர்கள் சத்தியமூர்த்தி மேற்கு ஜெர்மனிக்குப் பயணமாவதைப் பாராட்டி விடை கொடுத்து அனுப்பும் பாராட்டிதழகளின் அச்சுப் பிரதிகள் சிலவற்றைக் கூட்டத்தில் வழங்கியதால் பாரதியும் கையோடு காரில் அவற்றைக் கொணர்ந்திருந்தாள்.

அவள் வீட்டுக்குள் வரும் போது அவற்றை மறந்து காரிலேயே விட்டு வந்ததனால் டிரைவர் முத்தையா அவற்றை உள்ளே கொண்டு வந்து அவளுடைய மேஜையில் வைத்து விட்டுப் போயிருந்தான். இரவில் மேஜை மீதிருந்த தண்ணீர்க் கூஜாவிலிருந்து தாகத்துக்காக நீர் பருக வந்த போது பாரதி அறியாமலே தற்செயலாகத் தான் அதைப் பார்க்க நேர்ந்த போது மோகினி பரபரப்படைந்தாள். உடனே அதைப் படித்தும் விட்டாள். என்றாவது ஒருநாள் இந்தக் கூண்டிலிருந்து விடுபட்டுப் போய் அவருடைய பாதங்களின் நிழலில் வாழலாம் என்றெண்ணியிருந்த நம்பிக்கையும் அவள் மனத்தில் இப்போது சரிந்தது. அவள் படித்த பாராட்டிதழ்களில் ஒன்றில், "இன்று நீங்கள் எங்களிடமிருந்தும் இந்தக் கல்லூரி ஆசிரியப் பதவியிலிருந்தும் வெகு தொலைவு விலகிப் போகிறீர்கள். மாணவர்கள் பலரைக் கண் கலங்கச் செய்யும் இந்த நிகழ்ச்சியை நாங்கள் பொறுத்துக் கொள்கிறோம். உங்களுடைய எதிர்காலம் நாட்டுக்குப் பயன்படுமென்ற நல்லெண்ணத்தால் நாங்கள் எங்களுடைய நஷ்டத்தை மறந்து விடுகிறோம்..." என்று எழுதியிருந்தது. "தன்னுடைய நஷ்டத்தை எப்படி மறப்பது?" என்றெண்ணி உறக்கமிழந்த உணர்வில் ஊக்கமிழந்து நிம்மதியாகப் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் பாரதியைப் பார்த்தாள் மோகினி. சிறிது நேரம் அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. பொதுவாக ஏதோ தீர்மானத்துக்கு வந்தவள் போல் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவள் எழுந்தாள். பெருமூச்சு விட்டபடி பக்கத்திலிருந்த அறையில் நுழைந்தாள். 'வாழ்க்கையில் நான் தனி! இந்தப் பரந்த உலகத்தில் எனக்கு யாருடைய ஆதரவும் இல்லை. யாராவது ஆதரவாக வந்தாலும் எனக்காக அவர்கள் துன்பப்படுகிறார்கள்!' என்று தனக்குத் தானே பேசிக் கொண்டபடி பலகணிக்கு அப்பால் ஆகாயத்தில் பூத்திருந்த நிலாவையும், தோட்டத்தில் பூத்திருந்த பவழமல்லிகைப் பூக்களையும் மனத்தில் கனமாகச் சேர்ந்து விட்ட தாங்க முடியாத துயரங்களையும் உணர்ந்து, 'நானும் வாழ வேண்டுமா இந்த நாசகார உலகத்தில்?' என்ற மனக்குரல் உள்ளே பெரிதாய் ஒலிக்க, உடல் ஓய்ந்து மனம் ஓய்ந்து நடைப்பிணமாய்த் தயங்கித் தளர்ந்து நின்றாள் அந்த நடனராணி.

இரவு பன்னிரண்டரை மணி சுமாருக்குத் தூக்கத்திலிருந்து தற்செயலாகக் கண்விழித்த பாரதி உள்ளே அறைக்குள் விளக்கு எரிவதையும், ஒரு நாளுமில்லாத அபூர்வமாக அன்று அந்த நேரத்துக்கு மோகினி உறக்கம் விழித்து உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருப்பதையும் பார்த்து ஆச்சரியப்பட்டாள். அந்த அகாலத்தில் கலைந்து சரிந்து சோர்ந்த கருங்குழலும் அழுத கண்களும் துயரம் தோய்ந்த வதனமுமாகச் சோகச் சித்திரமாய்க் காட்சியளித்தாள் மோகினி. அந்த அவலத்திலும் அவள் மிகவும் அழகாகத் தான் இருந்தாள். "இந்த அகாலத்தில் தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டு என்ன எழுதுகிறீர்கள் அக்கா?" என்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டு வினவிய பாரதிக்கு முதலில் சிறிது தயக்கமும் தடுமாற்றமும் அடைந்த பின், "சின்ன வயசிலே அபிநயம் பிடிச்ச பழைய பாட்டு ஒன்று ரொம்ப நாளா மறந்து போயிருந்தது... இப்போ திடீரென்று ஞாபகம் வந்தது. அப்படியே எழுதி வைத்துக் கொள்ளலாமென்று உட்கார்ந்தேன். தூக்கமும் வரவில்லை. படுக்கையில் சும்மா கிடந்து புரள்வதற்கு 'இதையாவது செய்யலாமே' என்று எழுத ஆரம்பித்தேன்" என்று பதில் வந்தது மோகினியிடமிருந்து. அந்தப் பதில் குரலின் தளர்ச்சியிலேயே அவள் நீண்ட நேரம் குமுறிக் குமுறி அழுதிருப்பது தெரிந்தது. "அதிக நேரம் கண் விழிக்காதீங்க... நேற்றும் நீங்க இராத் தூக்கம் இல்லாமல் தவித்தீர்கள். முந்தாநாளும் தூங்கல. உடம்பு என்னத்துக்காகும்? அலமாரியிலே தூக்க மாத்திரை இருக்கும். அதையாவது ரெண்டை எடுத்து முழுங்கிப்பிட்டுப் படுத்துக்குங்க" என்று பரிவுடன் கூறிவிட்டுச் சிறிது நேரத்துக்குள் மறுபடியும் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டு விட்டாள் பாரதி. மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையை விட்டுவிட்டுச் சத்தியமூர்த்தி வெளிநாடு செல்லப் போகிறார் என்பதையும், அதற்காகத்தான் அன்று மாலையில் லேக்வியூ ஹோட்டலில் பிரிவுபசார விருந்து நடந்தது என்பதையும், எதற்காகப் பாரதி தன்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டாள் என்பது புரியாமல் மோகினியின் மனம் குழம்பியது.

அத்தியாயம் - 63

தூக்கமும் ஒரு தற்காலிகமான சாவு தான். அதிலிருந்து மறுபடி விழித்துக் கொள்ள முடிகிறது. அதே போல் சாவும் ஒரு நிரந்தரமான தூக்கம் தான். ஆனால் அதிலிருந்து மறுபடி விழித்துக் கொள்ள முடிவதில்லை...

