thalaikku vandha sodhanai

தலைக்கு வந்த சோதனை

ஸ்ரீரங்கத்து ஸ்ரீனிவாசனுக்கு முடி வெட்டிவிட்டது யாரென்று தெரியுமா? கேட்டால் நீங்களே நம்பமாட்டீர்கள்!

- karthik s

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஸ்ரீரங்கத்து ஸ்ரீனிவாசன் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே முடி வெட்டிக்கொள்பவன். அன்று அவனது முடி வெட்டும் நாள்.

எப்போதும் போல வீட்டிலிருந்து அருகில் இருக்கும் நாவிதனிடம் (barber) முடி வெட்டிக்கொள்ளச் சென்றான்.

ஆனால், நாவிதனோ, "இவ்வளவு நீளமான முடியை வெட்ட எனக்கு இன்று நேரமில்லை!" என்று சொல்லி அவனை திருப்பி அனுப்பிவிட்டான்.

அதை கேட்ட ஸ்ரீரங்கத்து ஸ்ரீனிவாசன் மிகவும் வருத்தப்பட்டான். வீட்டிற்குச் சென்று தன் மனைவியிடம் உதவி கேட்டான்.

ஆனால், அவனது மனைவியோ , "இவ்வளவு நீளமான முடியை வெட்ட எனக்கு இன்று நேரமில்லை!" என்று சொல்லிவிட்டாள்.

அதனால் சிறிது ஆத்திரப்பட்ட ஸ்ரீரங்கத்து ஸ்ரீனிவாசன், தன்னுடைய தையற்கார நண்பனிடம் உதவி கேட்டுச் சென்றான்.

ஆனால், அவனது தையற்கார நண்பனோ, "இவ்வளவு நீளமான முடியை வெட்ட எனக்கு இன்று நேரமில்லை!" என்று சொல்லிவிட்டான்.

இப்போது கொஞ்சம் வருத்தப்பட்ட ஸ்ரீரங்கத்து ஸ்ரீனிவாசன், தன்னுடைய இன்னொரு நண்பனான தச்சு வேலை செய்பவரிடம் உதவி கேட்டுச் சென்றான்.

ஆனால், அவனது தச்சு வேலை செய்யும் நண்பனும் கூட, "இவ்வளவு நீளமான முடியை வெட்ட எனக்கு இன்று நேரமில்லை!" என்று சொல்லிவிட்டான்.

பாவம் ஸ்ரீரங்கத்து ஸ்ரீனிவாசன்!

வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே முடி வெட்டிக்கொள்ளும் அவனுக்கு இன்று உதவி செய்ய யாருமே இல்லை!

அழுது கொண்டே அவன் தனியாக காட்டு வழியே நடந்து சென்றான்.

அங்கே ஒரு குகைக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, பலமாக அழ ஆரம்பித்தான் .

"இன்றைய நாள் முடியவே போகிறது. என்னால் எப்படி முடி வெட்டிக்கொள்ள முடியும்? கடவுளே, எனக்கு உதவ மாட்டாயா?" என்று சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தான்.

அவன் போட்ட சத்தத்தினால் அந்த குகைக்குள் நிம்மதியாக தூங்கி கொண்டிருந்த புலியின் தூக்கம் களைந்து விட்டது.

உடனே ஆத்திரமடைந்த அந்த புலி உறுமிக்கொண்டே குகையிலிருந்து வெளியே வந்து அவன் மீது பாய்ந்தது.

பாவம் ஸ்ரீரங்கத்து ஸ்ரீனிவாசன்.

புலியை கண்டு மிகவும் பயந்து போனான்.

பயத்தில் அவனுடைய தலை முடி எல்லாம் கொட்டி விட்டது.

ஸ்ரீரங்கத்து ஸ்ரீனிவாசன் திரும்பி அவனுடைய கிராமத்திற்கே ஓட்டம் பிடித்தான். புலியும் திரும்ப உறங்கச் சென்று விட்டது.

இனி ஸ்ரீரங்கத்து ஸ்ரீனிவாசனுக்கு பல மாதங்களுக்கு முடி வெட்டிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை!