yaanaparavai

யானைப்பறவை

கிராமத்தில் ஒரு குதிரையைக் காணவில்லை. யானைப்பறவைதான் அதைச் சாப்பிட்டிருக்கும் என்று எல்லாரும் நினைக்கிறார்கள், அந்த யானைப்பறவையைக் கொன்றுவிடத் தீர்மானிக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் தைரியமாக அவர்களை எதிர்த்து நிற்கிறாள், “யானைப்பறவை குதிரையைச் சாப்பிடவில்லை” என்கிறாள். உண்மையில் குதிரை எங்கே போனது? யானைப்பறவை உயிர் தப்பியதா? தெரிந்துகொள்ள இந்தக் கதையைப் படியுங்கள்.

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அதானியா என்ற கிராமத்திலே ஒரு குதிரை வண்டியும் அதை இழுக்க வாயு மற்றும் துருத் என்ற இரு குதிரைகளும் இருந்தன. திடீரென்று ஒருநாள், வாயுவைக் காணவில்லை. கடைசியாக வாயுவை ஏரிக்கரையில் பார்த்ததாக யாரோ சொன்னார்கள். ஏரிக்கரைக் காட்டில்தான் யானைப்பறவை இருக்கிறது. யானைப்பறவை இருப்பது அந்த கிராமத்தினருக்கு பல தலைமுறைகளாகத் தெரியும். அந்த ஒற்றைச் சிறகு கொண்ட பறவையால், நினைத்தால் ஒரு குதிரையை அப்படியே விழுங்கிவிட முடியும்தான்.

ஆனால் அது வாயுவை சாப்பிட்டிருக்காது என்று முனியா நம்பினாள்.

அந்த இனமே அழிந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகிவிட்டது என்றுதான் கருதப்பட்டது. ஆனால், ஒரே ஒரு யானைப்பறவை மட்டும், ஒரே ஒரு சிறகைத் தவிர எல்லாம் உதிர்ந்துவிட்டாலும், இன்னும் உயிரோடுதான் இருந்தது. அதானியா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் அது வாழ்ந்து வந்தது என்பதெல்லாம் வெளியுலகுக்குத் தெரியாது!

கிராமவாசிகளும் யானைப்பறவையும் விலகியே வாழ்ந்தார்கள். ஆனால், தத்தித் தத்தி நடந்தாலும் முனியாவுக்கு மட்டும் தைரியம் அதிகம். அவ்வப்போது காட்டுக்குள் சென்று யானைப்பறவையை ஒளிந்திருந்து பார்ப்பாள்.

பகலானால், யானைப்பறவை ஏரிக்கரைக்கு வந்துவிடும். சிறிதுநேரம் சூரியவெளிச்சத்தில் விளையாடும், அதன்பிறகு, ஏரியில் தண்ணீரை தெளித்தபடி குளிக்கும். சில நேரங்களில், யானைப்பறவை தலையைமட்டும் நீட்டிப்பார்க்கும், மற்ற நேரங்களில் அது எங்கே இருக்கிறது என்றே தெரியாதபடி காட்டுக்குள் எங்கோ காணாமல் போய்விடும்.

அந்த யானைப்பறவை காட்டிலுள்ள மரங்கள் அளவு உயரமானது. நீளமான, உறுதியான கழுத்து, பெரிய கால்கள், கனமான ஈட்டிபோன்ற தலை கொண்டது. அதன் கூரான நகங்கள் பயம் ஏற்படுத்தும்.

அந்த யானைப்பறவை தாவரங்களை மட்டுமே தின்னும் ஒரு கூச்சமிகுந்த பறவைதான் என்று முனியா கண்டுபிடித்துவிட்டாள். அது ஏரிக்கரையில் இலைகளையே மென்றுகொண்டிருக்கும். தனக்கும் யானைப்பறவைக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

யானைப்பறவையால் பறக்கமுடியாது, முனியாவால் ஓடமுடியாது! கிராமத்திலிருந்த மற்ற பிள்ளைகளெல்லாம், முனியா தத்தித்தத்தி நடப்பதைக் கேலி செய்வார்கள், அவளைத் தங்களோடு விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, அவள் தனியாக விளையாடப் பழகிவிட்டாள்.