பாரதி மறைத்திருந்தாலும் சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையை விட்டு விட்டு மேற்கு ஜெர்மனிக்குச் செல்லப் போகிறார் என்று இப்போது தெரிந்து விட்டது. பாரதி அந்த விவரத்தைத் தன்னிடம் மறைத்ததற்காக மோகினி சிறிதும் கவலைப்படவில்லை. வாழ்வில் எதற்காகவுமே கவலைப்பட்டுப் பயனில்லை என்பது போல் விரக்தியடைந்து விட்டபின் கவலைப்படுவது கூட அதற்குக் காரணமான துயரத்தின் கௌரவத்தைக் குறைத்து விடுகிறதே! 'எல்லாத் துயரங்களையும் நம்மைத் தேடி வருகிற மலைமலையான எல்லாத் துன்பங்களையும் - நமக்கே சொந்தமாக ஏற்று அங்கீகரித்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் போது தான் அந்தத் துயரத்துக்கு நாம் செய்கிற கௌரவம் மெய்யாகிறது' என்று அந்த நிலையில் எதையும் தாங்கிக் கொள்ள முடிந்து ஒரு நிதானமும் மனப்பக்குவமும் அவளுக்கு வந்திருந்தன. 'என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் அக்கா' என்று கேட்ட பாரதியிடம் தான் சொல்வது பொய்தான் என்ற உணர்வுடனே சிறிதும் மனம் குழம்பாமல், 'ஏதோ பழைய பாட்டு எழுதுகிறேன்' என்று பதில் சொல்லிச் சமாளித்த போதும், நள்ளிரவுக்கு மேலாகிவிட்ட அந்த நேரத்தில் தனியாக உட்கார்ந்து கொண்டு பேய் போல் எழுதிக் கொண்டிருந்த போதும் அதே நிதானத்தோடுதான் அவள் நடந்து கொண்டிருந்தாள். பார்க்கப் போனால் எது பேய்? எது மனிதன்? பேய்க்கும் மனிதனுக்கும் உயிரும் உணர்வும் தானே வேறுபாடுகள்? வாழ்க்கையிலேயே பேய் பிசாசுகளை விடக் கொடிய மனிதர்கள் தன்னைச் சூழ்ந்து பயமுறுத்திக் கொண்டிருக்கும் போது உருவமில்லாத வெறும் பேய் பிசாசுகள் இவர்களை விடக் கெட்டவர்களாக இருக்க முடியுமென்று அவளுக்குத் தோன்றவில்லை.

அப்போது அவளைச் சுற்றிலும் ஒரே இருள். நடுவே மேஜை விளக்கு மட்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் அவள் எதைச் செய்து கொண்டிருந்தாளோ அதுவே சொப்பனம் போல் இருந்தது. வாழ்வதையும் நினைப்பதையும் விடச் சொப்பனம் எந்த விதத்திலும் குறைந்ததில்லை. ஏனென்றால் எப்போதாவது வருகிறது அது. பிரத்தியட்ச வாழ்வில் துக்கங்களில்லாமல் சுகமாயிருக்கிறது. தோட்டத்துப் பக்கமிருந்து வீசிய குளிர்ந்த காற்றில் பன்னீர்ப் பூவின் மணமும், பவழ மல்லிகை மணமும், கமகமத்தன. எங்கோ மரப் பொந்தில் ஆந்தை ஒரு முறை அலறியது. அப்போது சுவர்க்கடிகாரம் இரண்டு மணி அடித்தது. அந்த வேளையில் அவளுடைய மனத்தைப் போல் உலகமும் உணர்வும் செத்துப் போய்த் தூங்கிக் கொண்டிருந்தது. தூக்கமும் ஒரு தற்காலிகமான சாவுதான்! ஆனால் அதிலிருந்து விழித்துக் கொள்ள முடிகிறது. சாவும் ஒரு நிரந்தரமான தூக்கம்தான்! ஆனால், அதிலிருந்து விழித்துக் கொள்ள முடிவதில்லை. தான் எழுதிய கடிதங்களைத் தனித்தனியே மடித்து இரண்டு உறைகளில் இட்டு மேஜை மேல் வைத்தபின் ஒரு நோக்கமும் இல்லாமல் வெளியே பலகணி வழியே பார்த்தாள் மோகினி. எதிர்ப்புறம் நிலவும் மழை இருளும் கலந்து மயங்கிய மலையில் எங்கோ குங்குமமிட்டது போல் தீ எரிந்து கொண்டிருந்தது. பின்னிரவு குளிரக் குளிரப் பவழ மல்லிகைப் பூக்களின் வாசனை அறைக்குள் அதிகமாக வந்து பரவியது. காலந்தப்பிய மிக முன்னாலேயே இந்தச் சோம்பேறி உலகத்தை எழுப்பி விட ஆசைப்பட்ட அவசரக்காரச் சேவல் ஒன்று எங்கிருந்தோ ஒருமுறை கூவியது. வெறும் சொல்லுக்கும் நினைப்புக்கும் பொருள் எந்த இடத்தில் முடிகிறதோ அந்த இடத்திலிருந்துதான் உணர்ச்சி பிறக்கிறது. மோகினி அப்போது உணர்ச்சி மயமாயிருந்தாள். திடீரென்று அந்த அகாலத்தில் உடனே நீராடிவிட்டு வரவேண்டும் போலத் தோன்றியது அவளுக்கு. குளியலறைக்குப் போய்ச் சந்தனச் சோப்புப் பூசி உடல் குளிர நீராடி வேறு நல்ல புடவை மாற்றித் திலகமிட்டுக் கொண்டாள் அவள். கண்களுக்கு ஆசையோடு மையும் தீட்டிக் கொண்டாள். அவள் அப்போது அந்த நள்ளிரவில் தனக்குத்தானே செய்து கொண்ட காரியங்களுக்கு ஏதோ ஓர் அர்த்தமிருக்கிறாற் போலவும் தோன்றியது. அவள் அப்போது தான் பரிபூரணமான சந்தோஷத்தோடு இருப்பதாகவும் உணர்ந்தாள். அப்படி உணர்ந்த மறுகணமே அதன் மறுபுறத்தில் பரிபூரணமான துக்கத்தையும் உணர்ந்து அநுபவித்தாள். இருளில் தட்டுத் தடுமாறித் தோட்டத்துக்கு ஓடிப்போய் அரைகுறையாக மலர்ந்திருந்த இரண்டொரு ரோஜாப் பூக்களையும், அடுக்கடுக்கான குடை மல்லிகைப் பூக்களையும் பறித்து ஈரக்கூந்தலை முடித்து அதில் சொருகிக் கொண்டு வந்தாள். ஏதோ நினைத்தவளாக உள்ளே போய்த் தேடி எடுத்து அரங்கேறிய நாளிலிருந்து தன் பட்டுப் பாதங்களை அலங்கரித்த அந்தச் சலங்கைகளையும் பாரதி எழுந்து விடுவாளோ என்ற பயத்தோடு காலில் ஓசைப்படாமல் அணிந்து கொண்டாள். இந்தப் பாழாய்ப் போன உலகத்துக்குப் புகழோடும், பெருமையோடும், தான் அறிமுகமாகக் கருவியாக இருந்த எல்லாவற்றையும் தன்னோடு சேர்த்து எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும் போல ஓர் ஆசை அப்போது அவளுள்ளே எழுந்து தவித்தது. மேஜை விளக்கருகே கையைக் கொண்டு போய்ப் பட்டுப் புடவைத் தலைப்பினால் தன் விரலிலிருந்த மோதிரத்தைத் தேய்த்துப் பளபளக்கச் செய்த பின் அதன் பொன்னொளியில் தன் முகத்தைப் பார்த்த போது அந்த மோதிரத்தை அணிவித்த தெய்வத்தின் ஞாபகம் வந்து மனத்தைப் பிசைந்தது. அவளுடைய சலங்கையணிந்த பாதங்கள் உடனே எங்கோ புறப்பட்டுப் போய்விட வேண்டும் போல் துடிதுடித்தன. மைதீட்டிய விழிகள் யாரையோ பார்க்கப் பறந்தன. சிவந்த உதடுகள் யாரிடமோ புன்முறுவல் பூக்க நெகிழ்ந்தன. கமலக் கைகள் யாரையோ வணங்க வேண்டும் போலக் குவிந்து கூப்புவதற்கு முந்தின.

