vaanavil saambaar

வானவில் சாம்பார்

பாட்டியும், பவ்யாவும் இன்று மதிய உணவிற்கு என்ன சாப்பிடப் போகிறார்கள்? வேறென்ன? பவ்யாவிற்குப் பிடித்த வானவில் சாம்பார்தான்! அவர்களின் வண்ணமயமான சமையலை நீங்களும் ரசித்து மகிழுங்கள்.

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“இன்று மதிய உணவிற்கு என்ன சமைக்கலாம்?” என்று கேட்டார் பாட்டி.

“இன்று வானவில் சாம்பார் செய்யலாம், பாட்டி!” என்றாள் பவ்யா.

“வானவில் சாம்பாரா! அதை எப்படிச் செய்வது?” என்று வியந்தார் பாட்டி.

“நான் செய்து காண்பிக்கிறேன், பாட்டி!” என்றாள் பவ்யா.

ஊதா வண்ண 'கரு முரு’ வெங்காயம்

கருநீல வண்ண குண்டுக் கத்தரிக்காய்

நீல வண்ணக் கைப்பிடி கொண்ட கத்தியால், இவற்றைச் சிறுதுண்டுகளாக நறுக்க வேண்டும்.

பச்சை வண்ண ஒல்லியான, நீளமான முருங்கைக்காய்

மஞ்சள் வண்ண வட்டவட்ட துவரம் பருப்பு

ஆரஞ்சு வண்ண 'கருக்' என்று கடிபடும் கேரட்

சிவப்பு வண்ண சாறு நிறைந்த தக்காளி

இவற்றை எல்லாம் நன்கு கழுவி, நறுக்கி, துண்டுகளாக்கி ஒரு சட்டியில் போடவேண்டும்.

சற்றே இனிக்கும் பழுப்பு வண்ணப் புளியைக் கரைத்து விட்டு, காரமும் மணமும் நிறைந்த மஞ்சள் வண்ண சாம்பார் பொடியும், உப்பும் சேர்க்கவேண்டும்.

எல்லாவற்றையும் வதக்க வேண்டும்.

நன்றாகக் கலக்க வேண்டும்.

லேசாக தீயில் வைத்து கொதிக்கவிட வேண்டும்.

இப்படித்தான்

வானவில் சாம்பார்

செய்ய வேண்டும்!