தினந்தோறும், முனியா தன் தாய்க்கு உதவியாக கிராமக் கிணற்றிலிருந்து மூன்று குடம் தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பாள், சமையலுக்காக விறகுகளைச் சேகரித்துக் கொடுப்பாள். அதன்பிறகு, அவள் எங்கோ ஓடிச்சென்றுவிடுவாள். நெடுநேரம் கழித்துதான் திரும்பிவருவாள். முனியா மற்ற பிள்ளைகளுடன் விளையாடுகிறாள் என்று அவளுடைய தாய் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், முனியாவோ காட்டுக்குள் சென்று யானைப்பறவையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒருநாள், முனியா அந்த யானைப்பறவையிடம் பேச விரும்பினாள். ஒளிந்திருந்த இடத்தைவிட்டுத் தைரியமாக வெளியே வந்தாள். யானைப்பறவை அவளைப் பார்த்தது. ஆனால், ஆர்வமில்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டது.

அதன் தலையைச் சுற்றிக்கொண்டிருந்த ஈக்கள் அளவுகூட தனக்கு கவனம் தரவில்லை என்பதால் முனியா கோபமாக தரையை உதைத்தாள். திடீரென்று, யானைப்பறவை தன் காலைத் தூக்கியது. பயத்தில் அலறிய முனியா ஏரியில் ஆழமில்லாத இடத்தில் விழுந்துவிட்டாள். முழுக்க நனைந்துபோய் கரைக்கு ஏறினாள். அப்போது யானைப்பறவை அதைப்பார்த்து விழுந்து விழுந்து சிரித்தது.

”என்னைப் பார்த்துச் சிரிக்கிறாயா?” என்றபடி முனியா அங்கிருந்து கோபமாக செல்ல முயன்றாள். அப்போது, பொத்தென்று அவள் காலின்மீது ஒரு பழம் வந்து விழுந்தது. அதை அந்த யானைப்பறவைதான் தூக்கி எறிந்திருந்தது. அது விளையாட விரும்பியது! தயக்கத்தோடு, முனியா அந்தப் பழத்தை எடுத்து யானைப்பறவையிடம் எறிந்தாள். அது தன் அலகுகளால் அதைப் பிடித்தது. இப்படியாக, இருவரும் நண்பர்களாகிவிட்டார்கள். முதன்முறையாக முனியாவுக்கு ஒரு நண்பன் கிடைத்திருந்த நேரம், திடீரென்று வாயுவைக் காணவில்லை. எல்லோரும் யானைப்பறவைமீது சந்தேகப்பட்டார்கள்.

கிராமவாசிகள் வாயுவை எல்லா இடங்களிலும் தேடிவிட்டும் பழைய ஆலமரத்துக்குக் கீழே கூடினார்கள். அதானியாவில் திருடர்கள் யாருமில்லை என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் ஒருவரையொருவர் நம்பினர். வாயு ஏரிப்பக்கம் போவதைப் பார்த்தேன் என்றார் பால்காரர். ”இப்போது அதை எங்கும் காணவில்லை. அநேகமாக காட்டில் இருக்கும் ஏதாவதுதான் வாயுவைச் சாப்பிட்டிருக்கவேண்டும். வேறு யார்? அந்த யானைப்பறவைதான்! அதைக் கொல்ல வேண்டும்” என்றார் ஒருவர்.  “ஆமாம்! அது பல ஆண்டுகளாக அமைதியாக இருந்துகொண்டு இப்படி கொடூரமான திட்டங்களை போட்டுவைத்திருக்கிறது!” என்றார் பால்காரர்.

அவர்கள் பேசுவதையெல்லாம் முனியா அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். யானைப்பறவை வாயுவைச் சாப்பிட்டிருக்காது என்று அவள் சொல்ல விரும்பினாள். ஆனால், எதிர்த்துப்பேச பயந்தாள். ஒருவேளை அவள் பேசினாலும், யார் அவளை நம்புவார்கள்? “அந்த யானைப்பறவையை விட்டுவைத்தால் நம் ஊருக்கே ஆபத்து” என்றார் முனியாவின் தந்தை, “இன்றைக்குக் குதிரையைச் சாப்பிடுகிறது, நாளைக்கு நம் குழந்தைகளைச் சாப்பிடாது என்று என்ன நிச்சயம்?” கிராமவாசிகள் எல்லாரும் ஆவேசமாகக் கத்தினார்கள். “அது ஒரு பிரமாண்டமான பறவையாக இருக்கலாம். ஆனால், நாம் எல்லாரும் சேர்ந்து தாக்கினால், அதைக் கொன்றுவிடலாம்” என்றார் கிராமத்தலைவர்.