அன்று அப்போது அந்த விநாடியில் தான் மிக மிக அழகாயிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. சரீரமே மணக்கும் மல்லிகைப் பூ மாலையாக மாறிக் கனமில்லாமற் போய்விட்டது போலிருந்தது. ஒரு கையில் வீணையும் மற்றொரு கையில் ஏடுமாக வெள்ளைத் தாமரைப் பூவில் வெள்ளைத் திருவுடை தரித்துச் சரஸ்வதி தேவி போல் யாரோ தெய்வம் நெஞ்சில் பிரசன்னமாகி, 'இன்னும் தாமதமேன் குழந்தாய்! புறப்பட்டு வந்துவிடு!' என்று அவசரமாகக் கூப்பிடுவது போல ஒரு பிரமை உண்டாகி, அந்தக் கணத்தில் அவளைப் புல்லரிக்க வைத்தது.

இந்த உலகை மறந்து கொஞ்சம் நிம்மதியாகத் தூங்க வேண்டும் போலவும் அவளுக்கு ஆசையாயிருந்தது. ஆனால் தூக்கம் வரவில்லை. எங்கேயோ போக வேண்டும் போல் ஓர் அவசரத்தை உணர்ந்தாள். ஆனால் எங்கே போக வேண்டுமென்பதும் தெரியவில்லை. யாரையோ பார்க்க வேண்டும் போலப் பரபரப்பாகத் தவித்தாள். ஆனால் யாரைப் பார்க்க வேண்டுமென்றும் தெரியவில்லை. மீனாட்சியம்மன் கோயில் கோபுரம், பொற்றாமரைக் குளத்தருகே உள்ள கிளிக்கூண்டு மண்டபம், சங்கீத விநாயகர் கோவில் தெரு, தான் பிறந்து வளர்ந்து ஆளான வீடு, அந்த வீட்டுக் கூடத்தில்தான் தொழுவதற்கென்று ஒரு தெய்வத்தைத் தேர்ந்தெடுத்து மாலைசூட்டி மோதிரம் அணிவித்தது, நாட்டரசன் கோட்டையிலிருந்து கலியாணம் கச்சேரி முடிந்து திரும்பும் போது நிலா இரவில் சாலையோரம் குடிசையில் சந்தித்த 'சுகவாசத்துத்' தம்பதிகள் எல்லாரும் தொடர்பாகவும், தொடர்பின்றியும், நனவு போலவும் கனவு போலவும் மாறி மாறித் தோன்றினார்கள். கடிகாரம் மூன்று மணியடித்து ஓய்ந்தது. காற்றும் குளிரும் அதிகமாயின. வெளியே மழை வரும் போல மேகங்கள் கறுத்துக் கூடியிருந்தன. மறுபடியும் எங்கோ சேவல் கூவியது. பாரதி தூக்கத்தில் ஏதோ புலம்பித் தணிந்தாள். தோட்டத்து மல்லிகைப் புதரில் மங்கிய நட்சத்திரங்களைப் போல் பூக்கள் தெரியத் தொடங்கின. ஒவ்வொரு பூவாகக் கீழே உதிர்ந்து பவழ மல்லிகை மரத்தடியில் பாய் விரித்தாற் போல வெண்மை பரவித் தெரிந்தது. மேஜை விளக்கை அணைத்து விட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தாள் மோகினி. தூக்கம் வரவில்லை. உடல் சோர்வாகவும் இலேசாகவும் இருந்தது. இருட்டிலேயே எழுந்து போய் அலமாரியிலிருந்து ஏதோ எடுத்துக் கொண்டு - பின்பு தண்ணீர்க் கூஜாவைத் திறந்த ஓசையில் பாரதி விழித்துக் கொண்டு "யாரது?" என்று கேட்டாள். "நான் தான் மோகினி. தண்ணீர்த் தாகம் நாக்கை வறட்டுகிறது" என்று பதில் கூறிவிட்டுத் தண்ணீரும் குடித்த பின் பழையபடி சாய்வு நாற்காலியில் போய் உட்கார்ந்தவாறே மீண்டும் தூங்க முயன்றாள் மோகினி. மறுபடியும் பேய்த்தாகம். மோகினி இரண்டாவது முறையாகவும் இருட்டில் தட்டுத் தடுமாறி நடந்து போய் தண்ணீர் கூஜாவைத் திறந்து அதிலிருந்த தண்ணீரையெல்லாம் பருகினாள். தீராத தாகம் மூண்டுவிட்டது போல் அடிவயிற்றில் வெப்பம் எழுந்தது. உலகையே மறந்து நிம்மதியாக உறங்கிவிட வேண்டும் போல ஒரே சோர்வு. தள்ளாடித் தள்ளாடி நடந்து போய் மறுபடியும் சாய்வு நாற்காலியில் சாய்ந்து ஏதோ நினைப்புடன் பக்கத்து மேஜையில் இருந்த கடித உறைகளை எடுக்கக் கை நீட்டிய போது - அந்த உறைகள் கைக்கு எட்டாமல் மேஜை விளிம்பில் கைக்கெட்டுகிற மாதிரி இருந்த மாத்திரைப் பாட்டில் கீழே விழுந்து உடைந்தது. நீட்டி எடுக்க முடியாமல் கைகள் அறவே சோர்ந்து கண்கள் இருண்டு வரவே நாற்காலியில் அப்படியே சாய்ந்து தூங்கினாள் அவள். மறுபடியும் ஒரு தெய்வீகமான பிரமை! வீணையும் கையுமாகக் கலைமகளே நேரில் வந்து, 'இன்னும் தாமதமேன் குழந்தாய்! புறப்பட்டு வந்துவிடு!' என்று அவசரமாக அழைப்பது போல் ஒரு தெய்வீகமான அழைப்பு அவள் காதில் கேட்டது. ஈரக்கூந்தலில் சொருகிய குடை மல்லிகை நன்றாக மணந்து அவள் நினைவில் இன்னும் பல்லாயிரம் மணங்களை நினைக்க வைத்தது. அந்த மணங்களின் நினைவில் மூழ்கி நித்தியமாகவும் சாசுவதமாகவும் அப்படியே விழியாமல் உறங்கிக் கொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது மோகினிக்கு. அவள் உறங்கினாள். நிம்மதியாக இந்த உலகை மறந்து உறங்கினாள். இதன் சகலவிதமான ஆசாபாசங்களையும் நன்மை தீமைகளையும் சுகங்களையும் துக்கங்களையும் மறந்து உறங்கினாள். இந்த உலகில் பொழுது விடிந்து கொண்டிருந்த போது அவள் தன்னைச் சுற்றி இருள் சூழ நன்றாக அனுபவித்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டுச் சத்தியமூர்த்தி சாரைப் போய்ப் பார்த்துப் பேசி வர எண்ணியிருந்த பாரதி கடிகாரத்தில் காலை ஐந்தே முக்கால் மணிக்கு அலாரம் வைத்திருந்தாள். அலாரம் மணி அடித்ததைக் கேட்டதும் பாரதி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருந்தாள். நேரங் கழித்து எழுந்திருந்து விட்டது போன்ற பரபரப்போடு அவள் மின் விளக்கைப் போட்ட போது, சுழித்துச் சுழித்து வீசும் குளிர்ந்த காற்று ஜன்னல் கதவுகளில் மோதியடித்துக் கொண்டிருந்தது. மழை வரும் போல் மலைகளிலும் சுற்றுப்புறத்திலும் இருண்டு மேகங்கள் கப்பியிருந்தன. விடிகிற நேரமாகியும் இருட்டு மூட்டம் போட்டிருந்தது. விளக்கைப் போட்டுத் திரும்பியவள் எதிரே பார்த்ததும் திகைத்தாள். மோகினி மேஜையருகே சோபாவில் உட்கார்ந்து சாய்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய தோற்றத்திலிருந்த பொலிவையும் - புதுமையையும் பார்த்தால் விடியுமுன் அதிகாலையிலேயே எழுந்து நீராடி உடைமாற்றித் திலகமிட்டு அலங்கரித்துக் கொண்டு உட்கார்ந்தவள் தற்செயலாக அப்படியே சோர்ந்து தூங்கி விட்டாற் போலிருந்தது. ஜன்னல் வழியாக வீசிய மலைக் காற்றில் தோட்டத்து மரத்திலிருந்து உதிர்ந்த பவழ மல்லிகைப் பூக்கள் மோகினியின் மடியிலும் கால்களிலுமாகத் தாறுமாறாய் நிறைய வந்து விழுந்திருந்தன. காற்றுப் புகுந்து அசைத்து ஆட்டிய கருங்கூந்தல் அலை அலையாகச் சுருண்டு சிலிர்த்துத் தூங்கிக் கொண்டிருக்கும் அவள் முகத்தை என்றுமில்லாத பேரழகோடு காண்பித்துக் கொண்டிருந்தது. பொன்நிறச் சரிகைக்கரையிட்ட வெண்பட்டுப் புடவையணிந்திருந்ததனால் அவளே அப்போது கலைமகள் போலிருந்தாள். அந்த நடனராணி சும்மா தூங்குவதே ஒரு சாமர்த்தியமான அபிநயம் போலிருப்பதைப் பார்த்து வியந்து கொண்டே, 'பாவம் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும். காப்பியோடு போய் எழுப்பலாம்...' என்று நினைத்துக் கொண்டவளாய்ப் பல் விளக்கப் போனாள் பாரதி. பதினைந்து நிமிஷங்களுக்குப் பின் சுடச்சுட ஆவிபறக்கும் காப்பியோடு பாரதி மோகினியை, எழுப்ப வந்தாள். "என்னக்கா இது? விடிந்ததும் விடியாததுமாக எழுந்து குளித்துவிட்டு இப்படி உட்கார்ந்தபடி தூங்குகிறீர்களே...? காப்பி கொண்டு வந்திருக்கிறேன்" என்று பாரதி குரல் கொடுத்து விட்டுக் காப்பி டபராவை மேஜையில் வைத்தாள். மோகினிக்கு நல்ல தூக்கமாயிருக்க வேண்டும் என்று நினைத்து அவளைத் தொட்டு எழுப்புவதற்காகத் தோள் மேல் கைவைத்த பாரதி பூமாலை நழுவுவது போல் மோகினியின் தலை சாய்ந்து உடல் சரியவே அடித் தொண்டையிலிருந்து பீறிடும் அழுகை வீடே அதிரும் பெரிய அலறலாக வெளிப்பட "அக்கா! மோசம் பண்ணிட்டுப் போயிட்டீங்களே" என்று பெரிதாகக் கதறினாள். மோகினி உடுத்திருந்த புடவையின் சரிகைக் கரை சற்றே விலகியிருந்த வலது பாதத்தில் அவள் சலங்கைக் கட்டியிருப்பது தெரிந்தது. காலடியில் தூக்க மருந்து மாத்திரைப் பாட்டில் விழுந்து உடைந்திருந்தது. மேஜை மேல் கடித உறைகள் இரண்டு கிடந்தன. ஒன்றில் பாரதியின் பெயர் இருந்தது. பாரதிக்குக் கடிதம் வைத்திருந்த உறையின் மேல், 'என் அருமை சகோதரி - தங்கை பாரதிக்கு' என்று முகவரி எழுதியிருந்தாள் மோகினி. சத்தியமூர்த்திக்கு எழுதியிருந்த கடித உறையில், "என்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வம் உயர்திரு. சத்தியமூர்த்தி அவர்களுக்கு' என்று எழுதியிருந்தாள். பாரதிக்கு எழுதிய கடிதத்தில், "அருமைச் சகோதரி! என்னை மன்னித்து விடு! ஏதோ ஒரு பிறவியில் நீயும் நானும் உடன் பிறந்தவர்களாக இருந்து, விட்ட குறை தொட்ட குறையோ என்னவோ, நீ என் மேல் அளவற்ற அன்பும் பாசமும் காண்பித்தாய். என்னால் இனி உனக்கும் துன்பங்கள் வரலாம். நான் வாழ்வதற்கு விரும்பவில்லை என்பது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். நான் தூங்கப் போகிறேன். மனிதர்களின் இந்த உலகத்தை மறந்து நிம்மதியாகத் தூங்கப் போகிறேன். 'இன்றிரவு மட்டும் நிம்மதியாகத் தூங்குவதற்கு இரண்டு தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்ளுங்களக்கா?' என்று நீ சொல்லியிருந்தாய் பாரதி! நானோ அடுத்த பிறவி வரை நிம்மதியாகத் தூங்க விரும்பும் பேராசையால் நிறைந்த பெருந்தூக்கத்துக்கு ஆசைப்பட்டுப் பாட்டிலிலிருந்த அவ்வளவு மாத்திரைகளையும் விழுங்கியிருக்கிறேன். மறுபடி இனி அடுத்த பிறவியில் விழித்தால் போதும். சொல்லப் போனால் இன்னொரு முறை இந்த உலகில் பிறந்து இதில் நிறைந்துள்ள துரோகங்களையும் வஞ்சகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் போதே எனக்குச் சலிப்பாகத்தான் இருக்கிறது. முடிந்தால் நீ எனக்கு ஒரு உதவி செய். இதனோடு இருக்கும் மற்றொரு கடிதத்தை என் தெய்வத்திடம் சேர்த்து விடு. தயவு செய்து அவர் இந்த ஊரை விட்டுப் புறப்படுவதற்கு முன் இதை அவரிடம் கொடுத்து விடு. என்னுடைய தற்கொலைக்கு அவர் என்னைச் சந்தேகப்பட்டு வெறுத்தது மட்டும் தான் காரணம் என்று நீயாக எண்ணி அவரை ஒன்றும் கோபித்துக் கொள்ளாதே! நாங்கள் மேளதாளத்தோடு சந்தனம் வெற்றிலை பாக்குக் கொடுத்து ஊரறிய மணந்து கொள்ளவில்லையானாலும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். அவருடைய மனைவியாகத்தான் நான் இப்போது சாகிறேன். 'அவருடைய மனைவி' என்ற பரிசுத்தத்துக்கு எந்தக் களங்கமும் ஏற்படுவதற்கு முன் நான் இந்த உலகிலிருந்து போய்விடுவது நல்லது.