கிராமவாசிகள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.  “யானைப்பறவை வாயுவைச் சாப்பிடவில்லை! வாயு காணாமல்போன நேரத்தில், நான் யானைப்பறவையோடுதான் இருந்தேன்” என்று மென்மையாக, ஆனால் உறுதியாகச் சொன்னாள் முனியா. “இதற்கு என்ன அர்த்தம்?” என்று கிராமத்தலைவர் உறுமினார். “யானைப்பறவை என் நண்பன், அது இதைச் செய்யவில்லை!”“இவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்றார்கள் சிலர். மற்ற குழந்தைகள் அவளைப் பார்த்துச் சிரித்தார்கள். ஆனால், யார் என்ன சொன்னாலும் முனியா அந்த இடத்தைவிட்டு நகரவில்லை, “யானைப்பறவை இலைகளைத்தான் சாப்பிடும். அது வாயுவைச் சாப்பிடவில்லை” என்று கத்தினாள்.

“முனியா, உனக்குத் தெரியாத விஷயங்களில் தலையை நுழைக்காதே” என்று கோபப்பட்டார் முனியாவின் தந்தை, “பேசாமல் இங்கிருந்து ஓடிவிடு. எனக்குக் கோபம் வந்தால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது!”

அப்போதும், முனியா அழவில்லை, ஓடவில்லை. கிராமவாசிகள் எல்லாரையும் பார்த்தபடி மீண்டும் சொன்னாள், “அந்த யானைப்பறவை என்னுடைய நண்பன். அது வாயுவைச் சாப்பிடவில்லை.”

”அவள் கிடக்கிறாள், விடுங்கள்” என்றார் கிராமத்தலைவர், “நாளை காலை நாம் யானைப்பறவையைக் கொல்கிறோம். அவ்வளவுதான். இப்போது கூட்டம் கலையலாம்!”

இப்போது, முனியாவுக்கு மிகவும் கவலையாகிவிட்டது. ஒரே ராத்திரிக்குள் யானைப்பறவையைக் காப்பாற்றியாக வேண்டும். எப்படி? அன்று இரவு முனியா சாப்பிடக்கூட இல்லை, தொடர்ந்து இதையே யோசித்துக்கொண்டிருந்தாள், “ஏரியை நோக்கி வாயு ஓடியதைப் பார்த்ததாகப் பால்காரர் சொல்கிறார். ஏரிக்கு சற்றுமுன்பாக, அந்தப் பாதை பக்கத்துக் கிராமத்தை நோக்கித் திரும்புகிறது.

ஒருவேளை, வாயு அந்தப்பக்கம் சென்றிருக்குமோ?” இந்த எண்ணம் தோன்றியதும், முனியாவுக்குள் புதுவேகம் பிறந்தது. ஒரு விளக்கைத் தூக்கிக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்தாள்.

விளக்கு வெளிச்சத்தில் முனியா தன் கிராமத்தைத்தாண்டி நடந்தாள், விறுவிறுவென்று பக்கத்துக் கிராமத்தை நோக்கிச் சென்றாள். திடீரென்று, எங்கிருந்தோ ஆந்தையின் குரல் கேட்டது, நரி ஊளையிடும் சத்தம் கேட்டது, மரங்களின் நிழல்கள் அசைந்தாடிப் பயமுறுத்தின. ஆனால், முனியா எங்கும் நிற்கவில்லை. காட்டில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கும் யானைப்பறவையை நினைத்தபோது, அவளுக்குத் தைரியம் தானாக வந்தது. எப்படியாவது அதைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்துடன் வேகமாக நடந்தாள்.

மறுநாள் காலை, அவள் கிராமத்தில் எல்லாரும் தடிகள், கூரான கற்கள், கத்திகளை எடுத்துக்கொண்டு காட்டை நோக்கி நடந்தார்கள். அப்போது, யானைப்பறவை ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. சூரிய வெளிச்சத்தில் அதன் ஒற்றைச்சிறகு மின்னியது. கூட்டத்தைப் பார்த்ததும், யானைப்பறவை எழுந்து நின்றது. அதைப் பார்த்துப் பயந்த கிராமவாசிகள் சற்றுத் தொலைவில் நின்றுவிட்டார்கள். “எல்லாரும் தயாராகுங்கள்” என்றார் கிராமத்தலைவர். கூட்டத்தினர் ஆவேசமாக உறுமினார்கள், யானைப்பறவைமீது ஆயுதங்களை வீசத் தயாரானார்கள்.