இந்தத் தேசத்துப் பெண்கள் இறக்கும் போது சுமங்கலியாக இருக்க வேண்டுமென்று தவமிருப்பார்கள். நானோ பிடிவாதமாக அவருடைய சுமங்கலியாக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்காகவே மகிழ்ச்சியோடு இறக்கிறேன். சாவதில் கூட மகிழ்ச்சி உண்டா என்று நீ கேட்கலாம்? வாழ்வதனால் அதை அடைய முடியாத போது சாகாமல் வேறென்ன செய்ய முடியும்? முன்பு ஒரு சமயம் அவரிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். 'நான் இறந்து போனால் என்னுடைய சிதையில் உங்கள் கையால் ஒரு முழம் பூவும் மஞ்சளும் குங்குமமும் போடுங்கள். அடுத்த பிறவியிலும் உங்களையே காதலித்து மணப்பதற்காக இந்தச் சௌபாக்கியத்தை எனக்கு அளியுங்கள்! என்னுடைய சடலம் மஞ்சள் குங்குமம் அழியாமல் பூவுடனும் பொலிவுடனும் கொழுந்து விட்டு எரிகிற போது நீங்கள் நிஜமான கருணையோடு அருகில் வந்து எனக்காக அழுதால், உங்களுடைய கண்களிலிருந்து இரண்டு சொட்டு நீர் நெகிழ்ந்து என் சிதையில் விழுந்தால், அந்தக் கடைசி விநாடிக் கருணையையே வாயிலாகக் கொண்டு ஞாபகமாகவும் பிடிவாதமாகவும், நான் அடுத்த பிறவியில் கூட உங்களையே நிச்சயமாகத் தேடிக் கொண்டு வந்துவிடுவேன்' என்று முன்பு நான் அவரிடம் வேண்டிய போது அந்த அமங்கலமான வேண்டுகோளுக்காக அவர் என்னைக் கண்டித்துக் கடிந்து கொண்டார். கோபித்தார். இன்றுள்ள மனநிலையில் அவர் என்னுடைய இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவாரா இல்லையா என்று எனக்கே தெரியாது! இதனுடனிருக்கும் கடிதத்தில் இதைப் பற்றி அவருக்கு நினைவூட்டி எல்லா விவரமும் எழுதியிருக்கிறேன். நீ அவரிடம் இந்தக் கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுத்து விடு! அப்புறம் அவர் செய்வதைச் செய்யட்டும். மறுபடி விழித்துக் கொள்ள முடியாத பேருறக்கத்தில் ஆழ்வதற்காக இப்போது எனக்கு இந்த உலகத்திலிருந்து விடை கொடு. உன் அக்கா மோகினி."

பாரதி இந்தக் கடிதத்தைப் படித்துவிட்டுக் குழந்தை போல் மேலும் மேலும் விசும்பி அழுதாள். அவள் சற்று முன் பெரிதாக அலறியழுத குரலைக் கேட்டு ஜமீந்தாரும், கண்ணாயிரமும், முன்புறம் போர்டிகோவில் காரைத் துடைத்துக் கொண்டிருந்த டிரைவர் முத்தையாவும் பதறிப் போய்ப் பரபரப்படைந்து ஓடி வந்தார்கள். மோகினி 'சத்தியமூர்த்திக்காக எழுதி வைத்திருந்த கடிதத்தை ஜமீந்தாரும் கண்ணாயிரமும் பார்த்து விடாமல் பத்திரமாக எடுத்து மறைத்து வைத்துக் கொண்டாள் பாரதி. எவ்வளவு பெரிய சோகத்தின் போதும் ஜமீந்தாருக்கு அழுகை வராது. அவ்வளவு குரூரமும், கல்மனமும் அவருக்கு உண்டு. மைனர் பருவத்தில் ஜமீன் எல்லைக்குள்ளிருந்த எத்தனையோ ஏழை எளிய பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு - அவர்கள் வெளியில் போய்த் தன்னைக் குறைத்துப் பேசுமளவுக்குத் தைரியம் வந்ததாகத் தெரிந்தால் ஆட்களை விட்டு குருத்து வயதிலேயே கொலை செய்யவும் ஏற்பாடு செய்து பழக்கமிருந்ததாகப் பேசிக் கொள்வார்கள் அவரைப் பற்றி. கண்ணாயிரமும் பெரிய கிராதகன். மோகினியைக் கருவியாக வைத்து இந்த ஜமீந்தாருடன் இன்னும் உறவாடிப் பணம் பண்ணலாமென்ற திட்டத்தில் மண் போட்டுவிட்டு அவள் போய்விட்டாளே என்பதுதான் அவனுக்கு இப்போது வருத்தமாக இருந்ததே ஒழியப் பச்சைக்கிளி போல் பரிசுத்தவதியான அந்த அழகி மாண்டு போய் விட்ட துயரம் அவனுக்கும் நிஜமாக இல்லை. கொடிய மிருகங்களைப் பார்ப்பது போல் அவர்களைக் கடுமையாகப் பார்த்தாள் பாரதி. டிரைவர் முத்தையாவும், சமையல்காரரும், வீடு பெருக்கும் வேலைக்காரி ஒருத்தியும் கண்கலங்கி நின்றார்கள். வாழ்வின் தொடக்கத்திலிருந்தே குரூரமாகவும் கொடுமையாகவும் வாழ்ந்து வாழ்ந்து மென்மையான உணர்வுகளெல்லாம் மரத்துப் போய்விட்ட ஜமீந்தாரும், கண்ணாயிரமும் பேயறைப்பட்டது போல் திகைத்து நின்றார்களே ஒழியக் கண்ணீர் விட்டு அழவில்லை. எல்லாரையும் ஒதுங்கிப் போகச் சொல்லிவிட்டு வேலைக்காரியுடைய உதவியோடு மோகினியின் உடலைத் தரையில் எடுத்துவிட்டாள் பாரதி. வெளியே காற்றும் மழையுமாகப் பலமான சாரல் பிடித்திருந்தது. பிணத்தின் தலைமாட்டில் விளக்கேற்றி ஊதுவத்தி கொளுத்தி வைத்துவிட்டுச் சுகமாக அநுபவித்து தூங்குவது போல் அழகாயிருந்த மோகினியின் தோற்றத்தைப் பார்த்து மறுபடியும் குமுறிக் குமுறி அழுதாள் பாரதி. இறுதியில் ஒருவாறு தன் மனத்தைத் தேற்றிக் கொண்டு மோகினியின் கடைசி விருப்பப்படி அந்தக் கடிதத்தைச் சத்தியமூர்த்தியிடம் கொடுப்பதற்காக அவள் புறப்பட்டாள்.

ஆனால், என்ன துரதிர்ஷ்டம்? சாவுக்குப் பிறகும் மோகினியின் துரதிர்ஷ்டம் அவளுடைய கடிதத்துக்குக் கூட இருந்தது. எதிர்பாராத விதமாகக் காலையில் முதல் பஸ்ஸுக்கே புறப்பட்டு மதுரைக்குப் போயிருந்தான் சத்தியமூர்த்தி. சாவுக்குப் பின்பும் அவளைத் துர்பாக்கியசாலியாக்கி அவளுடைய வேண்டுகோள் நிறைவேறாமல் போய் விடுமோ என்ற நிலையை ஏற்படுத்தாமல் கடிதத்தை டிரைவர் முத்தையாவிடம் கொடுத்து உடனே காரிலேயே மதுரைக்குப் போய்ச் சத்தியமூர்த்தியை அழைத்து வர ஏற்பாடு செய்தாள் பாரதி. கார் மதுரைக்குப் போய்த் திரும்பும் வரை அவளால் அங்கு நடைபெற்ற ஏற்பாடுகள் எதையும் தடுக்க முடியவில்லை. சத்தியமூர்த்தி வருகிறவரை மோகினியின் பிணத்தை எடுக்கலாகாதென்றுகூட அவளால் வெளிப்படையாக அவர்களைத் தடுக்க முடியவில்லை.

மாலை ஆறு மணிக்கெல்லாம் பூச்சரங்களால் அலங்கரித்த பல்லக்கில் மோகினியின் பிரேதத்தை வைத்து எடுத்துக் கொண்டு மயானத்துக்குப் புறப்பட்டு விட்டார்கள். ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காக ஜமீந்தார் இரண்டாயிரம் ரூபாய்க்கு முழு ஒரு ரூபாய் நாணயங்களாக மாற்றி வீட்டிலிருந்து மயானம் வரை வீதியின் இருபுறமும் காசுகளை வீசி எறியச் செய்தார். மழை தூறிக் கொண்டிருந்ததனால் மயானத்தில் மேற்புறம் தகரக் கூரையிட்ட ஓரிடத்தில் சிதை அடுக்கப்பட்டது. தம்முடைய பேர் கௌரவம் இதையெல்லாம் காப்பாற்றிக் கொள்வதற்காக அது தற்கொலை என்று தெரியாதபடி வெறும் இயல்பான மரணம் என்பது போல் மட்டுமே பத்திரிகைகளிலே செய்தி வர மிகவும் கவனமாக ஏற்பாடு செய்திருந்தார் ஜமீந்தார்.

மயானத்தில் காரியங்கள் எல்லாம் முடிந்து வீடு திரும்பிய போதும் மதுரையிலிருந்து கார் திரும்பவில்லை என்று தெரிந்து சத்தியமூர்த்தியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் பாரதி. மோகினியைக் கொண்டு போய்ப் பொசுக்கிவிட்டு வீடு திரும்பிய பின் வீட்டுக்குள் நுழைவதற்கே சலிப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது அவளுக்கு. ஜமீந்தாரும், கண்ணாயிரமும் அவர்களோடு வழக்கமாகச் சீட்டு விளையாட வரும் இன்னொரு பெரிய மனிதரும் கவலையில்லாமல் முன் ஹாலில் உட்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரவு மணி ஒன்பதரைக்கு மேல் முன்புறம் போர்டிகோவில் கார் ஹாரன் ஒலி கேட்டு உள்ளே அழுது கொண்டிருந்த பாரதி வெளியே வந்து பார்த்தாள். டிரைவர் முத்தையா மட்டும் காரிலிருந்து இறங்கி வந்தான்.

"அவர் வரலியா, முத்தையா?"

"வந்திருக்காரு; ஆனா இங்கே நம்ம வீட்டுக்கு வரச் சங்கடப்படறாரு. அப்படியே வர்ற வழியிலே மயானத்துப் பக்கமாகக் காரை நிறுத்தச் சொல்லி இறங்கிக்கிட்டு 'நீ வீட்டுக்குப் போ'ன்னு சொல்லிக் காரையும் என்னையும் இங்கே அனுப்பிச்சிட்டாரு?" என்றான் முத்தையா.

"வேறு என்ன சொன்னார்?"

"நீங்க முதல்லே மதுரைக்கு அனுப்பி வைச்ச கடிதாசு அவருக்குக் கிடைக்கலியாம். அதனாலேதான் இவ்வளவு ஆகிவிட்டதுன்னு ரொம்ப வருத்தப்பட்டார். காரிலேயே அழுதுகிட்டுத்தான் வந்தாரு. இப்பக் கொடுத்தனுப்பின கடிதாசையும் அழுதுகிட்டேதான் படிச்சாரு. இத்தினி நாளா நம்ம காலேஜிலே இருந்தாரே? 'ஸ்டிரைக்' வந்தப்போ ஹாஸ்டலுக்குத் தீ வச்சுப்பிட்டாருன்னு பொய்யாப் பழி சுமத்தி அவரைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக்கிட்டு போனாங்களே! அப்பக்கூட அவர் கண்கலங்கி நான் பார்க்கலீங்கம்மா! அத்தினி நெஞ்சழுத்தக்காரரு இன்னிக்குத் தான் பச்சைப் புள்ளக் கணக்காக் குமுறிக் குமுறி அழுதாரு. சமாசாரத்தை அறிஞ்சிக்கிட்டதும் ரொம்ப மனசு உடைஞ்சிப் போயிட்டாரு..." என்று டிரைவர் கூறிய போது, 'சத்தியமூர்த்தி மயானத்திலிருந்து இந்த மழைச் சாரலில் எப்படி ஊருக்குள் திரும்பி வருவார்? அவசரப்பட்டு வண்டியைத் திருப்பி அனுப்பி விட்டாரே?' என்ற சந்தேகம் வரவே தானே அந்தக் காரை ஓட்டிக் கொண்டு திரும்பவும் மயானத்துக்குப் புறப்பட்டாள்.

எல்லையற்ற கருமையாய் மேகங்கள் அடர்ந்து எங்கும் கனத்துக் கிடந்த மையிருட்டினிடையே அவளுடைய பிணம் எரிகின்ற அந்தச் சிதையைத் தேடிச் சென்று மதுரையிலிருந்தே வாங்கி வந்திருந்த மல்லிகைப் பூ மாலையையும், மஞ்சள் கிழங்கையும், குங்குமத்தையும் அந்த நெருப்பில் இட்ட பின் மௌனமாகக் கண்ணீர் சிந்தியபடி நின்றான் சத்தியமூர்த்தி. அந்தச் சிதையிலிருந்து பிதிர்ந்த நெருப்புத் துண்டுகள் இரண்டு அவனுடைய கால்களை முத்தமிடுவது போல் வந்து வீழ்ந்து அங்கே சுட்டன. தன்னைப் பொறுத்தவரை உலகத்தின் சந்தோஷமயமான விநாடிகள் - சந்தர்ப்பங்கள் எல்லாம் அன்று அங்கே முடிந்து போய்விட்டதாகத் தோன்றியது அவனுக்கு. பார்க்கப் போனால் வாழ்க்கையே ஒரு சபலம் தான். சிலருக்கு அது நிறைவேறுகிறது. பலருக்கு நிறைவேறுவதில்லை. அது நிறைவேறுவதில்லை என்று உணரும் போது மனப்பக்குவமில்லாதவர்களுக்கு உலகின் மேலேயே கோபமும், வெறுப்பும், நிராசையும் வருகின்றன. சத்தியமூர்த்தி மனம் பக்குவமில்லாதவனில்லை. வாழ்க்கையில் அவன் நிறையத் துக்கப்பட்டு விட்டான். ஆனால் மற்றவர்களுடைய சந்தோஷத்துக்காக இன்னும் அவன் எத்தனையோ பெரும்பணிகளைப் புரிந்து நெடு நாள் வாழ வேண்டும்.

மயானத்தில் அந்த வேளையில் பின்னால் யாரோ வந்து நிற்கிற காலடியோசை கேட்டு அவன் திரும்புகிறான். பாரதி வந்து நின்று கொண்டிருந்தாள். மெல்ல விசும்பி அழுது கொண்டே, "அக்கா தெய்வப்பிறவி! உங்களுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தைக் கடைசி வரை காப்பாற்றி விட்டாள். இன்னொருவருடைய கைபடுவதற்கு முன் தானாகவே மண்ணில் உதிர்ந்து தன் தூய்மையைக் காப்பாற்றிக் கொண்டு விடுகிற பவழ மல்லிகைப் பூவைப் போல் உதிர்ந்து போய் விட்டாள்! நீங்கள் அந்தப் படத்தைப் பார்த்துச் சந்தேகப்படுகிறீர்கள் என்பதைப் பொறுத்துக் கொள்ளாமல் அக்கா புழுவாய்த் துடித்துப் போனாள். உலகமே கசந்து போய் மறுபடி விழித்து எழுந்திருக்க விரும்பாமல் பெருந்தூக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்; இனி வருந்தி என்ன பயன்? நீங்கள் ஆண்பிள்ளை! எங்கோ வெளிநாட்டுக்குப் போகிறீர்கள். புதிய புதிய அநுபவங்கள் ஏற்பட்டு உங்களுடைய ஞாபகத்திலிருந்து மோகினி அக்காவைப் பற்றிய நினைவே மங்கினாலும் மங்கிவிடும்..." என்றாள்.