“நிறுத்துங்கள்!” முனியாவின் குரலைக் கேட்டு எல்லாரும் அதிர்ந்தார்கள். சிரமப்பட்டு நடந்துவந்த அவள், யானைப்பறவைக்கும் கூட்டத்துக்கும் நடுவே நின்றுகொண்டாள்.

“முனியா” என்று கோபமாகக் கத்தினார் அவளது தந்தை, “உடனே இங்கே வந்துவிடு! இல்லாவிட்டால்...” அவளைப் பிடியுங்கள் என்று இன்னொருவர் கத்தினார்.

அதற்காகச் சிலர் முன்னே வந்தார்கள். இதைப்பார்த்த யானைப்பறவை இரண்டு அடிகள் முன்னே வந்தது. பயந்துபோன கிராமவாசிகள் அங்கேயே நின்றுவிட்டார்கள். “வேறுவழியில்லை, யானைப்பறவையோடு அந்தப் பெண்ணையும் தாக்க வேண்டியதுதான்!” என்று கிராமத்தினர் தீர்மானித்தார்கள். மறுபடி ஆயுதங்களைத் தூக்கினார்கள்.

“கொஞ்சம் பொறுங்கள்” என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப்பார்த்தால், ஒரு தாடிக்காரர் நின்றிருந்தார். அவர் பக்கத்தில் ஒரு குதிரை. அந்தக் குதிரை... வாயு!

“சாரதி!” என்று ஆச்சர்யத்துடன் கூவினார் கிராமத்தலைவர், “நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? வாயுவை எங்கே கண்டுபிடித்தீர்கள்?”

“சில வருடங்களுக்கு முன் வாயுவை உங்களுக்கு விற்றேன். நேற்று, நான் உங்களுடைய கிராமப்பக்கமாக வந்துகொண்டிருந்தேன். அப்போது, என்னுடைய வண்டியை வாயுவின் சகோதரர்களான ஜப்ருவும் கப்ருவும் இழுத்துக்கொண்டிருந்தார்கள். வாய் எப்படி எங்களைப் பின் தொடர்ந்து சந்தேசேரா வந்தானோ தெரியவில்லை!  எனக்கு முதலில் அவனை அடையாளம் தெரியாமல், என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இன்று காலை இந்தப் பெண் ஒவ்வொரு வீடாகச்சென்று காணாமல்போன குதிரையைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். என்ன நடக்கிறது இங்கே!”

கிராமவாசிகள் இப்போது அவமானத்தில் தலைகுனிந்தார்கள். “அடடா, அநாவசியமாக யானைப்பறவைமீது சந்தேகப்பட்டுவிட்டோமே” என்று எண்ணினார்கள். முனியாவின் தந்தை ஓடிச்சென்று அவளைத் தூக்கிக்கொண்டார். அவள் மகிழ்ச்சியாகச் சிரித்தாள். அதன்பிறகு, முனியாவை யாரும் கேலிசெய்வதில்லை. எல்லாப்பிள்ளைகளும் அவளோடு நண்பர்களாக இருக்கவே விரும்பினார்கள், அவளைப்போல் யானைப்பறவையையும் நண்பனாக்கிக்கொள்ளவேண்டும் என்று நினைத்தார்கள்.

முனியாவின் கதை பல கிராமங்களுக்குப் பரவியது, யானைப்பறவையின் தோழியான அந்தத் தைரியமான பெண்ணை எல்லாரும் பாராட்டிப் புகழ்ந்தார்கள்.

யானைப்பறவை என்பது வெறும் கற்பனையல்ல. உண்மையிலேயே அப்படியொரு பறவை இருந்திருக்கிறது. அதன் அறிவியல் பெயர் ஏபியோர்னிஸ் மாக்ஸிமஸ். மடகாஸ்கர் தீவுகளில் வாழ்ந்த இந்தப் பறவைதான் உலகிலேயே மிகப்பெரியது! மடகாஸ்கரில் பல மக்கள் குடியேறத்தொடங்கியபோது, அங்கிருந்த காடுகள் அழிக்கப்பட்டன. அதனால், கிபி 1700வாக்கில் இந்தப் பறவைகள் முழுவதுமாக அழிந்துவிட்டன.