"தயவு செய்து அப்படிச் சொல்லக் கூடாது! அவளை நான் வாழ்வில் என்றுமே மறக்க முடியாது பாரதி! நான் மறக்க முடியாதபடி என் கையில் ஒரு பொன் விலங்கு போட்டு பிணித்து விட்டுப் போயிருக்கிறாள் அவள். இனி என்னுடைய இந்த வலது கையில் மானசீகமாய் இன்னொரு கையும் நிரந்தரமாகப் பிணைந்திருக்கிறது. எனக்கு ஏற்கெனவே மணமாகி அந்த மனத்துக்கு நாயகியை இன்று நான் பறிகொடுத்து விட்டேன் என்ற ஞாபகம் கையிலிருந்து பிரித்தெடுக்க முடியாத இந்த மோதிரம் உள்ளவரை மாறாது. இந்தக் கைக்கு இனி இந்த மோதிரம் ஒரு தடை. ஏனென்றால் மோகினி வாழ முடியாமல் போன வாழ்க்கையை வாழ்வதற்காக எந்தப் பெண்ணும் இனிமேல் இந்தக் கையைப் பற்ற முடியாமல் இந்த மோதிரம் தடுத்துக் கொண்டேயிருக்கும். என் வாழ்வில் இனி இது ஒரு தவம். நான் டில்லிக்குப் போய்த் திரும்புமுன் மோகினியிடமிருந்து நீங்கள் வாங்கி அனுப்பிய கடிதம் மதுரைக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் என் தந்தை அதை வாங்கி கோபத்தோடு அடுப்பில் கிழித்தெறிந்திரா விட்டால் மோகினி ஜமீந்தாரை இரகசியமாக மணந்து கொண்டு விட்டாள் என்று சந்தேகப்பட்டு அவளை நான் வெறுக்க நேர்ந்திருக்காது" என்று கண்கலங்கிப் போய் அழுகை தொனிக்கும் குரலில் பாரதிக்குப் பதில் கூறினான் சத்தியமூர்த்தி. பாரதியும் கண்கலங்கினாள். பேசிக் கொண்டே மயானத்துக் கிளைச் சாலையிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்தார்கள் அவர்கள். "வீட்டுக்கு வாருங்கள், காலையில் மதுரைக்குப் போகலாம். டிரைவர் முத்தையாவைக் காரிலேயே உங்களைக் கொண்டு போய்விடச் சொல்கிறேன்" என்று பாரதி பரிவோடு வேண்டினாள். அவன் அதற்கு இணங்கவில்லை.

"உங்கள் அழைப்புக்கு நன்றி! மன்னிக்க வேண்டும். இந்தப் பாதையாக மதுரைக்குப் போகிற காய்கறி லாரி ஏதாவது வரும். அதில் ஏறிப் போய்க் கொள்கிறேன் நான். நீங்கள் வீட்டுக்குத் திரும்புங்கள்."

அதற்கு மேல் அவனை வற்புறுத்த விரும்பவில்லை அவள். "புரொபஸர், நீங்கள் ஒரு கல்லூரிக்கு மட்டும் புரொபஸர் இல்லை! சமூகத்துக்கே புரொபஸராகிற தகுதி உங்களுக்கு இருக்கிறது. எந்த நாட்டுக்குச் சென்றாலும், எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் முடிந்தால் மறுபடி எங்கள் கல்லூரிக்கு வாருங்கள். நீங்கள் என்று வந்தாலும், உங்கள் மாணவியாகவே நான் உங்களை வரவேற்பேன்" என்று நாத்தழுதழுக்க கூறிக் கீழே குனிந்து அவன் பாதங்களை வணங்கினாள் பாரதி. அப்படி வணங்கும் போது ஞாபகமாக அதில் ஏற்கெனவே சமர்ப்பனமாகிவிட்ட ஒருத்திக்கு மரியாதை செய்வது போல் அந்தப் பாதங்களிலிருந்து இரண்டடி விலகித் தன் கைகள் அந்தப் பொன்னிற பாதங்களைத் தீண்டி விடாமல் தள்ளியிலிருந்து வணங்கினாள் பாரதி. சாலையில் ஏதோ லாரி வந்தது. கைநீட்டி நிறுத்தி, "மதுரையில் கொண்டு போய் விட முடியுமா?" என்று சத்தியமூர்த்தி அதில் இடம் கேட்டபோது அவர்கள் சம்மதித்தார்கள். சத்தியமூர்த்தி முன்புறம் லாரி டிரைவருக்கருகே ஏறி உட்கார்ந்து கொண்டு பாரதிக்கு விடை கொடுத்தான். லாரி நகர்ந்தது. பாரதி பிரமை பிடித்தாற் போல் வெகுநேரம் அந்த இடத்திலேயே நின்று கண்ணீர் சிந்தி அழுது கொண்டிருந்தாள். பின்பு இறுதியாக அவன் கால்கள் நின்ற இடத்தைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டு காரில் ஏறி வீட்டுக்குத் திரும்பினாள்.

இப்பால் லாரி மலைச்சாலையில் வளைந்து வளைந்து கீழிறங்கியது. சாரலும் இருளும் காற்றும் நிறைந்த அந்த இரவில் வாழ்க்கையின் அழகுகள் எந்த இடத்திலிருந்து ஆரம்பமாவதாக முன்பு ஒரு சமயம் அவன் நினைத்துக் கொண்டிருந்தானோ அந்த இடத்தில் இப்போது அவை முடிந்து போய்விட்டதாகத் தோன்றியது. மோகினியின் மரணமாகிய அந்தச் சோகம் இன்று அவனைக் கீழே வீழ்த்திவிட்டது என்பது உண்மைதான். 'ஆனால் கீழே விழுவது மீண்டும் எழுவதற்கே' என்ற மனித உணர்ச்சியையும் அவனால் இழக்க முடியவில்லை. வாழ்க்கையில் இன்னும் வலது காலை முன் வைத்து அவன் நடந்து தானாக வேண்டும். எத்தனையோ நீண்ட, முடிவற்ற பல பாதைகளில் நடக்க வேண்டும். லாரி போகிற சாலைக்கு மேலே இருண்ட வானத்தில் எங்கிருந்தோ மோகினியின் குரல், 'மானிடர்க்கு என்று பேச்சுப்படின் வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே!' என்று பாடுவது போலவும் தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற பற்கள் தெரியச் சிரிப்பது போலவும் பிரமை வந்து அவன் கண்களை நனைத்தது. அவளுடைய நளின பாதங்களின் சலங்கை ஒலியும் எங்கிருந்தோ கேட்டது.

பத்து பதினைந்து நாட்களுக்குப் பின் மேற்கு ஜெர்மனிக்குப் புறப்படுவதற்காகச் சத்தியமூர்த்தி பம்பாய்க்குப் போய்ச் சேர்ந்த போது குமரப்பன் மட்டும் வழியனுப்ப வந்திருந்தான். விமானத்தில் ஏற வேண்டிய விநாடி வரை நண்பனோடு பல செய்திகளை மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அன்று காலை செய்தியைப் படித்திருந்தார்கள் அவர்கள். கள்ள நோட்டுத் தயாரிக்கும் இரகசியக் குழுவில் முக்கியமான சம்பந்தமிருப்பதாக மஞ்சள்பட்டி ஜமீந்தாரும், குத்துவிளக்கு மானேஜர் கண்ணாயிரமும் கண்டுபிடிக்கப் பெற்றுக் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருந்த செய்தியைக் குமரப்பன் நண்பனுக்குப் படித்துக் காட்டியிருந்தான். விமானம் புறப்படுகிற நேரம் வந்ததும் நண்பனிடம் கூறி விடைபெற்றுக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தான் சத்தியமூர்த்தி. விமான நங்கை ஒரு டிரே நிறைய இனிப்புக்களை வைத்துக் கொண்டு எல்லார் முன்பும் நீட்டி எடுத்துக் கொள்ளச் செய்தவள், சத்தியமூர்த்தியிடமும் வந்து 'ஸ்வீட்ஸ்' என்று சொல்லிச் சிரித்தபடியே டிரேயை நீட்டினாள். அவனுடைய வலது கை ஒருகணம் முன்னால் நீண்டு மிட்டாயை எடுக்கச் சென்றது. அடுத்த கணமே அந்தக் கையிலிருந்த நீலக்கல் மோதிரத்தில் யாருடைய முகமோ வந்து தெரிந்து அவனைத் தயங்க வைத்தது. கண்ணும் மனமும் கலங்கியபடியே கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு, "ஸாரி! ஐ ஆம் இன் நோ மூட் டு ஹேவ் ஸ்வீட்ஸ். மை லைஃப் ஹாஸ் பிகம் ஸச் அஸ் நாட் டு திங்க் ஆப் ஸ்வீட்" என்று தளர்ந்த குரலில் அவன் கூறினான். "எக்ஸ்க்யூஸ்மீ" என்று சொல்லிவிட்டு விமான நங்கை அடுத்த பிரயாணியை நோக்கி நகர்ந்தாள். விமானம் புறப்பட்டது.

அந்த மனநிலையில் விமானத்தில் பக்கத்திலிருப்பவர் தன்னிடம் பேச்சுக் கொடுக்காமலிருப்பதற்காகக் கையோடு கொண்டு வந்திருந்த நவநீதக் கவியின் புதிய கவிதைத் தொகுதியான 'மானஸீக நினைவுகள்' என்ற புத்தகத்தைப் பிரித்தான் சத்தியமூர்த்தி.

காம்பிற் பூத்து மண்ணடைந்தாள் - ஒரு
கைபடாத தெய்வமலரானாள்.
கண்ணாடி மேனிப்
பண்ணாரும் மணிமொழியாள்
ஆம்பல் மணக்கும்
அரவிந்த மதி முகத்தில்
ஓங்கி நிமிர்ந்து
உலகளக்கப் பளபளக்கும்
உல்லாச மோகனச்
சல்லாபத் திருவிழியாள்
கள்ளாடு மணமலர்கள்
தள்ளாடிச் சரிந்துபுறம்
கொள்ளாத கருங்குழலாள்
வீங்கித் தணிந்த
வீணைத் தண்டொப்பத்
தாங்கிச் சரிந்த சிறு
தமனிய முழந்தாளில்
சரிகைத் துணியாடத்
தரையாடும் சீறடியாள்
ஏங்கியுருகக் கண்பார்க்கும்
இனிய பார்வை நலமுடையாள்

...என்று அந்தக் கவிதையைப் படிக்கத் தொடங்கியவன் மேலே படிக்க முடியாமல் ஞாபகத்தில் அலைமோதும் மோகினியைப் பற்றிய எண்ணங்களினால் கண்களில் நீர் பெருகித் திரையிட்டு மறைத்தது. 'கள்ளாடு மணமலர்கள் தள்ளாடிச் சரிந்து புறம் கொள்ளாத கருங்குழலாள்' என்ற ஒரே வரியைத் திரும்பவும் நினைத்த போது தாங்க முடியாத துயரம் அவன் மனத்தைக் கனக்கச் செய்தது. ஜெட் விமானம் உள்ளேயிருப்பவர்களுக்கே அந்த வேகம் தெரியாதபடி நள்ளிரவில் மிக வேகமாகப் பறந்து கொண்டிருந்தது. விமானத்துக்குள்ளே மென்மையான நறுமணமும் குளுமையான விளக்கொளியும் இதமாயிருந்தன. ஆகாய விமானப் பயணத்தைப் போல் பூமியின் சுகதுக்கங்கள் ஒட்டாமலே யாராலும் வாழ்ந்து விட முடியாது. விமானம் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் மறுபடி தரையில் இறங்கியாக வேண்டியிருப்பது போல மனித இலட்சியங்களும் மண்ணின் வாழ்க்கையோடு தான் இணைந்திருக்கின்றன.

வாழ்நாள் முழுதும் நினைத்து வருந்துவதற்குரிய சில துயரங்களும் நினைத்து மகிழ்வதற்குரிய சில மகிழ்ச்சிகளும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் நிச்சயமாக இருக்கும். அவை சத்தியமூர்த்தியின் வாழ்விலும் இருந்தன. பார்க்கப் போனால் சந்தோஷமும் மனித மனத்துக்கு ஒரு விலங்குதான். ஏனென்றால் அதையடுத்துத் துக்கம் வரும்போது யாராலும் கலங்காமலிருக்க முடியவில்லை. சத்தியமூர்த்தியின் கண்ணீருக்கும் இன்று மோகினிதான் காரணமாயிருந்தால். எப்போதோ ஒரு சில சமயங்களில் அவனுடைய மகிழ்ச்சிக்கும் மோகினிதான் காரணமாயிருந்தாள். அவளுடைய ஞாபகம் ஒரு விலை மதிப்பற்ற விலங்காக அவனைப் பிணைத்திருக்கிறது. அறிவும் திறமையும் தோற்றப் பொலிவுமுள்ள சத்தியமூர்த்தி சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்து மீண்டும் எதிர்காலத்தில் எத்தனையோ பெரிய பெரிய சாதனைகளையெல்லாம் தேசத்துக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் சாதிக்க முடியலாம். ஆனால் அந்த எல்லாச் சாதனைகளுக்காகவும் அவன் தானே பெருமிதப்பட்டுப் புன்முறுவல் பூக்கும் ஒவ்வொரு விநாடியும் உள்ளே யாருடைய ஞாபகமோ வந்து அவனை அழ வைக்கும். மோகினியும் இந்த அநுதாப ஞாபகத்தைத் தான் அவனிடம் விரும்பினாள். அவனுடைய மனம் அவளுடைய கோயில், அவளுக்கு மட்டுமே சொந்தமான கோயில். மறுபடி அவள் எப்போதாவது எந்தப் பிறவியிலாவது சந்திக்கிறவரை கண்ணீராலும் அமைதியாலும் அவன் மனம் அவளை அந்தரங்கமாக உபசரித்துக் கொண்டே இருக்கும். உணர்ச்சிகரமான அந்த உச்சரிப்பை இன்னும் அதிகமாக விளக்கிச் சொல்ல முடியாததற்காக வாசகர்கள் மன்னிக்க வேண்டும். ஏனென்றால், சொல்லுக்கும், நினைப்புக்கும் எந்த இடத்தில் பொருள் முடிகிறதோ அங்கேதான் உணர்ச்சி பிறக்கிறது. அந்த உணர்ச்சியைச் சொல்வதற்கு சரியான பாஷை எதுவும் இல்லை. பல சமயங்களில் உணர்ச்சிக்குப் பாஷை கருவியாக இருந்து ஒத்துழைப்பதுமில்லை.